Wednesday, 12 August 2026

ஆவநாழி - பலிபீடத்தில் இன்னுமொரு தலை

 


தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் இதழ்கள் வரையிலுமான நீண்ட பயணமும் தூரமும் பல்வேறு சவால்களையும் இடர்களையும் துயர்களையும் கடந்து வந்திருப்பது. கேளிக்கையும் விளம்பரமும் வியாபாரமும் மட்டுமே இலக்காகக் கொண்ட பெரும் வணிக இதழ்களுக்கு நடுவே தீவிர இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்தச் சிறுபத்திரிகைகள் பிறந்து, காலூன்றி வளர்வதென்பது அத்தனை சுலபமான காரியமல்ல. இலட்சிய நோக்கு கொண்ட பலர் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தனர். நிச்சயமாக திரும்பி வரப்போவதில்லை என்பது தெரிந்தும் தங்கள் கைபணம் மொத்தத்தையும் இதற்கென செலவு செய்தனர். இதழ்கள் சில ஒன்றிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உற்சாகத்துடன் வெளியாயின. இன்னும் சில ஒன்றிரண்டு இதழ்களுடன் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டன. வேறு சில இதழ்கள் அச்சகத்திலேயே முடங்கிப் போயின. இத்தகைய பலிகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகும் இந்த ஓட்டம் நிற்கவில்லை. அடுத்தடுத்து பலியிட யாரேனும் ஒருவர் தம் தலையைக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தனர். இப்போதும் சிலர் இருக்கின்றனர்.

வணிக எழுத்துக்கான மாற்றாக, போட்டியாக தீவிர இலக்கியத்துக்கான இதழ்களைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எழக் காரணமாக அமைந்தது உண்மையில் ஒரு பிரபலமான வணிக வார இதழ்தான். 1933ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தது. நடுவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. அந்தப் போட்டியில் பி.எஸ்.ராமையா எழுதிய ‘மலரும் மணமும்’ இரண்டாம் பரிசு பெற, றாலி எழுதியி ‘ஊமைச்சியின் காதல்’ முதல் பரிசு பெற்றது. போட்டிக்குப் பிறகு றாலி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவில் இணைய, பி.எஸ்.ராமையா, நின்றுபோயிருந்த மணிக்கொடி இதழை மாதம் இருமுறை சிறுகதை இதழாகக் கொண்டு வர முடிவு செய்தார். விகடனுக்கும் கல்கிக்கும் எதிராக பி.எஸ்.ராமையா எடுத்த இந்த முடிவுதான் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. ஒருவகையில் தமிழில் சிறுபத்திரிகைகளுக்கான தொடக்கமாகவும் அமைந்தது. இதன் பிறகு 1959இல் சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ பத்திரிகை தமிழ்ப் புதுக் கவிதைக்கான தோற்றமாக விளங்கியது. அதன் பிறகு 1965ஆம் ஆண்டில் நா.பார்த்தசாரதியால் ஆரம்பிக்கப்பட்ட ‘தீபம்’ இதழ் 1987ஆம் ஆண்டு வரை வெளிவந்தது.  அதே ஆண்டு ( 1965 ) தில்லியில் கஸ்தூரி ரங்கன் தொடங்கிய ‘கணையாழி’ இலக்கியத்துக்கு மட்டுமேயான இதழாக அல்லாது அரசியல், உலக நடப்புகள், பொருளாதாரம் உள்ளிட்ட பிறதுறை சார்ந்த இதழாகவும் அமைந்திருந்தது. ஆனால், பின்னாளில் இலக்கியத்துக்கான தீவிர இதழாகவே ‘கணையாழி’ அமைந்திருந்தது.

அற்ப ஆயுளையே கொண்டது என்றாலும் சில சிறுபத்திரிகைகள் சூழலில் நிகழ்த்திய மாற்றங்கள், சலனங்களின் காரணமாகவே என்றென்றும் நினைக்கப்படுபவையாக இருக்கின்றன. இரண்டே இதழ்கள் மட்டுமே வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழ் தமிழ் இலக்கியத்தில் நிகழ்த்திய பெரும் மாற்றங்களை அறிவோம். ‘இனி’, ‘இங்கே இன்று’ ஆகிய இதழ்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இலக்கியம், சமூகம், அரசியல், சூழலியல் உள்ளிட்ட துறைசார்ந்த ஆழமான கட்டுரைகளையும் அழுத்தமான புனைகதைகளையும் கொண்டிருந்த கோவை ஞானியின் ‘நிகழ்’, மேற்கத்திய இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு சார்ந்த பெரும் உலகை தமிழுக்குக் கொண்டு வந்த பிரம்மராஜனின் ‘மீட்சி’, புனைவுகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள், நேர்காணல்கள் என்று அனைத்து வகைமை சார்ந்தும் பங்களிப்புகளைக் கொண்டிருந்த மனோன்மணியின் ‘புது எழுத்து’, தமிழில் புதுவகை எழுத்து என்கிற கருத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த கௌதம சித்தார்த்தனின் ‘உன்னதம்’ உள்ளிட்ட இதழ்கள் சிறுபத்திரிகைகளுக்கேயுரிய சவால்களை சந்தித்தபோதும் நீண்ட காலம் தொடர்ந்து வெளியாயின. சிறுபத்திரிகையாகத் தொடங்கப்பட்டு மாத இதழாக மாற்றமடைந்து இன்றும் இலக்கிய இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’ ஆகிய இதழ்கள் தமிழ் தீவிர இலக்கியச் சூழலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளன. இந்த இதழ்களுக்கு முன்மாதிரியாக இருந்த கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’, பாவைச் சந்திரனின் ‘புதிய பார்வை’ ஆகிய இதழ்களையும் இந்த நேரத்தில் நினைவில்கொள்வது முக்கியம். வெகுஜன இதழை இலக்கியத் தரத்துடன் கொண்டு வரமுடியும் என்பதை இந்த இதழ்கள் நிரூபித்துக் காட்டின. இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் கொண்டு வந்த இலக்கிய மலர்களும், காலச்சுவடு சிறப்பு மலரும் முக்கியமான முன்மாதிரிகள்.

இன்று தமிழில் முக்கியமான கவிஞர்களாகவும் புனைவாசிரியர்களாகவும் அறியப்படுகிற எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் வழியாக அறிமுகமானவர்களே. தீவிர இலக்கியத்துக்கான இலக்கணங்களையும் குணாம்சங்களையும் சிறுபத்திரிகைகளே வகுத்துத் தந்தன. இதில் எழுதுவதால் நிச்சயமாக பணம் கிடைக்காது. புகழும் கிடைக்காது என்ற தெளிவுடனே எழுத முனைந்தனர். பெரும் வாசகப் பரப்பைக் கொண்ட குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் போன்ற வணிக இதழ்களுக்கு நடுவே தமக்கான வாசகர்களைக் கண்டடைய முடியும் என்ற உறுதியிருந்தது. எக் காலத்திலும் இந்த எண்ணிக்கை அதிகபட்சம் முன்னூறு பேர்களைத் தாண்டாது என்றபோதும் சிந்தனைத் தளத்திலும் கருத்தியல் உலகிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே அவர்களை இத்தகைய ஒரு பலிபீடத்தில் தலையை வைக்கும் துணிவைத் தந்தது.

பொது மக்களின் சிந்தனையை முடமாக்கி எப்போதும் கேளிக்கையிலும் மலிவான கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்கும்படியான வணிக இதழ்களின் போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து சிறுபத்திரிகைகள் குரல்கொடுத்தன. கேளிக்கை நோக்கில் பக்கங்களை நிரப்புவதற்கு சினிமாவை முதன்மை அம்சமாக கையிலெடுத்துக்கொண்ட அவற்றின் உத்தியை விமர்சித்தன. இலக்கியத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வணிகப் போக்கு கவிதை, கதை, நாவல், நாடகம் என்ற பெயரில் தொடர்ந்து உற்பத்தி செய்து கொடுத்தவற்றையும் அவற்றை எழுதிக் குவித்த எழுத்தாளர்களையும் தயவுதாட்சண்யமின்றி கிழித்தெறிந்தன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் உள்ளிட்டோரை காக்காய் பிடித்து சாகித்திய அகாதமி உள்ளிட்ட விருதுகளையும் பதவிகளையும் அடைந்த வணிக எழுத்தாளர்களையும் அவர்களை கௌரவித்த அமைப்புகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின. அகிலனுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம்.

எந்தவிதமான பொருளாதார பலமோ பின்புலமோ இல்லாமல் தொடங்கப்பட்டவையே சிறுபத்திரிகைகள். ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஒரு சிறு குழு தங்களிடமிருக்கும் கைக் காசைப் போட்டு உற்சாகத்துடன் தொடங்குவார்கள். அச்சுக்குப் போய் வேலை முடிந்து அச்சகத்துக்கு காசு தர முடியாமல் அப்படியே முடங்கிப் போன சிற்றிதழ்களின் எண்ணிக்கை பல. இன்னும் சில இதழ்கள் அறிவிப்புடனே நின்றுபோயுள்ளன. டிரெடில் முறையில் அச்சடிக்கும் அந்தக் காலத்தில் ஆயிரம் பிரதிகள் என்பது குறைந்தபட்ச எண்ணிக்கை. அதிகபட்சம் முந்நூறு பேருக்கு அனுப்பலாம். சந்தா என்பது பெரும் கனவுதான். ஐம்பது சந்தாதாரர்கள் என்பதே பெரும் சாதனைதான். மணியார்டரில் தொகையை அனுப்பிவிட்டு இதழ்கள் வராதபோது தொடர்ந்து கடிதம் எழுதும் தீவிர வாசகர்களும் இருந்தனர். சிறு பத்திரிகைகளின் சவால்களையும் சிரமங்களையும் அறிந்த சில அபூர்வ மனிதர்கள் புதிய சிறுபத்திரிகைகளுக்கு தொடர்ந்து சந்தா கட்டுவதை தங்கள் கடமையாகவே செய்து வந்தனர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாய் பத்தும் நூறுமாய் வெளியான மாத, காலாண்டு இதழ்களே சக்கரத்தின் சின்னஞ்சிறு பற்களாகி தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்க உதவின.

உதகை பூ.வ.மணிகண்ணன் போன்று தீவிர இலக்கியத்துக்காக, சிறுபத்திரிகைக்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. புது எழுத்து மனோன்மணி, விருட்சம் அழகியசிங்கர் போன்று வருமானத்தின், சேமிப்பின் பெரும்பகுதியை இதற்கெனவே செலவழித்தவர்களும் உண்டு.     

தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ‘கனவு’ இதழை நடத்தி வருகிறார் சுப்ரபாரதிமணியன். அழகியசிங்கர் ‘விருட்சம்’ இதழையும் பல காலமாக வெளியிட்டு வருகிறார். ‘சங்கு’ என்ற ஒரு சிறு இதழை வளவ.துரையன் நடத்தி வருகிறார். நிச்சயமாக இவர்களில் யாருக்கும் இந்த இதழ்களால் ஒரு பைசா பயனிருக்காது. தங்கள் சேமிப்பிலிருந்துதான் செலவு செய்கிறார்கள்.

இளமைப் பருவத்தில் சினிமாவில் சாதிக்கும் கனவைக் கொண்டிருந்தார் சுதேசமித்திரன். அதற்காக சென்னையிலும் சில காலம் வாழ்ந்தார். அப்போது அறிமுகமாகிய சிறுபத்திரிகைகளின் வழியாக இலக்கியமும் வாசிப்பும் தொடர்ந்தது. சிற்றிதழைத் தொடங்கவேண்டும் என்ற ஆர்வமும். கோவைக்கு வந்த பின் அந்த ஆர்வம் பெரிதானது. கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீபதி பத்மநாபாவுடன் சேர்ந்து ‘ஆரண்யம்’ இதழைத் தொடங்கினார். பேருக்குத்தான் சிறுபத்திரிகையே தவிர அதன் கனவுகள் மிகப் பெரியவை. அத்தகைய கனவுக்கு ஏற்பவே இதழும் அமைந்திருந்தது. சிறுபத்திரிகை என்றால் சிறியதாக இருக்கவேண்டும், சின்னஞ்சிறிய எழுத்தில் குறைந்த பக்க எண்ணிக்கையுடன் இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தது. வண்ண அட்டையுடன் பெரிய அளவில் எண்பத்து நான்கு பக்கங்களுடன் ஆரண்யம் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ‘ஆரண்யம் என்கிற சிறுபத்திரிகை இதன்மூலம் ஆரம்பிக்கப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சொன்னால் பெரும்பத்திரிகை ஆரம்பிக்கிற அளவுக்கு இதை ஆரம்பிப்பவர்களிடம் பணம் இல்லை என்பதுதான்’. தனி இதழின் விலை ரூ.25.

சிறுபத்திரிகைக்கான பொதுவான அம்சங்களான கவிதைகள், சிறுகதைகள், மொழியாக்கங்கள் அனைத்தும் ஆரண்யத்திலும் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஆரண்யம் சில விஷயங்களைத் தொடங்கி வைத்தது. முக்கியமானது, மலையாளத் திரைக்கதைகளை தமிழில் தந்தது. பத்மராஜனின் ‘ஓரிடத்தில் ஒரு பயில்வான்’, சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஷேக்ஸ்பியரின் காதல்’ ஆகிய திரைக்கதைகள் வெளியாகின. இரா.முருகனின் ‘இடைப்பக்கம்’, நாஞ்சில்நாடனின் கட்டுரைத் தொடரும் இடம் பெற்றிருந்தன. வித்தியாசமான முயற்சியாக சுதேசமித்திரனின் ‘கைலாசபுரம்’ நாவல் இடம்பெற்றது. இந்த நாவலின் விசேஷ அம்சம் இது ஒரே ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட நாவல் என்பதுதான். பின்னாளில் ‘சிதம்பர நினைவுகள்’ மூலமாக தமிழில் மிகவும் புகழ்பெற்ற பாலசந்திரன் சுள்ளிக்காடின் ‘சிவாஜி கணேசன்’ கட்டுரை வெளிவந்தது.

இரண்டாம் இதழில் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருந்த யுவன் சந்திரசேகரின் ‘இருபத்து மூன்று காதல் கதைகள்’ பெரிய அளவில் கவனத்துக்கு உள்ளானது. அப்படியொரு பகுதியை அதுவரையிலுமான சிறுபத்திரிகைகளில் இடம் பெறவில்லை. இந்த இதழில் தமிழ் சிறுபத்திரிகைகளில் அதுவரையிலும் இடம் பெற்றிராத கமல்ஹாசன் என்றொரு கவிஞரின் கவிதையும் இடம் பெற்றிருந்தது.

மூன்றாவது இதழின் தலையங்கம் மிக முக்கியமானது. இதில் இடம் பெற்றிருந்த இந்த வரிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மையாகியுள்ளன ‘ஒரு சிறு பத்திரிகை சகலராலும் கவனிக்கப்பெறும்போதுதான் பெரும் பத்திரிகையாளர்கள் சமகால இலக்கியவாதிகளின் விலாசங்களை விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.’

2000ஆம் ஆண்டு தொலைநோக்குடன் எழுதப்பட்ட இந்த வரிகள், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யானது. இரண்டாயிரத்துக்குப் பிறகு வணிக இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் சிறுபத்திரிகை சார்ந்த வாசகர்களும் எழுத்தாளர்களும் இடம்பெறத் தொடங்கிய பின் வணிக இதழ்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தீவிர இலக்கியத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களின் தொடர்கள் வணிக இதழ்களில் வெளியாயின. நாஞ்சில் நாடனின் ‘கற்றதும் பெற்றதும்’, ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதன் பிறகு தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை கேட்டுப் பெற்று வெளியிட வேண்டிய நிலையை எட்டின வணிகப் பத்திரிகைகள். வணிக எழுத்து, தீவிர எழுத்து என்ற பெரும் பிரிவினைக்கு இடையிலிருந்த கோடு மங்கி மறைந்து போனது. இன்றைய நிலையில், விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்த வரை வணிக இதழ்களுக்கும் தீவிர இலக்கிய சிறுபத்திரிகைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அளவுக்கு வாசக எண்ணிக்கை சுருங்கியுள்ளது. நவீன சமூக ஊடகங்களின் தாக்கம் பத்திரிகைகளை மட்டுமல்லாது சினிமா, தொலைக்காட்சி தொடர்களையும் அசைத்துப் பார்த்துள்ளது.

பெரிய பத்திரிகைகளுக்கு இணையான தோற்றம், அளவு, உள்ளடக்கங்களுடன் சிறுபத்திரிகையை நடத்த முடியும் என்பதை ‘ஆரண்யம்’ மூலமாக மெய்ப்பித்துக் காட்டினார் சுதேசமித்திரன். சிறுபத்திரிகைகளுக்கேயுரிய விதிப்படி நான்கு இதழ்களுடன் ஆரண்யம் நின்றுபோனது. ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காதல்லவா. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் தன் தலையை தண்டவாளத்தில் கொடுக்க மீண்டும் முனைந்தார் சுதேசமித்திரன். இந்த முறை வண்ணங்களில்லாமல் எளிமையாய் சிறிய அளவில் ஆனால் வித்தியாசமான உள்ளடக்கங்களோடு இன்னொரு இதழைக் கொண்டு வரத் தீர்மானித்தார். இதழின் பெயர் ‘சாம்பல்’. பெயருக்கேற்ப கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களின் கலவையாக மட்டுமேயிருந்த போதிலும் தோற்றத்திலும் அமைப்பிலும் எழிலுடன் அமைந்திருந்தது.

புகைப்பட ஆல்பங்களை நடுப்பக்க கதைப்படங்களாக தனித்தன்மையுடன் வடிவமைத்திருந்தார் சுதேசமித்திரன். நிமாய் கோஷ் எடுத்த சத்யஜித் ரேயின் படங்களுடன் கூடிய ‘ரேயின் நிலைக்கண்ணாடி’, சோமபந்து வித்யாபதி கொழும்புவில் உருவாக்கிய சுவரோவியங்களைக் கொண்ட ‘நிர்வாணத்தைத் தழுவும் வரை’, புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் படங்களுடனான ‘சு.ரா-சில பதிவுகள்’ ஆகிய கட்டுரைகளுடம் படங்களும் புதுமையுடன் அமைந்திருந்தன. அதன் பிறகு வேறு சில தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் இவ்வாறான ஆல்பங்கள் வெளியாகியிருந்தபோதிலும் இதற்கான தொடக்கத்தைக் கொடுத்தது ‘சாம்பல்’.

இதழின் உள்ளடக்கத்தை இரண்டு பக்கங்களில் வெகு அழகான பின்னணியுடன் அமைத்திருந்ததையும் குறிப்பிடவேண்டும். அப்போது ஆங்கில இந்து மாதந்தோறும் வெளியிட்ட  ‘folio’ என்ற இணைப்பிதழின் வடிவமைப்பை ஒட்டியிருந்த இந்தப் பக்கமே இப்போது வெளியாகும் ‘ஆவநாழி’ உள்ளடக்கத்திலும் அமைந்திருக்கிறது.

‘தரு’ வெளியீடுகளாக அமைந்த ‘ஆரண்யம்’, ‘சாம்பல்’ என்ற அச்சிதழ்களுக்குப் பிறகு உண்மையிலேயே சுதேசமித்திரன் வனவாசத்துக்குச் சென்றுவிட்டார் என்பதுபோல சில காலம் சிறுபத்திரிகை உலகில் காணாமல் போனார். 2020ஆம் ஆண்டில் மீண்டும் வந்தார். இம்முறை அச்சிதழ் அல்லாது பிடிஎஃப் வடிவிலான டிஜிட்டல் இதழ் என்று சொன்னார். ‘ஆவநாழி’ உதயமானது. இப்போது ஆறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

இன்றையச் சூழலைக் கருத்தில்கொண்டு, இளைய தலைமுறையினரின் ஊடகத்துக்கு ஏற்ப ஒரு இதழை வடிவமைக்க எண்ணியபோதும் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதைக் குறிப்பிடவேண்டும். பிடிஎஃப் வடிவிலான இந்த மென்னிதழை அப்படியே வண்ணத்தில் அச்சிட்டால் அழகிய ஒரு அச்சிதழைக் கையில் வைத்துக் கொள்ளமுடியும். ஆறு ஆண்டு காலத்தில் முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளது ‘ஆவநாழி’. நிர்மால்யா மொழியாக்கம் செய்த மலையாள ‘பழங்குடிக் கவிதைகள்’, அரவிந்த் வடசேரி மொழிபெயர்த்திருக்கும் மலையாளச் சிறுகதைகள், அனுராதா கிருஷ்ணமூர்த்தி இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் சிறுகதைகள், ஓவியர்களுடனான ஜீவாவின் நேர்காணல்கள், ஜீவாவின் சினிமாக் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஆயுள் சந்தாதாரர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆயுள் ஆலோசகர், ஆயுள் பங்களிப்பாளர் என்ற வகையில் நாஞ்சில்நாடனையும் ஜீவாவையும், சுதேசமித்திரன் கொண்டிருப்பது பெருமைக்குரியது. அவருடைய எல்லாக் காரியங்களிலும் இவர்களின் ஆசியும் ஒத்துழைப்பும் பெரும் துணையாக விளங்குகின்றன.

தீவிர இலக்கிய உலகம் என்பதே மிகச் சிறியது. ஆனால் அளப்பரிய பொறுப்பையும் தீவிர உழைப்பையும் கோரும் ஒன்று. தொடர்ந்து இந்தச் சிறிய உலகில் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஏதேனுமொன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் என்று ஏதேனுமொன்றில் தலைகாட்டிக் கொண்டே இருந்தால் மட்டுமே எழுத்தாளராக இருக்க முடியும். சுதேசமித்திரனுக்கு இன்னொரு வழியும் உள்ளது. கதைகள், நாவல்களை மட்டுமல்லாமல் இதழாசிரியராகவும் இருப்பது அவருக்கு கூடுதலான ஒரு சாத்தியத்தை அளிக்கிறது. ஆனால், மொழியாக்கத்தைப்போலவே இதழாசிரியராக இருப்பதும் நன்றியறிதல் இல்லாத வேலை. உழைப்புக்கும் நேரத்துக்குமான மதிப்பும் இல்லை, ஊதியமும் இல்லை. இருந்தபோதும் சுதேசமித்திரன் தொடர்ந்து தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பதன் சாட்சிகள்தான் ஆரண்யமும் சாம்பலும் ஆவநாழியும். ஊற்றி வளர்க்கும் தண்ணீரோ உரமோ இல்லாதபோதும், ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சி முதிர்ந்து நிற்கிறது தரு வெளியீடு. அது மேலும் சில இலைகளையும் கிளைகளையும் மலர்களையும் கனிகளையும் கொடுக்கும். சுவைப்போரும் முறிப்போரும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாலே போதும், தரு மேலும் தளைக்கும்.

0        

( கோவையிலிருந்து சுதேசமித்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஆவநாழி’ மென்னிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா (13.06.2026)வுக்காக எழுதப்பட்ட உரை )

 

இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி - இந்தியில் சிறுபத்திரிகைகள்

 

இந்தியாவின் எந்தவொரு மொழியிலும், தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ள அந்த மொழியில் வெளியான சிற்றிதழ்களே உதவும். இந்தி இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவில் ‘சிற்றிதழ் இயக்கம்’ முதன்முதலில் வங்காளத்தில் தொடங்கியது. கலை, இலக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வங்காளம் எப்போதும் முன்னணியில் இருப்பது. பல்வேறு துறைகளிலும் மறுமலர்ச்சியின் தொடக்கம் பெங்காலில் அமைந்தது. சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கமும் வங்காளத்திலேயே நிகழ்ந்தது. 1923ஆம் ஆண்டு வெளியான ‘கல்லோல்’ என்னும் இதழ் இந்தியாவில் வெளியான முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது. வங்கத்தில் சிறுபத்திரிகை இயக்கத்தின் முன்னோடிகளாக மோஹித்லால் மஜும்தார் (1888-1952), காஜி நஸ்ருல் அஸ்லாம் (1899-1976), அசிந்திய குமார் சென்குப்தா (1882-1922) ஆகிய மூவர் கருதப்படுகின்றனர். ‘கல்லோல்’ மூலமாக உருவான சிறுபத்திரிகை மரபு வங்க இலக்கியத்தை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் வங்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன.

1955 முதல் 1975  வரையிலும் மராத்தி மொழியிலும் சிறுபத்திரிகை இயக்கம் வலுவான செல்வாக்குடன் விளங்கியது. நவீனத்துவமும், தலித் மறுமலர்ச்சியும் அதன் முக்கிய குறிக்கோள்களாக விளங்கின. 1960களின் தொடக்கத்தில் திலீப் சித்ரே, அருண் கொலாத்கர், ரமேஷ் சமர்த் ஆகிய மூவரும் சேர்ந்து ‘சப்த’ (சொல் ) என்ற சிறுபத்திரிகையை கொண்டு வந்தனர். இது முழுக்க படியெடுக்கப்பட்ட (  cyclostyled ) இதழாக வெளியானது. மராத்தி இலக்கியத்தை வளப்படுத்திய இன்னொரு சிறுபத்திரிகை ‘வாச்சா’.

இந்தி நவீனக் கவிதையின் தொடக்கமாகக் கருதப்படும் பாரதேந்துவின் காலத்தில் ( 1850 முதல் 1900 வரை )  இந்திக் கவிதைகளில் நவீனத்தன்மையைக் கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரதேந்து ஆசிரியராக இருந்தஅரிச்சந்திரா’, ‘கவி பச்சன் சுதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின்பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின்இந்தி பிரதீப்’, பத்ரி நாராயண் சவுத்ரியின்ஆனந்த கடம்பினிஆகியனவற்றைக் குறிப்பிடலாம். அதன் பிறகு, திவ்வேதி யுகம் என்று அழைக்கப்படும் 1900 முதல் 1918 வரை சமயத்தில் ‘சரஸ்வதி’ இதழ் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரகதிவாத் எனப்படும் முற்போக்குவாதம் ( 1936 முதல் 1943 வரை ) தலையெடுத்த சமயத்திலும் ‘ஜாகரன்’, ‘நயே சபேரா’, ‘நயே சேத்னாபோன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன. 1943 – 50 ஆண்டு வரையிலான பிரயோக்வாத் போக்கினையும் பிரதீக், கல்பனா, ஆலோச்சனா, நயீ கவிதா  ஆகிய பத்திரிகைகளே முன்னெடுத்தன. அதன் பிறகு நயி கவிதா எனப்படும் புதுக்கவிதை காலத்தில் ( 1950 முதல் 1960 வரை ) ‘நயி பதே’, (ராம்ஸ்வரூப் சதுர்வேதி அண்ட் லக்ஷ்மிகாந்த் வர்மா) ‘நயீ கவிதா’,( ஜகதீஷ் குப்தா .. ராம்ஸ் ) ‘நிகாஸ்’ (தரம்வீர் பாரதி லக்ஷ்மிகாந்த் வர்மா )ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின. நவீனக் கவிதையில் தோன்றிய பல்வேறு பிரிவுகளில் ஒன்றான எதிர்க்கவிதை ( 1960க்கு பிறகு ) யை முன்வைத்து ‘அபிவ்யத்தி’, ‘அகவிதா’ ஆகிய இரண்டு இதழ்கள் வெளியாயின. அதன் இன்னொரு தரப்பாக உருவான, மறுக்கப்பட்ட கவிதை வகைமையை 1969இல் கவிஞர் ராம் சுக்ல தன் ‘உத்கர்ஷ்’ எனும் இதழ் வழியாக உருவாக்கினார்.

பாரதேந்து அரிசந்திராவின் காலம்தொட்டு இந்திய விடுதலை வரைக்குமான காலத்தில் வெளியான பெரும்பாலான பத்திரிகைகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் கொள்கை அடிப்படையுடனே வெளியாயின. தேச பக்தி, விடுதலை, சமூக மேம்பாடு போன்ற அடிப்படைகளோடு தரமான இலக்கியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இவற்றின் நோக்கமாக இருந்தது. இவற்றில் பல பத்திரிகைகளும் பெரும் வணிக நிறுவனங்களின் பொருளாதார பலத்தை நம்பி இருந்தபோதிலும் அவற்றின் நோக்கம் சமூக சீர்திருத்தம், இந்திய விடுதலை போன்ற பொதுநல நோக்குடனே இருந்தன. எந்த பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட உழைப்பை நம்பியே சில பத்திரிகைகளும் வெளியாயின. அவை தோற்றத்தில் பெரும் பத்திரிகைகளைப் போல கண்ணைக் கவர்பவையாகவும் திருத்தமாகவும் இல்லாதபோதும் கனமான உள்ளடக்கத்துடன் இருந்தன. 

இந்திய விடுதலைக்குப் பிறகு வணிக நோக்கிலும் ஆளும் அரசை ஆதரிக்கும் நோக்கிலும் வெளியான வணிகப் பத்திரிகைகள் கேளிக்கை நோக்கிலான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருந்தன. மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கவில்லை. இத்தகையப் போக்கிற்கு மாற்றாக புதிய சிந்தனைகளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும் இடமளிக்கும் பத்திரிகையின் தேவையை உணர்ந்து எழுத்தாளர்கள் சிலர் சிறுபத்திரிகைகளைத் தொடங்கினர். சிந்தனைத் தளத்திலும் இலக்கிய வெளியிலும் பெரும் இயக்கமாக நிலைகொண்ட சிறுபத்திரிகைகள், இந்தி நவீன இலக்கியத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களுக்கு களங்களாக அமைந்தன. நவீன கவிதை, நவீனச் சிறுகதைகளின் வளர்ச்சிப் போக்கு, இடதுசாரி சிந்தனைகளுடனான எழுத்துகள், தலித், பெண்ணிய நோக்கிலான எழுத்துகள் போன்றவற்றை உறுதியுடன் முன்னெடுத்தவை சிறுபத்திரிகைகளே. குறைவான வாசக எண்ணிக்கை, பொருளாதார ஆதரவின்மை போன்ற சவால்கள் இருந்தபோதும் இவற்றை நடத்தியவர்களின் தீவிரமும் இலக்கியத்தின்  மீதான சமரசமற்ற அக்கறையும், பொதுத் தளத்தின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கின.

இந்தியின் முதல் சிறுபத்திரிகை எது என்பதைக் குறித்து இருவேறு கருத்துகள் உண்டு. 1957ஆம் ஆண்டு பனாரசில் இருந்து, விஷ்ணுசந்திரா வெளியிட்ட ‘கவி’ என்னும் இதழே முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது. இன்னொரு பக்கம், மார்கண்டேயாவை ஆசிரியராகக் கொண்டு 1968ஆம் ஆண்டு  வெளியான ‘கதா’ இதழே முதலாவது என்றும் கூறுப்படுகிறது. இவற்றைத் தொடர்ந்து, இந்தி இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஆற்றலுடனும் சிறுபத்திரிகைகள் பல்வேறு எழுத்தாளர்களின் முயற்சியில் வெளியாயின. 1972இல் சப்யசாச்சி, விர்ஜேந்திர கௌஷிக் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான ‘உத்ரார்த்’, 1975இல் ஞான்ரஞ்சன் வெளியிட்ட ‘பஹல்’, மார்க்கண்டேய வெளியிட்ட ‘கதா’, 1974 முதல் 1977 வரை உத்பிராந்த் ஆசிரியராக வெளியிட்ட ‘யுவா’, சந்திரபூஷண் திவாரியின் ‘வாம்’, கவுசல் கிஷோரின் ‘பரிபத்ர’, ரமேஷ் உபாத்யாயவின் ‘கதன்’, பைரவ் பிரசாத் குப்தாவின் ‘சமாரம்ப’, சைலேஷ் மத்யானியின் ‘விகல்ப்’ ஆகிய இதழ்களை உதாரணங்களாகச் சுட்டலாம்.  

இந்திக் கவிஞர்கள், புனைவெழுத்தாளர்கள் பலரும் சிறுபத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள். ‘பாரத் பவன்’ அமைப்பை உருவாக்கிய கவிஞர் அசோக் வாஜ்பாயி ‘சம்வேத்’, ‘பூர்வகிரகம்’, ‘பெஹசான்’, ‘சமாசா’, ‘பகுவசன்’ என ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அக்ஞேயா (1911-1987) இளவயது முதலே பத்திரிகைத் துறையில் ஆர்வம் காட்டியவர். சைனிக், பிரதீக், நயா பிரதீக் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். ‘நயி கவிதா’ என்ற இந்தி நவீனக் கவிதை மரபு தோன்றுவதற்கு இவர் ஆசிரியராக இருந்த ‘சப்தக்’ என்ற இதழ் முக்கியமான காரணம். மங்களேஷ் தப்ரால் (1948 – 2020 ) மத்தியபிரதேசத்திலிருந்து, பாரத் பவன் அமைப்பின் சார்பாக வெளியான ‘பூர்வகிரகம்’, ‘ஜன்சத்தா’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘ரவிவாரி’ ஆகிய இதழ்களின் மூலம் பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். ஜெய்ஷங்கர் பிரசாத், சுமித்ராநந்தன் பந்த், சூர்யகாந்த் திரிபாடி நிராலா, ராம்விலாஸ் சர்மா, யஷ்பால் போன்ற முக்கியமான எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து ஏதேனும் ஒரு சிறுபத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்தியின் புகழ்பெற்ற நாவலாசிரியர் பிரேம்சந்த் பத்திரிகைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் பல பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியுள்ளார். 1930ஆம் ஆண்டு ‘ஹன்ஸ்’ என்ற இலக்கிய அரசியல் இதழைத் தொடங்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்வதே இதன் நோக்கம். ‘ஜாக்ரன்’ என்ற இன்னொரு இதழுக்கும் ஆசிரியராக விளங்கினார்.

இந்தியின் புகழ்பெற்ற நாவல், நாடக ஆசிரியரான தரம்வீர் பாரதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தர்மயுக்’ பெரும் வாசக வரவேற்பைப் பெற்ற ஒரு இதழ். பெனட் அண்ட் கொலமன் (டைம்ஸ் ஆஃப் இண்டியா) நிறுவனத்தின் உரிமையாளர்களான சாகு ஜெயின், ரமா ஜெயின் ஆகிய இருவரும் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இந்த இதழைத் தொடங்கினர். இவர்களே பின்னர் ‘ஞானபீட’ விருதையும் நிறுவினர். வேறு சில இதழ்களையும் இந்த நிறுவனம் வெளியிட்டது. ‘சாரிகா’ அதில் முக்கியமானது. கமலேஷ்வர் ஆசிரியராக இருந்த இந்த இதழில் கவிதைகள், கதைகள் இடம்பெற்றன. அக்ஞேயாவை ஆசிரியராகக் கொண்டு ‘தினமன்’ என்ற அரசியல், பொருளாதார இதழ் வெளியானது. ‘தர்மயுக்’ போலவே, ‘சாரிகா’, ‘தினமன்’ ஆகிய இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தியில் 200க்கும் அதிகமான சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றில் சில குறிப்பிட்ட காலக் கெடுவில் வெளிவருபவையாகவும் இன்னும் சில அவ்வப்போதும் வெளியாகின்றன. ராஜஸ்தானிலிருந்து வெளியாகும் ‘அராவலி உத்கோஷ்’ என்ற இதழ் பழங்குடியினரின் எழுத்துகளுக்கானது. ஜார்கண்டிலிருந்தும் இதுபோன்ற ஒரு இதழ் வெளியாகிறது. பீகாரிலிருந்து அனந்த குமார் சிங்கை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஜனபத்’, உத்தரபிரதேசம் பதாயூனிலிருந்து அமீர்சந்த் வைஸ்யாகை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கிருதியோர்’, கோரக்பூரிலிருந்து வெளியாகும் ‘யாத்ரா’ (ஆசிரியர்-கணேஷ் பாண்டே), தில்லியிலிருந்து வெளிவரும் ‘துனியா இன் தினோ(ன்)’ (ஆசிரியர்-சுதீர் சக்சேனா), இலகாபாத்திலிருந்து ‘அனஹத்’ ( ஆசிரியர் – சந்தோஷ் சதுர்வேதி ), கொல்கொத்தாவிலிருந்து ‘லஹக்’ ( ஆசிரியர் – நிர்பய் தேவயாஷ் ), லக்னோவிலிருந்து ‘லோகோதய’ ( ஆசிரியர் – பாவனா மிஷ்ரா ) போன்ற இதழ்களும் குறிப்பிடத்தக்கவை.  

இந்தியாவின் முக்கிய இலக்கிய அமைப்புகளும் இந்தியில் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. பாரதிய பாஷா பரிஷத்தின் ‘வாகார்த்’, ஞானபீட அமைப்பின் ‘ஞானோதய’, சாகித்திய அகாதமியின் ‘ஆஜ்கல்’, தேசியப் புத்தக நிறுவனத்தின் ‘புஸ்தக் சன்ஸ்க்ருதி’ ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

2001ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்திய சிறுபத்திரிகை மாநாட்டில், டிசம்பர் 09ஆம் தேதியை சிறுபத்திரிகை நாளாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நவீன இந்தி இலக்கியத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய சில குறிப்பிடத்தக்க இதழ்களைப் பற்றி பார்க்கலாம்.

 






சரஸ்வதி

இந்தியின் முதல் பத்திரிகையாகக் கருதப்படும் இந்த இதழ் 1900ஆம் பிப்ரவரி 4ஆம் நாள், வசந்த பஞ்சமி அன்று ஆண்டு அலகாபாத்திலிருந்து வெளியானது. இதன் நிறுவனர் அலகாபாத் இண்டியன் பிரஸ்ஸின் உரிமையாளர் சிந்தாமணி கோஷ் (1854-1928). ஆசிரியர் குழுவில் ஐவர் இருந்தனர். இந்தியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாவீர் பிரசாத் திவேதி (1864-1938) 1903ஆம் ஆண்டு முதல் 1921 வரை இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். இந்த இதழ் நவீன இந்திக் கவிதையிலும் உரைநடையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திக் கவிதையிலிருந்த உருதுவின் வலுவான தாக்கத்தை குறைத்து, கடிபோலி (வட இந்தியாவில் அதிகமும் புழங்கியிருந்த பேச்சுவழக்கு ) மிகுந்த இந்தியைப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தது. அதேபோல, பெர்சிய மொழியின் பாதிப்பைக் கொண்டிருந்த இந்தி உரைநடையை சமஸ்கிருத சாயல்கொண்ட உரைநடையாக மாற்றுவதிலும் முனைப்பு காட்டியது. ‘கிரவுன்’ அளவில் நான்கு அணா விலையில் இது வெளியானபோது, விலை அதிகம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. தரமான பொருளுக்கு சற்று விலை கூடுதலாகத்தான் இருக்கும் என்று கூறி விலையை குறைக்க மறுத்துவிட்டார் சிந்தாமணி கோஷ். அரசியல், பொருளாதார அழுத்தங்களுக்காக இதழின் உள்ளடக்கத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை. 1920வரை இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய இதழ், அதன் பிறகு சமூக பொருளாதார அம்சங்களையும் சேர்க்க நேர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில் இந்தி இலக்கியத்தில் இந்த இதழ் செலுத்திய செல்வாக்கு கணிசமானது. பிரேம்சந்த், மைதிலி சரண் குப்தா, சூர்ய காந்த் திரிபாடி நிராலா உள்ளிட்ட இந்தியின் முன்னோடி எழுத்தாளர்களின் எழுத்துகள் இந்த இதழில் வெளியாயின. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் (‘அகாயிகா’ என்றே அப்போது அழைக்கப்பட்டன ), தொடர்கதைகள், பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. உயரிய தரத்திலான புகைப்படங்களும், ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களும் வெளிவந்தன.  

எண்பதாண்டு காலப் பயணத்துக்குப் பிறகு, பொருளாதாரக் காரணங்களால் 1980ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த இதழ், மீண்டும் 2020ஆம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியில் ‘சரஸ்வதி’ ஒரு முக்கியமான மைல் கல்லாக விளங்குகிறது.

2

ஹன்ஸ்

‘நாவல் பேரரசர்’ என்று அழைக்கப்படுகிற பிரேம்சந்தால் 1930ஆம் ஆண்டு வாரணாசியில் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்றும் வெளியாகிறது. இதன் தொடக்க கால ஆசிரியர் குழுவில் காந்தியும், கே.எம்.முன்ஷியும் இடம் பெற்றிருந்தனர். விடுதலைக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்புவதுமே இதன் நோக்கம். அதே சமயத்தில், நல்ல இலக்கியத்தையும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தது. அக்ஞேயாவின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. 1936ஆம் ஆண்டில் பிரேம்சந்தின் மரணத்துக்குப் பின் அவருடைய மனைவியும் இன்னும் சில நண்பர்களும் இதழை நடத்தினாலும், பொருளாதார இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில் 1956ஆம் ஆண்டு இதழ் நிறுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு ராஜேந்திர யாதவ் இந்த இதழைப் பொறுப்பேற்றுக் கொண்டு நடத்தலானார். இப்போது இதன் ஆசிரியராக சஞ்சய் சஹால் உள்ளார்.

சமூக விடுதலை, இலக்கிய மேம்பாடு உள்ளிட்ட பெரும் குறிக்கோள்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், காலப்போக்கில் தனது நோக்கத்திலிருந்து விலகியபோது அதன் போக்கும் உள்ளடக்கமும் மாற்றத்துக்கு உள்ளானது. வணிக சம்பிரதாயங்களுக்கு இடம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரேம்சந்த் இந்த இதழைத் தொடங்கிய காலத்தில், சிறுபத்திரிகை என்ற வகைமை உருவாகியிருக்கவில்லை என்றாலும் அதன் வடிவமும், உள்ளடக்கமும் அத்தகைய வகைமைக்கு உரியதாகவே இருந்தது. 1985ஆம் ஆண்டு ராஜேந்திர யாதவ் ஆசிரியராகப் பொறுப்பேற்று மீண்டும் வெளியானது. 2013ஆம் ஆண்டு அவர் காலமாகும் வரை, இந்த இதழ் இந்தி இலக்கியத்திலும் சிந்தனைத் தளத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையின் பயங்கர முகங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி பொதுவெளியில் மக்களை விவாதிக்கச் செய்யும் கடினமான பணியை இந்த இதழ் மிகத் திறமையாகக் கையாண்டது. பெண்ணியம், தலித்தியம் போன்ற புதிய கருத்தாக்கங்களை உரத்த குரலில் ‘ஹன்ஸ்’ முன்னெடுத்தது. இதன் மூலம் இந்தி இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், 2000க்குப் பிறகு இந்த இதழின் போக்கு முற்றிலும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்றும் தீவிர சிந்தனை  சார்ந்த ஒரு இதழாகக் கருதப்பட்டபோதும், ‘ஹன்ஸ்’ இதழை ஒரு சிறுபத்திரிகையாகக் கருத முடியாது.

இன்றும் தரமான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்களுடன் மாத இதழாக அச்சிலும், இணையத்திலும் வெளியாகிறது. சந்தா செலுத்தியே வாசிக்க முடியும். இதன் சிறப்பிதழ்களின் பிடிஎஃப் வடிவிலும் வாசிக்கும் வசதி உள்ளது.

3

சாரிகா

இந்தி பத்திரிகை வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த இன்னுமொரு இதழ். இந்தியின் புகழ்பெற்ற சிறுகதையாளர் கமலேஷ்வர் இதன் ஆசிரியராக இருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா இதனை வெளியிடுகிறது. இந்தியின் ‘நயி கஹானி’ இயக்கத்துக்கு இந்த இதழின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஜிதேந்திர பாட்டியா, அபிமன்யு அனந்த், மாலதி ஜோஷி என புதிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியது. பீஷ்ம சஹானி, ஸ்ரீலால் சுக்ல உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள்.

1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது பல சிக்கல்களுக்கும் தணிக்கைக்கும் உட்பட்டது இந்த இதழ். கமலேஷ்வருக்குப் பிறகு எழுத்தாளர் கன்கையா லால் நந்தன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

1981, டிசம்பர் இதழ் தஸ்தாவெஸ்கி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. குற்றமும் தண்டனையும் நாவலின் ஒரு பகுதி, அசடன், வெண்ணிற இரவுகள், அல்யோஷா, ஒரு வினோத மனிதனின் கனவு உள்ளிட்ட புனைவுகளும், நானும் என் பதிப்பாளர்களும் என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. தஸ்தாவெஸ்கியின் ஆக்கங்களைப் பற்றிய கட்டுரைகள் பலவும் வெளியாகியுள்ளன. சாமர்செட் மாமின் கட்டுரையும், தஸ்தவெஸ்கியின் கதைகளை அடிப்படையாக வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய கட்டுரையும் இதில் உண்டு.  

1982 அக்டோபர் இதழ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது. ருட்யார்ட் கிளிபிங், தாகூர், அனடோல் பிரான்ஸ், பியர்ல் எஸ் பக், நட் ஹாம்ஸன், சின்க்ளியர் லூயிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, சோல்செனிட்ஸின், ஜான் ஸ்டீன்பெக், ஐசக் பாஸவிச் சிங்கர், செல்மா லெகர்காவ் உள்ளிட்டோரின் படைப்புகளும், அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருந்தன. சிங்கர், டி.எஸ்.எலியட் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெற்றிருந்தன.

1986 அக்டோபர் இதழில் பிரேம்சந்த், சீன எழுத்தாளர் லூ சூன் ஆகியோரைப் பற்றிய சிறப்பிதழாக அமைந்துள்ளது. இருவரது புனைவுகளும், அவர்களது புனைவுலகைக் குறித்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

4

பிரதிலிபி

இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படைப்புகளை ஒருங்கே தரும் இந்த இருமொழி இதழ் ஏப்ரல் 2008இல் தொடங்கப்பட்டது. 13 இதழ்கள் வெளிவந்துள்ளன. உலகெங்கிலுமுள்ள 30க்கும் மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் கிரிராஜ் கிராது, ராகுல் சோனி, ஷிவ் குமார் காந்தி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இந்த இதழின் சுதந்திர சிறப்பிதழில், தமிழின் நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி. இந்த இதழின் தமிழ் மொழிக்கான ஒருங்கிணைப்பாளர் மீனா கந்தசாமி.

இதே இதழில் ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம் நாவலை வைத்து ஹிமான்சு பாண்ட்யாவும் அமிதேஷ் குமாரும் இணைந்து எழுதிய கட்டுரை உள்ளது. 1960களில் இந்தியாவின் ‘கிராம ராஜ்யம்’ குறித்த கற்பனையை சுக்கு நூறாக உடைத்து, கிராமங்களில் நிலவும் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கிண்டல் கேலியுடன் பகடியாக தோலுரித்துக் காட்டியது இந்த நாவல். 1947இல் அடைந்த சுதந்திரத்தைக் குறித்தும் அதன் உண்மையான மதிப்பைக் குறித்தும் இலக்கியப் பரப்பில் வெளியான முதல் விமர்சனம் இந்த நாவல். இந்திய விடுதலை இந்திய கிராமங்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் உண்மையில் என்ன கொண்டு வந்து சேர்த்தது என்பதைப் பற்றிய உண்மையான சித்திரத்தை அளிக்கும் இந்த நாவலுக்கு ஏன் உரிய மதிப்பும் கவனத்தையும் இந்திய இலக்கிய உலகம் தர மறுத்தது என்பதைக் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது.

ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இதழின் மையக் கருத்தாக அமைந்திருந்தது ‘வரலாறும் இலக்கியமும்’. இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் இடையேயுள்ள உறவு, எப்போது ஒரு வரலாற்றுப் பிரதி இலக்கியமாகவும், ஒரு இலக்கியப் பிரதி வரலாற்றின் பகுதியாகவும் மாறுகிறது என்பதை விவாதத்துக்கு உட்படுத்தி புரிந்துகொள்ளும் வகையில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.  

மொழியாக்கங்களைக் குறித்த இரண்டாவது இதழில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஆழமான சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மூன்றாவது இதழில் ‘பயங்கரவாதத்துக்கு முன்னும், மொழியாக்கங்களுக்கு முன்பும்’ என்ற பொருளிலும், ஐந்தாம் இதழ் இந்தி இலக்கிய உலகைக் குறித்தும் அமைந்துள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்களுடன், நேர்த்தியான வடிவமைப்பில் உருவாகியிருக்கும் இந்த இதழ் 2012ஆம் ஆண்டு வரையுமே வெளிவந்துள்ளது. அதன் பிறகு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. இணையத்தில் வாசிக்கவும், அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுமான வசதி உண்டு.

5

கிருத்யா

2005ஆம் ஆண்டு முதல் மாதமொருமுறை வெளியாகும் இருமொழி கவிதை இதழ் ‘கிருத்யா’, கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரதி சக்சேனாவை ஆசிரியராகக் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து வெளிவருகிறது. அழகிய வடிவமைப்பு, நவீன ஓவியங்கள், தரமான உள்ளடக்கத்தோடு அமைந்திருக்கும் இதுவொரு இணைய இதழ். பி.டி.டெத்தன், சஞ்சு பால் ஆகியோரின் அழகிய ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த இதழ்.

‘சமகாலக் கவிதை’ பகுதியில் இன்று இந்தியில் எழுதிவரும் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டிருக்கும்‘ஆசிரியருக்குப் பிடித்தவை’ என்ற பகுதி முக்கியமானது.  உலகப் புகழ்பெற்ற கவிஞர்களான எமிலி டிக்கின்ஸன், அப்துல்லா ஈஸா (பாலஸ்தீனம்), ஃபெதி சஸ்ஸி (அரபு), யூ சியான் (சீனா), எரிக் லின்டர், அய்யப்ப பணிக்கர் உள்ளிட்டோரின் கவிதைகளின் மொழியாக்கங்களை இங்கு வாசிக்க முடிகிறது. ‘நமது பெருங்கவிகள்’ என்ற பகுதியில் இந்தியாவிலும், உலக அளவிலுமான செவ்வியல் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு இதழில் ஏ.வி.சுப்ரமணியம் ‘சிருங்கார பத்யாவளி’ என்ற தலைப்பில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்த இருநூறு  தமிழ்ச் சங்கப் பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்தொகைக் கவிதைகள் தரப்பட்டுள்ளன. காளிதாஸரின் ரிது சம்ஹாரம், ஜெய் ஷங்கர் பிரசாத்தின் காமாயனி, வித்யாபதியின் சிருங்காரக் கவிதைகள் ஆகியனவும் வெவ்வேறு இதழ்களில் உள்ளன. மீரா, பைரன், வில்யம் பட்ல் யேட்ஸ், இத்தாலியக் கவிஞர் செஸாரே பவேஸ், நார்விஜியன் கவிஞர் யேன் அஸ்கார் ஹன்சேன் ஆகியோரின் கவிதைகளும் உண்டு.

6

வகார்த

கொல்கத்தாவில் உள்ள ‘பாரதிய பாஷா பரிசத்’ அமைப்பு வெளியிடும் இலக்கிய இதழ் ‘வகார்த’. 1995ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இந்த இதழில் நவீன கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், நாடகங்கள், நேர்காணல்கள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மாத இதழான இது அச்சிலும், இணையத்திலும் கிடைக்கிறது.

‘தேசத்திலும், தேசத்துக்கு வெளியிலும்’ என்ற பகுதியில் ஒரு இந்தியக் கவிஞர், ஒரு சர்வதேச கவிஞர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தரப்பட்டுள்ளன. சுப்ரமணிய பாரதி-ஹெர்மன் ஹெஸ்ஸே, மகாதேவி வர்மா-பாப்வோ நெரூதா, சூர்யகாந்த் திரிபாதி நிராலா-ஜலாலுதீன் ரூமி, கேதார்நாத் சிங்-செஸ்லாவ் மிலோஸ் என்று அமைந்திருக்கும் இந்தப் பகுதி கவனத்தைக் கவர்ந்தது.

‘உலக இலக்கியம்’ என்ற பகுதியில் சர்வதேசக் கதைகள் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ் காஃப்காவின் ‘பட்டினிக் கலைஞன்’, யூகி வாங் தியாகோவின் ‘கருப்புப் பறவை’ உள்ளிட்ட கதைகளும் ஜப்பானிய, அமெரிக்க கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு இதழிலும், குறிப்பிட்ட தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்கும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ‘செயற்கை நுண்ணறிவும் இலக்கியமும்’, ‘ஆதிவாசிகளிடையே ராம காதை’, ‘ஆட்சியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்குமான உறவு ஏன் அறுபட்டது?’, ‘இந்திய ஞான மரபும் நவீன இந்திக் கவிதைகளும்’, ‘பத்திரிகையிலிருந்து ஊடகத்துக்கான பயணம்’, ‘சித்த, நாத சம்பிரதாய இலக்கியம்’ ஆகியன இப் பகுதியில் விவாதிக்கப்பட்டிருக்கும் சில தலைப்புகள்.

7

பஹல்

இந்தியின் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஞான்ரஞ்சனை (1936) ஆசிரியராகக் கொண்டு 1973ஆம் ஆண்டு முதல் ஜபல்பூரிலிருந்து வெளியாகும் இதழ். வெளியானது முதல் இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் முதன்மை இலக்கிய இதழ்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த இதழ் இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் சிறுபத்திரிகைகளுக்கான சூழல் அவ்வளவு ஆதரவில்லாத சமயத்தில் ‘பஹல்’ வெளியானது. ஹரிசங்கர் பர்சாயி போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஆதரவு இருந்தபோதிலும், நெருக்கடி நிலையின்போது உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த இதழை முளையிலேயே கிள்ளியெறிய முயன்றார். நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த காரணத்தால், தரம்வீர் பாரதியின் ‘தர்மயுக்’, ராஜேந்திர அவஸ்தியின் ‘காதம்பினி’ ஆகிய இதழ்களும் ‘பஹல்’ மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன. எண்ணற்ற சிறுபத்திரிகைகள் நின்றுபோன அந்த சூழ்நிலையில் ‘பஹல்’ முனைப்புடன் தொடர்ந்து வெளிவந்தது.

‘பஹல்’ எண்ணற்ற முக்கியமான சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் அவதார் சிங் பாஸ், பிரெஞ்சு கவிஞர் ஆர்தர் ராம்போ, செவ்விந்தியக் கவிதைகள், பாசிஸ எதிர்ப்பு இலக்கியம், மார்க்ஸிய அழகியல், வால்டர் பெஞ்சமின், எட்வர்ட் சயீத், சமகாலக் கவிதைகள், பாகிஸ்தானில் உருது எழுத்து, சிறுகதைச் சிறப்பிதழ், சமகால சீன இலக்கியம், பங்களாதேஷ்-ஆப்பிரிக்க இலக்கிய சிறப்பிதழ் ஆகிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத் தகுந்தவை.

சிறுகதைகள், கவிதைகள், நெடுங்கவிதைகள், புத்தக அறிமுகங்கள், கட்டுரைகள், கார்டூன்கள், மொழியாக்கங்கள் என கனமான உள்ளடக்கங்களுடன் 47 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த ‘பஹல்’, ஏப்ரல் 2021இல் தனது 125வது இதழுடன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.

கடைசி இதழில், நிறுவனர் ஞான்ரஞ்சனின் கட்டுரையில் ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார் ‘பஹல் இதழ் உடலுக்கு ஒப்பானது. அதன் ஆயுள் எல்லைக்கு உட்பட்டது. அந்த உடலுக்கான முடிவு இப்போது வந்துவிட்டது. அந்த முடிவை ஏற்றுக்கொள்வோம். பத்திரிகையின் ஆசிரியர் என்பவர் துறவியாகவும், சமையல்காரராகவும், தண்ணீர் சுமப்பவராகவும், கழுதையாகவும்கூட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்யவேண்டியிருப்பதால் நல்ல உடல்நிலையில் இருப்பதும் முக்கியம். எங்களின் இந்த முடிவு சுடுகாட்டில் அல்லாமல் வரலாற்றில் பதிவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அமரர்களும் இல்லை, இப்போது இறக்கவும் இல்லை.’

8

லஹர்

19ஆம் நூற்றாண்டின் இந்தி இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான, முக்கியமான மாத இதழாக விளங்கியது. இதன் முதல் இதழ் ஜூலை 1957 இல் புகழ்பெற்ற கவிஞர் பிரகாஷ் ஜெயினை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து அஜ்மேர் (ராஜஸ்தான்) நகரிலிருந்து வெளியான ‘லஹர்’ பொருளாதார சிக்கல்களின் காரணமாக 1974ஆம் ஆண்டு நின்றுபோனது. பிரகாஷ் ஜெயின் இந்த இதழை மீண்டும் கொண்டு வருவதில் மிகுந்த தீவிரம் காட்டியதை அடுத்து 1980 இல் இது மீண்டும் வெளிவரலானது. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1986 இல் மீண்டும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக நின்றுபோனது.

25 ஆண்டுகள் தொடர்ந்து எந்த சிக்கலுமின்றி வெளிவந்த ஒரே இலக்கிய மாத இதழாக இதுவே. இன்றும் இந்தியில் எழுதப்படும எந்தவொரு முக்கியமான ஆய்வு கட்டுரையும், ‘லஹர்’ இதழைக் குறிப்பிடாமல் முழுமை பெறாது. இந்தி மொழியின் தீவிரமான, அபாரமான எழுத்தாளர்களும், படைப்புகளும் ‘லஹர்’ இதழில் வெளியாகியுள்ளன. இதன் சிரியரான பிரகாஷ் ஜெயினுக்கு இந்த இதழ் வாழ்வாதாரமாக இருந்தபோதிலும், 25 ஆண்டுகளில் தரமற்ற படைப்புகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதழின் தரத்திலும் நோக்கத்திலும் பிரகாஷ் ஜெயின் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. இதில் பல சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன; அவற்றில் 1957 ஆம் ஆண்டின் கவிதை சிறப்பிதழ், 1958 ஆம் ஆண்டின் கதை சிறப்பிதழ் மற்றும் உலகக் கவிதை சிறப்பிதழ் மிகவும் பிரபலமானவை. இதே வரிசையில் நாகார்ஜுன், முக்திபோத், ராஜ்கமல் சௌதரி அவர்களைப் பற்றிய ‘லஹர்’ சிறப்பிதழ்களும் மிகவும் முக்கியமானவை.

0

பிற மொழிகளைப் போலவே வணிக இதழ்களின் போக்குக்கு எதிராகவும், அவற்றால் கட்டமைக்கப்பட்ட கேளிக்கை மனநிலையை உடைத்து தீவிர சிந்தனையை ஏற்படுத்துவதற்காகவே இந்தியிலும் சிற்றிதழ் இயக்கமும் முனைந்தது. இதன் காரணமாக புதிய சிந்தனைகளும், எழுத்து முறைகளும், எழுத்தாளர்களும் தோன்றினர். இலக்கியத்தில் ஒரு புத்தெழுச்சி உண்டானது. வெவ்வேறு காலகட்டங்களில் கவிதையிலும் சிறுகதையிலும் புதிய போக்குகள் உருவாகி வலுப்பெற இவை காரணமாய் அமைந்தன. ஆனால், காலப்போக்கில் இந்த சிறுபத்திரிகைகளின் போக்கும் நோக்கமும் மாற்றங்களுக்கு உட்பட்டன. தொடக்கத்திலிருந்த தீவிரத்தன்மை மட்டுப்பட்டு வேறு திசைகளுக்கு அவை நகர்ந்தன. புதிய எழுத்தாளர்கள் உருவாயினர் என்றாலும் அவர்களில் பெரும்பான்மையினர் இலக்கிய வளத்தில் காட்டிய தீவிரத்தைக் காட்டிலும் தனிப்பட்ட புகழுக்காக எடுத்த முயற்சிகளே அதிகம். இன்று நவீன தொழில்நுட்ப அச்சு வசதிகளின் காரணமாக, பிறமொழியில் உள்ளதுபோலவே, இந்தியிலும் இலக்கிய நோக்கை மட்டுமே கொண்ட மின்னிதழ்கள் வெளியாகின்றன. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து இத்தகைய இதழ்கள் வெளிவருகின்றன.

வட இந்தியா முழுக்க வாசகர்களை கொண்டிருப்பதன் காரணமாக இந்தியில் வெளியாகும் சிறுபத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, அவற்றின் முழுமையான பட்டியலைத் தருவது சவாலான ஒன்று. ‘கவிதா கோஷ்’ (இந்தி கவிதைகளுக்காகவே உள்ள மிகப் பெரும் இணையதளம்), ‘பூர்வபஷ்’ போன்ற இணைய தளங்கள், இந்தியில் வெளியாகும் இலக்கிய இதழ்களின் பட்டியலையும் தகவல்களையும் தருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதழ்களைத் தவிர தத்பவ், அகார், பக்ஷதர், கதா, பரிகதா, சம்வேத், கதாக்ரம், அக்ஷர், உத்பாவனா, ஏக் அவ்ர் அந்தரீப், சௌபால், லம்ஹி, அலாவ், ஷாகி, பாட், கவிதா விகாஸ், சீதல் வாணி, ஜன்பத், சிந்தன் திசா ஆகிய சில இதழ்களையும் குறிப்பிடலாம்.

0

 

( இந்திய மொழிகளில் சிறுபத்திரிகைகள் குறித்து, ஆகஸ்டு 2026இல் காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை. )

 

Tuesday, 7 July 2026

தமிழில் முகம் காட்டும் இந்தி அகப்பாடல்கள் - பிஹாரியின் ‘சத்ஸயி’

 

0

சொல்புதிது இதழ் திட்டமிடப்பட்டபோது ஒவ்வொரு இதழிலும் சிறப்புப் பகுதியொன்றை ‘புத்தகப் பகுதி’ என்ற பெயரில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் இதழில் ‘மொழி’ குறித்தும் இரண்டாம் இதழில் ‘அறிவு’ பற்றியும் மூன்றாம் இதழில் ‘தொல் படிமங்கள்’ பற்றியுமான கட்டுரைகள் வெளியாயின. நான்காம் இதழில் ‘உணர்ச்சிகள்’ குறித்த பகுதியில் நித்ய சைதன்ய யதியின் ‘மானுட உணர்வுகள்’ என்ற அறிமுகத்துடன் பனிரெண்டாம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த ஜயதேவரின் புகழ்பெற்ற ‘கீத கோவிந்தத்’தின் சில பாடல்களையும் பிஹாரியின் ‘சத்ஸயி’ நூலிலிருந்து சில பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ‘சத்ஸயி’யின் முப்பது பாடல்களை க.மோகனரங்கன் மொழிபெயர்த்திருந்தார். இந்த முப்பது பாடல்களோடு சேர்த்து, ‘சத்ஸயி’யில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பாடல்களையும் மொழிபெயர்க்கவேண்டும் என்ற எண்ணம் அப்போது இருந்தது. ஆனால் இருபது ஆண்டுகள் கழித்தே அது சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ் பக்திகாலக் கவிதைகளைப்போலவே ஹிந்தியின் பக்தி இலக்கியம் மிகவும் பிரசித்திபெற்றது. கபீர்தாஸர், துளசிதாஸர், மீரா ஆகியோரின் கவிதைகள் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுபவை. பாடப்படுபவை. இவற்றுள் கபீரின் கவிதைகள் கூடுதலான கவித்துவத்தையும் தத்துவ உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பவை. முன்பே சில மொழியாக்கங்கள் வெளிவந்திருந்தபோதும் சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கதிர் மொழிபெயர்த்த ‘புன்னகைக்கும் பிரபஞ்சம்’ என்ற தொகுப்பு கபீரின் கவிதைகளை சிறப்பாக அறிமுகப்படுத்தும் ஒன்று. இந்த வரிசையில் துளசிதாஸிரின் கவிதைகளோ மீராவின் கவிதைகளோ தமிழில் இன்னும் தகுந்த அளவில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.

பிஹாரி லால் சௌபே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் ( 1595 – 1664 ). குவாலியரில் பிறந்தவர். முகலாய மன்னர் ஷாஜஹானின் அரசவையில் இருந்தவர். அப்போது பாரசீகம் உட்பட மேலைநாட்டு மொழிகளையும் இலக்கியத்தையும் கற்றறிந்தார். அதன் பிறகு ஆம்பர் பிரதேசத்தின் மன்னர் முதலாம் ஜெய்சிங்கின் அழைப்பின்பேரில் ஜெய்ப்பூருக்கு சென்று அங்கே வாழ்ந்திருந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற இந்த கவிதைகளை எழுதினார்.

கவிதையில் சிருங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட ‘ரீதி’ காலகட்டத்தைச் சேர்ந்த கவிதை நூல் இது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் பெரும்பாலோர் அரசவைக் கவிஞர்களாகவே இருந்தனர். சமஸ்கிருதத்தின் ‘காவிய’ வகையின் பாதிப்பில் எழுதப்பட்ட இந்த நூல் எழுநூறு கவிதைகளைக்கொண்டது. சரியான எண்ணிக்கை எழுநூற்றி பதிமூன்று. இந்தியின் பல்வேறு பேச்சுமொழிகளில் ஒன்றான ‘பிரஜ்பாஷா’வில் எழுதப்பட்டது. ‘தோஹா’ எனப்படும் இருவரி கவிதைகளால் எழுதப்பட்டவை.

தமிழ் அகப்பாடல்களை நினைவுறுத்துவதுபோல கவிதைகள் பலவும் தலைவி தோழிக்குச் சொல்வதாகவோ அல்லது தலைவனுக்குச் சொல்வதாகவோ அமைந்துள்ளன. சிருங்காரக் கவிதைகளில் காணப்படும் அங்கங்களின் வர்ணனை, பிரிவாற்றாமை, ஊடல் கூற்று, இயற்கையுடனான ஒப்புமை, விரக்தி பாவம் போன்ற பல்வேறு கூறுகளும் இவற்றில் உள்ளன.

உனது

காதணியின் பொன்னிறம்

கன்னத்தின் மிளிர்வில்

கரைந்துவிட்டது

ஆயினும்

அதில் பதிந்திருக்கும் ரத்தினத்தின்

செந்நிற ஒளி

அவன் ஆசையுடன்

பதித்திட்ட பற்தடங்களோடு

போட்டியிடுகிறது.

                  ( அங்க வர்ணணை )

காதலோடு

அவள் பாதத்தைப் பற்றிக்கொண்டு

அவன் கெஞ்சுகையில்

பேசாமல் சிரித்தவள்

வார்த்தை ஏதுமின்றி

எண்ணெய் விளக்கை

அணைத்தாள்

சம்மதத்தின் அடையாளமாய்             ( சிருங்காரம் )

 

தலைவன்

உடனில்லாதபொழுது

பொழிகிற மழை

தீயின் சுவாலையென

வருத்துகிறது என்னை

பட்டால்தான் சுடும் நெருப்பு

பார்த்தாலே எரிக்கிறது இம்மழை         ( பிரிவுத்துயர் )

 

பொய்யான கோபத்தோடு

புருவங்களை நெளித்தவாறு

அவனிடம் வெறுப்பாகப் பேசியவள்,

தன் கண்களில்

மின்னும் ஒளி

அங்கே அதைக் காட்டிக்கொடுத்துவிடுமோ

என அஞ்சியவளாக

விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.                    ( ஊடல் )

 

சன்னமான தூவானச் சிதறலுக்கு

அப்பால் எரியும்

எண்ணெய் விளக்குகளைப்போல

வெண்ணிற மென்துகில் ஊடாக

அவளுடைய உடல்

ஒளிர்கிறது                                     ( இயற்கை ஒப்புமை )

 

தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவரிடையே ஊடாடும் கவிதைகளின் நயமும் உவமைகளும் பாவங்களும் தமிழ் அகத்துறைக் கவிதைகளோடு ஒப்பிடும்போது குறைந்தளவு கவித்துவம் கொண்டவையாகவும் எளிமையானவையாகவும் தோன்றக்கூடும். இதில் பயின்றுள்ள உவமைகள் பலவும் ஆர்வமூட்டுபவையாக இல்லாதிருக்கலாம். ஆனால் இந்தி மொழியில் பதினேழாம் நூற்றாண்டில் அரசவைக் கவிஞர்கள் எழுதிய சிருங்கார இலக்கிய வகைமையைச் சேர்ந்தவை என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது இக்கவிதைகளின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், ‘பிஹாரியின் வர்ணனைகளின் சிறப்பு அதன் சுயத்தன்மையிலில்லை. மாறாக அவரது புத்திசாலித்தனமான பிரயோகங்களிலேயே இருக்கிறது எனலாம்’ என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது.

‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும் மீன்களின் வெள்ளி மினுக்கம்போல், மெல்லிய துகிலின் முகத்திரைக்கடியில் அவளது துடிப்புமிக்க விழிகள், பளபளக்கின்றன’,

‘கனத்த மேகங்களால் சூழப்பட்ட கார்கால வானம், பகலிலேயே இருள் மூடியிருக்க, இரவென்று எண்ணி, ஏமாந்த செந்தலை வாத்து, தன் இணையைக் கூவியழைக்கிறது’

போன்ற வரிகள் பிஹாரியின் தனித்தன்மையை அடையாளம் காட்டுகின்றன. சில கவிதைகளில் அவர் காட்டும் கோணங்கள் சில அபாரமான காட்சியழகைத் தருவிப்பதாய் அமைந்துள்ளன.

‘தொங்குகிற உறியில், தயிர் கலயத்தை வைப்பதற்காக, உனது கைகளை உயர்த்தும்போது, எவ்வளவு அழகாகயிருக்கிறாய். அதை வைக்கவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம். நிற்கும் நிலையிலேயே நிலைத்திரு அன்பே. மயக்கமூட்டும் உனது எழிலைப் பார்த்துப் பார்த்துத் தீரா வண்ணம்’ என்பது ஒரு காட்சியை சொல்லிய அளவிலேயே கவிதையாகியுள்ளது. அதுபோலவே, ‘தலைவனுக்கு முதுகைக் காட்டியவளாக அலட்சியமாக அமர்ந்திருந்தபோதும் தனது விரல் மோதிரத்தில் பதிந்திருந்த கண்ணாடியில் அவனுடைய அழகிய பிம்பத்தை விழச்செய்து, கண்ணாரக் கண்டவளாக அசையாதிருந்தாள்’ என்ற கவிதையில் நமக்கு அவர்காட்டுவது தலைவி அமர்ந்திருக்கும் ஒரு கோணத்தை மட்டுமே.

க.மோகனரங்கன் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றிலுள்ள கவிதைகளில் பெரும்பகுதியும் ‘தோஹா’ என்று சொல்லப்படும் இருவரிக் கவிதைகள். அவற்றை ஆங்கிலத்தில் எழுதும்போது அவ்வாறு இரண்டே வரிகளில் அமைப்பது கடினம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும்போது மூலமொழியில் அமைந்திருக்கும் அதே அதே செறிவையும் கச்சிதத்தையும் தவறவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு அவருடைய கவிதைகளைப்போலவே மிகுந்த செறிவுடனும் சொல்நேர்த்தியுடனும் அமைந்துள்ளன. இத்தன்மை பிஹாரியின் கவிதைகளை வாசிப்பதில் நமக்கு மிகுந்த அனுகூலத்தைத் தந்துள்ளன. தமிழுக்கேயுரிய சில அழகான சொல் அமைப்புகள் இக்கவிதைகளை நமக்கு நெருக்கமாக்கியுள்ளன. ‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும் மீன்களின் வெள்ளி மினுக்கம்’ என்பது தூய தமிழ்க் கவிதையன்றி வேறென்ன?

‘சன்னமான தூவானச் சிதறலுக்கு’, ‘உலகறியாத அச்சிறுமியை, ருதுதேவன் இப்போது ஆட்கொண்டிருக்கிறான்’, ‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் பிறைநிலா’ போன்ற சொற்கோர்வைகள் கவிதைகளின் மொழிபெயர்ப்புச் சாயல்களை முற்றிலுமாக களைவதாக அமைந்துள்ளன.

முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் சிருங்காரக் கவிதைகளை இன்று தமிழில் தரும்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. ஒன்று, மூலக் கவிதையின் அமைப்பையும், உத்தேசத்தையும், சாரத்தையும், கவித்துவத்தையும் பிரதிநிதிப்படுத்தும் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது. அடுத்தது, அவற்றை இன்றைய தமிழ் வாசகனுக்கேற்ப மொழிபெயர்ப்பது. இந்த இரண்டையும் திறம்பட கையாண்டிருப்பதன் வழியாக இந்தக் கவிதைத் தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் க.மோகனரங்கன்.

0

(‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா’ , ரீதிகால இந்தி அகப்பாடல்கள்,  பிஹாரி, தமிழில் – க.மோகனரங்கன். வெளியீடு – தமிழினி )

 

 

Sunday, 5 July 2026

கலையை எழுதுதல் - சுகுமாரன்



0

2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியானத் தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் இன்னொரு வலுவான பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈர்ப்பையும் சுவையையும் கட்டுரைகளிலும் காணமுடிந்தது. கட்டுரை வடிவம் மந்தமான வாசிப்புத் தன்மைகொண்டது என்றொரு பொதுவான அபிப்ராயம் உண்டு. தமிழில் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் பலவும் அந்த அபிப்ராயத்தை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. ஆனால், கட்டுரைகளையும் நேர்த்தியாக, வாசிப்புத்தன்மை கொண்டவையாக எழுத முடியும் என்று நிரூபித்தவர்கள் சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் ஆகியோர். சுகுமாரனின் கட்டுரைகளும் அந்த வரிசையில் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் தொடங்கி இன்று வரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர அறியத்தருபவை.  ஏப்ரல் 2005ஆம் இதழில் ‘பொன்னகரம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

திசைகளும் தடங்களும் (2003), ‘தனிமையின் வழி’ (2007), இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008), வெளிச்சம் தனிமையானது (2008), வேழாம்பல் குறிப்புகள் (2011), வாழிய நிலனே (2011) ஆகிய ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள், நமக்கு கவிஞரல்லாத வேறொரு சுகுமாரனை அறிமுகப்படுத்துகின்றன. ஒரு பத்திரிகையாளராகவும், இசை நாட்டிய ரசிகராகவும், திரைப்பட ஆர்வலராகவும் தான் அடைந்த அனுபவங்களை இந்தக் கட்டுரைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். கவிதைகள், புனைகதைகள், மொழியாக்கங்கள் குறித்தும் தமிழ், இந்திய, உலக இலக்கியத்தின் ஆளுமைகள் பற்றியுமான அவரது செறிவான பார்வையையும் மதிப்பீடுகளையும் தொகுத்துத் தந்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் தீவிர இலக்கியம் மேலெழுந்து வந்த பயணத்தை இக் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இலக்கியத்தை, எழுத்தை தன் வாழ்வாகக் கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவன் அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டிய சவால்களையும், சமரசங்களின்றி தன் இலக்கை நோக்கிச் செல்பவன் அடைய நேரும் லௌ கீக பின்னடைவுகளையும் இவை உணர்த்துகின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று இதைத் திரும்பிப் பார்க்கும்போது, நீண்ட இந்தப் பயணம் சவாலானதாகவும் உத்தரவாதமற்றதாகவும் இருந்தபோதிலும் இதன் வழியாக கிட்டிய அனுபவங்கள் பெருமதிமிக்கவையாகவும் எண்ணிப் பார்த்து வியக்கும்படியாகவும் அமைந்திருப்பதே அனைத்துக்குமான பதிலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

சுந்தர ராமசாமியுடனான நட்பைக் குறித்த ‘பின்னும் உயிர் வாழும் கானல்’, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்தது பற்றிய ‘மாயத்தாகம்’, தற்கொலையைக் குறித்த ‘சாவதும் ஒரு கலை’, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்ஸை சந்தித்த அனுபவம் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

ஏற்கெனவே வெளியான கட்டுரைத் தொகுப்புகள் கிடைக்காத நிலையில், இந்த நான்கு தொகுதிகளில் உள்ள கட்டுரைகளையும், பிரசுரமாகாத அல்லது தொகுக்கப்படாத கட்டுரைகளையும் இயல்வாரியாகத் தொகுத்து வெளியிடுவது மிகவும் அவசியம் என்ற எண்ணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டேன். கவிதைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைத் தேடி எடுத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக காலச்சுவடு பதிப்பகம் முயற்சி எடுத்து கட்டுரைத் தொகுதிகளை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான அவரது ஆர்வத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இந்திய மரபிசையின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர் சுகுமாரன். இசைக் கலைஞர் எம்.டி.ராமநாதனைக் குறித்து எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளின் வழியாக அந்தக் கலைஞனின் ஆளுமையையும் கலைமேதமையையும் உணர்த்திவிடுகிறார். தஞ்சையில் ஒரு விடுதி அறையில், ‘மருதமலை மாமாணியே’ பாடலின் மூலம் தமிழகமெங்கும் புகழ்பெற்ற மதுரை சோமு, சுகுமாரனுக்காக மூன்று நிமிடம் ஒரு கீர்த்தனையை பாடிய சம்பவத்தை வாசிக்கும்போது கலையின் மீதான அசலான ஆர்வம் அற்புதங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஓவியங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகள் உள்ளன, வின்சென்ட் வான்காவின் வாழ்க்கைச் சரிதமான ‘lust for life’ நூலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை ஒரு கலைஞனின் வாழ்வில் காதலும் தோல்வியும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளை வலியுடன் வெளிப்படுத்துகிறது.

கேரளத்தின் கலாச்சார அடையாளமாக விளங்கும் ‘மோகினியாட்ட’ நிபுணரான கல்யாணிக் குட்டியம்மாவைப் பற்றி சுகுமாரன் அளித்திருக்கும் சித்திரம் உணர்வுப்பூர்வமானது. நடனக் கலைஞர் சந்திரலேகாவைப் பற்றிய கட்டுரை இரண்டு வியப்பூட்டும் தகவல்களைத் தருகிறது. சந்திரலேகா ஒரு கவிஞர் என்பதும், ‘சாலையோரத்தில் ஒரு வானவில்’ என்றொரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது என்பதும் முதலாவது ஆச்சரியம். இன்னொன்று, ‘மரப்பசு’ நாவலின் நாயகி அம்மணியை தி.ஜா சந்திரலேகாவின் சாயலில்தான் எழுதியிருக்கிறார் என்பது.

தொகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் சினிமாவைக் குறித்தவை. 14 கட்டுரைகளில் அதிகமும் மலையாள சினிமாவைக் குறித்தவையே. சத்யஜித் ரேவை கல்கத்தாவில் அவர் இல்லத்தில் சந்திக்க வாய்த்த அற்புதமான தருணம் சுகுமாரனுக்கு வாழ்வில் வாய்த்த பொன்னான கணங்களில் முதன்மையானதாக இருக்கும். அதேபோல, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்த நாளில் அவருடனான உரையாடலும் அவர் சுகுமாரனின் சட்டைப் பையில் வைத்த பணத்தாளும் மறக்க முடியாதவையாகவே இருக்கும். 1980களில் கோவையில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் கவிதைகளைக் கொண்ட வானம்பாடி இதழ் வெளியீட்டை முன்னிட்டு விஜயகுமார் குன்னிசேரி எற்பாடு செய்திருந்த நிகழ்வில் கே.அய்யப்ப பணிக்கர், எம்.கிருஷ்ணன் குட்டி , கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தபோது ஜான் ஆபிரகாமும் வந்திருக்கிறார் என்ற செய்தியை வாசிக்கும்போதும் சுகுமாரனின் வாழ்வனுபவத்தின் செழுமையை அறிந்துகொள்ள முடிகிறது. வைஜயந்தி மாலா, ‘சில்க்’ ஸ்மிதா, ஓவியர் ஆதிமூலம், மலையாள திரை இசையமைப்பாளர் பாபு ராஜ் என்று கட்டுரைகளில் காணக் கிடைக்கிற பல்வேறு முகங்கள் சுகுமாரன் வெவ்வேறு கலைகளின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றன.

இந்தக் கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு இவற்றை வாசிக்கும்போதே குறிப்பிட்ட நபர்களைச் சார்ந்த வேறு சில திறப்புகளையும் வாசகன் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான். உதாரணமாக, சந்திரலேகாவைப் பற்றி ரஸ்டம் பரூச் எழுதிய நூலைக் குறித்த செய்தியும், சந்திரலேகாவின் கவிதைத் தொகுப்பைப் பற்றிய விபரமும் கூடுதல் வாசிப்புக்காக அவற்றைத் தேடிச் செல்லும் ஆர்வத்தைத் தருகின்றன. எம்.டி.ராமநாதன், மதுரை சோமு ஆகியோரைப் பற்றி வாசிக்கும்போதே மேலும் சில தனித்தன்மைமிக்க பாடல்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றைத் தேடிக் கேட்கத் தூண்டுகிறது.

இத்தொகுப்பில் காணும் பல்வேறு ஆளுமைகளின் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கியிருப்பவை அவரவர் சார்ந்த கலைகளே. அவர்களைப் போலவே கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் சுகுமாரன். அவர் எழுதிக் காட்டியிருக்கும் கலைஞர்களின் சித்திரங்களோடு சேர்த்து அவரது சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் கருத்தில்கொண்டே இத்தொகுப்புக்கு ‘வாழ்வை மீட்டிய கலை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

0

( காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘வாழ்வை மீட்டிய கலை’ கட்டுரை நூலுக்கு எழுதியுள்ள தொகுப்புரை )

 

  

ஆவநாழி - பலிபீடத்தில் இன்னுமொரு தலை

  தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டி...