Sunday, 5 July 2026

கலையை எழுதுதல் - சுகுமாரன்



0

2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியானத் தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் இன்னொரு வலுவான பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈர்ப்பையும் சுவையையும் கட்டுரைகளிலும் காணமுடிந்தது. கட்டுரை வடிவம் மந்தமான வாசிப்புத் தன்மைகொண்டது என்றொரு பொதுவான அபிப்ராயம் உண்டு. தமிழில் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் பலவும் அந்த அபிப்ராயத்தை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. ஆனால், கட்டுரைகளையும் நேர்த்தியாக, வாசிப்புத்தன்மை கொண்டவையாக எழுத முடியும் என்று நிரூபித்தவர்கள் சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் ஆகியோர். சுகுமாரனின் கட்டுரைகளும் அந்த வரிசையில் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் தொடங்கி இன்று வரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர அறியத்தருபவை.  ஏப்ரல் 2005ஆம் இதழில் ‘பொன்னகரம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

திசைகளும் தடங்களும் (2003), ‘தனிமையின் வழி’ (2007), இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008), வெளிச்சம் தனிமையானது (2008), வேழாம்பல் குறிப்புகள் (2011), வாழிய நிலனே (2011) ஆகிய ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள், நமக்கு கவிஞரல்லாத வேறொரு சுகுமாரனை அறிமுகப்படுத்துகின்றன. ஒரு பத்திரிகையாளராகவும், இசை நாட்டிய ரசிகராகவும், திரைப்பட ஆர்வலராகவும் தான் அடைந்த அனுபவங்களை இந்தக் கட்டுரைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். கவிதைகள், புனைகதைகள், மொழியாக்கங்கள் குறித்தும் தமிழ், இந்திய, உலக இலக்கியத்தின் ஆளுமைகள் பற்றியுமான அவரது செறிவான பார்வையையும் மதிப்பீடுகளையும் தொகுத்துத் தந்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் தீவிர இலக்கியம் மேலெழுந்து வந்த பயணத்தை இக் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இலக்கியத்தை, எழுத்தை தன் வாழ்வாகக் கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவன் அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டிய சவால்களையும், சமரசங்களின்றி தன் இலக்கை நோக்கிச் செல்பவன் அடைய நேரும் லௌ கீக பின்னடைவுகளையும் இவை உணர்த்துகின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று இதைத் திரும்பிப் பார்க்கும்போது, நீண்ட இந்தப் பயணம் சவாலானதாகவும் உத்தரவாதமற்றதாகவும் இருந்தபோதிலும் இதன் வழியாக கிட்டிய அனுபவங்கள் பெருமதிமிக்கவையாகவும் எண்ணிப் பார்த்து வியக்கும்படியாகவும் அமைந்திருப்பதே அனைத்துக்குமான பதிலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

சுந்தர ராமசாமியுடனான நட்பைக் குறித்த ‘பின்னும் உயிர் வாழும் கானல்’, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்தது பற்றிய ‘மாயத்தாகம்’, தற்கொலையைக் குறித்த ‘சாவதும் ஒரு கலை’, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்ஸை சந்தித்த அனுபவம் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

ஏற்கெனவே வெளியான கட்டுரைத் தொகுப்புகள் கிடைக்காத நிலையில், இந்த நான்கு தொகுதிகளில் உள்ள கட்டுரைகளையும், பிரசுரமாகாத அல்லது தொகுக்கப்படாத கட்டுரைகளையும் இயல்வாரியாகத் தொகுத்து வெளியிடுவது மிகவும் அவசியம் என்ற எண்ணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டேன். கவிதைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைத் தேடி எடுத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக காலச்சுவடு பதிப்பகம் முயற்சி எடுத்து கட்டுரைத் தொகுதிகளை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான அவரது ஆர்வத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இந்திய மரபிசையின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர் சுகுமாரன். இசைக் கலைஞர் எம்.டி.ராமநாதனைக் குறித்து எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளின் வழியாக அந்தக் கலைஞனின் ஆளுமையையும் கலைமேதமையையும் உணர்த்திவிடுகிறார். தஞ்சையில் ஒரு விடுதி அறையில், ‘மருதமலை மாமாணியே’ பாடலின் மூலம் தமிழகமெங்கும் புகழ்பெற்ற மதுரை சோமு, சுகுமாரனுக்காக மூன்று நிமிடம் ஒரு கீர்த்தனையை பாடிய சம்பவத்தை வாசிக்கும்போது கலையின் மீதான அசலான ஆர்வம் அற்புதங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஓவியங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகள் உள்ளன, வின்சென்ட் வான்காவின் வாழ்க்கைச் சரிதமான ‘lust for life’ நூலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை ஒரு கலைஞனின் வாழ்வில் காதலும் தோல்வியும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளை வலியுடன் வெளிப்படுத்துகிறது.

கேரளத்தின் கலாச்சார அடையாளமாக விளங்கும் ‘மோகினியாட்ட’ நிபுணரான கல்யாணிக் குட்டியம்மாவைப் பற்றி சுகுமாரன் அளித்திருக்கும் சித்திரம் உணர்வுப்பூர்வமானது. நடனக் கலைஞர் சந்திரலேகாவைப் பற்றிய கட்டுரை இரண்டு வியப்பூட்டும் தகவல்களைத் தருகிறது. சந்திரலேகா ஒரு கவிஞர் என்பதும், ‘சாலையோரத்தில் ஒரு வானவில்’ என்றொரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது என்பதும் முதலாவது ஆச்சரியம். இன்னொன்று, ‘மரப்பசு’ நாவலின் நாயகி அம்மணியை தி.ஜா சந்திரலேகாவின் சாயலில்தான் எழுதியிருக்கிறார் என்பது.

தொகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் சினிமாவைக் குறித்தவை. 14 கட்டுரைகளில் அதிகமும் மலையாள சினிமாவைக் குறித்தவையே. சத்யஜித் ரேவை கல்கத்தாவில் அவர் இல்லத்தில் சந்திக்க வாய்த்த அற்புதமான தருணம் சுகுமாரனுக்கு வாழ்வில் வாய்த்த பொன்னான கணங்களில் முதன்மையானதாக இருக்கும். அதேபோல, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்த நாளில் அவருடனான உரையாடலும் அவர் சுகுமாரனின் சட்டைப் பையில் வைத்த பணத்தாளும் மறக்க முடியாதவையாகவே இருக்கும். 1980களில் கோவையில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் கவிதைகளைக் கொண்ட வானம்பாடி இதழ் வெளியீட்டை முன்னிட்டு விஜயகுமார் குன்னிசேரி எற்பாடு செய்திருந்த நிகழ்வில் கே.அய்யப்ப பணிக்கர், எம்.கிருஷ்ணன் குட்டி , கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தபோது ஜான் ஆபிரகாமும் வந்திருக்கிறார் என்ற செய்தியை வாசிக்கும்போதும் சுகுமாரனின் வாழ்வனுபவத்தின் செழுமையை அறிந்துகொள்ள முடிகிறது. வைஜயந்தி மாலா, ‘சில்க்’ ஸ்மிதா, ஓவியர் ஆதிமூலம், மலையாள திரை இசையமைப்பாளர் பாபு ராஜ் என்று கட்டுரைகளில் காணக் கிடைக்கிற பல்வேறு முகங்கள் சுகுமாரன் வெவ்வேறு கலைகளின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றன.

இந்தக் கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு இவற்றை வாசிக்கும்போதே குறிப்பிட்ட நபர்களைச் சார்ந்த வேறு சில திறப்புகளையும் வாசகன் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான். உதாரணமாக, சந்திரலேகாவைப் பற்றி ரஸ்டம் பரூச் எழுதிய நூலைக் குறித்த செய்தியும், சந்திரலேகாவின் கவிதைத் தொகுப்பைப் பற்றிய விபரமும் கூடுதல் வாசிப்புக்காக அவற்றைத் தேடிச் செல்லும் ஆர்வத்தைத் தருகின்றன. எம்.டி.ராமநாதன், மதுரை சோமு ஆகியோரைப் பற்றி வாசிக்கும்போதே மேலும் சில தனித்தன்மைமிக்க பாடல்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றைத் தேடிக் கேட்கத் தூண்டுகிறது.

இத்தொகுப்பில் காணும் பல்வேறு ஆளுமைகளின் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கியிருப்பவை அவரவர் சார்ந்த கலைகளே. அவர்களைப் போலவே கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் சுகுமாரன். அவர் எழுதிக் காட்டியிருக்கும் கலைஞர்களின் சித்திரங்களோடு சேர்த்து அவரது சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் கருத்தில்கொண்டே இத்தொகுப்புக்கு ‘வாழ்வை மீட்டிய கலை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

0

( காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘வாழ்வை மீட்டிய கலை’ கட்டுரை நூலுக்கு எழுதியுள்ள தொகுப்புரை )

 

  

Tuesday, 23 June 2026

நிழலாடும் முகங்கள் - நாஞ்சில்நாடனின் நாவல்கள்

 



நாஞ்சில்நாடனின் மொத்தச் சிறுகதைகளும் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இத்தருணத்தில் அவரது நாவல்கள் குறித்த ஒரு மீள்பார்வை அவசியமாகிறது.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளில் ஆறு நாவல்களும் எண்பது சிறுகதைகளுமாய் விஸ்தரித்திருக்கும் அவரது படைப்புலகின் ஒரு எல்லையில் நாஞ்சில்நாட்டு கிராமங்களும் மறு எல்லையில் பம்பாய் எனும் பெருநகரமும் கம்பீரம்கொண்டு நிற்கின்றன. இந்த இரு எல்லைகளும் நடுவிலான ஓயாத ஊசலாட்டமே நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்.

‘தலைகீழ் விகிதங்கள்’ முதல் நாவலாக 1971ல் வெளியானது. இரண்டாவது நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’ இவ்விரண்டு நாவல்களுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாஞ்சில்நாட்டு கிராமமொன்றில் படித்த இளைஞன் ஒருவன் பொருளாதார ஜாதிய ஆதிக்கங்களுக்கிடையில் தன்னை நிறுவிக்கொள்ள முனையும் துயரங்களை அழுத்தமாகச் சித்தரித்தன. மூன்றாவது நாவலான ‘மாமிசப் படைப்பு’ விவசாயம் சார்ந்த உடல் உழைப்பாளிகள் கிராமத்தில் ஆதிக்க சக்திகளால் சுரண்டப்படுவதையும் அந்த சுரண்டல்களையும் மீறி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் படுகிற பாட்டையும் கதைக்களாகக் கொண்டிருந்தது.

இந்த மூன்று நாவல்களுமே நாஞ்சில்நாட்டு கிராமங்களில் வேர்கொண்டு விரிவாகவும் நுட்பமாகவும் கிளை விரித்தவை. கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்வில் நாம் உணர நேர்கிற அசலான அன்பையும் அனுசரணையையும் நிபந்தனைகளற்ற கருணையுத் அவற்றின் பேதங்களுடன் சித்தரிக்கும் நாஞ்சில்நாடன் அதே னிதர்களின் கயமைகளையும் சின்னத்தனங்களையும் தீவிரமாகவும் காட்டமாகவும் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனங்கள் இடத்திற்கேற்ப சீற்றமாகவும் எள்ளலாகவும் வடிவம் கொண்டுள்ளன.

பசித்தவனின் துயரங்களாகவும் அலைகழிப்புகளாகவும் உருக்கொண்டுள்ள இந்த நாவல்கள் உயிர்ப்புடன் நமக்கு அனுபவப்பட்டுள்ளன. இவை எல்லாமே மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளன. எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்கவைத்துள்ளன. காரணம் நாஞ்சில்நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே. பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும் தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும உரமுமே நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை ஜீவனுடன் வைத்துக்கொண்டுள்ளன. கிராமங்களை அதன் எல்லாப் பரிணாமங்களுடனும் வாசனைகளுடனும் நாஞ்சில்நாடன் தனது படைப்புகளின் வழியாக சித்தரித்த அளவு வேறொரு படைப்பாளி இன்று வரை சாத்தியப்படுத்தியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய தமிழ் இலக்கிய வாசகன் ‘நாஞ்சில்நாடு’ என்ற பிரயோகத்தை எதிர்கொள்ளும் அதே நொடியில் அவனுக்குள் விரியும் காட்சிகள் வெகு துல்லியமானவை. நெல்லும் வாழையும் தென்னையுமாய் விரியும் வயல்வெளிகள் சூழ்ந்து நிற்கும் மலைத்தொடர்கள், நுரைத்தோடும் சிற்றாறுகள், அதில் குதித்து நீந்தும் இளைஞர்கள், துடிக்கும் மீசையும் வெறிக்கும் கண்களுமாய் நெடிதுயர வீற்றிருக்கும் சுடலைமாடன்கள், புளிமுளம், எரிசேரி, புளிசேரி, துவரன், தீயல் என்று வக்கணையாய் மணக்கும் உணவு வகைகள் – இத்தனையும் உயிர்ப்புடன் காட்சிப்பட்டுவிடும். முப்பதாண்டுகளாய் வாசகனுக்குள் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் மெல்ல மெல்ல கட்டியெழுப்பிய சித்திரமே இத்தகைய உடனடி அனுபவத்தை சாத்தியப்படுத்தியுள்ளது. நாஞ்சில்நாடனைத் தவிர்த்துவிட்டு இன்று எவரும் ஒரு நாஞ்சில் பிரதேசத்து கிராமத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

புவியியல் அமைப்பிலும் கலாச்சார அடிப்படையிலும் இந்த முதல் மூன்று நாவல்களின் பின்னணிக்கு நேர்மாறான ஒரு களத்தில் கால்கொண்டிருப்பவை பிந்தைய மூன்று நாவல்கள். மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை ஆகிய மூன்று நாவல்களுமே பம்பாய் எனும் பெருநகரை மையமாகக் கொண்டவை. கிராமங்களின் எளிமைக்கும் யதார்த்தத்திற்கும் நேர் எதிரான சிக்கல்களையும் இருண்மைகளையும் கொண்டது பெருநகர வாழ்வு. சமூகம் என்ற அமைப்பு உருக்குலைந்து மனிதர்கள் அனைவருமே அன்னியர்களாய் உதிரிகளாய் அலையும் வாழ்வு. இத்தகைய இருண்ட அச்சமூட்டும் இடுக்குகளுக்குள் திக்குத் தெரியாமல் திணறியலையும் நாஞ்சில்நாட்டு இளைஞனின் அவலங்களே இந்த நாவல்களின் மையம். சக மனிதன் மீதான குறைந்தபட்ச கரிசனைக்குக் கூட இடம்தராத மூர்க்கத்துடன் கொந்தளிக்கும் நகரத்தில் இருக்கவும் பிழைக்கவும் அவன் பல்வேறு சமரசங்களையும் நிர்ப்பந்தங்களையும் ஏற்க வேண்டியுள்ளது. வன்முறையும் காமமும் துரத்தும் நிழல்வெளிகளில் அவன் நிராயுதபாணியாய் போராடி நிற்கிறான்.

இழந்துபோன மண்ணையும் மனிதர்களையும் நினைவில் தேக்கியவாறு மொழியறியா திசையறியா பிரதேசத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும் நாஞ்சில்நாட்டு இளைஞனின் வேர்வையும் அச்சமும் கொப்புளித்தோடும் முகமே இந்த நாவல்களின் மையப் படிமமாக திரண்டெழுகிறது.

பணி நிமித்தமாக பம்பாய்க்குச் சென்று வசிக்க நேர்ந்தபோது அந்த நகரத்தின் தனிமையையும் ஊரிலிருந்தும் உறவுகளிலிருந்தும் விலகிக் கிடக்கும் தொலைவையும் தன் எழுத்தின் வழியாகக் கடக்க முனைந்தார் நாஞ்சில்நாடன். இந்த எழுத்துக்களின் வழியாக அவர் தன்னை மீட்டுக்கொண்டதோடு தனது கிராமத்தையும் அதன் மனிதர்களையும் மீட்டெடுத்துக் கொண்டார்.

நாஞ்சில்நாடன் தனது நாவல்களினூடாக பயணித்திருக்கும் தொலைவை கூர்ந்து கவனிக்கும்போது சில அடிப்படையான கேள்விகளை நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

ஒன்று பொதுவாக கிராமத்து இளைஞர்களிடம் காணப்படுகிற நகரவாழ்வு சார்ந்த மோகம் அவர்களுக்கு எதைப் பெற்றுத் தந்தது, அப்படி அவர்கள் எதையேனும் உள்ளபடியே பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்காக அவர்கள் தந்துள்ள விலை என்ன? இரண்டாவது இந்தியாவின் முக்கிய தொழில் என இன்றளவும் பேசப்படுகிற உழவும் அதைச் சார்ந்த தொழில்களும் பெருமளவு நசிந்து போயிருப்பதற்கான அடிப்படையான காரணங்கள் எவை?

மூன்றாவது வாழ்வியல் நெறிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் கலாச்சார விழுமியங்களுக்கும் இன்று நாம் தரும் மதிப்பு எவ்வாறானது?

நான்காவதாக நகரமயமாக்கலைத் தொடர்ந்து இன்று உலகமயமாக்கல் திணிக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில்நாட்டை விட்டு இன்று வெளியேற நேர்கிற ஓர் இளைஞனுக்கு 1986ல் மிதவையில் சண்முகம் உணர நேர்ந்த அந்நியமாதலின் துயரங்களும் அழுத்தங்களும் எவ்வாறு பொருள்படும்?

நவீன வாழ்வின் சிக்கல்கள் குறித்தும் இழந்து கொண்டிருக்கிற மாண்புகள் குறித்தும் நாஞ்சில்நாடன் ஆதுரத்துடன் இன்றெழுதும் கட்டுரைகளின் பொதுச்சரடு அவரது நாவல்களில் கண்ணுக்குத் தெரியாத நீரோட்டமாய் ஓடிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

சிவதாணுவும் பூலிங்கமும் அனுபவிக்க நேர்ந்த ஜாதிய பொருளாதார ஆதிக்கங்களுக்கு அப்பால் இன்னதென்று வகைப்படுத்து முடியாத உலகளாவிய ஒரு எதேச்சதிகாரம் இன்று இளைஞர்களை கண்காணித்துக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் நாஞ்சில்நாடன் தன் நாவல்களின் வழியாக எழுப்பி நிற்கும் கேள்விகள் மேலும் அழுத்தம் பெறுகின்றன. கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையேயான அமர்தலற்ற அலைதல் வாழ்வுக்கும் சாவுக்குமான ஊசலாட்டமாகவும் இருப்பிற்கும் இன்மைககுமான போராட்டமாகவும் விரிவுகொள்கிறது.

கோவணங்களுக்கு பதிலாக பெர்முடாக்களைப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய கிராமங்களில் உறைந்திருக்கிற இந்தியாவின் ஆன்மாவை எப்படிப் புரிந்துகொள்வது என்று யோசிக்கச் செய்கிறது.

‘எட்டு திக்கும் மத யானை’ நாவலில் பூலிங்கம் ஒரு சமயம் கத்தி ஒன்றை எதற்கும் இருக்கட்டும் என்று பத்திரப்படுத்திக் கொள்வான். அதன் பிறகு அந்த கத்தியை அவனால் கீழே போடவே முடியாமல் அவனது ஒரு பகுதியாகவே உருமாறிவிடும்.

பொருளுக்கு அலையும் இன்றைய வாழ்வில் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் ஆயுதங்களும் அல்லது நம்மை எடுத்துக் கொண்டுள்ள ஆயுதங்களும் அப்படியானவைதான்.

மனிதர்கள் அனைவருக்கும் சுயவேர்களற்ற பொது அடையாளத்தை நிறுவ முயல்கிற இன்றைய சூழலில் நாம் நம்மை கண்ணாடியில் பார்க்கும்போது நாஞ்சில்நாடனின் நாவல்களில் மிதவையாகவும் சதுரங்கக் குதிரையாகவும் மதயானையாகவும் அலையும் நாயகனின் முகமே நிழலாடுகிறது.

0

‘ரசனை’ மாத இதழ் / மார்ச் 2005

காலத்தின் நெசவு - வேள்வித் தீ எம். வி. வெங்கட்ராம்

 


காலத்தின் ஆடிகளென்று சொல்லப்படும் இலக்கியங்கள் அவை பேசும் சமூகங்கள் குறித்த ஆவணங்களும் கூட. குறிப்பாக நாவல், கலை சார்ந்த எல்லா தன்மைகளுக்கும் அப்பால், ஒரு சமூக ஆவணமாகவும் பங்காற்றுகிறது. எம். வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ'.  தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட செளராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். நெசவைத் தொழிலாகக் கொண்ட சமூகங்களில் முக்கியமானவை செளராஷ்டிரர்களும் தேவாங்கச் செட்டியார்களும் கைக்கோள முதலியார்களும். தமிழகத்தில் பரவலாக வசிக்கும் இவர்கள் தொன்றுதொட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். செளராஷ்டிரர்கள் பட்டு நெசவிலும், தேவாங்கர்கள் பருத்தி நெசவிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.   உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் என்ற ஆதி அத்தியாவசியங்கள் உழவர்கள், நெசவாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் என்று தொழில் சார்ந்த சமூக அமைப்புகளை உருவாக்கியிருந்தன. அத்தகைய சமூக அமைப்புகளில் இன்று தங்கள் பாரம்பரிய அடையாளங்களை இழந்து, நவீன வாழ்க்கைச் சூழலில் தங்களது இருப்பை எவ்விதம் பொருள்படுத்திக் கொள்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் முதன்மையானது நெசவாளர்கள் சமூகம். தமிழகத்தின் ஆதி குடிகள் அல்ல இவர்கள் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்ததை, இவர்களின் மொழி ஓரளவுக்கு உத்தரவாதப்படுத்துகிறது. செளராஷ்டிரம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் இவர்கள் அனைவரும் சிங்க வாகனத்தவளான செளடேஸ்வரியையே குலதெய்வமாக வணங்குகிறார்கள். 

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் ஒரு சமூகக் கூட்டமாகவே வாழும் பழக்கம் உடைய இவர்களுக்கான தனிப்பட்ட கலாச்சார குணங்கள் அலாதியானவை. காலை நேரங்களில் தெருவில் பாவு பூட்டி, கஞ்சி பூசி, பாவிழைப்பதைக் காண முடியும். பிறகு மாலை வரைக்கும் தறியில் நெசவு. மாலை நேரங்களில் தெரு முனைகளில் கூடி நின்று சினிமா, அரசியல் என்று பொழுது போகும். மின்சார வசதி வாய்க்கும் காலம் வரை இரவில் நெசவு என்பது அவசரத்தைப் பொறுத்து லாந்தர் விளக்கொளியில் மட்டுமே நடக்கும். வார விடுமுறைகள். ஓய்வு நாட்கள் என்றெல்லாம் கிடையாது. அமாவாசை கட்டாய விடுமுறை. அன்றைக்கு மட்டும்தான் இட்லி கிடைக்கும். ஆண்கள் சீட்டாடுவார்கள். சினிமாவுக்குப் போவார்கள். பெண்களுக்கு அன்றும் ஓய்வு கிடையாது. வீடு முழுக்க சாணமிட்டு மெழுகிவிட்டு குளித்து உண்பதற்குள் இரவு வந்துவிடும். அருகில் இருக்கும் 'டூரிங் டாக்கீஸி'ல் ஒரு படம் பார்க்க முடிந்தால் அதுவே பெரிய விஷயம். தவிர பக்கத்து வீட்டில் ஒரு கல்யாணமோ, சாவோ என்றால் தொழில் முடங்கிவிடும். தொழிலும் வீடும் ஒன்றாக அமைந்தால் கூடுதலான சோம்பேறித்தனமும் அழைக்காமல் வந்துவிடும் என்பதற்கு இச் சமூகத்தினரை சரியான உதாரணமாய் சொல்லலாம். பெரும்பாலும் தேவைகளின் பொருட்டே உழைப்பின் உக்கிரமும் அமையும். உடல் நோக நெய்து கூலியை வாங்கிக் கொண்டுவந்து தாராளமாய் செலவழித்து விட்டு மறுநாள் உலை அரிசிக்கு தாடையை சொரிந்து கொண்டு மூன்று காலில் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். பொதுவாக சேமிக்கும் பழக்கம் கிடையாது. வருடத்துக்கு ஒரு முறை அம்மன் பண்டிகை. சக்தி அழைப்பு என்னும் சடங்கு மிகப் பிரபலமானது. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த சக்தி அழைப்புதான் அச் சமூகத்தினரின் தொலையாத அடையாளமாக எஞ்சியுள்ளது. 

முதலாளிகளிடம் முன்பற்று, கடன் என்று உழைப்பு முழுக்க உத்தரவாதமில்லாத ஒன்றாகவே போய்விடும். ஒரு கூலித் தறிக்காரம் சொந்தத்தறிக்காரனாய் மாறுவதும், சொந்தத் தறிக்காரன் நாலு பேருக்கு நூல் கொடுத்து நெய்து வாங்கி முதலாளி ஆவது என்பதெல்லாம் பெருங்கனவுதான். பொதுவாக இச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு கால கட்டம் வரைக்கும் படிப்பை ஊக்குவித்ததில்லை. தறிக்குழிக்கு கால் எட்டும் என்றால் பள்ளிக் கூடம் அவ்வளவுதான். தறியில் போட்டு அமுக்கிவிடுவார்கள். தொடர்ந்து நீண்ட காலமாக நெசவுத் தொழிலை எந்த ஒரு அரசாங்கம் கணக்கிலெடுத்துக் கொண்டு அந்தத் தொழிலையோ, அதை நம்பி வாழும் இச் சமூகத்தினரையோ ஊக்கப்படுத்த சிறிதளவு நடவடிக்கையும் எடுத்ததில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு இன்று இந்த கிட்டத்தட்ட தனது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். 

இந்தப் பிண்ணனியில் 'வேள்வித் தீ'யை மறுபதிப்பாக வாசிப்பதென்பது தொலைந்து போன ஒரு கலாச்சாரத்தின் பழைய நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்வதென்றே தோன்றுகிறது. 

கும்பகோணத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் 'செளராஷ்டிரா' சமூகத்தைச் சேர்ந்த ஒரு பட்டு நெசவாளியின் வாழ்க்கையை சொன்னது என்பது இந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில் முக்கியமான அம்சமாக இருந்தது. அதுவரையில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருந்த இந்த நாவல் அதனூடாக அக் காலகட்டத்தின் அரசியல் சூழலை அங்கங்கே தொட்டுக் காட்டியிருந்தபோதும், நாவலுக்கு வேறு நோக்கங்கள் இருக்கவில்லை. 

மழையும், மழை நாட்களும் என்றுமே நெசவாளிக்கு சாதகமானவை அல்ல. அவனது திட்டங்களை குலைத்துப்போடுபவை. இந்த நாவலும் அப்படியான ஒரு மழையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கண்ணன் படும்பாடுகள் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு திறமையான நெசவாளியாக அவன் உருவான விதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, செளராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி தந்துவிடுகிறார். மனிதர்களுக்கே இயல்பான வேஷங்களும், துரோகங்களும் எந்தவொரு வாழ்க்கைச்சூழலிலும் தவிர்க்க முடியாதவை. நாவலின் முக்கியமான கதாபாத்திரமான கண்ணன் எந்த மாதிரியான சூழலிலும் மனத்தளர்ச்சி அடையாதவனாய் தன்னுடைய உழைப்பின் மீதான அபாரமான நம்பிக்கையைக் கொண்டு அவற்றை எதிர்கொள்பவனாய் இருக்கிறான். இயற்கை சதி செய்த போதும், முதலாளிகள் அவனை சுரண்டியபோதும், உறவினர்கள் அவன் உழைப்பை உறிஞ்சியபோதும், சக நண்பன் துரோகமிழைத்த போதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவன் தன் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவனாய் உறுதியுடன் இருக்கிறான். அவனது மனைவியான கெளசலையும் தன் கணவனை உற்சாகப்படுத்துபவளாய் எதற்கும் தளர்ந்து விடாதவளாய் உடனிருக்கிறாள். ஆனால் இவர்களது இல்லறத்தில் இளம் விதவையொருத்தி குறுக்கிடும்போது அவர்கள் இருவரது மன நிலையும் விநோதமான முரண்களை ஏற்கின்றன. அவளுடனான உறவை கண்ணன் ஒரு தவறாகவே நினைக்க முடியாத அளவுக்குக் காமம் அவனை ஆட்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் அது மனைவிக்குத் தெரியாமல் இருந்திருக்கலாமே என்றுதான் நினைக்கிறான். கணவன் தடம் மாறிப் போவதை அறிந்ததும் கெளசலை தடுக்க முற்படுகிறாள். பிறகும் அது தொடர்வது தெரிந்ததும் தன்னையே மாய்த்துக் கொண்டுவிடுகிறாள். தன் கணவனின் சந்தோஷத்துக்கு தான் மட்டுமல்ல, தன் குழந்தைகளும் தடையாக இருக்கக் கூடாது என்று அவளை தீர்மானிக்க வைக்கிற உந்துதலும், கண்ணனின் மீதான தன் காமம் எந்தவிதத்திலும் துரோகமில்லை என்று வாதிடும் ஹேமாவின் உறுதியும், மனைவியைப் பறிகொடுத்த பின்னும் ஹேமாவின் உறவை ஏற்றுக் கொள்ளும் கண்ணனின் மனோ நிலையும் வெவ்வேறு கோணங்களில் மனித மனம் கொள்ளும் தடுமாற்றங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பொருளாதாரம் சார்ந்த எல்லாவிதமான போராட்டங்களையும், துரோகங்களையும், ஏமாற்றங்களையும் தன் உடல் உழைப்பைக் கொண்டு எதிர்கொள்ள முடிகிற மனிதனுக்கு பிறன்மனை விளையும் காமத்தினால் குடும்ப உறவில் உண்டாகும் விரிசல்களை எதிர்கொள்வதில் எப்போதும் தடுமாற்றங்களே மிஞ்சுகின்றன. ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் காலவோட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஒன்றாக கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத் தக்கதாக அமைந்துள்ளது. 

யதார்த்த பாணியில், பெரிதும் உரையாடல்கள் வழியாக நகரும் இந்த நாவலின் கலை நேர்த்தி இன்றைய பார்வையில் குறைவுபட்டதாய் தெரியலாம். ஆனால் நாவல் முன்வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் வாழ்வு சார்ந்த கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் மேலும் அழுத்தம் பெற்றுள்ளன என்பது முக்கியமானது. கைத்தறி நெசவுத் தொழில் என்பதே இன்று அழிந்துபோன ஒரு தொழிலாகிவிட்டது. தறிச் சத்தமே இல்லாமல் ஒரு பெரும் சூனியத்தில் இன்றைய நெசவாளர் கிராமங்கள் புதைந்து கிடக்கின்றன. திருப்பூரில் பனியன் ஆலைகளுக்கு அதிகாலையிலேயே எழுந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தறிச் சட்டங்களும், இதர தளவாடங்களும் வெறும் காட்சிப் பொருட்களாகிவிட்டன. நெசவுத் தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்கத் தவறிய அரசாங்கங்களின் அக்கறையற்ற போக்கினாலும்,  நவீன தொழில் நுட்பங்களின் ஆக்கிரமிப்பாலும் அருகிப் போன இந்தக் கலை நேற்றைய தலைமுறையின் வலி நிறைந்த நினைவுகளாக மட்டுமே மிஞ்சியுள்ளன. வெறுமையான தறிக் கூடங்களிலும், தறிச் சத்தம் கேட்டிராத கிராமத்தின் இருண்ட தெருக்களிலும் இச் சமூகத்தின் கலாச்சார தனி அடையாளங்கள் புதைக்கப்பட்டுவிட்டன. உலகளாவிய ஒற்றைக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்துவிட்ட நெசவாளர் சமூகத்தின் இன்றைய தலைமுறையிடம் தொலைந்துபோன அந்தத் தனி அடையாளங்களைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையை எதிர்பார்க்க முடியாது. அடுத்த தலைமுறையினர் தாங்கள் நெசவை குலத் தொழிலாக் கொண்டவர்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பே இருக்கப் போவதில்லை. 

எம்.வி.வெங்கட்ராம் தனது பதினாறு வயதிலிருந்தே எழுதத் தொடங்கியவர். நிறைய சிறுகதைகளையும், நான்கு நாவல்களையும், புத்தர் குறித்து ஒரு மேடை நாடகத்தையும் எழுதியுள்ளார். 'விக்ரக விநாசன்' என்ற பெயரில் இவர் எழுதிய கதைகள் அந்த காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் போக்கிற்கு மாறாக புதிய உத்தியிலும், மொழியிலும் அமைந்திருந்தன. 'காதுகள்' நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 'நித்யகன்னி'க்கான முன்னுரையில் தி.ஜானகிராமன் 'இலக்கியகர்த்தாக்களுக்கு மாடம் கட்டிப் போற்றும் விமர்சகக் கொத்தனார்களுக்கு இவருடைய நினைவு வராதது வியப்பான செய்தி' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

ஒரு சமூகத்தின் பூர்விகமும், கலாச்சார அடையாளங்களும் உருத்தெரியாமல் மறைந்து விடும்போது இலக்கியம் மட்டுமே புதையுண்ட அத்தகைய நினைவுகளை மீட்டெடுத்து வரும் ஆற்றலையும், சாத்தியத்தையும் கொண்டது. அந்த வகையில் இந்த நாவலை காலச்சுவடு பதிப்பகம் மறு பதிப்பு செய்வதென்பது ஒரு சமூகத்தின் தொலைந்து போன கலாச்சாரத்தை மீட்டுத் தரும் வகையில் முக்கியமானது என்றே தோன்றுகிறது.  

எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ நாவல் செம்பதிப்பாக வெளியானபோது எழுதிய முன்னுரை )

 

 


கலையை எழுதுதல் - சுகுமாரன்

0 2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியானத் தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் இன்ன...