Monday, 2 March 2026

இந்திய ஆட்சியாளர்களின் அரசவை ராகம் - தர்பாரி ராகம்

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியர்கள் அனைவரின் கனவும் நாடு இனி சுபிட்சமடையும், தொழில் வளர்ச்சி அடைந்து வளம் பெருகும், சமத்துவம், சகோதரத்துவத்துடன் நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது, அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு கிட்டும் என்பதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று அதன் குடிமக்கள் அனைவரும் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைக்காகப் போராடிய தலைவர்களும் அவ்வாறே வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், சுதந்திரம் அடைந்து வெகு சில நாட்களிலேயே அப்படி எதுவும் பெரிதாய் மாறிவிடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். இங்குமங்குமாய் எண்ணற்ற பிரச்சனைகள். நாடு இரண்டாகப் பிளவுபட்டது. சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக அமைந்தது. பணஇருப்பும் இல்லை. ஒருவழியாக அனைத்தையும் சரிசெய்து, திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அமைப்புகள் உருவானபோது அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடைமுறையில் எதுவும் திட்டமிட்டதுபோல தொடரவில்லை. எங்கும் எதிலும் ஊழல்கள் மலிந்தன. புதிய வகையிலான நிலப்பிரபுத்துவம் உருவானது. புதிய முதலாளிகளும் ஜமீன்தார்களும் நிலச்சுவான்தார்களும் முளைத்தனர். சாதிய அடுக்குகள் இன்னும் தீவிரமாக பேணப்பட்டன. எங்கும் எதிலும் அலட்சியம். பொதுத்தொண்டு என்பது மெல்ல மெல்ல மறைந்துபோய் தனிநபர் செல்வாக்கு, சுயநலப்போக்குகளே அதிகரித்தன. ஆட்சியாளர்கள்தான் புதியவர்களே ஒழிய, மக்களின் நிலையில் மாற்றம் எதுவும் நேரவில்லை.

ஸ்ரீலால் சுக்ல 1925ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நாட்டில் நடைபெற்று வந்த சுதந்திரத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை, போராட்டங்களை நேரடியாகப் பார்த்து வளர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அங்கமான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு வயது 21. எனவே, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களைப் போலவே அவருக்கும் எதிர்காலத்தைக் குறித்த பெரும் கனவுகள் இருந்தன. அவர் கண்டு, கேட்டு வளர்ந்த தலைவர்கள் பலரும் அவ்வாறான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், நடைமுறையில் அத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டபோது பெரும் மனச்சோர்வை, நிராசையை அடைந்தார். நாடு விடுதலையடைந்த அதே ஆண்டு, 1947ஆம் வருடத்திலேயே இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் பணிக்காலத்தில் ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும் விதத்தை நேரில் பார்த்தறிந்தார்.

தனது மனக்குமுறல்களை, ஏமாற்றங்களை வெளிப்படுத்த எழுத்தை நாடினார். இந்தியாவின் உண்மைநிலையை களமாகக் கொண்டு, நொறுக்கப்பட்ட உத்தரவாதங்களை, உடைந்த கனவுகளைக் குறித்து 1950ஆம் ஆண்டு முதல் எழுதலானார். 1957இல் தனது முதல் நாவலான ‘சூனி கடி கா சூரஜ்’ வெளியிட்டார். கனவுக்கும் நடைமுறைக்குமான முரண்களை, ஏமாற்றங்களைச் சந்தித்தவர்களை கதாபாத்திரங்களாக உலவவிட்டார். அவரது எழுத்துகள் எதிர்மறையாகவும் அவநம்பிக்கையை விதைக்கும்படியாகவும் உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்தன. ‘அவநம்பிக்கைமிகுந்தவை என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், அதுதான் உண்மை’ என்று பதிலளித்தார்.

தர்பாரி ராகம் நாவல் 1968ஆம் ஆண்டு வெளியானது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும் பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும் எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப் போவதன் அவலச் சித்திரம் இது. இந்தியாவின் எளிய கிராமமொன்றின் அன்றாட நடப்புகளின் வழியாக சமூக பொருளாதார அரசியல் நிலையை கேலியும் கிண்டலுமாக விவரிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின், அவுத் பகுதியில் அமைந்திருக்கும் சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு முதுகலை வரலாற்றுப் பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு, வைத்தியரான தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின் கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சூதுவாது தெரியாத கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும் அதிகாரத்தையும் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கிராமிய அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன. தேர்தல் என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத் தவிர போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும் இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து நொறுங்குகின்றன.

அறுபதுகளில் கிராமப் பொருளாதார முன்னேற்றத்துக்கான மூன்று முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டவை, கிராமப் பஞ்சாயத்துகள், கூட்டுறவுச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் ஆகியன. இவற்றுக்கான நிதி ஆதாரங்களை, கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழலின் மூலம் பொதுமக்களை சென்றையவிடாது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையே இந்த நாவல் விவரிக்கிறது.

தர்பாரி ராகம், சிறிதும் இரக்கமில்லாமல் உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் ஒரு நாவல். இது வெளிவந்தபோது வாசகர்களை உலுக்கியது. தொந்தரவுக்கு உள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஊழல் அமைப்பை தோலுரித்துக் காட்டியது. வெளியான சமயத்தில் இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்கப்பட்வில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இது இந்தியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான ஒரு கதைமொழியை இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை என்று இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வரியிலும் கிராமங்களில் மக்களிடையே புழங்கும் சொலவடைகளை, மரபுத் தொடர்களை, பழமொழிகளைக் காண முடியும். லால் சுக்லவின் அங்கதத் தொனிக்கு இவை அனைத்தும் வலு சேர்த்துள்ளன.

இதன் அங்கத மொழி சில இடங்களில் நகைக்கச் செய்கின்றன. சில இடங்களில் சிந்திக்கச் செய்கின்றன. இன்னும் சில இடங்களில் உள்ளூற வருந்தவும் செய்கின்றன. கேலியும் கிண்டலுமாக வசைபாடும் இந்தக் குரல் அனைத்தையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளை, அதிகார வர்க்கத்தை, கல்விச் சூழலை, ஆட்சியாளர்களின் செயல் திறனை, கிராமிய மக்களின் அறியாமையை என அனைத்தையுமே இது கடும் வசைச் சொற்களால் விமர்சிக்கின்றன. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை, மூன்று முக்கிய விதங்களில் இந்த நாவல் வரையறுத்துள்ளது.

தர்பாரி ராகம், தான்சேனால் உருவாக்கப்பட்ட ஒன்று. கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுவது. ஆனால், ‘தர்பாரி ராகம்’ என்ற இந்த நாவலின் தலைப்புக்கும் இசைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நாவலின் மையக் கதாபாத்திரமான வைத்தியரின் பாட்டுக்கேற்ப ஒட்டுமொத்த கிராமமும் அதன் மனிதர்களும் பின்பாட்டு பாடுவதன் கேலிக் குறியீடாகவே இத்தலைப்பு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான் ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும் அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.

இந்திய கிராமத்தின் அசலான மண் மணத்தை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடியும். அதே சமயம் இதிலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலையும் அதிகார ஆட்டத்தையும் கூர்மையாக விமர்சிப்பதாக அமைந்துள்ளன.

இந்திய அரசமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக விமர்சிக்கும் விதமாக இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நொண்டி’ என்றே நாவல் முழுக்க அறியப்படும் அவன், தனது நிலத்துக்குரிய அரசாங்கப் பத்திரத்தின் நகலைப் பெற வேண்டி விண்ணப்பிக்கிறான். நகலைத் தரவேண்டி அத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தர், மூன்று ரூபாய் லஞ்சம் கேட்கிறார். நொண்டி தர மறுக்கிறான். என்னுடைய நிலத்துக்கான பத்திரத்தின் நகலை நான் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறேன், ஒரு இந்தியக் குடிமகனாக. அரசின் சார்பாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் துறையும், அதிகாரிகளும், எழுத்தர்களும். எதற்கு லஞ்சம் தரவேண்டும? என்பது அவன் வாதம். நியாயமான வாதம்தான். ஆனால், எழுத்தர் அவனது விண்ணப்பத்தில் பிழைகள் உள்ளன, தேதி சரியில்லை, கையெழுத்து சரியில்லை, என்று பல காரணங்கள், பிழைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சரியான விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு வா என்று திருப்பித் தந்துவிடுகிறார். ஒரு முறையல்ல, பல முறை. புதிது புதிதாக பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பித் தரப்படுகின்றன. நொண்டியும் சலிக்காமல் புதிய விண்ணப்பங்களை எழுத்தர்களை வைத்து எழுதித் தருகிறான். ஏழு வருடங்கள் இது நடக்கிறது. இதற்கு நடுவே அவன் தன் கிராமத்தையும் நிலத்தையும் குடும்பத்தையும் இழக்க நேர்கிறது. ஆனாலும் அவன் தன் தர்ம யுத்தத்தை கைவிடுவிதில்லை. நம்பிக்கையுடன் புதிய விண்ணப்பங்களை எழுதி அனுப்புகிறான். கடைசியில் ஒரு வழியாக அவனுக்கு நகல் தயாராகிறது. ஆனால், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் உடனே வந்து அதைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. உடல்நிலை சரியாகி வரும்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து நகலைப் பெற்றுக் கொள்ளாததால் அது கிழித்துப் போடப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மறுத்து, நேர்மையுடன் நடப்போரின் கதி என்னாகிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நொண்டியின் போக்கையே அனைவரும் விமர்சிக்கிறார்கள். ‘பேசாம மூணு ரூபா குடுத்துட்டு போக வேண்டிதுதானே’ என்பதே அனைவரின் அறிவுரையாகவும் உள்ளது.

நம்மில் பலரும் அப்படித்தானே?

70ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும் மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா தெரியவில்லை.இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச். சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா. நீதி நெறிமுறைகளை அனுசரிக்க முடியாத கதாபாத்திரங்கள், நாகரீகமற்ற, ஊழல் என்பது நமது அமைப்பின் ஓர் அங்கம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலை, கொள்கைகள் அணிகலன்கள், இங்கு பிழைத்திருப்பது என்பது நேர்மையைக் காட்டிலும் உள்ள நிலைக்கு அனுசரித்திருப்பதே.

நாவலின் 19வது அத்தியாயத்தில், ஸ்ரீலால் சுக்ல தேர்தலில் வெற்றிப் பெற, ராம்நகர் வழி, நேவாதா வழி, மகிபால்பூர் வழி என்று மூன்று வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்க் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பவர்களை பொய்க்குற்றம் சாட்டி வாக்களிக்க விடாமல் செய்வதே முதல் வழி. சாதி, மத நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளைப் பிரிப்பது நேவாதா வழி என்னும் இரண்டாவது வழி. தவறான கால நேரத்தை வகுத்து விஞ்ஞான ரீதியாக தேர்லை முன்னரே முடிவுக்குக் கொண்டு வந்து வேண்டிய வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்வது மூன்றாவது வழி. இந்திய நாட்டில் அடுத்து வரும் தேர்தல்களில் இத்தகைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பதை மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் எழுதியிருக்கிறார்.     

லால் சுக்ல 10 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், 9 அங்கதக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதியிருந்தபோதும், ‘தர்பாரி ராகம்’ அவருக்கான அடையாளமாக, மறுபெயராக மாறிவிட்டது. உண்மையில், அவரது பிற நாவல்களும் சிறுகதைகளும் அதேயளவுக்கு ஆழமும் அழுத்தமும் கொண்டவை.

அதிகாரத்தைப் பற்றி, யார் அதை கையில் வைத்திருக்கிறார்கள், எப்படி அதை பயன்படுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவற்றைக் கொண்டு வருகிறது, பிறருக்கு அதனால் என்னவாகிறது என்பதை எழுதியவர் சுக்லா. சுக்லாவின் கதைகளில் கற்பனையோ சாகசங்களோ இருக்காது. மேன்மையான குடிமக்களையோ அழகான கிராமங்களையோ காணமுடியாது. சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக, புதிய சொற்களையே உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு, சாதி அடுக்குகள், அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு வன்முறை நீடித்ததைப்போலவே. இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன, அவ்வளவுதான். இந்தியின் முதன்மை நாவலாசிரியர்களான பிரேம்சந்தும் மைதிலி சரண் குப்தாவும் காட்டாத ஓர் கிராமத்தை அச்சு அசலாகக் காட்டியிருப்பவர் லால்சுக்ல. இந்த நாவலில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று சொல்லவேண்டும். கயாதீனின் மகள் பேகா பிற கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியே மட்டுமே காட்டப்படுகிறாள். நேரில் அவள் காட்சிப்படுவதேயில்லை.

1969ஆம் ஆண்டு ‘தர்பாரி ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும், அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2011ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டன.

லால் சுக்லாவின் அங்கதம், கேலி, கிண்டலுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி விடுதலை பெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற மறந்து துரோகம் புரிந்தவர்களின் மீதான தார்மீக சினமும் சீற்றமுமே அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆகத் துயரமான வாழ்வை வாழ்ந்து கடக்க ஒரே வழி சிரித்துக்கொண்டே அதைக் கடப்பதுதான்.

பிற இந்திய மொழிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர் சரஸ்வதி ராம்நாத். இந்த நாவலில் அவரது மொழிபெயர்ப்பு மேதமை வியக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் உள்ளன. நாவலில் ஒலிக்கும் அங்கதத்தை துல்லியமாகவும் சிறிதும் வலுவிழக்காமலும் மொழிபெயர்த்திருப்பது பெரும் சாதனை. சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

‘தற்காலக் கல்வி இருக்கிறதே அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானாலும் அதை எட்டி உதைக்கலாம்’. ( பக் 9 )

‘நானும் சரித்திர பாடத்தில் எம்.ஏ.பாஸ் செய்திருக்கிறேன். 61 சதவீதம் மார்க் வாங்கியிருக்கிறேன். காலத்தின் கோலம். இப்போது இங்கே பிரின்ஸ்பாலாக இருக்கிறேன்.’

‘மோசமான டிவிஷன் வாங்கி இருந்தால் தாங்கள் இங்கேயா இருப்பீர்கள்?’

‘அது சரிதான். அப்படியிருந்தால் ஏதாவதொரு யுனிவர்ஸிடியில் லெக்சரராக இருந்திருப்பேன். மூன்றாம் டிவிஷனில் பாஸ் செய்த என் நண்பர்கள் எத்தனையோ பேர் யுனிவர்ஸிடியிலே இருக்கிறார்கள்.’ ( பக் 199 )

‘குற்றவாளிகளின் வீட்டில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாட்டுத் துப்பாக்கி என்று அழைக்கப்படும் இரும்புத்துண்டு கட்டாயம் தேடி எடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தார். அதைப் பார்த்ததுமே பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு இந்தியர்கள் தோற்றுப்போனது ஏன் என்ற வரலாற்று உண்மை தானாகவே தெளிவாகிவிடும்.’ ( பக் 187 )

கல்வித் துறை சம்பந்தமான பொருள்களை சப்ளை செய்யும் ஒரு கம்பெனியின் காலண்டர் அவர் முகத்துக்கு நேரே சுவரில் தொங்கியது. வெற்றுடம்பில் சருகு போன்ற மெல்லிய சேலையைச் சுற்றிக் கொண்டிருந்த யாரோ ஒரு திரை நடிகை மெய்ம்மறந்த நிலையில் லட்டுமாதிரி ஆடவன் ஒருவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். அந்த ஆடவனின் முகத்திலே ரோமக்காடு. ஒரு கரத்தை உயர்த்திக் கண்களை மறைத்துக்கொண்டிருந்தான். லட்டைத் தின்று தின்று அஜீர்ணம் வந்துவிட்டது போன்ற பாவம். இவர்கள்தான் மேனகையும் விஸ்வாமித்திரரும்.’ ( பக் 93 )

‘யாரேனும் கேட்டால் கேட்கட்டும், கேளாவிட்டால் போகட்டும் என்று பிரசார இலாக்கா பற்றற்றுப் பணிபுரிவதுபோல், பிரின்ஸ்பாலும் பேசிக்கொண்டே இருந்தார்.’ ( பக் 207 )

‘வெற்றிலைப் பாக்குக் கடையில் பாட்டிரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்கள் என்ற சாக்கடையிலிருந்து, ‘ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை, என் இலட்சியம், நீ எங்கே, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு, வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவளே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை’ ஆகிய சொற்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நாடுகளில் புத்தெழுச்சியின் செய்தியைப் பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.’ ( பக் 277 )

 

இந்திய நாவல்கள் என்று பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள், ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே மாறிப் போனவை.

இந்த இரு நாவல்களுக்கு சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால், லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பிரித்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது. அரசியல் அதிகார அமைப்புகளும் ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை.

அந்த வகையில் இன்றும் தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை மிக்க தன் அங்கதச் சுவையாலும் இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.

லால் சுக்லவைப் பற்றியும் அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம் ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும் வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடனை நினைவுக்கு வந்தார். ‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம் மிகுந்த முழு நாவலை எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர் என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள், அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள், திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, எல்லாவற்றையும் கண்டும்காணாமல் பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து காட்டமான, கூரிய விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ இன்றி நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும் கேலியும் கிண்டலுமாக தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு கடக்க முடியாதபடியான கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கும்.

0

நாவல் - தர்பாரி ராகம்

மூலமொழி - இந்தி

நாவலாசிரியர் - ஸ்ரீலால் சுக்ல

மொழியாக்கம் – சரஸ்வதி ராம்நாத்

வெளியீடு – நேஷனல் புக் டிரஸ்ட்

முதல் பதிப்பு – 1977, இரண்டாம் பதிப்பு 1990

பக்கங்கள் -402 – விலை ரூ. 28.00

Saturday, 28 February 2026

வண்ணச் சீறடிகள் - மனையறம் நாவல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்


‘மனையறம்’ நாவல் குறித்து எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் ‘அகழ்’ மின்னிதழில் ‘வண்ணச் சீறடிகள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். 

கட்டுரைக்கான இணைப்பு இங்கே.


நன்றி - செந்தில் ஜெகன்நாதன்

 https://akazhonline.com/?p=11482

வாழ்க்கைச் சரிதங்கள் – முழுமையை நோக்கிய வெளிச்சம்



 

சுயசரிதை அல்லது தன்வரலாறு என்பது குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையை, வரலாற்றைச் சொல்வது மட்டுமன்று. குறிப்பிட்ட அந்த மனிதர் வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உள்ளடக்கியதுதான். அவருடைய வாழ்க்கையின் வழியாக அந்தக் காலத்தில் நிலவிய சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை, சிக்கல்களை, சவால்களை, ஏற்ற இறக்கங்களை என அனைத்தையுமே அறிந்துகொள்ள துணைசெய்யும். ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட முறையான வரலாற்றின் ஊடே இத்தகைய சுயசரிதைகள் புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் பாய்ச்சும். நம் முன் வைக்கப்பட்ட வரலாற்றை இன்னொரு கோணத்திலிருந்து அணுகவும், அதிலுள்ள இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளவும் முடியும்.

தமிழில் எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகள் எண்ணிக்கையில் குறைவு. அவ்வாறு எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகளிலும் பெருமளவு வாசிக்கப்பட்டவை மிகவும் குறைவு. உ.வே.சா வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, தி,சௌ.ராஜனின் ‘நினைவலைகள்’ ஆகிய சில நூல்களே தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள், நிர்வாகத் திறன் மிகுந்த ஆளுமைகள் ஆகியோரின் பங்களிப்பை அறிந்துகொள்ளும் வகையிலான முக்கியமான சுயசரிதைகள் அதிக அளவில் எழுதப்படவில்லை. அல்லது எழுதப்பட்ட அத்தகைய சில தன்வரலாறுகளும் போதிய கவனம் பெறவில்லை.

கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் தாமோதரசாமி நாயுடு மிக முக்கியமான ஒரு பிரமுகர், ஆளுமை. உணவகங்களின் சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட நவீன சமையல் சாதனங்களை வடிவமைத்தவர் என்பதால் தமிழக அளவில் உணவக உரிமையாளர்களால் பெரிதும் போற்றப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மரபின் மைந்தன் முத்தையா அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நூலின் தலைப்பு ‘சுவைபட வாழ்தல்’. அதேபோல, கோவையின் புகழ்பெற்ற மருத்துவமனையான ‘கங்கா மருத்துவமனை’யின் குடும்பத்தின் வரலாற்றையும், அதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்.கனகவல்லியின் பார்வையில், முத்தையாவே எழுதினார். பெயர் ‘ஒரு அன்னையின் கனவு’. இந்த இரண்டுமே குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறுகள்.

அந்த வகையில், ‘முன்சுவடுகள்’ என்ற கட்டுரை நூலில் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனைவு நூலுக்குரிய சுவாரஸ்யத்துடன் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். இந்தக் கட்டுரைகள் அனைத்துமே எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டவை. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.வி.க, பெ.தூரன், கிருஷ்ணன், டி.கே.சண்முகம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.எஸ்.கரையாளர் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளுடன் கேரளத்தைச் சேர்ந்த வெட்டம் மாணி, சி.வி.ராமன் பிள்ளை, வயலார் ராமவர்மா, என்.என்.பிள்ளை ஆகியோரைக் குறித்த கட்டுரைகளும் உள்ளன.

‘பெண்ணின் பெருமை’யை எழுதிய திரு.வி.கல்யாணசுந்தரம் தன் மனைவி கமலாம்பிகையுடனான இல்லற வாழ்வைக் குறித்தும் அவரது மறைவுக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளாமல் அவரது நினைவுடனே தமிழ்த் தொண்டு புரிந்ததைக் குறித்தும் விவரிக்கிறது ‘ஓர் அமரகாதல்’. இதேபோல, ‘மார்த்தாண்ட வர்மா’, ‘தர்ம ராஜா’, ‘ராம ராஜா பகதூர்’ போன்ற நாவல்களை எழுதிய மலையாள நாவலாசிரியர் சி.வி.ராமன் பிள்ளையைக் குறித்து பி.கே.பரமேஸ்வரன் நாயர் எழுதிய நூலில் உள்ள அழகான காதல் கதையை ‘சதுரங்க ஆட்டத்தில்’ என்ற கட்டுரையில் சித்தரித்திருக்கிறார். ஜானகி என்னும் நாயர் தறவாட்டு பெண்ணின் மீது கொண்ட காதல் அவருக்குள் எரிந்துகொண்டிருந்தபோது தனது முதல் நாவலான ‘மார்த்தாண்ட வர்மா’வை எழுதிய சி.வி.ராமன் பிள்ளை, அவளை மணக்க முடியாமல் போன நிலையில் இருபதாண்டு காலம் எதையும் எழுதவே இல்லை. காலவோட்டத்தில் ஒரு நெருக்கடியான சூழலில் அவளை மீண்டும் அடைந்தபின் பெரும் ஆவேசத்துடன் எழுதத் தொடங்கி பிற நாவல்களை எழுதியிருக்கிறார்.

மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மாயின் மனைவி பாரதி தம்புராட்டி தன் கணவரைப் பற்றி எழுதிய சிறு நூல் ‘இந்திர தனுஸின் தீர்த்து’. வாழ்நாள் முழுக்க ராமவர்மா, அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் அதன் விளைவுகளையும் இந்த நூலில் எழுதியிருக்கிறார். மனைவியுடன் பேசக்கூட அம்மாவின் அனுமதியைப் பெறும் நிலையிலிருந்த ராமவர்மா, திரையுலகில் உச்சத்தில் இருந்த காலத்தில், சென்னையில் தங்கியிருந்த ராமவர்மா கடிதங்களையும்கூட அம்மாவுக்குத் தான் எழுத முடிந்திருக்கிறது. தினமும் அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் அவர் ஒருமுறைகூட மனைவியிடன் பேசியதில்லை. தனிமையில் கிடந்த ராமவர்மா குடிக்கு அடிமையானார். பெண்பித்தராக அலைந்தார். மனைவி பாரதி சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடத்தினார். இத்தனைக்குப் பிறகும் தன் வாழ்க்கையை நாசமாக்கிய வயலாரின் அம்மாவின் மீது அவருக்கு எந்த வெறுப்புமில்லை என்றே எழுதுகிறார். கணவரின் வாழ்வும், தனது துயர நிலையும் ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச் செல்கிறார் பாரதி.

மலையாள வணிக நாடக மேடையின் பிதாமகர்களில் ஒருவரான என்.என்.பிள்ளை, ‘நாடக தர்ப்பணம்’ என்கிற முக்கியமான பல நூல்களின் ஆசிரியரும்கூட. அவரது சுயசரிதை ‘ஞான்’ (நான்) மிக முக்கியமான வாழ்க்கை வரலாறாகக் கருதப்படுகிறது. சிறுவயதிலேயே மலேயாவுக்கு செல்ல நேரும் என்.என்.பிள்ளை தோட்டங்களில் வேலை பார்த்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இராணுவத்தின் இணைந்தது, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துடன் பணியாற்றியது, சயான் மரண ரயில் பாதையில் பலரும் மரணமடைந்தது, சுபாஷ் சந்திர போஸின் ஆளுமை குறித்த சித்திரம், ஜப்பானின் போர் தந்திரங்கள் என்று பல நுட்பமான தகவல்களை தன் சுயசரிதையில் விவரித்திருக்கிறார். இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இந்தியாவுக்குத் திரும்புகிறார். மலேயாவில் இந்திய தேசிய இராணுவத்துக்காக நாடகங்களை நடத்திய அனுபவத்தைக்கொண்டு ‘விஸ்வ கேரள காலசமிதி’ நாடக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தலானார். சில காலத்திலேயே கேரளத்தின் முதன்மை நாடக ஆசிரியராக புகழடைந்தார். ‘சுயசரிதைகளை உண்மையாகவே எழுதினால், அந்த நூலைத் தொட்டால் நம் கை சுடும் என்பார்கள். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று இது’ என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

என்.கே.கிருஷ்ணனின் ‘நம்பிக்கை ஒளி – ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாற்று நினைவுகள்’ என்ற நூல் கிருஷ்ணனைப் பற்றி மட்டுமல்லாது, அவரது மனைவி பார்வதி கிருஷ்ணன், டாக்டர் சுப்பராயன் ஆகியோரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களைத் தருகிறது. ( சென்ற சில மாதங்களாக, பார்வதி கிருஷ்ணன் குறித்து நூல் எதுவும் எழுதப்பட்டிருக்கிறதா என்று நண்பர்களை விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. )  

டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்த கட்டுரை ‘ஓர் அக்கினிப் பிரவேசம்’. பிறப்பு அவர் மீது ஒட்டவைத்த இழிவை இசையைக் கொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அழித்து விடுதலை அடைந்ததை இக் கட்டுரை விவரிக்கிறது. எம்.எஸ்ஸின் வாழ்க்கையை இந்த நூல் மூன்று தளங்களில் அணுகியுள்ளது. அவரது இளமைக்காலம் ஒன்று. அடுத்தது திரைப்படம், மேடைப்பாடல்களின் மூலம் புகழ்பெற்று குடும்ப வாழ்க்கையில் அமைந்தது. மூன்றாவது, கணவர் சதாசிவம் அவரை ஒரு கலாச்சாரச் சின்னமாக மாற்றிய காலகட்டம். இந்த நூலின் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கும், ஜி.என்.பிக்கு எம்.எஸ் எழுதிய கடிதங்கள், அவரது கலையுள்ளத்தின் உணர்ச்சிகரத்தை நெருங்கி அறிய உதவுவதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

எம்.ஓ.மத்தாய் நேருவைப் பற்றிய பிரபலமான நூலான ‘நேரு யுக நினைவுகள்’ பற்றிய கட்டுரை மிக விரிவானது. நேருவின் ஆளுமையை எல்லாக் கோணங்களிலிருந்து அணுகிய இந்த நூல், தேசிய தலைவர் என்கிற ஆளுமையின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. இந்த நூலில் பெண்களுடனான நேருவின் உறவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். அந்தப் பெண்களில் ஒருவரான சிரத்தா மாதாவைக் குறித்து ஒரு அத்தியாயத்தை மத்தாய் எழுதியுள்ளார். ‘அவள்’ என்ற பெயரில் உள்ள அந்த அத்தியாயம் இந்தியப் பதிப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு என் புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்தும்போது, இனிமேல் வாசிக்கத் தேவையில்லை என்று நினைக்கும் புத்தகங்கள் சிலவற்றை தேவையான நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தனியாக எடுத்து வைத்தேன். அவற்றில் ஒன்று மத்தாயின் இந்த புத்தகமும். இந்தக் கட்டுரையை வாசித்தவுடனே பெட்டியிலிருந்து அந்த நூலை அவசரமாக எடுத்துப் புரட்டினேன். 1979ஆம் ஆண்டு ‘பெல்’ புக்ஸ் வெளியிட்டிருந்த இந்த புத்தகத்தின் விலை ஒன்பது ரூபாய் ஐம்பது பைசா. நூலின் உள்ளடக்கப் பக்கத்தில், அத்தியாயம் 29 ‘அவள்’ என்று குறிப்பிடப்பட்டு, பக்கம் எண் 153 என்றிருந்தவுடன் ஆவலுடன் பக்கங்களைப் புரட்டினேன். 152ஆம் பக்கத்துக்குப் பிறகு 157ஆம் பக்கம்தான் இருந்தது. கட்டுரையிருந்த பக்கங்கள் மொத்தமும் வெட்டி நீக்கப்பட்டிருந்தன.

‘விலக்கப்பட்டவர்கள்’ என்ற கடைசி கட்டுரை, ‘தாத்ரிக் குட்டியின் ஸ்மார்த்த விசாரணை’யைக் குறித்த ஒன்று. கேரளத்தில் நம்பூதிரிகளிடையே நிலவிய ஒரு சாதிச் சடங்கு எவ்வாறு உருவானது, அதன் பின்னணி என்ன, சுசீந்திரம் கோயிலில் நடந்த‘கைமுக்கு’ உள்ளிட்டவற்றை விரிவாக அலசுகிறது. தாத்ரிக்குட்டியின் கதையைக் கொண்டு வெளியான திரைப்படங்களைக் குறித்தும் கூறுகிறது. இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி மிக முக்கியமானது. இவ்வாறான ஒரு ஸ்மார்த்த விசாரணையில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சாதிபிரஷ்டம் செய்யப்பட்டு நாடுகடத்தப்படுகிறார் மேலங்கத்து கோபால மேனன். இலங்கைக்குச் சென்ற அவர் தோட்டத் தொழிலாளியாக காலத்தைக் கடத்தினார். சத்யவதி என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நோயுற்று கோபால மேனன் இறந்த பிறகு அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தாள். பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். இருவரும் நாடக நடிகர்களாகவும் பிறகு திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தனர். பிறகு நடந்த அனைத்தையும் நாடறியும், நாமறிவோம். தாத்திரிக்குட்டியின் வாரிசுகளில் ஒருவரான ஒரு பெண்ணும் திரை நட்சத்திரமாக மிளர்ந்தார் என்றும், அது யார் என்றும் கட்டுரை உறுதிப்படுத்தப்படாத தகவலாகக் குறிப்பிடுகிறது.

வாழ்க்கை சரிதங்களின் வழியாக பொதுவெளியில் அறிந்த வாழ்வின் உள்ளடுக்குகளில் உள்ள பிற அம்சங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறான அறிதல் வரலாற்றில் ஏற்கெனவே கட்டப்பட்ட பிம்பங்களின் மீது புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச உதவுகிறது. ரகசியங்கள் இல்லாத மனிதன் எவருமில்லை. ஆனால், அந்த ரகசியங்களே அந்த மனிதனின் பிம்பத்தை முழுமையுறச் செய்கின்றன. வாழ்க்கைச் சரிதங்கள் முழுமையாக அல்லாவிடினும், வெளிப்படுத்தப்படாத அத்தகைய ரகசியங்களைத் ஓரளவேனும் தொட்டுக் காட்டும்போது அவை சில தெளிவுகளை அடைய உதவுகின்றன.

0

முன்சுவடுகள் – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

நவம்பர் 2023 விலை ரூ.240./

  

Monday, 23 February 2026

மொழிபெயர்ப்புக் கலையும் ஆர்.சிவகுமார் எனும் கலைஞரும்

 


ஆர்.சிவகுமார் சாரை எப்போது நான் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், இலக்கியத் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நான் அறிந்த ஒரு பெயர். தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்கு வந்திருந்த நாட்களில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்திருக்க வேண்டும்.

1999ஆம் ஆண்டு ஒரிசா சாகித்திய அகாதமி அனைத்திந்திய கவிஞர்கள் கூடுகை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புவனேஸ்வருக்கு அருகில் உள்ள சிலிகா என்ற மாபெரும் ஏரிக் கரையில் நிகழ்ச்சி. இந்த நிகழ்வுக்காக தமிழகத்திலிருந்து ரவி சுப்ரமணியன், சிபிச் செல்வன் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இந்தக் கவிதையரங்கில் வாசிப்பதற்காக கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு கடிதத்தில் என்னுடைய தேவையைச் சொல்லி இரண்டு கவிதைகளை ஆர்.சிவகுமார் சாருக்கு மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டேன். ஒரு வாரத்திலேயே கவிதைகளை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். ஒரு நாள் மாலையில், சிலிகா ஏரியின் மீது மிதந்திருந்த படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில், அவர் மொழிபெயர்த்த கவிதையைத்தான் வாசித்தேன். பிற மொழிகளிலிருந்து வந்திருந்த சிலர் அந்தக் கவிதையைக் கவனித்து பாராட்டினார்கள். மொழிபெயர்த்த கவிதையின் பிரதியைக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ‘கடைசியாய் ஒரு கைகுலுக்கல்’ என்ற கவிதை அது. ‘A Handsake, at last’ என்பது சிவகுமார் சாரின் மொழிபெயர்ப்பு.

இந்தக் கவிதையுடன், ‘தீராத சித்திரம்’ என்ற இன்னொரு கவிதையையும் மொழிபெயர்த்திருந்தார்.

பின்னாளில் சந்தர்ப்பவசமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட நேர்ந்தபோது, சிவகுமார் சார் என்னுடைய கவிதையை மொழிபெயர்த்திருந்த பாங்குதான் உடனடியாக நினைவுக்கு வந்தது. மொழியாக்கம் என்பது ஒரு மொழியில் இருப்பதை இன்னொரு மொழியில் அப்படியே எழுதுவது அல்ல என்பதை சிவகுமார் சாரின் மொழியாக்கங்களின் வழியாகவே நான் புரிந்துகொண்டேன். மொழிபெயர்ப்பு குறித்து நேரடியாக அவரிடம் உரையாடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், அவருடைய மொழிபெயர்ப்புகளின் மூலம் கற்றுக்கொண்டவை ஏராளம். இதுவரை நான் மொழிபெயர்த்திருக்கும் சில நூல்களின் பின்னணியில் அவருடைய மொழியாக்கங்களிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களே உள்ளன. அந்த வகையில் அவர் என் ஆசான், குரு.

1980களில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்க்கு வழங்கப்பட்டதை அடுத்து அவருடைய கதைகளும் லத்தீன் அமெரிக்கக் கதைகளும் தமிழில் புழங்கலாயின. அந்த வகையில் மார்க்வெஸ்ஸின் கதையை தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தவர் சிவகுமார். அக்டோபர் 1983 மீட்சி இதழில் ‘செவ்வாய்க் கிழமை மதியத் தூக்கம்’ கதையை மொழிபெயர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் ‘லத்தீன் அமெரிக்கக் கதைகள்’ தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், தனது இலக்கியப் பயணத்தை 25வயதில் தொடங்கியது ஒரு சிறுகதையாளராக. 1976ஆம் ஆண்டு அஃக் இதழில் அந்தச் சிறுகதை வெளியானது. ஆனால், ஏனோ அதை அவர் தொடரவில்லை.

உதகையில் பணியாற்றியபோது, பிரம்மராஜனுடன் இணைந்து ‘மீட்சி’ இதழில் தொடர்ந்து பங்களித்துள்ளார். நவம்பர் 1983 இதழில் பாரிஸ் ரிவ்யூவில் வெளியான வில்லியம் ஃபாக்னரின் பேட்டியின் மொழியாக்கம் வெளியாகியுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் இதழில் வண்ணதாசன் சிறுகதைகள்-ஒரு வாசக அனுபவம் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். செப் 85 இதழில் ‘புதுக்கவிதையும் புதுப் பிரக்ஞையும்’ என்ற தலைப்பில் இலக்கு நடத்திய கருத்தரங்கு குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.  

சாகித்திய அகாதமியின் காலாண்டு இதழான இந்தியன் லிட்டரேச்சர், ஏப்ரல் 2000இல், இவரது மொழிபெயர்ப்பில் பதினேழு சங்கக் கவிதைகள் வெளியாகியுள்ளன. நகுலனின் சில கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

2008ஆம் ஆண்டில் அவர் இன்னொரு முக்கியமான பணியையும் செய்திருக்கிறார். திராவிடப் பல்கலைக் கழகத்துக்காக சுந்தர ராமசாமியின் ரீடர் ஒன்றைத் தொகுத்தளித்திருக்கிறார்.

அண்மையில் இவரது முதல் நாவல் 2021ஆம் ஆண்டு, ‘தருநிழல்’ வெளியானது. 2024ஆம் ஆண்டு இரண்டாவது நாவல் ‘கற்றதினால்’ வெளிவந்துள்ளது.

முக்கியமான சில கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார்.  ஆவநாழி இதழில் ‘பொயட்ரி’ இதழைக் குறித்தும், ‘லிட்டில் ரிவ்யூ’ இதழைக் குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. வண்ணதாசன், மௌனி, ஆ.இரா,வெங்கடாசலபதி ஆகியேரைக் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். சில முக்கியமான நேர்காணல்களையும், கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

தமிழின் சிற்றிதழ் மரபின் வழியாகவே தீவிர இலக்கியம் தொடர்ந்து உருவாகி வளர்ந்து வலுப்பெற்றது. தமிழ் புனைவு சார்ந்த எழுத்து நடையை, முறையை செழுமைப்படுத்தியதை நேரடியாக உணரவும் காணவும் முடிகிறது. ‘மணிக்கொடி’ முதல் ‘காலச்சுவடு’ வரையிலான அச்சிதழ்களும், இன்றைய மின்னிதழ்களும் உருவாக்கிய தீவிர இலக்கியத்தின் எழுத்தாளர்கள் வரிசை மிகப் பெரியதும் பெருமைப்படத்தக்கதுமாகும். தமிழின் சிறுகதை வளத்துக்கும் கவிதைச் செறிவுக்கும் நாவல்களின் வலுவுக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது சிற்றிதழ் வழியாக உருவான தீவிர இலக்கிய மரபேயாகும்.

ஆனால், அதே சமயம் அதே சிற்றிதழ் மரபின் மற்றொரு முக்கியமான கொடை மொழிபெயர்ப்பு. புனைகதைகள், கவிதைகள் சார்ந்த அக்கறையையும் கவனத்தையும் ஏற்படுத்திய அதே சமயத்தில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான தீவிரமான ஒரு பாதையும் உருவாக்கப்பட்டது என்பதை பலசமயம் நாம் யோசிப்பதில்லை. எதை மொழிபெயர்க்கவேண்டும், ஏன் மொழிபெயர்க்கவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவும் ஆழமான பார்வையும் கொண்டவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையை உருவாக்கினார்கள். இதழ்களோ புத்தகங்களோ கிடைக்க சிரமமான அந்தக் காலத்தில் தொடர்ந்து தேடித் தேடி தமிழுக்கு அளப்பரிய அரிய செல்வங்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். மொழியாக்கத்துக்கான அடிப்படைகளை அவர்களே ஏற்படுத்தினார்கள்.

ஆர்.சிவகுமார் சிற்றிதழ் மரபைச் சார்ந்தவர். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகளில் பெரும்பாலானவை மீட்சி, கல்குதிரை, உன்னதம், புது எழுத்து, மந்திரச் சிமிழ், உயிர்மை, காலச்சுவடு, நீட்சி, ‘க’, தொனி உள்ளிட்ட சிற்றிதழ்களிலேயே வெளியாயின. அவருடைய எம்.ஃபில் ஆய்வு அமெரிக்காவில் வெளியான சிறுபத்திரிகைகள் குறித்தது. முனைவர் பட்டம் படிகள், நிறப்பிரிகை ஆகிய இதழ்களை மையமாகக் கொண்டது.

தமிழில் சிற்றிதழ்களின் வழியாக மொழிபெயர்ப்புக்கென அத்தகைய ஒற்றையடிப் பாதையை உருவாக்கியதில் பிரம்மராஜனின் ‘மீட்சி’ இதழுக்கும் சிவகுமாருக்கும் முக்கியமான பங்கு உண்டு. சிறுகச் சிறுக கதைகளை வாசித்துத் தேர்ந்தெடுத்து மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் துல்லியத்துடனும் மொழிபெயர்த்து ஒரு வலுவான அடித்தளத்தை, எந்தவித சலசலப்போ அலப்பறையோ ஆரவாரமோ இல்லாமல் அவர் உருவாக்கி எழுப்பியிருக்கிறார்.  அவரது முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதை 1983இல் வெளிவந்த ‘செவ்வாய்க் கிழமை பிற்பகல் தூக்கம்’ என்று கணக்கில்கொண்டால், இப்போது 42 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 42 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்த்திருக்கும் கதைகளின் எண்ணிக்கை 32. நாவல்கள் 7, இலக்கியக் கோட்பாடு, மார்க்ஸின் ஆவி என இரண்டு புனைவல்லாத நூல்கள், மாயா ஆஞ்சலோவின் ஒரு கவிதைத் தொகுப்பு. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போதே நமக்குப் புரியும், ஒவ்வொரு ஆக்கத்துக்கும் எத்தனை காலத்தையும் உழைப்பையும் அவர் செலுத்தியிருக்கிறார் என்பது.

அவரது மொழியாக்கத்தில் வந்திருக்கும் படைப்புகளில் அவர் கையாண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் கூரிய கவனமும் தெரிவும் இருந்துள்ளன. குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு தமிழ்ச் சொல்லை இடும்போது தமிழ் சொற்களஞ்சியத்திலிருந்து ஆகப் பொருத்தமான ஒரு சொல்லையே அவர் தேர்ந்தெடுப்பார். அதற்காக அவர் மிகவும் மெனக்கெடுவதுண்டு. எனவேதான் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அவ்வளவு நேரத்தை அவர் செலவிட நேர்ந்திருக்கிறது. தன் இலக்கியப் பங்களிப்பு, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், தரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும் என்பதே அவரது எண்ணம். எத்தனை கதைகளை, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறோம் என்பதைக் காட்டிலும் எதையெல்லாம் புதிதாக தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஆரம்ப காலங்களில் சிற்றிதழ்களின் வழியாக க.நா.சு, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிரமன் போன்றோரும் பின்னர் சிவகுமாரும் அவரது காலத்தில் பங்களிப்பாற்றிய பிரம்மராஜன், சி.மோகன், சா.தேவதாஸ், அமரந்தா, திலகவதி, சாருநிவேதிதா, சுகுமாரன், ஜி குப்புசாமி போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் உருவாக்கிய அடித்தளத்தின் மீதுதான் தமிழின் இன்றைய மொழிபெயர்ப்புத் துறை ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உலக இலக்கியங்கள், குறிப்பாக நாவல்கள் தமிழில் பெரும் எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. நேரடியாக தமிழில் எழுதப்படும் புனைவுகளுக்கு இணையான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. கணிசமான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்பாளர்களும், அதிக அளவில் பெண்களும், உருவாகியுள்ளனர். மிகவும் வரவேற்கத்தக்க இந்தப் போக்கில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சற்றே கவலைப்படவேண்டிய சில புள்ளிகளும் உள்ளன என்பதையும் குறிப்பிடவேண்டும். மொழிபெயர்ப்பிலும் அந்த நூலை வெளியிடுவதிலும் காட்டுகிற வேகத்தை நூலின் மொழிசார்ந்த தரத்திலும் துல்லியத்திலும் காட்டினால் அது தமிழுக்கும் மொழியாக்கத்தை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்களுக்கும் நன்மை பயக்கும்.

முன்னோடிகளின் சாயல் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் இருக்கும். புதுமைப்பித்தனின் சாயலில்லாமல் தமிழில் எழுதும் எழுத்தாளர்களைக் காண்பது கடினம். அசோகமித்திரனும் தி.ஜானகிராமனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் தமிழ் உரைநடையில்  அத்தகைய செல்வாக்கை செலுத்தியுள்ளார்கள். அதேபோல, மொழிபெயர்ப்பாளனிடமும் முன்னோடி மொழிபெயர்ப்பாளனின் சாயலும் பாணியும் இருக்கும். அத்தகைய ஒரு வலுவான சாயலை, பாதிப்பை தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்படுத்தியிருப்பவர் சிவகுமார். தனிப்பட்ட வகையில் மட்டுமல்லாமல் பொதுவாக தமிழ் மொழிபெயர்ப்பிலும் சிவகுமாரின் ஆழமான பாதிப்பு உண்டு. புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் ஜானகிராமனும் சுராவும் தமிழ் உரைநடையில் செலுத்தியிருக்கும் செல்வாக்குபோல இன்றைய மொழிபெயர்ப்பாளர்களிடம் சிவகுமாரின் செல்வாக்கும் மிகவும் கணிசமானது, ஆழமானது, தவிர்க்கமுடியாதது.

உலக இலக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் என்பதும், துல்லியமும் சரளமும் மிக்க தனது மொழிபெயர்ப்புகளின் வழியாக தனக்கு அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களின் பணிகளில் ஆழமான செல்வாக்கு செலுத்தியிருப்பவர் என்பதும் சிவகுமாரின் இரு முக்கியமான, ஆழமான பங்களிப்புகள்.

 

செங்கதிர் மொழிபெயர்த்த எட்வர் கீரத்தின் ‘அவன் பறந்துபோய்விட்டான்’ செம்மைப்படுத்தும்பொருட்டு சிவகுமாரிடம் உதவியும் ஆலோசனையும் கேட்டோம். எட்வர் கீரத்தின் ஆங்கில மொழியாக்கத்தையும் செங்கதிர் மொழியாக்கம் செய்த பிரதியையும் பொறுமையாக வாசித்து, ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு தனது ஆலோசனைகளைத் தந்தார். அவர் திருத்தி, குறிப்புகள் எழுதிய அந்தப் பிரதியை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம். ஒரு மொழியாக்கத்தை செம்மைப்படுத்துவதற்கான கையேடாக அதை நாம் பயன்படுத்த முடியும். திருத்தி, குறிப்புகளை எழுதி அனுப்பிய பிறகு அதுகுறித்து தொலைபேசியில் உரையாடினோம். அப்போது மறுமுனையிலிருந்து ஒவ்வொரு திருத்தத்துக்கும் அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாதவை. ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லை அவர் முன்மொழியும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். மறுப்பு சொல்லமாட்டோம். ஆனால், அவர் அப்படியொரு தொனியில் அதை சொல்லவில்லை. ‘இதுக்கு பதிலா இப்பிடி இந்த சொல்லைப் போட்டு பாருங்களேன்’ என்றோ, ‘அந்த எடத்துல இந்த வார்த்தையப் போட்டா இன்னும் நெருக்கமா வரும்னு தோணுது’ என்றோ, ‘நீங்க போட்டிருக்கற சொல் சரியாத்தான் இருக்கு. ஆனா கதையில அந்த எடத்தை இன்னும் சரியா சொல்லணும்னா இந்த சொல்லைப் போடலாமே’ என்றோதான் மிக மென்மையாகவும் பொறுமையாகவும் குறிப்பிடுவார். அதாவது மொழிபெயர்த்தவர் எந்த விதத்திலும் தான் தவறுசெய்துவிட்டோம் என்று மனம் வருந்தக்கூடாதே என்ற கரிசனம் அந்தக் குரலில் தொனிக்கும். முக்கியமாக, ஆலோசனை கேட்கிறார்கள், நாம் நம்முடைய மேதாவித்தனத்தைக் காட்டுவோம் என்று குற்றம் சுட்டும் நக்கீரத்தனம் அவரிடம் துளியும் இருக்காது.

சில உதாரணங்களைச் சொல்லலாம். ‘old man’ என்ற சொல்லை வழக்கமாக நாம் ‘வயதான மனிதர்’ என்று நேரடியாக மொழிபெயர்ப்போம். ஆனால், ஆர்.சிவகுமார் அதற்கு பதிலாக இட்டிருந்த சொல் ‘முதியவர்’. ‘difficulty’ என்று வரும்போது நாங்கள் ‘கஷ்டம்’ என்று எழுதியிருந்ததை அவர் ‘சிரமம்’ என்று மாற்றியிருந்தார். ஒரு கதையின் இறுதியில் ஒரு வாக்கியம், ‘he is just a fish’ என்று இருந்தது. எங்களுடைய மொழிபெயர்ப்பு, அது மீன் மட்டும் தான். ஆனால், ஆர்.சிவகுமார் அதை இன்னும் மேம்படுத்தி, ‘அவர் வெறும் ஒரு மீன்தான்’ என்று மாற்றியபோது, கதையில் அந்த வாக்கியம் மேலும் தெளிவடைந்திருந்தது.

அண்மையில் இப்போது இங்கே வழங்கப்பட்டிருக்கும் இந்த சிறு வெளியீட்டை சரிபார்க்கும்பொருட்டு அவருக்கு அனுப்பிவைத்தோம். ஒருசில சொற்களை மாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். உதாரணத்துக்கு, ஒரு இடத்தில் ‘ஆகிய’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக அவர் ‘போன்ற’ என்ற சொல்லை இடும்படி கூறினார். அந்த வாக்கியத்தை சாதாரணமாக வாசிக்கும்போது இரண்டுக்கும் பெரிய அளவில் பொருள்வேற்றுமை இருப்பதை கவனிக்கமாட்டோம். ஆனால், நுட்பமான வேறுபாடு உண்டு.

மொழிபெயர்க்கும்போது சலிப்பில்லாமல் சோம்பல்படாமல் அகராதிகளை பயன்படுத்த வலியுறுத்துவார். குறிப்பிட்ட ஒரு அகராதி என்று இல்லாமல், சிறந்த அகராதிகளை அருகில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பார். ‘கேம்ப்ரிட்ஜ்’ அகராதி சிறப்பானது என்பது அவருடைய அனுபவம்.

எந்தவொரு கதையை அல்லது நாவலை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்தக் கதாசிரியர், அவருடைய கதைகளின் ஒட்டுமொத்த பின்னணி, கதைமொழி, எழுதப்பட்டிருக்கும் சூழல் போன்றவற்றை வாசித்துத் தெரிந்துகொள்வது முக்கியம் என்பதை அவர் தொடர்ந்து கூறியுள்ளார். அதன் வழியாகத்தான் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் idioms & phrases களை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்பாளர்களின் மிகப் பெரும் சவால் கதைகளில் உள்ள இத்தகைய மரபுத்தொடர்களை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றை தமிழில் பொருத்தமாக இடுவதுதான்.

 

2002ஆம் ஆண்டு ‘பிறமொழிக் கதைகள்’ வெளியானது. அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மீட்சி புக்ஸின் வெளியீடாக 1986ல் வெளியான ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில் ‘நம் காதலியை மூன்றாவது ஆள் மூலம் காதலிப்பது எப்படிப்பட்ட இழப்போ அப்படிப்பட்டதுதான் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பதும்’ என்று தாகூர் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். நினைவிலிருந்து மேற்கோள் காட்டியதால் ஒரு வார்த்தையைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். அதாவது, ‘மூன்றாவது ஆள் மூலம்’ என்பதற்குப் பதிலாக ‘வக்கீல் வைத்து’ என்று இருந்திருக்கவேண்டும். தாகூரின் வார்த்தை attorney. இழப்பை எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்’.

16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு நூலின் முன்னுரையில் தான் தவறாகக் குறிப்பிட்ட ஒன்றை நினைவில் வைத்து இப்போது எழுதுகிறார். யார் இதைக் கவனிக்கப் போகிறார்கள் என்று யோசிக்காமல், தவறாகக் குறிப்பிட்ட ஒன்றை எத்தனை வருடம் ஆனாலும் சரிசெய்யவேண்டும் என்ற தன்னுணர்வும் பொறுப்பும்தான் அவரை இப்போது இதைத் திருத்தச் செய்திருக்கிறது. அதுதான் சிவகுமாரின் குணம், தன்மை, மேன்மை. இந்த தனித்தன்மைமிக்க குணந்தான் அவரை ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் தலையாய ஒருவராக நம்மைக் கொண்டாடச் செய்கிறது. இந்த தன்னுணர்வை, பொறுப்பை அவரது மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிலும் பார்க்க முடியும்.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு கவிஞர் ஆனந்தகுமார் கவிதைக்கென ஒரு அச்சிதழைத் தொடங்கவிருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பைக் கண்டதும், சில வருடங்களுக்கு முன்பு ஆவநாழி மென்னிதழில் சிவகுமார் எழுதியிருந்த கட்டுரையொன்று நினைவுக்கு வந்தது. 1912ஆம் ஆண்டு சிகாகோவில் ஹேரியட் மன்றோ என்னும் கவிஞரால் தொடங்கப்பட்ட இந்த கவிதை இதழ் இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது. 114 ஆண்டுகளாக ஒரு கவிதை இதழ் வெளிவந்துகொண்டிருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது இல்லையா? சிவகுமாரின் அந்தக் கட்டுரை, பொயட்ரி இதழைக் குறித்த விரிவான அறிமுகத்தை அளிக்கும் ஒன்று. தமிழில் வெளியான முக்கியமான நல்ல கட்டுரைகளில் ஒன்று.

அடுத்த இதழில், ‘லிட்டில் ரெவ்யூ’ எனும் அமெரிக்க சிற்றிதழைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸஸ்’ நாவல் இந்த இதழில் தொடராக வெளியானதும், சர்ச்சைக்குரியதாக மாறி தடைசெய்யப்பட்டதையும் குறித்து கட்டுரை விவரிக்கிறது. அந்தக் கட்டுரைக்கு நடுவே சில வரிகளை சிவகுமார் எழுதியுள்ளார்.

‘உலகத்துக்கே பண்பாடு போதித்தவன் தமிழன் என்று வெற்றுப் பீற்றலுக்கு நம்மிடம் குறைவில்லை. நவீனத் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகனான புதுமைப்பித்தனின் பெயரை திருநெல்வேலியின் ஒரு சிறு தெருவுக்குச் சூட்டிவிட்டு அல்வா சாப்பிட்டு நம்மில் சிலர் மகிழ்ந்தோம். பலகோடித் தமிழர்களுக்கு அவர் யாரென்றே தெரியாது. ஆனால், ‘தமிள் வால்க’ என்று விதைப் பைகள் மேலேறி சிக்கிக் கொள்ளும் அளவுக்குக் கத்துவோம். ஓர் எழுத்தாளரை, ஒரு நாவலை அவர் புழங்கிய மொழிக்கூட்டம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதை அறிந்துகொண்டு உணர்ச்சி இருந்தால் நாணுவோம்.’

இந்த வரிகளைப் படித்தபோது சிவகுமாருக்கு தமிழ் மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதுமுள்ள பற்றும் அக்கறையும், அவற்றின் மீது தொடர்ந்து காட்டப்படும் உதாசீனத்தின் காரணமாக எழும் அறச் சீற்றமும் அவரின் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இன்னும் பல படிகள் மேலே உயர்த்துகின்றன.

 

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. அவர் லண்டனில் உள்ள  Fulham கால்பந்தாட்டக் கழகத்தின் தீவிர ரசிகர். அந்தக் கழகம் சார்ந்த எல்லா விஷயங்களையும் உற்று கவனிப்பவர். அவர்கள் விளையாடும் போட்டிகள், அதன் வீரர்கள், அணியின் மேலாளர், உடற்பயிற்சியாளர், அவர்கள் அணியும் உடை, களத்தில் மேற்கொள்ளும் உத்திகள், போட்டிகளில் செய்யும் நுட்பமான தவறுகள் என்று அத்தனை நுட்பங்களையும் அலசி ஆராய்ந்து அந்த அணிக்கான வலைதளத்தில் அவ்வப்போது தன் கருத்துகளை எழுதுவது அவரது வழக்கம். தொடர்ந்து எழுதி வரும் இவரது குறிப்புகளை கால்பந்தாட்டக் கழகத்தின் ஊடகப் பிரிவு கவனித்து வந்திருக்கிறது. தங்களது கால்பந்தாட்டக் கழகத்தின் மீது இத்தனை தீவிர அபிமானம் வைத்திருக்கும் இளைஞரை, ரசிகரை கௌரவிக்க முடிவு செய்தது. இளைஞருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தங்களது அணியின் பயிற்சிகளையும், ஒரு போட்டியையும் காண்பதற்கான வாய்ப்பை அந்த இளைஞருக்கு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. போக்குவரத்து, தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளையும் அந்தக் கழகமே ஏற்றுக்கொள்ளும்.  Fully sponsored trip. இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி. இளைஞர் தன்னுடன் தான் விரும்பும் இன்னொருவரையும் அழைத்துவரலாம் என்பது.

இளைஞன் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான், தன் தந்தையை.

இருவரும் லண்டன் சென்றனர். தன் விருப்பத்துக்குரிய கழகத்தின் போட்டிகளை, பயிற்சியை நேரில் கண்டுகளித்தான் இளைஞன். அதன் பிறகு விம்பிள்டன் மைதானம், லார்ட்ஸ் மைதானம், லண்டன் அருங்காட்சியகம் என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். மார்க்ஸின் கல்லறைக்கும் அப்பாவை அழைத்துச் சென்றார்.

லண்டன் புல்காம் கால்பந்தாட்டக் கழகத்தால் கௌரவிக்கப்பட்ட அந்த இளைஞனின் பெயர் சித்தரஞ்சன். அவருடைய அப்பாவின் பெயர் ஆர்.சிவகுமார்.

ஆர்.சிவகுமார் நேர்காணல்களில் தன் தந்தையைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அவர்தான் தன் ஆதர்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘தருநிழல்’ எனும் அவரது முதல் நாவலின் கதை நாயகனே அவருடைய தந்தையார்தான். தன் தந்தைக்கு எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க அவர் விரும்பினாரோ அதுபோலவே தனது பிள்ளைக்கும் ஒரு நல்ல தந்தையாக அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான தெளிவான சாட்சியம்தான் மேலே குறிப்பிட்டிருக்கும் சம்பவம்.

ஆர்.சிவகுமார் என்னும் ஆசிரியரை நாம் அறிவோம். அவரது நாவலின் மூலமாக அவரது தந்தையை அறிந்தோம். அவரது மகனின் இந்தச் செயல் வழியாக ஆர்.சிவகுமாரும் போற்றுதலுக்குரிய ஒரு தந்தையாகவே இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

 

ஆர்.சிவகுமார் ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல. அவர் தன் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் வழியாக வலுவான அடிப்படைகளை உருவாக்கித் தந்திருக்கிறார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் மீது ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இயலின் முதன்மை கலைஞர்களில் ஆர்.சிவகுமாரும் ஒருவர்.

தமிழில் மொழிபெயர்ப்புகள் பெருமளவில் வெளியாகும் இச்சூழல், ஆர்.சிவகுமார் போன்ற மொழிபெயர்ப்புக் கலைஞர்களின் நீண்ட கால, கடும் உழைப்பின் பலனால் விளைந்தது. இந்தியாவின் பிற மொழிகளிலிருந்தும், உலக மொழிகளிலிருந்தும் படைப்புகளை தமிழில் தருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் சமயத்தில், ஆர்.சிவகுமார் போன்ற முன்னோடிகள் உருவாக்கித் தந்திருக்கும் அடிப்படைகளை மனத்தில் கொள்வதும், ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத வாசகனுக்காகவே மொழிபெயர்க்கிறோம் என்பதை கவனத்தில் வைத்து, சரியான நேர்த்தியான மொழிபெயர்ப்பை தர முயல்வதுமே அத்தகைய முதன்மை மொழிபெயர்ப்புக் கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

0

(  22.02.2026 அன்று சென்னையில், ஆர்.சிவகுமார் அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடும் விதமாக அகரமுதல்வனின் ‘ஆகுதி’ அமைப்பு நடத்திய ‘மொழிபெயர்ப்பின் நிறம்’ கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை )

 

  

  

 

 

 

 

 

 

 

                                                           

Thursday, 19 February 2026

இந்திய இலக்கியம்

பொதுவாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் இலக்கியம் என்றால் அது அந்த நாட்டின் மொழியில் எழுதப்பட்டதாக இருக்கும்.

ரஷ்ய இலக்கியம் என்றால் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டது. ஜெர்மன் இலக்கியம் என்றால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஜப்பானிய இலக்கியம் என்றால் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இந்திய இலக்கியம் என்பது எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழும். பிற நாடுகளின் இலக்கியத்தை குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்டது என்று குறிப்பிட முடிவதுபோல, இந்திய இலக்கியம் என்றால் இந்தவொரு மொழியில் எழுதப்பட்டது என்று குறிப்பிடவோ சொல்லவோ முடியாது. காரணம் நமக்குத் தெரியும். இந்தியா ஒரு மொழியை மட்டும் கொண்ட தேசம் அல்ல. இந்தியா பலமொழிகளைக் கொண்ட ஒரு தேசம். விடுதலைக்குப் பின் மாநிலங்களைப் பிரிக்க அந்தந்த பிரதேசங்களில் அதிகமும் பேசப்பட்ட மொழியைக் கொண்டே, மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகவே இங்கு 20க்கும் அதிகமான மொழிகள் உள்ளன. இன்னமும் இங்கு ஆட்சி மொழியாக விளங்குவது ஆங்கிலமே. இவற்றைத் தவிர வெவ்வேறு பிரதேசங்களில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை மட்டும் 350க்கும் அதிகமாக உள்ளன. எனவே, இந்திய இலக்கியம் என்பது குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டும் எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. இந்திய இலக்கியம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் அனைத்தையும் மொத்தமாகவே குறிப்பிட முடியும்.

இதுவொரு வினோதமான அம்சம்.

இந்த வினோதமான அம்சம் இரண்டு சவால்களை தருவதாக உள்ளது. முதல் சவால் இந்திய மொழிகளுக்குள் இருப்பது. இந்தியாவில் ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பை பிற மொழிகளில் உள்ளவர்கள் நேரடியாக படிக்க முடியாது. தமிழில் எழுதப்பட்ட ஒரு கதையை, நாவலை, கவிதையை மற்ற மொழியினர் வாசித்துவிட முடியாது. அந்தக் கவிதையோ, கதையோ, நாவலோ இந்தியாவின் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அல்லது இந்தியாவின் இணைப்பு மொழிகளாகக் கருதப்படும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்குள் இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகள் சந்திக்கக் கூடிய முக்கியமான சவால் இது. ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் ஒரு படைப்பு இந்தியாவின் பிற மொழி வாசகர்களை சென்றடைவது என்பது சாத்தியமேயில்லை.

இரண்டாவது, இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அளவில் சந்திக்கக்கூடிய சவால். யாரேனும் ஒரு அந்நிய நாட்டவர் இந்திய இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்றால், நாம் பிற நாட்டு இலக்கியங்களை வாசிப்பதுபோலவே, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு நூலையே தேர்வு செய்ய முடியும். குறிப்பிட்ட ஒரு தேசத்தின் குறிப்பிட்ட ஒரு மொழியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதுபோலத்தானே இது என்று நினைக்கலாம்.  ஜெர்மானிய மொழியில் கதே எழுதிய ஒரு நாவலை ஆங்கில மொழியாக்கத்தின் வழியாக வாசிக்கலாம். பால்ஸாக் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஒரு புதினத்தையும் அவ்வாறு ஆங்கிலத்தின் வழியாக நம்மால் படிக்க முடியும். அப்படித்தானே இந்திய மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பை ஆங்கிலம் வழியாக பிற தேசத்தினர் படிக்கிறார்கள் என்று யோசிக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய சமன்பாடல்ல. ஆங்கிலத்துக்கு ஒரு இலக்கியப் படைப்பை மொழிபெயர்ப்பது என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தது. ஆர்வமுள்ள தகுதியான மொழிபெயர்ப்பாளரைக் கண்டடைய வேண்டும். பிறகு ஏதேனும் ஒரு பதிப்பாளர் அதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பதிப்பாளருக்கு சர்வதேச சந்தையில் செல்வாக்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கடந்து ஒரு நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது என்பது பெரும் சாதனை. அவ்வாறான இடையறாத தொடர் முயற்சிக்குப் பிறகே ஒரு இந்திய மொழிப் படைப்பு ஆங்கிலம் வழியாக சர்வதேச சந்தையை எட்டிப் பார்க்க முடியும்.

0

உலக அளவில் இந்திய இலக்கியத்தின் முகமாக அறியப்பட்டவர் ரவீந்திரநாத் தாகூர். அவருடைய கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து பரவலாக அறியப்பட்டார். 1910ஆம் ஆண்டு வங்கமொழியில் பதிப்பிக்கப்பட்டபோது அது உலக அளவில் கவனம் பெறவில்லை. 1912ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்தியா சொசைட்டி ஆங்கிலத்தில் பதிப்பித்து வெளியிட்டபோதுதான் கவனம் பெற்றது.

அதன் பிறகு ஆர்.கே.நாராயணன், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், விக்ரம் சேத், அமிதவ் கோஷ் என்று சிலர் இந்திய எழுத்தாளர்களாக உலக அளவில் அறியப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் இந்திய எழுத்தாளர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள். Indian English Writers. இதுவொரு தனி வகைப்பாடு. ஆங்கிலம் உலக அளவில் அனைவரையும் சென்றடைவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவர்களது எழுத்துகள் இந்திய இலக்கியம் என்ற அடையாளத்தை வெகு சுலபமாக அடைந்தன.

ஆனால், அவர்கள் எழுதியதுதான் இந்திய இலக்கியமா என்று யோசித்துப் பார்த்தால் அது உண்மையில்லை என்பதை தயக்கமில்லாமல் உரக்கச் சொல்லலாம். உலக அளவில் புகழ்பெற்றுள்ள இவர்கள் எழுதியவை என்ற காரணத்தால், இவர்கள் அனைவரும் இந்திய வேர்களைக் கொண்டவர்கள் என்பதால், இந்திய இலக்கியம் என்று சொல்வதும் சுட்டப்படுவதும் சரியானதல்ல. இவர்களுடைய எழுத்துகளைவிட இந்தியாவின் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஆழமும் நுட்பமும் கொண்ட பல நாவல்களை உதாரணம் காட்ட முடியும். 

இண்டியன் இங்கிலிஷ் எழுத்துகள் இந்திய இலக்கியம் என்று சொல்ல முடியாது. சரி, அப்படியென்றால்  இந்திய இலக்கியம் என்றால் இந்தியில் எழுதப்பட்ட இலக்கியமா? நிச்சயமாக இல்லை. தமிழில் எழுதப்பட்டாலும் மலையாளத்தில் எழுதப்பட்டாலும் அஸ்ஸாமியில் எழுதப்பட்டாலும் வங்காள மொழியில் எழுதப்பட்டாலும் துளுவில் எழுதப்பட்டாலும் அது இந்திய இலக்கியம்தான்.

எழுத்துருவே இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் கொங்கணி, தோடா போன்ற மொழிகளிலும் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. அவையும் இந்திய இலக்கியந்தான்.

இந்திய இலக்கியம் என்பதை வரையறுக்க முடியுமா?

கடினம். அப்படி துல்லியமாக கறாராக வரையறுக்க முடியாது என்பதுதான் இதன் சிறப்பும், சவாலும். எளிமையாகச் சொல்வதென்றால் இந்திய வாழ்க்கையைச் சொல்லும் ஒன்றே இந்திய இலக்கியமாக இருக்க முடியும்.

அப்படிச் சொல்லப் போனால் அடுத்து இன்னொரு கேள்வி எழும். இந்திய வாழ்க்கை என்றால் எது? எந்த இடத்தில் இருப்பது? தமிழ்நாட்டு வாழ்க்கையா, வங்காள வாழ்க்கையா அல்லது காஷ்மீர் வாழ்க்கையா? எது இந்திய வாழ்க்கை?

இந்திய வாழ்க்கை என்பதை எப்படி வரையறுப்பது?

நமக்கு வெகுவாகப் பழகிப்போன ஒரு சொற்றொடர் உண்டு. இந்தியாவின் சிறப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’. விரிந்த இந்திய நிலப்பரப்பு எல்லா வகையான பூகோள அம்சங்களையும் கொண்டிருக்கிறது. கங்கைச் சமவெளியின் வாழ்க்கையும், மேற்குக் கடற்கரையோர வாழ்க்கையும் வெவ்வேறானவை. வடகிழக்கு மலைவாழ் மக்களின் வாழ்க்கையும், தக்கணா பீடபூமியிலுள்ளவர்களின் வாழ்க்கையும் ஒன்றல்ல. காஷ்மீர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறு, கனிமவளங்கள் நிறைந்த ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலத்தவர்களுக்கான சவால்கள் வேறு. இப்படி ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனித்தனியான வாழ்க்கைச் சூழல். அதற்கேற்ற அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. கல்வியும் வேலைவாய்ப்பும் ஒன்றில்லை. இவர்களுக்கு அமையும் தொழில்களும் பொருளாதார வாய்ப்புகளும் வெவ்வேறானவை. எனவே, இத்தகைய தனித்தன்மைகள், ஒன்றிலிருந்து வேறுபட்ட அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு. அண்டைய மாநிலமாக இருந்தாலும்கூட குறிப்பிட்ட சில அம்சங்கள் வேறுபட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இந்த நிலங்கள் அனைத்துக்கும், மக்கள் அனைவருக்குமான சில பொதுவான அம்சங்களும் உள்ளன. பஞ்சாபிலுள்ள ஒரு விவசாயி சந்திக்கும் அதே விதமான பிரச்சனைகளையே தமிழகத்திலுள்ள ஒரு விவசாயி சந்திக்கிறான். வங்கக் கடலோர மீனவனுக்கும் அரபிக் கடலோர மீனவனுக்கும் க டல் வாழ்க்கை ஒன்றுபோலத்தான். எந்த மாநிலத்தில் எந்தச் சூழலில் இருந்தபோதும் பெண்களின் பாடுகளும் கவலைகளும் பிரச்சனைகளும் ஒரேவிதமானவைதான். அரசியல் சூழலினால், சமூக விரோத சக்திகளினால் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும் இந்தியா முழுக்க ஒரேவிதமானதாகவே உள்ளன.

எனவே, விரிந்த இந்திய நிலப்பரப்பின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு மனிதர்களும் மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரக் கூறுகள் போன்ற தனி அடையாளங்களைக் கடந்து பொதுவாக சந்திக்கக் கூடிய பிரச்சனை களை, சிக்கல்களை, சவால்களை தொட்டுக் காட்டுவதாகவே இந்திய இலக்கியம் இருக்கவேண்டும் என்று உத்தேசமாகச் சொல்லலாம்.

அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகளை, அம்சங்களை, சவால்களைத் தொட்டுக்காட்டும்போதே ஒரு எழுத்து அந்தப் பிரதேசம் சாராத பிறருக்குமான எழுத்தாக உணரப்படுகிறது. அதேவேளையில், குறிப்பிட்ட பகுதியின் தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கைச் சூழலை, பண்பாட்டுக் கூறுகளை, பழக்க வழக்கங்களை தனக்குள் அந்த எழுத்துக் கொண்டிருக்கும்போது பிறருக்கு புதிய அனுபவத்தை தரக்கூடியதாக அமைகிறது.

உதாரணமாக, ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவலை எடுத்துக் கொள்வோம். வங்க மொழியில் எழுதப்பட்ட அந்த நாவலை தமிழில் வாசிக்கிறோம். மரபுவழியிலான ஆயுர்வேத மருத்துவத்துக்கும் நவீன ஆங்கில மருத்துவத்துக்குமான மோதலும் அதனால் விளையும் சிக்கல்களும்தான் நாவலின் மையம். ஜீவன் மஷாயும் பிரபோத்தும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு நம்பிக்கைகள். இவர்கள் இருவருக்குமான மோதல் என்பது மரபுக்கும் நவீனத்துக்குமான மோதல். வளர்ச்சியின் போக்கில் எதை நாம் கைகொள்ளவேண்டும், எதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற தெளிவை இந்த மோதலின் வழியாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். மரபின் மேன்மைகளையும் அனுபவங்களையும் நவீன அறிதல்களுடன் நுட்பங்களுடன் இணைப்பதின் மூலமாகத்தான் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதே இதன் மையம்.

வங்க மொழியில், வங்காளத்துச் சூழலில் எழுதப்பட்ட இந்த நாவலின் பேசுபொருள் அனைவருக்குமானது. இந்தியா முழுமைக்குமானது. உலகில் எந்த இடத்திலும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின், குறிப்பிட்ட மொழியின் இலக்கியம் என்ற இடத்திலிருந்து அனைவருக்குமான பேசுபொருளின் காரணமாக இந்திய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும் இது விரிவடைகிறது.

இன்னொரு உதாரணமாக, கன்னடத்தில் எழுதப்பட்ட ‘காச்சர் கோச்சர்’ நாவலைக் குறிப்பிடலாம். எளிய குடும்பங்களின், எளிய மனிதர்களின் நுட்பமான வன்முறையே இதன் மையம். இது குடும்ப அமைப்புக்கான ஒரு அம்சம். உறவுகளுக்குள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது. இந்த நாவலை வாசிக்கும் எவரும் இதனுடன் ஒன்றிவிட முடியும். மொழியையும் சூழலையும் கடந்து அனைவருக்குமான ஒன்றாக மாறிவிட முடிகிறது.

ஒரு பிரதேசத்துக்குரிய அல்லது மொழிக்குரிய தனித்தன்மைகளையும், இந்திய நிலத்துக்கான பொதுவான கூறுகளையும் இணைத்து அனைவருக்குமான அனுபவமாக மாற்றும் ஒன்றையே இந்திய இலக்கியம் என்று குறிப்பிடலாம்.

0

இந்திய இலக்கியம் என்பது நீண்ட கால அளவையும், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும் உள்ளிட்ட விரிவான ஒரு களம். அதை இருபது நிமிட காலத்தில் சொல்வது என்பது சாத்தியமான காரியமல்ல. ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தாலும் இந்தக் கால அளவு போதாது.

எனவே, இந்திய இலக்கியத்தின் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கும் இந்திய நாவல்களைக் குறித்த, ஒரு சுருக்கமான அறிமுகத்தை அளிக்க விரும்புகிறேன். 

ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமான இலக்கிய வடிவம் நாவல். ஆனால், அதற்கு முன்பு 9ஆம் நூற்றாண்டில் பாணபட்டரால் எழுதப்பட்ட ‘காதம்பரி’யை இந்தியாவின் முதல் நாவலாகக் கருதுபவர்களும் உண்டு.  காதம்பரி ஒரு உரைநடைக் கவிதையே, நாவல் அல்ல என்ற எதிர்க் கருத்தும் உள்ளது. இன்றும் மராத்தி, கன்னட மொழிகளில் நாவலை ‘காதம்பரி’ என்றே அழைக்கிறார்கள்.  

1605ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிய எழுத்தாளர் மிகைல் செர்வாண்டஸின் ‘டான் குயிக்ஸாட்’ உலகின் முதல் நவீன நாவல். இந்தியாவில், இந்திய மொழியில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படுவது, மராத்தி மொழியில் பாபா பதம்ஜி என்பவரால் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘யமுனா பர்யதன்’ என்கிற நாவலாகும்.

முதல் தமிழ் நாவலான, மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ இதே ஆண்டில், 1857லேயே எழுதப்பட்டது. வெளியான ஆண்டு 1879. எனவே, இந்தியாவில் இந்திய மொழியில் எழுதப்பட்ட முதல் இரண்டு நாவல்களில் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமும் ஒன்று. இதைத் தொடர்ந்து 1893ஆம் ஆண்டில் பி.ஆர்.ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரத்தையும் 1898ஆம் ஆண்டில் அ.மாதவையா, பத்மாவதி சரித்திரத்தையும் எழுதினார்கள்.

வங்க மொழியின் முதல் நாவலை பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார். ஆனால், அவர் எழுதிய முதல் நாவல் வங்க மொழியில் அல்ல, ஆங்கிலத்தில். 1864ஆம் ஆண்டு அவர் எழுதிய நாவலின் பெயர் ‘ராஜ்மோகனின் மனைவி’. இந்த இரு நாவல்களுக்குமான ஒற்றுமை, இரண்டுமே பெண்களை மையமாகக் கொண்ட நாவல்கள். இதன் பிறகு 1865ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சாட்டர்ஜி தனது முதல் வங்க நாவலான ‘துர்கேஷ் நந்தினி’யை எழுதினார். பங்கிம் சந்திரர் நமக்குப் பரிச்சயமான பெயர்தான். அவருடைய ‘ஆனந்தமடம்’ நாவலில் இடம் பெற்ற கவிதைதான் நமது‘வந்தே மாதரம்’. 

ஒடியா மொழியிலும் முதல் நாவல் எது என்ற குழப்பம் உண்டு. வெளியான காலத்தைப் பொறுத்த வரை ராம்சங்கர் ரே எழுதிய ‘சௌதாமணி’யே முதல் நாவலாகக் கருதப்படுகிறது. ஆனால், அது முற்றுப்பெறாத ஒன்று. எனவே, முழுமையாக எழுதி 1897ஆம் ஆண்டு வெளியான ‘சா மனா அதா குந்தா’ என்ற நாவலே முதல் நாவலாக அங்கீகரிக்கப் படுகிறது. இதன் பொருள் ஆறு ஏக்கர், மூன்றில் ஒரு பங்கு என்பதாகும். இதைப் பார்க்கும்போது பாரதியின் ஆறில் ஒரு பங்குக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற யோசனை வருகிறது.

தெலுங்கின் முதல் நாவல் 1867இல் வெளியானது. ‘ஸ்ரீரங்கராஜ சரித்திர’ என்ற அந்த நாவலை எழுதியவர் நரஹரி கோபாலகிருஷ்ணமா செட்டி என்பவர். அவரைத் தொடர்ந்து 1878இல் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, ‘ராஜசேகர சரித்திரமு’ என்ற நாவலை எழுதினார். இதுவே தெலுங்கு நவீன நாவலின் தொடக்கமாக முன்வைக்கப்படுகிறது.

மலையாளத்தின் முதல் நாவலாக சந்து மேனன் எழுதிய ‘இந்துலேகா’ குறிப்பிடப்படுகிறது. 1889இல் வெளியானது. ஆனால், இதற்கு முன்பே 1887இல் அப்பு நெடுங்காடி என்பவர் ‘குண்டலதா’ என்னும் நாவலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், வடிவரீதியாக இந்துலேகாவே மலையாளத்தின் முதல் நாவலாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.

கன்னடத்தின் முத ல் நாவல், 1892ஆம் ஆண்டு வெளியானது.  லட்சும பீமா கடக்கர் எழுதிய ‘சூர்யகாந்தா’ என்பது நாவலின் பெயர். அதன் பிறகு 1899ஆம் ஆண்டு ‘இந்திரா பாய்’ என்ற நாவல் வெளியானது. இந்த நாவலை எழுதியவர் குல்வாடி வெங்கட ராவ் என்பவர்.

தென்னக மொழிகளில் நாவல்கள் பிறந்த அதே காலகட்டத்தில் இந்தியின் முதல் நாவலான ‘பரிக்ஷா குரு’வும் வெளியாகியுள்ளது. 1882ஆம் ஆண்டு வெளி வந்த இந்த நாவலின் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் தாஸ். இதற்கு முன்பு 1870ஆம் ஆண்டு, கௌரிதத் எழுதிய ‘தேவராணி ஜேட்டானி கி கஹானி’ என்ற நாவலும், 1877ஆம் ஆண்டு  ஸ்ரதாராம் பிலௌரி என்பவர் எழுதிய ‘பாக்யவதி’ என்ற நாவலும் தொடக்க கால நாவல்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ஆரம்பகால நாவல்களைப் பார்க்கும்போது, பெரும்பாலான நாவல்கள் பெண்களின் வாழ்வை, விதவைகள் மறுமணம், கல்வி போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தன என்ற ஒற்றுமையை கவனிக்க முடியும்.

இந்திய அளவில் நவீன நாவல்களின் வரிசையில் முதன்மையாக இடம்பெற்றிருக்கும் நாவல்களிலும் இந்த அம்சம் உண்டு என்பதும் முக்கியமானது. பெண்களின் பாடுகளை, துயரை, ஆளுமைகளையே நாவல்கள் முதன்மைப்படுத்தியுள்ளன.

1

எஸ்.எல்.பைரப்பா எழுதிய புகழ் பெற்ற கன்னட நாவலான ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலை எடுத்துக் கொள்ளலாம். நாவலின் மையம் கங்கம்மாவின் குடும்பம் மெல்ல மெல்ல சிதைவதுதான் என்றாலும் இதன் முதன்மை கதாபாத்திரம், நஞ்சம்மாதான். கங்கம்மாவின் மூத்த மருமகள். குடும்பத்தை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக தொடர்ந்து முயல்பவள். கடும் உழைப்பாளி, புத்திசாலி, பொறுமையும் தியாக உணர்வும் மிக்கவள்.  அந்தக் குடும்பத்தை அழிவிலிருந்து காப்பாற்ற போராடுகிறாள். எண்ணற்ற சோதனைகளைச் சந்திக்கிறாள். ஊரையே சூறையாடும் பிளேக் நோய்க்கு தன் மகளையும், புத்திசாலி மகனையும் பறிகொடுக்க நேர்கிறது. அவளுடைய அத்தனை துன்பங்களுக்கும் விடையாக வந்து சேர்கிறது அவளது மரணம்.

இன்னொரு கோணத்தில் கங்கம்மா என்ற இயல்பான கிராமத்துப் பெண்ணின் துயரக் கதைதான் இந்த நாவல். விதவையான கங்கம்மா கிராமப் பெண்களுக்கே உரிய அறியாமையையும் மூர்க்க குணத்தையும் கொண்டவள். அவளுக்கு இரு பிள்ளைகள். சென்னிகராயன், அப்பண்ணய்யா ஆகிய இருவரும் மாறுபட்ட குணமுடையவர்கள். இருவரும் அசட்டு முரடர்கள். சென்னிகராயன் சுயநலவாதி. கோழையும்கூட. அவளுடைய குணக்கேடுகளால்தான் அந்தக் குடும்பம் தொடர்ந்து மீள முடியாத நிலைக்குச் செல்கிறது என்றாலும் தன்னுடைய பிள்ளைகளுக்காகவே அப்படி இருக்க நேர்வதையும் பார்க்க முடியும்.

இந்திய வாழ்வில் குடும்ப அமைப்பின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்கள் என்பதையே இந்த நாவல் வெகு அழுத்தமாக முன்னிறுத்தியிருப்பதைப் பார்க்கலாம். ஒரு குடும்பத்தின் ஏற்றத்துக்கும் சரி, வீழ்ச்சிக்கும் சரி பெண்களே காரணமாக நிற்கிறார்கள் என்பதை இந்த நாவல் அடிக்கோடிடுகிறது. நஞ்சம்மா என்ற எளிய கிராமத்துப் பெண்ணின் முயற்சிக்கும் தியாகத்துக்கும் எந்தப் பலனுமின்றி அந்தக் குடும்பம் அழிவதுதான் நாவலின் முடிவு. நஞ்சம்மா என்பவள் இந்திய கிராமத்தில் உள்ள எண்ணற்ற பெண்களின் முகம். அவர்களின் அடையாளம். அந்த இடத்தில் எந்தவொரு பெண்ணும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கிய நிகேதனம்

இந்திய அளவில் சிறந்த நாவலெனக் கொண்டாடப்படும் வங்க நாவல் ‘ஆரோக்கிய நிகேதனம்’. தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதியது.

ஆயுர்வேத மருத்துவரான ஜீவன் மசாய் இதன் முதன்மை பாத்திரமாக இருந்தாலும், அவரது மனைவியான ஆதர் பௌ அவருக்கு இணையானவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஜீவன் மசாய் தன் முன்னாள் காதலியைப் பழிவாங்குவதற்காகவே தன்னை அவர் மணந்திருக்கிறார், பயன்படுத்துகிறார் என்பதை நன்கறிந்த காரணத்தால் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும் ஒருத்தியாகவே மாறிவிடுகிறாள். கணவனிடமிருந்து எளிய அன்பை எதிர்பார்க்கும் ஒருத்தி, அது கிடைக்காதபோது எப்படி தன்னையும் தன் குணங்களையும் மாற்றிக்கொள்ள நேர்கிறது என்பதற்கான கச்சிதமான உதாரணம் ஆதர் பௌ.

இந்தியக் குடும்பங்களில், மரபான திருமணங்களினால் இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் பலரும் தம்மை ஆதர் பௌவிடம் அடையாளம் காணமுடியும்.

நிர்மலா

இந்திய கிராமப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் நாவல் பேரரசராகக் கருதப்படும் பிரேம்சந்த் உருவாக்கிய நிர்மலா. வாழ்க்கையின் அனைத்து விதமான துயரங்களையும் சுமக்கும் ஒரு பெண். வரதட்சணைக் கொடுமை, பொருந்தாத் திருமணம், முதிய கணவனின் சந்தேகம், உறவினர்களின் பழிச்சொற்கள், அவளை அடைய முனைபவர்களால் ஏற்படும் துன்பங்கள் என்று எல்லத் திசைகளிலிருந்தும் துன்பத்தையும் மனவருத்தங்களையும் மட்டுமே சந்திக்கும் அபலைச் சிறுமி.

என்னுடைய கல்லூரிப் பருவத்தில், இந்தி கற்றுக்கொண்டிருக்கும்போது இந்த நாவலை வாசித்தபோது பெரும் மன அவஸ்தை. ஒரு பெண்ணுக்கு இத்தனை துன்பங்கள் இருக்குமா? கண்ணீரே வாழ்க்கையா? ஒருநாளும் மகிழ்ச்சியோ நிம்மதியோ இருக்காதா? இதைத் தொடர்ந்து படிக்கத்தான் வேண்டுமா என்று ஒத்திப் போட்டதும் உண்டு. ஆனாலும் நிர்மலாவை வாசிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் அவள் மரணமடைந்தபோது சற்று நிம்மதியாக இருந்தது. இனி அவளுக்குத் துன்பமில்லை என்பதுபோல.

நம்மில் பலருக்கு பிரேம்சந்த் என்றதும் ‘கோதானம்’ நாவலே நினைவுக்கு வரும். தமிழில் அதுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், கோதானம் தரும் கிராமத்துச் சித்திரத்தைவிடவும் வலியும் வேதனையும் துயரமும் ஒன்றுசேர்ந்த நிர்மலா மிக அபாரமான நாவல். தமிழில் இது இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது இன்னொரு புதிர்தான்.

சிவப்பு தகரக் கூரை

குடும்ப வாழ்வின் சவால்களை சந்திக்கும், பாரங்களை சுமக்கும் பெண்களின் கதைகளுக்கு எல்லா மொழிகளிலும் உதாரணங்கள் உண்டு. ஆனால், பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகத்தைச் சொல்லும் படைப்புகள் வெகு அரிது.

அப்படிப்பட்ட அரிதான நாவல் ‘சிவப்புத் தகரக்கூரை’. நிர்மல் வர்மா எழுதிய நாவல்.

பதின்பருவத்தின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் வினோதமானது. உடலும் மனமும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகவிருக்கும் பருவம். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாய் இருக்கலாம். ஆனால், மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானது இல்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையினறி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை.

அந்த மாற்றங்களையொட்டி மனதுக்குள் ஏற்படும் கேள்விகள், குழப்பங்கள், ஆர்வங்கள், அச்சங்கள் அனைத்தும் யாரிடமும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியாதவை. கூச்சமேற்படுத்துபவை. சங்கடம் தருபவை. அதே சமயம் கவர்ச்சிமிக்கவை. தனது வீட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தே இவற்றுக்கான விடைகளை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அவளால் முடிவதில்லை. கர்ப்பமாக இருக்கும் அம்மாவே அவளுக்குச் சங்கடத்தையும் புதிர்களையும் தருகிறாள். பிறப்பு, இறப்பு ஆகிய இருவேறு எல்லைகளை அவள் ஒரே சமயத்தில் சந்திக்க நேர்கிறது. அப்போது ஏற்படும் குழப்பமும் இருண்மையும் அவளை ஆழமாகப் பாதிக்கிறது. கர்ப்பிணியான அம்மா, ஆங்கிலேய மூதாட்டி, அத்தை, மருத்துவச்சி, புல்லாக்குக்காரி என்று அவள் சந்திக்கும் பெண்கள் யாரும் அவளுக்கு உதவுவதில்லை. அவளது கேள்விகளுக்கு பதில் அளிக்க யாருமில்லாத போது பனிபோர்த்திய மலை நகரத்தின் தனிமையே அவளுக்குத் துணையாக நிற்கிறது.

அவளைச் சுற்றியுள்ள ஆண்களின் உலகமும் அதேயளவு புதிர் நிறைந்ததாய் உள்ளது. தம்பி, கோடைகாலத்தில் மட்டுமே வீட்டுக்கு வரும் அப்பா, சிம்லாவில் உள்ள சித்தப்பா, புல்லாக்குக்காரியின் பையன் என்று எல்லோருமே அவளது ரெண்டுங்கெட்டான் மனநிலைக்குள் ஏராளமான மர்மங்களையே விட்டுச் செல்கிறார்கள்.

பதின்பருவப் பெண்ணின் மனக்குழப்பங் களைச் சொன்ன வகையில் இந்த நாவல் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய அளவிலும் மிகவும் புதிது.

கொல்லப்படுவதில்லை

இந்தியப் பெண்களின் துயரத்தையும் வாழ்க்கைப் பாடுகளையும் எழுதும்போது அவர்களுடைய காதலைக் குறித்தும் எழுதுவது முக்கியமல்லவா. ஆனால், இந்திய மொழிகளில் அவ்வாறான காதல் கதைகள் மிகவும் குறைவே. இந்த வகையில் ‘கொல்லப்படுவதில்லை’ என்ற வங்க நாவலைக் குறிப்பிடலாம். தாகூரின் மாணவியான மைத்ரேயி தேவி வங்க மொழியில் எழுதிய நாவல் இது. முழுக்க முழுக்க இது காதல் நாவலா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். உண்மையில், பதின்பருவத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு அயல்நாட்டவனை, மணக்க முடியாது போய், பிறகு அவன் எழுதிய ஒரு நாவலுக்கு பதிலாக எழுதப்பட்டது இந்த நாவல்.

ரொமேனியாவைச் சேர்ந்த மிர்சா அலியதே எனும் அறிஞர் சமஸ்கிருதமும், இந்தியத் தத்துவத்தையும் கற்றுக் கொள்வற்காக 1928ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகிறார். இந்திய தத்துவவியல் அறிஞரான சுரேந்திரநாத் தாஸ் குப்தாவிடம் மாணவராகச் சேர்கிறார். தாஸ் குப்தா மாணவரான மிர்சாவை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்கிறார். சுரேந்திரநாத்தின் மனைவியும் அவரைத் தன் மகன் போல அன்புகாட்டுகிறார். ஆனால், மிர்சாவுக்கும் சுரேந்திரநாத்தின் மகளான மைத்ரேயி தேவிக்கும் இடையில் காதல் மலர்கிறது. சில நாட்களிலேயே இது சுரேந்திரநாத்துக்கு தெரிய வர, மிர்சாவை வீட்டிலிருந்து வெளியேற்றிவிடுகிறார். வெளியே துரத்தப்பட்ட மிர்சா காதல் வேதனையுடன் இமயமலைப் பகுதியில் சிலகாலம் சுற்றித் திரிகிறார். பிறகு ரொமேனியாவுக்குத் திரும்புகிறார். நிறைய நாவல்களை எழுதுகிறார். அவருக்கும் மைத்ரேயிக்கும் இருந்த காதலை மையமாக வைத்து ‘வங்காள இரவுகள்’ என்ற பெயரில்ஒ ரு நாவலை எழுதுகிறார். இப்படி ஒரு நாவல் வெளியானதே மைத்ரேயிக்கோ அவரது குடும்பத்துக்கோ தெரியாது.

மைத்ரேயி தேவி ரவீந்திர நாத் தாகூரின் மாணவி. கவிஞரும்கூட. மிர்சாவுடன் பழகிய நாட்களில் தன் காதலின் ஆழத்தை உணர்ந்திராத அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தெரிந்துகொள்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. திருமணம் நடக்கிறது. ஒரு மலை நகரத்தில் கணவருடன் வசதியான வாழ்க்கை. குழந்தைகள் பிறக்கின்றன. இழந்த காதலின் நினைவு அவ்வப்போது அவளுள் எழுகிறது. வாழ்க்கை உருண்டோடுகிறது.

‘வங்காள இரவுகள்’ நாவலைப் பற்றியும் அதைத் தனக்கு சமர்ப்பணம் செய்திருப்பதைப் பற்றியும் மைத்ரேயி தேவி அறிகிறாள். ஆனால், அந்த நாவலைப் பெறவோ வாசிக்கவோ இயலாது. அது ரொமானிய மொழியில் எழுதப்பட்டது. 1972இல் இந்தியாவுக்கு வந்த மிர்சாவின் நண்பர் ஒருவரின் மூலமாக நாவலைப் பற்றி மேலும் தெரிய வருகிறது. நாவலில் இருவருக்கும் இடையில் உடலுறவு நடந்ததாக எழுதியிருப்பதைத் தெரிந்து ஆத்திரம் அடைகிறாள். நடக்காத ஒன்றை எழுதி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வருந்துகிறாள். நண்பர் ஒருவரின் மூலம் பிரெஞ்சு பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசிக்கும்போது மேலும் சினம் கொள்கிறாள். இதனால் மனம் உடைகிறாள். தன்னைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், எழுதிய கடிதங்களுக்கு பதில் அளிக்காமல் காணாமல் போனவனைப் பற்றிய புறக் கோபத்தினூடே காலம் கடந்தோடினாலும் அவன் மீதான கால் ஆறாது பெருகுகிறது. தொடர்ந்து அவனைப் பற்றிய எண்ணங்கள், தேடல்கள். சந்தித்துப் பேசும் ஆவல் எழுகிறது. அவனை நேரில் சந்தித்து தன்னைப் பற்றி எப்படி அவ்வாறு எழுதலாம் என்று கேட்கவே நினைக்கிறாள். ஆனால், ஆழ்ந்து யோசிக்கும்போது எழுதியதில் ஏதும் தவறில்லை, காதலே முக்கியமானது என்பதை உணர்கிறாள். தன் கணவனிடம் சொல்கிறாள். அப்போது மைத்ரேயிக்கு வயது 60.

அப்போது சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார் மிர்சா. அவரை அங்கு சந்திப்பதற்காகவே தாகூரைப் பற்றி உரையாற்றும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துகொள்கிறார் மைத்ரேயி. பல்கலைக் கழகத்தில் மிர்சாவின் அறைக்குச் செல்கிறார். முன்பே அவருடைய வருகையை அறிந்த மிர்சா தடுமாறுகிறார். தலை குனிந்தபடியே அமர்ந்திருக்கிறார். முகம் பார்க்க மறுக்கிறார். ஒருமுறை நிமிர்ந்துப் பார்க்கும்போது அந்தக் கண்களில் ஒளியே இல்லை என்பதை அறிகிறார் மைத்ரேயி. காலத்தில் மறைந்துபோன இளம் காதலின் தருணங்களை முதுமையில் போர்த்த முடியாதபோதும் மிர்சாவின் ஒளியிழந்த கண்கள் மைத்ரேயியை வெளியேறச் செய்கின்றன.

இந்தியா திரும்பிய பிறகு மைத்ரேயி 16வயதில் மிர்சாவின் மீது ஏற்பட்ட காதலில் தொடங்கி 61 வயதில் அந்தக் காதலை மீண்டும் உணர்ந்து அவரைச் சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது வரையிலும் தனது சுயசரிதையாக எழுதுகிறார். வங்க மொழியில் எழுதிய பின் அவரே அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். 1944ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகம் மிர்சா எழுதிய ‘வங்காள இரவுகள்’ நாவலையும், மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ நாவலையும் ஒரே சமயத்தில் வெளியிட்டது.

ஒரே காதல் கதையின் இரண்டு பக்கங்களாக இந்த இரண்டு நாவல்களும் அமைந்துள்ளன. மிர்சா எழுதிய நாவலுக்கு பதிலாக 41 ஆண்டுகள் கழித்து மைத்ரேயி தன் தரப்பை எழுதியது உலக இலக்கியத்தில் வியக்கத்தக்க ஒரு நிகழ்வு.

‘கொல்லப்படும் உடலில், இது கொல்லப்படுவதில்லை’ என்று ஆத்மாவைக் குறித்து பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதையே இந்த நாவலின் தலைப்பாக வைத்திருக்கிறார் மைத்ரேயி.

உயர்ந்த காதல் அனுபவம் அழிவதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை என்பதே இந்த நாவலின் சாரம்.

இந்தியக் காவியங்கள்

இவ்வாறான நவீன நாவல்கள் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருப்பதைப் பற்றி யோசிக்கும் அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் நினைவுக்கு வருகிறது.

நமது மாபெரும் காவியங்களான மகாபாரதமும் இராமாயணமும்கூட பெண்களை மையமாகக் கொண்ட புனைவுகள்தான்.

ஒருவகையில் நவீன இலக்கியத்துக்கான ஒரு வரைபடத்தை blue print இவ்விரு காவியங்களும் வடித்து வைத்துவிட்டனவோ என்றும் யோசிக்கலாம்.

திரௌபதியின் துயரமும் சாபமும்தான் மகாபாரதம். ஒரு பெண்ணுக்கு இழைக்கும் அநீதியின் காரணமாகத்தான் பாரதப் போரே மூள்கிறது. திரௌபதியின் கதையாக மட்டுமல்லாமல், குந்தியின் கதையாகவும், காந்தாரியின் கதையாகவும் வாசிக்க முடியும்.

இராமாயணத்தின் ஆதாரமான முடிச்சுகளின் காரணகர்த்தாக்கள் பெண்கள். கூனியின் சபதம், கைகேயியின் வரம், சீதையின் மனவுறுதி என்ற கோணத்தில் இராமாயணம் கொள்ளும் ஆழங்கள் வியப்பானவை. இலக்குவனின் மனைவி ஊர்மிளையின் கோணத்தில் மொத்தக் கதையையும் அணுகும்போது எழுகிற கேள்விகள் இன்னும் வலுவானவை.

இவ்விரு காப்பியங்களும் பெண் கதாபாத்திரங்களின் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் ஆதாரமான கேள்விகளையே இன்றைய நவீன நாவல்களும் கதைகளும் இன்னும் புதிய வீச்சுடன் எழுப்புகின்றன. அதற்கான தீர்வுகளை அணுகுகின்றன. 

காலங்கள் கடந்தும் அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்தும் இந்தக் காவியங்களை உள்ளவாறே ஏற்றுக்கொள்வதும் அவற்றை வழிபாட்டுக்குரியதாகவும் மதிக்கும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே, இந்த இரு காவியங்களையும் புனைவாக மட்டுமே அணுகி அவற்றை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் புனைவாசிரியர்கள் இந்தியாவில் பல மொழிகளிலும் இருந்து வருகிறார்கள். காவிய நாயகர்களை கேள்வி கேட்கிறார்கள். அவை உருவாக்கித் தந்திருக்கும் மதிப்பீடுகளை விழுமியங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்கள். மரபான காவியங்களோடு சேர்த்து இத்தகைய மறு ஆக்கங்களையும் அணுகும்போது வேறு பரிணாமங்கள் சாத்தியமாகின்றன.

இந்த வகையில் உடனடி உதாரணமாகச் சொல்லத் தோன்றுவது சுப்ரமணிய பாரதியார் எழுதியுள்ள ‘பாஞ்சாலி சபதம்’. குறிப்பிட்ட ஒரு நிகழ்வை மட்டுமே எடுத்துக் கொண்டு தனக்கேயுரிய கூரிய அணுகுமுறையோடும் கவிதை வீச்சுடனும் அமைந்துள்ள இந்தப் பகுதி மகாபாரத பாத்திரங்கள் அனைவரையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

மலையாளத்தில் இரண்டு நாவல்களைக் குறிப்பிடலாம். பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்பது ஒன்று. சுருங்கச் சொன்னால் இது கர்ணனின் கதை. அவனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கியமான தருணங்களைக் கொண்டது. திரௌபதிக்கும் அவனுக்கும் இடையிலான உறவைப் பற்றியும் இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது. அந்த வகையில் திரௌபதியின் கதாபாத்திரத்தையும் வேறு கோணத்தில் நமக்குக் காட்டுகிறது இந்த நாவல்.

இரண்டாவது நாவல் எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. மகாபாரதத்தை பீமனின் கோணத்தில் சித்தரிக்கிறது இந்த நாவல். மகாபாரத கதாபாத்திரங்களை எளிய, சாதாரண மனிதர்களாக்கி அவர்களின் அகவுலகை நெருக்கமாக அணுகியிருக்கும் வகையில் இந்த நாவல் மிக முக்கியமானது. பாண்டவர்களில் பலசாலியாக இருந்தபோதும் ஏன் தனக்கு எப்போதும் இரண்டாம் இடமே கிடைத்தது என்று பீமன் யோசிப்பதுதான் நாவலின் மையம்.

மகாபாரத மறுஉருவாக்கத்தில் இன்னொரு முக்கியமான நாவல் கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதி, தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்த ‘பருவம்’ நாவல். மகாபாரதக் கதை மொத்தத்தையும் அன்றாட மனிதர்களின் வாழ்வாகச் சித்தரித்திருக்கிறது. பாண்டவர்களும் கௌரவர்களும் மண்ணில் நடக்கிறார்கள். எளிய மனிதர்களாக, அவர்களுக்கேயுரிய பலவீனங்களுடன் நம்முன் உலவுகிறார்கள். மாயத் தருணங்களோ சித்து விளையாட்டுக்களோ இல்லாமல் எல்லா நிகழ்வுகளும் எளிய மனிதர்களின் அன்றாட சம்பவங்களாகவே காட்டப்படுகின்றன.

ஜெயமோகனின் பெருநாவலான ‘வெண்முரசு’ மகாபாரதத்தை விரிவான கோணத்தில் அணுகும் ஒன்று. இவற்றைத் தவிர காண்டேகரின்  யயாதி, இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா, பூமணியின் ‘கொம்மை’, தேவகாந்தனின் ‘கதாகாலம்’ ஆகிய சில நாவல்களையும் இந்த வகையில் குறிப்பிடலாம்.

குஜராத், ராஜஸ்தான் பகுதிளில் வாழ்ந்த பீலர் எனும் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கிய வடிவமாக ‘பீலர்களின் பாரதம்’ உள்ளது. பகவான்தாஸ் படேல் தொகுத்தளித்த இந்த நூலை தமிழில் சரஸ்வதி மொழிபெயர்த்திருக்கிறார்.

மகாபாரதம் அளவுக்கே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட புனைகதைகள் எழுதப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’ கதைகளை நாம் அறிவோம். இலக்குவனின் மனைவி ஊர்மிளையை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ‘சாகேத்’ என்ற காவியத்தை மைதிலி சரண் குப்தா எழுதியிருக்கிறார். தெலுங்கில் மொல்ல இராமாயணம் மிகப் பிரபலமானது. ஆத்துக்குரி மொல்லா என்ற 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் கவிஞர் எழுதிய இந்த இராமாயணம் பல வகைகளில் மூல ராமகதையிலிருந்து வேறுபட்ட ஒன்று. அதேபோல, வங்க மொழியின் முதல் பெண் கவிஞராகக் கருதப்படும் சந்திரபதியும் இராமாயணத்தைத் தன்னுடைய கோணத்தில் காவியமாக இயற்றியுள்ளார்.

  

0

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள், அனைத்து மொழிகளுக்கும் சென்றடைய வேண்டும், மொழிகளுக்கிடையேயான பரிமாற்றம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இரண்டு அரசு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. சாகித்திய அகாதமி, தேசியப் புத்தகக் கழகம்.

சாகித்திய அகாதமி 1954ஆம் தோற்றுவிக்கப்பட்டது. India’s National Akademy of Letters என்று, இந்தியாவின் முதன்மை இலக்கிய நிறுவனம், சொல்லப்படும் இதன் நோக்கம், 24 இந்திய மொழிகளின் இலக்கியத்தை விருதுகள், நூல் பதிப்பு, கண்காட்சிகள், பயிற்சி அரங்குகள், நல்கைகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் ஆகும். 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியிலும் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சாகித்திய அகாதமி விருது, பாஷா சம்மான் விருது, மொழிபெயர்ப்பு விருது, பாலசாகித்திய புரஷ்கார், யுவ புரஷ்கார் என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதன் பதிப்புப் பிரிவின் மூலம் ஒவ்வொரு மொழியிலும் நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்திய இலக்கியத்துக்காக பாடுபட்ட ஆளுமைகளைக் குறித்த ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்துள்ளது. ‘இந்தியன் லிட்டரேச்சர்’ என்ற ஆங்கில காலாண்டிதழ் வெளிவருகிறது.

தேசிய புத்தகக் கழகம், National Book Trust, 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அரசின், மனித வளத் துறையின் உயர் கல்விப் பிரிவின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது. 55க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் புத்தகங்களை இது பதிப்பிக்கிறது. இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தரமான இலக்கிய ஆக்கங்களைப் பதிப்பித்து, குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதே இதன் நோக்கம்.

சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த ‘தர்பாரி ராகம்’ புத்தகம் தேவைப்பட்டதால், தேசியப் புத்தகக் கழகத்தின் இணையதளத்தில் தேடியபோது, தமிழ் புத்தகப் பட்டியல் கிடைத்தது. 2025ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டியல். மிகுந்த வியப்புக்குரிய தகவல், தர்பாரி ராகம் நாவலின் விலை ரூ.28 மட்டுமே. அதுபோல, பட்டியலில் புகழ்பெற்ற ‘சிக்கவீர ராஜேந்திரன்’ நாவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், விசாரித்தபோது அது இருப்பில் இல்லை என்று சொன்னார்கள். வெகு காலமாக பதிப்பில் இல்லாமல் இருந்த குடும்பம் சிதைகிறது நாவல் 2024ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய நூல் வரிசை என்ற அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நூல்கள் மிகவும் முக்கியமானவை. சில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. மற்றவை இருப்பில் இல்லை. ஆனாலும் இந்தப் பட்டியலின் மூலம் இந்த 60 ஆண்டுகளில் தமிழில் நமக்குக் கிடைத்த பிற மொழி இலக்கிய நூல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சாகித்திய அகாதமியிலும் சரி, தேசிய புத்தகக் கழகத்திலும் சரி, பல நூல்கள் மறு பதிப்பில் இல்லை. பதிப்பில் வந்திருப்பவை பலவும் சகாய விலையில் கழிவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கொள்கை அளவில் இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய இலக்கியத்துக்கு மிக முக்கியமானவை. இவற்றின் வழியாகவே மொழிகளுக்கு இடையிலான ஆரோக்கியமான பரிமாற்றங்களை செய்ய முடியும். ஆனால், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் பிற அரசுத் துறைகளைப் போலவே அமைந்திருப்பதன் காரணத்தால் எதிர்பார்க்கும் அளவுக்கு இவற்றின் செயல்பாடுகள் நிறைவுதருபயையாக இல்லை. இங்கு பணியமர்த்தப்படுபவர்கள் இந்த அமைப்பின் ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள். இவர்களுக்கும் இவற்றின் நோக்கங்களுக்கும் தொடர்பும் பிணைப்பும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஈடுபாடும் அக்கறையும் கோரும் அமைப்புகள் இவை. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை என்பதை வெகு துலக்கமாக அனைவரும் பார்க்க முடியும். அவ்வாறன்றி, அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றும் ஆர்வத்துடனும் அக்கறையுடனுமான நிர்வாகத் துறையை உருவாக்க முடியும்போது இந்திய இலக்கியம் இன்னும் செழுமையடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த இரு அமைப்புகளையும் உடனடியாக மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானது.

0

அரசு சார்ந்த இந்த அமைப்புகளைத் தாண்டி தனிப்பட்ட சில முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழிலிருந்து கன்னடத்துக்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக நல்ல நூல்களை கே.நல்லதம்பி போன்றவர்கள் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார்கள். அதேபோல, தெலுங்கில் ஜில்லேலா பாலாஜி, அக்கினேனி பாஸ்கர் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். நல்ல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவருகின்றன. கல்யாணராமன், பிரியவம்தா, கலைவாணி, சுசித்ரா போன்றவர்களை குறிப்பிடலாம். பெருமாள் முருகனின் படைப்புகள் இந்திய, உலக மொழிகளில் இன்று கிடைக்கின்றன. இதன் காரணமாக உலகின் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளின் பட்டியல்களில் இந்திய நாவலாசிரியர்களின் பெயர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. தொடர்ச்சியான, தீவிரமான இத்தகைய செயல்பாடுகளின் வழியாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்படும், குறிப்பாக தமிழ் இலக்கிய ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் ‘இந்திய இலக்கிய’மாக அடையாளம் காணப்படும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.

0  

( நெல்லை பொருநை புத்தகத் திருவிழா 2026. 14.02.2026  உரையின் எழுத்து வடிவம் ) 

இந்திய ஆட்சியாளர்களின் அரசவை ராகம் - தர்பாரி ராகம்

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியர்கள் அனைவரின் கனவும் நாடு இனி சுபிட்சமடையும், தொழில் வளர்ச்சி அடைந்து வளம் பெருகும், சமத்த...