Tuesday 17 November 2020

மோக முள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்


 

(‘கனலி‘ மின்னிதழ் வெளியிட்ட தி.ஜா நூற்றாண்டு விழா சிறப்பிதழில் வெளியான கட்டுரை )

1987ம் ஆண்டு வெளியான புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல். தமிழின் மிகச் சிறந்த நாவல் எதுவும் இல்லை என்றும், சிறந்த நாவல்கள் என்று மூன்று நாவல்களையும், நல்ல நாவல்கள் என பத்து நாவல்களையும், குறிப்பிடத்தக்க நாவல்கள் என்று இன்னும் சிலவற்றையும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த நாவல்கள் பட்டியலில் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும் இடம்பெற்றிருந்தன.

தமிழ் நவீன இலக்கியம் அறிமுகமாகி ஒருசில நாவல்களையே வாசித்திருந்த பருவம். மூன்று நாவல்களில் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலை மட்டுமே, அதன் ஆழத்தை முழுமையாக அப்போது உணராதபோதும், வாசித்திருந்தேன். ‘மோக முள்’ குறித்து கேள்விபட்டிருந்தபோதும் படிக்க வாய்க்கவில்லை. புத்தகங்கள் எளிதில் கிடைக்காத காலம். அரசுப் பொது நூலகங்களில் அந்த நாவலைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்களிடமும் கிடைக்கவில்லை. சி.மோகனின் கட்டுரை வெளியான பிறகு தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். அப்போது திருப்பூரிலிருந்த யூமா வாசுகியின் நெருங்கிய நண்பர் அறிவுச்செல்வன் திருப்பூரிலிருந்த வாடகை நூல் நிலையங்கள் அனைத்திலும் தேடி அலைந்தார். இறுதியாக, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்குப் பின்னால் காமாட்சியம்மன் திருமண மண்டபத்துக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய பெட்டிக்கடை நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தார். உடனடியாக உறுப்பினராகி நாவலை கைபற்றினோம்.

பரவசத்துடனும் எதிர்பார்ப்புடனும் வாசித்து முடித்தேன். சற்று வேகமாகவும். அப்போதைய வாசிப்பில் யமுனாவின் முதிர்ந்த அழகும் பாபுவின் லயிப்புமே கண்ணில்பட்டது. நாவலின் பிற அடுக்குகளை உணர்ந்துகொள்ள முடிகிற பக்குவம் இருக்கவில்லை. இந்த நாவலை ஏன் தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று கேள்வி எழுந்தது.

இயக்குநர் ஞான.ராஜசேகரன் 1994ம் ஆண்டு நாவலை படமாக்கினார். திருப்பூர் எஸ்.ஏ.பி தியேட்டரில் வெளியானது. கலை இலக்கிய ஆர்வலரும், ‘நியூ லுக்’ திரைப்பட இயக்கத்தின் நிறுவனருமான வி.டி.சுப்ரமணியம் பெரும் விழாவாக அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் திலகவதியும் ஞான ராஜசேகரனும் கலந்துகொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த நாவலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் காதலையும் தவிப்பையும் தாண்டி வைத்தி, ரங்கண்ணா, ராஜம் என்று சில அழுத்தமான சித்திரங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது.

வெகு ஆண்டுகள் கழித்து அலுவலகப் பணிநிமித்தமாக 2008ம் ஆண்டில் கும்பகோணத்துக்கு மாற்றலாகிச் சென்றேன். ஊரும் மனிதர்களும் மொழியும் பிடிபட ஓரிரு வாரங்களானது. தெருக்களும் ஊரின் அமைப்பும் பரிச்சயமானது. நாவலின் நினைவைக் கிளறியது. உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற ஆவல். எழுதப்பட்ட களத்திலிருந்து அதன் கதாபாத்திரங்கள் உலவிய மண்ணிலிருந்து நாவலை வாசிப்பது தனி அனுபவம். இந்த முறை வெகு நிதானமாகவே படித்தேன். காந்தி பார்க்கை ஆனையடியை துக்காம்பாளையத் தெருவை கும்பேச்வரன் கோயிலை கடலங்குடித் தெருவை மேட்டுத் தெருவை மகாமகக் குளத்தை நேரடியாகப் பார்த்து நின்றேன். ஐம்பது ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டிருந்தன. கோர்ட்டுக்குப் போகும் வழியில் கல்லூரிக்கு எதிரில் இருந்த பகுதி முற்றிலும் வேறுமாதிரியிருந்தது. முக்கியமாக காவேரி நாவலில் கண்ட காவேரியாக இருக்கவில்லை. நாவல் இப்போது வேறு அனுபவங்களைத் தந்தது. முந்தைய வாசிப்பில் அவ்வளவாய் கவனத்துக்கு வராத சங்கீதம் இப்போதுதான் என் காதில் விழுந்தது. நாவலின் இன்னொரு அடுக்காக அமைந்திருந்த சங்கீதம் நாவலை வேறொரு கோணத்தில் திருப்பிக் காட்டியது. நாவல் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவுபடத் தொடங்கின.

0

மோகமுள் நாவல் இளைஞர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்த முதல் காரணம் யமுனா. அடுத்த முக்கியமான காரணம் புகழ்பெற்ற அந்தக் கேள்வி ‘இதுக்குத்தானா?’.

காய்ச்சல்கண்ட பாபுவிடம் திருவல்லிக்கேணி அறையில் முதல்கூடலுக்குப் பிறகு யமுனா கேட்கும் ‘இதுக்குத்தானா’ என்ற இந்தக் கேள்வி மோகமுள் நாவலின் இணைத் தலைப்பு போலவே இன்றளவும் கருதப்படுகிறது.

வாழ்வின் நோக்கங்களை லட்சியங்களை ஆசைகளை அடைய கருவியாக அமைந்திருக்கும் உடலே அதற்கான தடையாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஒருவனின் பலமாக அமையும் உடலின் பலவீனங்களைக் கடக்கும் உரம்கொண்டவனே சாதனைகளை எட்ட முடியும். அன்றாட வாழ்வின் அத்தனை பாடுகளும் உடல்சார்ந்த தேவைகளைத் தீர்க்கும்பொருட்டே அமைகின்றன. உடலின் பொருட்டான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே உணர்வுகள். மனம் அதன் ஊற்று. எண்ணங்களின் ஊற்றான மனத்தைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலைக் கட்டுப்படுத்துவதும் உடலைக் கடந்துபோவதும் சாத்தியம். இதற்கென மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உபாயங்களே தியானம், இசை, பக்தி, உபாசனை போன்றவை.

‘உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று’ என்று வரையறுக்கும் தி.ஜானகிராமன் அந்த இரட்டைச் சக்கரங்களை சமன்செய்வதில் உள்ள சாகசங்களை நாவல் முழுக்க விவாதிக்கிறார்.

உடலை கையாளும் வலிமைமிக்க உணர்வான காமத்தின் அசைவுகள் அகவயமானவை. அவற்றின் விளைவுகளை வெளிப்படையாக அறிந்துகொள்வது பலசமயங்களில் இயலாதது. யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் காமத்தை எந்தளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது சாத்தியமில்லை. அகத்தில் உறைந்திருக்கும் காமத்தின் புறவெளிப்பாடுகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எனவேதான், காமத்தின் ஊற்றான உடல் சார்ந்த கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகளை தகர்க்கும்படியான நடவடிக்கைகளை அன்றாடம் மனிதன் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அவை அனைத்தும் உலக வாழ்வின் அங்கங்கள். சராசரி மனிதர்கள் அத்தகைய நடவடிக்கைகளை வாழ்வின் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே வாழ்வனுபவமாக அமைகிறது. ஆனால், ஏதேனும் ஒரு துறையில் உச்சபட்ச சாதனையை நிகழ்த்த விழையும் ஒருவன் அத்தகைய வாழ்வனுபவங்களைக் கடந்து, நடவடிக்கைகளைத் தாண்டி, தன்னை முன்னகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

சங்கீதத்தின் உச்சபட்ச உயரத்தைத் தொடவேண்டும் என்ற இலக்கு பாபுவின் முன்னால் நிறுத்தப்படுகிறது. அவன் விரும்பி ஏற்ற இலக்கு அல்ல. அத்தகைய ஆற்றல் தன்னிடம் இருப்பதையே பல சமயங்களில் அவன் உணர்வதில்லை. அதிலிருந்து கவனம் பிசகும் ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒருவர் அவனை நிறுத்தி திசைதிருப்பி இலக்கை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தொடக்கத்தில் அவனது அப்பா வைத்தியும், கல்லூரியில் பயிலும்போது நண்பன் ராஜமும் அதன் பிறகு ரங்கண்ணாவும் சங்கீதத்தை நோக்கி அவனை வழிநடத்துகிறார்கள். கச்சேரி செய்து புகழ் அடையவேண்டும் என்ற தந்தையின் நோக்கத்துக்கு மாறாக வித்தையை அனுபவித்து ஆழ்ந்து அதை மேலும் மெருகேற்றுவதுதான் முக்கியம் என்று சுட்டிக்காட்டும்போது செல்லவேண்டிய திசை என்பது பாபுவுக்கு விளங்குகிறது. மராத்திய பாடகர்களும் சென்னைவாசத்தின்போது பாலூர் ராமுவும் இசையில் தொடமுயல வேண்டிய இடத்தை நோக்கி அவன் சிந்தனையைத் திருப்புகிறார்கள்.  ஒவ்வொரு நிலையிலும் அதன் திக்குத் தெரியாமல் நிற்கும்போது யாரேனும் ஒருவர் அவனுக்கு வழிகாட்ட வேண்டியுள்ளது.

பாபுவின் இத்தகைய மனநிலை உடலையும் வழிமாறச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தனியறை வாசம் தரும் சுதந்திரம் அத்தகைய அபாயங்களையும் கொண்டது. எனவேதான், இளமைப் பருவத்தில் நிற்கும் பாபுவிடம் அப்பா வைத்தி, நண்பன் ராஜம், குரு ரங்கண்ணா மூவரும் சரீரத் தூய்மையைப் பற்றி, கட்டுப்பாடுகளைப் பற்றித் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.

கடவுளைத் தாயாக உபாசிக்கும் சம்பிரதாயத்தில் சித்திகண்டு அருள் பெற்ற ராஜு கற்றுக்கொடுத்த உபாசனையைப் போதிக்கும் முன்பு வைத்தி அவனிடம் சத்தியம் செய்யச் சொல்கிறார். அவருக்கு அவன் உடலின் தேவைகளைக் கடந்து சங்கீதத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஆசை. வயிற்றுவலி அவரது சங்கீத சாத்தியங்களை முடக்கிப்போடுகிறது. எனவே, தன்னால் சாதிக்க முடியாத ஒன்றை தன் மகனின் மூலமாக எட்டிப் பிடிக்க ஆசைப்படுகிறார். ஒரு தந்தையின் இயல்பு. அவ்வாறான லட்சியத்துக்கு, வெளியே தனியாகத் தங்கியிருக்கும் வாலிப வயதிலிருக்கும் மகனை நாசுக்காக எச்சரிக்கிறார். சிறிய அளவு சந்தேகம் முளைக்கும்போதுகூட அதை அவர் சாதாரணமாக விட்டுவிடுவதில்லை என்பதற்கு அவயத்துடனான புத்தக உறவுக்கு முட்டுக்கட்டைப் போடும் விதத்திலிருந்தே உணர்ந்துகொள்ள முடியும்.

ரங்கண்ணாவும் சங்கீதம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கும் முன்பு சரீரத் தூய்மையைக் குறித்தே அறிவுறுத்துகிறார். ‘பிராணபலம் வேணும். மனோபலம் ஆத்மபலம் எல்லாம் இருக்கணும். எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா அதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும்டா.’, ‘மனசில எத்தனையோ இருக்கும். மற்ற வித்தைகளுக்கெல்லாமாவது போனாப் போறதுங்கலாம். இதுக்கு கன ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப, ஜாக்கிரதையா இரு.’

புல்லுக்கட்டுக்காரியின் சிரிப்பு தனக்கு கவசம்போல ஆகிவிட்டதை சொல்லும் நண்பன் ராஜம் ‘உனக்கு இதெல்லாம் வேண்டாம்’ என்று அறிவுறுத்துகிறான்.

இவர்கள் மூவரும் வலியுறுத்தும் உடல் தூய்மையைப் பேணுவது வாலிப வயதிலிருக்கும் பாபுவுக்கு பெரும் சவால். யோகமும் தியானமும் தந்தை உபதேசித்த உபாசனையும் அவனுக்கு உதவுகின்றன. யமுனாவைப் பற்றிய எண்ணம் அலைக்கழித்தபோதும் இசையின் மீதான ரங்கண்ணாவின் ஈடுபாடு அவனுக்கு சில தெளிவுகளைத் தருகிறது. சந்தர்ப்பவசமாக தங்கம்மா அவனிடம் வந்து சேர்கிறாள். உடலின் ரகசியத்தைக் காட்டித் தருகிறாள். சூழலும் வாய்ப்பும் அவன் தங்கம்மாவிடமே சிக்கிக் கிடந்திருக்கக்கூடிய சாத்தியங்களைத் கொண்டிருந்தன. ஆனால், அந்த விபத்து அவனுக்கு தன்னை அறிந்துகொள்வதற்கும் தனக்குள் இருக்கும் யமுனா யார் என புரிந்துகொள்வதற்குமான வாய்ப்பாக அமைகிறது. அந்த இரவில் நிகழ்ந்த உறவு அவனுக்கு காமத்தின் ஆற்றலை உணர்த்திவிடுகிறது. மனத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி உடல் தன்னிச்சையாக பெண்ணுடலை அறிந்து அதில் லயித்துவிடும் உயிரியல்பையும் புரியச் செய்கிறது. தங்கம்மாவுடனான அந்த இரவை யமுனாவுக்கு இழைத்த துரோகமாகக் கருதும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தனக்கான ஒரு சோதனை எனவும் இதுபோன்று எந்தவொரு பெண்ணுக்கும் இனி இடமளிக்கக்கூடாது என்ற உறுதியையும் ஏற்படுகிறது. உள்கதவு, வெளிக்கதவு அனைத்தையும் மூடி மதிற்சுவர்களை எழுப்பி அதற்குள் தன்னை மறைத்துக்கொள்கிற அவசியத்தை வலியுறுத்துகிறது. காமத்தின் அலைக்கழிப்பிலிருந்து உடலைக் காப்பாற்றினால் மட்டுமே சங்கீதத்தில் நினைத்த உயரத்தை எட்ட முடியும் என்ற தெளிவு பிறக்கிறது.

யமுனாவிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலையில் பாபு இன்னொரு பெண்ணைத் தேடுவதில்லை. யமுனாவையும் மறக்கவே நினைக்கிறான். அதன் பிறகு கும்பகோணத்திலேயே இருந்தபோதும்,‘ ரங்கண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னைக்கு வந்தபிறகும்கூட இன்னொரு பெண்ணை அவன் கண்ணால் காண்பதுமில்லை, யோசிப்பதுமில்லை.

தந்தையும் நண்பனும் குருவும் வலியுறுத்திய சரீரத் தூய்மையை அவனால் திடமாக பேணமுடிகிறது. அந்த ஒரு நாள் அனுபவத்துக்குப் பிறகு மேலும் அவன் இறுகி உறுதியுடன் உடலைக் கட்டுக்குள் இருத்தமுடிகிறது.

ஆனால், அப்படிப்பட்ட உடல் தூய்மை அவனுக்குத் தெளிவைத் தருவதில்லை. வைத்தியால் கற்றுக்கொடுக்கப்பட்டு ரங்கண்ணாவால் புடம்போடப்பட்ட வித்தையைக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய தீர்மானமில்லாமல் சென்னையில் மனசொப்பாத காரியங்களில் ஈடுபட்டு பிழைத்துக் கிடக்கிறான்.

‘இதுக்குத்தானா?’ என்று யமுனா கேட்கும்போது பாபுவுக்கு பதில் சொல்வதற்கான தெளிவில்லை. அவனது இயல்பும் சுபாவமும் அப்படிப்பட்டது. நாவலின் தொடக்கம் முதலே பாபு தெளிவற்ற, குழப்பமான, தடுமாறும் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். இப்போதும் அவனால் எந்த பதிலும் சொல்ல முடிவதில்லை.

உண்மையில் ‘இதுக்குத்தான்’ என்று உரக்கச் சொல்லியிருக்கவேண்டியவன் பாபுதான். யமுனா அல்ல. ‘இதுக்குத்தான்’ என்ற அந்த பதிலை ஏற்கெனவே ரங்கண்ணா அவனுக்கு வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார், வெகு காலத்துக்கு முன்பே. பாபுவுக்கு அந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வரவில்லை.

பாபுவுக்கு பெண்ணுடலும், அது தரும் சுகமும் புதிதில்லை. தங்கம்மாள் அவனுக்கு அந்த அனுபவத்தைத் தந்துவிட்டாள். அந்த அனுபவம் யமுனாவைத் தவிர இன்னொருத்தியை நினைக்கமுடியாது என்ற தெளிவையும் உறுதியையும் தருகிறது. ‘எல்லையற்ற பேரழகுமிக்க அந்த உடல் எதற்காக? உண்மையாகவே இவள் தொடக் கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச் சுரங்கமான இந்தப் புற அழகிற்குப் பலனே கிடையாதா?’ என்ற கவலையும் காதலும்தான் அவளுக்காகக் காத்திருக்கச் செய்கிறது. தங்கம்மாள் தொட்ட தன் உடலை அதன் பின் எட்டு வருடம் அவனால் பாதுகாத்து வைத்திருக்க முடிகிறது. ஜாதியாலும் வயதாலும் அடக்கப்பட்ட இந்த உணர்வுகள்தான் யமுனாவை வஞ்சிக்கின்றன. அதிலிருந்து அவளை மீட்கவேண்டும் என்பதுதான் அவன் விருப்பம். அந்த விருப்பம்தான் ‘எட்டு வருஷமாக, பத்து வருஷமாக அவனைப் பீடித்திருக்கும் ஜுரம்.’

உயிரின் ஆதார விசை தரும் அனுபவம் காமம். கடக்கும் வரையிலும் அதன் ஆழம் தெரியாது. கடந்தபின்பு இவ்வளவுதானா என்றோ இதற்குத்தானா என்றோ கேட்க முடியும். யமுனாவின் உடலை தான் அடைந்ததன் மூலம் அப்படியொரு அனுபவத்தை அவளைப் பெறச் செய்த மேன்மையை அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை.

‘சன்னாசிமாதிரி என்னத்துக்காக இருக்கணும்? யாருக்காக இருக்கணும்? எல்லாம் இதுக்குத்தான்’ என்று அவர் தொண்டையை இடதுகை கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் தொட்டுக் காண்பிக்கிறார் ரங்கண்ணா. சங்கீதத்துக்காக உடலைக் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்வது முக்கியம் என்ற பொருளில் அவர் ‘இதுக்குத்தான்’ என்று வலியுறுத்திச் சொன்னதையே யமுனாவுக்கும் பாபுவால் பதில்சொல்லியிருக்க முடியும். சங்கீதத்துக்காக மட்டும் அவன் தன் உடலை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவில்லை, யமுனாவுக்காகவும்தான் என்பதை தெளிவுடன் வெளிப்படுத்த அவனுக்குத் தெரியவில்லை.

யமுனாவுக்கு எதிலும் ஆர்வமோ ஆசையோ இல்லை என்று சொன்னபோதும் ‘நான் உன் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டேன் இல்லையா?’ என்ற சந்தேகம் இருந்தபோதும், ‘நீதான் எனக்கு வேணும்’ என்று மீண்டும் உறுதிபடச் சொல்கிற தெளிவு இருந்தவனுக்கு, ‘இதுக்குத்தானா’ என்ற கேள்விக்கு உரிய பதிலை வெளிப்படுத்தத் தெரியவில்லை.  உண்மையில், அந்த அனுபவம் இருவருக்கும் நிறைவைத் தராத ஒன்றாகவே அமைகிறது. அவளைத் தழுவும்போது ‘உயிரற்றப் பதுமையைக் கொஞ்சுவதுபோலத்தான் இருந்தது.’ அந்த அனுபவத்தைப் பற்றி யமுனா எழுதுகிறாள் ‘வெடித்துப்போன பலூன் ரப்பரைப் பொறுக்கி மறுபடியும் கழுத்து உப்ப குழந்தை காற்றை நிரப்பி விளையாடுகிறதே, அதுமாதிரி.’ காலம் கடந்துபோன மனவெறுமையும் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொண்டிருக்கும்படியான சூழலும் சேர்ந்து இருவரையும் அவ்வாறான ஒரு தடுமாற்றத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் எழுந்த கேள்வி அது. எனவே, பாபு தெளிவில்லாமல் நின்றிருப்பது இயல்புதான்.

வெகு நாட்களுக்கு முன் ரங்கண்ணா தன் குரல்வளையைத் தொட்டுக்காட்டி ‘இதுக்குத்தான்’ என்று உறுதிபடச் சொன்னதையே இப்போதும் ‘இதுக்குத்தான்’ என்று பாபு யமுனாவிடம் உரக்கச் சொல்லியிருக்கமுடியும். நாவலின் இறுதியில் யமுனா எழுப்பும் கேள்விக்கான பதிலை, தி.ஜானகிராமன் ரங்கண்ணாவின் குரலில் இடையிலேயேச் சொல்லிவிட்டார்.

0

எழுதப்பட்டு அறுபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் ‘மோக முள்’ தன் வசீகரத்தையும் முக்கியத்துவத்தையும் இன்னும் இழப்பாமலிருப்பதன் ரகசியத்தையும் தமிழின் முக்கியமான நாவல்களின் வரிசையில் அது தொடர்ந்து இடம் பிடித்திருப்பதற்கான காரணத்தையும் கண்டுணரத் தலைப்படும்போது தி.ஜானகிராமன் எனும் கலைஞனின் வியக்கவைக்கும் ஆளுமையே நம் முன்னால் கம்பீரம் கொள்கிறது.

தி.ஜா ஒரு நாவலாசிரியராக உருவாக்கியிருக்கும் நுட்பமான பல புனைவுத் தருணங்கள் நாவலின் மேன்மையை உறுதிப்படுத்தியபடியே உள்ளன. ஒரு கோணத்தில் கட்டற்றதுபோலத் தோற்றம் தரும் நாவல் உண்மையில் அவ்வாறில்லை. ஒவ்வொரு அத்தியாயமும் அதன் சம்பவங்களும் மிக நேர்த்தியான வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் மனத் தடுமாற்றங்களையும் தெளிவுகளையும் கதைப்போக்கு மிகக் கச்சிதமாக கவனத்தில் கொண்டிருக்கிறது.

மகத்தான நாவல்கள் அபாரமான முதல்வரியுடனேயே தொடங்குகின்றன. மோக முள் நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே நாவலின் எல்லா திசைகளையும் போக்கையும் சுட்டக்கூடிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயத்தில் வருகிற பெட்டிக்கடை ஆறுமுகம் நாவலின் போக்கைச் சுட்டும் ஒரு கதாபாத்திரம். பாபுவுக்குள் தத்தளிப்பும் குழப்பமும் அங்கிருந்தேத் தொடங்குகின்றன.

‘இவர் மாத்திரம் சங்கீதம் சொல்லிக்கட்டும். இன்னிக்கு காக்கா ஒண்ணோட ஒண்ணு மூக்கைக் குழறுமே அந்தமாதிரி கால் கட்டையிலே நோண்டிண்டு சங்கீத வித்வான்னு தடாலடி அடிக்கிறானே, அவனெல்லாரையும் போற இடம் தெரியாம பண்ணிவிடுவார்” என்ற அவர் வாக்கு நாவலின் இறுதிவரையிலும் வெவ்வேறு குரல்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அதே இடத்தில் அப்பா வைத்தியைப் பற்றிய சாஸ்திரிகளின் பிரமாதமாக புகழ்ந்து பேசுவது தந்தையைப் பற்றிய எண்ணத்தை அவரது விருப்பத்தைப் பற்றி யோசிக்கச் செய்கிறது.

ராஜத்துக்காக காந்தி பூங்காவில் காத்திருக்கும்போது வீணை இசை கேட்கிறது. அதில் லயித்து அமர்ந்திருக்கும் பாபு சொல்கிறான் ‘ஒரு ராகத்துக்கு சொந்தமா ஒரு அழகு, ஒரு தனித்தன்மை இருக்கு’ என்றும் ‘பாடாமலேயே இருக்கலாம். மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்’ என்றும் குறிப்பிடுவதை ராகத்துக்கான அவனுடைய எண்ணம் என்பதைத் தாண்டி யமுனாவைப் பற்றிய உள்ளக்கிடக்கை என்பதும் அதில் மறைந்திருக்கிறது.

கும்பேச்வரன் கோயிலுக்குப் போகும் பாபு மங்களாம்பிகாவை தரிசிக்க தாமதமாகும் என்றதும் துக்காம்பாளையத் தெருவுக்குச் செல்கிறான். பதினான்கு வருடங்களுக்குப் பிறகு உள்ளத்தில் வைத்து வழிபடும் யமுனாவைப் பார்க்கிறான்.

நாவலின் மையம் அல்லது மோதல் இங்கிருந்தே உருக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. சங்கீதத்தில் மிக உயரமான இடத்தை அடைவதற்கான திறமை பெற்ற பாபு, சரீரத் தூய்மையைப் பேணி வித்தையில் சாதனையைத் தொடவேண்டும் என்று வலியுறுத்தும் வைத்தி, ராஜம், ரங்கண்ணா ஆகிய மூவர், யமுனாவின் மீதான வழிபாட்டுணர்வும் காமமும் கலந்த உணர்வுநிலை என்ற தெளிவான ஒரு வரைபடத்தை தி.ஜா உருவாக்கிவிடுகிறார்.

0

மோகமுள் நாவலில் யமுனாவின் மீதான பாபுவின் உணர்வுநிலைகள் படிப்படியாக அவனுள் திரண்டு உறுதிபெறும் அபாரமான சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்கும் விதமே தி.ஜாவின் கலை மேதமைக்குச் சான்று. அதுவே காலங்கள் கடந்தும் நாவல் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான அடிப்படைக் காரணம்.

பதினான்கு வருடங்களுக்குப் பிறகு பாபு யமுனாவை கும்பகோணத்தில் முதன்முதலாக சந்திப்பது முதல் சந்தர்ப்பம்.

பூங்காவிலிருந்து மங்களாம்பிகா கோயிலுக்குச் செல்லும் பாபு தரிசனத்துக்குத் தாமதமாகும் என்று தெரிந்ததும் அவன் துக்காம்பாளையத் தெருவுக்குச் சென்று, பதினான்கு வருடத்துக்குப் பிறகு யமுனாவைச் சந்திக்கிறான். அங்கிருந்து கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்போதுதான் அவனுக்குத் தெரிகிறது, ராஜம் சுலோச்சனாவை நெஞ்சில் வைத்துப் பூஜிப்பதுபோல யமுனாவை தான் மனத்துள் நிறுத்தி வணங்குகிறோம் என்று.

இந்த உணர்வு மேலோங்கி வளர்ந்து பிரார்த்தனை செய்வதற்கு கண்ணை மூடும்போதெல்லாம் அவள் வடிவமே மனத்துள் எழும் அளவுக்கு அவள் மீதான வழிபாட்டுணர்வு தீவிரம் அடைகிறது. அவளுடைய உயர்ந்த பாதங்கள் இதயத்தில் மென்மையாக அடியெடுத்து வந்தமைகின்றன. அவளை நிற்கவைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும் போலிருந்தது. விஜயதசமியன்று அப்பாவிடம் உபாசனையை கேட்டபின் பெண்களை விழுந்து வணங்குகிறான். அப்போது இன்னும் ஒருவரை வணங்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மார்பிற்குள் நீண்டு கூம்பிய நகங்களும் குவியும் விரல்களுமாக இரண்டு பாதங்கள் அடியெடுத்து வைக்கின்றன.

இது வரையிலும் அவளது உடலழகு அவனை ஈரக்கவில்லை. வியப்பையேத் தருகிறது. பாபுவின் இளமை யமுனாவின் உடலின்மீது முதன்முதலாக படநேர்ந்து இதுவரையிலான  வழிபாட்டுணர்வில் தடுமாற்றம் ஏற்படும் தருணம் நாவலின் இரண்டாவது முக்கிய சந்தர்ப்பம்.

அப்பா சுப்ரமணிய அய்யரின் மரணச் செய்தி கேட்டு காரில் ஊருக்கு அழைத்துச் செல்லும்போது யமுனாவின் அருகில் உட்கார நேர்கிறது. ‘அழும்போதுகூட இவர்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்று எண்ணுகிறான். ஆனால் அவள்மீது படும்போது அவன் எண்ணம் தடுமாறுகிறது. ‘மனம் கூசிக் குறுகிற்ற. உடல் லேசாக நடுங்கிற்று. அபசாரம் போல தேகம் குன்றிற்று. ஹிருதயத்தில் அவள் முகம் பூஜையைப் பெற்றுக் கொண்டு நிறைந்திருக்கிறது. இவள் சாதாரண ஸ்தீரி அல்ல. மனிதர்களிடத்தில் இல்லாத ஒரு தன்மை இவள் உடலிலும் பேச்சிலும் எண்ணத்திலும் இருந்துகொண்டேதானிருக்கிறது. இவள் மேலே படும்போது ஏதோ தவறிழைப்பது மாதிரி உள்ளம் வெட்டிச் சிலுப்புகிறது.’

அவள் மீது படுவதே தவறு செய்வது என்கிற அளவுக்கு பின்வாங்கிய உள்ளம், ஊரிலிருந்து திரும்பும்போது எதிர்திசையில் முரண்டு நிற்கிறது. இத்தனைக்கும் அவள் இப்போது அவன் அருகில் இல்லை. நடுவில் பார்வதி பாய் அமர்ந்திருக்கிறாள். நடுவில் பார்வதிபாய் உட்கார்ந்திருக்க ஒருபுறம் யமுனாவும் மறுபுறம் பாபுவும். இப்போது அவன் எண்ணம் வேறுவிதமாக நகர்கிறது. இருவரும் இப்போது அவன் பார்வையில் பெண்கள். அழகான பெண்கள் என்ற எண்ணம் சொற்பநேரத்துக்கு நெஞ்சில் எழுந்து மறைகிறது. மனித மனத்தின் ஆழத்துள் சென்று அங்கிருக்கும் இயல்பான மானுட உணர்வுகளை மேலிழுத்துக் காட்டுகிற தி.ஜாவின் மேதமை இங்கே வியப்பைத் தருகிறது.

பாபுவின் மனவோட்டத்தை தி.ஜா வெளிப்படுத்தும் விதம் அபாரமானது.

அருகிலிருப்பவர்களைப் பார்க்கிறான். ‘வாழைக்குருத்துபோல – பறித்து இரண்டு நாளான – அவள் உடல் பக்கத்தில் பொலிந்துகொண்டிருந்தது. அப்பால் இருந்தது புதிய குருத்தாகப் பளபளத்தது.

யமுனாவின் முகத்தையும் கண்ணையும் வனப்பையும் பார்த்தான் பாபு. இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுக முடியாத, தொட முடியாத ஒரு முழுமை, பொலிவு, சந்தனக்கட்டையின் வழவழப்பு, வர்ணம். நீண்ட விரல்கள், நீண்ட கைகள், நீண்ட பாதம்.

உண்மையாகவே இவள் தொடக் கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச் சுரங்கமான இந்தப் புற அழகிற்குப் பலனே கிடையாதா?

இவளும் ஒரு கணத்தில், ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும். தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள்-ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத்தானே வேண்டும். ( 243 )

மனத்தின் விசித்திரமான இந்தப் போக்கை எண்ணி பாபுவே வெட்கப்படுகிறான்.

பாபு சரேலென்று உலுப்பிக் கொண்டான்.

சை-என்ன அசட்டுக் கற்பனை. நியாயமற்ற கற்பனை. விழித்துக் கொண்டிருக்கும்போதே நம்மை ஏமாற்றி எப்படி இந்த அசட்டுத்தனத்தில் குதித்துத் திளைத்தது மனம். அடங்காதப் பிடாரி.

மனதினாலேயே அவள் கால்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். இதயத்தில் அவற்றை எடுத்து வைத்த மனசிலேயே தலைவணங்கினான்.

இதுவரையிலும் வணங்கத்தகுந்த ஒருத்தியாக நினைத்திருந்த பாபுவின் மனத்தில், அதுவும் தந்தையை இழந்து திரும்பும் இப்படியொரு துயரகரமான சந்தர்ப்பத்தில், இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவந்தது எது?

இருவருக்கும் இருந்த ஒரே ஆதரவான சுப்ரமணிய அய்யர் இப்போது இல்லை, சுந்தரமும் இனி அவர்களுக்கு உதவப்போவதில்லை என்பது பாபுவுக்குத் தெளிவாகப் புலப்பட்டுவிட்ட சமயம் இது. இந்த வேளையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான்தான், தன்னால் மட்டுமே அவர்களுக்கு உதவமுடியும் என்ற நிலையில் அவனது மனத்துக்குள் இப்படியொரு எண்ணம் சட்டென்று மேலெழுகிறது. உடனடியாக மறைகிறது என்றாலும் அந்த எண்ணம் யமுனாவின் மீதான இதுவரையிலுமான அவனது பார்வையை அணுகுமுறையை மாற்றுவதற்கான தொடக்கமாக அமைந்துபோகிறது.  

மூன்றாவது முக்கியமான சந்தர்ப்பம், யமுனாவின் மீதான வழிபாட்டுணர்வு மெல்ல விலகி, அழகிய உடலாக அவளைக் காணும் பாபு தன் விருப்பத்தை அவளிடம் வெளிப்படுத்தும் இடம்.  

யமுனாவின் அப்பா இறந்துபோய் ஒருமாதம்தான் ஆகியிருக்கிறது. ரங்கண்ணாவிடம் பாடம் சொல்லத் தொடங்கி சிலநாட்கள்தான் ஆகியுள்ளன. பெரியப்பா மகன் சங்கு திடீரென கும்பகோணம் வருகிறான். பாபுவின் அப்பாவையும் யமுனாவையும் பாட்டப்பா சேர்த்துப் பேசுவதைக் குறித்து ஆவேசத்துடன் சொல்கிறான். அவனை ஊருக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பும் இரவில் தங்கம்மா அறைக்குள் வந்து அவனை ஆட்கொள்கிறாள்.

ஆதரவற்ற பார்வதியையும் யமுனாவையும் பொறுப்பேற்கவேண்டும் என்ற எண்ணம், யமுனாவின் மீது விழத்தொடங்கும் பழி நிழல்கள், தங்கம்மாவின் தயவால் கண்டுகொள்ளும் தன்ணுணர்வு என்று எல்லா அழுத்தங்களும் சேர்ந்து அவனை நெருக்கி இதுவரையிலும் மனத்துள் பொத்திவைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்தச் செய்கின்றன. அதை உறுதிப்படுத்தும்விதத்தில் ராஜத்திடமும் அப்போதே சொல்லிவிடுகிறான்.

இந்த அழுத்தங்களின் காரணமாக அவளிடம் தன் மனத்தை வெளிப்படுத்தும் துணிச்சல் எப்படி வந்தது என்பதை யமுனாவே வெளிப்படுத்துகிறாள். தங்கம்மாவிடம் தன்னை இழந்த நாளன்று மாலையில் ‘உனக்கு நான் துரோகம் செய்துவிட்ட‘தாய் சொல்லும்போது யமுனா கேட்கிறாள் ‘இப்படியெல்லாம் எங்கிட்ட பேச எப்படித் துணிஞ்சது உனக்கு?’.

இதுவரையிலும் ஆதரவாய் இருந்துவந்த அப்பா சுப்ரமணிய அய்யர் இப்போது இல்லை என்ற எண்ணம் தரும் துணிச்சல்தான் பாபுவை அப்படிப் பேசச் செய்திருக்கிறது என்பதை அவள் உணரவில்லை. அதற்கு முன்பே அப்படியொரு எண்ணம் இருப்பதாகச் சொன்னாலும், அதை வெளிப்படுத்தும் துணிச்சல் இந்த சந்தர்ப்பத்தில்தான் பிறக்கிறது.

சிறப்பான விதத்தில் உருவாக்கப்பட்ட நான்காவது சந்தர்ப்பம், நாவலின் இறுதியில் பாபுவின் மனத்தில் இருந்த வழிபாட்டுணர்வு காமமாகிக் கொதிக்கிற தருணம்.

மருத்துவரிடம் போய்விட்டு ரிக்ஷாவில் வீடு திரும்புகிறார்கள். அகலமாக இல்லாத ரிக்ஷா இருவரையும் நன்றாக நெருக்கியிருக்கிறது. எதற்காக நெருக்கியிருக்கிறது? இந்த ஸ்பர்சத்தில் உடல் மட்டும் இல்லை, வேறொன்றும் இருக்கிறது என்று காண்பிக்கவா? அவளை அழைத்துக்கொண்டு நந்தமங்கலத்திற்குக் காரில் போனபோதும் இப்படித்தானே போனாம். ஆனால் அப்போது நாம் நினைத்த விண் மட்டும் இல்லை, மண்ணும் இங்கு இருக்கிறது என்று அவன் உடல் ஒரு அச்சத்தையும் துணிவையும் கொடுத்தது. அதே நெருக்கம் இப்போது ஏன் இந்த எண்ணங்களை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது?

இடம் மாற்றிப் போன நெருக்கம் அன்றிரவு உறவாகப் பரிணமிக்கிறது. இதுவரையிலும் அழுந்திக் கிடந்த முடிச்சு அவிழ்கிறது. கடந்த சில நாட்களாக பாலூர் ராமுவுடனான உரையாடல்களின் வழியாக உள்ளுக்குள் உருப்பெற்ற எண்ணம் மேலெழுகிறது. மங்கள்வாடிக்குச் சென்று சிட்சை பெறலாம் என்ற எண்ணம் தீவிரமடைகிறது. ‘சரீரத்தைக் காப்பாற்றி சங்கீதத்தை வளர்த்தார்கள் என்று சொன்னாய். உடம்பே, பாட்டாக, நாதமாகிவிடவேண்டும்’ என்று யமுனா சொல்கிறாள்.

தொடர்கதை வடிவில் எழுதப்பட்டிருந்தபோதும் அபாரமான இத்தகைய சந்தர்ப்பங்களில் உருப்பெறும் மோதல்களின் வழியாக நாவலை திரண்டெழச் செய்திருப்பது தி.ஜானகிராமனின் கலை மனத்தின் உச்சமே. 

0

முதல் வாசிப்பிலும் முதிராப் பருவத்திலும் யமுனாவை ஒரு முதிர்கன்னியாக, அழகியாக, தேவதையாக மட்டுமே மனம் அறிந்திருந்தது. ஆனால், தொடர்ச்சியான வாசிப்புகளுக்குப் பிறகு, தமிழ் நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண் கதாபாத்திரங்களில் யமுனா தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பதன் காரணத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது.

யமுனா, உள்ளபடியே பிடிவாதக்காரி. கர்வமிக்கவள். எதற்கும் பணியாதவள். மராட்டிய ராஜவம்சத்தின் கம்பீரம் இயல்பிலேயே அவளது உடலிலும் பார்வையிலும் தோற்றத்திலும் அமைந்துவிடுகிறது. அவள் தனக்குத்தானே அரசியாக இருக்கப் பிறந்தவள். அவள் உடலுக்குள் கிடக்கும் உள்ளத்தில் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அறிவும் கனவுகளும் மண்டி அழகின் துடிப்புடன் விரிந்த பிரபஞ்சம் அது. ஆனால், அவளது அழகில் தோல்வி அவளைச் சுற்றி இருளாகக் கவிந்திருக்கிறது. அழகும் இங்கிதமும் நிறைந்த அவள் பாழுங்கிணற்றில் சுவரின் இடுக்கில் பூத்த பூவாகவே இருக்கிறாள். சாதித் தூய்மை அவளை வஞ்சிக்கிறது. அவள் இளமையை உறிஞ்சும் காலத்துக்கு முன் அவளது அழகு நிர்கதியாக நிற்கிறது. மனத்துள் எழுந்த ஆசைகளையும் கனவுகளையும் ராவும் பகலுமாகத் தவித்து நசுக்குகிறாள். மீண்டும் மீண்டும் தலையெடுத்து ஆடுவதைப் பிடித்து நசுக்கிக் காலில் மிதித்துத் தேய்த்துவிடுகிறாள். ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும்போதும் அது தோல்வியில் முடியும்போதும் அவள் வெறித்திருப்பது சூனியத்தையே.

இத்தகைய குணாம்சத்தை கொண்டிருக்கும் யமுனாவை கோயில் யானையின் அருகில் நிறுத்திக் காட்டுகிறார் தி.ஜானகிராமன்.

யமுனாவின் அழகு அவளுக்கு உதவவில்லை எனும்போது தன் பலம் அறியாது சங்கிலியில் கட்டுண்ட யானையாக அவளைக் காண்கிறான் பாபு. யமுனாவின் அழகு அம்மாவுக்கு அடிபணிந்து சுயசாதிக்கு நடுங்கி ஒடுங்கிக் குமைவதற்குத்தானே ஆயிற்று என்ற ஆற்றாமை பெருகிறது. இந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு அவள் ஏன் இஷ்டமான பாதையில் அடிபோடவில்லை? என்று கோபம்கொள்கிறான்.

பார்வதி பாய் யமுனா இருவரையுமே பரம்பரை கௌரவத்தின் சுமை அழுத்துகிறது. சுப்ரமணி அய்யர் இறந்த பிறகு நெல் வருவதில்லை. ஆதரவு கிடையாது. அந்த நிலையிலும் நகைகளை விற்றுச் சாப்பிடத் துணிகிறார்களேயன்றி எந்த வேலையையும் செய்யத் தோன்றுவதில்லை அவர்களுக்கு. நீலுப் பாட்டியை ஒரு எருமை மாட்டை வைத்து பால் விற்று வாழ்க்கையைத் தள்ளுவதைப் பற்றிய யோசனையே எழுவதில்லை. யமுனாவின் அண்ணன் சுந்தரம் சொல்வதுபோல பெரிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு சிறிய வீட்டுக்குச் செல்லமுடியாமல் கௌரவம் அவர்களைத் தடுக்கிறது. ராஜ வம்சத்தின் ரத்தம் அவர்களுக்கு செல்வாக்கை அதிகாரத்தை கௌரவத்தை இழக்க ஒப்புக்கொள்வதில்லை.

பார்வதி பாயின் சகோதரியின் வைத்திய செலவுக்காக இழக்கும்போதும்கூட அதே வீட்டில் வாடகைக் கொடுத்தே வாழ்கிறார்கள். பசி இருவரையும் பிரிக்கிறது. அம்மா ஒரு வீட்டிலும் யமுனா இன்னொரு வீட்டிலுமாக காலம் கழிகிறது. இறுதியல் பசி யமுனாவை சென்னைக்கு விரட்டுகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு ஒவ்வொன்றாக இழக்கநேரும்போதுகூட அவள் கௌரவத்தை மானத்தை இழக்கத் தயாராக இல்லை. கங்காதரம் பிள்ளையின் ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளாதபோது, இயலாமையின் சுமை தாங்காத பார்வதிபாயுக்கும் அவளுக்கும் இடையில் மனத்தாங்கல் எழுகிறது.

வறுமையிலும் தன் சுயமரியாதையை இழக்காத உறுதிகொண்ட யமுனாவின் இந்தத் தோற்றத்தை தி.ஜானகிராமன் காவேரியோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். ‘மின்சார ஒளியின் நெடுவீச்சில் வேகமாக பெருகியோடும் காவேரியைப் பார்க்கும்போதும் அவன் அவளையே நினைக்கிறான். ஓட்டத்திலும் விரைவிலும்கூட ஒரு தனி அடக்கமும் அமைதியும் நிறைந்து நிற்கின்றன. இந்தக் காவேரிக்கு ஒரு மனித உருக் கொடுப்பதென்றால்… யமுனாவின் உயர்ந்த உருவமே ஞாபகத்துக்கு வருகிறது. காவேரியின் எழிலும் வளர்ப்பும் பெரிய மனித இயல்பும் பெரு வாழ்வும் திரண்டு நின்ற பெண் வடிவம் அது’ என்று பாபு யோசிக்கும்போது ஒட்டுமொத்த யமுனாவின் வாழ்வும் காவிரி வெள்ளமாகி புரண்டோடுவதை உணர முடிகிறது.

இறுதியில், பாபுவிடம் அவள் பணிவதுகூட நன்றியுணர்வின் காரணமாகவே, காதலினால் அல்ல. இளமையில் கிடைக்காத ஒன்று நாற்பது வயதில் உடல் வாடிய நிலையில் கிடைக்கும்போது அவளால் அதை ரசிக்க முடிவதில்லை. பரவசப்பட முடிவதில்லை. உடைந்துபோன பலூனை ஊதும் குழந்தையின் நிலை என்றே சொல்கிறாள். ஆனால் பண்புள்ளவள். தன் துயரத்தை தானே சுமக்கிறாள். ‘சிலுவை உடல்’ என்று சித்தரிப்பது சாலப் பொருத்தம்.

தி.ஜானகிராமன் நாவலின் வெவ்வேறு இடங்களில் ஜாதிப்பூவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை ஒவ்வொன்றும் யமுனாவின் குணாம்சத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

பூஜைமணம் கொண்ட ஜாதிமல்லி அவள் என்ற எண்ணம். அம்மா அரும்பு அரும்பாக இரவில் தொடுத்து பூஜையறையில் படங்களுக்கெல்லாம் போட்டிருப்பாள். காலையில் அலமாரியைத் திறக்கும்போது குப்பென்று அந்த மணம் சற்று உஷ்ணமாக வீசும்.-உள்ளே பட்டாபிஷேகத்தில் அமர்ந்த ராமனும் சீதையும் காமாட்சியும் விடும் மூச்சைப்போல – தெய்வீக மணம். இந்தப் பூவை மனிதர்கள் எப்படி மனதோடு சூட்டிக்கொள்கிறார்கள்? தெய்வத்துக்குரிய மணத்தை எப்படித் தலையில் தரிக்கத் துணிகிறார்கள்.

அதே ஜாதிப்பூவைத்தான் தங்கம்மா சூடி வந்து அவனை வீழ்த்துகிறாள். அப்போது ஜாதிப் பூ மனிதத் தலையில்தான் கமழ்ந்தது. உதிர்ந்து கிடக்கும் ஜாதிப்பூவைக் காலால் தள்ளி எடுத்து வீசி எறிகிறான்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் யமுனாவை வாடிய கோலத்தில் கண்டதைக் குறித்து ராஜத்துக்கு எழுதுகிறான். ‘அவள் வாடித்தான் போய்விட்டாள். ஆனால் தலையில் வைத்து வைத்து, உடல் சூடு பட்டு வாடிய வாடல் இல்லை. பூஜை அறையிலிருந்து உதிர்ந்த நிர்மால்யம். மறுநாள் காலை பூஜை அலமாரியைத் திறக்கும்போது உதிரும் வாடல், விளக்குமாற்றாலோ காலாலோ தொட்டுவிட முடியாது.’

நாவல் விரிந்துசெல்லும் ஒவ்வொரு தருணத்திலும் யமுனாவைப் பொருத்திப் பார்த்துவிட முடிகிற அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளார் தி.ஜா. யமுனாவைப் பற்றிய விவரணைகளும் ஒப்புமைகளும் வாசக மனத்துள் வரைந்து காட்டும் பெண்ணுருவம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறானது என்றபோதிலும் அவற்றின் குணாம்சங்களில் வேறுபாடுகள் கிடையாது. காலங்கள் தாண்டியும் இன்னும் தன்னை அதே கம்பீரத்துடனும் மேன்மையுடனும் நிறுத்திக்கொள்ளும்படியான இயல்புகளை யமுனாவிடம் சேர்த்திருப்பதன் காரணமாகவே நாவலும் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்கிறது.

0

நாவல் இன்றளவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் தி.ஜானகிராமன் உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள். சங்கீதம் கற்றுக்கொள்ள ரங்கண்ணாவிடம் செல்லும்போது அவர் சொல்கிறார் ‘சில்பத்திலே ஞானம்னா மனசில நினைக்கிறதைக் கல்லிலே காண்பிக்கணும்.’

தி.ஜானகிராமன் நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் மனத்தில் கண்டதுபோலவே சொற்களின் வழியாக எழுத்தில் காட்டியிருக்கிறார். நாவலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிர்ப்புடனும் நினைவில் பதியும்வகையிலான குணாம்சங்களுடனும் வனைந்திருக்கிறார் தி.ஜா. மையக் கதாபாத்திரங்களை செதுக்கிக் காட்ட எடுத்துக்கொண்ட அதே கவனத்துடனும் அக்கறையுடனுமே ஒரேயொரு காட்சியில் வந்து மறையும் சிறு கதாபாத்திரத்திரத்தையும் வடித்துக் காட்டியிருக்கிறார்..

பதின்பருவத்தின் தவிப்புகளையும் தடுமாற்றங்களையும் கொண்ட பாபு உண்மையில் நாவலின் முக்கிய கதாபாத்திரமாக இருந்தபோதும் மங்கலான தோற்றத்துடனே அமைந்திருக்கிறது. நாவலின் பிற மையக் கதாபாத்திரங்களான யமுனா, ரங்கண்ணா, வைத்தி, ராஜம் போன்றவற்றின் வெளிச்சத்திலேயே இருக்க நேர்ந்ததால் அவற்றின் ஒளி பாபுவின் மீதும் சற்றே கூடுதலாக விழுந்திருக்கிறது என்றே யோசிக்க முடிகிறது.

நாவலெங்கிலும் காணக்கிடைக்கும் யமுனாவைக் குறித்த அபாரமான சித்தரிப்புகள் அவளை நம் மனத்தில் உயிரோவியமாக பதியச்செய்வதில் நமக்கு எந்த ஆச்சரியமும் தோன்ற வாய்ப்பில்லை. ஆனால், நாவலின் ஒரே ஒரு காட்சியில், தெருவோரமாய் சத்திரத்தில் ஈரம் சொட்டச் சொட்ட கையில் ஒரு டம்ளருடன் ஒதுங்கி நிற்கும் தையுப் பாட்டியை, ‘ஆறும் முழுக்கும்தான் அதுக்கு ஆறுதல்’ என்ற ஒருசில வரிகளிலேயே ஜீவனுடன் நம் கண்முன் நின்று ஒதுங்குகிறார். 

முதல் அத்தியாயத்தில் யமுனாவின் வீட்டுக்கு பாபு வரும் சந்தர்ப்பத்தில் வெகு இயல்பாக அமைந்துள்ள உரையாடலில் ‘பெரிய கடிகாரம் எங்கே?’ என்று பாபு கேட்க ‘யமுனா அண்ணன் வேணும்னு சொல்லிச்சாம். போன மாசம் இவங்க அப்பாதான் எடுத்துகிட்டுப் போனாங்க’ என்று பதில் சொல்கிறாள் பார்வதிபாய். அதுவரையிலும் நாவலுக்குள் வராத யமுனாவின் அண்ணன் சுந்தரத்தையும் அவனது மனப்போக்கையும் துல்லியமாகக் காட்டிவிடுகிறார் தி.ஜா. அதை உறுதிப்படுத்தும்விதமாக அப்பாவின் சாவுக்குப் போகும்போது இன்னொரு வாக்கியம் ‘பேச்சும் செயலும் அப்பாவைக் கொண்டு அடக்கம் செய்துவிட்டு வந்ததைவிட இடத்தை அடைத்துக் கொண்டிருந்த ஏதோ பழைய சாமானை விற்றுவிட்டது போலவே இருந்தன.’

‘பாக்குவெட்டியிலே வக்கறமாதிரி வச்சண்டிருக்கேன்’ என்று பெரியப்பா பெருமைப்படுகிற, ‘இடுப்பில் நீராவிமாதிரி மல்வேஷ்டி’ கட்டியிருக்கும் சங்கு, பாபுவிடம் புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்லும் ‘அட்டைக்கரி இல்லையென்றாலும் கறுப்பு’ அவயம், ராஜம் நெஞ்சில் வைத்து பூஜிக்கும் சுலோசனா, ‘நெற்றியில் ஒன்றுமில்லாமல் காலில் உருட்டில்லாமல் கை கழுத்தில் ஒன்றுமில்லாமல் ஒரு வெள்ளை ரவிக்கை, கறை தலைப்பில்லாத ஒரு பச்சைப்புடவை’ கட்டிய அக்கா விஜயம், ‘எலுமிச்சை நிறமும், முக்கோணம் வாய்ந்த முகம்’ கொண்ட, படிப்பு வராத ஆனால் வீட்டுக் காரியங்களை நாற்பது வயது அனுபவத்துடன் செய்யும்’ அக்கா மகள் பட்டு, ‘சாமி, மளைக்கின்னு ஒதுங்கினா, இப்படிச் செய்யலாமான்னு’ சிரிக்கும் புல்லுக்கட்டுக்காரி, ‘கட்டையாக தூண் மொத்தத்திற்கு சாரீரம்’ கொண்ட சாம்பன், ஷண்முகம், ‘கிழவி ஒல்லி. பொல்லென்று வெளுத்த தலை. துவாரத்திலிருந்து விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்துகிற பெரிய சிவப்புக் கல் ஓலை. காலிலும் முகத்திலும் மஞ்சள் தேய்த்துக் குளித்த பசுமை படர்ந்த’ ரங்கண்ணாவின் மனைவி, சென்னையில் உடன் பணிபுரியும் சித்திரக்காரர், வீட்டுச் சொந்தக்காரர், ‘உபசாரம் செய்வதில் கைதேர்ந்தவள். அவளுக்கு ஒன்றும் மனது கடிசல் இல்லை’ நீலுப்பாட்டி, மங்கள்வாடியிலிருந்து வந்துபோகும் மராத்திய பாடகர்கள் என்று சின்னஞ்சிறு கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட சொற்பமான வரிகளில் துல்லியமாக செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன.

0

நாவலின் பெரும்பகுதி இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் காலத்திலேயே அமைந்துள்ளது. குழப்பமும் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும்கூடிய சூழல். இரவில் விளக்குகள் எரிய அனுமதியில்லை. ஒளியற்ற உத்தரவாதமற்ற கலக்கமான இந்தச் சூழல் நாவலின் கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் போராட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.  

குறிப்பாக, வெளிச்சத்தைக் காணமுடியாமல் இருட்டிலேயே முடங்கிக் கிடக்கும் யமுனாவுக்கானது இந்தச் சூழல். தி.ஜா யமுனாவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ஒளியைப் பற்றி வெளிச்சத்தைப் பற்றி எழுதுகிறார். யமுனாவின் ‘அழகின் தோல்வியே இப்படி இருளாகக் கவிந்திருக்கிறது’. எப்போதுமே வெளிச்சம் இல்லாத, ஏதோ ஒரு சூன்யம், ஏதோ ஒரு வறட்சி மனதைப் பிடித்துக்கொள்கிற துக்காம்பாளையத் தெரு. அந்த இருப்பிடமே அவளது ஒளியற்ற வாழ்வுக்கு சாட்சி. விலைமலிவு என்பதைவிட அய்யருக்கு இருட்டில் வந்துபோவது வசதியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் பார்வதியும் யமுனாவும் இறுதிவரையிலும் அந்த பாழிருட்டிலேயேதான் காலம்கழிக்க நேர்கிறது.

உத்தரவாதமற்ற இந்த இருட்டிலேயேதான் பாபுவும் உழன்றிருக்க நேர்கிறது. கல்லூரிப் படிப்புக்காக கும்பகோணத்துக்கு வந்த நாளிலிருந்து ஏற்படும் அலைக்கழிப்பும் தடுமாற்றங்களும் சென்னையிலும் அவனைத் தொடர்கின்றன. அங்கங்கே சில வெளிச்சங்களைக் காணமுடிந்தபோதும் தான் விரும்பும் ஒளி எங்கேயெனத் தெரிந்திருந்தபோதும் அதைநோக்கி அவனால் உறுதியாக முன்னேற முடியாமல் முடக்கிப் போடுகிறது இருட்டு.

நாவலின் தொடக்கத்தில் ஒரு வரி, ‘யமுனா உள்ளே மறைந்துவிட்டாள். ஏதோ விளக்கை எடுத்துக்கொண்டு போய்விட்டது போலிருந்தது.’ இந்த ஒற்றை வரியே நாவலின் காலத்துக்கும் சூழலுக்கும் பொருந்தி நிற்கிறது.

0

ஒரு நாவல் எழுதப்பட்டு பல வருடங்கள் கழித்தும் சிறிதும் கருக்கழியாமல் மேலும் மேலும் ஆழங்களுடனும் அர்த்தங்களுடனும் துலங்கி எழும்போது அதன் வனப்பும் வசீகரமும் மேலும் கூடும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் முன்பறியாத புதிய ஒரு அனுபவத்தை சாத்தியப்படுத்தும். மோக முள் அவ்வாறான ஒரு செவ்வியல் நாவல். கதையை மட்டுமே கவனத்தில் கொண்டு அணுகிய முதல்வாசிப்பில் நாவல் தந்த அனுபவமும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகான இன்றைய வாசிப்பில் அடைந்திருக்கும் அனுபவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பைத் தருகின்றன. எழுதப்பட்ட நாவலில் சாத்தியங்கள் இருக்கும்போதுமட்டுமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும்போது புதிய திறப்புகளை கண்டுணர முடியும். துங்கபத்திரையின் கரையில் வீற்றிருக்கும் ஹம்பியைப் போலத்தான் மோகமுள் நாவலும். ஒவ்வொரு முறை ஹம்பிக்குச் செல்லும்போதும் அதற்கு முன்பு கண்டிராத புதிய கோயில்களோ மண்டபங்களோ புதையுண்ட மண்ணிலிருந்து முளைத்து நிற்கும். தூண்களும் சிற்பங்களும் எடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். மாளிகைச் சுவர்களும் தடாகக் கரைகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அகழ்வாய்வின் ஒவ்வொரு கணமும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் அதிசயம் ஹம்பி. மோக முள், எழுத்தில் வடிக்கப்பட்ட ஹம்பி.

0

 

Sunday 18 October 2020

தென்னை மரத்தில் ஏறுதல்…

 ( ‘ஆவநாழி’ அக்டோபர் 2020 மென்னிதழில் வெளியானது- ஓவியம் நண்பர் சுந்தரன்  முருகேசன், ஈரோடு)


‘அவ்வளவு முக்கியமான வேலை இல்லை’ என்ற எண்ணத்துடன் செய்யத் தொடங்கும் சில காரியங்கள் நம்மை எதிர்பாராத சில இடங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடக்கூடும். அந்திமழை இதழுக்காக கொங்கு புனைவெழுத்தாளர்களைக் குறித்த கட்டுரை ஒன்றை எழுதும்படி ‘அந்திமழை’ அசோகன் கேட்டுக்கொண்டதை அடுத்து பட்டியல் ஒன்றை தயாரிக்க நேர்ந்தது. யாரைச் சேர்ப்பது யாரை விடுப்பது என்று மிகக் கவனமாக கையாளவேண்டிய காரியம் இது என்பதால் நண்பர்கள் சிலரிடம் ஆலோசனைகளைப் பெற்றேன். அதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது கவிஞர் சுகுமாரன் ‘புனர்ஜென்மம்’ என்ற நாவலைக் குறித்துச் சொன்னார். நாவலின் பிரதி கையில் கிடைத்தவுடன் அதில் ஒரு ஆச்சரியம். டிசம்பர் 1987ல் கோவை சமுதாயம் பிரசுராலயம் பதிப்பித்த அந்த நாவலுக்கு க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கிறார்.

“சற்றே கனமான விஷயம்தான் – இந்த நாவலின் விஷயம். பார்ப்பனப் பையன் முன்னோர்கள் செய்த அதிகாரபூர்வமான பாவங்களினால் அவனுடைய இன்றைய முன்னேற்றம் தடைபடுகிறது. இண்டர்மீடியட்டில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறியும் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். பி.ஏ படித்துத் தேறியும் வேலை கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய முன்னோர்கள் செய்த பாவம்சுமை இந்த ஜென்மத்தில தன்னை அழுத்தி எழுந்திருக்கவிடாமல் செய்கிறது என்கிற எண்ணம் பையனை ஆட்கொள்கிறது. தான் பிராயச்சித்தம் செய்யவேண்டும், தன் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு என்கிற ஒரு ஏசு-செருக்கு (Jesus complex) ஏற்படுகிறது. இதில மனோதத்துவ ரீதியில் ஒருவித தவறும் இல்லை.

பையன் பூணூலை ஒரு சடங்குடன் நதி, சூரியன் சாட்சியாக அறுத்தெறிகிறான். பூணூல் போடாத மகன் என்று தாயார் எள்ளி நகையாடுகிறாள். தகப்பனார் உணர்ச்சிவசப்படாதவர் – இதனாலெல்லாம் சமுதாயம் மாறிவிடாது என்று வாதம் செய்கிறார். அது தெரிகிறது பையனுக்கு – அதனால் அவரின் சுமை குறைகிறது.

இந்த மாதிரி நாவல்களில் ஒரு பயணம் மரபாக வருவதுதான். அதே மாதிரயே பையன் பயணத்தை மேற்கொள்கிறாள். வீட்டைவிட்டுக் கிளம்பி ஒரு கிராமத்தில் சக்கிலியனாக வேலை செய்து சக்கிலியனாகவே வாழ்ந்து சக்கிலியத் தகப்பனுக்கும் தாய்க்கும் உகந்தவனாகிறான்.

இரண்டாவது பயணமும் அவசியமாகிறது. நகரசுத்தி தோட்டியாக வாழ்ந்து தன் முன்னோர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது அவன் லட்சியம். தோட்டியாகிறான். லச்சி என்கிற தோட்டிப் பெண்ணைக் காதலித்து மணந்து கொள்கிறான். அவனிடம் ஒரு ஆன்மீக – தெய்வீக சக்தி இருக்கிறது என்று முதலில் மனைவியும் பின்னர் மற்றவர்களும் கண்டுகொள்கிறார்கள்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா? இன்று நம் வாழ்வில் நடக்கிறதா என்று அவநம்பிக்கை ஏற்படலாம்தான். ஆனால் நடந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஆசிரியர் நாவலை அமைத்துச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிருஷ்டித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

நாவல் படிப்பதற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. சிந்திப்பதற்கும் நிறையவே விஷயங்கள் இருக்கின்றன” என்று மதிப்புரையில் க.நா.சு குறிப்பிடுகிறார்.

‘புனர்ஜென்மம்’ நாவலை வாசித்தபோது இதன் களமும் கதையும் மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு பிராமண இளைஞன் சேரியில் நகரசுத்தி செய்யும் தோட்டியாக வாழ்ந்து பிராயசித்தம் தேடுவதாக அமைந்துள்ள கதைக்களம் உள்ளபடியே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கும் இந்த நாவலைக் குறித்து வேறு பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் ஆங்கில வடிவமான ‘The Light from Heaven’ 1990ல் பெங்குவின் வெளியீடாக வந்துள்ளது. கன்னடத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் வழியாக தலித்தியம் குறித்த உரையாடல்கள் தமிழில் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் இந்த நாவலும் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நாவலைக் குறித்த எந்தச் சலனமும் தமிழ்ச் சூழலில் இல்லாமல் போனது வியப்புக்குரியதுதான்.

இதை எழுதியவர் தமிழ்ச் சூழலில் எழுத்தாளராக அறியப்படாத ஒருவர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படியொரு கதைக்களத்தைக்கொண்டு நாவலை எழுதியவர் வேறு படைப்புகளை எழுதவில்லையா என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து தேடியதில் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.  

இவரது முதல் நாவல் ‘அன்பே நம் ஆயுதம்’ 1947ல் வெளிவந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியைக் கொண்ட இந்த நாவலை கோவை கஸ்தூரி அச்சகம் வெளியிட்டுள்ளது.  

தமிழில் அவர் எழுதி பதிப்பிக்கப்படாத இன்னொரு நாவல் ‘நீலமலை வெள்ளையர்கள்’ கைப்பிரதியாகவே நின்றுவிட்டது. ஒரு எதிர்கால நாவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த நாவலின் காலம் கி.பி.2185. அணுயுகத்துக்குப் பின்பு உலக நாடுகள் கிழக்கு, மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துவிடுகின்றன. விஞ்ஞான அறிவைக் கொண்டு செயற்கையாக குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. மொத்த அறிவையும் PUP எனப்படும் Philosophy of Universal Pragmatism என்ற தத்துவத்தில் அடக்கிவிடுகிறார்கள். கிழக்குப் பகுதியில் நீலமலையில் மட்டும் பழங்கால ஆங்கிலேயர்கள் வசிக்கும் சிறிய பகுதி உள்ளது. இவர்கள் இன்னும் பழைய முறைப்படி இயற்கை சார்ந்து வாழ்பவர்கள். இவர்களது வாழ்வைப் பற்றி ஆராய வரும் மேற்குலக பிரஜை சந்திக்க நேரும் பிரச்சினைகள்தான் இந்த நாவல். நடைமுறை சார்ந்த பல உலகளாவிய பிரச்சினைகளையும் விவாதிக்கும் இந்த நாவலின் ஆங்கில வடிவமான ‘Angrezis in Blue Mountains’ பதிப்பிக்கப்படவில்லை. 1994ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் தமிழின் முதல் அறிவியல் புனைவு நாவலாக இருக்கக்கூடும்.

‘அன்பே நம் ஆயுதம்’, ‘நீலமலையில் வெள்ளையர்கள்’, ‘புனர்ஜென்மம்’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களைத் தவிர ‘தேவதாசி’, ‘A Handful of Earth’ ஆகிய இரண்டு ஆங்கில நாவல்களையும் எழுதியுள்ளார். ‘புனர்ஜென்மம்’ ‘The Light from Heaven’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 

1976ல் சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட ‘தேவதாசி’ நாவல் அவரது கிராமத்தில் வாழ்ந்த நாகா எனும் தேவதாசி மரபைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் வாழ்வை  அடிப்படையாகக் கொண்டது.

‘Remembrance of Things Lost‘ ஆங்கில நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. சிறையிலிருந்து ஒலிக்கும் ஒரு கைதியின் குரலாக எழுதப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தையும் மனோநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது இந்த நாவல் பிரசுரம் பெறவில்லை.

‘A Handful of Earth’ நாவலை சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் 1974ல் வெளியிட்டுள்ளது. சிறுமுடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டது இந்த நாவல். கிராம மக்களின் ஏழ்மை நிலையையும் சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் பின்னணியாகக் கொண்டுள்ளது. 1973ம் ஆண்டு கிறித்துவ இலக்கியச் சங்கத்தினால் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவல் மத நம்பிக்கைகளையும் மரபின் வேர்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்த நாவல் ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருபத்திமூன்று சிறுகதைகளை எழுதி அவற்றை ‘A Measure of Culture’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகத் தொகுத்திருந்தபோதிலும் பதிப்பிக்கப்படவில்லை. இவற்றில் பல கதைகள் ‘தி இந்து’ உட்பட பல்வேறு இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பிரசுர விபரங்கள் கிடைக்கவில்லை. சில கதைகளை BBC World Service ஒலிபரப்பியுள்ளது.

‘I Am a Stranger Here’ என்ற கவிதைத் தொகுப்பை 1990ம் ஆண்டில் கல்கத்தாவைச் சேர்ந்த Writers Workshop வெளியிட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். 1969ம் ஆண்டு பாரதிய வித்யா பவனும் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையும் சேர்ந்து இதனை வெளியிட்டுள்ளனர். கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தை ‘Canto Beautiful’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனை 1984ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை பதிப்பித்துள்ளது. சிலப்பதிகாரத்தை ‘The Anklet’ என்ற பெயரில் நாடகமாக எழுதியுள்ளார். 1982ல் பம்பாய் பாரதிய வித்யா பவன் பதிப்பித்துள்ளது.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தன் பங்களிப்பைத் தந்திருக்கும் இவர் தனது துறைசார்ந்த நூல்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பலவும் பதிப்பிக்கப்படாமல் கைப்பிரதியாகவே நின்றுபோயுள்ளன.

இத்தனை நூல்களை எழுதியிருந்தும் இவற்றின் ஆசிரியரான கஸ்தூரி சீனிவாசன் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஒரு எழுத்தாளராக அவர் அறியப்படவில்லை என்பது விந்தைதான். காரணம் அவர் தனது தொழில்சார்ந்த பணிகளுக்கு நடுவே கிடைத்த சொற்ப நேரத்தில் மட்டுமே எழுத நேர்ந்தது. வாசிப்பும் எழுத்தும் அவருக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தபோதிலும் தனது தொழில் துறை சார்ந்து அவர் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளமாக இருந்தன. கோயமுத்தூரின் பஞ்சாலைகளின் வளர்ச்சியிக்கும் இந்திய அளவில் பஞ்சாலைத் தொழிலின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டிருக்கும் முதன்மையானவர்களில் கஸ்தூரி சீனிவாசனின் பெயரும் ஒன்று. பஞ்சாலைத் தொழிலுக்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி 1969ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது.  தென்னிந்தியாவில் நூற்பாலைகளுக்கான ஆராய்ச்சிக் கழகத்தை (South Indian Textile Research Association – SITRA ) 1951ம் ஆண்டு கோவையில் நிறுவியது அவரது முக்கியமான சாதனை. 1974ம் ஆண்டு இந்தியாவெங்கிலும் இருந்த 103 நூற்பாலைகளை ஒன்றிணைத்து National Textile Corporation உருவாக்கியபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலைகளை மேம்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிக் காட்டினார்.

கோவையை அடுத்த கரடிவாவியில் பிறந்த கஸ்தூரி சீனிவாசன் பட்ட மேற்படிப்பை மான்செஸ்டரில் முடித்தார். இங்கிலாந்தில் தான் கற்றுணர்ந்த தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சி நோக்கினையும் கோவையைச் சேர்ந்த நூற்பாலைகளும் இந்திய அளவில் இயங்கிய பல நூறு நூற்பாலைகளும் பயன்பெறும் வகையில் உபயோகித்தார். அதே நேரத்தில் அங்கு வாசிப்பிலும் எழுத்திலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு எழுதவும் செய்தார். சீனிவாசனின் மனைவி பார்பரா ஒரு ஓவியர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். நீர்வண்ண ஓவியங்களை விரும்பி வரைபவர். அவரது தூண்டுதலின் காரணமாக அமைந்ததே ஜவுளித் துறை சார்ந்த ஒரு கண்காட்சி கூடத்தையும், ஓவியக் கூடத்தையும் நாடக அரங்கையும் ஒருங்கே கொண்ட கஸ்தூரி சீனிவாசன் கலை ஓவியக் கூடம். அவரது கனவுத் திட்டங்களில் ஒன்று. கோவை அவிநாசி சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கூடம் மாதந்தோறும் ஓவியக் கண்காட்சிகளையும் தொடர்ந்து ஓவியப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிய கஸ்தூரி சீனிவாசன் தனது அறக்கட்டளையில் சார்பில் தன்னுடைய அன்னை திருமதி ரங்கம்மாள் அவர்களின் பெயரில் நாவல்களுக்கான விருதொன்றையும் நிறுவினார். தமிழில் வெளியாகும் சிறந்த நாவல் ஒன்றுக்கு (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) அந்த விருது வழங்கப்படுகிறது.

‘Climbing the Coconut Tree’ என்பது அவரது முற்றுப்பெறாத சுயசரிதை. அந்த நூலின் தலைப்பின் பின்னால் உள்ள கதை சுவாரஸ்யமானது. கரடிவாவியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து படிப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் இருந்த முனிசிபல் பள்ளிக்கு வந்து சேர்கிறார். அவருடைய வகுப்பு ஆசிரியரான பத்மநாப ஐயர் வகுப்பில் ஒரு நாள் சொல்கிறார் “தென்னை மரத்தில் ஏறுபவனுக்கு எத்தனை உயரத்துக்கு நாம் உதவமுடியும்? நம்முடைய கை எட்டும் வரைக்கும்தான் நாம் தூக்கிவிடலாம். அதற்குப் பிறகு அவனேதான் முயன்று உச்சியை அடையவேண்டும்.”

‘பெட்ரண்ட் ரஸ்ஸலைப்போல, வாழ்க்கையில் எனக்குள்ள முக்கியமான ஆர்வங்கள் மூன்று. அன்புக்கான ஏக்கம், அறிவுக்காக தாகம், மானுத் துயர் மீதான வருத்தம்’ அவருடைய சுயசரிதையில் உள்ள இந்த வாக்கியமே கஸ்தூரி சீனிவாசனின் மொத்த வாழ்வையும் சுட்டுவதாக அமைந்துள்ளது.

 

0

 

 

 

தமிழ்ச் சிறுகதை – பத்தாண்டுகளில் கடந்தவையும் நிலைப்பவையும்


 ( காலச்சுவடு அக்டோபர் 2020  இதழில் வெளியானது )

நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதை வெளியில் தீவிர வாசிப்புக்குப் பிறகு புதிதாக சிறுகதை எழுதவருபவர்களுக்கு சில சாதகங்கள் உள்ளன. சிறுகதையின் வடிவமும் செறிவும் ஒருமையும் குறித்த உள்ளுணர்வு இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அதே நேரத்தில், எழுத உத்தேசிக்கும் கதைகளை ஏற்கெனவே முன்னோடிகளில் சிலர் எழுதி வைத்திருக்கக்கூடும். எனவே, அதே கதையை முன்பில்லாத மொழியிலும் வடிவிலும் எழுத வேண்டிய நிர்பந்தம். தமிழில் புதிதாக சிறுகதை எழுத வருபவர்கள் எதிர்கொள்ள நேரும் சவால் இது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தமிழ்ச் சிறுகதை பல்வேறு அலைகளுக்கிடையில் தன்னை தொடர்ந்து உறுதியுடன் நிலைநிறுத்தியே வந்துள்ளது. எழுபதுகளில் புதுக் கவிதை பெரும் வீச்சில் எழுதப்பட்ட காலத்திலும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் நாவல்கள் எழுச்சி பெற்றபோதும்கூட சிறுகதைகள் தமக்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்கவில்லை.

இணைய தளங்களின் வருகையும் எழுதுவதற்கான தொழில்நுட்பத்தின் புதிய வரவுகளும் இளைஞர்கள் பலரையும் எழுதச் செய்த இன்றைய காலகட்டத்தில் சிறுகதையின் மீதான கவனம் தீவிரம் பெற்றுள்ளது. முந்தைய காலகட்டத்தைப்போலவே அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் வெளியாகின்றன. புதிய சிறுகதையாளர்களின் தொகுப்புகளும் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுகின்றன.

அச்சிதழ்களில் பக்க அளவுகளுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு சிறுகதைகளை மட்டுமே வெளியிட வாய்ப்பிருந்த நிலையில் இணைய இதழ்கள் அவ்வாறான வரையறைகளின்றி எண்ணிக்கையிலும் பக்க அளவிலும் அதிக கதைகளை வெளியிடும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. இத்தகைய சுதந்திரத்தின் காரணமாக இணைய இதழ்கள் பலவும் ஒரே இதழில் ஐந்துக்கும் அதிகமான கதைகளை வெளியிடுகின்றன. புதிய எழுத்தாளர்கள் பலரும் எழுத பெரும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ‘சொல்வனம்’, ‘பதாகை’, ‘வாசக சாலை’, ‘கனலி’, ‘தமிழினி’, ‘ஓலைச்சுவடி’, ‘யாவரும்’ என இணைய இதழ்கள் பலவும் ஏராளமான சிறுகதைகளை வெளியிடுகின்றன.

இவ்வாறான சுதந்திரமான வரையறைகளற்ற தணிக்கைகளற்ற அணுகுமுறை என்பது ஒரு எழுத்தாளருக்கு சாதகமான அம்சங்கள் பலவற்றையும் உறுதிப்படுத்துகின்றன. எழுதியதை உடனடியாக இதழில் காணமுடிவது, சமூக வலைத்தளங்களின் வழியாக அனைவருக்கும் கொண்டுசேர்ப்பது, பக்கங்களின் அல்லது சொற்களின் எண்ணிக்கை சார்ந்த வரையறையின்மை ஆகியன அவ்வாறானவை. அதேசமயத்தில் இத்தகைய சுதந்திரமும் உடனடித் தன்மையும் பாதகமான சில விஷயங்களையும் கொண்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது முக்கியமான சிறுகதையொன்று கவனத்துக்கு வராமல் போய்விடக்கூடும். நண்பர்களின் பரிந்துரையும் ஊடகங்களின் வழியாக அடைய நேர்கிற தேர்வும் எல்லா நேரங்களிலும் சரியாக அமைவதில்லை. அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகளுக்கு நடுவே ஒரு நல்ல சிறுகதை தனக்கான இடத்தையும் கவனத்தையும் பெற முடியாமல் ஆகிவிடக்கூடும்.

எழுத்தாளர்களிடமிருந்து பெறும் கதையை இணைய இதழ்களில் பெரும்பாலானவை அப்படியே பதிவேற்றும் நடைமுறையே உள்ளது. எழுத்தாளன் எழுதியபடியே எழுத்து, வாக்கிய, இலக்கணப் பிழைகளுடன் கதைகள் வெளியாகின்றன. புதிய எழுத்தாளர்களின் தொகுப்புகள் வரும்போதும் இதே நிலைதான். இவ்வாறான நடைமுறை சார்ந்த சிக்கல்கள் ஒரு எழுத்தாளனின் கதைகளுக்கும் தொகுப்புக்கும் கொண்டுசேர்க்கும் பேறுகள் மெச்சும்படியானவையாய் இருப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளில் ( 2010 முதல் 2020 வரை ) வெளியான புதியவர்களின் சிறுகதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த காலகட்டத்தின் சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் நோக்குடனே எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை.  ஏற்கெனவே சொன்னதுபோல இந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை நிறைய. காலக்கெடுவின்றி ஆய்வு நோக்கில் கட்டுரை எழுத நேரும்போது விடுபடுதல்களின்றி ஒரு முழுமையான பார்வையைத் தருவது சாத்தியம். அவ்வாறன்றி குறைந்த காலக்கெடுவில் கட்டுரையாக எழுத நேரும்போது, ஏற்கெனவே வாசித்திருந்த, கவனத்துக்கு வந்த சில தொகுப்புகளையும், சில கதைகளையும் மட்டுமே கணக்கிலெடுப்பது சாத்தியம். எனவே, விடுபடுதல்கள் தவிர்க்க முடியாதவை. இதில் சொல்லப்பட்டுள்ள சிறுகதையாசிரியர்களைத் தவிர, தொகுப்புகளைத் தவிர வேறு எழுத்தாளர்களும் தொகுப்புகளும் கதைகளும் நிச்சயம் இருக்கக் கூடும்.

புதிய ஒரு சிறுகதையை வாசிக்கும்போது ஏற்கெனவே உள்ள சிறுகதைகளுடன் ஒப்பிடுவதென்பது இயல்பான ஒன்று. உருவம், உள்ளடக்கம், மொழிநடை என ஒவ்வொன்றுக்கும் நிறுவப்பட்ட முன்மாதிரிகள் இருக்கும் நிலையில் ஒப்பீட்டளவில் புதிய கதைகள் எந்த நிலையில் அனுபவமாகின்றன என்பதே அந்தக் கதைகளுக்கான சோதனை எனலாம். இன்று எழுதப்படும் எந்தவொரு கதைக்கும் நம் மரபிலிருந்து ஒரு கதையை உதாரணமாகக் காட்ட முடியும். இன்று எழுதப்படும் சிறுகதையின் சவாலே அது தன் முன்னிருக்கும் சாதனைக் கதைகளின் முன்னால் தனக்கான இடத்தை எப்படி நிறுவ முனைகிறது என்பதுதான். முன்னோடிகளின் சாதனையைக் கடக்கவேண்டும் அல்லது தொடவேண்டும் என்பதே எழுத முனையும் எழுத்தாளனின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். அவ்வாறான ஒரு சீரிய முயற்சியில் அவன் வெற்றிபெற முடியாமலும் போகலாம். அது பொருட்டில்லை. ஆனால் அந்த முயற்சியின் வழியாக எத்தகைய உயரத்தை அக் கதை எட்டியுள்ளது என்பதுதான் முக்கியம்.

இந்த பத்தாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதைகள் ஏற்கெனவே நம் முன் உள்ள தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியத்துக்கு சேர்த்திருக்கும் புதிய பரிமாணங்களையும், உத்தி உருவம் உள்ளடக்கம் சார்ந்து கொண்டுசேர்த்துள்ள புதுமைகளையும் அறியும் முனைப்புடன் இக்கதைகள் அணுகப்பட்டுள்ளன.

01

நூற்றாண்டைக் கடந்திருக்கும் சிறுகதைகள் பொதுவாக அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கையை மனிதர்களின் போக்கை முன்வைப்பவையாகவே அமைந்துள்ளன. சமூகத்துக்கும் தனிமனிதனுக்குமான உறவு, மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு என்ற இருவேறு நிலைகளிலுள்ள முரண்களையும் முயக்கங்களையும் தொட்டுக் காட்டியுள்ளன. மனத்தின் தீராத மர்மங்களைத் துலக்கிக் காட்ட முனைந்துள்ளன. விரிவான நோக்கில் அணுகும்போது இக் கதைகள் நிலம் சார்ந்த எல்லைகளுக்குள் நின்றே பேசுகின்றன என்பதை உணரலாம். (எப்போதும்போல புதுமைப்பித்தனும் மௌனியும் இதில் விதிவிலக்கு.) ஒவ்வொரு எழுத்தாளருக்குமென குறிப்பிட்ட களத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் அடையாளப்படுத்த முடியும்.

தமிழ்க் கதைகளின் நிலம் சார்ந்த எல்லைகளை இன்றைய கதைகள் உலகளாவிய அளவில் விரிவடையச் செய்துள்ளன. இந்த எல்லைகள் வெறும் பிரதேசம் கடந்த ஒன்றாக மட்டுமல்லாது மதிப்பீடுகளிலும் அணுகுமுறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகவும் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மனித வாழ்வுக்கென பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. தமிழ் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ் என்பது ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து எழுதுவதையும் உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்கு சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக் கதைகள் தமிழ் புனைவுலகுக்கு புதியதொரு பரிணாமத்தைச் சேர்த்துள்ளன.

உலகளாவிய மானுட வாழ்வின் பல்வேறு விநோதங்களையும் வியக்கத்தக்க அம்சங்களையும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் நிறையவே அறிமுகப்படுத்தியுள்ளன. இன்றைய உலகில் நவீனமடைந்திருக்கும் பார்வைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள சாதகமும் பாதகமுமான பல்வேறு கூறுகளையும் இன்றைய தலைமுறையினரின் கதைகள் மையப்படுத்துகின்றன.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர் சித்துராஜ் பொன்ராஜ். அதிகமும் சிங்கப்பூரைக் களமாகக் கொண்டிருப்பவை அவரது கதைகள்.

தமிழில் அவ்வளவாக பேசாப்பொருளாக உள்ள தன்பாலின உறவு சார்ந்த கதை(கடல், சிரித்த முகமாய் சிங்கம், இருட்டு மனிதர்கள்)களைக் குறிப்பிடவேண்டும். ‘பசித்த மானிடம்’ நாவலில் கரிச்சான்குஞ்சு வெகுகாலத்துக்கு முன்பே கையாண்டிருந்தபோதும் சிறுகதைகளில் அவை சொல்லும்படியாக வெளிப்படவில்லை.

இன்னொருவர் ரா.கிரிதரன். அவரது சில கதைகள் தமிழில் பேசப்படாத கதைக்களங்களைக் கொண்டவை. மேற்கத்திய இசை சார்ந்த பின்னணியைக் கொண்டவை ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை’, ‘இருள் முனகும் பாதை’ ஆகிய இரு கதைகள். மலையேற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நந்தா தேவி’யும் ‘பல்கலணும் யாம் அணியோம்’ என்ற அறிவியல் புனைகதையும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருபவை.

ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ தொகுப்பிலுள்ள கதைகளும் ஜேஸ்டன்வில் என்ற புனைவு நகரில் நிகழும் அயல் அனுபவங்களாகவே அமைந்துள்ளன.

02

தகவல் தொழில்நுட்பத் துறையும் கணிணியும் இன்றைய சமூக வாழ்வின் பல்வேறு திசைமாற்றங்களை நிர்ணயிப்பதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைத் தருபவை. ஏராளமான சம்பளம், வசீகரமான வேலைச்சூழல், வெளிநாட்டு வாய்ப்பு என இளைஞர்களின் மனத்தைக் கவர்ந்த இத்துறைகள் பொதுச் சமூகத்திலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தையும் அதன் வழியாக அவர்களது தனித்தன்மைகளையும் உறுதிப்படுத்தின. கடந்த சில ஆண்டுகளில் சரிவைச் சந்தித்திருந்தபோதும் இதன் மீதான ஈர்ப்பு மட்டுப்படவில்லை. இத் துறை சார்ந்தோர் எழுதியுள்ள சிறுகதைகள் அகச்சிக்கல்களை அலசுகின்றன. திடீரென எதிர்கொள்ளும் பொருளாதாரச் சரிவுகளை நேர்ப்படுத்த முடியாமையின் அவலத்தைச் சுட்டுகின்றன. ஆண்பெண் உறவுகளில் நிகழும் அபத்தங்களையும் உடைவுகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. மாறும் மதிப்பீடுகளுக்கும் மரபின் சுமைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் தடுமாறுகிற நிலையைச் சித்தரிக்கின்றன.

பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’த் தொகுப்பில் உள்ள ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’, ‘உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்பவர்கள்’, ‘ஜங்க்’ ஆகிய கதைகளில் இன்றைய தலைமுறையின் மனச் சுமைகளை உணரமுடிகிறது.

வெளியிலிருந்து பார்க்கும் பளபளப்பான உலகத்துக்குள் உள்ளே இருக்கும் யதார்த்தத்தையும் அரசியல் காய் நகர்த்தல்களையும் சுயநலபோக்கையும் நேர்த்தியாக முன்வைக்கும் கதைகளை எழுதியுள்ளார் கார்த்திக் பாலசுப்ரமணியன். அவரது ‘டொரினா’ தொகுப்பில் உள்ள ‘லிண்டா தாமஸ்’, ‘மேய்ப்பனின் கருணை’, ‘பார்வை’, ‘பொதுப்புத்தி’ ஆகிய நான்கு கதைகளும் துறைசார்ந்த உள் அடுக்குகளை மையமாகக் கொண்டவை, இத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தத்தைச் சுட்டும் கதை ‘காகித முகங்கள்’. லாவண்யா சுந்தர்ராஜன், அரிசங்கர் ஆகியோரின் கதைகள் சிலவும் பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தங்களை, சோர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

03

ஈழப்போரின் முடிவுக்குப் பிறகான ஈழ எழுத்துக்கள் புதிய பரிணாமங்களை அடைந்துள்ளன. போர்க் காலச் சூழல் குறித்த முக்கியமான நாவல்கள் வெளியாகியுள்ள அதே நேரத்தில் போருக்குப் பின் அடையாளங்களை இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழ்ந்திருக்கும் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் இருத்தலியல் நெருக்கடிகளை சித்தரிக்கும் சிறுகதைகள் பலராலும் எழுதப்பட்டுள்ளன. பிறந்த மண்ணின் வாழ்ந்த நினைவுகளை சுமந்தலையும் துயரையும் அந்நிய நிலத்தில் கால்கொள்ளமுடியாத இயலாமையையும் வெளிப்படுத்துகின்றன. உரிமையை இழந்த அதே மண்ணில் சமரசங்களுடன் வாழ நேரும் அவலத்தையும் முன்வைக்கின்றன.

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பேரீச்சை’, ‘கதிர்ச்சிதைவு’ ப.தெய்வீகனின் ‘அவனை எனக்குத் தெரியாது’, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ அகரமுதல்வனின் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’, ‘நெடுநிலத்துள்’, உமையாழின் ‘கிருமி’, ‘மேய்ப்பர்’, தமிழ்நதியின் ‘அப்பாவின் புகைப்படம்’, ‘காத்திருப்பு’, ‘மாயக்குதிரை’, யதார்த்தன் ‘குசலாம்பாள் எனும் செயின்பிளாக்’,  தீபச்செல்வனின் ‘ஆமிக்காரி’, ‘காவலன்’, சயந்தனின் சந்திரா இரவீந்திரனின் சில கதைகள் ஆகியவை ஈழப்போரின்போதும் அதற்குப் பின்னுமான மனநிலைகளை சிக்கல்களை தடுமாற்றங்களை வெவ்வேறு கால, இடப் பின்னணிகளுடன் விவரிக்கின்றன.

04

ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சமகால வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதனுமே கண்ணுக்குத் தெரியாத வலைப்பின்னலில் செயலிகளால் இயக்கப்படுகிறான். அவனது அந்தரங்கம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகப் பிராணியாக இருந்த மனிதனை தனித் தனியான உயிரிகளாக முடக்கியிருக்கும் சமூக வலைதளங்களும் கைப்பேசியில் இயங்கும் செயலிகளும் உளவியல் தளத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்களும் நெருக்கடிகளும் அச்சத்தை ஏற்படுத்துபவை. தகவல்களின் அடிப்படையில் உங்களை மனநிழலெனத் தொடரும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. குடும்பம், சமூகம் எனும் கூட்டமைப்பின் பொருண்மையை கேள்விக்குள்ளாக்கும் இன்றைய சூழலின் நெருக்கடிகளை மையப்படுத்தும் கதைகள் முக்கியமானவை.

கைபேசியில் பொழுதுபோக்குக்கென உள்ள விளையாட்டுகள் தனிமனித அளவில் செலுத்தும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட, சுனில் கிருஷ்ணனின் ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய இரு கதைகளும் முக்கியமானவை. இதே மையத்தை இன்னும் எளிமையான தளத்தில் அணுகிய விதத்தில் அவரது ‘பொன்முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதையும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் இச்சைகளையும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களையும் வசீகரமாக காட்சிப்படுத்தி ஈர்க்கும் வலைதளங்கள் அந்தரங்கமாக ஏற்படுத்தும் தடுமாற்றங்களை கதைகளாக்க முனைகிறார் ரமேஷ் ரக்ஷன். அவரது ‘பெர்பியூம்’ தொகுப்பிலுள்ள சில கதைகள் அவ்வாறான மனநிலையை வெளிப்படுத்துபவை.

தனிமனிதர்கள் தற்செயலாக வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் அவர்களது விருப்பங்களை அறிந்து பொருட்களை சந்தைப்படுத்த முனையும் இன்றைய வியாபார தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பின்னலின் உச்சபட்ச சாதுர்யத்தைப் பற்றிய சிறுகதை கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘சுழல்’. இதன் அடுத்த கட்டமாக ஒருவனின் விருப்பத்துக்கேற்ற பெண்ணுடனான சந்திப்பை நிகழ்த்தும் சாத்தியத்தைச் சொல்கிறது ‘மெய்நிகரி’.

05

சாதியத்தின் சமூக அவலங்களை நெருக்கடிகளைப் பற்றிய கதைகள் தமிழ்ச் சூழலில் புதிதில்லை. மாறிவரும் சமூக, பொருளாதார நிலைகளுக்கேற்ப சாதியத்தின் முகங்களும் புதிய பரிமாணங்களை ஏற்கின்றன. அவற்றின் தாக்கங்கள் இன்னும் நுட்பமடைந்துள்ளன. சமூகத்திலிருந்து களையப்பட முடியாமல் இன்னும் வன்மம் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளைச் சுட்டுவதோடு நின்றுவிடாமல் சாதியிலிருந்து வெளியேற உதவும் வழிமுறைகளாக முன்வைக்கப்படும் கல்வி, பொருளாதாரம், நகர வாழ்வு உள்ளிட்ட பல்வேறு உத்திகளுக்குப் பின்னும் அதிலிருந்து வெளியேற முடியாமல் திகைத்து நிற்கும் இன்றைய இளைஞர்களின் தத்தளிப்புகளை கோபங்களை ஆற்றாமைகளை நுட்பமான கேள்விகளை இன்றைய கதைகள் பேசுகின்றன.

உறவுகளிலிருந்தும் கிராமத்திலிருந்தும் முக்கியமாக சாதியிலிருந்தும் விலகியிருக்க முடிகிறத என்றாலும் அந்த ஆசுவாசம் நிறைவைத் தரவில்லை. சாதியிலிருந்து விடுதலை என்பது போதாமைகளுடன் இருப்பதைக் குறித்த சோர்வும் கோபமும் ஆற்றாமையும் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றன.

சாதியத்தின் இரண்டு எதிரெதிர் எல்லைகளையும் தொட்டிருக்கும் சுரேஷ் பிரதீப்பின் ‘வரையறுத்தல்’ ஒரு முக்கியமான கதை. சாதிய ஒடுக்குமுறையை உக்கிரமாகச் சொல்லும் பின்கதையுடன் இன்றைய கல்வியும் பிற கருவிகளும் அவ்வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வதில் உள்ள நடைமுறை முரண்களையும் அதே அழுத்தத்துடன் சொல்லியுள்ளது. சாதி சார்ந்த அரசு நடைமுறைகளையும் சாதிய விடுதலையின் நடைமுறைப் படுத்தலில் உள்ள போதாமைகளையும் பேசுகிற ‘எஞ்சும் சொற்கள்’ சிறுகதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

அடையாளங்களால் ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து கல்வியின் வழியாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மீள முயலும் இளைஞர்களின் இருதலைக்கொள்ளி மனநிலையை தூயனின் ‘இருமுனை’ தொகுப்பிலுள்ள சில கதைகள் உணர்த்துகின்றன. தனி அடையாளங்கள் அழிக்கப்பட்ட நவீனமயமான இன்றைய வாழ்நிலையிலும் பிறப்பின் சுமை என்பது மீண்டும் மீண்டும் வெவ்வேறு உருவங்களில் முளைத்தெழுந்து நினைவுபடுத்தியபடியே உள்ளது. அவ்வாறான துயரம் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளிவிடும். இத்தகைய அவலத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவனது தடுமாற்றங்களை ‘தலைப்பிரட்டைகள்’ கதை நுட்பமாக விவரிக்கிறது.

குட்டிரேவதியின் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ தொகுப்பிலுள்ள ‘காது’ சிறுகதை அத்தகைய மனநிலையை அடிப்படையாகக் கொண்டது.

06

கதைகளின் வடிவிலும் கதைமொழியிலும் நவீன உத்திகளை கையாளும் போக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்திருப்பது. மரபான அணுகுமுறைக்கு மாற்றான வகையில் எழுதிப் பார்க்கும் முயற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் கவனம் பெற்றுள்ளன. யதார்த்தவாத எழுத்து முறை சரியாக பொருந்திவராத நிலையில் புதியதொரு பாணியை கைகொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வடிவங்களையும் உத்திகளையும் மீறி புதிய கதைமொழியை கண்டடைய முனையும் எவரும் புனைவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவே நேரும்.

அந்த வகையில் மரபான கதைச் சொல்லல் முறையிலிருந்து வேறுபட்ட உத்திகளைக் கையாளும் முனைப்புடன் எழுதுபவர்கள் என கிருஷ்ணமூர்த்தி, சுனில் கிருஷ்ணன், ஜீவ கரிகாலன் ஆகியோரைக் குறிப்பிடலாம். கிருஷ்ணமூர்த்தியின் ‘காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகள்’ தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சொல்முறையிலும் வடிவிலும் புதிய சாத்தியங்களைக் கொண்டுள்ளன. சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’யில் உள்ள சில கதைகளில் மாறுபட்ட சொல்முறையைக் கையாண்டுள்ளார். ஜீவ கரிகாலனின் ‘கண்ணம்மா’, ‘டிரங்குப் பெட்டிக் கதைகள்’ ஆகிய தொகுப்புகளில் உள்ள பல கதைகளில் வழக்கமான கதைசொல்லல் முறையை மீறும் போக்கைக் காணமுடிகிறது. மேலைய கதை வடிவங்களை தமிழில் எழுதிப் பார்க்கும் கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பில் உள்ள கதைகள் பலவும் மாறுபட்ட வடிவங்களில் எழுதப்பட்டவை.

07

தமிழ் புனைகதைகள் சிரிக்க மறுப்பவைஎன்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அந்த அபவாதத்தைப் போக்க முயற்சிக்கும் கதைகளை எழுதியுள்ளார் சாம்ராஜ். ‘பட்டாளத்து வீடு’, ‘ஜார்ஜ் ஒழிகஆகிய தொகுப்புகளிலுள்ள சில கதைகள் அத்தகையவை. குறிப்பாக இடதுசாரித் தோழர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்களை மையப்படுத்தி எழுதிய கதைகள் அவ்வகையில் முக்கியமாவை. அன்றாடங்களின் உரையாடல்களாகவும் கதைசொல்லல்களாகவும் அமைந்திருக்கும் பிரபு தர்மராஜின் கதைகள் பாலியல் மீறல்களையும் இச்சைகளையும் அங்கதம் கொப்புளிக்கும் மென்மையான குரலில் சொல்கின்றன. சமகாலப் புனைவின் பல்வேறு தேற்றங்களை கிண்டலடித்தபடி வாசகன், எழுத்தாளன் இருவரையும் கதைக்குள் இருத்தி நகைக்கும் கதைகள் காலத்துகளினுடையவை. ‘ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல்’, ‘சாத்தியமற்ற குற்றம்’, ‘அந்தி கிறிஸ்துவின் வருகை’, ‘முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்’ என அவரது கதைகள் பலவும் வாசிப்புச் சுவை கொண்டவை. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த ஒன்பது பேர்’, ‘பெரும் படம் காணல்’ உள்ளிட்ட கதைகள் சமகால இலக்கிய அரசியலையும் எழுத்தாளனின் நிலையையும் பகடி செய்துள்ளன.

08

மொழியிலும் வடிவத்திலும் மரபின் தொடர்ச்சியாகவே பெண் எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் அமைந்துள்ளன. சிலர் இன்றையச் சூழலின் புதிய கதைக்களங்களை எழுதியுள்ளனர்.

மத்தியதரக் குடும்பங்களின் எளிய அன்றாடங்களின் நடைமுறை சிக்கல்களும் தடுமாற்றங்களும் அதனூடான அகமோதல்களுமே கலைச்செல்வியின் சிறுகதைக் களங்கள். புதிய களங்களை எழுதிப் பார்க்கும் முனைப்பை வெளிப்படுத்தும் கதைகள் அவரது ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தொகுப்பில் உண்டு.

மரபான குடும்ப வாழ்வின் எல்லைகளும் அவை ஏற்படுத்தும் நிர்பந்தங்களையும் குறித்த பெண்களின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தும் கதைகளை அ.வெண்ணிலா தந்திருக்கிறார். குடும்பம் மற்றும் புறச் சூழலில் பெண்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறார்கள், உடல்மொழி, சிரிப்பு, பேச்சு என்று அவர்களுக்கான வெளி எவ்வாறு சுருக்கப்படுகிறது என்பதில் அவரது கதைகள் கவனம் குவிகின்றன.

லாவண்யா சுந்தரராஜனின் கதைகள். இதுவரையிலும் சொல்லப்பட்ட பெண்களின் இருப்பை இன்றைய நகரமயமும் தொழில்நுட்பமும் பொருளாதார சுதந்திரமும் வடிவமைத்துள்ள நவீன வாழ்வு மாற்றி அமைத்துள்ளதா என்ற வலுவான கேள்வியை நுட்பமாக எழுப்புபவை. குழந்தைப் பேறும் உறவுகளுக்கிடையிலான ஓயாத அகச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டிருந்தாலும் இவை இன்றில் கால்கொண்டிருப்பவை என்பதால் மேலும் பொருட்செறிவு மிக்கவையாக அமைந்துள்ளன.

கிராமங்களில் இன்னமும் மேல் அழுத்தமாகக் கவிந்திருக்கும் சமூகம், குடும்பம் போன்ற அமைப்புகள் சார்ந்த அழுத்தங்களைக் குறித்த பெண்களின் மௌனங்களை அடங்கிய குரலில் சொல்லும் கமலதேவியின் கதைகளின் வடிவம் நுட்பமானது. முழுமையான கதையாக எதையும் சொல்லாமல் அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாகவே ‘சக்யை’, ‘குருதியுறவு’ ஆகிய தொகுப்புகளிலுள்ள அவரது கதைகள் அமைந்துள்ளன.

பெண்களைப் பற்றிய ஆண்கள் கொண்டுள்ள பொதுவான தட்டையான சித்திரத்தை கலைத்துப் போடுபவை, கேள்வி கேட்பவை குட்டி ரேவதியின் கதைகள். பெண்களின் அக உலகம் சார்ந்த வெளிப்படையான உரையாடல்களையும் நுட்பமாக பேசியிருக்கும் கதைகள் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘குரல்கள்’ ஆகிய தொகுப்புகளில் உண்டு.

உடல்சார்ந்த விடுதலையை இச்சைகளின் களிப்பையும் போதையையும் முன்வைக்கும் கட்டற்ற எழுத்து லைலா எக்ஸ்-ன் சிறுகதைகள்.

ஒன்றிலிருந்து முற்றாக வேறுபட்ட வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டவை ஜா.தீபாவின் கதைகள். ‘நீலம் பூக்கும் திருமடம்’ தொகுப்பிலுள்ள ‘குருபீடம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை.

நவீன வாழ்வின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தையும் மதிப்பீடுகளையும் இழந்த நாஞ்சில் நாட்டின் வாழ்வியல் துயரங்களை வட்டார மொழியில் சொல்பவை மலர்வதியின் சிறுகதைகள். ‘கருப்பட்டி’ அவரது சிறுகதைத் தொகுப்பு.

அனுசரணையும் சமரசமும் பூசல்களுமாய் விளங்கும் கூட்டுக் குடும்பத்தின் எளிய தருணங்களைக் காட்டும் ‘ஒரு மழை நாள்’, ‘லீலாவதியின் தத்துவங்கள்’ போன்ற கதைகளை எழுதியிருக்கும் சுசித்ராவின் ‘ஒளி’ குறிப்பிடத்தக்க சிறுகதை. அறிவியல் புனைகதைளும் எழுதியுள்ளார்.

09

உழைக்கும் சிறுவர்களைக் குறித்து தமிழில் முன்னோடிகளால் எழுதப்பட்ட கதைகளின் வரிசையில் இன்றைய சிறுவர்களின் துயரமான வாழ்நிலையை காட்டும் கதைகளை எழுதியுள்ளனர் ராம்தங்கம், நாகபிரகாஷ் ஆகிய இருவரும்.

ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள ‘டாக்டர் அக்கா’, ‘உடற்றும் பசி’ உள்ளிட்ட பல கதைகளும், நாகபிரகாஷ் எழுதிய ‘எரி’ தொகுப்பில் உள்ள ‘கூப்பன்’, ‘சகடம்’ ஆகிய கதைகளும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

10

அறிவியல் புனைவுகள் எழுதும் முனைப்பை அநேகமாய் இன்றைய தலைமுறை சிறுகதையாளர்கள் பலரிடமும், புதியவர்களிடமும் காணமுடிகிறது. அறிவியல் புனைகதைகளுக்கான மின்னிதழான ‘அரூ’ தொடர்ந்து அத்தகையக் கதைகளை வெளியிடுகிறது. ‘சொல்வனம்’ அறிவியல் புனைகதைகளுக்காக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அவ்வகைக் கதைகளைப் பற்றிய விவாதங்கள் அவற்றின் சாத்தியங்களைக் குறித்த விரிவான புரிதல்களுக்கு வழிவகை செய்கின்றன.

ரா.கிரிதரன், சுசித்ரா, சுனில் கிருஷ்ணன் போன்று ஒருசிலரைத் தவிர இவ்வகைக் கதைகளை எழுத முனைபவர்கள் பலரும் சிறுகதை எழுத்துக்குப் புதியவர்கள் என்பது வியப்பைத் தரும் ஒன்று.

0

மனித உறவுகள், காமம், அக நெருக்கடிகள், துயரின் பல்வேறு நிறங்கள், துலக்கமான தனித்துவங்களைக் கொண்ட கோட்டுச் சித்திரங்கள் என முன்னோடிகளின் தேர்ந்த கைகள் எழுதிக்காட்டியவற்றை தமக்கான கதைமொழியில் சொல்ல விழையும் சிறுகதையாளர்கள் பலரும் இந்த பத்தாண்டுகளில் உண்டு.

காமமும் இச்சையும் குற்றங்களின் மீதான ஈர்ப்பும் இட்டுச்செல்லும் சுழல் வழியின் திருப்பங்களில் கால்கொண்டிருப்பவை போகன் சங்கரின் கதைகள் சொல்முறையில் திருத்தமானவை. கண்முன்னால் மலர்ந்து மறையும் மத்தாப்புத் தருணங்களின் ஜாலங்களையும் வசீகரத்தையும் கொண்டவை. ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’, ‘திகிரி’, ‘போகப் புத்தகம்’ ஆகியவை இவரது தொகுப்புகள்.

சுயநலத்தின் அலகுடன் அமையும் மனித உறவுகளையும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களையும் நேரடியாகவும் (அபரஞ்சி, பஸ்ஸ்டாண்ட்) புதிர்வடிவாகவும் (வாசலில் நின்ற உருவம், புலி) கொண்ட கதைகளைக் கொண்ட ‘சாமத்தில் முனகும் கதவு’ தொகுப்பை எழுதியிருப்பவர் கே.ஜே.அசோக்குமார்.

தகுதிவாய்ந்த ஒருவனுக்காக தன் ஓவியத்தைப் பாதுகாத்திருக்கும் பெண்ஓவியர், கதை கேட்கும் செவிகள், சர்க்கஸ்காரர்கள், ஆராய்ச்சிக்காக குதிரையைத் தேடுவது என்று வெவ்வேறு கதைக்களங்களை கையாளும் நரனின் (‘கேசம்’, ‘சரீரம்’) கதைகள் மொழியிலும் வடிவிலும் சிடுக்குகள் கொண்டவை.

விஞ்ஞானத்தின் அளப்பரிய கண்டுபிடிப்புகள் இன்றைய மருத்துவத்தில் அற்புதங்கள் நிகழ்த்தயுள்ள நிலையில் நோய்ப்பட்டவனின் வாதையுடன் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிக்க நேரும் நெருக்கடிகள் துயரங்கள் மேலும் வலுவடைந்தே வரும் முரணை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்கின்றன மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள். 

கதைகளைத் தொடர்ந்து எழுதி, தொகுப்புகளை வெளியிடுவதன் வழியாக ஆத்மார்த்தி, கார்த்திக் புகழேந்தி, கவிதைக்காரன் இளங்கோ, லக்ஷ்மி சிவகுமார், ஜி கார்ல் மார்க்ஸ், உதயஷங்கர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்புகளை தருகின்றனர்.

லோகேஷ் ரகுராம், செந்தில் ஜெகநாதன், எம்.கே.எம்.மணி முதலானவர்கள் இணைய இதழ்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

0

பத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்கள், சில அச்சிதழ்கள், அவரவரது வலைதளங்கள் என சிறுகதைகளுக்கான வெளிப்பாட்டுத் தளங்கள் எண்ணற்றவை. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லாத நிலை. எழுதப்பட்டு முடித்த கையோடு அதை இணைய இதழிலோ அல்லது வலைதளத்திலோ பதிப்பிக்க முடிகிற வேகம். இவ்வாறான காரணங்களினால் எண்ணிக்கையில் அதிகமான கதைகள் படிக்கக் கிடைக்கின்றன. எட்டு அல்லது பத்து கதைகள் சேர்ந்தவுடனே தொகுப்பாகப் பார்க்கும் சாத்தியங்களும் கூடுதலாகவே உள்ளன. முன்பே குறிப்பிட்டதுபோல புதிய எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடியன.

‘யாவரும்’, ‘வாசக சாலை’, ‘பதாகை’ பதிப்பகங்கள் புதிய எழுத்தாளர்கள் பலரது தொகுப்புகளை ஆர்வத்துடன் வெளியிட்டு வருகின்றன.

முன்னர் ஒரு ஆண்டு முழுக்க எழுதப்படக் கூடிய கதைகள் இப்போது ஒரே மாதத்தில் எழுதப்படுகின்றன. கவிஞர்களின் எண்ணிக்கையும் வெளியாகும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கைகளையும் குறித்து சொல்லப்பட்ட அதே விமர்சனங்கள் இன்று சிறுகதைகளைக் குறித்தும் வெளிப்படுகின்றன.

பொருத்தமற்ற இடங்களில் பொருந்தாத சொற்கள், அயலக மேதைகளின் மேற்கோள்கள், ஏராளமான எழுத்துப் பிழைகள், கவனிக்கப்படாத வாக்கியப் பிழைகள், மாறுபட்ட சொல்முறை என்பதை நிறுவும்பொருட்டு உடைக்கப்படும் இலக்கணங்கள், திருகலான மொழிநடை என சுட்டக் கூடிய எல்லா போதாமைகளுமே அடிப்படையில் வாசிப்புச் சுவையைக் குலைக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. வாசிப்பு தருகிற புரிதல்களும் வாழ்வின் வெவ்வேறு தரப்புகளை உற்று கவனிக்கும் பார்வையும் கதை தன்னளவில் உருத்திரண்டு வெளிப்படுகிற தருணம் வரைக்குமான காலத்தை அனுமதிக்கும் பொறுமையும் ஒன்றுசேர்ந்து எழுத்தில் உருவாக்கும் அடர்த்தியையும் முழுமையையும் பலரும் தவறவிடுகிறார்கள் என்பதை கவனிக்க முடிகிறது.

வாசிப்புப் பின்னணிகொண்டவர்களின் கதைகள் பல ஆழங்களைத் தொட முயன்று முடியாமல் நின்றிருக்கின்றன. ஆனால், அவற்றின் வடிவமோ மொழியோ வாசிக்கும்போது எந்தவிதமான நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதில்லை. கலைத்துப் போடுவதற்கு முன்பு முழுமை எது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

‘தக்கன தப்பும்’ என்ற இயற்கையின் விதியே இங்கும் செல்லுபடியாகும் என்பதுதான் யதார்த்தம்.

தொலைதூரத்துக்கு நீளும் தொடரோட்டத்தின் ஆரம்பத்தில் உற்சாகத்துடன் வேகமாக ஓடுவதில் தவறில்லை. ஆனால், எல்லையைக் குறித்த கவனமும் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ளும் பயிற்சியுமே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க உதவும். இப்போது பார்க்கும்போது துடிப்பான ஆற்றல்மிக்க நிறைய கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பாய்ச்சலும் ஆற்றலும் உற்சாகத்தைத் தருகின்றன.

இளைஞர்கள் பலர் தொடர்ந்து சிறுகதைகளில் ஆற்றலுடனும் தீவிரத்துடனும் பங்களிப்பதன் வழியாக இதுவரையிலும் தமிழ்ச் சிறுகதைகள் தொட்டிருக்காத புதிய நிலவெளிகளும் புனைவுத் தருணங்களும் நமக்கு அறிமுகமாயுள்ளன. வடிவிலும் மொழியிலுமான பரிசோதனைகளில் ஆரோக்கியமான சில ஆச்சரியங்களைத் தந்திருக்கின்றன. அறிவியல் புனைவுகள், குறுங்கதைகள் போன்ற வகைகளை எழுதுவதிலும் அணுகுவதிலும் தீவிரம் மிகுந்துள்ளது. ஏராளமான புதிய பெயர்களையும் புதிய கதைகளையும் கடந்து வர நேர்கிறது. நினைவில் நிற்கும்படியாக எழுதுவதன் வழியாக அவற்றில் ஒரு சில கதைகளும் பெயர்களும் மட்டுமே எஞ்சி நிற்கும்.

காலம் தாட்சண்யமின்றி உதிர்க்கும் பெயர்களுக்கு நடுவில், இந்தப் பத்தாண்டுகளின் முடிவில், தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் தம் பெயர்களை உறுதிப்படுத்தும் சிறுகதையாசிரியர்கள் சிலரேனும் இடம்பிடித்து, எழுதி பல காலத்துக்குப் பின்னும் புனைவின் வசீகரத்தையும் நேர்த்தியையும் சிறிதும் இழக்காத செவ்வியல் கதைகளின் வரிசையில் சில கதைகளேனும் இடம்பெறுமானால் அதுவே இந்தப் பத்தாண்டுகால சிறுகதைப் பயணத்தை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

0

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...