2021 விளக்கு விருது விழாவில், இராசேந்திர சோழனின் புனைவல்லாத எழுத்துகள் குறித்த உரை.
27.11.2022 சென்னை
நன்றி - ஸ்ருதி டிவி
2021 விளக்கு விருது விழாவில், இராசேந்திர சோழனின் புனைவல்லாத எழுத்துகள் குறித்த உரை.
27.11.2022 சென்னை
நன்றி - ஸ்ருதி டிவி
சாயங்காலம்
0
சந்திரா தங்கராஜ்
0
பால்கனியில் அமர்ந்திருக்கிறேன்
உள்ளே நுழையலாமா வேண்டாமா எனத் தயங்கியபடி
முல்லைக்கொடியின் ஓரத்தில் நிற்கிறது சாயங்காலம்
வெகு நேரமாக நின்று கொண்டே இருக்கிறது
சாயங்காலத்தின் பாஷை அறியாத நான்
அதை உள்ளே கூப்பிட வழியின்றி
வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க
சரசரவென சாயங்காலத்தை விழுங்கி
வெளியை வியாபிக்கிறது இரவு.
0
வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்று தெரியாமலே நாம்
விரும்பிய, நினைத்த செயல்களை செய்ய முடியாமல் போய்விடுவதுண்டு. இந்த குறுகிய நேர தடுமாற்றத்தினால்,
இயலாமையினால் ஏற்பட்ட இழப்புகள் நெடுங்காலம் மனத்துள் ஆறா வடுக்களாக எஞ்சி விடுகின்றன.
செய்த தவறை உணர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்திருப்போம்.
ஆனால், கணநேரத் தயக்கம் நம்மைத் தடுத்திருக்கும். அதற்குள் அந்த நபர் விலகிப் போயிருப்பார்.
அல்லது மறுமுறை அவரை சந்திக்கும்போது மன்னிப்புக் கேட்பதற்கான மனநிலை நம்மிடம் இல்லாமல்
போயிருக்கும். மனத்துக்குப் பிடித்தப் பெண்ணிடம் நம் எண்ணத்தைச் சொல்ல குறிப்பிட்ட
நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தயாராகி, ஒத்திகை பார்த்துக் காத்திருப்போம். சந்தர்ப்பவசமாய்
அந்த நேரத்தில் நம் தைரியம் நம்மை கைவிட்டிருக்கும். அல்லது நினைத்ததைப் பேசாமல் வேறு
எதையாவது அபத்தமாய் உளறி அசடு வழிந்திருப்போம். சொல்லாத அந்த எண்ணம் அப்படியே புதைந்துபோகும்.
‘யோகம் ஒருமுறைதான் கதவைத் தட்டும், அதை கைகொள்ளாவிட்டால் மறுமுறை
என்று ஒன்று வாய்க்காது’ என்பதை பள்ளி நாட்களிலிருந்து பலமுறை பலபேர் சொல்லிக் கேட்டிருப்போம்.
கதவைத் தட்டி நிற்பது யோகம்தான் என்பது தெரிந்தால் நாம் ஏன் கதவைத் திறக்காமல் நிற்கப்
போகிறோம்? அது தெரியாமல் போகிறது என்பதுதானே துக்கம். யோகத்துக்கு மட்டும் அதென்ன ஒரு
முறை என்று கணக்கு? இன்னொரு முறை தட்டினால் என்ன குறைந்தா போய்விடும் என்று புலம்பும்போது
கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். பிழைக்கத் தெரியாத பயல் என்று இலவச பட்டம் வேறு
கிடைக்கும்.
இந்த யோகம் சாயங்கால ரூபத்தில் சந்திரா பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது
முல்லைக் கொடியின் ஓரத்தில் வந்து நிற்கிறது. பாவம், சந்திராவுக்கு அதன் பாஷை தெரியவில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு எதிரில் இருப்பவர்களின் பாஷை தெரிந்தாலும், அந்த
கணத்தில் சொல்ல வேண்டிய சொற்களை நம்மால் சொல்ல முடியாது போகும். அதுவும் சாயங்காலம்
போன்ற மொழியைக் கடந்தவொன்றுக்கு முன்னால் நிலைமை இன்னும் சிக்கலாகும். உள்ளே வரலாமா
வேண்டாமா என்ற தயக்கத்தில், குழப்பத்தில் நிற்க அதன் பாஷை தெரிந்த இன்னொன்று வந்து
அள்ளிக் கொண்டு போய்விடும். இருள் அப்படித்தான் சாயங்காலத்தை அழைத்துக் கொண்டு போய்விடுகிறது.
சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவை சரியான விதத்தில் எடுக்கும்போதுதான்
அனைத்தும் கைகூடி வருகிறது. இதில் ஏதேனுமொன்று சரியாக அமையாது போகும்போது ஒட்டுமொத்தமாய்
அனைத்தும் கைவிட்டுப் போகிறது. முல்லைக் கொடியருகில் காத்து நின்ற சாயங்காலத்தை வீட்டுக்குள்
வரவழைக்க முடியாமல் போய் இருட்டுக்கு அதைத் தாரை வார்க்க நேர்வதுபோல.
இப்படி எல்லா நேரங்களிலும் நடந்துவிடுவதில்லை. முடிவெடுக்க முடியாத
சந்தர்ப்பங்கள் பலவகையில் உண்டு. நல்ல இரண்டு வாய்ப்புகள் நமக்கெதிரில் உள்ள போது இதுவா
அதுவா என்று தெரிவு செய்ய முடியாத நிலை, அடுத்தது நமக்கு என்ன வேண்டும் என்பதே உறுதியாகத்
தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலை, முந்தைய கசப்பான அனுபவங்களின் காரணமாக
மீண்டும் ஒரு அடியைத் தாங்க முடியாதென்கிற அச்சம் மேலோங்கியிருக்கும் நிலை என்று நாம்
பலவீனமாகத் தவிக்கும் கணங்கள் அவை. இவ்வாறான பலவீனங்கள் எதுவும் இல்லாமல் நாம் நம்மை
மறந்து ஏதேனுமொன்றில் ஆழ்ந்து ஒன்றிப்போய், கிறங்கிப்போய் நிற்கும் சமயங்களிலும் இவ்வாறு
நாம் தீர்மானிக்க முடியாமல் போவதும் நடக்கும். இந்தக் கவிதை சொல்லிக்கு அன்றைய மாலைப்
பொழுதில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.
அந்திப் பொழுதில் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க வாய்ப்பதே
அபூர்வம். அப்படியொரு கணத்தில் நம் எண்ணங்கள் பின்னகர்ந்து இயற்கையின் அழகில், லயத்தில்
நம்மை மறந்திருப்போம். அலைகளற்ற ஆழ்கடலாய் மனம் அமைதியில் நிறைந்திருக்கும். அந்த நேரம்
பார்த்து முல்லைக் கொடியோரம் தயங்கி நிற்கிறது சாயங்காலம். அப்போதைய நிலையில் அந்த
நேரத்தில் இயற்கையின் ஒரு பகுதியாகவே நம்மால் அந்த சாயங்காலத்தைப் பார்க்க முடியும்.
உள்ளே வரத் தயங்கி அது காத்திருக்கிறது என்பதை அறியாமலே வேடிக்கை பார்த்திருப்போம்.
நம் சொல்லுக்காக அது காத்திருப்பதும் அதன் உத்தேசம் அறியாமல் நாமும் வேடிக்கை பார்த்திருப்பதும்
வெகு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்காது. இருட்டுக்கு இப்படிப்பட்ட குழப்பம் எதுவுமில்லை.
நொடிப்பொழுதில் அள்ளி விழுங்கி விடுகிறது.
இந்தக் கவிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி மிக எளிமையானது. சாதாரணமானது.
அனைவருக்கும் வாய்க்கும் ஒன்றுதான். ஆனால், எளிய சாதாரணமான காட்சி ஒரு சம்பவமாக மாறுகிறது.
சாயங்காலம் ஒரு கதாபாத்திரம். கவிதை சொல்லி இன்னொரு கதாபாத்திரம். இருவருக்குள்ளும்
பார்வை பரிமாற்றம் மட்டுமே. இந்த மௌன நாடகம் முடிவுறுவதற்குள் இன்னொரு கதாபாத்திரம்
நொடிப்பொழுது தோன்றி மறைகிறது. சாயங்காலத்தை அள்ளிக்கொண்டு மறையும் இருட்டுதான் அந்த
மூன்றாவது கதாபாத்திரம். அதன் பின் சம்பவம் முடிந்து காட்சியும் முடிவுறுகிறது. கவிதையும்.
சாஸ்தா பேக்கரி
முகுந்த் நாகராஜன்
0
சாஸ்தா பேக்கரி
ராதா நகர் மெயின் ரோடில் இருந்தது.
நான் சிறுவனாக இருந்தபோது
வேட்டி கட்டிக்கொண்டு
சந்தனம் இட்டுக்கொண்டு
குள்ளமாக இருப்பார் நாயர்.
‘ஹாப் பிரெட்’ வாங்கப் போனால்
‘என்னடா.. ஜுரமா?’ என்று விசாரிப்பார்
கண்ணாடி ஜாடிகளின்
குமிழ் மூடியில் சுற்றும்
குட்டி மின்விசிறியை
வேடிக்கை பார்த்தால்
பரண் மேல் இருக்கும்
பெரிய டின்களில்ள போட்டு
அடைத்துவிடுவதாக மிரட்டுவார்
கிள்ளிவிடுவார்
ஒருமுறை பன் பட்டர் ஜாம் வாங்கிவிட்டு
காசு குறைந்தபோது
‘அடுத்தவாட்டி கொடுத்துடணும்’ என்று
ஜாம் தடவிய கத்தியை எடுத்துக் காட்டினார்
அந்தக் கடை இப்போது இல்லை
பாரதிபுரத்தில் இருக்கும் டீக்கடையில்
அவரைப் பார்த்தேன் சமீபத்தில்
வெளியே நின்று வடை போட்டுக்கொண்டிருந்தார்
‘உங்க பொண்ணா?’ என்று கேட்டு
குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.
வடையை வாங்கிகொண்டு
காசை நீட்டியபோது
‘அங்க கொடுங்க..’ என்று
கல்லாவைக் காட்டினார்.
0
குழந்தைகளின், சிறுவர்
சிறுமிகளின் உலகத்தை கவிதைக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியமல்ல. செறிவான கவிதை
மொழிக்கு மாறானது குழந்தைகளின் எளிய உலகம். உண்மையில் அது மொழியற்றது, பாசாங்கற்றது.
எந்த மொழிக்கும் அப்பாற்பட்டது. சிரமமான இந்த காரியத்தை, அது அத்தனையொன்றும் கஷ்டமில்லை
என்பதுபோல வெகு இயல்பாக, நேர்த்தியாக கவிதைக்குள் கொண்டு வந்து காட்டுபவை முகுந்த நாகராஜனின்
கவிதைகள்.
அடர்த்தியும் அழுத்தமும்
கனமுமான கவிதை வடிவத்துக்குள் குழந்தைகளை இயல்பு மாறாமல் குதூகலத்துடனும் விளையாட்டுத்தனத்துடனும்
காணமுடிவது எத்தனை பெரிய ஆசுவாசம்! அதிகமும் வாசிக்கப்பட்ட, பகிரப்பட்ட அவரது ‘குழந்தைகளின்
ஜன்னல்கள்’ கவிதை இது.
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் ஸீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?
‘சாஸ்தா பேக்கரி’ என்கிற இந்தக் கவிதை வாசிக்கும் எல்லோரையும் அவரவர் இளமைக் காலத்துக்கும், அவரவர் ருசித்த பேக்கரிகளுக்கும் இட்டுச் செல்லும்.
திருப்பூரின் புகழ் பெற்ற ‘வீனஸ்’ பேக்கரியைக் குறித்தும் அங்கு கிடைக்கும்
தேங்காய் பன்னைக் குறித்தும் முன்பே என் புனைவுகளில் எழுதியிருக்கிறேன். இப்போது இதை
எழுதும்போதுகூட பெருமாநல்லூர் சாலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்த அந்தக் கடையும்,
வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தபடி பொட்டலம் கட்டித் தரும் அந்த மலையாளத்துக்கார
ஓனரும், வாசலில் வாலை ஆட்டியபடி நிற்கும் கொழுத்த நாயையும் நினைவில் காண முடிகிறது.
பேக்கரிக்கும் மலையாளக் கரைக்கும் அப்படியென்ன பந்தம் என்று தெரியவில்லை. அக்காலத்திய திருப்பூரின் பிரபல பேக்கரிகளான ‘வீனஸ்’, ‘நீலகிரி’ பேக்கரிகளின் உரிமையாளர்கள் மலையாளிகளே. ‘வீனஸ்’ பேக்கரி வெகு காலத்துக்கு முன்பே இல்லாமல் போனது. தேங்காய் பன்னுக்கு பிரபலமான ‘நீலகிரி’ பேக்கரி புஷ்பா தியேட்டர் முனையில் அவிநாசி சாலையில் இன்றும் இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேங்காய் பன்னுக்கு இணையான ஒன்றை வேறெங்கும் நான் ருசித்ததில்லை. அந்தக் கடையின் முதலாளி மகன் ஆனந்த் பள்ளி இறுதி ஆண்டுகளில் என் வகுப்புத் தோழன். பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாட்களில் வகுப்பளவில் ஏற்பாடு செய்யப்படும் விருந்தின்போது நீலகிரி பேக்கரியின் தேங்காய் பன்னும் உருளைக்கிழங்கு சிப்சும் வழங்கப்பட்டன. எப்போதும் ஷாம்பு போட்டு குளித்த தலைமயிர் நெற்றியில் புரள அடங்கிய குரலில் பேசும் ஆனந்த் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.
குமரன் சாலையில் பூ மார்க்கெட்டும் பெருமாள் கோயிலும் சந்திக்கும் முனையில் இருந்த பேக்கரியின் வாரிசான வினோத் பன்னிரெண்டு டி யில் படித்தான். பள்ளியின் துணை முதல்வரும், பொருளாதார வகுப்பெடுக்கும் பீட்டர் சார் அவனை விளிப்பது இப்போது காதில் ஒலிக்கிறது ‘ஏம்பா, ரொட்டிக்கட வினோத்து, இங்க வா.’ அந்த ரொட்டிக்கடையும் இன்னும் அதே இடத்தில் உள்ளது. வினோத் என்ன செய்கிறான் என்பது தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தொடர்பு விட்டுப்போயிற்று.
திருப்பூரின் தொழில் வளம் பெருகியபோது அத்துடன் இணைந்து பேக்கரிகளின் எண்ணிக்கையும் பெருகின. இரவும் பகலுமாய் உழைக்கும் தொழிலாளிகளின் தேநீர் தேவையை தீர்த்து வைத்ததுடன் தொடர்ந்து உழைத்த கைகளுக்கு ஓய்வையும் ஆசுவாசத்தையும் அளித்தன அவை. ஒவ்வொரு பகுதியிலும் விடிய விடிய பாய்லரில் நீரும், பாத்திரத்திலும் பாலும் காய்ந்துகொண்டிருந்த பேக்கரிகள் உண்டு. பிற பேக்கரிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட புதுவிதமான தின்பண்டங்களையும் ருசிகளையும் அறிமுகப்படுத்தும் காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேநீரில் அரைத் தேக்கரண்டி ‘பூஸ்ட்’ தூளைத் தூவி சுவை சேர்த்து அனைவரையும் வியக்கச் செய்தது லட்சுமி நகர் அருகே இருந்த மல்லிகா பேக்கரி. நகர மண்டபத்துக்கு எதிரில் நஞ்சப்பா பள்ளிக்கு போகும் சாலையில் கீழ்த்தளத்தில் இருந்த சுரேஷ் பேக்கரியில் பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, அப்பள பஜ்ஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எல்லா ஊர்களிலும் சாலைகளிலும் காண முடிந்த ‘முனியாண்டி விலாஸ்’கள் திடீரென்று காணாமல் போனது போலவே பாரம்பரியமான இத்தகைய ‘ரொட்டி’க்கடைகள் காணாமல் போய் அவற்றினிடத்தில் ‘ஐயங்கார் பேக்கரி’களும் ‘ஐஸ்வர்யா’பேக்கரிகளும் எழுந்தன. ஒரேபோல தோற்றத்துடன், மேசை நாற்காலிகளுடன், முகப்பு அலங்காரத்துடன் அமைந்திருந்தன அந்த பேக்கரிகள். உழைக்கவும் தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் இடத்தை மட்டும் கண்டுபிடித்து தெரிவு செய்தால், கடைக்குத் தேவையான பிற அனைத்தையும் ‘பைனான்ஸ்’ முறையில் முதலீடு செய்து தரும் உத்திகள் பெருகின. இதற்கு ஈடாக தினம் ஒரு தொகையை முதலீடு செய்பவருக்குச் செலுத்தவேண்டும். கடையைத் திறந்தாலும் திறக்காவிட்டாலும், வியாபாரம் நடந்தாலும் நடக்காது போனாலும் தினசரி தொகையைச் செலுத்தியாக வேண்டும். தொகையை செலுத்த முடியாதபோது கடை கைமாறிவிடும்.
பேக்கரிகள் நடத்துவதில் பெரும் சவால் சரியான டீ மாஸ்டரையும் சரக்கு மாஸ்டரையும் கண்டுபிடிப்பது. அப்படிக் கண்டுபிடித்த மாஸ்டர்களை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக் கொள்வது. ருசியான தேநீரை சரியான சூட்டில் தரும் டீ மாஸ்டர்களை தேநீர் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதேபோல எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று சிரித்துப் பேசியபடியே போண்டா, பஜ்ஜிகளை பதமாய் சுட்டெடுத்துப் போடும் சரக்கு மாஸ்டர்களும் வியாபாரத்துக்கு முக்கியம். இந்த இருவரையும் பக்குவமாக கையாளவேண்டும். அவர்கள் போக்குக்கு அனுசரித்துப் போக வேண்டும். கேட்கும்போது கேள்வி எதுவும் எழுப்பாமல் ‘அட்வான்ஸ்’ தரவேண்டும். சம்பளத்தைக் கூட்டித் தரவேண்டும். லீவு கேட்டால் முகம் சுளிக்கக்கூடாது. இவற்றையெல்லாம் மீறி, எந்த நேரத்தில் இவர்கள் இருவருக்குமோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ, ‘தான் இல்லாவிட்டால் இந்தக் கடை இல்லை’ என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ, அத்துடன் முடிந்தது சோலி.
பேக்கரி முதலாளிகள் எல்லா நேரத்திலும் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து காசை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ‘மாஸ்டர்’கள் இல்லாத சமயங்களில் டீ போடவும் போண்டா பஜ்ஜிகளை சுடவும் தெரிந்திருக்க வேண்டும். ‘அரைச் சக்கர’, ‘வித்வுட்டு’, ‘கண்ணாடி கிளாஸ்’, ‘அட்டை தம்ளர்’, ‘ப்ளாக்’, ‘பால் டீ’ என்று விதவிதமான தேவைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். கடையை முடிந்த வரை சுத்தமாக பராமரிப்பதும் சுறுசுறுப்புக்கு குறையாமலும் வைத்திருப்பது அவசியம். இதெல்லாவற்றையும்விட குறைந்தபட்சம் தினசரி வசூல் தொகையளவுக்கேனும் வியாபாரம் நடப்பதை உறுதிப்படுத்தினால்தான் தலை தப்பும்.
டீத் தூளும் பாலும் பேக்கரி ஐட்டங்களும் மாதக் கடனுக்குக் கிடைக்கும் என்றாலும் அதுவும் தீர்க்கவேண்டிய கடன்தான். இதுபோக கடைக்கான வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம், எரிபொருள் உள்ளிட்ட மாதாந்திர செலவுகளையும் சமாளிக்கவேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துக் கொடுத்த பிறகுதான் தனக்கான சம்பளத்தைக் கணக்கிலெடுக்க முடியும். இத்தனைக்கும் பிறகுதான் இலாபம் என்பதைத் தேடவேண்டும்.
தெருவுக்கு பத்து பேக்கரிகள் முளைத்திருக்கும் இடத்தில் ஆரம்ப ஜோரில் களைகட்டும் கடைகள் ஒருசில மாதங்களிலேயே காத்தாடும்போது கல்லாப்பெட்டியில் காசு எண்ணும் முதலாளியின் கதி என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படி காசு எண்ணிக்கொண்டிருந்த முதலாளிதான் வேறொரு இடத்தில் எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று பஜ்ஜி சுட்டுக் கொண்டிருப்பார். வெதுவெதுப்பான சுடுநீரில் தம்ளர்களை அலசி வரிசையில் அடுக்கி டீ போட்டு நிறைப்பார். கிரகநிலை படுமோசமாக இருந்தால் மேசைகளிலிருந்து எச்சில் தம்ளர்களைப் பொறுக்கிப் போட்டு கழுவிக் கொண்டிருப்பார்.
அவ்வாறு வேறு பேக்கரிகளில் வேலை செய்துகொண்டிருக்கும் பழைய ‘முதலாளி’கள், நம்மைக் காண நேரும்போது பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவார்கள். அடையாளம் தெரிந்து முகம் பார்த்துப் பேச முனைந்தாலும் ஆர்வம் காட்டாமல் தலையைக் குனிந்தபடி தவிர்ப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் செய்ய வேண்டிய சிறிய உதவி அவர்களது தவிர்ப்பை, தவிப்பைப் புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் விடுவதுதான்.
நல்லவேளையாக முகுந்த் நாகராஜன் சந்திக்கும் ‘பழைய’ முதலாளி, குழந்தைகளிடம் பிரியத்தைக் காட்டிய முந்தைய காலத்தைப் போலவே, வடை சுட்டுக் கொண்டிருக்கும் வறிய நிலையில் இன்றும் குழந்தைகளிடம் மாறாத அன்பைக் காட்டுபவராக இருக்கிறார். வியாபார நசிவு அவரை வெறுமனே இடம் மாறி நிற்கத்தான் செய்திருக்கிறது. உள்ளுக்குள் அவர் அப்படியேதான் இருக்கிறார். இது அவரது பேரதிர்ஷடம்.
இத்தகைய சரிவுக்குப் பிறகு இவர்களைப் போன்ற ‘பழைய’ முதலாளிகள், எல்லா
நேரங்களிலும் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு ‘அங்க குடுங்க’ என்று கல்லாப்பெட்டியை
கைகாட்ட மாட்டார்கள்.
( பிப்ரவரி 2026 ஆவநாழி மென்னிதழில் வெளியானது )
புனைவுகளின்
வழியாகவே உண்மையின் மேல் கவிந்திருக்கும் நிழல்களை நீக்கிப் பார்க்க
வாய்ப்பிருக்கிறது என்பதால் ஈழப் போருக்குப் பின்னான இலக்கியங்கள் சரித்திரத்தின்
இடைவெளிகளை நிரப்பி அர்த்தப்படுத்துவதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைச் செய்கின்றன. மண்ணின் விடுதலைக்காக பொருது நிற்கும்
போராளிகளுக்கும் அவர்களை அடக்கி நசுக்கும் அரசுக்கும் இடையில் சாமானியர்களின்
வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிறது. வாழ்வின்
எளிய சந்தோஷங்களையும் சிறிதும் பெரிதுமான துக்கங்களையும்கூட போர் தன்வசப்படுத்திக்கொள்கிறது. போர்க் காலத்தில் இவர்களின் குரல்கள்
எடுபடுவதுமில்லை.
எழுப்பப்படுவதும்
இல்லை. இன்று அந்த ஊழிக்காலத்தைத்
திரும்பிப் பார்க்கும்போது எதனை விலையாகக் கொடுத்து எதையெல்லாம் இழந்திருக்கிறோம்
என்கிற கேள்விகளை இந்த ஆக்கங்கள் முன்னிறுத்துகின்றன. போருக்குப் பிறகான ஈழ எழுத்துக்கள் ஒரு
இனம் கருவறுக்கப்பட்ட சரித்திரத்தைச் சொல்கின்றன. வீடும் ஊரும் நாடும் இழந்து உலகெங்கும்
அகதிகள் என்ற பெயரோடு அல்லாடி நிற்பவர்களுக்கு எஞ்சி நிற்பது மொழி மட்டுமே. அதைக்கொண்டுதான் உலகின் நீதியை, அறத்தை அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
விடுதலையின்
கடைசி நம்பிக்கையும் முள்ளிவாய்க்காலின் ரத்தச் சகதியில் மூழ்கிப் போன பின்பான
துயரக் கதைகளை உலகுக்கு உரத்தக் குரலில் சொல்பவை ஈழப் போருக்குப் பிந்தைய
எழுத்துக்கள். புதிய கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள் அழுத்தமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். இவை யாவுமே ஈழத்து வாழ்வை வெவ்வேறு
கோணங்களில் அணுகின என்பதே இவற்றின் தனித்துவம். புலிகளின் மீதான காட்டமான விமர்சனங்கள்
ஒருபுறம் வெளியான அதே சமயத்தில் விடுதலைப் போரின் புலிகளின் சமரசமற்ற தியாகத்தை
புத்தொளியுடன் சித்தரித்தவையும் வெளியாகின. ஈழப் போரின் பல்வேறு அம்சங்களை புதிய
திறப்புகளுடன் முக்கிய நாவல்கள் எழுதப்பட்டன. சயந்தன் ‘ஆதிரை’, குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’, ‘நஞ்சுண்ட காடு’, ‘அப்பால் ஒரு நிலம்’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ்’, தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ ஆகிய சில
குறிப்பிடத்தக்கன..
0
அகரமுதல்கவனின்
சிறுகதைகளும் குறுநாவல்களும் போருக்குப் பிந்தைய எழுத்துக்களின் தன்மைகளைக்
கொண்டவையே. ஏற்கெனவே வெளிவந்திருக்கும்
‘இரண்டாம் வெப்ரினன்ட்’,
’முஸ்தபாவை
சுட்டுக் கொன்ற இரவு’,
‘பான் கி மூனின்
றுவாண்டா’ ஆகியக் தொகுதிகளில் காணப்படும் கதைகள் போர்ச் சுழலின் உள்ளும் புறமுமாய்
உள்ளவற்றையே சித்தரித்திருந்தன.
ஐந்து குறுநாவல்களைக்
கொண்ட இத்தொகுப்பு ஈழத்தில் சிதைந்த தமிழ் வாழ்வின் உதிரநெடியடிக்கும் ஆவணங்கள். இந்த மூன்று குறுநாவல்களும் ஈழத்
தமிழர்களின் வாழ்வின் போருக்கு முன்பான நாட்கள், போர் தீவிரம் கொண்டிருந்த காலம், போர் முடிவுற்று அனைவரும் முகாம்களில்
அடைபட்ட காலம் என முக்கியமான மூன்று காலகட்டங்களைப் பின்புலமாகக் கொண்டவை.
ஈழ
மண்ணில் ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு உலகின் பிற பகுதிகளில்
உள்ள அதே வயது இளைஞர்களின் வாழ்வைப் போன்றதன்று. வீட்டுக்கொருவரை நாட்டுக்காக தாரை
வார்க்கவேண்டிய கட்டாயத்தில் இளைஞர்கள் பலரும் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக
புலிகளிடம் செல்லவேண்டியதானது.
இருக்க இடம், உடுக்க உடை, உணவு, கல்வி, காதல், திருமணம், குடும்பம் என்ற அடிப்படையான
எந்தவொன்றுக்கும் உத்தரவாதமில்லாத சூழல். எதிர்காலம்
என்ற ஒன்றைப் பற்றிய கனவுகளும்கூட உறுதிப்படாத அவலம். ஆனாலும் போரையோ அதன் மூர்க்கத்தையோ
அறியாதவை பசியும் காமமும்.
பயிற்சியில்
ஈடுபடமுடியாமல் மனம் யௌவனத்தின் லாகிரியில் தடுமாறியிருக்க முகாமிலிருந்து தப்பிச்
செல்பவன் கிராமத்தை அடைந்ததும் காணநேர்வது காதலியின் சிதிலமடைந்த வீடும் அவள்
புலிகளிடம் சென்று சேர்ந்துவிட்டாள் என்ற செய்தியுமே.
போரில்
தோற்று கைதியாகி சித்திரவதைக் கூடத்தில் வதைபடும் காலத்திலும் அவன் மனம் மீண்டும்
மீண்டும் தஞ்சமடைவது அவளுடன் கூடி மகிழ்ந்த அற்புதப் பொழுதுகளில்தான். மரணம் எப்போதும் தலைமேல் வாள்போல்
தொங்கிக் கிடக்கிறது.
மின்சாரக்
கம்பிகள் உடலைப் பதம் பார்த்து வலி மறத்துப் போனது. சக போராளி தூக்கிட்டுத் தொங்கி மரித்துப்
போன மின்விசிறியே அன்றிரவு தூக்கத்துக்கான சொற்ப காற்றையும் சுழற்றித் தருகிறது.
இரண்டு
சூழல்களிலும் ஊசலாடிக் கிடக்கும் போராளியின் கதையே ‘அகல்’. இவ்விரண்டிலும் அவன் உயிர்
பிழைத்திருக்கிறான்.
காதலியின்
அருகாமை தந்திருந்த சொற்ப கணங்களே அத்தனை துயரையும் தாங்கவல்ல மருந்தென
எஞ்சியுள்ளது.
இரண்டாம்
குறுநாவல் ‘நெடுநீர் முழை’.
ஈழத் தமிழ்
மண்ணின் விடுதலைக்காய் நடந்த நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்றை நிகழ்த்திக்
காட்டுகிறது. ஒவ்வொரு களமும் மரணத்தின்
முற்றமாகக்கூடும் எனத் தெரிந்தும் ‘பஞ்சு வைத்து’க் கொள்வதைப் பற்றி கவலைப்படாது
களமாடப் புறப்படும் போராளிகளின் நெஞ்சுரத்தைச் சொல்லும் கதை. விடாது கொட்டும் மழை. தேங்கிய நீரில் உடல் ஊர்ந்தே பலமணி
நேரங்கள் செல்லவேண்டிய கட்டாயம்.
தலைதூக்கினால்
எதிரிகளின் சன்னங்கள் துளைத்துச் சல்லடையாக்கும். மழை நீரூடே நெருப்புப் பொறிகளென பொழியும்
சன்னங்கள். அங்கங்கே வெடித்துச் சிதறும்
எறிகுண்டுகள்.. சகாவின் உடையோடு வழியும்
மூத்திரத்தின் வெப்பக் குமிழ்களை அறிந்து ‘வெந்நீ போடிறியாண்ணே’ என்று சிரிப்புடன்
விலகி ஊரும் கணங்கள்..
‘குப்பி கடிக்க
மாட்டேன். துடிச்சுக் கெடந்தா அவனிட்ட
விட்றாதே. நீயே சுட்டுரு’ என்று
புறநானூற்று வீரம் பேசும் நண்பன்.
ஒருகணமும்
யோசிக்க முடியாமல் வாக்கி டாக்கியில் தொடர்ந்து வரும் கட்டளை சமிக்ஞைகள். போர்க்களத்தின் துடிப்பான தருணங்களை
அச்சம் விதைக்கும் துல்லியத்துடன் நம் முன் நிறுத்துகிறது ‘நெடுநீர் முழை.’
அரசன்
குளம் ஈழத்தின் ஒரு எளிய கிராமம்.
அதற்கு
எழிலூட்டும் ஆமைக் குளம்.
கிராமத்தின்
எல்லாத் தேவைகளுக்குமான நீர் ஆதாரம் ஆமைக்குளமே.
போர்முனையில்
அகப்பட்ட பின்பு அரசன்குளமும் அதன் மனிதர்களும் அடையும் துயரச் சித்திரமே
மூன்றாவது குறுநாவலான ‘உலகின் மிக நீளமான கழிப்பறை.’ இராணுவ மிருகங்களின் கரங்களில் சிக்குண்டு
சின்னாபின்னமான பெண்களின் துயருக்கு இணையானது இருதரப்புக்குமிடையில் மாட்டிக்கொண்டவர்களது
அன்றாடங்களில் எதிர்கொண்ட துன்பங்கள். நந்திக்கடற்கரை
உலகின் மிக நீண்ட கழிப்பறையாக மாறி அங்கே துரட்டிகளைக் கொண்டு உடல்மூடி
கழித்திருந்த சகோதரிகளின் அவல வாழ்வு இந்த நூற்றாண்டு கண்டிராத கொடுமைகளில் ஒன்று. இத்தனை துயரும் கண்ணீரும் அவர்களது
நெஞ்சுரத்தை குலைத்துவிடவில்லை..
எதன்பொருட்டும்
சொந்த மண்ணுக்கான வேட்கையை அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. போருக்குப் பிறகான முகாம்களில் சிதறுண்டு
பின் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசர் குளத்துக்கு மீண்டு வருவோர்க்கு
குளத்தில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும்
குளத்தில் குளிக்கும் உரிமை வேண்டி போராடுகிறார்கள். எப்போதும்போல போராட்டும் கடும் கரம்கொண்டு
ஒடுக்க முயல்கிறது.
முடியாத வேளையில்
குளத்தை சுத்தப்படுத்துவதற்காக நீரை இறைத்து சேற்றை அள்ளுகிறார்கள். வெடிக்காத பெரியவொரு கிபீர் குண்டுடன்
ஏராளமானோரின் எலும்புகள் கிடைக்கின்றன. காணாமல்
போன பலரும் ஆமைக்குளத்தில் எறியப்பட்டிருக்கும் துயரக் கதை வெளியில் வருகிறது. கோயில்களை சிதைத்து மண்ணாக்கி
புத்தவிகாரங்களை எழுப்புவதும் ஈழத்தின் வேட்கை மிஞ்சியிருக்கும் இடத்தை
துப்புரவாகத் துடைத்தெறிவதும்தான் அவர்கள் அளிக்கும் மறுவாழ்வு. அரசன்குளம் இப்போதும் இருக்கிறது. ஆனால் ஆமைக்குளத்தில் யாரும் இப்போது
குளிப்பதில்லை.
0
அகரமுதல்வனின்
எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி
எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி
இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்
கரங்களில் சிதறுண்டு உயிர்த் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே அக் கதைகளில்
நாம் வாசிக்க முடிகிறது.
அக்குரல்
நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.
இதுகாறும்
நாம் போதித்த அறம் குறித்து அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது.
யாதும்
ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கை அதன் பொருளைப் பற்றி
நம்மிடம் கேட்டு நிற்கிறது.
தலைகுனிந்து
பேசாமலிருப்பதைத் தவிர நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்?
( உலகின் மிக நீண்ட கழிவறை, குறுநாவல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை, நூல்வனம் வெளியீடு,
பிப்ரவரி 2019 )
1998ம் ஆண்டு காலச்சுவடு இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் செய்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1989)யின் பெயரை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மீகம் என பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல் நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச் செய்தது. அதன் பிறகு செப்டம்பர் 1999 வெளியான ‘சொல் புதிது’ முதல் இதழின் முகப்பில் நித்ய சைதன்ய யதியின் படம் இடம்பெற்றது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் ‘சொல் புதிது’ இதழில் தொடர்ந்து வெளியாயின. ‘நித்யா ஆய்வரங்கு’, ‘காவிய முகாம்’ உள்ளிட்ட இலக்கிய அரங்குகள் பலவும் ஜெயமோகனின் ஒருங்கிணைப்பில் உதகை நாராயண குருகுலத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஜெயச்சந்திரன்
என்ற இயற்பெயர் கொண்ட நித்ய சைதன்ய யதி நடராஜ குருவின் மாணவர். தத்துவம், புராதன தத்துவம்,
உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்.
கொல்லம் எஸ்.என் கல்லூரியில் உளவியல் துறைத் தலைவராகவும், சென்னை விவேகானந்தா கல்லூரியில்
தத்துவத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், கொழும்பு வித்யோதயா பல்கலைக்கழகத்தில் தத்துவப்
பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் புகழ்பெற்ற கல்லூரிகளில் சிறப்புப்
பேராசிரியராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார். ஹவாய் பல்கலைக்கழகத்தில்
கவிதைத்துறை சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
நித்ய
சைதன்ய யதி கவிஞர், ஓவியர், எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும்
மலையாளத்தில் ஐம்பது நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான
பல அறிமுக நூல்களையும் மலையாளத்தில் எழுதியுள்ளார். இந்திய சிந்தனை மரபையும் மேற்கத்திய
சிந்தனை மரபையும் ஆழக் கற்றவர். அத்துடன் கலை, இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும்
பார்வையைக் கொண்டிருந்தவர். இவை அனைத்தையும் கவித்துவமாக அணுகுவது அவரது சிறப்பு. ராபர்ட்
ஃபிராஸ்ட், எமிலி டிக்கன்ஸன் இருவரும் அவருக்குப் பிடித்தமான கவிஞர்கள். அவரது அலமாரியில்
கவிதை நூல்களுக்கு நடுவே சலீம் அலியின் பறவைகள் பற்றிய புத்தகமும் ஐன்ஸ்டீனின் தேற்றங்கள்
அடங்கிய நூலும் ‘குட்டி இளவரச‘னும் ‘அற்புத உலகில் ஆலிஸு’ம் இடம்பெற்றிருக்கும். அவரைப்
பொறுத்தவரை அவையும்கூட கவிதைகளே. திருக்குறள் அவருக்குப் பிடித்தமான தமிழ்க் கவிதை
நூல்.
யதி
அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நுட்பமான புன்னகையை எப்போதுமே அவரது கண்களில் பார்க்கமுடியும்.
‘குருகுலம் சிரிப்புடன் திகழவேண்டும்’ என்பது அவரது கூற்று. ‘நகைச்சுவை இல்லாவிட்டால்
தத்துவம் உயிரிழந்துவிடும்’ என்பது அவரது நம்பிக்கை.
நித்ய
சைதன்ய யதியைக் குறித்த விரிவான அறிமுகத்துக்கான நூலாக அமைந்திருக்கிறது, அண்மையில்
தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி வெளியிட்டிருக்கும் ‘யதி – தத்துவத்தில் கனிதல்’.
2004ம் ஆண்டில் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ வெளியிட்ட ‘அனுபவங்கள் அறிதல்கள்’ நூலின் விரிவாக்கப்பட்ட
பதிப்பாக அமைந்துள்ளது இது.
‘சொல்
புதிது’, ‘சுபமங்களா’ உள்ளிட்ட இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான யதியின்
கட்டுரைகளும் நேர்காணலும் அவரது சுயசரிதையின் சில பகுதிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
யதியின்
மாணவரான சௌகத் அலி தொகுத்திருக்கும் ‘சுயசரிதை’ நூலின் சில பகுதிகளை ஆர்.சிவக்குமாரும்
பாவண்ணனும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செஷான், ஷகால், கிளாட் மோனே ஆகியோரின் ஓவியங்கள்
குறித்த கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். ஜெயதேவரின் ‘கீத கோவிந்த’த்தை
அடிப்படையாகக் கொண்ட ‘மானுட உணர்வுகள்’ என்ற கட்டுரையை எம்.கோபாலகிருஷ்ணன் மொழியாக்கம்
செய்திருக்கிறார். நடராஜ குருவுடனான அவரது அனுபவங்களை விவரித்திருக்கும் கட்டுரையை
தமிழில் தந்திருக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். தொல்படிமங்கள், விடுதலையின் மெய்யியல், இருப்பும்
அறிதலும் உள்ளிட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கும் ஜெயமோகன் இந்த நூலுக்கு விரிவான
குறிப்பிடத்தக்க ஒரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.
நித்ய
சைதன்ய யதி குழந்தைகளின் மேல் அபார பிரியம் கொண்டவர். குழந்தைகளுக்காக எழுதுவதிலும்
ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டுபவர். மலையாளத்தில் குழந்தை இலக்கிய நூல்களை
எழுதியிருக்கிறார். அவ்வாறான நூல்களில் ஒன்று ‘சின்னச் சின்ன ஞானங்கள்’. உதகை நாராயண
குருகுலத்தில் நித்யாவை சந்திக்க சென்றபோது இந்த நூலின் வடிவமைப்பையும் நேர்த்தியையும்
கண்டு வியந்த யூமா வாசுகி எதைப் பற்றியது இந்தப் புத்தகம் என்று நண்பர்களிடம் விசாரித்துத்
தெரிந்துகொண்டார். அங்கிருந்துதான் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பணித் தொடங்கியது.
முதன்முதலாக அவர் மொழிபெயர்க்க விரும்பிய ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ இப்போது வெளிவந்துள்ளது.
குழந்தைகளுக்கு
சொல்ல விரும்பிய சில விஷயங்களை மிகச் சுருக்கமாகவும் ருசிகரமாகவும் எழுதியிருக்கிறார்
யதி. இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளைவிட அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும்
கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகம் என்பது முக்கியமானது. வீட்டு நூலகத்தின் தேவை, வாசிப்புப்
பழக்கம், மரணத்தை எப்படிப் புரிந்துகொள்வது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான அரங்கங்கள்,
கலாச்சாரங்கள், சிரிப்புப் படங்கள், கணிதம் போன்று பல்வேறு விஷயங்களையும் அவரது அனுபவங்களின்
பின்னணியில் எளிமையாகச் சித்தரித்திருக்கிறார் யதி. இவற்றை சுவை குன்றாமல் செறிவுடன்
மொழிபெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி. தேவையான இடங்களில் தமிழுக்கு பொருந்தும் வகையில்
பட்டியல்களையும் தந்திருக்கிறார்.
கவித்துவமும்
அழகும் நிறைந்த பொருத்தமான பல படங்கள் இந்த இரண்டு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. வடிவமைப்பு,
அச்சாக்கம், தரம் என எல்லா வகையிலும் மிகுந்த நேர்த்தியுடனும் அழகுடனும் அமைந்துள்ள
இந்த இரண்டு நூல்களும் நித்ய சைதன்ய யதியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தக்கூடிய தகுதியைக்
கொண்டுள்ளன.
(
யதி-தத்துவத்தின் கனிதல், நன்கொடை ரூ.500/-,
சின்னச்
சின்ன ஞானங்கள், நன்கொடை ரூ.120/-
வெளியீடு
– தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி )
இரண்டு மாத இடைவெளியில் இந்த அரங்கில் நடைபெறும் இரண்டாவது விழா இது. விஜயா வாசகர் வட்டத்தின் விருதுகள் வழங்கப்பட்டன. இப்போது மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருது. சிறப்பான ஏற்பாடு, சந்தோஷமாயிருக்கு என்று அண்ணாச்சியிடம் சொன்னால் அவர் அதில் திருப்தியடைய மாட்டார். ‘இன்னும் செய்யணும் கோபால்’ என்று அடுத்தவொரு திட்டத்தைப் பற்றிக் கூறுவார். வேலாயுதம் அவர்களுக்கு இதுவும் போதாது. மாதம் ஒரு விழாவை நடத்தினால்கூட அவருக்கு சந்தோஷம்தான்.
புத்தகங்களைக் கொண்டாட வேண்டும். எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும். அதன் வழியாக வாசகர்களையும் மகிழ்வித்துக் கொண்டாட வேண்டும். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியும் நிறைவையும் தரும்.
என்றும் மாறாத உற்சாகத்துக்கு ‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்தான்.
எனவே இது ‘பெரிதினும் பெரிது’ கேட்பவர்களுக்கான விழா.
கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகளைப் போலவே முக்கியமானவை மொழிபெயர்ப்புகளும். இன்று தமிழில் எழுதப்படும் புனைவுகளுக்கு சமமான அளவில் மொழியாக்கங்கள் செய்யப்படுகின்றன. தரமான விதத்தில் வெளியிடப்படுகின்றன. மொழியாக்கங்களுக்கான வரவேற்பு மகிழ்ச்சிதரும் விதத்தில் உள்ளது.
‘திசை எட்டும்’ இதழ் மொழியாக்கத்துக்கெனவே வெளிவருகிறது. குறிஞ்சிவேலன் தொடர்ந்து பல ஆண்டுகளாக அதை அர்ப்பணிப்புடன் நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் மொழியாக்கங்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.
மொழியாக்கத்தின் தேவையையும் மதிப்பையும் கருத்தில்கொண்டே சாகித்ய அகாதமி அதற்கென ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மொழிக்கும் மொழிபெயர்ப்பு விருதுகளை வழங்குகிறது.
இதெல்லாம் போதாது, மொழிபெயர்ப்பாளர்களை அங்கீகரிக்கவேண்டும், கௌரவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த விருதை வழங்க விஜயா வேலாயுதம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
0
தமிழில் எழுதப்பட்ட படைப்புகளை வாசித்தால் போதாதா? மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்கவேண்டும்? என்ற கேள்வி எப்போதும் உண்டு.
ஒன்று, ஒரு தனி மனிதனின் அனுபவ எல்லை என்பது மிகக் குறைவானது. எழுபது வயது வரை வாழ்ந்தாலும்கூட அவனது வாழ்க்கை அனுபவங்களுக்கு ஒரு எல்லை உண்டு. அவனது கட்டுக்கயிறு அனுமதிக்கும் அளவே அவனால் சுற்றிவர முடியும். எழுபது எண்பது வயது வாழ்ந்த பின்னும்கூட கடற்கரையை கண்ணால் பார்க்காத எத்தனையோ பேர் உண்டு. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டாதவர்கள் உண்டு.
இலக்கியமும் வாசிப்பும் அந்த எல்லையைக் கடக்க உதவுகின்றன.
ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் வெவ்வேறானவை. ஒன்றுபோல் இன்னொன்றில்லை. ஒருவனின் அனுபவம் இன்னொருவனுக்கு பாடம். மொழிபெயர்ப்பின் வழியாகவே நமக்கு அன்னியமான நிலத்திலும் மொழியிலும் வாழும் ஒருவரது அனுபவங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு மொழிபெயர்ப்பின் வழியாக அனுபவங்கள் பகிரப்படும்போதுதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற உணர்வு ஏற்படுகிறது.
நமது ஆயுளும் வாழிடமும் அனுபவ வெளியும் மிகவும் சுருங்கியது. எல்லைக்குட்பட்டது. உப்புக் கடலை நக்கிக் குடிக்க முயலும் பூனைகள் நாம்.
நம்மால் எத்தனை தொலைவு எம்பிக் குதித்தாலும் கிட்டும் அனுபவம் சொற்பம்தான். நாம் அறிந்த நிலவெளியை வாழ்க்கையை மட்டுமே நமது மொழி இலக்கியத்தின் வழியாக அறிய வாய்ப்பிருக்கிறது. நம் கட்புலனுக்கு எட்டாத உலகின் பிரமாண்டத்தையும் அதன் வெவ்வேறு நிலவெளிகளையும் இலக்கியங்களே காட்சிப்படுத்துகின்றன.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பெற்றுக் கொள்வதற்கும் தருவதற்கும் நிறைய உண்டு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாபசான் உள்ளிட்ட மேற்கத்திய சிறுகதை மேதைகளின் கதைகளை புதுமைப்பித்தன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்தனர். தாகூரின் ஆக்கங்களை மொழிபெயர்த்தார் பாரதி. அதன் பிறகாகவே தமிழில் நவீன சிறுகதைகள் எழுதப்படலாயின.
தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பாளிகள் பலரும் மொழிபெயர்ப்பின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் தம் சொந்த படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார்கள். பாரதி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பிரமிள், சுந்தரராமசாமி உள்ளிட்ட அனைத்து இலக்கிய படைப்பாளிகளும் தொடர்ந்து மொழியாக்கங்களை செய்துள்ளனர். புதுமைப்பித்தன் தனது ஆக்கங்களுக்கு இணையாக ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.
க.நா.சு தனது எழுத்துக்களுக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும் மொழிபெயர்ப்புக்காகத் தந்ததே அதிகம். வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்காகவே செலவிட்டுள்ளார்.
க.நா.சு இல்லாது தமிழில் அன்று நூட் ஹாம்சனின் (Knut Hamsun) பசியையும், ஸெல்மா லாகெலெவ்வின்
(Selma Lagerlöf) மதகுருவையும், அன்புவழியையும், வில்லியம் ஸரோயனின் (William Saroyan) மனுஷ்ய நாடகத்தையும் நாம் வாசித்திருக்க முடியாது. ஐரோப்பிய நாவல்களைக் குறித்த அறிமுகங்கள். சுருக்கங்கள். மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தளங்களில் தமிழில் நாவல் என்கிற இலக்கிய வடிவம் குறித்த அறிமுகத்தையும் அக்கறையையும் வலியுறுத்திய க.நா.சுவின் உழைப்பே இன்றைய தமிழ் நாவல்களின் எழுச்சிக்கு உந்துதலாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்க வேண்டும்.
துளசி ஜெயராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ராம்நாத், டி.எஸ்.சொக்கலிங்கம், த.நா.குமாரசாமி போன்றோர் பிறமொழிச் செல்வங்களை தமிழில் தருவதற்காகவே பாடுபட்டனர்.
எழுத்தையே நம்பி வாழ்ந்த ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகவே வங்காளத்திலிருந்து ஏராளமான மொழியாக்கங்களை முனைந்து செய்தனர்.
பிரம்மராஜன் மீட்சியிலும், கோணங்கி கல்குதிரையிலும் பிறமொழி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் தந்தனர்.
எம்.எஸ் என்று அறியப்படும் எம்.சிவசுப்பிரமணியம் கிழவனும் கடலும் உள்ளிட்ட முக்கிய படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்தார்.
ஆர்.சிவக்குமார், ஜி.குப்புசாமி போன்றவர்கள் மொழியாக்கங்களை மட்டுமே செய்து வருகிறார்கள்.
புவியரசு, சிற்பி உள்ளிட்ட மூத்த கவிஞர்களும் மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
கன்னடத்திலிருந்து பாவண்ணனும் மலையாளத்திலிருந்து சுகுமாரன், குளச்சல் யூசுப், நிர்மால்யா, யூமா வாசுகி உள்ளிட்டோரும் இந்தியாவின் பிறமொழி இலக்கியப் படைப்புகளை தமிழில் தருகிறார்கள்.
தமிழின் நேரடி படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகள் இன்று வெளியாகின்றன. சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் மட்டுமே மொழியாக்கங்களை வெயிட்ட சூழல் இன்றில்லை. தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் அனைத்துமே இன்று மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றன.
மூன்றாவதாக, மொழிபெயர்ப்பின் வழியாகத்தான் நம்மால் இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களை அறிந்துகொள்ள முடிகிறது. அண்டை மாநிலத்தவர்களான பஷீரையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும் பைரப்பாவையும் சிவராம் கரந்தையும் கிரீஷ் கர்நாட்டையும் நம்முடைய எழுத்தாளர்களாக ஆக்கியவை மொழியாக்கங்களே.
‘நாவல் சக்கரவர்த்தி’ என்று கொண்டாடப்படும் பிரேம்சந்தின் ‘கோதான்’ போன்ற ஒரு நாவலை சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்திருக்காவிட்டால் அதை நாம் வாசித்திருக்க முடியாது.
மலையாளத்திலிருந்து பி.கே.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கட்டும்’ நாவலை ஆ.மாதவனும், எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் இட’த்தை குறிஞ்சிவேலனும் தமிழில் தந்திருக்காவிட்டால் அந்த நாவல்களை நாம் அறிந்திருக்கமாட்டோம்.
எஸ்.எல்.பைரப்பாவின் ‘பருவம்’ நாவலையோ ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலையோ எப்படி வாசித்திருக்க முடியும்.
‘ஆரோக்கிய நிகேதனம்’ இன்றளவிலும் இந்தியாவில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் முதன்மையான ஒன்று. தாராசங்கர் பானர்ஜி வங்காளத்தில் எழுதிய அந்த நாவலை த.நா.குமாரசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.
வங்கத்திலும் கன்னடத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட இந்த நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்திய நாவல்களாக புகழ்பெற்றன. அவ்வாறு இல்லாமல் போயிருந்தால் இவை அந்தந்த மொழிகளில் மட்டும் அறியப்பட்ட பிராந்திய நாவல்களாக நின்று போயிருக்கும்.
இந்திய இலக்கியத்துக்கு மட்டுமல்ல, உலக இலக்கியத்துக்குமான வாசலும் வழியும் மொழிபெயர்ப்புதான்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு ராதுகா பதிப்பகமும் சோவியத் முன்னேற்றப் பதிப்பகமும் நமக்குக் கொண்டு வந்த ரஷ்ய இலக்கிய நூல்களை நம்மில் பலரும் அறிவோம். எத்தனை புத்தகங்கள். உயர்ந்த தரத்தில் பிரமாதமான தாளில் குறைவான விலையில் தரப்பட்ட புத்தகங்கள். மக்ஸிம் கார்கியையும் துர்கனேவையும் செகாவையும் நமக்கு அறிமுகப்படுத்தின.
தல்ஸ்தோய் எனும் மாமேதையை, அன்னா கரீனாவையும் போரும் அமைதியையும் ஆங்கிலம் அறியாதவர்கள் படித்திருக்கவே முடியாது.
ஆன்டன் செகாவ் எனும் சிறுகதை மேதையை எப்படி நம்மால் வாசித்திருக்க முடியும்.
கார்சியா காப்ரியல் மார்க்வெஸ் எனும் ஒரு கலைஞனையும் அவனது அபாரமான கதைகளையும் மொழிபெயர்ப்பின்றி நம்மால் அறிந்துகொண்டிருக்க முடியாது. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ போன்ற ஒரு நாவலையும் STRANGE
PILGRIMS போன்றவொரு சிறுகதைத் தொகுப்பையும் நம்மால் வாசித்திருக்க முடியாது.
நல்ல மொழிபெயர்ப்புகளே உலகின் பல நல்ல எழுத்தாளர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச் சின்னத்தை சி.மோகன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜப்பானிய எழுத்தாளர்களான ஹராகி முராகாமி, யாசுநேரி கவபட்டா ஆகியோரின் கதைகள் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். பண்பாட்டையும் மொழியையும் இலக்கியத்தையும் அளவிட, அறிந்துகொள்ள உதவும் துலாக்கோல் மொழிபெயர்ப்பு ஆகும்.
இன்னொரு மொழியின் சிந்தனைப் போக்கை மாற்றங்களை கண்டுணர்ந்து அதைப் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் நம்முடைய சிந்தனையிலும் பார்வையிலும் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புண்டு.
இரண்டு முக்கிய மாற்றங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். முதலாவது பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்பு. இரண்டாவது தமிழ் இலக்கியம் பிறமொழியில் உருவாக்கிய மாற்றம்.
பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்புக்கு உதாரணமாக தலித் இலக்கியத்தைச் சொல்லலாம். தலித் இலக்கியம் பற்றிய எண்ணமும் சிந்தனையும் தமிழ் வாழ்வில் எழுத்தில் இருந்தபோதும், அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணனு’ம், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரி’யும் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்த பின்பே அந்தச் சொல்லாடல்களும் உரையாடல்களும் வலுப்பெற்றன. தலித் இலக்கியம் தமிழில் வலுப்பெற அத்தகைய மொழிபெயர்ப்புகள் காரணிகளாகின.
தமிழ் இலக்கியம் பிறமொழி ஒன்றின் மேல் செலுத்திய தாக்கத்துக்கு உதாரணமாக நவீன மலையாளக் கவிதைகளைக் குறிப்பிடலாம். 1990களின் இறுதி வரையிலும் பெரும்பகுதி ஓசைநயத்துடன் பாடப்படும் தன்மையைக் கொண்டிருந்தது மலையாளக் கவிதை. … ம் ஆண்டு குற்றாலத்தில் தமிழ் மலையாள கவிதைப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்தார் ஜெயமோகன். தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், கலாப்ரியா, க.மோகனரங்கன், ஆகியோரும் மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ராமன், அன்வர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த பட்டறைக்குப் பிறகே நவீன கவிதைகள் அடங்கிய புதுநானூறு என்ற தொகுப்பை மலையாளத்தில் தந்தார் ஆற்றூர் ரவிவர்மா. மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கவிதைகள் மலையாள நவீனக் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மலையாளக் கவிதை தமிழின் நவீனக் கவிதை அம்சங்களை உள்வாங்கி திசைமாறியது.
மொழியாக்கங்களை தகுதிக் குறைவான படைப்பாக அணுகும் மனநிலையிலிருந்து இப்படியொரு கேள்வி எழுமானால் வருத்தத்துக்குரியது. உண்மையில் மொழியாக்கம் இல்லாதுபோயிருந்தால் அல்லது அவற்றை தகுதிக் குறைவானவையாக ஒதுக்கியிருந்தால் நம் வாசிப்பு விகாசம் பெற்றிருக்க முடியாது. தமிழ் இலக்கியமும் புதிய உயரங்களை அடைந்திருக்க முடியாது.
0
உண்மையில் மொழிபெயர்ப்பது பெரும் சவாலான காரியம். மூல நூலை ஆழமாக வாசித்து அதை உள்வாங்கி அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் வாக்கியத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். எழுதப்பட்ட மொழியின், நிலத்தின், பண்பாட்டின் பின்னணியைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம்.
இரண்டு மொழிகள் தெரியும் என்பதற்காக மொழிபெயர்த்துவிட முடியாது.
தமிழில் பிழையின்றி ஒழுங்காக எழுதத் தெரியவேண்டும். மொழிபெயர்க்கப்படும் ஒரு படைப்பு தமிழ் வாசகன் வாசிக்கும் வகையில் தமிழின் மொழி இலக்கணத்துடன் மொழிபெயர்க்கப்படவேண்டும். தமிழ்த்தனத்துடன் இருக்கவேண்டும்.
ஒரு நாவலையோ சிறுகதையையோ மொழிபெயர்த்து முடிக்கும்போது ஏற்படும் அயர்ச்சியும் சோர்வும், இதற்கு பதிலாக சுயமாகவே ஒரு நாவலை, சிறுகதையை எழுதிவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்.
இத்தனைக்குப் பிறகு மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் வெளியான பிறகு யாராவது அதைப் படித்தார்களா? என்று தெரியாமலே கிணற்றில் போட்ட கல் போன்று ஆழமான ஒரு மௌனம் நிலவும்போது எதற்கு இந்த வேலை என்ற மனச்சோர்வுதான் மிஞ்சும்.
ஒருவகையில் தேங்க்லெஸ் ஜாப்.
இதெல்லாம் இவர்களுக்குத் தெரியும். மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து மொழிபெயர்க்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கைக் கூடியபடியே உள்ளது. இன்று இணைய இதழ்களின் வரவால் மொழிபெயர்ப்புக்காக தேவைகள் கூடியுள்ளன. பெண்கள் பலரும் மொழியாக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.
லதா அருணாச்சலம். இல.சுபத்ரா, கார்குழலி, சசிகலா பாபு,
கயல், ஸாஹிதா, ஜான்சிராணி என்று நீண்ட ஒரு பட்டியல் உண்டு.
இவர்களையெல்லாம் அங்கீகரிக்கும்விதமாகத்தான் இன்று இந்த மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
0
கே.நல்லதம்பி
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘காச்சர் கோச்சர்’ நாவலை வாங்கினேன். தவறவிடக் கூடாத நாவல் என்று நண்பர் பரிந்துரை செய்திருந்தார். விவேக் ஷான்பாக்கின் கன்னட நாவல். முக்கியமான நாவல். வாசித்து முடித்த பின் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்தேன். கே.நல்லதம்பி. இதுவரை அறிமுகமாத பெயர். கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதென்றால் பாவண்ணன்தான். புதிதாக ஒருவர் மொழிபெயர்த்திருக்கிறார், அதுவும் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார் என்பதால் பாவண்ணனை அழைத்துப் பேசினேன். நல்லதம்பி அவர்களைக் குறித்துச் சொன்னார்.
நல்லதம்பி அவர்களும் ‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்கொண்டவர்.
காச்சர் கோச்சர் வெளியானது 2019ம் ஆண்டு. இப்போது 2022. இந்த மூன்று ஆண்டுகளில் நல்லதம்பி அவர்கள் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூல்களின் எண்ணிக்கை 17. யாத்வேஷம் என்ற புகழ்பெற்ற நாவல், மயில் புராணம் எனும் பிரிவினைக் கதைகள் ( இந்த்ஜார் ஹூசேன் ), புத்த மணியோசை, மகிழம்பூ மணம், இதிகாசம் போன்ற சிறுகதைத் தொகுப்புகள், கேலிச் சித்திர வரலாறு, அம்ரிதா நினைவுகள் போன்ற புனைவல்லாத நூல்கள் எனத் தொடர்ந்து அவரது மொழியாக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இது ஒரு பக்கம். இந்த விருது இந்த மொழியாக்கங்களுக்காக அவருக்கு வழங்கப்படவில்லை. தமிழிலிருந்து கன்னடத்துக்கு அவர் செய்திருக்கும் மொழியாக்கங்களுக்காகவே இந்த விருது.
ஆம். தமிழிலிருந்து கன்னடத்துக்கு நூல்களை இவர் மொழிபெயர்த்திருப்பதுதான் சிறப்பு. சு.ரா வின்
‘புளியமரத்தின் கதை’ தமிழில் வெளியானது .. ம் ஆண்டு. .. வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழின் புகழ்பெற்ற தி.ஜாவின் சிறுகதைகள், கன்னடத்துக்கு இப்போதுதான் போயிருக்கின்றன. ‘கண்டாமணி’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்த்திருக்கிறார். பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’,‘மாதொரு பாகன்’, ‘பூக்குழி’ மூன்று நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். காந்தியை கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ‘பிறகொரு இரவு’
கன்னட வாசகர்களிடையே பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, காந்திய வழியில் பாவண்ணனின் சத்தியத்தின் ஆட்சி கட்டுரைத் தொகுப்பு, ப.கண்மணியின் ‘இடபம்’, வண்ணநிலவன், அ.வெண்ணிலா, கலைச்செல்வி ஆகியோரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு கன்னட இதழ்களில் வெளிவந்துள்ளன.
இது ஒரு முக்கியமான நிகழ்வு. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் அளவுக்கு தமிழ் படைப்புகள் மற்ற மொழிகளுக்கு செல்வதில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வந்திருக்கிறது. கே.நல்லதம்பி அந்தக் குறையை, கன்னட மொழி அளவில் நீக்கியிருக்கிறார். குறிப்பாக, நவீன இலக்கிய ஆக்கங்களை அவர் உடனுக்குடனாக கன்னடத்துக்கு மொழிமாற்றம் செய்யும்போது இன்றைய தமிழ் இலக்கியத்தின் தரத்தையும் புதிய முயற்சிகளையும் பிறமொழியினர் அறிந்துகொள்ள முடிகிறது.
அத்தனை எளிதான காரியமல்ல இது. எனக்கு இந்தி தெரியும். இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பது முடியாது. ஏனெனில், இந்தி எனது புழங்கு மொழி அல்ல. அன்றாடப் புழக்கத்தில் அல்லாத ஒரு மொழியில் எழுதுவது சாத்தியமில்லை. கே.நல்லதம்பிக்கு கன்னடம் புழங்குமொழி. தமிழும். எனவேதான் அவரால் இரண்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய முடிகிறது.
திரு.கே.நல்லதம்பிக்கு இப்போது வயது
60. கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இத்தனை நாள் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வி எழும்.
சில மாதங்களுக்கு முன்பு மாலைவேளையில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. உறவினர் வீட்டுக்கு வந்திருந்தவருக்கு இரவு பதினோரு மணிக்குத்தான் ரயில். நிறைய நேரமிருந்தது. வாய்ப்பிருந்தால் சந்தித்துப் பேசலாம் என்று அழைத்தார். ரயில் நிலையம் அருகில் ஒரு உணவகத்தில் சந்தித்தோம். இரண்டு மணி நேரம் உரையாடினோம்.
அப்போது அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட செய்திகள் மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நல்லதம்பி மைசூரில் பிறந்தவர். பூர்விகம் தமிழ்நாடு. தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக 35 வருடம் பணி.
ஹைதராபாத்தில்தான் வசித்திருக்கிறார். இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். எனவே, தமிழ், கன்னடம் தவிர தெலுங்கு, இந்தி, மராட்டி, ஆங்கிலம் என்று இன்னும் பல மொழிகளிலும் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும்.
ஓய்வு பெற்ற பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார்.
ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலாளராக 35 ஆண்டுகள் பணியிலிருந்த கே.நல்லதம்பியை அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் வாடிக்கையாளர்களில் சிலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் இந்தப் பணியின் காரணமாக தமிழிலும் கன்னடத்திலும் பலருக்கும் அவர் அறிமுகமாகியுள்ளார். கன்னட தினசரிகளில் அவரது புகைப்படங்கள் வெளியாகின்றன.
தமிழில் திசை எட்டும் விருது, ஸ்பேரோ விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். கன்னடத்தில் குவெம்பு விருது … ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.
இலக்கியம் நமக்கு சோறு போடாது என்பது யதார்த்தம்.
நம்மில் பலரும் நமது வாழ்வின் பெரும்பகுதியை நமது பொருளாதாரத் தேவைகளுக்காக ஏதேனும் ஒரு வேலையில் செலவிட நேர்கிறது. ஓய்ந்த பொழுதில்தான் நமக்கு விருப்பமான இலக்கியப் பணிகளில் ஈடுபட வாய்க்கிறது. முழு நேர இலக்கியப் பணி என்பது தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை. கே.நல்லதம்பி அவர்களுக்கு இந்தத் தெளிவு இருந்திருக்கிறது. எனவேதான், பணிக்காலம் முழுக்க அவர் இந்தத் திசையையே எட்டிப் பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற பிறகு இலக்கியத்துக்கு வருகிறார். பொதுவாக ஓய்வு பெற்ற பிறகு ஏற்படும் சோர்வுக்கு இடம் தராமல் மிகத் தீவிரமாய் இப்பணியில் ஈடுபடுகிறார். அதன் பலன்தான் இத்தனை நூல்கள், அங்கீகாரங்கள், விருதுகள்.
மொழிபெயர்ப்பதோடு நின்றுவிடவில்லை. வாசிப்பு அனுபவம் அவருடைய புனைவுத் திறனையும் தூண்டிவிட்டுள்ளதன் பலனாக ‘அத்தர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழிலும், கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் இக்கதைகளை எழுதியிருக்கிறார் கே.நல்லதம்பி. இதுவே ஒரு புதுமையான முயற்சி. புதிய அனுபவங்களைத் தரக்கூடிய கதைகள்.
கன்னடத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
நல்லதம்பி அவர்களின் மொழியாக்கம் மிக இயல்பானது. சிக்கலற்றது. தமிழ் வாசகர்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு எழுதப்படுவது. கன்னடத்திலும் அவ்வாறுதான் இருக்கவேண்டும்.
தமிழுக்கும் கன்னடத்துக்குமான ஒரு வலுவான பாலமாக விளங்கும் வகையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் மொழியாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் கே.நல்லதம்பி அவர்களும் பெரிதினும் பெரிது கேட்பவர். செயற்கரிய செயல்களைச் செய்பவர். எனவே, இந்தப் பரிசுக்கு மிகவும் தகுதியானவர். தொடர்ந்து நல்ல பல நூல்களை தமிழிலிருந்து கன்னடத்துக்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் அவர் தரவேண்டும்.
0
எம்.ஏ.சுசீலா
விஜயா வேலாயுதம் அய்யாவைப்போல, நல்லதம்பி அவர்களைப்போல ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பதில் பிடிவாதமாயுள்ள இன்னொருவர் எம்.ஏ.சுசீலா.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முன்பே குறிப்பிட்டதுபோல ஆங்கிலம் வழியாக தமிழுக்கு மொழியாக்கம் செய்பவர்களின் பட்டியல் மிக நீண்டது. அப்படியிருக்க இவரை ஏன் இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்?
பெரிதினும் பெரிது கேட்கும் இவரது குணந்தான்.
பத்து பக்கம், நூறு பக்கமுள்ள சிறுகதைகளையோ நாவல்களையோ இவர் மொழிபெயர்ப்பது கிடையாது. ஐநூறு பக்கம், ஆயிரம் பக்கம் என்றால்தான் மொழிபெயர்ப்பார்.
ரஷ்ய பேரிலக்கிய நூல்களை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட காலத்தில் தமிழ் மொழியாக்கங்கள் அத்தனை சுலபத்தில் கிடைக்காது. நூலகங்களில் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். என் சி பி எச் வெளியிட்ட ஆங்கில நூல்களையே படிக்க முடிந்தது. குறிப்பாக தஸ்தாவெஸ்கியின் படைப்புகள் எவையும் தமிழில் வெளிவந்திருக்கவில்லை. ‘வெண்ணிற இரவுகள்’ சிறுகதைத் தொகுதி மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது.
இன்று நிலைமை அவ்வாறு இல்லை.
ரஷ்ய பேரிலக்கியங்களை தமிழில் அதிக அளவில் வாசிக்கக் கிடைப்பதற்கு முக்கியமான காரணம் எம்.ஏ.சுசீலாதான். தஸ்தாவெஸ்கியின் எல்லா எழுத்துகளும் இன்று தமிழில் உள்ளதென்றால் அதற்கும் காரணம் எம்.ஏ.சுசீலாதான். 1000 பக்கங்களுக்கும் மேலுள்ள ‘குற்றமும் தண்டனையும்’, 800 பக்கங்களைக் கொண்ட ‘அசடன்’, தஸ்தாவஸ்கியின் புகழ்பெற்ற ஆக்கங்களான ‘நிலவறைக் குறிப்புகள்’, ‘இரட்டையர்’, ‘வெண்ணிற இரவுகள்’ என எல்லாவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். ‘தஸ்தாவெஸ்கியின் தமிழ் குரல்’ என்று இவரைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதுதான்.
இது எளிமையான பணியன்று. ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற ஒரு நாவலை மொழியாக்கம் செய்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம். ஆயிரக்கணக்கான பக்கங்கள். எண்ணற்ற கதாபாத்திரங்கள். பக்கம் பக்கமாக நீளும் மனவோட்டங்கள். விவாதங்கள். எண்ணமும் ஆற்றலும் ஒன்றுகூடி ஒவ்வொரு நாளும் ஊக்கம் குறையாமல் சோர்வடையாமல் எழுதினால் மட்டுமே சாத்தியம். சுசீலா அதை சாதித்திருக்கிறார்.
தஸ்தாவெஸ்கியின் மீது பெரும் பித்து இருந்தாலொழிய இப்படிப்பட்ட பேய்த்தனமாக வேலை பார்க்க முடியாது.
ருஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த எழுத்துகளை ஆங்கிலத்தில் பலர் மொழிபெயர்த்துள்ளார்கள். ஏதேனும் ஒரு ஆங்கில மொழியாக்கத்தை வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கவில்லை சுசீலா. ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் குறைந்தபட்சம் மூன்று மொழியாக்கங்களை ஒப்புநோக்கிய பின்பே தமிழில் அதை மொழி மாற்றம் செய்திருக்கிறார்.
நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் தஸ்தாவெஸ்கியின் ஆவிதான் சுசீலாவின் மீது இறங்கியிருக்கவேண்டும்.
எம்.ஏ.சுசீலா காரைக்குடியில் பிறந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற பின் மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இன்று தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டிருக்கிறார் சுசீலா. அவர் ஒரு சிறுகதையாசிரியர். 1979ம் ஆண்டு அவரது முதல் சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியிருக்கிறார். நான்கு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.
‘யாதுமாகி’ என்றொரு நாவலை எழுதியுள்ளார்.
ஆறு கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
அவருடைய சிறுகதைகளோ நாவலோ கட்டுரைகளோ பெற்றுத் தராத ஒரு அடையாளத்தை அவரது மொழியாக்கங்கள் பெற்றுத் தந்துள்ளன. எம்.ஏ.சுசீலா என்றொரு ஆற்றல் மிக்க பெண்மணியை, அவரது திறனை நமக்குக் காட்ட அவர் தாஸ்தாவெஸ்கி எனும் மேதையின் எழுத்தைப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
ஆம் நண்பர்களே. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை அவர் மொழிபெயர்த்தபோது அவருடைய வயது 56. தனது பணி ஓய்வுக்குப் பிறகுதான் இந்த மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பொதுவாக பணி ஓய்வுக்குப் பின் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரன் பேத்திகளுடன், வேளாவேளைக்கான மாத்திரைகளுடன் இனி என்ன செய்வதென்ற யோசனைகளுடன் கழிப்பதுதான் வழக்கம்.
எம்.ஏ.சுசீலாவுக்கு இன்னொரு சிக்கல். பணி ஓய்வுக்குப் பிறகு அவர் தில்லியில் வசிக்க நேர்கிறது. நண்பர்களை சந்திக்கவோ தெரிந்த இடங்களுக்குப் போகவே வாய்ப்பில்லாத சூழல்.
இந்த நெருக்கடிகளைக் கடக்க, தன்னைச் சூழும் வெறுமையை, தன்னையே மீட்டுக்கொள்ள அவர் கையிலெடுத்த மிகப் பெரும் சவால்தான் தஸ்தாவெஸ்கி. எதைப் பற்றி சிந்தனையுமில்லாமல் தன்னை மூழ்கடிக்கும் ஒரு வேலையை அவர் தேர்ந்தெடுத்ததன் விளைவுதான், இன்று அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்குக் காரணம்.
முன்பே சொன்னதுபோல எடுத்த எடுப்பிலேயே ‘பெரிதினும் பெரிது’ கேட்டார். மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்த பிறகு சிறிய வேலைகளைத் தொடங்கவில்லை. தஸ்தாவெஸ்கியில் தொடங்குகிறார். அவரது சிறுகதைகளையோ குறுநாவல்களையோ அல்ல.
‘குற்றமும் தண்டனையும்’ என்ற பேரிலக்கியத்தில். அந்த மொழியாக்கம் வெளியாகி சுசீலாவை அடையாளம் காட்டியது. எல்லோரும் இவர் யார் என்று திரும்பிப் பார்த்தோம்.
இன்று எம்.ஏ.சுசீலாவின் அடையாளம் தஸ்தாவெஸ்கிதான். இல்லை தஸ்தாவெஸ்கியின் தமிழ் அடையாளம் எம்ஏ சுசீலா என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
0
‘பெரிதினும் பெரிது’ கேட்கும் உள்ளம்கொண்டவர்கள் என்று இதுவரை நான் மூன்று நபர்களை இங்கேக் குறிப்பிட்டேன். விஜயா வேலாயுதம். நல்லதம்பி. சுசீலா.
மூவருமே வயதில் மூத்தவர்கள். ஆனால் அவர்கள் செய்துகொண்டிருக்கும் காரியம் இளைஞர்கள்கூட செய்யத் தயங்குகிற காரியம். செயற்கரிய செயல்களைச் செய்யும் பெரியார்கள்.
புத்தகங்களை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வேன், எல்லோரையும் வாசிக்கச் செய்வேன் என்று வாசகர்களை உருவாக்கி, எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு பாலமாக விளங்குபவர் அய்யா வேலாயுதம்.
ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் தஸ்தாவெஸ்கியைப் படிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி, குறையை நீக்கி, யாரும் வாசிக்கலாம் தஸ்தாவெஸ்கியை என்று தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் எம்.ஏ.சுசீலா.
தமிழின் சிறந்த படைப்புகளை கன்னட வாசகர்களும், எழுத்துலகமும் அறிந்துகொள்ளும் மேலான எண்ணத்துடன் நல்ல தமிழ் எழுத்துகளைத் தொடர்ந்து கன்னடத்துக்கு மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார் கே.நல்லதம்பி.
இவர்கள் மூவரும் நமக்கு பெரும் உந்து சக்திகள். ‘வயசாயிருச்சுங்க, நேரமே இல்லை’ என்று சோம்பிக் கிடக்கும் பலரையும் தட்டி எழுப்பும் குறும்புக்காரர்கள். இன்னும் செய்யவேண்டியவை எத்தனையோ உள்ளன என்று இளைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவுபடுத்துகிற முகமாகவே இந்த விழா இன்று நடக்கிறது. எம்.ஏ.சுசீலாவுக்கும் நல்லதம்பிக்கும் அளிக்கும் விருது என்பது இன்னும் பலரையும் இத்தகைய செயற்கரியக் காரியங்களைச் செய்வதற்கான அழைப்பாகும்.
0
( கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் ஆண்டுதோறும் கே.எஸ்.சுப்ரமணியம்
நினைவு மொழிபெயர்ப்பு விருதுகளை வழங்கி வருகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புப்
பணிகளுக்காக எம்.ஏ.சுசீலாவுக்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும்
மொழியாக்கம் செய்தமைக்காக கே.நல்லதம்பிக்கும் விருதளிக்கப்பட்டது. விழாவில் ஆற்றிய
உரையின் எழுத்து வடிவம். )
2021 விளக்கு விருது விழாவில், இராசேந்திர சோழனின் புனைவல்லாத எழுத்துகள் குறித்த உரை. 27.11.2022 சென்னை நன்றி - ஸ்ருதி டிவி