Thursday 23 July 2020

Four Poems



மத்திய சாகித்ய அகாதமியும்  ஒரிசா சாகித்ய அகாதமியும் இணைந்து  1998ம் ஆண்டு புவனேஷ்வரில் அகில இந்திய கவிஞர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.  மூன்று நாள் நிகழ்ச்சி. தமிழிலிருந்து ரவி சுப்ரமணியன், சிபிச்செல்வன் ஆகியோருடன் நானும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் வாசிக்கவென நான்கு கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டு செல்லவேண்டியிருந்தது. என் வேண்டுகோளுக்கு இணங்கி திரு.ஆர்.சிவகுமார், திரு.பி.ராஜா ஆகிய இருவரும் தலா இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து உதவினர்.

அப்போது ஈரோட்டிலிருந்த நான் அங்கிருந்து சென்னை சென்று ரவியுடன் சேர்ந்து கோரமண்டல் விரைவு ரயிலில் புவனேஷ்வர் சென்று சேர்ந்தேன். சிபி முன்பே புறப்பட்டுச் சென்றிருந்தார். நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பே சென்றிருந்ததால் கொனார்க், பூரி, புவனேஷ்வரில் சில கோயில்களை ஆகியவற்றை காணும் வாய்ப்பு கிடைத்தது.

சவுக்குத் தோப்புகளுக்கிடையே மணல் மேட்டில் அமைந்திருந்த கொனார்க் சூரியன் கோயிலில் சில மணிநேரங்களை செலவழித்த பிறகு பூரியின் அழகிய கடற்கரையில் உலவிவிட்டு ஜெகநாதர் கோயிலையும் தரிசித்தோம்.

மறுநாள் காலையில் நிகழ்ச்சி நடக்கவிருந்த சிலிகா ஏரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

பிரமாண்டமான சிலிகா ஏரிக் கரையில் அமைந்திருந்த ஒரு ரிசார்டில் விழா நடந்தது.

இரண்டாம் நாள் மாலையில் அழகிய படகொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதை வாசிப்பு நிகழ்வில் எனது இந்த நான்கு கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கவிதைகளை வாசித்து முடித்தபோது சம்பிரதாயமாய் அனைவரும் கைதட்டினார்கள். யாருக்கும் காதில் விழுந்ததா, புரிந்ததா என்று அப்போது தெரியவில்லை.

மறுநாள் காலையில் விடுதி அறைக்கு வெளியே அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, வங்கக் கவிஞர் புன்னகைத்தபடியே வந்தார். தாடிவைத்த இளைஞர். என்னிடம் நெருங்கி கைகுலுக்கியபடி சொன்னார் “உங்களது கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன. இங்கு வாசிக்கப்பட்ட கவிதைகளிலேயே சிறந்த கவிதைகள்.” சிறிது நேரம் தமிழ்க் கவிதைகள் குறித்தும் அங்கிருந்த மற்ற கவிஞர்களைக் குறித்தும் ஆங்கிலத்தில் உரையாடினோம்.

இப்போது இதை எழுதும்போது அந்தக் கவிஞரின் பெயரை என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. குறிப்புகளைத் தேடி எடுத்து பின்னர் தந்துவிடுகிறேன்.

அந்த விழாவின்போது இந்திய அளவில் முக்கியமான கவிஞரான ரமாகாந்த் ரத் அவர்களை சந்தித்து உரையாடியது முக்கியமான நிகழ்வு.

இக் கவிதைகளை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துத் தந்த திரு.ஆர்.சிவகுமார், திரு.பி.ராஜா இருவருக்கும் நன்றிகள்.

0
Four Poems
1
The Picture that cannot be
I m not going to draw your picture
I know it is impossible
to enclose your personality on a canvas
that is nailed to a square frame.
My ductile brush cannot manage your stateliness
in the timeless space.
No glowing colour in my palette is suited for it.
What could I draw with
your portrait that is inaccessible to lines?
I have no answer to your smiley
that percolates on the shadow-plate air.
Besides, I have a fear.
My strokes have no strength
to carry the flame of your eye.
Above all
as I have no skill to express your ecstatic silence
Without discordance
I m not going to draw your picture.

With fascinating colours
on the curtain on boundless time
You ll draw your picture yourself
One day.
That day
I ll discard my brush
satisified
That I ve drawn my life’s exceptional picture.

(Translated by Mr.R.Sivakumar)

2
A Handshake at last
With a gun aiming at my temple
You are there. Face to face
filled with arrogance born of victory.

I, the defeated, am with a drooping head
My hands are tied behind
The knot of the nylone rope
feeds on the flesh of my wrist.

Smoky region pervaded by the explosive fume
A pile of bullet-pierced bodies
the undentified, blasted and rent,
are not yet decayed.
The rage of war lately silenced
by the screech of eagles.

Many co-captures are shot dead
Their hot blood burns me
in spite of my thick boots.

See – you have a chance.
Check the power of your gun
to blow out my brain.

A sure death is painless.
My death is my message.

Yet, my friend!
Untie my hands…
Let me shake your hands
Once, at last.

(Translated by Mr.R.Sivakumar)


3
To the dancing daughter…

In the casuarinas grove
behind my easy chair
lurks still the yogic dusk.

Your letter brings back to my memory
your face after a long lapse of time
my heart jumps for joy
I am feasting my eyes
on the dance you danced
in the music square
under the full moon sky.

Were you aware of the kiss
I planted on your bloodshot feet
when you were dead tired on that night?

Your feet that learnt the art
on my chest with
the tune of your anklet bells,
now dance in the Hall of fame.

O my perfection! I can resist no more/
Before my hands go numb
let me throw open my heart.

Renovate my sand-castles
wrecked by turbulent waves.

String my wind-blown dreams
and deck your dark tresses with it.

Complete my unfinished lyrics
with your diction.

Fasten my anklet bells
that have not tinkled for a long time.

Dance the, the dance.

Begin to dance the dance
Left incomplete by my spent foot.

0
(Translated by Mr.P.Raja)

4

Endless Journey

Cankerous worms feast upon
The blood cells.
I stand on the pinnacle
With my hand outstretched.
Your sweetest song
Unable to reach my ears
Continue to fall somewhere.
Your melodious tunes dash against
Unblunt rocks only to break into
Smithereens.

Your feathery voice
Floats dancing in the air
Escaping my fingers.
Shivering legs speed up their tempo.
The pinnacle loosens
Its final hold.
I squeal in silence
For fear that my death throes
Would mutilate your melodious tunes.
Ah! I am falling now.
The lovely traps of death
Are closing in on me.
And death creaves
To hug me in a frenzy.

I will vanquish
The ascending scale of your voice.
My palms still remain unclosed.
I will pluck
From any of the trees
Your musical note
That has bloomed there
 And hold it tight
Forever.

(Translated by Mr.P.Raja)








Tuesday 21 July 2020

தமிழ்ச் சிறுகதை இன்று - 8: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது.
சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே அவருடைய கதைகளைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தது.
நவீன தொழில்நுட்ப வசதிகளினாலும் இணைய இதழ்களாலும் சிறுகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. ஒவ்வொரு மாதமும் இணைய இதழ்களின் வழியாக நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கதைகளின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. எல்லாக் கதைகளையும் படிக்க வாய்க்காமல் போகிறது என்பதைவிட நல்ல கதையைத் தவறவிடுகிற வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே அதிகமும் சோர்வைத் தருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறுகதையாளராக தன்னை அடையாளப்படுத்துவதும் பிறகு அதைத் தக்கவைப்பதும் பெரும் சவால். பிற சிறுகதை ஆசிரியர்களுக்கு இல்லாத, ‘யுவ புரஷ்கார்’ எனும் இன்னொரு கூடுதல் சுமையின் அழுத்தத்தையும் சமாளிக்கும் பொறுப்பு சுனில் கிருஷ்ணனுக்கு உண்டு.
இதுவரையிலும் அவர் எழுதியுள்ள கதைகள், குறுங்கதைகளை வைத்து அவரை எந்த வகைமைக்குள்ளும் வரையறுத்து நிறுத்த முடியாது. எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிப் பார்க்கிறார். வடிவம் சார்ந்த மொழி சார்ந்த உத்திகளையும் கொண்டு புதிய பாணியில் கதைகளைச் சொல்ல அவர் தயங்குவதில்லை. இவ்வாறு அவர் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம் அவருக்கு தன்னிச்சையான வாய்ப்புகளை சாத்தியப்படுத்துகிறது. அந்த வாய்ப்புகளைக் கொண்டு அவர் தன் புனைவுத் தளத்தை குறிப்பிட்ட வகைமைக்குள் நிறுத்திவிடாதபடி விரிவுபடுத்தியபடியே இருக்கிறார், அதில் சில அபாயங்கள் இருந்தபோதும்.
சுனில் கிருஷ்ணன் அடிப்படையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நோய்மைக்கான ஊற்றை அறிந்து அதனை நீக்குவதற்கான மருத்துவமுறைகளைக் குறித்த நேரடி அனுபவங்களை அவர் கதைகளாக ஆக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நோய்களை, நோயாளிகளின் போக்குகளை, அவர்களது உறவினர்களின் மனச்சாயல்களை அறிந்துகொள்ள முடிகிற அவரால் அவற்றைக் கதையாக்கவும் முடியும். ‘வாசுதேவன்’, ‘அம்புப் படுக்கை’, ‘இந்திர மதம்’ போன்ற கதைகள் இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தபோதும் இந்த மூன்றிலும் அவர் மனத்தின் வெவ்வேறு திரிபுகளையே மையப்படுத்தியிருக்கிறார்.
பெற்ற மகனேயானாலும் நோய்ப்படுக்கையில் கிடப்பவனை எதுவரையிலும் பராமரிக்க முடியும் என்ற கேள்விக்கு உணர்ச்சியின் பலத்தில் பதிலளிப்பது சிரமம். ஆனால், அறிவின் பலத்துடன் அணுகும் போது வேறு சாத்தியங்கள் தென்படும். பெரிய கோடாக நினைத்திருக்கும் போது அதனருகில் விழும் கோடு அதனையும்விட பெரிதாக அமைந்துவிட்டால் முதல்கோடு சிறிதாகி விடும் யதார்த்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் ‘வாசுதேவன்’ கதையில் தொழிற்படும் அதே மனம் வேறுவிதமான திசையில் திரும்பும் சாத்தியத்தை ‘அம்புப் படுக்கை’ சுட்டுகிறது. மரணத்தின் மேல் மனிதன் கொண்டிருக்கும் அச்சமும் வாழ்வின் மீதான தீராப் பற்றும் அனைவரையும் இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கையில்தான் கிடத்துகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் மாறாக உண்டதைச் செரிக்காமல் புதியதை எடுக்காமல் சுருண்டிருக்கும் அட்டையின் நோய்மையைக் காட்டுகிறது, ‘இந்திர மதம்’.
அறுதியிட்டு வகுக்க முடியாத மனத்தின் புதிர்வழிகளை ஆயுர்வேதத்தின் பின்னணியிலிருந்து விலக்கி கிராமங்களின் மரபான சடங்குகள், குல வரலாறுகள் ஆகியவற்றின் பின்புலத்தில் புனைவாக மாற்றும்போது அவை ‘குருதிச் சோறு’, ‘சிதல்’ போன்ற கதைகளாக உருமாற்றம் கொள்கின்றன. கிராமந்தோறும் உள்ள குலசாமிகள் குறித்த கதைகள் இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் உள்ள நெருக்கமான உறவை பின்னிக் காட்டுபவை. கட்டற்ற மனத்தின் அலைவுகளை ஒருமுகப்படுத்தவும் நிலைநிறுத்தவுமான வழிமுறைகளை சடங்குகளாக முன்வைப்பவை. மனிதன் தன் வசதிக்காக இவற்றில் மேற்கொள்ளும் விலக்கங்கள் மாறுதல்கள் ஏதோவொரு விதத்தில் சிதைவுகளாக மாறி தொடர்ந்தபடியே இருப்பதைச் சொல்கின்றன இவ்விரு கதைகளும்.
அன்றாட நிகழ்வுகளால் சீண்டப்படும் அகம் தன்னை சரிகட்டிக்கொள்ள மேற்கொள்ளும் புறவயமான நாடகங்கள் அந்தரங்கமானவை. சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே அதன் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சராசரி மனித வாழ்வின் இத்தகைய அன்றாடங்களைக் கொண்டு அகம் தன்னை வெளிப்படுத்த முனையும்போது திரண்டெழும் கதைகளாக ‘இயல்வாகை’, ‘களி’ ஆகியவை அமைந்துள்ளன.
ஆயுர்வேதம், கிராமியப் பழங்கதைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகிய மூன்று பின்னணிகளில் சுனில் கிருஷ்ணன் அறியத்தருகிற மனம் நேரடியானது. தர்க்கங்களைக் கொண்டு அளக்க முடிவது. ஆனால், அவ்வாறன்றி தன்னிச்சையாகப் புரண்டு கைகெட்டாது தனக்கான அலைந்திருக்கும் பித்துநிலையில் மனம் கொள்ளும் போக்குகளையும் ‘காளிங்க நர்த்தனம்’, ‘லித்தியம்’ ஆகிய இரண்டு கதைகளில் எழுதிக் காட்டுகிறார். துறவுமில்லாமல் முழு பித்துமல்லாமல் வாழ்வின் ஏதோவொரு அலைவில் திரியும் மனிதனை, சாதாரண கண்கொண்டு காணும் கதையாக, ‘காளிங்க நர்த்தனம்’ அமைந்திருக்க, மனைவியின் மனநிலைத் திரிபினால் நிலைதடுமாறும் கணவனின் அலைதல்களாக ‘லித்தியம்’ எழுதப்பட்டிருக்கிறது.
ஒருவிதத்தில் இதுவரையிலும் சொல்லப்பட்ட கதைகள் அனைத்தும் தமிழின் சிறுகதை மரபையொட்டியே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியும். இந்தக் கதைகளை வாசிக்கும்போதே இக்கதைகளுக்கான மாதிரிகளை நம் மனம் தேடி எடுத்து ஒப்பிட்டுக் கொள்ளும். உதாரணமாக, ‘வாசுதேவன்’ கதை நாஞ்சில் நாடனின் ‘சாலப் பரிந்து’ கதையையும், ‘குருதிச்சோறு’ கதை உடலிச்சையை மழையுடன் இணைத்த ‘ரிஷ்யசிருங்கனி’ன் கதையையும் சொல்லலாம்.
மரபின் தொடர்ச்சியான ஒரு கண்ணியாக அல்லாமல் சுனில் கிருஷ்ணனை ஒரு தனித்துவமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தும் கதைகளாக அமைந்தவை – ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’, ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய மூன்று கதைகள். நவீன வாழ்வுக்கும் பாரம்பரியமான மதிப்பீடுகளுக்கும் இடையேயான முரண்களையும் மோதல்களையும் அதனூடாக முளைக்கும் சமரசங்களையும் மிகவும் எளிமையான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’ என்கிற கதை. உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் மெல்லிய கோடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருப்பதாலும் தலைமுறைகளுக்கு நடுவிலான பிணைப்புகள் அறுபட்டுவிடும் அபாயத்தைச் சுட்டுவதாலும் முக்கியமான கதையாக அமைந்து விடுகிறது.
இன்றைய செய்தித்தொடர்பு கருவிகளும் ஊடகங்களும் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகியுள்ளன. உலகளாவிய அளவில் கண்ணிமைக்கும்பொழுதில் தகவல்களைச் சென்று சேர்க்கும் இவற்றின் வல்லமை, இன்று மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் தன்னிச்சையாக இடம்பெறும் தகுதியை வழங்கியுள்ளது. இவற்றின் வழியாக, குறிப்பிடத்தகுந்த ஆதாயங்களைப் பெறமுடிகிற அதே சமயத்தில், அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொழில்நுட்பத்தைச் சரியாகவும் தேவைக்கு உட்பட்டும் கையாளாமல் இருப்பதன் காரணமாக, மனிதர்கள் தம் வசம் இழந்து உறவுகளையும் மனிதர்களையும் இழக்க நேரும் அவலங்களைக் காண்கிறோம். பலநேரங்களில் மனநிலை பிறழ்வுகளுக்கும் காரணமாக அமைகின்றன.
‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ இரண்டு கதைகளும் கைபேசிகளும் அவற்றின் செயலிகளும் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் ஆக்கிரமிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஊடகங்களின் வழியாகவும் செயலிகள் மூலமும் எந்தவிதத் தணிக்கையுமின்றி யாரும் தகவல்களை, செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய சுதந்திரத்தின் பாரதூரமான எதிர்விளைவுகளையும் அதனால் பொதுவாழ்வில் ஏற்படும் நல்லதும் அல்லதுமான தாக்கங்களையும் அன்றாடம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த இரு கதைகளும் அவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பதன் காரணமாக புனைவுகள் என்பதைக் கடந்து உளவியல் ஆக்கங்கள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏற்கெனவே சொன்னது போல, யுவ புரஷ்கார் பரிசு சுனில் கிருஷ்ணனுக்கு ஏற்படுத்தியிருக்கும் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வடிவிலும் நோக்கிலும் கதை சொல்ல முயல்கிறார். அந்த அழுத்தத்தைத் தணிக்கும்பொருட்டு அவர் தேர்ந்திருக்கும் வடிவம் பகடி. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் கதைகள் இன்றைய நவீன இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி எள்ளி நகையாடுகின்றன. கூரிய விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றன. போலித்தனங்களை சாடுகின்றன.
‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த 9 பேர்’, ‘பெரும் படம் காணல்’, ‘அதுக்கு என்ன இப்போ’, ‘தேய்விளக்கு’, ‘லட்சிய இலக்கிய வாசகன்’ ஆகிய கதைகளில் வெளிப்படும் நக்கலும் சாடலும் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்வதாக அமைந்துள்ளன. சிரித்துக் கொண்டே அவற்றை வெறுமனே கடந்துவிட முடியாது. கும்பமுனியையும் தவசிப் பிள்ளையையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு நாஞ்சில்நாடன் மேற்கொள்ளும் விமர்சனப் போக்கின் அடுத்த படிநிலையாகவே பழுவேட்டரையரும் கிடாரனும் அமைகிறார்கள்.
சமகால நிகழ்வுகளை புனைவுக்குள் கொண்டுவர சுனில் கிருஷ்ணன் யோசிப்பதில்லை. ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளின் வரிசையில் அமைந்த ‘இச்சாதாரி’ அப்படிப்பட்ட கதையே. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19ன் உத்தரவாதமற்ற நிலையை பிரதியெடுத்தது போன்ற பின்னணியைக் கொண்ட இந்தக் கதையின் முடிவு வலுவாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே.
உரையாடல்களிலும் சொல்முறையிலும் பகடியைப் பயன்படுத்துவது சுனில் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே கைவந்திருப்பதால் தனது குறுங்கதைகளில் அவற்றை வெகு சாதாரணமாகவே பயன்படுத்த முடிகிறது. ‘திருமிகு.பரிசுத்தம்’, ‘அரசின்மைவாதி’, ‘934‘ ஆகிய குறுங்கதைகள் புன்னகைக்கச் செய்பவை. அந்த வரிசையில் அமைந்துள்ள ‘தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி’ அடர்த்தியான புனைவு மொழியையும் உள்ளடுக்கையும் கொண்டிருக்கிறது.
சுனில் கிருஷ்ணன், புனைகதைகள் அல்லாது விமர்சனங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழியாக்கங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாகப் பங்களித்து வருபவர். பிற துறைகளில் நேரமும் கவனமும் குவிவதன் காரணமாக புனைகதைகளில் எண்ணியபடி செயலாற்றும் வாய்ப்புகள் அமையவில்லை. ‘நீலகண்டம்’ நாவலும் தன் பங்குக்கு நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொண்டது. இருபதுக்கும் மேற்பட்ட கதைகள், ஒரு நாவல், சில குறுங்கதைகள் என்றுள்ள அவரது புனைவுப் பரப்பை வைத்துக்கொண்டு அவரது அடுத்த நகர்வை உத்தேசமாகக் கூட அனுமானிக்க முடியவில்லை.
ஆனால், வடிவம் சார்ந்த பரிசோதனைகளில் அவருக்குள்ள ஆர்வத்தை ‘லித்தியம்’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளிலும் ‘நீலகண்டம்’ நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார். போலி மதிப்பீடுகளை சற்றும் தயக்கமின்றி கலைத்துப் போடும் முனைப்புடன் பழுவேட்டரையரையும் கிடாரம் கொண்டானையும் இறக்கி விட்டிருக்கிறார். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள முறைமையிலிருந்து விலகி, புதியனவற்றை முயல்பவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகமும் குழப்பமும் சுனிலுக்கும் இருக்கக் கூடும். அத்தகைய தயக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிய கவலையின்றி தான் உத்தேசித்திருக்கும் புனைவுக் களத்தை தன்னுடைய பாணியில் முயல்வதன் வழியாகவே தனது எழுத்தை அவர் அடையாளம் காண முடியும். அதுவே அவரது தனித்துவமாகவும் நிலைபெறும்.
http://suneelwrites.blogspot.com/
(தமிழினி மின்னிதழ், ஜூலை 2020)

பற்றி எரியும் தேர் - ‘பிறிதொரு நதிக்கரை’ தொகுப்பை முன்வைத்து, சுனில் கிருஷ்ணன்



எம். கோபாலகிருஷ்ணன் முதன்மையாக அவருடைய ‘மணல் கடிகை’ நாவலுக்காகவே அறியப்படுபவர். அண்மையில் வெளிவந்த அவருடைய மனைமாட்சி நாவலும் நல்ல கவனம் பெற்று வருகிறது. நாவலாசிரியராகவே நிலைபெற்ற காரணத்தினால், அவருடைய சிறுகதை உலகம் அதிகமும் கவனிக்கப்படவில்லை இதுவரை மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன. அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’ 15 கதைகளை கொண்டவை. யதார்த்த கதைகள், கனவுத் தன்மை கொண்ட கதைகள், உளவியல் குறியீட்டு கதைகள் என வெவ்வேறு வகை மாதிரிகளை முதல் தொகுப்பிலேயே எழுதியுள்ளார்.

முன்னுரையில் இக்கதைகள் அனைத்துமே ‘ஏதோ ஒருவகையில் நான் அறிந்தவர்களின் கதைகள்தான்’ என சொல்கிறார். இத்தொகுதியின் கதைகளை கூறுமுறை காரணமாக இரண்டாக வகுக்கலாம். ‘இலையுதிர்காலம்’ ‘இருப்பு’ ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ‘மல்லி’ ‘விடுதலை’ ‘ரசவாதம்’ ‘பௌர்ணமி வாக்கு’ ‘லச்சம்’ ஆகிய கதைகள் யதார்த்த வாழ்வை சொல்லும் கதைகள். ‘தேர்’ சற்றே மாறுபட்ட யதார்த்தத்தை சொன்னாலும் கூட அக்கதையையும் இவ்வரிசையிலேயே வைக்கலாம். ‘கோட்டை’ ‘ஒற்றை சிறகு’, ‘பிறழ்வு’, ‘வலியின் நிறம்’, ‘கையில் அடங்காத தாமரை’, ‘பிறிதொரு நதிக்கரை’ போன்ற கதைகள் கனவுத்தன்மையும், அமானுஷ்யமும் கொண்ட கதைகள். இருவிதமான கதைகளுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருந்தபோது, ‘மணல் கடிகை’ வழியாக எம். கோபாலகிருஷ்ணன் தன்னை வலுவான யாதார்த்தவாத கதைசொல்லியாக நிறுவிக்கொண்டுவிட்டார், ஆனால் இத்தொகுதியில் யதார்த்தத்தை உதறி அவர் எழுதியிருக்கும் கதைகளே தொகுதியின் சிறந்த கதைகளாக விளங்குகிறது. ‘தேர்ந்தெடுக்காத அந்த சாலையில்’ அவர் பயணித்திருந்தால் என்னவாக இருந்திருக்கும் என்பது சுவாரசியமான கேள்வி. இனியும் கூட அவர் அத்திசையை தேரவேண்டும் வேண்டும் எனும் அவா எனக்கிருக்கிறது.   

‘கோட்டை’ இரண்டு வெவ்வேறு காலங்களிலும், அதையொட்டி அகம்-புறம் என இரண்டு யதார்த்தங்களிலும் ஒருசேர பயணிக்கும் கதை. இவ்வகையான கதைகளில் கோபாலகிருஷ்ணனுக்கு கவிதை பரிச்சயம் கூடுதல் ஆழத்தை அளிக்கிறது. அவருடைய மொழி ஓசைநயத்துடன் அபாரமாக வெளிப்படுகிறது. கடந்தகால அரச  குமாரன் பழி தீர்க்க அதே கோட்டைக்கு வரும்போது அது ஒரு அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. சுவாரசியமான கற்பனை. எனினும் ஒரு பரிசோதனை முயற்சி என்ற அளவில் கதை நம்மைப் பெரிய அளவில் தொந்திரவு செய்யாமல் நின்றுவிடுகிறது.  ஆக்ரோஷமான குதிரையின் படத்தை மாற்றி புல்மேயும் குதிரையை மாட்டச் சொல்கிறான் மனோகரன். ஒருவகையில் அந்த படத்தில் உள்ள குறி விறைத்த ஆக்ரோஷமான குதிரைதான் இறுதியில் வருகிறது. யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான ஊடுபாவு ஒரு வித மயக்கத்தை இக்கதைக்கு அளிக்கிறது.

‘ஒற்றை சிறகு’ இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்று. நவீனத்துவ எழுத்தின் தனி மனிதனை, அவனுடைய அக அவசங்களை பேசுவது. மரணத்திற்கு முன் ஒரு பார்வையாளனாக கையறு நிலையில் நிற்கும் மனிதனின் கதை. பறவை, குழந்தை என இரண்டு மரணங்களுக்கு சாட்சியகிறான். மறுபக்கம் அவன் ஒரு குழந்தை பிறக்க காத்திருக்கிறான். இக்கதையில் வரும் கனவுப் பகுதி அபாரமானது. பறவையும் குழந்தையும் முயங்கி அவனுடைய கனவில் எழுகிறார்கள். குப்பைத்தொட்டி குழந்தையின் சித்தரிப்பு வாசகனை மிகவும் தொந்திரவு செய்யக்கூடியது. ஒற்றைச் சிறகு என்பது அவனுள் துடித்து கொண்டிருக்கும் ஒன்றாக, அவனுடைய குற்ற உணர்வாக, அல்லது நுண்ணுணர்வாக பரிணாமம் கொள்கிறது. 

பிறழ்வு’ ஒரு சாபத்தை பின்தொடர்ந்து செல்லும் கதை. ‘கோட்டை’ ‘பிறிதொரு நதிக்கரை’ ஆகிய கதைகளுடன் ஒப்பிட்டு வாசிக்கலாம். இதிலும் நிகழ்கால- கடந்தகால முயக்கம் வெற்றிகரமான உத்தியாக பயன்படுகிறது. ‘ஒற்றை சிறகு’ போலவே குழந்தைகளின் துர்மரணம் நிலையழியச் செய்கிறது. மொழிரீதியாகவும் இக்கதைகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

‘வலியின் நிறம்’ யதார்த்தமும் கனவும் கலக்கும் மற்றொரு அமானுஷ்ய கதை. ‘ஒற்றை சிறகில்’ கனவிற்கு பின்பான விழிப்பில் கையில் சிறகு எஞ்சியிருப்பதை போல் இக்கதையின் இறுதியில் உயிர்பிழைத்து மீண்டதும் சம்பத்தின் மூத்திரம் தோய்ந்த பாயில் அவனுடைய தந்தை அளித்த துவரம் பருப்பு அளவிலான குளிகைகள் உள்ளன. உண்மைக்கும் கனவிற்குமான எல்லைகோட்டை அழிப்பதை இக்கதைகள் நோக்கமாக கொண்டிருக்கின்றன. கதை என்பதை காட்டிலும் ஒரு அனுபவம் என சொல்லலாம். பச்சோந்தி தைலத்தின் விவரிப்பு நுண்மையாக உள்ளது. எம். கோபாலகிருஷ்ணன் இக்கதையிலும் வேறு பல கதைகளிலும் தந்தை மகன் உறவு அழகாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும் முரண், மோதல் ஏதுமின்றி சீரான உறவு கொண்டவர்களாகவே வருகிறார்கள். மணல் கடிகையில் வரும் திருவின் தந்தைக்கூட அத்தகையவரே.

“கையில் அடங்காத தாமரை” யதார்த்த பாணியில் இருந்து விலகிய உளவியல் அம்சம் கொண்ட கதை. மனிதனுக்கும் தன் நிழலுக்குமான போராட்டம் என்பது உலக இலக்கியத்திலும் தொன்று தொட்டு கையாளப்படும் கரு. ராமாயணத்தில் கடலை கடக்கும் அனுமனின் நிழலை இலங்கையின் காவல் அரக்கி சிம்ஹிகா விழுங்க முனையும் தொன்மம் நாம் அறிந்ததே. தன் ஆளுமையின் ஒரு பகுதியை நிழலாக உருவகித்தல் ஒருவகையில் இதிகாசங்களில் இருந்து துவங்குகிறது. அண்மைய காலங்களில் கார்த்திகை பாண்டியனின் ‘நிழலாட்டம்’ தூயனின் ‘இருமுனை’ போன்ற ஆக்கங்களில் கூட பிளவாளுமையின் சிக்கல் நிழல்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டு எழுதப் பட்டுள்ளது. இக்கதையை தனித்து காட்டுவது ஒளிரும் தாமரை எனும் படிமம் தான். ஒளிரும் தாமரை இந்திய மெய்யியலில் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. கைக்கு அடங்காத தாமரை ஞானத்தின் குறியீடாக சட்டென உருபெறுகிறது. ஏறத்தாழ எதிரியாக தன் நிழலை பாவித்து, அதனிடமிருந்து தன்னை மீட்டுக்கொள்ள போராடும் கதைசொல்லி தனது நிழலின் கருமையை, அதன் இருளை தன்னுடைய இன்றியமையாத அம்சமாக நோக்கத் துவங்குகிறான். நிழலின் வருகைக்காக களித்திருக்கிறான். ஒருவகையான அமானுஷ்ய தளத்தை கதை எட்டுகிறது. இக்கதையிலும் உண்மைக்கும் புனைவுக்குமான விளையாட்டு தொடர்கிறது. ஒருகணம் சாமந்தியாகவும் மறுகணம் தாமரையாகவும் தோன்றி மறைந்து நிழலின் இருப்பை உணர்ந்து கொள்கிறான். கதையின் தலைப்பு மற்றும் அது அளிக்கும் இந்த அமானுஷ்ய அனுபவம் காரணமாக இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்றாக தோன்றுகிறது.

‘பிறிதொரு நதிக்கரை’ தந்தை மற்றும் மகனின் இருவேறு காலகட்டங்களின் அமானுஷ்ய அனுபவங்களை கதையாக்குகிறது. இருவருமே நீரில் மூழ்காமல் மீட்கப்பட்டவர்கள். தங்கள் மீட்பரின் முகத்தை நினைவில் எழுப்ப முயல்பவர்கள். நதிக்கரை என்பதும் நதி என்பதும் மரணம் மற்றும் அதற்கு அப்பாலான வாழ்வை குறிப்பதாக இந்திய மரபு கருதுகிறது. கதைக்குரிய முரண் ஏதும் இல்லையென்றாலும் ஆன்மீக அனுபவத்தை அளிக்கிறது. பிறிதொரு நதிக்கரை என்பது கவித்துவமாக பல அடுக்குகளில் பொருள் அளிப்பது. பத்து வயதில் தான் உணர்ந்த அற்புதத்தை முப்பது வயதில் உணர்கிறான் மகன். அவனுடைய மகன் உணர எத்தனை காலம் ஆகுமோ எனும் கேள்வி கதையின் மையம்.

இனி தொகுப்பில் உள்ள யதார்த்த கதைகளை நோக்கலாம். இவ்வரிசையிலான கதைகளில் ‘மல்லி’ மற்றும் ‘பௌர்ணமி வாக்கு’ ஆகிய கதைகளை சிறந்தவை என சொல்லலாம். ‘மல்லி’ திருப்பூருக்கே உரிய கதை. பனியன் நிறுவனத்தில் வேலைக்கு வரும் இளம் பெண்ணுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுகிறது. அவள் சந்திக்கும் நிர்பந்தங்களை, எதிர்கொள்ளும் அவமானங்களை, கேலிகளை, நெருக்கடிகளை காட்சிபூர்வமாக சித்தரிக்கிறார். கழிவறையின் அருவருப்பையும் சங்கடங்களையும் கச்சிதமாகக் கடத்தும் சிறந்த கதைகளில் ஒன்று. மல்லியின் தொடர்ச்சியை மணல் கடிகை நாவலில் நாம் கண்டுகொள்ள முடியும். சம்பங்கி கைமடிக்கும் பெண்ணாக அவமானங்களுடன் துவங்கும் அவளுடைய பயணம் விடாப்பிடியான போராட்டத்தால் தன் சாதிய எல்லையை மீறி நேர்மையாக ஒரு கவுரவமான இடத்தை அடைகிறாள்.  பெண்கள் மட்டுமே பணிபுரியும் நிறுவனத்தை கட்டி எழுப்புகிறாள்.

‘பௌர்ணமி வாக்கு’ சாமியாடிக்கும் பம்பை வாத்தியக்காரனுக்கும் இடையிலான நுட்பமான அரசியலை பேசுகிறது. யார் யாரை சார்ந்திருக்கிறார்கள்? யார் யாரை வெல்கிறார்கள்? உண்மையான அதிகாரம் எங்கிருக்கிறது? இப்படியான கேள்விகளை எழுப்பும் கதை. சாமியாடி பாத்திரமும் கூட மணல் கடிகையில் அய்யா ஆவி இறங்கும் கண்ணம்மாவுடன் ஒப்பிடத்தக்கதே. ‘லச்சம்’ எதிர்வீட்டு  கிழவியின் மரணம் தன் வீட்டு அன்றாடத்தை பாதிப்பதைப் பற்றிய கதை. புடவையை நெய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆனால் அதை தொடர முடியாத சூழல். இந்த சங்கடத்தை கதையாக்கியிருக்கிறார். பிறரின் மரணம் எப்படி பொருள்படுகிறது எனும் கோணத்தில் இக்கதையை வாசிக்கலாம்.  

தொகுப்பில் மீதமிருக்கும் ‘இலையுதிர் காலம்’, ‘இருப்பு’. ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ‘விடுதலை’  ‘ரசவாதம்’  மற்றும் ‘தேர்’ ஆகிய கதைகளை ஒரே வகையானவையாக அடையாளப்படுத்தலாம். இவை அனைத்துமே வீழ்ச்சியின் சித்திரத்தை சொல்பவை. மனிதர்களின் வீழ்ச்சியை சித்தரிக்கும் கதைகள் இரண்டுவிதமான அடிபப்டை நம்பிக்கைகள் சார்ந்தவை. மனிதன் நல்லவன், நம்பத் தகுந்தவன் எனினும் காலமாற்றமும் தற்செயலும், சூழலும் அவனுடைய வாழ்வில் இடையீடு செய்து அவனை முழுமையாக ஆட்கொண்டு சிதைத்துவிடுகிறது என்பது ஒரு பார்வை. மற்றொரு பார்வை மனிதன் அடிப்படையிலேயே பேராசையும் பொறாமையும் கீழ்மைகளையும் கொண்டவன், ஆகவே நம்பத்தகாதவன். அவனுடைய வீழ்ச்சிக்கு காலமாற்றத்தின் அளவிற்கே அவனுடைய இயல்பும் காரணம். எம். கோபாலகிருஷ்ணனின் கதை மாந்தர்கள் அதிகமும் முதலாம் வகையைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் நல்லவர்கள். காலத்தால் வீழ்த்தப்பட்டவர்கள். இவ்வகை கதைகள் சிக்கலான சிடுக்கான கதைப் பின்னல்கள் கொண்டவை அல்ல, நம்மை தொந்திரவு செய்யும் அறக் கேள்விகளை எழுப்புவதில்லை. ஆனால் நேர்மையான சித்தரிப்பின்  வழியாக வலுபெறுகிறார்கள்.  இந்த ஆறு கதைகளும் எதிர் நவீன வாழ்வை விமர்சனபூர்வமாக அணுகுபவை என சொல்லலாம். நவீன வாழ்வின் வசதி பெருக்கம், வாய்ப்பு பெருக்கம், நகர்மயமாதல் ஆகியவற்றின் உப விளைவுகளை பற்றி பேசுபவை.  நவீன வாழ்வு முந்தைய காலத்து பெரும் மனித திரளின் வாழ்வாதராத்தை கால்வாதியாக்கியபடி விசையுடன் பாய்ந்து முன்செல்கிறது. காலத்துடன் பொருத்திக்கொள்ள முடியாமல் காலவதியானவர்களின் கதைகள் என இவற்றை சொல்லலாம். இந்த கதைகள் முந்தைய தலைமுறையினரின் வீழ்ச்சியை கரிசனத்தோடு நோக்குபவை.

 ‘இலையுதிர் காலம்’ திருப்பூர் நகரம் நவீனம் அடைகிறது. சாயப்பட்டறைகள், கம்பனிகள் வருகின்றன. வேளாண்மை நோடிகிறது. மாறி வரும் உலகிற்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத குதிரைவண்டி கிழவரின் கதையை சொல்கிறது. நிலமும், கிணறும் பயனற்று பாழாய் போனதைப் போல்,  இறுதியாக பள்ளிக் குழந்தைகளை கொண்டு விடும் குதிரை வண்டியும் பயனற்று போவதுடன் நவீன காலம் முழுவதுமாக நாயக்கரின் வாழ்வின் மீது கவிந்து அவரை காலவதியாக்குகிறது. இரண்டு காலகட்டங்களின், இரண்டு தொழில்களின், இரண்டு விழுமியத் தொகைகளின் போராட்டமாக இக்கதையை வாசிக்கும்போது நம்மால் நாய்க்கரின் இடத்தில் பலரின் முகத்தைப் பொருத்திப்பார்க்க முடியும்.

‘இருப்பு’ வளமான, அமைதியான சூழலில் இருந்து நெரிசலான திருப்பூருக்கு இடம்பெயர்ந்த பாட்டியின் கதை. நிலத்திற்கான ஏக்கம் என வேளாண் குடிக்கும் அதை உதறி நகருக்கு வந்த அடுத்த தலைமுறைக்கும் இடையிலான உறவை சொல்கிறது. இக்கதையில் முக்கியமான இடம் என்பது தான் விட்டுவந்த கைலாசபுரம் தன் நினைவில் மட்டுமே மாறாமல் இருக்க முடியும் எனும் நிதர்சனத்தை பாட்டி உணரும் புள்ளி. அதன் பிறகுதான் தயக்கத்தை மீறி திருப்பூரில் காலாற நடக்கத் தன்னை தயாராக்கிக்கொண்டார். சு.வேணுகோபாலின் ‘நிலம் எனும் நல்லாள்’ இதே சிக்கலை நாவலாக விரித்து எடுத்த ஆக்கம் என்பது நினைவுக்கு வந்தது.

‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ஈயம் பூசும் அம்மாசியைப் பற்றிய கதை. அவனுக்கு துணையாக இருந்த மனைவி ஈயம் பூசுவதை விடுத்து கம்பனி வேலைக்கு செய்கிறாள். அதன் காரணமாக அவர்களுக்குள் நேரும் உரசல், அம்மாசி அவமானப்படுத்தப் படுகிறான். மணல்கடிகையில் தூக்கு போசியுடன் வேலைக்கு வரும் பெண்களைப் பற்றிய விரிவான சித்திரம் நினைவுக்கு வந்தது. இக்கதை அம்மாசியின் மீது சன்னமான பரிதாபம் ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகிறது. தொகுப்பின் பலவீனமான கதைகளில் ஒன்று.  ‘விடுதலை’ சிவமணி நாடார் சுதந்திர போராட்ட தியாகி. போராடிப்பெற்ற விடுதலையின் வெகுமதி பற்றிய கேள்விகளை அவருடைய வாழ்வு எழுப்புகிறது. தொகுப்பின் வலுவற்ற கதைகளில் ஒன்று எனத் தோன்றியது. ‘ரசவாதம்’ வெள்ளியங்கிரி வைத்தியரின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்கிறது. இக்கதையை எனது தனிப்பட்ட அனுபவங்களுடன் இணைத்து வாசிக்க முடியும். மருத்துவர் மரணத்தின் தூதுவராக சுருங்கிப் போகிறார். வீழ்ச்சியின் அங்கலாய்ப்பு உள்ள கதை.

 “தேர்” ஒரு நல்ல கதைக்கான துவக்கத்தைக் கொண்டிருக்கிறது. கோபாலகிருஷ்ணன் இதுவரையிலான கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி ஒரு கதை சொல்லியாக பரிணாமம் கொள்கிறார். தேர் தன் வரலாறையும் கடந்தகால பெருமிதங்களையும் சொல்கிறது. ஒப்பிட்டு தற்கால வீழ்ச்சியையும் இழிநிலையையும் பற்றி புலம்பியபடி இருக்கிறது. ஏறத்தாழ ‘தேர்’ சென்ற காலத்து தாத்தாவைப் போல் எல்லாவற்றையும் பற்றி புலம்புகிறது. மேற்சொன்ன கதைகளின் இயல்பான நீட்சியாக ‘தேர்’ நிலைகொள்கிறது. சாராயம் காய்ச்சுபவன் அறங்காவலர் குழு தலைவன் ஆகிறான், கோவில் கணக்குகளை பார்க்கும் சேல்ஸ் டாக்ஸ் ஆபிசர் லஞ்சம் வழி தான் சேர்த்த செல்வத்தை கோவிலுக்குள் பதுக்கி வைத்திருந்ததைப் பற்றி அங்கலாய்க்கிறது, சினிமாவுக்கு பின்னாடி ஓடும் சனத்தை விமர்சிக்கிறது, இயக்குனரை நம்பி ஏமாந்து திரும்பிய சுசீலாவின் கதையை சொல்கிறது, தன்னருகே கஞ்சா விற்கிறார்கள் என நொந்து கொள்கிறது, தேருக்குள் விலைமாது நுழைந்து விடுவது தான் அதை பயங்கரமாக சீண்டுகிறது. இந்த கதையின் சிக்கல் என்னவென்றால், ஒரு அஃறினை கதை சொல்லும்போது கதை சொல்லலின் எல்லை வகுக்கப்படுகிறது. ஒரே இடத்தில் நின்றிருக்கும் தேர், வருடம் ஒருமுறை மட்டும் சுற்றி வரும் தேர் தன் பார்வை புலனுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி சொல்லும்போது கதையின் நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழுகிறது. இக்கதைக்கு என தேர்வு செய்த சட்டகத்திற்குள் கதை நிற்கவில்லை. எங்கேயோ போலீஸ் சாராயம் காய்ச்சுபவனை துரத்துவதையும், அறங்காவலர் குழுவோட தலைவர் பானைபானையாக காய்ச்சுவதையும் நேரடியாக சொல்லும்போது இது தேருக்கு எப்படித் தெரியும் என்றொரு கேள்வி எழவே செய்கிறது. ‘தேரை’ எங்கும் நிறைந்த   கதைசொல்லியாக கொள்ளமுடியாது.

இத்தனை விமர்சனங்கள் சொன்னாலும், இறுதியில் அந்த தேர் பற்றி எரியும் பொது மனம் பதைக்கிறது. பழம் பெருமிதங்களும், கம்பீரமும், பிரம்மாண்டமும் கொண்ட தேர் இறுதியில் பற்றி எரிகிறது. ஏறத்தாழ இந்த ஆறு கதைகளும் பற்றி எரிவதாற்கு முன்பு தேர் கொடுக்கும் வாக்குமூலத்தைப் போலத்தான். இக்கதைகள் எழுத்தாளர் பாவண்ணனின் புனைவுலகிற்கு நெருக்கமானதாக தோன்றியது.

தமிழ் சிறுகதை மரபு வளமானது. இத்தொகுதி 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் வாசிக்கும்போது இத்தொகுதி என்னவிதமான அனுபவத்தை அளிக்கிறது? சிறுகதை தொகுப்பு வெளிவந்த காலத்தில் பேசுபொருள், பேசும் முறை சார்ந்து முன்னோடித் தன்மை கொண்ட படைப்புகள் காலப்போக்கில் அதே வரிசையிலான அதே மாதிரியான படைப்புகளால் பின்னுக்குத் தள்ளப்படுவது உண்டு. பிற்கால ஆக்கங்கள் கலைரீதியாக புதிய உயரங்களை எட்டும்போது முன்னோடி முயற்சிகள் எனும் பேருக்கு அப்பால் எதுவும் நிலைப்பதில்லை. முன்னோடி முயற்சிகள் பரிசோதனை அளவில் நின்றுவிடுவதும் உண்டு. முன்னோடி எனும் பதத்திற்கு அப்பால் வேறு சிலவும் காலாதீதமாக ஒரு ஆக்கம் நிலைபெற தேவையாய் இருக்கிறது. இன்றும் புதுமைபித்தனின் ‘சிற்பியின் நரகம்’ ‘கபாடபுரம்’ போன்ற கதைகள் வாசகனுக்கு சவாலாக இருக்கிறது. இத்தொகுதியில் முன்னோடி முயற்சி எனும் அடையாளத்திற்கு அப்பால் நிலைபெறக்கூடிய கதைகள் என குறைந்தது மூன்று கதைகளையாவது சொல்லலாம். நாவல்கள், சிறுகதைகள், மொழியாக்கங்கள், கட்டுரைகள் என கிளைபரப்பி விரியும் எம். கோபாலகிருஷ்ணனின் படைப்புலகத்தின் முதல் விதைகள் இத்தொகுதியில் காணக்கிடைக்கின்றன.

( சிற்றில் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...