0
கோவையில் ‘அருவி’ என்றொரு அமைப்பு செயல்பட்டு
வந்தது. சீனிவாசன், சூரி, சுரேஷ் குமார் ஆகிய மூன்று நண்பர்கள் ஒருங்கிணைத்தனர். இரண்டு
மாதங்களுக்கு ஒரு நிகழ்ச்சி. இலக்கியம் மட்டுமல்லாமல் பிற கலை, அறிவுத்துறை சார்ந்த
முக்கியமான ஆளுமைகள் கலந்துகொண்டனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில்தான்
விட்டல்ராவை முதன்முதலாக சந்தித்தேன். ‘தமிழகக் கோட்டைகள்’ குறித்த உரை. விட்டல்ராவ்
எடுத்த புகைப்படங்களுடனான காணொளியுடன் கூடிய நிகழ்ச்சி. முன்பே அவருடைய நாவல்கள் ‘போக்கிடம்’,
‘வண்ண முகங்கள்’ இரண்டையும் வாசித்திருந்தேன். ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் அவருடைய
இன்னொரு பக்கத்தையும் அறிய முடிந்தது. தமிழகத்திலுள்ள பல்வேறு கோட்டைகளுக்குச் சென்று
அவற்றைக் குறித்து எழுதிய அவரது ஆர்வமும் தகவல்களை சொன்ன விதமும் அவரை நெருங்கச் செய்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது பிற
நாவல்கள், சிறுகதைகளைத் தேடியெடுத்து வாசித்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு, இதே அரங்கில்
நடைபெற்ற ‘பாவண்ணனைக் கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியின்போது மீண்டும் அவரைச் சந்திக்க வாய்த்தது.
ஒரே அறையில் தங்க நேர்ந்தது. நிறைய உரையாடுவதற்கான சந்தர்ப்பம். எழுத்தைத் தவிர பிற
துறைகளில் அவரது ஆர்வம் குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.
அவர் எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்த
செய்தி. 10 நாவல்கள், 5 தொகுதிகளாக 140 சிறுகதைகள், வெவ்வேறு துறை சார்ந்த 12 கட்டுரை
நூல்கள் என்று கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக அழுத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
விட்டல்ராவ் ஒரு ஓவியர். சென்னை கவின்
கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்றவர். அவரது ஓவியங்கள் பல்வேறு கண்காட்சிகளில் இடம்
பெற்றுள்ளன. எனவே, தனது புனைவுகள் கட்டுரைகள் என சந்தர்ப்பம் வாய்க்கும் இடங்களிலெல்லாம்
ஓவியங்களைக் குறித்து அவர் குறிப்பிடத் தவறுவதில்லை.
அண்மையில் சென்னை கோட்டை அருங்காட்சியகத்துக்கு
சென்றேன். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிலாந்திலிருந்து வந்து இந்தியாவை ஓவியமாக வரைந்தவர்களில்
முக்கியமானவர்கள் தாமஸ் டேனியலும் வில்லியம் டேனியலும். தமிழகத்திலுள்ள பல முக்கிய
இடங்களை அவர்கள் ஓவியமாக வரைந்துள்ளனர். சென்னை கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை
பெரிய கோயில், மாமல்லபுரம், ராயக்கோட்டை, சேலம் சங்ககிரி கோட்டைகள், மதுரை நாயக்கர்
மகால் என்று பல இடங்களுக்கு சென்று ஓவியங்களை வரைந்துள்ளனர். அந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில்
உள்ளன. இவர்களைப் பற்றியும் இவர்கள் தங்கள் படங்களை அச்சிடப் பயன்படுத்திய நுட்பம்
பற்றியும் ‘தமிழகக் கோட்டைகள்’ நூலில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
அதேபோல சேலத்தைச் சேர்ந்த நவீன ஓவியரான
கே.எம்.கோபால் வரைந்த ‘அர்த்தகணேஸ்வரி’ என்ற தாந்திரீக உலோகப் புடைப்பு படைப்பை குறித்து
எழுதியுள்ள குறிப்பு மிக முக்கியமானது.
ஒருமுறை, சென்னை அண்ணா சாலையில், அப்போது
மவுண்ட் ரோடு, அலங்கார் தியேட்டருக்கு அருகில் நடைபாதையில் இருந்த பழைய புத்தகக் கடையில்
வழக்கம்போல பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். புத்தகக் கடை வைத்திருந்த வாய் பேச முடியாதவர்
ஆவேசமாகக் கைகளை அசைத்து தியேட்டர் பக்கமாய் பார்க்கும்படி சொல்கிறார். தியேட்டர் வாசலில்
கமலஹாசனின் பெரிய கட் அவுட். கீழே பிரமாண்டமான பேனர். இந்த இரண்டையும் பார்த்து ஓவியர்
ஒருவர் தன் குறிப்பேட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார். வரைகிறார. நடைபாதை ஓரத்தில்
உள்ள சிமெண்ட் ஜாலியில் சாய்ந்தபடி வரைவதும் எழுதுவதுமாக இருக்கிறார். அடர்ந்த நரைமுடி,
தாடி மீசை, இறுக்கமான ஜீன்ஸ். பகல் பனினொன்றரை மணிக்கு சாலை பரபரப்பாக இருக்க இவர்
எதையும் யாரையும் கண்டுகொள்ளாமல் காரியத்திலே கண்ணாக இருக்கிறார். அவரையும் வேறு யாரும்
கண்டுகொள்ளவில்லை. அவர் தன் வேலையை முடிக்கும் வரை அருகில் சென்று கவனிக்கிறார் விட்டல்ராவ்.
வேலை முடிந்தவுடன் பேச்சு கொடுக்கிறார் “மிஸ்டர் ஹூசைன்?” அவர் நிமிர்ந்து பார்த்து
“ஆமாம். நான்தான். என்னை உங்களுக்குத் தெரியுமா?” உற்சாகத்துடன் பேச்சு நீள்கிறது.
வேறு தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறார். அங்குள்ள பேனர்களைப் பார்த்து
குறிப்பேட்டில் வரைந்து கொள்கிறார். பிறகு ஒரு ரிக்ஷாவில் ஏறி விடைபெறுகிறார். இந்தியாவின்
புகழ்பெற்ற எம்.எஃப்.ஹூசைன் சென்னை மவுண்ட் ரோடில் ஓவியம் வரைந்த நாள் அது.
ஓவியம் குறித்து பேசும்போது இன்னொரு
செய்தியையும் அறிய முடிந்தது. கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு ஓவியரும்கூட.
தான் வரைந்த நீர்வண்ண ஓவியங்களை பொங்கல் பண்டிகையின்போது தன் வீட்டில் அவர் காட்சியாக
வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அத்தோடு அவர் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி மிக்கவர்
என்றொரு செய்தியும் உண்டு.
‘ஓவியக் கலை உலகில்’ என்ற அவரது புத்தகம்
மிக முக்கியமானது, சிறப்பானதும்கூட. தமிழில் நவீன ஓவியங்கள் குறித்து எழுதப்பட்ட முதல்
நூலாக இருக்கவேண்டும். இத்தாலிய மறுமலர்ச்சி காலம் தொடங்கி ஜென் புத்திச காலம் வரைக்குமான
உலக அளவில் குறிப்பிடத்தக்க ஓவியர்கள், ஓவியங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது
இந்தப் புத்தகம். 1979இல் வெளியான இந்த நூலில் லியோனார்டா டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ,
ரஃபேல், ரெம்ப்ரேண்ட், வெர்மிர் உள்ளிட்டோரைப் பற்றியும் அவர்களது முக்கியமான ஓவியங்களைப்
பற்றியும் எழுதியுள்ளார்.
அவர் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட. இப்போதும்
தோளில் கேமராவுடன்தான் பயணம் செல்கிறார். பழைய எஸ்.எல்.ஆர் கேமராவைக் கொண்டு எடுத்த
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை ஆல்பமாக தொகுத்து வைத்திருக்கிறார். பிறகு டிஜிட்டல்
முறையில் எடுக்கப்பட்ட படங்களையும் கோப்புகளில் சேமித்திருக்கிறார். அவரது கட்டுரைகளுக்கும்
நூல்களுக்கும் இந்தப் படங்களே ஆதாரமாக அமைந்துள்ளன.
அத்துடன் விட்டல்ராவ் சினிமா ஆர்வலர்.
75 வருட காலமாக சினிமா பார்த்து வருபவர். தமிழ், இந்திய, உலக சினிமாவைக் குறித்து அவருக்கு
ஆழமான அனுபவமும் அறிவும் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் தொடக்க காலம் முதல் இன்று
வரையிலான பயணம் என்றே கூறலாம். சேலம் மாடர்ன் தியேட்டர் உருவான காலத்திலிருந்து இன்று
வரை சினிமாவுடனே அவரது காலமும் தொடர்கிறது. தன்னுடைய நான்கு வயதில், புகலூரில் துணிக்
கூடாரத்தில் (டென்ட்) ‘கண்ணகி’ படத்தை பார்ப்பதில் தொடங்கியுள்ளது அவரது சினிமா அனுபவம்.
கூடாரம், ஓலைக் கொட்டாய், பழைய பாணி தியேட்டர்கள், நவீன ரக தியேட்டர்கள். திரைப்படச்
சங்கங்கள், அயலக தூதரக திரை விழாக்கள், ஃபிலிம் பெஸ்டிவல்கள் என்று திரைப்படங்களைக்
காணும் சாத்தியங்கள் உள்ள எல்லா வழிகளிலும் அவர் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். அன்று தியேட்டர்களில் பார்க்கக் கிடைத்த அமெரிக்க,
ஐரோப்பிய படங்களும் அவற்றைக் குறித்து வெளிநாட்டு இதழ்களில் வாசிக்க நேர்ந்த கட்டுரைகளும்
புத்தகங்களும் அயல்நாட்டு சினிமா குறித்த அவரது பார்வைக்குக் காரணங்களாய் அமைந்துள்ளன.
அதேபோல, இந்திய சினிமாவையும் அவர் தொடர்ந்து
கவனித்திருக்கிறார். மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி படங்களைக் குறித்தும்
அவ்வப்போது எழுதியிருக்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றியும்
தெரிந்து வைத்திருக்கிறார்.
கன்னட சினிமாவைக் குறித்து அவர் எழுதிய
நூல் ‘நவீன கன்னட சினிமா’. கன்னட திரையுலகில் புதிய அலையை உருவாக்கிய எட்டு இயக்குநர்களைப்
பற்றிய நூல். கிரீஷ் கர்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த்,
பட்டாபி ராம ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி ஆகியோரது படங்கள் கன்னடத் திரையுலகில்
எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்று விரிவாக அலசிய நூல். கன்னட சினிமா குறித்து எழுதப்பட்ட
முதல் புத்தகமும் அதுவே. அண்மையில் நல்லதம்பி
அவர்களால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
‘சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்’,
‘தமிழ் சினிமாவின் பரிணாமங்கள்’, ‘நவீன கன்னட சினிமா’, ‘பயாஸ்கோப்காரன்’ ( புக் டே
இதழில் வெளியான தொடர் ) ஆகிய சினிமா குறித்த பிற புத்தகங்களும் முக்கியமானவை.
சினிமா நூல்களில் இவர் கதையையோ, சுருக்கத்தையோ
மட்டும் எழுதுவதில்லை. சினிமா தொழில்நுட்பங்கள், இசை, ஒலிப்பதிவு, கேமரா கோணங்கள் என்று
எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே அதன் சிறப்புகளை எழுதுகிறார்.
இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள
தொடர்பு, ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கில
சினிமாக்கள் என்று பல கோணங்களிலும் திரைக் கலையை அவர் அணுகியுள்ளார்.
வரலாறு அவருக்கு பிடித்த இன்னொரு துறை.
ஓவியம், கட்டடங்கள், கோயில்கள், சினிமா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் அவர் வரலாற்றுடன்
தொடர்பு படுத்தியே பார்க்கிறார். ஆகவே, இயல்பாகவே வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆழக்
கற்கும் நோக்கையும் காண முடிகிறது. அவரது புனைவுகள், புனைவு அல்லாத எழுத்துகளிலிருந்து
வரலாற்றை பிரிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அவரது எல்லா எழுத்துகளிலும் வரலாறு
தவிர்க்க முடியாத செல்வாக்கை செலுத்திருயிருக்கிறது.
‘தமிழகக் கோட்டைகள்’ தமிழில் வெளிவந்துள்ள
முக்கியமான ஒரு நூல். நாமக்கல் தொட.ங்கி கிருஷ்ணகிரி, சங்ககிரி, ஒசூர், செஞ்சி என நகர்ந்து
இறுதியில் சீரங்கப்பட்டணத்தில் முடிகிறது. சிறு வயதில் தொடங்கி வாழ்வின் பல்வேறு பருவங்களில்
காண வாய்த்த கோட்டைகளையும் அவற்றை பார்த்த அனுபவங்களையும் மிகச் சுவையாக சித்தரித்திருக்கிறது.
தொல்பொருள் துறை, ஆவணக் காப்பகம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பெற்ற தகவல்களை மட்டும்
சொல்வதல்ல இது. ஒவ்வொரு கோட்டையுடனும் தொடர்பான அத்தனை சம்பவங்களையும் செவி வழிக் கதைகளையும்
கட்டுமானத் தொழிற்நுட்பங்களையும் இணைத்து சொல்லியிருக்கும் விதம் மிக முக்கியமானது.
இந்த நூலை நாம் ஒரு புனைவு இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வத்துடனும் சுவையுடனுமே வாசிக்க
முடியும். இந்த வகையில் தமிழில் இதுபோல இன்னொரு நூல் இல்லை.
இதற்கு இணையான இன்னொரு நூல் ‘வாழ்வில்
சில உன்னதங்கள்’. சென்னையில் மூர் மார்கெட் என்ற இடம் இருந்தது என்பதே இன்றைய தலைமுறைக்குத்
தெரியாது. அப்பா அம்மாவைத் தவிர எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று சொல்லுவார்கள்.
1900ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1985ஆம் ஆண்டு தீக்கிரையானது. இந்தோசார்சனிக் பாணியில்
கட்டப்பட்ட மூர் மார்கெட் பழைய புத்தகங்கள், இசைத்தட்டுகள், பழம்பொருட்கள் ஆகியனவற்றை
கொண்ட முக்கியமான ‘குஜிலி’ அங்காடியாக விளங்கியுள்ளது. அங்கிருந்த பழைய புத்தகக் கடைகளைப்
பற்றி, முருகேசன், நாய்க்கர், ஐரே போன்ற வியாபாரிகளைப் பற்றியும் வியாபார நடவடிக்கைகள்
குறித்தும் விட்டல் ராவ் எழுதியுள்ள குறிப்புகள் பெருமதி மிக்கவை.
சென்னையில் மூர் மார்கெட்டிலும் பிற
இடங்களிலும் இருந்த பழைய புத்தகக் கடைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை.
ஒவ்வொருவரும் துல்லியமான கதாபாத்திரங்கள். மயிலாப்பூர் ஆழ்வார், மவுண்ட் ரோடு தர்கா
அருகிலிருந்த அப்துல் கரீம் பாய், முர்ரேஸ் கேட் சாலை மூர்த்தி, மயிலாப்பூர் லஸ் மூலை
முருகேசன், பாரத் இன்சூரன்ஸ் கட்டடம் நடைபதை ஊமையன் என்று ஒவ்வொருவருடனும் விட்டல்ராவுக்கு
ஆழமான நட்பு இருந்துள்ளது.
பழைய புத்தகக் கடைகளில் அவர் சேகரித்திருக்கும்
பல்வேறு அயல்நாட்டு இதழ்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது. தேடித் தேடி சேகரித்திருக்கிறார்.
சேகரித்தது மட்டுமல்ல, ஒவ்வொரு இதழையும் கரைத்துக் குடித்திருக்கிறார்.
தமிழின் முன்னணி இதழ்களுக்கு மாதிரியாய்
அமைந்த அமெரிக்க வார இதழ் கோலியர்ஸ், ( ஒரு பக்க கதைகள் ) த சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்,
டைம், லைஃப், ஸ்பேன், பிளேபாய், இல்லஸ்ட்ரேட்
வீக்லி, சோவியத் லிட்டரேச்சர், ஏரியல் ( இஸ்ரேல் ), ஓப்சர் ( பல்கேரியா ), என்கவுண்டர்
( லண்டன் ), இம்பிரிண்ட் ஆகிய இதழ்களை தேடித் தேடி சேகரித்துப் பாதுகாத்த கதைகளை இன்றைக்கு
வாசிக்கும்போது வியப்பாக உள்ளது. தொலைப்பேசி நிறுவனத்தில் வேலை என்பது ஒரு சாக்குதான்.
மற்றபடி இவர் இப்படி நடைபாதைகளிலும் பழைய புத்தகக் கடைகளிலுமே திரிந்திருக்கிறார் என்று
தோன்றுகிறது.
குறிப்பிட்ட சில புத்தகங்களை, இதழ்களை
கடைகளில் தேடி அலைந்த கதைகளை சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
ஸ்டான்லி ஓல்பிரெட் என்பவர் எழுதிய நாவல்
‘இராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ ( Nine hours to Rama ). காந்தியை கொல்வதற்கு முன்பு
நாதுராம் கோட்ஸே மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் ஒன்பது மணி நேரமே இதன் களம்.
மார்க் ராப்சன் என்பவர் இதை திரைப்படமாக்கினார். பிளிட்ஸ் பத்திரிக்கையில் கே.ஏ.அப்பாஸ்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியதைத் தொடர்ந்து படமும் நாவலும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.
இந்த நாவலை மூர் மார்கெட் நாயக்கர் கடையில் தற்செயலாகப் பார்க்கிறார். மிகுந்த ஆர்வத்துடன்
ஒரு ரூபாய்க்கு வாங்கி பரபரப்புடன் படிக்கிறார். நாவல் அவரை கவரவில்லை. இதற்குப் போய்
இத்தனை ஆர்ப்பாட்டமா என்று ஏமாற்றம். அவரது அலமாரியில் ஒதுங்குகிறது நாவல். அதே சமயத்தில்
காந்தியின் மீது சினிமாக்காரர்களின் கவனம் குவிகிறது. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர்
கட்டுரை எழுதுவதற்காக இவரிடமிருந்து இரண்டு காந்தி புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்கிறார்.
அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார். இரண்டில் ஒரு புத்தகம் மட்டுமே சிறிது காலம் கழித்து
திரும்பி வருகிறது. தடைசெய்யப்பட்ட நாவல் ‘ராமனுக்கு ஒன்பது மணி நேரம்’ அத்துடன் கையைவிட்டுப்
போய்விட்டது.
இந்த குறிப்புகளுக்கு நடுவே அழகான சிறு
கதைகள் சில உண்டு. உதாரணமாக, பழைய புத்தகக் கடை பாய் திடீரென இறந்துவிட, அவருக்குத்
தரவேண்டிய 25 ரூபாயை கொடுப்பதற்கென்று நண்பருடன் அவருடைய வீட்டைத் தேடிச் செல்கிறார்.
குடும்பத்தினரைச் சந்திக்கிறார். விடைபெறும்போது மூத்த மகனிடம் நூறு ரூபாயை எடுத்துத்
தருகிறார்.
1900ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, 85 ஆண்டுகள்
இருந்த மூர் மார்கெட் எரிந்து முடிந்த மறுநாள். ஒரு பழம் புத்தகக் கருவூலம், புத்தக
அருங்காட்சியகம் தீக்கிரையானது. அதன் அடையாளமாக நின்ற சிவப்பு இந்தோசார்சானிக் கட்டடம்
முழுக்க எரிந்துவிட்டது. வெளியே நின்று வேடிக்கை பார்த்தபடி விசாரிக்கிறார். புத்தகக்
கடைகள் எதுவும் மிஞ்சவில்லை, எரிந்து நாசமாகிவிட்டன என்று சொல்கிறார்கள். முதலியார்,
ஐரே என்று ஒவ்வொரு கடையைப் பற்றியும் திரும்பத் திரும்பக் கேட்கிறார். பிறகு நாயக்கரைப்
பற்றி விசாரிக்கிறார். ‘அவரு ஒரு மாதிரி ஆயிட்டாராம்.’ ‘ஒரு மாதிரி மென்டலாயிட்டாரு.’
நண்பர் கிருஷ்ணன் நாயக்கர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சைதாப்பேட்டை, காரணீஸ்வரர்
கோயில் குளத்தை அடுத்துள்ள ஒரு தெருவில் வீடு. உள்ளே சாவு வீடு போல பேரமைதி. நாயக்கர்
நாற்காலி ஒன்றில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். “வணக்கம்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து
திருதிருவென்று விழிக்கிறார். பிறகு பழையபடி எங்கோ வெற்றிடத்தை வெறிக்கிறார். “என்னைத்
தெரியுதா?” கேட்கிறார். எந்த அசைவுமில்லை. தன் பெயரை இரண்டு முறை சொல்லிப் பார்க்கிறார்.
எந்த சலனமும் இல்லை. “எங்களையே அவருக்குத் தெரியலீங்க…” என்கிறார் அவரது மனைவி. அவர்
இன்னும் வெறித்துப் பார்த்தபடியே தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள்.
சேலத்தைச் சேர்ந்த எம்.ஏ.வி பிக்சர்ஸ் நிறுவனம் ‘சிவகாமி’ எனும் படத்தை தயாரிக்கிறது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகன். அதுவே அவரது இறுதித் திரைப்படமும். அப்போதே அவருக்கு
கண்பார்வை போய்விட்டது. கருப்புக் கண்ணாடி அணிந்து சமாளித்திருக்கிறார். நிற்கவும்
நடக்கவும் முடியாமல் தடியூன்றியிருக்கிறார். படத்திலும் அதே போன்று ஒரு கதாபாத்திரம்.
முன்புபோல அவரால் பாட முடியவில்லை. எனவே, பழைய இசைக் கோப்புகளிலிருந்து பாடல்களை எடுத்துச்
சேர்த்துக் கொண்டனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்காவது அமர்ந்து எதையாவது பாடிக்
கொண்டிருப்பார். ஒரு நாள், ஓடையின் மீது போடப்பட்ட சிறு மோரி மீது, தாடியும் மீசையும்
கருப்புக் கண்ணாடியுமாய் ஜிப்பா வேட்டியில் மெலிந்த பெரியவர் ஒருவர் மங்கிய குரலில்
பாடிக் கொண்டிருக்கிறார். ஆட்கள் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யார் என்று கேட்கும்போது அவர்களில் ஒருவர் சொல்கிறார் “பாகவதர்.”
இந்த சம்பவங்களையெல்லாம் விட்டல்ராவ்
சில வரிகளில்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், வலுவான சிறுகதைகளுக்கான ஆழத்தையும் உணர்ச்சி
மோதல்களையும் கொண்டுள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக்
கண்காட்சி 48வது கண்காட்சி. 47 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அது தொடங்கியது என்பது மிக
சுவாரஸ்யமானது. முதல் சென்னை புத்தகக் கண்காட்சி. 1977 டிசம்பரில் தமிழ்நாடு வெள்ள
நிவாரணத்துக்காக சென்னை புத்தகக் கண்காட்சி, காயிதே மில்லத் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது.
கல்லூரியின் வகுப்பறைகளில் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இரண்டு மூன்று வகுப்பறைகள்,
பழைய புத்தகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் தான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டிருக்கிறார்.
அத்துடன், விட்டல்ராவ் ஒரு சினிமா பின்னணிப்
பாடகரும்கூட. ஆமாம், சினிமாவில் ஒரு பாடலில் அவரது குரல் ஒலித்திருக்கிறது. மாடர்ன்
தியேட்டர்ஸ் தயாரித்த ‘மகேஸ்வரி’ படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகியோருடன் பாடியிருக்கிறார்.
ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் விட்டல்ராவின் இசை ஆசிரியரான மரி ஜோசப் சேர்ந்திசை
பாடச் சென்றிருக்கிறார். அப்போது இன்னொரு குரலும் தேவைப்பட, அப்போது பள்ளியில் பாட்டுப்
போட்டிகளில் முதல் இடம் பிடித்து பரிசு பெறுகிற விட்டல்ராவையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
பாடலில் அவரது குரலும் பதிவாகியுள்ளது. அதற்கு சம்பளமாய் ஐந்து ரூபாயும் மட்டன் பிரியாணியும்
கிடைத்திருக்கிறது-
‘தொலைபேசி நாட்கள்’ என்ற நூல்ல் சென்னையில்
தொலைபேசி உருவான வரலாறு, அத்துறையில் பணியில் சந்தித்த மனிதர்களின் சித்திரங்கள் ஆகியனவற்றை
சுவைபட எழுதியுள்ளார்.
‘பேசும் புதிய சக்தி’ மாத இதழில் எழுதிய
‘கலையும் காலமும்’ மிக விரிவான முக்கியமான ஒன்று. குகை ஓவியங்கள் தொடங்கி நவீன கட்டடக்
கலை வரையிலுமான பரிணாம வளர்ச்சியைப் பற்றியது. சுவரோவியம், சுடுமண் சிற்பம், கற்றளிகள்,
குகைக் கோயில்கள், சுதைச் சிற்பங்கள் ஆகியவை உருவாகி வளர்ந்த விதத்தை ஹம்பி, மாமல்லபுரம்
உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.
‘கலை இலக்கிய சங்கதிகள்’ கட்டுரைத் தொகுப்பில்
சென்னையில் இருந்த நாட்களில் தான் சந்தித்த முக்கியமான ஆளுமைகளுடனான அனுபவங்களை விவரித்திருக்கிறார்.
அந்த காலத்தில் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் ‘நடைபாதை’.
அதை எழுதியவர் இதயன். பிழைப்புக்காக பம்பாய் சென்று அங்கு நடைபாதை கடை நடத்தியிருக்கிறார்.
பின்பு அது ஒரு கலவரத்தின்போது சூறையாடப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாகக்
கொண்டது அந்த நாவல். பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை குறித்த ‘கிராண்ட் ரோடு’ எனும் இன்னொரு நாவலும் உண்டு. திருமணம் செய்து
கொள்ளாத அவர் இசை ரசிகராகவும் இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் தன் எழுத்தை யாருமே
அங்கீகரிக்கவில்லை என்று பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
விட்டல் ராவ் அவர்களின் பெங்களூர் வீட்டில்
இன்றும் ஒரு பழைய சைக்கிளை வைத்திருக்கிறார். தொலைபேசி இலாகாவில் சேர்ந்த சமயத்தில்,
சைக்கிளுக்கென தரப்பட்ட கடன் தொகையைக் கொண்டு அதே இலாகாவில் வேலை செய்த ஒருவரிடமிருந்து
பழைய சைக்கிளை விலைக்கு வாங்கியிருக்கிறார். நாட்டிங்ஹாமில் உருவாக்கப்பட்ட ராலி சைக்கிள்.
கியர்கள் கொண்டது. ஆனால், அதற்கான உதிரிப் பாகங்கள் சென்னையில் கிடைக்காது. அது தெரிந்துதான்
அதை விற்றிருக்கிறார். ஆனால், விட்டல்ராவ் அந்த சைக்கிளைக் கடைசி வரையிலும் விடாமல்,
பணி ஓய்வு பெற்று பெங்களூர் செல்லும்போதுகூட அதை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார்.
பெங்களூரில் சில நாட்கள் ஓட்ட முயன்று முடியாமல், இருக்கட்டும் என்று அப்படியே வைத்திருக்கிறார்.
அவரது சென்னை வாழ்க்கையின் குறியீடு, நினைவுச் சின்னம் என்று அதை வைத்துக் கொள்ளலாம்.
நாட்டிங்ஹாமில் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளுக்கு ஒரு ‘ஆண்டிக்’ தன்மை உண்டு. விலைமதிக்க
முடியாத பழமையைக் கொண்டது. விட்டல்ராவ் அவர்கள் சேகரித்து வைத்திருக்கிற நினைவுகளும்
தகவல்களும் சம்பவங்களும் அத்தகைய பொருண்மையும் பழமையும் மிக்கவை. சைக்கிளைத் தூக்கிப்
போட முடியாதது போலவே அவரால் தன் நினைவுகளையும் தூக்கிப் போட முடியாது. அதே சமயம் அந்த
சைக்கிள்தான் அவருக்கு உற்சாகமூட்டும் ஊக்கியாகவும் நின்றுகொண்டிருக்கிறது.
1942ஆம் ஆண்டு பிறந்தவர். 1967ஆம் ஆண்டு
அவரது முதல் சிறுகதை வெளியாகிறது. அறுபது ஆண்டு கால இலக்கிய வாழ்க்கை. இன்னும் அவர்
ஓய்ந்துவிடவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறார். எழுத்துடன் நுண்கலைகள் சார்ந்த அவரது
அக்கறை பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம். வேறொரு
எழுத்தாளர் இத்தனைத் துறைகளில் பங்களிக்கவில்லை.
அவரை நெருங்குந்தோறும் எனக்கு இப்போதும்
வியப்பைத் தருவது, ஒரு மனிதரால் எப்படி இத்தனை காரியங்களிலும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும்
ஈடுபட முடியும்? அவர் எடுத்துக்கொண்ட எல்லா வேலைகளிலும் தீவிர ஈடுபாட்டை காணமுடியும்.
கேட்கிறார்களே என்று எந்த வேலையையும் சாதாரணமாக செய்வதில்லை. ஒரு சிறுவனின் வற்றாத
ஆற்றலும் ஆர்வமும் உற்சாகமும் ஈடுபாடும் அவரிடம் எப்போதும் உண்டு. அதுவே அவரை சலிப்பில்லாமல்
கசப்பில்லாமல் தொடர்ந்து செயல்படச் செய்கிறது.
அண்மையில் பாவண்ணனுக்கு அளித்த பேட்டி
ஒன்றில், முப்பது சிறுகதைகளுக்கான குறிப்புகள், மூன்று நாவல்கள் எழுதும் திட்டமும்
உள்ளது என்று கூறியிருந்தார்.
அங்கீகாரங்கள், விருதுகள், பரிசுகள்
பற்றிய எதிர்பார்ப்போ ஆசையோ கவலையோ இல்லாமல், எனவே பொறாமையும் வயிற்றெரிச்சலும் இல்லாமல்
ஆரோக்கியமாக தன் காரியங்களில் ஈடுபட முடிகிறது. அவரிடம் நான் கற்றுக் கொள்வதும் பெற்றுக்
கொள்வதும் இந்த வற்றாத ஆர்வத்தையும் எதையும் எதிர்பார்க்காது செயலூக்கத்தை தக்கவைத்துக்
கொள்வதையும்தான். அந்த வகையில் என்னுடைய ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
ஓசூரில் கெனில்வர்த் கேசில் என்றொரு
மாளிகை 1864ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள கெனில்வர்த் கேசில்
அமைப்பிலேயே அது பெங்களூர் சாலையில் கட்டப்பட்டது. இதைக் கட்ட ஏற்பாடு செய்தவர் அப்போது
சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த பிரெட்.. இங்கிலாந்தில் அவர் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த
பெண், இந்தியாவில் கெனில்வர்த் கேசில் போன்ற மாளிகை இருந்தால் தான் வருவேன் என்று சொன்னதை
நிறைவேற்றும் பொருட்டு தன் சேமிப்புப் பணத்தையும் போட்டு கட்டினார். கதவு ஜன்னல்களுக்கு
பர்மா தேக்கும், தரையில் பீங்கான் ஓடுகளும் பதிக்கப்பட்டன. ஆனால், பிரெட்டின் துரதிர்ஷ்டம்
நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் இன்னொருவனின் மேல் மையல் கொண்டு இவரை நிராகரித்துவிட்டாள்.
இதையறிந்த பிரெட் மனமுடைந்து துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே மாளிகையில் அவரை புதைத்து சமாதி எழுப்பப்பட்டது.
தனது 53வது வயதில் மீண்டும் ஓசூருக்குப்
போகிறார் விட்டல்ராவ். ஊர் முழுக்கவே மாறிப் போயிருக்கிறது. பஸ் நிலையத்தில் ஒரு பழக்கடையில்
விசாரிக்கிறார் ‘கெனில்வர்த் கேசிலுக்கு எப்படிப் போகவேண்டும்?’
அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
அருகில் இருந்த தபால் ஆபிசுக்குப் போய்
விசாரிக்கிறார். அவர்கள் கதவு எண், எந்த தெரு, என்ன அடையாளம், பின்கோடு என்ன என்று
கேள்வி கேட்கிறார்கள்.
“ஜூஜூவாடி ஏரிக் கரையில, கோட்டை பக்கத்துல…”
என்று அடையாளம் சொல்ல முயல, அங்கிருந்த பெண் கூறுகிறாள் “ஜூஜூவாடி ஏரியே இப்ப இல்ல.
அதுமேல தான் இப்ப தொழிற்பேட்டையே நிக்குது. கோட்டையல்லாம் இப்ப கெடையாது.”
வெளியே வரும்போது ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள்
“பாவம், எதையோ நெனச்சிட்டு, எதையோ தேடிட்டு, இந்த வயசுல பைத்தியக்காரத்தனமா…”
வேறு வழியில்லாமல் காவல் நிலையத்துக்குள்
போகிறார். கோட்டையைப் பற்றியும் மாளிகையைப் பற்றியும் கேட்கிறார்.
அங்கிருந்த காவலர் கேட்கிறார் “என்னவாச்சும்
காணாம போயிருச்சா?”
“இல்லீங்க. அது வெள்ளைக்கார மாளிகை.”
“அய்யா, இது போலீஸ் ஸ்டேஷன். கம்ப்ளெய்ண்ட்
எதாவது குடுக்கணுமா?”
“இல்ல அந்த மாளிகையைப் பாக்கணும்?”
“எந்த மாளிகை?”
“கெனில்வர்த்”
“யாராவது வெள்ளைக் கார துரையா?”
“இல்லை. துரை கட்டின மாளிகை.”
“அதெல்லாம் தெரியாது. வேற யாருகிட்டயாவது
கேளுங்க.”
ஒரு வழியாக முட்டிமோதி கோட்டையை அடைகிறார்.
பாழடைந்த கோட்டை. அகழிகள் பெரும் பள்ளங்களாக மட்டும் எஞ்சியிருக்கின்றன. கோட்டையின்
எஞ்சிய பகுதிகளையும் ஒரு புல்டோசர் இடித்துத் தள்ளுகிறது. எதுவுமே எஞ்சியிருக்கவில்லை.
ஒரு காலத்தில் ஒசூரின் அடையாளமாக இருந்த கோட்டையும் கெனில்வர்த் மாளிகையும் ஜுஜுவாடி
ஏரியும் இப்போது காணாமல் போயிருந்தது.
ஒரு காலத்தில் ஓசூரின் அடையாளமாக விளங்கிய
கோட்டை, மாளிகையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
மாநில அரசின் அருங்காட்சியகங்களில் உடைந்த
சிற்பங்களும் நடுகற்களுமே உள்ளன. பாராமஹால் கோட்டைகள், மாளிகைகள் குறித்த குறிப்புகளோ
புகைப்படமோ எங்கும் இல்லை. விசாரித்தாலும் பயனில்லை. யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.
வரலாறு, வரலாற்றுச் சின்னங்களின் மீது
நாம் காட்டுகிற அக்கறையின்மைக்கும் அலட்சியத்துக்கும் உதாரணம் இது.
இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது அவர் தன் எழுத்தின் வழியாக சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் பெருமதிப்புமிக்கவை.
சமூக நோக்கிலும் இலக்கிய நோக்கிலும், இத்தகவல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும்
மிக அவசியமானவை. வேறு எந்த ஆவணங்களின் வழியாகவும் இவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஸ்டிரிக்ட் மானுவல்’ என்ற தகவல் தொகுப்பு முறை
இப்போது பயன்பாட்டில் இல்லை. யாருக்கும் அதைப் பற்றிய அக்கறை இல்லை. நிலம், மக்கள்,
பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை சார்ந்த இத்தகவல்களே மானுட வரலாற்றின் ஆதாரங்கள்.
காலப்போக்கில் இவை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில்
தகவல் தொழில் நுட்பத்தினாலும், உலகமயமாக்கலின் காரணமாகவும் நம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள
மாற்றங்கள் கணிசமானவை. மிக வேகமானவையும்கூட. ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் தொடர்ந்து
வெகு வேகமாக நிகழ்கின்றன. திரும்பிப் பார்க்கும்போது பல விஷயங்கள் காணாமல் போயிருப்பதையும்
மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் உணரலாம். சென்னை, சேலம் ஆகிய நகரங்களை குறித்த
அடிப்படைத் தகவல்களை யாரும் பெற வேண்டுமெனில் விட்டல்ராவின் நூல்களே உதவ முடியும்.
கூடவே, சென்னை பெருநகரம் சார்ந்த பல அவசியமான முக்கியமான தகவல்களும் அவரது நாவல்களிலும்
நூல்களிலுமே இடம் பெற்றுள்ளன.
டானியல்களின் ஓவியங்களின் பாதையில் இவர்
கோட்டைகளுக்கு பயணம் செய்ததுபோல விட்டல்ராவின் நூல்களிலுள்ள குறிப்புகளை வைத்துக் கொண்டு
யாரேனும் சென்னையிலும் சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளிலும் பயணம் செய்வார்கள் என்றால்
அவருக்கு பெரும் அனுபவங்கள் காத்திருக்கின்றன.
ஒரு தனி மனிதராக தன் வாழ்நாள் முழுக்க
பெருமதிமிக்க வரலாற்றுத் தகவல்களை, குறிப்புகளை, சம்பவங்களை சேகரித்து தனது எழுத்துகளில்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் விட்டல்ராவ். வேறு எந்த நோக்கமும் இல்லாமல் தனது
ஆர்வத்தின் காரணமாக மட்டும், சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த அரும்பணியை செய்திருக்கிறார்.
விட்டல்ராவ் போன்ற அபூர்வமான இந்த மனிதர்களுக்கு
நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்பது பெரிய கேள்விக்குறி. இன்று இங்கு வழங்கப்பட்டுள்ள
‘விளக்கு’ விருதின் மூலமாக அவர்மீதும் அவரது அளப்பரிய பங்களிப்புகளின் மீதும் வெளிச்சம்
விழுமாயின் அதுவே அந்த நன்றிக்கடனின் சிறு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
0
( சென்னையில் 18,01,2025 சனிக்கிழமை
மாலை கவிக்கோ அரங்கில் நிகழ்ந்த விளக்கு விருது விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
)