“எழுத்து என்பது ஒரு பொறுப்பு. முதலில் இது எனக்குத் தெரியவில்லை. விளையாடிக்கொண்டே வளர்வதுபோல நான் எழுதிக்கொண்டே வளர்ந்திருந்தேன். ஆனால், எழுத்துக்கு ஒரு மரபு உள்ளது. நானும் இந்த மரபினூடே மிதந்திருக்கவே முயன்றேன். சிலர் இதில் நீந்தக் கற்றிருந்தனர். எழுதுவது எனக்கு தினசரி காரியங்களைப்போல பழக்கமாகிவிட்டது. எழுத்து எப்போதுமே செய்து முடிக்காத ஒரு காரியந்தான். இத்தனை ஆண்டுகளாக எழுதியபோதும் எழுத்துக் கலையை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. ஒரு எழுத்தாளனாக முன்னர் சந்தித்த சவால்களையே இப்போதும் சந்திக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எழுதுவது என்பது எழுத முயல்வதுதான்.”
விநோத்
குமார் சுக்லாவுக்கு வயது 88. கண் பார்வை மங்கிவிட்டது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு
சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும்கூட சுக்லா
எழுதுவதை நிறுத்தவில்லை. தினமும் தொடர்ந்து எழுதுகிறார்.
சத்தீஸ்கர்
மாநிலத்தில் உள்ள ராஜ்நந்தகாவ் என்ற சிறிய ஊரில் 1937ஆம் ஆண்டு பிறந்தார் வினோத் குமார்
சுக்லா. அதே ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஜபல்பூரில் விவசாய அறிவியலில் இளங்கலை
பட்டம் பயின்றார். பிறகு ராய்பூர், இந்திரா காந்தி அறிவியல் பல்கலைக் கழகத்தில் இணைப்
பேராசிரியராக பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றார். அக்கம்பக்கமுள்ள கிராமங்களுக்கு சென்று
அங்குள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதுதான் அவரது பணி.
கலைஞர்கள்
பலரையும்போலவே அவருடைய எழுத்து ஆழமாகக் கால்கொண்டிருப்பது குழந்தைப் பருவ நினைவுகளிலேயே.
1937ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அவர் பிறந்தார். அதே நாளில் அவருடைய வீட்டுக்கு எதிரில்
கிருஷ்ணா டாக்கீஸ் என்ற திரையரங்கம் திறக்கப்பட்டது. தன் தாயின் மடியில் அமர்ந்தபடி
எண்ணற்ற படங்களை அங்கு அவர் பார்த்திருக்கிறார். காட்சி ஊடகத்துடனான உறவு பால்குடி
நாட்களிலேயே ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதலே சினிமா, நாடகங்கள், ராம்லீலா கூத்துகள்
ஆகியவற்றின் வழியாக அவருடைய கற்பனை ஆற்றல் விரிவடைந்துள்ளது.
1958ஆம்
ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறத் தவறியதால்
பட்டப் படிப்பில் அவருக்கு அறிவியல் பிரிவில் இடம் கிடைக்கவில்லை. இந்தி ஒரு பாடமாக
இடம் பெற்றிராத விவசாயக் கல்லூரியில் சேர்ந்தார். “எனக்கு இந்தி சுத்தமாக வரவில்லை
என்று என்னுடைய ஆசிரியர்கள் கருதினார்கள்” என்று சிரித்தபடியே சொல்கிறார் “இந்தியில்
நான் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்நேரம் நான் ஒரு பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆகியிருப்பேன்.”
ஆனால், அதே ஆண்டில் இந்தியின் மாபெரும் கவிஞராக கருதப்படும் கஜானன் முக்திபோத் ராஜ்நந்தகாவில்
குடியேறுகிறார். சுக்லாவின் கவிதைகள் முக்திபோதின் பார்வைக்கு வருகின்றன. அவரிடம் கவிதைக்கான
ஒரு அபூர்வமான தெறிப்பு இருப்பதை முக்திபோத் காண்கிறார். முக்திபோதின் முயற்சியில்
அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஏறக்குறைய ஜெய்ஹிந்த்’ 1971ஆம் ஆண்டு வெளியானது. இருபது
பக்கங்களை மட்டுமே கொண்ட அந்த எளிய அத்தொகுப்பு அதன் தலைப்பின் காரணமாக அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தது. பத்து ஆண்டுகள் கழித்து 1981ஆம் ஆண்டு இரண்டாவது தொகுப்பு ‘புதிய கம்பளி
கோட்டு அணிந்த அந்த மனிதன் ஒரு யோசனையைப் போல கடந்து சென்றான்’ வெளிவந்தது.
அவரது
கவிதைகளை முற்போக்குவாதப் பிரிவைச் சேர்ந்தவை என்றோ அல்லது நவீனக் கவிதை வகை என்றோ
அடையாளப்படுத்தலாம். ஆனால், அவர் தன் அரிதான, ஆற்றல்மிக்க கவிதைகளின் வழியாக தொடர்ந்து
இவ்வகையான அடையாளங்கள், வடிவம், மொழி, இலக்கணம் ஆகியவற்றுக்கான விதிகளுக்கு சவால்விடுத்து
வருகிறார்.
ஒருமுறை
இளம் எழுத்தாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் அவரை சந்திக்க வேண்டி தொலைபேசியில் அழைக்கிறார்.
உடனே வரச் சொல்கிறார். வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று விசாரித்தவுடன் சுக்லா சொல்கிறார்
“வெள்ளை அலரிப் பூக்கள் பூத்திருக்கும் வீடு.” அவர் மறுபடியும் முகவரியை விசாரிக்க
சுக்லாவிடமிருந்து அதே பதில்தான் வருகிறது. அவரது வீட்டைக் கண்டுபிடித்து, சந்தித்துப்
பேசிவிட்டு திரும்பும்போதுதான் அவருக்குப் புரிகிறது, சுக்லாவின் கதாபாத்திரங்களும்
கதைகளும் ஏன் அத்தனை எளிமையானவர்களாக அமைந்துள்ளன என்று. சுக்லா தான் எழுதும் புனைவுகளில்
தன்னுடைய குணாம்சங்களையே அதிகமும் சேர்க்கிறார்.
தனக்குத்
தெரிந்த நிலம், தான் அறிந்த மனிதர்கள், சம்பவங்களை மட்டுமே தன் புனைவுகளின் அடிப்படையாகக்
கொண்டிருக்கிறார். பிற மொழிகளில் யார் என்ன எழுதுகிறார்கள், புதுவிதமான முயற்சிகள்
என்ன நடக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதுமில்லை, கவனத்தில் கொள்வதுமில்லை.
அதே நேரத்தில் அவரது படைப்புகள் யதார்த்தவாத பாணியில் அமைந்தவை மட்டுமல்ல. புதுமையான
அணுகுமுறையைக் கொண்டவை. வாழ்க்கை, மரணம் சார்ந்த பெரும் கேள்விகளைக் குறித்த சிந்தனைகளோ
நினைவோட்டங்களோ அவரது எழுத்தில் இருப்பதில்லை. மனிதனின் அகத்துடனான மோதல்களும் கிடையாது.
அவரது கள்ளங்கபடமற்ற கதாபாத்திரங்கள் துயரத்துடன் ஒருவித இணக்கமான பிணைப்பை உருவாக்கி
தம் வறுமையை நகைத்தபடி கடக்கின்றனர். எந்தவிதமான நம்பிக்கையோ எதிர்பார்ப்போ புகாரோ
இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடக்கும் அவர்களின் சாதாரணத்துவத்தில் தங்களுக்குள் அவர்கள்
கொண்டிருக்கும் பரந்த, உணரப்படாத பிரபஞ்சமும் வெளிப்படுகிறது. வினைச் சொற்களை சற்றே
மாற்றி வியத்தகு படிமங்களையும் உருவகங்களையும் உருவாக்குகிறார். கீழ் மத்திய தர குடும்பங்களின்
வாழ்க்கையை அதன் எளிமையுடன் இயல்புடன் அன்றாடத்தின் நிச்சயமின்மையுடன் சித்தரிப்பதே
அவரது பலம்.
அவரது
நாவல்களில் அங்கங்கே கவிதைகளைக் காணமுடியும். “நமது மரபு கவிதைகளால் ஆனது. நமது காப்பியங்களும்
வேதங்களும் கவிதைகளால் ஆனவை. எனக்குள் அது உள்ளூர படிந்திருக்கிறது.” அவரது நாவல்களை
எந்த பக்கத்திலிருந்தும் பத்தியிலிருந்தும் வாசிக்க முடியும். ஒரு நீண்ட பயணம் போன்ற
அதில் எந்த பயணியும் எந்த இடத்திலும் சேர்ந்து கொள்ள முடியும். அவரது கதை முடிவுகள்
தர்க்கப்பூர்வமானவை அல்ல. அதைப் பற்றி கேட்டபோது சொன்னார் “போதுமான அளவு எழுதிவிட்டேன்
என்று தோன்றியவுடன் நிறுத்திவிடுவேன்.”
“ஒரு
சிறுகதைக்கும் நாவலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிறுகதையை
ஒரு இடத்தில் முடிக்காமல் மேலும் தொடர்ந்து எழுதினால் அது நாவலாகிவிடும்” என்று அவர்
குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு எழுத்தாளரும் இதைச் சொல்லியிருந்தால் அது பெரும்
விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும். ஆனால், இலக்கியத்தின் எந்த அளவுகோல் குறித்தும் பொருட்படுத்தாத
இத்தன்மைதான் அவரை அசலானவராகவும் வித்தியாசமானவராகவும் உறுதிப்படுத்துகிறது. இலக்கிய
மையங்களிலிருந்து அவர் விலகியிருக்கிறார். விவாதங்கள் எதிலும் பங்கேற்பதில்லை. பல எழுத்தாளர்கள்
அவரது எழுத்துப் பாணியை பின்தொடர்ந்தபோதும், அவர் தனது எழுத்தைக் குறித்து இதுவரையும்
ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை.
சுக்லா
தன்னுடைய சொந்த ஊரான ராய்ப்பூரைவிட்டு அதிகமும் வெளியில் போனதில்லை. வெளியுலகத்தான
அவருடைய தொடர்பு மிகவும் குறைவு. உலக இலக்கியங்களுடன், இந்திய இலக்கியங்களுடன் அவருக்கு
அவ்வளவு அறிமுகமும் இல்லை. அவருடைய வீட்டு அலமாரியில் இருக்கும் புத்தகங்களும் மிகச்
சொற்பம்.
“உங்களுக்குப்
பிடித்த உலக எழுத்தாளர்கள் யார்?” என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் “நீங்கள்
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சொல்லுங்கள். எனக்கும் பிடிக்கும் என்றால் சொல்கிறேன்.”
சத்தீஸ்கரில்
உள்ள தன் வீட்டை விட்டு அதிகமும் வெளியில் வராத சுக்லாவின் மீது பெருமதிப்பு கொண்டவர்கள்
இந்தியாவெங்கும் உண்டு. மிகுந்த ஞானமும் ஏராளமான பயணங்களையும் மேற்கொண்டவர்களில் முக்கியமான
இருவர் கிருஷ்ண பல்தேவ் வைத், நிர்மல் வர்மா ஆகியோர். அவர்கள் இன்னொருவரை பாராட்டுவது
என்பதே அரிது. நிர்மல் வர்மா வாசிக்கப் பரிந்துரைத்த நாவல்களில் ஒன்று ‘நௌகர் கீ கமீஜ்.”
கிருஷ்ண பல்தேவ் வைத்துக்கும் இந்த நாவல் பிடித்தமான ஒன்று.
இந்த
நாவலை எழுதியதன் பின்னணி சுவையான ஒன்று. மத்திய பிரதேச அரசு அதிகாரியாக விளங்கிய அசோக்
வாஜ்பாய், ‘முக்திபோத் ஃபெலோசிப்’ நல்கையை சுக்லாவுக்கு வழங்க தீர்மானிக்கிறார்கள்.
இதற்காக குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு நாவலை எழுதித் தரவேண்டும். தன் பணியிலிருந்து
நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்குகிறார். பிரபல எழுத்தாளர்கள் பலரும்
தட்டச்சுப் பொறியை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிகிறார் சுக்லா. இந்த விடுப்பை ஒரு
சந்தர்ப்பமாக பயன்படுத்த முடிவு செய்து ராய்பூரின் கோல் பஜாரில் உள்ள துர்கா தட்டச்சு
பயிலகத்தில் சேர்கிறார். ஆறு மாதங்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்றார். அதுவரையிலும்
அவர் ஒரு வரிகூட எழுதியிருக்கவில்லை. தட்டச்சு செய்யவும் கற்றுக் கொள்ளவில்லை. வானொலியை
பழுதுபார்க்க கற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவரது வெகுநாள் கனவு. அதற்கான வகுப்பிலும்
இதே சமயத்தில் சேர்ந்திருந்ததுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
மனம்
வெறுத்து அசோக் வாஜ்பாய்க்கு எழுதுகிறார் “கடந்த ஆறு மாதங்களாக நான் எதையுமே எழுதவில்லை.
எனக்கு தரப்பட்டுள்ள நல்கையை ரத்து செய்துவிடுங்கள்.” வாஜ்பாய் பதில் எழுதுகிறார்
“உங்களுக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இனி உங்கள் விருப்பம். நீங்கள்தான்
முடிவெடுக்க வேண்டும்.”
வாஜ்பாய்
தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஏன் எழுதக் கூடாது என்று யோசிக்கிறார்.
அடுத்த ஆறு மாதத்தில் நாவலை எழுதி ஒப்படைக்கிறார்.
சத்தீஸ்கரும்
அவர் சொந்த மாவட்டமும் கனிமவளச் சுரங்கங்கள் சார்ந்த தீவிர அரசியல் போராட்டங்களுக்கு
பெயர் பெற்றது. ஆனாலும், கடும் நெருக்கடி தரும் இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து சுக்லா
முழுவதுமாக விலகியே இருந்தார். இவரைப் போன்ற ஒரு பெரும் இலக்கிய ஆளுமை, இதுபோன்ற முக்கியமான
பிரச்சனையில் பொருட்படுத்தத்தக்க அரசியல் ஊடுருவலை நிகழ்த்தியிருக்க முடியும் என்று
இலக்கிய உலகும், பொதுமக்களும் கூட எதிர்ப்பார்த்தனர். அவருடைய மௌனம் தாங்க முடியாத
ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
யார்க்
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விக்ராந்த் டாடாவாலா சுக்லாவை ஒரு முறை சந்திக்கிறார்.
வீட்டு முற்றத்தில் அமர்ந்து ‘போகா’(தாளித்த அவல்)வைச் சுவைத்தபடியே, அவரது இளமைக்கால
இடதுசாரி இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விகளை கேட்கிறார். சுக்லா உறுதியான எந்த பதிலையும்
தருவதில்லை. எதிர்பார்த்ததைவிட மந்தமானவராக இருந்த சுக்லா சொல்கிறார் “மிகச் சாதாரணமான
கீழ் மத்திய தர வாழ்க்கையையே நான் கழித்திருக்கிறேன். எழுதத் தகுந்த எந்தவொரு சம்பவமும்
என் வாழ்க்கையில் நடந்ததில்லை. சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். அவரது இழப்பைத்
தொடர்ந்து குடும்பத்தை நிலைகுலைத்த பொருளாதாரச் சூழலை இன்னும் நான் மறக்கவில்லை. வழக்கமாக
ஒருவருக்கு வாய்க்கும் சிறுவர் பருவத்தைவிட மிகக் குறுகியதாக அமைந்துபோனது என் சிறுபருவம்.
வீட்டைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் எனது கூண்டை சற்று விசாலாமாக்குவதாகவே எனக்குத்
தோன்றும். ஏதேனும் ஒரு விதத்தில் நாம் அனைவருமே கூண்டுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம்.
சுதந்திரம் என்பது உங்கள் கணுக்காலைப் பற்றியிருக்கும் கயிற்றின் நீளத்தைப் பொறுத்ததுதான்.”
பதினைந்து
வயதிலிருந்து எழுதி வரும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிறார் “ஒருநாள் திடீரென்று எனக்குத்
தெரிய வந்தது, மொழியின் வழியாக நான் சிந்திப்பதில்லை, படிமங்களின் வழியாகவே சிந்திக்கிறேன்
என்று. மொழியை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆதி மனிதன் படிமங்களின் வழியாகவே சிந்தித்திருப்பான்.
மொழி பிற்காலத்தில்தான் வந்தது. முதலில் படிமத்தைக் குறித்து யோசித்துவிட்டு அதை எழுத்தில்
வடிக்கிறேன்.”
ஆறு
நாவல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்த பாணிக்கு மிக நெருக்கமானது அவருடைய எழுத்து முறை.
அதே நேரத்தில் அவரது எழுத்து அசலானதாகவும் காட்சியழகு கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
‘சுவரில் ஒரு ஜன்னல் இருந்தது’ நாவலுக்காக 1999ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
அவருடைய முதல் நாவல் ‘வேலைக்காரனின் சட்டை’யை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணி கௌல்
படமொன்றை இயக்கியுள்ளார்.
சர்வதேச
அளவில் வழங்கப்படும் இலக்கியத்துக்கான PEN/Nabokov விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை
காலத்தில் அவர் குழந்தைகளுக்காக மிகுந்த ஆர்வத்துடன் நிறைய எழுதுகிறார். “குழந்தைகளுக்காக
எழுதும்போது அவர்களுடைய வயதை நான் கவனத்தில் கொள்கிறேன். ஆனால், இளைஞர்களுக்கு பயன்படுத்தும்
அதே மொழியையே குழந்தைகளுக்கும் பயன்படுத்துகிறேன். மொழியை நான் தளர்த்துவதில்லை. குழந்தைகள்
என்பதால் அவர்களுக்கு புரியாது என்று நினைக்கவில்லை. அவர்களுடைய வயதுக்கு கூடுதலான
புத்திசாலித்தனம் அவர்களிடம் உண்டு. எனவே, மொழியை நான் தளர்த்த மாட்டேன். சொல் முறையை
தகுந்தபடி மாற்றிக் கொள்கிறேன்.
எழுதுவதற்கான
உத்வேகத்தை எனக்கு அளிப்பது எதிர்காலம். அது முழுக்க நம்பிக்கை நிறைந்தது.”
அவரது
எழுத்தில் சிறிதளவு கசப்பையோ அல்லது உலகுக்கு எதிரான புகாரையோ காணமுடியாது. “கெட்ட
குணங்களுடன் யாரையேனும் சித்தரிக்கும்போதுகூட அவர் அப்படியிருக்க மாட்டார் என்பதற்கான
சிறிய நம்பிக்கையோ அல்லது குறிப்போ நிச்சயம் இடம்பெற்றிருக்கும்” என்று விளக்கினார்.
“கெடுதலே உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா?” என்று வினவியபோது அவர் சொன்னது “அப்படிச்
சொல்லமாட்டேன். ஆனால், எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை இன்னும் மேம்பட்ட மனிதனாவதற்கான
பிரார்த்தனைதான்.”
0
(2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலச்சுவடு மே 2025 இதழில் வெளியான கட்டுரை)
No comments:
Post a Comment