Saturday, 30 May 2026

சரஸ்வதி ராம்நாத் - மொழிபெயர்ப்பு முன்னோடி

 



1

முதலில், தர்பாரி ராகம் நாவலைப் பற்றி.

தர்பாரி ராகம் நாவலை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். இந்திய நாவல்களின் வரிசையை எழுதி வைத்து, தேடி வாங்கி வாசித்த நாட்கள் அவை. அதுவரையிலும் வாசித்த பிற இந்திய நாவல்களிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட நாவலாக இருந்தது. இப்போது இ ந்தக் கருத்தரங்குக்காக மீண்டும் இதை வாசித்தபோது, இன்று வரையிலும் இப்படியொரு நாவல் தமிழிலோ வேறு எந்த இந்திய மொழியிலோ எழுதப்படவில்லை என்பது தெளிவானது.

மொழிபெயர்ப்பின் வழியாகவே நமக்கு பிற இந்திய மொழி நாவல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. சாகித்திய அகாதமி, தேசியப் புத்தகக் கழகம் ஆகியவற்றின் மூலமாக நமக்குக் கிடைக்கும் பிற மொழி நாவல்களில் பெரும்பாலானவை ஏமாற்றம் தருவதில்லை. தரமான இலக்கியங்களையே அவை நமக்குத் தந்திருக்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, ‘தர்பாரி ராகம்’ போன்ற இன்னொரு நாவல் இந்திய அளவில் இதுவரை எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஏன் அப்படியொரு எண்ணம் தோன்றுகிறது? முதலாவது காரணம், இந்த நாவலின் தனித்தன்மைமிக்க கதைமொழி. முழுக்க முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வாக்கியத்துக்கு வாக்கியம் அங்கதமும் கேலியும் கிண்டலுமாக ஒரு நாவல் இருக்குமென்றால் அது தர்பாரி ராகம்தான். ஒரு கவிதையை, சிறுகதையை, கட்டுரையை கேலியும் கிண்டலுமாக எழுதுவது சாத்தியம். ஒரு நாவலை அவ்வாறு எழுதுவது என்பது பெரும் சவால். சில பக்கங்களுக்குப் பிறகு வாசகனுக்கு சலிப்பு தட்டிவிடும். உரைநடை மொழியில் மட்டுமல்லாமல் அரசியல், வரலாறு, உலக இலக்கியம், இந்திய இலக்கியம், நாட்டு நடப்புகள், கவிதை, சினிமா, பத்திரிகைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மேலான அறிவும் புலமையும் அவற்றை தகுந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து எழுதும் நுட்பமும் இருந்தால்மட்டுமே அத்தகைய ஒன்றை முயல முடியும்.  ஸ்ரீலால் சுக்லவின் அத்தகைய புனைவுத்திறனை இந்நாவல் முழுக்கப் பார்க்க முடிகிறது.

தர்பாரி ராகம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் அங்கதச் சுவையை உணர முடியும். நுட்பமான கேலி, சுருக்கென்ற தைக்கக்கூடிய கிண்டல், யோசிக்க வைக்கும் விதத்தில் விமர்சனங்கள் என அனைத்தையும் சுருக்கமாகவும் செறிவாகவும் பார்க்க முடியும். இவ்வாறான ஒரு எழுத்து நடைக்கு வெறும் சொற்கள் மட்டும் உதவாது. மரபுத் தொடர்கள், பழமொழிகள், கிராமத்து சொலவடைகள் என அனைத்தையுமே கையாள வேண்டும். இந்த நாவலில் அவை திறம்பட கையாளப்பட்டுள்ளன. இது இந்தியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான ஒரு கதைமொழியை இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை என்று இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவது காரணம், நாவல் எடுத்துக்கொண்ட களம். விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும் பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும் எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப் போவதன் அவலச் சித்திரத்தை இது காட்டுகிறது. சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக, புதிய சொற்களையே உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு, சாதி அடுக்குகள், அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு வன்முறை நீடித்ததைப்போலவே. இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன, அவ்வளவுதான். சுக்லா இந்த நாவலை எழுதி 70 வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆனால், அவர் நாவலில் எழுதிக் காட்டிய இந்திய அரசின் நடைமுறைகளில் பலவும் இன்றும் அப்படியேதான் உள்ளன. சிறிதும் திருந்தாமல் சிறிதும் மாறாமல்.

நாவலின் கதை மிகச் சுருக்கமானது. சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு முதுகலை வரலாற்றுப் பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு, வைத்தியரான தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின் கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சூதுவாது தெரியாத கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும் அதிகாரத்தையும் நேரடியாகப் பார்க்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கிராமிய அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன. தேர்தல் என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத் தவிர போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும் இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து நொறுங்குகின்றன.

70ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும் மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா தெரியவில்லை.

இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச். சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா.

2

இரண்டாவதாக இந்த நாவலை எழுதிய லால் சுக்லவைக் குறித்து.

ஸ்ரீலால் சுக்ல ( 1925 – 2011 ) உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1947ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் துறையில் சேர்ந்தார். தன் பணிக்காலத்தில் ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு பதவியில் பணியாற்றினார். பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும் விதத்தை நேரில் பார்த்தறிந்த அவர் பின்னர் தன் புனைவுகளில் அவற்றை பயன்படுத்தினார். 1950களில் அவர் எழுதத் தொடங்கினார். கதைகள், கட்டுரைகள். அவருடைய எழுத்தில தொனித்த அங்கதச் சுவைக்காக அவர் அறியப்படலானார்.

1969ஆம் ஆண்டு ‘தர்பாரி ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசும், 2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2011ஆம் ஆண்டு ஞானபீட பரிசும் வழங்கப்பட்டன.

இந்தி இலக்கியத்தின் முதன்மையான அங்கத எழுத்தாளர் லால் சுக்ல ஒருவரே. லால் சுக்லாவின் படைப்புகளில் உள்ள அங்கதம் என்பது வெறும் கேலியும் கிண்டலும் மட்டுமல்ல. ‘தர்பாரி ராகம்’ நாவலில் மட்டுமல்லாது அவரது பிற நாவல்களில், சிறுகதைகளில், கட்டுரைகளிலும் அத்தகைய தொனி உண்டு. எனவே, அவ்வாறான அவரது கிண்டல் கேலியில் உள்ளடங்கிய சினம் உள்ளது. அறச்சீற்றம் உள்ளது. அவரது சினத்துக்கும் அறச்சீற்றத்துக்குமான அடிப்படைக் காரணம் என்ன? வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு வயது 21. ஒரு இளைஞனாக அவர் விடுதலைக்குப் பிறகான இந்தியாவைக் கண்டிருக்கிறார். அப்போதைய தலைவர்கள் சுதந்திர இந்தியாவைக் குறித்த எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை அவர் நேரடியாக அனுபவித்திருக்கிறார். அதுவும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்தில் ஏமாற்றத்தின் வீரியம் சற்று கூடுதலாக இருந்திருக்கவேண்டும். அந்த ஏமாற்றம்தான் அவ்வாறான ஒரு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகத் துயரமான வாழ்வைக் கடக்க ஒரே வழி அதைச் சிரித்துக் கொண்டே வாழ்வதுதான். லால் சுக்லவும் தன் சினத்தை, சீற்றத்தை அங்கதமாக மாற்றிக் கொண்டு வெளிப்படுத்தினார். 

இந்த நாவல் வெளியானபோது, உண்மையில் பெரிய அளவுக்கு வரவேற்பு இருக்கவில்லை. முன்னணி எழுத்தார்களில் சிலருமே கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ‘முற்றிலும் எதிர்மறையான, அவநம்பிக்கைமிகுந்த நாவல்’ என்றும் ‘பெரும் சோர்வைத் தரும் பெரும் நாவல்’ என்றும் விமர்சனங்கள் வந்துள்ளன. பலரும் இந்த நாவலின் குரலை விரும்பவில்லை. ஆனால், சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட பிறகு இந்த நாவலின் மீதான பார்வை பெருமளவு மாறியது. அனைவரும் இதனை கவனிக்கத் தொடங்கினார்கள்.

பத்து நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் அங்கதக் கட்டுரைகளையும் எழுதியபோதும் லால் சுக்லவின் பெயர், தர்பாரி ராகம் நாவலுடன் உறுதியாக ஒட்டிக்கொண்டுவிட்டது.

லால் சுக்லவைப் பற்றியும் அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம் ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும் வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடன் நினைவுக்கு வந்தார். ‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம் மிகுந்த முழு நாவலை தமிழில் எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர் என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள், அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள், திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, சமூக அவலங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் கண்டும்காணாமல் பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து காட்டமான, கூரிய விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ இன்றி நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும் கேலியும் கிண்டலுமாக தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு கடக்க முடியாதபடியான கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கும்.

லால் சுக்லவின் ‘தர்பாரி ராக’த்துக்கு இணையான ஒரு நாவலை, இத்தனை ஆண்டுகள் கழித்தும், எழுத முடியுமானால் அது நாஞ்சில்நாடன் மனதுவைத்தால் மட்டுமே முடியும்.

3

மூன்றாவதாக, இதன் மொழியாக்கம் குறித்து.

சரஸ்வதி ராம்நாத் இந்தியிலிருந்து ஆறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவரது மொழியாக்கங்கள் சரளமாகவும் சீராகவும் அமைந்திருக்கும் என்பதை அறிவோம். ஆனால், தர்பாரி ராகம் அனைத்திலும் சிறப்பான ஒன்று. காரணம், மூல நாவலில் உள்ள இந்தி, பிற புனைவுகளில் உள்ள இந்தியைப் போன்றதல்ல. முன்பே குறிப்பிட்டதுபோல, ஒவ்வொரு பத்தியிலும் எண்ணற்ற மரபுத் தொடர்கள், பழமொழிகள், சொலவடைகள் நிறைந்துள்ளன. வரலாறு, அரசியல், தத்துவம், காவியங்கள், கவிதைகள், திரைப்பட பாடல்கள், பத்திரிகைகள் ஆகிய எண்ணற்ற, வெவ்வேறு குறிப்புகளும் உண்டு. இவை அனைத்தையும் புரிந்துகொண்டு தமிழில் வாசிப்பவர்களுக்கு புரியும்வண்ணம் மொழிபெயர்க்க வேண்டும்.

இதன் இரண்டாவது முக்கியமான சவால், இந்த நாவலின் அங்கத மொழி. மூலமொழியில் உள்ள கேலி, கிண்டல், குறுஞ்சிரிப்பு என ஒவ்வொன்றையும் துல்லியமாகப் புரிந்துகொண்டு தமிழில் அதே தொனியைக் கொண்டு வரவேண்டும். வெகு சிரமமான அந்தக் காரியத்தை மிகத் துல்லியமாக தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருப்பதே பெரும் சாதனை. தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அந்நியமான நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் என்றாலும் வாசிக்கும்போது இந்த வித்தியாசங்களை சற்றும் உணராதவண்ணம் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியில் புழங்கும் மரபுத் தொடர்களுக்கும், பழமொழிகளுக்கும், சொலவடைகளுக்கும் இணையான தமிழ் தொடர்களைக் கண்டறிந்து பொருத்தமாக இட்டிருக்கிறார். லால் சுக்லவின் அங்கதத்தின் பின்னணியில் உள்ள உத்தேசத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே வீரியம் குறையாமல் அதை மொழிபெயர்க்க முடியும்.

உதாரணத்துக்கு ஒரு பத்தியை மட்டும் குறிப்பிடலாம்.

இன்னும்கூட சிலருக்கு நினைவிருக்கலாம். காந்தி என்பவர் பாரத நாட்டில் பிறந்தவர். இந்த மண்ணிலே தோன்றியவர். அவருடைய அஸ்திகளுடன் அவரது கொள்கைகளையும் திரிவேணி சங்கமத்தில் கரைத்தபின், அந்த மகானின் நினைவாக இனிப் பெரிய கட்டடங்களும் சதுக்கங்களும் எழுப்பப்படும் என்ற முடிவெடுத்தபின் சிவபால்கஞ்சில் தோன்றியது இந்தச் சதுக்கம்.

இந்தி மொழியின் ஒரு தன்மை, எந்தவொரு புதுச் சொல்லையும் அப்படியே எடுத்துக் கொள்ளும். உதாரணமாக, ‘ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ்’ என்ற சொல்லை அப்படியே அதன் எழுத்துருவில் எழுதிவிடுவார்கள். அதை இந்தியில் மொழிபெயர்க்க, தமிழில் செயற்கை நுண்ணறிவு என்று மாற்றியிருப்பதுபோல, பெரிய அளவுக்கு மெனக்கெட மாட்டார்கள். சரஸ்வதி ராம்நாத் இந்தியின் இந்த குணாம்சத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பவர். இந்த நாவலின் மூலத்திலும் ஆங்கிலச் சொற்கள் பலவும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரக், டிரைவர், கிளீனர், டாப் கியர், ப்ரேக், ஸ்டேஷன் வாகன், பியூன், போலீஸ் ஸ்டேஷன், ரிஜிஸ்டர், லென்ஸ், முசாபரி பங்களா, ஜில்லா போர்டு, இன்டர்மீடியட் காலேஜ், பாலிஷ், பிரின்ஸ்பால் என்று உதாரணங்களைச் சொல்லலாம். இந்தச் சொற்களை அவர் தமிழ்ப்படுத்த முனையவில்லை என்பதாலோயே இந்த நாவலின் கதைமொழியை அப்படியே தக்கவைக்க முடிந்திருக்கிறது. இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் இது.

இந்த நாவலை வாசித்தவுடனேயே, சரஸ்வதியம்மாவின் மொழிபெயர்ப்பில் வெளியான அக்ஞேயாவின் ‘நமக்கு நாமே அந்நியர்கள்’ நாவலையும், அமிருதா பிரீதமின் ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’ நாவலையும் படித்துப் பார்த்தேன். இவ்விரு நாவல்களின் களங்களும் மொழியும் முற்றிலும் வேறானது. பனிக்குள் புதைந்திருக்கும் மரவீட்டில் மாட்டிக்கொண்ட இரு பெண்களின் மனநிலையை விவரிக்கும் இறுக்கமான நாவல் ‘நமக்கு நாமே அந்நியர்கள்’. கணந்தோறும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இருவருக்கிடையிலான அழுத்தமான சூழலில் வேறு எதற்குமே இடமில்லை. அதேபோல, ஓவியர் ஒருவர் தனது வயதான காலத்தில் தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் நாவல் ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’. இந்த நாவல்களை வாசிக்கும்போது, சரஸ்வதி ராம்நாத் தன் மொழிபெயர்ப்பு மொழியை மூல நாவல்களின் மொழியையும் களங்களையும் புரிந்துகொண்டு எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

1995ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது சரஸ்வதி ராம்நாத்தை நேரில் சந்தித்தேன். அப்போது இலக்கியத்துக்கு நான் புதுமுகம். அதிகமும் எதுவும் எழுதியிருக்காத காலம். இந்தி தெரியும் என்பதால் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கிறார் என்பது எனக்கு அவர்மீது கூடுதல் அபிமானத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு அவரது மொழியாக்கங்களை வாசித்தேன். பாவண்ணன் மூலமாக அவரைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வேன்.

இத்தனை காலத்துக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் தமிழில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாவண்ணன் இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார். சுபமங்களாவில் ஒரு நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்தியிலிருந்து தமிழுக்கு அளப்பரிய செல்வங்களைக் கொண்டு வந்தவருக்கு, தமிழிலிருந்து இந்திக்கு கவிதைகளை, கதைகளை, நாவல்களை மொழிபெயர்த்தவருக்கு நாம் அளித்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இவ்வளவுதான். சாகித்திய அகாதமி வெளியிடும் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அவரைப் பற்றிய நூல் வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தில் பாவண்ணன், ஒரு முன்வரைவுடன் அகாதமிக்கு விண்ணப்பித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், அந்த முயற்சியை மீண்டும் மேற்கொண்டு, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அவரது நூல் வெளிவர ஆவண செய்யவேண்டும். அவர் எழுதிய முன்னுரைகள், நேர்காணல்கள், அவரைப் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும். சரஸ்வதி ராம்நாத்துக்கு நாம் செய்யவேண்டிய கைமாறு அதுதான்.

0

இறுதியாக

பிற இந்திய மொழிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர் சரஸ்வதி ராம்நாத்.

இந்திய நாவல்கள் என்று பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள், ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே மாறிப் போனவை.

இந்த இரு நாவல்களுக்கு சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால், லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பிரித்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது. அரசியல் அதிகார அமைப்புகளும் ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை.

இந்த நாவலின் தலைப்பு ‘தர்பாரி ராகம்’. இசை மேதை தான்சேனால் உருவாக்கப்பட்ட இந்த ராகம், கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுவது. ஆனால், லால் சுக்ல, இந்த ராகத்தின் பெயரை நாவலின் தலைப்பாக வைக்கவில்லை. கிராமத்தையே ஆட்டிப் படைக்கும் வைத்தியரின் பாடலையே அனைவரும் பின்பாட்டாக பாடுகிறார்கள் என்ற பொருளில் தலைப்பை வைத்திருக்கிறார். அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான் ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும் அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.   

அந்த வகையில் இன்றும் தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை மிக்க தன் அங்கதச் சுவையாலும் இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.

0

( சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 12.03.2026 அன்று நடந்த கருத்தரங்கில் வாசித்த கட்டுரை )

 

Thursday, 28 May 2026

ஜனரஞ்சகத்துக்கும் தீவிரத்துக்குமிடையில் ஒரு பாலம் - இரா.முருகனின் எழுத்துலகம்

 

0

இரா.முருகன் எழுதத் தொடங்கியது 1977ஆம் ஆண்டு. இன்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐம்பது ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இன்றும் தனது வலைத்தளத்தில் அன்றாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் போலவே கவிதைகளில் தொடங்கியது அவரது இலக்கியப் பயணம். அவர் சிவகங்கையைச் சே

ர்ந்தவர். அன்னம் மீரா அவரது தமிழாசிரியர். அழ.வள்ளியப்பா அவரது ஆதர்சமான கவிஞர். எனவே, அவர் கவிதைகள் எழுதியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவரை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய கவிதையின் பெயரிலேயே ஒரு தொகுப்பு வெளிவந்துள்ளது. அவர் எழுதிய வெண்பாக்கள் இரு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. நடையானந்தா கவிதைகள் என்றொரு தொகுப்பும் உண்டு.

கவிதைகளை எழுதத் தொடங்கிய அவர் விரைவிலேயே கவிதையிலிருந்து சிறுகதைக்கு நகர்ந்துவிட்டார். கணையாழி, சுபமங்களா போன்ற இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகள் கவனம் பெற்றவை. இதுவரை எழுதியிருக்கும் 200 கதைகள், பத்து சிறுகதைத் தொகுதிகளாக வெளியாகியுள்ளன.    

இராப் பத்து, பகல் பத்து, தகவல்காரர் உள்ளிட்ட அவரது குறுநாவல்களும் மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன.

இரா.முருகன் இதுவரை 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அவரது முதல் நாவல் ‘மூன்று விரல்’. கணினி உலகை பின்னணியாக கொண்டது. கணினித் துறை சார்ந்த எழுத்துகள் என்று ஒரு தனி வகைமையே இன்று தமிழில் உருவாகியுள்ளது. முக்கியமான பல நாவல்கள் வெளிவந்துள்ளன. நவீன வாழ்வை கட்டமைத்துள்ள இத்துறை சார்ந்தவர்களின் வாழ்வைக் குறித்து 2006இல் இரா.முருகன் எழுதிய இந்த நாவலே இவ் வகைமையில் எழுதப்பட்ட முதல் நாவல். 

‘அரசூர் வம்சம்’ நாவல் தொடர் இரா.முருகனின் சாதனை. திண்ணை இணைய இதழில் ‘அரசூர் வம்சம்’ தொடராக வெளியானது. மாய யதார்த்த பாணியில் இரு குடும்பங்களின் கதையைச் சொல்வது இந்த நாவல்.

விஸ்வரூபம், அரசூர் வம்சத்தின் இரண்டாம் பாகம். அளவில் சற்று பெரிய நாவல். 102 அத்தியாயங்களைக் கொண்டது. மிக விரிவான களத்தையும் காலத்தையும் கொண்டது.

மூன்றாவது பாகமாக எழுதப்பட்ட நாவல் ‘அச்சுதம் கேசவம்’ கிட்டத்தட்ட சம்பிரதாயமான நாவல் வடிவைக் கொண்டது. முந்தைய இரண்டு நாவல்களைப் போலன்றி நேரடியான சித்தரிப்பு முறையிலானது.

நான்கு பாகங்களைக் கொண்ட அரசூர் வம்ச தொடர் நாவல்களின் நான்காம் பகுதி வாழ்ந்து போதீரே. இதுவே இத்தொடர் நாவலின் நிறைவுப் பகுதியும்.

அடுத்த முக்கியமான பெருநாவல் மிளகு. நானூறு வருட மிளகு வணிகத்தின் சமூக பொருளாதார அரசியலை விரிவாகப் பேசிய நாவல்.

இவற்றைத் தவிர இன்னும் ஐந்து நாவல்களை எழுதியிருக்கிறார்.

இரா முருகன் நாடக ஆசிரியரும்கூட. சாவடி என்றொரு நாடகம் அவர் பட்டியலில் உண்டு. சென்னைத் துறைமுகத்தில் எம்டன் கப்பல் குண்டு போட்ட நூற்றாண்டையொட்டி இதை எழுதியிருக்கிறார். சென்னையின் புகழ்பெற்ற கொத்தவால் சாவடியே இதன் களம்.

இரா முருகன் ஒரு கட்டுரை எழுத்தாளரும்கூட. கணினிகள் குறித்த அவரது கட்டுரைகள் பிரபல இதழ்களில் வெளியானவை. எளிமையும் நகைச்சுவையுமாய் கணினி தொழில்நுட்பத்தை பயன்பாடுகளை விளக்குபவை. ராயர் காபி கிளப், இலக்கிய அரட்டைக்கான இணையக்  குழுமத்தில் பேசப்பட்டவற்றின் எழுத்து வடிவம். தனது லண்டன் அனுபவங்களை, அதன் வரலாற்றுத் தகவல்களோடு சேர்த்து ‘லண்டன் டயரி’யாக எழுதியிருக்கிறார். அவரது வலைப்பூவின் பெயர் ‘வேம்ப நாட்டு காயல்’. அதில் எழுதியவற்றை அதே பெயரில் தொகுத்திருக்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் அடங்கியது ‘டிஜிட்டல் கேன்டீன்’. புனைவு, இலக்கியம், கணினி அல்லாமல் பிற துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். திட்ட மேலாண்மையைக் குறித்தும் இஸ்லாமிய வங்கியியல் குறித்தும் நூல்களை எழுதியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பையும் விட்டுவைக்கவில்லை. அருண் கொலாத்கர் என்ற மராட்டிய கவிஞரின் எல்லாக் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். பிரபல மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவனின் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ‘பீரங்கிப் பாடல்கள்’.

இத்தனையையும் செய்துவிட்டு சினிமாவில் கால்வைக்காமல் அல்லது கைவைக்காமல் இருக்க முடியாதல்லவா. இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

0    

இதுவரை சொல்லப்பட்ட விபரங்களிலிருந்து இரா முருகனைக் குறித்து ஒரு சித்திரம் கிடைத்திருக்கும். இரா.முருகன் தொடர்ந்து எழுதுபவர். கதை, கட்டுரை என்று எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பவர். அவரால் எழுதாமல் இருக்க முடியாது.

அவர் எழுத வந்த காலம் சிற்றிதழ்கள் கோலோச்சிய காலம். கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் தொடர்ந்து வெளியாகின என்றாலும் பிற சிற்றிதழ்கள் பலவும் அற்ப ஆயுசுகள் கொண்டவையாகவே இருந்தன. குறைந்த எண்ணிக்கையிலான சந்தாக்கள், அரிதான விளம்பரங்கள் ஆகியவற்றை வைத்து இதழை நடத்துவது சிரம்ம. ஒத்த சிந்தனையுள்ள ஒரு குழுவின் ஆர்வமும் ஆசையும் அவர்களது பொருளாதாரம் பலம் அனுமதிக்கும் காலம் வரை நீடிக்கும். பிறகு அது இயலாதபோது இயல்பாகவே வடிந்துவிடும். இதழும் நின்றுவிடும். ஒரு கவிதையையோ கதையையோ அனுப்பினால் அது பிரசுரமாகும் என்ற உத்தரவாதம் கிடையாது. அதற்காக இன்னொரு இதழுக்கு அதை அனுப்பிவிடவும் முடியாது. ஒரு கதையை அனுப்பிவிட்டு ஒரு வருடத்துக்குக் காத்திருக்க நேரும். பிறகு இதழ் நின்றுபோனதை உறுதி செய்துவிட்டு இன்னொரு சிற்றிதழுக்கு புதிதாக பிரதியெடுத்து அனுப்ப நேரிடும். இப்படியாக ஒரு வருடத்தில் ஒரு கதையோ அல்லது இரண்டு கதைகளோ பிரசுரமானாலே பெரிய விஷயம். அந்த உற்சாகத்தில் இன்னுமிரண்டு கதைகளை எழுதி அடுத்த சில வருடங்களுக்கு காத்திருக்க வேண்டும். இயல்பில் நிதானமும் காத்திருப்புமான ஒரு போக்கு அது. பொருளாதார நெருக்கடி, அச்சு வசதிகள் மேம்படாத சூழல் என்று பல காரணங்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் சிற்றிதழ்களின் வழியாக தமிழ் தீவிர இலக்கியம் வளர்ந்தது.

அதே சமயத்தில் வணிக இதழ்களும் பெருமளவு வெளியாயின. சிற்றிதழ்களைப் போல அல்லாமல் குறித்த நேரத்தில் வழவழப்பான தாளில் வண்ணங்களுடன் அவை வெளியாயின. இரண்டுக்கும் இடையே வலுவான பிரிவினை இருந்தது. தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் வணிக இதழ்களுக்கு எழுதுவது செய்யக்கூடாத காரியமாக பார்க்கப்பட்டது.  

இரா.முருகன் நிறைய எழுதுபவர். தொடர்ந்து எழுதுபவர். சிற்றிதழ்களின் நிதானம் அவருக்குக் கட்டுப்படியாகாதது. அவரது மொழியும் கதைப் பாணியும் அதிகமும் வணிக இதழ்களுக்கானவை. வாசகர்களை ஆர்வத்தோடு தொடர்ந்த வாசிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவை. வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது என்பதே முதன்மை நோக்கம். ஒரு வகையில் வணிகப் பத்திரிகைகளின் போக்குக்கு நெருக்கமானவை. அவரது வேகத்துக்கும் எழுத்துப் பாணிக்கும் வெவ்வேறு வகைமைகளுக்கும் அவை உகந்தவையாக இருந்தன. எனவே அந்தப் பாதை இயல்பாகவே அவருக்கு பொருந்திப் போனது.

காலப்போக்கில் சிற்றிதழ்களுக்கும் வணிக இதழ்களுக்குமான கோடு மெலிந்தது. இடைநிலை இதழ்கள் வெளிவந்தன. சுபமங்களா, இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இதழ்கள் இந்த இடைவெளியைக் குறைத்தன. தீவிர இலக்கிய இதழுக்கான அடர்த்தியையும் வணிக இதழ்களுக்கான எளிமையையும் கொண்ட இவ்விதழ்கள் இரண்டுக்கும் பொது வாசகர்களை சென்றடைந்தன.    

எழுத்திலும் அச்சிலும் கணினியின் பயன்பாடு அதிகமானபோது சூழல் மாறியது. இணைய இதழ்களும், மின்னிதழ்களும் வெளிவரலாயின. அவரவர்க்கான வலைத்தளங்களிலும் இணையத்திலும் எழுத்தாளர்கள் எழுதலாயினர். உலகளாவிய வாசகர்களை சென்றடைய இவை உதவின. இத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து தங்களையும் அந்தந்த காலத்துக்கும் ஊடகத்துக்கும் ஏற்ப மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டது. இரா.முருகனுக்கு இத்தகைய களமும் மிக வசதியாக அமைந்து போனது. தான் விரும்பிய வேகத்தில், விரும்பிய விதத்தில் எழுத முடிந்தது.

எழுதுவதற்கு கணிப்பொறி ஒரு கருவியாகவும், வலைத்தளங்கள் மின்னிதழ்கள் ஊடகமாக மாறின. இதனால் பக்க எண்ணிக்கையைப் பற்றியோ பிரசுர வாய்ப்பைப் பற்றியோ யோசிக்காமல் கவலைப்படாமல் எழுத முடிந்தது. பெருநாவல்களின் வருகைக்கு முக்கியமான காரணம் இது. இரா முருகன் கணினித் துறையைச் சார்ந்தவர் என்பதால் அதன் சாத்தியங்களை உடனடியாகவே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே இன்று பெரும் எண்ணிக்கையிலான பக்கங்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார்.

0

இரா முருகன் நிறைய எழுதுபவர் என்று சொன்னேன். நிறைய எழுதுவதற்கு கற்பனை மட்டுமே உதவாது. நிறைய வாசிக்கிறார். தொடர்ந்து பயணங்களை மேற்கொள்கிறார். பணி நிமித்தம் காரணமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக பல்வேறு ஊர்களில் வசித்திருக்கிறார். இதன் காரணமாக பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வாய்த்திருக்கிறது. அவர்களது இயல்புகளை, உரையாடல்களை, மொழியை, அன்றாடங்களை உற்று கவனிக்க முடிந்திருக்கிறது. காணும் காட்சிகளும் கேட்கும் ஒலிகளும் பேசும் உரையாடல்களும் அவருக்குள் பதிந்து போகின்றன. வெளியூர்களில் வேடிக்கைப் பார்த்தபடி, அடுத்திருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தபடி திரியும் போக்கு அவரது புனைவுலகுக்கு பெரிய ஒரு சேகரத்தை பெற்றுத் தரும் கருவியாக அமைந்திருக்கிறது.

நிறையப் பேசுவதற்காக, நிறைய கதைகளைச் சொல்வதற்காக, கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருப்பவர் இரா.முருகன். காட்சியும் ஒலியும் சொல்லும் அவருக்குள் துல்லியமாகப் பதிந்து போகின்றன.

அதனால்தான் எந்தக் களத்தை எடுத்துக்கொண்டு எழுதினாலும் அதில் நம்பகத்தன்மையை வெகு எளிதாக கொண்டுவந்துவிட முடிகிறது. மொழியை, உரையாடலை சூழலை கச்சிதமாக உருவாக்கிக் காட்ட முடிகிறது.

கதைகளுக்காக அவர் தேர்ந்தெடுத்த களங்கள் வெவ்வேறானவை. சுவாரஸ்யம் மிகுந்தவை. அன்றாட வாழ்வில் சாமான்யர்கள் சந்திக்க நேரும் அபத்தங்கங்களே அவரது கதைகளின் மையம். குறைந்த சொற்களைக் கொண்ட செறிவான வாக்கியத்தில் விபரங்களை அடுக்கிச் சொல்வது அவரது கதைப் பாணி. ஒரு வரி முடிந்ததுமே அதைப் பற்றி யோசிப்பதற்கு முன்பே அதேபோன்ற இன்னொரு வரி விழுந்திருக்கும். உரையாடல்களும் அவ்வகையானவையே. இவரது சிறுகதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் எளியோர்களின் சாமான்யர்களின் நோஞ்சான்களின் உலகம் அவ்வாறானவைதான். நொடியில் யாரும் கடந்துபோய்விடக் கூடியவை. கேலியாக, பகடியாக, கிண்டலாக விமர்சிக்கப்படுபவை. யாரும் அக்கறை காட்டாதவை.

கதைக்களம், சூழல், கதாபாத்திரங்கள், உரையாடல் ஆகியவற்றை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பது என்பதோடு இரா.முருகனின் தனித்தன்மையாக அமைந்தவை அவரது கதைகளின் வார்ப்பும் மொழியும். துண்டுத் துண்டாக காட்சிகளை வெட்டி நேர்வரிசையிலும் பல சமயங்களில் மாற்றியும் அடுக்குகிறார். அதற்கேற்ப கதைமொழியும் தாவி தாவிச் செல்லும். இயல்பாக அமைந்திருக்கும் பகடி இவ்விரண்டுக்கும் மிகப் பொருத்தமாக அமைந்துவிடும்.

இவற்றைத் தவிர, இரா.முருகனின் எழுத்தில் உள்ள அம்சங்கள் சிலவற்றை குறிப்பிடலாம்.

ஒன்று, வரலாற்றை அவர் தன் எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.

ஒரு குடும்பத்தின் கதையை சொன்னால் அதிகபட்சம் நூறு வருடங்கள் சொல்ல முடியும். நீண்ட காலப் பரப்பு என்றால் தலைமுறைகளின் கதையைச் சொல்ல வேண்டும். தலைமுறைகளின் கதை என்று தீர்மானித்தால் வரலாற்றுப் பின்புலம் தேவைப்படும்.

ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு நடக்கும்போது அதே காலத்தைச் சேர்ந்த மனிதர்களின், குடும்பங்களின் வாழ்க்கையும் வரலாற்றின் ஒரு பகுதிதான். ஆனால் சொல்லப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியிருக்காது. இரா.முருகன் அந்த மனிதர்களின் வரலாற்றைத்தான் எழுதுகிறார். அனைவரும் அறிந்த வரலாற்றை பின்புலமாக வைத்து தனி மனிதர்களின், குடும்பங்களின் கதையைச் சொல்கிறார். அறிந்த வரலாற்றிலிருந்து சில கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றை தனது புனைவின் வழியாக உருவாக்குகிறார். இதுவும் வரலாறுதான். இங்கும் மோதல்கள், சூழ்ச்சிகள், பழிவாங்குதல்கள், காதல், காமம், துரோகம், கண்ணீர், ரத்தம் என்று எல்லாம் உண்டு. எனவே, இரா.முருகன் காட்டுவது பெரு வரலாற்றின் ஒரு  பகுதியை.

அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் முதன்மையானவையோ முக்கியமானவையோ இல்லை. வரலாற்றின் பெருநிகழ்வு ஒன்று நடந்திருக்கும் அதே சமயத்தில் இன்னொரு மூலையில் கவனிக்கப்படாமலிருந்தவர்கள். அந்த சம்பவத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள். அந்த கதாபாத்திரங்களும் சம்பவங்களும் அனைவரும் அறிந்த, ஆவணப்படுத்தப்பட்ட பெரிய வரலாற்றின் நுண்ணிய பகுதிகள்.

அதேபோல, அவரது பெருநாவலிலுள்ள கதாபாத்திரங்கள் சாகச நாயகர்களோ நாயகிகளோ அல்ல. எளிமையானவர்கள். எல்லா பலவீனங்களையும் கொண்ட சராசரி மனிதர்கள். வரலாற்று பெருநிகழ்வின்போது ஏதோவொரு மூலையில் சிறு புள்ளிகள் போலக் கிடந்தவர்கள்.

நாம் அறிந்த வரலாறு என்பது கலைநுட்பங்கள் மிகுந்த ஒரு பெரும் கோபுரத்தைப் போன்றது. தள்ளி நின்று அதன் உயரத்தையும் அங்கிருந்து கண்ணுக்குத் தெரிகிற சிற்பங்களையும் பார்த்து வியக்க முடியும். இரா.முருகன் அந்த கோபுரத்துக்கு அருகில் செல்கிறார். கோபுரத்தின் வெவ்வேறு தளங்களருகே சுற்றுச்சுவர்களருகே சுட்டிக் காட்டுகிறார். பெரிய சிற்பங்களோடு விரலளவே கொண்ட சின்னஞ்சிறு சிற்பங்கள் பலவும் அங்குள்ளன. குதிரை வீர்ர்கள், பல்லக்குத் தூக்கிகள், சாமரம் வீசுபவர்கள், ஆடல் அழகிகள், இசைக் கலைஞர்கள் என்று எண்ணற்ற மனிதர்கள். இரா.முருகன் ஒரு உருப்பெருக்கியைக் கொண்டு அவர்களை இன்னும் நெருக்கமாக காட்டுகிறார். கோபுரத்தின் ஒரு பகுதிதான் அவர்கள். ஆனால் தள்ளி நின்று பார்க்கும்போது நாம் கவனிப்பதில்லை. ஆனால், உருப்பெருக்கியின் வழியாக இரா.முருகன் காட்டும்போது அதன் நுட்பங்களை வியக்கிறோம்.

இரா.முருகன் புனைவை உருப்பெருக்கியாக மாற்றி வரலாற்றின் ஒரு பகுதியான  மனிதர்களையும் சம்பவங்களையும் காட்டுகிறார்.

அடுத்தது, மாய யதார்த்த உத்தி.

பெருநாவல்களை எழுதும்போது வழக்கமான கதை உத்திகள் ஓரளவே கைகொடுக்கும். அகண்ட காலத்தையும் விரிவான களத்தையும் சித்தரிக்க முனையும்போது புதிய உத்திகள் தேவைப்படும். காலம் பெரியது. களமும் பெரியது. ஆனால், கதாபாத்திரங்களின் ஆயுட்காலம் குறுகியது. ஒரு எல்லைக்கு மேல் நீட்டிக்க முடியாது. இந்த வரம்புகளை மீறி நீண்ட கால அளவுக்கு கதாபாத்திரங்களை தக்க வைக்கவேண்டும். அல்லது இருவேறு காலத்துக்கு நடுவே கதாபாத்திரங்களை ஊடாடவிட வேண்டும். இதற்காக அவர் கையில் எடுத்த உத்திதான் மாய யதார்த்தம். எல்லையில்லாத காலங்களுக்கு நடுவே எல்லைகள் மிகுந்த கதாபாத்திரங்களை உலவ விடுவதற்கு இந்த உத்தி அவருக்கு பயன்பட்டது. அதே சமயம் வாசகர்களுக்கும் இந்த ஊடாட்டம் புதிய ருசியை அளித்தது. இரா.முருகன் இந்த உத்தியை அவரது ஆரம்ப காலக் கதைகளிலேயே இந்த உத்தியை அவர் பயன்படுத்தியிருக்கிறார். பார்க்க முடியும்.        

மாய யதார்த்தம் நமக்கு புதிய உத்தியல்ல. காலங்காலமாக கையாளப்பட்ட ஒன்றுதான். அம்புலிமாமா, புராண இதிகாச கதைகளை வாசித்த எவருக்கும் இது தெரியும். கூடுவிட்டு கூடு பாயும் கதைகள் நமக்கு புதிதல்ல. தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது இந்த உத்தி. அதே சமயம் எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் இந்த உத்தியை பயன்படுத்த முடியும் என்பதை இரா.முருகன் எழுதிக் காட்டியிருக்கிறார். 

வாசகர்களை பயமுறுத்துவதுபோல சிக்கலான வாக்கிய அமைப்புகளைக் கொண்ட மேலை நாட்டு சரக்குகளை இறக்குமதி செய்யப்படாமல், அன்னியத்தன்மை இல்லாமல் நமது கதை மரபிலிருந்து இந்த உத்தியைக் கையாண்டிருப்பது இன்னொரு முக்கியமான அம்சம்.

மூன்றாவது, சமையலையும் காமத்தையும் தன் எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.

பெருநாவல்களை எழுதும்போது பொதுவான வாசகர்களுக்கு விருப்பமான சில கூறுகளையும் அதில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மனித இயல்பில் யாருக்கும் எந்த நேரத்திலும் திகட்டாத இரண்டு அம்சங்கள் உணவும் காமமும். இரண்டுமே பசி. இரண்டுமே ருசி. இந்த இரண்டுமே அளவுக்கு மீறினால் போகம். உடலின் எல்லைகளை மீறி மனம் இவற்றை தொடர்ந்து நாடியபடியேதான் இருக்கும். இதன் மீறல்களை, வினோதமான ருசிகளை இரா.முருகன் தன் பெருநாவல்களில் திறம்பட கையாண்டிருக்கிறார்.

சமையல் நுட்பங்களை கதையில் கையாள்வது ஒருவகை புனைவு உத்தியே. இரா.முருகன் அந்த உத்தியை வெகு நுட்பமாக கையாள்கிறார். வாசகர்கள் அந்தப் பதார்த்தங்களை முகர்கிறார்கள், ருசிக்கிறார்கள்.

அதேபோல, காமத்தை அவர் கையாண்டிருக்கும் விதத்தை கவனித்தால் ஒன்று புலப்படும். முகம் சுளிக்கும்படியாகவோ, அத்துமீறியோ அதை சித்தரிக்காமல், பகடியாக்கியிருப்பதன் மூலம் அதன் தீவிரத்தை மட்டுப்படுத்தி நமுட்டுச் சிரிப்பாக மாற்றிவிடுகிறார். இது மிக முக்கியமான ஒரு புனைவுத் திறன்.

கம்பி மத்தாப்பிலும் புஸ்வானத்திலும் வண்ணங்களுடனும் ஒளியுடனும் பொறிகள் எழும்போது அவற்றை நாம் ரசிக்கிறோம். நெருப்பின் துளிகள்தான் அவை என்று தெரிந்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சுவதில்லை. இரா.முருகன் கதையிலுள்ள காமம் மத்தாப்பின் பொறிகள் போல ரசிக்கவே வைக்கிறது. பயப்படச் செய்வதில்லை.

நான்காவதாக குறிப்பிட விரும்பும் அம்சம், பீபத்ஸம்.

சில விஷயங்களை பொதுவெளியில் எழுதக் கூடாது, பேசக்கூடாது என்ற தயக்கம், மனத்தடை உள்ளது. ‘இதையெல்லாம் எழுதியே ஆகணுமா?’ என்ற கேள்வி எப்போதுமே உண்டு. கழிப்பறையை ‘கக்கூஸ்’ என்றோ ஏன் ‘டாய்லெட்’ என்று சொல்வதையேகூட இன்றைய தலைமுறையினர் விரும்புவதில்லை. ‘வாஷ் ரூம்’ அல்லது ‘ரெஸ்ட் ரூம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், எழுத்தில் கலையில் அப்படி எதுவும் விலக்கப்பட்டதில்லை. மனித உணர்வுகள் சார்ந்த அனைத்துமே எழுதத் தகுந்தவைதான். நவரசங்கள் என்று பகுக்கப்பட்டிருப்பவை அனைத்தையுமே எழுதலாம். ஆனால் அதை எந்த நோக்கில் எழுதுகிறோம் என்பதுதான் கவனிக்கவேண்டியது, கவலைப்பட வேண்டியது. பீபத்ஸம் என்றொரு ரசம் உண்டு. அருவருப்பு அல்லது அசிங்கம் என்று சொல்லலாம். முருகனின் எழுத்தில் கையாளும் சில உணர்வுகளை, வெளிப்பாடுகளை ‘அருவருப்பு’ என்ற வகைமையில் வைக்க முடியும். உடல் அழுக்கு, கழிவுகள், அதன் நாற்றங்கள் சார்ந்த சித்தரிப்புகளை வெளிப்பாடுகளை குறிப்பிடலாம். முருகனின் எழுத்தில் பல இடங்களில் நுட்பமாக அவை சுட்டப் பட்டபடியே உள்ளன. ஆனால் அவற்றை வாசகன் எளிதில் கடந்து செல்லும்விதமாக அது கேலியாக, பகடியாக மாற்றப்பட்டுவிடுகிறது. அருவருப்பு ஏற்படுத்தும் அம்சங்களை இதெல்லாம் உள்ளதுதாம்ப்பா என்று போகிறபோக்கில் கடந்துபோக இந்த பகடியும் கேலியும் தேவைப்படுகிறது. குளோரியா என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘வாயு’ என்ற கதையை இதன் உதாரணமாகச் சொல்ல வேண்டும். அந்தக் கதையை இங்கு சொல்ல முடியாது.

உதாரணமாக, தொலைதூர விமானப் பயணங்களில், இரவா பகலா என்ற மயக்கம் இருக்கும் நிலையில், பல் துலக்காத சமயத்தில் விமானப் பணிப்பெண் வந்து பேசுவதைப் பற்றிய ஒரு இடத்தைச் சொல்லலாம். அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் போது வாய் நாற்றம் எழுந்திருக்கவே செய்யும் என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே அதை சகித்துக் கொள்ளத்தானே அவளுக்கு சம்பளம் என்று ஒரு வரி. அவளிடமும் வாய் நாற்றம் இருந்திருக்குமல்லவா? இல்லை, வாடையைத் தவிர்க்க அவள் கவனமாக பெப்பர் மின்ட் போட்டிருக்கிறாள். ஆனால், முருகன் பெப்பர் மின்ட் வாசனை என்று எழுதியிருந்தால் அது முருகன் இல்லை. ‘சூடமிட்டாய் வாசனை’ என்று எழுதும்போதுதான் அது முருகனின் எழுத்தாகிறது.

0

இரா.முருகனின் எழுத்தில் சுஜாதாவின் சாயல் உண்டு. இரா.முருகனின் ஆரம்ப காலக் கதைகளில் உள்ள மொழி நடையில் அதைப் பார்க்க முடியும். அவரைப் போலவே விஞ்ஞானம் குறித்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரே அதைப் பற்றி பல இடங்களில் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறார். இரா.முருகனின் வாசகர்கள் பலர் வலைதளங்களில் ‘சின்ன வாத்தியார்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

சுஜாதாவுக்கும் இரா.முருகனுக்கும் இன்னொரு முக்கியமான ஒற்றுமை உண்டு. இருவருமே  தான் படித்தவற்றை, கேட்டவற்றை, பார்த்தவற்றை வாசகர்களுக்குச் சொல்வது என்பது. குறிப்புகள், பத்திகள், கட்டுரைகளின் வழியாக பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்வது. அறிவியல், கணினிகள், மனோதத்துவம், கவிதை, இலக்கியம், வரலாறு, சங்கப்பாடல்கள், மாந்திரீகம், விளையாட்டு என்று சகலமும் அடங்கும். சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதுவதன் மூலம் வாசகர்களுக்கு புதிய செய்திகளை, தகவல்களை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கும் போக்கு.

சுஜாதா சந்திக்க நேர்ந்த தீவிர இலக்கியத்துக்கும் வணிக இலக்கியத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் இன்றில்லை. இரு தரப்புக்கும் இடையிலான பிரிவினைக் கோடு அழிந்து போய்விட்டது.

இன்று வார, மாத இதழ்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தீவிர இலக்கியம் சார்ந்தவர்கள். எனவே, தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் கதைகள் இயல்பாகவே வார மாத இதழ்களில் வெளியாகின்றன. கட்டுரைத் தொடர்களும்.இலக்கிய வாசிப்பு அறிமுகம் இல்லாத பலரும் அவ்வாறான கட்டுரைகளின் வழியாக இலக்கிய வாசிப்புக்கு நகர்ந்துள்ளனர். நாஞ்சில்நாடனின் ‘தீதும் நன்றும்’ தொடரின் வழியாக அவரை அறிந்த பொது வாசகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எஸ் ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ வழியாக இன்று தீவிர இலக்கியம் வாசிக்கும், எழுதுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. ‘சங்கச் சித்திரங்கள்’ வழியாக ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கி அவருடைய தீவிர வாசகர்களாக ஆனவர்கள் இங்கு பலர் உண்டு. அதே சமயத்தில், தீவிர எழுத்தைச் சேர்ந்தவர்கள் வணிக இதழ்கள் கணினியை மின்னிதழ்களை ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றாலும் அவர்கள் எழுதுவது தீவிர வாசகர்களுக்காகவே. அவர்களது எழுத்து ஊடகங்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்படவில்லை.

வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இரண்டுக்கும் இடையிலான கோடு இல்லை என்றாலும் எழுதும் வகையில் அழுத்தமான வித்தியாசம் உண்டு. தீவிர இலக்கியத்துக்கும் வணிக இலக்கியத்துக்கும் இடைப்பட்ட ஒரு பிரிவு எப்போதும் உண்டு. தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்கிற களங்கள் ஆனால் அதைச் சொல்வது வணிக எழுத்துக்கான எழுத்து முறை. இந்தப் பிரிவை ஒரு வசதிக்காக ஜனரஞ்சக எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம். பொது வாசகர்களும் அணுகும் வகையிலான எழுத்து முறை.  

பொது வாசகர்களின் தரத்தை மேம்படுத்த இவர்களது இத்தகைய எழுத்துகள் உதவின. பெரும் வாசகத் திரளிலிருந்து குறிப்பிட்ட சிலர் மட்டும் மேலும் தீவிரமான இலக்கியத்தை நோக்கி வர இவர்களது பரிந்துரைகள், குறிப்புகள் உதவுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் அத்தகையோரின் தேவை கூடுதலாக உள்ளது. மின் ஊடகங்களை வாசிக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற பயனாளர்களில் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்ப சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதும் எழுத்தாளர்களின் அவசியம் உள்ளது. வாசிப்புப் பழக்கமுள்ளவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் கூடுதலாக்கவும் வசீகரமான எழுத்துக்கான தேவை உள்ளது. வார, மாத இதழ்களிலோ அல்லது பிற ஊடகங்களின் மூலமாகவோ வாசிக்கிறவர்களை எளிமையும் சுவையுமான எழுத்துகளே இலக்கியத்தை நோக்கி வரச் செய்கின்றன.

இன்று இரா.முருகன் அடைந்துள்ள இடமும் அவ்வாறானதுதான். தனது வலைத்தளத்தில் தொடர்ந்து தீவிரமாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விஷயங்களை எழுதுகிறார். பாம்பு சட்டையுரிப்பதுபோல, ஒரே நாளில் வெவ்வேறு நேரத்தில், நான்கு வெவ்வேறு விதமான கதைகளை எழுதுவதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

இணைய இதழ்களின் வழியாக இரா.முருகன் எழுதிய பெருநாவல்கள் குறிப்பிடத்தக்க வாசகப் பரப்பை உருவாக்கியுள்ளன. பொது வாசகர்களிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாசகர்களை தீவிர இலக்கியம் நோக்கி நகர அவரது எழுத்து உதவியிருக்கிறது. இன்று வழங்கப்பட்டுள்ள இந்த ‘விஷ்ணுபுரம்’ விருது, ஐம்பதாண்டு காலம் தொடர்ந்த அவரது பங்களிப்புக்கான அங்கீகாரமாக இருக்கும்.

0

( 2024ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம்’ விருது இரா.முருகனுக்கு வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை )

Sunday, 10 May 2026

மின்னல் தெறிப்புகளும் நின்றெரியும் சுடரும்


சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார் ‘எதிர்காலத்தில் புகழோ பிரபலமோ ஒரு நொடிக்கும் மேல் இருக்காது’.

இன்றைய சமூக ஊடகச் சூழல் தற்காலிகத் தன்மை கொண்டது. நாளிதழ்கள், வார மாத பத்திரிகைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. பாரம்பரியமிக்க ஒரு வார இதழ் விரைவில் நிறுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, படிக்கும் பழக்கம் குறைந்து போனமைக்கு தொலைக்காட்சி காரணமானது. ஆனால், இன்று தொலைக்காட்சிகளே தடுமாறும் நிலை. பெண்களை பயனாளர்களாகக் கொண்ட நெடுந்தொடர்கள் கொஞ்சம் தாக்குப் பிடிக்கின்றன. மற்றபடி தொலைக்காட்சி தொடர்களின் நிலையும் கவலைக்கிடம் என்று துறைசார்ந்த நண்பர்கள் சொல்கிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் மக்களின் கவனம் இன்ஸ்டா ரீல்ஸ், யூ டியூப் பக்கமாகத் திரும்பிவிட்டது. குறைவான நேரத்தில் செறிவான கருத்தை கண்ணைக் கவரும் விதத்தில் சொல்வதுதான் இலக்கணம். இன்று யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம், அதன் மூலம் பொருளீட்டலாம். கையில் ஒரு திறன்பேசி இருந்தால் போதும். ‘இன்றிருப்பார் நாளையில்லை’ என்ற நிலைதான் இவர்களுக்கும். சென்ற ஆண்டு சினிமாப் பாடல்களுக்கு அபிநயம் பிடித்த பெண் இன்று ‘சீனி’லேயே இல்லை. திறமை இருந்தால் எந்த விஷயத்தையும் ‘கண்டெண்ட்’ ஆக்கி விடலாம். உணவகங்கள், சாப்பாடு, கோயில், துணிக்கடை, தள்ளுவண்டிக் கடைகள், கிரிக்கெட், கணவன் மனைவி அன்றாட சண்டைகள், குழந்தைகளின் நடனம் என்று எண்ணற்ற சாத்தியங்கள். வாழ்வின் அன்றாட காரியங்கள் எதையும் காட்சியாக்கலாம். சில பெண்கள் உடலைக் காட்டி உதடுகளைச் சுழிக்கும் ‘ரீல்’களைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் எழுதினார் ‘வெகு விரைவில் முகநூல் வழியாகவே நிர்வாணக் காட்சிகளை தரிசிக்கலாம்’. இலக்கியம் சார்ந்த ரீல்களும் இந்தப் பட்டியலில் உண்டு. சுரேஷ் பிரதீப் போன்றவர்கள் தீவிரமாக புத்தக அறிமுகம் செய்கிறார்கள். இந்த ஆண்டு புத்தகக் காட்சியின்போது, புதிய புத்தகங்களின் அறிமுகங்கள் பலவும் இப்படித்தான் நடந்தன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பலவும் இன்ஸ்டாகிராமில் பிரபலம். இன்னொரு பக்கம் யூ டியூபில் எழுத்தாளர்களின் பேட்டிகளும் ஒலிப்பரப்பாகின்றன.

பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் பாட வேளைகள் 45 நிமிடங்களாக இருந்தன. இப்போது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ஒரு மனிதன் குறிப்பிட்ட விஷயத்தை சராசரியாக இந்தக் கால அளவுக்குத்தான் ஊன்றி கவனிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது இந்தக் கால அளவு இன்னும் குறைந்துவிட்டது. காரணம், இன்றைய காட்சி ஊடகங்கள். இதிலும் இதே அடிப்படைதான். இன்று நமக்கு வாய்த்திருக்கும் திறன்பேசிகள், தொலைதொடர்பு வசதிகள், உலகளாவிய அளவில் சென்றடையக் கூடிய இணைப்புகள் ஆகிய வசதிகள் சமகாலத் தலைமுறையினருக்கு பெரும் சுதந்திர வெளியைத் திறந்து விட்டுள்ளன. எந்தவொரு விஷயத்தையும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் சொல்லிவிடவேண்டும் என்பதுதான் நிபந்தனை. முகநூல் பதிவு அதிகபட்சம் பதினைந்து வரிகளைத் தாண்டக்கூடாது. இந்த எல்லையை மீறும்போது விரல்கள் தானாக அவற்றை இரக்கமில்லாமல் நகர்த்திக் கடந்துவிடும்.

அச்சு ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்துக்கு மாறி இன்று ‘மின்’ ஊடகத்தின் காலத்தில் இருக்கிறோம்.

சூழலுக்கேற்ப இலக்கிய வடிவங்களும் மாற்றமடைகின்றன. ஊடகத்துக்கேற்ப அவை அனுமதிக்கும் கால, வெளிக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றன. எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகளின் இறுதி வரையிலும் எழுதப்பட்ட நாவல்கள் அதிகபட்சம் நானூறு பக்கங்களே இருந்தன. கணினி வசதி அறிமுகமான பிறகு நாவல்களின் பக்க எண்ணிக்கை அதிகமாயின. சமகாலத்தில், குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு, இன்றைய ஊடகத்தின் தேவைக்கேற்ப ‘குறுங்கதை’கள் அதிகமும் எழுதப்படுகின்றன. உலக அளவிலும், தமிழிலும் முன்பே குறுங்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும், இந்த வடிவம் முகநூலுக்கு மிகப் பொருத்தமான வடிவமாக அமைந்திருக்கிறது.

இந்த வடிவத்தைப் புரிந்துகொண்டு தொடக்கம் முதலே இதில் கவனத்துடனும் தீவிரத்துடனும் எழுதி வருபவர் போகன் சங்கர். கவிதைகள், குறுங்கதைகளைத் தொடர்ந்து முகநூலில் எழுதுகிறார். ‘சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்’ என்ற இத்தொகுப்பில் முக நூலில் எழுதப்பட்ட 77 குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன.

முகநூல் பயனாள்களுக்காக, வாசகர்கள் அல்ல, எழுதப்படும் இக்கதைகளுக்கென்று பொதுவான சில குணாம்சங்கள் உண்டு. முதலாவது, வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொண்டவை இக்கதைகள். விறுவிறுவென உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கவை. அடுத்தது, எதிர்பாராத திருப்பங்களை, திடுக்கிடல்களை, வியப்பை, திகைப்பைத் தரும் இக்கதைகள் அவ்வப்போது அச்சத்தையும் நெகிழ்ச்சியையும் அளிக்கும். மூன்றாவதாக, கடைசி வரியில் சிறிய அதிர்ச்சியையோ அல்லது எதிர்பாராத திருப்பத்தையோ தருவதாக இருக்கும்.

போகனின் இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் மேற்சொன்ன அம்சங்கள் உண்டு. இதுபோன்று கதைகளை எழுதியதன் பின்னணியில் உள்ள காரணங்களை முன்னுரையில் போகன் தெளிவுபடுத்தியுள்ளார். ‘தீவிர இலக்கியத்தை துப்பறியும் பாணியில் எழுதுவது’ என்கிறார். இதில் உள்ள கதைகளில் துப்பறியும் பாணியிலான கதைகளைக் காண முடியவில்லை. திடுக்கிடலைத் தரும் கதைகள் உள்ளன. பெண்ணா, பேயா? என்ற மருட்சியைத் தரும் கதைளும் உண்டு. போகனுக்கு பேய்க் கதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம். பெண்ணை பேயாகவும், பேயையே பெண்ணாகவும் உருமாற்றிக் காட்டும் விளையாட்டில் கைதேர்ந்தவர்.

பேயா, பெண்ணா என்ற மயக்கத்தைப் போன்றதுதான் துறவுக்கும் சம்சார வாழ்வுக்குமான வித்தியாசங்களும். துறவுக்கும் லௌகீக வாழ்வுக்குடையில் உள்ள சன்னமான கோட்டின் இருபுறமும் நின்றபடி இதுவா அதுவா என்று குழம்பித் தவிப்பவர்களின் கதைகளை இத்தொகுப்பில் சித்தரித்துள்ளார். அன்றாட வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து அஞ்சியோடும் எளிய மனிதனுக்கு துறவை எட்டுவதும் அத்தனை எளிதானது அல்ல.

தொகுப்பிலுள்ள கதைகள் சில கங்கைக் கரையை, காசியை, கயாவை களமாகக் கொண்டுள்ளன. பக்தி, வேதாந்தம், துறவு என்று பல்வேறு நிலைகளையும் அன்றாடத்தின் நோக்கில் புரிந்துகொள்ள இக்கதைகள் முனைகின்றன.

நோய்மை, மரணம், மரண பயம், மரணத்துக்குப் பிறகு என்ன என்பது போன்ற நிலைகளை கதைகளின் வழியே போகன் அலசிப் பார்ப்பதுண்டு. நோய்மையின் கூறுகள் மனிதனின் அக இயல்பைக் குலைத்துப் போடும் யதார்த்தத்தையும் அபத்தமான காரணங்களுக்காக சம்பவிக்கும் மரணத்தின் குரூரத்தையும் சித்தரிப்பதின் மூலம் வாழ்வின் பொருளை பகுத்துணர முயல்கின்றன இக்கதைகள். வாழ்வின் பொருள் என்பதும்கூட அபத்தம்தானே.

நோய்மையை, மரணத்தைப் பற்றிப் பேசும்போது நோய் தீர்க்கும் மருத்துவம் குறித்தும் சில கதைகள் குறிப்பிடுகின்றன. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களும் இவற்றில் அடக்கம். மருத்துவமனைக் களங்களும் அங்கங்கே உண்டு.

எழுத்தாளர்கள், கவிஞர்கள் இல்லாமல் போகன் கதைகள் இருக்க முடியாது. இதில் பெரும்பாலான கதைகளில் அவர்களே கதாபாத்திரங்கள். அவர்களைப் போலவே இந்தக் கதைகளும் பதற்றம் மிக்கவையாக, குழப்பம் கொண்டவையாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. எழுத்தாளன் தன்னைக் கொண்டு காதலை, மரணத்தை, துறவை, நோய்மையை, துக்கத்தை அணுகிப் பார்த்திருப்பதன் விளைவுகள் என்று இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளலாம்.

முன்னாள் காதலிகள், முறிந்த காதல், வரைமீறிய உறவுகள் ஆகியனவும் உண்டு. இவற்றின் விளைவுகளான துயரம், துரோகம், நினைவேக்கங்களும் கணிசமாக உண்டு. பாருக்குட்டி ஒன்றிரண்டு கதைகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கிறார்.

‘சலிப்புற்ற இலக்கிய வகைமையிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியில் வந்து எழுதியிருக்கிறேன். இவற்றை பரிசோதனைக்காக எழுதவில்லை. சக்திப்பூர்வமாக சொல்வதற்காக எடுத்துக்கொண்ட வடிவம் – அனுபானம்’ என்கிறார் போகன். ஹோமியோபதியிலும் மருந்தின் வீரியத்தைக் குறித்து இப்படியொரு அடிப்படை உண்டு. சுண்டக் காய்ச்சிய பால் போலத்தான்.

பாரதியார் தன் கவிதையொன்றில் ‘தேம்பற் பிசாசு’ என்று எழுதியிருந்ததை கதையொன்றில் குறிப்பிடுகிறார் போகன். இக்கதைகளிலும் அவ்வாறான ‘தேம்பற் பிசாசு’களையே போகன் நமக்குக் காட்டியிருக்கிறார். அவை தேம்ப மட்டும் செய்யவில்லை. புலம்புகின்றன, நகைக்கின்றன, வியக்கின்றன, திடுக்கிடுகின்றன, கண்ணீர் விடுகின்றன, தோன்றி மறைகின்றன.

முகநூலுக்காக அல்லது காட்சி ஊடகத்துக்காக எழுதப்படும் இந்த வகை இலக்கிய வடிவங்கள் தமக்கேயுரிய பலம், பலவீனம் இரண்டையும் கொண்டுள்ளன.

1.       சமகால ஊடகங்களுக்கான வடிவம் என்பதால் திறன்பேசியைக் கொண்டே வாசிக்க முடியும்.

2.       இலக்கிய வாசகர்கள் அல்லாத பொது பயனாளர்களையும் வாசிக்கச் செய்யும்.

3.       அச்சு ஊடகத்துக்கு வராத, திறன்பேசி பயனாளர்கள் முகநூல் வழியாக இவற்றை வாசிக்கலாம்.

4.       பிரசுரத்துக்காக காத்திருக்க வேண்டாம். நேரடியாக பதிவேற்றலாம்.

5.       பதிவேற்றிய சில நொடிகளில் அதற்கான எதிர்வினைகளை அறிய முடியும்.

6.       செம்மையாக்கம், சொற்களின் எண்ணிக்கை, பக்க அளவு போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது.

இவற்றின் பலவீனங்கள் எவை?

1.       பதிவுகள் குறைந்த ஆயுள் கொண்டவை. அதிகபட்சம் ஒரு நாளும் குறைந்தபட்சம் சில விநாடிகளும்தான்.

2.       யாரைச் சென்றடைகிறது என்பதைப் பற்றிய தெளிவின்மை.

3.       கிடைக்கும் எதிர்வினைகள் எழுதுபவனை பாதிக்கின்றன.

4.       எதிர்வினைக்கேற்ப தன் எழுத்தை மாற்றவேண்டிய கட்டாயம்.

5.       தீவிரத்தை நோக்கி அல்லாமல் கேளிக்கையை, கவன ஈர்ப்பை நோக்கியதாகவே எழுத்து மாறுகிறது.

இக் கதைகளின் தன்மைகளை, அது எழுதப்பட்டதன் நோக்கத்தை குறிப்பிடும்படியாகவே இத்தொகுப்பின் தலைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். ‘கடவுளின் இல்லம்’, ‘காலப் பறவை’, ‘வருடங்களுக்கு முந்தைய நிலவொளி’, ‘வான்கோவின் சகோதரர்கள்’, ‘உயிர்க் கயிறு’ போன்ற தலைப்புகள் இத் தொகுப்பில் உண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, ‘சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதின் பின்னணியை யோசிக்கலாம்.

சமகால ஊடகங்கள் தம் கதைகளுக்கு இடும் தலைப்புகளை யோசித்துப் பார்த்தால் இது புரியும். பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், கவன ஈர்ப்புக்கானதாகவும், உடனடியாக பார்க்கச் செய்வதாகவும் தலைப்புகள் இருக்கும். தொகுப்பின் இந்தத் தலைப்பும் இதே காரணங்களைக் கொண்டிருக்கிறது.

இவை சமகால ஊடகத்தில், முகநூலில் எழுதப்பட்ட கதைகள். சமகால ஊடகப் பயனாளர்களுக்காக எழுதப்பட்ட கதைகள். எனவே, இப்படியொரு தலைப்பில் இவை வெளி வருவதில் வியப்பேதுமில்லை.

இந்த எழுபத்தி ஏழு கதைகளைப் படித்து முடித்து சில மணி நேரங்களுக்குப் பிறகு எத்தனை கதைகள் நினைவில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்க்கலாம். மின்னல் தெறிப்புகள் போல சில கதைகள். உத்தேசமான வெளிச்சம்போல சில கதைகள். மத்தாப்புப் பொறிகளின் வெளிச்சம்போல சில கதைகள். இத் தெறிப்புகளும் பொறிகளும் வெளிச்சங்களும் விரைவில் காணாமல் போகின்றன. ஒளியாக வெளிச்சமாக அவை நீடிப்பதில்லை. நினைவில் தங்குவதில்லை.

நொடி நேரத் திடுக்கிடலை, புன்னகையை, மயக்கத்தை, கிளர்ச்சியை, வியப்பை, திகைப்பை, சிரிப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு இக்கதைகள் அவர்கள் எதிர்பார்க்கும் அனுபவத்தை நிச்சயமாகத் தரும். ஆனால், முகநூலில் எழுதப்பட்ட இக்கதைகளை சிறுகதைத் தொகுப்பாக அச்சு ஊடகத்தில் வாசிக்கும்போது அவ்வாறான நொடிநேர அனுபவம் மட்டும் போதுமானதாயில்லை.

இலக்கிய வடிவங்கள் காலத்துக்கேற்ப, ஊடகங்களுக்கு ஏற்ப மாறலாம். ஆனால், இலக்கியத்தின் நோக்கம் மாறாதது. இலக்கியத்தின் பணி, நொடி நேர உணர்வுகளை ஏற்படுத்துவதல்ல. நின்றெரியும் சுடரைப் போல ஒளி தருவது.

இத்தொகுப்பிலுள்ள ‘தொலைவின் ஒளி’, ‘நெஞ்சின் எலும்புகள்’, ‘பங்கு’, ‘புண்ணிய கரை’ போன்ற கதைகள் தருகின்ற ஒளியையும் வெளிச்சத்தையும் பிற கதைகள் தருவதில்லை. போகனால் இத்தகைய கதைகளை எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இவை. இதற்கு முந்தைய தொகுப்புகளிலும் இதுபோன்ற கதைகளை எழுதியுள்ளார். ஆனால், நின்றெரியும் சுடரைவிட மத்தாப்பு பொறிகளே போதும் என்ற சமகால ஊடகத் தேவையை மட்டும் கருத்தில்கொண்டதன்  விளைவுதான் இக்கதைகள்.

0

சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் – போகன் சங்கர்

வெளியீடு – யாவரும் பதிப்பகம்

டிசம்பர் 2025, பக்கங்கள் 202, விலை ரூ.260.

( 09.05.2026 கோவையில் Critical Revolutionaries அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரை )

 

  

Monday, 4 May 2026

மூன்று குணங்களால் ஓர் உலகம் – தி.ஜானகிராமன் சிறுகதைகள்


தி ஜாவின் சிறுகதைகளில் எனக்குப் பிடித்த சிறுகதைகள் என்றொரு பட்டியல் உண்டு. அதுபோலவே நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த கதைகள் என்று தனிப்பட்ட பட்டியலும் வரிசையும் இருக்கும். எல்லோருக்கும் பொதுவான பட்டியல் ஒன்றையும் உருவாக்க முடியும். அதில் எல்லோருக்கும் பிடித்த கதைகள் சில இடம் பெற்றிருக்கும். பாயாசம், சிலிர்ப்பு, குழந்தைக்கு ஜுரம், கடன் தீர்ந்தது, கோபுர விளக்கு, தவம் உள்ளிட்ட கதைகள் இடம் பெற்றிருக்கும்.

பதினாறாம் வயதில் முதல் சிறுகதையை எழுதிய தி ஜா 45 ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். மொத்தம்  112 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

அவருடைய சிறுகதை உலகம் மிகப் பரந்தது. விதவிதமான மனிதர்கள், வெவ்வேறு நிலங்கள். காவிரிக் கரையில் தொடங்கி சென்னை, பம்பாய், டில்லி என்று குறுக்கும் நெடுக்குமான நீண்ட பயணங்களைக் கொண்டது.

கணந்தோறும் நிறம் மாறும் மனித இயல்புகள் அனைத்தையும் காய்த்தல் உவத்தலின்றி திரைவிலக்கிக் காட்டும் கண்ணாடி அது. பல சயமங்களில் அந்தக் கண்ணாடியை அவர் நம் முன்னால் நிறுத்தியிருக்கிறாரோ என்று சந்தேகமும் பதற்றமும் பயமும்கூட எழும். நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கதையில் இதை உணர்ந்திருப்போம். அல்லது நமக்குத் தெரிந்தவர்களை, அண்டை வீட்டார்களை நமக்கு அது காட்டியிருக்கக்கூடும். அதனால்தான் அவை நமக்கு நெருக்கமான கதைகளாக, நம்முடைய கதைகளாக இன்றும் நினைவில் நிற்கின்றன.

உலகம் முக்குணங்களால் ஆனது என்கிறது சாங்கிய தத்துவம். சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களே மனிதனின் அடிப்படை இயல்புகளை வகுக்கின்றன. இவை மூன்றும் எந்தவொரு மனிதனிடத்திலும் சம அளவிலோ நிலையாகவோ இருப்பதில்லை. எந்த குணம் எப்போது தலையெடுக்கும் என்பதும் உத்தரவாதமில்லை.

திஜாவின் சிறுகதையுலகை இந்த முக்குணங்களின் புதிர் விளையாட்டு என்றே வகுக்கலாம்.

ஒரு வசதிக்காக அவரது 112 சிறுகதைகளையுமே இந்த மூன்று குணங்களின் அடிப்படையில் பட்டியிலட முடியும். அதே சமயத்தில் பல கதைகளும் எந்தவொரு குறிப்பிட்ட பகுப்பில் மட்டும் அடைபடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்குள் இடம் பெறும் வகையில் அமைந்திருப்பவை. மூன்று வகையிலுமேகூட அவற்றை அடையாளப்படுத்தவும் முடியும்.

பாயாசம் கதையின் சாமநாது, ‘அன்பு வைத்த பிள்ளைநாராயணசாமி, ‘பரதேசி வந்தான்வக்கீல் அண்ணா, ‘மறதிக்குதபால்கார தாத்தாச்சாரி, ‘குழந்தைக்கு ஜுரம்பஞ்சாபகேசன், ‘கண்டாமணிமார்க்கபந்து, ‘பிடி கருணைசெட்டியார், ‘கங்கா ஸ்நானம்துரையப்பா, ‘சுளிப்புதிருமலை ஆசிரியர்,‘கிழவரைப் பற்றி ஒரு கனவுமகன், ‘நடேசண்ணாகிராமத்து மனிதர்கள், ‘மேரியின் ஆட்டுக்குட்டிசெல்லப்பா,  ‘வேறு வழியில்லைகிழவர் என்று எல்லோருமே தமோ குணம் கொண்டவர்கள்.

இதற்கு மாறாக, தமக்கு இன்னல் தந்தவர் என்பதை பொருட்படுத்தாமல் உதவும் குழந்தைக்கு ஜுரம்சரவண வாத்தியாரும் தீ விபத்தில் தொழிலையும் உறவையும் இழந்த நிலையிலும் சொன்ன வார்த்தைக்காக நம்பி வந்தவருடன் ஒரு நாளை எந்தச் சலனமும் காட்டாமல் செலவிடும் யோஷிகியும் நண்பரின் மனைவியின்  மாங்கல்யத்துக்காக நோன்பிருக்கும் மூர்ச்சைநாகராஜபிள்ளையும் பிடில் வித்வானுக்காக கைவசம் இருக்கும் ஐந்து ரூபாயையும் தரத் தயாராகும் கள்ளிகிருஷ்ணனும் சத்துவ குணம் மிக்கவர்கள். இவர்களது இந்த சத்துவ குணந்தான் தமோ குணத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்துகிறது. சமன் குலைவிலிருந்து உலகைக் காப்பாற்றுகிறது.

இவர்களைத் தவிர பல கதைகளிலும் உள்ள இணை கதாபாத்திரங்கள் அனைத்துமே ரஜோ குணம் கொண்டவை. உதாரணமாக, ‘தூரப் பிரயாணம்பாலி, ‘வேறு வழியில்லைஞானம்,  ‘சண்பகப் பூகிழவி, ‘பசி ஆறிற்றுஅகிலாண்டம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் ஒரு சமயம் தமோ குணத்தாலும் வேறொரு சமயம் சத்வ குணத்தாலும் அலைக்கழிப்புக்குள்ளாகும் கதாபாத்திரங்களையும் திஜாவின் கதைகள் நெடுகக் காணமுடியும். லீவு போட்டிருக்கும் நாளன்று முன்னமே அச்சகத்துக்கு வந்து ஒரு நோட்டைத் திருடி கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் ஸ்ரீராம ஜெயம்ராகவாச்சாரி, மனைவியின் மீது சந்தேகம்கொண்டு அவளைப் பழிவாங்க மறுமணம் செய்யத் தயாராகும்பொய்கிட்டப்பா ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.

ரசிகனும் ரசிகையும் மார்க்கண்டம் ஞானமுள்ளவர், வித்தை அவர் குரலில் உண்டு. ஆனால் அவரது ரஜோ குணமேரசிகையிடம் தலைகுனியச் செய்கிறது. ‘ரசிகையின் நிலையோ இதற்கு நேர்மாறானது.

கோதாவரிக் குண்டுகங்காபாயும் தத்துவும் செய்யும் காரியங்கள் ரஜோ குணத்தினால் தூண்டப்படுவது. ஆனால், அவர்கள் அந்தந்த கணத்துக்கானத் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அதில் சரி, தவறு என்று எதையும் யோசிப்பதில்லை.

யாராக இருந்தபோதும் அவர்களது குணம் எப்படி அமைந்தபோதும் தி.ஜா எந்தத் தீர்ப்பையும் சொல்வதில்லை, குறிப்பால்கூட உணர்த்துவதில்லை. முக்குணங்களும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பும் தன்மையால்தான் உலகம் முழுமையடைகிறது என்பதை உணர்ந்தவர்போல அந்தந்த கணத்தின் நியாயங்களுடன் அல்லது அநீதிகளுடன் கதாபாத்திரங்களை உலவவிடுகிறார். அவரது கதையுலகின் அசல் தன்மைக்கு, யதார்த்த நேர்த்திக்கு, அனைவரையும் உள்ளிழுக்கும் ஈர்ப்புக்கு இதுவே முதன்மையான காரணம்.

பஞ்சாங்கம் இல்லாமல் சரவண வாத்தியார் பூரணமடைவதில்லை. மார்த்தாண்டம் இல்லாமல்ரசிகையின் குணம் முழுமடைவதில்லை.

கலையும் கபடும், தர்மமும் தடித்தனமும் கைகோர்த்து வளர்ந்த பிரதேசம் காவேரி டெல்டாஎன்ற அவர் சொல்வது இந்த மூன்று குணங்களின் தாக்கங்களைத்தான்.

இடத்தையும் சூழலையும் பொறுத்தே அந்தந்த குணங்கள் தலைதூக்குகின்றன. ஏதேனுமொன்று மீறி தலையெடுக்கும்போது அந்தக் கணத்தில் அது மனிதர்களையும் உறவுகளையும் சூழலையும் குலைத்துப்போடுகிறது. தற்காலிகமான ஒரு சுழலை உருவாக்குகிறது. அது கைமீறிப் போகாமல், பெரும் சேதாரத்தை விளைவிக்காமல் இருக்கும்பொருட்டு அதற்கு எதிரான குணம் உள்ளே வந்து சமன்படுத்துகிறது.

தீர்மானம்கதையை பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். பத்து வயது விசாலி. மணம் முடித்து இன்னும் கணவன் வீட்டுக்குப் போகவில்லை. திடீரென ஒரு நாள், அப்பா வீட்டில் இல்லாதபோது சோழி ஆடிக்கொண்டிருக்கும் அவளை பிள்ளை வீட்டார் வந்து கட்டாயமாக அழைக்கிறார்கள். அத்தை வேண்டாம் என்று சொன்னபோதும் அவள் புறப்பட்டுப் போகிறாள். வீட்டுக்கு வரும் அப்பா, குழந்தை சாப்பிடாமல் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தூக்குவாளியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார். வழியில் வண்டியை நிறுத்தி அவளுக்குத் தருகிறார். அவள் சாப்பிட்டுவிட்டு திருப்பித் தர மீதிச் சோற்றை எறிந்துவிட்டு திரும்புகிறார்.

முக்குணங்களும் சரியான விகிதாச்சாரத்தில் ஒருவருக்கு அமையுமானால் அவர் ஒரு லட்சிய மனிதனாக விளங்க முடியும். ஆனால், உலகம் முழுக்க லட்சிய மனிதர்கள் மட்டுமே நிறைந்திருந்தால் அதைத் தாங்க முடியாது.

வரலாறு நெடுக யோகம், தியானம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம், கலை என பல்வேறு கருவிகளும் அமைப்புகளும் ஏற்பாடுகளும் தொடர்ந்து முயல்வது மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று குணங்களையும் சமன்படுத்தவும் முடிந்தவரை சத்துவ குணத்தை மேன்மைப்படுத்தவும்தான். ‘தன்னை அறிதல்என்பதன் மையம் அதுதான்.

குழந்தைகளிடம் தன்னியல்பில் சத்துவ குணமே மேலோங்கியிருக்கும். வளருந்தோறும் இந்த குணங்கள் கேடுகளாக திரிபடைகின்றன. தி.ஜா தன்னுடைய கதைகளில் மிகத் துல்லியமாக இதனைப் புலப்படுத்தியிருக்கிறார்.

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்அக்கணாக்குட்டியும், ‘சத்தியமாரமணனும், ‘சிலிர்ப்புகாமாட்சியும், ‘பாப்பாவுக்குப் பரிசுபாப்பாவும், ‘தங்கம்ராமலிங்கமும் உலகின் அன்றாடங்களால் அவற்றின் பல்வேறு நல்லவை அல்லவைகளால் களங்கப்படாத தூயவர்கள்.

அக்கணாக்குட்டியும் ரமணுனும் காமாட்சியும் ராமலிங்கமும் தம்மளவில் களங்கமற்று இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்திருப்பவர்களையும் அவ்வாறான மனநிலையினுள்ள இழுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. ‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப்பொணமேஎன்று அப்பா திட்டும்போது அக்கணாக்குட்டி மறுக்கிறான். செய்தித்தாளைக் காட்டி அது ஒட்டும் வியாதியல்ல என்று உறுதியாகச் சொல்கிறான். அவரும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பிக்கிறார்.

காலண்டரை எதிர்வீட்டுப் பிள்ளையிடம் பறிகொடுத்துவிட்டு பதிலாக ஒரு ரப்பரை வாங்கிக்கொண்டு வரும் ரமணனைப் பார்த்து அப்பா சொல்கிறார்இந்த மாதிரி தெய்வங்கள்ளாம் இந்தப் பூமியிலே ஏண்டி பிறக்கிறதுகள்?”.

நண்பனைக் காப்பாற்றபோய் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு எம்டன் செத்துப்போகும்போது தி.ஜா சொல்கிறார்அதான் பெரியவனா ஆகாமலே தப்பிச்சுனுட்டான்.”

வளரும்போது குழந்தைகளிடமிருந்து காணாமல்போகும் அல்லது திரிபடையும் இந்த சத்துவ குணமே முதுமையில் கனிகிறது. இந்தக் கனிவைத்தான் தி.ஜா பல கதைகளிலும் முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

பெண்களைக் குறித்தே தி.ஜா பிரமாதமாய் எழுதியிருக்கிறார் என்று பொதுவான அபிப்ராயம் உண்டு. ஒரு நோக்கில் அது சரிதான். ஆனால், அவரது சிறுகதைகளைக் கூர்ந்து வாசிக்கும்போது தெரிய வரும் இன்னொரு உண்மை, பெண்களுக்கு நிகராக அல்லது அவர்களைவிடவும் சற்று கூடுதலாக முதியவர்களைக் குறித்து எழுதியிருக்கிறார் என்பதுதான்.

தலைமயிர் தங்க நிறமாக மாறிற்று. பொதுவாக நரை என்றுதான் அதற்குப் பெயர். ஆனால் அவளைப் பற்றிய வரையில் நரையென்றா அதைச் சொல்ல முடியும்? வெள்ளையாகப் பூக்கவில்லை அவள் தலை. பழுத்து வெளிர் மஞ்சளிட்ட பூவரசிலை போல் மாறிவிட்டதுஎன்றுதான் அழகின் முதிர்ச்சியையும் சித்தரிக்கிறார் தி.ஜா.

கைவிடப்பட்ட முதியவர்களைக் குறித்த சித்திரங்கள் தொடர்ந்து தி.ஜாவின் கதைகளில் இடம்பெற்றுள்ளன. முதல் தொகுப்பிலுள்ளவேண்டாம் பூசனிகதையே இதன் தொடக்கம். பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இறுதிக் காலத்தில் ஒத்துழைக்காத உடலுடன் அணையாத உயிரிச்சையின் வதையுடன் காலம்கழிக்க நேரும் அவர்களது தவிப்பை பல கதைகளிலும் அழுத்தமாகக் காட்டியுள்ளார். ‘பிள்ளை வைத்திருந்த அன்பு ஒவ்வொரு கிழிசலிலும் எட்டிப் பார்த்தது’ ( அன்பு வைத்த பிள்ளை ) என்ற ஒரே வரியில் அவளது நிலையை நெற்றியில் அடித்தாற்போல திஜா சொல்லிக் காட்டிவிடுகிறார். மனைவியை இழந்த நிலையிலும் வளர்த்து படிக்க வைத்து 83வது வயதில் தள்ளாமையின் காரணமாக தன்னிடம் வந்து சேரும் அப்பாவை தன்னிடம் வைத்துக்கொள்ள மனமின்றி ஊருக்கு அனுப்புகிறான் பிள்ளை, திரும்பிச் செல்வதற்கான ரயில் கட்டணத்தை அவரிமிருந்து வசூலித்துக்கொண்டு. (கிழவரைப் பற்றிய ஒரு கனவு). வயிற்றுப் பசிக்காக எந்த அவமானத்தையும் பொருட்படுத்தாது வெயிலில் அலைந்து ஒரு காலசேட்பத்துக்காக யார் வீட்டு வாசலிலோ காத்திருக்கிறார்கள் பவபூதிகள். இறந்துபோன தன் மனைவியின் நினைவிலிருந்து மீள முடியாத வெம்மையுடன்வெந்நீரில் சர்க்கரை கலந்து தரச்சொல்கிறார்வெங்கு. இந்த நிலைக்கு ஆளாக்கிய தத்தம் பிள்ளைகளைக் குறித்து இவர்களுக்குப் புகார்கள் இருந்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை. ஆனாலும் அப்படி ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் கனிவுதான்.

வயதானபோதும் கனியாத, பொல்லாத கிழங்களுக்கும் திஜா கதைகளில் இடம் அளித்திருக்கிறார். மரம் பழுத்த இலைகளை உதிர்ப்பதுபோல கயமையை சின்னத்தனங்களை உதிர்க்காது செதில்களைப் போலச் சேர்த்து வைத்திருக்கும் கிழவர்களை அவர் கதைகளில் காண முடியும். சந்தர்ப்பவசமாக நேர்ந்த தவறை தானாகவே சொல்லியபோதும் அவளை மன்னிக்கும் மனமில்லாமல் சாகும்வரை தனிமையை, புறக்கணிப்பை, துயரைச் சுமக்க வைக்கிறார் வயது ஏறி உடல் முதிர்ந்தபோதும் மனம் கனியாததபால்காரர்’ (மறதிக்கு). மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவளைப் பழிவாங்கவென வறுமைக்கு விலைகொடுத்து இரண்டாம் தாரமாய் ஒரு இளம்பெண்ணை மணந்துஇழந்த வாலிபத்தைத் திரும்பப் பெறுவதற்காக மார ரஸத்தை உபயோகித்து மாண்டுபோகிறார் கிருஷ்ணசாமி (பொய்). சோப்பு போட்டு முகம் கழுவி எண்ணெயிட்டு தலை சீவும் இளம் மனைவியைப் பார்த்துஎன்னடி தளுக்கு சுந்தரி, யாருக்காகடி இதெல்லாம்என்று கேட்டு அடித்து நொறுக்குகிறார் நரசிம்மன் ( வேறு வழியில்லை ). தம்பியின் மகளது திருமண பைவத்தைக் காணப் பொறுக்காத மனத்தின் அவலமே சாமநாதுவை பாயாசத்தைக் கவிழ்க்கச் செய்கிறது. வாடகைக்குக் குடியிருக்கும் குடும்பத்தை காலிசெய்வதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுதும் குறும்புக்காரக் கிழவர் இன்னொரு விதம் ( போர்ஷன் காலி ).

முதுமை என்பது ஒருவிதத்தில் குழந்தைமைக்குத் திரும்புதல். அதுவரையிலான அனைத்து பாடுகளையும் சுமைகளையும் கீழிறக்கி வைத்துவிட்டு உலகின் விநோதங்களை வேடிக்கைப் பார்க்கும் நிலை. ஆயுள் கூடுந்தோறும் கல்லாகும் மரம்போல உள்ளுக்குள் இறுகுவதும் பிடிவாதமும் சினமும் தலைக்கேறி எல்லாவற்றையும் எடுத்தெறிவதும் எதுவுமில்லை என்று உள்ளுக்குள் அடங்கிக் கிடப்பதுமாய் பல்வேறு நிலைகளில் ஏறியும் இறங்கியும் தடுமாறும் அவலம்.

உடலும் உயிரும் மனமும் முக்குணங்களும் ஒன்றுகலந்து கனிந்து புத்துயிர்ப்புடன் நடமாடும் முதுமையின் சித்திரமே ஐந்து தலைமுறைகளைக் காட்டும்துணை’. கதையில் வரும் முதியவர்களின் பெயர்களைச் சுட்டும்போதே தி.ஜாவின் புன்னகையை உணர முடிகிறது. லேடி கிழவர், வயது 102. இருபத்தாறு வருஷம் வேலை பார்த்து ஐம்பத்தாறு வருஷமாய் பென்ஷன் வாங்குபவர். அவரது பிள்ளை சின்னக் குழந்தை, வயது 79. மூத்த தலைமுறைகளின் ஆரோக்கியம், மனப்போக்கு, அக்கறை ஆகியவற்றுடன் இன்றைய தலைமுறையின் பொக்கான உடல்நிலை, தன்னிச்சையான போக்கு என்று எல்லாவற்றையும் அழுத்தமாகச் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பிலும் தி.ஜாவின் முத்திரையைப் பார்க்க முடியும்.

மீண்டும் நாம் நமக்குப் பிடித்தமான தி.ஜாவின் கதைகளுக்கு வருவோம். இத்தனை கதைகளுக்கு நடுவில் அவை மட்டும் ஏன் நம் அனைவருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன?

கோதாவரிக் குண்டு’, ‘சிலிர்ப்பு’, ‘கோபுர விளக்கு’, ‘குழந்தைக்கு ஜுரம்’, ‘பாயாசம்’, ‘கடன் தீர்ந்ததுஎன்று தி.ஜாவின் சிறந்த, நமக்குப் பிடித்தமான கதைகளை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கலாம்.

முக்குணங்களும் ஒன்றையொன்று மீறாது தமக்குள்ளாகவே சமநிலையுடன் ஒன்றை அடுத்தது பூர்த்திசெய்துகொள்ளும் அபூர்வ மனிதர்களைக் கொண்டிருக்கும் கதைகள் நமக்குப் பிடித்துப்போகின்றன.

கலையும் கபடும், தர்மமும் தடித்தனமும் கைகோர்த்து வளர்ந்த பிரதேசம் காவேரி டெல்டாஎன்று தி.ஜா சொல்லியிருக்கிறார் என்று கட்டுரையின் நடுவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கலையின் வழியே கபடுகளை நீக்குவதும், தடித்தனங்களை விரட்டி தர்மத்தை வெளிப்படுத்துவதுமே அவரது கதைகளின் இலக்காக இருந்திருக்க வேண்டும்.

0

(  சேலம் பெரியார் பல்கலைக் கழகமும் சாகித்திய அகாதமியும் இணைந்து நடத்திய தி.ஜானகிராமன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை )

  

சரஸ்வதி ராம்நாத் - மொழிபெயர்ப்பு முன்னோடி

  1 முதலில், தர்பாரி ராகம் நாவலைப் பற்றி. தர்பாரி ராகம் நாவலை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். இந்திய நாவல்களின் வரிசையை எழுதி வைத்த...