Monday, 19 May 2025

இராமாயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி - ஆத்துக்குரி மொல்லா


 

 

‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.’

0

தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள் இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது. இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும் குறைந்த விலையிலும் அதிகம் விற்கப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பதிப்பகத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆத்துக்குரி மொல்லா எனும் தெலுங்கு கவிஞர் எழுதியது இது. வால்மீகியின் இராம காவியத்தை அடியொற்றி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் அவரே. நேரடியான எளிய மொழியில், மிகக் குறைவான சமஸ்கிருத வரிகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பதால் வெகு மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. அருகாமை கிராமங்களைச் சேர்ந்த பலரும் அவர் பாடும் இராம கதையைக் கேட்க வந்து குவிந்தனர். அதைத் தொடர்ந்து அவரது இராம காதை, ‘மொல்ல இராமாயணம்’ என்று அறியப்படலாயிற்று. அவர் வாழ்ந்த காலத்தில் வாய்மொழியாக சொல்லப்பட்டு பின்னர் அச்சு வசதிகள் ஏற்பட்டபோது நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபவரம் கிராமத்தில் 1440ஆம் ஆண்டு பிறந்தவர் மொல்லா. குயவரான கேசன செட்டியின் மகள். லிங்காயத் பிரிவைச் சேர்ந்த அவர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபடுபவர். தனது கடவுளுக்குப் பிரியமான மல்லிகை மலரைக் குறிக்கும் வகையில் தனது மகளுக்கு மொல்லா என்று பெயரிட்டார். இயல்பிலேயே பக்தி மிகுந்த மொல்லா தனது தந்தையுடைய குருவின் அறிவுறுத்தலின்படி இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை.

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனரை வழிபட்டிருந்த மொல்லா ஒரு முறை கடவுளை எண்ணி தியானத்தில் மூழ்கியிருந்த வேளையில் அவருக்கு பிரமாண்டமான ஒரு தரிசனம் கிட்டியது. சிவனுடையது அல்ல அந்த தரிசனம், இராமனுடையது. ராம கதையை பாடும்படி அவருக்கு ஆணை வந்தது. சிறிதும் தயக்கமில்லாமல் அவர் உடனடியாக காரியத்தில் இறங்கி விரைவிலேயே மிக அழகான, செறிவான காவியத்தை இயற்றினார். 880 பாடல்களைக் கொண்ட அவரது இராமாயணம் தெலுங்கு இலக்கிய உலகில் புகழையும் மதிப்பையும் பெற்ற ஒன்று.   

கவி மரபில் அல்லாத ஒருவர் எழுதிய நூல் எப்படி இவ்வளவு பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தது என்பது வியப்புக்குரியது. ஆனால், காரணங்கள் இல்லாமல் இல்லை.

முதலாவது காரணம், மக்களுக்கு எளிதில் புரியும்படியான மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. காவிய லட்சணங்கள் அனைத்தும் பொருந்தும்படியாக எழுதப்பட்டிருந்த அதே நேரத்தில் அது நேரடியான பேச்சுவழக்குகளுடன் மண் மணத்துடன் சாதாரண மனிதரும் கேட்டு ரசிக்கும்படியாக இயற்றப்பட்டிருந்தது. ஒரு காவியம் எழுதப்படுவது பண்டிதர்கள் படித்து அனுபவிப்பதற்காக மட்டும் அல்ல, அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தெளிவு மொல்லாவுக்கு இருந்துள்ளது.

‘நாவிலிட்டதும்

தேன்

இனிப்பதுபோல

கவிதையும்

உடனடியாக சுவை தர வேண்டும்

 

புரியாத சொல்லும் பொருளும்

ஊமையனும் செவிடனும்

உரையாடுதலுக்கு ஒப்பானதன்றோ’

 

என்றே கவிதையைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

 

இரண்டாவது காரணம் அவர் தன்னை பெரிய பண்டிதராக, கல்வியறிவு மிக்கவராகக் காட்டிக்கொள்ளாமல் மிக எளிய, சாதாரண பெண்ணாக மட்டுமே முன்வைத்திருப்பது. ‘கல்வியறிவற்ற தன்னை எழுதச் செய்தது ஸ்ரீகண்ட மல்லேஸ்வரரின் கருணையன்றி வேறொன்றுமில்லை’ என்றே சொல்கிறார். ஆனால், அவருடைய பாடல்களை வாசிக்கும் எவரும் அவரது புலமையை குறைத்து மதிப்பிட முடியாது. மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம், உரையாடல் நயம், பிற காவியங்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் உரிய பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கும் திறன் ஆகியவற்றிலிருந்து அவரது கவித்திறனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். வட்டாரப் பேச்சு வழக்கு, இலக்கண வகைமைகள், கவித்துவ நுட்பங்கள், படிமங்கள், உள்ளுறை உவமைகள், காவிய மரபின் அடிப்படைகள் போன்றவற்றைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும்போதே இத்தகைய நுட்பங்களில் அவரது ஆழமான புரிதலையும் திறனையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இவையெல்லாம் தனக்குத் தெரியாது, எல்லாமே மல்லிகார்ஜுனரின் கருணை என்று கூறுவதன் மூலம் வாசிப்பவருக்கு நெருக்கமாகத் தன்னை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார் மொல்லா. மக்கள் அவரது பாடல்களை எளிதில் நெருங்க அதுவும் ஒரு காரணம்.

உதாரணமாக, அயோத்தியைக் குறித்து வர்ணிக்கும்போது அது எப்படி இருந்தது, எப்படி இருக்கவில்லை என்று புனைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

சாகேதபுரத்து நாகங்கள் வெறும் பாம்புகள் அல்ல,

மதங்கொண்ட யானைகள்

இங்குள்ள குதிரைகள் வெறும் வானரக் கூட்டமல்ல,

படைவென்று திரும்பிய பரிகள்

இங்குள்ள தேர்கள் வெறும் எளிய நீருற்றுகள் அல்ல,

அழகிய ரதங்கள்

சாகேதபுரத்திலுள்ள கணிகையர் வெறும் காட்டு மலர்கள் அல்ல,

ஆடவும் பாடவும் தெரிந்த அற்புத நங்கையர்

இங்குள்ள அறிஞர்கள், முரட்டுத்தனமும் கொடூரமும் மிக்க இராட்சதர்கள் அல்ல, கருணையுள்ளம் கொண்ட புத்திஜீவிகள்

தெலுங்கு மொழியின் மண் மணத்தை மொல்லாவின் மொழியில் நுகரமுடியும். ‘இதுவென்ன வில்லா, மாமலையா?’ என்று சொல்லும் அதே நேரத்தில் ‘சந்துபொந்துகளிலெல்லாம் ஓடி மறைந்தனர்’ என்று சாதாரணமாகவும் எழுத முடிந்திருக்கிறது.

மூன்றாவது காரணம், காப்பியங்களுக்கான சில மரபுகளை அவர் துணிந்து மீறியிருக்கிறார் என்பது. பொதுவாக, அவர் வாழ்ந்த காலத்தில் காவியங்களை அரசர்களுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், மொல்லா தனது இராமாயணத்தை அவ்வாறில்லாமல் தனது விருப்ப தெய்வமான மல்லிகார்ஜுனருக்கே சமர்ப்பித்திருந்தார்.

அடுத்த முக்கியமான காரணம், வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியபோதும் அதை அப்படியே எழுதவில்லை. தேவையான இடங்களை சுருக்கியும், சில பகுதிகளை தனது விருப்பத்துக்கேற்ப விரித்தும் எழுதியுள்ளார். சில முக்கியமான பகுதிகளை அவர் தனது படைப்பில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.  ‘பத்யம்’ எனப்படும் பாடல்களை மட்டுமல்லாமல் அங்கங்கே உரைநடையையும் பயன்படுத்தியதோடு தனது கருத்துகளை வலுவாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் கதைகள் சிலவற்றையும்கூட இணைத்துள்ளார். இது இராமாயணத்துக்கு புதிய ஒரு சுவையைத் தந்திருக்கிறது.

மொத்தமாக 880 சுலோகங்களைக் கொண்டு இராமாயணத்தை அவர் கட்டமைத்திருக்கும் விதம் குறித்து விமர்சகர்கள் பலரும் எழுதியுள்ளனர். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகிய முதல் நான்கு காண்டங்களை அவர் 245 பாடல்களை மட்டுமே கொண்டு புனைந்துள்ளார். சுந்தர காண்டத்தை மிகவும் விரிவாக 249 பாடல்களைக் கொண்டு பாடியிருக்கும் அவர், யுத்த காண்டதுக்கு எடுத்துக் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை 351. யுத்தத்துக்குப் பிறகு இராமன், சீதையைப் புறக்கணித்து ஒதுக்கும் உத்தரகாண்டத்தை மொத்தமாகவே அவர் எழுதவேயில்லை. வால்மீகியின் இராமாயணத்திலிருந்தும் தெலுங்கின் பிற இராமாயணங்களிலிருந்தும் இவ்வாறான துலக்கமான வேறுபாடுகள் இருந்தபோதும்கூட ஒரு செவ்வியல் காப்பியமாக இது கருதப்படுகிறது. 

காவிய இலக்கணங்களுக்கேற்ப முறையாக இயற்றப்பட்ட இதில் அறிமுகம், சமர்ப்பணம் உள்ளிட்ட பாடல்களும் இருந்தன. கவிதையும் உரைநடையும் கலந்து விரியும் உயர்ந்த கடவுளாக கருதிய ராமனின் மீதான பக்தியும் செறிந்திருந்தது. காப்பியத்தின் முதல் பாடலே ‘மகா குணசாலி தயாவான்’ இராமனின் மீதே பாடப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற கடவுளர்களைக் குறித்த பாடல்களும் தொடர்ந்தன. இறுதியாக, சரஸ்வதியைப் போற்றும் பாடலும் இடம் பெற்றது. சமஸ்கிருத கவிஞர்களான வால்மீகி, வியாசர், காளிதாஸன், பவபூதி, பாணபட்டர், சிவபத்ரா, தெலுங்கு கவிஞரான திக்கண்ணா ஆகியோரையும் வாழ்த்திப் பாடியிருந்தார்.

கல்வியறிவு இல்லாத தனக்கு காவிய லட்சணங்களைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்தபோதும் மொல்லா ஒரு மகாகவி என்பதை அவர் தன் காவியத்தை கட்டமைத்த விதத்திலிருந்தும் அதில் பிரயோகித்திருந்த உவமை அணிகளிலிருந்தும் பாடல்களுக்கான இசை நயத்தையும் அதே சமயத்தில் சொற்சேர்க்கைகளையும் பயன்படுத்திய நேர்த்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ள முடியும்.



அவரது கவித்திறனுக்கு ஒரு பாடலை உதாரணமாகக் காட்டலாம். இலங்கையில் சீதை சிறைபட்டிருக்கிறாள். அவளை மீட்க வந்த அனுமன் உண்மையிலேயே இராமதூதனா இல்லை கபட வேடத்தில் வந்திருக்கும் இராவண அரக்கனா என்ற சந்தேகம் சீதைக்கு. எனவே, தன் கணவன் எப்படியிருப்பான், அவன் தம்பி எப்படியிருப்பான் என்று வர்ணிக்கச் சொல்கிறாள். அனுமன் இராமனை வர்ணிப்பதாக உள்ள இந்தப் பாடல் ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஒவ்வொரு வீட்டிலும் வெகு சாதாரணமாக ஒலிப்பது. பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றிருப்பது.

மேக வண்ணம் அவன் நிறம்

தாமரைப் போன்று வெளுத்தவை அவன் கண்கள்

சங்கு போன்றது அவன் கழுத்து

அவனது கணுக்கால்கள் எழில் மிக்கன

அவனது தோள்களோ நேரானவை, நீண்டவை

அவன் குரல் முரசின் ஒலி

அவன் பாதங்களில் தாமரை வரிகள் உண்டு

அழகிய மார்பை உடையவன்

வஞ்சனை அறியாத அவன் உண்மையே மொழிபவன்

அம்மையே, நற்குணங்களைக் கொண்டவன் இராமன்

இந்த எல்லா குணங்களையும் கொண்டிருக்கும் தம்பி இலக்குவனின்

நிறமோ பொன்னையுடைத்து.

இந்தப் பாடலில் இராமனின் குணங்களை வரிசையாகப் பட்டியலிட்ட கவிஞர், ஒற்றை வரியில் இலக்குவனின் குணத்தை வகுத்துக் காட்டிவிடுகிறார்.

பெண்கள் எழுதிய பிற காப்பியங்களில், கவிதைகளில் பக்தி, கருணை ஆகிய இரண்டு ரசங்களே அதிகமும் பயன்படுத்தப்பட்ட நிலையில் மொல்லா தனது இராமாயத்தில் சிருங்காரம், வீரம், ரௌத்திரம், அச்சம், அற்புதம், அருவருப்பு ஆகிய பிற ரசங்களையும் பயன்படுத்தி கவிதைகளை புனைந்துள்ளார். வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் குறித்து பேச நேரும்போதெல்லாம் மொல்லா இளமையின் தீவிரத்தையும் காமத்தின் ஆற்றலையுமே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். சிருங்கார ரசத்தை ஆளவேண்டிய அவசியமே இல்லாத இடங்களிலும் அதை வலுக்கட்டாயமாக கையாண்டிருக்கிறார். அயோத்தி நகரத்தின் வளத்தையும் அழகையும் வர்ணிக்கும்போதுகூட அங்கிருந்த சேணமிடப்பட்ட குதிரைகளில் தொடங்கி தந்திரமான கணிகைகள் வரை எவ்வளவு மோகப் பெருக்குடன் திகழ்ந்தன என்றே விவரிக்கிறார்.

வால்மீகியின் காப்பியத்தில் ‘யுத்தகாண்ட‘மே மிக நீண்ட ஒன்று. மொல்லாவும் தனது காவியத்தில் அதே யுத்த காண்டத்தை நீளமானதாக புனைந்துள்ளார். யுத்தக் காட்சிகளை விவரிப்பதில் மொல்லாவுக்கு பெருவிருப்பம் இருந்துள்ளது. சண்டைகள், ஆயுதங்கள், படை வரிசைகள், அமைச்சர்கள், கோரமான காட்சிகள், சிதைந்த உடல்கள் என அனைத்தையும் வர்ணித்துள்ளார். காமத்தை விவரிப்பதில் கொண்டிருந்த அதே விருப்பம் யுத்தத்தை வர்ணிப்பதிலும் இருந்துள்ளது.

இராமாயணத்தின் நாயகி சீதாவின் மீது மொல்லாவுக்கு பெரிய அளவு கவனம் இல்லை. அவள் அழகி என்பதை மட்டுமே வர்ணிக்கிறார்.

அவை பங்கயங்களா

மன்மதன் எய்தும் அம்புகளா

            சொல்வது கடினம் – அவள் கண்கள்.

பறவைகளின் இனிய இசையா

அல்லது தேவ கன்னியரின் பாடல்களா

            சொல்வது கடினம் – அவளது குரல்

நிலவா

அல்லது முகம் பார்க்கும் ஆடியா

            சொல்வது கடினம் – அவளது முகம்

பொற் குவளைகளா

அல்லது சக்ரவாகப் பட்சிகளா

            சொல்வது கடினம் – அவளது முலைகள்

நீலமணிச் சரங்களா

அல்லது தேனீக்களின் கூட்டமா

            சொல்வது கடினம் – அவளது கேசம்

மணல் மேடுகளா

அல்லது மன்மதனின் மண மேடையா

            சொல்வது கடினம் – அவளது தொடைகள்

அவளது எழில் கண்டு நிற்குந்தோறும்

காண்போர் கொள்வது பேதமை.

சீதாவின் பிறப்பைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. புகழ்பெற்ற அவளது சுயம்வரத்தைக்கூட ஒரு சிறிய முக்கியமில்லாத நிகழ்ச்சி என்பதுபோல் கடந்து போயிருக்கிறார். ஆனால், காட்டில் அவள் பட்ட துன்பங்களை சித்தரித்திருக்கிறார்.

காட்டின் வழியாக துயருடன் செல்லும் சீதையைக் கண்ட பழங்குடிப் பெண் சொல்லும் வரிகள் இவை

சீதையின் பாதங்களைப் பாருங்கள், பாவம்

முட்கள் நிறைந்த வனத்தில் நடந்து பழக்கமில்லை அவளுக்கு.

அழகிய அவரது கைகள் மென்மையின் ஒளியை இழந்துவிட்டன

கரடுமுரடான இந்தப் பாதையில் நடந்து அவை செம்மணிகள் போல்

நிறம் மங்கிப்போயின.

காய்ந்துலர்ந்த கொடியொன்று வீசும் காற்றில் அலைவதுபோல

சீதையின் மெல்லிய உடல் வெயிலில் நடுங்கி வதங்குகிறது

ஒளிமங்கும் தேய்பிறையென

சீதையின் முகம் வழக்கமான தன் பொலிவை மெல்ல இழக்கிறது.

இராம இலட்சுமணரின் நடைக்கு ஈடுகொடுத்து

நடக்க முயன்று மூச்சு வாங்கிட அவள் மார்புகள் ஏறி இறங்குகின்றன

இரக்கமற்று சுட்டெரிக்கும் வெயிலிடமிருந்து தப்ப எண்ணி

சிறு நிழல் தேடி அலையும் அவள் கண்களைப் பாருங்கள். 

அதேபோல, வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஆனால் துளசி இராமாயணத்தில் இடம்பெற்றிருந்த ‘இலட்சுமண ரேகை’ பகுதி மொல்லாவின் இராமாயணத்திலும் இடம் பெறவில்லை.

 

கும்மாரா மொல்லா என்று அழைக்கப்படுவதில் கும்மாரா என்பது அவர் குயவர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற பொதுவான புரிதலை, குறிப்பிடுதலை மறுக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள். மொல்லா தனது எழுத்தில் எங்கும் தன் சாதியைக் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். ‘கும்மாரா’ என் முன்னொட்டை பிற்காலத்தில் இராமாயணம் அச்சுக்கு வந்தபோது பதிப்பகத்தினர் சேர்த்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

மொல்லா வாழ்ந்த காலத்தை அறிய அவர் தன் நூலின் முகவுரையே ஆதாரமாக உள்ளது. தனது நூலின் முகவுரையில் அவர் நன்றியறிவித்திருக்கும் கவிஞர்களின் பட்டியலைக் கொண்டும் யாருடைய பெயர்களையெல்லாம் அவர் குறிப்பிடவில்லை என்பதை வைத்தும் அவர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று கணிக்க முடிகிறது.

 

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், மொல்லாவின் கவித்திறனைக் குறித்துக் கேள்விப்பட்டு தனது அவைக்கு அழைத்ததாகவும் அரசவைக்குச் சென்று மொல்லா கவிதைப் பாடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மொல்லாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாப் பக்கங்களிலும் இது இடம் பெற்றுள்ளது. மொல்லாவின் கவிதைகளைப் பாடக் கேட்டு, அரசரும் அவரது அமைச்சர்கள், புலவர்கள் அனைவரும் அவரது திறனைக் கண்டு வியந்து ‘இவரது பாடல்களை உலகையே மேலே தூக்கும் யானைகளுக்கு சமமானவை’ என்று புகழ்ந்து பாராட்டியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அதே சமயம், ஒருசில புலவர்கள் அவரது கவிதைத் திறனை சோதிக்கும்விதமாக, உடனடியாக அதே அவையில் ஒரு பாடலைப் புனைந்து காட்டுமாறு கேட்டபோது, பாகவத புராணத்தில் இடம் பெறும் கஜேந்திர மோட்சத்தைக் குறித்து அபாரமான கவிதை ஒன்றை புனைந்து பாடியதாகவும், அதனைக் கண்டு வியந்து அவருக்கு ‘கவிரத்னா’ என்று பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

 

இன்னொரு தரப்பினர் அவர் விஜயநகரப் பேரரசைச் சந்திக்கவேயில்லை என்று இவை அனைத்தையும் மறுக்கிறார்கள். மொல்லா சூத்ரகுலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் முக்கியமாக அவர் பெண் என்பதாலும் அவர் இயற்றிய காவியத்தை அரசவையில் பாட அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எழுதப்படும் கவிதைகள் பண்டிதர்களும் புலவர்களும் மெச்சுவதற்கு அல்ல, எளிய சாதாரண மக்கள் கேட்டு ரசிப்பதற்கே என்பது மொல்லாவின் நோக்கம். ஆனால், அவர் தன் காவியத்தை இலக்கண சுத்தத்துடன் பாடியிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும்போது மரபை மீறியதையும் எளிமையான மொழியமைப்பையும் காரணம்காட்டி அரசவைப் பண்டிதர்கள் இதை நிராகரிக்க முடியாது என்று சவால் விட்டிருப்பதுபோலவும் யோசிக்க முடிகிறது. கூடவே, பெண் என்பதால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற எழுதப்படாத விதியையும் துணிந்து மீறியிருப்பதையும் காண முடிகிறது.

அவரது பிற்கால வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. தனது குடும்பத்தை விட்டுச் சென்று ஸ்ரீசைலத்தில் தங்கிவிட்டதாகத் தெரிகிறது. மல்லிகார்ஜுனர் கோயில் அருகில் வசித்த அவர் ஒரு துறவிபோல வாழ்ந்திருக்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். தனது 90 வயதில் 1530ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.

அவரது இராமயணம் தெலுங்கில் பரவலாகக் கிடைக்கிறது. ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் இதன் மொழியாக்கம் கிடைக்கவில்லை. ஒருசில பாடல்களை சில வலைத்தளங்களில் காண முடிந்தது. (அவற்றின் மொழியாக்கமே இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.) 

ஹைதராபாத் உசேன் சாகர் ஏரிக்கரையில் டாங்க் பண்ட் சாலையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவாக தபால் தலையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தூரி வெங்கடேஸ்வரராவ் ‘கும்மார மொல்லா’ என்ற நாவலை 1969ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். அது இப்போது பதிப்பில் இல்லை. இந்த நாவலை சங்கர சத்யநாராயணா என்பவர் ஒரு கதைப் பாடலாக மாற்றி எழுதியுள்ளார். அந்தக் கதைப் பாடல் இன்றும் ஆந்திராவின் பல இடங்களிலும் பாடப்படுகிறது. இவரது வாழ்வு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு நடிகர் பத்மநாபன். ‘கதாநாயகி மொல்லா’ என்ற அந்தப் படத்தில் மொல்லாவாக நடித்திருப்பவர் வாணிஸ்ரீ.

0

( மே 2025 ‘நீலி’ மின்னிதழில் வெளியான கட்டுரை ) 

 

 

    

விநோத் குமார் சுக்லவின் கவிதைகள்



2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சில கவிதைகள்.

1

 

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

0

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

அவசரத்துக்குக்கூட திரும்ப முடியாத் தொலைவிலிருந்து

உன் வீட்டை நீ காணவேண்டும்

எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத

தொலைவுக்குப் போய்விடவேண்டும்

ஏழுகடல்தாண்டிச் செல்லவேண்டும்

 

போகும்போதே திரும்பித் திரும்பிப் பார்க்கவேண்டும்

இன்னொரு தேசத்திலிருந்து உன்னுடைய தேசத்தை

ஆகாயத்திலிருந்து உன்னுடைய பூமியை

 

வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்ற நினைப்பு

அப்போது பூமியில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதாகிவிடும்

வீட்டில் உண்ண உணவும் பருக நீரும் இருக்குமோ என்ற கவலை

பூமியில் உணவும் நீரும் உண்டோ என்ற கவலை ஆகும்

 

பூமியில் பசித்திருக்கும் யாரோ ஒருவர்

வீட்டில் பசித்திருப்பவராகிவிடுவார்

 

மேலும் பூமிக்குத் திரும்புவதென்பது

வீட்டுக்குத் திரும்புவது போலாகிவிடும்.

 

வீட்டுக்கணக்குப் புத்தகமென்பது மிகவும் குழப்பமானது

சிறிது தூரம் நடந்துவிட்டு

வீடு திரும்புகிறேன்

பூமிக்குத் திரும்புவதுபோல.

 

2

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

0

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

அந்த மனிதனை எனக்குத் தெரியாது

நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்

எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்

நான் கை நீட்டினேன்

என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்

என்னை அவனுக்குத் தெரியாது

நான் கைநீட்டியதை அவன் அறிவான்

நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்

ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்

சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு.

 

0

3

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

0

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

ரப்பர் செருப்புகளைப் போட்டிருந்த நான் தடுமாறி நின்றுவிட்டேன்

நேரம் காலை ஆறு மணி. குளிர்பருவ ஆடைகள் களைப்பட்டிருக்கும் பொழுது.

நடுநடுங்கச் செய்யும் கடுங்குளிர்

காலை ஆறு மணி என்பது காலை ஆறு மணியைப் போலவேயிருந்தது.

மரத்தடியில் ஒரு மனிதன் நின்றிருந்தான்.

மூடுபனியினூடே அவன் உருக்கரைந்த

தன் உருவத்தினுள்ளே நிற்பதுபோல இருந்தது.

உருக்கரைந்த மரமோ அச்சுஅசலாக மரம் போலவே தெரிகிறது.

அதன் வலப்புறம் உருக்கலைந்த மட்டரகக் குதிரையொன்று

மட்டரகக் குதிரையொன்றைப்போலவே தென்படுகிறது.

பசியுடனிருந்த குதிரைக்கு

பசும்புல்வெளிபோல் தோற்றமளிக்கிறது மூடுபனி.

வேறு வீடுகளும் மரங்களும் சாலைகளும் இருந்தன

ஆனால் குதிரை எதுவும் இல்லை.

தனித்து நின்றது ஒரு குதிரை. அந்தக் குதிரை நானில்லை.

ஆனால், நான் மூச்சிரைக்கும்போது

மூடுபனியிலிருந்து என் மூச்சுக் காற்றைப் பிரித்தறிய முடியவில்லை.

மரத்தடியில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் நிற்கும் அந்த மனிதன்தான்

குதிரைக்காரன் என்றால்

அவனைப்பொறுத்தவரை

குதிரையைப்போலவே லாடங்கள் அடிக்கப்பட்டிருக்கும் காலணிகளுடன்

ஓடிக்கொண்டிருக்கும் குதிரையல்லவா நான்.

 

4

வாழ்க்கைப் பழக்கம்

0

வாழ்க்கையை வாழும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டேன் நான்

வாழ்க்கையை வாழும் இந்தப் பழக்கத்தில்

மழை பெய்யும் என்றால்

வாழும் பழக்கத்திலும்

மழை பெய்யும்

குடையை எடுக்க மறப்பேன் என்றால்

வாழும் பழக்கத்திலும்

குடையை எடுக்க மறந்துதான் போகும்

முழுக்க நனைந்து போவேன்

எப்போதெல்லாம் இடியிடிக்கிறதோ

அப்போதெல்லாம் இடியிடிக்கிறது.

 

வாழும் இந்தப் பழக்கம் என்பது

எழுவதும் உட்கார்வதும் வேலைசெய்வதும்

கொஞ்சூண்டு எதிர்காலத்திலிருந்து

பெரும்பங்கு கடந்த காலத்தை சேமித்துக்கொள்வது

இருந்தும் எதிர்காலம் இன்னும் பெரிதாகவே இருக்கிறது.

 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தில்

நான் வேண்டுகிறேன்

என்னை நல்ல மனிதனாக இருக்கவிடு

எல்லோரையும் நலமுடன் இருக்கவிடு

 

அப்போதுதான் எப்படி எங்கிருந்து என்று தெரியவில்லை

வாழும் பழக்கத்தில்

அண்டைவீட்டின் துக்க அணை உடைந்துவிட்டாற்போல

துக்கத்தின் பெருவெள்ளம் பொங்கிப் பெருகியது

வெள்ளத்தில் மூழ்கிடாத மகிழ்ச்சியின் ஒரு சிறு துரும்பு

மிதந்து செல்கிறது

துயரம் நிறைந்த முகத்தில்

ஒரு சிறு புன்னகையைப்போல.

 

அது என்னையும் மூழ்கடிக்கவில்லை

என் அண்டைவீட்டுக்காரனையும்.

மின்னல் வெட்டிய பொழுதில்

மின்னல் வெட்டியது.

 

கும்மிருட்டில் மின்னலின் ஒளிக்கீற்றின் துணைகொண்டு

மெல்ல அடியெடுத்து வைத்தேன்

வாழும் பழக்கத்தில்

நான் செத்துப்போகும்போது

யாரேனும் ஒருவர் சொல்லக்கூடும்

நான் செத்துப்போகவில்லை என்று

அப்போதும் நான் செத்துக் கொண்டுதானிருப்பேன்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

வாழும் பழக்கதிலும்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

செத்துப்போன பின்பும்

வாழ்க்கையை வாழும் பழக்கத்தில்

நான் என் குடையை மறந்துபோவேன்.   

 

0

 


‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’ - விநோத் குமார் சுக்லா


 

“எழுத்து என்பது ஒரு பொறுப்பு. முதலில் இது எனக்குத் தெரியவில்லை. விளையாடிக்கொண்டே வளர்வதுபோல நான் எழுதிக்கொண்டே வளர்ந்திருந்தேன். ஆனால், எழுத்துக்கு ஒரு மரபு உள்ளது. நானும் இந்த மரபினூடே மிதந்திருக்கவே முயன்றேன். சிலர் இதில் நீந்தக் கற்றிருந்தனர். எழுதுவது எனக்கு தினசரி காரியங்களைப்போல பழக்கமாகிவிட்டது. எழுத்து எப்போதுமே செய்து முடிக்காத ஒரு காரியந்தான். இத்தனை ஆண்டுகளாக எழுதியபோதும் எழுத்துக் கலையை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. ஒரு எழுத்தாளனாக முன்னர் சந்தித்த சவால்களையே இப்போதும் சந்திக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எழுதுவது என்பது எழுத முயல்வதுதான்.”

விநோத் குமார் சுக்லாவுக்கு வயது 88. கண் பார்வை மங்கிவிட்டது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும்கூட சுக்லா எழுதுவதை நிறுத்தவில்லை. தினமும் தொடர்ந்து எழுதுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்தகாவ் என்ற சிறிய ஊரில் 1937ஆம் ஆண்டு பிறந்தார் வினோத் குமார் சுக்லா. அதே ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஜபல்பூரில் விவசாய அறிவியலில் இளங்கலை பட்டம் பயின்றார். பிறகு ராய்பூர், இந்திரா காந்தி அறிவியல் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றார். அக்கம்பக்கமுள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதுதான் அவரது பணி.

கலைஞர்கள் பலரையும்போலவே அவருடைய எழுத்து ஆழமாகக் கால்கொண்டிருப்பது குழந்தைப் பருவ நினைவுகளிலேயே. 1937ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அவர் பிறந்தார். அதே நாளில் அவருடைய வீட்டுக்கு எதிரில் கிருஷ்ணா டாக்கீஸ் என்ற திரையரங்கம் திறக்கப்பட்டது. தன் தாயின் மடியில் அமர்ந்தபடி எண்ணற்ற படங்களை அங்கு அவர் பார்த்திருக்கிறார். காட்சி ஊடகத்துடனான உறவு பால்குடி நாட்களிலேயே ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதலே சினிமா, நாடகங்கள், ராம்லீலா கூத்துகள் ஆகியவற்றின் வழியாக அவருடைய கற்பனை ஆற்றல் விரிவடைந்துள்ளது.

1958ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறத் தவறியதால் பட்டப் படிப்பில் அவருக்கு அறிவியல் பிரிவில் இடம் கிடைக்கவில்லை. இந்தி ஒரு பாடமாக இடம் பெற்றிராத விவசாயக் கல்லூரியில் சேர்ந்தார். “எனக்கு இந்தி சுத்தமாக வரவில்லை என்று என்னுடைய ஆசிரியர்கள் கருதினார்கள்” என்று சிரித்தபடியே சொல்கிறார் “இந்தியில் நான் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்நேரம் நான் ஒரு பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆகியிருப்பேன்.” ஆனால், அதே ஆண்டில் இந்தியின் மாபெரும் கவிஞராக கருதப்படும் கஜானன் முக்திபோத் ராஜ்நந்தகாவில் குடியேறுகிறார். சுக்லாவின் கவிதைகள் முக்திபோதின் பார்வைக்கு வருகின்றன. அவரிடம் கவிதைக்கான ஒரு அபூர்வமான தெறிப்பு இருப்பதை முக்திபோத் காண்கிறார். முக்திபோதின் முயற்சியில் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஏறக்குறைய ஜெய்ஹிந்த்’ 1971ஆம் ஆண்டு வெளியானது. இருபது பக்கங்களை மட்டுமே கொண்ட அந்த எளிய அத்தொகுப்பு அதன் தலைப்பின் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பத்து ஆண்டுகள் கழித்து 1981ஆம் ஆண்டு இரண்டாவது தொகுப்பு ‘புதிய கம்பளி கோட்டு அணிந்த அந்த மனிதன் ஒரு யோசனையைப் போல கடந்து சென்றான்’ வெளிவந்தது.

அவரது கவிதைகளை முற்போக்குவாதப் பிரிவைச் சேர்ந்தவை என்றோ அல்லது நவீனக் கவிதை வகை என்றோ அடையாளப்படுத்தலாம். ஆனால், அவர் தன் அரிதான, ஆற்றல்மிக்க கவிதைகளின் வழியாக தொடர்ந்து இவ்வகையான அடையாளங்கள், வடிவம், மொழி, இலக்கணம் ஆகியவற்றுக்கான விதிகளுக்கு சவால்விடுத்து வருகிறார்.

ஒருமுறை இளம் எழுத்தாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் அவரை சந்திக்க வேண்டி தொலைபேசியில் அழைக்கிறார். உடனே வரச் சொல்கிறார். வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று விசாரித்தவுடன் சுக்லா சொல்கிறார் “வெள்ளை அலரிப் பூக்கள் பூத்திருக்கும் வீடு.” அவர் மறுபடியும் முகவரியை விசாரிக்க சுக்லாவிடமிருந்து அதே பதில்தான் வருகிறது. அவரது வீட்டைக் கண்டுபிடித்து, சந்தித்துப் பேசிவிட்டு திரும்பும்போதுதான் அவருக்குப் புரிகிறது, சுக்லாவின் கதாபாத்திரங்களும் கதைகளும் ஏன் அத்தனை எளிமையானவர்களாக அமைந்துள்ளன என்று. சுக்லா தான் எழுதும் புனைவுகளில் தன்னுடைய குணாம்சங்களையே அதிகமும் சேர்க்கிறார்.

தனக்குத் தெரிந்த நிலம், தான் அறிந்த மனிதர்கள், சம்பவங்களை மட்டுமே தன் புனைவுகளின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். பிற மொழிகளில் யார் என்ன எழுதுகிறார்கள், புதுவிதமான முயற்சிகள் என்ன நடக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதுமில்லை, கவனத்தில் கொள்வதுமில்லை. அதே நேரத்தில் அவரது படைப்புகள் யதார்த்தவாத பாணியில் அமைந்தவை மட்டுமல்ல. புதுமையான அணுகுமுறையைக் கொண்டவை. வாழ்க்கை, மரணம் சார்ந்த பெரும் கேள்விகளைக் குறித்த சிந்தனைகளோ நினைவோட்டங்களோ அவரது எழுத்தில் இருப்பதில்லை. மனிதனின் அகத்துடனான மோதல்களும் கிடையாது. அவரது கள்ளங்கபடமற்ற கதாபாத்திரங்கள் துயரத்துடன் ஒருவித இணக்கமான பிணைப்பை உருவாக்கி தம் வறுமையை நகைத்தபடி கடக்கின்றனர். எந்தவிதமான நம்பிக்கையோ எதிர்பார்ப்போ புகாரோ இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடக்கும் அவர்களின் சாதாரணத்துவத்தில் தங்களுக்குள் அவர்கள் கொண்டிருக்கும் பரந்த, உணரப்படாத பிரபஞ்சமும் வெளிப்படுகிறது. வினைச் சொற்களை சற்றே மாற்றி வியத்தகு படிமங்களையும் உருவகங்களையும் உருவாக்குகிறார். கீழ் மத்திய தர குடும்பங்களின் வாழ்க்கையை அதன் எளிமையுடன் இயல்புடன் அன்றாடத்தின் நிச்சயமின்மையுடன் சித்தரிப்பதே அவரது பலம்.  

அவரது நாவல்களில் அங்கங்கே கவிதைகளைக் காணமுடியும். “நமது மரபு கவிதைகளால் ஆனது. நமது காப்பியங்களும் வேதங்களும் கவிதைகளால் ஆனவை. எனக்குள் அது உள்ளூர படிந்திருக்கிறது.” அவரது நாவல்களை எந்த பக்கத்திலிருந்தும் பத்தியிலிருந்தும் வாசிக்க முடியும். ஒரு நீண்ட பயணம் போன்ற அதில் எந்த பயணியும் எந்த இடத்திலும் சேர்ந்து கொள்ள முடியும். அவரது கதை முடிவுகள் தர்க்கப்பூர்வமானவை அல்ல. அதைப் பற்றி கேட்டபோது சொன்னார் “போதுமான அளவு எழுதிவிட்டேன் என்று தோன்றியவுடன் நிறுத்திவிடுவேன்.”

“ஒரு சிறுகதைக்கும் நாவலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிறுகதையை ஒரு இடத்தில் முடிக்காமல் மேலும் தொடர்ந்து எழுதினால் அது நாவலாகிவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு எழுத்தாளரும் இதைச் சொல்லியிருந்தால் அது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும். ஆனால், இலக்கியத்தின் எந்த அளவுகோல் குறித்தும் பொருட்படுத்தாத இத்தன்மைதான் அவரை அசலானவராகவும் வித்தியாசமானவராகவும் உறுதிப்படுத்துகிறது. இலக்கிய மையங்களிலிருந்து அவர் விலகியிருக்கிறார். விவாதங்கள் எதிலும் பங்கேற்பதில்லை. பல எழுத்தாளர்கள் அவரது எழுத்துப் பாணியை பின்தொடர்ந்தபோதும், அவர் தனது எழுத்தைக் குறித்து இதுவரையும் ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை.     

சுக்லா தன்னுடைய சொந்த ஊரான ராய்ப்பூரைவிட்டு அதிகமும் வெளியில் போனதில்லை. வெளியுலகத்தான அவருடைய தொடர்பு மிகவும் குறைவு. உலக இலக்கியங்களுடன், இந்திய இலக்கியங்களுடன் அவருக்கு அவ்வளவு அறிமுகமும் இல்லை. அவருடைய வீட்டு அலமாரியில் இருக்கும் புத்தகங்களும் மிகச் சொற்பம்.

“உங்களுக்குப் பிடித்த உலக எழுத்தாளர்கள் யார்?” என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் “நீங்கள் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சொல்லுங்கள். எனக்கும் பிடிக்கும் என்றால் சொல்கிறேன்.”

சத்தீஸ்கரில் உள்ள தன் வீட்டை விட்டு அதிகமும் வெளியில் வராத சுக்லாவின் மீது பெருமதிப்பு கொண்டவர்கள் இந்தியாவெங்கும் உண்டு. மிகுந்த ஞானமும் ஏராளமான பயணங்களையும் மேற்கொண்டவர்களில் முக்கியமான இருவர் கிருஷ்ண பல்தேவ் வைத், நிர்மல் வர்மா ஆகியோர். அவர்கள் இன்னொருவரை பாராட்டுவது என்பதே அரிது. நிர்மல் வர்மா வாசிக்கப் பரிந்துரைத்த நாவல்களில் ஒன்று ‘நௌகர் கீ கமீஜ்.” கிருஷ்ண பல்தேவ் வைத்துக்கும் இந்த நாவல் பிடித்தமான ஒன்று.

இந்த நாவலை எழுதியதன் பின்னணி சுவையான ஒன்று. மத்திய பிரதேச அரசு அதிகாரியாக விளங்கிய அசோக் வாஜ்பாய், ‘முக்திபோத் ஃபெலோசிப்’ நல்கையை சுக்லாவுக்கு வழங்க தீர்மானிக்கிறார்கள். இதற்காக குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு நாவலை எழுதித் தரவேண்டும். தன் பணியிலிருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்குகிறார். பிரபல எழுத்தாளர்கள் பலரும் தட்டச்சுப் பொறியை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிகிறார் சுக்லா. இந்த விடுப்பை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முடிவு செய்து ராய்பூரின் கோல் பஜாரில் உள்ள துர்கா தட்டச்சு பயிலகத்தில் சேர்கிறார். ஆறு மாதங்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்றார். அதுவரையிலும் அவர் ஒரு வரிகூட எழுதியிருக்கவில்லை. தட்டச்சு செய்யவும் கற்றுக் கொள்ளவில்லை. வானொலியை பழுதுபார்க்க கற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவரது வெகுநாள் கனவு. அதற்கான வகுப்பிலும் இதே சமயத்தில் சேர்ந்திருந்ததுகூட இதற்கு காரணமாக இருக்கலாம். 

மனம் வெறுத்து அசோக் வாஜ்பாய்க்கு எழுதுகிறார் “கடந்த ஆறு மாதங்களாக நான் எதையுமே எழுதவில்லை. எனக்கு தரப்பட்டுள்ள நல்கையை ரத்து செய்துவிடுங்கள்.” வாஜ்பாய் பதில் எழுதுகிறார் “உங்களுக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இனி உங்கள் விருப்பம். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.”

வாஜ்பாய் தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஏன் எழுதக் கூடாது என்று யோசிக்கிறார். அடுத்த ஆறு மாதத்தில் நாவலை எழுதி ஒப்படைக்கிறார்.

சத்தீஸ்கரும் அவர் சொந்த மாவட்டமும் கனிமவளச் சுரங்கங்கள் சார்ந்த தீவிர அரசியல் போராட்டங்களுக்கு பெயர் பெற்றது. ஆனாலும், கடும் நெருக்கடி தரும் இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து சுக்லா முழுவதுமாக விலகியே இருந்தார். இவரைப் போன்ற ஒரு பெரும் இலக்கிய ஆளுமை, இதுபோன்ற முக்கியமான பிரச்சனையில் பொருட்படுத்தத்தக்க அரசியல் ஊடுருவலை நிகழ்த்தியிருக்க முடியும் என்று இலக்கிய உலகும், பொதுமக்களும் கூட எதிர்ப்பார்த்தனர். அவருடைய மௌனம் தாங்க முடியாத ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.

யார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விக்ராந்த் டாடாவாலா சுக்லாவை ஒரு முறை சந்திக்கிறார். வீட்டு முற்றத்தில் அமர்ந்து ‘போகா’(தாளித்த அவல்)வைச் சுவைத்தபடியே, அவரது இளமைக்கால இடதுசாரி இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விகளை கேட்கிறார். சுக்லா உறுதியான எந்த பதிலையும் தருவதில்லை. எதிர்பார்த்ததைவிட மந்தமானவராக இருந்த சுக்லா சொல்கிறார் “மிகச் சாதாரணமான கீழ் மத்திய தர வாழ்க்கையையே நான் கழித்திருக்கிறேன். எழுதத் தகுந்த எந்தவொரு சம்பவமும் என் வாழ்க்கையில் நடந்ததில்லை. சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். அவரது இழப்பைத் தொடர்ந்து குடும்பத்தை நிலைகுலைத்த பொருளாதாரச் சூழலை இன்னும் நான் மறக்கவில்லை. வழக்கமாக ஒருவருக்கு வாய்க்கும் சிறுவர் பருவத்தைவிட மிகக் குறுகியதாக அமைந்துபோனது என் சிறுபருவம். வீட்டைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் எனது கூண்டை சற்று விசாலாமாக்குவதாகவே எனக்குத் தோன்றும். ஏதேனும் ஒரு விதத்தில் நாம் அனைவருமே கூண்டுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். சுதந்திரம் என்பது உங்கள் கணுக்காலைப் பற்றியிருக்கும் கயிற்றின் நீளத்தைப் பொறுத்ததுதான்.”

பதினைந்து வயதிலிருந்து எழுதி வரும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிறார் “ஒருநாள் திடீரென்று எனக்குத் தெரிய வந்தது, மொழியின் வழியாக நான் சிந்திப்பதில்லை, படிமங்களின் வழியாகவே சிந்திக்கிறேன் என்று. மொழியை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆதி மனிதன் படிமங்களின் வழியாகவே சிந்தித்திருப்பான். மொழி பிற்காலத்தில்தான் வந்தது. முதலில் படிமத்தைக் குறித்து யோசித்துவிட்டு அதை எழுத்தில் வடிக்கிறேன்.”

ஆறு நாவல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்த பாணிக்கு மிக நெருக்கமானது அவருடைய எழுத்து முறை. அதே நேரத்தில் அவரது எழுத்து அசலானதாகவும் காட்சியழகு கொண்டதாகவும் அமைந்திருக்கும். ‘சுவரில் ஒரு ஜன்னல் இருந்தது’ நாவலுக்காக 1999ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. அவருடைய முதல் நாவல் ‘வேலைக்காரனின் சட்டை’யை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணி கௌல் படமொன்றை இயக்கியுள்ளார்.

சர்வதேச அளவில் வழங்கப்படும் இலக்கியத்துக்கான PEN/Nabokov விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மை காலத்தில் அவர் குழந்தைகளுக்காக மிகுந்த ஆர்வத்துடன் நிறைய எழுதுகிறார். “குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுடைய வயதை நான் கவனத்தில் கொள்கிறேன். ஆனால், இளைஞர்களுக்கு பயன்படுத்தும் அதே மொழியையே குழந்தைகளுக்கும் பயன்படுத்துகிறேன். மொழியை நான் தளர்த்துவதில்லை. குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு புரியாது என்று நினைக்கவில்லை. அவர்களுடைய வயதுக்கு கூடுதலான புத்திசாலித்தனம் அவர்களிடம் உண்டு. எனவே, மொழியை நான் தளர்த்த மாட்டேன். சொல் முறையை தகுந்தபடி மாற்றிக் கொள்கிறேன்.

எழுதுவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிப்பது எதிர்காலம். அது முழுக்க நம்பிக்கை நிறைந்தது.”

அவரது எழுத்தில் சிறிதளவு கசப்பையோ அல்லது உலகுக்கு எதிரான புகாரையோ காணமுடியாது. “கெட்ட குணங்களுடன் யாரையேனும் சித்தரிக்கும்போதுகூட அவர் அப்படியிருக்க மாட்டார் என்பதற்கான சிறிய நம்பிக்கையோ அல்லது குறிப்போ நிச்சயம் இடம்பெற்றிருக்கும்” என்று விளக்கினார். “கெடுதலே உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா?” என்று வினவியபோது அவர் சொன்னது “அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால், எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை இன்னும் மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனைதான்.”

0

(2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலச்சுவடு மே 2025 இதழில் வெளியான கட்டுரை) 

 

 

இராமாயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி - ஆத்துக்குரி மொல்லா

    ‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாற...