1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியர்கள் அனைவரின் கனவும் நாடு இனி சுபிட்சமடையும், தொழில் வளர்ச்சி அடைந்து வளம் பெருகும், சமத்துவம், சகோதரத்துவத்துடன் நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது, அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு கிட்டும் என்பதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று அதன் குடிமக்கள் அனைவரும் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைக்காகப் போராடிய தலைவர்களும் அவ்வாறே வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், சுதந்திரம் அடைந்து வெகு சில நாட்களிலேயே அப்படி எதுவும் பெரிதாய் மாறிவிடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். இங்குமங்குமாய் எண்ணற்ற பிரச்சனைகள். நாடு இரண்டாகப் பிளவுபட்டது. சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக அமைந்தது. பணஇருப்பும் இல்லை. ஒருவழியாக அனைத்தையும் சரிசெய்து, திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அமைப்புகள் உருவானபோது அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடைமுறையில் எதுவும் திட்டமிட்டதுபோல தொடரவில்லை. எங்கும் எதிலும் ஊழல்கள் மலிந்தன. புதிய வகையிலான நிலப்பிரபுத்துவம் உருவானது. புதிய முதலாளிகளும் ஜமீன்தார்களும் நிலச்சுவான்தார்களும் முளைத்தனர். சாதிய அடுக்குகள் இன்னும் தீவிரமாக பேணப்பட்டன. எங்கும் எதிலும் அலட்சியம். பொதுத்தொண்டு என்பது மெல்ல மெல்ல மறைந்துபோய் தனிநபர் செல்வாக்கு, சுயநலப்போக்குகளே அதிகரித்தன. ஆட்சியாளர்கள்தான் புதியவர்களே ஒழிய, மக்களின் நிலையில் மாற்றம் எதுவும் நேரவில்லை.
ஸ்ரீலால் சுக்ல 1925ஆம்
ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலிருந்தே நாட்டில் நடைபெற்று வந்த சுதந்திரத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை,
போராட்டங்களை நேரடியாகப் பார்த்து வளர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அங்கமான
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு
வயது 21. எனவே, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களைப் போலவே அவருக்கும்
எதிர்காலத்தைக் குறித்த பெரும் கனவுகள் இருந்தன. அவர் கண்டு, கேட்டு வளர்ந்த தலைவர்கள்
பலரும் அவ்வாறான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், நடைமுறையில் அத்தகைய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டபோது பெரும் மனச்சோர்வை, நிராசையை அடைந்தார். நாடு விடுதலையடைந்த
அதே ஆண்டு, 1947ஆம் வருடத்திலேயே இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் பணிக்காலத்தில்
ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும் விதத்தை நேரில் பார்த்தறிந்தார்.
தனது மனக்குமுறல்களை,
ஏமாற்றங்களை வெளிப்படுத்த எழுத்தை நாடினார். இந்தியாவின் உண்மைநிலையை களமாகக் கொண்டு,
நொறுக்கப்பட்ட உத்தரவாதங்களை, உடைந்த கனவுகளைக் குறித்து 1950ஆம் ஆண்டு முதல் எழுதலானார்.
1957இல் தனது முதல் நாவலான ‘சூனி கடி கா சூரஜ்’ வெளியிட்டார். கனவுக்கும் நடைமுறைக்குமான
முரண்களை, ஏமாற்றங்களைச் சந்தித்தவர்களை கதாபாத்திரங்களாக உலவவிட்டார். அவரது எழுத்துகள்
எதிர்மறையாகவும் அவநம்பிக்கையை விதைக்கும்படியாகவும் உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்தன.
‘அவநம்பிக்கைமிகுந்தவை என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், அதுதான் உண்மை’ என்று பதிலளித்தார்.
தர்பாரி ராகம் நாவல்
1968ஆம் ஆண்டு வெளியானது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும்
பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள்,
அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு
முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும் எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப்
போவதன் அவலச் சித்திரம் இது. இந்தியாவின் எளிய கிராமமொன்றின் அன்றாட நடப்புகளின் வழியாக
சமூக பொருளாதார அரசியல் நிலையை கேலியும் கிண்டலுமாக விவரிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின்,
அவுத் பகுதியில் அமைந்திருக்கும் சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு முதுகலை வரலாற்றுப்
பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு, வைத்தியரான
தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின் கூட்டுறவு
சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சூதுவாது தெரியாத
கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும் அதிகாரத்தையும் நேரடியாகப்
பார்த்து அனுபவிக்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கிராமிய
அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன. தேர்தல்
என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத் தவிர
போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும்
இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை
அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து
நொறுங்குகின்றன.
அறுபதுகளில் கிராமப்
பொருளாதார முன்னேற்றத்துக்கான மூன்று முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டவை, கிராமப் பஞ்சாயத்துகள்,
கூட்டுறவுச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் ஆகியன. இவற்றுக்கான நிதி ஆதாரங்களை, கிராமத்தைச்
சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழலின் மூலம் பொதுமக்களை சென்றையவிடாது சுயநலத்துக்காக
பயன்படுத்துகிறார்கள் என்பதையே இந்த நாவல் விவரிக்கிறது.
தர்பாரி ராகம், சிறிதும்
இரக்கமில்லாமல் உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் ஒரு நாவல். இது வெளிவந்தபோது வாசகர்களை
உலுக்கியது. தொந்தரவுக்கு உள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஊழல் அமைப்பை தோலுரித்துக்
காட்டியது. வெளியான சமயத்தில் இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்கப்பட்வில்லை என்பதை நம்மால்
புரிந்துகொள்ள முடியும்.
இது இந்தியில் எழுதப்பட்ட
நாவல் என்றாலும் இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான
ஒரு கதைமொழியை இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை
என்று இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வரியிலும்
கிராமங்களில் மக்களிடையே புழங்கும் சொலவடைகளை, மரபுத் தொடர்களை, பழமொழிகளைக் காண முடியும்.
லால் சுக்லவின் அங்கதத் தொனிக்கு இவை அனைத்தும் வலு சேர்த்துள்ளன.
இதன் அங்கத மொழி சில
இடங்களில் நகைக்கச் செய்கின்றன. சில இடங்களில் சிந்திக்கச் செய்கின்றன. இன்னும் சில
இடங்களில் உள்ளூற வருந்தவும் செய்கின்றன. கேலியும் கிண்டலுமாக வசைபாடும் இந்தக் குரல்
அனைத்தையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளை, அதிகார வர்க்கத்தை, கல்விச் சூழலை,
ஆட்சியாளர்களின் செயல் திறனை, கிராமிய மக்களின் அறியாமையை என அனைத்தையுமே இது கடும்
வசைச் சொற்களால் விமர்சிக்கின்றன. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை, மூன்று முக்கிய
விதங்களில் இந்த நாவல் வரையறுத்துள்ளது.
தர்பாரி ராகம், தான்சேனால்
உருவாக்கப்பட்ட ஒன்று. கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால்
குறிப்பிடப்படுவது. ஆனால், ‘தர்பாரி ராகம்’ என்ற இந்த நாவலின் தலைப்புக்கும் இசைக்கும்
எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நாவலின் மையக் கதாபாத்திரமான வைத்தியரின் பாட்டுக்கேற்ப
ஒட்டுமொத்த கிராமமும் அதன் மனிதர்களும் பின்பாட்டு பாடுவதன் கேலிக் குறியீடாகவே இத்தலைப்பு
பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான்
ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது
மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும்
அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.
இந்திய கிராமத்தின் அசலான
மண் மணத்தை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடியும். அதே சமயம் இதிலுள்ள ஒவ்வொரு
வாக்கியமும் ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலையும் அதிகார ஆட்டத்தையும் கூர்மையாக விமர்சிப்பதாக
அமைந்துள்ளன.
இந்திய அரசமைப்பின் செயல்பாடுகளை
சுருக்கமாக விமர்சிக்கும் விதமாக இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘நொண்டி’ என்றே நாவல் முழுக்க அறியப்படும் அவன், தனது நிலத்துக்குரிய அரசாங்கப் பத்திரத்தின்
நகலைப் பெற வேண்டி விண்ணப்பிக்கிறான். நகலைத் தரவேண்டி அத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தர்,
மூன்று ரூபாய் லஞ்சம் கேட்கிறார். நொண்டி தர மறுக்கிறான். என்னுடைய நிலத்துக்கான பத்திரத்தின்
நகலை நான் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறேன், ஒரு இந்தியக் குடிமகனாக. அரசின் சார்பாக அதற்குரிய
ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் துறையும், அதிகாரிகளும், எழுத்தர்களும். எதற்கு லஞ்சம்
தரவேண்டும? என்பது அவன் வாதம். நியாயமான வாதம்தான். ஆனால், எழுத்தர் அவனது விண்ணப்பத்தில்
பிழைகள் உள்ளன, தேதி சரியில்லை, கையெழுத்து சரியில்லை, என்று பல காரணங்கள், பிழைகள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. சரியான விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு வா என்று திருப்பித்
தந்துவிடுகிறார். ஒரு முறையல்ல, பல முறை. புதிது புதிதாக பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு
விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பித் தரப்படுகின்றன. நொண்டியும் சலிக்காமல் புதிய
விண்ணப்பங்களை எழுத்தர்களை வைத்து எழுதித் தருகிறான். ஏழு வருடங்கள் இது நடக்கிறது.
இதற்கு நடுவே அவன் தன் கிராமத்தையும் நிலத்தையும் குடும்பத்தையும் இழக்க நேர்கிறது.
ஆனாலும் அவன் தன் தர்ம யுத்தத்தை கைவிடுவிதில்லை. நம்பிக்கையுடன் புதிய விண்ணப்பங்களை
எழுதி அனுப்புகிறான். கடைசியில் ஒரு வழியாக அவனுக்கு நகல் தயாராகிறது. ஆனால், மலேரியா
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் உடனே வந்து அதைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. உடல்நிலை
சரியாகி வரும்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து நகலைப் பெற்றுக் கொள்ளாததால்
அது கிழித்துப் போடப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க மறுத்து,
நேர்மையுடன் நடப்போரின் கதி என்னாகிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நொண்டியின் போக்கையே அனைவரும் விமர்சிக்கிறார்கள். ‘பேசாம மூணு ரூபா குடுத்துட்டு போக
வேண்டிதுதானே’ என்பதே அனைவரின் அறிவுரையாகவும் உள்ளது.
நம்மில் பலரும் அப்படித்தானே?
70ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும் மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த
நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா
தெரியவில்லை.இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும் அறிந்த
ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச்.
சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா. நீதி நெறிமுறைகளை அனுசரிக்க முடியாத கதாபாத்திரங்கள், நாகரீகமற்ற,
ஊழல் என்பது நமது அமைப்பின் ஓர் அங்கம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலை,
கொள்கைகள் அணிகலன்கள், இங்கு பிழைத்திருப்பது என்பது நேர்மையைக் காட்டிலும் உள்ள நிலைக்கு
அனுசரித்திருப்பதே.
நாவலின் 19வது அத்தியாயத்தில்,
ஸ்ரீலால் சுக்ல தேர்தலில் வெற்றிப் பெற, ராம்நகர் வழி, நேவாதா வழி, மகிபால்பூர் வழி
என்று மூன்று வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்க் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க
இருப்பவர்களை பொய்க்குற்றம் சாட்டி வாக்களிக்க விடாமல் செய்வதே முதல் வழி. சாதி, மத
நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளைப் பிரிப்பது நேவாதா வழி என்னும் இரண்டாவது வழி.
தவறான கால நேரத்தை வகுத்து விஞ்ஞான ரீதியாக தேர்லை முன்னரே முடிவுக்குக் கொண்டு வந்து
வேண்டிய வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்வது மூன்றாவது வழி. இந்திய நாட்டில் அடுத்து
வரும் தேர்தல்களில் இத்தகைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பதை மிகுந்த தீர்க்க தரிசனத்துடன்
எழுதியிருக்கிறார்.
லால் சுக்ல 10 நாவல்கள்,
4 சிறுகதைத் தொகுப்புகள், 9 அங்கதக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு நினைவுக் குறிப்புகள்
ஆகியவற்றை எழுதியிருந்தபோதும், ‘தர்பாரி ராகம்’ அவருக்கான அடையாளமாக, மறுபெயராக மாறிவிட்டது.
உண்மையில், அவரது பிற நாவல்களும் சிறுகதைகளும் அதேயளவுக்கு ஆழமும் அழுத்தமும் கொண்டவை.
அதிகாரத்தைப் பற்றி,
யார் அதை கையில் வைத்திருக்கிறார்கள், எப்படி அதை பயன்படுத்துகிறார்கள், அது அவர்களுக்கு
எவற்றைக் கொண்டு வருகிறது, பிறருக்கு அதனால் என்னவாகிறது என்பதை எழுதியவர் சுக்லா.
சுக்லாவின் கதைகளில் கற்பனையோ சாகசங்களோ இருக்காது. மேன்மையான குடிமக்களையோ அழகான கிராமங்களையோ
காணமுடியாது. சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக,
புதிய சொற்களையே உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு,
சாதி அடுக்குகள், அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு
வன்முறை நீடித்ததைப்போலவே. இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன,
அவ்வளவுதான். இந்தியின் முதன்மை நாவலாசிரியர்களான பிரேம்சந்தும் மைதிலி சரண் குப்தாவும்
காட்டாத ஓர் கிராமத்தை அச்சு அசலாகக் காட்டியிருப்பவர் லால்சுக்ல. இந்த நாவலில் ஒரு
பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று சொல்லவேண்டும். கயாதீனின் மகள் பேகா பிற கதாபாத்திரங்களின்
உரையாடல்கள் வழியே மட்டுமே காட்டப்படுகிறாள். நேரில் அவள் காட்சிப்படுவதேயில்லை.
1969ஆம் ஆண்டு ‘தர்பாரி
ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும், அவரது இலக்கியப் பங்களிப்புக்காக
2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2011ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டன.
லால் சுக்லாவின் அங்கதம்,
கேலி, கிண்டலுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி விடுதலை பெற்ற பின் புதிய
இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற மறந்து துரோகம்
புரிந்தவர்களின் மீதான தார்மீக சினமும் சீற்றமுமே அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள
முடியும். ஆகத் துயரமான வாழ்வை வாழ்ந்து கடக்க ஒரே வழி சிரித்துக்கொண்டே அதைக் கடப்பதுதான்.
பிற இந்திய மொழிகளிலிருந்து
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே
எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர் சரஸ்வதி ராம்நாத். இந்த நாவலில்
அவரது மொழிபெயர்ப்பு மேதமை வியக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் உள்ளன. நாவலில்
ஒலிக்கும் அங்கதத்தை துல்லியமாகவும் சிறிதும் வலுவிழக்காமலும் மொழிபெயர்த்திருப்பது
பெரும் சாதனை. சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
‘தற்காலக் கல்வி இருக்கிறதே
அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானாலும் அதை எட்டி உதைக்கலாம்’.
( பக் 9 )
‘நானும் சரித்திர பாடத்தில்
எம்.ஏ.பாஸ் செய்திருக்கிறேன். 61 சதவீதம் மார்க் வாங்கியிருக்கிறேன். காலத்தின் கோலம்.
இப்போது இங்கே பிரின்ஸ்பாலாக இருக்கிறேன்.’
‘மோசமான டிவிஷன் வாங்கி
இருந்தால் தாங்கள் இங்கேயா இருப்பீர்கள்?’
‘அது சரிதான். அப்படியிருந்தால்
ஏதாவதொரு யுனிவர்ஸிடியில் லெக்சரராக இருந்திருப்பேன். மூன்றாம் டிவிஷனில் பாஸ் செய்த
என் நண்பர்கள் எத்தனையோ பேர் யுனிவர்ஸிடியிலே இருக்கிறார்கள்.’ ( பக் 199 )
‘குற்றவாளிகளின் வீட்டில்
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாட்டுத் துப்பாக்கி என்று அழைக்கப்படும் இரும்புத்துண்டு
கட்டாயம் தேடி எடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தார். அதைப் பார்த்ததுமே பதினெட்டாவது,
பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு இந்தியர்கள் தோற்றுப்போனது
ஏன் என்ற வரலாற்று உண்மை தானாகவே தெளிவாகிவிடும்.’ ( பக் 187 )
கல்வித் துறை சம்பந்தமான
பொருள்களை சப்ளை செய்யும் ஒரு கம்பெனியின் காலண்டர் அவர் முகத்துக்கு நேரே சுவரில்
தொங்கியது. வெற்றுடம்பில் சருகு போன்ற மெல்லிய சேலையைச் சுற்றிக் கொண்டிருந்த யாரோ
ஒரு திரை நடிகை மெய்ம்மறந்த நிலையில் லட்டுமாதிரி ஆடவன் ஒருவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
அந்த ஆடவனின் முகத்திலே ரோமக்காடு. ஒரு கரத்தை உயர்த்திக் கண்களை மறைத்துக்கொண்டிருந்தான்.
லட்டைத் தின்று தின்று அஜீர்ணம் வந்துவிட்டது போன்ற பாவம். இவர்கள்தான் மேனகையும் விஸ்வாமித்திரரும்.’
( பக் 93 )
‘யாரேனும் கேட்டால் கேட்கட்டும்,
கேளாவிட்டால் போகட்டும் என்று பிரசார இலாக்கா பற்றற்றுப் பணிபுரிவதுபோல், பிரின்ஸ்பாலும்
பேசிக்கொண்டே இருந்தார்.’ ( பக் 207 )
‘வெற்றிலைப் பாக்குக்
கடையில் பாட்டிரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப்
பாடல்கள் என்ற சாக்கடையிலிருந்து, ‘ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை,
என் இலட்சியம், நீ எங்கே, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு,
வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவளே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை’ ஆகிய
சொற்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நாடுகளில் புத்தெழுச்சியின் செய்தியைப்
பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.’
( பக் 277 )
இந்திய நாவல்கள் என்று
பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள், ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய
நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே மாறிப் போனவை.
இந்த இரு நாவல்களுக்கு
சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு
என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால்,
லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து
வேறுபட்ட ஒன்றாக பிரித்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப்
பொறுத்தவரையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது.
அரசியல் அதிகார அமைப்புகளும் ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில்
எந்த மாற்றங்களும் இல்லை.
அந்த வகையில் இன்றும்
தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை மிக்க தன் அங்கதச் சுவையாலும்
இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.
லால் சுக்லவைப் பற்றியும்
அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம் ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும்
வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடனை நினைவுக்கு வந்தார். ‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம்
மிகுந்த முழு நாவலை எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர் என்று உறுதியாகக் கூறலாம். இந்திய
அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள், அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள்,
திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, எல்லாவற்றையும்
கண்டும்காணாமல் பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து
காட்டமான, கூரிய விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ
இன்றி நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம்
செய்துகொள்ளாமல், தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும்
கேலியும் கிண்டலுமாக தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு
கடக்க முடியாதபடியான கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப்
பட்டிருக்கும்.
0
நாவல் - தர்பாரி ராகம்
மூலமொழி - இந்தி
நாவலாசிரியர் - ஸ்ரீலால்
சுக்ல
மொழியாக்கம் – சரஸ்வதி
ராம்நாத்
வெளியீடு – நேஷனல் புக்
டிரஸ்ட்
முதல் பதிப்பு –
1977, இரண்டாம் பதிப்பு 1990
பக்கங்கள் -402 – விலை
ரூ. 28.00



