ஒரு மனிதனின் வழக்கத்துக்கு மாறான,
சற்றே வித்தியாசமான வாழ்வை, பிறிதொரு நோக்கில் அணுகும்போது பல கேள்விகளையும் சிந்தனைகளையும்
திறப்புகளையும் அளிக்கிறது. நடைமுறைக்கு மாறான சில சாத்தியங்களையும் புனைவின் வழியாக
உருவாக்கிப் பார்க்க முடிகிறது. அறிவியல் பரிசோதனைகளைப்போல புனைவின் வழியாகவும் சில
சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
புறவாழ்வின் பல்வேறு பிரச்சினைகளுக்கும்
சிக்கல்களுக்கும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமாக சில விளக்கங்களையும்
பதில்களையும்கூட தந்துவிட முடியும். ஆனால், அகம் சார்ந்த வினாக்களுக்கு பதில்கள் யாவும்
எண்ணற்ற சாத்தியங்களாகவே நம் முன் உள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில்
செல்லுபடியாகும் ஒரு தீர்வு அதே மனிதனின் இன்னொரு சூழலுக்கும் பிரச்சினைக்கும் பொருந்திப்
போவதில்லை. அதேபோல, ஒரு மனிதனின் குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக அமைந்த ஒன்றை இன்னொரு
மனிதனின் அதே பிரச்சினைக்கு பரிந்துரைக்கும்போது அது வெற்றியடையும் என்ற உறுதியும்
இல்லை. எனவே, பொதுவான எல்லோருக்கும் பொருந்திப்போகும்படியான தீர்வுகள் உளவியல், உறவுகள்
சார்ந்த சிக்கல்களுக்கு இல்லை. இங்குதான் கலையும் இலக்கியமும் திரண்டு வருகின்றன. முழு
முற்றான தீர்வுகளைத் தரமுடியாதபோதும் கலையும் இலக்கியமும் அந்தப் பிரச்சினைகளின் ஆதார
வேர்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்ள துணை நிற்கின்றன. தனி மனிதனின் பிரச்சினையை,
துயரத்தை, வாதையை அது பொதுவான ஒன்றாக மாற்றிக் காட்டுகிறது. இந்தப் புரிதல் மனிதர்களை
திடப்படுத்துகிறது. மேலும் உரத்துடனும் உற்சாகத்துடனும் முன்னகர ஊக்கந்தருகிறது.
அக ஆழத்தைக் கண்டறியும் இலக்கியத்தின்
பாதையே என் கதைகளின் பாதையும். மனத்துள் இருக்கும் மர்மங்களைக் கண்டறிவதென்பது வாழ்க்கையைப்
புரிந்துகொள்வதுதான். ஆனால், அது அத்தனை சுலபமில்லை. இருண்ட அதன் புதிர்வழிகள் தடுமாறச்
செய்யும். தலைச்சுற்ற வைக்கும். அதே சமயத்தில் எதிர்பாராத புதிய திறப்புகளையும் ஆச்சரியங்களையும்
அங்கங்கே புதைத்து வைத்திருக்கும். சரியான ஒரு சொல்லோ புனைவுத் தருணமோ அந்த இடத்தில்
கைவைக்கும்போது அவை திறந்துகொள்ளும். எழுதுபவனுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவனுக்கும்
புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். இதிலுள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சமயத்தில்
அது எழுத்தாளனின் கைகளுக்குத் தட்டுப்படாமல் வாசகனுக்கு மட்டும் வாய்க்கும் என்பதுதான்.
சிவகாமி, சக்தியோகம், ஊதாநிற விரல்கள்,
முனிமேடு, சீசர், முறிவு, தருணம், உடன் பிறந்தது போன்ற பல கதைகளும் மன ஆழங்களின் பல்வேறு
இடுக்குகளைத் தொட்டுக் காட்டுகின்றன. ‘தீர்த்த யாத்திரை’ அவ்வாறான ஒரு அகவழிப் பயணம்
தான். ஒரு கணம் ஒளியும் மறுகணம் இருளுமாய் தடுமாறச் செய்யும் இப் புதிர்வழிகளைத் தொடர்ந்து
செல்வது புனைவின் பெரும் சவால். அந்தச் சவால் எனக்குப் பிடித்திருக்கிறது. இருளை நோக்கிச்
செல்லும் என்னை அது ஒளியின் முன்னால் நிறுத்தும் அற்புதம் ஏதேனும் ஒரு கணம் நிகழும்.
அந்த ஒரு நொடிக்காகவே பல நூறு இருட்கணங்களை பதைப்புடன் கடந்து போகிறேன்.
குகையில் வாழ்ந்த காலத்திலிருந்து
இன்றைய அணுயுகம் வரையுமான பாதையில் மனிதன் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டேதான் வருகிறான்.
தவறுகளை உணர்ந்து சரிசெய்கிறான். ஒழுக்க நியதிகளை வகுத்து அவற்றை கடைபிடிக்கிறான்.
சக மனிதனுடனான உறவையும் சமூக வாழ்வையும் முடிந்தமட்டிலும் சீராக வைத்திருக்கவே விழைகிறான்.
ஆனாலும், அடிப்படை உயிர் விசைகளான பசியும் காமமும் அவனை எந்த நேரத்தில் என்னவிதமான
காரியத்துக்குத் தூண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடிவதில்லை.
பசி, காமம் இரண்டும் செலுத்தும்
மனிதனின் பாதையையே எழுத்துத் தொடர்கிறது. என் கதைகளின் வழியாக இந்த ஆதி விசைகளின் வெவ்வேறு
அலைகளைத் தொட்டுப் பார்த்து உணர முயல்கிறேன். ஆண் பெண் உறவுகளின் எல்லையில்லாத முடிச்சுகளில்
ஒன்றையேனும் அவிழ்த்துவிட முடியுமா என்று வெவ்வேறு விதங்களில் அந்தக் கதைகளைச் சொல்லிப்
பார்க்கிறேன். இரவு, நிலைக் கண்ணாடி, வால்வெள்ளி
ஆகிய கதைகளும் மணல் கடிகை, மனைமாட்சி நாவல்களும் அப்படிச் சொல்லிப் பார்த்தவைதான்.
பசியே மனிதனுக்கு சேர்த்துவைக்கும்
ஆசையை ஏற்படுத்துகிறது. அடுத்த வேளை பசிக்கான உணவை பத்திரப்படுத்துவதில் தொடங்கி அது
அடுத்தடுத்த தலைமுறைக்கு கணக்கிலடங்கா சொத்துகளை சேர்த்து வைக்கும் பேராசையாக பயங்கரமாக
உருமாறியிருக்கிறது. வேலை, தொழில், வளர்ச்சி என்று வெவ்வேறு பெயர்களில் இதைச் சுட்ட
முடியும் என்றாலும் அனைத்தின் ஆதார விசையும் இந்த பசியும் அதன் உபவிளைவான சுயநலமும்தான்.
சுயநலம் முதலில் தன் பசி ஆற்றுகிறது. தனக்கான உணவை உத்தரவாதப்படுத்தியதும் குடும்பம்,
பிள்ளைகளுக்கான உணவை பின் வசதிகளை உறுதிப்படுத்துகிறது. இதற்காக அது எந்த எல்லைக்கும்
செல்லும். அடுத்தவனை கெடுக்கும். துரோகம் இழைக்கும். உழைப்பை நசுக்கும். இயற்கையை சுரண்டும்.
வளங்களைக் கொள்ளையடிக்கும். இதில் சரி, தவறுகளுக்கான கோடுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே
இருக்கும். நான் பிறந்த, வளர்ந்த திருப்பூர் ஒரு சிற்றூர். என் கண் முன்னே அது தொழில்
நகரமாக வளர்ந்தது. உழைப்பின், திறமையின் மூலமாக எப்படிப்பட்ட உயரங்களையும் எட்டலாம்
என்பதற்கு உதாரணமாக அமைந்தது. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது.
கடும் உழைப்பின் வழியாக உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்த அதே நகரம்தான் அறமும் மதிப்பீடுகளும்
வேகமாக சரியும் அவலத்தையும் காட்டியது. தொழில் வளர்ச்சிக்கு முன் நிலமும் நீரும் காற்றும்
மாசுபடுவதோ சூழல் சீர்கெடுவதோ முக்கியம் ஒன்றுமில்லை என்ற அலட்சியத்தை அடையாளப்படுத்தியது.
பெருவளர்ச்சியின் இரு பக்கங்களையும் சிறிதும் பெரிதுமாக கண்ணெதிரில் கண்டுணர முடிந்தது.
என் ஆரம்ப காலச் சிறுகதைகளான இருப்பு, விளிம்பில் நிற்கிறவர்கள், இலையுதிர்காலம், விடுதலை
போன்றவை இவற்றையே மையம் கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இதன் உச்சமாக அமைந்தது
‘மல்லி’. இவை அனைத்தும் ஒன்றிணைந்து உருவான பெருநாவலே ‘மணல் கடிகை’. ஒருவகையில், இக்கதைகள்
அனைத்துமே ‘மணல் கடிகை’ நாவலின் பகுதிகளே. ‘மணல் கடிகை’யில் உள்ள திருப்பூர் இன்று
இல்லை. அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்துவிட்டது அந்த நகரம். அந்த மாற்றங்களையும் தடுமாற்றங்களையும்
சொல்ல இன்னொரு ‘மணல் கடிகை’தான் எழுதவேண்டும்.
பசி உடலின் தீயென்றால் காமம் உயிரின்
நெருப்பு. இதுவே உயிர்களை உறவுகளை இயக்கும் கனல். ஆண் பெண் உறவுகளின் எண்ணற்ற கோலங்களை,
திரிபுகளை, விசித்திரங்களை, உன்னதங்களை அன்றாடம் தொடர்ந்து காண்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே
திருமணம், குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாறிவரும் சமூகச் சூழலுக்கும் மதிப்பீடுகளுக்கும்
ஏற்ப அவற்றின் சமகாலப் பொருத்தங்களைப் பற்றிய கேள்விகளை நம்மால் புறந்தள்ளிவிட முடியாது.
குடும்ப அமைப்பு ஒரே சமயத்தில் பெரும் பாதுகாப்பையும் கூடவே பலமான கட்டுப்பாடுகளையும்
தருகிற ஒன்று. திருமணம், குடும்பம் சார்ந்த சமகாலக் கேள்விகளை வெவ்வேறு கோணங்களில்
எழுப்புவதன் வழியாக அதைப் பற்றிய அழுத்தமான விவாதங்களையும் அவற்றின் மூலமாக சில தெளிவுகளையும்
அடைய முடியும் என்ற நோக்கில் அமைந்ததே ‘மனைமாட்சி’ நாவல்.
இன்று அழிவின் விளிம்பில் இருக்கும்
தொழில் கைத்தறி நெசவு. என் குடும்பத் தொழிலாக இருந்த நெசவிலிருந்து வெகு வேகமாக விலகி
வந்துவிட்டது கடந்த இரண்டு தலைமுறைகள். எங்கள் பகுதி முழுவதும் ஒலித்திருந்த தறிச்
சத்தங்களை இன்று அக்கம்பக்கத்தில் வெகு தொலைவு வரை எங்கும் கேட்க முடியவில்லை. புதிய
தலைமுறையினருக்கு தறியையும் அதன் வெவ்வேறு உப தளவாடங்களையும் கண்ணில் காட்டுவதற்குக்கூட
ஒன்றும் மிச்சமில்லை. இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து
தமிழகத்துக்கு வந்து சேர்ந்த ஒரு இனத்தின் அடையாளம் இன்று மாறிவிட்டது. இந்த இனக்குழுவின்
பயணத்தை, வாழ்க்கையை இலக்கியத்தின் வழியாக மட்டுமே பத்திரப்படுத்த முடியும். நெசவைப்
பற்றியும் நெசவாளர்களின் பாடுகளைப் பற்றியுமான என் கதைகளின் உத்தேசம் அதுதான். ‘அம்மன்
நெசவு’ம் சில கதைகளும் அந்த இலக்கை நோக்கி எழுதப்பட்டவையே.
அகமும் புறமுமாய் எதிரெதிராகச்
சுழன்றபோதும் இப் புனைவுகள் ஒரு வட்டத்தைப் பூர்த்தி செய்பவையாகவே இருக்கின்றன. அதன்
இன்னொரு பகுதியாகவே வரலாற்றுத் தகவல்கள், சம்பவங்களிலிருந்து புதிய புனைவை உருவாக்குவது.
ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றில் உள்ள இடைவெளிகளை புனைவைக் கொண்டு நிரப்புவதன் வழியாக புதிய
கோணத்தில் அந்த சம்பவத்தையோ சரித்திரத்தையோ காட்டுவது. ‘மண் வீணை’, ‘கஜாரிகா’ போன்ற
கதைகள் அவ்வாறு எழுதப்பட்டவையே. அதன் தொடர்ச்சியாகவே, ‘மாயப் புன்னகை’ குறுநாவல் உருவானது.
இன்னும் விரிவான அளவில், சரித்திரம் சமகாலம் இரண்டையும் சேர்த்து புலி வேட்டையை களமாகக்
கொண்டு எழுதப்பட்டதே ‘வேங்கை வனம்’ நாவல். இவ்வாறான ஆக்கங்கள் சில புதிய சாத்தியங்களையும்
தமிழ் களத்தில் பேசப்படாத களங்களையும் முயல்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. புற நிகழ்வுகளை,
தகவல்களைப் பேசுவது போல அமைந்துள்ள இந்த ஆக்கங்கள் யாவுமே உண்மையில் அக நுட்பங்களையே
தீவிரமாக உணர்த்துகின்றன.
எழுத்து எனக்குப் பிடித்தமானது.
எழுதும் கணங்கள் பெரும் பரவசங்களையும் அதே நேரத்தில் அவஸ்தைகளையும் அளிப்பவை. முன்பு
உத்தேசிக்காத அபூர்வமான சில கணங்கள், காட்சிகள் தன்னிச்சையாக எழுதப்படும்போது எழுதியது
நானல்ல என்பதை உணர்ந்து திடுக்கிட்டிருக்கிறேன். அபூர்வமாக எப்போதாவதுதான் வாய்க்கும்
அவ்வாறான புனைவின் மாயத் தருணங்களுக்காகவே அன்றாடம் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறேன்.
என் எழுத்து எனக்குத் தரும் நிறைவில், மகிழ்ச்சியில், உணர்வில் ஒரு பகுதியை அதை வாசிக்கும்
முகம் தெரியாத ஒருவர் அடைந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வரும்போது தொடர்ந்து
எழுதலாம் என்ற உற்சாகமும் ஊக்கமும் பிறக்கிறது. அவ்வாறான ஒரு நிறைவையும் மகிழ்ச்சியையும்
உணர்வையும் என் எழுத்து என்னிடமோ, வாசகரிடமோ எட்ட முடியாதபோது எழுதுவதை நிறுத்திவிடுவேன்.
அதைவிட எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் வேறென்ன நியாயத்தை செய்துவிட முடியும்?
0
ஆகஸ்ட் 2023
(கே.பி.நாகராஜன் தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஏன் எழுதுகிறேன்?’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)