0
2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியானத்
தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் இன்னொரு வலுவான
பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக்
கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈர்ப்பையும் சுவையையும்
கட்டுரைகளிலும் காணமுடிந்தது. கட்டுரை வடிவம் மந்தமான வாசிப்புத் தன்மைகொண்டது என்றொரு
பொதுவான அபிப்ராயம் உண்டு. தமிழில் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் பலவும் அந்த அபிப்ராயத்தை
உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. ஆனால், கட்டுரைகளையும் நேர்த்தியாக, வாசிப்புத்தன்மை
கொண்டவையாக எழுத முடியும் என்று நிரூபித்தவர்கள் சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் ஆகியோர்.
சுகுமாரனின் கட்டுரைகளும் அந்த வரிசையில் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். ‘ஜி.நாகராஜனும்
வி.மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் தொடங்கி இன்று வரை தொடரும்
அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டு தமிழ் தீவிர இலக்கியத்தின்
போக்கையும் ஒருசேர அறியத்தருபவை. ஏப்ரல்
2005ஆம் இதழில் ‘பொன்னகரம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தமிழில் எழுதப்பட்ட மிகச்
சிறந்த கட்டுரைகளில் ஒன்று.
திசைகளும் தடங்களும் (2003), ‘தனிமையின் வழி’ (2007), இழந்த பின்னும்
இருக்கும் உலகம் (2008), வெளிச்சம் தனிமையானது (2008), வேழாம்பல் குறிப்புகள்
(2011), வாழிய நிலனே (2011) ஆகிய ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள், நமக்கு
கவிஞரல்லாத வேறொரு சுகுமாரனை அறிமுகப்படுத்துகின்றன. ஒரு பத்திரிகையாளராகவும், இசை
நாட்டிய ரசிகராகவும், திரைப்பட ஆர்வலராகவும் தான் அடைந்த அனுபவங்களை இந்தக் கட்டுரைகளின்
வழியாக வெளிப்படுத்தியுள்ளார். கவிதைகள், புனைகதைகள், மொழியாக்கங்கள் குறித்தும் தமிழ்,
இந்திய, உலக இலக்கியத்தின் ஆளுமைகள் பற்றியுமான அவரது செறிவான பார்வையையும் மதிப்பீடுகளையும்
தொகுத்துத் தந்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் சூழலில்
தீவிர இலக்கியம் மேலெழுந்து வந்த பயணத்தை இக் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இலக்கியத்தை, எழுத்தை தன் வாழ்வாகக் கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவன் அன்றாட வாழ்வில்
சந்திக்க வேண்டிய சவால்களையும், சமரசங்களின்றி தன் இலக்கை நோக்கிச் செல்பவன் அடைய நேரும்
லௌ கீக பின்னடைவுகளையும் இவை உணர்த்துகின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று
இதைத் திரும்பிப் பார்க்கும்போது, நீண்ட இந்தப் பயணம் சவாலானதாகவும் உத்தரவாதமற்றதாகவும்
இருந்தபோதிலும் இதன் வழியாக கிட்டிய அனுபவங்கள் பெருமதிமிக்கவையாகவும் எண்ணிப் பார்த்து
வியக்கும்படியாகவும் அமைந்திருப்பதே அனைத்துக்குமான பதிலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.
சுந்தர ராமசாமியுடனான நட்பைக் குறித்த ‘பின்னும் உயிர் வாழும் கானல்’,
ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்தது பற்றிய ‘மாயத்தாகம்’, தற்கொலையைக் குறித்த ‘சாவதும்
ஒரு கலை’, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட
விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில்
கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன்
ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால்
கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்ஸை சந்தித்த அனுபவம் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
ஏற்கெனவே வெளியான கட்டுரைத் தொகுப்புகள் கிடைக்காத நிலையில், இந்த
நான்கு தொகுதிகளில் உள்ள கட்டுரைகளையும், பிரசுரமாகாத அல்லது தொகுக்கப்படாத கட்டுரைகளையும்
இயல்வாரியாகத் தொகுத்து வெளியிடுவது மிகவும் அவசியம் என்ற எண்ணத்தை சில ஆண்டுகளுக்கு
முன்பு நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டேன். கவிதைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைத்
தேடி எடுத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக காலச்சுவடு பதிப்பகம்
முயற்சி எடுத்து கட்டுரைத் தொகுதிகளை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம்
அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான அவரது ஆர்வத்தையும்
அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
இந்திய மரபிசையின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர் சுகுமாரன். இசைக் கலைஞர்
எம்.டி.ராமநாதனைக் குறித்து எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளின் வழியாக அந்தக் கலைஞனின்
ஆளுமையையும் கலைமேதமையையும் உணர்த்திவிடுகிறார். தஞ்சையில் ஒரு விடுதி அறையில், ‘மருதமலை
மாமாணியே’ பாடலின் மூலம் தமிழகமெங்கும் புகழ்பெற்ற மதுரை சோமு, சுகுமாரனுக்காக மூன்று
நிமிடம் ஒரு கீர்த்தனையை பாடிய சம்பவத்தை வாசிக்கும்போது கலையின் மீதான அசலான ஆர்வம்
அற்புதங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
ஓவியங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகள் உள்ளன, வின்சென்ட் வான்காவின்
வாழ்க்கைச் சரிதமான ‘lust for life’ நூலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை ஒரு கலைஞனின்
வாழ்வில் காதலும் தோல்வியும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளை வலியுடன் வெளிப்படுத்துகிறது.
கேரளத்தின் கலாச்சார அடையாளமாக விளங்கும் ‘மோகினியாட்ட’ நிபுணரான கல்யாணிக்
குட்டியம்மாவைப் பற்றி சுகுமாரன் அளித்திருக்கும் சித்திரம் உணர்வுப்பூர்வமானது. நடனக்
கலைஞர் சந்திரலேகாவைப் பற்றிய கட்டுரை இரண்டு வியப்பூட்டும் தகவல்களைத் தருகிறது. சந்திரலேகா
ஒரு கவிஞர் என்பதும், ‘சாலையோரத்தில் ஒரு வானவில்’ என்றொரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது
என்பதும் முதலாவது ஆச்சரியம். இன்னொன்று, ‘மரப்பசு’ நாவலின் நாயகி அம்மணியை தி.ஜா சந்திரலேகாவின்
சாயலில்தான் எழுதியிருக்கிறார் என்பது.
தொகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் சினிமாவைக் குறித்தவை. 14 கட்டுரைகளில்
அதிகமும் மலையாள சினிமாவைக் குறித்தவையே. சத்யஜித் ரேவை கல்கத்தாவில் அவர் இல்லத்தில்
சந்திக்க வாய்த்த அற்புதமான தருணம் சுகுமாரனுக்கு வாழ்வில் வாய்த்த பொன்னான கணங்களில்
முதன்மையானதாக இருக்கும். அதேபோல, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்த நாளில் அவருடனான உரையாடலும்
அவர் சுகுமாரனின் சட்டைப் பையில் வைத்த பணத்தாளும் மறக்க முடியாதவையாகவே இருக்கும்.
1980களில் கோவையில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் கவிதைகளைக் கொண்ட வானம்பாடி இதழ் வெளியீட்டை
முன்னிட்டு விஜயகுமார் குன்னிசேரி எற்பாடு செய்திருந்த நிகழ்வில் கே.அய்யப்ப பணிக்கர்,
எம்.கிருஷ்ணன் குட்டி , கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தபோது ஜான் ஆபிரகாமும்
வந்திருக்கிறார் என்ற செய்தியை வாசிக்கும்போதும் சுகுமாரனின் வாழ்வனுபவத்தின் செழுமையை
அறிந்துகொள்ள முடிகிறது. வைஜயந்தி மாலா, ‘சில்க்’ ஸ்மிதா, ஓவியர் ஆதிமூலம், மலையாள
திரை இசையமைப்பாளர் பாபு ராஜ் என்று கட்டுரைகளில் காணக் கிடைக்கிற பல்வேறு முகங்கள்
சுகுமாரன் வெவ்வேறு கலைகளின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு இவற்றை வாசிக்கும்போதே குறிப்பிட்ட
நபர்களைச் சார்ந்த வேறு சில திறப்புகளையும் வாசகன் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான்.
உதாரணமாக, சந்திரலேகாவைப் பற்றி ரஸ்டம் பரூச் எழுதிய நூலைக் குறித்த செய்தியும், சந்திரலேகாவின்
கவிதைத் தொகுப்பைப் பற்றிய விபரமும் கூடுதல் வாசிப்புக்காக அவற்றைத் தேடிச் செல்லும்
ஆர்வத்தைத் தருகின்றன. எம்.டி.ராமநாதன், மதுரை சோமு ஆகியோரைப் பற்றி வாசிக்கும்போதே
மேலும் சில தனித்தன்மைமிக்க பாடல்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
அவற்றைத் தேடிக் கேட்கத் தூண்டுகிறது.
இத்தொகுப்பில்
காணும் பல்வேறு ஆளுமைகளின் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கியிருப்பவை அவரவர் சார்ந்த
கலைகளே. அவர்களைப் போலவே கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாகத்
தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் சுகுமாரன். அவர் எழுதிக் காட்டியிருக்கும்
கலைஞர்களின் சித்திரங்களோடு சேர்த்து அவரது சொந்த வாழ்வையும் அனுபவத்தையும்
கருத்தில்கொண்டே இத்தொகுப்புக்கு ‘வாழ்வை மீட்டிய கலை’ என்று
தலைப்பிடப்பட்டுள்ளது.
0
( காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘வாழ்வை மீட்டிய கலை’ கட்டுரை நூலுக்கு
எழுதியுள்ள தொகுப்புரை )
