Sunday 12 November 2023

சாளரங்களின் வழியே மின்னும் வான் நட்சத்திரங்கள்


(உமாமகேஸ்வரியின் எழுத்துகள் குறித்த இந்தக் கட்டுரை, ‘நீலி’ நவம்பர் 2023 இதழில் வெளியானது)

0

மனிதனின் அவசியத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் வீடு என்னும் பௌதீக அமைப்பு, ஆண் பெண் இருபாலருக்குமான ஒன்றாகவே பொதுவில் கருதப்படுகிறது. வீடு பாதுகாப்பானது, நமக்கான சௌகரியங்களை அனுமதிப்பது, நம்மை நாமாக இருக்க விடுவது என்பது போன்ற எண்ணற்ற சாதகமான கூறுகளை வீட்டுடன் பொருத்திப் பார்க்க முடியும். முக்கியமாக, வீடென்பதே குடும்பம். குடும்பத்தின் குறியீடு வீடுதான். இந்திய மரபின் முக்கிய அம்சம் குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பு ஆண்களால் உருவாக்கப்பட்டது. ஆண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இதில் பெண்களுக்கான இடம் என்ன? இந்த அமைப்பில் அவர்களது பங்கு என்ன? ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உண்மையில் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது எது? ஒரு வெற்றிகரமான குடும்பத்தின் இலக்கணம் என்ன? மகிழ்ச்சி என்பதை எப்படி வரையறுக்கிறார்கள்? ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வெற்றியும் மகிழ்ச்சியும் எதைச் சார்ந்தது? ஒவ்வொரு தனி மனிதனுக்குமான இடத்தை குடும்பம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறது? எல்லோரையும் கட்டி நிறுத்துவது பணமா, பாசமா?

இப்படி எண்ணற்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளன. இந்திய அளவில் பல முக்கியமான புனைவுகளும் குடும்ப அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’, சீர்சேந்து மகோபாத்யாயவின் ‘அத்தைக்கு மரணமில்லை’ ஆகிய சில உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம். தமிழில் இவ்வாறான நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ ஆகியவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வீட்டின் மாட்சியும் மாண்பும் பெண்கள் என்பது மரபான நம்பிக்கை. பெண்களே வீடு சமைப்பவர்கள், பெண்களே அதன் மேன்மையை கட்டிக் காப்பவர்கள், பெண்ணில்லாத வீடு மங்கலமற்றது என்பன போன்ற மரபுக் கூறுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

உமா மகேஸ்வரியின் புனைவுலகும் வீடுதான். நமது மரபில் பெண்களின் மாண்பாக, பொறுப்பாக, வெளியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வீடு’ ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்தும் எல்லாவிதமான சாத்தியங்களையும் தன் புனைவின் வழியாக பகுத்தும், அகழ்ந்தும் வெளிப்படுத்துகிறது உமா மகேஸ்வரியின் எழுத்து. அவரது புனைவுலகு வீட்டை களமாகக் கொண்டது. அது புறவுலகைக் காட்டும்போதுகூட வீட்டுக்குள்ளிருந்துதான் காட்ட முடிகிறது. ஒரு வீட்டின் நீள அகலங்களை, ஆழங்களை, அபத்தங்களை, ஓசைகளை, மணங்களை, அமைதியை, அலைகழிப்பை அது மிகத் துல்லியமாக விவரிக்கிறது. வீட்டுக்குள்ளிருந்தேதான் அது வானத்தைப் பார்க்கிறது. தொலைதூர மலைகளை வியக்கிறது. பறவைகளின் சிறகசைப்பையும், பூக்களின்  எழிலையும் கொண்டாடுகிறது.

‘இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது’. உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலின் தொடக்க வரி இது. உமா மகேஸ்வரியின் புனைவுலகை மிகச் சுருக்கமாக, செறிவாக வரையறுக்கும் வரி இதுவே.

வீட்டை மட்டுமே தங்கள் உலகமாகக் கொண்ட பெண்களே உமா மகேஸ்வரியின் கதாபாத்திரங்கள். குழந்தையாகப் பிறந்து சிறுமியாக வளர்ந்து பருவமடைந்து மணம்புரிந்து மனைவியாகி கருவுற்று அன்னையாகி பிள்ளைகள் பெற்று இறுதியில் மூச்சடங்கும் வரையிலான மொத்த வாழ்வுமே வீட்டுக்குள்தான். பிறந்து, தவழ்ந்து, நடை பழகி வளரும்போது வீட்டின் எல்லைகள் விரிந்துகொண்டேயிருக்கும். தோட்டம், பின்கட்டு என்று புதிய வெளிகளை அறிமுகப்படுத்தும். பிறகு மேலும் வளருந்தோறும் அந்த எல்லைகள் மெல்லக் குறுகும். கட்டுப்பாடுகள் தலைகாட்டும். அப்போதுதான் வீட்டின் சுவர்களுக்கும் கதவுகளுக்கும் வேறொரு அர்த்தம் புலப்படும். ஒரு வீட்டின் வளர்சிதை மாற்றத்தையே வாழ்வாகக் கொண்ட பெண்களின் அன்றாடத்தையும் புழுக்கங்களையும் அலுப்பையும் மீறல்களையுமே மிக நெருக்கமாகக் காட்டுவதே உமா மகேஸ்வரியின் புனைவுலகு.

அதன் துலக்கமான ஒரு சித்திரம்தான் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவல். ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் பெண்களின் உலகம் அது. குடும்பத் தலைவி, அவரது மூன்று மருமகள்கள், பேரன் பேத்திகள், தங்கை, வேலையாட்கள் என்று பலர் சேர்ந்தும் விலகியும் நடமாடும் ஒரு பெரிய வீடு. மூப்புற்று உடல் சோர்ந்து கிடக்கும் நிலையிலும் ஓசைகள், வாசனைகளின் மூலம் நடப்புகளை அறிந்து குடும்பத்தின் அன்றாடங்களை கச்சிதமாக நிர்வாகம் செய்யும் குடும்பத் தலைவி. முறை வைத்து சமையல் செய்து, குருட்டுத் தாம்பத்யமும் பிள்ளைப் பேறுமாக புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்கும் மருமகள்கள். அடுத்தடுத்து பிறந்து எண்ணிக்கை கூடும் பெண் குழந்தைகள். இந்த ஒட்டுமொத்த வீடும் பெண்களாலானது. பெண்களுக்கானது. ஆண்கள் இந்த வீட்டுக்கு இரவில் மட்டுமே வருகிறார்கள். இந்த வீட்டிலிருந்து எப்போதும் வெளியேறவே விழைகிறார்கள். பெண்களுக்கான இந்த வீடும் உலகமும் அவர்களுடையதுதான் என்றாலும் அதிலிருந்து அவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு. பருவமெய்தும் வரை பள்ளிக்குச் செல்லலாம். தோட்டத்திலிருக்கும் மரத்தடியில் விளையாடலாம். கோயிலுக்கும் என்றேனும் தோட்டத்துக்கு பிள்ளைகளுடன் செல்ல வாய்க்கும். அவ்வளவுதான்.

இந்த சித்திரம் நாம் அறிந்த ஒன்றுதான். இது புதியவொரு களமும் அல்ல. புனைவுகள் வழியாக இவ்வாறான ஒரு பெண்களின் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தை முன்பும் நாம் வாசித்திருக்கிறோம். ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றை உமா மகேஸ்வரி எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறார் என்பதுதான் முக்கியமானது. பெண்களின் பாடுகளை, ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அவர்களது வாழ்வை சொல்ல முனையும்போதே, ‘இது ஏற்கெனவே சொல்லப்பட்டதுதானே’ என்ற ஒரு சலிப்பு தலைகாட்டும். ஆனால், அவ்வாறான ஒரு முன்முடிவை விலக்கி அறிந்தவொரு உலகையும் வேறொரு உலகமாக அணுகுவதற்கான ஈர்ப்பை உத்தரவாதப்படுத்துவது உமா மகேஸ்வரியின் சித்தரிப்பு நேர்த்தி.

இரும்பு கிரில் கேட் திறக்கப்படும் சத்தம், விளக்குமாறு தரையில் உரசும் சத்தம், தொட்டியில் நீரிறைக்கும் ஒலி, கழுவிய வாளியில் பால் பீய்ச்சுகிற சீற்றம், மாடுகளின் செருமல் என்று வெவ்வேறு நுட்பமான ஓசைகளும் மெல்லிய ஏலக்காய் மணம், மாட்டுக் கொட்டிலில் எழும் சாணத்தின் மணம், வெல்லப்பாகில் ஏலக்காய் தூவும் மணம், போர்வையில் முகப்பவுடரின் வாசனை, கொடி முல்லையின் மணம், பிரசவ அறையின் விநோத நெடி என பலவிதமான வாசனைகளாலும் அந்த வீட்டை உயிர்ப்பித்து விடமுடிகிறது.

அவரது புனைவு மொழி கவிதையும் குழந்தைமையும் கலந்தவொன்று. வீட்டின் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட பெண்களின் வாழ்வை, குழந்தைகளின் அல்லது சிறுமிகளின் பார்வை வழியே காட்டும்போது அதில் புதியவொரு கோணம் சாத்தியமாகிறது. வீட்டுக்குள் அடங்கியிருக்கும் பெண்களின் கதையில் உள்ள இறுக்கத்தை இந்தக் குழந்தைகளின் மொழி தளர்த்துகிறது. ஒவ்வொரு காட்சியையும் சொல்லையும் அசைவையும் தீரா வியப்புடன் நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது.

சிறுமிகளின் விளையாட்டு உலகம் இணையாக விரியும்போது பெண்களின் துயருலகின் அழுத்தம் தணிந்துபோகிறது. அந்த வீட்டுப் பெண்களின் மன அழுத்தங்களுக்கும் துயரங்களுக்கும் நடுவில்தான் சிறுமிகள் விளையாடுகிறார்கள், பாடுகிறார்கள், வேடிக்கைப் புதிர்களில் திளைக்கிறார்கள். கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். குழந்தைகளின் இந்த களங்கமின்மையும் ஆர்வமும் துறுதுறுப்புமே நாம் ஏற்கெனவே அறிந்த, பழக்கப்பட்ட துயர உலகினை வேறொன்றாக நமக்குக் காட்ட உதவுகிறது.

நாவலில் வருகிற ஆண்கள் அனைவரும் வெறும் கோட்டுச் சித்திரங்களே, குணாவைத் தவிர. இரவில் வீடு அடைபவர்கள். விளக்கணைத்த இரவில் உடல் தேடுபவர்கள். குழந்தைகள் அவர்களை நெருங்குவதில்லை. அஞ்சுகிறார்கள். ஆண்கள் குறித்த வழக்கமான இந்தச் சித்திரம் கூட விரிவாகச் சொல்லப்படவில்லை. சுருக்கமான மிகச் சில வரிகளில் குழந்தைகளின் மொழியில் அவர்களது இருப்பை வரையறுக்கின்றன. அவ்வாறு சொல்லப்படும்போது வழக்கமாக எழும் புகார் தொனியன்றி, இவர்கள் இப்படித்தான் என்பதுபோன்ற சாதாரணத்தன்மை மேலோங்குகிறது.

பெண்கள் மட்டுமே உலவும், பெண்களுக்கான இந்த உலகில் பெண்களுக்கிடையேயான உளமோதல்கள் வலுவாக அமைந்திருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பெரிய வீட்டில், ஒவ்வொருவருக்கும் உரிய இடம் உண்டு என்றாலும் ஒப்பிடுவதையும் அதைக் குறித்து மனம் புழுங்குவதையும் தவிர்க்க முடியாது. அவ்வாறான உள மோதல்களையும் பொறாமைகளையும்கூட உரத்த குரலில் சொல்லாது இயல்பான நடவடிக்கைகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

காமத்தின் பல்வேறு சாயல்கள், தழும்பல்கள், அலைச்சல்கள், அவஸ்தைகள் அனைத்தும் சிறிதும் கூடுதல் அழுத்தங்களின்றி வெகு இயல்பாகவும் செறிவாகவும் உரிய இடங்களில் கச்சிதமாக கையாளப்பட்டுள்ளன. காமத்தின்பால் பெண்களின் உளம் ஏற்கும் பாவனைகளையும் வேட்கையையும் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

பெண்களுக்கான உலகைக் காட்டும்போது அவர்களின் ஆசைகள், ஆழ்மனக் கிளர்ச்சிகள், பொறாமை, போட்டி, சலிப்பு, அனுசரணை, தாய்மை, வேகம், ஆவேசம், குமுறல் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. அவர்களது உடை நேர்த்தி, ஆபரணங்கள், அலங்காரம் எல்லாமே துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அன்னம்மா தூக்கி முடிந்த கொண்டையோடு உல்லிஉல்லி சேலையில் சந்தைக்குப் போகும் காட்சியை உதாரணமாகச் சுட்டலாம். அதேபோல, அன்னம்மாவின் மூக்கில் சுடர்விடும் வைரம், கழுத்தில் படிந்த கெம்புக்கல் அட்டிகை, கனம் கனமான இரட்டை வடங்கள், மூன்று சரங்கள், முழங்கை வரைக்கும் வளையல்கள் என்று ஆபரணங்கள் பட்டியலிடப்படுவதையும் குறிப்பிடலாம்.

இத்தனை பெரிய வீட்டில், இத்தனை ஆட்கள் புழங்கும் வெளியில் உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ‘அவள் வளையல்களின் பொன்னொலி லேசாக அசைந்து கொண்டேயிருக்கும் விடியும் வரை’ என்பது போன்று பெண்களின் தனிமையைச் சுட்டும் பல நுட்பமான வரிகள் நாவலில் உண்டு.

‘அம்மா அப்பாவின் வேட்டி நுனி போலத்தான். மடிப்பதும் இறக்கிவிடுவதும் அவிழ்த்தெறிவதும் அணிவதும் அவர் விருப்பம்’ போன்ற கூரிய சொற்கள் நாவலின் ஒட்டுமொத்த மையத்திலிருந்து அங்கங்கே மேலெழுந்து ஒலிப்பதுண்டு. கூடவே, பெண்ணிய சிந்தனையை உரக்கச் சொல்லும் இடங்களும் உண்டு.

ஒட்டுமொத்தமாக அந்த நாவல், வீட்டை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானவை. சுருக்கமானவை. அவ்வாறு வெளியே செல்லும்போதுகூட அது குழந்தைகளின் உலகமாகவே காட்டப்படுகிறது.

இந்த நாவலின் பேசுபொருள் காலங்காலமாக புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் ஒன்றுதான் என்றாலும் குழந்தைகளின் களங்கமின்மையின், துறுதுறுப்பின் வழியாக காட்டப்படும்போது இது இன்னும் ஆழமான பொருளை ஏற்கிறது. துல்லியமான சித்தரிப்பும், நேர்த்தியான கதாபாத்திர வார்ப்பும், கச்சிதமான உரையாடலுமாக நகர்த்தப்படும் நாவலாக மட்டுமாக இது அமையவில்லை. அவை யாவற்றிலும் பெண்களுக்கேயுரிய தனித்தன்மையை இயல்பாகவே ஏற்றியிருப்பது நாவலை மேலும் பொருண்மையுள்ளதாக ஆக்கியுள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல கவிதையின் சொல்நயமும் ஆழமும் குழந்தைமையின் களங்கமின்மையும் ஆர்வமும் துலங்கும் உமா மகேஸ்வரியின் புனைவுத்தியே இந்த நாவலை தனிச்சிறப்புடையதாக மாற்றித் தந்திருக்கிறது.

0

உமா மகேஸ்வரியின் கதைகளில் அதிகமும் பெண்களை மையமாகக் கொண்டிருப்பவை. இயல்பாகவே அவ்வாறு அமையக்கூடியதுதான். அவரது முத்திரைக் கதையாகக் கருதப்படும் ‘மரப்பாச்சி’யில் தொடங்கி ரணகள்ளி, அம்ருதா, அரளிவனம், கனகாம்பரத் திரைகள் என பல முக்கியமான கதைகளும் பெண் மையம் கொண்டவையே. பொதுவாக, பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் எடுத்துக் கொள்ளப்படும் பிரச்சினைகளையே உமா மகேஸ்வரியின் கதைகளும் பேசுகின்றன. அம்மாவின் பிறழ் உறவு, அக்காவின் கணவனிடமே தன்னை இழக்கும் தங்கை, பூப்படையாத பெண், கணவனுக்காக தன்னை பணயம் வைக்கும் மங்கை, கணவனின் ஆதிக்கம் போன்றவற்றையே கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. காலங்காலமாக தொடரும் பெண்களின் இந்தப் பிரச்சினைகளை உமா மகேஸ்வரியும் எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால், இக் கதைகளை புனைவுகளாக தந்திருக்கும் நுட்பம்தான் பிறரது ஆக்கங்களிலிருந்து உமா மகேஸ்வரியைத் தனித்து நிறுத்துகிறது. ‘பொருள்வயின் உறவு’ கதையை உதாரணமாகச் சுட்டலாம்.  

யாரும் மிக எளிதாக எழுதக்கூடிய கதைக்கருவைக் கொண்டது ‘நாற்பது பவுன் நகை’. ஆனால், திருட்டுப் போன நகைகளை அடையாளம் காட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போகும்போது இந்தக் கதை வேறொரு பரிமாணத்தை அடைகிறது. ‘அம்மாவுக்கு முந்தானை நுனியை எப்படி வைத்துக்கொள்வதென்பது குழப்பமாக இருந்தது’ என்ற வரி இந்தக் கதையின் சாதாரணத்தன்மையை கலைத்துப் போடுகிறது.

பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு நிகராக குழந்தைகளை மையமாகக்கொண்ட கதைகளும் முக்கியமானவை. உமா மகேஸ்வரியின் பெண் கதாபாத்திரங்களுக்கு இணையானவை அவரது கதையில் வரும் குழந்தைகள். குழந்தைகளின் தனித்தன்மை மிக்க உலகின் அழகையும் தூய்மையையும் மிக எளிதாக கதைக்குள் அவரலால் கொண்டு வர முடிகிறது.

‘எலின்னா கொல்லணும், அணில்னா சொல்லக்கூடாது?’ (என்றைக்கு?), ‘ஏம்மா கோயிலுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே பெயிண்ட் அடிச்சிருக்காங்க?’ (நாற்பது பவுன் நகை) போன்று குழந்தைகளால் வெகு இயல்பாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு நம்மிடம் தீர்க்கமான பதில் கிடையாது.  உமா மகேஸ்வரியின் கதைகளினூடாக நமது குடும்பம், உறவுகள் ஆகியவற்றின் மீது இவ்வாறு எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் கிடையாது. அவ்வாறான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதுதான் அவரது புனைவுலகின் ஒரு முக்கியமான பணிபோலும்.

இவ்வாறான உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளல்லாத கதைகளையும் உமா மகேஸ்வரி எழுதியுள்ளார். இக்கதைகள் நீண்ட சித்தரிப்பாகவோ அல்லது சிந்தனைச் சரடுகளாகவோ அமைந்துள்ளன. பெண்களின் உளப் பாங்குகளை, கனவுகளை, நேரடியாகத் தகர்க்க முடியாத சில தடைகளை இவ்வாறான சரடுகடிளின் வழியாகக் கடக்கப் பார்க்கும் முயற்சிகள் இக்கதைகள். காற்றுக்காலம், கண்ணாடிச் சுவடுகள், வீடின்மை, இறகு என பல கதைகளையும் சொல்லலாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளும் படிமங்களும்கூட பெண்களது அகவேட்கையின் துலக்கமான அடையாளங்களாகவே அமைந்துள்ளன.

உமா மகேஸ்வரியின் கதைகளின் தனிச் சிறப்பு அவர் கதைகளை வார்க்கும் தன்மையும் கவிதையோடமைந்த கதை மொழியுமே. அவருக்கு முன்பு அவ்வாறான ஒரு புனைவுமொழி வேறெவரிடமும் இல்லை. உமா மகேஸ்வரியின் தீர்க்கமான முத்திரை. ‘மின் சித்திரம் போன்ற தேக அமைப்பு’, ‘இது நீரல்ல, நெருப்புதான். தன்னுள்ளேயிருந்து தழல்வதேயான தீத்தளிர்’, ‘கண்ணாடிக் கூடைபோல் அவள் மேல் கவிழ்ந்த ஆகாயம்’, ‘அருந்தி மீந்த கோப்பையின் அடியில் படர்ந்த காபி படலம்போல அவன் முகத்தோற்றங்கள்’ போன்ற வரிகள் எளிய கதையையும்கூட நேர்த்தியான வாசிப்பு அனுபவமாக மாற்றிவிடுகின்றன.

2003இல் வெளியான ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவலையும் அவரது ஆரம்பகாலத் தொகுப்புகளிலுள்ள கதைகளையும் இன்று வாசிக்கும்போது சில பகுதிகளில் பெண்ணியம் சார்ந்த குரல் சற்று உரக்க வெளிப்பட்டுள்ளது என்ற எண்ணம் எழுகிறது. பெண்களுக்கான உலகின் பொதுவான களங்களையே அவர் எழுதியிருக்கிறார் என்ற கருத்தும். அவ்வாறான குரல் இல்லாமலேகூட அந்தக் கதைகள் தம்மளவில் ஆழம் கொண்டிருப்பவையே. கடந்த சில ஆண்டுகளில், கல்வியின் வழியாக வேலை வாய்ப்பின் மூலமாக பெண்களுக்கான உலகில் பெரும் மாற்றங்கள் வாய்த்துள்ளன. பெண்களைக் குறித்தும் அவர்களது இடம் குறித்தும் நம்மிடம் உள்ள மரபான பல கருத்துகளும் சிந்தனைகளும் உடைபட்டு பலத்த மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. குடும்ப அமைப்பு, உறவுகள் சார்ந்த வரையறைகள் மறுபரிசீலனைக்கும், மறுவரையறைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் உமா மகேஸ்வரியின் கதைகளில் சில பலவீனமானவையாகத் தோன்றக்கூடும். ஆனால், உமா மகேஸ்வரி உள்ளிட்ட எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் புனைவின், எழுத்தின் வழியாக எழுப்பிய கேள்விகளின் வழியாகவே இன்றைய மாற்றங்கள் சிலவேனும் உருப்பெற்றுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

உமா மகேஸ்வரியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘நட்சத்திரங்களின் நடுவே’. அவரது புனைவுலகில் நட்சத்திரங்களுக்கு தனித்த சிறப்பான ஒரு இடம் உண்டு. தொடர்ந்து நட்சத்திரங்கள் அவரை ஈர்க்கின்றன. வெவ்வேறு தோற்றத்துடன் பலவிதமான காட்சிகளை அவருக்குத் தருகின்றன. ‘பனி உதிர்வதும்கூட ஈர நட்சத்திரங்கள் போல’ தோற்றமளிக்கின்றன. ‘வான் விளிம்பில் தெரிந்த ஒற்றை நட்சத்திரத்தைப் பார்த்தாள். அது நிசப்தமான மலர்போல வாசனை பரப்பியது’, ’நட்சத்திரம் ஒரு மந்திரமலர் போல் அவள் மீது விழுந்தது’, ‘நட்சத்திரங்கள் இறைந்த வானம், அழகிய சின்னஞ்சிறு பொட்டுச் சுடர்த் தோரணம்போல’ என்று விதவிதமாக நட்சத்திரங்களின் ஒளியை, எழிலை சொல்லிப் பார்க்கிறார்.

உமா மகேஸ்வரியின் புனைவுலகும் ஒளிரும் நட்சத்திரங்களால் உருவான ஒன்று. அந்த நட்சத்திரங்கள் இருண்ட வானிலிருந்து பெண்களின் உலகமான வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறது, சாளரத்தின் வழியே. தமது ஒளியையும் மினுமினுப்பையும் அந்த வீட்டுக்குள் நிறைக்கிறது. அந்த ஒளியின் வழியே மினுமினுப்பின் வழியே அந்த வீடும் வானின் ஒருபகுதியாகிறது.

0

Wednesday 13 September 2023

தனியன் - சிறுகதை

 தனியன்

( வல்லினம் செப் 23 இதழில் வெளியானது )

0

“இரும்மா, நான் மேல போனதுக்கப்பறமா கதவத் தெற. அவங்ககிட்ட நான் இல்லைன்னு சொல்லி அனுப்பிடு. வேற எதுவும் பேசாத. புரியுதா” அம்மாவின் அருகில் குனிந்து எச்சரித்துவிட்டு விறுவிறுவென்று படிகளில் ஏறினேன்.  நான் மேலே வரும்வரை தலைதூக்கிப் பார்த்திருந்தவளின் முகத்தில் குழப்பமும் கொஞ்சம் கவலையும்.அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டேன். 

எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கதவைச் சாத்திவிட்டால் எப்போதுமே எதுவும் காதில் விழாது. மேற்குப் பக்கமாய் வாசலுக்கு மேலாக இருக்கும் அறை. தெருவில் விரையும் வாகனங்களில் இரைச்சலும் ஒலிப்பான்களின் அலறலும்தான் அறைக்குள் கேட்கும். விசிறியை இயக்கிவிட்டு பாயில் படுத்தேன். மதியத்தின் வெம்மை அறைக்குள் தகித்தது. இவளைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைகிறேன்? அஞ்சல் வழிக் கல்வி வகுப்புகளில் பழக்கம். பழக்கம் நட்பாகி நெருங்கிய வேளையில் இன்னொருவனை மணந்துகொண்டு போய்விட்டாள். அதன் பிறகு எந்தத் தொடர்புமில்லை. அலைபேசி எண்கூட தெரியாது. வெகுநாட்கள் கழித்து இன்று காலையில் அழைப்பு வந்தது. யாரென்று தெரியாமலே எடுத்தேன். அவள் குரலையே என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், சந்தோஷமாக இருந்தது. பெண் குரல் என் அலைபேசியில் ஒலிப்பதே அபூர்வம். அவள் என்று தெரிந்ததுமே பெரும் உற்சாகம். வருடங்கள் கழிந்தும் நினைவில் வைத்திருக்கிறாள், சந்திக்க விரும்புகிறாள் என்பதே என் வயதை சரிபாதியாக குறைத்துவிட்டது. தன்னிலை உணராமலே முகவரியைச் சொல்லிவிட்டேன். கொப்புளித்த உவகை தணிந்து சமநிலை அடைந்தபோதுதான் செய்த தவறை உணர்ந்தேன். எதற்காக அவளைப் பார்க்கவேண்டும்? தெரிந்துதான் வருகிறாளா? யாராவது சொல்லியிருப்பார்களா? எப்படியிருந்தாலும் இந்த சந்திப்பு இதமானதாய் இருக்கப் போவதில்லை. வாதையைக் கூட்டும் ஒன்றாகத்தான் இருக்கும். வேண்டாம் என்று அப்போதே தீர்மானித்தேன். அழைத்துச் சொல்லலாமா? வேண்டாம், வந்துவிட்டு போகட்டும். எத்தனை முறை எத்தனை பேரிடம் அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியும். என்னிடம் இருப்பது ஒரே பதில். அந்த பதில் கேட்பவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் என்னிடம் கூடுதலாய் எந்த விளக்கங்களும் கிடையாது.  அதைவிட அவர்கள் தரும் இலவச ஆலோனைகளை என்னால் பொறுக்க முடிவதில்லை. ‘மூடிட்டு வேலையப் பாத்துட்டு போங்கடா’ என்று கத்தவே விரும்புவேன்.

இப்போதெல்லாம் யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. விடிந்ததும் எல்லோருக்கும் முன்பே எழுந்து தயாராகி ஏழு மணி ரயிலைப் பிடித்து வடகோவையில் எட்டு ஐம்பதுக்கு இறங்கும்போது என்னவோ ஒரு விடுதலையுணர்வு. அதன் பிறகு பள்ளிக்கூடம், பாடங்கள், பிள்ளைகள் என்று நான்கு மணி வரை நேரம் போவதே தெரியாது. பள்ளியில் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. உடன் பணியாற்றும் ஆசிரியைகளில் இருவரைத் தவிர மற்றவர்கள் மணமானவர்கள். அந்த இருவரும் என்னிடம் நெருங்குமளவு வசீகரமோ வயதோ இல்லை என்பதால் இதுவரையும் எந்த பிரச்சினையுமில்லை. ‘சார்கிட்ட ஃபேமிலியப் பத்திக் கேட்டா சிரிச்சுட்டே போயிடுவார்’ என்ற பொது அபிப்ராயம் எனக்கும் வசதியாகத்தான் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படி யாரிடமாவது மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் இந்த அறை உண்டு, கொஞ்சம் புத்தகங்கள் உண்டு என்று பொழுதைக் கழித்துவிடுவேன். பெண்ணுடலை திரையில் பார்ப்பதில் இப்போது அதிக நாட்டம் இல்லை. அதுவும் சலித்துவிட்டது. சுயமைதுனமும் பல்லில்லாக் கிழவன் சவைக்கும் கறித்துண்டுபோல, ஒரு சடங்கு. தினவுடன் உடல் பரபரத்த காலங்களில் கற்பனையில் கூடிய பெண்ணுடல்களுக்கே இப்போது கணிசமான வயதேறிவிட்டது. ‘சீக்கிரமா முடிச்சிட்டு விடு’ என்று கால்விரித்து எங்கோ வெறிக்கிறார்கள். தனி அறைக்குள் கிடக்கும் அவஸ்தை தாளாமல் பால்கனியில் வந்து கிடப்பேன். கீழே கூடத்தில் அம்மாவின் கட்டிலுக்கு அருகில் படுப்பேன். வாசுவின் மனைவி மஞ்சுவுக்கு பிடிக்கவில்லை. என்னவோ முனகியிருக்கிறாள். அதன் பிறகு கதவைத் திறப்பதுமில்லை. வெளியில் படுப்பதுமில்லை.

வெளிச்சம் குறைந்திருந்தது. பக்கத்து அறைக் கதவு திறக்கும் சத்தம். வெளியில் போயிருந்த சுந்தரும் அவன் மனைவி சியாமளாவும் வந்துவிட்டார்களா? என் அறை உள்ளே தாழிட்டிருப்பதை அவள் பார்த்திருப்பாள். அறைக்குள் சென்று கதவைச் சாத்திய பிறகுதான் அவனிடம் எதுவும் சொல்லுவாள். என் அறையின் சுவர்களுக்கும் கூட கண்கள் இருப்பதாய் அவள் அஞ்சுவாள். உண்மையும்தான். மூடிய அறைக்குள் உடல்களைக் காணும் திருட்டுத்தனத்தை அறியமாட்டார்களா என்ன? அவர்கள் வெளியில் வருவதற்குள் கீழே போய்விடலாம். எழுந்தேன். வேட்டியை இறுக்கிக்கொண்டு சட்டையை மாட்டினேன். செல்போனை எடுக்கலாமா? வேண்டாம். யார் அழைக்கப் போகிறார்கள். மெதுவாக கதவைச் சாத்திவிட்டு ஓசைப்படாமல் கீழே இறங்கினேன்.

காத்திருந்ததுபோல அம்மா எழுந்து சமையலறைக்குள் நடந்தாள். போட்டு வைத்திருந்த காபியைக் கொண்டுவந்து நீட்டினாள்.

“உங்கூட படிச்சுதாமே. என்னவோ பேர் சொல்லிச்சு. நீ இல்லேன்னு சொன்னதுமே பாவம் பொக்குன்னு போயிருச்சு.” எழுபத்தி ஒன்று முடிந்துவிட்டபோதும் இன்னும் எனக்கு காபி போட்டுத் தரும் விதி அவளுக்கு. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு இது பழக்கந்தான். வீட்டில் நான் இருக்கும்போதே பலருக்கும் இதுபோல இல்லையென்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறாள்.

ஞாயிற்றுக்கிழமைக்கான அமைதியுடன் மங்கிய வெளிச்சம்கூடிய சாலையில் கிழக்கு நோக்கி நடந்தேன். சடையப்பன் கோயில் வாசலில் அடுத்தடுத்து வாகனங்கள். வசதிகள் பெருகி வாகனங்கள் பெருகி ஊரே மாறிப்போனபோதும் சடையப்பன் மட்டும் அப்படியேதான் வீற்றிருக்கிறார். அவரும் என்னைப்போலத்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நானும்.  வீட்டை அடையாளம் சொல்லவும் அவர் பெயரைத்தானே பயன்படுத்துகிறேன். அம்மாவையடுத்து எனக்காக யாரேனும் கவலைப்படக்கூடுமென்றால் இந்த சடையப்பனாகத்தான் இருக்க முடியும். சாலையைக் கடந்து கே பி என் காலனியின் பிரதான வீதியில் நுழைந்தேன். மரங்களுடன் கூடிய அழகான தெரு. அடக்கமான தனி வீடுகள். எல்லோரும் தொலைக்காட்சிகளில் மூழ்கியிருப்பார்கள். வீட்டிலும் அம்மா எப்போதும்போல தன்னுடைய பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருப்பாள். சுந்தரும் சியாமளாவும் இருக்கக்கூடும். சேலத்துக்குப் போயிருந்த வாசு ஏழு மணிக்கு வந்துவிடுவான். ரமாவையும் பிள்ளைகளையும் அழைத்து வந்துவிடுவான். ரவி போன வாரம்தான் ஆயிஷாவுடன் வந்துவிட்டு போனான். மறுபடி அடுத்த வாரம்தான் வருவான்.  பிள்ளைகளும் படம் பார்க்கிறார்கள் என்றால் கூடம் நிறைந்திருக்கும். மாடியில் கூடத்தில் எல்லா பிள்ளைகளுக்குமான என்னுடைய கணக்கு வகுப்பு இன்று இல்லை.  ராத்திரி டிபன் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குச் செல்ல பத்து மணியாகிவிடும். அம்மாவும் கூடத்தில் கிடக்கும் படுக்கையில் சாய்ந்துவிடுவாள். எனக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருப்பாள். பத்தரைக்குப் போனால் சரியாக இருக்கும். இருப்பதைத் தின்றுவிட்டு மாடிக்கு ஓடிவிடுவேன். சில நாட்களில் மட்டும் காலை அமுக்கிவிடச் சொல்லுவாள் அம்மா. அவளுக்கு கால் வலிக்கிறதோ இல்லையோ என்னை இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் யார் மூலமாகவேனும் புதிதாக அவளுக்குக் கிடைத்திருக்கும் ஜாதகங்களைக் குறித்தோ, பெண்களைக் குறித்தோ பேச வேண்டும். நாற்பது வயது வரைக்கும்

நானும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டுதானிருந்தேன். ‘உனக்குன்னு ஒருத்திய பகவான் நிச்சயமா படைச்சிருப்பார்’ என்று சொல்வதை நானும் நம்பினேன். இப்போது வெறுத்துவிட்டது. இதுதான் காரணம் என்று தெரியாமல் புரியாமல் அடிவாங்கி அவமானப்பட்டு அனைத்திலும் ஆர்வம் வற்றிவிட்டது. அம்மா சொல்வதைக்கூட பொறுமையுடன் கேட்கும் நிலையைக் கடந்துவிட்டேன். அந்தக் கணங்களில் என் நாவிலிருந்து பாயும் தீச்சொல்லை அஞ்சுகிறாள். எனக்குள் சேர்ந்திருக்கும் கசப்பும் வன்மமும் அவளைத்தான் முதலில் தீண்டுகிறது, பாவம். அதனாலேயே பல நாட்களில் அவளைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் அடைந்துகொள்கிறேன்.

தனலட்சுமி மில் வளாகத்தையொட்டிய பாதையில் திரும்பினேன். ஒருகாலத்தில் இந்தப் பகுதியின் அடையாளம். பெரும் பஞ்சாலை. இன்று தரைமட்டமாக்கப்பட்டு வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாக்கள் அணிவகுத்துள்ளன. மகிழம்பூவின் வாசனையுடன் காற்று முகத்தில் மோதிக் கடந்தது. தெருவிளக்கின் ஒளிக்கு சற்று விலகி நின்றிருந்தது அந்த இணை. அவள் பைக்கில் உட்கார்ந்திருக்க அவன் தோளணைத்தபடி நின்றிருந்தான். முத்தமிட்டிருப்பானா? என் வருகையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களை பார்க்காததுபோல கடந்தேன். சின்னதாய் ஒரு சிரிப்பொலி. என்னைப் பார்த்துச் சிரிக்கிறாளா? இவளுமா? இருக்காது. அவன் எதுவும் சில்மிஷம் செய்திருப்பான். பரவச கணங்களில் திளைத்திருக்கிறார்கள். பாவம், அனுபவிக்கட்டும். எல்லாம் சரியாக வந்தால் மணமக்களாகி இல்லறம் காணட்டும். என்போல அணைக்க உடலும், நுழைக்கத் துளையும் வாய்க்காமல் காய்ந்து இப்படி இருட்டில் மறைந்து ஒளிந்து ஓட வேண்டாம். எனக்கு ஏன் யாருமே வாய்க்காமல் போனார்கள்? இல்லை, அப்படியும் சொல்லமுடியாது. வாய்த்ததெல்லாம் வாஸ்தவம்தான். நான்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அஞ்சல் வழிக் கல்வியின் முதுகலைப் படிப்புக்கான நேரடி வகுப்புகளின்போதுதானே அனுவைச் சந்தித்தேன். கோவை, அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த வகுப்பின் முதல் நாள். திருப்பூரிலிருந்து வருகிறேன் என்று தெரிந்ததும் அவளே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டாள். அந்த ஒரு வாரமும், தனித் தனி இருக்கைகள் என்றாலும், ஒரே பேருந்தில் பயணம். மரத்தடியில் ஒன்றாக மதிய உணவு. எல்லாம் சரியாகத்தான் அமைந்தது. படிப்பு முடியும் வரையிலும் வாய்க்கும்போதெல்லாம் வீட்டுக்குப் போனதுண்டு. அவளும் சிலமுறை வந்து அம்மாவைப் பார்த்ததும் உண்டு. சின்னதாய் ஒரு கற்பனை சிறகு முளைத்திருந்தது. அவள் என்ன நினைத்தாள் என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை. கால்குலஸிலும் அல்ஜீப்ராவிலும் நல்ல மதிப்பெண் வாங்கியதற்கு நன்றி கடனாக அழகான பேனா ஒன்றையும் பரிசளித்தாள். அது காதல்தானா என்று எனக்குள் நான் உறுதிசெய்ய சற்று அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதற்குள் அவள் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து நீட்டிவிட்டாள். அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கிருந்தோ யாரிடமோ எண்ணைத் தெரிந்துகொண்டு அழைத்தாள். சந்திக்கவேண்டுமெனக் கேட்டாள். நான்தான் தவிர்த்துவிட்டேன். அவளுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாமலிருந்தாலும் சந்திக்காமல் இருப்பதே நல்லது. சந்திக்க நேர்ந்தால் என் மீதான பரிதாபக்கணக்கில் அவளுடைய பங்கும் சேர்ந்துவிடும்.

ரயில்வே கிராஸிங் சாலையில் திரும்பாமல் நேராக நடந்தேன். கணேஷ் மெஸ்ஸில் சரியான கூட்டம். மாஸ்டர் தன் இசைத் திறனை கொத்துப் புரோட்டாவில் நிரூபிக்க வேர்வையுடன் நின்றார். சேமலைதான் கல்லாவில் இருந்தான். தலை நிமிர முடியாமல் காசு வாங்கிப்போடும் அவசரம். பாதி வழுக்கை. நரை கூடிய முள் தாடி. என்னுடைய வகுப்புதான். எனக்கின்னும் முழு வழுக்கை இல்லை என்பதுதான் ஆறுதல். ஆனால், சேமலையின் மூத்த பையன் சென்னையில் பொறியியல் படிக்கிறான். இரண்டாமவன் பதினொன்றில். பத்தாம் வகுப்பில் கணக்கில் முப்பத்தி ஐந்து வாங்கி தப்பித்து, பனிரெண்டாம் வகுப்பில் தேற முடியாதபோது கடைக்கு வந்துவிட்டான் சேமலை. இருபத்தி ஐந்தாவது வயதில் கல்யாணம். என்னுடன் படித்தவர்களில் முதலில் கல்யாணம் அவனுக்குத்தான். மணப்பந்தலில் மாலையுடன் நின்ற அவளைப் பார்த்தபோது சேமலையின் மீது பொறாமை கிளர்ந்தது. எப்போதாவது வழியில் பார்க்க நேரும்போது சில வார்த்தைகள் பேசுவான்.

‘கல்யாணமே பண்ணிக்காத. இம்சை. நமக்கு புடிச்சமாதிரி எதையுமே செய்யமுடியாது. என்னையப் பாரு எப்பப் பாரு அந்த சோத்துக் கடையிலதான். எத்தனை குளிச்சாலும் ஊத்த சாம்பார் வாடை போகவோ போகாது. அப்பல்லாம் அப்பனுக்கு பயந்து உக்காந்திருந்தேன். இப்ப இவளுக்கு.”

“நீ சொல்லாம இருப்பே. நல்லா அனுபவிச்சு ரெண்டு பசங்களையும் பெத்துப்போட்டாச்சு. நான் மட்டும் கையடிச்சுட்டே காலந்தாள்ளனுமாடா?”

“அடப்போடா. அதெல்லாம் ஆரம்பத்துல கேந்திபுடிச்சமாதிரி இருக்கும். கொஞ்சநாள்தான். இப்பல்லாம் பக்கத்துலயே வர்றதில்ல, சாம்பார் நாத்தமாம். எனக்கும் பெரிசா நாட்டமில்லாத போச்சு. இதுக்காக ஒருத்தியைக் கட்டிக்கறதுன்னா, ரொம்ப மடத்தனமா இருக்குடா.”

அவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்த பிறகு வரும் அலுப்பு. எனக்கு எதையும் பார்க்காததால் வரும் வெறுப்பு.

‘காலத்தே பயிர் செய்’யும் கணக்கு எங்கே தவறிப் போயிற்று எனக்கு?

ரவி ஆயிஷாவைக் கட்டிக்கொண்ட நாளில்தான் எல்லாக் குழப்பங்களும் தொடங்கிற்று. அப்போது குடியிருந்தது பத்து வீடுகள் கொண்ட சுப்பு மேஸ்திரி காம்பவுண்டில் கடைசி வீட்டில். வீடென்று சொல்லலாமா, தெரியவில்லை. மேற்கு நோக்கி நிற்கும் பழங்கதவைத் திறந்ததுமே சிறிய வாசல். வாசலையொட்டியிருந்த ஆறுக்கு நாலு அளவிலிருந்த இடத்தை கூடமென்று சொல்லலாம். அங்கேயேதான் சமையல், சாப்பாடு, படிப்பது, அம்மா பேப்பர் திருத்துவது, காய்கறி நறுக்குவது என்று எல்லாவற்றுக்கும். வடக்குமுகமாய் ஒரு அறை. மூலையில் மர பீரோ. அதையொட்டி சிறிய கட்டில். உள்ளே போனதும் கட்டிலில் தாவிவிடவேண்டும். நடந்து திரும்புவதுகூட சிரமம். வாடகை குறைவென்பதாலா, அம்மாவுக்கு பள்ளிக்கூடம் பக்கத்தில் என்பதாலா,ஒத்தாசைக்கு சித்தியும் அதே காம்பவுண்டில் இருந்தாள் என்பதாலா என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால், ராத்திரிகளில் ஒண்டிக்கொள்ள ஒரு இடம். பஞ்சு குடோன் ஒன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் மதியம் ஆயிஷாவை அழைத்துக் கொண்டு வந்து நின்றான்.

“கல்யாணம் முடிஞ்சிருச்சி. சொல்ல முடியாத நிலைமை. ஒண்ணு ரெண்டு நாள் இங்கதான் இருப்பா. அதுக்குள்ள வீடு பாத்துருவேன். சமாளிச்சுக்கோ” ரவி அம்மாவிடம்தான் சொன்னான். மூட்டுவலிக்கு இலைப்பத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவளின் காலைத்தொட்டு வணங்கினாள் ஆயிஷா.

அவள் தலையைத் தொட்டாள் அம்மா “சின்னப்பொண்ணா இருக்காளே. உன்னை நம்பி வந்துட்டா. நல்லபடியா பாத்துக்கோ.” அம்மா வேறெதுவும் சொல்லவில்லை. பெரிய ரகளையை எதிர்பார்த்து கூடிநின்ற காம்பவுண்ட் பெண்கள் உதட்டை சுழித்தபடி கிசுகிசுத்தபடி நகர்ந்தனர். அன்றிரவு சித்தியின் வீட்டுத் திண்ணையில்தான் படுத்திருந்தேன்.

வாசலில் அம்மாவும் சித்தியும் பேசிக்கொண்டிருந்தார்கள். “கட்டிட்டு வந்துட்டான். என்ன செய்ய சொல்றே?”

“அதுக்காக இத்தனை சின்னஞ்சிறுசுக இருக்காங்க. எல்லாரையும் இப்பிடி வெளியில கெடத்திட்டு உள்ளே கதவைத் தாப்பாப் போட்டுக்கறது நல்லாவா இருக்கு?”

“அந்தப் பொண்ணப் பத்தி யோசிச்சு பாரு நீ. பாவம், எங்க எப்பிடி இருந்துதோ. இங்க வந்து இந்த பொந்துக்குள்ள கெடக்குது. ரெண்டு மூணு நாள்ல வீடு பாத்துருவேன்னு சொல்லிருக்கான். இருக்கட்டும்.”

அம்மா அப்படித்தான். ஆரம்ப பள்ளி ஆசிரியை. முப்பத்தியிரண்டாம் வயதில் கணவனை இழந்து, நான்கு பிள்ளைகளை வளர்த்து படிக்கவைத்திருக்கிறாள். அவளுக்கு எதிலுமே குறைகள் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமாட்டாள்.

 

கருடா மருத்துவமனை வளாகத்துள் வழக்கமான பரபரப்பில்லை. நோய்மைக்கும் வார விடுமுறையா? ஒரு காலத்தில் பஞ்சு குடோனாக இருந்த இடம். இன்று பஞ்சுக்கே கடும் பஞ்சம். ஆலைகளுமில்லை நூற்புமில்லை. அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலிருந்த ‘நீதி விநாயக’னிடம் ஒரு கிழவி கையேந்தி மன்றாடி நின்றாள். கண்ணீர் வழிந்தது. அம்மாவும் இப்படித்தான் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு கிடப்பாள். சீக்கிரமாக எனக்கொரு வழி பிறக்கவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களிடம் கெஞ்சுவாள். என்னை தனிமரமாய் நிறுத்திவிட்டுப் போய்விடக்கூடாது என்ற கவலையைத் தவிர வேறென்ன துக்கம் அவளுக்கு? அண்ணன், தம்பி உறவெல்லாம் விலகி நிற்கும் வரைதான். எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தால் அசௌகரியந்தான்.

ரவி தன் வழியைப் பார்த்துக்கொண்டான். குழப்பங்கள் அடங்கி எல்லோரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்ட பிறகு மூன்று வருடங்கள் கழித்து வாசுவுக்கு மணமானது. பின் அம்மா என் ஜாதகத்தை எடுத்தாள். முதல் தடையாக நின்றது ஜாதகக் கட்டத்தில் யாரோ ஒரு அதிபதி கூடாத இடத்தில் குடிகொண்டிருந்ததாக சித்தி புலம்பினாள். அதைவிட முக்கியமான தடை, எனக்கு நிரந்தரமான வேலை ஒன்றில்லை என்பது. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்துகொண்டிருந்தேன். கணிதம் சொல்லித்தருவது எனக்குப் பிடித்திருந்தது. காலையிலும் மாலையிலும் டியூசன். தனியார் பள்ளியொன்றில் கணித ஆசிரியர் வேலை. இதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. கல்யாணம் செய்துகொள்ள அரசுவேலை கட்டாயம் என்ற நிபந்தனையை நான் அறிந்திருக்கவில்லை.

இளமைக் கனவுகளில் நாம் வேண்டுவதெல்லாம் ஷோபனாக்களையும் அமலாக்களையும் ரேவதிகளையும்தானே. அப்போதைய காட்சிகளில் நாம் இருக்கும் இடங்களெல்லாம் நம் கண்ணுக்குப் புலப்படாமல் மங்கிவிடுவதுதான் பிரச்சினையே. அந்த இடங்கள் தெளிவடைந்து நமது லட்சணத்தை நாமே பார்க்கும்போதுதான் பக்கத்தில் இருக்க வாய்க்கும் பெண்கள் தம்மருகே கமலஹாசன்களையும் மைக் மோகன்களையும் தேடுகிறார்கள் என்பது தெரியவரும். இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒருபோதும் சமன்படுவதேயில்லை. பரவாயில்லை என்று வலிய வந்த வரன்கள் சிலவற்றை அம்மாவும் சித்தியும் ஒதுக்கினார்கள். நானும் ஒன்றிரண்டை ஒப்புக்கொள்ளவில்லை.

பரிகார தலங்களுக்கும் தோஷ நிவர்த்தி தலங்களுக்கும் நடந்து களைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்தபோது சுந்தர் மங்கையும் மாலையுமாய் வந்துநின்றான். எனக்கடுத்து பிறந்த கடைக்குட்டி என்றாலும் புத்திசாலி. அம்மாவுக்கு சிரமம் தரக்கூடாது என்று அவன் பணிபுரிந்த கணக்காயரே தன் மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டார்.

ஓய்வு பெற்று கிடைத்த பணத்தில் வீடு கட்டினாள். கீழே கூடம், ஒரு படுக்கையறை, மேலே மூன்று படுக்கையறை, ஒரு சிறிய கூடம். தனக்கென தனி வீடு கட்டிக்கொண்டதால் ரவிக்கு தேவையிருக்கவில்லை. வாசுவும் சுந்தரும் ஆளுக்கொரு அறையில் இருக்க இன்னொரு அறையில் நான் தனியன். இருவரின் பிள்ளைகள் மூவருக்கும் பக்கத்து வீட்டிலிருந்து சில பிள்ளைகளுக்குமாய் மாலையில் வகுப்பெடுக்கிறேன். வாசுவின் மகள் கோதை பத்தாம் வகுப்பு. சுந்தரின் மகள் மாயவி ஒன்பதாம் வகுப்பு. இருவரும் என்னைப்போலவே கணக்கில் புலிகள். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் வேளைகளில்தான் நான் சுமையற்று சிரிப்பேன்.

யுனிவர்சல் தியேட்டர் சாலையில் திரும்பினேன். வரிசையாக தெருவோரக் கடைகள். உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், செல்போன்கள், அலங்காரப் பொருட்களென்று அல்லங்காடிகள். வடக்கிலிருந்து வந்து பனியன் ஆலைகளிலும் நூற்பாலைகளிலும் அடைந்து கிடப்பவருக்கான விடுமுறை நாள். கூட்டம் கூட்டமாய் திரிந்தார்கள். இணையில்லாமல் தனியே நடந்தவர்கள் என் கண்ணிலேயே படவில்லை. எனக்கென்று இப்படித் தெரிகிறதா? குலாலர் திருமண மண்டபத்தில் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்தன. மணமகளின் பெயரைப் பார்த்தேன். ‘மங்கையர்க்கரசி’. அவள்தானா? சட்டென்று வேர்த்தது. நின்று வளாகத்துக்குள் பார்த்தேன். போய் பார்க்கலாமா? இருக்காது. அவளுடைய வீடு சூலூர்தானே. இங்கே திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல் அவளிடம் பேசி, எல்லாம் முடிந்து இரண்டு வருங்களாகிவிட்டன.  

அம்மாதான் எத்தனை நம்பிக்கையுடன் இருந்தாள். உடன் பணிபுரிந்த டீச்சரின் சிபாரிசில் வந்த ஜாதகம். பெண்ணுக்கு வயது முப்பத்தி நான்கு. அம்மா அப்பா கிடையாது. ஒரேயொரு அண்ணன். அவன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. இதுவெல்லாம் எனக்கு எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. ஆனால், அவள் பணிபுரிவது ஒரு வங்கியில் என்று சொன்னபோதுதான் யோசித்தேன். வங்கிப் பணியில் இருப்பவளுக்கு ஏன் இத்தனை வயது வரை மணமாகவில்லை? ஏதேனும் குறையா? காதல் தோல்வியா? எதுவும் பிரச்சினையில்லையென்றால், நாற்பத்தி ஐந்தான என்னை எதற்கு ஒப்புக்கொள்கிறாள்? கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தாலும் பார்க்கலாம் என்ற யோசனையுடன் வங்கியின் தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து ஒரு நாள் பின் மதிய வேளையில் அழைத்தேன். அவள் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.

“ஹலோ…” அவள் குரல் கேட்டதுமே ஒரு நிமிடம் தயங்கினேன். அடுத்த நொடியில் அவசரமாய் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவளுக்கும் அது எதிர்பாரா அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். சிறிய இடைவெளி.

“சொல்லுங்க…”

“என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிருக்காங்களா?”

“ம். ஓரளவு தெரியும். ஸ்கூல்ல வேலை பாக்கறீங்க. திருப்பூர்லேர்ந்து டிரெய்ன்ல வர்றீங்க.”

“பரவால்லையே. நெறைய விஷயம் தெரியும்போல.”

“ம். தெரிஞ்சிட்டாதானே முடிவெடுக்கலாம்.”

அன்றைய தினம் சுருக்கமாக பேசி வைத்துவிட்டேன். அவளும் என் அலைபேசி எண்ணைக் கேட்கவில்லை. நானும் விசாரிக்கவில்லை..

அவளுடைய அண்ணன் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பதில் சொல்வதாக சொன்ன விஷயத்தை அன்றிரவு அம்மா  சொன்னாள். இந்த ஜாதகம் இன்னும் என்னை விட்டபாடில்லையா? இரண்டு நாட்கள் இடைவெளி. மீண்டும் நானே அழைத்தேன்.

“உங்கண்ணன் ஜாதகம் பாத்து முடியலையா இன்னும்?”

“அவன் அப்படித்தான். சீக்கிரத்துல சொல்ல மாட்டான். உங்களுக்கு அவசரமா?”

“ஆமாம் சொல்ற வயசெல்லாம் தாண்டியாச்சு. இன்னும் நாலு மாசமாகும்னு சொன்னாலும் என்ன பண்ண முடியும்?”

அவள் சிரித்தாள். குரலையும் சிரிப்பையும் வைத்து உருவத்தை தீர்மானிக்க முடியுமா?

“உங்க ஸ்கூல் பேங்க் வேலையெல்லாம் நீங்கதான் பாக்கறீங்களா?” அவள் சிரிப்பை ஒளித்துக்கொண்டே கேட்டபோது சட்டென்று உடலில் விறுவிறுப்பு கூடியது.

“ஏன் கேக்கறீங்க?” நா வறண்டது.

“நேத்து எங்கியோ பேங்க் போயிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்.”

“நீங்க போன்ல பேசினீங்களா?”

“பேசலை. பாத்தேன்.” மறுபடியும் உள்ளுக்குள் நடுக்கம்.

“பாத்தீங்களா? எங்கே?”

“வேறெங்க. நான் வேலை பாக்கற பேங்க்லதான். நீங்க வர்லையா?”

அட! பார்த்துவிட்டாளா? வெகுநேரம் நிற்கவில்லையே. உள்ளே போன சுருக்கில் வந்துவிட்டேன். அதற்குள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? வசமாய் மாட்டிக்கொண்டேன்.

“வந்தீங்கல்ல. பாத்து பேசிட்டு போக வேண்டிதுதானே. அதுக்குள்ள என்ன பயம்?”

“நீங்க என்ன பாத்தீங்களா?”

“பாத்தேனே.”

“எப்பிடி நான்தான்னு தெரியும்?”

“தெரிஞ்சுது. எப்பிடின்னு கேட்டா சொல்லாத் தெரியலை.”

மறுநாள் மதியம் உணவு இடைவேளையில் பக்கத்திலிருந்த உணவு விடுதியில் சந்தித்தபோது வியந்தேன். இவளுக்காகத்தான் இத்தனை நாள் வறுமையா? கடவுளே! இவளைக் காட்டத்தான் இத்தனை கால தவிப்பா? மூப்பின் அடையாளத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. இயல்பாகச் சிரித்தாள். எல்லா கதையையும் சொன்னாள். நான் நிலைமறந்து வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். விடைபெறும்போது அவள் எச்சரித்தாள் “ரொம்ப கனவு காணாதீங்க. கீழே எறங்கி நிதானமா போங்க. இன்னும் எதுவும் முடிவாகலை. எங்க அண்ணன் அத்தனை சீக்கிரம் விட்டுற மாட்டான்.”

அவள் அப்படிச் சொன்னதை அப்போது பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. மறுநாள், மாலையில் பள்ளியிலிருந்து புறப்படும் நேரத்தில் அவளுடைய அண்ணன் அழைத்தான்.

“சாரி ஸார். ஜாதகம் செரியா வர்லை. பர்தரா புரசீட் பண்றதுல விருப்பம் இல்லை. இதோட விட்ருவோம். அம்மாகிட்டயும் சொல்ல சொல்லிருக்கேன்.”

நான் எதுவும் கேட்கும் முன்பே அவன் தொடர்ந்தான் “அப்பறம் அவளைக் கூப்பிட்டு பேசறது, பாக்கறதெல்லாம் இதோட நிறுத்திருங்க. நல்லா இருக்காது.”

அப்போது அவனுடைய குரலில் சிறிதும் இணக்கம் இருக்கவில்லை, மிரட்டல்தொனிதான் ஒலித்தது.

மறுநாள் அவளே அழைத்தாள் “நான் சொன்னதுதானே நடந்துச்சு.”

“உனக்குத் தெரியுமா முன்னாடியே?”

“ரொம்ப முன்னாடியே தெரியும். யாருக்கும் அவன் என்னைக் கட்டித்தர மாட்டான்.”

“ஏன்?”

“என்னோட சம்பளம்.”

ஒருகணம் நிதானித்தேன். இப்படியுமிருக்குமா?

“தெரிஞ்சும் நீ ஏன் ஒத்துக்கறே? புடிச்சவனை கட்டிக்க வேண்டிதுதானே?”

“முடிஞ்சா முன்னாடியே செஞ்சிருக்க மாட்டனா? அதெல்லாம் அவன் விடமாட்டான். நீ வேற யாராச்சும் நல்ல பொண்ணா பாத்துக்கோ. ஆல் தி பெஸ்ட்.”

அதன் பிறகு ஓரிருமுறை பேச முயன்றபோது அவள் பதிலளிக்கவில்லை. அதன் பின் நானும் விட்டுவிட்டேன். இப்போதும் அவள் அப்படியேதான் இருக்கிறாளா?

எஸ்பிஎஸ் துணிக்கடை வாசலில் கிடந்த நாற்காலியில் சாய்ந்திருந்தார் பாலு ஐயா. வெள்ளைத் துண்டை விசிறி கொசுவை விரட்டியவரின் கண்கள் மூடிக் கிடந்தன. துணிமூட்டையை சைக்கிளில் கட்டி ஊர் சுமந்த நினைவுகளில் ஆழ்ந்திருப்பார். இன்று வியாபாரம் வளர்ந்து பிள்ளைகள் தலையெடுத்து பேரப் பிள்ளைகள் குளிரூட்டிய பிரமாண்ட கடைகளில் வேர்வை தெரியாமல் முதலாளிகளாகிவிட்டார்கள். அவர் இன்னும் சைக்கிளை விட்டு இறங்கவில்லை. நானும் இப்படித்தான் எனக்கான தனி உலகில் இருந்துகொள்ள பழகிவிட்டேன். இப்போது யாரையும் பார்ப்பதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. என்னால் எல்லோருக்கும் அசௌகரியம் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். பிள்ளைகள்தான் ‘சித்தப்பா, சித்தப்பா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும். அம்மா இருக்கும் வரை இங்குதான். கோவையிலேயே தங்கிவிட அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குமே அவளைவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் சகோதரர்கள் மனைவியரோடு சேர்ந்து என்னவோ பேசிக்கொள்கிறார்கள். கிசுகிசுக்கிறார்கள். அம்மாவும் எதையோச் சொல்ல நினைக்கிறாள். ஆனாலும் சொல்லாமல் புழுங்குகிறாள். ரவியின் பிள்ளையும் தலையெடுத்துவிட்டான். ஜாதகம் எடுக்கவேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். எடுக்கத்தானே வேண்டும். அவனுக்கேனும் வயதில் வாய்க்கட்டும் வாழ்க்கை. இல்லையென்றால் என்னைப்போல அவமானங்களைச் சுமந்துகொண்டு சிரிக்கவேண்டும்.

வடவள்ளியில் தெரிந்த குருக்கள் ஒருவர் சொன்னதாக சித்தி ஒரு ஜாதகத்தைப் பார்த்தாள். பொருத்தம் கூடி வந்திருக்கிறதென்றும் மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு ஒருமுறை சந்தித்துப் பேசினால் பரவாயில்லை என்றும் அவர்கள் அபிப்ராயப்படுவதாக சித்திதான் சொன்னாள் “சாய்பாபா கோயில்ல பாக்கலாம்னு சொல்றா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சு அப்பிடியே போய்ட்டு வந்துடேன்டா” என்று சொன்னபோது நானும் மறுக்கவில்லை. “சமத்தா நடந்துக்கோ. எது கேட்டாலும் பல்லக் காட்டி சிரிக்காதே. சுருக்கா பதில் பேசு” அவளுக்குள் இருக்கும் பயத்தை புரிந்துகொண்டேன்.

கோயிலில் செவ்வாய் கிழமை என்பதால் கூட்டம் அதிகமிருக்கவில்லை. பள்ளியிலேயே முகத்தைக் கழுவி லேசாக ஒப்பனை செய்து வந்திருந்தேன் என்றாலும் மறுபடியும் முகம் கழுவித் துடைத்தேன். லேசாக விபூதி இட்டுக்கொண்டு பளிங்குத் தரையில் சம்மணமிட்டு காத்திருந்தேன். கற்பனை வரப்போகிறவளின் உருவத்தைத் தீட்டுவதை தடுக்க முடியவில்லை. தையல் வகுப்பு நடத்துகிறாள். சில வருடங்களுக்கு முன்பு நிச்சயமாகி கல்யாண நாளன்று திருமணம் நின்றுபோய்விட்டது. மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணைப் பணத்தை உடனே கேட்டதாக காரணம் சொன்னார்கள். அதைக் குறித்து விசாரித்து என்னவாகப் போகிறது? அதன் பிறகு திருமண ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாதவள் இப்போதுதான் சம்மதித்திருப்பதாக சித்தியிடம் சொல்லப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஒருவரின் நியாயம் இன்னொருவரின் நியாயமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அலைபேசி ஒலிக்க பரபரப்புடன் எழுந்தேன். காதில் வைத்தபடி வெளியில் வந்தேன். வாகன நிறுத்தத்தின் அருகில் நின்ற இருவர் என்னை நோக்கி வந்தனர். நடுத்தர வயது பெண்மணியும் அவரைவிட சற்று இளையவராக ஒரு ஆணும். இவர்களா?

“கணக்கு வாத்தியார்?” தயக்கத்துடன் அவர் கேட்டபோது உறுதியாயிற்று. அப்படியென்றால் பெண்ணை அழைத்து வரவில்லையா?

“இவங்கதான் பொண்ணோட அம்மா. நான் இவங்க தம்பி.”

அம்மா என்னை பார்வையால் அளந்தபடியே நின்றாள். சாயமேற்றப்பட்ட கூந்தல். மல்லிகைச் சரம். தடித்த சட்டமிட்ட கண்ணாடிக்குப் பின்னே கூரிய பார்வை. இறுகிய கன்னக் கதுப்புகள். சிறிதும் இணக்கமில்லாத முகபாவம்.

பள்ளிக்கூடம், வேலை, தினசரி ரயில் என்று அவர்தான் விசாரித்தபடியே நின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் எதற்கு இந்த வேடிக்கை என்ற எண்ணம் எழுந்தது.

“பொண்ணைக் கூட்டிட்டு வர்லிங்களா?”

“அவ எதுக்கு வரணும்?” முதன்முறையாக அம்மா பேசினாள்.

“அவங்க என்னைப் பாக்க வேண்டாமா?”

“அதெல்லாம் தேவையில்லை. நான் பாத்தா போதும்.”

“நான் பாக்க வேண்டாமா?”

“முடிவாச்சினா பாக்கலாம். அதுக்குள்ள எதுக்கு?”

திகுதிகுவென எரிந்த கொப்பரைத் தீயை ஏறிட்டேன். இது மண பந்தத்துக்கான ஏற்பாடு போலத் தெரியவில்லை. சதுரங்க விளையாட்டு போல அவரவர் திறம் காட்டும் தருணம்.

“சரி. எல்லாத்தையும் விசாரிச்சாசு. ஜாதகமும் பாத்தாச்சு. நேர்ல பாக்கணும்னு சொல்லி பாத்தாச்சு. எப்ப முடிவு பண்ணுவீங்க?”

“இப்பதானே பாக்கறோம். முடிவு பண்ணலாம். கொஞ்ச நேரம் வேணுமில்லை.உள்ளே போயிட்டு வந்தர்றோம்.”

 இருவரும் உள்ளே நடந்தனர். எனக்கு சிறிதும் நம்பிக்கை எழவில்லை. ‘நான் பாத்தா போதும்’ என்று சொன்னபோது ‘உங்களையா கட்டிக்கப் போறேன்’ என்று கேட்க நினைத்ததை எண்ணிப் பார்த்துச் சிரித்தேன். கேட்டிருக்கவேண்டும். தப்பெதுவுமில்லை. கோயில்களுக்குரிய பரபரப்பும் சந்தடியுமின்றி நிறைந்த அமைதி கூடிய கோயிலில் நான் மட்டும் இப்படி தவித்துத் தத்தளித்து நிற்கிறேன். பற்றுகோலின்றி காற்றில் நிலைதடுமாறி அலைந்தபடியிருக்கிறேன்.

நெற்றியில் விபூதிக் கீற்றும் கையில் பிரசாதத் தொன்னையுமாய் இருவரும் வந்தனர். கல்கண்டு சாதம்.

“எடுத்துக்கறீங்களா?” அவர் தொன்னையை நீட்டினார்.

“வேண்டாங்க. நீங்க சாப்பிடுங்க” நான் தலையாட்டியபடியே அம்மாவின் முகம் பார்த்தேன்.

“தப்பா நெனக்காதீங்க. ரொம்ப வயசான மாதிரி தெரியறீங்க” விரல்களில் சாதத்தை எடுத்து வாயில் போட்டாள். “எம் பொண்ணு கூட நின்னீங்கன்னா ஹஸ்பண்ட் மாதிரி தெரியாது.”

பீறிட்ட ஆத்திரத்தை அடக்கியபடி சிரித்தேன் “வயசு நாப்பத்தி அஞ்சுன்னு தெரிஞ்சுதானே வந்தீங்க. இதான் நான். நீங்க இன்னும் யூத்தா பாக்கறீங்க போல. ஆல் தி பெஸ்ட்.”

அவள் தொன்னையிலிருந்த மீதி பிரசாதத்தை வழித்து வாயில் போட்டாள்.

சுப்ரமணியர் கோயிலில் நடை சாத்தியிருந்தது. இதற்கு மேல் யார் வரப்போகிறார்கள்? படியில் அமர்ந்தேன். வெம்மையுடன் காற்று. அரசமரத்தில் இலைகளின் சலசலப்பு. இன்னும் ஓரிரு நாட்களில் பாதாளச் சாக்கடைக்காக வெட்டிவிடுவார்கள். இத்தனை வருடங்கள் ஓங்கி நின்ற அடையாளத்தை அப்படியே அகற்றிவிடுவார்கள். மனிதர்களையும் இப்படி வேரோடு பிடுங்கி அகற்ற முடிந்தால் துன்பமில்லைதான்.

வாசற்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். நிலைப்படி விளக்கு இன்னும் எரிகிறது. வழக்கமாய் அணைத்துவிடுவாளே? செருப்பைக் கழற்றும்போது பேச்சுச் சத்தம் காதில் விழுந்தது.

“இத்தனை நாள் பரவால்லே. இப்ப ரெண்டுமே வயசுக்கு வந்த பொண்ணுங்க. சித்தப்பா சித்தப்பான்னு ஒட்டிக்குதுங்க. வெவரம் தெரியாது. நமக்கு இவனப்பத்தி தெரியும்னாலும் சரியா இருக்காதில்ல. சொல்றதுக்கு யோசனையாதான் இருக்கு. அவனாப் புரிஞ்சிட்டா தேவலை. நீதான் எடுத்துச் சொல்லணும்” சுந்தரின் குரல்தான். அப்படியே நின்று கேட்க எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றித்தான் பேச்சு. நேரடியாகவே தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அம்மா கட்டிலில் அமர்ந்திருக்க சுந்தர் அருகிலும் ரவி காலடியிலும். சியாமளாவும் மஞ்சுவும் சோபா அருகே தரையில். எனக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது.

“சாதம் போடட்டுமா?” சுரத்தில்லாமல் அம்மா கேட்டபோது தலையாட்டினேன்.

“சாப்புடறா” சுந்தர் சற்று உரக்கச் சொன்னான்.

“என்னவோ சொல்லணும்னு வெயிட் பண்றீங்க. சொல்லுங்க. அப்பறமா நான் சாப்பிட்டுக்கறேன்” நான் முகத்தைத் துடைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

“நீ தப்பா எடுத்துக்காதடா. உனக்கே தெரியும். அதான்…” வாசு முகத்தை ஏறிட்டு பேச முனைந்தபோது அம்மா கையை உயர்த்தினாள்.

“இங்க வாடா” அழைத்தாள்.

எழுந்து அருகில் சென்றேன். சுந்தர் எழுந்து நகர்ந்தான். உட்கார்ந்ததும் என் முகத்தைப் பார்த்தாள் “இனிமே நீ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்க வேணாம். அவங்களே பாத்துப்பாங்க. வேற யாருக்குமே இங்க எடுக்க வேணாம். ஸ்கூல்ல என்னமோ பண்ணிக்கோ. இங்க வேண்டாம். புரிஞ்சுதா?”

பெறாவிட்டாலும் என் பிள்ளைகள் அவர்கள். ஆனாலும் நான் தனியன். ஆண் எனும் அச்சம். சரிதான், யாரிடமும் எதையும் நிரூபிக்க முடியாது. “அவ்ளோதானா?”

“ரூமைக் காலி பண்ணியாச்சு. இங்கதான் இனிமேல. மேல போ வேணாம்.”

இது வெகுநாட்களாக நானே யோசித்துக்கொண்டிருப்பதுதான். “சரி. வேற.”

“நீங்க எதுவும் தப்பா நெனக்காதீங்க. நாலுபேர் நாலு விதமா…” சியாமளாவைத் திரும்பி பார்த்தேன். அப்படியே நிறுத்திக்கொண்டாள்.

“சரிடா நேரமாச்சு. நீ சாப்பிடு. அம்மா நீயும் தூங்கு. நேரமாகுது. நாளைக்கு சீக்கிரமா கௌம்பணும்” சுந்தர் என் தோள்களில் தட்டிவிட்டு படிகளில் ஏறினான். மூவரும் தயங்கியபடியே மேலேறினார்கள். யாரையும் நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. அம்மாவும் தரையைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். மேலுத்தட்டோர மருவிலிருந்த ஒற்றை முடி மூச்சின் வேகத்தில் அசைந்தது.

“படுத்துக்கம்மா” நான் எழுந்து தரைக்கு நகர்ந்தேன். அறையிலிருந்த ஒற்றைப் பாய், தலையணை, போர்வை, உடைகள் இருந்த பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாம் அவள் கட்டிலுக்குக் கீழே கிடந்தன.

ஒன்றும் சொல்லாமல் படுத்தவள் மேல் போர்வையை போர்த்தினேன்.

சுற்றும் மின்விசிறியை வெறித்தபடியே சொன்னாள் “என்னோட புள்ளதான்டா நீ?”

புரியாதவனாய் எழுந்து அருகில் அமர்ந்தேன். “நா சொல்றதக் கேப்பியா. போயிருடா. எங்கயாவது போய் எப்பிடியோ இருந்துக்கோ. இந்த வீட்ல இருக்காதே. இத்தோட போகட்டும். அவங்க வேற எதாச்சும் தப்பா சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுடா.”

சொல்லிவிட்டு இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதுபோல புரண்டு சுவரைப் பார்த்தபடி படுத்தாள். கண்ணோரமாய் நீர் வழிந்தது.

எழுந்தேன். விடிவிளக்கை எரியச் செய்துவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

0

 

 

 

 

 

 

முதல் சிறுகதை அனுபவம்

 ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’



‘குதிரை வீரன் பயணம்’ ஆசிரியர் – யூமா வாசுகி, முகவரி, டிமாண்டி வீதி, திருப்பூர்.

கணையாழியில் வெளியாகியிருந்த சிறு விளம்பரம் கவனத்தை ஈர்த்தது. திருப்பூரிலிருந்து சிற்றிதழ் என்பது ஆர்வத்தை உண்டாக்கியது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்த அந்த முகவரியைத் தேடிச் சென்றேன். மூன்று தளங்களைக் கொண்ட கட்டடம். பெயர் பலகைகள் எதுவுமில்லாததால், இந்த இடம்தானா என்று சந்தேகத்துடன் நின்றிருந்தபோது ஒரு பதின்வயது சிறுவன் விறுவிறுவென இறங்கி வந்தான். ‘என்ன வேணும்ண்ணே?’ சிரித்தபடியே கேட்டான். கையில் சிறிய வயர்கூடை. ‘இங்க யூமா வாசுகின்னு இருக்காங்களா?’ என்று சொல்லி முடிக்கும் முன் மேலே கைகாட்டியபடியே நகர்ந்தான் ‘ஒசக்க இருக்காங்க.’ அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால் கையை மேலே காட்டியதை வைத்துக்கொண்டு மேலே ஏறினேன். மொட்டை மாடியை அடைந்தேன். பளீரென்று வெளிச்சம் இறைந்த மேசையின் மீது இளைஞர் ஒருவர் குனிந்து வரைந்துகொண்டிருந்தார். இன்னொரு மேசையில் வெள்ளைத் தாளில் வரைந்த எழுத்துகளும், லச்சினைகளும். எல்லாமே பனியன்களில் அச்சிடக்கூடிய படங்கள், எழுத்துகள். கருப்பு மையில் கச்சிதமாக வரையப்பட்டிருந்த தாள்கள். வரைந்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கும்வரை காத்திருந்தேன்.

“வாங்க. என்ன வேணுங்க?” வசீகரமான சிரிப்பு. காட்ராய் துணியிலான நீலச் சட்டை அவருக்கு வெகு பொருத்தமாயிருந்தது.

“யூமா வாசுகி?” தயக்கத்துடன் கேட்டேன். கழுத்தில் புரண்ட தலைமுடியும் சிரிக்கும் கண்களும் பாடகர் ஹரிஹரனை நினைவுபடுத்தின.

“அதோ, அங்க இருக்கார் பாருங்க” மங்கிய வெளிச்சம் கொண்ட மொட்டை மாடியின் வடமேற்கு மூலையைக் காட்டினார். நாற்காலியில் அமர்ந்திருந்தவர் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மெல்ல நெருங்கினேன். சட்டென்று கால்களை கீழிறக்கிக்கொண்டு முகம் பார்த்தார்.

“நீங்கதான் யூமா வாசுகியா?”

“ஆமா. நீங்க?” தயங்கும் குரல்.

“கணையாழியில விளம்பரம் பார்த்தேன்” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

திருப்பூரில் இலக்கிய ஆர்வமிக்க ஒருவரை சந்திப்பதில் என்னைப் போன்றே அவருக்கும் மகிழ்ச்சி. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடல். விடைபெற்றுச் செல்லும்போது ‘குதிரை வீரன் பயணம்’ முதல் இதழை அளித்தார்.  அடிக்கடி சந்திப்புகள் தொடர்ந்தன. யூமா வாசுகி எனும் சிற்றிதழ் ஆசிரியரை, கவிஞரை, ஓவியரை, எழுத்தாளரை அறிந்துகொண்ட நாட்கள். என்னுடைய சில கவிதைகளைக் கொடுத்தேன். வாசித்தார். ‘உங்களால நல்லா கதை எழுத முடியும்னு தோணுது” என்று அவர் சொன்னது அப்போது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.  

இரண்டு வாரத்துக்குப் பிறகு, ‘குதிரை வீரன் பயணம்’ இரண்டாவது இதழ் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் ஒரு சிறுகதை எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘எழுதித்தான் பார்க்கலாமே’ என்ற எண்ணம் எழுந்தது.

சில நாட்களுக்கு முன்பு நண்பரின் வீட்டில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் முதியவர் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி அறிந்துகொண்ட செய்திகளையும் அவரைக் கவனித்ததில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் வைத்துக்கொண்டு கதையை எழுத ஆரம்பித்தேன்.  ‘வெயில் தாளமாட்டாமல் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டான் அம்மாசி’ என்று முதல் வரியை எழுதியதுமே கதை இயல்பாக விரியத் தொடங்கியது.  உற்சாகத்துடன் எழுதி முடித்தேன்.

யூமாவுக்கு கதை பிடித்திருந்தது. சூழலும் உரையாடல்களும் கச்சிதமாக அமைந்திருப்பதாய் சொன்னவர் கதைக்கு ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ என்று தலைப்பிட்டார்.

பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வழக்கம் இருந்தது. எவர்சில்வர் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு அதற்கான தேவை இல்லாமல் போயிற்று. ஈயம் பூசும் அம்மாசியைச் சுற்றிய உலகமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருந்தபோதும் அவர் அப்படியேதான் இருந்தார், ‘விவரமில்லாத’வராக. திருப்பூரில் பனியன் தொழில் வளர்ந்து பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகி பொருளாதார சுதந்திரம் உருவானபோது தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாசி போன்ற ‘குடும்பத் தலைவர்’களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலை ஏற்பட்டது. பெண்கள் தங்களது எதிர்கால வாழ்வுக்கான பொருளாதாரத் தேவைகளை தாங்களே திட்டமிட்டுச் சேர்க்க முடிந்தது. திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் ஏற்படுத்தித் தந்த இந்த வாய்ப்பு குடும்ப அமைப்புகளிலும் சமூகச் சூழலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த மாற்றங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு தன்னைப் பொருத்திக்கொள்ளும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’.

 அறிவியலும் தொழில்நுட்பமும் வாழ்வை நவீனமயமாக்கும்போது முதலில் பாதிக்கப்படுபவர்களும் பிறகு வேலையற்றுப் போகிறவர்கள் கைவினைஞர்களே. ஆனால், புதிய சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு வாழ்வின் போக்கில் அவர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை கச்சிதமான சூழலில் இயல்பான உரையாடல்களுடன் விவரிக்கும் இந்த முதல் கதையை இப்போது வாசிக்கும்போதுகூட நிறைவாகவே உள்ளது.

( தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை )

என்.ஜெயராம் எனும் அறியப்படாத மேதை

இயற்கையின் இசையும் நிழலின் ஒளியும்

(காலச்சுவடு, ஜூலை 2023 இதழில் வெளியான கட்டுரை)



கானுயிர் படங்கள் என்றதும் அனைவரும் யோசிப்பது யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம், காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பேருயிர்களின் படங்களே. உலகின் மிகப் புகழ்பெற்ற கானுயிர் படக் கலைஞர்கள் வெவ்வேறு கோணங்களில் பல பேருயிர்களை ஒளிப்படங்களாக தந்துள்ளனர். எம்.கிருஷ்ணனின் யானைகளும், டி.என்.ஏ.பெருமாளின் ஆந்தைகளும் உலக அளவில் கவனம் பெற்ற படங்கள். இந்த பேருயிர்களுக்கு இணையாக வண்டுகள், பூச்சிகள், தவளைகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட எண்ணற்ற சிறு உயிர்களையும் கவனிப்பதும், படமெடுப்பதும், காட்சிப்படுத்துவதும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒளிப்படமேதைகளில் ஒருவர் என்.ஜெயராம்.    

கேமரா தொழில்நுட்பங்கள் பெருமளவு வளர்ந்திருக்காத, படச் சுருள்களைக்கொண்டு படமெடுத்த காலத்தில் சிறு உயிர்களை படமெடுப்பது அத்தனை சுலபமல்ல. சரியான கோணமும், ஒளி அளவும் அமையவேண்டும். அவ்வுயிர்களை தொந்தரவு செய்யாமல் நெருங்கி துல்லியமாகப் படம் பிடிக்கும் ஆற்றல் மிக்க லென்சுகளோ பிற உபகரணங்களோ இல்லாத நிலை. குறிக்கோளை அடைய போதுமான கருவிகளோ வாய்ப்புகளோ இல்லாதபோது சாதாரணமானவர்கள் அவற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். சாதனையாளர்களோ அவற்றை தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். தன்னிடமிருந்த கேமராவையே நுண்ணுயிர்களைப் படம்பிடிக்கத் தகுந்தபடி கட்டமைத்துக்கொண்டார் ஜெயராம். அவ்வாறான அர்ப்பணிப்பும் தளரா முயற்சியுமே உலகுக்கு அவரை அடையாளம் காட்டியது. இளம் வயதிலேயே சர்வதேச அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெறச் செய்தது.

ஜெயராமின் தந்தை இம்பீரியல் வங்கி(இப்போதைய ஸ்டேட் வங்கி)யில் அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட வட மாநிலங்களில் பணியாற்றியவர். எனவே, சிறு வயதிலேயே அடர்ந்த காடுகளுக்குள் பயணம் செல்லும் வாய்ப்பு இருந்தது. அதுவே காடுகளையும் கானுயிர்களையும் நோக்கி அவரை ஈர்த்தது. அவருடைய தந்தையார் பதினான்கு வயதில் ஒரு அக்ஃபா கேமராவை பரிசளித்தபோது தொடங்கிய அவருடைய ஒளிப்படப் பயணம் அறுபது ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த அறுபது ஆண்டுகளிலும் காடுகளையும் கானுயிர்களையும் தவிர அவர் வேறெதையும் திரும்பிப் பார்க்கவில்லை, திருமண வாழ்க்கை உட்பட.

தொடக்கத்தில் திருவிழாக்களையும் மனிதர்களையும் படம் பிடித்த ஜெயராமின் படங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடியும். பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், தும்பிகள் உள்ளிட்ட சிறு உயிர்கள் முதலாம் பிரிவில் அடங்கும். யாரும் கவனிக்காத, கண்டுகொள்ளாத சிறு உயிர்களை ஜெயராம் உற்று நோக்கினார். இலைகளிலும் மரக் கட்டைகளிலும் பாறைகளின் மீதும் ஊர்ந்தும் ஒட்டிக்கொண்டுமிருந்த அந்த உயிர்களை கவனித்தார். சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மைகளை ஆராய்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட தன் குஞ்சுகளை முதுகில் சுமந்து செல்லும் தேள், சருகைப் பற்றியபடி இணைசேரும் தும்பிகள், தலையிலும் முதுகிலும் மகரந்த மஞ்சளை அப்பிக்கொண்டு சிறு பூக்களின் மேல் அமர்ந்திருக்கும் கருவண்டு, சிறு வெண் மலரில் எறும்பு போன்ற கண்களுடன் பளிங்கு மேனிகொண்ட சிலந்தி, முத்தாரம் போல மரப்பட்டை மீது முட்டைகளிட்டிருக்கும் பொன்வண்டு உள்ளிட்ட அவரது அபாரமான படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. இதுபோல் இன்னொன்று இல்லை என்று சொல்லுமளவுக்கு சிறப்பம்சம் மிகுந்தவை. சிலந்தியின் தலையிலும் கால்களிலும் உள்ள பொடி ரோமங்களைக்கூட அந்தப் படத்தில் பார்க்க முடியும். தும்பியின் மூங்கில் போன்ற பளபளக்கும் உடலையும் அதன் கண்ணாடி இறகுகளையும் துல்லியமாகக் காட்டும். இலைகளிலும் பூக்களிலும் சருகுகளிலும் மரப்பட்டைகளிலும் வாழும் இந்த உயிர்களை சாதாரணமாகக் காண்பதே கடினம். ஆனால், அதைக் காண்பதோடு மிகச் சரியான கோணத்தில், தேவையான ஒளியுடன் படமெடுப்பது பெரும் சவால். ஜெயராமின் இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ‘இது எப்படி சாத்தியம்?’ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

அவரது படங்களின் இரண்டாம் பிரிவில் வண்ணத்துப் பூச்சிகளையும் தவளைகளையும் சேர்க்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் பருவமழையைத் தொடர்ந்து தவளைகள் இனப்பெருக்கம் செய்யும் சமயத்தில் ஜெயராம் எடுத்த படங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. அவரளவுக்கு தவளைகளை துல்லியமாகவும் அழகாகவும் இன்னொருவர் படமெடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தாவரத்தின் சிறிய தண்டின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு எட்டிப் பார்க்கும் தவளை இவருக்காகவே அப்படியொரு கோணத்தில் அமர்ந்திருந்ததோ என்று யோசிக்க செய்யும். பச்சைப் பசேலென பாசி படர்ந்த பாறையின் மீது தன் உடல்நிறத்தையும் பச்சையாக மாற்றிக்கொண்ட ஒரு தவளை, உப்பு மூட்டை தூக்குவதுபோல இணையை முதுகில் ஏற்றியிருக்கும் ஒரு தவளை, உலர்ந்த இலைகளின் மீது நிறம் மாறிய பழுப்புத் தவளை, செடியின் நுனியிலிருந்து தாவத் தயாராக உடலை வளைத்து நிற்கும் தவளை, பச்சைப் பாம்பின் வாயில் கவ்வுண்ட சிறு தவளை என எண்ணற்ற தவளைகளின் படங்கள் ஜெயராமின் முத்திரைகொண்டவை. ஓரிடத்தில் நிற்காமல் நீரிலும் நிலத்திலுமாய் தாவித் திரியும் இயல்புகொண்ட தவளைகளை இத்தனை துல்லியமாக படமெடுக்க பொறுமையும் வேண்டும், அவற்றைக் குறித்த ஆழமான அறிவும் வேண்டும். ஜெயராமிடம் இவை இரண்டும் இருப்பதால்தான் தவளைகளுடம்கூட அவரைக் கண்டு வியந்து நின்றுவிடுகின்றன.

பட்டாம்பூச்சிகளை படமெடுப்பதும்கூட அதேயளவு சவாலான காரியம். அன்றாடம் கண்ணில்படும் பட்டாம்பூச்சிகளிலிருந்து அபூர்வமான வகைகள் வரை அவர் படமெடுத்திருக்கிறார். இறகுகளின் வண்ணங்களையும் வடிவத்தையும் உணர்கொம்பின் வளைவுகளையும்கூட அவரது படங்களில் தெள்ளத் தெளிவாகப் பார்க்கமுடியும். அபூர்வமான சிறு பறவைகளையும் படமெடுத்திருக்கிறார். திராட்சைப் பழ அளவுகொண்ட ஒரு காட்டுப் பழத்தை வாயைத் திறந்து கவ்வப் பார்க்கும் குருவியின் படம் ஒரு எடுத்துக்காட்டு.

அவரது மூன்றாவது வகைப் படங்கள் நிலக்காட்சிகள். தொடர்ந்து பல ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு வகையான நிலங்களை மலைகளை சமவெளிகளை காடுகளை கவனித்து வந்திருக்கிறார். வளர்ச்சியின் பெயரால் மெல்ல மெல்ல இவை யாவும் அழிவுக்கு உள்ளாகின்றன என்று உணர்ந்தவுடன் அவற்றை படமெடுக்கத் தொடங்குகிறார். அவருக்கு மிகப் பிடித்தமான நீலகிரி மலைகளையும் சிகரங்களையும் மஞ்சுப் பொதிகள் மிதக்கும் சரிவுகளையும் பள்ளத்தாக்குகளையும் படமெடுக்கிறார். சல்லாத்துணி போன்ற பனிமூட்டம்

அந்தியின் பொன்னொளியிலும் விடியலின் சாம்பல் வெளிச்சத்திலும் வெவ்வேறு தோற்றங்காட்டும் அவரது நிலக்காட்சிகள் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களுக்கு இணையானவை. மலம்புழா அணை நீரின்றி வற்றிய பருவத்தில் தேக்கத்தின் நடுவே பசும் புல்வெளி. கால்நடைகள் மேயும் அந்திப்பொழுது. கதிரொளி பொன்திட்டுகள் போல் அங்கங்கே இறைந்திருக்கும் காட்சியை அவர் எடுத்திருக்கும் விதம் இன்னொருவர் யோசிக்கக்கூட முடியாத ஒன்று. உதகையின் புகழ்பெற்ற முக்குருத்தி புல்வெளிகளும் மடிப்புகளும் சிகரங்களும் அவரது படங்களில் மேலும் எழில் கொண்டிருக்கும் விநோதம் புரிபடாத ஒன்று. பொன்னொளியில் மிளிரும் பாறைகளும் குன்றுகளுமாய் ஹம்பியில் அவர் எடுத்திருக்கும் படங்கள் நினைவில் உறைந்திருப்பவை.   

திறன்மிக்க நல்ல காமிராவோ கைபேசியோ கையிலிருந்தால் யாரும் படமெடுக்க முடியும். ஜெயராம் இந்தக் கூற்றை மறுக்கவில்லை. ஆனால், ஓவியத்தைப்போல ஒரு காட்சியை காமிராவின் வழியாக படைத்துக் காட்டும்போதுதான் அது கலையாக மாறுகிறது என்கிறார். ஒரு விலங்கையோ மரத்தையோ பறவையையோ பார்த்தவுடன் அதை அப்படியே படமெடுப்பதில் எந்த பயனும் இல்லை. படத்துக்கான சரியான கோணத்தை யோசிக்கவேண்டும். போதிய வெளிச்சமும் தேவைப்படும் நிழலும்கூட அமையவேண்டும். எந்தத் தருணத்தில் விசையை சொடுக்கவேண்டும் என்ற அனுபவம் முக்கியம். இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு படத்தை சாதாரணப் படத்திலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன.

ஜெயராம் தன்னை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால் உலகிலுள்ள எண்ணற்ற கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவராகவே நின்றிருப்பார். அப்படியொரு எல்லையில் தன்னை நிறுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவரது இயல்பும் அவ்வாறானதில்லை. படமெடுக்கும் ஒவ்வொரு உயிரைக் குறித்தும் அவர் கசடறக் கற்றுக் கொண்டார். விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்து உரையாடி அறிவை சேர்த்துக்கொண்டார். தீவிரமான வாசகர் என்பதால் ஆழமாக வாசித்தார். உயிர்களின் இயல்பு, அவற்றின் வசிப்பிடம், குணநலன்கள் என எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். இதற்காக அவர் தாவரவியல், பூச்சியியல், உயிரியல், விலங்கியல், இயற்கை அறிவியல், வகைப்பாட்டியல் (taxonomy) உ.ள்ளிட்ட அறிவியல் துறைகளை ஆழக் கற்றுத் தெளிவுகொண்டார். தேடித் தேடிச் சேர்த்த இத்தனை அறிவுடன் இயற்கையாகவே அவருக்குள் அமைந்திருக்கும் ஒளி, நிறம், நிழல் குறித்த நுண்ணுணர்வும் சேர்ந்து அவரது படங்களை ஒப்பற்றதாக்கின.

அவரது ஒரு படம் என்பது அந்த குறிப்பிட்ட உயிரைக் கண்ணில் காட்டும் பணியை மட்டும் செய்வதில்லை. அந்த உயிரின் வாழ்நிலை, இயல்பு, இயற்கையுடனான அதன் உறவு ஆகிய ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டும் அறிவியல் ஏடாகவும் விளங்குகிறது. துறைசார் விஞ்ஞானிகளுக்கு அரிதான தகவல்களை தரும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இந்த வகையில் ஜெயராமின் ஒளிப்படங்கள் சூழல் பாதுகாப்புக்கும் துணைபுரிகின்றன.

ஜெயராம் ஒரு தீவிர வாசகர். அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் அரிதானவை. விலைமதிப்பற்றவை. ஒளிப்படக் கலை தொடர்பான உலகப் புகழ்பெற்ற மேதைகளின் நூல்கள் அவரிடம் இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், ரெம்பிரான்ட், வான்கா போன்ற மேதைகளின் ஓவியங்கள் அடங்கிய புத்தகங்கள் அவரிடம் உண்டு. ஒரு ஓவியன் நிறத்தையும் ஒளியையும் எவ்விதம் தனது ஓவியத்தில் பயன்படுத்துகிறான் என்பதை ஒளிப்படக் கலைஞன் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதை எப்போதும் அவர் வலியுறுத்துவார். தோரே அவருக்குப் பிடித்த எழுத்தாளர். ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதுண்டு. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் இசையிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் தனது ‘மேக்’ கனிணியில் சேர்த்து வைத்திருக்கும் இசைத் தொகுப்புகள் மிக அபூர்வமானவை. தொடக்கத்தில் மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஜெயராம் பிறகு இந்திய செவ்வியல் இசையை ரசிக்கலானார். இசை கேட்பதற்கென வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளை வைத்திருந்தார். குறிப்பிட்ட இசையை குறிப்பிட்ட பெருக்கியின் வழியாக மட்டுமே கேட்கவேண்டும் என்று குறிப்பிடுவதுண்டு.

தத்துவம், இலக்கியம், ஓவியம், இசை மூன்றும் கலந்த அபூர்வமான ரசனைதான் அவரது ஒளிப்படங்களில் அமைதியுடனும் ஆழத்துடனும் உறைந்துள்ள ரகசியச் சிறப்பு. வேறெவரும் அதை நகல்செய்துவிட முடியாது.

1975ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் அவரது ஒளிப்படங்கள் நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் ஜெயராம், சரியாக படம் வாய்க்கும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே காமிராவை சொடுக்குவார். கோணமும் ஒளியும் வசமாக அமையாதென்று தெரிந்தால் யானையோ புலியோ குறுக்கே நடந்தால்கூட கண்டுகொள்ளமாட்டார். அதே நேரத்தில் ஒரு பட்டாம்பூச்சி பூவில் அமரும் தருணத்துக்காக மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பார். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்பு அவர் தன் படங்களை ஒளிவில்லைகளாக்கி (slides) காட்சிப்படுத்துவதுண்டு. கேரளாவில் அவரது ஒளிவில்லைக் காட்சிகள் மிகப் பிரபலமானவை.

படங்களை எடுப்பதில் மட்டுமல்லாமல் அதை அச்சிடுவதிலும் சட்டமிடுவதிலும்கூட மிகக் கவனமெடுத்துக்கொள்வார். கேரளாவிலிருந்து தருவிக்கப்பட்ட மரங்களைக்கொண்டு அவரது படச் சட்டங்களை செய்துகொடுக்கவென தச்சர் ஒருவர் உண்டு. அதேபோல படங்களை அச்சிடுவதற்கான தாளையும் துணிச்சுருளையும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்வார். இவ்வாறு ஒவ்வொரு படத்துக்கும் அவர் தனது உழைப்பைத் தவிர செய்யும் செலவுகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படமாட்டார். செய்யும் காரியம் திருத்தமாகவும் சிறப்பாகவும் மட்டுமே இருக்கவேண்டுமென்பதில் அவர் காட்டும் உறுதி நம்பமுடியாதது. தரக்குறைவை எதிலும் அனுமதிப்பதில்லை அவர்.

சூழல் பாதுகாப்புக்கும் சிறு உயிர்களை உலகுக்கு அடையாளம் காட்டிய மேதமைக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் அவர் கண்டுபிடித்த இரு உயிர்களுக்கு ஜெயராமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எறும்பைப் போன்றிருக்கும் ஒரு சிலந்திக்கு ‘மைர்மாக்ளே ஜெயராமணி’ என்றும், அரிய தவளை இனமொன்றுக்கு ‘ராவோர்செரஸ்டஸ் ஜெயராமணி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.   

இயல்பில் அவர் தன்னைப் பற்றி அதிகமும் வெளிப்படுத்திக் கொள்ளாதவர். இத்தனை பெரிய சாதனைகளை செய்திருக்கிறோம் என்ற மிதப்போ எண்ணமோ அவரிடமிருந்து ஒருபோதும் வெளிப்பட்டதில்லை. அவரைத் தேடி வரும் நண்பர்களிடம் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்ற பேரார்வம் உண்டு. எடுத்த படங்களைக் கொண்டு வந்து நண்பர்களிடம் ஆவலுடன் காட்டுவார். அதன் சிறப்பியல்புகளை விளக்குவார். அவர் கோவையில் வாழ்ந்தபோதும்கூட தமிழகத்தைவிட கேரளாவில் அதிகமும் அறியப்பட்டவர். ஒரு சிற்றூரில் நடந்த அவரது படக்காட்சியை கண்டுகளிக்க கேரள முதல்வர் வருகை புரிந்தார். கேரளாவிலும் கர்நாடகாவிலும் உதகையிலும் அவருக்கு நண்பர்கள் ஏராளம். அவர் வருகிறார் என்றால் அவருடன் பயணம் செய்யவும் அவருக்கு உதவி புரியவும் நண்பர்கள் போட்டிபோடுவார்கள்.

இளமையில் மிக வசீகரமான தோற்றம் கொண்டவர் ஜெயராம். பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் இப்போது பார்க்கும்போது ‘அழகன்ய்யா’ என்று சொல்லத் தோன்றுகிறது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நேரம் பார்க்காமல் உரையாடுபவர்.  

கானுயிர் புகைப்பட மேதை டி.என்.ஏ பெருமாள் மீது மிகவும் மதிப்புகொண்டவர் ஜெயராம். அவர்கள் இருவருக்குமான உறவு மிக அபாரமானது. அவரைப் பற்றி புத்தகத்துக்காக பதினைந்து நாட்களுக்கும் மேலாக உரையாடியது ஜெயராமின் அழகிய இல்லத்தில்தான். அந்தப் புத்தகத்தின் எழுத்து வடிவத்தை வாசித்து திருத்தங்களை செய்து தந்தார் ஜெயராம்.

அண்மையில் வெளியான என்னுடைய நாவல் ‘வேங்கை வனம்’ உருவாகக் காரணமானவர் ஜெயராம். சிறிய குறுநாவலாக எழுதியதைப் பார்த்துவிட்டு அதன் விரிவான சாத்தியங்களைக் குறித்து உரையாடி அதற்கான தரவுகளையும் நூல்களையும் தந்துதவினார்.

அவரைக் குறித்த ஒரு நூலை எழுதுவதற்கான எண்ணம் இருந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், செயல்படுத்துவதற்கு முன்பே காலம் முந்திக்கொண்டது. நோய்பட்ட நிலையிலும் ‘சரியாகி வந்தவுடன் தொடங்கிவிடலாம்’ என்று ஆனந்திடம் உறுதியளித்திருந்தார். செல்ல வேண்டிய பயணங்கள், எடுக்க வேண்டிய படங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று திட்டங்களுடன்தான் அவர் சிகிச்சைக்குச் சென்றார். நெடுங்காலம் தன்னையே ஆராதித்திருந்த அன்பரை தன்னுடனே இணைத்துக்கொள்ளும் இயற்கையின் திட்டத்தை அவர் அறிந்திருக்கவில்லை, வேறு யாருமேகூட.

Wednesday 2 August 2023

நிலத்தை எழுதும் கதைசொல்லி - என்.ஸ்ரீராம் கதைகள்





(ஏப்ரல் 2023, சென்னையில் ‘நற்றுணை’ அமைப்பு நடத்திய என்.ஸ்ரீராம் கதைகள் குறித்த கலந்துரையாடல் அமர்வில் வாசிக்கப்பட்ட தலைமையுரை)

அண்மை காலங்களில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் அல்லது அவர்களது எழுத்துகளைப் பற்றி பேசும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக. இது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்துள்ள முக்கியமான ஒரு மாற்றம் என்றே எண்ணுகிறேன்.

ஒரு எழுத்தாளனை இதுபோன்று ஏன் கொண்டாட வேண்டும்? அவன் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படி என்ன அவசியம் நேர்ந்துவிட்டது?

இன்றைய சூழல்தான் அப்படியொரு அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.

நம் வாசிப்புப் பழக்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலகட்டம். புத்தகங்கள் வாசிக்கும் நேரத்தில் கணிசமான பகுதியை இன்று சமூக வளைதளங்கள் எடுத்துக்கொள்கின்றன.

சமூக வலைதளங்களை விட்டு விலக முடியவில்லை. கையிலேயே இருக்கும் உலகம். நொடிக்கு நொடி மாறும் அவசர உலகம். இந்த நொடியில் அனைவரையும் கவனத்தில் ஈர்த்த ஒன்று மறுநொடியில் காணாமல் போய்விடுகிறது. எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் இன்னொரு முக்கியமான விஷயம் வந்த நொடியில் எரிநட்சத்திரம்போல காணாமல் போய்விடுகிறது.

சுஜாதா குறிப்பிட்டதுபோல எல்லாமே ‘ஒரு நிமிட புகழ்’ தான்.

யோசித்துப் பாருங்கள். கடந்த ஒரு வார காலத்தில் சமூக ஊடகங்களில் எத்தனை விஷயங்கள் கடந்து போயிருக்கின்றன? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி. முதல்நாள் பற்றியெரிந்த ஒரு பிரச்சனை அன்று மாலையே காணாமல் போய் வேறான்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சமூக ஊடகங்கள் நம் முன்னால் ஏராளமானவற்றை கொட்டு வந்து கொட்டுகின்றன – செய்திகள், வம்புகள், கிசுகிசுக்கள், புறணி, தகவல்கள், ஊகங்கள் என்று எண்ணற்ற குப்பைகள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை கடந்து செல்லவே நேரிடுகிறது.

வாசிப்புக்கே நெருக்கடி தரக்கூடிய சூழல். எதையும் ஆழமாக வாசிக்க விடாமல் ஒரு வரிச் செய்திகளாக தெரிந்துகொண்டால் போதும் எனும் மனநிலை இன்றைய தலைமுறைகளுக்கு இருக்கிறது.

என்னுடைய நெருக்கமான நண்பர்களில் பலரது வாசிப்புப் பழக்கம் பாதிக்கப்பட்டிருப்பதை நேரடியாகக் காண்கிறேன். 500 பக்க நாவலை ஒரு வாரத்துக்குள் வாசிக்கும் நண்பர்கள் இன்று இரண்டு மாத காலம் ஆகியும் படிக்காமல் வைத்திருக்கிறார்கள். பதிலாக, ‘இவ்ளோ பெரிசா எழுதினா யாரும் படிக்கமாட்டாங்க. சின்னதா 150 அல்லது 200 பக்கத்துலதான் எழுதணும்’ என்று ஆலோசனை வேறு.

சுருக்கமாக சிறியதாக பத்து வரியில எழுத வேண்டும். இதுதான் இன்றைய விதி.

தீவிர இலக்கிய வாசிப்பு என்பதே 500 பேர்களைக்கொண்ட ஒரு சிறிய வட்டம்தான். ரொம்ப காலமாக சொல்லப்படக்கூடிய ஒரு வரையறை. அந்த 500 பேர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அந்த எண்ணிக்கை கூடியதுபோலவே தெரியவில்லை. பதிலுக்கு இன்று ஒரு பதிப்பு என்பது 32 பிரதிகள்தான் என்கிற தொழில்நுட்படி வசதி வேறு.

இந்த 500 பேருடைய வாசிப்புக்கான நேரத்தில் கணிசமான நேரத்தை சமூக வலைதளங்கள் எடுத்துகொள்கின்றன. மீதி நேரத்தில்தான் வாசிக்கவேண்டும். குறிப்பாக இலக்கியம் வாசிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தீவிர இலக்கியம் வாசிக்கவேண்டிய நிலை.

0

ஓரளவுக்கு இன்றைய நவீன இலக்கியச் சூழலும்கூட இப்படியொரு நெருக்கடியை நமக்குத் தருகிறது என்றே சொல்லலாம். அன்றாடம் எண்ணற்ற கதைகள் எழுதப்படுகின்றன. எண்ணற்ற கதைகள் வெளியாகின்றன. அந்தக் கதைகளைப் படியுங்கள் என்ற வேண்டுகோள்கள், அறிவிப்புகள் நமக்கு வருகின்றன. புதிய புதிய எழுத்தாளர்கள், புதிய கதைகள். பல சமயங்களில் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதே சிரமமாக இருக்கிறது.

இன்று வெளியாகிற இணைய இதழ்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.

சொல்வனம், தமிழினி, கனலி, வாசக சாலை, அகழ், வனம், நீலி, அரூ, ஆவநாழி என்று பெரிய வரிசை உள்ளது. இவை தவிர அச்சிதழ்கள் – காலச்சுவடு, உயிர்மை, புரவி, அந்திமழை, தீராநதி உள்ளிட்டவை.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் வண்ணதாசன் (இந்த ஆண்டும் பதிமூன்று கதைகளுடன் புதுத் தொகுப்பு ‘அகிலம்’ வந்துள்ளது) நாஞ்சில்நாடன் (கணக்கே இல்லை. கட்டுரையும் கதையுமாக எழுதிக் கொண்டே இருக்கிறார்) பாவண்ணன் (சத்தமில்லாமல் கதைகளும் தொகுப்புகளும் வந்துகொண்டேதான் உள்ளது) ஆகியோரது எழுத்துகள் இந்த இதழ்களில் வருகின்றன.

ஒருசில நாட்கள் வீட்டில் அடைபட்டிருக்க வேண்டிய நிலைமை வந்தபோது பத்து வருஷத்துக்கு எழுதவேண்டிய ஒட்டுமொத்த கதைகளையும் எழுதிப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் ஜெயமோகன்.

இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரது கதைகளும் இவற்றில்தான் வெளியாகின்றன. நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களது கதைகளும் இங்குதான் வெளிவருகின்றன.

ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஐந்து கதைகள் என்று கணக்கு வைத்தாலும்கூட மாதம் ஒன்றுக்கு ஐம்பது கதைகள் வெளியாகின்ற. வருடத்துக்கு ஐநூறு கதைகள். ஒரு நாளைக்கு ஒரு கதை படித்தாலும்கூட எல்லாவற்றையும் படித்து முடிப்பது சாத்தியமில்லை.

இத்தனை கதைகளுக்கு நடுவில்தான் அபாரமான கதைகளும் எழுதப்படுகின்றன, சாதாரணக் கதைகளும் எழுதப்படுகின்றன. சாதாரணக் கதைகளைப் படித்து வெறுத்துப்போய் அதற்கடுத்து இருக்கும் நல்ல கதைகளைத் தவறவிடும் சாத்தியங்களும் உள்ளன. எண்ணற்ற எழுத்தாளர்கள், ஏராளமான உற்பத்தி – கடுமையான சூழல் இல்லையா?

சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எத்தனை புதிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின என்று நினைவிருக்கிறதா? ஒரு பட்டியலிட்டுப் பாருங்கள். முப்பத்துக்கும் அதிகமாக இருக்கும். முதல் கேள்வி, எல்லாவற்றையும் வாங்க முடியுமா? அடுத்த கேள்வி, வாங்கினாலும் அவற்றுள் எத்தனைத் தொகுப்புகளை படித்து முடிக்க முடியும்?

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம், இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் வருடத்துக்கு ஒரு தொகுப்பு வெளியிடுகிறார்கள். சுஷில்குமார் பாரதி, வைரவன் லா ரெ., கா.சிவா என்று பலரும் உற்சாகத்துடன் எழுதி வருகிறார்கள். கமலதேவி எழுத வந்து ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. 100க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார். ஐந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இத்தனை ஊக்கத்துடன் கதைகளை எழுதவும் புத்தகங்களை வெளியிடவும் சில பதிப்பாளர்களும் காரணமாக இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யாவரும் கரிகாலன். இந்த எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பிக்கும்போதே அவர் தொகுப்புக்கான லே-அவுட்டை தயார் செய்துவிடுகிறார்போல. தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களது தொகுப்புகளை வெளியிடுகிறார். வாசக சாலை பதிப்பகமும் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது.

உண்மையில் மகிழ்ச்சியான ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு புதிய தொகுப்பு என்பது எழுத்தாளனுக்கு சந்தோஷத்தைத் தருவது. இன்னும் எழுதுவதற்கான முனைப்பைத் தருவது.

இதுவரைக்கும் நான் சொன்னது நேரடியான தமிழ்ச் சிறுகதைகளை மட்டும்தான். மொழிபெயர்ப்புகளை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

இதுவரையிலும் சொன்ன சூழல் வாசகனுக்கு மட்டுமானதில்லை. ஒரு எழுத்தாளனுக்கும்தான். சொல்லப்போனால் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால் வாசகனுக்கு நேர்வதைவிட கடினமானது.

ஏற்கெனவே சொன்ன கணக்கில் பத்து கதையாவது நம்முடைய கணக்கில், பெயரில் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது பெயரை நினைவில் வைத்திருப்பார்கள். தமிழினி வசந்தகுமார் சொல்லுவார் ‘சீன்’ல இருந்துட்டே இருக்கணும். இல்லேன்னா சீக்கிரமா மறந்துருவாங்க.’ இன்றைய நிலையில்  எழுத்தாளனுக்கு கடுமையான சவால்.

அவனுக்கு முன்னால் எழுத வந்த மூத்த எழுத்தாளர்களில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், கலாப்ரியா, விட்டல்ராவ் போன்று சிலர் இன்னும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவனுடனே எழுத வந்த சக எழுத்தாளர்களில் பலரும் கூடவே தொகுப்புகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெருங்கூட்டம், படு வேகமாக மாதம் ஒரு கதை, வருடம் ஒரு தொகுப்பு என்ற கணக்கில் அசராமல் ஓடி வருகிறார்கள். ஓட முடியவில்லை, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று நிற்க முடியாது. அவ்வளவுதான். எல்லாரும் ரொம்ப தூரம் முன்னால் போயிருப்பார்கள். அதன் பிறகு அந்த மைதானத்தில் அவன் மட்டும் தனியாக ஓடிக்கொண்டிருப்பான். அதனால், நிற்காமலும் சீரான வேகத்திலும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது ரொம்ப முக்கியமானது.

ஒரு புனைகதை எழுத்தாளனாக இருப்பது அவ்வளவு சுலபமில்லை. மிகவும் கடினம். புனைகதை எழுதவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், சற்று யோசித்துப் பாத்துவிட்டு இந்த மைதானத்தில் இறங்குவது நல்லது.

ஏதாவது ஒரு இதழில் உங்களுடைய கதை வெளிவந்திருக்கும். நான்கு பேர் படித்துவிட்டு நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்லியிருப்பார்கள். அன்று அந்த சந்தோஷத்துடனே தூங்கப் போவீர்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இருக்காது. எல்லாருமே வேறொரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நல்ல கதையைப் பற்றி தொடர்ந்து பேசுவது என்பதெல்லாம் எழுத்தாளனே ரொம்ப மெனக்கெட்டு செய்தால் மட்டுந்தான் நடக்கும். கதையைப் பற்றி வரும் கருத்துகளை கூச்சப்படாமல் தொடர்ந்து மற்றவர்களுக்கு பகிரவேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக அந்தக் கதை காணாமல் போய்விடும்.

இப்பிடி ஒரு சவால் மிகுந்த சூழ்நிலையில ஒரு எழுத்தாளனைப் பற்றியும்

அவனுடைய கதைகளைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரும்பத் திரும்ப எழுத்தாளனின் பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வாசகனுடைய நினைவிலும் இலக்கியச் சூழலின் ஞாபகத்திலும் எழுத்தாளனின் பெயரை உரக்கச் சொல்லி மறக்கவிடாமல் செய்ய வேண்டிய தேவை இன்றைக்கு உள்ளது.

0

அந்த வகையில் இன்று நாம் இந்த இரண்டு மணி நேரமும் என்.ஸ்ரீராமுடைய பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம். இப்பிடியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ‘நற்றுணை’ அமைப்புக்கு நன்றி, பாராட்டுக்கள்.



0

என்.ஸ்ரீராமை ஏன் நாம் இப்போது பேசவேண்டும்? தமிழ்ச் சிறுகதையின் படிநிலையில் அவரை எங்கே வைக்கமுடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல, அவர் எழுதக்கூடிய பிரதேசம் சார்ந்த சில அடிப்படைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

என்.ஸ்ரீராம் தாராபுரத்துக்கு அருகில் உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கொங்குப் பகுதியைச் சேர்ந்தது. தமிழக வரலாற்றில் கொங்குப் பிரதேசம் தனியாகக் குறிப்பிடப்படுவதில்லை. சேர நாட்டின் ஒரு பகுதியாகவே மிகச் சிறிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. பேரூர், கரூர் போன்ற சில ஊர்களைப் பற்றிய குறிப்புகளே உள்ளன. அதிகமும் வேளாண்மை சார்ந்த பெரும் நிலப்பரப்பு. சுதந்திரத்துக்கு பிறகு ஏற்பட்ட பெரும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக கோவை, திருப்பூர், சேலம், கரூர் போன்ற நகரங்கள் கொங்குப் பிரதேசத்துக்கான கவனத்தை ஏற்படுத்தின.

இலக்கியத்திலும் இதே நிலைதான். சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் அதிகமான புலவர்கள் கொங்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கொங்கு வேளிர் எழுதிய ‘பெருங்கதை’யும், எம்பெருமான் எழுதிய ‘தக்கை ராமாயண’மும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். நன்னூல் தந்த பவணந்தி முனிவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவற்றைத் தவிர அண்ணன்மார் சுவாமிகள் கதை போன்ற நாட்டார் இலக்கியங்கள் உள்ளன.

நவீன இலக்கியத்தைப் பற்றி யோசிக்கும்போது உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் ஆர்.சண்முகசுந்தரம். அவருடைய புகழ்பெற்ற நாவல் ‘நாகம்மாள்’ இந்தியாவின் முதல் வட்டார வழக்கு நாவல் என்று க.நா.சு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.சண்முகசுந்தரம் ‘மணிக்கொடி’யில் சிறுகதை எழுதியிருக்கிறார். ‘பாறையருகில்’ என்ற அவரது முதல் கதை மணிக்கொடியில்தான் பிரசுரமாகியிருக்கிறது. இருபதுக்கும் அதிகமான கதைகளை எழுதியுள்ளார். ‘நந்தா விளக்கு’ என்ற தொகுப்பு 1944ல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவருடைய சாதனை சிறுகதைகளில் இல்லை, நாவல்களில்தான். 1942இல் வெளியான ‘நாகம்மாள்’ நாவலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் கு.பா.ரா. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் முதன்முதலாக நாவல் எழுதியவர் ஆர்.சண்முகசுந்தரம்.  அவருக்கு நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? அவருடைய மொழியாக்கங்கள்தான் காரணமாக இருக்கவேண்டும். வங்காளத்திலிருந்து பல நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யை தமிழுக்குத் தந்திருக்கிறார்.  சரத் சந்திரரின் எல்லா நாவல்களையுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  கோவையிலிருந்து ‘வசந்தம்’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அவர் 1977ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார். தனது கடைசி காலத்தில் அவர் எதையும் எழுதவில்லை. காலமாகி ஐம்பது வருடங்கள்தான் ஆகியுள்ளன. ஆனால், அவர் எழுதிய பல நாவல்களும், மொழிபெயர்ப்புகளும் நமக்குக் கிடைக்கவில்லை. எதையும் பத்திரப்படுத்துகிற, ஆவணப்படுத்துகிற பழக்கம் நம்மிடம் இல்லை. எனவே, மறந்துபோவதும் நமக்கு சுலபமாக உள்ளது. இன்று என்.ஸ்ரீராமைப் பற்றி பேசுவதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து நான் ஆர்.சண்முகசுந்தரத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

அவருக்குப் பிறகு கொங்குப் பிரதேசத்தின் ஒரு பெரிய இலக்கியத் திருப்பம் ‘வானம்பாடி’. 1970களில் தமிழ்க் கவிதையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இதழ், இயக்கம்.

அடுத்த முக்கியமாக குறிப்பிடவேண்டிய எழுத்தாளர் க.ரத்னம். 1962இல் அவருடைய ‘கல்லும் மண்ணும்’ வெளியானது. அந்த காலத்தில் நாவல்கள் இருந்த போக்குக்கு மாறாக சுருக்கமாக 120 பக்கங்களில் ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல். வளர்ச்சியின் பெயரில் நிலமும் வளமும் பாழடிக்கப்படும் போக்கை, சூழல் சீர்கேட்டை முதன்முதலாக சுட்டிய புனைவு. க.ரத்னம் இன்று கோயமுத்தூரில் வசிக்கிறார். கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பறவையியலாளர். அவருடைய சாதனைகள் இரண்டு.  எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்‘ எனும் 3500 பக்கம் கொண்ட நூலை ஏழு தொகுதிகளாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தது, ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்னும் புத்தகம். தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தில் சூலூர் குளக்கரையில் பார்த்த பறவைகளைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து எழுதிய புத்தகம். அழகான வண்ண ஓவியங்கள் கொண்ட பறவைகள் கையேடு. இன்று பறவை ஆர்வலர்கள் அதிகமும் புரட்டிப் பார்க்கும் ஒன்று. முதலில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. இப்போது மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவற்றைத் தவிர, ஜேம்ஸ் ஜாய்ஸோட ‘டப்ளினர்’ஸை மொழிபெயர்த்திருக்கிறார். செகாவின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

இப்படி ஒரு ஆளுமை நம்மிடையே இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. தமிழகத்தில் எத்தனையோ விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவருடைய பெயர் எங்குமே பரிசீலிக்கப்படுவதில்லை.

ஆர்.சண்முகசுந்தரம், க.ரத்னம் இவர்களுக்குப் பிறகு பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட 30 வருஷம் கழித்து 1980களில்தான் புதிய எழுத்தாளர்கள் இந்தப் பகுதியிலிருந்து எழுத வந்தார்கள். சி.ஆர்.ரவீந்தரன், சூரியகாந்தன், சுப்ரபாரதிமணியன், பெருமாள்முருகன், தேவிபாரதி, எம்.கோபாலகிருஷ்ணன், வா.மு.கோமு என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.

இதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் என்.ஸ்ரீராம்.

என்.ஸ்ரீராமை ஆர்.சண்முகசுந்தரத்தின் தொடர்ச்சி என்றே சொல்லலாம். முதல் காரணம் அவரும் கீரனூரைச் சேர்ந்தவர்தான். இரண்டாவது காரணம் இருவரும் எழுதிய களமும் வாழ்க்கையும்.

0

என்.ஸ்ரீராமின் கதைகளின் மூன்று அம்சங்களைக் குறிப்பிடவேண்டும்.

ஒன்று, அவருடைய கதைகள் அதிவேகமான சிதைவுகளுக்கு நடுவிலிருந்து கொங்கு வாழ்க்கையின் பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்து வைத்திருக்கிறது என்பது.

ஆர்.சண்முகசுந்தரம் கண்ட கிராமங்கள் ஸ்ரீராமின் காலத்தில் இல்லை. ஸ்ரீராமின் காலத்திலிருந்த அடையாளங்கள் இன்று இல்லை. இன்று எஞ்சியிருக்கும் சில அடையாளங்களும்கூட இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் இருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீராமின் கதைகளில் உள்ள கிராமங்களை, தெருக்களை, சந்துகளை, இட்டேரிகளை இப்போதுகூட பார்க்க வாய்ப்பில்லை. கொறங்காடுகள், கோம்பை வீடுகள், பாம்பேரிகள் என்று அவர் குறிப்பிடும் நிலங்களையும் அதன் அடையாளங்களையும் வெகுவேகமாக இழந்து வருகின்றன இன்றைய கொங்கு கிராமங்கள்.

அவருடைய கதைகளிலுள்ள பல்வேறு மனிதர்களை - பூனைபிடிப்பவர்கள், முனிவிரட்டிகள், அம்மி கொத்துபவர்கள், சாமியாடிகள், கிணறு வெட்டுபவர்கள், பேயோட்டுபவர்கள் – இன்று காண்பது அரிது. இவர்கள் அனைவருமே அந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள்.

துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் கொங்கு கிராமத்துக்கென உள்ள பழக்கவழக்கங்களை பண்பாட்டுக்கூறுகளை இனியொரு தலைமுறை என்.ஸ்ரீராமின் கதைகளின் வழியாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

பருவகாலங்கள், பொழுதுகள், மரங்கள், பறவைகள், செடிகள் என நிலக்காட்சிகளை இக்கதைகள் மிக இயல்பாக விவரிக்கின்றன. ஒரு நிலத்தையும் அதன் உயிர்களையும் புனைவின் ஒரு பகுதியாக ஆக்குவதென்பது திட்டமிட்டோ வலுக்கட்டாயமாகவோ செய்வதல்ல. இயல்பாக நிகழவேண்டும். என்.ஸ்ரீராமின் கதைகளில் உள்ள நிலமும் தாவரங்களும் பறவைகளும் விலங்குகளும் வெறும் தகவல்களாக அமைவதில்லை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களுக்கும் சூழலுக்கும் பொருந்தி அமைபவை. கதை மையத்துக்கு மேலும் வலு சேர்ப்பவை.

என்.ஸ்ரீராம் தன் கதைகளில் காட்டியிருக்கும் சூழல் உலகை திரும்பவும் நம் வாழ்வில் நாம் சந்திக்கவே முடியாது. நுட்பமான தகவல்களுடன் விவரணைகளுடன் கிராமங்களை காட்டுகிறார். ஓவியங்களைப் போலவோ நிழற்படங்களைப் போலவோ அல்ல. அந்தப் படங்களுக்கு அல்லது ஓவியங்களுக்கு நிறங்கள் உண்டு, வாசனை உண்டு, சத்தங்களைக் கூட தெளிவாக கேட்க முடியும். முக்கியமாக ஸ்ரீராம் பல இடங்களில் கிராமத்துக்கான வாசனைகளைப் பற்றி எழுதியிருக்கிறார் – ‘நாணல் பூவெடுக்கும் பருவமாதலால் சுனை வாசனை கண்டிருந்தது’, ‘வெள்ளாட்டுக் கிடாவின் மொச்சை வாசனை’, ‘காற்று வைக்கோல் வாசம் படர்ந்துவீசியது’, ‘இரவில் எருக்கு மணத்துடன் காற்று வீசியது’, ‘கொறங்காட்டில் தட்டைக் கொடிப் பூக்களின் வாசனை’. இந்த மனிதர்களை, பழக்கவழக்கங்களை, வாசனைகளை இழந்த கிராமங்கள்தான்  இன்று எஞ்சியுள்ளன. ஆனால் இவற்றை என் ஸ்ரீராமின் கதைகளின் வழியாக உயிர்ப்புடன் நம்மால் அனுபவிக்க முடியும்.

அழிவுற்ற ஒரு பிரதேசத்தின் அடையாளங்களை, பழக்கவழக்கங்களை இக்கதைகள், பண்பாட்டு ஆவணங்களாக பாதுகாத்து வைத்துள்ளன.

0

இரண்டாவதாக, இன்று பெரும்பாலான கொங்கு கிராமங்களில் காணாமல்போய்விட்ட ‘கொங்கு’த் தமிழை ஸ்ரீராமின் கதைகளில் கேட்க முடிகிறது என்பது.

இவன் ‘ஒந்தி’ வழிவிட்டான், வயல் வழி ’மூயவே’ இல்லை, தொறப்புக்குச்சி, ‘பாப்புராணி’ கிணற்று மேட்டில் ஓடியது, ‘மளார்’னு வேலையைப் பாரு, ‘ஓரியாட்மா’ இருக்கு போன்ற கொங்கு பிரயோகங்கள் சுவையானவை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்கூட திருமணங்களில்,கோயில் விசேஷங்களில் வயதில் மூத்தவர்களின் உரையாடல்களில் வெகு இயல்பாக  இடம்பெற்ற இந்தப் பேச்சுத் தமிழ் இப்போது அருகி வருகிறது. இன்றைய தலைமுறையினர் இந்த வழக்கை அதிகமும் பயன்படுத்துவதில்லை. ஒரு பண்பாட்டின் முக்கிய அடையாளமான இந்த உரையாடல் மொழி ஸ்ரீராமின் கதைகளின் முத்திரை அம்சமாக அமைந்திருக்கிறது.

0

மூன்றாவதாக, கொங்கு பிரதேசத்தின் விவசாய வாழ்வின் சவால்களை இக்கதைகள் விரிவாகப் பேசியுள்ளன.

அமராவதி – மழைக் காலத்தில் மட்டுமே நீரோடும். சண்முக நதியில நான் தண்ணீரைப் பார்த்தது இல்லை. வேறு நீர் ஆதாரங்கள் இல்லாத சூழல். வானம் பார்த்த பூமி. கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கவேண்டிய நிலை. நிலத்தடி நீர் கீழே போகப் போக ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்ட வேண்டிய கட்டாயம். அதிலும் தோல்வி. அதனால் ஏற்படும் கடன். மாடு கன்றுகளை விற்று சமாளிக்க வேண்டிய அவலம். இதனால் நிறைவேறாது போகும் திருமணங்கள். அறுபடும் உறவுகள். தற்கொலைகள் என்று அழிந்து வரும் விவசாயத்தையும் விளைநிலங்கள் விரைவாக மனைகளாகும் அவலத்தையும் இக்கதைகள் சுட்டி நிற்கின்றன.

0

என்.ஸ்ரீராமின் தனிச் சிறப்பு என்று எதைச் சொல்ல முடியும்?

ஏற்கெனவே சொன்னதுபோல அவர் ஒரு ‘கதைசொல்லி’. கதை சொல்வது என்பது நமது மரபான வடிவம். தொன்றுதொட்டு வருகிற ஒன்று. அவரால் தொடர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது. மிகுந்த விவரணைகளுடன் கேட்பதற்கு சலிப்பேற்படாதவண்ணம் சுவையாகச் சொல்கிறார். ஒரு கிராமத்து நிகழ்வை நம் கண் முன்னே அதன் எல்லா நுட்பங்களுடனும் நிகழ்த்திக் காட்டுகிறார்.

எந்தக் கதையிலும் அவர் சூழலைச் சொல்லாமல் விடுவதில்லை. அந்த சமயத்தில் பொழுது எப்படியிருந்தது, காற்று எப்படி வீசியது, வானத்தில் முகில்கள் எப்படியிருந்தன, எந்த மரத்தில் எந்தப் பறவை எது மாதிரி ஓசை எழுப்பியது, செடிகளும் பூக்களும் உயிர்களும் எப்படியிருந்தன என்று எதையுமே விடாமல் சொல்லிவிட்டுத்தான் அவர் கதைக்கு வருவார்.  ‘இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை எழுத்தும் இல்லை’ என்பதே நம் சங்க இலக்கிய மரபு. என்.ஸ்ரீராம் அந்த மரபில் வந்தவர். இயற்கையைக் குறித்த அக்கறையும் கவனமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால், இலக்கியத்தில் அது நடக்கலாகாது. எழுத்திலிருந்து இலக்கியத்திலிருந்து சூழலையும் இயற்கையையும் விலக்கும்போது அது பண்பாட்டிலிருந்தும் அழிக்கப்படுகிறது என்றே பொருள். நகரெங்கும் குளங்களை குப்பைகளை இட்டு நிரப்பிக் காணாமல் செய்வதுபோல ஒட்டுமொத்தச் சூழலும் அழிக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கும் பண்பாட்டுக்கும் எழுத்தும் இலக்கியமும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அது.

டி.என்.ஏ பெருமாள் என்றொரு கானுயிர் புகைப்பட கலைஞர். கருப்பு வெள்ளைப் புகைப்படத்தின் மேதை. மேதைகளையும் மேதமைகளையும் புறந்தள்ளிவிட்டு மலினங்களை கொண்டாடும் நம்மில் பலருக்கும் அவரது மகிமை தெரியாதது ஒன்றும் அதிசயமில்லை. கானுயிர் புகைப்படக் கலையைப் பற்றிய அவரது கோட்பாடுகளில் ஒன்று, ஒரு கானுயிருக்கான உருவாக்கும்போயேது மூன்றில் ஒரு பகுதியேனும் அதன் சூழலைக் கொண்டிருக்கவேண்டும் என்பது.  வாழ்நிலையின் பின்னணியில்லாது எடுக்கப்படும் படங்கள் பொருளற்றவை.  பின்னணி முழுக்க மழுங்கடிக்கப்பட்டு உருவம் மட்டுமே துலங்கி நிற்கும் படங்கள் வழியாக சொல்வதற்கு எதுவுமில்லை.

 

இலக்கியமும் அப்படித்தான். கதை நிகழும் கதைமாந்தர்கள் உலவும் சூழலைச் சொல்லாமல் எழுதுவது என்பது உயிரற்ற நிறமற்ற சித்திரங்களை உருவாக்குவதுதான்.

 

இந்தச் சூழல் சித்தரிப்பு என்பது தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் காட்டுவதாக எந்தக் கதையிலும் அமைந்ததில்லை. சூழலின் அனைத்து அம்சங்களுமே குறிப்பிட்ட அந்தக் கதையின் கதாபாத்திரத்தின் மன நிலையை, குறிப்பிட்ட கதை முடிச்சின் அழுத்தத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படியொரு மரபான கதை சொல்லி எழுதுகிற கதை இன்றைய நவீன உரைநடைக்கு, புனைகதைக்கு பொருந்தி வருமா என்ற சந்தேகமும் கேள்வியும் எழும். என்.ஸ்ரீராமின் கதைகள் பலவற்றில் நவீன புனைகதைக்கான வடிவ நேர்த்தி அமைந்திருக்காது. கச்சிதக் குறைவுகள் உண்டு. திருத்தமான சொல் முறை, நறுக்கான உரையாடல்கள் இடம் பெற்றிருக்காது.  இந்த வகையான இலக்கணங்களுக்கு ஸ்ரீராம் தன் கதைகளில் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஏனெனில் அதற்கான தேவைகள் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஆனால், நவீன புனைகதைகளுக்கான அகநுட்பங்களை என்.ஸ்ரீராம் தன் கதைகளில் தவறவிடுவதில்லை என்பதுதான் முக்கியமானது. மரபான விதத்தில் சொல்லப்பட்ட கதையாக இருந்தபோதிலும் அக்கதைகளில் அவர் நவீன சிறுகதைக்கான உட்கூறுகளை மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அவருடைய பல கதைகளும் அந்தக் கதைகளின் முடிவிலிருந்து புதிதாக ஒரு கதையை யோசிக்கச் செய்கின்றவை. உதாரணமாக, ‘சிதைகோழி’, ‘பெயரைத் தொலைத்தவன்’.

அவர் கதைகளில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதுபோலத்தான் தெரிகிறது. பல கதைகளில் அவர் சொல்லாமல் விடும் இடங்கள் அந்தக் கதைகளை வேறு கோணத்தில் யோசிக்கச் செய்கின்றன. நவீன புனைகதைக்கான முக்கியமான கூறு இது. உதாரணம் ‘மீட்பு’.

இந்த மரபான கதைசொல்லல் முறையைக் கொண்டே அவர் எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். யார் எந்த விமர்சனக் கண்ணாடியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அவரது கதைகளை ஆராயலாம். பேய்க் கதை, முற்போக்குக் கதை, அரசியல் கதை, பெண்ணியக் கதை, சூழல் விழிப்புணர்வுக் கதை இதுபோல இன்னும் என்னவெல்லாம் கண்ணாடிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு இவருடைய கதைகளை சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு கண்ணாடிக்கும் பொருந்துவதுபோல அவர் ஒரு கதையையாவது எழுதி வைத்திருக்கிறார்.  

பேய்க் கதை வேண்டும் என்றால், நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். சாதிய ஒடுக்குமுறையை விமர்சிக்கும் முற்போக்குக் கதைகளையும் எழுதியுள்ளார். பெண்ணிய கதைகளைத் தேடினால் அந்த வகைமைக்குள் அடங்கும் கதைகளும் உண்டு. சூழல் விழிப்புணர்வு சார்ந்த கதைகள் என்று கேட்டால் அவருடைய எல்லாக் கதைகளுமே சூழல் விழிப்புணர்வு கதைகள்தான். அரசியல் கதைகள் எழுதியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழலாம். முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆனால், இந்தக் கதைகள் எவையுமே அந்தந்த கொள்கைகள் சார்ந்து அல்லது வகைமை சார்ந்த வெளிப்படையான உரத்த குரல் இன்றியேதான் எழுதப்பட்டிருக்கும். இதுமாதிரியான கண்ணாடிகளுக்குப் பொருந்திப்போகும் அதே சமயத்தில் அவை அனைத்துமே என்.ஸ்ரீராமின் கதைகளாக மட்டுமே தனித்து நிற்கும். அதுவே அவற்றின் சிறப்பு.

இறுதியாக, என்.ஸ்ரீராம் இத்தனை காலமும் எழுதி அடைந்த ஒரு இடத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அதுவே ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய இலக்காக இருக்கும். இன்றைக்கு ஏதாவது ஒரு இதழில் ஸ்ரீராமோட கதையை அவருடைய பெயர் இல்லாமல் வெளியிட்டால்கூட படிக்கிறவர்களுக்கு அது அவர் எழுதியதுதான் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது. ஓரிரண்டு வரிகளில், பத்திகளிலேயே கண்டுபிடித்துவிடமுடியும். அந்தக் கதையில் அவ்வளவு அழுத்தமாக அவருடைய ‘கையெழுத்தை’ முத்திரையை பார்த்துவிட முடியும். அப்பிடியொரு இடத்துக்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரை கொண்டாடுவதில் எல்லா நியாயங்களும் உள்ளது. அதனால்தான் இங்கு நாம் அவரைப் பற்றியும் அவருடைய கதைகளைப் பற்றியும் பேசுகிறோம்.

இதுமாதிரி பேசுவதின் வழியாக என்.ஸ்ரீராம் என்கிற பெயரை நாஙட தமிழ்ச் சூழலுக்கும் இன்றைய வாசகர்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம், முக்கியத்துவப்படுத்துகிறோம் என்பது அவசியமானது, பெருமைக்குரியதும்கூட.

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...