Friday 8 December 2017

ஒரே ஒரு கேள்வி - எம்.கோபாலகிருஷ்ணன்

ஒரே ஒரு கேள்வி

எம்.கோபாலகிருஷ்ணன்



0

“அப்பா.. காலைலே அம்மாகிட்ட நா என்ன கேட்டேன்.. சொல்லு“
நிவேதாவின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். கண்களை உருட்டியபடி அருகில் நின்றவள் என் கையிலிருந்த செய்தித்தாளைப் பிடுங்கி கீழே போட்டாள். விஷ்ணு பரமாத்வின் ஆயுதங்கள் போல வலதுகையில் பென்சிலும் இடது உள்ளங்கையில் ரப்பரும். முகத்தில் வழக்கமான தீராத உற்சாகத்துக்கு பதிலாக குழப்பம். இதுவரைக்கும் கண்டிராத இறுக்கம்.

“என்னடா அம்மு? சொல்லு“ என்று கைகளை நீட்டினேன். எப்போதும் என் அருகில் வந்ததும் அவள் செய்யும் காரியம் மடியில் தாவி உட்கார்ந்து கொள்வதுதான். இப்போது மடியில் தாவாமல் அப்படியே நின்றிருந்தாள். என் முகத்தை உற்றுப் பார்த்தபடியே மீண்டும் கேட்டாள்.

“காலைலே அம்மாகிட்ட நா என்ன கேட்டேன்?“

அவள் எதைப்பற்றி கேட்கிறாள் என்றே எனக்கு சட்டென்று பிடிபடவில்லை. எனது மடிமீது கைகளை ஊன்றியபடியே
பொறுமையாக என் முகம் பார்த்திருந்தாள். அவளுடைய துறுதுறுப்பான கண்கள் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக்
காத்திருந்தன.

“என்னடா அம்மு? என்ன கேட்டே?“

“காலைலே அம்மாகிட்ட நா என்ன கேட்டேன்?“

எனக்கு உடனடியாக எதையும் சொல்ல முடியவில்லை. காலையில் இவள் தன் அம்மாவிடம் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். எத்தனையோ கேட்டிருக்கலாம். அவள் கண்விழித்தவுடனேயே அவளுடைய கேள்விகளும் ஆயத்தமாகிவிடும். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பாள். சமையலறையில், கூடத்தில், தோட்டத்தில் என்று அவளுடைய அம்மாவின் பின்னாலேயே கேள்விகளை இழுத்துக்கொண்டு திரிவாள். ‘இதெல்லாம் எங்கிட்ட கேக்காதே. உங்கப்பாகிட்ட போய் கேளு‘ என்று மடைமாற்றும் தருணத்தில் மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இந்த இரண்டு மாதங்களாகத்தான் தனக்குத்தானே தனிவான குரலில் பேசி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கற்பனையான கதைகளுக்குள் பக்கத்து வீட்டு வாண்டுகளின் அசலான பெயர்களைக் கொண்டு உரையாடிக் கொண்டிருப்பாள். எல்லா நேரத்திலும் இவள் எல்லோருக்கும் கட்டளையிடும் அறிவுறுத்தும் தோரணையில்தான் இருப்பாள். தன் அம்மாவின் மிரட்டல்களை, பிரி கே ஜி வாணி டீச்சரின் கண்டிப்புகளை, வேலைக்காரியின் கொஞ்சல்களை என்று அனைத்தையும் திரட்டி விளையாடித் திரிகிறாள்.

“சொல்லுப்பா.. அம்மாகிட்ட காலைலே நா என்ன கேட்டேன்?“
எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.

“எப்படா கேட்டே செல்லம். அப்பா ஆபிஸ் போறதுக்கு முன்னாடியா. இல்ல போனதுக்கப்பறமா?“

என் கேள்வியை யோசிப்பவள்போல கண்களை சிமிட்டினாள். லேசான ஒரு தலையசைப்பு. பட்டென்று என் தொடை மீது உள்ளங்கையால் அடித்துவிட்டு மீண்டும் கேட்டாள்.

“அம்மாகிட்ட காலைலே நா என்ன கேட்டேன்?“

இப்போதும் குரலில் அதே அழுத்தம். நிதானம்.

“சரி அம்மு. பாப்பா குளிக்கறதுக்கு முன்னாடியா? இல்ல குளிச்சு ஸ்கூலுக்குப் பொறப்படும்போதா? எப்ப கேட்டே?“ எனக்கே என் கேள்வி அலுப்பாக இருந்தது.

அவள் அசரவில்லை. சற்று நிதானித்தாள். விலகி நிமிர்ந்து நின்றாள். நான் சொன்னவற்றை யோசிப்பவள்போல தலையாய் இப்படியும் அப்படியுமாய் ஆட்டிவிட்டு மீண்டும் மடியில் கைகளை ஊன்றி முகம் நிமிர்த்தி என்னைப் பார்த்தபடியே கேட்டாள்.

“சொல்லுப்பா.. காலைலே அம்மாகிட்ட நா என்ன கேட்டேன்?“

நான் பொறுமையிழக்கத் தொடங்கியிருந்தேன். சொற்களை வரிசை மாற்றி அதே கேள்வியை திரும்பத் திரும்ப அதே
அழுத்தத்துடன் நிதானத்துடன் கேட்டு நிற்க எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“என்னடா குட்டி? அதையே திரும்பத் திரும்பக் கேட்டுட்டு? நீ அம்மாகிட்ட என்ன கேட்டேன்னு உனக்குத்தானே
தெரியும்?“

“நீ சொல்லு. உனக்குத்தான் எல்லாமே தெரியுமே, அம்மா சொல்லிருக்கா. இதுக்கு பதில் சொல்லு. நா காலைலே
அம்மாகிட்ட என்ன கேட்டேன்?“

அவள் முகத்தையும் கண்களையும் உற்றுப் பார்த்தேன். பிரசவ அறையில் முதன்முதலாக அவளைக் கையில் ஏந்திக் கொண்ட தருணம் நினைவுக்கு வந்தது. நிறைவும் களைப்புமாய் கண்மூடிப் படுத்திருந்த அவளருகே கோடு கிழித்தாற்போன்ற கண்களுடன், விரல்பிரிக்காத உள்ளங்கைகளுடன், செக்கச் சிவந்த நிறத்துடன் கிடந்த பிஞ்சு உயிர். விலகி நின்று பதற்றத்துடன் பார்த்து நின்ற என்னிடம், லட்சுமி சிஸ்டர் “அது சரி.. பாருடா குட்டி.. உங்கப்பா கிட்ட
வரவே பயந்துட்டு தள்ளி நின்னு எட்டிப் பாக்கறாங்க“ என்றபடியே குழந்தையை அள்ளியெடுத்து “புடிங்க..“ என்று என் கையில் தந்துவிட்டாள். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கை கால்களை லேசாக அசைத்தபோது எனக்கு பயமாக இருந்தது. “என்னடி குட்டி...“ என்று அவள் முகம் பார்த்துச் சொன்ன நொடியில், முகத்தைச் சுருக்கி உதட்டைப் பிதுக்கியபடி அழத் தொடங்கிவிட்டது. அருகில் நின்றிருந்த லட்சுமி சிஸ்டர் சட்டென்று கையில் வாங்கிக் கொண்டு
“அப்பா டி சொல்லிட்டாங்களா குட்டி. ச்சேரி..ச்சேரி..அப்பாகிட்ட டூ விட்றலாம்.“ என்று தாலாட்டி சமாதானப்படுத்தினாள்.

“சொல்லுப்பா....“

சாதாரணமாக எல்லாக் குழந்தைகளும் மழலையாய் பேசத் தொடங்குகிற பருவத்தில் இவள் பேசவேயில்லை. எல்லாவற்றுக்கும் தலையசைப்பும் தொண்டையிலிருந்து வரும் ஓசைகள் மட்டுமே எதிர்வினையாக இருந்தன. ஆனால் இரண்டாவது பிறந்த நாள் முடிந்து சில நாட்கள் கழித்து திடீரென்று பேசத் தொடங்கினாள். மழலையே இல்லாமல் மிக துல்லியமான உச்சரிப்புடன் தெளிவாக பேசினாள். தடுமாற்றம் இல்லாது நிதானமாக அழுத்தமாக, குழந்தை பேசுவது போல இல்லாமல், பெரிய மனுஷி தோரணையுடனேதான் பேசுவாள்.

இப்போது அவள் சிணுங்கத் தொடங்கினாள். “ம்.. சொல்லுப்பா.. ப்ப சொல்லு நீ.. அம்மாகிட்ட நா என்ன கேட்டேன்

காலைலே? சொல்லு...ம்..சொல்லு”

என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தேன். இந்த நேரம் பார்த்து அவளும் வீட்டில் இல்லை.

“இல்லடா அம்மு. இரு.. நா சொல்றேன். அம்மாகிட்ட நீ காலைலே என்ன கேட்டேன்னுதானே சொல்லணும். இரு.“

அவளை சமாதானப்படுத்தும்போதே அவளுக்கான பதிலை என் மனம் யோசிக்கத் தொடங்கியிருந்த்து.

“ம்ம்.. அம்மாகிட்ட காலைலே நீ என்ன கேட்டே தெரியுமா? சொல்லட்டா?“

பிஞ்சுக் கைகளால் வாயைத் துடைத்தபடியே ஆர்வத்துடன் நிமிர்ந்தாள்.

சமையலறையில் பூரிக்கு மாவு பிசையும்போது இவளும் குட்டி உருண்டை எடுத்து தேய்ப்பதுண்டு.

“அம்மாகிட்ட பூரி எப்படி செய்யறதுன்னு கேட்டிருப்ப.. கரெக்டா?“
அவள் முகத்தில் ஆர்வம் மங்கியது. இல்லை என்பதுபோல தலையசைந்தது.

“அதில்லையா. அப்படின்னா, ம்.. தண்ணி சேந்தற பொம்மையைக் காணமே, அது எங்கேன்னு கேட்டிருப்ப. அதானே?“

இப்போதும் தலை அசைந்தது. முகம் வாடி உதடுகள் துடிக்கத் தொடங்கின.

“சரி.. சரி.. நா சொல்றேன். இதப் பாரு.. சாயங்காலமா சஞ்சய் வீட்டுக்கு வெளையாடப் போலாமன்னு கேட்டிருப்ப.
சரியா?“

கண்களில் கண்ணீர் விளிம்பு கட்டி நின்றது. முகம் மொத்தமும் அழுகைக்கான ஆயத்தத்தில் இருந்தது.

“ஹோம் வொர்கல எதாச்சும் சந்தேகம் கேட்டியா?“

கன்னத்தில் வழியத் தொடங்கிய கண்ணீரைத் துடைக்க
முற்படாமல் தலை குனிந்து தரையைப் பார்த்தபடியே
நின்றவளின் உடல் குலுங்கியது. அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை.

“அம்புலிக்கு எப்ப றெக்கை முளைக்கும்னு கேட்டிருப்ப...“

“அவ்ளோ பெரிய யானைக்கு ஏன் அவ்ளோ சின்னக் கண்ணுன்னு கேட்டியா?“

“குட்டி சைக்கிள்ல தாத்தா ஊருக்குப் போலாமன்னு சொன்னியா?“
என் எந்த முயற்சிக்கும் அவள் தலை நிமிரவேயில்லை. அழுதபடியே நின்றாள். விசும்பல்களுனூடே அவளது கேள்வி மட்டும் துடித்தபடியே இருந்த்து. “காலைலே... நா... அம்மாகிட்ட... என்ன கேட்டேன்?“

கையறு நிலையில் அவளது கண்ணீரை துடைக்க முற்பட்டபோது அழைப்பு மணியொலித்தது. கதவைத் திறந்தேன்.
அவள்தான். எனக்கு பெரும் ஆசுவாசமாயிருந்தது.

“அப்பாடி.. வாம்மா... வந்து என்னைக் கொஞ்சம் காப்பாத்து.“

அழுதபடி நிற்கும் மகளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டாள். “என்னடா பட்டு. எதுக்கு இப்ப அழறே? குட்டிக்கு என்னாச்சு? அப்பா திட்டுனாங்களா?“ என்றவள் நிமிர்ந்து என்னைப் பாத்து “ஒரு பத்து நிமிஷம். கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள கொழந்தைய அழ வெச்சுட்டீங்களா?“ என்று கடிந்தாள். அவள் கண்களையும் முகத்தையும் துடைத்துவிட்டாள். தலை முடியைத் திருத்தினாள்.

“அம்மாடி. நா ஒண்ணும் அழ வெக்கலே. காலையிலே உன் மக உன்கிட்ட என்னவோ கேட்டாளாம். அது என்ன்ன்னு
என்னப் புடிச்சு இவ்ளோ நேரமா கேட்டுட்டு அழறா...?“

அவள் குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். எதையோ யோசித்தபடியே “குட்டி.. காலைலே எங்கிட்ட...“ என்று சொல்ல
முற்பட்டவளின் வாயை அவளது சின்னக் கைகளால் பொத்தினாள். திரும்பி என்னைப் பார்த்தாள்.

“நா உங்கிட்டத்தான கேட்டேன். நீ சொல்லு. நீதான அப்பா. அம்மா ஒண்ணும் சொல்ல வாண்டாம். நீ சொல்லு. காலைலே நா அம்மாகிட்ட என்ன கேட்டேன்?“

அம்மாவின் மடியிலிருந்து கீழே இறங்கி என் எதிரில் வந்து நின்றாள். அழுகை மறைந்து முகத்தில் பிடிவாதம் கூடியிருந்தது.

“சொல்லு. நா காலையே அம்மாகிட்ட என்ன கேட்டேன்?“

0

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...