வங்க எழுத்தாளர் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ நாவலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
Thursday, 30 April 2026
ஒரு காதல், இரு புதினங்கள்
வங்க எழுத்தாளர் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ நாவலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
Sunday, 26 April 2026
சொல்லின் நிழலில் இளைப்பாறும் ஒரு கவி
மொழியின் உச்சம் கவிதை.
சொற்களின் ஆகச் சிறந்த சாத்தியங்களை செறிவுடனும் சிக்கனத்துடனும் அதேசமயம் ஆழமாகவும்
சோதித்துப் பார்க்கும் புனைவு வடிவம் கவிதையே. எழுதப்பட்ட சொற்களிலிருந்து நேரடியாக
வெளிப்படும் கவிதையும், சொற்களின் பின்னிருந்து மறைமுகமாக வெளிப்படும் கவிதையும் ஒன்றல்ல.
குறிப்பிட்ட சொற்களிலிருந்து வெளிப்படும் இவ்விரண்டு கவிதைகளையும் ஒரே வாசகன் ஒரே நேரத்தில்
புரிந்துகொள்வது வெகு அபூர்வம். கவிதையின் கண்கட்டு வித்தை அது. ஒரு அர்த்தம் வெளிப்பட்டவுடனே
இன்னொரு அர்த்தம் மாயமாகிவிடும். எல்லாக் கவிதைகளிலும் பொருள் தேட முடியாது. சில கவிதைகள்
பொருள்படாத தன்மை கொண்டவை. சில கவிதைகள் நேரடியாக புரியாமல் அடம்பிடிக்கவும் செய்யும்.
ஆனால், சொற்களின் வழியாக அபாரமான அனுபவங்களை சாத்தியமாக்கும், மந்திரம்போல. சொல்லும்
பொருளும் அனுபவமுமான அபூர்வக் கலவையே கவிதை.
சொல்லும் மொழியுமே கவிஞனின்
கருவி. மொழியின் திட்பத்தையும் சொல்லிணைவுகளின் மூலம் உருவாக்க முடிகிற சாத்தியங்களையும்
புரிந்துகொண்டு கனகச்சிதமாக அவற்றை கையாளும் அடிப்படை திறனை கவிஞர்களிடம் பொதுவாகவே
எதிர்ப்பார்க்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நாவிலும் ஏட்டிலும் உருண்டு புரண்டு
திரண்டு நிற்கும் செம்மொழிக் கிடங்கில் சேர்ந்து கிடக்கும் சொற்கள் ஒவ்வொன்றிலும் காலமும்
ஞானமும் கனிந்து செறிவுற்றுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் கவி மரபின் நீண்ட சங்கிலித்
தொடரின் புலப்படாத கண்ணியொன்று கட்டாயம் பிணைந்திருக்கும். முன்தோன்றி மூத்த கவிகளின்
எழுத்தாணியால் கீறப்பட்ட அச்சொற்களில் பல இன்று பயன்பாடற்று களஞ்சியங்களில் காத்துக்கிடக்கின்றன.
பல்லாயிரம் ஆண்டு கால மூப்பையும் முதிர்ச்சியையும் கொண்ட சொற்கள் ஒவ்வொன்றும் தக்க
இடத்தில் தகுதிக்கேற்ப கோர்த்தெழுதும் கவிஞனின் கைபடக் காத்திருக்கின்றன.
கவிதைகளை பொதுவாக மூன்று
வகைகளில் பிரிக்கலாம். ஒரு அனுபவத்தை, உணர்வை எளிய சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்
கவிதைகள் முதல் வகை. இரண்டாவது வகை கவிதை, அனுபவத்தையோ உணர்வையோ சற்று செறிவான, அடர்த்தியான
சொற்களின் வழியாக வெளிப்படுத்துபவை. முதல்வகை கவிதையில் மொழியோ சொல்லோ மேலெழாமல் குறிப்பிட்ட
அனுபவமும் உணர்வுமே முக்கியத்துவம் பெற்றிருக்கும். மாறாக, இரண்டாம் வகை கவிதையில்
சொல்லப்பட்ட அனுபவத்தையும் உணர்வையும் தாண்டி மொழியின் திண்மையும் சொற்களின் அழுத்தமும்
கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இவ்விரண்டுக்கும் அடுத்துள்ள மூன்றாம் வகை
கவிதையில், மொழியும் அனுபவமும் கலந்தும் கரைந்தும் வெளிப்பட்டிருக்கும். அனுவத்திலிருந்து
மொழியையும், மொழியிலிருந்து அனுபவத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டும் ஒன்றாகியிருக்கும்.
கவிதைக்கு வரையறைகள்
பல உண்டு. வசதிக்கேற்ப, இடத்துக்கேற்ப அந்த வரையறைகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால்,
வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் வரையறை முக்கியமானது. ‘ஆழ்ந்த அமைதியினின்று மேலெழும்
மனஉணர்வுகளில் வேர்கொண்ட ஆற்றல்மிகு உணர்ச்சிகளின் தன்னிச்சையான மிகுவெளிப்பாடே கவிதை’
என்ற அவரது வரையறையில் உள்ள ‘தன்னிச்சையான மிகுவெளிப்பாடு’ என்பது முக்கியமானது. தன்னிச்சையான
வெளிப்பாடு என்பது கவிஞனின் திட்டமிடுதலுக்கும் முன்முடிவுகளுக்கும் அப்பாற்பட்டது.
குறிப்பிட்ட கணத்தில் கவிஞனின் போதத்தையும் மீறி தானாக வெளிப்படும் உணர்வுகள் அசலானவை,
உண்மையானவை. அத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்கள் கவிதைகளில் தனித்துத் தெரியும்.
அவற்றின் வழியாகவே குறிப்பிட்ட கவிதை மேலெழவும் உதவும். மேலே சொன்ன மூன்றாம் வகை கவிதைகளில்
இத்தகு தன்னிச்சையான வெளிப்பாடுகள் கூடுதலாக வெளிப்பட்டிருக்கும். அனுபவம், மொழி நேர்த்தியைத்
தாண்டி தன்னிச்சையான வெளிப்பாட்டின் மூலம் ஒருவகை பித்துநிலையை எட்டக்கூடிய வரிகளையும்,
சொற்றொடர்களையும் கொண்டிருக்கும்.
கவிதைகளைப் புரிந்துகொள்ள
முயலும்போது பலசமயம் இத்தகைய மூன்றாம் நிலை பித்துநிலைக் கவிதைகள் தனித்து விலகி நிற்கும்.
எளிதில் வசீகரிக்காது. அனைவருக்கும் பிடித்தமானவைகளாக இருக்காது. முதல், இரண்டாம் வகைக்
கவிதைகளுக்கு இத்தகைய சவால்கள் இல்லை. இதில் வாசிப்பவனின் மொழி, கவிதை அனுபவத்துக்கும்
கணிசமான பங்குண்டு. மூன்றாம் நிலைக் கவிதைக்கு ஒருவகையான தயாரிப்புகள் அவசியமாகின்றன.
0
2
தமிழில் சிறுபத்திரிகைகள்
கோலோச்சியிருந்த காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் க.மோகனரங்கன். ‘வானம்பாடி’யின்
கவிதைகளிலிருந்து விலகி முற்றிலும் அக வாசிப்புக்கான இறுக்கமான கவிதைகள் எழுதப்பட்ட காலம். ‘கணையாழி’
முக்கியமான ஒரு களமாக அமைந்திருந்தது. ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டன. கவிஞர்கள் உருவாகினர்.
1987ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய க.மோகனரங்கனின் முதல் கவிதைத் தொகுப்பு
2000ஆம் ஆண்டில் வெளியானது. 36 கவிதைகளைக் கொண்ட அந்த சிறியத் தொகுப்பின் வழியாக அறிமுகக்
கவிஞராக அறியப்பட்ட க.மோகனரங்கன், இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழின் தவிர்க்க
முடியாத கவிஞர் என்ற உயரத்தை எட்டியிருக்கிறார்.
க.மோகனரங்கன் தொடர்ந்து
அதிகமாக எழுதக்கூடியவரல்ல. கவிதைகளுக்கு இடையே போதிய இடைவெளியை பேணுபவர். கவிதையை கருக்கொண்டு
உருவாக்கி பிரசவித்த களைப்பை நீக்க கூடுதலான ஓய்வை வேண்டுபவர். நிதானம் அவருடைய முக்கியமான
குணாம்சம். அவரது கவிதைகளையும் அந்த குணாம்சம் கட்டுத்திட்டத்துடனும் செறிவுடனும் அமைக்க
உதவுகிறது.
இந்த நிதானத்தின் மறுபக்கத்தில்,
தனது கவிதைகள் முன்னமே சொல்லப்பட்ட எதுமாதிரியில்லாமல் இருக்கவேண்டும் என்ற கவனத்தையும்
முந்தைய தன் கவிதைகளைப்போலவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையையும் தொடர்ந்து
பார்க்க முடியும். தன் ஒவ்வொரு கவிதைக்கும் அவர் இவ்வாறு இட்டுக்கொள்ளும் சமரசமில்லாத
விதிமுறைகளே அவரது கவிதைகளில் தனித்தன்மை மிக்க அடையாளங்களை, முத்திரைகளை உருவாக்கித்
தந்திருக்கின்றன.
மொழி அவருக்கு அநாவசியமாக
செலவிடக்கூடாத செல்வம். சொற்களை ஊதாரித்தனமாக வீணாக்காமல் மிகக் கவனமாக முடிந்த வரைக்கும்
தேவைக்கும் சற்று குறைவானவற்றைக் கொண்டே எழுதிப் பார்க்க முனைபவர். நான்கு சொற்களுக்கு
பதிலாக ஒன்றரை சொற்களை மட்டுமே பயன்படுத்த முடியுமா என்று நான்கு நாட்கள் யோசித்துக்
கொண்டிருப்பவர். அதனை கவிதைகள் பலவற்றில் செய்தும் பார்த்திருக்கிறார். அதனால்தான்
அவரது கவிதைகளை வாசிக்கும்போது சொற்கள் ஒவ்வொன்றும் அத்தனை வலுவுடனும் மதிப்புடனும்
நினைவில் பதிகின்றன. செல்லாக் காசாக எந்தவொரு சொல்லும் பல்லிளிப்பதில்லை.
தமிழ்க் கவிதை மரபில்
ஆழமான பரிச்சயம் உண்டு. ஆழங்கால்பட வாசித்தவரல்ல என்றாலும் அதன் சாரத்தையும் ஆழத்தையும்
தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். வாசித்தவற்றை கசடற கற்று உள்ளுக்குள் தேக்கியதன் பலனை
அவரது கவிதையமைப்பில், சொற்பிரயோகங்களில், இறைச்சித்தன்மையில், படிமங்களின் நேர்த்தியில்
அனுபவித்தறிய முடியும்.
மொழியின் வழியாக மெல்ல
மெல்ல புரியாக்கி அதனுள் அனுபவத்தை பொதிந்து திருகித் திருகி நகர்த்தி வலுவான ஒரு படிமத்தைக்
கொண்டு கருப்பொருளை ஆழத்துள் ஊன்றி முடுக்கிவிடுவது அவரது பொதுவான கவிதைப் பாணி. கவிதையை
கவனத்துடன் வாசித்து முடிக்கும்போது முடுக்கிய புரியின் விசை சட்டென்று விடுபட்டு கவிதையும்,
கருப்பொருளும் தெறித்து விரியும் அற்புதத்தைக் கொண்டிருக்காத அவரது கவிதைகள் மிகச்
சிலவே. துல்லியத்துடனும் எழிலுடனும் அடுக்கப்பட்ட மகரந்த அடுக்குகளைக் கொண்ட மலர்களை
ஒத்த கவிதைகளில் அவரது சொற்தேர்வுகள் வியக்கத்தக்கவை. கலைக்கப்பட்ட சதுர வில்லைகளை
ஒழுங்கான வரிசையிலும் இடத்திலும் அடுக்கி முழுப் படத்தையும் உருவாக்குவதற்கு ஒப்பானது,
கவிதைகளில் சொற்களை அடுக்குவது. க.மோகனரங்கனின் கவிதைகளில் அவர் அடுக்கிய சொற்களைக்
கலைத்தாலோ வரிசை மாற்றினாலோ கவிதையின் அழகு குலைந்துவிடும். கலைநேர்த்தியுடன் கவிதையில்
சொற்களை வார்க்கும் நுட்பம் க.மோகனரங்கனின் கவிதைகளின் தனிச் சிறப்பு.
0
3
சில முன்னோடிகளின் லேசான
சாயலைக் கொண்ட, இயல்பான மொழியமைப்புடனான கவிதைகளுடன் ‘நெடுவழித் தனிமை’ 2000ஆம் ஆண்டு
பிரம்மராஜனின் முன்னுரையுடன் வெளியானது.
எதிர்ப்படும்
என்னை யாரோ போல்
ஏறிடும்
உனது பார்வை வழி
நுழைகிறேன்
காலி செய்து
காலம் வெகுவான
வீடொன்றினுள்
தூசடைந்த சுவரில்
நிறம் மங்கிய கிறுக்கல்
படிக்க வொட்டாமல் தடுக்கிறது
வெள்ளெழுத்து. ( அந்தி )
இந்தக் கவிதையை க.மோகனரங்கனின் ‘வார்ப்பு’ (template) என்று சொல்லலாம். இதே வார்ப்பில் அடுத்தடுத்த தொகுப்புகளில் கவிதைகள் உண்டு. அதே சமயம் பின்னாள்களில் எழுதிய கவிதைகளில் சொற்களின் முறுக்கம் இன்னும் கூடுதலாக இருந்தது.
‘பரிணாமம்’, ‘இடம் பெயர்ந்த கடல்’, ‘இடைத்தூரம்’, ‘தரிசனம்’, ‘கல் திறந்த கணம்’, ‘காகிதத்தில் கிளைத்த காடு’ போன்ற குறிப்பிடத்தக்க கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு க.மோகனரங்கனின் வருகையை உறுதிப்படுத்தின.
ஏழு வருடங்களுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டில், ‘தமிழினி’ வெளியீடாக ‘இடம் பெயர்ந்த கடல்’ வெளியானது. முதல் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கவிதைகளுடன் புதிய கவிதைகளையும் கொண்டிருந்த இத்தொகுப்பில் எவரது சாயல்களுமற்ற தனக்கான கவிதைப் பாணியை அடைந்திருந்தார் மோகன். செறிவும், சொற்களுக்குள் அர்த்தத்தைப் புதைக்கும் நேர்த்தியும் கூடி வரப்பெற்ற இக்கவிதைகளில் கவிதையின் கட்டமைப்புக் காரணமாக இசைநயமும் கூடுதல் சிறப்பாய் அமைந்திருந்தது. ‘செலாவணி’, ‘முன்னை இட்ட தீ’, ‘வலியறிதல்’,‘அவசர சிகிச்சைப் பிரிவு’, ‘ஹம்பி’, ‘தீராமுகம்’ உள்ளிட்ட முக்கியமான கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பில்
மோகனின் ஆகச் சிறந்த கவிதைகளான ‘ஐந்து நட்சத்திரங்களின் ஆகாயம்’,
‘உறங்காப் பத்து’ இரண்டும் இடம் பெற்றுள்ளன.
முந்தைய இரு தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செறிவும் ஆழமும் கூடிய கவிதைகளுடன் 2014ஆம் ஆண்டு வெளியானது மூன்றாவது தொகுப்பு ‘மீகாமம்’. ஊடே மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட செம்மையான பழந்தமிழ் வரிகள் கவிதைகளுக்கு அழகூட்டியதோடு ஆழத்தையும் நல்கின. மோகன் இப்புதிய வடிவை கண்டடைந்ததில் இரு நன்மைகள் விளைந்தன. ஒன்று, கவிதையின் ஓசை நயத்தையும் பொருள் நயத்தையும் மேம்படுத்தியது. இரண்டாவது, புதிய தலைமுறை கவிதை வாசகர்களுக்கு பழந்தமிழ் செழுமையினை நினைவூட்டியது. நவீன கவிஞன் செய்ய வேண்டிய மிக முக்கியமான பங்களிப்பை இப் பாணி சுட்டிக் காட்டியது.
என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய்ச்சிறு நீர்
இம் முத்தம் ( தீர்ந்த முத்தம்
)
பெய்தோய்ந்த
பெருமழையில்
பிறன்மனை
முற்றத்தில்
தேங்குகிறது
செம்புலப்
பெயல் நீர். ( திணைமயக்கம் )
எதிர்ப்படும்
என்னை யாரோ போல்
நெஞ்சு வெடித்துச்
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
‘என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவனை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் தொடங்கினார்.
‘கையிகத்தல்’, ‘திருவினையாள்’, ‘வினோத நூலகம்’, ‘தற்பிறப்பு’, ‘வென்றிலன் என்றபோதும்’ போன்ற, முந்தைய தொகுப்புகளில் இல்லாத, கதைத் தன்மை கூடிய கவிதைகளும் இடம் பெற்றிருந்தது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு. மோகன் தன் கவிதைகளின் போக்கை எளிமையை, சரளத்தை, புரிதலை நோக்கி மாற்றிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளம் இது.
ஐந்தாவது தொகுப்பான
‘நினைவாலணையும் முகம்’ 2025ஆம் ஆண்டு வெளியானது. அளவில் நீண்ட, லகுவான வரிகளைக் கொண்ட
கவிதைகளில் பலவும் நினைவேக்கத்தினை பாடுபவைகளாக அமைந்திருந்தன. கவிதைகளில் இறுக்கம்
வெகுவாகத் தளர்ந்து, சொல்லடுக்குகளுக்கு நடுவே இடைவெளிகளும் கூடி, உணர்வுத் தளம் மேலெழுந்து
துலங்கிற்று. சற்றே எட்ட நின்று ஐயத்துடன் தயங்கிய வாசகனை அருகழைத்து வாஞ்சையுடன் தோளணைத்துக்
கொண்டது. வாழ்வைக் குறித்த கவிஞனின் பார்வைகளாக, வரையறைகளாக அமைந்த கவிதைகள், கவிஞனின்
அனுபவ ரேகைகளின் தடத்தை வெளிக்காட்டின.
‘வளர்ப்புப் பிராணி’,
‘தனிப்பெருங்கருணை’, ‘ஏடு தொடங்கல்’, ‘யாதனின் யாதனின் நீங்கியான்’, ‘சக வாழ்வு’ போன்ற கவிதைகள் இத்தொகுப்பின் சிறப்பு.
எழுதத் தொடங்கி நாற்பது
வருடங்கள் கழித்து, ஐந்து தனித்தனித் தொகுப்புகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு (2026)
க.மோகனரங்கனின் மொத்தத் தொகுப்பு ‘சொல்லின் நிழலில்’ வெளியானது. மிகுந்த தயக்கத்துக்குப்
பிறகே இவ்வாறான மொத்தத் தொகுப்புக்கு ஒப்புதல் கொடுத்தார். முன்பு வெளியான ஐந்து தொகுப்புகளில்
உள்ள கவிதைகளுடன், ‘வானின் கீழ் தனியர் யாருமில்லை’ என்ற தலைப்பின் கீழ் வெளிவராத கவிதைகளும்
இடம் பெற்றிருந்தன.
கவிதைகளில் கனிவு கூடியிருந்தது.
அன்றாட வாழ்வு சார்ந்த எளிய உண்மைகளை வெளிப்படுத்தின. ஞானத்தை அடைய முயலும் கவிதையை,
ஒரு படிக்கு கீழே பின்னுக்கிழுத்து நிறுத்தியது மொழி. நினைவேக்கத்தின் கதியும் துக்கமும் அழுத்தம் பெற்றிருந்தன.
4
‘நெடுவழித் தனிமை’யிலிருந்து
‘வானின் கீழ் தனியர் யாருமில்லை’ வரையிலான க.மோகனரங்கனின் கவிதைகளை ஊன்றிப் பார்க்கும்போது,
இளமை முதல் முதுமை வரையிலான தன் வாழ்க்கைப் பாதையில் கவிஞன் கடந்து வந்த அறிதல்கள்,
அறியாமைகள், பரவசங்கள், தத்தளிப்புகள், தடுமாற்றங்கள், உறவு நிலைகள், ஏமாற்றங்கள்,
கனிவு, கசப்பு, கருணை, தன்னிரக்கம், மனவொடுக்கம் என அனைத்தையும் நெருக்கமாக உணர முடியும்.
தனி மனிதனின் இருப்பினூடாக அவன் கொள்ளும் அனைத்து பாவனைகளையும் மயக்கங்களையும் விவரிக்க
முனைகின்றன. அன்றாடப் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள பொருட்களின் ( வீடு, கதவு,
ஜன்னல், பொம்மைகள், புத்தகங்கள் போன்று ) வழியே வாழ்வின் அர்த்தத்தை அல்லது அபத்தத்தை
உணர்த்த முனைகின்றன. பெண் மீதான ஈர்ப்பும் இச்சையும் நோக்கும் வெளிப்படுகின்றன. உறவுகளின்
நிலையின்மையை, சுயநலப்போக்கை மெல்லிய கழிவிரக்கத்தோடு மொழிகின்றன. பெரும் உற்சாகத்துடன்,
இளமையின் துள்ளலுடன் வாழ்வை அணுகத் தொடங்கும் இக்கவிதைகள் மெல்ல மெல்ல முன்னகர்ந்து
யதார்த்தத்தின் வெம்மையில் வதங்கி பின் பக்குவமடைந்து கனிந்து எல்லாவற்றையும் விலகி
நின்று அணுகும் முதிர்வை வந்தடைகின்றன.
ஆனால், இன்னும் கவனமாக
அணுகிப் பார்த்தால், இக்கவிதைகள் கவிஞனின் வாழ்வும் பாதையும் உலகும் மட்டுமல்ல. இக்கவிதைகளை
வாசிப்போருக்கும், பொதுவாக மனிதர்கள் அனைவரின் வாழ்வுக்கும் இக்கவிதைகள் பொருந்தும்.
‘எதார்த்தத்தில் ஒரு கவிதைக்குப் பல வாசகர்கள் இருக்கலாம். ஆனால், அந்தரங்கத்தில் அது
ஒரேயொருவரை நோக்கி மட்டுமே எழுதப்படுகிறது. ஆனால் அதை வாசிக்கும் அனைவரையும் அந்த ஒருவராக
உணரச் செய்வதில்தான் கவிதையின் மர்மம் அடங்கியிருக்கிறது எனத் தோன்றுகிறது. சொல்லப்போனால்,
பல சமயங்களில் எழுதுபவன் வேறு யாரிடமும் அல்ல, தனக்குத் தானேதான் பேசிக்கொள்கிறான்.
தற்செயலாக அதைக் கேட்க நேரிடும் ஒருவர் தனக்காகவே சொல்லப்பட்ட ஒன்றாக அச்சொற்களை உணர்கிறார்’
என்று க.மோகனரங்கன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது ‘எழுத்தின் விளக்க முடியாத
இந்த விந்தை’யைத்தான்.
இக்கவிதைகளில் அதிகமும்
வெளிப்பட்டிருப்பது அன்பின் பரிமாணங்களும் நினைவேக்கத்தின் ஏற்றத் தாழ்வுகளுமே. பருக
முடியாத துயரமாக, சமாதான சகவாழ்வின் மீது பூத்திருக்கும் பூஞ்சைக் காளானாக, அறைந்து
மூடப்படும் கதவிடுக்கில் அகப்பட்டு அறுந்துவிடக் கூடிய பல்லி வாலாக, அனைவரையும் சொஸ்தப்படுத்த
முடியாத சின்னஞ்சிறு மருந்துக் குப்பியாக, அதற்கேயுரிய அசட்டுத்தனத்துடன் வாழ்வினூடே
திகழ்ந்திருக்கிற அன்பு, கவிஞரை அதிகமும் ஆட்கொண்டு, ஆனமட்டும் அதைப் புரிந்து கொள்ள
கவிதைகளை எழுதச் செய்கிறது. கடைசியில் ‘தன்னிரக்கம் மிகுந்த பொழுதொன்றில் மேற்கொள்ளப்பட்ட
தணிக்கை அறிக்கை ஒன்றின் நகல்’ என்ற நீண்ட தலைப்பைக் கொண்ட கவிதையில் அன்பின் மர்மத்தை
கவிஞர் கண்டுகொள்கிறார். ‘விநோதமான இந்த வியாபாரத்தில் எத்தனை இழந்தீர்களோ அத்தனைக்கு
செல்வந்தர் நீங்கள், எவ்வளவு சேமித்தீர்களோ அவ்வளவுக்கு ஏழ்மையானவர்’ என்று அன்பின்
ஐந்திணையைப் புரிந்துகொள்கிறார். அன்பின் இந்தப் பாதை நமக்குப் புதியதல்ல. புத்தனும்
இயேசுவும் வள்ளலாரும் வள்ளுவரும் போதித்த அந்தவொன்றையே க.மோகனரங்கனும் தனக்கேயுரிய
தனி மொழியில் வலிந்துரைக்க முனைந்திருக்கிறார். சக மனிதனின் மீதான இந்த கரிசனத்தை,
உயிர்களின் மீதான கருணையை ஞானியர் அல்லாது இன்னொருவர் எடுத்துச் சொல்ல இயலுமானால் அது
கவிஞர்களால் மட்டுமே முடியும் என்பதையே இக்கவிதைகள் உணர்த்துகின்றன.
இக்கவிதைகளின் பாடுபொருளாக
அமைந்திருக்கும் இன்னொரு அம்சம் நினைவேக்கம். உறவுகளும் பிரிவுகளுமாய் பலரையும் கடந்து
வந்தபோதிலும் நெஞ்சுக்குள் கனலும் சில நினைவுகளை அணைக்கவல்ல கருவிகளை இன்னும் மனிதன்
கண்டுபிடிக்கவில்லை. இருள் சூழ்ந்த கர்ப்பக்கிரகத்தின் ஒற்றைச் சுடரில் மினுங்கும்
தேவியின் குறுநகைபோல அவ்வப்போது அந்த நினைவுகள் சிறுபொழுது ஆசுவாசம் தரும். மறுகணம்
தாங்கவியலா வலியையும். ‘நினைவில் எரிகிற சுடருக்கு நிழல் ஏதுமில்லை. நெஞ்சிற்கு அதனால்
நிம்மதியும் நேர்வதில்லை’ என்று கவிஞர் வகுக்கும் இந்த நினைவேக்கத்தின் பல்வேறு வண்ணங்களையும்
வகைமைகளையும் வெவ்வேறு கவிதைகளில் உணர்த்த முனைந்திருக்கிறார். இவை அனைத்தையும் ஒரே
கவிதையில் செறிவாகவும் தெளிவாகவும் வகுத்தும் காட்டியிருக்கிறார்.
நீர்த் திரையிட்ட விழிகளால்
ஏறிட்டு நோக்குந்தோறும்
பிரிவின் பொன்னுருகிப்
படர்ந்த
நினைவின் சித்திரத்தில்
நிறங்கள் மயங்கக்
கவிகிறதொரு
காவியச் சாயை. ( கண்ணோட்டம் )
5
படித்து முடித்த பின்னும் ஏதேனும் ஒரு கணத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் கவிதைகளின் சில வரிகள் மட்டும் நினைவில் அதிரும். மந்திரம்போல அவை மனத்துள் ஒலித்தபடியே இருக்கும். அவ்வாறான வரிகளே கவிதையின் எல்லையைத் தாண்டி செவ்வியல் தன்மையை அடையும். பெருங்கவிஞர்களின் கவிதையிலிருந்து மட்டுமே அவ்வாறான செவ்வியல் வரிகள் நினைவில் மேலெழுந்து ஆட்கொள்ளும். க.மோகனரங்கனின் பல கவிதை வரிகள் அவ்வாறான செவ்வியல் தன்மை கொண்டவை. அவற்றில் உதாரணங்களாக சில -
தோன்றி மறைகிறது ஒரு கனவு
வாழ்வென மயங்குகிறது நினைவு.
தக்கார்க்கு நட்ட கல்
தகவிலார்க்கோ வெட்ட வெளி
மடிப் பாலுக்கு
பிடிப் புல்லே அதிகம்
உறவில் கனிகையில்
ஒருவர் பழக வேண்டியது
பிரிவின் கலையைத்தான்.
வலி
அப்படியொன்றும் அதிகமுமில்லை
அப்படியொன்றும் குறைவுமில்லை
மலையைப் பார்த்தபடி
மடங்கிக் கிடக்கின்றன
இரண்டு நாற்காலிகள்
எட்ட முடியாத உயரத்திலிருக்கிறது
எனது கடவுளின் நிலம்
வரிகள் மட்டுமல்லாமல் முழுக் கவிதையுமே அவ்வாறான மந்திரத்தன்மை கொண்டவையாய்
அமைந்துள்ளன.
திணைமயக்கம்
பெய்தோய்ந்த
பெருமழையில்
பிறன்மனை
முற்றத்தில்
தேங்குகிறது
செம்புலப் பெயல் நீர்.
தேறுதல்
விட்டு
விட்டுப் பெய்யும்
மழை.
தொட்டுத்
தொட்டுத் துடைக்க
முயல்கிறது
தோற்றுத் துவண்ட
துயர முகம் ஒன்றின்
கண்ணீர் வரிகளை.
கொஞ்சம் போல
கூட்டிலிருந்து
விழுந்தெழுந்து
பயத்தோடு பறக்கக்
கற்றுக் கொள்ளும்
குஞ்சுப் பறவைக்காக
குனிந்து கொடுக்கிறது
வானம்.
எனக்கு
நான்தான் வெல்லக்கட்டி
ஒரு கடி
கடித்துக்கொண்டு
எல்லாக் கசப்பையும்
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
என்பிலதனைக் காயும்
நண்பகல் வெய்யில்
உனதன்பு.
பிறகும்
பிழைத்திருக்க வேண்டிப்
பிடி நிழல் தேடி
நெடுக அலையும்
உடலின் தவிப்பு
இவ் வாழ்வு.
இடைவெளி
எவ்வளவு தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் நிற்பதற்கு
இந்த நடுவயதில்
எவ்வளவு நேரம்
கடக்க வேண்டியிருக்கிறது
கண்ட காட்சி தெளிவதற்கு.
மலையில் ஏறும்போது
மருளவும்
மலரில் ஊரும்போது
மயங்கவும்
தெரியாத எறும்பிற்குத்
திறந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும்
பாதைகள்.
0
கட்டுரை எழுதுவோர்க்கும், விமர்சகர்களுக்கும் பயன்தரும் வகையில் தன்
கவிதையுலகை ஒற்றைக் கவிதையில் சுருக்கமாக, எளிமையாக ஒரு கவிதையின் வழியே தந்திருக்கிறார்
க.மோகனரங்கன்.
முன் நடந்தவர்கள்
பதித்த தடத்தில்
எவரெவரோ
ஏற்றிவைத்த விளக்குகளின்
வெளிச்சத்திலதான்
இவ்வளவு தூரம்வந்திருக்கிறேன்
இருப்பினும் இதுகாறுமெனக்கு
வழியிடையில் காலையிடரும்
கல்லையெடுத்து தூரப்போடத்
தோன்றியதில்லை.
அணையவிருக்குமொரு திரிக்கு
துளியெண்ணைவிட
எண்ணம் எழுந்ததில்லை
பிறகென் எழுத்துகளில்
எந்த ஒளி வந்தமரும்?
என் விழைவெல்லாம்
வேறெதுவுமிலை
எள்முனையளவும் பிழையின்றி
இழைத்திழைத்து
இச்சொற்களைப் பளிங்காக்கி
பார்வைக்கு வைத்திடல் வேண்டும்
முனைவோர் தம் முகம் பலிக்க.
இதைவிட ஒரு கவிஞன் தன் கவிதையுலகை எப்படித் தெளிவாக மொழிந்திட முனையும்?
0
க.மோகனரங்கனின் இதுவரையிலான ஆகச் சிறந்த கவிதைகளில் இரு கவிதைகள் தமிழில்
இதுவரை எழுதப்பட்டுள்ள சிறந்த கவிதைகளின் வரிசையில் இடம் பெறத் தக்கவை. இரண்டும் சற்றே
நீண்ட கவிதைகள். பெருந்தொகுப்பின் 72ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘ஐந்து நட்சத்திரங்களின்
ஆகாயம்’, தந்தையும் மகனுமாய் தாயும் மகளுமாய் தன்னையுணர்ந்து உறவின் இயல்பையும் திரிபையும்
கூரிய சொற்களால் கிழித்து அப்பட்டமாய் வெளிப்படுத்தும் இக்கவிதை ஆழமான வலியையும் நிறைவற்ற
சிந்தனையையும் விதைப்பது. மரபுத் தொடர்களின் கண்ணிகளுடன் இறுக்கமான மொழியினூடாக எழுதப்பட்ட
இக்கவிதை மோகனின் கவிதை அம்சங்கள் அனைத்தையும் கொண்ட முத்திரைக் கவிதை.
பெருந்தொகுப்பின் 96ஆம் பக்கத்தில் உள்ள ‘உறங்காப் பத்து’ இன்னொரு முத்திரைக் கவிதை. பெண்ணை ரசித்து, விதந்தோதி, அஞ்சி, அடங்கி, உச்சிமுகர்ந்து, சீராட்டி, மடியேந்தும் ஒரு கவிஞனின் பித்து மனநிலையின் பத்து கண்ணிகளைக் கொண்ட இக்கவிதை, தமிழ்க் கவிதைகளின் உச்ச சாதனைகளில் ஒன்று. இதில் பயின்றுவரும் மரபுத் தொடர்களும், பழந்தமிழ் வரிகளும் கவிதையின் இசை, தாளத்துக்கும் பொருளின் ஆழத்துக்கும் பொருந்தி அமைந்து, திரும்பத் திரும்ப வாசிக்குந்தோறும் மெருகேறி கனம் கூடும் அழகு இக்கவிதையின் தனிச்சிறப்பு.
இன்னும் பல கவிதைகளை எழுதியுள்ளார் என்றாலும், இனியும் எழுதுவார் என்றபோதும், க.மோகனரங்கனை தமிழ் நவீனக் கவிஞர்களின் முதன்மை வரிசையில் இருத்த இவ்விரு கவிதைகள் மட்டுமே போதுமானவை.
6
க.மோகனரங்கன் – உரைநடை ஆக்கங்கள்
டிசம்பர் 2006ஆம் ஆண்டில் வெளியான ‘அன்பின் ஐந்திணை’ நூல் 13 ஆக்கங்களைக் கொண்டது. கண்டு கேட்ட கதைகள் இவை. தன்மை ஒருமையில் எழுதப்பட்டவை என்பதால் இவற்றை உண்மை நிகழ்வுகளை அடிப்படைகளாகக் கொண்டு புனையப்பட்ட கதைகள் என்று சொல்ல முடியும். இவை அனைத்துமே உறவுத் திரிபுகளைப் பேசுபவை. பொருந்தாக் காமம், வரைமீறிய உறவு என்று பொதுவில் சுட்டப்படும் இந்த வகை ஆண் பெண் உறவுகளில் வெளியில் இருந்து எவரும் தீர்ப்பு சொல்வது அபத்தம். அந்த உறவு குறிப்பிட்ட இருவருக்கானது. அதன் எல்லைக்குள் அவர்கள் மட்டுமே. ஆனால், அவ்வகை உறவின் பின்னணியில் உள்ள உளத்தடுமாற்றங்களை, நிலையின்மையை, நல்லதும் அல்லதுமான விளைவுகளை சொல்லுகிறது இந்தக் கட்டுரைகள் அல்லது கதைகள். இதன் மூலமாக குறிப்பிட்ட நபர்களைப் புரிந்து கொள்ளவும் அதன் மூலம் இவ்வகையான உறவுநிலைகளைப் பற்றிய மனப்பாங்கை சீர்தூக்கிப் பார்க்கவுமான வாய்ப்பை தருகின்றன.
7
க.மோகனரங்கன் – மொழியாக்கக் கவிதைகள்
மோகனரங்கன் எழுதிய கவிதைகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமானவை அவர் மொழிபெயர்த்த பிறமொழிக் கவிதைகள். சொந்தமான கவிதைகளை எழுதுவதற்கு அவர் நேரம் எடுத்துக் கொள்பவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஒரு கவிதையையேனும் மொழிபெயர்க்காத நாள்கள் இல்லை என்றே சொல்ல முடியும். கவிதையை மொழிபெயர்ப்பதை அன்றாடச் செயல்பாடாகக் கொண்டுள்ளார். அதன் விளைவுதான் ஐந்து தொகுப்புகளாக அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியாகியுள்ளன.
0
க.மோகனரங்கன் கவிதைகளை
மட்டுமல்லாது, அயலகக் கதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். ‘குரங்கு வளர்க்கும்
பெண்’ என்ற தலைப்பில் வெளியான இத்தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. யாசுனேரி கவபட்டாவின்
‘வெட்டுக்கிளியும் சில்வண்டும்’, ரேமண்ட் கார்வரின் ‘அற்ப விஷயங்கள்’, ‘காட்டுக் கோழி’,
‘அவர்களில் யாரும் உன் கணவன் இல்லை’, மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை’,
யுவான் சுய்ங்கின் ‘காதலனின் காது’, லியானார்டோ மைக்கேல்ஸின் ‘குரங்கு வளர்க்கும் பெண்’
ஆகியன. ரேமண்ட் கார்வரின் கதைகளை நண்பர் செங்கதிர் மொழிபெயர்க்க முனைந்தபோது, மோகனும்
நானும் சில கதைகளை மொழிபெயர்த்தோம். எந்தெந்த கதைகளை யார் மொழிபெயர்ப்பது என்று முடிவு
செய்தபோது, அளவில் சிறிய சில கதைகளை மோகன் எடுத்துக் கொண்டார். மார்க்வெஸின் ‘கர்னலுக்கு
யாரும் எழுதுவதில்லை’ மட்டும் சற்றே நீண்ட கதை. சிறிய இத்தொகுப்பிலும் மோகனரங்கனின்
மொழி நுட்பத்தையும், சீரான வாக்கிய அமைப்பையும் காண முடியும்.
0
8
1987இல் கணையாழியில்
கவிதைகள் எழுதத் தொடங்கி இன்று கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று
க.மோகனரங்கன் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கறியப்பட்ட பெயர். அவரது பெயரைக் குறிப்பிடாதபோதும்
அவர் எழுதிய கவிதைகளை அடையாளம் கண்டுவிட முடியுமளவுக்கு தனக்கான தனித்த கவிமொழியையும்,
கவிதைக் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். எண்ணிக்கையில் அத்தனை குறைவோ,
அத்தனை மிகுதியோ அல்லாதுபோயினும் எழுதித் தந்திருக்கும் கவிதைகளின் கனமும் ஆழமும் நவீனக்
கவிதை வரிசையில் அவரைத் தவிர்க்க முடியாத ஒரு கவிஞராக நிலைநிறுத்தியுள்ளது.
ஐம்பதாண்டு கால நவீன
தமிழ்க் கவிதை குறித்த தெளிவான பார்வையும் மனச்சாய்வற்ற விமர்சனத்தையும் கொண்டிருக்கும்
மோகனரங்கனின் மதிப்புரைக்கும் விமர்சனத்துக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில் முக்கியமான
இடம் உண்டு. ‘மோகனரங்கன் சொன்னால் சரியாக இருக்கும்’ என்று முன்னோடிகளிலிருந்து இன்றைய
இளம்கவிஞர்கள் வரையிலும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவரது மதிப்பீடுகளுக்கு தனிமரியாதை
உண்டு. இத்தனை கால கடுமையான உழைப்பால், நேர்மையான நிதானமான அணுகுமுறையால் அவர் ஈட்டியிருக்கும்
பெருமதி அது.
இணைய பக்கங்களைச் சொடுக்கினால்
எண்ணற்ற உலகக் கவிதைகளை வாசிக்க முடியும். ஆனால், ஆங்கிலத்தில் வாசிக்க முடியாதோர்க்கு
மொழியாக்கங்களே உதவும். கவிதைகளை சரியான நேர்த்தியான மொழியாக்கங்களின் வழியாக அன்றி
வாசித்து அனுபவிப்பது இயலாத ஒன்று. அந்த வகையில் மோகனரங்கனின் கவிதை மொழியாக்கம் என்பது
அரும்பணி. தன்னியல்பில் அவர் தன் மன நிறைவுக்காக மேற்கொள்ளத் தொடங்கிய இப் பணி இன்று
தமிழ்க் கவிதையுலகுக்கு அளப்பரிய செல்வங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. அவர் எழுதிய
நேரடியான கவிதைகளுக்கு தரப்படும் மதிப்புக்கும் வரவேற்புக்கும் இணையாக அவர் மொழிபெயர்த்த
கவிதைகளுக்கும் மதிப்பும் வரவேற்பும் உள்ளன. சமயத்தில் இவ்விரண்டுக்கும் வேறுபாடுகளைக்
காணமுடியாத வண்ணம் நேரடிக் கவிதையும் மொழியாக்கமும் ஒன்றோடொன்று கலந்து மயக்கத்தையும்
தருவதுண்டு.
ஐம்பதாண்டு இலக்கிய அனுபவத்தில்,
அவரது தமிழ்க் கவிதை சார்ந்த புலமைக்கும் அதில் அவர் கொண்டிருக்கும் ஆழமான புரிதலுக்கும்
அவர் செய்திருக்க வேண்டிய காரியங்கள் இன்னும் உண்டு. ஆனால், தன்னியல்பில் அவருக்குள்ள
நிதானமும், செறிவையும் செம்மையையும் நோக்கிய அவரது அணுகுமுறையும் அவ்வாறான காரியங்களை
நோக்கி அவரை உந்தவில்லை. அவரது பணிச்சுமையும் அதற்காக அன்றாடம் மேற்கொள்ள நேரும் பயணங்களும்
கூட அப்படிப்பட்ட வாய்ப்புகளை அளிக்கவில்லை. என்றாலும், ராஜமார்த்தாண்டன் எழுதியதைத்
தொடர்ந்து தமிழ் நவீனக் கவிதை வரலாற்றை பூர்த்தி செய்யும் தகுதியும் அனுபவமும் உள்ளவர்
என்பதால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவரை அறிந்தவர்களுக்கு
உண்டு.
ஒரு கவிஞராக, கவிதை சார்ந்து
உரையாடுபவராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக இன்று அவர் தொட்டிருக்கும் உயரங்களிலிருந்தே
அவரது சாதனைகளையும் பங்களிப்புகளையும் புரிந்துகொள்ள முடியும். அவர் ஈட்டியிருக்கும்
சாதனைகளையும் உயரங்களையும், வரும் நாட்களில் அவரே தன் செயல்பாடுகளின் மூலம் மேலுயர்த்தவேண்டும்.
அதற்கான தகுதியும் தரமும் அவரிடம் உண்டு.
0
( 26.04.2026 ஜோலார்பேட்டையில் நடைபெற்ற விழாவில், பி.ச.குப்புசாமி இலக்கிய விருது 2026 க.மோகனரங்கனுக்கு வழங்கப்பட்டது. ‘வார்த்தை’ பி.கே.சிவகுமார் தொகுத்த, க.மோகனரங்கனின் எழுத்துலகைக் குறித்த தொகை நூல் ‘சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்தததற்கும் நடுவே’ வெளியிடப்பட்டது. தொகை நூலில் இடம் பெற்றது இக் கட்டுரை )
Wednesday, 22 April 2026
கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - ஜெயமோகன்
ஏறத்தாழ முப்பது வருடம் முன்பு, அப்போது நான் உயர்நிலைப் பள்ளி மாணவன், இலக்கியத்தில் எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமாக தேடித் தேடி படித்துத் தள்ளிக் கொண்டிருந்த நாட்கள் அவை. இலக்கியம் சார்ந்து சுவைமுறைகளும் அவற்றை ஒட்டிய தெரிவுகளும் முடிவுகளும் உருவாகியிருந்தன. பொதுவாக அப்போது உணர்வெழுச்சியே இலக்கியத்தின் இலக்கும் வழிமுறையும் என எண்ணியிருந்தேன். இரு வகைகளில் இலக்கியத்தில் உணர்வெழுச்சி நிகழ்வதைக் கண்டிருந்தேன். ஒன்று, கதைமாந்தர்களின் வாழ்க்கைச் சரடுகள் ஒன்றோடொன்று வெட்டிச் செல்லும்போது உருவாகும் கொந்தளிப்பு. இன்னொன்று, அனைத்தையும் சுழற்றி அடித்துச் செல்லும் அறியாப் பெருவல்லமை அவர்களைப் பேரிழப்புகளுக்கும் இடர்களுக்கும் ஆளாக்கி தனக்குள் இழுத்துக்கொள்ளும் இடங்கள். முதல் வகையைச் சேர்ந்த சார்ல்ஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்'டையும், 'இரு நகர்களின் கதை'யையும் வாசித்துவிட்டு நான் கண்ணீர் விட்டு ஏங்கியிருக்கிறேன். இரண்டாவது வகைமையான விக்டர் யூகோவின் 'துயருற்றவர்கள்' என்னைப் பல வாரங்களுக்கு பித்தெடுத்து அலையச் செய்திருக்கிறது. இவ்விரு உணர்ச்சிநிலைகளின் உச்சமாக திரண்டுவரும் ஒரு நிலையையும் யூகோ எனக்குக் காட்டினார். மகத்தானவற்றின் முன் நாம் கொள்ளும் சிறுமையுணர்வும் மறுகணமே நம் அகம் அதற்கிணையாக விரிவதும் இணைந்து அளிக்கும் பெருநிலை அது. அன்பு, கருணை, அறம் என பல்லாயிரமாண்டுக் கால மரபு உருவாக்கிய விழுமியங்களை மீண்டும் மீண்டும் கண்டடைதலையே இலக்கிய வாசிப்பு நமக்களிக்கிறதென உணர்ந்தேன். பின் கார்க்கியும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் முறையே அறிமுகமாகி அந்த அகப்புரிதலை விரிவுபடுத்தினர். ஒரு நிலக்காட்சியை உணர்வு பொங்கக் கூறுவதன் மூலமேகூட அவ்வெழுச்சியை அளிக்க இயலுமென மைக்கேல் ஷோலக்கோவ் காட்டினார்.
வாரம் இருமுறை நூல்களுக்காகப் போய் நச்சரித்தமையால் கடுப்பாகிப்போன முழுக்கோடு ஒய்எம்சிஏ நூலகர் எனக்கு எடைமிக்க ஒரு நூலை எடுத்துத் தந்து 'இதைப் படி. உன் தினவு ஆறு மாசத்துக்கு அடங்கும்' என்றார். 'சக்ரவர்த்தி பீட்டர்', அலக்ஸி தல்ஸ்தோய் எழுதியது (எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம்). லிட்டன் பிரபு, அலக்ஸாண்டர் டூமா போல மனம் கவரும் ஒரு வரலாற்று நாவல் என்று எண்ணி வீட்டுக்கு ஓடி அதை வாசிக்க இரும்புக் கடலை கொறிக்க முற்பட்டு பல்லுடைந்தது. எளிய நடைதான். நேரடியான கூறுமுறை. எந்த சிக்கலுமே இல்லாத கதைப்போக்கு. ஆனால் உணர்வின் ஈரமே இல்லாத பெரும் சொல்நிலவெளி அது. முற்றிலும் அயல்நிலமொன்றில் இரு கரை நிரப்பி அச்சமூட்டும் அமைதியுடன் ஓடும் ஆழம் மிக்க பேராறொன்றைப் பார்ப்பது போல உணர்ந்தேன். இரண்டு வாரம் கழித்து அதை கொண்டுபோய் கண்ணீர் மல்க திரும்பக் கொடுக்க முயன்றபோது அன்று அங்கே வந்திருந்த பாதிரியார் ஒருவர் என்னிடம் அதைப் பற்றிப் பேசினார். “பொறுமையாகப் படி. சங்ஙம்புழாவின் 'ரமணன்' மட்டுமே இலக்கியமல்ல. வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க இடங்களை மட்டும் மையப்படுத்தி எழுதுவது ஒரு வழி என்றால் அனைத்தையும் உள்ளடக்கி பற்றில்லாமல் வரலாற்றை முழுமையாகச் சொல்ல முயல்வது இன்னொரு வழிமுறை. இதுவே உண்மையில் வரலாற்றை சரியானபடிச் சொல்கிறது" என்றார். எனக்கு எனக்கு இயல்புவாதம் (நாச்சுரலிசம்) அவ்வாறு அறிமுகமாயிற்று.
பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையின் சலிப்பை வெல்லவே இலக்கியம் படிக்கிறோம். ஆகவே கனவுகளாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட கூறல்களே நம்மைக் கவர்கின்றன. வாழ்க்கையின் மாறா இயல்பான சலிப்பையும் சீரின்மையையும் கடைபவர்களுக்கு கையில் திரண்டுவரும் பொருளின்மையையும் குறித்துக்கூட உணர்வெழுச்சியுடன் சாராம்சப்படுத்தித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இயல்புவாதம் வாழ்க்கையை ‘உள்ளது உள்ளபடி' சொல்ல முயல்கிறது. ஆகவே அது வாழ்க்கை மீது ஏற்றப்படும் எல்லா வண்ணங்களையும் கலைத்துப் பார்க்கிறது. உணர்வெழுச்சிகளை ஐயப்படுகிறது. கோட்பாடுகளைப் புறந்தள்ளுகிறது. எல்லா வகையான மையப் படுத்தல்களையும் முற்றாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கையைக் கண் முன் சிதறிப்பறக்க விடுகிறது. இயல்புவாதம் உலகம் முழுக்க மனிதனின் சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது. இயல்புவாதம் உண்மையில் சற்று முதிர்ந்த மனம் கொண்டவர்களுக்கான அழகியல். கற்பனாவாத, இலட்சியவாத, கோட்பாட்டுவாதக் காலகட்டங்களைத் தாண்டி 'அட இவ்ளவுதான்யா வாழ்க்கை’ என்று தெரிந்துகொண்டவர்களுக்கானது அது.
தமிழில் புதுமைப்பித்தன் முதலே இயல்புவாதத்தின் அடுத்த கட்டமான நவீனத்துவம் அரங்கேறிவிட்டது. வாழ்க்கை மீதான தனிநபர்மைய நோக்கு அதற்கு உண்டு. இயல்புவாதத்தின் உணர்ச்சியற்ற, தகவல் சார்ந்த கூறல்முறையை மட்டும் நவீனத்துவம் முன்னெடுத்தது. ஆகவே நமக்கு இயல்புவாதம் வலுவாக உருவாகவில்லை. தமிழின் முதன்மையான இயல்புவாதிகளில் நீல.பத்மநாபன் மட்டுமே தொடர்ந்து எழுதினார்.. ஆ.மாதவன் விரைவிலேயே நவீனத்துவ அழகியலுக்குள் சென்றார்.. அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்திய பூமணியும் அப்படியே. இயல்புவாதம் உண்மையில் நாவல்களையே முதன்மை வடிவமாகக் கொண்ட அழகியல்போக்கு. தமிழிலும் முதல் பெருநாவலை எழுதியவர் நீலபத்மநாபனே -- தலைமுறைகள். அப்போக்கு தொடரவில்லை. சுப்ரபாரதி மணியன் போன்று அடுத்த கட்ட இயல்புவாத எழுத்தாளர்களும் நல்ல சிறுகதைகளையே உருவாக்கினர்.
இன்று தமிழில் நவீனத்துவத்தின் கொடி இறங்கிய பின் இயல்பு வாதம் மீண்டும் எழுந்திருப்பது அதன் இன்றியமையாத வரலாற்றுத் தேவையையே காட்டுகிறது. சமீபத்தில் பல இயல்புவாத நாவல்கள் வந்துள்ளன, சோ. தருமனின் 'கூகை', கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்றவை முக்கியமான ஆக்கங்கள். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட இயல்புவாத நாவல்களில் முதன்மையான பெரும் படைப்பு எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணல்கடிகை’
0
மேலைநாட்டில்
தொழிற்புரட்சி உருவாகி அதன் விளைவான அழிவுகளும் சிதைவுகளும் அறியப்பட்டபோது அதை நோக்கித்
திருப்பப்பட்ட கண்ணாடியாக வந்தது இயல்புவாதம். மணல்கடிகையும் இயல்பாகவே
தமிழ்நாட்டுத் தொழில்வளர்ச்சியின் விளைவுகளையே முன்னிலையாக்குகிறது. தன்னைச் சிதைத்துக்கொண்டு டாலராக உருமாறிக்கொண்டிருக்கிறது திருப்பூர்.
சாயக் கழிவால் சாக்கடை யாகிப்போன நொய்யலின் கரையில் கூலிக்காக இரவுபகலாக
உழைத்து அவ்வுழைப்பின் சலிப்பைப் போக்கவே கூலியைச் செலவழித்து அழியும் தொழிலாளிகள்.
லாப வேட்டையில் இரவு பகலாக ஓடி அதன் சலிப்பைக் களியாட்டங்களில் கரைக்கும்
முதலாளிகள். ஓயாது ஓடித் தேய்ந்து அழியும் இயந்திர பாகங்கள் போலத்தான்
அனைத்து மனிதர்களும். அவர்கள் தங்களை உயிரிகளாக உணர வழியமைப்பது
காமம் மட்டுமே. ஆகவே ஒழுக்க நெறிகளையெல்லாம் மீறி சாயச் சாக்கடை
போல எங்கும் பரவி நிறைந்திருக்கிறது காமம்.. முடிவே இல்லாத சலிப்பு,
அதிலிருந்து தப்ப மனிதர்கள் தேடும் வெற்றி தோல்விகளின் சூதாட்டம்,
உழைப்பு, காமம் - அவ்வளவுதான்
வாழ்க்கை. வேறு ஒன்றுமே இல்லை என விரித்து விரித்துக் காட்டி
அடங்குகிறது இந்த 600 பக்க நாவல்.
“உலகத்தின் வாசலே திறந்து கிடப்பது போல ஊத்துக்குளி ரோடு ஆளரவமற்று நீண்டிருந்தது" எனத் தொடங்குகிறது இந்நாவல். இந்நாவலின் மிக முக்கியமான வரி இது. திறந்து கிடக்கிறது உலகம். எண்ணற்ற வாய்ப்புகளும் அழகுகளும் கொண்ட பெருவெளி. அதில் செல்கிறார்கள் பள்ளிப் படிப்பு முடித்து விடுமுறையைக் கொண்டாடச் செல்லும் ஐந்து திருப்பூர் இளைஞர்கள் பரந்தாமன், சிவா, சண்முகம், திருச்செல்வன். அன்பழகன். ‘அலைகள் ஓய்வதில்லை' படம் வெளிவந்த காலம். காமம் முகிழ்க்கும் பருவம். திரைப்படம் அதன் வெளிப்பாடாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கண்முன் கிடக்கிறது. வாய்ப்புகளின் வெளி. ஐவரும் திருப்பூர் அருகே உள்ள கயித்தமலை என்ற சிறிய குன்றில் ஏறி திருப்பூரை நோக்குகிறார்கள். ஒருவனுக்கு எதிர்காலம் ஆவலூட்டும் சவால். ஒருவனுக்கு சுமந்தேயாக வேண்டிய சுமை. ஒருவனுக்கு துய்க்கப்பட வேண்டிய பொருள்.. ஒருவனுக்கு ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதை.. ஒருவனுக்கு வாசித்தறிய வேண்டிய நூல்.. ஆலையின் பற்சக்கரங்களை நோக்கும் இளம் கரும்புத் தண்டுகள்.
அங்கே தொடங்குகிறது நாவல். ஐவருடைய தனியியல்புகளே அவர்களுடைய கைமுதல்களும் தடைகளும் ஆக அமைகின்றன. நிதானமும் கணக்குத்தன்மையும் கொண்ட திரு மாமாவின் சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து திடமாக சீராக முன்னேறுகையில் அனைத்து திறமைகளும் இருந்தும் பிறரிடம் உறவுகளைப் பேண முடியாது போகும் அன்பழகனால் மீண்டும் மீண்டும் தோற்கவே முடிகிறது. அப்பா சேர்த்த செல்வம் துணையிருப்பதனால் சண்முகம் சோம்பேறி இலக்கியம் வளர்த்து தன்னை மறைத்துக் கொள்கிறான். கொள்கைகள், அமைப்புகள் எங்கும் நிலைகொள்ளாமல் பரந்தாமன் அலைபாயும் போது சிவா பிறர் உழைப்பைச் சுரண்டிச் சேர்த்து மேலும் வளரும் வித்தையை மெல்ல கற்றுக்கொள்கிறான். ஐந்து கோலங்களும் நான்கு திசைகளில் பின்னி விரிகின்றன.
ஐந்து நண்பர்களும் நாவலின் ஐந்து பகுதிகளின் முதல் அத்தி யாயங்கள்தோறும் திருப்பூரைச் சுற்றியுள்ள ஐந்து சிறு குன்றுகளில் ஒன்றின் மீது மீண்டும் சந்திக்கும் தருணங்கள் இந்நாவலில் மையப் புள்ளிகள். விசித்திரமான ஓர் வெறுமையுணர்வை அப்பகுதிகள் அளிக்கின்றன. ஒரு பகுதியின் வாழ்க்கைச் சித்தரிப்பு பின்னிப் பின்னி விரிந்து சென்று எதையுமே எட்டாமல் முடிகிறது. அடுத்த பகுதியில் நண்பர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். நிறைய மாறியிருக்கிறார்கள். நிறைய நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நிகழவும் இல்லை. இழப்புகள், ஈட்டல்கள், ஈட்டல் போலும் இழப்புகள், இழப்பு போலும் விடுதலைகள்.. மீண்டும் புதிதாக ஒரு தொடக்கம். அதுகூட ஒரு பாவனையே. ஒட்டுமொத்தமாக எதிலுமே சாரமாக ஏதுமில்லை என்ற பெரும் சலிப்பு. அந்த மொட்டைக் குன்றுகள் மீது கவிந்த மேகமற்ற நீலவான் போல அத்தருணங்கள் மீது சூழ்கிறது. இயந்திரமயமாகிப்போன வாழ்க்கையைப் பற்றிய கசப்பும் சோர்வும் தான் இந்நாவலின் தரிசனமாகத் திரண்டெழுகின்றன.
வாழ்க்கையை நுட்பமான தகவல்களை அடுக்கி அடுக்கி விரித்து சித்தரித்து முடிவில் வெறுமையைக் காட்டி பின்னகரும் கோபாலகிருஷ்ணனின் கூறுமுறையே இந்நாவலின் பெரும் வலிமை. எந்தவித கனவுக்கும் எழுச்சிக்கும் இடமளிக்காதது இது. பெரும்பாலான பகுதிகள் கற்பனையே இல்லாத ஒருவர், ஒரு. வணிகர் அல்லது தொழிலாளி, யதார்த்தமாகச் சொல்வது போல தகவல்களை அடுக்கி விவரித்தபடியே செல்கின்றன. இப்பரப்பில் சட்டென்று சில பகுதிகள் அழுத்தமான கவித்துவத்துடன் எழுகின்றன. “மேற்கு வாசலில் வானத்து நட்சத்திரங்கள் கண்ணில் பட்டன. துளியற்ற மழையென இறங்கி மலைக்கோயிலை நனைப்பது போல கோபுர உச்சியிலும் மண்டபக் கூரையிலும் நிலவொளி பொழிந்தது." இவ்வரியில்கூட கற்பனாவாதப் பண்பைவிட யதார்த்த நோக்கே தெரிகிறது. மேலும் பாதி வாழ்க்கை, தேடலிலும் இழப்பிலும் எய்தலிலுமாக முடிந்தது பற்றிய நண்பர்களின் உரையாடலின் ஊடாக இவ்வரி வருகிறது. அந்த வெறுமையை நிலவும் பிரதிபலிக்கிறது.
ஒவ்வொருவரும் தங்கள் போக்கில் அடைந்தும் இழந்தும் ஏறியும் இறங்கியும் முன்னகரும் காட்சியை மிக இயல்பாக, ஆசிரியரின் முயற்சி சற்றும் வெளித்தெரியாமல், சொல்ல முடிந்திருக்கிறது என்பதே இந்நாவலின் வெற்றி. வணிகச் சூதின் ஆட்டங்களின் வழியாக சிவா முன்னகர்கிறான்.. குற்ற உணர்வை வெல்லும் கலையைக் கற்கிறான். ஆனால் கார், பங்களா, செல்வந்த மனைவி என அனைத்தையும் அடைந்த பின்னும் புறப்பட்ட அதே இடத்தில் அனைத்தையும் இழந்தவன் போல அமர்ந்திருப்பதாகவே உணர முடிகிறது. காம உறவுகளை வைத்து விளையாடும் சண்முகம் திருமண உறவின் மூலம் வெளித்தெரியா அடி ஒன்றைப் பெற்று உறவின் வலியை உணர்கிறான். அதிலிருந்து உறவெனும் சங்கிலியின் மகத்தான வல்லமையை உணர்கிறான். பெண்ணெனும் பித்தெடுத்தவன் தன் மகள் எனும் புள்ளியில் மனம் குவிந்து அடங்குவதன் பின் உள்ள கவித்துவம் இந்நாவலின் ஒளிகளில் ஒன்று. இவ்வாறு நாவலில் நிகழும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் பல. ஆனால் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை என்ற பாவனையையே நாவல் நெடுகிலும் கொண்டிருக்கிறது.
இந்நாவலின் பெண்களின் சித்தரிப்பிலும் தமிழிலக்கியம் பொதுவாகக் கண்டிராத ஆளுமைகளே விரிகின்றன. நளினமற்ற பெண்கள்,. கற்பனைப் பூச்சு பெறாத பெண்கள். உழைப்பவர்கள். உழைப்பைச் சுரண்டுபவர்கள். ஏமாற்றுபவர்கள். ஏமாற்றப்படுபவர்கள். நாவல் முழுக்க பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கே அது தேவையாகிறது. கல்வியோ பண்பாடோ சிறக்காத சூழலில் டாலர் மூலம் பணம் மட்டும் வரும்போது வெற்றுப் பகட்டாகவே அது செலவிடப்பட முடியும். சிவாவால் ஏமாற்றப்பட்டு இயல்பாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும் விமலாவும் சரி, கட்டுப்படாத அலைதல் கொண்ட பூங்கொடியும் சரி, எவ்விதமான சிறப்பு அழுத்தங்களும் இல்லாமல் சாதாரணமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளமையால் மிகுந்த நம்பகத்தன்மை பெற்று நம்முள் வளரும் குணச்சித்திரங்கள்.
இந்நாவலின் வெறுமையை நிகழ்த்தும் கூறுகளில் முக்கியமானது இயற்கையே இல்லாத திருப்பூரின் வரண்ட நகரச்சித்திரம். திரும்பத் திரும்ப தொழில் நிறுவனங்கள், கடைகள், சந்துகள், தூசு, புழுதி, திரையரங்குகள், டீக்கடைகள், பிரியாணிக் கடைகள்... மொத்த நகரமே ஒரு பெரிய பின்னல் இயந்திரம் போல மனிதர்களைச் சேர்த்துப் பின்னி இயங்குகிறது. நகரத்துக்கு வெளியே வந்து குன்று மீதேறி நோக்கும்போது அபத்தமான ஒரு சலனமாக மட்டுமே அது தெரிகிறது.. அப்படி வந்து நோக்குபவர்களோ சிலர் மட்டுமே.. அப்படி நோக்கும் தன்மை ஒன்று காரணமாகவே அந்த ஐந்து பேரும் இந்நாவலின் கதைத்தலைவர்கள் ஆனார்கள் போலும்.. அனைத்து வெறுமையையும் தாண்டிச் சென்று அவர்களால் புன்னகை கொள்ள முடிவது அதனால்தான்.
இந்நாவலில் வாழ்க்கைக்கு அப்பால் சென்று வாழ்க்கையை நோக்கும் ஆன்மீகத் தேடல் எதற்கும் இடமளிக்கவில்லை ஆசிரியர்.. அது குறித்த தெளிவு அவருக்கு இருப்பதைப் பல தருணங்களில் காட்டிச்செல்கிறார். வணிகத்தை விட்டு விலகி மலை மீது வந்துவிட்ட துறவி ஒருவரைப் பற்றிய சித்தரிப்பின்போதுகூட அவருக்கு ஆன்மீகமான அலைக்கழிப்புகளை அளிக்க தீர்மானமாக மறுத்துவிடுகிறார். அவர் வெறுமே ஒதுங்கி இருக்கும் எளிய மனிதர் மட்டுமே. நாவலில் மதம் இருக்கிறது, கடவுள்கள் உள்ளனர், அனைத்துமே அந்த நகரின் தொழிலியக்கத்துக்கான துணைப்பொருட்கள் மட்டுமே. அதற்கப்பால் செல்லும் ஆன்மீகமே இல்லை.
ஆனால், நாவலின் இறுதியில் ஐவரும் சென்னிமலையில் காணும் தண்ணாசிச் சித்தரின் சமாதி
எளிய ஒரு நிறத்தீற்றலாக வாசக மனதைத் தொட்டுச் செல்கிறது. 'காத்துல
காஞ்ச எலை மாதிரி நடக்கும்’' சித்தரின் நான்கு வரிச் சித்திரம்
திருப்பூர் என்னும் மாபெரும் எந்திரத்தை எங்கோ எதிர்கொள்கிறது.
நம்மிடம் விவாதிக்கும் யதார்த்தவாத
நாவலையோ, நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கற்பனாவாத நாவலையோ
வாசிக்கும் உற்சாகத்துடன் இதுபோன்ற இயல்புவாத நாவலை நாம் வாசித்துவிட முடியாது..
இதிலுள்ள நிகழ்வுகளுக்கு கோர்வையான ஒருமை இல்லை. கிளர்ச்சியளிக்கும் வேகமும் இல்லை. எளிய அன்றாட நிகழ்வுகள்..
ஆனால் அவற்றின் ஊடாக ஓடும் உள்ள மோதல்களைச் சொல்வதில் கோபாலகிருஷ்ணன்
காட்டியுள்ள நுண்மை தமிழின் முக்கியமான ஓர் இலக்கிய நிகழ்வாகும். குறிப்பாக ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் செலுத்திக்கொள்ளும் உளவன்முறை இந்நாவலின்
சிறப்புக் கூறு என்றே சொல்லலாம். காமத்தின் பலவகையான பாவனைகளையும்
கசப்புகளையும் ஏதோ இயந்திர தொழில்நுட்ப விளக்கம் போலச் சொல்லிச் செல்லும்
கோபாலகிருஷ்ணன் ஆணும் பெண்ணும் கொள்ளும் மோதலை அதன் அதிநுண்மை வரை சென்று தொட்டிருக்கிறார்..
சிவாவிடமிருந்து வணிகமும் அதிகாரமும் சித்ராவுக்கு மாறும் இடம் ஓர் உதாரணம்
என்றால் விமலாவிடம் சிவாவும் அவள் கணவனும் நடந்துகொள்ளும் முறைகள் இன்னொரு உதாரணம்.
"சென்னிமலையில் மலைப்பாதையில் குவாலிஸ் அனாயாசமாக வளைந்து ஏறியது ..." எனத் தொடங்கும் இறுதி அத்தியாயத்துடன் முடிகிறது நாவல். நண்பர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள்.. “எப்படிப் பார்த்தாலும் நாம அஞ்சு பேருமே ஓட ஆரம்பிச்ச எடத்துக்கே மறுபடி திரும்பி வந்து நிக்கிறோம். யார் எப்டி இருந்தாலும் அஞ்சு பேரும் ஒண்ணா சிரிச்சுட்டு இருக்கோம். வேற என்னடா வேணும்” என்ற திருவின் கேள்வியில் ஒரு வகையில் நாவல் முடிவு கொள்கிறது. அந்தச் சிரிப்பே மனிதன் அடையக்கூடியதில் உச்சம் என்கிறது போலும் இந்நாவல். மீண்டும் அழுத்தம் மிக்க மொழியில் அதையே சொல்கிறது “மண்ணும் மலைகளும் மனிதர்களும் ஒன்றுபோலாகி பெருங்கடலின் அலைத் திவலைகளாகி கரைந்து நிற்கும் இக்கரையில் கேட்க முடிவதெல்லாம் இன்மையின் சங்கீதத்தை மட்டுமே."
0
நூலுக்குள் எங்குமே விளக்கப்படாத
தலைப்பில் இந்நாவலின் முள் ஒன்று உள்ளது. மணல்கடிகையில் மணல்
விழுந்துகொண்டிருக்கிறது. அமைதியாக, சீராக.
அது முடியும்போது அனைத்தும் கவிழ்ந்து மீண்டும் தொடங்கியாக வேண்டும்.
0
2006ஆம் ஆண்டு அ.முத்துலிங்கம் தொகுத்தளித்த நூல் ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’. உயிர்மை வெளியீடு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் இருபது பேர் தங்களை பாதித்த நூல்களைக் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்திருக்கும் நூல் இது. ‘மணல் கடிகை’ நாவலைக் குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை இது.
ஒரு காதல், இரு புதினங்கள்
வங்க எழுத்தாளர் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ நாவலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை. நீலி மின்னிதழ், மே 2026 இல் வெளியாகியுள...
-
துருக்கிய நாவலாசிரியர் அய்ஃபர் டுன்ஷின் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’ தமிழில் சுகுமாரன், ஷாலினி பிரியதர...
-
வாசிப்பு பழக்கம் உடைய நண்பர்கள் பலர் இப்போது அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றனர். சிக்கல் என்னவெனில் அவர்கள் ஏதேனுமொரு கருத்தியல் நிலைப்பாடு...
-
வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுது...





