Tuesday 23 October 2018

திக்குகள் எட்டும்




கார்த்திகை பாண்டியனின் ‘எருது’ மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)
0
பிற மொழியிலிருந்து ஒரு கவிதையையோ கதையையோ மொழிபெயர்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது எழுகிறது? குறிப்பிட்ட அந்தப் படைப்பு தமிழின் வாசிப்பு அனுபவத்துக்கு புதுமையான ஏதேனுமொரு அம்சத்தை சேர்க்கும் தன்மை கொண்டதாக அமையும்போதே அதை நம் மொழியில் மாற்றித்தர முனைகிறோம். தமிழ் வாசிப்பு உலகுக்கு புதியவொரு கதாபாத்திரத்தை, நிலவெளியை, நூதனமான கலாச்சார அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அது அமைய வேண்டும். இல்லாதவொன்றை இங்கு தரவேண்டும் என்பதே அடிப்படை.

சிடுக்குகள் நிறைந்த, காலகாலமாய் முயன்றும் அறுதியிட்ட வகுக்க முடியாத மானுட மனத்தின் புதிர்வழியில் புதியவொரு தடத்தைப் பதிக்கும் அசலான முயற்சி வேற்றுமொழிப் படைப்பில் இருக்குமென்றால் அதைத் தமிழில் தருவது முக்கியமான பங்களிப்பே. மானுடத்தை அறிய மொழிகளைக் கடப்பது அவசியமென்றால் மொழியாக்கங்களின் வழியாக அதைச் செய்வது அவசியமே.

ஒவ்வொரு படைப்பாளியும் தனது கலாச்சாரத்துக்குள்ளிருந்து மொழி அனுமதிக்கும் எல்லைகளுக்குள்ளாகவே வெளிப்பட முடிகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்த வெளிப்பாடு முழுமையற்றதென உணர நேரிடும். வெளிப்படுத்த முடியாத ஏதோவொன்று புதையுண்டு கிடக்கக்கூடும். இன்னொரு மொழியின் படைப்பில் அவ்வாறான அம்சங்கள் இயல்பாகவும் உக்கிரத்துடனும் வெளிப்பட்டிருப்பதைக் காணும்போது அதை தமிழாக்கலாம் என்ற முனைப்பு எழும்.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவரை நாம் செய்யும் காரியங்களே நமக்குப் பெரிதாகத் தோன்றும். இன்னொன்றுடன் ஒப்பிடும்போதுதான் நாம் அடைந்த உயரங்கள் அல்லது நாம் அடைய வேண்டிய இலக்குகளை நம்மால் உணரமுடியும். பிறமொழிகளில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நமது இலக்கியத்தை மேலும் மேலும் நவீனப்படுத்துவதும் செறிவாக்குவதும் சாத்தியமற்ற ஒன்று.
0
பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் வரையிலும் தமிழின் முன்னணிப் படைப்பாளிகள் பலரும் மொழியாக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் ஈடுபட்டிருந்தபோதும் இதில் தனித்துத் தெரிபவர் க.நா.சு. ஐரோப்பிய இலக்கியத்தை தமிழில் தரும் அபாரமான அயராத முயற்சியில் சுயமான தன் எழுத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை க.நா.சு. இன்று அவரது படைப்புகளுக்காக குறிப்பிடப்படுவதைக் காட்டிலும் அவர் தந்த மொழிபெயர்ப்புகளுக்காகவே அதிகமும் நினைக்கப்படுகிறார். .நா.சு அன்றி தேவமலரையோ, மத குருவையோ, பசியையோ வாசித்திருக்க முடியாது. திருலோக சீதாராம் முயன்றிருக்காவிட்டால் ‘சித்தார்த்தனை’ படித்திருக்க வாய்ப்பில்லை. ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’ உள்ளிட்ட ரஷ்ய பேரிலக்கியங்களை டி.எஸ்.சொக்கலிங்கம், வெ.சந்தானம் ஆகியோரின் உழைப்பின்றி ரசித்திருப்பது சாத்தியமில்லை.

1980களில் சிறுபத்திரிக்கைகள் உரம்பெற்றபோது மொழிபெயர்ப்பிலும் புதிய தெறிப்புகள் நிகழ்ந்தன. பிரம்மராஜனின் ‘மீட்சி’யின் வழியாக உலகக் கவிதைகளும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டன. 1982ல் மார்க்வெஸ் நோபல் பரிசு பெற்றதை அடுத்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் தமிழுக்கு அறிமுகமானது. அதுவரையிலும் பிறமொழி நாவல்களே அதிகமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலை மாறி சிறுகதைகளை தமிழாக்கம் செய்யும் போக்கு முதன்மைபெற்றது. மார்க்வெஸ்ஸின் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கம் கதையை பலரும் மொழிபெயர்த்தனர். பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், சா.தேவதாஸ், உள்ளிட்டோர் முக்கியமான கதைகளைத் தமிழில் தந்தனர். மார்க்வெஸ்ஸின் தொகுப்பின் கதைகள் அனைத்துமே மொழிபெயர்ப்பாயின. ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பை மீட்சி வெளியிட்டது. ஆர்.சிவகுமார் தொகுத்த இந் நூலில் போர்ஹே, கிமாரஸ் ரோஸா, யுவான் ருல்போ, மரியோ பெனடடி, ஆக்டோவியா பாஸ், கார்லஸ் புயண்டஸ் உள்ளிட்டோரின் கதைகளை எதிராஜ் அகிலன், மணிக்கண்ணன், சம்யுக்தா, நாகார்ஜுனன், பிரம்மராஜன் ஆகியோர் மொழிபெயர்த்திருந்தனர். இதைத் தவிர 1994ம் ஆண்டு வர்ஷா பதிப்பகத்தினர் ‘மற்ற மரணம்’ என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கக் கதைகளை வெளியிட்டனர். 2006ம் ஆண்டு ராஜகோபாலின் மொழியாக்கத்தில் நிழல் பதிப்பகம் ஒரு தொகுப்பை வெளியிட்டது.போர்ஹே, இடாலோ கால்வினோ ஆகியோரின் கதைகளை பிரம்மராஜன் மொழியாக்கம் செய்து தொகுத்தளித்திருக்கிறார்.

புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கி..சச்சிதானந்தன், நகுலன், கோணங்கி, சாருநிவேதிதா, எம்.எஸ், .ரத்னம், அமரந்தா, விஜயகுமார், கால சுப்ரமணியன், சி.மோகன், ஜி.குப்புசாமி, எம்..சுசீலா, ராஜகோபால், செங்கதிர், .மோகனரங்கன் அரவிந்தன், அசதா என உலகக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளவர்களின் பெரும் பட்டியல் உண்டு. (இந்தக் கட்டுரையை எழுதும்போது என் நினைவில் வந்த பெயர்களை மட்டுமே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களைத் தவிர இன்னும் பலர் பங்களித்திருக்கக் கூடும்.)

நூல்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைப் பெறுவதும் பிறகு அதை மொழிபெயர்ப்பதும் சிரமமானதாகவும் காலமெடுத்துக் கொள்வதாகவும் இருந்த சூழல் இன்றில்லை. இணையமும் தகவல்தொழில் நுட்பமும் உலகின் அனைத்து மொழி இலக்கியங்களையும் நமது கணிணிக்குள் எந்த நேரத்திலும் அணுகும்படியான வாய்ப்பைத் தந்துள்ளன. உலகின் எந்தவொரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் கதையையும் நம்மால் தேடிப் படித்துவிட முடியும். கார்டியன், நியூயார்க்கர், கிராந்தா போன்ற சஞ்சிகைகளின் வழியாக உலக இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.
0
இன்றைய உலகளாவிய தொழில்நுட்பம் மொழிபெயர்ப்பதற்கான கதைகளையும் வாய்ப்புகளையும் திறந்து வைத்திருக்கும் இச்சூழல் சாதகமான அதே அளவுக்கு பாதகமானதும்கூட. மொழிபெயர்ப்பதற்கும் உடனடி கருவிகளை தயார் நிலையில் தருகிற வசதி பல போலிகளையும் அல்லது உத்வேகமற்ற தொழில்முறை முயற்சிகளையும்கூட உருவாக்குகிறது.
இந்தச் சூழலில் மொழிபெயர்க்க வந்த கார்த்திகைப் பாண்டியன் தனக்கு முன்னாலிருந்த சவால்களை தெளிவுறத் தெரிந்திருந்தார் என்பதை அவரது எருது சிறுகதைத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது. தமிழில் இதுவரைக்கும் அறிமுகமானவர்களைத் தவிர்த்து முக்கியமான பிற எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்க்க அவர் முனைந்திருப்பது ஆரோக்கியமானது.
சித்தார்த்தன் நாவலின் வழியாக மட்டுமே தமிழில் பெயர்பெற்றிருந்த ஹெஸ்ஸேவின் ‘கவிஞன்’ என்ற முக்கியமான கதையை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். கலையின் மேல் பித்துகொண்டவனின் ஆன்மா லௌகீக உலகைப் பொருட்படுத்தாது விலகித் திரிவதையும், பொருள்சார் உலகில் அனைத்துமே கடந்து செல்லக்கூடியவைதான் எனும் யதார்த்தத்தையும் வெகு அழகாக முன்வைக்கிறது இக்கதை.

மோ யான் என்ற சீன எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். அவருடைய ‘எருது’ என்ற சிறுகதை தொகுப்பின் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்திய கலாச்சாரத்துக்கும் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கும் சீனக் கலாச்சாரத்துக்கும் இடையிலான ஒப்புமைகளை இந்தக் கதையில் அறிய நேரும்போது இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. கதையை முன்வைக்கும் பாணியிலும் இந்தியத் தன்மை இருப்பதையும் அறிய முடிகிறது.

ரைஸ் ஹ்யூக்ஸ் பல்வேறு விதங்களில் கதைசொல்ல முயல்பவர். நேரடியான சித்தரிப்பு முறைக்கு மாறாக பரீட்சார்த்தமான வேறுபட்ட உத்திகளைக் கொண்டு நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதுபவர். இத்தொகுப்பிலுள்ள அவரது ‘கல்லறை சாட்சியம்’ என்ற கதை மாயமும் யதார்த்தமும் தேவதைக் கதைகளுக்கான செவ்வியல் தன்மையும்மிக்க கதை. சின்னஞ்சிறிய இக்கதை அமைப்பிலும் சொல்முறையிலும் குழந்தைகள் கதை போன்றிருப்பினும் வாசிப்பிலும் அதன் பின்பும் இது ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானவை.
கிரகாம் கிரீன் நமக்கு அறிமுகமான பெயர் என்றபோதும் அவரது கதைகள் தமிழில் அறியப்படாதவை. ‘நீலப்படம்’ என்ற கதை ஆண் பெண் உறவில் உள்ள புதிர்வழியைத் தொட முயலும் ஒன்று. அதேபோல அமெரிக்க நாவலாசிரியையான டோனி மாரிசன் நமக்குப் புதியவரல்ல. பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள அவரது ஒரே சிறுகதை 1983ல் வெளியானது. ‘வசன கவிதை’ என்ற இக்கதை இருவேறு இனங்களைச் சேர்ந்த தோழிகளின் வாழ்வைப் பேசுகிறது.

லத்தீன் அமெரிக்காவின் முந்தைய தலைமுறையின் மாய யதார்த்தவாதத்தை தொழில்நுட்ப நோக்கில் நவீன யதார்த்தவாதமாக திசைமாற்றியவர்களில் ஒருவர் எட்மண்டோ பாஸ் சோல்டன். பொலிவியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். சமகால உலகின் நிறவெறியின் பேரிலான அபத்தமான வன்முறையை களமாகக் கொண்டது ‘வால்வோ’ என்ற அவரது சிறுகதை.
எகிப்திய எழுத்தாளர் யூசுப் இதிரிஸ் ஒரு நாடக ஆசிரியரும்கூட. தன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளைத் தரும் அவரது ‘சதையாலான வீடு’ சிறுகதை பார்வையற்றவனுக்கும் விதவைத் தாயுடன் வசிக்கும் மூன்று பெண்களுக்குமான உறவினை அடிப்படையாகக் கொண்டது. சித்தரித்திருக்கும் விதம் இக்கதைக்கு வலு சேர்க்காதபோதும் கதைக்கருவின் உக்கிரத்தால் இக்கதை தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.

அம்புரோஸ் பியர்ஸின் ‘சட்டமிடப்பட்ட சாளரம்’ வாய்மொழிக் கதையின் தன்மையைக் கொண்டது. 1891ல் எழுதப்பட்டது இக்கதை இன்றும் தன் வாசிப்புத் தன்மையை தக்கவைத்திருப்பதே இதன் சிறப்பு.

பத்துக் கதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் நமக்கு முன்பே அறிமுகமான ஹெஸ்ஸே, டோனி மாரிசன், மோ யான் ஆகியோரைத் தவிர கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்திருக்கும் பாஸ் சோல்டன், யூசப் இதிரிஸ், ரைஸ் ஹ்யூக்ஸ் ஆகியோர் தமிழுக்கு புதியவர்கள். புதிய திசையிலிருந்தும் புதிய மொழியிலிருந்தும் கதைகளைத் தமிழுக்குத் தரும் கார்த்திகை பாண்டியனின் முயற்சியும் ஆர்வமுமே அவரை பிற மொழிபெயர்ப்பாளர்களிலிருந்து தனித்துவப்படுத்துகின்றன.

பரீட்சார்த்தமான எழுத்து முறை என்பது தொடர்ந்து தமிழில் முன் வைக்கப்படும் ஒன்று. மாய யதார்த்தம் என்ற போக்கு லத்தீன் அமெரிக்கக் கதைகளிலிருந்து தொற்றிக்கொண்டது. மொழியில் விளையாட்டு, புதுமையான சித்தரிப்பு முறை என்று புதிய உத்திகள் பல போர்ஹேவிடமிருந்து இங்கு முன்வைக்கப்பட்டது. ஆயினும் அவை அனைத்தும் புதுமையான சொல்முறை என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெற்றன. தமிழின் பொதுத் தன்மையில் கூறுமுறையில் கணிசமான மாற்றங்களை இவை ஏற்படுத்தவில்லை. அது இயல்பே. இத்தொகுப்பிலும் அவ்வாறான கதைகள் சில உள்ளன. கார்த்திகை பாண்டியனுக்கு அவ்வாறான சொல்முறையில் ஆர்வம் இருப்பதை அவரது புனைகதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மொழியாக்கம் குறித்து இரு தரப்புகள் எப்போதும் உண்டு. மூல மொழிக்கு முற்றிலும் உண்மையாக நின்று சொற்களையும் வாக்கியத்தையும் உள்ளபடியே மொழிபெயர்ப்பது என்பது ஒன்று. அவ்வாறன்றி தமிழுக்கு ஏற்றவகையில் வாக்கியங்களை மாற்றியோ அல்லது உடைத்தோ மொழிபெயர்க்கலாம் என்பது மற்றது. கார்த்திகை பாண்டியன் மூலத்தை ஒட்டி அப்படியே மொழிபெயர்க்கும் முதல் தரப்பைச் சார்ந்தவர். தமிழில் அவ்வாறான வாக்கிய அமைப்புகளோ இலக்கணங்களோ இல்லாதபோதும் பிறமொழியின் அமைப்புடனும் இலக்கணத்துடனும் தமிழில் எழுதுவதைப் பற்றிய கேள்விகள் எப்போதும் உண்டு. உதாரணத்துக்கு ‘கொனியா, மொரிசியோ மற்றும் நான், பூங்காவின் மேசையின் மீதமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று பெண்களை அணுகினோம்’ ( வால்வோ – பக்கம் 113 ) என்ற வாக்கியத்தைச் சொல்லலாம். அதேபோல, பக்கம் 135 ல் எருது கதையில் உள்ள வாக்கியமும் அவ்வாறான கேள்வியை எழுப்புகிறது ‘அவர்களின் தலைக்குள் இந்த உலகின் என்னதான் நடக்கிறது?”
கல்குதிரை’, ‘வலசை’ உள்ளிட்ட இதழ்களில அவ்வப்போது வெளியான கதைகளின் தொகுப்பு என்பதால் கார்த்திகை பாண்டியனின் கதைத் தேர்வு முறை குறித்து எதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் பத்து கதைகளையும் கவனிக்கும்போது ஒவ்வொன்றும் அதனதன் அளவில் தனித்துவமிக்கதாகவும் தமிழ் வாசகர்களுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

மொழியும் இலக்கியமும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள பிறமொழி ஆக்கங்களை அனுமதிப்பதும் அவற்றிலிருந்து ஆக்கப்பூர்வமானவற்றை ஏற்றுக்கொள்வதும் அவசியம். மாறிவரும் உலகின் வேகமான மாற்றங்களை இன்னும் வேகமாக உள்வாங்கிக் கொள்வதின் வழியாகத்தான் தொடர்ந்து இலக்கியத்தையும் எழுத்தையும் புதுப்பித்து முன்னகர முடியும். அறியப்படாத மொழியிலிருந்து புதிய எழுத்துக்களை தரமுயலும் கார்த்திகை பாண்டியன் போன்றோர்களின் முன்னெடுப்பு இந்த வகையில் முக்கியமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும்.


Wednesday 25 July 2018

தன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி - த.கண்ணன்

(எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் வெளியீட்டு விழாவின்போது த.கண்ணன் பேசிய அறிமுக உரையின் விரிவான எழுத்து வடிவம்)

கடந்த ஒரு வாரத்தை, எங்கள் கிராமத்தின் மெல்லிய பருவ மழையிலும் இதமான குளிர் காற்றிலும் கோபாலகிருஷ்ணனின் வெம்மையான எழுத்துகளோடு கழித்தேன்.
அழைப்பிதழில் மனைமாட்சியின் அட்டையிலும் ஈரமாய் மழைப்படம். என்னைத் தழுவிய மழையின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சியே.
கோபாலகிருஷ்ணனின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே தியாகு நூலகத்தில் அவரது அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு நல்ல வாசகராகவே அவரை முதலில் அறிந்துகொண்டேன். பழகப்பழக ஓர் இனிய நண்பராக அறிந்துகொண்டேன். பின்னர்தான் மணல்கடிகை படித்தேன். அவரை ஒரு நல்ல நாவலாசிரியாக அடையாளம் கண்டுகொண்டேன். மனைமாட்சியில் அது உறுதிப்பட்டிருக்கிறது. ‘வாழ்விலே ஒரு நாள்’ என்ற புத்தகம் அரசு நூலகத்தில் தேடும் போது என் கைகளில் விழுந்தது. அலெக்ஸாண்டர் சோல்ஸனிட்சினின் ‘One day in the life of Ivan Denisovich” என்ற ரஷிய நாவலின் மொழிபெயர்ப்பு. சோவியத் குலாக்களின் கொடூரமும், நம் சூழலுக்கு அந்நியமான பனியும் குளிரும் தமிழில் அற்புதமாக வந்திருந்தது. அப்போது அவரை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கண்டுகொண்டேன். ஆங்காங்கு படித்த பல கவிதைகளின் மூலமாக சிறந்த கவிஞராகவும் கண்டுகொண்டேன். இப்போது, இந்த உரையின் பொருட்டுதான் அவரது சிறுகதைகளைத் தொகுப்பாகப் படித்தேன். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவரது சிறுகதைகளுக்காகவே அவரைக் கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று தோன்றியது.
தொடர் மின்வெட்டுகளால், அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழையில் நள்ளிரவில் அவரது முதல் தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’யிலிருந்த ‘ஒற்றைச் சிறகு’ சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அடிபட்டிருந்த ஒரு பறவையையும், குப்பைத்தொட்டியருகில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையையும் பற்றிய கதை. படிக்கும் போது என் மீது ஒரு கரப்பான் பூச்சி பறந்துவந்து விழுந்தது. கையிலிருந்த புத்தகத்தால் அனிச்சையாய்த் தட்டிவிட்டேன். பூச்சி தலைகீழாக மழையில் வீழ்ந்தது. அதனால் திரும்ப முடியவில்லை. கதையை முடித்தபிறகு என்னால் அடுத்த கதைக்குச் செல்ல முடியவில்லை. மழையில் இறங்கிப் பூச்சியைத் திருப்பிவிட்டுவந்துதான் தொடர முடிந்தது.
அந்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை கலைநேர்த்தியோடு படைத்திருக்கிறார். மானுடத்தின் மீதான நேயம் என்பதைத் தாண்டி அனைத்துயிர்களின் மீதும், இயற்கையின் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக ஆரம்ப காலம் முதலே கோபாலகிருஷ்ணனின் கதைகள் அவரைப் பிரகடணம் செய்கின்றன.
கு.ப.ரா.வின் ஆற்றாமை கதையைக் கொண்டாடுகிற அல்லது விமர்சிக்கிற அளவுக்கு கோபாலகிருஷ்ணனின் இரவு கதையையும் நாம் கொண்டாடலாம். ஆற்றாமை கதையில் கணவனைவிட்டுப் பிரிந்திருக்கிற சாவித்திரி அடுத்த உள்ளில் மகிழ்ந்திருக்கும் இளம் தம்பதியினரைக் கண்டு பொருமி, வாய்ப்பு கிட்டியபோது தடங்கல் ஏற்படுத்துகிறாள். இரவு கதையில் gender role reversal நடக்கிறது. உடல் செயலிழந்து படுத்தபடுக்கையாக இருக்கும் அண்ணன் திருமலை, தம்பியின் திருமணம் முடிந்த முதலிரவன்றுத் தொடர்ந்து இடையூறு செய்கிறான். “உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா” என்று கறுவுகிறான்.
இறுதியில், ‘திருப்திதானா பேயே’ என்று சாவித்திரியின் குற்றவுணர்வு ஆற்றாமையில் வெடிக்கிறது. திருமலையின் தாய், ‘ஏன்டா திருமலே இப்பிடி பண்றே..நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா…பாவம்டா’ என்கிறாள். ‘பாவந்தான்ம்மா..எதையாச்சும் அரச்சு ஊத்திரு. பாவந்தீந்துரும்’ என்கிற திருமலையின் மூலமாக, காமம் மட்டுமல்ல, ஆற்றாமையும் ஆண்பால் பெண்பால் அறியாது என்பதை இக்கதைமூலம் வெளிப்படுகிறது.
தன்நோய்க்குத் தானே மருந்து.
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
“என் பெரிய மருமகளுக்கும் பேரன் பேத்திக்கும்னு நான் குடுத்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி அவ நாளைக்கு மனசு மாறி இன்னொருத்தரைக் கட்டிட்டாலும் என் முடிவுல எந்த மாத்தமும் இருக்காது. ஆமா. நல்லாக் கேட்டுக்குங்க.”

இத்தகைய gender role reversal மனைமாட்சியில் தொடர்ந்து நிகழ்கிறது.
மனைமாட்சியில் ஆறு கதைகள் மூன்று பகுதிகளாகச் சொல்லப்பட்டிருகின்றன. மனைமாட்சியைப் படிக்கும் போதும், படித்து முடிந்த பிறகும் எனக்குள் எழுந்த முதல் கேள்வி – ஒவ்வொரு பகுதியிலும் வருகிற இரண்டிரண்டு கதைகளுக்குள்ளே, ஒரு மெல்லிய இழைதான் தொடர்ச்சியாக இருக்கிறது. இவை ஆறும் தனித்தனி நாவல்களாகவேகூட வெளியிடப்பட்டிருக்கிலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு கதையிலும் அடர்த்தியும் சாராம்சமும் இருக்கின்றன. இந்த ஆறு கதைகளும் சேர்ந்து எப்படி ஒற்றை நாவலாகின்றன?
ஏற்கனவே தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பல கதைச்சரடுகளையுடைய நாவல்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஓர் ஊரின் கதையைச் சொல்லக்கூடும். ஒரு மனிதன் ஒரு நாளில் சந்திக்கின்ற பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு காலகட்டத்தின் கதையைக் கூறக்கூடும். ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு குடியின் பல்வேறு தலைமுறைகளைப் பற்றி கூறக்கூடும். ஏதோ ஒரு வகையில் இவையெல்லாம் ஒரு மையச்சரடால் பிணைக்கப்படுகின்றன. மணல்கடிகையே கூட இப்படிப் பல கதைகளை ஒருங்கே கையாண்ட ஒரு நாவல்தான். ஐந்து நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்வதன் மூலமாக ஒரு நகரத்தின் கதையை, சமூகமாற்றத்தின் கதையை, ஒரு காலமாற்றத்தின் கதையைக் கூறுவார்.
அப்படியாக மனைமாட்சியின் ஆறு கதைகளை இணைக்கிற சரடு, அதன் தலைப்பிலேயே தொடங்கி, தொடர்ந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவன் விரல்பிடித்து அவனை ஏற்றும் மறுத்தும் நாவல் நகர்கிறது எனலாம்.
மனைமாட்சி நாவல் இன்றைய சமூகத்தில், குடும்ப வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சொல்கிறது. சிக்கலான இன்றைய குடும்ப வாழ்வின் முக்கிய பரிமாணங்களை வெளிப்படுத்த ஒரு குடும்பம், ஒரு கதையால் சாத்தியமில்லை என்று கோபாலகிருஷ்ணன் ஆறு கதைகளைக் கையாண்டிருக்கிறார் போலும். பெண்ணின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச வந்த நாவலாகவும் இதைக்காணலாம்.
மணமான ஒரு சில நாட்களிலேயே எந்தத் தவறும் செய்யாமல் கணவனைப் பிரிந்த பின்னும், ஒரு பெண் பிரிவை மிக வலுவாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு எதிர்கொள்கிறாள். இன்னொரு பெண் கணவனோடு சேர்ந்தே இருக்கமுடியாத ஒரு சூழலை உருவாக்கிய பின், தன் மீது சுமத்தப்பட்ட பிரிவால் நொறுங்கிப்போகிறாள்.
உடன்வாழத்தகுதியற்றவன் என்று ஒற்றை நிகழ்வின் மூலமாக ஒரு பெண் நிராக்கிற ஒருவனை இன்னொரு பெண் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள்.
வீட்டினர் அனைவுரும் வற்புறுத்தும்போதுகூட கணவனை இழந்த ஓர் இளம்பெண் மறுமணம் புரிய மறுக்கிறாள். வீட்டினர் கட்டாயத்தால் மணம்புரிந்துகொண்ட இன்னொரு பெண் உடனடியாக மணவாழ்வை முறிக்க முனைகிறாள்.
இப்படியாக இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை எதிரெதிர் கோணங்களில் இந்நாவல் அணுகுகிறது. இரண்டிரண்டு கதைகளாய் வெம்மையையும் தண்மையையும் மாறிமாறித் தருகின்றது என்றும் சொல்லலாம்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
என்கிறார் வள்ளுவர், ஒரே பெண்ணிடம்தான் பிணியும் மருந்தும் உள்ளன என்கிற பொருளில். கோபாலகிருஷ்ணன் ஒரு கதையில் பெண்ணால் ஏற்படும் நோய்க்கு, இணைகதையில் பெண்ணையே மருந்தாக்கிக் காண்பிக்கிறார்.
இக்கதைகளின் சில கூறுகளையும் கதைமாந்தரின் சில சாயல்களையும் நாம் வேறு கதைகளில் பார்த்திருக்கிறோம். ஏன் வணிகத் திரைப்படங்களில் கூட கண்டிருக்கிறோம். முதல் கதையின் சாந்தியில் புதுபது அர்த்தங்கள் கீதாவும், கடைசிக் கதையின் கலைவாணியில் மௌன ராகம் ரேவதியும் எனக்கு நினைவில் வரத்தான் செய்தார்கள். ஆனால், நிஜ வாழ்வோடு இருக்கக்கூடிய நெருக்கம், கதைகளில் இருக்கிற அடர்த்தி, வாழ்க்கைக்குள் அவை செல்கின்ற ஆழம் என்று இந்நாவல் எட்டிப்பிடிக்கற தளம் முற்றிலும் வேறானது, வெகுவாய் மேலானது.
சில உறவுச்சிக்கல்களைப் பார்க்கும்போது, இவை நம்ப முடியாத நிகழ்வுகளோ என்றுகூடத் தோன்றலாம். ஆனாலும், அவை நாம் நம்ப விரும்பாத நிகழ்வுகளாகவே இருக்கின்றன.
முதல் கதையின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கிறது.
/கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தைக் கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு. வெறியேறிய கண்கள். வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள். மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிகிறது. “ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே.”/
முதல் முறை இதைப் படிக்கும்போது ஏதோ நனவோடைக் காட்சியென அதிகம் கவனம் செலுத்தாமல் கடந்து சென்றுவிட்டேன். மறுமுறை பார்க்கும்தோதுதான் இப்படியொரு காட்சியை மனம் நம்ப மறுத்ததன் விளைவுதான் என்னை அப்படிக் கடந்து போகச் செய்தது என்று தோன்றுகிறது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி என்கிற பாத்திரத்தின் சிக்குகளை அவிழ்த்துச் செல்வதில் கோபாலகிருஷ்ணனின் படைப்பாளுமை வெளிப்படுகிறது. அவளது பாத்திரப்படைப்பு ஊகங்களுக்கு இடமில்லாமல் முற்றிலும் துலங்கிய பிறகு நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது. இங்கும் ஒரு gender role reversal செய்கிறார்.
பெண்கள் உள ரீதியான மிரட்டல்களாலும், வசைச்சொற்களாலும் ஆண்களைத் அச்சுறுத்துவதை நாம் பல கதைகளில் கண்டிருக்கலாம். ஆனால், உடல்ரீதியான வன்முறையைச் செலுத்துவதை இந்தக் கதை அளவுக்கு மூர்க்கமாய்ச் சொன்ன ஆக்கம் என்று நான் வாசித்தவற்றுள் வேறு எதுவும் இல்லை.
குழந்தைகளின் பொருட்டு தியாகு சாந்தியின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்கிறான். கதையை இன்னும் கூர்ந்து கவனித்தால், சாந்தியின் பொருட்டுமே அவன் சாந்தியைச் சகித்துக்கொள்கிறான்.
இன்னொரு தளத்தில், இது நுகர்வு கலாச்சாரம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் சீர்கேட்டைச் சித்தரிக்கிற கதையாகவும் உள்ளது. அண்மையில் வந்த சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை இதனோடு ஒப்பிடலாம்.
உண்மையில் இக்கதையைப் படிக்கிறவரை இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்குறள் என்னுள் இவ்வளவு விரிந்திருக்கவில்லை.
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
இல்வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை உடையவளாக, கணவனின் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நடத்துகிறவளே சரியான துணையாக இருப்பாள் என்கிறார் வள்ளுவர். கதையை முடித்தபின் இக்குறள் பெரும் விரிவை ஏற்படுத்தியது.
காண்கிற பொருள்ளையெல்லாம் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது ஒரு நோயாக இன்று உருவெடுத்துவிட்டது. கடனட்டைகள் எந்த அளவுக்கு நம்மை complusive buying disorder நோக்கித் தள்ளுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. பல அதிர்ச்சியான தருணங்கள் இக்கதையில் உள்ளன.
இதன் இணைக்கதையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினாலும், போகப்போக வெம்மையைத் தணிக்கும் தென்றாய் வருடத்தொடங்குகிறது.
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
என்று காமத்துப்பாலில் ஒரு குறளுண்டு. தீ தொட்டால்தான் சுடும். காம நோய் போல் விட்டாலும் சுடுமா என்கிறார் வள்ளுவர். இக்கதையின் பிரச்சனையே, ராஜம்பாய்க்கு தொட்டாலும் தீ சுடவில்லை என்பதுதான். எத்தனை தொலைவும், காலமும் கடந்தபின்னும் காமநோய் சுடுவதாக இருக்கிறது.
இரண்டாவது பகுதியில் வருகிற இரு கதைகளும் ஓரளவு பிணைக்கப்பட்ட இணை கதைகளாகவே உள்ளன.
ஆரம்பத்தில், ஓர் உக்கிர நாடகத்தில் இருந்து அபத்த நாடகத்துக்குள் நுழைந்த விட்ட உணர்வு ஏற்பட்டது. கட்டியவளைத் தெருவில் விட்டுவிட்டு அவளறியாமல் உணவகத்தில் ஒரு கட்டுகட்டுகிறான் கணவன். பொறுக்கமாட்டாத புது மனைவி பிரிந்து செல்கிறாள். இப்படியொரு அபத்த நிகழ்வோடு தொடங்கும் கதை பின்னர் பல்வேறு உளவியல் சிக்கல்கள் உறவுச் சிக்கல்கள் என்று விரிந்து செல்கிறது.
நாவலின் மூன்றாம் பாகத்தில் வரும் விநோதினி, இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு மறுமணம் செய்ய மறுப்பவளாக இருக்கிறாள். ஆனால், சுற்றத்தார் வற்புறுத்துகின்றனர். மறுமணம் ஓரளவு பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், இறந்துவிட்ட கணவன் குடும்பத்தின் சொத்து அவளுக்குச் சென்றடைவதில் தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்நாவலில் அவள் மாமனார் சொல்கிறார்:
இது இந்நாவலின் உச்சமான தருணங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.
சில உடலுறவுக் காட்சிகளையும் வன்புணர்வுக் காட்சியையும் இத்தனை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமா என்று, என்னுடைய இயல்புக்கு, எனக்கொரு விலகல் ஏற்படத்தான் செய்தது. ஆனால், கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியையோ உணர்வையோ விவரிக்க முடிவுசெய்துவிட்டால், கட்டுக்கடங்கா ஆறாகத்தான் பாய்கிறார்.
உதாரணமாக, அவரது முனிமேடு தொகுப்பில் உள்ள பிற்பகல் விளையும் என்ற சிறுகதையில், ஒரு சிறுவன் தேங்காய் பன் மீது பிரியமாக இருக்கிறான். அந்தத் தேங்காய் பன் காட்சியை அத்தனைத் தித்திப்பாய் விவரிக்கிறார்:
‘தேங்காய் பன்னை சாப்பிடும்போது பலரும் பக்குவம் தெரியாமல் சாப்பிடுவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். முக்கோண வடிவில் இருக்கும் தேங்காய் பன்னின் கூரிய முனையை முதலில் பார்க்கும்போது வாகாய் பிளந்துகொண்டு விரல்களால் விண்டெடுக்க வசதியாகத்தான் தெரியும். பிளவினூடாக தேங்காயும் சர்க்கரையும் கலந்து மின்னும் பரப்பு பரவசப்படுத்தும். ஆனாலும் நுனியிலிருந்து பன்னை பிய்த்து சாப்பிடக்கூடாது. தேங்காயும் சர்க்கரையும் இதமான சூட்டிலிருக்கும் பன்னும் சேர்ந்து வெகு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ருசிக்கு மயங்கிவிட்டால் அதோ கதிதான். பிறகு கடைசியில் முக்கோணத்தின் அடிப்பக்கம் வரும்போதுதான் தெரியும் சேதி. பன்னின் தடிச்ச அடிப்பக்கத்தை வாயில் போட்டு மெல்லும்போது தேங்காயில்லாமல் சவசவப்பு மட்டும்தான் மிஞ்சும்.
சண்முகம் முதலில் வெறும் பன்னை மட்டும்தான் தின்பான். இதமான சூட்டில் வெறும் பன்கூட லேசான தித்திப்புடன் சுவையாகவே இருக்கும். இனிப்புக்கு நாக்கு மெல்லப்பழகுவதுபோல சுவை கூடும். இரண்டு அல்லது மூன்றாவது விள்ளலில் தேங்காயும் சர்க்கரையும் வாய்க்கத்தொடங்கிவிடும். இப்போது வெறும் பன்னின் சவசவப்பு காணாமல் போய் தேங்காய் பன்னின் அசலான சுவை தென்பட்டிருக்கும்.’
ஒரு தேங்காய் பன்னைக்கூட இத்தனை ரசனையுடன் விவரிப்பவர் காமத்தைப் பட்டும்படாமல் சொல்லிவிடவா முடியும்?
ஒரு இளம் பெண் எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டுக்கு தனது கதையை அனுப்பி அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் இப்படி மறுமொழி அனுப்பியிருந்தார்.
Dear Frances:
I’ve read the story carefully and, Frances, I’m afraid the price for doing professional work is a good deal higher than you are prepared to pay at present. You’ve got to sell your heart, your strongest reactions, not the little minor things that only touch you lightly, the little experiences that you might tell at dinner. This is especially true when you begin to write, when you have not yet developed the tricks of interesting people on paper, when you have none of the technique which it takes time to learn. When, in short, you have only your emotions to sell.
This is the experience of all writers. It was necessary for Dickens to put into Oliver Twist the child’s passionate resentment at being abused and starved that had haunted his whole childhood. Ernest Hemingway’s first stories “In Our Time” went right down to the bottom of all that he had ever felt and known. In “This Side of Paradise” I wrote about a love affair that was still bleeding as fresh as the skin wound on a haemophile.
[….]
பின் குறிப்பாக அவர் சொன்னதும் முக்கியமானது:
P.S. I might say that the writing is smooth and agreeable and some of the pages very apt and charming. You have talent—which is the equivalent of a soldier having the right physical qualifications for entering West Point.
‘ஒரு எழுத்தாளன் தன் இதயத்தைத் திறந்து, தன் ஆழமான உணர்வுகளைக் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். எழுதுவதற்கான விலையை நீ கொடுக்கத்தயாராக இல்லை,’ என்கிறார்.
கோபாலகிருஷ்ணன் அந்த விலையையும் அதற்கு மேலும் தருவதற்குத் தயாராக இருப்பதாலேயே அவரால் இப்படியொரு படைப்பைப் படைக்க முடிகிறது. கசப்பும் வேதனையும் கருணையும் எல்லாம் உதிரமும் சதையுமாய்க் கலந்தே வருகின்றன. நாவலின் மங்கையின் சொற்களில்,
“அந்த ஒரு ராத்திரியில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன் ஆயுள் மொத்தத்திலேயும் அனுபவிக்க வேண்டிய கசப்பையும் வேதனையையும் ஒரே ராத்திரியில் அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பார்த்துவிட்டேன். வக்கிரமும் குரூரமுமான ஒன்று, பயங்கரமானது. நினைத்தாலே வலிக்கும். ஆனால் அதே ராத்திரியில்தான் அந்த இருவரையும் பார்த்தேன். இப்போது நான் உயிரோடு இருப்பது அவர்களின் கருணையில்தான். அந்தப் பெண்ணின் கண்ணீரும் அவளது அம்மாவின் ஆக்ரோஷமும் மாறி மாறி என்னை அலைகழிக்கும். அடியோடு நினைவிலிருந்து அழிக்க முயன்றும் மறக்கவே முடியாத ராத்திரி. அதுதான் எனக்கு இத்தனை பக்குவத்தையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.”

Saturday 9 June 2018

சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ - எஞ்சி நிற்கும் பாவனைகள்



எதையேனும் சார்ந்திரு


கவித்துவம், தத்துவம்


காதல், சங்கீதம்,


இங்கிதம்... இப்படி


எதன் மீதேனும் சாய்ந்திரு


இல்லையேல்


உலகம் காணாமல் போய்விடும்.


- வண்ணநிலவன்.


வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது.. நம் சூழலில் பயின்றுவரும் வழக்கமான நாவல் இலக்கணத்துக்கு எதிரானது இது. நாவல் தன்னை உடைத்து நொறுக்கிய பின் அவற்றிலிருந்து சில துண்டுகளை மட்டும் நம் முன்னால் கலைத்துப்போட்டு அவற்றிலிருந்து முழுமையை ஊகித்துக் கொள்ளச் சொல்கிறது. அவ்வாறான சிதறல்களில் சில சம்பவங்கள். பிற அச்சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட நாவலின் சில அத்தியாயங்கள். சம்பவங்களில் உலவும் கதாபாத்திரங்களே நாவலிலும் வேறு பெயரில் உலவுகின்றன. முழுவதுமான கதைத்தன்மை நாவலின் ஒருமைக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக இடையிடையே ஒரு கட்டுரை, இரண்டு உரைகள், கடிதங்கள் என்று பல்வேறு வடிவங்களும் செருகப்பட்டுள்ளன. சம்பவங்களும் அத்தியாயங்களும் முன்னும் பின்னுமாக கலைத்துப் போடப்பட்டுள்ளன.

மீநாவல் வடிவம் தமிழுக்குப் புதியதல்ல. நாவலின் பரீட்சார்த்தமான வடிவங்களை, மேற்கின் சாயல்களுடனோ அல்லது அவற்றின் பாதிப்பினாலோ பலரும் முயற்சித்திருக்கிறார்கள். ஆண் பிரதி-பெண் பிரதி, கதைக்குள் கதை, முற்றிலும் செயப்பாட்டுவினையால் அமைப்பது, முற்றுப் புள்ளியே இல்லாத வாக்கியங்களால் எழுதுவது என்று பல்வேறு உத்திகளும் கையாளப்பட்டுள்ளன. தமிழவன், எம்.ஜி.சுரேஷ், பா.வெங்கடேசன், டி,தர்மராஜ், டி.கண்ணன், எம்.டி.எம், பிரேம்-ரமேஷ் என பலரும் இதற்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
இந்த நாவல் அப்படியான திட்டமிடுதலுக்குப் பிறகு முனைந்து எழுதப்பட்டதா அல்லது எழுதும்போக்கிலேயே தற்செயலாய் அப்படி அமைந்ததா என்பது நாவலின் ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். ஆனால் வடிவம் சார்ந்த இந்தக் கேள்விக்கு அப்பால் இந்த நாவலில் யோசிக்கத்தக்க பிற அம்சங்களே முக்கியமானவை.

ஒன்று வாழ்வே பாவனைதான் என இந்த நாவல் முன்வைக்கும் பார்வை. வாழ்வின் அனைத்து அம்சங்களையுமே இது சந்தேகப்படுகிறது. அவை அனைத்தும் பாவனைகளே என்று சொல்லி முற்றாக நிராகரிக்கிறது. எல்லாவிடத்திலும் அகம் விலகி நின்று அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கிறது. அக்கணத்தில் நிகழும் நாடகத்தை நக்கலான சிரிப்புடனே எரிச்சலுடனோ பார்த்து நிற்கிறது. உறவுகள், நட்பு, காதல், காமம், மரணம், அரசியல், பணம், பதவி என அனைத்துமே பாவனைகளின், நடிப்பின் வெவ்வேறு வடிவங்களே ; கண்ணீருக்கும் சிரிப்புக்கும் பின்னால் அதற்கு நேர் மாறான உணர்ச்சி வெடிப்புகளே உள்ளுக்குள் நிகழ்கிறது ; வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நெடிய நாடகத்தின் பல்வேறு அபத்தக் காட்சிகளே என்று புறக்கணிக்கிறது நாவலின் மையக் கதாபாத்திரமான சுரேஷ் பிரதீப் அல்லது சக்தி. அந்த நாடகத்தில் அனைவரது நடிப்பையும், தன்னையும்கூட விலகி நின்று எதுவும் உண்மையில்லை என்று விமர்சிக்கிறது. எதிலும் உணர்ச்சிமயமான ஒட்டுதலின்றி அனைத்தையுமே நிராகரிக்கும் இந்த மனநிலை தொடர்ந்து தாங்க முடியா வெறுமையையும் தீராத கசப்பையும் தருகிறது. எங்கிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளமுடியாத மனம் வறிய நிலையில் வாழ்வை முடித்துக் கொள்ளவே விளைகிறது. சக்தி அல்லது சுரேஷ் பிரதீப் தற்கொலை செய்துகொள்கிறான்.

கணந்தோறும் அலைகழியும் மனித மனம் அத்தகைய தத்தளிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் அதன் துயரிலிருந்து தற்காத்திடவுமே உறவுகளையும் அதன்பாலான பல்வேறு உணர்வு நிலைகளையும் உருவாக்கி வந்திருக்கிறது. குழந்தைகள் மேலான பிரியம், ரத்த உறவுகளின் மீதான அன்பு, சக உயிர்களிடத்தே காட்டும் கருணை, தாய்மை, காதல், குடும்பம் என்ற உறவு நிலைகள் மனித வாழ்வை ஒன்றிணைத்து வைத்திருக்கின்றன. இவை அனைத்தையும் சந்தேகித்து நிராகரிக்கும் மனம் சென்றடைவது வெறுமையை மட்டுமே. இந்த வெறுமையை தாங்க முடியாதபோது இலக்கற்ற கோபமும் வன்முறையும் உள்ளுக்குள் கவிகின்றன.. இவ்வாறான மனநிலையின் விளைவுகளை நாவலின் பல்வேறு தருணங்கள் சுட்டி நிற்கின்றன.
இச்சமயத்தில் இலக்கியங்கள் தற்கொலையை புனிதப்படுத்தியுள்ளனவோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. ஆத்மாநாமின் தற்கொலை, சம்பத்தின் இடைவெளி, சில்வியா பிளாத்தின் மரணம் போன்றவற்றின் மீது விழுந்திருக்கும் ஒளியே சுரேஷை ஈர்த்திருக்கிறது போலும்.

இரண்டாவது, எதிலும் பிடிப்பற்ற நம்பிக்கையற்ற இன்றைய இளைஞர்களின் சிதறலான மனநிலையை இந்த நாவல் பிரதிபலிக்கிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது. இணக்கமற்ற கல்விச் சூழலும் அதன் பிறகான விருப்பத்திற்கேற்ப அல்லது தகுதிக்கேற்ப அமையாத வேலை வாய்ப்புகளும் இளைஞர்களின் மனநிலையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவசரமும் நிர்ப்பந்தகளும் உத்தரவாதமற்ற வாழ்க்கை நிலையும் ஒன்று சேர்ந்து தாளாத மன அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. இன்றைய கலை, அரசியல், சமூகச் செயல்பாடுகளில் பெரும்பாலானவை அத்தகைய மன அழுத்தத்தை இன்னும் தீவிரமாக்கும் முகமாக அமைகின்றனவே அல்லாது தீர்வுகளை முன்வைக்கும் திராணியற்றிருப்பது துரதிர்ஷ்டமானதே.

இந்த நம்பிக்கையின்மையே நாவலின் கட்டமைப்பையும் தீர்மானித்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. நாவலின் போதாமைகளை இட்டு நிரப்ப நாவலுக்குள் நிறைய பாவனைகள் உதவியுள்ளன. கடிதங்கள், மனநல ஆலோசகரின் உரை, நாவல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் ஆற்றும் உரை, சிற்றிதழ் கட்டுரை என்று பலவும் நாவலின் மீதான விமர்சனத்துக்கான பதிலாகவும் சுயகணிப்பாகவும் அமைத்திருப்பதும்கூட உறுதியற்ற மனநிலையின் வெளிப்பாடே.
மூன்றாவது, இன்றைய இளைய தலைமுறையினர் இலக்கியத்தின் செவ்வியல் தன்மையை பொருட்படுத்துவதில்லையோ என்ற ஐயத்தை இந்த நாவல் எழுப்புகிறது.

இலக்கியம் மானுட வாழ்வைப் புரிந்துகொள்வதற்கான பெரும் சவாலின் ஒரு பகுதியைத் தொட்டுக் காட்டவே எப்போதும் முயன்றிருக்கிறது. தனது விரிவான கேள்விகளின் மூலமாகவும் அறிதல்களின் வழியாகவும் வாழ்வின் புதிர்வழிகளின் மீது சிறிதேனும் ஒளி பாய்ச்சவே இலக்கியம் உத்தேசிக்கிறது. இந்த முயற்சியில் கணிசமான தொலைவை அடைய முடிகிற எழுத்துக்களே செவ்வியல்தன்மையைப் பெறுகின்றன. செவ்வியல் இலக்கியங்கள் எழுப்பும் கேள்விகளும் தருகிற மனவிரிவுகளும் காலத்தின் முன் மழுங்காதவை. மண்டியிடாதவை. மனித வாழ்வின் இன்மைகளை ஈடுசெய்யும் காரியத்தை செவ்வியல் இலக்கியமே சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு வாசகன் திரும்பத் திரும்ப செவ்வியல் ஆக்கங்களை நாடுவதன் காரணம் இதுவே. பரீட்சார்த்த முயற்சிகள், உத்திகள், புதிய சொல்முறைகள் கதைசொல்லலின் ஒரு பகுதியாக, கருவியாக மட்டுமே நின்றுவிடுபவை.. தமிழில் உத்தி சார்ந்து எழுதப்பட்ட நாவல்கள் அவற்றின் பரீட்சார்த்தமான முயற்சிகளுக்காகவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனவே அன்றி அவை ஒரு நாளும் செவ்வியல் நாவல்களின் வரிசையில் இடம் பெற்றதில்லை. இடம் பெறவும் முடியாது.

இலக்கியத்திலும் வாழ்விலும் செவ்வியல் தன்மையைப் புறக்கணிக்கும் இளைஞர்களின் அணுகுமுறையே அவர்களின் மனநிலையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகளையே இன்றைய சமூகத்தின் பயங்கரமான நிகழ்வுகள் பலவும் உணர்த்துகின்றன. காதலின் பெயரால் நடைபெறும் வன்முறைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்ட மணவிலக்குகளும் கொலைகளும் மிதவை மனப்பான்மையின் விளைவாக அடைந்திருக்கும் வெறுமையின் வெளிப்பாடுகளே.

நான்காவதாக, ஜாதிய அடையாளங்களும் அதன் விளைவுகளும் இளைஞர்களிடம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று இந்த நாவல் முன்வைக்கும் கேள்வி மிக முக்கியமானது.
கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை முறை, மண உறவு, பிறழ் உறவுகள் என அனைத்துமே கைவசமான பின்னும் நாவலின் கதை சொல்லியான சக்தியின் மனம் எதிலும் நிறைவு கொள்வதில்லை. குடும்பத்தில், அலுவலகத்தில், காதலில், காமத்தில், அரசியலில், பதவியில் என எதிலுமே அவன் ஒன்றிவிடுவதில்லை.. எதிலும் தணிந்திடாத நெருப்பு ஆழத்தில் கனன்றபடியே உள்ளது. அணையாத நெருப்பு கிட்டும் ஒவ்வொன்றையும் கலைத்துப் போடவும் காயப்படுத்தவும் அதன் கண்ணீரைக் கண்டு மேலும் மூர்க்கத்துடன் பற்றியெரியவுமே விளைகிறது. இது இறுதியில் தன்னை எரித்துக் கொள்வதில் முடிகிறது.

செவ்வியல் அம்சங்கள் விலகிப் போன வாழ்வின் அடையாளங்களோ இவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.. சராசரி வாழ்வின் குறியீடுகளாகக் கருதப்படும் எதிலும் நிறைவடையாத மனம் தன்னுள் உருவாக்கிக்கொள்ளும் தாழ்வுணர்ச்சி இவை யாவற்றையும் இல்லாததாக்கி வெறுமையை நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறான வெறுமைக்கும் அதன் விளைவுகளையும் இல்லாமலாக்கவே செவ்வியல் அம்சங்கள், அவை அபத்த நாடகங்களாக இருந்தபோதிலும், மனிதனுக்குத் தேவைப்படுகிறது, இலக்கியத்திலும் சரி வாழ்விலும் சரி உணர்ச்சியின் வழியாக பிணைத்துக் கொள்ளும்போதுதான் ரசிக்கக் கூடியதாக அமைகிறது.

இறுதியாக இந்த நாவல் முன்வைக்கும் குணச்சித்திரங்களின் முரண்களும் அதன் விளைவுகளாக உருவாகும் இரண்டு கேள்விகளும். லட்சியவாதமும் அடுத்தடுத்து ஓயாது தேடி எதிலும் நிறைவுறாத வெறுமையுமாக அமைக்கப்பட்டிருப்பது சுரேஷின் அல்லது சக்தியின் கதாபாத்திரம். இதற்கு நேர் மாறாக ரகு அல்லது குணா கதாபாத்திரம் லட்சியவாதமோ பாவனைகளோ இல்லாத, கிடைத்ததை ஏற்றுக் கொண்டு வெகு சாதாரணமாக இருக்கும் ஒன்று இப்படியானவர்களால் இவ்வாறான குழப்பங்களுக்கும் வெறுமைக்கும் ஆளாகாது வாழ்க்கையை அதன்போக்கில் அனுபவித்து நகர முடிகிறது. லௌகீக வாழ்வின் அடிப்படைகளில் காலூன்ற முடியாத ஒருவன் மரணத்தைத் தழுவ, அதன்போக்கில் தன்னை அனுமதித்துக்கொண்டவன் உலகியல் வாழ்வில் தொடர்கிறான். காதலின் இழப்பும்கூட அவனை ஒன்றும் செய்வதில்லை. இத்தகைய குணச்சித்திர வார்ப்புகளின் விளைவாகவும் அவை அடையும் எல்லைகள் வழியாகவும் எழுகிற கேள்விகள் இரண்டு. ஒன்று எது லட்சியவாதம் பொருளற்றதா? இரண்டு, லட்சியவாதமும் லௌகீகவாதமும் ஒன்றுக்கொன்று பூர்த்திசெய்யும் முரண் இயக்கத்தின் வழியாகவே வாழ்வு முன்னகர்கிறதா?

0

சுரேஷ் பிரதீப்பின் எழுத்து வாசிப்புத்தன்மைமிக்கது. சரளமான இயல்பான மொழிநடை. கச்சிதமான பாத்திர வார்ப்புகள். வசீகரமான சூழல் சித்தரிப்பு.. புதிய சொல்முறையை, நவீன வடிவத்தை அடையும்பொருட்டு நாவலுக்குள் அவர் வலிந்து உருவாக்கியிருக்கும் உடைப்புகள் புதியன அல்ல. தமிழில் முன்பே பலரும் முயன்றிருக்கும் ஒன்றே என்பதால் உத்தேசித்திருக்கும் புதியவொன்றை அடைய இத்தகைய உடைப்புகள் உதவவில்லை. அவை வெறும் உடைப்புகளாக, பாவனைகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

சுரேஷ் பிரதீப் தனது முதல் நாவலை இப்படி யோசித்திருப்பதை அசட்டுத் துணிச்சல் என்று சொல்லலாம். துணிச்சல் என்றும்கூட.
0





‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...