Sunday 31 May 2020

சித்திரக் கூடம் 4 - ஒத்தைத் தறி முதலியார்




திருப்பூர் கண்ணகி நகர் காலைநேரப் பரபரப்பில் இருந்தது. மணி எட்டரையைத் தொட்டிருந்தது. கம்பெனிகளில் தையல் மெஷின்களின் ஓசை தொடங்கிவிட்டது. போரிங் டேங்கில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை அந்த கார்களின் வரிசை சில நிமிடங்கள் ஈர்த்தது. வரிசையாக ஏழு கார்கள் அறுபதடி சாலையிலிருந்து போரிங் டேங்க் அருகில் வந்து தயங்கின. இரண்டு லேன்சர்கள், ஒரு சைலோ, இரண்டு டவேராக்கள். இன்னும் இரண்டு ஐ10கள். முன்னால் இருந்த டவேரா மெல்ல மேற்கு நோக்கித் திரும்பி ஒத்தைத்தறி முதலியார் வீட்டு வாசலில் நின்றது. தொடர்ந்து மற்ற வண்டிகளும் சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றன. தெருவின் அனைத்து நடவடிக்கைகளும் அந்தச் சில கணங்கள் உறைந்து நின்றன.

டவேராவிலிருந்து இறங்கிய உயரமான பெண்ணைப் பார்த்ததும் முதலியாரின் எதிர்வீட்டு ராஜாமணியக்காவின் மகள் சாந்தி “அட, நம்ம மேகலா. அம்மா, இதப் பாரு… மேகலா வந்திருக்கு” என்று உற்சாகத்துடன் கூவிவிட்டாள். அதன் பிறகுதான் ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டவள் போல மருண்டு உள்ளே திரும்பினாள். மேகலா சிரித்துக்கொண்டே அருகில் வந்து “எங்க ஓடற சாந்தி. வா இங்க. நல்லா இருக்கியா?” என்றபடியே சாந்தியின் கையைப் பற்றினாள். அவளது கையின் குளுமை சாந்திக்கு நடுக்கம் தந்தது. வார்த்தைகள் எழாமல் தலையாட்டினாள். இதற்குள் ராஜாமணியும் எதிர்வீட்டு குணாவும் வந்துவிட்டனர். மேகலா ஒத்தைத்தறி முதலியாரின் மூத்த பேத்தி. படிப்பு வாசனையே இல்லாத முதலியாரின் குடும்பத்திலிருந்து, முதலியாரின் ஆட்சேபணைகளையும் மீறி கணிதத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து, கோவையில் பி எஸ் ஜி கல்லூரியில் முதுகலையும் முடித்துவிட்ட இப்போது மூன்று வருடங்களாக பிலடெல்பியாவில் இருக்கிறாள். பேராசிரியரான கணவருக்கு அங்கிருக்கும் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இங்கே பரட்டை தலையும் சீட்டிப் பாவாடையுமாய் வேப்பமரத்தடியிலும் செட்டியார் கடைத் திண்ணையிலும் பண்ணாங்கல் ஆடிய மேகலா, நிறம் கூடி வனப்பு மிகுந்து படகுக் காரில் வந்திறங்கியது எல்லோருக்கும் பெரும் வியப்பாயிருந்தது. ஆளாளுக்கு அவளைத் தொட்டுப் பேசினர்.

இதற்குள் பிற கார்களிலிருந்து முதலியாரின் குடும்பம் இறங்கி வீட்டுக்குள் சென்றது. கடைசி மகள் வாணியின் சின்னப் பெண் பாவாடை தாவணியும் பாப் தலையுமாய் துள்ளிக்கொண்டு ஒரு பொற்சித்திரம் போல ஓடினாள். வள்ளியம்மையை மூத்த மருமகள் சாவித்திரி கைத்தாங்கலாக அழைத்து வந்தாள். ரொம்பவுமே தளர்ந்து போயிருந்தாள்.

இன்று முதலியாருக்கு அமாவாசை திதி. வருடங்கள் ஓடிப்போய்விட்டன.

முதலியார் ஆண்டுகிடந்த அந்த வீட்டைப் பார்ப்பதே பெரும் துக்கமாக இருந்தது. பராமரிக்கப்படாத வாசலெங்கும் செடிகள் முளைத்து குப்பையடைந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்டடமாகக் கிடந்தது.  வெகுநாட்கள் திறக்கப்படாததின் வீச்சம் கதவைத் திறந்ததுமே முகத்தில் அடிக்கும். பெருச்சாளிகள் குபீரென்று வெளிப்பட்டு  மூலையிலிருந்து தாவி ஓடும். கூரை முழுக்க சிலந்தி வலைகளும், ஒட்டடைகளும் பின்னிக் கிடக்கும். காங்கிரீட் ஒட்டுக்கள் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகள் மடங்கித் தொங்கும்.  இந்த புரட்டாசி அமாவாசைக்கு மட்டும் முன்கூட்டியே சுத்தம் செய்துவிடுவார்கள்.

அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டை இடித்து புதுமாதிரியாகக் கட்டவோ விற்கவோ வள்ளியம்மை சம்மதிக்கவில்லை. பெரியவனும் கிடக்கட்டும் என்று விட்டுவிட்டான். சாந்தி தியேட்டருக்கு பின்புறம் பெரிய வீடாகக் கட்டிக்கொண்டு அம்மாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்ட பிறகு இங்கே வந்து வீட்டை கவனிக்க முடியவில்லை. அதைப்பற்றி அவனுக்கு பெரிதாய் கவலையுமில்லை. சின்னவன் பெரியார் காலனியில் பங்களாவும் கம்பெனியும் ஒருசேரக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டான்.

இவர்கள் எல்லோருமே முதலியாரின் கண்காணிப்பில் இந்தவீட்டில்தான் உருப்படியானார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தெருவில் நடக்கும் யாருமே அந்த வீட்டைத் திரும்பிப் பார்க்காமல் போக முடியாது. ஓட்டுக் கூரைகளை கொண்ட அங்கண வீடுகள் இருசாரியிலும் நிறைந்து இருந்த கண்ணகி நகரில் முதன் முதலாக 'தார்ஸ்' போட்டு கட்டிய வீடு அதுதான். கருங்கற்களாலான திடமான சுவர். தடிமனான மரச் சட்டங்களுடனான சன்னல்கள். முன்பக்க வராந்தாவில், சிமெண்டில் திருத்தமாய் எழுதிய தாமரைப் பூ. விஸ்தாரமான பெரிய முன்னறையை அடுத்து தறிக்கூடம். தறிக்கூடத்தை அடுத்து இரண்டு அறைகள். வடபுறமாய் சமையலறை, படுக்கை அறை என்று மிகப் பெரிய வீடு அது. அதுபோல ஒரு வீட்டின் அமைப்பை கண்ணகி நகரின் செட்டுக்காரர்கள் யாருமே யோசிக்கக் கூட முடியாது. புதுமனைப் புகுவிழாவின்போது எல்லோரும் கண்விரித்து மாய்ந்து மாய்ந்து வியந்தார்கள்.

''ஒத்தத்தறி மொதலியார் இத்தனக் காசப் போட்டு பெரிசா வீட்டக் கட்டிட்டாரே!'' என்று எல்லோருக்கும் ஆச்சரியம்.

ஆனால் ஒத்தத்தறி முதலியார் புதுமனைப் புகுவிழாவின்போதுகூட புலம்பிக்கொண்டுதான் இருந்தார். அன்றைக்கும் அவர் சட்டை அணிந்திருக்கவில்லை. எப்போதும்போல முழங்கால் வரைக்குமான ஒரு அரைவேட்டியும் ஈரிழைத்துண்டும்தான் போட்டிருந்தார். அவருடைய சம்சாரம் வள்ளியம்மாள் கழுத்தையொட்டி பட்டையான அட்டிகையும், ஐந்து கல் வைத்த பெரிய கம்மலும் போட்டுக்கொண்டு அவ்வப்போது ''வாய வெச்சுட்டு இன்னிக்கு ஒருநா பேசாம இருக்கலாம்ல..'' என்று கடிந்து கொண்டிருந்தாள். ''ஒனக்கென்னடி மவராசி.. புது வூடு கட்டிட்டு சம்பமா திரியற.. நோட்ட நானுல்ல ஒடச்சு ஒடச்சு நீட்டுனே.. இன்னம் செலவு நின்னபாடில்ல.. நாலு பேரு இருக்கறதுக்கு எதுக்கு இத்தாம் பெருசு.. மொதல்ல இருந்ததுலயும் இத்தன வருசம் பொழக்கலயா.. மேல செவுரு வெச்ச வூடு வேணுமா.. ஒத்த ஒத்த காசா சேத்துப் பாக்கோணும்.. அப்ப தெரியும் பவுசு.. '' என்று வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டுதான் இருந்தார்.

உண்மையில் அவர் ஒத்தைக் காசாகத்தான் சேர்த்தார். கைத்தறி நெசவு மட்டுமே நெசவாளர் காலனியிலும் கண்ணகி நகரிலும் இருந்த காலத்தில் முதன் முதலாக பவர் லூம் என்ற விசைத்தறியை அவர்தான் அறிமுகப்படுத்தினார். மின்வசதிகள் எட்டிப் பார்க்காத 1960களில் 'சட்டணக்கு புட்டணக்கு' என்று கைத்தறிகள் பகல் முழுக்க சத்தமெழுப்பிவிட்டு மாலை மங்கியதும் ஓய்ந்துவிடும். இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிக் கிடக்கும்.  ஒத்தத்தறி முதலியார் ஈரிழைத் துண்டுதான் நெய்துகொண்டிருந்தார். இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள் எல்லாம் ஈரிழைத் துண்டு நெய்த காலத்திலேயே பிறந்துவிட்டார்கள். கோயமுத்தூரில்தான் அவர் அந்த தறியை முதன் முதலாகப் பார்த்தார். பெருத்த வேகத்துடனும் ஓசையுடனும் அந்த விசைத்தறி இயங்கிய பாங்கு அவருக்கு பெரும் அதிசயமாக இருந்தது. காடாத் துணி மொடமொடவென்று வாசனையுடன் இருந்தது. மெதுவாக செலவு பற்றியெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். அவ்வளவு சீக்கிரமாய் அவருடைய வேட்டி முடிச்சிலிருந்து காசு வந்துவிடாது.

வள்ளியம்மை சமையலுக்கு காய்கறி வேண்டும் என்று சொன்னால் போதும், மெதுவாக பாய் கடைக்கு நடப்பார். கடைக்கு வெளியே பெரிய பலகையின் மீது இருக்கும் தட்டக்கூடைகளில் வதங்கிய கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், முட்டைக்கோசு என்று ஏதாவது கிடக்கும். மெதுவாக கத்தரிக்காய்களை புரட்டுவார். ''கத்திரிக்காய் எப்புடி பாய்?..'' கீச்சுக் குரலில் மெதுவாகக் கேட்டபடியே மூன்றே மூன்று கத்திரிக் காய்களை ஒதுக்கி வைப்பார். ''நீங்க வாங்கறதுக்கு என்ன வெலயச் சொல்றது? என்ன வெலய சொன்னாலும் சாஸ்தின்னுதான் சொல்லப் போறீங்க..'' என்றபடி தேங்காயை நறுக்கி வாயில் போட்டுக்கொள்வார் பாய். ''வேவாரம்னா நல்லா பேசோணும்.. உங்கள மாரி..''என்றபடியே மூன்று கத்தரிகளை கையில் எடுத்துக் கொண்டு 25பைசாவை மெதுவாக வேட்டி முடிச்சிலிருந்து நிதானமாக எடுத்துக் கொடுப்பார். ''நாலணாவுக்கு காயெல்லாம் வராது மொதலியார்.. '' என்று பாய் சொல்லும்போதே ஒருபுடி கருவேப்பிலையை எடுத்துக் கொள்வார். ''இந்த சொத்த கத்தரிக்காய் எப்படியும் ஆடு திங்கறதுக்குதான்.. நானாயிருக்க உங்களுக்கு நாலணாவாச்சும் கெடக்குது பாத்துக்குங்க'' என்று சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கிவிடுவார். கடையை விட்டு நகரும்போது அவருடைய பேச்சு பொதுவாக சாலையில் பார்ப்பவரிடம் சொல்வதாக இருக்கும்..''நாம கஷ்டப்பட்டு நாலு வாட்டம்போட்டு காசு சம்பாதிச்சா.. இவரு எங்கிருந்தோ வந்து சொத்த கத்திரிக்காய வித்து மச்சு வீடு கட்டிட்டாரு பாத்துக்க'' என்பார்.

கோயமுத்தூரிலிருந்து அவர் திரும்பும்போது செலவு ஆறாயிரம் ரூபாய் என்றாலும் பிரயோசனமாகத்தான் இருக்கும் என்று உறுதி செய்துவிட்டார். அப்போதுதான் கண்ணகிநகரில் மின் இணைப்பு தருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. ஏற்கனவே அதற்கும் 600 ரூபாய் வரை செலவு செய்திருந்தார். சேர்த்து வைத்த காசெல்லாம் இப்படி கரைகிறதே என்ற எண்ணம் இருந்தபோதும் ''இன்னும் எத்தன நாளக்கித்தான் இப்பிடி பொட்டு பொட்டுன்னு ஒத்த வாட்டத்தப் போட்டுட்ட காலந்தள்ள முடியும்.. புதுசா எதையாச்சும் செஞ்சு நிமிந்து போடோணும்..'' என்று உறுதியாக இருந்தார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் தமக்குள்ளாக ஆலோசித்து முடிவையும் எடுத்து விட்டாரே ஒழிய வெளியே வள்ளியம்மாளிடம்கூட மூச்சு விடவில்லை.

மின் இணைப்பு கிடைத்ததும் எல்லா வீட்டிலும் குண்டு பல்புகள் பளிச்சென்று மஞ்சள் ஒளி வீசின. தெருவில் திடீரென்று ஒரு திருவிழா உற்சாகம் இருந்தது. முதலியார் தன் திட்டத்தின் முதல் படியாக நெய்து கொண்டிருந்த ஈரிழைத் தறியை நிறுத்தினார். தறியை கழற்றும்போதுதான் மெதுவாக ''நீ பாட்டுக்கு லொட லொடன்னு வெளிய போயி ஒளறி வெச்சறாதே.. நா பவர்லூம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்..'' என்றார். வள்ளியம்மாளுக்கு அவரைப் பற்றி தெரியும். மனுசன் எதாவது கோளாறு இல்லாம இருக்க மாட்டார் என்று தலையை ஆட்டிக்கொண்டு நகர்ந்துவிட்டாள். தறிமேடையை இடித்து மண்ணை வெளியே கொட்டும்போதுதான் ஆட்கள் கவனித்தார்கள். பிறகு ஒரு நாள் மாலையில் ஒரு மடாடர் வேனில் தறிச் சாமான்கள் வந்திறங்கியபோதுதான் விஷயம் விளங்கியது. இரும்புச் சாமான்களை இணைத்து முதலியாரின் பழைய தறிக்கூடத்தில் பவர்லூம் தறி மெதுவாக தன் ஆகிருதியை நிறுவியது. ஒரு வாரம் வரைக்கும் சோமனூரிலிருந்து வந்த இரண்டுபேர் தறியை நிறுத்துவதில் இரவு பகலாக வேலை செய்தார்கள். மின் இணைப்பு தரப்பட்டு ஒரு வியாழக்கிழமை காலையில் பூசணிக்காயைச் சுற்றி திருஷ்டி கழித்து தறியை இயக்கினார் முதலியார். தெருவையே அதிரவைக்கும் பெரும் சத்தம். ரயில் வண்டி தண்டவாளத்தில் தறிகெட்டு ஓடுவதுபோன்று இருந்தது. பெருங்கூட்டமாய் தறி ஓடுவதை வேடிக்கை பார்த்தார்கள்.

''நம்ம வீட்டுக்கு வாரா கரண்டையெல்லாம் இவரு தறியோட்டறதுக்கு எடுத்துட்டாருன்னா நமக்கெல்லாம் கரண்டு பத்தாதுல்ல.. இதென்ன நாயம்.. யாராச்சும் அவரக் கூப்புட்டு கேளுங்கப்பா..'' என்று கரியப்பன் பட்டைச் சாராய வாசனையுடன் தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தான். தறியோடும் சத்தத்தில் அவனுடைய குரல் எடுபடவேயில்லை.

அன்றைக்கு காற்றில் கலக்கத் தொடங்கிய பவர்லூம் தறியின் தடாலடியான சத்தம் அதற்குப் பிறகு ஓயவேயில்லை. தொடக்கத்தில் ஒரு ஆளை வர வைத்து தொழிலைக் கற்றுக்கொண்டார் முதலியார். ஒரு மாதம்தான். பிறகு தறி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக்கொண்டார். பெரிய மகன் செல்வராஜையும் பக்கத்தில் வைத்துக் கொண்டதில் அவன் பவர்லூம் தறியோட்டுவதிலும் அதன் தொழில்நுட்பகளிலும் தேர்ந்தான். இரண்டு பையன்களுக்கும் படிப்பு ஏறாததை ஒரு விஷயமாகவே அவர் கருதியிருக்கவில்லை என்பதால் இருவரையும் தறியோட்டுவதிலேயே விட்டுவிட்டார். புதிய தொழில் என்பதால் இருவருமே மும்முரமாக அதில் இறங்கிவிட்டனர். செல்வராசுவுக்காவது ஓரளவு தமிழ் படிக்கத் தெரியும். சின்னவன் மூர்த்திக்கு அதுவும் அறைகுறைதான். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ராப்பகலாய் உழைத்ததில் ஒத்தைத் தறியாக இருந்த முதலியாரின் விசைத்தறித் தொழில் இரண்டாகி, நான்காகி இரண்டாவது வருடத்தின் கடைசியில் ஆறு தறிகளாகிவிட்டிருந்தது. காலனி மூன்றாவது வீதியில் விலைக்கு வந்த வீட்டை வாங்கி தறிகுடோன் ஆக்கிக் கொண்டார்.

முதலியாரைத் தொடர்ந்து காலனியெங்கும் விசைத்தறிகள் முளைக்கத் தொடங்கின. கைத்தறி சத்தம் ஓய்ந்து வீடெங்கும் விசைத்தறி சத்தம் நிறைந்தது. விசைத்தறி நிறுவ கணிசமான முதலீடு வேண்டும் என்பதால் பெருமுதலாளிகளே தொழிலில் இறங்க கைத்தறிக்காரர்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அல்லது விற்றுவிட்டு வடக்குப் பக்கமாய் சலீசாக இடம்வாங்கி வீடுகட்டிக் கொண்டு குடிபெயர்ந்தார்கள். மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயில் இன்ஜின் போட்டு தறியோட்டினார்கள். கைத்தறிக் கூடங்கள் விசைத்தறிக் கூடங்களாகி அதன் பக்கவாட்டில் ஆயில் இன்ஜின் தொட்டிகள் நிறுவப்பட்டு தண்ணீர் நிறைந்தது.

ஆனால் கண்ணகி நகரில் விசைத்தறிகள் நுழையவில்லை. ஒரு வேளை முதலியாரின் குடோன் அங்கேயே நிறுவப்பட்டிருந்தால் காலனி வீடுகளுக்கு நேர்ந்த அதே நிலை கண்ணகி நகர் வீடுகளுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

ஒத்தைத் தறி இருந்தபோதும் சரி, ஒரு தறி எட்டு, பத்து தறிகளாக பெருகியபோதும் சரி முதலியார் அப்படியேதான் இருந்தார். அதே முழங்கால் தட்டு வேட்டி, மேலே ஒரு துண்டு அவ்வளவுதான். காலையில் எட்டு மணிக்கெல்லாம் குளித்து நெற்றி நிறைய விபூதியை பூசிக் கொண்டு காலனி பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நடை. காலில் செருப்பு கிடையாது. வீட்டில் பழைய சோறும் வெங்காயமும். மதியம் மூன்று மணிக்கு சாப்பாடு. பருப்பும் மோரும் தான். ராத்திரியில் கோதுமை களி. கொஞ்சம் ஊறுகாய். வேறு பலகாரங்கள் கிடையாது. சில நாட்களில் கோதுமை உப்புமாவோ, கோதுமையை அரைத்து சுட்ட ரொட்டியோ இருக்கும். அதுவும் வள்ளியம்மாளின் ஏற்பாடாகத்தான் இருக்கும். வருஷத்துக்கு ரெண்டு புடவைதான் வள்ளியம்மாளின் கணக்கு. மூத்தவள் ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். பிறகு தறிவேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவளும் தலையில் நூல்பஞ்சு பறக்க பாடுபட்டாள். பதினாறு வயது இருக்கும். மேட்டுப்பாளையத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கட்டிக் கொடுத்துவிட்டார். சின்னவள் வாணி மட்டும் கடைசி என்பதால் செல்லம். பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தாள். அவளுக்கு மட்டும் கொஞ்சம் தாராளமாய் தாவணி, சட்டை என்று வாங்கிக் கொடுத்தார். மகன்கள் இருவருக்கும் அப்பாவைப் போலவே துணி மணிகளில் நாட்டம் கிடையாது. காக்கி டிரவுசரும் சட்டையில்லாத மேனியுமாகத்தான் குடோனுக்குள் கிடப்பார்கள். வெளியில் வந்தால் மட்டும் சட்டை உண்டு.

முதலியார் வாரம் ஒரு முறை கோயமுத்தூருக்கு வியாபாரத்துக்கு போவார். காடாத்துணிகள் மடிக்கப்பட்டு பேல் போடப்பட்டு லாரிகளில் ஏற்றிக்கொண்டு போய்விடுவார்கள். இவர் மட்டும் வியாழக்கிழமை காலையில் ஆகாரம் உண்டவுடன் புறப்பட்டுவிடுவார். ஒரே ஒரு காக்கிப் பைதான் இடுப்பில் இருக்கும். சட்டையில்லாமல் செருப்பில்லாமல்தான் பஸ் ஏறுவார். கோயமுத்தூரில் இறங்கும்போதுமட்டும் பையில் இருக்கும் அரைக்கை வெள்ளைச் சட்டையை எடுத்து அணிந்துகொள்வார். ரங்கேகவுண்டர் வீதியில் இருக்கும் வியாபாரியிடம் போய் வரவு செலவு பார்த்து பணத்தை வாங்கி அதே காக்கிப் பையில் வைத்து சுருட்டி எடுத்துக் கொள்வார். மறுபடி திருப்பூர் பேருந்தில் ஏறி உட்கார்ந்ததும் சட்டையை கழற்றி பையில் வைத்துக் கொண்டுவிடுவார். எத்தனை பணமென்றாலும் அந்த காக்கிப் பையில்தான். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் வந்து சேரந்தவுடன்தான் மதிய உணவு. கோயமுத்தூரில் ஒரே ஒரு டீ மட்டும்தான் செலவு.

தறியோட்டுபவர்களுக்கு சனிக்கிழமை சாயங்காலம்தான் கூலி. ஒருவேளை அன்றிரவும் தறி ஓட்டவேண்டிய அவசரம் இருந்தால் ஞாயிற்றுக் கிழமையில்தான் பணம் பட்டுவாடா. ஒவ்வொரு ஆளுக்கும் இத்தனை என்று செல்வராசு கணக்கு போட்டு சொன்ன பிறகும் அந்த நபரின் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் அந்த வாரம் முழுக்க வந்தாரா, ராத்திரி இருந்தாரா என்றெல்லாம் நிதானமாக யோசிப்பார். ''செவ்வாக்கிழம வந்தயா பொன்னா? அன்னிக்கு ஏதோ ரீவுன்னு சொல்லல?'' என்று சன்னமாய் கேட்பார். ''நா லீவெல்லாம் போடலீங்க..'' என்று பதில் வந்தால் ''என்னவோ கேவகம். செரி.. இந்தா'' என்று அவருடைய சம்பளத் தொகையை ஒன்றுக்கு நாலு தடவை ஒவ்வொரு நோட்டாக எண்ணிவிட்டுத்தான் கொடுப்பார். முன்பணம், கூடுதலாக செலவுக்கு ஏதாவது என்றால் அதெல்லாம் செல்வராசிடம்தான். முதலியாரிடம் சம்பளத்தொகைக்கு மேலாக ஒரு பைசாவையும் வாங்கிவிட முடியாது. சம்பளத்துக்கு என்று காக்கிப் பையில் எடுத்து வைத்த தொகை கரையக் கரைய முதலியாருக்கு கையே வராது. மறுபடி மறுபடி பைக்குள் தலையை விட்டு பார்த்துக் கொள்வார். ''காசு சும்மா போயிட்டே இருக்கு செல்வா.. கரக்கிட்டாத்தான் கணக்கு போட்டயா..? நல்லா பாரு.. அப்பறம் அவனுக பின்னாடி நாம் தொங்கிட்டு இருக்கோணுமில்ல..'' என்று முணுமுணுப்பார்.

படிக்கத் தெரியாது என்றாலும் காலையில் சரசா டீக்கடையில் போர்வைப் போர்த்திக் கொண்டு தினத்தந்தியில் வந்த விஷயத்தையெல்லாம் யாராவது படிக்கும்போது விடாது கேட்டுத் தெரிந்துகொள்வார். சரசா கடையில் ஒரு டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு சொம்பில் அந்த டீயை வாங்கி வந்து வள்ளியம்மாளோடு சேர்ந்துதான் குடிப்பார். பிறகு எட்டு மணிக்கு மேல் பால் வந்த பிறகுதான் பிள்ளைகளுக்கு டீ. வீட்டுச் செலவுக்கு அவரிடம் பணம் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். தொடக்கத்தில் கடுமையான சண்டையெல்லாம் போட்டு பார்த்தாள். ஆனால் அதற்கெல்லாம் அவர் காக்கிப் பையை லேசில் விடத் தயாரில்லை. எத்தனை சண்டையென்றாலும் எண்ணி எண்ணி காசாகத் தான் கொடுத்திருக்கிறார். அரிசியும் கோதுமையும் மூட்டையாக வந்துவிடும். பிறகு மாத சாமான்களுக்கு அவர்தான் பட்டியலும் பணமும். அநாவசியமாக எதையும் வாங்கிவிட முடியாது. மாதம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை மட்டன் எடுப்பது என்பது அவர் தந்திருக்கும் அதிகபட்ச சுதந்திரம். அதுவும் மட்டன் விலை ஏறுமாறாக போனபோது மட்டனிலிருந்து கோழிக்கு மாறிவிட்டார்.

காய்ச்சல் உடம்புவலி எல்லாவற்றுக்கும் கசாயம்தான் சர்வரோக நிவாரணி. ரொம்புவும் தாள முடியாமல் இருக்கும்போது ஒரு ரூபாய் டிக்கட் எடுத்து பெருமாநல்லூர் போய் அரசாங்கத்தின் வெள்ளை மாத்திரை வாங்கிக் கொண்டதுண்டு.

எதற்குமே திறக்காத அவருடைய காக்கிப்பை கோயில் காரியம் என்றால் மட்டும் சற்று திறந்துகொள்ளும். கிருத்திகைதோறும் பழனிக்கு போகும் பழக்கம் உண்டு. பழனிக்கு போய்வர அவருடைய பட்ஜெட் பத்து ரூபாய். அப்போது பழனிக்கு பேருந்து கட்டணம் 3.00 ரூபாய். போகவர ஆறு ரூபாய். காணிக்கை, டீச் செலவு  எல்லாம் சேர்த்து பத்து ரூபாய். தன் சம்பாத்தியத்தில் ஒரு பங்கு முருகனுக்கும் பிள்ளையாருக்கும் உண்டு என்று அவர் நம்பியிருக்கவேண்டும். உள்ளூர் பிள்ளையார் கோயிலில் கிருத்திகை வசூல், மார்கழி வசூல் என்று வந்தால் ஐந்து ரூபாய் தருவார். அதற்கு மேல் எதிர்பார்க்கவும் மாட்டார்கள், அவர் தரவும் மாட்டார்.

கண்ணகி நகரில் ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டுவதென்று அரசாங்கம் முடிவெடுத்து ஆட்களை அனுப்பியது. அந்த வீதியில் மேற்கு எல்லையில் ஒரு இடம், முதலியார் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு இடம், கிழக்குப் பக்கமாய் பொன்னுசாமி வீட்டு வாசல் என்று மூன்று இடத்தில் தண்ணீர் ஓட்டம் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆழ்கிணறு தோண்டுவதற்கான இராட்சத கருவியுடன் லாரி வந்து நின்ற போது கண்ணகி நகருக்கும், காலனிக்கும் கிழக்குப் பக்கமாக உருவாகியிருந்த திருவள்ளுவர் நகர் தரப்பினர் அந்த ஆழ்குழாய் கிணறு தங்கள் பகுதிக்கு உத்தரவானது என்றும் அதனால் கிணற்றை திருவள்ளுவர் நகரில்தான் தோண்டவேண்டும் என்றும் ஆட்சேபித்து கிணறு தோண்டுவதை நிறுத்திவிட்டனர். மாவட்ட ஆட்சியரிடமிருந்து உறுதியான உத்தரவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்று கிணறு தோண்டுவதற்கென வந்திருந்த பொறியாளர்களும் ஊழியர்களும் சொல்லிவிட்டனர். லாரி அப்போது முதலியார் வீட்டு வாசலில் குறித்திருந்த இடத்தில் கிணறு தோண்டுவதற்கென நிறுத்தப்பட்டிருந்தது. முடிவு தெரியும்வரையில் லாரி பொது இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று திருவள்ளுவர் நகர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என்று தகராறுக்கு வந்தார்கள்.

முதலியார் அப்போது லாரி அருகே நின்று எப்படியும் கிணற்றை அந்த இடத்தில் தோண்டுவதற்கான வழிவகைகளைக் குறித்து கலந்து பேசிக் கொண்டிருந்தார். ஊரில் பெரிய தலைகளும் சில கட்சி அபிமானிகளும் கோவையில் ஆட்சியரை சந்திக்க சென்றிருந்தனர்.

''எடுங்க லாரிய, பொது இடத்துலதான் இருக்கணும்.. இங்க நிறுத்தக் கூடாது'' என்று மல்லப்பன் பெருத்த குரலுடன் ஆவேசமாக வந்து பொறியாளரிடம் நின்றார்.

''எதுக்கு இப்ப லாரிய எடுக்க சொல்ற.. இப்ப ஒண்ணும் போர் போட்றலயில்ல.. அதான் ஒங்க ஆளுங்களும் எங்க ஆளுங்களும் கோயமுத்தூருக்கு கலெக்டர பாக்க போயிருக்காங்கல்ல.. வெடியாலதான் முடிவு தெரியும்.. அதுக்குள்ளாற லாரிய எடுன்னு சண்டக்கி வந்தா என்னா அர்த்தம்?'' முதலியார் வழக்கமான நிதானத்துடன் மெதுவாக ஆனால் அழுத்தமாக கேட்டார்.

''வெடியற வரைக்கும் லாரி இங்க நிக்கக் கூடாது'' மல்லப்பன் அருகில் பெரும் கொந்தளிப்புடன் நின்ற சுந்தரம் கூவினான்.

அவனது குரல் மற்றவர்களை உசுப்பிவிட்டது. சலசலவென்று ஒரு கலவரத் தொனி கிளர்ந்தது. முதலியார் இன்னும் சற்று முன்னகர்ந்தார். ''லாரி இங்கதான் நிக்கும்.. நீ என்ன பண்றயோ பண்ணுப்பா..'' என்றபடியே தோள் துண்டை உதறி தரையில் போட்டுக் கொண்டு லாரியின் முன்னால் படுத்துவிட்டார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. படபடவென்று இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று எல்லோரும் லாரியை சூழ்ந்துகொண்டு உட்கார்ந்தும் படுத்தும் விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத எதிரணியினர் எதுவுமே பேசாமல் திரும்ப வேண்டியதாயிற்று. ஒரு வேகத்தில் படுத்தவிட்டார், இனி எழுந்து அவருடைய சோலியைப் பார்க்க போய்விடுவார் என்றுதான் மற்றவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் முதலியார் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசத் தொடங்கிவிட்டார். லாரியை விடிய விடிய பாதுகாத்து நிறுத்திவிட்டால் போதும், மறுநாள் ஆட்சியர் உத்தரவுடன் ஆழ்குழாயை அதே இடத்தில் தோண்டிவிடலாம் என்பது பற்றி நம்பிக்கையுடன் சொன்னவர் ஆழ்குழாய் தோண்டிய பிறகு செய்யவேண்டிய காரியங்களைக் குறித்தும் விரிவான திட்டங்களைப் பற்றியும் விடிய விடிய பேசிக் கொண்டிருந்தார். வண்டியைச் சுற்றி கூடியிருந்தவர்கள் யாருமே வீட்டுக்குப் போகவில்லை. முதலியாரின் பேச்சு எல்லோரையும் உட்கார வைத்துவிட்டது. கூடுதலாக அவர் செய்த ஒரு காரியத்தை இன்றைக்கும் கண்ணகி நகரில் ஒரு பழங்கதையாக சொல்வதுண்டு. அன்றிரவு ஒரு மணியிருக்கும். குளிரும் அசதியும் எல்லோரையும் நடுங்கடித்துக் கொண்டிருந்தது. முதலியார் வள்ளியம்மாளை அழைத்தார். ''எல்லாத்துக்கும் வரக்காப்பி போட்டு எடுத்துட்டு வா.. குளுரு சாஸ்தியா இருக்குல்ல..'' என்று உத்தரவிட்டார். அவர் சொன்னதை யாருமே உண்மையென்று நம்பவில்லை. வள்ளியம்மாளே சிறிது நேரம் அவர் சொன்னதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள நின்று கொண்டேஇருந்தாள். இருபது முப்பது பேருக்கு, ஆளுக்கு அரை டம்ளர் என்றாலும் அந்த நேரத்தில் பெரும் வியப்பாக இருந்தது.

இன்றைக்கும் கண்ணகி நகரின் மையத்தில் இருக்கும் அந்த ஆழ்குழாய்க்கான தண்ணீர் தொட்டியைப் பார்க்கும்போது, அந்த இரவுக் காட்சிகள் நினைவில் மோதும். அதோடு முதலியார் வீட்டிலிருந்து வந்த வரக்காப்பியின் சுவையும் நாவில் எட்டிப் பார்க்கும்.




ண்ணகி நகரில் பிள்ளையார் கோயில் கட்டுவதென்று ஊர் கமிட்டி கூடி முடிவெடுத்தார்கள். முதலியாரும் கமிட்டியில் ஒரு உறுப்பினர். கோயிலை எந்த இடத்தில் கட்டுவதென்று விவாதிக்கப்பட்டது. தெருவின் மேற்கு முனையில் உள்ள சேந்து கிணறும் அதையொட்டிய இடமும் பிள்ளையார் கோயிலுக்கென்று தெருவைத் திட்டமிடும்போதே ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அந்த இடத்திலேயே கோயிலைக் கட்டலாம் என்று எல்லோரும் தீர்மானித்தார்கள். முதலியார் பேசாமல் உட்கார்ந்திருந்தார். ஆட்சேபிக்கவுமில்லை, தனது எண்ணம் எது என்றும் சொல்லவில்லை. இடம் முடிவான பிறகு கோயிலுக்கான செலவு பற்றிய விவாதம் எழுந்தது. தெருவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பிட்ட தொகையை கோயில் கட்டிடத்துக்கென்று வழங்கவேண்டும் என்றும், தவிர பொது நன்கொடை வசூல் செய்து கோயிலை எழுப்பிவிடலாம் என்று விரிவாகத் திட்டமிடப்பட்டது. கமிட்டியில் மற்றவர்களின் எண்ணம், முதலியார் பெரும் தொகை ஒன்றை நன்கொடையாக அளித்துவிடுவார் என்பதுதான். ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பேசும்போது முதலியார் அப்படியான தன் எண்ணத்தையும் சொல்லியதும் உண்டு. ஆனால் இப்போது அவர் எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்த கொண்டு உட்கார்ந்திருப்பது வியப்பாக இருந்தது. முகத்திலும் பெரிய சந்தோஷம் இல்லை.

கமிட்டித் தலைவர் ரங்கசாமி முதலியாரிடம் கேட்டார் '' என்னங்க மொதலியார், எதுமே பேசாம உக்காந்திருக்கீங்க? கோயிலுக்கு நீங்க என்ன செய்யறீங்க? பெரிய செலவெல்லாம் நீங்க பாத்துக்கறீங்களா?''.

முதலியார் தலை நிமிர்ந்தார். ஒரு முறை கூடியிருந்தவர்களை ஒவ்வொருவராக நிதானமாக பார்த்தார். ரங்கசாமியை கூர்ந்து பார்த்தபடி ''உங்க கோயில நீங்க கட்டப்போறீங்க? நா என்னத்த செய்யறது?'' என்றார் நாவை சப்புக் கொட்டியபடியே.

அவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் சட்டென்று புரியவில்லை.

சபையின் மெளனம் முதலியாருக்கு சந்தோஷம் தந்திருக்க வேண்டும். மேலும் சற்று உரத்தக் குரலில் ''கோயிலுக்கு பணம் வேணுங்கும்போதுதான் இந்த ஒத்தத்தறி நெனப்பு வருது உங்களுக்கெல்லாம். அத எங்க கட்டணும்னு பேசறப்ப, நீங்களே பேசி உங்களுக்கு வேணுங்கற எடத்த முடிவு செஞ்சுட்டீங்க... அப்படித்தான?''.

''அதில்ல மொதலியார், கோயிலுக்குன்னு முன்னாடியே ஒதுக்கி வெச்ச எடத்துல கட்டறதுங்கறது மொதல்லயே பேசுனதுதான? அத விட்டா தெருவுல வேற எடம் எங்க இருக்குது?'' ரங்கசாமிதான் மீண்டும் கேட்டார். முதலியார் ஏதோ புது விவகாரத்தை கிளப்புகிறாரே என்ற கவலையும் குழப்பமும் அவரது குரலில்.

''கோயிலுன்னு இருந்தா ஊருக்கு நடுவுல இல்ல இருக்கோணும், நீங்க சொல்றது ஊருக்கு கடேசில இல்ல இருக்கு? கெழக்க இருக்கற வைத்தியர் வூட்டுல இருந்து மேக்கால கோயிலுக்கு போகணும்னா ஒண்ணர மைலு நடக்கற மாதிரியில்ல இருக்கும்?'' என்று அவர் தொடங்கும்போது அவரது எண்ண ஓட்டம் என்ன என்று அனைவரும் ஊகித்துவிட்டனர். முதலியாருடைய வீடு கண்ணகி நகரின் மையத்தில் உள்ளது. தெருவின் மையத்தில் உள்ள நாற்சந்தியின் அருகேதான் ஆழ்குழாய் கிணறும் அமைந்தது. அந்த ஆழ்குழாய் கிணற்றையொட்டி நாற்சந்தியில் கோயிலை அமைத்துவிடலாம் என்பதுதான் முதலியாரின் விருப்பம். தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே பிள்ளையாரும் அமையவேண்டும் என்று அவர் விரும்பினார்.

யாருக்கும் அவருடைய எண்ணத்தில் உடன்பாடில்லை. நாற்சந்தியில் அமையும் கோயில் எந்த நேரத்திலும் அகற்றப்படலாம். அது பெரிய மன சங்கடங்களை அளிக்கும் என்பதால் கோயிலை இடம் மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்பதை கமிட்டி உறுதியாக தெரிவித்தது. முதலியார் மறுபேச்சு பேசவில்லை. ''ஒங்க இஷ்டம் போல செய்யுங்க, நா என்னால முனிஞ்சத செய்யறேன்'' என்று பேச்சை முடித்துக் கொண்டார். ஊர் கமிட்டியும் அவரை வசப்படுத்தவென்று என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தது. கும்பாபிஷேக கமிட்டித் தலைவர், வசூல் கமிட்டித் தலைவர் என்று பதவிகளைக் கொடுத்துப் பார்த்தது. எதற்கும் அவர் மசியவில்லை.

கோயிலுக்கென்று அவர் கொடுத்த நன்கொடை ரூபாய் பத்தாயிரம் மட்டுமே.

கோயில் கும்பாபிஷேக தினத்தன்று அந்த கோயிலுக்கு வந்தவர் அதன் பிறகு அந்தக் கோயில் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. வழக்கம் போல நெசவாளர் காலனி பிள்ளையாரையே அவரது வழிபாட்டு பிள்ளையாராக இருந்தார்.


பெரியவனுக்கு அவிநாசியில் பெண்பார்த்து கட்டிவைத்தார். மாப்பிள்ளையோடு சேர்ந்து மாலையுடன் பிள்ளையார் கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது தெருவில் வேடிக்கை பார்த்துநின்ற சனங்களை மணப்பெண் சாவித்திரி நிமிர்ந்து பார்த்துச் சிரித்ததை செட்டியார் கடை சரசு வெகுநாட்கள் பெரும் கொடுமைபோல விவரித்துக்கொண்டிருந்தாள். சாவித்திரி கெட்டிக்காரி. எட்டாம் வகுப்புதான் படித்தது என்றாலும் வீட்டுக்கு வந்து ஆறே மாதங்களில் முதலியாரின் காக்கிப் பைக்குள்தான் எல்லாக் கட்டுப்பாடுகளும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டாள். பெரியவனை மெல்ல மெல்ல அதிலிருந்து விடுவிக்கும் காரியத்தை மிகக் கவனமாக அதேசமயம் முதலியார் சந்தேகப்படாதபடி தொடங்கினாள். அப்பாவின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த பெரியவனுக்கு “அப்பா மாதிரியே இருந்தா பெருமையில்ல மாமா. அப்பாவ விட இன்னம் ஜோரா தொழில் பண்ணோணும். சம்பாதிக்கோணும்” என்று சாவித்திரி சொன்னது பெரும் வேதவாக்காகப்பட்டது.
வருஷக்கணக்காக முதலியார் காக்கிப் பையை இறுக்கி இறுக்கி சேர்த்த பணத்தை சாவித்திரி இரண்டே வருடங்களில் சம்பாதித்துக் காட்டினாள். வீட்டில் சாவித்திரியின் கை சற்றே ஓங்கிய சமயம் பார்த்து தன் தங்கை வானதியையே சின்னவனுக்கு பேசி முடித்துவிட்டாள். அக்காளும் தங்கையும் ஒரே வீட்டில் இருந்துவிட்டால் பிரச்சினையில்லை என்கிற ஒரு காரணம் முதலியாருக்குப் போதுமானதாக இருந்தது. வானதி அக்கா சாவித்திரி அளவுக்கு இல்லை என்றாலும் அக்காவின் பாதையில் சின்னவனையும் மேலேற்றிவிட்டாள்.
இதில் முதலியாருக்கு உள்ளூர வருத்தத்தைவிட வியப்புதான் மேலோங்கியிருந்தது. “பொட்டப் புள்ளக, பொட்டப் புள்ளகன்னு கொஞ்சம் கொறச்சலாத்தான் எட போட்டுட்டேன் போல. பரவால்லே. ரெண்டு பசங்களும் பொண்டாட்டி தயவுல மேல வந்துட்டானுங்க. அப்பறம், பொண்ணு பாத்தது நாந்தானே” என்று பெருமையும் பட்டுக்கொண்டார்.
முதலியாரின் செல்ல மகள் வாணி பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றுக்கு போகும்போது, வாலிபத்தின் பாதையிலும் காலடி எடுத்து வைத்தாள். அந்த பருவத்திற்கே உரிய உடல்வாகும் மேனி வனப்பும் கொண்டிருந்தாள். அழகிதான். அவள் பள்ளிக்குச் செல்லும்போதும், மாலையில் இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் சுமக்கும்போதும் வாலிபர்களின் கண்கள் அவளையே மொய்த்திருக்கும். ''மொதலியார் கஞ்சத்தனம் பண்ணாத ஒரே விஷயம் இதாண்டா..'' என்று அவரை மெச்ச வைத்த பெருமை அவளுக்கே. அடுத்த வீட்டில் இருந்த சியாமளாவும் அதே பருவத்தவள். அதே பள்ளியும். இருவரும் சேர்ந்துதான் போவார்கள். வருவார்கள். சேர்ந்து உட்கார்ந்து கிசுகிசுத்தபடியே இருப்பார்கள். தங்களை வட்டமிட்டு நகரும் சைக்கிள்களின் எண்ணிக்கையைக் கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே புத்தகக் கட்டை நெஞ்சோடு அணைத்தபடி அன்ன நடை நடப்பார்கள்.

சியாமளாவினால் இவளுக்கு அந்தக் கடிதம் வந்ததா? இல்லை, சியாமளாவுக்கு வந்தததை இவளுக்கு வந்ததென சந்தர்ப்பவசமாய் சியாமளா இவளை மாட்டிவிட்டாளா? தெரியாது. ஒரு நாள் மாலையில் முதலியார் வீட்டில் சியாமளாவின் அப்பாவும் அம்மாவும் நின்றிருக்க, வள்ளியம்மாள் வாணியின் முதுகில் நாலு மொத்து மொத்தினாள். முதலியார் என்ன நடக்கிறது என்பது போல விரிந்த கண்களுடன் மகளையே பார்த்து நின்றார். ''பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போங்கடின்னு அனுப்பி வெச்சா, தெருப் பொறுக்கிட்டா வாறீங்க, கழுத முண்டைகளா? சேந்து உக்காந்துட்டு குச்சு குச்சுன்னு சிரிச்சு பேசறப்பவே நா கொஞ்சம் சுதாரிச்சிருக்கோணும், இப்ப சந்தி சிரிச்சுதான் புத்தி வருது..'' வள்ளியம்மையின் குரலில் பெருந்துக்கம்.

முதலியார் கையிலிருந்த அந்த கசங்கிய வெள்ளைத் தாளை விளங்காதவராய் பார்த்தார். கோடிட்ட அந்த தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் கிறுக்கலான கையெழுத்தில் ஒரு சில வரிகள். அழகை வர்ணிப்பதா, காதலைத் தெரிவிப்பதா என்ற குழப்பம் எழுதும்போதே இருந்திருக்க வேண்டும். அல்லது காகிதம் வேறு யார் கையில் கிடைத்தாலும் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்கிற பயமும் ஜாக்கிரதையும் சேர்ந்திருக்க வேண்டும். மொட்டையாகத் தொடங்கி மொட்டையாகவே முடிந்திருந்தது. அது வாணிக்கு ஒரு பையன் எழுதியது என்று சியாமளா சொல்ல, வாணி அந்தக் கடிதம் சியாமளாவுக்கு எழுதப் பட்டதுதான் என்று உறுதியாக நின்றாள். யாருக்கு எழுதப்பட்டது என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. ஆனால் ஆருயிர் தோழிகளின் நட்பு முடிந்துபோனது.

முதலியார் அதன் பிறகு தாமதிக்கவில்லை. ஏற்கனவே மனதுக்குள் திட்டமிட்டிருந்த பையனைப் பார்த்து பேசி முடித்தார். மேட்டுப்பாளையத்தில் கம்பெனி வைத்திருந்த ஏழுமலைக்குக்கும் வாணிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. முதலியார் காக்கிப் பையிலிருந்து நோட்டை எண்ணி எண்ணி செலவு செய்தார்.


பேரப் பிள்ளைகளும் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். ஒற்றை அட்டிகையுடன் வள்ளியம்மாளுக்கும் மூப்பேறிக் கொண்டே இருந்தது. முதலியார் மட்டும் அதே அரைக்கால் வேட்டி, தோள் துண்டு, நெற்றியில் விபூதிப் பட்டை, மாறாத கஞ்சத்தனம் என்று அப்படியே இருந்தார். அவரைச் சுற்றிய உலகத்தின் எந்தவொரு அசைவும் அவரிடம் எந்த ஒரு சிறு அசைவையும் ஏற்படுத்திவிடவில்லை, கால் கட்டைவிரலில் அந்த சிறு காயம் ஏற்படுகிற வரையில். எப்போதும் செருப்பு அணியாத அவருக்கு அவருடைய வீடு, தறி குடோன், பிள்ளையார் கோயில் என்று தெரு முழுக்க காலடிகொண்டே பரிச்சயம். ஆனாலும் அவருடைய இடது கால் கட்டை விரலை ஒரு சிறு கல் பதம்பார்த்துவிட்டது. லேசான காயம்தான். செகடந்தாளி பாட்டியின் பெட்டிக்கடைக்கு போனார். வெளியில் ஒரு தகர டப்பாவில் வெண்ணெயாக வழிந்திருந்த சுண்ணாம்பை எடுத்து காயத்தின் மீது தடவினார். அவ்வளவுதான் வைத்தியம். எப்போதும்போல அலட்டிக்கொள்ளவில்லை முதலியார். காயமும் தன் இருப்பை பெரிதாக காட்டிக்கொள்ளவுமில்லை.

இரண்டு வாரத்துக்குப் பிறகுதான் வலி மெல்ல காலை சுண்டியிழுத்தது. காலையில் எழுந்ததும் காலை தரையில் வைக்க முடியாமல் தடுமாறினார். தலையை சுற்றிக் கொண்டுவந்தது. கண்கள் இருண்டன. அப்படியே படுக்கையில் உட்கார்ந்து கொண்டார். உள்ளுக்குள் பயம் பிரமாண்டமாய் திரண்டது. இடதுகால் அவருடைய வசத்துக்கு இல்லாமல் வலியாக நீண்டிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவர் மீண்டும் எழுந்திருக்க முயன்றார். வலி கொஞ்சம் குறைந்ததுபோல இருந்தாலும் அவருக்கு எழ முடியும் என்று திடமான நம்பிக்கை வரவில்லை.

வள்ளியம்மை சொம்பு நிறைய நீராகரத்தை நீட்டினாள். அவருடைய முகத்தை எதேச்சையாக ஏறிட்டவள் திடுக்கிட்டாள். '' ஒரு மாரியா இருக்கற? என்னாச்சு?'' சொம்பை பற்றியிருந்த கைகள் நடுங்கி நீராகரம் தரையில் சிந்தியது.

''ஒண்ணுமில்ல, இந்த காலு வலிக்கறா மாரி இருக்குது. நிக்க முடியல.. எதாச்சும் கொறக்களி புடிச்சிருக்கும்'' என்று சமாளித்தபடியே நீராகரத்தை வாங்கி ஒரு மடக்கு குடித்தார். வள்ளியம்மையின் முகத்தை அவரால் நேராக பார்க்க முடியவில்லை. தனக்குள் எட்டிப் பார்த்திருக்கும் அந்த பயத்தை அவளால் நொடியில் கண்டுகொள்ள முடியும் என்று அவருக்கு தெரியும்.

இடது காலை அசைத்தபடியே ''பெரியவன கொஞ்சம் வர சொல்லு..'' என்றார்.

கொஞ்ச நேரத்தில் அவரால் எழுந்திருக்க முடிந்தது. ஆனால் வலியை காட்டிக்கொள்ளவில்லை. இயல்பாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள விரும்பியபோதும் கால் வலி அவரை தோற்கடித்தது. ''டாக்டர கொஞ்சம் கூட்டியாறயாடா?'' என்று பெரியவனிடம் கேட்கும்போது வாழ்வில் இதுகாறும் உணராத ஒரு பெரும் சரிவின் தொடக்கத்தை அவர் உள்ளூர உணர்ந்தார். இதுவரையிலும் தன் கைக்குள், கட்டுக்குள் இருந்த இந்த வாழ்க்கை இனி அப்படி இருக்கப்பபோவதில்லை என்ற யதார்த்தம் அவரை நொறுக்கியடித்தது.

அவர் அப்படி கேட்டதே பெரியவனுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஓடினான். சிதம்பரம் டாக்டர் நல்ல வேளையாய் அப்போதுதான் கிளினிக்குக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பா வரச்சொன்னார் என்று பெரியவன் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. ''என்ன எதாச்சும் கோயில் காரியமா?'' என்று சாதாரணமாக கேட்டார். பழனி, திருப்பதி என்று சாமி காரியத்துக்கு மட்டும்தான் முதலியார் டாக்டரிடம் பேசுவார், வருவார். உடம்புக்கு என்று அவர் எதையும் காட்டியதுமில்லை. இவரும் வைத்தியம் பார்த்ததுமில்லை. ''உலகத்துல இப்படி இருக்கறது ரொம்ப அபூர்வம். ஒடம்ப கெடுத்துக்காத பக்குவமா பாத்துக்கறதுங்கறது ஒரு பெரிய படிப்பு. அதுல முதலியார் டாக்டர்தான்''.

நிலைமையை பெரியவன் சொன்னபோதுகூட டாக்டருக்கு நம்பிக்கையில்லை. நேரில் வந்து காலை பரிசோதித்தார். சில நிமிடங்களிலேயே இடதுகாலின் நிலையை, முதலியாரின் நிலையை அவர் புரிந்துகொண்டுவிட்டார். ''எப்பவாச்சும் சமீபத்துல ஆஸ்பத்திரி போனீங்களா, முதலியார்?'' சாதாரணமாக கேட்டார். பெருமாநல்லூர் ஆஸ்பத்திரி தவிர வேறெந்த ஆஸ்பத்திரிக்கும் போனவரில்லை என்பது அவருக்கும் நன்றாக தெரியும். '' ஆமா, எப்ப பாத்தாலும் அந்த வெள்ள மாத்தரையவே தாறாங்கன்னு நா இப்ப போறதேயில்ல '' என்றவர் டாக்டர் என்ன சொல்ல போகிறார் என்பதை அச்சத்தோடு எதிர்பார்த்திருந்தார்.

கால் காயம் எப்படி எப்போது பட்டது, அதற்கு என்ன வைத்தியம் என்றெல்லாம் விசாரித்த பிறகு ''நாம இப்ப உடனே கோயமுத்தூர் போயாகணும். செரியாயிரும். ஆனா தாமதிக்கக்கூடாது'' என்று முதல் உதவிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

கோவையில் அவரை பரிசோதிக்கிற சமயத்தில், கட்டைவிரலில் புரையோடியிருந்த சீழ் இடது கணுக்கால் வரையில் மேலேறிவிட்டிருந்தது. சர்க்கரை வியாதி என்ற இப்போதைய பிரபலமான வியாதி அப்போது அவ்வளவாய் அறியப்படாத ஒன்றாக, பணக்காரர்களுக்கு மட்டுமேயான வியாதியாக இருந்தது. அதற்கான சிகிச்சை முறைகளும் முன்னேறாத அந்த காலகட்டத்தில் முதலியாரின் இடதுகாலை காப்பாற்ற முடியாமல் போனது. காலை துண்டாக்குவது என்பது ஒரு சிகிச்சை முறை என்பதைக்கூட முதலியாரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மீண்டும் அவர் கண்ணகி நகருக்கு வந்து ஒத்தைக் காலுடன் இறங்கும்போது தெருவே கண்ணீருடன் நின்றது.

இரண்டு மாதங்கள் வரைக்கும் படுக்கையிலேயே கிடந்தார். காலை இழந்த துக்கத்தை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பதிலாக தன்னை மேலும் வன்மம் கொண்டவராக திரட்டிக் கொண்டார். சொற்களை எப்போதும் கூராகக்கியபடியே யார் மீதேனும் அதை பிரயோகிக்கும் தீவிரத்தோடே கிடந்தார். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. பேசப் பிடிக்கவில்லை. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தார். விசாரிக்க வருபவர்களை சொற்களால் விரட்டினார். ''என்ன ஒத்தத் தறி மொதலியாரு ஒத்தக் காலு மொதலியார் ஆயிட்டான்னு குஷியா இருக்கா? இவன் எப்புடி கெடையில உழுந்து கெடக்கறான்னு பாக்கறதுல அத்தன சந்தோஷம்.. போங்கய்யா போயி அவனவன் சோலியப் பாருங்க'' என்று எடுத்தெறிந்து விரட்டினார்.

படுக்கையையொட்டிய சன்னலின் வழியே யாரும் உள்ளே எட்டிப் பார்த்துவிடக்கூடாது. ''என்ன இங்க வேடிக்கை காட்டறாங்கன்னு அப்பிடி எட்டிப் பாக்கறது? ஒத்தக் காலோட இவனெப்பிடி சோலி பாக்கறான்னு அப்பிடி பாக்க சொல்லுதா? உள்ள வாங்கடி எல்லாரும்.. வந்து நலலா பாத்துட்டு போங்கடி.. '' என்று காதுகொள்ளாத வசனங்களை மூச்சுத் திணறும் வரையிலும் கத்திக் கொண்டிருப்பார்.

''மொதலியாருக்கு காலுதான் புளுத்து போச்சுன்னு பாத்தா, புத்தியுமில்ல புளுத்துப் போச்சு'' என்று காதுபட பேசும்படியாக ஆனது.

''இந்த மனுசன் இப்பிடி கெடந்து ஊரெல்லாம் சபிக்கறமாரி இருக்கறதுக்கு பதுலா, ஒரேயடியா போய் சேந்தா, ஒரு பொழுது அழுதுட்டு விட்றலாம்.. இப்பிடி கெடையில கெடந்து உசுர வாங்குதே..'' வள்ளியம்மைக்கு பொறுக்கவில்லை துக்கமும் ஆற்றாமையுமாய் புலம்பிக் கிடந்தாள்.

தெருவில் நடந்து அந்த வீட்டை கடந்துபோகும்போது அவர் இருக்கும் ஜன்னல் பக்கம் யாரும் திரும்பிப் பார்க்க துணியவில்லை. திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டால் போதும். தெருக் கோடி வரையில் அவரது சொற்கள் துரத்திக் கொண்டு வந்துவிடும்.

ஊன்றுகோலின் உதவியுடன் நடமாட முடியும் என்று டாக்டர்கள் சொன்ன பின்பும் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ''முதலியார் மூணுகால்ல நடக்கறான் பாருன்னு எல்லாரும் கேலி பேசுவாங்க.. நா திரும்பி மொறைக்கணும்னாக்கூட முடியாது. அப்பிடி என்ன வெளியில போய் உனி கிழிக்கவேண்டி இருக்குது? அதெல்லாம் வேண்டாம்''. எப்போதாவது அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் வரவழைத்திருந்த ஊன்றுகோல் அவர் கண்ணில் படாமல் உள்ளறையில் கிடந்தது.

அறையில் நுழையும் வெளிச்சம் அவருக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. மாலையில் விளக்கேற்ற அனுமதிக்கவில்லை. இருட்டு சற்று ஆறுதலாக இருந்தது. இருண்ட அறையிலிருந்து தெருவையே கண்காணித்தபடி உட்கார்ந்திருப்பார். விழித்தேகிடந்தார் எப்போதும். தூக்கம் என்பதே இல்லாமல்போனது. அவரை நோக்கி அந்த அந்திமத் தருணம் எந்த நேரத்திலும் வந்துவிடும் என்பதை அறிந்தவர்போல ஒவ்வொரு ஓசையையும் ஒவ்வொரு காட்சியையும் அவர் தவறவிடாத கவனத்துடன் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தார்.

கால்போன நாளிலிருந்து நெற்றியில் விபூதிப் பட்டை இட்டுக் கொள்வதை மறுத்துவிட்டிருந்த அவர், அன்றைக்கு சாயங்காலம் வள்ளியம்மாளை அழைத்தார். தோளை பிடித்து தன்னை நடக்க வைக்கும்படி கேட்டார். ஊன்றுகோலை எடுத்துத் தரவா என்று கேட்டபோது கோபமாக மறுத்தார். வள்ளியம்மையின் தோளைப் பற்றியபடியே வீடு முழுக்க நிதானமாக சுற்றிப் பார்த்தார். வாசலுக்கு வந்தார். சற்றே தயங்கினார். தெருவில் சற்று தொலைவு நடக்கவேண்டும் என்று அவர் சொன்னதும் வள்ளியம்மை குமுறி அழத்தொடங்கிவிட்டாள். முதலியார் ஒன்றுமே பேசாமல் அவளைப் பற்றிக் கொண்டே தெருவுக்கு வந்தார். சில தப்படிகள் மட்டுமே நடந்தார். போதும் திரும்பலாம் என்று வாசலுக்கு வந்துவிட்டார். நின்று தெருவை நெடுகப் பார்த்தார். அந்தி வானத்தை அண்ணாந்து நோக்கினார். கண்களை மூடியபடி சற்று நேரம் மெளனமாகவே நின்றார். உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டார்.  அதற்குப் பிறகு அவர் பேசவேயில்லை.

இரவு நெடுநேரம் வரையிலும் அவர் அருகிலேயே உட்கார்ந்திருந்தனர் மனைவி மக்கள். அவரது மெளனம் பெரும் அச்சத்தை தந்திருந்தது. அதிகாலை நேரம் கண்ணசந்து போய்விட்ட வள்ளியம்மை திடுக்கென்று எழுந்தாள். முதலியார் கட்டிலில் படுத்திருந்தார். முகத்தை உற்று பார்த்தாள். அபாரமான சாந்தம். இதுவரையிலும் காணாத ஒரு மெல்லிய சிரிப்பு உதடுகளில் கோடிட்டிருந்தது. திரும்பி கடிகாரத்தை பார்த்தாள். மணி நாலரை. எப்போதும் அவர் எழுந்து கொள்ளும் நேரம்தான். இடது கையை தொட்டுப் பார்த்தாள். சில்லென்று அவளை சுட்டது. ஒரு கணம்தான். அவளுக்கு தெரிந்துவிட்டது.

(தமிழினி மே 2010)










‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...