Monday, 19 May 2025

விநோத் குமார் சுக்லவின் கவிதைகள்



2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சில கவிதைகள்.

1

 

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

0

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

அவசரத்துக்குக்கூட திரும்ப முடியாத் தொலைவிலிருந்து

உன் வீட்டை நீ காணவேண்டும்

எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத

தொலைவுக்குப் போய்விடவேண்டும்

ஏழுகடல்தாண்டிச் செல்லவேண்டும்

 

போகும்போதே திரும்பித் திரும்பிப் பார்க்கவேண்டும்

இன்னொரு தேசத்திலிருந்து உன்னுடைய தேசத்தை

ஆகாயத்திலிருந்து உன்னுடைய பூமியை

 

வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்ற நினைப்பு

அப்போது பூமியில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதாகிவிடும்

வீட்டில் உண்ண உணவும் பருக நீரும் இருக்குமோ என்ற கவலை

பூமியில் உணவும் நீரும் உண்டோ என்ற கவலை ஆகும்

 

பூமியில் பசித்திருக்கும் யாரோ ஒருவர்

வீட்டில் பசித்திருப்பவராகிவிடுவார்

 

மேலும் பூமிக்குத் திரும்புவதென்பது

வீட்டுக்குத் திரும்புவது போலாகிவிடும்.

 

வீட்டுக்கணக்குப் புத்தகமென்பது மிகவும் குழப்பமானது

சிறிது தூரம் நடந்துவிட்டு

வீடு திரும்புகிறேன்

பூமிக்குத் திரும்புவதுபோல.

 

2

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

0

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

அந்த மனிதனை எனக்குத் தெரியாது

நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்

எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்

நான் கை நீட்டினேன்

என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்

என்னை அவனுக்குத் தெரியாது

நான் கைநீட்டியதை அவன் அறிவான்

நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்

ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்

சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு.

 

0

3

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

0

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

ரப்பர் செருப்புகளைப் போட்டிருந்த நான் தடுமாறி நின்றுவிட்டேன்

நேரம் காலை ஆறு மணி. குளிர்பருவ ஆடைகள் களைப்பட்டிருக்கும் பொழுது.

நடுநடுங்கச் செய்யும் கடுங்குளிர்

காலை ஆறு மணி என்பது காலை ஆறு மணியைப் போலவேயிருந்தது.

மரத்தடியில் ஒரு மனிதன் நின்றிருந்தான்.

மூடுபனியினூடே அவன் உருக்கரைந்த

தன் உருவத்தினுள்ளே நிற்பதுபோல இருந்தது.

உருக்கரைந்த மரமோ அச்சுஅசலாக மரம் போலவே தெரிகிறது.

அதன் வலப்புறம் உருக்கலைந்த மட்டரகக் குதிரையொன்று

மட்டரகக் குதிரையொன்றைப்போலவே தென்படுகிறது.

பசியுடனிருந்த குதிரைக்கு

பசும்புல்வெளிபோல் தோற்றமளிக்கிறது மூடுபனி.

வேறு வீடுகளும் மரங்களும் சாலைகளும் இருந்தன

ஆனால் குதிரை எதுவும் இல்லை.

தனித்து நின்றது ஒரு குதிரை. அந்தக் குதிரை நானில்லை.

ஆனால், நான் மூச்சிரைக்கும்போது

மூடுபனியிலிருந்து என் மூச்சுக் காற்றைப் பிரித்தறிய முடியவில்லை.

மரத்தடியில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் நிற்கும் அந்த மனிதன்தான்

குதிரைக்காரன் என்றால்

அவனைப்பொறுத்தவரை

குதிரையைப்போலவே லாடங்கள் அடிக்கப்பட்டிருக்கும் காலணிகளுடன்

ஓடிக்கொண்டிருக்கும் குதிரையல்லவா நான்.

 

4

வாழ்க்கைப் பழக்கம்

0

வாழ்க்கையை வாழும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டேன் நான்

வாழ்க்கையை வாழும் இந்தப் பழக்கத்தில்

மழை பெய்யும் என்றால்

வாழும் பழக்கத்திலும்

மழை பெய்யும்

குடையை எடுக்க மறப்பேன் என்றால்

வாழும் பழக்கத்திலும்

குடையை எடுக்க மறந்துதான் போகும்

முழுக்க நனைந்து போவேன்

எப்போதெல்லாம் இடியிடிக்கிறதோ

அப்போதெல்லாம் இடியிடிக்கிறது.

 

வாழும் இந்தப் பழக்கம் என்பது

எழுவதும் உட்கார்வதும் வேலைசெய்வதும்

கொஞ்சூண்டு எதிர்காலத்திலிருந்து

பெரும்பங்கு கடந்த காலத்தை சேமித்துக்கொள்வது

இருந்தும் எதிர்காலம் இன்னும் பெரிதாகவே இருக்கிறது.

 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தில்

நான் வேண்டுகிறேன்

என்னை நல்ல மனிதனாக இருக்கவிடு

எல்லோரையும் நலமுடன் இருக்கவிடு

 

அப்போதுதான் எப்படி எங்கிருந்து என்று தெரியவில்லை

வாழும் பழக்கத்தில்

அண்டைவீட்டின் துக்க அணை உடைந்துவிட்டாற்போல

துக்கத்தின் பெருவெள்ளம் பொங்கிப் பெருகியது

வெள்ளத்தில் மூழ்கிடாத மகிழ்ச்சியின் ஒரு சிறு துரும்பு

மிதந்து செல்கிறது

துயரம் நிறைந்த முகத்தில்

ஒரு சிறு புன்னகையைப்போல.

 

அது என்னையும் மூழ்கடிக்கவில்லை

என் அண்டைவீட்டுக்காரனையும்.

மின்னல் வெட்டிய பொழுதில்

மின்னல் வெட்டியது.

 

கும்மிருட்டில் மின்னலின் ஒளிக்கீற்றின் துணைகொண்டு

மெல்ல அடியெடுத்து வைத்தேன்

வாழும் பழக்கத்தில்

நான் செத்துப்போகும்போது

யாரேனும் ஒருவர் சொல்லக்கூடும்

நான் செத்துப்போகவில்லை என்று

அப்போதும் நான் செத்துக் கொண்டுதானிருப்பேன்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

வாழும் பழக்கதிலும்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

செத்துப்போன பின்பும்

வாழ்க்கையை வாழும் பழக்கத்தில்

நான் என் குடையை மறந்துபோவேன்.   

 

0

 


No comments:

Post a Comment

இராமாயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி - ஆத்துக்குரி மொல்லா

    ‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாற...