இரண்டு மாத இடைவெளியில் இந்த அரங்கில் நடைபெறும் இரண்டாவது விழா இது.
விஜயா வாசகர் வட்டத்தின் விருதுகள் வழங்கப்பட்டன. இப்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருது. சிறப்பான ஏற்பாடு, சந்தோஷமாயிருக்கு என்று அண்ணாச்சியிடம் சொன்னால் அவர் அதில் திருப்தியடைய மாட்டார். ‘இன்னும் செய்யணும் கோபால்’ என்று அடுத்தவொரு திட்டத்தைப் பற்றிக் கூறுவார். வேலாயுதம் அவர்களுக்கு இதுவும் போதாது. மாதம் ஒரு விழாவை நடத்தினால்கூட அவருக்கு சந்தோஷம்தான்.
புத்தகங்களைக் கொண்டாட வேண்டும். எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும். அதன் வழியாக வாசகர்களையும் மகிழ்வித்துக் கொண்டாட வேண்டும். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியும் நிறைவையும் தரும்.
என்றும் மாறாத உற்சாகத்துக்கு ‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்தான்.
எனவே இது ‘பெரிதினும் பெரிது’ கேட்பவர்களுக்கான விழா.
கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகளைப் போலவே முக்கியமானவை மொழிபெயர்ப்புகளும். இன்று தமிழில் எழுதப்படும் புனைவுகளுக்கு சமமான அளவில் மொழியாக்கங்கள் செய்யப்படுகின்றன. தரமான விதத்தில் வெளியிடப்படுகின்றன. மொழியாக்கங்களுக்கான வரவேற்பு மகிழ்ச்சிதரும் விதத்தில் உள்ளது.
‘திசை எட்டும்’ இதழ் மொழியாக்கத்துக்கெனவே வெளிவருகிறது. குறிஞ்சிவேலன் தொடர்ந்து பல ஆண்டுகளாக அதை அர்ப்பணிப்புடன் நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் மொழியாக்கங்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.
மொழியாக்கத்தின் தேவையையும் மதிப்பையும் கருத்தில்கொண்டே சாகித்ய அகாதமி அதற்கென ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மொழிக்கும் மொழிபெயர்ப்பு விருதுகளை வழங்குகிறது.
இதெல்லாம் போதாது, மொழிபெயர்ப்பாளர்களை அங்கீகரிக்கவேண்டும், கௌரவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த விருதை வழங்க விஜயா வேலாயுதம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
0
தமிழில் எழுதப்பட்ட படைப்புகளை வாசித்தால் போதாதா? மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்கவேண்டும்? என்ற கேள்வி எப்போதும் உண்டு.
ஒன்று, ஒரு தனி மனிதனின் அனுபவ எல்லை என்பது மிகக் குறைவானது. எழுபது வயது வரை வாழ்ந்தாலும்கூட அவனது வாழ்க்கை அனுபவங்களுக்கு ஒரு எல்லை உண்டு. அவனது கட்டுக்கயிறு அனுமதிக்கும் அளவே அவனால் சுற்றிவர முடியும். எழுபது எண்பது வயது வாழ்ந்த பின்னும்கூட கடற்கரையை கண்ணால் பார்க்காத எத்தனையோ பேர் உண்டு. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டாதவர்கள் உண்டு.
இலக்கியமும் வாசிப்பும் அந்த எல்லையைக் கடக்க உதவுகின்றன.
ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் வெவ்வேறானவை. ஒன்றுபோல் இன்னொன்றில்லை. ஒருவனின் அனுபவம் இன்னொருவனுக்கு பாடம். மொழிபெயர்ப்பின் வழியாகவே நமக்கு அன்னியமான நிலத்திலும் மொழியிலும் வாழும் ஒருவரது அனுபவங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு மொழிபெயர்ப்பின் வழியாக அனுபவங்கள் பகிரப்படும்போதுதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற உணர்வு ஏற்படுகிறது.
நமது ஆயுளும் வாழிடமும் அனுபவ வெளியும் மிகவும் சுருங்கியது. எல்லைக்குட்பட்டது. உப்புக் கடலை நக்கிக் குடிக்க முயலும் பூனைகள் நாம்.
நம்மால் எத்தனை தொலைவு எம்பிக் குதித்தாலும் கிட்டும் அனுபவம் சொற்பம்தான். நாம் அறிந்த நிலவெளியை வாழ்க்கையை மட்டுமே நமது மொழி இலக்கியத்தின் வழியாக அறிய வாய்ப்பிருக்கிறது. நம் கட்புலனுக்கு எட்டாத உலகின் பிரமாண்டத்தையும் அதன் வெவ்வேறு நிலவெளிகளையும் இலக்கியங்களே காட்சிப்படுத்துகின்றன.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பெற்றுக் கொள்வதற்கும் தருவதற்கும் நிறைய உண்டு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாபசான் உள்ளிட்ட மேற்கத்திய சிறுகதை மேதைகளின் கதைகளை புதுமைப்பித்தன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்தனர். தாகூரின் ஆக்கங்களை மொழிபெயர்த்தார் பாரதி. அதன் பிறகாகவே தமிழில் நவீன சிறுகதைகள் எழுதப்படலாயின.
தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பாளிகள் பலரும் மொழிபெயர்ப்பின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் தம் சொந்த படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பிரமிள், சுந்தரராமசாமி உள்ளிட்ட அனைத்து இலக்கிய படைப்பாளிகளும் தொடர்ந்து மொழியாக்கங்களை செய்துள்ளனர். புதுமைப்பித்தன் தனது ஆக்கங்களுக்கு இணையாக ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.
க.நா.சு தனது எழுத்துக்களுக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும் மொழிபெயர்ப்புக்காகத் தந்ததே அதிகம். வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்காகவே செலவிட்டுள்ளார்.
க.நா.சு இல்லாது தமிழில் அன்று நூட் ஹாம்சனின் (Knut Hamsun) பசியையும், ஸெல்மா லாகெலெவ்வின்
(Selma Lagerlöf) மதகுருவையும், அன்புவழியையும், வில்லியம் ஸரோயனின் (William Saroyan) மனுஷ்ய நாடகத்தையும் நாம் வாசித்திருக்க முடியாது. ஐரோப்பிய நாவல்களைக் குறித்த அறிமுகங்கள். சுருக்கங்கள். மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தளங்களில் தமிழில் நாவல் என்கிற இலக்கிய வடிவம் குறித்த அறிமுகத்தையும் அக்கறையையும் வலியுறுத்திய க.நா.சுவின் உழைப்பே இன்றைய தமிழ் நாவல்களின் எழுச்சிக்கு உந்துதலாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்க வேண்டும்.
துளசி ஜெயராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ராம்நாத், டி.எஸ்.சொக்கலிங்கம், த.நா.குமாரசாமி போன்றோர் பிறமொழிச் செல்வங்களை தமிழில் தருவதற்காகவே பாடுபட்டனர்.
எழுத்தையே நம்பி வாழ்ந்த ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகவே வங்காளத்திலிருந்து ஏராளமான மொழியாக்கங்களை முனைந்து செய்தனர்.
பிரம்மராஜன் மீட்சியிலும், கோணங்கி கல்குதிரையிலும் பிறமொழி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் தந்தனர்.
எம்.எஸ் என்று அறியப்படும் எம்.சிவசுப்பிரமணியம் கிழவனும் கடலும் உள்ளிட்ட முக்கிய படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்தார்.
ஆர்.சிவக்குமார், ஜி.குப்புசாமி போன்றவர்கள் மொழியாக்கங்களை மட்டுமே செய்து வருகிறார்கள்.
புவியரசு, சிற்பி உள்ளிட்ட மூத்த கவிஞர்களும் மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
கன்னடத்திலிருந்து பாவண்ணனும் மலையாளத்திலிருந்து சுகுமாரன், குளச்சல் யூசுப், நிர்மால்யா, யூமா வாசுகி உள்ளிட்டோரும் இந்தியாவின் பிறமொழி இலக்கியப் படைப்புகளை தமிழில் தருகிறார்கள்.
தமிழின் நேரடி படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகள் இன்று வெளியாகின்றன. சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் மட்டுமே மொழியாக்கங்களை வெயிட்ட சூழல் இன்றில்லை. தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் அனைத்துமே இன்று மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றன.
மூன்றாவதாக, மொழிபெயர்ப்பின் வழியாகத்தான் நம்மால் இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களை அறிந்துகொள்ள முடிகிறது. அண்டை மாநிலத்தவர்களான பஷீரையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும் பைரப்பாவையும் சிவராம் கரந்தையும் கிரீஷ் கர்நாட்டையும் நம்முடைய எழுத்தாளர்களாக ஆக்கியவை மொழியாக்கங்களே.
‘நாவல் சக்கரவர்த்தி’ என்று கொண்டாடப்படும் பிரேம்சந்தின் ‘கோதான்’ போன்ற ஒரு நாவலை சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்திருக்காவிட்டால் அதை நாம் வாசித்திருக்க முடியாது.
மலையாளத்திலிருந்து பி.கே.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கட்டும்’ நாவலை ஆ.மாதவனும், எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் இட’த்தை குறிஞ்சிவேலனும் தமிழில் தந்திருக்காவிட்டால் அந்த நாவல்களை நாம் அறிந்திருக்கமாட்டோம்.
எஸ்.எல்.பைரப்பாவின் ‘பருவம்’ நாவலையோ ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலையோ எப்படி வாசித்திருக்க முடியும்.
‘ஆரோக்கிய நிகேதனம்’ இன்றளவிலும் இந்தியாவில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் முதன்மையான ஒன்று. தாராசங்கர் பானர்ஜி வங்காளத்தில் எழுதிய அந்த நாவலை த.நா.குமாரசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.
வங்கத்திலும் கன்னடத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட இந்த நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்திய நாவல்களாக புகழ்பெற்றன. அவ்வாறு இல்லாமல் போயிருந்தால் இவை அந்தந்த மொழிகளில் மட்டும் அறியப்பட்ட பிராந்திய நாவல்களாக நின்று போயிருக்கும்.
இந்திய இலக்கியத்துக்கு மட்டுமல்ல, உலக இலக்கியத்துக்குமான வாசலும் வழியும் மொழிபெயர்ப்புதான்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு ராதுகா பதிப்பகமும் சோவியத் முன்னேற்றப் பதிப்பகமும் நமக்குக் கொண்டு வந்த ரஷ்ய இலக்கிய நூல்களை நம்மில் பலரும் அறிவோம். எத்தனை புத்தகங்கள். உயர்ந்த தரத்தில் பிரமாதமான தாளில் குறைவான விலையில் தரப்பட்ட புத்தகங்கள். மக்ஸிம் கார்கியையும் துர்கனேவையும் செகாவையும் நமக்கு அறிமுகப்படுத்தின.
தல்ஸ்தோய் எனும் மாமேதையை, அன்னா கரீனாவையும் போரும் அமைதியையும் ஆங்கிலம் அறியாதவர்கள் படித்திருக்கவே முடியாது.
ஆன்டன் செகாவ் எனும் சிறுகதை மேதையை எப்படி நம்மால் வாசித்திருக்க முடியும்.
கார்சியா காப்ரியல் மார்க்வெஸ் எனும் ஒரு கலைஞனையும் அவனது அபாரமான கதைகளையும் மொழிபெயர்ப்பின்றி நம்மால் அறிந்துகொண்டிருக்க முடியாது. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ போன்ற ஒரு நாவலையும் STRANGE
PILGRIMS போன்றவொரு சிறுகதைத் தொகுப்பையும் நம்மால் வாசித்திருக்க முடியாது.
நல்ல மொழிபெயர்ப்புகளே உலகின் பல நல்ல எழுத்தாளர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச் சின்னத்தை சி.மோகன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜப்பானிய எழுத்தாளர்களான ஹராகி முராகாமி, யாசுநேரி கவபட்டா ஆகியோரின் கதைகள் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். பண்பாட்டையும் மொழியையும் இலக்கியத்தையும் அளவிட, அறிந்துகொள்ள உதவும் துலாக்கோல் மொழிபெயர்ப்பு ஆகும்.
இன்னொரு மொழியின் சிந்தனைப் போக்கை மாற்றங்களை கண்டுணர்ந்து அதைப் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் நம்முடைய சிந்தனையிலும் பார்வையிலும் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புண்டு.
இரண்டு முக்கிய மாற்றங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். முதலாவது பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்பு. இரண்டாவது தமிழ் இலக்கியம் பிறமொழியில் உருவாக்கிய மாற்றம்.
பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்புக்கு உதாரணமாக தலித் இலக்கியத்தைச் சொல்லலாம். தலித் இலக்கியம் பற்றிய எண்ணமும் சிந்தனையும் தமிழ் வாழ்வில் எழுத்தில் இருந்தபோதும், அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணனு’ம், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரி’யும் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்த பின்பே அந்தச் சொல்லாடல்களும் உரையாடல்களும் வலுப்பெற்றன. தலித் இலக்கியம் தமிழில் வலுப்பெற அத்தகைய மொழிபெயர்ப்புகள் காரணிகளாகின.
தமிழ் இலக்கியம் பிறமொழி ஒன்றின் மேல் செலுத்திய தாக்கத்துக்கு உதாரணமாக நவீன மலையாளக் கவிதைகளைக் குறிப்பிடலாம். 1990களின் இறுதி வரையிலும் பெரும்பகுதி ஓசைநயத்துடன் பாடப்படும் தன்மையைக் கொண்டிருந்தது மலையாளக் கவிதை. … ம் ஆண்டு குற்றாலத்தில் தமிழ் மலையாள கவிதைப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்தார் ஜெயமோகன். தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், கலாப்ரியா, க.மோகனரங்கன், ஆகியோரும் மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ராமன், அன்வர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த பட்டறைக்குப் பிறகே நவீன கவிதைகள் அடங்கிய புதுநானூறு என்ற தொகுப்பை மலையாளத்தில் தந்தார் ஆற்றூர் ரவிவர்மா. மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கவிதைகள் மலையாள நவீனக் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மலையாளக் கவிதை தமிழின் நவீனக் கவிதை அம்சங்களை உள்வாங்கி திசைமாறியது.
மொழியாக்கங்களை தகுதிக் குறைவான படைப்பாக அணுகும் மனநிலையிலிருந்து இப்படியொரு கேள்வி எழுமானால் வருத்தத்துக்குரியது. உண்மையில் மொழியாக்கம் இல்லாதுபோயிருந்தால் அல்லது அவற்றை தகுதிக் குறைவானவையாக ஒதுக்கியிருந்தால் நம் வாசிப்பு விகாசம் பெற்றிருக்க முடியாது. தமிழ் இலக்கியமும் புதிய உயரங்களை அடைந்திருக்க முடியாது.
0
உண்மையில் மொழிபெயர்ப்பது பெரும் சவாலான காரியம். மூல நூலை ஆழமாக வாசித்து அதை உள்வாங்கி அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் வாக்கியத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். எழுதப்பட்ட மொழியின், நிலத்தின், பண்பாட்டின் பின்னணியைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம்.
இரண்டு மொழிகள் தெரியும் என்பதற்காக மொழிபெயர்த்துவிட முடியாது.
தமிழில் பிழையின்றி ஒழுங்காக எழுதத் தெரியவேண்டும். மொழிபெயர்க்கப்படும் ஒரு படைப்பு தமிழ் வாசகன் வாசிக்கும் வகையில் தமிழின் மொழி இலக்கணத்துடன் மொழிபெயர்க்கப்படவேண்டும். தமிழ்த்தனத்துடன் இருக்கவேண்டும்.
ஒரு நாவலையோ சிறுகதையையோ மொழிபெயர்த்து முடிக்கும்போது ஏற்படும் அயர்ச்சியும் சோர்வும், இதற்கு பதிலாக சுயமாகவே ஒரு நாவலை, சிறுகதையை எழுதிவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்.
இத்தனைக்குப் பிறகு மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் வெளியான பிறகு யாராவது அதைப் படித்தார்களா? என்று தெரியாமலே கிணற்றில் போட்ட கல் போன்று ஆழமான ஒரு மௌனம் நிலவும்போது எதற்கு இந்த வேலை என்ற மனச்சோர்வுதான் மிஞ்சும்.
ஒருவகையில் தேங்க்லெஸ் ஜாப்.
இதெல்லாம் இவர்களுக்குத் தெரியும். மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து மொழிபெயர்க்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கைக் கூடியபடியே உள்ளது. இன்று இணைய இதழ்களின் வரவால் மொழிபெயர்ப்புக்காக தேவைகள் கூடியுள்ளன. பெண்கள் பலரும் மொழியாக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.
லதா அருணாச்சலம். இல.சுபத்ரா, கார்குழலி, சசிகலா பாபு,
கயல், ஸாஹிதா, ஜான்சிராணி என்று நீண்ட ஒரு பட்டியல் உண்டு.
இவர்களையெல்லாம் அங்கீகரிக்கும்விதமாகத்தான் இன்று இந்த மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
0
கே.நல்லதம்பி
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘காச்சர் கோச்சர்’ நாவலை வாங்கினேன். தவறவிடக் கூடாத நாவல் என்று நண்பர் பரிந்துரை செய்திருந்தார். விவேக் ஷான்பாக்கின் கன்னட நாவல். முக்கியமான நாவல். வாசித்து முடித்த பின் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்தேன். கே.நல்லதம்பி. இதுவரை அறிமுகமாத பெயர். கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதென்றால் பாவண்ணன்தான். புதிதாக ஒருவர் மொழிபெயர்த்திருக்கிறார், அதுவும் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார் என்பதால் பாவண்ணனை அழைத்துப் பேசினேன். நல்லதம்பி அவர்களைக் குறித்துச் சொன்னார்.
நல்லதம்பி அவர்களும் ‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்கொண்டவர்.
காச்சர் கோச்சர் வெளியானது 2019ம் ஆண்டு. இப்போது 2022. இந்த மூன்று ஆண்டுகளில் நல்லதம்பி அவர்கள் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூல்களின் எண்ணிக்கை 17. யாத்வேஷம் என்ற புகழ்பெற்ற நாவல், மயில் புராணம் எனும் பிரிவினைக் கதைகள் ( இந்த்ஜார் ஹூசேன் ), புத்த மணியோசை, மகிழம்பூ மணம், இதிகாசம் போன்ற சிறுகதைத் தொகுப்புகள், கேலிச் சித்திர வரலாறு, அம்ரிதா நினைவுகள் போன்ற புனைவல்லாத நூல்கள் எனத் தொடர்ந்து அவரது மொழியாக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இது ஒரு பக்கம். இந்த விருது இந்த மொழியாக்கங்களுக்காக அவருக்கு வழங்கப்படவில்லை. தமிழிலிருந்து கன்னடத்துக்கு அவர் செய்திருக்கும் மொழியாக்கங்களுக்காகவே இந்த விருது.
ஆம். தமிழிலிருந்து கன்னடத்துக்கு நூல்களை இவர் மொழிபெயர்த்திருப்பதுதான் சிறப்பு. சு.ரா வின்
‘புளியமரத்தின் கதை’ தமிழில் வெளியானது .. ம் ஆண்டு. .. வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழின் புகழ்பெற்ற தி.ஜாவின் சிறுகதைகள், கன்னடத்துக்கு இப்போதுதான் போயிருக்கின்றன. ‘கண்டாமணி’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்த்திருக்கிறார். பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’,‘மாதொரு பாகன்’, ‘பூக்குழி’ மூன்று நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். காந்தியை கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ‘பிறகொரு இரவு’
கன்னட வாசகர்களிடையே பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, காந்திய வழியில் பாவண்ணனின் சத்தியத்தின் ஆட்சி கட்டுரைத் தொகுப்பு, ப.கண்மணியின் ‘இடபம்’, வண்ணநிலவன், அ.வெண்ணிலா, கலைச்செல்வி ஆகியோரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு கன்னட இதழ்களில் வெளிவந்துள்ளன.
இது ஒரு முக்கியமான நிகழ்வு. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் அளவுக்கு தமிழ் படைப்புகள் மற்ற மொழிகளுக்கு செல்வதில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வந்திருக்கிறது. கே.நல்லதம்பி அந்தக் குறையை, கன்னட மொழி அளவில் நீக்கியிருக்கிறார். குறிப்பாக, நவீன இலக்கிய ஆக்கங்களை அவர் உடனுக்குடனாக கன்னடத்துக்கு மொழிமாற்றம் செய்யும்போது இன்றைய தமிழ் இலக்கியத்தின் தரத்தையும் புதிய முயற்சிகளையும் பிறமொழியினர் அறிந்துகொள்ள முடிகிறது.
அத்தனை எளிதான காரியமல்ல இது. எனக்கு இந்தி தெரியும். இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பது முடியாது. ஏனெனில், இந்தி எனது புழங்கு மொழி அல்ல. அன்றாடப் புழக்கத்தில் அல்லாத ஒரு மொழியில் எழுதுவது சாத்தியமில்லை. கே.நல்லதம்பிக்கு கன்னடம் புழங்குமொழி. தமிழும். எனவேதான் அவரால் இரண்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய முடிகிறது.
திரு.கே.நல்லதம்பிக்கு இப்போது வயது
60. கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இத்தனை நாள் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வி எழும்.
சில மாதங்களுக்கு முன்பு மாலைவேளையில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. உறவினர் வீட்டுக்கு வந்திருந்தவருக்கு இரவு பதினோரு மணிக்குத்தான் ரயில். நிறைய நேரமிருந்தது. வாய்ப்பிருந்தால் சந்தித்துப் பேசலாம் என்று அழைத்தார். ரயில் நிலையம் அருகில் ஒரு உணவகத்தில் சந்தித்தோம். இரண்டு மணி நேரம் உரையாடினோம்.
அப்போது அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட செய்திகள் மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நல்லதம்பி மைசூரில் பிறந்தவர். பூர்விகம் தமிழ்நாடு. தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக 35 வருடம் பணி.
ஹைதராபாத்தில்தான் வசித்திருக்கிறார். இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். எனவே, தமிழ், கன்னடம் தவிர தெலுங்கு, இந்தி, மராட்டி, ஆங்கிலம் என்று இன்னும் பல மொழிகளிலும் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும்.
ஓய்வு பெற்ற பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார்.
ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலாளராக 35 ஆண்டுகள் பணியிலிருந்த கே.நல்லதம்பியை அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் வாடிக்கையாளர்களில் சிலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் இந்தப் பணியின் காரணமாக தமிழிலும் கன்னடத்திலும் பலருக்கும் அவர் அறிமுகமாகியுள்ளார். கன்னட தினசரிகளில் அவரது புகைப்படங்கள் வெளியாகின்றன.
தமிழில் திசை எட்டும் விருது, ஸ்பேரோ விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். கன்னடத்தில் குவெம்பு விருது … ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.
இலக்கியம் நமக்கு சோறு போடாது என்பது யதார்த்தம்.
நம்மில் பலரும் நமது வாழ்வின் பெரும்பகுதியை நமது பொருளாதாரத் தேவைகளுக்காக ஏதேனும் ஒரு வேலையில் செலவிட நேர்கிறது. ஓய்ந்த பொழுதில்தான் நமக்கு விருப்பமான இலக்கியப் பணிகளில் ஈடுபட வாய்க்கிறது. முழு நேர இலக்கியப் பணி என்பது தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை. கே.நல்லதம்பி அவர்களுக்கு இந்தத் தெளிவு இருந்திருக்கிறது. எனவேதான், பணிக்காலம் முழுக்க அவர் இந்தத் திசையையே எட்டிப் பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற பிறகு இலக்கியத்துக்கு வருகிறார். பொதுவாக ஓய்வு பெற்ற பிறகு ஏற்படும் சோர்வுக்கு இடம் தராமல் மிகத் தீவிரமாய் இப்பணியில் ஈடுபடுகிறார். அதன் பலன்தான் இத்தனை நூல்கள், அங்கீகாரங்கள், விருதுகள்.
மொழிபெயர்ப்பதோடு நின்றுவிடவில்லை. வாசிப்பு அனுபவம் அவருடைய புனைவுத் திறனையும் தூண்டிவிட்டுள்ளதன் பலனாக ‘அத்தர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழிலும், கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் இக்கதைகளை எழுதியிருக்கிறார் கே.நல்லதம்பி. இதுவே ஒரு புதுமையான முயற்சி. புதிய அனுபவங்களைத் தரக்கூடிய கதைகள்.
கன்னடத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
நல்லதம்பி அவர்களின் மொழியாக்கம் மிக இயல்பானது. சிக்கலற்றது. தமிழ் வாசகர்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு எழுதப்படுவது. கன்னடத்திலும் அவ்வாறுதான் இருக்கவேண்டும்.
தமிழுக்கும் கன்னடத்துக்குமான ஒரு வலுவான பாலமாக விளங்கும் வகையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் கே.நல்லதம்பி அவர்களும் பெரிதினும் பெரிது கேட்பவர். செயற்கரிய செயல்களைச் செய்பவர். எனவே, இந்தப் பரிசுக்கு மிகவும் தகுதியானவர். தொடர்ந்து நல்ல பல நூல்களை தமிழிலிருந்து கன்னடத்துக்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் அவர் தரவேண்டும்.
0
எம்.ஏ.சுசீலா
விஜயா வேலாயுதம் அய்யாவைப்போல, நல்லதம்பி அவர்களைப்போல ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பதில் பிடிவாதமாயுள்ள இன்னொருவர் எம்.ஏ.சுசீலா.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முன்பே குறிப்பிட்டதுபோல ஆங்கிலம் வழியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்பவர்களின் பட்டியல் மிக நீண்டது. அப்படியிருக்க இவரை ஏன் இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்?
பெரிதினும் பெரிது கேட்கும் இவரது குணந்தான்.
பத்து பக்கம், நூறு பக்கமுள்ள சிறுகதைகளையோ நாவல்களையோ இவர் மொழிபெயர்ப்பது கிடையாது. ஐநூறு பக்கம், ஆயிரம் பக்கம் என்றால்தான் மொழிபெயர்ப்பார்.
ரஷ்ய பேரிலக்கிய நூல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட காலத்தில் தமிழ் மொழியாக்கங்கள் அத்தனை சுலபத்தில் கிடைக்காது. நூலகங்களில் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். என் சி பி எச் வெளியிட்ட ஆங்கில நூல்களையே படிக்க முடிந்தது. குறிப்பாக தஸ்தாவெஸ்கியின் படைப்புகள் எவையும் தமிழில் வெளிவந்திருக்கவில்லை. ‘வெண்ணிற இரவுகள்’ சிறுகதைத் தொகுதி மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது.
இன்று நிலைமை அவ்வாறு இல்லை.
ரஷ்ய பேரிலக்கியங்களை தமிழில் அதிக அளவில் வாசிக்கக் கிடைப்பதற்கு முக்கியமான காரணம் எம்.ஏ.சுசீலாதான். தஸ்தாவெஸ்கியின் எல்லா எழுத்துகளும் இன்று தமிழில் உள்ளதென்றால் அதற்கும் காரணம் எம்.ஏ.சுசீலாதான். 1000 பக்கங்களுக்கும் மேலுள்ள ‘குற்றமும் தண்டனையும்’, 800 பக்கங்களைக் கொண்ட ‘அசடன்’, தஸ்தாவஸ்கியின் புகழ்பெற்ற ஆக்கங்களான ‘நிலவறைக் குறிப்புகள்’, ‘இரட்டையர்’, ‘வெண்ணிற இரவுகள்’ என எல்லாவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். ‘தஸ்தாவெஸ்கியின் தமிழ் குரல்’ என்று இவரைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதுதான்.
இது எளிமையான பணியன்று. ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற ஒரு நாவலை மொழியாக்கம் செய்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம். ஆயிரக்கணக்கான பக்கங்கள். எண்ணற்ற கதாபாத்திரங்கள். பக்கம் பக்கமாக நீளும் மனவோட்டங்கள். விவாதங்கள். எண்ணமும் ஆற்றலும் ஒன்றுகூடி ஒவ்வொரு நாளும் ஊக்கம் குறையாமல் சோர்வடையாமல் எழுதினால் மட்டுமே சாத்தியம். சுசீலா அதை சாதித்திருக்கிறார்.
தஸ்தாவெஸ்கியின் மீது பெரும் பித்து இருந்தாலொழிய இப்படிப்பட்ட பேய்த்தனமாக வேலை பார்க்க முடியாது.
ருஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த எழுத்துகளை ஆங்கிலத்தில் பலர் மொழிபெயர்த்துள்ளார்கள். ஏதேனும் ஒரு ஆங்கில மொழியாக்கத்தை வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கவில்லை சுசீலா. ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் குறைந்தபட்சம் மூன்று மொழியாக்கங்களை ஒப்புநோக்கிய பின்பே தமிழில் அதை மொழி மாற்றம் செய்திருக்கிறார்.
நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் தஸ்தாவெஸ்கியின் ஆவிதான் சுசீலாவின் மீது இறங்கியிருக்கவேண்டும்.
எம்.ஏ.சுசீலா காரைக்குடியில் பிறந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற பின் மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இன்று தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டிருக்கிறார் சுசீலா. அவர் ஒரு சிறுகதையாசிரியர். 1979ம் ஆண்டு அவரது முதல் சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியிருக்கிறார். நான்கு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.
‘யாதுமாகி’ என்றொரு நாவலை எழுதியுள்ளார்.
ஆறு கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
அவருடைய சிறுகதைகளோ நாவலோ கட்டுரைகளோ பெற்றுத் தராத ஒரு அடையாளத்தை அவரது மொழியாக்கங்கள் பெற்றுத் தந்துள்ளன. எம்.ஏ.சுசீலா என்றொரு ஆற்றல் மிக்க பெண்மணியை, அவரது திறனை நமக்குக் காட்ட அவர் தாஸ்தாவெஸ்கி எனும் மேதையின் எழுத்தைப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
ஆம் நண்பர்களே. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை அவர் மொழிபெயர்த்தபோது அவருடைய வயது 56. தனது பணி ஓய்வுக்குப் பிறகுதான் இந்த மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பொதுவாக பணி ஓய்வுக்குப் பின் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரன் பேத்திகளுடன், வேளாவேளைக்கான மாத்திரைகளுடன் இனி என்ன செய்வதென்ற யோசனைகளுடன் கழிப்பதுதான் வழக்கம்.
எம்.ஏ.சுசீலாவுக்கு இன்னொரு சிக்கல். பணி ஓய்வுக்குப் பிறகு அவர் தில்லியில் வசிக்க நேர்கிறது. நண்பர்களை சந்திக்கவோ தெரிந்த இடங்களுக்குப் போகவே வாய்ப்பில்லாத சூழல்.
இந்த நெருக்கடிகளைக் கடக்க, தன்னைச் சூழும் வெறுமையை, தன்னையே மீட்டுக்கொள்ள அவர் கையிலெடுத்த மிகப் பெரும் சவால்தான் தஸ்தாவெஸ்கி. எதைப் பற்றி சிந்தனையுமில்லாமல் தன்னை மூழ்கடிக்கும் ஒரு வேலையை அவர் தேர்ந்தெடுத்ததன் விளைவுதான், இன்று அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்குக் காரணம்.
முன்பே சொன்னதுபோல எடுத்த எடுப்பிலேயே ‘பெரிதினும் பெரிது’ கேட்டார். மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்த பிறகு சிறிய வேலைகளைத் தொடங்கவில்லை. தஸ்தாவெஸ்கியில் தொடங்குகிறார். அவரது சிறுகதைகளையோ குறுநாவல்களையோ அல்ல.
‘குற்றமும் தண்டனையும்’ என்ற பேரிலக்கியத்தில். அந்த மொழியாக்கம் வெளியாகி சுசீலாவை அடையாளம் காட்டியது. எல்லோரும் இவர் யார் என்று திரும்பிப் பார்த்தோம்.
இன்று எம்.ஏ.சுசீலாவின் அடையாளம் தஸ்தாவெஸ்கிதான். இல்லை தஸ்தாவெஸ்கியின் தமிழ் அடையாளம் எம்ஏ சுசீலா என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
0
‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்கொண்டவர்கள் என்று இதுவரை நான் மூன்று நபர்களை இங்கேக் குறிப்பிட்டேன். விஜயா வேலாயுதம். நல்லதம்பி. சுசீலா.
மூவருமே வயதில் மூத்தவர்கள். ஆனால் அவர்கள் செய்துகொண்டிருக்கும் காரியம் இளைஞர்கள்கூட செய்யத் தயங்குகிற காரியம். செயற்கரிய செயல்களைச் செய்யும் பெரியார்கள்.
புத்தகங்களை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வேன், எல்லோரையும் வாசிக்கச் செய்வேன் என்று வாசகர்களை உருவாக்கி, எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு பாலமாக விளங்குபவர் அய்யா வேலாயுதம்.
ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் தஸ்தாவெஸ்கியைப் படிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி, குறையை நீக்கி, யாரும் வாசிக்கலாம் தஸ்தாவெஸ்கியை என்று தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் எம்.ஏ.சுசீலா.
தமிழின் சிறந்த படைப்புகளை கன்னட வாசகர்களும், எழுத்துலகமும் அறிந்துகொள்ளும் மேலான எண்ணத்துடன் நல்ல தமிழ் எழுத்துகளைத் தொடர்ந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார் கே.நல்லதம்பி.
இவர்கள் மூவரும் நமக்கு பெரும் உந்து சக்திகள். ‘வயசாயிருச்சுங்க, நேரமே இல்லை’ என்று சோம்பிக் கிடக்கும் பலரையும் தட்டி எழுப்பும் குறும்புக்காரர்கள். இன்னும் செய்யவேண்டியவை எத்தனையோ உள்ளன என்று இளைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவுபடுத்துகிற முகமாகவே இந்த விழா இன்று நடக்கிறது. எம்.ஏ.சுசீலாவுக்கும் நல்லதம்பிக்கும் அளிக்கும் விருது என்பது இன்னும் பலரையும் இத்தகைய செயற்கரியக் காரியங்களைச் செய்வதற்கான அழைப்பாகும்.
0
( கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் ஆண்டுதோறும் கே.எஸ்.சுப்ரமணியம்
நினைவு மொழிபெயர்ப்பு விருதுகளை வழங்கி வருகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புப்
பணிகளுக்காக எம்.ஏ.சுசீலாவுக்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும்
மொழியாக்கம் செய்தமைக்காக கே.நல்லதம்பிக்கும் விருதளிக்கப்பட்டது. விழாவில் ஆற்றிய
உரையின் எழுத்து வடிவம். )