‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின்
கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம்,
வாசிக்கலாம், நேசிக்கலாம்.’
0
தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள்
இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது.
இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும்
குறைந்த விலையிலும் அதிகம் விற்கப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பதிப்பகத்திலும்
இது வெளியிடப்பட்டுள்ளது.
பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆத்துக்குரி
மொல்லா எனும் தெலுங்கு கவிஞர் எழுதியது இது. வால்மீகியின் இராம காவியத்தை அடியொற்றி
தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் அவரே. நேரடியான எளிய மொழியில், மிகக் குறைவான
சமஸ்கிருத வரிகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பதால் வெகு மக்களிடையே பரவலான வரவேற்பைப்
பெற்றது. அருகாமை கிராமங்களைச் சேர்ந்த பலரும் அவர் பாடும் இராம கதையைக் கேட்க வந்து
குவிந்தனர். அதைத் தொடர்ந்து அவரது இராம காதை, ‘மொல்ல இராமாயணம்’ என்று அறியப்படலாயிற்று.
அவர் வாழ்ந்த காலத்தில் வாய்மொழியாக சொல்லப்பட்டு பின்னர் அச்சு வசதிகள் ஏற்பட்டபோது
நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த
கோபவரம் கிராமத்தில் 1440ஆம் ஆண்டு பிறந்தவர் மொல்லா. குயவரான கேசன செட்டியின் மகள்.
லிங்காயத் பிரிவைச் சேர்ந்த அவர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபடுபவர். தனது கடவுளுக்குப்
பிரியமான மல்லிகை மலரைக் குறிக்கும் வகையில் தனது மகளுக்கு மொல்லா என்று பெயரிட்டார்.
இயல்பிலேயே பக்தி மிகுந்த மொல்லா தனது தந்தையுடைய குருவின் அறிவுறுத்தலின்படி இல்லற
வாழ்க்கையில் ஈடுபடவில்லை.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனரை வழிபட்டிருந்த
மொல்லா ஒரு முறை கடவுளை எண்ணி தியானத்தில் மூழ்கியிருந்த வேளையில் அவருக்கு பிரமாண்டமான
ஒரு தரிசனம் கிட்டியது. சிவனுடையது அல்ல அந்த தரிசனம், இராமனுடையது. ராம கதையை பாடும்படி
அவருக்கு ஆணை வந்தது. சிறிதும் தயக்கமில்லாமல் அவர் உடனடியாக காரியத்தில் இறங்கி விரைவிலேயே
மிக அழகான, செறிவான காவியத்தை இயற்றினார். 880 பாடல்களைக் கொண்ட அவரது இராமாயணம் தெலுங்கு
இலக்கிய உலகில் புகழையும் மதிப்பையும் பெற்ற ஒன்று.
கவி மரபில் அல்லாத ஒருவர் எழுதிய நூல்
எப்படி இவ்வளவு பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தது என்பது வியப்புக்குரியது. ஆனால்,
காரணங்கள் இல்லாமல் இல்லை.
முதலாவது காரணம், மக்களுக்கு எளிதில்
புரியும்படியான மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. காவிய லட்சணங்கள் அனைத்தும் பொருந்தும்படியாக
எழுதப்பட்டிருந்த அதே நேரத்தில் அது நேரடியான பேச்சுவழக்குகளுடன் மண் மணத்துடன் சாதாரண
மனிதரும் கேட்டு ரசிக்கும்படியாக இயற்றப்பட்டிருந்தது. ஒரு காவியம் எழுதப்படுவது பண்டிதர்கள்
படித்து அனுபவிப்பதற்காக மட்டும் அல்ல, அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தெளிவு
மொல்லாவுக்கு இருந்துள்ளது.
‘நாவிலிட்டதும்
தேன்
இனிப்பதுபோல
கவிதையும்
உடனடியாக சுவை தர வேண்டும்
புரியாத சொல்லும் பொருளும்
ஊமையனும் செவிடனும்
உரையாடுதலுக்கு ஒப்பானதன்றோ’
என்றே கவிதையைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
இரண்டாவது காரணம் அவர் தன்னை பெரிய பண்டிதராக,
கல்வியறிவு மிக்கவராகக் காட்டிக்கொள்ளாமல் மிக எளிய, சாதாரண பெண்ணாக மட்டுமே முன்வைத்திருப்பது.
‘கல்வியறிவற்ற தன்னை எழுதச் செய்தது ஸ்ரீகண்ட மல்லேஸ்வரரின் கருணையன்றி வேறொன்றுமில்லை’
என்றே சொல்கிறார். ஆனால், அவருடைய பாடல்களை வாசிக்கும் எவரும் அவரது புலமையை குறைத்து
மதிப்பிட முடியாது. மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம், உரையாடல் நயம், பிற காவியங்களிலிருந்தும்
பிரபந்தங்களிலிருந்தும் உரிய பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கும் திறன் ஆகியவற்றிலிருந்து
அவரது கவித்திறனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். வட்டாரப் பேச்சு வழக்கு, இலக்கண
வகைமைகள், கவித்துவ நுட்பங்கள், படிமங்கள், உள்ளுறை உவமைகள், காவிய மரபின் அடிப்படைகள்
போன்றவற்றைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும்போதே
இத்தகைய நுட்பங்களில் அவரது ஆழமான புரிதலையும் திறனையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால்,
இவையெல்லாம் தனக்குத் தெரியாது, எல்லாமே மல்லிகார்ஜுனரின் கருணை என்று கூறுவதன் மூலம்
வாசிப்பவருக்கு நெருக்கமாகத் தன்னை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார் மொல்லா. மக்கள்
அவரது பாடல்களை எளிதில் நெருங்க அதுவும் ஒரு காரணம்.
உதாரணமாக, அயோத்தியைக் குறித்து வர்ணிக்கும்போது
அது எப்படி இருந்தது, எப்படி இருக்கவில்லை என்று புனைந்திருப்பதைக் கவனிக்கலாம்.
சாகேதபுரத்து
நாகங்கள் வெறும் பாம்புகள் அல்ல,
மதங்கொண்ட யானைகள்
இங்குள்ள குதிரைகள்
வெறும் வானரக் கூட்டமல்ல,
படைவென்று திரும்பிய
பரிகள்
இங்குள்ள தேர்கள்
வெறும் எளிய நீருற்றுகள் அல்ல,
அழகிய ரதங்கள்
சாகேதபுரத்திலுள்ள
கணிகையர் வெறும் காட்டு மலர்கள் அல்ல,
ஆடவும் பாடவும்
தெரிந்த அற்புத நங்கையர்
இங்குள்ள அறிஞர்கள்,
முரட்டுத்தனமும் கொடூரமும் மிக்க இராட்சதர்கள் அல்ல, கருணையுள்ளம் கொண்ட புத்திஜீவிகள்
தெலுங்கு மொழியின் மண் மணத்தை மொல்லாவின்
மொழியில் நுகரமுடியும். ‘இதுவென்ன வில்லா, மாமலையா?’ என்று சொல்லும் அதே நேரத்தில்
‘சந்துபொந்துகளிலெல்லாம் ஓடி மறைந்தனர்’ என்று சாதாரணமாகவும் எழுத முடிந்திருக்கிறது.
மூன்றாவது காரணம், காப்பியங்களுக்கான
சில மரபுகளை அவர் துணிந்து மீறியிருக்கிறார் என்பது. பொதுவாக, அவர் வாழ்ந்த காலத்தில்
காவியங்களை அரசர்களுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், மொல்லா தனது இராமாயணத்தை
அவ்வாறில்லாமல் தனது விருப்ப தெய்வமான மல்லிகார்ஜுனருக்கே சமர்ப்பித்திருந்தார்.
அடுத்த முக்கியமான காரணம், வால்மீகியின்
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியபோதும் அதை அப்படியே எழுதவில்லை. தேவையான இடங்களை
சுருக்கியும், சில பகுதிகளை தனது விருப்பத்துக்கேற்ப விரித்தும் எழுதியுள்ளார். சில
முக்கியமான பகுதிகளை அவர் தனது படைப்பில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. ‘பத்யம்’ எனப்படும் பாடல்களை மட்டுமல்லாமல் அங்கங்கே
உரைநடையையும் பயன்படுத்தியதோடு தனது கருத்துகளை வலுவாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களில்
கதைகள் சிலவற்றையும்கூட இணைத்துள்ளார். இது இராமாயணத்துக்கு புதிய ஒரு சுவையைத் தந்திருக்கிறது.
மொத்தமாக 880 சுலோகங்களைக் கொண்டு இராமாயணத்தை
அவர் கட்டமைத்திருக்கும் விதம் குறித்து விமர்சகர்கள் பலரும் எழுதியுள்ளனர். பால காண்டம்,
அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகிய முதல் நான்கு காண்டங்களை
அவர் 245 பாடல்களை மட்டுமே கொண்டு புனைந்துள்ளார். சுந்தர காண்டத்தை மிகவும் விரிவாக
249 பாடல்களைக் கொண்டு பாடியிருக்கும் அவர், யுத்த காண்டதுக்கு எடுத்துக் கொண்ட பாடல்களின்
எண்ணிக்கை 351. யுத்தத்துக்குப் பிறகு இராமன், சீதையைப் புறக்கணித்து ஒதுக்கும் உத்தரகாண்டத்தை
மொத்தமாகவே அவர் எழுதவேயில்லை. வால்மீகியின் இராமாயணத்திலிருந்தும் தெலுங்கின் பிற
இராமாயணங்களிலிருந்தும் இவ்வாறான துலக்கமான வேறுபாடுகள் இருந்தபோதும்கூட ஒரு செவ்வியல்
காப்பியமாக இது கருதப்படுகிறது.
காவிய இலக்கணங்களுக்கேற்ப முறையாக இயற்றப்பட்ட
இதில் அறிமுகம், சமர்ப்பணம் உள்ளிட்ட பாடல்களும் இருந்தன. கவிதையும் உரைநடையும் கலந்து
விரியும் உயர்ந்த கடவுளாக கருதிய ராமனின் மீதான பக்தியும் செறிந்திருந்தது. காப்பியத்தின்
முதல் பாடலே ‘மகா குணசாலி தயாவான்’ இராமனின் மீதே பாடப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற
கடவுளர்களைக் குறித்த பாடல்களும் தொடர்ந்தன. இறுதியாக, சரஸ்வதியைப் போற்றும் பாடலும்
இடம் பெற்றது. சமஸ்கிருத கவிஞர்களான வால்மீகி, வியாசர், காளிதாஸன், பவபூதி, பாணபட்டர்,
சிவபத்ரா, தெலுங்கு கவிஞரான திக்கண்ணா ஆகியோரையும் வாழ்த்திப் பாடியிருந்தார்.
கல்வியறிவு இல்லாத தனக்கு காவிய லட்சணங்களைப்
பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்தபோதும் மொல்லா ஒரு மகாகவி என்பதை
அவர் தன் காவியத்தை கட்டமைத்த விதத்திலிருந்தும் அதில் பிரயோகித்திருந்த உவமை அணிகளிலிருந்தும்
பாடல்களுக்கான இசை நயத்தையும் அதே சமயத்தில் சொற்சேர்க்கைகளையும் பயன்படுத்திய நேர்த்தியிலிருந்தும்
விளங்கிக் கொள்ள முடியும்.
அவரது கவித்திறனுக்கு ஒரு பாடலை உதாரணமாகக்
காட்டலாம். இலங்கையில் சீதை சிறைபட்டிருக்கிறாள். அவளை மீட்க வந்த அனுமன் உண்மையிலேயே
இராமதூதனா இல்லை கபட வேடத்தில் வந்திருக்கும் இராவண அரக்கனா என்ற சந்தேகம் சீதைக்கு.
எனவே, தன் கணவன் எப்படியிருப்பான், அவன் தம்பி எப்படியிருப்பான் என்று வர்ணிக்கச் சொல்கிறாள்.
அனுமன் இராமனை வர்ணிப்பதாக உள்ள இந்தப் பாடல் ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
ஒவ்வொரு வீட்டிலும் வெகு சாதாரணமாக ஒலிப்பது. பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும் இடம்
பெற்றிருப்பது.
மேக வண்ணம் அவன் நிறம்
தாமரைப் போன்று வெளுத்தவை அவன் கண்கள்
சங்கு போன்றது அவன் கழுத்து
அவனது கணுக்கால்கள் எழில் மிக்கன
அவனது தோள்களோ நேரானவை, நீண்டவை
அவன் குரல் முரசின் ஒலி
அவன் பாதங்களில் தாமரை வரிகள் உண்டு
அழகிய மார்பை உடையவன்
வஞ்சனை அறியாத அவன் உண்மையே மொழிபவன்
அம்மையே, நற்குணங்களைக் கொண்டவன் இராமன்
இந்த எல்லா குணங்களையும் கொண்டிருக்கும்
தம்பி இலக்குவனின்
நிறமோ பொன்னையுடைத்து.
இந்தப் பாடலில் இராமனின் குணங்களை வரிசையாகப்
பட்டியலிட்ட கவிஞர், ஒற்றை வரியில் இலக்குவனின் குணத்தை வகுத்துக் காட்டிவிடுகிறார்.
பெண்கள் எழுதிய பிற காப்பியங்களில்,
கவிதைகளில் பக்தி, கருணை ஆகிய இரண்டு ரசங்களே அதிகமும் பயன்படுத்தப்பட்ட நிலையில் மொல்லா
தனது இராமாயத்தில் சிருங்காரம், வீரம், ரௌத்திரம், அச்சம், அற்புதம், அருவருப்பு ஆகிய
பிற ரசங்களையும் பயன்படுத்தி கவிதைகளை புனைந்துள்ளார். வாழ்வின் பல்வேறு அம்சங்களைக்
குறித்து பேச நேரும்போதெல்லாம் மொல்லா இளமையின் தீவிரத்தையும் காமத்தின் ஆற்றலையுமே
குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். சிருங்கார ரசத்தை ஆளவேண்டிய அவசியமே இல்லாத இடங்களிலும்
அதை வலுக்கட்டாயமாக கையாண்டிருக்கிறார். அயோத்தி நகரத்தின் வளத்தையும் அழகையும் வர்ணிக்கும்போதுகூட
அங்கிருந்த சேணமிடப்பட்ட குதிரைகளில் தொடங்கி தந்திரமான கணிகைகள் வரை எவ்வளவு மோகப்
பெருக்குடன் திகழ்ந்தன என்றே விவரிக்கிறார்.
வால்மீகியின் காப்பியத்தில் ‘யுத்தகாண்ட‘மே
மிக நீண்ட ஒன்று. மொல்லாவும் தனது காவியத்தில் அதே யுத்த காண்டத்தை நீளமானதாக புனைந்துள்ளார்.
யுத்தக் காட்சிகளை விவரிப்பதில் மொல்லாவுக்கு பெருவிருப்பம் இருந்துள்ளது. சண்டைகள்,
ஆயுதங்கள், படை வரிசைகள், அமைச்சர்கள், கோரமான காட்சிகள், சிதைந்த உடல்கள் என அனைத்தையும்
வர்ணித்துள்ளார். காமத்தை விவரிப்பதில் கொண்டிருந்த அதே விருப்பம் யுத்தத்தை வர்ணிப்பதிலும்
இருந்துள்ளது.
இராமாயணத்தின் நாயகி சீதாவின் மீது மொல்லாவுக்கு
பெரிய அளவு கவனம் இல்லை. அவள் அழகி என்பதை மட்டுமே வர்ணிக்கிறார்.
அவை பங்கயங்களா
மன்மதன் எய்தும் அம்புகளா
சொல்வது
கடினம் – அவள் கண்கள்.
பறவைகளின் இனிய இசையா
அல்லது தேவ கன்னியரின் பாடல்களா
சொல்வது
கடினம் – அவளது குரல்
நிலவா
அல்லது முகம் பார்க்கும் ஆடியா
சொல்வது
கடினம் – அவளது முகம்
பொற் குவளைகளா
அல்லது சக்ரவாகப் பட்சிகளா
சொல்வது
கடினம் – அவளது முலைகள்
நீலமணிச் சரங்களா
அல்லது தேனீக்களின் கூட்டமா
சொல்வது
கடினம் – அவளது கேசம்
மணல் மேடுகளா
அல்லது மன்மதனின் மண மேடையா
சொல்வது
கடினம் – அவளது தொடைகள்
அவளது எழில் கண்டு நிற்குந்தோறும்
காண்போர் கொள்வது பேதமை.
சீதாவின் பிறப்பைப் பற்றியோ நாட்டைப்
பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. புகழ்பெற்ற அவளது சுயம்வரத்தைக்கூட ஒரு சிறிய முக்கியமில்லாத
நிகழ்ச்சி என்பதுபோல் கடந்து போயிருக்கிறார். ஆனால், காட்டில் அவள் பட்ட துன்பங்களை
சித்தரித்திருக்கிறார்.
காட்டின் வழியாக துயருடன் செல்லும் சீதையைக்
கண்ட பழங்குடிப் பெண் சொல்லும் வரிகள் இவை
சீதையின் பாதங்களைப் பாருங்கள், பாவம்
முட்கள் நிறைந்த வனத்தில் நடந்து பழக்கமில்லை
அவளுக்கு.
அழகிய அவரது கைகள் மென்மையின் ஒளியை
இழந்துவிட்டன
கரடுமுரடான இந்தப் பாதையில் நடந்து அவை
செம்மணிகள் போல்
நிறம் மங்கிப்போயின.
காய்ந்துலர்ந்த கொடியொன்று வீசும் காற்றில்
அலைவதுபோல
சீதையின் மெல்லிய உடல் வெயிலில் நடுங்கி
வதங்குகிறது
ஒளிமங்கும் தேய்பிறையென
சீதையின் முகம் வழக்கமான தன் பொலிவை
மெல்ல இழக்கிறது.
இராம இலட்சுமணரின் நடைக்கு ஈடுகொடுத்து
நடக்க முயன்று மூச்சு வாங்கிட அவள் மார்புகள்
ஏறி இறங்குகின்றன
இரக்கமற்று சுட்டெரிக்கும் வெயிலிடமிருந்து
தப்ப எண்ணி
சிறு நிழல் தேடி அலையும் அவள் கண்களைப்
பாருங்கள்.
அதேபோல, வால்மீகி இராமாயணத்தில் இல்லாத
ஆனால் துளசி இராமாயணத்தில் இடம்பெற்றிருந்த ‘இலட்சுமண ரேகை’ பகுதி மொல்லாவின் இராமாயணத்திலும்
இடம் பெறவில்லை.
கும்மாரா மொல்லா என்று அழைக்கப்படுவதில்
கும்மாரா என்பது அவர் குயவர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற பொதுவான புரிதலை, குறிப்பிடுதலை
மறுக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள். மொல்லா தனது எழுத்தில் எங்கும் தன் சாதியைக் குறிப்பிடவில்லை
என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். ‘கும்மாரா’ என் முன்னொட்டை பிற்காலத்தில் இராமாயணம்
அச்சுக்கு வந்தபோது பதிப்பகத்தினர் சேர்த்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
மொல்லா வாழ்ந்த காலத்தை அறிய அவர் தன்
நூலின் முகவுரையே ஆதாரமாக உள்ளது. தனது நூலின் முகவுரையில் அவர் நன்றியறிவித்திருக்கும்
கவிஞர்களின் பட்டியலைக் கொண்டும் யாருடைய பெயர்களையெல்லாம் அவர் குறிப்பிடவில்லை என்பதை
வைத்தும் அவர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று கணிக்க முடிகிறது.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், மொல்லாவின் கவித்திறனைக்
குறித்துக் கேள்விப்பட்டு தனது அவைக்கு அழைத்ததாகவும் அரசவைக்குச் சென்று மொல்லா கவிதைப்
பாடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மொல்லாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாப் பக்கங்களிலும்
இது இடம் பெற்றுள்ளது. மொல்லாவின் கவிதைகளைப் பாடக் கேட்டு, அரசரும் அவரது அமைச்சர்கள்,
புலவர்கள் அனைவரும் அவரது திறனைக் கண்டு வியந்து ‘இவரது பாடல்களை உலகையே மேலே தூக்கும்
யானைகளுக்கு சமமானவை’ என்று புகழ்ந்து பாராட்டியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அதே சமயம்,
ஒருசில புலவர்கள் அவரது கவிதைத் திறனை சோதிக்கும்விதமாக, உடனடியாக அதே அவையில் ஒரு
பாடலைப் புனைந்து காட்டுமாறு கேட்டபோது, பாகவத புராணத்தில் இடம் பெறும் கஜேந்திர மோட்சத்தைக்
குறித்து அபாரமான கவிதை ஒன்றை புனைந்து பாடியதாகவும், அதனைக் கண்டு வியந்து அவருக்கு
‘கவிரத்னா’ என்று பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு தரப்பினர் அவர் விஜயநகரப் பேரரசைச்
சந்திக்கவேயில்லை என்று இவை அனைத்தையும் மறுக்கிறார்கள். மொல்லா சூத்ரகுலத்தைச் சேர்ந்தவர்
என்பதாலும் முக்கியமாக அவர் பெண் என்பதாலும் அவர் இயற்றிய காவியத்தை அரசவையில் பாட
அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எழுதப்படும் கவிதைகள் பண்டிதர்களும்
புலவர்களும் மெச்சுவதற்கு அல்ல, எளிய சாதாரண மக்கள் கேட்டு ரசிப்பதற்கே என்பது மொல்லாவின்
நோக்கம். ஆனால், அவர் தன் காவியத்தை இலக்கண சுத்தத்துடன் பாடியிருக்கும் நேர்த்தியைப்
பார்க்கும்போது மரபை மீறியதையும் எளிமையான மொழியமைப்பையும் காரணம்காட்டி அரசவைப் பண்டிதர்கள்
இதை நிராகரிக்க முடியாது என்று சவால் விட்டிருப்பதுபோலவும் யோசிக்க முடிகிறது. கூடவே,
பெண் என்பதால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற எழுதப்படாத விதியையும் துணிந்து மீறியிருப்பதையும்
காண முடிகிறது.
அவரது பிற்கால வாழ்க்கையைப் பற்றி பெரிய
அளவில் எதுவும் தெரியவில்லை. தனது குடும்பத்தை விட்டுச் சென்று ஸ்ரீசைலத்தில் தங்கிவிட்டதாகத்
தெரிகிறது. மல்லிகார்ஜுனர் கோயில் அருகில் வசித்த அவர் ஒரு துறவிபோல வாழ்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். தனது 90 வயதில் 1530ஆம் ஆண்டு
மறைந்திருக்கிறார்.
அவரது இராமயணம் தெலுங்கில் பரவலாகக்
கிடைக்கிறது. ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் இதன் மொழியாக்கம்
கிடைக்கவில்லை. ஒருசில பாடல்களை சில வலைத்தளங்களில் காண முடிந்தது. (அவற்றின் மொழியாக்கமே
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
ஹைதராபாத் உசேன் சாகர் ஏரிக்கரையில்
டாங்க் பண்ட் சாலையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவாக தபால் தலையொன்றும்
வெளியிடப்பட்டுள்ளது. இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தூரி வெங்கடேஸ்வரராவ்
‘கும்மார மொல்லா’ என்ற நாவலை 1969ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். அது இப்போது பதிப்பில்
இல்லை. இந்த நாவலை சங்கர சத்யநாராயணா என்பவர் ஒரு கதைப் பாடலாக மாற்றி எழுதியுள்ளார்.
அந்தக் கதைப் பாடல் இன்றும் ஆந்திராவின் பல இடங்களிலும் பாடப்படுகிறது. இவரது வாழ்வு
திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர்
தெலுங்கு நடிகர் பத்மநாபன். ‘கதாநாயகி மொல்லா’ என்ற அந்தப் படத்தில் மொல்லாவாக நடித்திருப்பவர்
வாணிஸ்ரீ.
0