Friday 21 January 2022

ஆன்டன் செகாவ் – சிறுகதை முதல்வர்

 


(ஆண்டன் செகாவ் கதைகள், நூல்வனம் வெளியீடு தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னுரை )

1

உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தோய்வ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் அன்டன் செகாவ். முந்தைய இருவரும் நாவல்களில் செய்திருக்கும் சாதனைக்கு நிகராக செகாவ் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார்.

தமிழில் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும், கரம்சோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும் என பெரும் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு தீவிரமான மொழியாக்கங்கள் செகாவின் கதைகளுக்கு இல்லை.

ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்களின் அரசியல் நிலைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை செகாவ் கொண்டிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கமுடியும். இலக்கிய விமர்சனத்தை பெருமளவில் அரசியல் நிலைப்பாடுகளே தீர்மானித்திருந்த காலகட்டத்தில், ஒரு படைப்பு சமூகத்துக்கு அது தரும் ‘செய்தி’யைக் கொண்டே அளவிடப்பட்டது. அந்த எழுத்தால் பொது மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்வி முதன்மையாக முன்வைக்கப்பட்டது. எழுத்தாளன் பிரச்சினைகளுக்கான தீர்வைச் சுட்டுபவனாகவும் சமூக நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுப்பவனாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவனது படைப்பு ‘வாழ்க்கைக்கு உண்மையாக’வும் சமூக அறம் சார்ந்த துலக்கமான ஒரு செய்தியைக் கொண்டிருப்பதாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் செகாவ் ‘அன்யுதா’ வையும் ‘ஈஸ்டர் இர‘வையும் எழுதினார். ‘ஒரு நல்ல சிறுகதையென்பது அரசியல் சமூக பொருளாதாரம் குறித்த நீண்ட பிரசங்கங்களைக் கொண்டிருக்கக்கூடாது’ என்பதை வரையறையாகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி எப்படி மதிப்பிடுவார்கள்? செகாவின் கருத்து ‘கலை கலைக்காக’ என்பதாகவும் எழுத்தாளனின் சமூகக் கடமையை மறுப்பதாகவும் கலையின் பயன்பாட்டு மதிப்பை வலியுறுத்தும் மரபை மீறுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

மரபான கதைசொல்லல் முறைக்கு மாறாக புதிய வகையான கதைகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளனைப் பற்றிய புதிய வலுவான எண்ணத்தையும் ஏற்படுத்தினார். எழுத்தாளன் என்பவன் ஒதுங்கி நின்று கவனிப்பவன், மிகையாக உணர்ச்சிவசப்படாமல் கட்டுப்பாடுடனும் பணிவுடனும் கொள்கை சார்ந்த அதிகப்பிரசங்கித்தனங்களையும் அறம் சார்ந்த தீர்வுகளை முன்வைக்கும் ஆவலையும் அபாரமான எண்ணங்களை உருவாக்கும் தற்பெருமையையும் தவிர்த்து, தன் எழுத்தை நம்பகத்தன்மையுடனும் துல்லியத்துடனும், கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் என்னும் புதிய சித்திரத்தை அவர் அளித்தார். பெரும்பாலும் அவரும் அப்படித்தான் இருந்தார், இருக்கவும் விரும்பினார். கொள்கை சார்ந்த விஷயங்களில் தனக்கு இருக்கும் போதாமையைக் குறித்த தெளிவு அவருக்கிருந்தது. “அரசியல், மதம், தத்துவம் சார்ந்த உலகளாவிய பார்வை என்னிடம் இல்லை. அவ்வப்போது அவற்றை நான் மாற்றிக்கொள்கிறேன். எனவே, என்னுடைய கதாபாத்திரங்கள் எவ்விதம் காதலிக்கிறார்கள், மணந்து கொள்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், மாண்டுபோகிறார்கள், எப்படிப் பேசுவார்கள் என்பதோடு அவர்களைப் பற்றிய விவரிப்புகளை நான் நிறுத்திக்கொள்கிறேன்” என்று நண்பர் ஒருவருக்கு எழுதினார். அதுதான் எழுத்தாளனின் வேலை என்றும் அதுவே போதுமானது என்றும் கருதினார்.

“ஒரு கலைஞன் தனக்குப் புரிந்த ஒன்றைக் குறித்து மட்டுமே கருத்து சொல்ல முடியும். வேறெந்த ஒரு துறை நிபுணனுக்கும் இருப்பதுபோல எழுத்தாளனுடைய எல்லைகளும் மிகக் குறுகியவை. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். எழுத்தும் கலையும் அனைத்துக்குமான பதில்களைக் கொண்டது, அங்கு கேள்விகளுக்கு இடமில்லை என்று யாரேனும் சொல்வார்களென்றால் அவர் ஒரு வரியைக் கூட எழுதியிருக்க முடியாது அல்லது கற்பனையைக் குறித்த எளிய அறிவும்கூட அவருக்கு இருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம். கலைஞன் ஊன்றி கவனிக்கிறான், வேண்டியதை தேர்ந்தெடுக்கிறான், ஊகிக்கிறான், பிறகு எல்லாவற்றையும் ஒன்றிணைக்கிறான். ஒரு எழுத்தாளனுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால், கேள்விகளுக்கான பதில்களை சொல்வதை விடவும் கேள்விகளை சரியான முறையில் முன்வைப்பதுதான் அவனது முக்கியமான வேலை.”

கதைகளுக்கான கருவைத் தீர்மானிக்கும் தற்செயல் தன்மைக்கு அவர் தந்திருக்கும் இடமும் நுட்பமான விபரங்களை கதையில் அடுக்கியிருக்கும் விதமும் முழுமையை ஒன்றிணைக்கும் பொதுவான அம்சம் என்று எதுவும் இல்லாதிருப்பதும்தான் அவருடைய தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. ஒரு கலைஞனாக அவருடைய பெரும் குறையும் அதுவேதான்.

செகாவின் மீது பெரும் மரியாதையைக் கொண்டிருந்தார் டால்ஸ்டாய். இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. ஆகஸ்டு 1895ம் ஆண்டு, அவருடைய இல்லத்துக்கு செகாவ் முதன்முறையாக வந்து சென்ற பிறகு, தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார் “மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர். நல்ல மனம் கொண்டவராய் தெரிகிறார். ஆனால் இதுவரையிலும் அவருக்கென்று தீர்க்கமான ஒரு பார்வை இல்லை.” ஒரு நாடக ஆசிரியராக செகாவின் மீது அவருக்கு நல்ல மதிப்பு இல்லை. அவரது நாடகங்களில் எதுவுமே நிகழ்வதில்லை என்றும் அறம் சார்ந்த தெளிவின்றி இருப்பதாகவும் டால்ஸ்டாய் நம்பினார். ஆனால் செகாவின் சிறுகதைகள் அவருக்குப் பிடித்திருந்தன. அனைத்துக்கும் மேலாக செகாவ் எனும் மனிதரை அவர் நேசித்தார். ‘செகாவை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை நினைத்து நான் மகிழ்கிறேன்’ என்று தன் நாட்குறிப்பில் டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.

ஆனால் அவருடைய காலத்தின் முக்கியமான விமர்சகராக இருந்த நிகோலாய் மிகைலோவ்ஸ்கி “அசலான தன் ஆற்றலை செகாவ் வீணடிக்கிறார்” என்று செகாவின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

செகாவ் தன் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நண்பர் ஒருவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடுகிறார் “நான் எழுதியுள்ள வரிகளுக்கு நடுவில் பொதுப்போக்குக்கு எதிரான அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து என்னை ஒரு தாராளவாதியாகவோ அல்லது பழமைவாதியாகவோ நிறுவ முனைபவர்களைக் கண்டுதான் அஞ்சுகிறேன். நான் தாராளவாதியோ பழமைவாதியோ அல்லது படித்தவனோ முற்றும் துறந்தவனோ அல்லது அலட்சியப்போக்கு கொண்டவனோ அல்ல. சுதந்திரமான கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன், வேறொன்றுமில்லை. இதில் யாரேனும் ஒன்றாக இருப்பதற்கான ஆற்றலை ஆண்டவன் எனக்குத் தரவில்லை என்று வருந்துகிறேன்.”

விமர்சகர்களின் மீது அவருக்கு மரியாதை இருந்ததில்லை. “நானும் எனது கதைகளின் விமர்சனங்களை தொடர்ந்துப் படித்து வருகிறேன். ஒருமுறை கூட உருப்படியான கருத்தையோ அல்லது நுட்பமான விமர்சனத்தையோ எவரும் எழுதியதில்லை.  உழுது கொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாக தொல்லைப்படுத்தும் ஈயைப் போலத்தான் விமர்சகர்கள் இருக்கிறார்கள்என்று எழுதியுள்ளார்.

வேறெந்த எழுத்தாளர்களை விடவும் கூடுதலான கருணையுள்ளம் கொண்டவர் செகாவ். ஆனால் அவரது கதைகள் வேறெவர் எழுதியதைவிடவும் இரக்கமற்றவையாக அமைந்திருப்பது வேடிக்கையான முரண். அவர் தன் எழுத்தில் தொடர்ந்துத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அதே நேரத்தில் தொடர்ந்து தன்னை விலக்கியும் வந்திருக்கிறார்.

பெரும் மோதல்கள் எதுவுமற்ற வெகு சாதாரண சூழ்நிலைகளின் பின்னணியில், இயல்பான கதாபாத்திரங்களைக்கொண்டு ரஷ்ய வாழ்வை நம்பகத்தன்மையுடன் காட்ட முயல்கின்றன செகாவின் கதைகள். யதார்த்தவாதியான செகாவ் தனது கதாபாத்திரங்களின் மேல் விலகலுடன்கூடிய விசித்திரமானதோர் அனுதாபத்தை காட்டுகிறார். கருணையையும் மன்னிக்கும் குணத்தையும் கொண்ட அவர் எதிலும் கடுமை காட்டியதில்லை. கோட்பாடுகளை அடியொற்றி யாரையும் தண்டிக்கவும் முனைந்ததில்லை.

தனது கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அதிக அழுத்தத்தைத் தந்தவர் செகாவ். கதாபாத்திரங்களை விரிவாக சித்தரிப்பதற்கான இடத்தை சிறுகதைகள் அனுமதிப்பதில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்த செகாவ் வாசகரின் மனத்தில் நுட்பமான சலனங்களை ஏற்படுத்தி அவற்றின் வழியாக கதாபாத்திரங்களை பதியச் செய்தார். இதற்கு அவர் உரையாடல்களை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். சம்பவங்களை விவரிப்பதற்குப் பதிலாக உரையாடல்களின் வழியாக நிகழ்த்திக் காட்டும் இந்த நுட்பத்தை செகாவின் பல கதைகளிலும் காணமுடியும்.

2

செகாவின் எழுத்து வாழ்க்கையை மூன்று முக்கிய காலகட்டங்களாகப் பிரித்து பார்க்க முடியும். ஆரம்ப காலத்தில் தனது கல்விக்காகவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் சுவாரஸ்யமான வாழ்வியல் சம்பவங்கள், விநோதமான மனிதர்கள் என்பதுபோல நிறைய எழுதினார். அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவை உணர்வு ததும்புபவை. மேலோட்டமானவை. 1880 முதல் 1887 வரையிலான இந்த முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டவை அத்தனை முக்கியமற்றவை என்றபோதும் அவற்றில் சுருக்கமான தொடக்கம், நுட்பமான விவரணைகளின் வழியாக கதாபாத்திரத்தை செறிவுடன் வார்ப்பது, மனமோதல்கள், எதிர்பாராத முடிவு போன்ற செகாவின் தனித்துவமான அடையாளங்கள் பலவும் இடம்பெற்றிருந்தன. 1884ம் ஆண்டு வெளியான செகாவின் முதல் சிறுகதைத் தொகுப்பான Tales of Melpomene வில் இடம்பெற்றிருந்த கதைகளில் பலவும் இத்தன்மைகளைக் காணமுடியும். ‘குறும்புக்காரச் சிறுவன்’, ‘ஒரு எழுத்தரின் மரணம்’, ‘மெலிந்தவனும் பருத்தவனும்’, ‘பச்சோந்தி’, ‘வேட்டைக்காரன்’ ஆகியவை இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. 235 கதைகள் இந்த சமயத்தில் எழுதப்பட்டவை என்று குறிப்புகள் உள்ளன.

1888 முதல் 1893 வரையிலான இரண்டாவது காலகட்டத்தில் ஒழுக்கம், தீமையை எதிர்ப்பது, நற்பண்புகள் ஆகியவற்றை முன்வைத்த டால்ஸ்டாயின் ஒழுக்கம் சார்ந்த கொள்கையினால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருந்தார் செகாவ். இந்த இரண்டாவது காலகட்டத்தில் எழுத்து முறையிலும் கதைகளில் கையாளும் கருப்பொருட்களிலும் பரீட்சார்த்தமான சிலவற்றை முயன்றார். வெறுப்பு, அற்பத்தனம், மரணம் ஆகியவற்றுக்கு மாறான வாழ்வின் அழகையும் உணர்வு நிலையையும் அணுகிப் பார்க்கும்விதத்தில் கதைகளை எழுதிப் பார்த்தார். 1890ம் ஆண்டு கிழக்கு சைபீரியாவில் சகலின் என்ற இடத்திலிருந்த வதை முகாமை சென்று பார்த்த பின்பு மனித வாழ்வின் துயரங்களுக்கு டால்ஸ்டாயின் கொள்கைகளால் பலனில்லை என்பதை உணர்ந்தார். இந்த சமயத்தில் அவருக்குள் நிகழ்ந்த உளமாற்றம் அவரது மூன்றாவது காலகட்டத்தைத் தீர்மானித்தது. ‘ஸ்டெப்பி’, ‘பந்தயம்’, ‘முதியவனின் நாட்குறிப்பிலிருந்து…’, ‘குடியானவப் பெண்கள்’, ‘மனைவி’, ‘அண்டைவீட்டார்’, ‘ஆறாவது வார்டு’ ஆகியவை இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

1894ம் ஆண்டிலிருந்து அவரது இறுதிக் காலம் வரைக்குமான மூன்றாவது பருவத்தில்தான் மிகவும் சிக்கலான தனித்துவம்கொண்ட சிறுகதைகளையும் நாடகங்களையும் அவர் எழுதினார். ‘கருந்துறவி’, ‘ரோத்சிடின் பிடில்’, ‘கழுத்தில் அன்னா’, ‘மாடவீடு’, ‘நெல்லிக்கனிகள்’, ‘நாய்க்காரச் சீமாட்டி’, ‘பேராயர்’, ‘மணமகள்’ ஆகியவை இந்தக் காலத்தில் எழுதப்பட்டவை.

நாற்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்த செகாவ் மொத்தமாக 568 கதைகள் எழுதியுள்ளார். இவை பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவை தவிர அவருடைய கடிதங்களும் நாட்குறிப்புகளும் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன.

மாபசானின் கதைகளிலிருந்து எடுத்துக் கொண்ட சிக்கனத்தையும் செறிவையும், கவித்துவம் குறிப்புணர்த்தும்தன்மை ஆகிய இரண்டுடனும் இணைத்து புதிய கதைகளை அவர் உருவாக்கினார். குறிப்பாக கதைகளே இல்லாத கதைகள். அவருடைய கதைகள் பல குழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் சில குழந்தைப் பருவத்தின் நினைவுகளாக அமைந்துள்ளன. குழந்தைப் பருவத்தின் கனவுகளையும்கூட கதைகளில் அவர் கையாண்டிருக்கிறார். பெண்களுக்கான இடம் குறித்த கேள்விகளை எழுப்பும் நுட்பமான கதைகளை எழுதியுள்ள அவரது கடைசிக் கதையான ‘மணமகள்’ பெண் சுதந்திரம் குறித்த முக்கியமான ஒன்று. கிறித்துவ மதம், தேவாலயங்களின் பல்வேறு வழிபாட்டுச் சடங்குகள், பாதிரியார்கள் மதகுருக்கள் பேராயர்களின் அகவுணர்வுகள் ஆகியவற்றைக் குறித்த நுட்பமான பல கதைகளையும் செகாவ் எழுதியுள்ளார்.

‘என்னைப் பொறுத்தவரையிலும் கதையை எழுதி முடித்த பிறகு கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் நீக்கிவிடவேண்டும். ஏனெனில் எழுத்தாளர்களாகிய நாம் பெரும்பாலும் பொய் சொல்வது அந்த இடங்களில்தான்’ என்று செகாவ் சொல்வது மிக முக்கியமான ஒன்று.

செகாவின் பல கதைகளின் முடிவுகளுமே பல்வேறு திறப்புகளைக் கொண்டவையாகவே அமைந்திருப்பதை கவனிக்கலாம். வாழ்வின் ஆழத்தினுள் செறிவாகவும் சுருக்கமாகவும் துல்லியமாகவும் தேடித் திளைத்தவை அவை. கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த விருப்பங்களை அப்பட்டமாகத் திறந்து காட்டியவர் செகாவ். சிக்கலான கதைக் களங்களையோ தெளிவான முடிவுகளையோ கொண்டவையல்ல அவருடைய கதைகள். அனைவருக்கும் தெரிந்த மிகச் சாதாரணமானவற்றின் மீது கவனத்தை ஈர்த்து அதன் மூலமாக விசேஷமான சூழலை உருவாக்கி அதை கவிதையைப்போலவோ அல்லது மனத்தை உலுக்குவதுபோலவோ மாற்றிவிட வல்லவை அக் கதைகள்.

ஒரு நல்ல சிறுகதையின் குணாம்சங்கள் என ஆறு விஷயங்களைச் சொல்கிறார் செகாவ். ஒன்று, அரசியல் சமூக பொருளாதார இயல்புகளைக் குறித்த நீண்ட பிரசங்கங்கள் கதையில் இருக்கக்கூடாது. இரண்டாவது, கதை முற்றிலும் புறவயமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக கதாபாத்திரங்களையும் பொருட்களையும் உள்ளது உள்ளவாறு சித்தரிக்க வேண்டும். நான்காவது, கதை செறிவான அமைப்பில் எழுதப் பட்டிருக்க வேண்டும். ஐந்தாவதாக, துணிச்சலான வெளிப்பாட்டடையும் அசலாகவும் இருப்பதோடு அவை ஒரேமாதிரியாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக, கதை பரிவுணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். எழுத்தின் மீதான செகாவின் அணுகுமுறையை மிகச் சரியாக வரையறுப்பவை இந்த விதிகள். அவரது கதைகளில் ஆசிரியனது குரல் முற்றிலும் தவிர்க்கப்படவில்லை என்றாலும், மிகக் குறைவான அளவிலேயே ஒலித்திருப்பதை கவனிக்கலாம். மிகச் சாதாரணமான சம்பவங்கள், கவனிக்கத் தேவையற்ற விவரணைகள், மிகக் குறைந்த உரையாடல்கள் வழியாக கதைக் கரு என்று ஒன்று இல்லாமல், ஏதேனுமொரு தனிப்பட்ட தருணத்தின் மேல் பார்வையைக் குவித்து, மிகச் சில தனித்தன்மைகளை மட்டும் சுட்டிக்காட்டி, துல்லியமானதும் தனித்துவமானதுமான ஒரு மனோநிலையை உருவாக்கித் தருவதுதான் செகாவின் தனித்துவமான சிறுகதைத் திறனாக அமைந்திருக்கிறது.

3

அந்தோன் பாவ்லோவிச் செகாவ், ஜனவரி 29, 1860ல் ரஷ்யாவிலுள்ள அஸோவ் கடற்கரையிலுள்ள Taganrogல் பிறந்தார். ஜுலை 15ம் தேதி 1904ல் ஜெர்மனியிலுள்ள பாதன்வெயிலரில் மறைந்தார். உலகிலேயே ஆழமற்ற கடல் என்று கருதப்படுவது அஸோவ் கடல். கருங்கடலையொட்டியுள்ள இதை செயற்கைக்கோள்களின் வழியாகப் பார்க்கும்போது கருங்கடலின் ஆழ்ந்த நீலத்துக்கு மாறாக கலங்கிய சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. செகோவின் கதைகளில் காணும் மங்கலான நிறங்களுக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நபகோவ் “புராதன வேலியின் நிறத்துக்கும் வானில் கீழிறங்கித் தவழும் மேகத்தின் வண்ணத்துக்கும் இடைப்பட்ட ஒரு கலவை” என்று இதைத்தான் குறிப்பிடுகிறார்.

செகாவின் தாத்தா பண்ணையடிமையாக இருந்து தனது விடுதலையைத் தானே தேடிக்கொண்டவர். செகாவின் அப்பா பவுல் ஒரு மளிகைக் கடைக்காரர். தகோரங்கைச் சேர்ந்தவர்கள் அவரிடம் அரிசி, காபி, பாரஃபின், எலிப்பொறிகள், அமோனியா, கத்தி, வோட்கா என்று நானாவிதப் பொருட்களையும் விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் கொண்டவர். ஒருமுறை சமையல் எண்ணெயில் செத்துப்போன எலி கிடந்திருக்கிறது. அது தெரிந்தவுடன் எண்ணெயை வெளியில் கொட்டுவதற்கு பதிலாக, பாதிரியாரைக் கொண்டு அந்த எண்ணெயைப் ‘புனிதப்படுத்தி’ய பிறகு தொடர்ந்து விற்பனை செய்திருக்கிறார். அப்பாவின் இந்த குணம், தந்திரமும் மதம்சார்ந்த விஷயங்களில் கண்மூடித்தனமான ஈடுபாடும் கொண்ட, வாழ்வில் முழுமையாக தோல்வியடைந்த இந்தத் தன்மை செகாவின் கதாபாத்திரங்களில் பெரும் பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. பல கதைகளிலும் அப்பாவின் குணநலன்களைக்கொண்ட வெவ்வேறு கதாபாத்திரங்களை வெவ்வேறு பெயர்களில் காணமுடியும்.  மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியும் கொண்ட பெரிய குடும்பம். அவருடைய பெற்றோர்கள் எளிமையானவர்கள், அவ்வளவாய் படிப்பறிவு கிடையாது. மிகுந்த பக்தி உண்டு. செகாவுக்கு அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் உண்டு. அவர்களிடமிருந்து எப்போதும் அவர் பிரிந்து வாழ்ந்ததில்லை. 1866 லிருந்து 1879 வரையிலும் தகன்ரோகிலுள்ள கிரேக்க பள்ளியில் சேர்ந்த அவர் மரபான மதம் சார்ந்த கல்வி கற்றார். அவரது வளர்ப்புமே மதரீதியானதாகவே அமைந்தது. அவரும் சகோதரர்களும் தேவாலயத்தில் தந்தையார் ஒருங்கிணைத்த இசைக்குழுவில் சேர்ந்து பாடினார்கள். தேவாலயங்களில் அவர்கள் விவிலிய வசனங்களையும் பாடல்களையும் வாசித்தனர். மணியொலிப்பவர்களாகவும் பூசனைகளுக்கு உதவுபவர்களாகவும் சேவையாற்றினர்.

1876ம் ஆண்டு அவருடைய தந்தையாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கவேண்டி, மாஸ்கோவில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகன் அலெக்ஸாண்டரிடம் சென்றடைந்தனர். அப்போது பதினாறு வயதேயான செகாவ் பள்ளிக் கல்வியை படித்து முடிக்கும்பொருட்டு தகன்ரோகிலேயே தனித்துவிடப்பட்டார். செலவுகளை சமாளிக்கவென வீடுகளில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். மிக ஏழ்மையான வாழ்க்கையைக் கழித்தார். 1879ல் கல்வியை முடித்ததும் மாஸ்கோவில் இருந்த குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டார். மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

குடும்பத்துக்கு உதவவும் தன் கல்விச் செலவுக்காகவும் பிரபல பத்திரிக்கைகளில் நகைச்சுவைத் துணுக்குகளையும் சிறிய கதைகளையும் புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கினார் செகாவ்.  இந்த விஷயத்தில் செகாவ் தனது அண்ணன் அலெக்ஸாண்டரை பின்பற்றினார். பெரும்பாலான கதைகளை தகரோங்கிலிருந்தபோது அவருடைய ஆசிரியர் ஒருவர் சூட்டிய ‘அன்டோசா செகோந்தே’ என்ற பெயரிலேயே எழுதினார். 1884ம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்த அவர், இறுதிவரை தொழில் முறை மருத்துவராக பணியாற்றவில்லை. ஆனால், தான் கற்ற மருத்துவத்தின்மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தார். பிற அறிவுத்துறைகளைக் கற்பதற்கும் அறிவியல்பூர்வமான தன் அணுகுமுறைக்கும் மருத்துவக் கல்வியே காரணம் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார். மெலிகோவாவில் இருந்த நாட்களில் எண்ணற்ற மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவம் அளித்தார். 1891, 1892 ம் ஆண்டுகளில் காலரா பரவியபோதும் அதே ஆண்டுகளில் பஞ்சம் வாட்டிய நேரத்திலும் தொண்டாற்றினார். மெலிகோவாவில் ஒரு பள்ளியையும் நிறுவினார் செகாவ். அங்குள்ளவர்களுக்கு பயனளிக்கும்வித்தில் அது சிறப்பாக அமைந்தபோது அண்டைய கிராமங்களில் மேலும் இரண்டு பள்ளிகளை உருவாக்கினார். கிராமத்திலிருந்த தேவாலயத்தில் மணிக்கூண்டு ஒன்றையும் கட்டித் தந்தார். தகரோங்கிலுள்ள நூலகத்துக்கு ஆயிரக் கணக்கான புத்தகங்களைக் கொடுத்த செகாவ் 1898ம் ஆண்டுக்குப் பிறகு தான் வசித்த யால்தாவில் கடல்சார் உயிரியில் ஆய்வகம் ஒன்றையும் நிறுவினார். இதுபோன்ற அன்றாட நடைமுறை விஷயங்களில் செகாவ் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் ஓய்வின்றி செயலாற்றுபவராகவும் விளங்கினார். அதே நேரத்தில் இலக்கியப் பணியில் அவர் எப்போதும் தெளிவற்ற சோம்பலான மனநிலையிலேயே இருந்தார்.

பெண்களைப் பொறுத்தவரை செகாவ் அத்தனை விசுவாசமானவராக இருக்கவில்லை. அவர்மேல் காதல் கொண்ட பெண்கள் பலர். லிகா மிசினோவாவிடம் அவர் காதல் கொண்டுவிடும் நிலையில் இருந்தபோதும் 1894ம் ஆண்டு வெளிநாட்டுக்கு செல்ல நேர்ந்த சமயத்தில், குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் போனது. அத்துடன் காதலும் முறிந்தது. 1897ல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அருகில் இருந்த லிடியா அவிலோவா எனும் நாவலாசிரியையும் அவரது காதலிகளில் ஒருவர். இருவருக்குமிடையிலான காதலைப் பற்றி மிகச் சில இடங்களில் சொல்லிச் சென்றிருக்கிறார். தனது கடிதங்களில் ‘நிச்சயிக்கப்பட்ட’ பெண்ணைப் பற்றி சொல்லியிருப்பது யாரைப் பற்றி என்பது தெரியவில்லை. அந்தப் பெண்ணின் ‘மிசூஸ்’ எனும் செல்லப் பெயரைத்தான் ‘மாடவீடு’ கதையில் வரும் தங்கைக்குப் பெயராக வைத்திருக்கிறார். 1899ம் ஆண்டில்தான் ஓல்கா நிப்பரை சந்திக்கிறார் செகாவ். மாஸ்கோ கலைக் கூடத்தில் நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகை. செகாவ் தன் இறுதி நாட்களில் எழுதிய ‘கடல்பறவை’ (Seagull) நாடகம் 1898ம் ஆண்டு அந்த நாடக அமைப்பினரால்தான் மேடையேற்றப்பட்டது. அடுத்த ஆண்டில் Uncle Vanya நாடகம் அரங்கேற்றப்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்த 1901ம் ஆண்டில் வெற்றிகரமாக அமைந்த Three Sisters நாடகமும், 1904ம் ஆண்டில் அவரது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாக பெரும் வெற்றியாக அமைந்த The Cherry Orchard நாடகமும் மேடையேற்றப்பட்டது.

1897 ஆம் ஆண்டு மார்ச் இருபத்தி இரண்டாம் தேதி மாலை, செகாவ் தனது நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமான அலெக்சி சுவோரினுடன் உணவகத்துக்குச் சென்றார். எப்போதும்போல நேர்த்தியாக உடையணிந்திருந்த செகாவ் சாப்பிட உட்கார்ந்த சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். எலும்புருக்கி நோய் அவரைத் தாக்கியிருந்தது. சிகிச்சைக்காக பாதன்வெய்லெர் நகரத்துக்குச் சென்றார் செகாவ். அவரது மனைவி ஓல்கா நிப்பர் உடன்சென்றார். அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஸ்வோரர் செகாவின் எழுத்தை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் அவரைத் தாக்கியுள்ள நோயின் தீவிரத்தைக் குறித்து எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், செகாவுக்கு தன் உடல்நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னால் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவேன் என்று எழுதியுள்ளார்.

ஆனால் அவரால் எழுத முடியவில்லை. கடைசி நாடகமான Cherry Orchard நாடகத்தை மிகவும் சிரமப்பட்டே எழுதி முடித்தார். 1904ம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி நள்ளிரவில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. மயக்கத்தில் இருந்த செகாவ் கடல் மாலுமிகளைப் பற்றியும் ஜப்பானியர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தீர்மானித்திருந்தார். உடனடியாக, சாம்பெய்னை வரவழைத்து செகாவுக்குக் கொடுத்தார். “நான் ஷாம்பெய்ன் குடித்து பலநாட்களாகிவிட்டன” என்பதுதான் அவர் கடைசியாகச் சொன்னது.

மாஸ்கோவுக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அவருடைய சவப்பெட்டியின் மேல் ‘கடல்சிப்பி’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கவே மீன்களைக் கொண்டுவரும் சரக்குப் பெட்டியில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கில் மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர். அதே ரயிலில் போரில் மாண்ட ஜெனரல் கெல்லரின் உடலும் கொண்டுவரப்பட்டிருந்தது. அவரது சவப்பெட்டியை ராணுவத்தினரின் மரியாதையுடன் கொண்டு சென்றதைக் கண்ட பொதுமக்களில் பலர் அது செகாவின் சவப்பெட்டி என்று நினைத்துக்கொண்டு ஊர்வலத்தில் சென்றனர். செகாவ் என்ற மேதைக்கு அரசு ராணுவ மரியாதை செலுத்துகிறது என்று தவறுதலாக நினைத்துவிட்டனர்.

எனவே, செகாவின் சவ ஊர்வலத்தில் சில நூறு நபர்களே கலந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால் தன் குதிரையில் ஒரு ராணுவ அதிகாரியும் சவாரி செய்தார்.  கெல்லரின் ஊர்வலத்துக்கு தாமதமாக வந்த அதிகாரியான அவர், செகாவின் சவ ஊர்வலத்தை ராணுவ அதிகாரியின் இறுதி ஊர்வலம் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

செகாவின் இறுதி ஊர்வலம்கூட அவரது கதையின் அபத்த நாடகம் போலவே அமைந்துபோனது.

4

செகாவின் பாதிப்பைக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ரேமண்ட் கார்வர். ‘அமெரிக்கன் செகாவ்’ என்றே அவரை சில விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கார்வர் உயிருடன் இருக்கும்போது பதிப்பிக்கப்பட்ட கடைசி தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசி கதை ‘Errand’, செகாவின் மரணத்தை விவரிக்கும் ஒன்று. ஆனால் செகாவுடனான அவரது முக்கியமான பிணைப்பு அவரைப்போலவே வெளிப்படையான அவ்வளவாய் முக்கியமற்ற விவரணைகளுக்குள் கதையின் அர்த்தத்தை சிதறடித்திருப்பது. செகாவைப் போலவே கார்வரின் கதைகளின் முடிவுகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியங்களைக் கொண்டிருப்பது.

செகாவின் பாதிப்பை அவர்கள் அறியாமலே கொண்டிருப்பவர்கள் என்று கதரீன் மான்ஸ்ஃபீல்ட், ஷெர்புட் ஆண்டர்சன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, காதரின் அனா போர்டர், ஃபிளானரி ஓ கார்னர், ஜான் கீவர், ரேமண்ட் கார்வர், ஆலிஸ் மன்ரோ, யீயுன் லீ, ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் ஆகிய சிறுகதையாளர்களின் நீண்ட பட்டியல் உள்ளது.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Heartbreak House (1919) நாடகத்தில் செகாவின் The Cherry Orchard நாடகத்தின் பாதிப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இன்னொரு பிரிட்டிஷ் நாடக ஆசிரியரான ஹெரால்ட் பின்ட்டின் படைப்புகளிலும் அமெரிக்க நாடகாசிரியர்களான டென்னிஸ் வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர் ஆகியோரின் நாடகங்களிலும் செகாவின் பாதிப்பு மறைமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தமிழின் முதல் சிறுகதை ‘ஆறில் ஒரு பங்கு’ சுப்ரமணிய பாரதியாரால் 1913ம் ஆண்டு எழுதப்பட்டது. செகாவ் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்தே தமிழில் தமிழ்ச் சிறுகதை பிறந்துள்ளது. சி சு செல்லப்பா உள்ளிட்ட தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் தொடங்கி இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரைக்கும் அவரது கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

அவருடைய கதைககளில் ஒன்றை நீங்கள் சொல்ல முயலும்போது சொல்வதற்கு எதுவுமேயில்லை என்பது தெரியவரும்’ என்று சாமர்செட் மாம் குறிப்பிட்டிருப்பதையும் கவனிக்கலாம்.

 

5

1985ம் ஆண்டு செகாவின் 125வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படைப்புகள் அனைத்தையும், ஆங்கில மொழியாக்கத்தில், கால வரிசைப்படி ஐந்து தொகுதிகளாக ராதுகா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி திருப்பூரில் நான் பணியாற்றிய அலுவலகத்துக்கு வந்த என்.சி.பி.எச் சின் விற்பனை பிரதிநிதியிடமிருந்து இருபத்தி நான்கு ரூபாய்க்கு புத்தகமொன்றை வாங்கினேன். ஆன்டன் செகாவின் சிறுகதைத் தொகுதி வரிசையில் 1880 முதல் 1885 வரையில் எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட முதலாவது புத்தகம் அது. செகாவின் புகழ்பெற்ற கதைகளான ‘பச்சோந்தி’, ‘வேட்டைக்காரன்’ ஆகிய கதைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஆன்டன் செகாவின் கதைகளை எனக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய புத்தகம் அதுதான். அதில் இடம்பெற்றுள்ள செகாவ் குறித்த மாக்ஸிம் கார்கியின் விரிவான கட்டுரை மிக முக்கியமான ஒன்று.

தீபம் இதழில் 1967ம் ஆண்டு ‘ஆண்டன் செஹாவ்’ என்ற தலைப்பில் அசோகமித்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களுக்கான சுருக்கமான செறிவான அறிமுகக் கட்டுரை அது.

தமிழில் செகாவைக் குறித்த உரையாடல்களை தொடர்ந்து காணமுடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் ‘செகாவின் மீது பனி பெய்கிறது’, ‘செகாவ் வாழ்கிறார்’ ஆகிய இரு நூல்களும் முக்கியமானவை. அதேபோல, ‘மனப்பிராந்தி’ தொகுப்புக்கு கோகுல் பிரசாத் எழுதியுள்ள ‘செகாவ்: சிறுகதைக் கலையின் மேதை’ என்ற முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. எஸ்.ஏ.பெருமாள் எழுதி செம்மலர் நவம்பர் 2010 இதழில் இடம்பெற்ற விரிவான கட்டுரை கீற்று இணைய இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.  

2013ம் ஆண்டில் செங்கதிருடன் சேர்ந்து ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாட்கள். கார்வரின் ‘Errand’ (சின்னஞ்சிறு வேலை) என்ற சிறுகதை செகாவின் இறுதி நாட்கள் பற்றிய ஒன்று. அபாரமான கதையான அதை வாசித்தபோது மீண்டும் செகாவின் மீது என் ஆர்வம் திரும்பியது. புகழ்பெற்ற சில கதைகளை தேடி வாசித்தேன். தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சில கதைகளை மொழிபெயர்த்தேன்.

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கோவிட் ஊரடங்கு நாட்களின்போது மீண்டும் செகாவ் என் பார்வைக்குத் தட்டுப்பட்டார். நூல்வனம் மணிகண்டன் அனுப்பித் தந்திருந்த ‘ஆண்டன் செகாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்’ புத்தகத்திலிருந்த கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். ரிச்சர்ட் பீவரும் லரிசா வோல்கொன்ஸ்கியும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த முப்பது சிறுகதைகளைக் கொண்டது அந்தத் தொகுப்பு. தொடக்க காலம் முதல் இறுதிக் காலம் வரையிலான செகாவின் சிறந்த ஆனால் பரவலாக அறியப்படாத பல கதைகளை உள்ளடக்கியது.

சில கதைகளை மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணம் வந்தபோது தமிழில் இதுவரையிலும் வெளிவராத கதைகளாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதுவரையிலும் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பை சேகரித்தேன். ஆனால், இன்று நமக்குக் கிடைக்கும் எந்தவொரு தொகுப்பிலும் மூலக் கதையைப் பற்றிய குறிப்போ விபரமோ தரப்படாமல் இருப்பது கதையை தெரிவு செய்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

1952ம் ஆண்டு, டி.என்.ராமச்சந்திரன் மொழிபெயர்த்து நாகப்பட்டினம், இமயப் பதிப்பகம் பதிப்பித்திருக்கும் ‘காதலி’ என்ற தொகுப்பே செகாவை தமிழில் அறிமுகப்படுத்திய முதல் தொகுப்பாக இருக்கவேண்டும். இத்தொகுப்பில் ‘காதலி’, ‘துணைவி’, ’மூன்று ஆண்டுகளில்’ ஆகிய மூன்று கதைகளும், ‘காதலி’ கதையைக் குறித்த டால்ஸ்டாயின் விமர்சனமும் இடம்பெற்றுள்ளன.  அடுத்து, ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் ராதுகா பதிப்பகம் முன்பு வெளிட்ட தொகுப்பு ‘அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்’ முக்கியமானதும் தமிழில் பரவலாக செகாவை அறிமுகப்படுத்தியதும்கும். அடுத்தது, எம்.எஸ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான ‘அன்டன் செகோவ்-சிறுகதைகள்’, பாதரசம் வெளியீடு. மூன்றாவது, தமிழினி வெளியீடாக, க.ரத்னம் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மனப்பிராந்தி’. நான்காவதாக, ‘ஆன்டன் செக்காவ்-ஆகச் சிறந்த கதைகள்’, சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் மொழியாக்கத்தில் தடாகம் வெளியிட்ட தொகுப்பு. இவற்றிலுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் செகாவின் ஐம்பது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வேறு யாரும் மொழிபெயர்த்து, தொகுப்பில் இடம் பெறாமலோ அல்லது தொகுக்கப்படாமலோ இருப்பதை கணக்கில் கொள்ளவில்லை.

இவற்றுள் ‘வான்கா’, ‘பச்சோந்தி’, ‘நாய்க்காரச் சீமாட்டி’, ‘ஆறாவது வார்டு’, ‘வேட்டைக்காரன்’, ‘பந்தயம்’, ‘நெல்லிக்காய்’ ஆகிய கதைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. தமிழில் அதிகமும் அறியப்பட்ட செகாவின் கதைளும் இவையே.

இந்தக் கதைகளைத் தவிர்த்து செகாவின் சிறுகதை மேதமையை வெளிப்படுத்தும், தமிழில் இதுவரை வெளிவராத கதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை செகாவின் புகழ்பெற்ற கதைகள் இல்லை என்றாலும் அவ்வளவாய் அறியப்படாத கதைகளின் வழியாக பயணம் செய்யும்போது கதைசொல்லியாக செகாவ் ஏன் அத்தனை பெரிய பாதிப்பைச் செலுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே தமிழில் வெளிவந்திருக்கும் சில கதைகளைக்கொண்டும், இத்தொகுப்பில் உள்ள பனிரெண்டு கதைகளிலிருந்தும், ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதிய ஒரு மேதையின் சிறுகதையுலகையும் அவரது புனைவாற்றலையும் முழுமையாக நம்மால் புரிந்துகொள்வது கடினமான காரியம். ஆனால், இந்தக் கதைகளை வாசிக்கும் வாசகர்களை அவரது பிற கதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்னும் சில கதைகளை மொழிபெயர்க்கத் தூண்டும். சிறுகதை வடிவத்துக்கு செகாவ் அளித்திருக்கும் பங்களிப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்வதற்கான சிறிய ஒரு சாளரத்தை இது திறக்கும். இத்தொகுப்பின் பின்னுள்ள நம்பிக்கை அதுதான்.

நாவல் பிறந்த கதை - மணல் கடிகை-சொல்லிலே கண்ட கலைவண்ணம்


அம்மன் நெசவு’ நாவல் வெளிவந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. சென்னையில் ஒரு நாள் மாலையில் தமிழினி அலுவலகத்தில் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம். புதிதாக நான் எழுதியிருந்த சிறுகதை ஒன்றை நண்பர் வாசித்துக் கொண்டிருந்தார். கதை நேர்த்தியாக உள்ளதென்று அவர் அபிப்ராயம் சொன்னபோது வசந்தகுமார் அதை வாங்கிப் பார்த்தார். எட்டுப் பக்கங்கள் கொண்ட அந்தக் கதையை நிதானமாக வாசித்தார். ஒன்றும் சொல்லாமல் வெளியில் இறங்கி நடந்தார். தெரு முனையில் இருந்த கடையில் தேநீர் குடித்துவிட்டு சிகரெட்டை பற்றவைத்தார் “அடுத்த நாவலைப் பத்தி யோசிச்சீங்களா?”.

புதிய நாவலைக் குறித்து உத்தேசமான ஒரு சித்திரம் மட்டுமே அப்போது எனக்குள் இருந்தது. “திருப்பூரைப் பத்தி எழுதலாம்னுதான் யோசிக்கறேன்.”

“யோசிச்சிட்டே இருந்தா நாவல் எழுத முடியாது. சுறுசுறுப்பா உக்காந்து எழுதிப் போயிட்டே இருக்கணும்.”

கதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று யோசித்தபடியே அறைக்குத் திரும்பியதும் கதையை எடுத்து நீட்டினார் “நாவலுக்கான மெட்டீரியல கதையா எழுதி வீணடிக்கப்படாது.”

ஊருக்குத் திரும்பியதும் எழுதத் தொடங்கினேன். சுறுசுறுப்பாக நகரவில்லை. ஆனால் தினமும் எழுதினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒழுங்கு கூடி கதை சீராக நகர்ந்தது.

நான்கு மாதங்களுக்குப் பின் நாவலின் முதல் வரைவு இருநூறு பக்க அளவில் தயாராகியிருந்தது. நாவலின் மையக் கதாபாத்திரமான சிவாவின் கதையை மட்டுமே எழுதியிருந்தேன். அன்பழகன், திரு, பரந்தாமன், சண்முகம் ஆகிய நால்வருமே ஓரிரு அத்தியாயங்களில் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அசுர வேகத்தில் வளரத் தொடங்கிய பனியன் தொழிலின் காரணமாக மேட்டுப்பாளையம், நெசவாளர் காலனி, குமரானந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்த கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து மட்டுமே எழுதியிருந்தேன். வசந்தகுமாருக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

மறுநாள் மாலையில் அழைத்தார். எழுதிய பகுதிகளிலிருந்த சிறப்பம்சங்களை உற்சாகத்துடன் சொல்லிவிட்டு நாவலின் கூடுதல் சாத்தியங்களைக் குறித்து யோசிக்கும்படி சில ஆலோசனைகளைக் கூறினார்.

உற்சாகத்துடன் மீண்டும் எழுதத் தொடங்கினேன். சிவாவின் நண்பர்கள் நால்வரின் கதாபாத்திரங்களும் திரண்டு வந்தன. உமா, விமலா, அருணா, பூங்கொடி, சித்ரா என பெண்கள் வலுவாக உருவாகினர். சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நான் முன்பு உத்தேசித்திருக்காத பல சம்பவங்களும் உரையாடல்களும் அதனதன் இடத்தில் கச்சிதமாக அமைந்தன. தொழில் நகரத்தின் அசுர வளர்ச்சியின் போக்கில் பொருளாதாரத்தின் பொருட்டு நேரும் சமரசங்கள், மதிப்பீடுகளின் வீழ்ச்சி, சூழல் சீர்கேடு, வேலை வாய்ப்புகள் என அடுக்குகள் பலவும் பொருந்தி வந்தன. வேலை நாட்களில் காலையும் மாலையுமாக ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரமும் விடுமுறை நாட்களில் எட்டு மணி நேரமுமாய் வேறு எதிலுமே கவனம் செலுத்தாது எழுதிக் கொண்டிருந்தேன். முதல் வரைவை எழுதும்போது ஒவ்வொரு பக்கமாக நாவலை நான் எழுதி நகர்த்திக்கொண்டிருந்த அனுபவத்துக்கு மாறாக இந்த முறை நாவல் ஒவ்வொரு நாளும் வேகமாய் என்னை உள்ளிழுத்துச் சென்றது. சமயங்களில் தாங்க முடியாத பெரிய அவஸ்தையாகக்கூட நினைத்ததுண்டு.

கணினியில் அல்லாது கையால் எழுதிய காலம். மொத்தமாய் அறுநூறுக்கும் அதிகமான பக்கங்கள். எழுதி முடித்ததும் தாள்களைக் கட்டி அனுப்பிய நாளன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.

முதல் வரைவை எழுதி ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது வரைவு தயாரானது. அச்சுக் கோர்த்து, மெய்ப்புப் பார்த்த பிரதி எனக்கு வந்து சேர்ந்தது. முதன்முதலாக நாவலின் அச்சுப்பிரதி என் கையிலிருந்தது. நிறைய ஒற்றுப் பிழைகள் திருத்தப்பட்டிருந்தன. பல இடங்களில் பொருத்தமற்ற சொற்களுக்கு பதிலாக சரியான சொற்கள் குறிக்கப்பட்டிருந்தன. சில அத்தியாயங்கள் முன்னும் பின்னுமாக இடம் மாறியிருந்தன. கூடுதலாய் சில வரிகளையும் பத்திகளையும் எழுத வேண்டிய இடங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

எல்லாவற்றையும் சரிசெய்து அனுப்பிய அந்த வார இறுதியில் சனிக்கிழமை காலை திருப்பூருக்கு வந்து சேரும்படி அழைப்பு. சென்னையிலிருந்து வசந்தகுமார் வந்திருந்தார். மகுடேசுவரனின் மாருதி 800 காரில் மூவரும் புறப்பட்டோம். லட்சுமி நகர், மேட்டுப்பாளையும், பி.என்.ரோடு, நஞ்சப்பா பள்ளி, இரவு நேர வண்டிக் கடைகள், பேக்கரிகள், நொய்யலாறு, ஒரத்துப்பாளையம் என நாவலில் இடம் பெற்றிருந்த இடங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினோம். நாவலின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் ஒரு மலைக்கோயில் இடம்பெறும். கொங்கணகிரி, கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஒதியமலை ஆகிய அந்த ஐந்து மலைகளிலும் ஏறி இறங்கினோம். இரண்டாவது நாள் காலையில் காரில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக திட்டமிட்ட நேரம் கடந்து மாலையில்தான் சென்னிமலைக்கு செல்ல முடிந்தது. அந்திப்பொழுதில் கோயிலுக்கு பின்னால் சரிவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளை நாவலில் முக்கியமான இடமாக அமையும் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்களிலுமே நாவலைத் தவிர வேறெதைக் குறித்தும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட மூன்றாவது படி வந்து சேர்ந்தது. இப்போதும் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன. புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டிய இடங்களும் அடையாளமிடப்பட்டிருந்தன.

சில கதாபாத்திரங்களின் பெயர்களில் இருந்த குழப்பங்களை நீக்கி, புதிய பத்திகளையும் அத்தியாயங்களையும் எழுதி அனுப்பினேன். நான்காவது வரைவு தயாரானது. இந்த முறை அது எனக்கு அனுப்பப்படவில்லை. பதிலாக நானே சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆழ்வார்ப்பேட்டை ஈஸ்வரி வாடகை நூலகத்துக்கு எதிர் சந்திலிருந்த தமிழினி அலுவலகத்துக்கு நான் சென்றபோது பரபரப்பாக இருந்தது. அந்த இடத்திலிருந்து அலுவலகத்தை ராயப்பேட்டைக்கு இடம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகத் தொடங்கியிருந்தன. அருகில் இருந்த நண்பர் சீனிவாசனின் அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்று நாவலின் நான்காவது படியைத் தந்தார் வசந்தகுமார். பொறுமையாகப் படித்துப் பார்க்கும்படி சொல்லிவிட்டு போய்விட்டார். நாவலின் சில பக்கங்களில் துண்டு அட்டைகள் செருகப்பட்டிருந்தன. ஓரிரு வரிகளில் குறிப்புகளும்கூட. நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். நான் நினைத்திருந்ததற்கும் மேலாக நாவல் நல்லபடியாக உருவாகியிருந்தது.

மாலை நான்கு மணிக்கு தேநீருக்குப் பிறகு ஒரு கத்தை வெள்ளைத்தாள்களை எடுத்துக்  கொடுத்தார். அடையாளமிட்டிருந்த பகுதிகளில் சேர்க்க புதிய அத்தியாயங்களை எழுதுங்கள் என்றார். ‘‘இடம் மாற்றும் வேலை முடிய நெடுநேரமாகும், எனவே பொறுமையாக எழுதுங்கள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எழுத வேண்டியவை ஒன்பது அத்தியாயங்கள். மலைப்பாக இருந்தது. கீழே இறங்கி தனியாக கால்போன போக்கில் நடந்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பியபோது அறையில் யாரும் இருக்கவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு உட்கார்ந்து ஒவ்வொரு அத்தியாயமாக எழுதலானேன். மொத்தம் அறுபத்தி நான்கு பக்கங்கள். எழுதி முடிக்கும்போது இரவு மணி பனிரெண்டைத் தொட்டிருந்தது. களைத்திருந்தேன். எழுதிய தாட்களை ஒரு உறையில் போட்டு அப்படியே வைத்துவிட்டு அறைக்குச் சென்றுவிட்டேன்.

காலை பதினோரு மணிக்கு வந்தபோது எழுதிய பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டு கணினியில் தட்டச்சு செய்ய கொடுக்கப்பட்டிருந்தது. ‘‘நாவல் முடிந்துவிட்டதல்லவா?’’ என்று கேட்டேன். ‘‘இன்னிக்கு சாயந்திரம் இன்னொரு அவுட்புட் எடுத்துப் பாத்துருவோம்” என்றார். ‘அய்யோ’ என்றிருந்தது. ஐந்தாவது படி. “இன்னும் எழுதனுமா?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

‘‘தேவைப்படாதுன்னு நெனக்கறேன், பாப்போம்” சிகரெட்டை அணைத்து ஆஷ் டிரேயில் நசுக்கினார் “அச்சுக்குப் போறதுக்கு முன்னாடி முடிஞ்ச வரைக்கும் திருத்தமா நல்லபடியா எழுதிடணும். அவசரப்பட்டா சரியா வராது.” ஐந்தாவது படியில் நாவலின் நான்காவது பகுதியில் இருந்த ஒரு அத்தியாயத்தை எடுத்து கடைசி அத்தியாயமாக வைத்திருந்தார். சென்னிமலையில் அந்தி சாயும் நேரத்தில் ஏற்பட்ட அனுபவம் அது.

ஒற்றுப் பிழைகளை சரிசெய்துவிட்டு மறுநாள் மதியம் நாவலின் இறுதி வடிவம் உறுதியானது. கடைசியாக ஒரு முறை படித்துவிடலாம் என்று மறுபடி ஒரு மெய்ப்புப் பிரதி அச்சிடப்பட்டது. அந்த ஆறாவது படியை இருவரும் மாற்றி மாற்றிப் படித்தோம். சிறிய முன்னுரையை அப்போதுதான் எழுதினேன்.

நாவலின் தலைப்பை முதலில் நான் தீர்மானித்திருக்கவில்லை. நாவலின் முக்கிய கதாபாத்திரமான சண்முகம் தான் எழுதவிருக்கும் ஒரு நாவலைக் குறித்து நண்பர்களிடம் பேசுவான். அந்தப் பகுதியை எழுதும்போதுதான் ‘மணல் கடிகை’ என்ற பெயர் அகப்பட்டது.

பல மாதங்களுக்கு முன்பு சிறுகதையாக எழுதி, ‘நாவலுக்கான மெட்டீரியலை கதையாக எழுதி வீணாக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தப்பட்ட அந்தச் சிறுகதைதான் நாவலின் முதல் பகுதியின் கடைசி அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. உமா தன் கணவனையும் சேர்த்துக் கட்டிக்கொண்டு தீக் குளிக்கும் அந்தக் காட்சியைத்தான் சிறுகதையாக எழுதியிருந்தேன்.

இன்றும்கூட ஒரு சிறுகதையை எழுதுவதற்கு முன்பு அந்தச் சொற்களை ஒருமுறை யோசித்துக் கொள்கிறேன்.

0

( அந்திமழை – ஜனவர் 2022 )

 

 

 

 

Sunday 2 January 2022

வல்லினம் – புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்



வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்மான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம், உழைப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளையும் வல்லினம் இதழும் சந்தித்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘சொல் புதிது’ இதழை நடத்திய அனுபவத்தை அந்தக் கட்டுரை நினைவுபடுத்தியது. மலேசிய எழுத்தாளர்களின் பங்களிப்புடன் உலகெங்கிலுமுள்ள படைப்பாளிகளின் எழுத்துகளையும் வல்லினம் தொடர்ந்து வெளியிடுகிறது.

செப்டம்பர் 2021 இதழ் ‘புதிய படைப்பாளி’களின் கதைகளுடன் வெளியானது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதி வரும் இளம் படைப்பாளர்களுடைய கதைகள். அதில் சிலரது கதைகள் முதன்முதலாக வெளியாயின. வல்லினத்தின் முக்கியமான ஒரு முயற்சி இது. புதிய படைப்பாளிகளுக்கான களத்தை அமைத்துத் தருவதென்பது ஒரு இதழின் அடிப்படைக் கடமை.

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழில் பங்களித்துள்ளவர்களில் ஓரிருவரின் கதைகளைத் தவிர பிறரது கதைகளை முதன்முறையாக நான் வாசிக்கிறேன். இந்தக் கதைகளைக் குறித்த உரையாடல் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மனப்போக்கையும் கதையை அணுகும் விதத்தையும் விளங்கிக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

புனை கதை எழுதப்பட்ட பிறகே வாசிக்கப்படுகிறது. நாம் வாசிப்பது நிகழ்ந்து முடிந்த ஒன்றை. அதன் உருவாக்கத்தில் இருப்பது ஒருவர் மட்டுமே. எழுத்தாளன். அந்த வேளையில் கதை நிகழ்கிறது, மொழியின் வழியாக அதை எழுத்தாளன் நிகழ்த்துகிறான். ஒரு கருவியாக மட்டுமே.

எனவே, அது இப்படி அமைந்திருக்கலாம், இதுபோல எழுதியிருக்கலாம் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையில் போஸ்ட் மார்டம்தான். ஆனால் இந்த உரையாடல், இதில் பரிமாறப்படும் கருத்துகள் அடுத்து எழுதப் போகும் கதையின் உருவாக்கத்தில் மறைமுகமாக உதவக்கூடும். கதையின் உருவம் (body) நுட்பங்கள் (technique) சார்ந்து சில தெளிவுகளைத் தரக்கூடும்.

கதையின் உருவம், மொழி, வெளிப்பாடு சார்ந்து இங்கு விவாதிக்கப்படும் சில விதிகள் கறாரானவை அல்ல. எல்லா கதைத் தளங்களுக்கும் கருப்பொருட்களுக்கும் பொருந்துபவையும் அல்ல. ஒருவித வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொரு கதையும் எழுதப்படும்போது தனக்கான விதிகளை தானே உருவாக்கிக் கொள்ளும். அவ் விதிகள் கச்சிதமாக அமைவது எழுதுபவனின் பயிற்சியையும் முயற்சியையும் வாசிப்பையும் பொறுத்தது.

ஏற்கெனவே சிறுகதைகளைக் குறித்த எனது முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருப்பதுபோல இன்று புனைவெழுத்தாளர்களுக்கான வெளி மிக விரிவானது. விரைவானதும்கூட. எழுதியதை உடனடியாக உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வசதி வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு இணைய இதழிலும் குறைந்தது பத்து கதைகள் இடம் பெறுகின்றன. அதில் சரிபாதி புதியவர்களின் கதைகள்.

இதிலுள்ள சவால், இத்தனை பேருக்கு நடுவில் தன்னுடைய கதையை தனித்துவப்படுத்துவதும் வாசிக்கச் செய்வதும்தான். கதை வெளியானவுடன் அதைப் பற்றிய ஒரு கவனம் உருவாகும்போது கூடுதலாக சிலபேர் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கவனத்தைப் பெறுவதுதான் புதிய எழுத்தாளர்களுக்கான பெரும் சவால். அப்படியொரு கவன ஈர்ப்பை நிகழ்த்தும் வகையில் கதைகள் அமையவேண்டும். பிற கதைகளிலிருந்து தன்னை தனித்துவப்படுத்திக் கொள்ளும் தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும். மின்னி மறையும் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில் அக்கதை தனித்துவத்துடன் ஒளிர்ந்து நிற்கவேண்டும். முக்கியமானது, அந்த எழுத்தாளரின் பெயர் திரும்பத் திரும்ப நினைவில் வந்து மோதும்படியான கதையாக அது அமைந்திருக்கவேண்டும். இன்று எழுதிவரும் எண்ணற்ற புதிய எழுத்தாளர்களிடையே மயிலன் ஜி சின்னப்பனும் பா.திருச்செந்தாழையும் கவனம் பெற்றது அப்படித்தான்.

வல்லினம் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் பதிமூன்று கதைகளுமே நல்ல வாசிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. கதை வடிவிலும் மொழியிலும் கச்சிதமும் செறிவும் கூடி வந்துள்ளன. வாசிப்பை இடையூறு செய்யும் வகையிலான வாக்கியக் குழப்பங்களையோ இலக்கணப் பிழைகளையோ காண முடியவில்லை. இதெல்லாம் அத்தனை முக்கியமா என்று கேட்டால், ஒரு புனைவெழுத்து சீரான வாசிப்பை உறுதிப்படுத்துவதுதான் அதன் முதல் தகுதி என்பது என் எண்ணம். இந்தக் கதைகளை எழுதியிருக்கும் பலருக்கும் கதையை சரியாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது..

புதியவர்களின் சிறப்பிதழுக்காக இக் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கும் ம.நவீன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் உழைப்பும் கதைத் தேர்வில் அவர்கள் காட்டியிருக்கும் அக்கறையும் பாராட்டுக்குரியது. சிறப்பிதழ் என்பதற்காக கதைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தகுதியான கதைகளை மட்டுமே பரிசீலித்து, தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதினான்கு கதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை, வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை, சொல்முறையிலும் மொழியிலும் வெவ்வேறானவை. ஒரே இதழில் அமைந்த, வெவ்வேறு தன்மைகள் கொண்ட கதைகள் என்பது இதழுக்கு மட்டுமல்லாமல் பிற கதைகளுக்கும் உரிய இடத்தை உறுதிசெய்யும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றன. கதைகள் ஒவ்வொன்றும் இன்னொரு கதையின் இடைவெளியை இட்டுநிரப்புகின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்துகொள்கின்றன.

பலரும் தொடக்கநிலையில் இருப்பவர்கள், சிலருக்கு முதல் கதைகள். ஆனால் இவர்கள் அசாதாரணமான கதைக்களங்களை துணிச்சலுடன் அணுகியிருப்பது வியப்பளிக்கிறது. நம்பிக்கையைத் தருகிறது.

0

மனிதன் தன் மரணத்துக்குப் பின் தனக்கொரு தொடர்ச்சியை விரும்புபவன். நிரந்தரமற்ற இவ்வுலகில் தன்னை மரணமற்றவனாக நிலையானவனாக உணர அந்தத் தொடர்ச்சி அவனுக்குத் தேவைப்படுகிறது. அவனது வாழ்வின் மொத்த இலக்குமே அதுதான்.  “பேரன் பேத்திகளின் நினைவில் இருக்கும்வரை அழிவில்லை” என்ற உணர்வே பாசமாக கொஞ்சலாக மாறுகிறது.

இந்திய மரபில் நீத்தார் சடங்கு மிக முக்கியமானது. முந்தைய தலைமுறையுடனான தொடர்பை உறுதிப்படுத்தும் தவிர்க்கமுடியாத கண்ணியாகக் கருதப்படும் ஒன்று.

ஒரு சிறுகதை இவ்வாறான ஒரு அடிப்படை உணர்வைத் தீண்டும்போது உடனடியாக அந்தக் கதையுடனான உளப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களால் திரும்பத் திரும்ப எழுதப்பட்டபோதும் அந்த உணர்ச்சி மழுங்குவதில்லை. கதை அந்தப் புள்ளியைத் தொட்டவுடனே மனம் மேலும் தீவிரத்துடன் பொங்குகிறது.  

நீத்தார் சடங்கை அடிப்படையாகக்கொண்டு மனத்தின் ஆழங்களை ஊடுருவிப் பார்க்கும் கதை பாலாஜி பிருத்விராஜின் ‘அனல் அவித்தல்’. திருத்தமான சொல்முறை, பிசகின்றி கச்சிதமாக உணர்ச்சிகளை சரியான அளவில் கடத்தும்படியான உரையாடல்கள், மிகுதியான கொதிப்புகளோ வெதும்பல்களோ இல்லாத சித்தரிப்பு என அனைத்துக் கூறுகளும் சரிவர அமைந்திருக்கும் ஒன்று.

0

புலன்களைக்கொண்டே நாம் இந்த உலகை அறிகிறோம். அந்த அறிதல் மனத்தின் ஆழத்தில் படிந்து உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. நாம் சோர்ந்திருக்கும் சில வேளைகளில் தன்னிச்சையாக அவை மேலெழுந்து பல்வேறு உணர்வுநிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். இயல்பான, சாதாரண நிலையில் அவ்வாறான அனுபவம் சிறு சலனம்போல விலகிச் சென்றுவிடும். சமயங்களில் கனவாக உருப்பெற்று கலைந்து மறையும். ஆனால், கடுமையான உளச் சிக்கல்களுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அவ்வாறான அனுபவங்களும் அவற்றைக் கொண்டு நமக்குள் படிந்திருக்கும் ஆழமான கற்பனைகளும் சேர்ந்து புதியதொரு உலகத்துக்குள் இட்டுச் சென்று அதனையே நம்பவும் கட்டாயப்படுத்தும்.

இவ்வாறான உளவியல் அனுபவங்கள் புனைகதைகளுக்கான எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டவை. அவ்வாறான ஒரு சாத்தியத்தைக் களமாகக் கொண்டது த.குமரனின் ‘சிறுத்தை’.

ஆழ்மனத்துள் கிடக்கும் அச்சம் புறத்தில் முரட்டு தைரியமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். எச்சரிக்கைகளை புறந்தள்ளும். சாகசவாதியாக உருப்பெருக்கிக் காட்டும். இந்த மனக்கோலங்களையும் அதனை நம்பகத்தன்மையுடன் துலக்கிக் காட்டும் காட்சிச் சித்தரிப்புமாய் அமைந்திருக்கும் விதத்தினால் இக்கதை கவர்கிறது.

மந்தி மலை குறித்த வெவ்வேறு செவிவழிக் கதைகள், சிறுத்தைகள் பற்றிய ஊகங்கள், கதைகள், மாயாவி சமூகம், காதல் மரங்கள், இனுவு பிரார்த்தனை என கதையின் மாயத்தன்மைக்கு உரமேற்றும் பல்வேறு விவரங்கள் கதைக்கு செறிவூட்டியுள்ளன.

குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய பேராவலும் அதன் ஆழத்தில் திரளும் அச்சமும் கூடி அதுவாகவே தன்னை பாவித்துக்கொள்ளும் மனப்பிறழ்வு நிலையைச் சொல்லும் பல கதைகளின் முடிவை எளிதில் ஊகிக்க முடியும். இந்தக் கதையிலும் அது நிகழ்ந்திருக்கிறது.  

0

கிராமத்து மனிதர்களின் எளிமையும் இயல்புமான சித்திரத்தினூடாக அவர்களிடையே நிலவும் உறவின் ஆழம் அதிலுள்ள உள் விரிசல்கள் இரண்டையும் மிக நுட்பமாக சொல்லும் கதை பிரானாவின் ‘வெண்ணப்புட்டு’.

பிள்ளைகள், குடும்பம், உறவுகள் என்று மனிதன் தன்னை ஒரு சமூக விலங்காக அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தபோதும் உண்மையில் அது பாவனைதான். அந்த பாவனையை அவன் அசலென்று நம்புந்தோறும் அவனுக்குள் இருக்கும் ஆதி உணர்வுகள் மறைந்திருக்கும் அல்லது வலுவிழந்திருக்கும். அவனது வெளிப்பாடுகளை நடவடிக்கைகளை செய்கைகளை பகுத்தபடியே செல்லும்போது இறுதியில் எஞ்சி நிற்பது சுயநலம் அல்லாது வேறொன்றில்லை. அதுவே உயிரியல்பு.

இத்தனை உக்கிரமான யதார்த்தத்தை வெளிப்படையாகச் சொல்வதை நம்மால் தாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவது அனைத்தின் மீதான நம்பிக்கையையும் குலைத்து ஒன்றுமில்லாக்கிவிடும் என்பதால்தான் கலை தன் பாவனைகளைக்கொண்டு அதனை பசப்பி வெளிப்படுத்துகிறது. வெறுமையின் மீதான வண்ணங்களைத் தூவுகிறது.

இந்தக் கதையை சிறுமியின் கோணத்தில் சித்தரிப்பதுமே அப்படியொரு பாவனைதான். அதுவே இக்கதையை எளிமையாக அணுக உதவுகிறது.

பழைய வாழ்க்கை முறையில் தம்பதிகளுக்கு இடையிலிருக்கும் அன்னியோன்னியம், கருப்பு வெள்ளைப் படங்கள், தாத்தாவின் காளிவேஷம், கருப்புக் கண்ணாடி போன்ற விவரணைகள் கதையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில் நகரவாழ்வின் நெருக்கடிகளை விவரிக்காமல் பூடகமாக உணர்த்தியிருக்கிறது. 

சிறுமியை வசீகரிக்கும் உறவுகள் உலவும் கிராமம் சார்ந்த புறச் சித்திரங்களை இன்னும் சில வரிகளில் அழுத்தமாக தந்திருக்க முடியும்.

கதையின் தொடக்கத்தில் ஒன்றும் இறுதியில் ஒன்றுமாக கிராமியப் பாடல் அமைந்திருக்கிறது. சுவாரஸ்மான பாடல்கள். முதல் கதை எழுதுபவர்களின் ஆர்வம் இவ்வாறான சில நுட்பங்களை கைகொள்வதில் ஆச்சரியமில்லை. தொடர்ந்து வாசிக்கும்போது, எழுதும்போது நல்லவொருகதைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது தன்னாலேயே புரிந்துவிடும்.

தமிழ்ச் சிறுகதையில் கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் கதைகள் வழியாக நாம் அறிந்திருக்கும் களங்கமின்மையும் எளிமையுமான சிறுவர்களின் உலகம் எத்தனை தூய்மையானது, நிபந்தனைகளற்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

0

நவீன இளைஞர்களின் மன உலகம், பாலியல் சார்ந்த மிகைக் கற்பனை இவ்விரண்டையும் இணைத்துப் பார்க்கும் கதை பிரசன்ன கிருஷ்ணனின் ‘நட்சத்திரங்களின் வாக்குமூலம்’.

பலவீனமான உணர்வமைப்புகளின் மீதமைந்த வாழ்வின் உள்ளீடற்ற தன்மையின் உடலியல் வெளிப்பாடுகளும் அது தருகிற அச்சமும் விளக்க முடியாதது. ஒரு காட்சியாக, அது அரும் அதிர்ச்சியாக, அந்த அதிர்ச்சியின் விளைவாக ஏற்படும் உடலின் கோளாறாக, அதன் விளைவாக ஏற்படும் மனச் சரிவுகளை நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது.  முன்னும் பின்னுமாக சம்பவங்களை நகர்த்தியிருப்பதன் வழியாக கதையின் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. அதேபோல கதையின் முடிவு சற்றும் எதிர்பாராததாய் நம்ப இயலாததாய் அமைந்திருக்கிறது. தீர்வற்ற ஒரு மனச் சரிவு எந்த எல்லைக்கும் ஒருவனை கொண்டு செல்லும் என்பதை மட்டுமே பதிலாக வைத்துக்கொள்ள முடியும்.

புதிதாக எழுத முனையும் இளைஞர்களில் சிலர் கதையை கவனப்படுத்தும்பொருட்டு கலவியின் புற இயக்கங்களை ஒரு அம்சமாக கதையில் சேர்க்க முனைவதுண்டு. உடனடி கவன ஈர்ப்பை அக் கதைகள் தருகின்றன என்ற ஆர்வமே அத்தகைய உத்தியை நாடச் செய்கிறது.

உடலின் காமத்தை வாசித்து கிளர்ச்சி கொள்ளும் காலம் இப்போதில்லை. அதற்கான கற்பனைக்கெட்டா சாத்தியங்களுடன் எல்லையற்ற ஊடகவெளி திறந்து கிடக்கிறது. ஆனால் காட்சிகளால் தொட முடியாத மனத்தின் ஆழங்களை இலக்கியம் மட்டுமே அடைய முடியும். காமத்தின் அக ஆழங்களை அதன் இருளை அதன் அடைபட்டிருக்கும் வாசல்களை முட்டி முட்டித் திறக்க முயலலாம். இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம்.

0

போர்ச் சூழலில் போருக்குத் தொடர்பற்ற ஒருவன் மரணத்துக்கு அஞ்சிக் கிடப்பதும் அவனை அதிலிருந்து இன்னொருவன் நம்பிக்கையளித்து மீட்பதுமான அடர்த்தியான கதை ஜி.எஸ்.எஸ்.நவீனின் ‘மரணக்குழி’.

இனி மீட்பில்லை என்று தன்னையே கைவிட்டுவிட்ட நிராதரவற்ற நிலையில் ஒரு சொல் அனைத்தையும் மாற்றிவிடும். கைகொடுத்து மேலே தூக்கிவிடும். அதுவரையிலும் எதுவுமே தெரியாத இருளினூடே சிறு துளி வெளிச்சத்தைக் காட்டும். அங்கிருந்து அனைத்தும் மாறிவிடும். அந்தக் குறிப்பிட்டத் தருணம் வந்தமையும்போது அதை கைகொண்டுவிட்டால் இன்னொரு வாழ்க்கை.

உண்மையில் இது மரணக்குழி இல்லை. அன்றாட வாழ்வின் ஒரு குறியீடாகத்தான் அமைந்திருக்கிறது. எப்போதுமே அச்சுறுத்தும் சாத்தியங்களை கொண்டிருக்கும் வாழ்வில் இப்படி ஒரு குரல், ஒரு சொல் நம்மை தேற்றித் தர வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து மீண்டு விடும் சாத்தியம் உள்ளது.

நவீனின் முந்தைய சில கதைகளைப் படித்திருக்கிறேன். அடர்த்தியான மொழியும் செறிவான வாக்கிய அமைப்பையும் கொண்டவை. ஒவ்வொரு வார்த்தையையும் வாசகன் உள்வாங்கியபடியே நகரும் கூரிய கவனத்தைக் கோருபவை. சூழலையும் பின்னணியையும் வலுவாகக் கொண்டிருப்பவை. ஆனால் இதற்கு நேர்மாறாக அவரது உரையாடல் மொழி மிக இயல்பானது. மண் மணம் கொண்டது. இவ்விரண்டும் இணையும் போது கதை தன்னளவில் உறுதிப்பட்டுவிடுகிறது.

குணா கவியழகன், சயந்தன், அனோஜன், அகர முதல்வன் உள்ளிட்ட ஈழ எழுத்தாளர்கள் பலரது கதைகளையும் நினைவுக்கு வரச் செய்தது இக் கதை.

0

உருவகக் கதை என்று எண்ணும்படியான உபதலைப்புகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டது விஜயகுமாரின் ‘ம்ருகமோக்ஷம்’. உண்மையில் உருவகக் கதைகள் மிக எளிமையான வடிவையும் மொழியையும் கொண்டவை, இக்கதை அவ்வாறன்றி அடர்த்தியான மொழியும் கட்டமைப்பும் கொண்டிருக்கிறது.

வழக்கமான, இயல்பான மொழியைக் கொண்ட கதைகளுக்கு நடுவே தத்துவத்தின், யோகத்தின் சொல் மொழியைக் கொண்ட ஒன்று. இந்தக் கதையின் ஆதாரம் தத்துவம். மனித வாழ்வின் பல்வேறு நிலைகளை வேற்றுயிர்களின் வடிவினைக்கொண்டு விளக்க அல்லது விளங்கிக் கொள்ள முயலும் ஒன்று.

வழக்கமான கதையைப் படிப்பதுபோல இந்தக் கதையை வாசிக்க இயலாது. மிகவும் நுட்பமான சொல்லாடலை ஒவ்வொன்றாகப் பிரித்துப் புரிந்துகொண்டே முன்னகர முடியும். யோகத்தின் கூறுகளையும் தத்துவத்தின் அடிப்படைகளையும் உருவகங்களின் வழியாக ஒரு புனைகதையாக மாற்றுவதென்பதே சவாலான முயற்சி. அதைத் துணிச்சலுடன் முயன்றுள்ளது இக்கதை.

இதுபோன்ற தத்துவ விசாரங்களை ஒரு சிறுகதைக்குள் அமைப்பது விபத்தாக முடியும் சிக்கல் உண்டு.

இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் ஒரு விஞ்ஞானக் கதையாக அல்லது சூழலியல் கதையாகவும் அணுக முடியும்.

0

குற்றவுணர்ச்சி ஒரு நிழலாகி தொடர்ந்துத் துரத்தி வரும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டது ஹரிராஸ்குமார் ஹரிஹரனின் ‘வெண்நாகம்’. இந்திய மரபில் பாம்பு முக்கியமான ஒரு படிமம். உளவியல் ஆராய்ச்சியிலும் பாம்பின் இடம் அதேயளவு முக்கியமானது. திரும்பத் திரும்ப வெவ்வேறு வடிவில் படிமமாகவும் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிற்பம், ஓவியம், கவிதை என அனைத்து கலை வடிவங்களிலும் பாம்பின் உருவம் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. காமத்தின் குறியீடாகவும் இது கருதப்படும் இது கனவுகளின் பல்வேறு தோற்ற நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஒன்று.

உலகிலுள்ள பாம்பு வகைகளில் குறிப்பிட்ட சில வகை மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை என்று உரக்கச் சொல்லப்பட்டாலும்கூட பாம்பின் மீது நம் ஆதி மனம் கொண்டுள்ள அச்சம் இன்னும் விலகியபாடில்லை.

அரவத்தின் மீதான அச்சத்தை அது தரும் மனக்குழப்பத்தைத் தொட்டுச் செல்லும் இக்கதைக்குள் நுட்பமாக அமைந்திருக்கும் காமம் கதையின் முக்கிய புள்ளியாகும்.

0

மிக நுட்பமான அந்தரங்கமான உணர்வின் அடிப்படையில் புனைகதைக்குரிய பூடகத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை ஸ்ரீவிஜியின் ‘பூஜா அன் ஹாத்திக்கு’.

இரு பெண்களுக்கிடையிலான அக்கறைமிக்க, உளப்பூர்வமான உறவு, இன்னவென்று வகைப்படுத்த முடியாத அதன் ஆழம், வேறுவிதமாக அதைப் புரிந்துகொள்வதில் உள்ள சாத்தியம், சட்டென்று அது துண்டுபட்டுப்போகும் யதார்த்தம் என பல்வேறு கோணங்களையும் மிக எளிமையான விதத்தில் நகர்த்திச் செல்கிறது இந்தக் கதை.

சிறிது கவனம் பிசகினாலும் வேறு விதமாக அர்த்தமாகிவிடும் அபாயம் கொண்ட கதைக்களம் கவனமாகவும் கச்சிதமாகவும் கையாளப்பட்டுள்ளது. சொல்லியிருப்பதைவிடவும் சொல்லாமல் விட்டதில் நிறைய சாத்தியங்களைக் கதையின் இடைவெளியில் நிரப்ப முடிந்திருக்கிறது.

பெண்களின் உலகம், உடல் சார்ந்த அவர்களது கவனம், கவலைகள், கண்காணிப்பு என எல்லா விஷயங்களையும் கதையோட்டம் கவனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில் அவை பிரச்சாரத் தொனியில் எதுவும் அமையவில்லை என்பது முக்கியமானது.

இதுபோன்ற நுட்பமான கதைக்கருவைக் கொண்டிருக்கும் கதைகளில் கதாபாத்திரங்களும் கதைச் சூழலும் உயிர்ப்புடன் அமைவது முக்கியமானது. அதுவே கதையின் மேற்பரப்பில் வெளிப்பட்டிருக்காத ஆழங்களுக்கு வாசகனை இட்டுச் செல்ல உதவும். இக்கதையில் அது இயல்பாக அமைந்திருக்கிறது.

0

கைகளில் உருளும் கலைடாஸ்கோப் நொடிக்கு நொடி வண்ணங்களையும் வடிவங்களையும் உருமாற்றிக் கொண்டேயிருக்கும். மனமும் அப்படித்தான். ஓரிடத்தில் கால்கொள்ளாது ஒன்றை அடுத்து இன்னொன்று என தாவியபடியிருக்கும். அதன் போக்குகளையும் நிலைதடுமாற்றங்களையும் உற்றறியவே அறிவியலும் உளவியலும் யோகமும் பல்வேறு துறைகளும் தொடர்ந்து முயல்கின்றன. மனத்தின் ஆழத்தை அறியும் முயற்சியின் ஒரு பகுதியே இலக்கியமும் கலையும்.

அரவிந் குமாரின் ‘அணைத்தல்’ கதையும் மனத்தின் பல்வேறு நிறங்களையும் நிலைகளையும் சுட்டிக் காட்ட முனைகிறது. அறம், நீதி, கடமை, நியாயம் என்று வெவ்வேறு மதிப்பீடுகளை சார்ந்து ஒட்டுமொத்த சமூகத்தின் வரையறைகளை பொதுவாகவே ஏற்றுக் கொண்டிருந்தபோதும் தனிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காரண காரிய தர்க்கம் எதுவுமில்லாமல் தனக்கான ஒரு உறுதியுடன் அவற்றை மீறுவதோ அல்லது பொருட்படுத்தாமல் இருப்பதோ நடப்பதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. அந்தந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கான மதிப்பீடு அது. அதில் பொதுவான மதிப்பீடுகள் செல்லுபடியாகாது. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கான பதிலும் இல்லை. வினைப்பயன், பாவம் போன்றவை வரையறைக்குள் இருத்துவதற்கான சில கருவிகளாகச் சொல்லப்பட்டபோதும் எல்லா நேரங்களிலும் அவை செல்லுபடியாவதில்லை.

‘அணைத்தல்’ கதையின் உள்ளடுக்குகள் இவ்வாறான தர்க்கங்களைத் தொடர்ந்து அடுக்கிச் செல்கின்றன. கதையில் உள்ள சின்னஞ்சிறு கதாபாத்திரங்களும்கூட தமக்கான தர்க்கத்துடன் கதையின் ஒட்டுமொத்த உரையாடலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

சீராகத் தொடங்கி அடுத்தடுத்து கதையின் அடுக்குகள் இயல்பாக விரிந்து கச்சிதமாக முடியும் இக்கதையின் இன்னொரு முக்கியமான பலம் மலேசியப் பின்னணி.

0

தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் பலசமயங்களில் சுவாரஸ்யமானவை. விநோதமானவை. அதுவரையிலும் விடை தெரியாமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஒரு புதிரை சுலபமாகத் திறந்து காட்ட வல்லவை. நடந்து முடிந்த பிறகு அது அப்படித்தான் நடந்ததா என்றே சந்தேகம் எழும். அந்த நேரத்தில் இருந்த நம் மனநெருக்கடியைத் தெரிந்துகொண்டு அப்படியொரு சம்பவம் நடந்ததா என்றுகூட நினைக்கத் தோன்றும்.

வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவன். அப்போதுதான் தன்னுடைய வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கும் இன்னொருவன். இருவரையும் ஒரு தற்செயல் பயணம் சந்திக்கச் செய்கிறது. இயல்பான உரையாடல். அது நடந்து முடியும்போது முதலாமவனுக்கும் ஒரு தெளிவு பிறக்கிறது.

தன் கனவு நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கப்போகும் பெரும் தொழிலதிபரை அந்த இளைஞன் எப்படி தன்வசப்படுத்தினான் என்பதைச் சொல்வதாக முடியும் கதை சிவமணியத்தின் ‘ஒப்புரவு’.

சீரான கதை. சிக்கலில்லாத சித்தரிப்பு. இருவருக்கும் இடையிலான உரையாடலின் போது எழும் மனஉணர்வுகளை வெளிக்காட்டுவதுபோல புறச் சித்தரிப்புகள். உதாரணமாக,

தொழிலதிபர்களுக்குகுருவை வெளிப்படையாத் தேடுறதுலேயோ, அவங்கிட்ட யோசனை கேட்குறதுலேயோ நெறைய தயக்கம் இருக்கு. அதுவே அவங்களுக்கு.பணிஞ்சபடி பேசுற  என்னை மாதிரியான ஆட்கள் கிட்டே யோசனை கேட்கிறதுலே பெரிய தயக்கமில்லை.”

வேகமாக வீசிய எதிர்காற்று, மணலை அள்ளி எடுத்து வண்டியின் முன்கண்ணாடியில் கொட்டியது. ரிஷி சன்னமாக நிலைதவறினான்காரின் கண்ணாடியில் தண்ணீர் தெளித்துஇணை துடைப்பான்களை இயக்கித் தெளிவானான்.

பொதுவாகவே புதிய ஒரு நபரைக் கண்டதும் நம் மனம் அவரை சற்று கீழானவராகவே எடைபோடும். அது மனித இயல்பு. அவரது மேதமை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்போது முதலில் அதை ஒப்புக்கொள்ள மறுத்து பொறாமையும் அலட்சியமும் தலைதூக்கும். இதை அவர் பொருட்படுத்தாமல் தன்னியல்பில் இருக்கும்போது ஒரு நொடியில் தணிந்து அவரை இணக்கமாக உணரத் தொடங்குவோம்.

இந்த உணர்வுகளை கதை மிக இயல்பாக கையாண்டிருக்கிறது.

மேலாண்மை நுட்பங்களை கதையில் சொல்லும்போது ஒருவித lecturing tone அமைவதுண்டு. ஆனால், இதுபோன்ற கதைகளில் அதைத் தவிர்க்க முடியாது. கதையின் வாசிப்புக்கு ஊறு செய்யாமலிருந்தால் போதும்.

இந்தக் கதையின் இன்னொரு முக்கியமான அம்சம் கதையின் முடிவு. காரில் அவன் ஏறும்போது அவன் கோவில் அடையாளத்தைச் சொன்னதும் அவன் கோவிலுக்குத்தான் போகிறான் என்று இவன் எண்ணுகிறான். அப்போதிருந்த மனநிலையில் தானுமே கோயிலுக்குப் போகலாம் என்று தீர்மானிக்கிறான்.

ஆனால், வந்தவன் கோயிலருகில் இறங்கி ஒரு உணவு விடுதியை நோக்கி நடக்கிறான், நண்பர்களுடன் விருந்துக்காக.

இதுவுமே இவன் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்று.

ஒரு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இந்தக் கதையின் கடைசி பத்தி இல்லாமல் இருந்தால் கதையின் முடிவு இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கும். இப்போது இருப்பது வலிந்து சேர்க்கப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

0

போர்க் குரல்கள் இல்லாத இலங்கைக் கதை ப்னாஸ்ஹாசிமின் ‘காவல்காரன்’. வாசிக்க சற்று சிரமப்படும்படியான மொழியில் அவ்வளவாய் பழக்கப்படாத சொற்களில் பின்னணியில் அமைந்தது. நமக்குப் பழக்கமில்லாத ஒரு புலத்தில் கதை நிகழும்போது வாசிப்புக்கு சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்துவது.

கதையின் களம் மாந்திரீகம் சார்ந்தது என்பது அடுத்த சவால். மாந்திரீக விஷயங்களில் ஆர்வம்கொண்ட ஒருவன் அதைத் தேடிப் போய் அதிலேயே தொலைந்துபோவதுதான் கதையின் மையம்.  

பொதுவாகவே இதுபோன்ற மாந்திரீக விஷயங்களை பகுத்துணர்ந்து புரிந்துகொள்வதோ விளக்குவதோ சாத்தியமில்லை. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னும், மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களின் மீதான நம்பிக்கை என்பது அப்படியேதான் இருக்கிறது. இன்னும் நமது கலை, இலக்கிய வடிவங்களில் இதுபோன்ற அம்சங்களுக்கு கணிசமான இடம் இருக்கிறது. மாந்திரீகம் ஒரு இலக்கிய வகைமையாகவே இருக்கிறது. அதிபுனைவுக்கான பொருத்தமான களம் என்பது கூடுதல் பலம். மாய யதார்த்தம், மீமெய்மை என்று பல்வேறு விதமான அணுகுமுறைகளில் சொல்லப்படுகிறது. உலகெங்கும் ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன.

இந்த வகைமையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த கதைகள் வெளியாகியுள்ளபோதும் அதிகமும் அவை எழுதப்படுவதில்லை. புதிய எழுத்தாளர் ஒருவர் அப்படியொரு கதையை எழுத முனைந்திருப்பது பாராட்டுக்குரியது.

0

சிறுகதையின் தொடக்கம் மிக முக்கியமானது என்பது பாலபாடம். நல்ல கச்சிதமானத் தொடக்கத்துடன் கூடிய கதை வாசகர்களை உடனடியாக உள்ளிழுத்துக் கொள்ளும். ‘இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்குபோல் கண்கள்’ என்று கதை தொடங்கும்போதே நம் புலன்கள் அனைத்தும் ஒன்று குவிந்து கதையில் ஒன்றிவிடுகின்றன.

போருக்குப் பின்பான இறுக்கமான காலகட்டத்தில் நடக்கும்  செந்தாழை கதையின் தொடக்கம் இது. முகமது ரியாஸ் எழுதியது.

தங்க நாணயங்களுக்காக நம்பி வந்தவனையும் அவன் மனைவியையும் ஜப்பானிய இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பவனின் கதை. அவனது குற்றவுணர்ச்சியே வெட்டி வைத்தத் தலையையும் அதன் கண்களையும் கண்டு அஞ்சுகின்றன.

மனத்தின் இருண்ட அடுக்குகளை நோக்கிச் செல்லும் கதைகள் தனித்துவம் வாய்ந்தவை. எழுதி எழுதி விலக்க முடியாத மர்மம் அது. புதுமைப்பித்தனிலிருந்து இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை தொடர்ந்து அதை முயல்கிறார்கள்.

இதுபோன்ற கதைகளில் கதைகளின் புறச் சூழல் பொருந்தி அமைவது முக்கியமானது. போருக்குப் பின் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிற நகரம். இராணுவத்திடம் சிக்கிவிடக்கூடாது என்று அஞ்சும் மக்கள். எப்படியாவது தப்பிச் சென்றுவிடவேண்டும் என்ற தவிப்பு. பிழைப்புக்காக கிடைக்கும்வேலையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம். கதைசொல்லியின் மீதான அவளது ஈர்ப்பு. ஆனால் கதைசொல்லியின் மனத்துள் மறைந்திருந்த கள்ளம்.  இத்தனையையும் கதையின் ஓட்டத்தில் அடுக்கடுக்காக இறுக்கமாக அமைந்திருப்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு.

இதற்கு நடுவே அன்னாசிப் பழ சாகுபடி, நண்டு சமைப்பது போன்ற விவரணைகளும் கதையின் வாசிப்புத்தன்மையை சற்றும் குலைக்காது அதை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதாக அமைந்துள்ளன.

கதையின் ஒற்றை வரி போகிற போக்கில் வருகிறது.

யானைக்கு முன் ஒரு உண்மை உண்டு. தான் யானையென தன்னையறிவது. அது தெரிந்துவிட்டால் எந்த மந்திரமும் யானையைக் கட்டுப்படுத்த முடியாதுஎன்று சிரித்தேன். மீண்டும் நாணயங்கள்க்லிங்..க்லிங்என்றன.

இரண்டாவது முறையாக அல்லது மூன்றாவது முறையாகப் படிக்கும்போதுதான் எத்தனை அழுத்தமான அர்த்தம் பொதிந்த வரி என்பது தெரிய வருகிறது.

ஒவ்வொருவரும் அடுத்தவரை எடைபோட்டு அவர்களை அறியவே முற்படுகிறோம். நாம் யாரென அறிந்துகொள்ளும் முனைப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படி அறியும் போது நம்மைப் பற்றிய உண்மைகள் அத்தனை உவப்பானதாக இருப்பதில்லை. எத்தனை மலினங்கள், கயமைகள், பொய்மைகளை உள்ளடக்கி மறைத்திருக்கிறோம் என்பதை அப்படியே நேருக்கு நேர் ஒப்புக்கொள்ளும் துணிவு இருப்பதில்லை.

கதைசொல்லி அந்த நாணயங்களின் மீது ஆசை வைத்தது தொடக்கத்திலிருந்தே அவன் திட்டமா? அல்லது அந்தக் கணத்தில் நிகழ்ந்ததா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

மலேசியாவில் செந்தாழை எனப்படும் அன்னாசி கதையின் ஒரு அழுத்தமான படிமமாக திரண்டு நின்று கதையை உயரமான இன்னொரு தளத்துக்கு நகர்த்திவிடுகிறது.

0

மனித குலத்தின் ஆதி நாட்களை அவன் வாழ்க்கைப் போக்கை அதில் கிளைத்த மோதல்களை அகம் மெல்ல மேலெழுந்து அனைத்தையும் மூடுவதை என பெரும் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது பிரதீப் கென்னடியின் ‘உயிர் மரம்’ குறுநாவல்.

உறுப்புகளின் குறிகளைத் தாங்கியவர்களுடைய பெயராக அந்த உறுப்புகளே நிலைப்பதில் தொடங்கி ஒவ்வொரு அடுக்காக விரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை இந்தியிலிருந்து மொழிபெயர்த்தேன். குகை வழி சமூகத்திலிருந்து தொடங்கி இந்திய சுதந்திரத்தின் காலகட்டம் வரைக்குமான மனித குல வரலாறு சுவாரஸ்யமான கதையாக விவரிக்கப்பட்டிருக்கும் முக்கியமான நூல். இந்தக் குறுநாவலைப் படிக்கும்போது அதுதான் நினைவில் எழுந்தது.

சவாலான கதைக்களம். அதற்கேற்ற அடக்கமான சீரான கதைமொழி. சொற்களையும்கூட மிகப் பொருத்தமாக தெரிவு செய்திருக்கிறார். நிறைய புதிய சொற்களையும் உருவாக்கியிருக்கிறார்.

மனித வரலாறு ஒரு பெரிய விருட்சமென விரிந்து தளைத்து உதிர்ந்து மூப்படைந்து மீண்டும் தளைத்து வளரும் ஒன்று என்ற கற்பனை தரும் எழுச்சியை ‘உயிர்மரம்’ என்ற சொல் சாத்தியப்படுத்துகிறது.

எத்தனை முறை மரத்தைப் பார்த்தாலும் சலிப்பதில்லை. ஒரே மரம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புத்தம் புதிதாகவும் வேறு தினுசாகவும் தெரியும் விந்தையை விளக்க முடியாது.

மனித வரலாற்றின் ஒவ்வொரு ஏடும் அப்படியான வியப்புகளை உள்ளடக்கியது. இன்று இத்தனை காலத்துக்குப் பின் நமது அன்றாட புழக்கத்தில் உள்ள பழக்கங்களை அவை எப்படி தொடங்கியிருக்கும் என்று யோசிப்பதும் ஆச்சரியமானது. மனித சமூக வரலாற்றின் பல்வேறு சாத்தியங்களும் இதுபோன்ற சிந்தனைகளிலிருந்து புனைவுகளிலிருந்தே உருவாகியிருக்க முடியும்.

0

இக்கதைகளைத் தவிர, ‘கீரவாணி’ என்ற பத்தியும் இச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

ராகத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மனோதத்துவ முறையிலும் இசை நுட்பங்களின் அடிப்படையிலும் அதைப் பகுத்தாயும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாஸ்திரீய சங்கீதத்தை உயரியதாகவும் சினிமா தொடர்பான இசையை அவ்வாறல்லாத ஒன்றாகவும் அணுகும் மனோபாவமும், உயர்ந்தது தாழ்ந்தது என்ற வாதங்களும் முடிவை எட்டாது வெவ்வேறு குரல்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பவை. கலையின் தூய்மைவாதம் குறித்த தர்க்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மேலெழுந்து புதிய குரல்களில் புதிய சட்டகங்களைக்கொண்டு ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.

கீர்த்தனைகளைப் பாடுவது உயர்வானது என்றும் அதே ராகத்தில் அமைந்த சினிமா பாடலைப் பாடுவது கூடாது என்பதுமான கருத்தோட்டத்தின் அடிப்படையிலான விவாதத்தை இந்தப் பத்தி ஒரு அனுபவக் கதையாக முன்வைக்கிறது.  

கலை எந்த வடிவிலும் இருக்கலாம், கற்றுக் கொள்ள எதுவும் இருப்பின் அதில் உயர்வு தாழ்ச்சி எதுவும் கிடையாது என்பது அடிப்படை. அதைத்தான் இந்தப் பத்தியில் சரளமாகவும் பிசிறில்லாமலும் ஒரு தேர்ந்த புனைகதையைப்போல எழுதப்பட்டுள்ளது.

அம்மாவுக்கும் மகளுக்குமான தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றமே கீர்த்தனைக்கும் சினிமா இசைக்குமான இடைவெளியாக முரணாக அமைகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இசை ஆசிரியருக்கும் சினிமாப்பாடல்களுக்குமான உறவு, அதன் முரண்கள் என்று சரட்டையும் இதில் இணைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவகையில் இந்தப் பத்தி இளையராஜாவுக்கான புகழாரங்களில் ஒன்று.

மோகமுள் நாவலில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளை ராகங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு பொருத்தமாக அமைத்துள்ளார் தி.ஜா என்று சொல்லப்படுகிறது. இசை தெரிந்தவர்களிடம் விரிவாக அதைக் குறித்து விசாரித்தால் நாவலுக்கு இன்னும் அது வலுசேர்க்கக் கூடும்.

0

இக்கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது பொதுவான சில அம்சங்களை கண்டுணர முடிகிறது.

உளவியல் சிக்கல்கள் (சிறுத்தை, வெண்நாகம்), காமம் (நட்சத்திரங்களின் வாக்குமூலம், பூஜா அன் ஹாத்திக்கு), மரணம் (அனல் அவித்தல், மரணக்குழி), போர்ச் சூழல் (மரணக்குழி, செந்தாழை), வரலாறு (ம்ருகமோக்ஷம், உயிர்மரம்), நாட்டார் மரபின் சரடு (காவல்காரன், ம்ருகமோக்ஷம்), மாய யதார்த்தம் (காவல்காரன்) போன்ற பல்வேறு தளங்களையும் இக்கதைகள் தொட்டு நிற்கின்றன.

ஏற்கெனவே எழுதப்பட்ட கதைக்களங்கள் அல்லாமல் புதியவற்றை எழுதும் முனைப்பைப் பார்க்க முடிகிறது. முன்பே எழுதப்பட்டிருந்த கதைகளை வேறு வடிவத்தில் புதிய மொழியில் எழுதவேண்டும் என்ற முயற்சி தெரிகிறது.

இதன் ஆசிரியர்கள் அனைவருக்குமே கதையை சீராக சொல்லத் தெரிந்திருக்கிறது. கதைக்குத் தேவையான புறச்சூழலை நேர்த்தியாகச் சித்தரித்திருப்பதுடன் வலுவான கதாபாத்திரங்களை அழுத்தமான அடையாளங்களுடன் உருவாக்கவும் வாய்த்திருக்கிறது.

வல்லினம் இந்த முயற்சியின் வழியாக நம்பிக்கைதரும் சில கதாசிரியர்களின் பெயர்களை தமிழ்ச் சிறுகதைப் புலத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதே இந்தச் சிறப்பிதழின் சாதனை என்று தயக்கமின்றி சொல்லலாம்.

0


வல்லினம் - அக்டோபர் 2021

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...