Wednesday 13 April 2022

ஆலத்தூர் இளவரசி - அருண்மொழிநங்கையின் ‘பனி உருகுவதில்லை’

 


1995ம் ஆண்டு தர்மபுரியில் அறிமுகமானவர் அருண்மொழிநங்கை. அப்போது அவர் பரபரப்பான குடும்பத் தலைவி. வார இறுதி நாட்களில் ஜெயமோகனின் வீட்டில் நண்பர்கள் கூடுவதுண்டு. ஒருவகையில் தீவிர இலக்கிய வாசிப்பின் தொடக்கம் என்று சொல்லலாம்.எழுதுவதற்கான ஆரம்பப் பயிற்சியும்கூட. திருப்பூரிலிருந்து நானும் நண்பர் கோவிந்தராஜும் ஈரோட்டிலிருந்து ரிஷ்யசிருங்கர் என்ற ராஜேந்திரனும் சேலத்திலிருந்து செல்வராஜூம் அரூரிலிருந்து செங்கதிரும் சனிக்கிழமை காலையில் வந்து சேருவோம். சில சமயங்களில் சேலம் ஆர்.குப்புசாமியும் கலந்துகொள்வார். பத்து மணிக்கு நாங்கள் வருவதற்குள் எங்கள் அனைவருக்கும் மதிய உணவை சமைத்து வைத்துவிட்டு அருணாவும் தயாராக இருப்பார். வீட்டு வேலைகளையும் அப்போது சிறு குழந்தையாயிருந்த அஜிதனுக்கும் தேவையானவற்றையும் ஒழுங்கு செய்திருப்பார்.  

கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் என்று வாசிப்பதும் விவாதிப்பதுமாக இரண்டு நாட்கள் கழியும்.

டி.எஸ்.எலியட்டின் புகழ்பெற்ற கட்டுரை Tradition and Individual Talent. அந்தக் கட்டுரையை வரிவரியாகப் படித்து விவாதித்து மொழிபெயர்த்தோம். அந்த ஒரு கட்டுரைக்கு மட்டும் ஒரு மாதத்தின் நான்கு வார இறுதி நாட்கள் பிடித்தன. அதையொட்டி ஒவ்வொருவரும் தனித்தனியாக கட்டுரைகள் எழுதினோம்.

காலையில் பத்து மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை வாசிப்பு. இடையில் தேநீர். பிறகு மதிய உணவு. எல்லோருக்கும் அருணா சமைத்து வைத்திருப்பார். மாலையில் ஐந்து மணிக்கு மேல் நீண்டதூர நடை. திரும்பி வந்ததும் மீண்டும் வாசிப்பு. இரவு உணவுக்குப் பின் பதினோரு மணி வரைக்கும் வாசிப்பதும் அனுபவக் கதைகளுடனான அரட்டையுமாக அந்த நாள் முடியும். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் வரை இப்படியே போகும்.

இந்த நாட்களின்போதுதான் நான் முதன்முதலாக மொழிபெயர்த்த ஈஸாவாஸ்ய உபநிஷத்தை முழுக்க வரிவரியாக ஒப்பிட்டுப் பார்த்து செப்பனிட்டோம்.

இந்த நாட்களில் எல்லாம் அருணா தீவிரமான இலக்கிய மாணவி. அஜிதன் சிறு குழந்தை. இருந்தும்கூட எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எங்களுடன் சேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்து வைத்திருப்பார். வாசித்தவை குறித்து குறிப்புகள், விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதவேண்டும்.

அப்போது தர்மபுரியிலும் அதன் பிறகு தக்கலையிலும் நான் பார்த்த அருணா வேறொரு அருணா. இந்தக் கட்டுரைகளில் உள்ள அருணாவை அந்த நாட்களில் நான் பார்த்ததே இல்லை. சொந்த ஊர் பட்டுக்கோட்டை, திருவாரூரில் உறவினர்கள் உண்டு என்று மட்டுமே தெரியும்.

‘சொல்புதிது’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தும்கூட ஒருசில மொழிபெயர்ப்புகளைத் தவிர அருணா அதிகமாய் எதுவும் எழுதவில்லை.

சென்ற ஆண்டு இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அஜிதனும் சைதன்யாவும் வளர்ந்துவிட்டார்கள். வெண்முரசையும், வீடடங்கு காலக் கதைகளையும் எழுதி முடித்துவிட்டார் ஜெயமோகன். எனவே, அருணா சரியான சமயத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

‘மரபிசையும் காவிரியும்’ என்ற முதல் கட்டுரை ஏப்ரல் 2021ல் வெளியான போது சமூக வலைதளங்களின் வழியாகக் கவனம் பெற்றது. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த சுட்டியின் வழியாக வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு ‘விட்டு வந்த இடம்’ கட்டுரையின் சுட்டியை நண்பர் அனுப்பியிருந்தார். தர்மபுரியில் நாங்கள் சந்தித்த நாட்களைக் குறித்த கட்டுரை அது. இப்போது இந்த நூலில் உள்ள வரிசையில் கட்டுரைகள் வெளியாகவில்லை. அதில் வேறொரு வரிசையில் இருந்தது. அவ்வப்போது சில கட்டுரைகளைப் படித்திருந்தேன்.

இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியாவதற்கு முன்பே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. பலரால் வாசிக்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் பிடித்தமான கட்டுரைகளாய் அமைந்துள்ளன.

ஏன் அப்படி?  எல்லோரும் விரும்பி வாசிக்கும்படியாக இந்த நூலில் என்ன  உள்ளது? நமது சிறுவயது நினைவுகளை இவை ஞாபகப்படுத்துகின்றன என்பதாலா? முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமங்களை, அதன் மனிதர்களைக் குறித்து இவை யோசிக்கச் செய்கின்றன என்பதாலா? இன்று நமக்குள் ஞாபகங்களாய் மட்டும் எஞ்சியிருக்கும் கருப்பு வெள்ளைக் காலத்தைக் குறித்த ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலா?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இதுபோல தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக்கூடும். பொதுவான சில காரணங்களும் இருக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கட்டுரைகள் எல்லோரையும் கவர்வதற்கான அடிப்படைக் காரணமாக நான் உத்தேசிப்பது, இவற்றில் வெளிப்பட்டுள்ள இன்னொசென்ஸ். அப்பாவித்தனம், வெள்ளந்தித்தனம், களங்கமின்மை என்று பல சொற்கள் உள்ளபோதும் அவை அவ்வளவாய் பொருந்தவில்லை என்பதால் இன்னொசென்ஸ் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்துகிறேன்.

பொதுவாகவே இன்னொசென்ஸ் இருக்கிற எந்தவொரு விஷயமுமே எல்லோருக்கும் பிடித்துப்போகும். ஏனென்றால் இன்னொசென்ஸ் என்பது குழந்தைகளுக்கு உரியது. உலகை அறியத் தொடங்கும் கணம் முதல் பதின்ம வயது வரைக்குமான பருவம் வரை எல்லாக் குழந்தைகளிடமும் தன்னிச்சையாக மலர்ந்து வெளிப்படுவது இந்த இன்னொசென்ஸ்.

உலகின் ஒவ்வொரு அசைவையும் அது உற்றுக் கவனிக்கிறது. தொடுகையை உணர்கிறது. வாசனையை நுகர்கிறது. ருசியை அனுபவிக்கிறது. ஓசைகளை அறிகிறது. ஒவ்வொரு கணமும் புத்தம் புது விஷயங்களை தொடர்ந்து கவனிக்கிறது. எல்லாமே ஆச்சரியந்தான். வியப்புதான். இந்த வியப்பு உலகையே அழகாகக் காட்டுகிறது. எல்லாவற்றையுமே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகிறது. எந்த எதிர்மறையான உணர்வுகளும் தலையெடுப்பதில்லை. அச்சமோ தயக்கமோ இல்லை. எல்லாவற்றையும் முயன்று பார்க்கும் ஒரு ஆர்வம்.

அந்த இன்னொசென்ஸ் உலகின் தொடக்கமாக அன்னையை அறிகிறது. பிறகு அன்னையின் வழியாகவே மொத்த உலகையும் அறியத் தொடங்குகிறது. ஒரு வகையில் அறிதலே அந்தப் பளிங்குக் குளத்தில் விழும் முதல் கல். அறிதல்களே அனுபவங்களாக மாறுகின்றன. அறிதல்களும் அனுபவங்களுமே விசேஷமான தனித்த குணாம்சங்களுடன் கூடிய ஒரு ஆளுமையை உருவாக்குகின்றன. இவை அனைத்துக்கும் ஆதாரமாக அமைவது இன்னொசென்ஸ்.

இந்த ஆளுமை உருவாக்கத்தில் அன்னையும் தந்தையும் உறவுகளும் சூழலும் எத்தகைய பங்களிப்பைச் செய்கின்றனர் என்பதையே அருணாவின் இந்த அனுபவங்கள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

அருணாவின் பாட்டி ராஜம்மா. கம்பீரமும் மிடுக்கும் கொண்டவர். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கான தெரிவு அவரிடம் உண்டு. வீட்டில் உருக்கிய நெய்யில் வார்த்த தோசை, கல்லிலிருந்து நேராகத் தட்டில் விழவேண்டும், கறந்த பாலில்தான் காப்பி போடவேண்டும், சாம்பாருக்கு ஆம்பலாம்பட்டு கத்தரிக்காய்தான் வேண்டும், சாதம் குழைந்தால் பிடிக்காது, சாம்பாரில் சின்ன வெங்காயம்தான் போடவேண்டும் என்று சின்னச் சின்ன விஷயத்திலும் கறாராக இருப்பவர். ஆனால், விசால மனம் படைத்தவர். அரவை மில்லுக்கு நெல் அரைக்கப்போகும்போது, அதில் இரண்டு படி நெல்லை, பாவப்பட்ட பட்டாணிக்குக் கொடுக்கும்படி அருணாவிடம் சொல்வதன் வழியாக எளியோர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறார்.  கீரைக்காரிகள், தெரு வியாபாரிகள், தலைச்சுமைக்காரர்களிடம் பேரம் பேசக்கூடாது என்று கற்றுத் தருகிறார். பிச்சையிடும்போது மரியாதையுடனும் புன்னகையுடனுமே இடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ‘கறுப்பே அழகு, காந்தலே ருசி’ என்பதை சொல்லித் தந்திருக்கிறார். ‘வேங்கைபோல் வாழ்ந்து பறவை போல் மறைந்தவர் அவர்’ என்று அருணா குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது. அவரது வாழ்வும் சிந்தனையும் அருணாவிடம் பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. பாட்டி சொன்ன கதைகளும் அவருடன் கழித்த பொழுதுகளும் அருணாவின் குணநலன்களை உருவாக்கியதோடு அவற்றுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்ந்த தன் கைகளால் குழையும் ஈரக் களிமண்ணை ஒரு குயவன் வனைவதைப்போல ராஜம்மா பாட்டி அருணாவின் ஆளுமையை உருவாக்கியிருக்கிறார்.

அம்மா சரோஜா ஒரு பள்ளி ஆசிரியை. 22 வயதில் ஆசிரியர் ஆனவர். புள்ளமங்கலம் கிராமத்தில் அரசு வேலைக்குச் சென்ற முதல் பெண். இரண்டு தங்கைகளை மணம் முடித்து கொடுத்துவிட்டு 29 வயதில் மணம் செய்துகொண்டவர். 1969ல் அது அபூர்வமான ஒன்று. அதிகாலையிலேயே எழுந்து, தூங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில், சமையலறையில் மங்கிய வெளிச்சத்தில்  வேலைகளை சிறு சத்தம்கூட எழாமல் வேலைகளைச் செய்பவர். பாத்திரத்தில் கரண்டி மோதும் சத்தம்கூட வராது. பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் துறுதுறுப்புடன் செய்து முடிப்பவர். குழந்தைகளைத் தயார்ப்படுத்தி, கணவரையும் அனுப்பிவிட்டு பள்ளிக்கு குறித்த நேரத்தில் ஓடுபவர். அவரிடமிருந்து நேர மேலாண்மையையும் சுறுசுறுப்பாகக் காரியமாற்றும் திறனையும் கற்றுக்கொள்ள முடிகிறது.

பணியின் பொருட்டு குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரிலிருந்து வந்து, பள்ளியின் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு இனிப்பு அடை, கார அடை என்று வீட்டில் செய்யும் பலகாரங்களைக் கொடுத்து அனுப்புவதுண்டு. உணவைப் பகிர்ந்துண்ணவேண்டும். தேவையான சமயத்தில் உதவிகளைச் செய்யவேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

செலவுகளிலிருந்து மிச்சம் பிடித்த பணத்தை புள்ளமங்கலத்திலிருக்கும் தன் அம்மாவுக்கு யாருக்கும் தெரியாமல் மணியார்டர் அனுப்பச் சொல்கிறார். நல்ல காரியங்கள் சிலவற்றை இதுபோல செய்வதில் தவறெதுவும் இல்லை என்ற சூட்சுமத்தையும் அருணா கற்றுக் கொண்டிருக்கிறார்.

கண்டிப்பானவர் அப்பா சற்குணம். சரித்திர ஆசிரியர். ஆர்.எஸ் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர். படிப்பாளி என்று பெயர்பெற்றவர். பகுத்தறிவு சிந்தனைகளையும் முற்போக்குக் கருத்துகளையும் கொண்டவர். நாத்திகர். கல்வி முக்கியம் என்று வலியுறுத்துபவர். வாசிப்பும் பொது அறிவுமே வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதை உறுதியாக நம்புபவர். குழந்தைகளிடம் பாசமும் பிடிப்பும் கொண்டவர். அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பார். திட்டுவார். விசிறி மட்டையால் அடிப்பதும் உண்டு. பிள்ளைகளுக்கு அவரிடம் பயம். அப்பாவின் இந்த பாசமும் கண்டிப்புமான குணமே ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டியும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கற்றுத் தருகிறது. வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியம் என்பதையும் அவரிடமிருந்து அருணா தெரிந்து கொள்கிறார். 

பிறர் செய்யும் தவறுகளைப் பொருட்படுத்தாமல் அனுசரித்துப்போகும் குணத்தை விஜயா அத்தையும், யாருடைய குறைகளையும் பெரிதுபடுத்தாமல் விட்டுத் தரும் பண்பை வடிவேலு மாமாவும் கற்றுத் தருகிறார்கள்.

வளரும் பருவத்திலேயே வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், பெற்றோர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சின்னச் சின்ன வேலைகள் அருணாவுக்குத் தரப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் சிறுவர்கள் அனைவருமே வீட்டு வேலைகளை செய்ய நேரும்.

விறகுக் கடையிலிருந்து சைக்கிளில் விறகு சுமப்பது, மில்லில் நெல் அரைத்துக் கொண்டு வருவது, தண்ணீர் சுமப்பது, கடைக்குப் போய் சாமான்களை வாங்கி வருவது என்று இவை அனைத்தும் வேலைகள் மட்டுமல்ல, ஒரு வகையில் வாழ்க்கைக் கல்வியும்கூட. இவற்றைச் செய்வதன் மூலம் குழந்தைகள் பொருளாதாரத்தைக் கற்றுக் கொள்கின்றனர். மனிதர்களிடம் பழகும் விதத்தைக் கற்றுக் கொள்கின்றனர். சமூகத்துடனான உறவையும் பிணைப்பையும் புரிந்து கொள்கின்றனர். நல்லனவற்றையும் அல்லனவற்றையும் தெரிந்துகொள்கின்றனர். இந்த உலகை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராகின்றனர்.

ஆதார குணமாக அமைந்திருக்கும் இன்னொசென்ஸைக் கொண்டு இவ்வாறான மதிப்புக் கூட்டலின் வழியாக விழுமியங்களைக் கற்றுக் கொடுத்து தனித்த ஆளுமையை உருவாக்க இவர்கள் அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணியாகின்றனர்.

 

தொடர்ந்து அனுபவங்கள் கூடி, பதின்பருவத்தின் தொடக்கத்தில் அறிவும் தர்க்கமும் செரிவுறுகின்றன. நன்மை தீமை, நல்லது கெட்டது போன்ற இருமைகள் தலையெடுக்கின்றன. அப்போது அந்த இன்னொசென்ஸ் திரிபடைகிறது. இதனால் நம் ஆளுமையிலும் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. உலகைப் பற்றிய பார்வை மாறுகிறது. மனிதர்களை எடைபோடக் கற்றுக் கொள்கிறோம். தொடக்கத்தில் இருந்ததுபோல எவ்வித கணக்குகளும் இல்லாமல் நோக்கங்கள் இல்லாமல் பலாபலன்களைப் பாராமல் மனிதர்களை அணுகும்போக்கு மறைந்து அறிவைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் மனிதர்களையும் அவர்களது காரியங்களையும் அணுகும்போக்கு வளரத் தொடங்குகிறது.

இந்தக் கட்டுரைகள் அனைத்துமே பதினான்கு வயது வரையிலுமான அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஆலத்தூரில் மட்டும் ஏற்பட்டவை. அதன் பிறகான நாட்கள் இவற்றில் இடம் பெறவில்லை.  காரணம், மதுக்கூரும் பட்டுக்கோட்டையும் இத்தகைய அனுபவங்களைத் தரவில்லை என்கிறார் அருணா. உவப்பான மீண்டும் எண்ணிப் பார்க்கும்படியான அனுபவங்களை அவை அளிக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இப்படியொரு எண்ணம் அவரது மனத்தில் எழுவதற்கான அடிப்படை உளவியல் காரணம் இந்த இருமைதான்.

பதின்பருவத்தின் தொடக்கம் வரையிலும், இன்னொசென்ஸ் என்பது அறிவினாலும் தர்க்கத்தினாலும் திரிபடையாத பருவம் வரையிலும் குழந்தைகள் யாரால் எப்படி எந்தச் சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது ஆளுமை உருவாகிறது என்பதற்கான உளவியல் ஆவணங்களாகவே இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

இந்தக் கட்டுரைகளில் காண முடிகிற அருணாவின் இன்னொசென்ஸை நான் அவரது கண்களில் பார்த்திருக்கிறேன். கூட்டங்களில் ஜெயமோகன் பேசும்போது அவரையே ஆர்வத்துடன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தக் கண்களில் அந்த இன்னொசென்ஸ் பளபளத்துக் கொண்டிருக்கும். இப்போதும்கூட சில புகைப்படங்களில், ஜெ யின் அருகில் இருக்கும் படங்களில், அந்த இன்னொசென்ஸைப் பார்க்க முடியும்.

அந்த இன்னொசென்ஸ் எதிலிருந்து உரம் பெற்றது என்பதற்கான ஊற்றை இந்தக் கட்டுரைகள் அடையாளம் காட்டியுள்ளன, இந்த நூலும் இதிலுள்ள கட்டுரைகளும் எனக்குப் பிடித்துப் போனமைக்கு அடிப்படையான முதன்மையான காரணம் அதுவே.

இரண்டாவது காரணம், இந்தக் கட்டுரைகளில் சில இடங்களில் காண முடிகிற புனைவுத் தருணங்கள். நேர்த்தியான கலைத்திறன் துலங்கும் இடங்கள் அவை. இந்தக் கட்டுரைகள் நேரடியாக, வெகு சரளமாக எழுதப்பட்டவை. திருத்தப்பட்டு, செதுக்கி, கச்சிதம் கூட்டி செறிவூட்டப்பட்டவை அல்ல. கொப்புளித்துப் பெருகும் நினைவுகளை சொற்களில் அவசர அவசரமாக அள்ளித் தந்திடும் ஒரு தன்மை இவற்றில் உண்டு. அருணா தனக்கு ‘சின்ன தாட்பூட்’ என்றொரு பட்டப்பெயர் உண்டென்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவர் பேசும்போது, உடனே எங்கோ புறப்பட்டுப் போகும் அவசரத்தில் இருப்பதுபோலவே விறுவிறுவென்று பேசுவார். அந்தத் தன்மை இந்தக் கட்டுரைகளில் உண்டு. ஆனால், அவற்றுக்கு நடுவே சிற்சில இடங்களில் ஒரு புனைவாசிரியரைப்போல சில அழகான இடங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார். அல்லது விட்டுச் சென்றிருக்கிறார்.

இரண்டு தருணங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒன்று, விஜயா அத்தையைப் பெண் பார்க்க வருகிறார்கள். மருதாணி இலை பறிக்க பக்கத்து வீட்டுக்குச் செல்கிறார் அருணா. அந்த வீட்டில் இருக்கும் ஜெயக்கா மாப்பிள்ளையைக் குறித்து விசாரிக்கிறார். ‘ஜெயக்கா பாவம், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும். ரேடியோ கேட்கும். கதைப் புத்தகம் வாசிக்கும்’ என்று சில வரிகள் மட்டுமே உள்ளன. கூடுதலாய் ஜெயக்கா பற்றி அவர் எதுவுமே சொல்வதில்லை. ஆனால், மாப்பிள்ளையைக் குறித்த ஜெயக்காவின் விசாரிப்பும் அவரைப் பற்றிய சில சொற்களும் மட்டுமே சேர்ந்து சொல்லாத பல கதைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இரண்டாவது தருணம், விஜயா அத்தையைப் பெண் பார்த்துவிட்டு போய்விட்டார்கள். அவரது திருமணத்துக்கு யார் யார் என்னென்ன சீர் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். உத்தமசீலன் சித்தப்பா, வீடு ரிப்பேர் வேலையிருப்பதால் தன்னால் ஒரு ஜோடி வளையல் மட்டுமே போட முடியுமென்று சொல்லி எடுத்துத் தர, அப்பாவுக்கு கோபம் எகிறுகிறது. ஆத்திரத்துடன் கத்துகிறார். சித்தப்பாவுக்காக அம்மா, ராஜம்மா பாட்டி, பரிந்துகொண்டு வருகிறார். மேலும் கோபத்துடன் அப்பா சீறுகிறார் ‘நீ இங்க இருக்கக் கூடாது. வீட்டை விட்டு கௌம்பு நீ. விஜயா கல்யாணத்துக்கும் நீ வரக்கூடாது’ என்று விரட்டுகிறார். ‘அப்படின்னா நானும் அவனோடே போறேன்’ என்று பாட்டியும் ஒரு பையில் துணிகளைத் திணித்துக்கொண்டு புறப்பட்டுவிடுகிறார். நட்ட நடு ராத்திரியில் இடுப்பில் குழந்தையுடன் சித்தியும் பாட்டியும், உத்தமசீலன் சித்தப்பாவுடன் புறப்பட்டுப் போகிறார்கள். அந்தக் காட்சி அத்துடன் நின்றுவிடுகிறது. உத்தமசீலன் சித்தப்பாவைக் குறித்தோ, அவரது குடும்பத்தைப் பற்றியோ, அப்பாவுக்கு அவர் மீது ஏன் அத்தனை ஆத்திரம் என்பதைப் பற்றியோ வேறெந்த செய்தியும் கட்டுரையில் சொல்லப்படவில்லை. மகிழ்ச்சியான ஒரு சந்தர்ப்பம் அந்த இரவில் ஒரு துயரக் காட்சியாக முடிந்துவிடுகிறது.

இந்தக் கட்டுரைகள் எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கியமான மூன்றாவது காரணமும் உண்டு. இந்தக் கட்டுரைகளில் அருணா தன் வாசிப்புப் படிநிலையை விவரித்திருக்கிறார். அவரது வாசிப்பு குமுதத்தில்தான் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகு அம்புலிமாமா, பாலமித்ரா என்று சிறுவர் இதழ்கள் இரும்புக் கை மாயாவி போன்ற காமிக்ஸ்கள் எனத் தொடர்ந்திருக்கிறது. வார இதழ்கள், தொடர்கதைகள், மாத நாவல்கள் என்று வளர்ந்து சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன், லட்சுமி என அடுத்த படிக்கு நகர்ந்திருக்கிறது. சுஜாதாவின் வழியாகவே அசோகமித்திரனையும் சுந்தர ராமசாமியையும் அறிந்திருக்கிறார். சிறு பத்திரிகைகளில் வழியே தீவிர இலக்கியத்தை வந்தடைகிறார். இதே வரிசையில்தான் என் வாசிப்புப் பருவமும் அமைந்திருந்தது. என் அப்பா குமுதம் வாசகர். அதிலிருந்த கார்டூன்களில் தொடங்கி கேள்வி பதில்கள் துணுக்குகள் ஒரு பக்கக் கதைகள் என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் மு.மேத்தாவும் வைரமுத்துவும் அப்துல் ரகுமானும் ஆட்கொண்டிருந்தனர். பிறகு சாண்டில்யன், கண்ணதாசன் என்று தொடர்ந்து கணையாழியை வந்தடடைந்தேன். சுஜாதாவின் வழியே தீவிர இலக்கியம், சிறு பத்திரிகைகள் அறிமுகமாயின. அருணாவின் வாசிப்புப் படிநிலையும் என்னுடைய வாசிப்புப் படிநிலையும் ஒன்றுதான். வாரப் பத்திரிகைகளில் தொடங்கி வணிய இலக்கியத்தின் வழியே நவீன இலக்கியத்தை வந்தடைந்தது, ரஷ்ய இலக்கிய வாசிப்பு, பிற இந்திய மொழி நாவல்கள், சிறு பத்திரிக்கைகள் என்ற படிநிலைகள் இருவருக்கும் ஒன்றுபோலவே அமைந்திருந்தது. டூரிங் டாக்கீஸில் மணலைக் குவித்து வைத்து சினிமா பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. பிறகு மலையாள, வங்கப் படங்கள். அங்கிருந்து உலகத் திரைப்படங்கள் என்று வளர்ந்த சினிமா ரசனையிலும் பொதுத்தன்மை உள்ளது. எனவே, இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது என்னையே நான் பார்த்துக்கொள்ள முடிந்தது. என்னுடைய இலக்கிய, சினிமா ரசனையில் படிநிலைகளை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க முடிந்தது.

அருணாவைப் போலவே நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமது சிறுவர் பருவத்தின் நினைவுகள் உள்ளன. பனிரெண்டு பதிமூன்று வயது வரையிலான அந்த நினைவுகள் பலவும் மிகத் துல்லியமாக நமக்குள் புதைந்துள்ளன. ஏதேனும் ஒரு தருணத்தில் தற்செயலாக ஒரு நினைவு மேலெழும்போது அதனுடன் சேர்ந்த வேறு பல விஷயங்களும் திரண்டு வருகின்றன. வியக்கத்தக்க வகையில் அந்தக் குறிப்பிட்ட சம்பவம் அனைத்து நிறங்களுடனும் மணத்துடனும் ஓசைகளுடனும் நம் முன் விரிகின்றன. யோசித்துப் பார்த்தால் பலருக்கும் தம் வாழ்வின் மிக உன்னதமான பருவமாக, நினைவுகளாக அவையே எஞ்சியிருக்கும். பொக்கிஷங்கள் போல அவற்றை சமயம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் பார்த்துக் கொள்வோம். அத்தகைய தன் நினைவுகளை அருணா எழுத்தின் வழியாக சாஸ்வதப்படுத்தியிருக்கிறார். அடுத்தத் தலைமுறைக்கு ஆலத்தூரையும் அதன் மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலமாக தன் நினைவில் உள்ள ஆலத்தூரை அருணா இன்னொரு தலைமுறையின் நினைவிலும் பதித்துவிடுகிறார். ஆலத்தூரும் அதன் மனிதர்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஆலத்தூரைப்போல இன்னும் பல கிராமங்கள் உண்டு. கும்பகோணத்தில் நான்கு ஆண்டுகள் வசித்திருக்கிறேன். உள்ளடங்கிய கிராமங்களையும் அங்குள்ள பழைய கோயில்களையும் பார்த்திருக்கிறேன். பல நாட்களில் அங்கு ஆள் நடமாட்டமே இருக்காது. கருவறையில் மினுங்கும் ஒற்றைச் சுடரும் ஆளற்றப் பிரகாரமுமாய் தனிமையில் உறைந்திருக்கும். ஊத்துக்காடு அப்படியொரு கிராமம்தான். பலருக்கும் அறிமுகமான கிராமம். தெரியாதவர்களுக்குக்கூட ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பெயரைச் சொன்னால் தெரிந்துவிடும். ‘அலைபாயுதே கண்ணா’, ‘தாயே யசோதா’ போன்ற பிரபலமான கீர்த்தனைகளை இயற்றியவர். கும்பகோணத்துக்கு அருகில் சின்னஞ்சிறு கிராமம். அதைவிட சிறிய கோயில். இப்போது அதை எடுத்துக் கட்டியிருக்கக்கூடும். நான் பார்த்தது பத்து வருடங்களுக்கு முன்பு. வைக்கோல் பிரிகள் காற்றில் பறந்திருக்க, பாதையெங்கும் நெல் காயவைக்கப்பட்டிருக்கும். காவிப் பட்டைகளுடன் கூடிய சிதைந்த அக்ரஹார வீடுகள் ஒன்றிரண்டு. காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணனின் விக்ரகம் மிக அழகாக இருக்கும். இத்தனை காலமும் ஊத்துக்காடு என்ற அந்த கிராமம் அந்தப் பாடல்களின் வழியாகத்தான் நிலைத்திருக்கிறது.

ஊத்துக்காடு போல பல கிராமங்களும் கோயில்களும் உண்டு. அருணாவின் கட்டுரைகள் அத்தகைய கிராமங்களையும் கோயில்களையும் நினைவுபடுத்தின. அருணா ஆலத்தூரையும், வெங்கட சுப்பையர் ஊத்துக்காடையும் எழுத்தின் வழியாக, பாடலின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளின் நினைவில் ஊர்களை சாஸ்வதப்படுத்தியுள்ளார்கள். எழுத்தின் மூலம் ஊர்களும் மனிதர்களும் காலத்தில் எழுதப்பட்டுவிடுகின்றன. தலைமுறைகளின் நினைவில் செதுக்கப்பட்டுவிடுகின்றன.

அருணா எழுதியதைப் போல ராஜம்மா பாட்டி தன் அனுபவங்களை எழுதியிருப்பாரென்றால் அது அவரது காலகட்டத்தின், அவர் வாழ்ந்த ஊர்களின் மிக முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். அதுபோலவே, அருணாவின் அம்மா சரோஜா தன் அனுபவங்களை, நினைவுகளை எழுதியிருப்பாரென்றால் நாம் அறியாத காலத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும். புள்ளமங்கலத்தையும் ஒரு ஆசிரியராக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத முடிந்திருக்கும். நாளை சைதன்யா தன் நினைவுகளை எழுதக் கூடும். அவரது அனுபவங்கள் முற்றிலும் வேறானவையாகவே இருக்கும். தர்மபுரியும் தக்கலையும் பார்வதி புரமுமாக அந்த நினைவுகள் அமையும். இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த தலைமுறைக்கான வரலாற்றுப் பதிவுகளே. ஒரு குடும்பத்தின் வரலாறாகத் தொடங்கி அதுவே சமூகத்தின், பிரதேசத்தின் வரலாறாகவும் அமையும்.

பிறரிடம் எப்படிப் பேசவேண்டும் என்று அப்பா சொன்னதாக அருணா ‘மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்’கட்டுரையில் குறிப்பிடுகிறார் ‘மத்தவங்களோட பேசும்போது அவங்க ஏரியா ஆப் இன்ட்ரெஸ்ட் என்னன்னு தெரிஞ்சு போரடிக்காம பேசணும். மத்தவங்களோட பேசும்போது நம்மள பத்தி அவங்க கேட்டாலொழிய நாமளா பேசக்கூடாது. காமன் இன்ட்ரெஸ்ட் உள்ள விஷயங்களை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேசணும். ஹியூமரோட பேசணும். ஒள் சைடா பேசிட்டே பேசக்கூடாது. அவங்க பேசறதையும் காது குடுத்துக் கவனமா கேட்கணும்.’ இந்தக் கட்டுரைகள் நமக்குப் பிடித்துப் போக இந்தத் தன்மையும் முக்கியமான காரணம். நமக்குப் பிடித்தமானவற்றை செறிவாகவும் நேர்த்தியாகவும் இவை சித்தரித்துள்ளன. இவை வெறும் நினைவுக் குறிப்புகள் இல்லை. ஒவ்வொன்றிலும் நிறைய சம்பவங்கள் உண்டு. உரையாடல்களின் வழியாக, சித்தரிப்புகளின் வழியாக அன்றைய சம்பவங்கள் இன்று நம் முன் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. அந்தந்த சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவரும் என்னென்ன நிறங்களில் உடுத்தியிருந்தார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தச் சூழலின் ஓசைகளைக் கேட்க முடிகிறது. கிராமத்தில் நுழைந்தவுடன் எழும் நெல் வாசனை, அடுப்பில் கொதிக்கும் சாதத்தின் வாசனை, கறந்த பாலின் வாசனை, சித்தியின் கையிலிருந்து எழும் விறகுப்புகையின் வாசனை என எண்ணற்ற வாசனைகளை நம்மால் நுகர முடிகிறது. சொற்களின் வழியாக அந்த அனுபவங்கள் மிகத் துல்லியமாக நம்மிடம் நிகழ்கிறது. ஆலத்தூரை இந்தக் கட்டுரைகளில் பார்க்கும்போதெல்லாம் நாம் ஒவ்வொருவரும் நாம் வளர்ந்த கிராமத்தை, ஊரை நினைத்துக் கொள்கிறோம். நமது பள்ளிக்கூடத்தை ஆசிரியர்களை நண்பர்களை நினைத்துப் பார்க்கிறோம். நம் வாழ்வின் அனுபவங்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறோம்.

இந்தக் கட்டுரைகளில் கவனிக்க முடியும் இன்னொரு அம்சம் அருணாவின் மொழியில் தெறிக்கும் அங்கதம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சொல், ஒரு வாக்கியத்தின் வழியே பகடியாக எதையேனும் சொல்லிவிட முடிந்திருக்கிறது. ‘சின்னச் சின்ன புரட்சிகள்’ என்ற கட்டுரை நல்ல உதாரணம். அதேபோல, ‘மாயச்சாளரம்’ என்ற கட்டுரையில் பாட்டியுடன் கிராமத்து மந்தையில் ‘அண்ணன் ஒரு கோயில்’ சினிமா பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கும் பகுதியையும் குறிப்பிடலாம். பல இடங்களில் சிறுவர் பருவத்துக்கே உரிய குறும்புத்தனம் கொப்புளித்து வெடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பருவத்துக்கேயுரிய துள்ளலும் துடுக்குத்தனமும் உற்சாகத்துடன் மிளிர்வதையும் காண முடிகிறது. கூடவே வாத்தியார் பிள்ளை என்ற பொறுப்புடன் நடந்துகொள்ளும் பாங்கையும் பார்க்க முடிகிறது.

இதிலுள்ள பல கட்டுரைகளும் வடிவத்திலும் சொல் முறையிலும் கச்சிதமான சிறுகதைகளாகவே அமைந்துள்ளன. டெய்ஸி பெரியம்மாவின் வாழ்வைச் சொல்லும் ‘ஒளியும் நிழலும்’, வடிவேலு மாமாவைக் குறித்த ‘நிலை’, ‘இரண்டு அன்னப்பறவைகள்’ ஆகிய கட்டுரைகளைச் சொல்லலாம். இதிலுள்ள கதாபாத்திரங்கள், உரையாடல்கள், தருணங்கள் அனைத்துமே நுட்பமான சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ளன. ‘மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்’ பிரமாதமான ஒரு காதல் கதை.

இன்னும் சொல்லப்போனால் விஜி அத்தையை மையப்படுத்தி எழுதப்பட்டக் கட்டுரைகளை ஒழுங்குபடுத்தினால் அருமையான ஒரு குறுநாவலாகவே அமையும்.

அப்பா சற்குணம், வடிவேலு மாமா, ராவுத்தர் பாய், மனோகரன் சார் போன்ற ஆண் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தபோதும்கூட இந்தக் கட்டுரைகளை பெண்களே அதிகமும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். ராஜம்மா பாட்டி, சரஸ்வதி அம்மா, விஜி அத்தை, டெய்ஸி பெரியம்மா என்று நிறைய பெண்கள். எனவே, பெண்களின் இயல்புகள் மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, விஜி அத்தையைப் பெண் பார்க்கும் படலத்தைச் சொல்லும் ‘நுரை’ கட்டுரையில் ஒரு காட்சி.

சரஸ்வதி அம்மா கேசரி கிண்டிக் கொண்டிருக்கிறார். ‘கௌரிக்கா, செத்த வாங்களேன். இந்தப் பக்குவம் போதும்ல. எறக்கிடவா?’ என்று கௌரி பெரியம்மாவிடம் கேட்கிறார்.

‘எறக்கு சரோ. அதான் அருமையா வந்துருச்சே. பலகாரத்துல ஒன்ன தட்டிக்க முடியுமா?’ என்கிறார் கௌரி பெரியம்மா.

இதைச் சொல்லிவிட்டு அருணா எழுதுகிறார், ‘அம்மா கேசரியில் கில்லாடி, ஆனால் ஏன் பெரியம்மாவிடம் கேட்கிறாள்?’.

அம்மாவுக்கும் தெரியும் கேசரி நன்றாக வந்திருக்கிறதென்று. ஆனாலும் வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்கும் அக்காவிடம் கேட்டு செய்வதுபோல கபடற்ற ஒரு சிறு நாடகம். பெரியம்மாவுக்கும் திருப்தி. அம்மாவுக்கும் திருப்தி.

இதுபோல, அங்கங்கே பல இடங்களில் பெண்களின் இயல்புகள் வெகு நுட்பமாக வெளிப்பட்டுள்ளன.

இந்த நூலின் கடைசி கட்டுரை ‘விட்டு வந்த இடம்’. எமிலி டிக்கின்சனின் I died for Beauty என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தக் கவிதையே எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது என்கிறார். ‘ஜெயன், நானும் ஒரு புக் எழுதி இது பக்கத்துல அடுக்கணும்போல இருக்கு’ என்றும் சொல்கிறார். யாரும் வாசிப்பதற்காக அல்ல. அந்த வரிசையில் ஒரு மூலையிலாவது நானும் இருக்கவேண்டும்’ என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

இன்று அருணா தான் ஆசைப்பட்டபடி ஒரு நூலை எழுதிவிட்டார். அவரும் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய நூலை பலரும் வாசித்திருக்கிறார்கள். புத்தக அலமாரிகளில் பல புத்தகங்களுக்கு நடுவே அவரது நூலும் இடம்பெற்றுள்ளது. அருணாவும் எழுத்தாளர்களின் வரிசையில் இன்று இடம் பிடித்திருக்கிறார்.

இதே நூலில், அருணா தன் பாட்டி ராஜம்மாவைப் பற்றிய கட்டுரைக்கு இட்டிருக்கும் தலைப்பு ‘அரசி’. அபாரமான வியத்தகு ஆளுமையைப் பற்றிச் சொல்லும் கட்டுரைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது அருணா ஆலத்தூரில் ஒரு அரசியாக, அல்லது ஒரு இளவரசியாகத்தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை உணரமுடியும். தர்மபுரியில் ஜெயமோகனின் மனைவியாக, ஒரு குடும்பத் தலைவியாக எனக்கு அறிமுகமான அருணாவை இந்த நூல் எனக்கு ஒரு அரசியாக, இளவரசியாக இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அரசியை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.

( 13,02,2022 சென்னையில் நடைபெற்ற ‘பனி உருகுவதில்லை’ நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரை  - பேசும் புதிய சக்தி, ஏப்ரல் 22 இதழில் வெளியானது.)

 

 

 

 

 

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...