Saturday 4 September 2021

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - ஒரு லட்சியவாதியின் இலக்கியப் பயணம்


 


இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், காந்தியின் கொள்கைகளை அடியொட்டி தமிழில் லட்சியவாத நாவல்கள் வெளியாயின. கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி ஆகியோரது நாவல்கள் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. சரத் சந்திரர், வி.எஸ்.காண்டேகர் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் முக்கியத்துவம் பெற்றன. காந்தியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் தமிழகத்தில் ஏற்படுத்திய வலுவான தாக்கங்களைக் குறித்த வரலாற்று ஏடுகள் பல முக்கியமான ஆளுமைகளால் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதனை முன்னிலைப்படுத்தும் லட்சியவாத நாவல்கள் வெகு சிலவே. அந்த வகையில் முக்கியமான இரு நாவல்கள் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருஷங்கள்’, ‘பகல் கனவு’ ஆகியன.



இருபது வருஷங்கள்

‘இருபது வருஷங்கள்’ நாவலை தமிழ்ப் புத்தகாலயம் 1965ல் வெளியிட்டுள்ளது. இதற்காக எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதியிருக்கும் முன்னுரை (கொடைக்கானலிலிருந்து டிசம்பர் 1965ல் )முக்கியமானது.

“காதல் சிடுக்குகளும் திடுக்கிடும் சம்பவங்களும் பயங்கரத் தொங்கல்களில் முடியும் அத்தியாயங்களும் ‘மருந்துக்குக்கூட’ இல்லாத இக்கதையை வெளியிட ‘தமிழ்ப் புத்தகாலயம்’ தைரியமாய் முன் வந்ததற்கு என் நன்றி” என்றும் “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தையொட்டிய சில நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டார் ஒருவர் ஒரு பசிபிக் சமுத்திரத் தீவில் இரண்டரை ஆண்டு வசித்துப் பெற்ற ஈடு இணையற்ற அனுபவங்களும் என் கையெழுத்துத் தாள்களிலிருந்து பாச்சை, ராமபாணம், செல் வகையறாவின் ரசனையற்ற பசியைத் தீர்த்துவிடக்கூடாது, முக்கியமாக கேசவராவின் யுத்த அனுபவங்களை ரிகார்டு ஆக வேண்டும் என்பது பதிப்பாளரின் பாராட்டத்தக்க அவா’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய விடுதலை மட்டுமல்லாது சமூக விடுதலையையும் கிராமப் பொருளாதார மேம்பாட்டையும் அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காந்தி வகுத்த செயல்திட்டங்களை அவரது கட்டளைகளாக ஏற்று அவற்றை தத்தமது கிராமங்களில், ஊர்களில் நிறைவேற்றியவர்கள் பலரும் உண்டு. இதற்கென தமது நிலங்களை சொத்துக்களை தொண்டு மனப்பான்மையுடன் தானமாக வழங்கிய பெரியோர் பலர். கதராடை, அரிஜன மேம்பாடு, பெண் கல்வி, தற்சார்பு பொருளாதரம் போன்ற அடிப்படைகளுக்கான காந்தியின் செயல்திட்டங்களை உள்ளூர் எதிர்ப்புகளையும் மீறி உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தினார். இதனால் சிறை செல்லவும் ஜாதிபிரஷ்டம் உள்ளிட்ட சமூக எதிர்ப்புகளையும் சந்திக்க நேர்ந்தது.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது வாழ்வை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் கேசவ் ராவ் எனும் மருத்துவரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் ‘இருபது வருஷங்கள்’. பெரியகுளத்தில் சாரண இயக்கத்தில் தொடங்கி, சமூக மருத்துவமனை, தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்று தன்னால் இயன்ற காரியங்களைச் செய்ய முடிந்தபோதும் கேசவ் ராவின் மனம் இதனால் நிறைவு கொள்வதில்லை. தேசத்தில் பெரிய அளவில் செய்யவேண்டிய பணியுடன் ஒப்பிடும்போது ஒரு சிற்றூரில் செய்யும் இந்தப் பணி மிகச் சிறியது என்ற எண்ணம் அவரை அலைகழிக்கிறது. இதனால், இரண்டாம் உலகப் போரின்போது மருத்துவர்களுக்கான அழைப்பு வரும்போது புறப்பட்டுச் செல்கிறார். பிரிட்டன் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யும்பொருட்டு ஜப்பானுக்குச் செல்கிறார். பிரிட்டன் துருப்புகள் ஜப்பானிடம் வீழ்ந்துவிட போர்க் கைதியாகி அவர் ‘நியூ பிரிட்டன்’ தீவுக்கு எண்ணற்ற கைதிகளுடன் அனுப்பப்படுகிறார். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத அந்தத் தீவில், தனது அனுபவத்தின் திறன்கொண்டு கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். பயிர் செய்யும் முறையை சொல்லித் தருகிறார். தென்னையின் பயன்பாடுகளை கற்பிக்கிறார். சவரம் செய்யக்கூட வழியில்லாத இடத்தில், எண்ணற்ற துன்பங்களுக்கும் நடுவே, ஒரு துறவியைப்போல நாட்களைக் கழிக்கிறார். தன்னால் இயன்ற வகையில் அங்கிருப்போருக்கு உதவுவது மட்டுமே அவரது இலக்கு. தீவின் பழங்குடிகளைச் சந்திக்கிறார். தனது கடிகாரத்தைக் கொடுத்து பதிலாக அரிசியைப் பெற்றுக்கொள்கிறார். ஆள்நடமாட்டமற்ற இடத்தில் வாழும் ஜெர்மானியனைச் சந்திக்கிறார். எல்லா இடத்திலும் அவரது தொண்டுள்ளமே அவருக்கு வழிகாட்டுகிறது, உதவுகிறது. போரில் ஜப்பான் வீழ்ந்தபின் நாடு திரும்புகிறார். குடும்பத்துடன் தன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்வு. ஆனால், அவரது மனம் அதனை ஏற்கவில்லை. எல்லாவற்றிலிருந்தும் ஒரு விலக்கம். எதுவும் அவருக்கு உவப்பானதாக இல்லை. உடலும் தளர்ந்து நோய்களுக்கு இடம் தருகிறது. ஆனாலும் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. பெயர் தெரியாத ஒரு தீவில் முகமறியாத பலருக்கும் உதவியிருந்த நாட்களே அவர் நினைவில் எஞ்சி நிற்கின்றன.

தொண்டுள்ளம் கொண்ட ஒரு லட்சியவாதியின் பயணம் எங்கும் நின்றுவிடுவதில்லை, மனநிறைவு கொள்வதில்லை. ஒன்று முடிந்ததும் அடுத்த இலக்கை நோக்கிச் செல்லவே அவன் மனம் விரும்புகிறது. கேசவ் ராவின் கதாபாத்திரமும் அப்படியான தொடர் பயணத்தை உத்தேசிக்கும் ஒன்றுதான் என்பதை நாவலின் தொடக்கம் முதலே அறிந்துகொள்ள முடியும்.

நல்ல தொழில், தகுந்த வருமானம், மரியாதைக்குரிய சமூக அந்தஸ்து, மகிழ்ச்சியான குடும்பம் என்பதே லௌகீகவாதிகளின் இலக்கு. அதிகமும் புறவயமானது. இதற்கு மாறாக கொள்கைவாதிகளின் இலக்கு அகவயமானது. தமது மனத்துள் கனலும் பசியை அணைக்கவே அவர்கள் துணிவார்கள். அதில் பல இன்னல்கள் நேரலாம். குடும்பத்தையும் உற்றார் உறவுகளையும் பிரிந்து செல்ல வேண்டி வரலாம். ஆனால், பொதுநலத்துக்கான காரியங்களில் ஊன், உறக்கம், உடல் வாதைகள் மறந்து அவர்களால் நிறைவுகொள்ள முடியும்.  அதுவே, இப்பிறவியின் பலன் என்பதுபோல தங்களையும் தமது தேவைகளையும் மறந்து அதில் முழுமையாக தங்களை ஒப்புக்கொடுத்துவிடுவார்கள்.

1930களில் தொடங்கும் இந்த நாவல் சுதந்திரக்குப் பிந்தைய சில வருடங்களுடன் முடிவடைகிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானிய கைதியாக தனித் தீவில் வசிக்கும் நாட்களைச் சித்தரிக்கும் பகுதியே இந்த நாவலில் முக்கியமானது. தொண்டுள்ளம் படைத்த ஒருவனின் உள்ளம் எந்தவிதமான சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு அடுத்தவருக்காக இயன்றதைச் செய்யவே விரும்பும் என்பதை உரக்கச் சொல்லும் பகுதி இது. ஒரு சாகச நாவலுக்கு இணையான பகுதியாகவே எம்.எஸ்.கல்யாணசுந்தரம் இதனை எழுதியிருக்கிறார்.

பகல் கனவு

இந்த நாவலை எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எப்போது எழுதினார் என்பது தெரியவில்லை. கைப்பிரதியாகவே நின்றுபோய்விட்ட இந்த நாவலை ‘தமிழினி’ 2001ம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

இதன் காலகட்டம் 1920களில் தொடங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய சில ஆண்டுகளுடன் முடிந்திருக்கிறது. இதுவும் ஒரு லட்சியவாத நாவல். சரியாகச் சொல்லப்போனால் ஒரு லட்சியவாதியின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். தொண்டுள்ளம் கொண்ட ஒரு தனி மனிதன் பொதுநலத்தின் பொருட்டு தன் ஊரையும் உறவுகளையும் விடுத்து போர்முனையில் மருத்துவ சேவையில் ஈடுபடுவதைக் காட்டுவது ‘இருபது வருடங்கள்’ நாவல். இதற்கு மாறாக, தனிப்பட்ட வாழ்க்கையில் அறத்துடன்கூடிய லட்சிய நோக்கை கடைபிடித்து வாழும் ஒருவனது வாழ்வைக் காட்டுகிறது ‘பகல் கனவு’ நாவல்.

அன்றாட வாழ்வுக்கான அவசியமான தேவைகள், அவற்றை நேர்மையான வழியில் பெற்றுக்கொள்ளத் தேவையான ஊதியம், இருக்கும் இடத்தில் இருப்பதே சிறப்பு எனும் மனம், பெண் கல்வி, அவர்கள் வேலைக்குச் செல்ல ஊக்குவிப்பது என ஒரு தனி மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்க சாத்தியமான கொள்கைகளையும் எந்தவிதமான புகார்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அந்த வாழ்வை வாழ முடிவதையும் ‘பகல் கனவு’ என்ற பொருத்தமான தலைப்பில் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் விவரித்திருக்கிறார்.

சமூகத்தின் பார்வை, விமர்சனங்கள், குடும்பத்திலிருந்து எழுகிற தடைகள் ஆகியவற்றைக் கடந்து தன் வழியில் உறுதியுடன் நடந்து லட்சியத்தை அடைய முடியும் என்பதை நாவல் வலியுறுத்துகிறது. அடிப்படையில் இதற்கான தேவை கல்வி என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. வாழிடம் எதுவானாலும் மனிதர்களின் மீதான நம்பிக்கையும் அவர்களுடனான உறவும் மிக முக்கியமானது எனும் அடிப்படையையும் நாவல் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆக்ரா நகரின் பின்னணி இந்த நாவல் எடுத்துக்கொண்ட மையத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. பெண் கல்வி, அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான சூழல் போன்றவற்றை இந்த நாவல் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியுடன் சொல்லியிருப்பது இன்று வியப்பைத் தருகிறது.

‘இருபது வருடங்கள்’ நாவலுக்கும் ‘பகல் கனவு’ நாவலுக்கும் இடையிலான முக்கியமான வித்தியாசம் ‘பகல் கனவு’ நாவலில் கொப்பளிக்கும் அங்கதம். தெளிவான சித்தரிப்பும், கச்சிதமான வாக்கிய அமைப்பும் கொண்ட நாவலினூடே பகடியும் அங்கதமும் வெகு இயல்பாக வெடிக்கின்றன. 128 பக்கங்களையேக் கொண்ட சிறிய நாவல் என்றபோதும் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் புனைவுத் திறன் துலக்கமாக அமையப் பெற்றுள்ளது. தெளிந்த நீரோடை போன்ற கதையமைப்பு. சிக்கல்களோ திருப்பங்களோ இல்லாத களம். நினைத்ததையெல்லாம் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிகிற மூர்த்தியின் வெற்றிகரமான வாழ்க்கை நிகழ்வுகளை அமைதியாக விவரிக்கிறது ‘பகல் கனவு’.

ஆக்ரா தந்தி இலாக்காவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று சேரும் மூர்த்தி தனது திறன்களைக்கொண்டு வேலைகளைத் திறம்படி செய்வதும், சக ஊழியர்களிடையே நன்மதிப்பைப் பெறுவதும், அவர்களின் நலனுக்காக படிப்பகம், சிந்தனை அரங்கம், கூட்டுறவு சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவுவதுமான காரியங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. 

தந்தி இலாகா அதிகாரியின் வீட்டில் உள்ள தமிழ் சமையல்காரருக்கு கவிதைப் பித்து. மூர்த்தியை சந்திக்கும்போதெல்லாம் கவிதை மழைதான். ‘மதுரைக்கு தேவி மீனாச்சி, அற்புதமானது அவள் ஆச்சி, ஆக்ராவின் சிறப்பு தாச்சி (தாஜ்மகால்), நானும் இங்கே வந்தாச்சி’ என்ற பாணியிலான அவரது கவிதைகளைக் கண்டு மூர்த்தி அஞ்சுகிறார். பின்னொரு நாள் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அவன் உயிருடன் இருக்கிறானா? சினிமாவுக்குப் பாட்டு எழுதிக் கோடீசுவரன் ஆகிவிட்டானா? என்கிறார்.

ஊரிலிருந்து வரும் ஆச்சாரம்மிக்க மாமா தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு வந்ததும் ‘கல்லறைத் தீட்டு, குளிக்க வேண்டாமா?’ என்றபடி குளியலறைக்குள் புகுந்துகொள்கிறார்.

வேலையின்பொருட்டு வட இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இடமாறுதலுக்காக தொடர்ந்து முயன்றபடியே இருப்பார்கள். ஆனால் அது அத்தனை எளிதில் கிடைத்துவிடாது. ‘மத்றாசி தட்டுகிற கதவு வடக்குப்புறம்தான் திறக்கும், தென்புறம் திறக்காது’.

இந்த நாவலின் இன்னொரு குறிப்பிடும்படியான அம்சம் உணவு, தின்பண்டங்கள் தொடர்பாக இதிலுள்ள குறிப்புகள். கைபக்குவம் மிக்க ஒரு தேர்ந்த சமையல்காரரின் ரசனை நாவலின் பல இடங்களிலும் சுவையுடன் மிளிர்கிறது.

இரண்டு நாவல்களிலுமே எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அழுத்தமாக வலியுறுத்தும் வாழ்க்கை சார்ந்த அடிப்படை அறங்கள், இன்று அவற்றுக்கு பெரிய அளவில் இடம் இல்லாமல் போயிருக்கும் நிலையிலும், மிக வலுவானவையாகயும் செறிவான பொருள் கொண்டவையாகவும் உள்ளன. ‘எளிய, பிறருக்குத் தீமையில்லாத சுகவாழ்வு, ஆரோக்கியமான திருப்தி, மன சந்துஷ்டி, சமுதாய சேவை, பரஸ்பர உதவி இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தல்’ என்பதையே வலியுறுத்துகின்றன இந்த நாவல்கள்.



பொன்மணல்

1934ம் ஆண்டில் ஆனந்தவிகடன் ஆறு வாழ்க்கைத் துறைகள் (விவசாயி, தொழிலாளி என்பதுபோல) சம்பந்தமாக இருபத்தைந்து ரூபாய் சிறுகதைப் போட்டியை அறிவித்தது. ஆறு கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டு பரிசுபெற்ற கதைதான் புகழ்பெற்ற ‘தபால்கார அப்துல்காதர்’. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் முதல் சிறுகதை இது. இதைத் தொடர்ந்து ஆனந்தவிகடனில் அவரது கதைகள் வெளியாகின.

‘பொன்மணல்’ அவரது சிறுகதைத் தொகுப்பு. பதினெட்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் முதல் பதிப்பு 1961ல் வெளிவந்திருக்கிறது. தி.ஜ.ர முன்னுரை எழுதியிருக்கிறார். இத்தொகுப்புக்கான விரிவான விமர்சனத்தை சி.சு.செல்லப்பா ஆகஸ்டு 1961 எழுத்து இதழில் ‘மனிதாபிமான படைப்பாளி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இதன் இரண்டாம் பதிப்பை தமிழினி 2001ல் வெளியிட்டுள்ளது. 

நாவல்களைப்போலவே தனது சிறுகதைகளிலும் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார் கல்யாணசுந்தரம். அவரது கதைகளில் தீமைகளுக்கு இடமில்லை. தீய எண்ணங்களுக்கும்கூட. மனிதர்களின் மனத்துக்கண் எழும் மாசுகளுக்குக்கூட அவர் தனது புனைவுகளில் இடம் தரவில்லை. சுயநலமற்ற பொதுநலம் சார்ந்த எண்ணத்தை வலியுறத்துவதாகவே கதைகளை அமைத்திருக்கிறார். நமது கதை மரபின் தொடர்ச்சியை எடுத்துக்கொண்டு புதிய வடிவில் கதைகளைச் சொல்லியிருக்கிறார். ‘கண்ணீர் சிகிச்சை’, ‘புது ஆயுதம்’ போன்ற கதைகள் அந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

‘தபால்கார அப்துல்காரர்’ கதையைக் குறித்து பலரும் எழுதியுள்ளனர். தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்படுகிறது. சி.சு.செல்லப்பா ‘தமிழ் சிறுகதை பிறக்கிறது’ நூலில் ‘தனிரகம்’ என்ற தலைப்பில் இந்தக் கதையைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். தமிழ் இந்துவில் ‘கதாநதி’ தொடரில் பிரபஞ்சன் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கரிசனமும் கடிதமும்’ என்ற தலைப்பில் பாவண்ணன் ‘திண்ணை’ மின்னிதழில் எழுதியிருக்கிறார்.

‘முங்கேர் வைரம்’, ‘மீன் சாமியார்’, ‘ரத்தினக் கம்பளமும் வைரத்தோடும்’, ஆற்றோரத்து மரம்’, ‘வெற்றியின் கிலேசம்’ ஆகிய கதைகள் காலங்கடந்தும் தனித்து நிற்கின்றன.

விரிவான வாசிப்பின் அடிப்படையில் சிறுகதைகள் குறித்து கல்யாணசுந்தரத்துக்கு தெளிவான பார்வை இருந்திருப்பதை இக்கதைகளின் வழியாக உணரமுடிகிறது. தமிழில் சிறுகதைகள் உருவெடுத்த காலகட்டத்தில் திருத்தமான வடிவத்துடனும் புதிய களங்களுடனும் தரமான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. சிறுகதைகளிலும் அவர் தனது அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தியபோதும் சிறுகதையின் வடிவத்தை உணர்ந்து அதற்குத் தேவையான விதத்திலும் அளவிலும் மட்டுமே அதைக் கையாண்டிருக்கிறார். ஆண்-பெண் உறவை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்துள்ள ‘குடும்ப தர்மம்’, ‘ஒட்டாத உறவு’ ஆகியவற்றில்கூட பொதுநல நோக்கின் அடிப்படையில் தமது குடும்ப நலன்களை தியாகம் செய்யும் எண்ணத்துக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

மறக்கப்பட்ட ஆளுமை

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை விபரங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. 28.03.1901ல் மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டமும் ஹிந்தியில் பிரபாகர் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி அம்மையாரிடம் கல்விப் பயிற்சிப் பெற்றிருக்கிறார். பல மொழி விற்பன்னர். தந்தி இலாகாவில் பொறியாளர் பதவியிலிருந்தபோது காந்தியின் கட்டளைப்படி வேலையைத் துறந்து சமூகத் தொண்டாற்றினார். ஹிந்தி தமிழ் அகராதிகளைத் தயாரித்திருக்கிறார். ‘தமிழினி’ வெளியிட்டுள்ள நூல்களின் பின் அட்டைகளில் இந்தத் தகவல்கள் உள்ளன. சி.சு.செல்லப்பாவின் ‘தமிழ்ச் சிறுகதைப் பிறக்கிறது’ நூலிலும், ‘பொன் மணல்’ தொகுப்புக்கான மதிப்புரையிலும் சில தகவல்கள் உள்ளன. தனது இறுதி நாட்களில் கொடைக்கானலிலும் சென்னையிலும் வாழ்ந்திருக்கிறார்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்துக்கு மொழிகளின் மீதான தீராத ஆவல் இருந்திருக்கிறது. உருது, தெலுங்கு, வங்காளி, சமஸ்கிருதம், ஜெர்மன், குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளையும் ஆசையுடன் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கட்டுரைகள், கதைகளை எழுதியிருக்கிறார்.

கல்விமுறையைக் குறித்து தொடர்ந்து அவர் அக்கறை காட்டியிருப்பதை அவரது புனைவுகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்களின் அறிதல் திறனுக்கேற்ப பாடங்களை கற்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எளிய, விளையாட்டு முறைகளைக் கொண்டு கணிதம் கற்பிப்பதில் தேர்ந்தவர். கல்வி வேலைக்கான ஒரு வழி என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தம் வாழ்வை அதற்கொப்ப வடிவமைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் மிக உயரிய பதவியொன்றில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்வை மிக எளிமையான ஒன்றாகவே அமைத்துக்கொண்டிருக்கிறார். கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நிறைய எழுதியிருந்தபோதும் அவற்றைத் தொகுப்பதில் பெரிதும் அக்கறைக் காட்டியதாகத் தெரியவில்லை.

1965ல் வெளியான ‘இருபது வருஷங்கள்’, பிரசுரம் காணாமல் கைப்பிரதியாக இருந்த ‘பகல் கனவு’, 1961ல் வெளியான ‘பொன்மணல்’ ஆகிய மூன்று நூல்களையும் கல்யாணசுந்தரத்தின் இறுதி நாட்களில் அவரது நண்பராக இருந்த கி.ஆ.சச்சிதானந்தத்தின் முயற்சியால் 2001ல், கல்யாணசுந்தரத்தின் நூற்றாண்டு’ வெளியீடாக ‘தமிழினி’ வெளியிட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபிரசுரம் பொறாமல் மறக்கப்பட்டிருந்த நூல்கள் கவனம் பெற்றன.

இத்தனைக்கும் 1930களில் அவர் விகடனில் நிறைய எழுதியிருக்கிறார். எளிய முறையில் இந்திப் பாடங்களை விகடனில் கற்பித்திருக்கிறார். ஆனால், அவருடைய ஒரு புகைப்படம்கூட கிடைக்கவில்லை.

2001ல் ‘தமிழினி’ அவரது நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில் இருந்தபோது அவரது புகைப்படத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் கோவையில் தமிழோசை பதிப்பகம் காந்திபுரம் ராஜராஜேஸ்வரி டவரில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. எதற்கான கூட்டம் என்று நினைவில் இல்லை. ஈரோட்டிலிருந்து கூட்டத்துக்கு வந்திருந்தேன். பல்லடத்தைச் சேர்ந்த ஒரு வாசகரும் அங்கிருந்தார். தேநீர் இடைவேளையின்போது இன்னொரு நண்பரிடம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவர் என்னிடம் வந்தார். பழைய ஆனந்தவிகடன் மலர் ஒன்றில் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படம் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த மலரில் எழுதியுள்ள எழுத்தாளர்களுடைய படங்கள் அனைத்துமே ஒரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்யாணசுந்தரத்தின் படம் இருப்பதாகவும் சொன்னார். அவரது தொலைபேசி எண்ணைத் தந்தார். வசந்தகுமாரிடம் தகவல் சொன்னதும் பரவசத்துடன் ‘அதைப் பிடிங்க’ என்று சொன்னார். ஆனால், அந்தக் கூட்டத்துக்குப் பிறகு பல்லடம் நண்பரை என்னால் தொடர்புகொள்ள முடியாமலே போனது.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவரது லட்சியவாத நாவல்களின் வழியாக, தபால்கார அப்துல்காதரின் வழியாக இன்றும் நினைக்கப்படுகிறார். இன்றைய தலைமுறையினருக்கு அவரது எழுத்தில் உள்ள லட்சியவேகமும் நோக்கும் முக்கியமானவை.

‘மறக்கப்பட்ட புன்னகை’ என்ற தலைப்பில் திண்ணை மின்னிதழில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் புனைவுலகைக் குறித்தும் வாழ்வைக் குறித்துமான முழுமையான ஒன்று.

கல்யாணசுந்தரம் பகல் கனவு நாவலில் வாழ்க்கையைக் குறித்த ஒரு செறிவான சுருக்கமான அழுத்தமான சித்திரத்தை விவரித்திருப்பார்.

‘வாழ்க்கை இராக்கால மோட்டார் பயணத்திற்கு ஒப்பானது. அந்தந்த நேரத்திற்கு சாலையில் ஒரு சிறு பகுதிதான் புலனாகும். நம்பிக்கையுடன் வண்டியை ஓட்ட ஓட்ட சாலை மேலும் புலனாகும் என்ற மனப்பான்மையுள்ளவனுக்கு அது போதும். ஐயையோ, முன்புறம் இருட்டு என்று பயந்து சாவானேன்? அந்நேரத்துத் தேவைக்குப் போதுமான அளவு பாதை தெளிவானால் திருப்தியடையவேண்டும். வண்டியை ஓட்டிக்கொண்டே செல்கிறான். இன்னும் ஒரு மைல் தூரத்துக்குப் பாதை தென்பட்டாலும் அவன் செய்யக்கூடியது அதுதான். ரெண்டு பர்லாங்குக்கு அப்பால் சாலை வலது புறம் திரும்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதற்காக இப்பொழுதே வலது புறம் திருப்பமாட்டான். அந்த இடத்தை அடைந்தபிறகுதான் திருப்புவான்.’

அவர் தன் வாழ்க்கையையும் இராக்கால மோட்டார் பயணமாகவே அமைத்துக்கொண்டார். அந்தந்த வேளையை அதற்கான ஒழுங்குடன் அக்கறையுடன் திறம்பட கடந்து சென்றிருக்கிறார். அதனால்தான், நாளைய இலக்கிய உலகில் தன் இடத்தைப் பற்றிய கவலையின்றி எழுதுவதோடு மறந்துவிட்டிருக்கிறார். ஆனால், அந்த இராக்கால மோட்டார் பயணமும் அது தன் பாதையில் கண்ட வெளிச்சமும் இன்றும் மங்காது ஒளிர்ந்திருப்பதுதான் அந்தப் பயணத்தின் வெற்றி.

0

(ஆவநாழி, ஆகஸ்டு 2021 இதழில் வெளியான கட்டுரை)

1 comment:

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...