Tuesday 25 May 2021

கருப்பு வெள்ளை ஆல்பம் - பாவண்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்




கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது எழுதப்பட்ட கதைகள் இவை. அவ்வப்போது இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின. காலம் நம் முன்னால் பெரும் திகைப்பையோ அதிர்ச்சியையோ அளித்து நிற்கும்போது இயல்பாகவே மனம் கடந்த காலத்தை நோக்கிச் செல்லும். இளமைக்கால நினைவுகளின் வழியாக நிகழ்காலத்தின் வெறுமையை சலிப்பை ஏமாற்றத்தை ஈடுகட்டவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முயல்வதுண்டு. பாவண்ணன் அவ்வாறு தன் இளமைக்கால நினைவுகளுக்குள் சென்றதன் பலனாக இக்கதைகள் உருவாகியுள்ளன.

கதைகள் அனைத்துமே சமகாலத்துக்கு முற்பட்ட காலத்தில் நடப்பவை. ஒருவிதத்தில் நமது பால்யத்தை நினைவுபடுத்துபவை. சிறுவர் பருவத்தின் நினைவுகளின் வழியாக அந்த உலகத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய நம் வாழ்வு எத்தனை பொருண்மையற்றதாக பொருளற்றதாக சலிப்பானதாக அமைந்து போயுள்ளது என்பதை முகத்தில் அறைவதுபோல இக்கதைகள் உணர்த்துகின்றன. வாழ்வின் ஒவ்வொரு கணமும் புத்துணர்வுடன் புதிய அனுபவங்களுடன் திறந்து நின்றிருந்த காலங்கள் அவை. அன்றும் வாழ்வின் பாடுகளும் துயரங்களும் புரியாத சிக்கல்களும் நம்மைச் சுற்றி இருந்தனதான். ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாத ஒரு களங்கமின்மையுடன் அனைத்தையுமே மிக எளிதாக அணுகும் பால்ய குணத்துடன் இருக்க நேர்ந்த அதிர்ஷ்டத்தையே இக்கதைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. வசதிகளற்ற சூழலில் கிடைப்பதைக் கொண்டு பசியாறி இருப்பதைக்கொண்டு திருப்தியுற்ற அந்த நாட்களைக் குறித்து இன்றும்கூட நமக்கு பெரிய புகார்கள் இல்லை. ஏனெனில், நம்மைச் சுற்றிய உலகமும் மனிதர்களும்கூட அப்படித்தான் இருந்தார்கள்.

கிராமத்துக்கு ஆர்மோனியத்துடன் வரும் ஒரு பாடகருடனான சிறுவர்களின் அனுபவங்களும் எதன்பொருட்டும் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளாத அவரது குணமும் ‘தனிவழி’யின் சிறப்பு. இதில் அந்தத் தனிவழி குறித்த தெளிவோ புரிதலோ அவருடன் விளையாடிய சிறுவர்களுக்கு அன்று இருந்திருக்காது. ஆனால், இப்போது அதைத் திரும்பிப் பார்க்கும்போது எதனால் அவரது வழி தனிவழியாக அமைந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படியொரு தெளிவும் புரிதலும் தனிவழியும் இப்போது அமையக்கூடுமென்றால் வாழ்க்கையை இத்தனை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜவுளிக்கடை வாசலில் முயல், யானை போன்ற உருவங்களில் நின்று வேடிக்கை காட்டி குழந்தைகளைக் கவரும் நபர்களைக் குறித்து யாரும் கவனிப்பதுகூட கிடையாது. அது ஒரு வியாபாரத் தந்திரம் என்ற எண்ணமே பெரும்பாலும். ஒரு நாள் முழுக்க வாசலிலேயே நின்றபடி புழுங்கித் தவிக்கும் அவர்களது நிலையைக் குறித்து கவலைப்படவோ யோசித்துப்பார்க்கவோ நேரமில்லாத அவசர உலகம். அண்மையில் நாகர்கோவிலில் விளம்பரப் பலகைகளை முதுகில் மாட்டிக்கொண்டு இளைஞர்கள் உலவியக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. வேலையின்மையும் பொருளாதாரத் தேவையும் இப்படியொரு நிலைக்குத் தள்ளுகிறது. அவ்வாறான ஒரு இளைஞனின் மனத்தில் எழும் காதலையும் அதன் தவிப்பை, அழகை தொட்டுக் காட்டுகிறது ‘சங்கராபரணி’. அதே கடையின் வாசலில் ஒன்றரை வருடமாக அவன் நிற்கிறான், ஆனால் அவள் அவனைப் பார்த்ததேயில்லை. ஏனெனில் அவர்கள் வேடிக்கை காட்டும் முயல், யானை, கரடி அவ்வளவுதான். நாமும்கூட நமது பக்கத்து வீட்டுக்காரர்களை இப்படித்தான் பலசமயம் முகம் தெரியாத அளவு ‘நெருக்க’த்துடன் அணுகுகிறோம்.

வாழ்வில் நாம் சாதாரணமாக கடந்து செல்ல நேரும் அசாதாரணமான மனிதர்களின் கதைகள் இவை என்பதே இவற்றின் சிறப்பு. பூங்காக்களில் புகைப்படம் எடுப்பவர், கிராம வைத்தியர், சர்க்கஸ்காரர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர், இடம் வீடு தொடர்பான தரகர்கள், நெய் காய்ச்சி தரும் தயிர்க்காரம்மா, சாவு வீட்டில் கிளாரிநெட் வாசிப்பவர்கள், சமையல்காரர், வீட்டு நோயாளிகளைப் பராமரிக்கும் செவிலிகள், நாடகக் கலைஞர் என பல்வேறு விதமான மனிதர்களை இந்த வாழ்வில் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடந்து செல்ல நேர்கிறது. அவர்களின் பின்னுள்ள நெருக்கடிகளை சிக்கல்களைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாத சூழலில்தான் நாமும் சிக்குண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைப்பாட்டுக்கு படாத பாடு படவேண்டியுள்ளது. போராடித்தான் வாழ வேண்டிய நிலை. ஆனால், இவர்கள் அனைவரும் தாமிருக்கும் சூழலில் உள்ளவர்களை மிகுந்த அணுசரணையோடு கருணையோடு அன்போடு அணுகுகிறார்கள். தம்மால் இயன்றவரை அவர்களின் துயரை, வலியை, ஏக்கத்தை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். நெருக்கடியான அவர்களது வாழ்நிலை பிற மனிதர்களைக் குறித்த மேலான புரிதலை சாத்தியப்படுத்துகிறது.

இந்தக் கதைகளில் ஒன்றான ‘உத்தமன் கோவில்’ அபாரமான ஒரு தருணத்தைக் கொண்டிருக்கிறது. கதையின் மையக் கதாபாத்திரமான ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் பாண்டிச்சேரி கடலில் பாரதியுடன் நீந்திய நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நீந்திக் களித்த பின் கரையில் நின்று பாடலைப் பாடியதையும் சொல்கிறார். இந்தச் சம்பவம் புனைவாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இது வாய்மொழிக் கூற்றாகவே கதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பாரதி கடலில் நீந்துவது, ஈரம்சொட்ட கரையில் நின்று பாடுவது என்ற கற்பனையின் உச்சம் வியக்கச் செய்தது.

பாவண்ணனின் கதைசொல்லும் பாணி நேரடியானது. புதிர் வழிகளற்றது. இயல்பான உரையாடல்களையும் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்துவது. இத் தொகுப்புகளிலுள்ள சில கதைகள் தேவைக்கதிகமான நீளத்தைக் கொண்டுள்ளன. சொல்ல வந்த கதையின் சூழலுக்கு தேவை என்பதால் தெரிந்தேதான் அத்தகைய தகவல்களை கதைகளில் அடுக்கியிருக்கிறார்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய வீட்டின் பூட்டிய அறையிலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு ஆல்பத்தின் அபூர்வமான படங்களே இக்கதைகள். காலவோட்டத்தில் நாம் தொலைத்துவிட்டு பல்வேறு வாழ்வியல் கூறுகளை இப்படங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்று காணாமல்போய்விட்ட அல்லது மங்கிப்போன வண்ணங்களைக் குறித்து யோசிக்கச் செய்கிறது இந்த கருப்பு வெள்ளை ஆல்பம்.

எதிர்மறையான மனநிலையுடன் வெறுப்பையும் பகையையும் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளே இன்றைய சூழலில் மிகுந்திருக்கிறது. அதற்கு மாறாக சக மனிதனை முடிந்தவரை அக்கறையுடனும் சகோதரத்துவத்துடனும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் கதைகள் அந்த எண்ணத்தையும் நோக்கத்தையுமே வலியுறுத்துகின்றன. கருமை மட்டுமே நிறைந்துள்ள பதாகையில் ஒரு சிறிய வெண்புள்ளி பிரகாசமாகத் தெரிவதுபோல இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் அனைவருமே வெண்மையாக, களங்கமற்றவர்களாக, அன்புமிக்கவர்களாக இருப்பதும் அக இருள் நிறைந்த இன்றைய சூழலில் சற்றே உறுத்துவதாகத்தான் இருக்கும். உறுத்தவேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த உறுத்தல்தான் சிறிய அந்த புள்ளியை பெரிதாக்கி கருமையை சிறு புள்ளியாக்கும் காரியத்துக்கான தொடக்கமாக அமையும்.

இக்கதைகள் அனைத்தையும் ‘ஆனந்த நிலையம்’, ‘கனவு மலர்ந்தது’ என இரண்டு தொகுப்புகளாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

0 

Saturday 1 May 2021

எளியவர்களின் அன்றாடங்கள் - ஜான் சுந்தரின் ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’

 


ஜான் சுந்தரின் ‘நகலிசைக் கலைஞன்’ தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் கழித்தே வாசிக்க நேர்ந்தது. பிரமாதமான ஒரு நாவலுக்கான தனித்துவமான கதாபாத்திரங்களையும் புனைவுத் தருணங்களையும் கொண்டிருந்தது அந்தக் கட்டுரைத் தொகுப்பு. இசைக் கலைஞர்களின் உல்லாசமும் கொண்டாட்டமுமான குணாம்சங்களை துள்ளலும் துடிப்புமாக சொல்லிய ஜான் சுந்தரின் மொழி அதே வலிமையுடன் அவர்களது வாழ்க்கையின் துயர நாட்களையும் ஆதுரத்துடன் சித்தரித்திருந்தது.

இது ஜான் சுந்தரின் எட்டு சிறுகதைகளைக் கொண்டது இத் தொகுப்பு. இவற்றில் பல கதைகளை வெளியான சந்தர்ப்பங்களிலேயே வாசித்திருக்கிறேன். கொங்கு பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான, வக்கணையான மொழியும் சற்றே குசும்புடன் அவற்றை சித்தரிக்கும் சொல்முறையும் இக்கதைகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள். இப்போது தொகுப்பாக வாசிக்கும்போது இக் கதைகளின் வேறு சில தன்மைகளை கவனிக்க முடிந்தது.

இவை வாசித்துப் பழகிய, ஏற்கெனவே அறிந்த தளங்களில் எழுதப்பட்ட கதைகள் அல்ல.

சிறுவர் பிராயத்துக் கதைகள் என இவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார் பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன. கொங்கு பிரதேசத்துக்கேயுரிய மொழியில் அந்தப் பருவத்தின் விளையாட்டுகள், ‘செல்ல’ப் பெயர்கள், சிறுதீனிகள் என எல்லாவற்றையும் நினைக்கச் செய்கின்றன.

‘செல்ல’ப் பிராணிகளின் கதைகள் என்றும் இவற்றைச் சொல்லலாம். சிறுவர் பருவத்தையும் செல்லப் பிராணிகளையும் பிரிக்க முடியாது. கிளிகள், நாய்கள், பூனைகள், காக்கைகள், அணில்கள், ஆட்டுக்குட்டியோடு பாம்பும் கூட கதைகளுக்கு நடுவே ஓடித் திரிகின்றன.  வீட்டில் திரியும் வளர்ப்புப் பிராணிகளுடனான பிணைப்பை நேர்த்தியாக வார்த்துள்ளன இக்கதைகள்.

சிறுவர் பிராயத்துக் கதைகள் அல்லது செல்லப் பிராணிகளின் கதைகள் என்று இவற்றை வகுத்துக்கொண்டாலும் இவை எளியவர்களின் மிக எளிய வாழ்க்கையையே சித்தரித்துள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. ஒண்டுக் குடித்தனங்கள், புறம்போக்கு நிலத்தில் அமைந்த குடிசைகள், மில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் என இக்கதைகள் நிகழும் களங்கள் அன்றாடம் கடந்து செல்பவை. உத்தரவாதம் அற்றவை. ஆனால் இங்குள்ள மனிதர்களுக்கு நடுவேதான் ஆடுகளும் பூனைகளும் நாய்களும் கோழிகளும்கூட உயிர் வாழ்கின்றன. அன்றாடத்தின் நிச்சயமின்மைக்கு நடுவே சின்னச் சின்ன சந்தோஷங்களை இச் சிறு உயிர்களே தருகின்றன. மழையோ வேறு இயற்கைச் சீற்றமோ தாக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த உயிர்களும் அல்லலுறுகின்றன.

எளியவர்களது வாழ்வின் நிச்சயமற்ற அன்றாடங்களை, பாடுகளை, சிக்கல்களை, துயரம் பிழிய இடைவெளியின்றி கோர்க்கப்பட்ட வாதைகூடிய சொற்களைக் கொண்டுதான் அழுத்தமாகச் சொல்லமுடியும் என்பதில்லை.   கிளிகளும் பூனைகளும் நாய்களும் ஓடியாடி திரிந்திருக்கும் சிறுவர்களின் உலகத்துக்குள் அவர்களுக்கான கோணத்தில் சொல்லும்போது இன்னும் கனம் கூடுகிறது. ‘அந்தோணி’யின் மீதான தெரஸாவின் தாயன்பையும், ‘கிக்கி’ வளர்க்கும் மலரக்காவின் துரோகத்தையும், மில்களில் பாம்பு பிடிக்கும் சசியின் காருண்யத்தையும் வெகு சுலபமாக இக் கதைகளின் பின்னணிகளே உணர்த்துகின்றன.

‘நகலிசைக் கலைஞர்கள்’ தொகுப்பில் கண்ட பல்வேறு கலைஞர்களைப் போலவே இத்தொகுப்பிலும் சாமி, ராணி, ஸ்ரீஜா, பிரிட்டோ சார் போன்ற அபூர்வமான குணச்சித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இவர்களே நம் அன்றாடத்தின் அரிதார சலிப்பைத் துடைப்பவர்கள்.

இத்தொகுப்பின் இன்னொரு சுவாரஸ்யம், வாசிப்பினிடையே கேட்கக் கிடைக்கும் ‘ஓசை’கள். ஜான் சுந்தர் இசைக் கலைஞர் என்பதால் அன்றாடத்தின் ஓசைகளை தவறவிடாமல் வாக்கியங்களுக்கிடையே கோர்த்துவிடுகிறார். ‘அபூம்சகா’, ‘டிக்கினி டிக்கினி’ என அந்த ஓசைகளுடன் படிக்கும்போது கதையும் அந்த கதாபாத்திரமும் இன்னும் நெருக்கமாகிவிடுகிற்து. அதேபோல, ஜோக்குட்டி, ரேக்குட்டி, கிக்கி, டிப்பி, டிக்கா என்று கதாபாத்திரங்களுக்கு அவர் சூட்டும் பெயர்கள் விசேஷமானவை.

சுவையாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ள இக்கதைகளில் சில ( பேசாமடந்தை, பித்தளை நாகம்) திருத்தமாக முடிவுகளை எட்டவில்லை. லைன்வீட்டு சந்தில் ஒரு பியானோ எனும் ஒற்றை வரியில் ஆச்சரியத்தை தரும் ‘கின்னரப்பெட்டி’யும் ‘அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்’ என்ற மனவெழுச்சியுடன் அமைந்த ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’வும் அவ்வாறான உச்சத்தை எட்டியுள்ளன.

‘பறப்பன, திரிவன, சிரிப்பன’ என மிகப் பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இத்தொகுப்பு எளிய உயிர்களின் இருப்பினால் மேன்மையுற்றிருக்கும் எளியவர்களின் அன்றாடங்களை சிறார் பருவத்துக்கேயுரிய களங்கமற்ற பார்வையில் நேர்த்தியாகத் தந்திருக்கிறது.

0

பறப்பன, திரிவன, சிரிப்பன ( சிறுகதைகள்)ஜான் சுந்தர்

காலச்சுவடு பதிப்பகம்

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...