1
முதலில், தர்பாரி ராகம் நாவலைப் பற்றி.
தர்பாரி ராகம் நாவலை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். இந்திய நாவல்களின்
வரிசையை எழுதி வைத்து, தேடி வாங்கி வாசித்த நாட்கள் அவை. அதுவரையிலும் வாசித்த பிற
இந்திய நாவல்களிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட நாவலாக இருந்தது. இப்போது இ ந்தக் கருத்தரங்குக்காக
மீண்டும் இதை வாசித்தபோது, இன்று வரையிலும் இப்படியொரு நாவல் தமிழிலோ வேறு எந்த இந்திய
மொழியிலோ எழுதப்படவில்லை என்பது தெளிவானது.
மொழிபெயர்ப்பின் வழியாகவே நமக்கு பிற இந்திய மொழி நாவல்கள் வாசிக்கக்
கிடைக்கின்றன. சாகித்திய அகாதமி, தேசியப் புத்தகக் கழகம் ஆகியவற்றின் மூலமாக நமக்குக்
கிடைக்கும் பிற மொழி நாவல்களில் பெரும்பாலானவை ஏமாற்றம் தருவதில்லை. தரமான இலக்கியங்களையே
அவை நமக்குத் தந்திருக்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, ‘தர்பாரி ராகம்’ போன்ற
இன்னொரு நாவல் இந்திய அளவில் இதுவரை எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.
ஏன் அப்படியொரு எண்ணம் தோன்றுகிறது? முதலாவது காரணம், இந்த நாவலின்
தனித்தன்மைமிக்க கதைமொழி. முழுக்க முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வாக்கியத்துக்கு
வாக்கியம் அங்கதமும் கேலியும் கிண்டலுமாக ஒரு நாவல் இருக்குமென்றால் அது தர்பாரி ராகம்தான்.
ஒரு கவிதையை, சிறுகதையை, கட்டுரையை கேலியும் கிண்டலுமாக எழுதுவது சாத்தியம். ஒரு நாவலை
அவ்வாறு எழுதுவது என்பது பெரும் சவால். சில பக்கங்களுக்குப் பிறகு வாசகனுக்கு சலிப்பு
தட்டிவிடும். உரைநடை மொழியில் மட்டுமல்லாமல் அரசியல், வரலாறு, உலக இலக்கியம், இந்திய
இலக்கியம், நாட்டு நடப்புகள், கவிதை, சினிமா, பத்திரிகைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும்
மேலான அறிவும் புலமையும் அவற்றை தகுந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து எழுதும் நுட்பமும்
இருந்தால்மட்டுமே அத்தகைய ஒன்றை முயல முடியும்.
ஸ்ரீலால் சுக்லவின் அத்தகைய புனைவுத்திறனை இந்நாவல் முழுக்கப் பார்க்க முடிகிறது.
தர்பாரி ராகம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பத்தியிலும்,
ஒவ்வொரு வாக்கியத்திலும் அங்கதச் சுவையை உணர முடியும். நுட்பமான கேலி, சுருக்கென்ற
தைக்கக்கூடிய கிண்டல், யோசிக்க வைக்கும் விதத்தில் விமர்சனங்கள் என அனைத்தையும் சுருக்கமாகவும்
செறிவாகவும் பார்க்க முடியும். இவ்வாறான ஒரு எழுத்து நடைக்கு வெறும் சொற்கள் மட்டும்
உதவாது. மரபுத் தொடர்கள், பழமொழிகள், கிராமத்து சொலவடைகள் என அனைத்தையுமே கையாள வேண்டும்.
இந்த நாவலில் அவை திறம்பட கையாளப்பட்டுள்ளன. இது இந்தியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும்
இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான ஒரு கதைமொழியை
இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை என்று
இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இரண்டாவது காரணம், நாவல் எடுத்துக்கொண்ட களம். விடுதலைக்குப் பிறகான
இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும் பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச்
சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள்,
சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும்
எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப் போவதன் அவலச் சித்திரத்தை இது காட்டுகிறது.
சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக, புதிய சொற்களையே
உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு, சாதி அடுக்குகள்,
அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு வன்முறை நீடித்ததைப்போலவே.
இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன, அவ்வளவுதான். சுக்லா
இந்த நாவலை எழுதி 70 வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆனால், அவர் நாவலில் எழுதிக் காட்டிய
இந்திய அரசின் நடைமுறைகளில் பலவும் இன்றும் அப்படியேதான் உள்ளன. சிறிதும் திருந்தாமல்
சிறிதும் மாறாமல்.
நாவலின் கதை மிகச் சுருக்கமானது. சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு
முதுகலை வரலாற்றுப் பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு,
வைத்தியரான தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின்
கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
சூதுவாது தெரியாத கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும்
அதிகாரத்தையும் நேரடியாகப் பார்க்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட
கிராமிய அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன.
தேர்தல் என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத்
தவிர போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும்
இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை
அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து
நொறுங்குகின்றன.
70ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும்
மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை
இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா தெரியவில்லை.
இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும்
அறிந்த ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச்.
சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா.
2
இரண்டாவதாக இந்த நாவலை எழுதிய லால் சுக்லவைக் குறித்து.
ஸ்ரீலால் சுக்ல ( 1925 – 2011 ) உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில்
உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இந்தி இலக்கியத்தில்
முதுகலைப் பட்டம் பெற்றவர். 1947ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் துறையில் சேர்ந்தார்.
தன் பணிக்காலத்தில் ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு
பதவியில் பணியாற்றினார். பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும்
விதத்தை நேரில் பார்த்தறிந்த அவர் பின்னர் தன் புனைவுகளில் அவற்றை பயன்படுத்தினார்.
1950களில் அவர் எழுதத் தொடங்கினார். கதைகள், கட்டுரைகள். அவருடைய எழுத்தில தொனித்த
அங்கதச் சுவைக்காக அவர் அறியப்படலானார்.
1969ஆம் ஆண்டு ‘தர்பாரி ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசும்,
2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2011ஆம் ஆண்டு ஞானபீட பரிசும் வழங்கப்பட்டன.
இந்தி இலக்கியத்தின் முதன்மையான அங்கத எழுத்தாளர் லால் சுக்ல ஒருவரே.
லால் சுக்லாவின் படைப்புகளில் உள்ள அங்கதம் என்பது வெறும் கேலியும் கிண்டலும் மட்டுமல்ல.
‘தர்பாரி ராகம்’ நாவலில் மட்டுமல்லாது அவரது பிற நாவல்களில், சிறுகதைகளில், கட்டுரைகளிலும்
அத்தகைய தொனி உண்டு. எனவே, அவ்வாறான அவரது கிண்டல் கேலியில் உள்ளடங்கிய சினம் உள்ளது.
அறச்சீற்றம் உள்ளது. அவரது சினத்துக்கும் அறச்சீற்றத்துக்குமான அடிப்படைக் காரணம் என்ன?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு
வயது 21. ஒரு இளைஞனாக அவர் விடுதலைக்குப் பிறகான இந்தியாவைக் கண்டிருக்கிறார். அப்போதைய
தலைவர்கள் சுதந்திர இந்தியாவைக் குறித்த எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.
கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும்
ஏற்படவில்லை என்பதை அவர் நேரடியாக அனுபவித்திருக்கிறார். அதுவும் உத்தரப்பிரதேசம் போன்ற
மாநிலத்தில் ஏமாற்றத்தின் வீரியம் சற்று கூடுதலாக இருந்திருக்கவேண்டும். அந்த ஏமாற்றம்தான்
அவ்வாறான ஒரு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகத் துயரமான வாழ்வைக் கடக்க ஒரே வழி
அதைச் சிரித்துக் கொண்டே வாழ்வதுதான். லால் சுக்லவும் தன் சினத்தை, சீற்றத்தை அங்கதமாக
மாற்றிக் கொண்டு வெளிப்படுத்தினார்.
இந்த நாவல் வெளியானபோது, உண்மையில் பெரிய அளவுக்கு வரவேற்பு இருக்கவில்லை.
முன்னணி எழுத்தார்களில் சிலருமே கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ‘முற்றிலும் எதிர்மறையான,
அவநம்பிக்கைமிகுந்த நாவல்’ என்றும் ‘பெரும் சோர்வைத் தரும் பெரும் நாவல்’ என்றும் விமர்சனங்கள்
வந்துள்ளன. பலரும் இந்த நாவலின் குரலை விரும்பவில்லை. ஆனால், சாகித்திய அகாதமி விருது
வழங்கப்பட்ட பிறகு இந்த நாவலின் மீதான பார்வை பெருமளவு மாறியது. அனைவரும் இதனை கவனிக்கத்
தொடங்கினார்கள்.
பத்து நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் அங்கதக் கட்டுரைகளையும்
எழுதியபோதும் லால் சுக்லவின் பெயர், தர்பாரி ராகம் நாவலுடன் உறுதியாக ஒட்டிக்கொண்டுவிட்டது.
லால் சுக்லவைப் பற்றியும் அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம்
ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும் வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடன் நினைவுக்கு வந்தார்.
‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம் மிகுந்த முழு நாவலை தமிழில் எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர்
என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள்,
அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள், திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின்
மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, சமூக அவலங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் கண்டும்காணாமல்
பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து காட்டமான, கூரிய
விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ இன்றி
நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல்,
தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும் கேலியும் கிண்டலுமாக
தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு கடக்க முடியாதபடியான
கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கும்.
லால் சுக்லவின் ‘தர்பாரி ராக’த்துக்கு இணையான ஒரு நாவலை, இத்தனை ஆண்டுகள்
கழித்தும், எழுத முடியுமானால் அது நாஞ்சில்நாடன் மனதுவைத்தால் மட்டுமே முடியும்.
3
மூன்றாவதாக, இதன் மொழியாக்கம் குறித்து.
சரஸ்வதி ராம்நாத் இந்தியிலிருந்து ஆறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
அவரது மொழியாக்கங்கள் சரளமாகவும் சீராகவும் அமைந்திருக்கும் என்பதை அறிவோம். ஆனால்,
தர்பாரி ராகம் அனைத்திலும் சிறப்பான ஒன்று. காரணம், மூல நாவலில் உள்ள இந்தி, பிற புனைவுகளில்
உள்ள இந்தியைப் போன்றதல்ல. முன்பே குறிப்பிட்டதுபோல, ஒவ்வொரு பத்தியிலும் எண்ணற்ற மரபுத்
தொடர்கள், பழமொழிகள், சொலவடைகள் நிறைந்துள்ளன. வரலாறு, அரசியல், தத்துவம், காவியங்கள்,
கவிதைகள், திரைப்பட பாடல்கள், பத்திரிகைகள் ஆகிய எண்ணற்ற, வெவ்வேறு குறிப்புகளும் உண்டு.
இவை அனைத்தையும் புரிந்துகொண்டு தமிழில் வாசிப்பவர்களுக்கு புரியும்வண்ணம் மொழிபெயர்க்க
வேண்டும்.
இதன் இரண்டாவது முக்கியமான சவால், இந்த நாவலின் அங்கத மொழி. மூலமொழியில்
உள்ள கேலி, கிண்டல், குறுஞ்சிரிப்பு என ஒவ்வொன்றையும் துல்லியமாகப் புரிந்துகொண்டு
தமிழில் அதே தொனியைக் கொண்டு வரவேண்டும். வெகு சிரமமான அந்தக் காரியத்தை மிகத் துல்லியமாக
தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருப்பதே பெரும் சாதனை. தமிழ் வாசகர்களுக்கு மிகவும்
அந்நியமான நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் என்றாலும் வாசிக்கும்போது இந்த வித்தியாசங்களை
சற்றும் உணராதவண்ணம் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியில் புழங்கும் மரபுத்
தொடர்களுக்கும், பழமொழிகளுக்கும், சொலவடைகளுக்கும் இணையான தமிழ் தொடர்களைக் கண்டறிந்து
பொருத்தமாக இட்டிருக்கிறார். லால் சுக்லவின் அங்கதத்தின் பின்னணியில் உள்ள உத்தேசத்தை
மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே வீரியம் குறையாமல் அதை மொழிபெயர்க்க முடியும்.
உதாரணத்துக்கு ஒரு பத்தியை மட்டும் குறிப்பிடலாம்.
இன்னும்கூட சிலருக்கு நினைவிருக்கலாம். காந்தி என்பவர் பாரத நாட்டில்
பிறந்தவர். இந்த மண்ணிலே தோன்றியவர். அவருடைய அஸ்திகளுடன் அவரது கொள்கைகளையும் திரிவேணி
சங்கமத்தில் கரைத்தபின், அந்த மகானின் நினைவாக இனிப் பெரிய கட்டடங்களும் சதுக்கங்களும்
எழுப்பப்படும் என்ற முடிவெடுத்தபின் சிவபால்கஞ்சில் தோன்றியது இந்தச் சதுக்கம்.
இந்தி மொழியின் ஒரு தன்மை, எந்தவொரு புதுச் சொல்லையும் அப்படியே எடுத்துக்
கொள்ளும். உதாரணமாக, ‘ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ்’ என்ற சொல்லை அப்படியே அதன் எழுத்துருவில்
எழுதிவிடுவார்கள். அதை இந்தியில் மொழிபெயர்க்க, தமிழில் செயற்கை நுண்ணறிவு என்று மாற்றியிருப்பதுபோல,
பெரிய அளவுக்கு மெனக்கெட மாட்டார்கள். சரஸ்வதி ராம்நாத் இந்தியின் இந்த குணாம்சத்தை
மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பவர். இந்த நாவலின் மூலத்திலும் ஆங்கிலச் சொற்கள்
பலவும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரக், டிரைவர், கிளீனர், டாப் கியர், ப்ரேக்,
ஸ்டேஷன் வாகன், பியூன், போலீஸ் ஸ்டேஷன், ரிஜிஸ்டர், லென்ஸ், முசாபரி பங்களா, ஜில்லா
போர்டு, இன்டர்மீடியட் காலேஜ், பாலிஷ், பிரின்ஸ்பால் என்று உதாரணங்களைச் சொல்லலாம்.
இந்தச் சொற்களை அவர் தமிழ்ப்படுத்த முனையவில்லை என்பதாலோயே இந்த நாவலின் கதைமொழியை
அப்படியே தக்கவைக்க முடிந்திருக்கிறது. இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய
முக்கியமான அம்சம் இது.
இந்த நாவலை வாசித்தவுடனேயே, சரஸ்வதியம்மாவின் மொழிபெயர்ப்பில் வெளியான
அக்ஞேயாவின் ‘நமக்கு நாமே அந்நியர்கள்’ நாவலையும், அமிருதா பிரீதமின் ‘ராதையுமில்லை
ருக்மிணியுமில்லை’ நாவலையும் படித்துப் பார்த்தேன். இவ்விரு நாவல்களின் களங்களும் மொழியும்
முற்றிலும் வேறானது. பனிக்குள் புதைந்திருக்கும் மரவீட்டில் மாட்டிக்கொண்ட இரு பெண்களின்
மனநிலையை விவரிக்கும் இறுக்கமான நாவல் ‘நமக்கு நாமே அந்நியர்கள்’. கணந்தோறும் மரணத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கும் இருவருக்கிடையிலான அழுத்தமான சூழலில் வேறு எதற்குமே இடமில்லை.
அதேபோல, ஓவியர் ஒருவர் தனது வயதான காலத்தில் தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் நாவல்
‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’. இந்த நாவல்களை வாசிக்கும்போது, சரஸ்வதி ராம்நாத்
தன் மொழிபெயர்ப்பு மொழியை மூல நாவல்களின் மொழியையும் களங்களையும் புரிந்துகொண்டு எப்படி
மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
1995ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது
சரஸ்வதி ராம்நாத்தை நேரில் சந்தித்தேன். அப்போது இலக்கியத்துக்கு நான் புதுமுகம். அதிகமும்
எதுவும் எழுதியிருக்காத காலம். இந்தி தெரியும் என்பதால் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கிறார்
என்பது எனக்கு அவர்மீது கூடுதல் அபிமானத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு அவரது
மொழியாக்கங்களை வாசித்தேன். பாவண்ணன் மூலமாக அவரைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வேன்.
இத்தனை காலத்துக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் தமிழில் அவரைப்
பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாவண்ணன் இரண்டு கட்டுரைகளை
எழுதியுள்ளார். சுபமங்களாவில் ஒரு நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்தியிலிருந்து தமிழுக்கு
அளப்பரிய செல்வங்களைக் கொண்டு வந்தவருக்கு, தமிழிலிருந்து இந்திக்கு கவிதைகளை, கதைகளை,
நாவல்களை மொழிபெயர்த்தவருக்கு நாம் அளித்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இவ்வளவுதான்.
சாகித்திய அகாதமி வெளியிடும் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அவரைப் பற்றிய
நூல் வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தில் பாவண்ணன், ஒரு முன்வரைவுடன் அகாதமிக்கு விண்ணப்பித்தார்.
துரதிர்ஷ்டவசமாக அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில்,
அந்த முயற்சியை மீண்டும் மேற்கொண்டு, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அவரது
நூல் வெளிவர ஆவண செய்யவேண்டும். அவர் எழுதிய முன்னுரைகள், நேர்காணல்கள், அவரைப் பற்றிய
கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும். சரஸ்வதி ராம்நாத்துக்கு
நாம் செய்யவேண்டிய கைமாறு அதுதான்.
0
இறுதியாக
பிற இந்திய மொழிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு
வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில
நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர்
சரஸ்வதி ராம்நாத்.
இந்திய நாவல்கள் என்று பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள்,
ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே
மாறிப் போனவை.
இந்த இரு நாவல்களுக்கு சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி
ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை
தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால், லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை
தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பிரித்துக்
காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப் பொறுத்தவரையில் 70
ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது. அரசியல் அதிகார அமைப்புகளும்
ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை.
இந்த நாவலின் தலைப்பு ‘தர்பாரி ராகம்’. இசை மேதை தான்சேனால் உருவாக்கப்பட்ட
இந்த ராகம், கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுவது.
ஆனால், லால் சுக்ல, இந்த ராகத்தின் பெயரை நாவலின் தலைப்பாக வைக்கவில்லை. கிராமத்தையே
ஆட்டிப் படைக்கும் வைத்தியரின் பாடலையே அனைவரும் பின்பாட்டாக பாடுகிறார்கள் என்ற பொருளில்
தலைப்பை வைத்திருக்கிறார். அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான்
ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது
மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும்
அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.
அந்த வகையில் இன்றும் தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை
மிக்க தன் அங்கதச் சுவையாலும் இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி
ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.
0
( சரஸ்வதி ராம்நாத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை செல்லம்மாள்
மகளிர் கல்லூரியில் 12.03.2026 அன்று நடந்த கருத்தரங்கில் வாசித்த கட்டுரை )



