Sunday, 29 September 2024

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

 

கொடி மலர் பூக்கும் கற்பூர கிளுவை


0

இந்திய நாவல்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில், சிறந்த இந்திய நாவல் என்று அப்போது குறிப்பிடப்பட்ட நாவல் தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’. தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசுவாமி.  இன்னும் சிலர் அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி ) நாவலைச் சுட்டுவார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய நாவல்களைப் பற்றிய பேச்சு வந்தபோது அண்ணாச்சி வசந்தகுமார் ‘குடும்பம் சிதைகிறது’ நாவல்தான் இந்திய அளவில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என்றார். அதை நான் வாசித்திருக்கவில்லை. நண்பர்களிடம் விசாரித்தேன். கிடைக்கவில்லை. எஸ் எல் பைரப்பாவின் ‘பருவம்’ நாவலை பாவண்ணன் மொழிபெயர்த்திருந்தார். அவரிடமும் ‘குடும்பம் சிதைகிறது’ கிடைக்கவில்லை. பிறகு வெகு காலம் கழித்தே எச்.வி.சுப்ரமணியம் மொழிபெயர்த்த அந்த நாவலை வாசிக்க வாய்த்தது. ஒரு முறை சிருங்கேரிக்கு சென்றிருந்த சமயத்தில் துங்கபத்ரா நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது ‘குடும்பம் சிதைகிறது’ நாவலில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றி மீண்டும் பேச்சு வந்தது. சுற்றுலா முடிந்து வந்ததும் அந்த நாவலை வாசிக்கும் ஆவலுடன் புத்தக அலமாரியில் தேடினேன். கிடைக்கவில்லை. மனதுக்கு மிக நெருக்கமான ஒரு நாவல். இந்தியக் குடும்ப அமைப்பு, உறவுகளுக்குள் உள்ள நெருக்கமும் விலகலும், மனிதர்களை பகடையாக்கும் சுயநலம், பெண்களின் உள ஆழங்கள் என அந்த நாவல் கொண்டிருக்கும் நுட்பங்கள் வியப்பில் ஆழ்த்துபவை.

‘குடும்பம் சிதைகிறது’, ‘பருவம்’ நாவல்களின் மூலமாக எஸ்.எல்.பைரப்பா இந்திய நாவலாசிரியர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறார். அவரைப் பற்றி வாசிக்க நேரும்போதெல்லாம் அவர் எழுதிய இன்னொரு நாவலும் தவறாது குறிப்பிடப்படும். ‘வம்ச விருட்சம்’ என்ற அந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படவேயில்லை. ஒரு முறை பாவண்ணனிடம் அதைப் பற்றி கேட்டதும் நினைவிருக்கிறது.

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் வெகுவேகமாக மொழியாக்கங்களைச் செய்து வரும் கே.நல்லதம்பிக்கு இந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது.

0

2

இந்திய சமூக வாழ்வில் குடும்பம் என்பது மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அலகு. சொத்து, பொருளாதாரம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. மேலும், குடும்ப பாரம்பரியம் சார்ந்த பெருமிதங்களை பேணுவதும் அவற்றுக்கு சிறிதும் களங்கம் ஏற்படாதவாறு நடந்துகொள்வதும் வாரிசுகளின் கடமை என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுவதுண்டு. இன்றும் கிராமங்களில் பாரம்பரியம் சார்ந்த பழக்க வழக்கங்களை, சடங்குகளை அக்கறையுடன் கடைபிடித்து வருவதைப் பார்க்க முடியும். அத்தகைய பாரம்பரியங்களும் சடங்குகளும் குறிப்பிட்ட பிரதேசத்தின் பண்பாட்டு கூறுகளாகவும் அமைகின்றன. ஒரு தனி மனிதனின் குணநலன்களை அவனது பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்திக் காட்டுவதும் உண்டு. இன்றைய நவீன உலகில் மாறிவரும் தலைமுறையினரிடம் இதுபோன்ற எண்ணங்களுக்கோ கருத்துகளுக்கோ பெரிய அளவு முக்கியத்துவம் கிடையாது. மரபும் பாரம்பரியமும் சம்பிரதாயமான அளவில் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஒருசில குடும்ப நிகழ்வுகளில் மட்டும் இந்த வழக்கங்கள் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு இவற்றில் அந்த அளவுக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இருப்பதில்லை. கல்வியும் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சியும் கருத்தளவில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஆதிவாசியாக வேட்டையாடித் திரிந்துகொண்டிருந்த தனி மனிதன், பிறருடன் சேர்ந்து வாழத் தலைப்பட்ட காலத்திலிருந்தே சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உருவாக்கினான். அவ்வாறான நிபந்தனைகள் பெரும்பாலும் சுயநல நோக்கில் அமைந்தவையே. பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வறான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் ஒன்றிணைந்து ஒழுக்க நியதிகளாக உருப்பெற்றன. சமூக வாழ்வின் அடிப்படை கூறுகளாக அமைந்தன. அவற்றை வலியுறுத்தும்பொருட்டு பாவ, புண்ணிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

தனி மனிதனுக்கும் சமூக நெறிகளுக்குமான உறவு தொடர்ந்து மறுபரிசீலனைக்கும் விமரிசனங்களும் உள்ளாகி வருகின்றன. ஒருவகையில் கலை, இலக்கியங்கள் இந்த மறுபரிசீலனைகளுக்கும் விமரிசனங்களுக்கும் பங்களிக்கின்றன. 

3

‘வம்ச விருட்சம்’ 1961ஆம் ஆண்டு வெளியானபோதும், இந்திய விடுதலைக்கு சற்று முந்தைய காலகட்டத்திலேயே நாவல் நிகழ்கிறது. மைசூர், நஞ்சன்கோடு பகுதியை களமாகக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை குறித்த அடிப்படையான சில கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது. எது வாழ்க்கை?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கான வாழ்வு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அவன் தன் வாழ்வை சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. எந்தவொரு மனிதனும் தன் விருப்பப்படி வாழ்ந்துவிட முடியாது. அவனுடைய சுதந்திரத்துக்கும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளை வகுக்க குடும்பம், சமூகம், அரசு போன்ற வலுவான அமைப்புகள் உண்டு.  அந்த அமைப்புகள் வகுத்திருக்கும் சில வரைமுறைகளுக்கு ஏற்பவே தன் வாழ்வை அவன் அமைத்துக் கொள்ள முடியும். அவனுடைய பெரும்பாலான நடவடிக்கைகள் அத்தகைய அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டே இருக்க முடியும்.  

சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கே இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும்போது விதவை மறுமணம், இருதார மணம் போன்ற சமூகத்தின் ஒப்புதல் எளிதில் கிடைக்காதவற்றுக்கான தடைகள் எண்ணற்றவை. நேரடியாக இவை மறுக்கப்படாது போனாலும் மறைமுகமாக பல சங்கடங்களை ஏற்படுத்தும். உளவியல் அழுத்தங்களுக்குக் காரணமாக அமையும். கணவனை இழந்த பெண் தலையை மழித்துக்கொண்டு ‘மடி’யைக் கடைபிடிக்கவேண்டும், வெளியில் வராமல் இருண்ட அறைக்குள் அடைந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டும் போன்ற நிர்ப்பந்தங்கள் விதிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இன்றைய வாழ்வுக்கேற்ப வேறு வடிவங்களில் உள்ளன.

என்றால் ஒரு தனி மனிதனின் சுதந்திரம் எல்லைகளின்றி இருக்க வேண்டுமா? அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழத் தலைப்பட்டால், சமூக வாழ்வு குழப்பத்துக்கு உள்ளாகாதா? யாரும் யாரையும் நெறிப்படுத்த முடியாதபோது, கேள்வி கேட்க முடியாதபோது மனித உறவும் அதன் விளைவான பிற அமைப்புகளும் உருவாவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ சாத்தியமில்லை. எனவே, மனிதன் தன்னுடைய சுமுகமான வாழ்வின் பொருட்டு தானாக ஏற்படுத்திக் கொண்ட சில வரைமுறைகளே இந்த அமைப்புகளை உருவாக்கின. அதன் பின், அந்த அமைப்புகளின் நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த அமைப்புகள் தனி மனித வாழ்வை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவையாக மாறும்போது மனிதன் மீண்டும் தன் சுதந்திரம் பற்றிய கேள்விகளை எழுப்ப நேர்கிறது.

சுதந்திரம் குறித்த இந்த கேள்வி எழும்போது தனி மனித விருப்பம் முக்கியமா, சமூக அங்கீகாரம் முக்கியமா என்ற உளமோதல் ஏற்படும். சம்பிரதாயமான மரபார்ந்த மனிதர்கள் சமூகத்தை ஒட்டியே வாழவேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், தனி மனித விருப்பத்தை சமூக வரைமுறைகள் மறுப்பதால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பவர்கள் இதற்கு எதிரான தரப்பையே சார்ந்திருப்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான இந்த மோதல்களும் மீறல்களுமே குறிப்பிடத்தகுந்த பல சமூக மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. தனிமனிதனும் சமூகமும் தொடர்ந்து தம்மை மறு பரிசீலனை செய்துகொள்ளும் வாய்ப்புகளை இந்த முரண்களும் மோதல்களும் உருவாக்கித் தருகின்றன. இந்த மறுபரிசீலனைகளின் வழியாகவே ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் நியதிகளும் கோட்பாடுகளும் வரையறைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.  

‘தனிமனிதனின் விருப்பத்துக்கும் சமூக நெறிகளுக்குமான  மோதல்களும் முரண்களும் இணைந்தே மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன’ என்ற இந்த அடிப்படையை, கிட்டத்தட்ட இருபதாண்டு கால அளவில் மைசூர், நஞ்சன்கோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு முதன்மை கதாபாத்திரங்களைக் கொண்டு ஆழமான விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார் பைரப்பா.

வம்ச தூய்மையை வலியுறுத்தும் பண்டிதர், அதற்கு எதிரான காரியத்தில் இறங்கும் மருமகள் என்பது நாவலின் ஒரு மையம். எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளும் சதாசிவ ராயர், இரண்டாவது மனைவியின் விருப்பங்களை பொருட்படுத்துவதில்லை என்பது இன்னொரு மையம். இந்த இரண்டு மையங்களை குறுக்கும் நெடுக்குமாக ஆழ்ந்து ஆராய்வதே நாவலின் பலம்.

இந்த மோதல்களுக்கு நடுவே நேரடியாக இதில் தொடர்பில்லாத ஆனால் இதன் விளைவுகளைச் சந்திக்க நேரும் பிற கதாபாத்திரங்களின் நிலையும் அதனால் எழும் கேள்விகளும் முக்கியமானவை. பண்டிதரின் மனைவி பாகீரதம்மா, ராயரின் மனைவி முதல் மனைவி நாகலட்சுமி, இரண்டாம் மனைவி கருணா ரத்னே, பண்டிதரின் பணியாள் லட்சுமி, காத்தியாயினியின் மகன் சீனி ஆகியோர் எழுப்பும் கேள்விகளும் உறவுகள் சார்ந்தும் வாழ்க்கை குறித்துமான அவரவர் தரப்புகளுக்கு வலு சேர்க்கின்றன.  

அற வாழ்வு, மரபைப் பேணுதல், லட்சியத்தை அடைதல் என ஆண்கள் தங்களின் நோக்கத்துக்காக மட்டுமே வாழும்போது அவர்களுக்கு இணையாக வாய்க்கும் பெண்களின் இருப்பு பொருளற்றுப் போகும் அவலமும் அபத்தமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாதவை. ‘திருமணம் என்பது குடும்ப தர்மத்தை நிறைவேற்றும் ஒரு சடங்கு. வம்சத்தை தளைக்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு. பிள்ளையைப் பெற்றுத் தருவதோடு மனைவியின் கடமை முடிந்துவிடுகிறது’ என்று நம்புகிறவர் பண்டிதர், ‘மகத்தான லட்சியத்தை நோக்கிய பயணத்தின்போது குடும்ப வாழ்வும் மனைவியும் அதற்கு நிறைவேற்ற ஒத்துழைப்பவராக இல்லாதபட்சத்தில் அந்த உறவு அன்றாடத்தின் தொல்லையாகவே மாறும்’ என்றும் ‘லட்சியத்தை அடைய சமநோக்குள்ள பெண் சகபயணியாக இருக்கலாம். அதைத் தவிர்த்து பிற எளிய சாமானிய ஆசைகளுக்கு உரிமைகளுக்கு அவள் இடம்கொடுக்கலாகாது’ என்றும் வலியுறுத்துபவர் ராயர். இந்த இருவரும் சொல்லும் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் பெண்களைக் குறித்த மனநிலை ஒன்றுதான்.  

இதற்கு மாறாக, பெண்களின் மனநிலை, ஆண்களின் குறுகிய பார்வையை நுட்பமாக விமர்சிப்பதாக அமைந்துள்ளது. பண்டிதருக்கு இல்லற சுகத்தை அளிக்க முடியாத நிலையில் வீட்டுப் பணியாளான லட்சுமியை இணங்கச் செய்கிறார் பாகீரதம்மா. லட்சுமியும் அதற்கு சம்மதிக்கிறார். பண்டிதர் வலியுறுத்தும் அறத்துக்கும் தூய்மைவாதத்துக்கும் எதிரான செயல்பாடு என்பதை இருவரும் உணராதவர்கள் அல்ல. ஆனால்,  அவர்களுக்கு ஆழமான அறநெறிகளையும் கோட்பாடுகளையும்விட, அன்றாட வாழ்வின் எளிய சந்தோஷங்களே அப்போதைக்கு முக்கியம்.  அந்தந்த நாளைக் கடந்து எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை. ஆராய்ச்சியிலும் நூல் உருவாக்கத்திலும் உதவும்பொருட்டு சதாசிவ ராயரை மணந்துகொள்ள சம்மதிக்கும் கருணா ரத்னே, வேறெந்த சாதாரண விருப்பங்களுக்குக் கூட இடம் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் கூடவே ஏற்றுக்கொள்வது ஒருவித தியாக மனநிலை.

இந்த மூவருக்கும் மாறாக, மிகத் துணிச்சலுடன் எல்லாவற்றையும் மறுத்து தன் விருப்பத்துக்கு ஏற்ப ராஜாராவை மணந்துகொள்ளும் காத்தியாயினி தன் வயிற்றில் கருக்கள் தங்காதபோது பாவ புண்ணியம் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். இறுதியில் மன்னிப்பு கேட்டபின்பே மரணமடைகிறார்.

எது சரி, எது தவறு என்கிற இருமைகளின் மோதல்களால் தன் காரியங்களை தீர்மானிக்க முடியாதவர்களாக இருப்பவர்கள் சதாசிவ ராயரும் காத்தியாயினியும். அவ்வாறான இருமையின்றி தன் வாழ்வைக் குறித்த தடுமாற்றமற்ற தெளிவான பார்வையைக் கொண்டவர்கள் சீனிவாச பண்டிதரும் கருணே ரத்னாவும். இந்த இரு எல்லைகளுக்கும் நடுவில் கொடுக்கப்பட்ட வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் பாகம்மா, நாகலட்சுமி, லட்சுமி ஆகிய மூன்று பெண்கள்.  

கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டவர்களின் முடிவு சரியா, வேண்டியதை போராடி பெற்றுக்கொண்டவரின் முடிவு சரியா?

4

வாழ்க்கை, பண்பாடு, மனித இயல்பு ஆகியவற்றின் போக்குகள் குறித்து ஆழமாக உரையாடும் இந்த நாவல், நீண்ட விவாதங்களுடனும் உளமோதல்களுடனும் அமைந்திருப்பது இயல்பே. இதை ஒரு நாவலாக எழுதுவது என்பது சவாலான ஒன்று. எஸ்.எல்.பைரப்பாவின் புனைவுத் திறன் அந்த சவாலை பல்வேறு நுட்பங்களுடன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறது.  

1960களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் குறிப்பிடத்தக்க புனைவம்சமாக அமைந்திருப்பது நாவலின் பகுதியாக அமைந்துள்ள இதன் உட்பிரதிகள்.      

சதாசிவ ராயர் எழுதும் ‘இந்தியப் பண்பாட்டின் வரலாறு’ என்ற பெருநூல், நாவலில் தன்னிச்சையாக இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. அவர் ஒரு பேராசிரியர். ஆய்வு செய்து எழுதுகிறார் என்பதால் இடம் பெற்றிருக்கும் ஒன்றல்ல. இந்த நூல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றைப் பேசுகிறது. இந்தியப் பண்பாடு தனிமனிதனின் மீது விதிக்கிற, கட்டுப்படுத்துகிற சில நியமங்களை, நிபந்தனைகளையும் அதன் சாதக, பாதகங்களையும் இந்த நாவல் ஆழமாக விதிக்கிறது. எந்தவொன்றை நோக்கி இந்த நாவல் கேள்விகளை எழுப்புகிறதோ, அது உருவாகி வந்த பாதையைக் குறித்து நாவலின் முதன்மை கதாபாத்திரம் ஆய்ந்து எழுதுகிறது. அதுவே தன் வாழ்க்கை என்று வேறெதையும் பொருட்படுத்தாமல் அதிதீவிரமாக ஈடுபடுகிறது. அந்தவொரு காரியத்துக்காக   இந்தியப் பண்பாடு விதிக்கக் கூடிய முக்கியமான அம்சத்தையே மீறவும் செய்கிறது. எனவே, நாவல் தன்னுடைய முதன்மை  கதாபாத்திரத்தைக் கொண்டே தன்னை விவாதத்துக்கு உட்படுத்திக் கொள்கிறது என்பது முக்கியமானது. அந்த வகையில் சதாசிவ ராயர் எழுதும் நூல் இந்த நாவலின் உட்பிரதியே.

இதேபோல, ராஜாராவ் எழுதி இயக்கும் ‘மூலாதாரம்’ என்ற நாடகமும் இந்த நாவலின் இன்னொரு உட்பிரதியாக அமைந்திருக்கும் ஒன்றுதான்.   ‘எப்போதும் புதியவளாக, நிரந்தர ஆற்றலுடன் இருக்கும் பிரகிருதி (இயற்கை)யை செயற்கை அறத்தால் கட்டிப்போடுவது அநீதி. இயற்கை என்றும் இளமையானவள். அதன் அழகான மெய்வடிவத்தை அழிக்க நினைக்கும் அறம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்’ என்பது அந்த நாடகத்தின் அடிப்படை. இது நாடகத்தின் கதாபாத்திரம் சொல்வதுதான். ஆனால், அது நாடக வசனம் மட்டுமல்ல. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் காத்தியாயினி தன் வாழ்வைக் குறித்து எழுப்பும் கேள்விகள் அவை. ஒரே வருடத்தில் கணவனை இழந்த ஒரு இளம்பெண்ணுக்கு இயல்பாக எழும் கேள்விகளையும் விழைவுகளையும் அவற்றின் அடிப்படையில் எடுக்கும் துணிச்சலான முடிவையும் குறிப்புணர்த்துவதாகவே இந்த நாடகம் நாவலின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

கபிலை நதிக்கரையில் அமைந்திருக்கும் நஞ்சன்கூடு கிராமத்தையும் மைசூரையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் இயற்கைச் சூழல்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தந்த கதாபாத்திரங்களின் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. நஞ்சன்கோட்டுக்கும் மைசூருக்குமான காத்தியாயினியின் ரயில் பயணங்கள், சாம்ராஜபுரம் ரயில்நிலையத்தையொட்டிய சுடுகாட்டில் சிதைகள் எரியும் காட்சி, அதன் பிறகான மலையேற்றம், நந்திமலையில் சதாசிவ ராயரும் கருணாவும் மேற்கொள்ளும் நடைப்பயணங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சதாசிவ ராயரும் கருணாவும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பல்கலைக் கழக அறையின் சூழலும் அவர்களுடைய வீடும் எடுத்த காரியத்தில் அவர்கள் கொண்டிருக்கும் தீவிரத்தை காட்டுவதாக அமைந்துள்ளன.

பண்டிதரின் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கற்பூரக் கிளுவை மரத்தில் ஒரு மல்லிகைக் கொடி. கிளுவை மரம் காய்ந்து போவதைக் கவனித்த காத்தியாயினி பண்டிதரிடம் சொல்கிறாள். அதைக் கவனித்த பண்டிதர் ஒரு ஆளை வரவழைத்து காய்ந்த மரத்தை எச்சரிக்கையுடன் வெட்டி எடுக்கிறார். மல்லிகைக் கொடியை பழுதுபடாமல் விடுவித்து அருகில் ஒரு மூங்கில் தடியை நட்டிப் படரவிடுகிறார். இன்னொரு கற்பூர கிளுவையை பக்கத்தில் ஊன்றி தண்ணீர் ஊற்றுகிறார். இரண்டொரு வாரங்களில் மரம் தளிர்விட, மல்லிகைக் கொடியை மரத்தில் படவிடுகிறார். காய்ந்த மரத்தோடு சேர்ந்து மல்லிகையும் காய்ந்துவிடும் என்று கவலைப்பட்ட காத்தியாயினிக்கு பூத்துச் சொரியும் மலர்களும் அவற்றின் மணமும் மகிழ்ச்சியளிக்கின்றன.

பண்டிதர் வீட்டுக் கொல்லையில் காட்டப்படும் கிளுவை மரமும் மல்லிகைக் கொடியும் நாவலின் இரு ஆழமான படிமங்களாக உருமாறிவிடுகின்றன. இதேயளவுக்கு தாக்கத்தைத் தரும் இன்னொரு படிமம் நஞ்சன்கோடு கிராமத்துக்கும் மைசூருக்கும் இடையிலான ரயில் பயணம். அது மரபுக்கும் நவீனத்துக்குமான பயணமாக மாறிவிடுகிறது.

முதன்மை கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள் அதிகமும் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலின் சில அத்தியாயங்களை பைரப்பாவின் அபாரமான புனைவாற்றலுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அன்றிரவு சதாசிவராயர், கருணாவை திருமணம் செய்யும் தன் முடிவை மனைவி நாகலட்சுமியிடம் தெரிவிக்க நினைக்கிறார். வழக்கத்துக்கு மாறாக விரைவிலேயே படுக்கை அறைக்கு வந்து ‘நாகூ’ என்று அவளை அழைப்பதை அவரது விழைவாகப் புரிந்துகொண்டு ஆதரவாக தழுவிக்கொள்கிறாள் மனைவி. நலிந்த அவர் உடல் நலம் குறித்து கவலை கொள்கிறாள். அவரது மன உறுதி கரைகிறது. கண்ணீர் விடுவதைக் கண்டு அவரை ஆறுதல் படுத்துகிறாள். குழந்தையை இறுகத் தழுவிப் படுத்திருக்கும் அன்னையைப் போல அவரைத் தழுவிக் கிடக்கிறாள். தூங்க முடியாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார் சதாசிவ ராயர். இந்த அத்தியாயத்தில் பைரப்பா காட்டும் எளிய குடும்பச் சித்திரம் மிக முக்கியமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்மைப் பொருட்படுத்தாத கணவர்களை, மனைவிகள் மிக எளிய, பாசாங்கற்ற நடவடிக்கைகளால் வெற்றிகொள்ள முடியும் என்பதைக் காட்டும் நுட்பமான பகுதி.

கர்ப்பப் பை பலவீனம் என்பதால் உடல் உறவு மறுக்கப்பட்ட நிலையில் பாகீரதம்மா, தன் கணவரின் வேட்கையை நிறைவேற்றும் பொருட்டு பணியாள் லட்சுமியை சம்மதிக்கச் செய்கிறாள். கணவரிடமும் பக்குவமாக எடுத்துச் சொல்கிறாள். லட்சுமி அறையில் காத்திருக்க, அங்கு செல்ல விரும்பியும் முடியாது தவிக்கிறார் பண்டிதர். அறம் சார்ந்த அவரது மனநிலை அவரைத் தடுக்கிறது. அதே நேரம், அவருக்காக விருப்பத்துடன் காத்திருக்கிறாள் லட்சுமி. கணவனை இழந்தவள். சிறு வயதிலிருந்தே பண்டிதரின் மீது சற்றே விருப்பம் கொண்டவள். ஆசைக்காக இல்லாவிடினும் கடமையின் பொருட்டு அவரோடு சேர்வதற்காக தவிப்புடன் எதிர்பார்த்திருக்கிறாள். மூவருக்குள் அந்த இரவில் நடக்கும் ஊசலாட்டத்தை காட்டும் இந்த அத்தியாயமும் நாவலின் மிக முக்கியமான ஒன்று. 

5

ஒரு நாவல் முடிவில் நம்முள் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளுமே அந்த நாவலின் தர வரிசையை நம்முள் நிறுவும். 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் இந்த நாவல் முன்னிறுத்தும் விவாதங்கள் இன்றும் பொருள்மிக்கவை. மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான மோதல்களும் ஊசலாட்டங்களும் காலத்துக்கும் நீடிப்பவை. முற்றுப்பெறாதவை. அந்த மோதல்களின் வழியாக அடையும் மாற்றங்களைக் கொண்டு மரபை மேலும் நெருங்கிப் புரிந்துகொள்ளவும் நவீனத்தை அணுகி விமர்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. வம்ச விருட்சம் நாவலும் அத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

வம்ச விருட்சத்தின் புனிதத்தைப் பேணுதலையே வாழ்க்கையாக கொண்ட பண்டிதர், உண்மையில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த பின் நொறுங்கி, மரபின் மீதான நம்பிக்கையைத் துறந்திருக்க வேண்டும். இயல்பில் அதுவே நடக்கும். ஆனால், பண்டிதர் அவ்வாறான முடிவுக்கு வருவதில்லை. எப்போதும் போல சமநிலையுடன் அணுகி முழுமையான துறவறத்தை மேற்கொள்கிறார். இவ்வாறான உறுதியான மனநிலைக்கு மரபின் வழியாக அவர் வாழ்க்கையைப் பக்குவத்துடன் புரிந்துகொள்ள முடிந்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், அறக் கட்டுப்பாடுகளைவிட தனிமனித விருப்பமே முக்கியம் என்று துணிச்சலுடன் குடும்பத்திலிருந்து வெளியேறி, மறுமணம் புரிந்துகொள்ளும் காத்தியாயினி இறுதியில் தனது வாழ்வின் துயரங்களுக்கு அத்தகைய பாவங்களே காரணம் என்று குற்றவுணர்ச்சி கொள்கிறாள். இறுதியில் பண்டிதரிடமும் தன் மகனிடமும் மன்னிப்பைக் கோரிய பின்பே மரணமடைகிறாள். காத்தியாயினியின் இந்த முடிவு நவீன மனத்தையும் அதன் முடிவுகளையும் விமர்சிக்கும் விதமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த நாவல் எழுப்பியிருக்கும் விவாதங்கள் முக்கியமானவை. விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் இந்தியச் சூழலில் பெண்களின் வாழ்க்கை குறித்த பார்வையில் ஏற்பட்ட  மாற்றங்களுக்கு இத்தகைய விவாதங்களும் காரணமாயின. இத்தனை ஆண்டுகள் கழித்து ‘வம்ச விருட்சம்’ தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்த விவாதங்களுக்கு இன்னும் இடம் இருக்கிறது என்பதே இந்த நாவலின் சமகாலப் பொருத்தத்தை உறுதிப்படுத்துகிறது.

0

வம்ச விருட்சம் – எஸ்.எல்.பைரப்பா

கன்னடத்திலிருந்து தமிழில்  - கே.நல்லதம்பி

எழுத்து பிரசுரம் வெளியீடு – மார்ச் 2024 விலை ரூ.600/-

Thursday, 12 September 2024

வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி - லதாவின் சீனலட்சுமி தொகுப்பைக் குறித்து


கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக் கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களை திருத்தமாகச் சொல்லியிருந்தது. அகவயமாகவே கதையை நகர்த்தவேண்டிய அசாதாரணமான களம் வெகு சாமர்த்தியமாக கையாளப்பட்டிருந்தது. இணைய இதழ் ஒன்றில் வெளியான லதாவின் கதை அது. அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்ட ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் பெற்று படிக்க முயன்றேன். கிடைக்கவில்லை. ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

‘சீனலட்சுமி’ என்ற தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. எட்டு கதைகளைக் கொண்டது. ஒரேயொரு கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் பெண்களின் கதைகள். அம்பை, ஆர்.சூடாமணியில் தொடங்கி உமாமகேஸ்வரி, சந்திரா, ஜா.தீபா வரையிலுமான பெண் எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுவான புள்ளியை கண்டடைய முயல்வோமானால் ‘பெண்களுக்கான இடம்’ என்பதாகவே அது இருக்கும். வரலாற்றில், சமூகத்தில், அன்றாட வாழ்வில் பெண்களுக்கான இடம் குறித்து கேள்வி எழுப்பும், விமர்சனம் செய்யும், வலியுறுத்தும் குரல்களை அந்தக் கதைகளில் கேட்க முடியும். லதாவின் கதைகளில் ஒலிக்கும் குரலும் அவ்வாறான இடத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காலமும் களமும் வேறு என்றாலும் எழுப்பப்படும் கேள்வியும் அதற்கான காரணங்களும் உலகளாவியதாகவே உள்ளன. பெண்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அனுபவிக்க நேர்கிற தடைகளுடன் புறக்கணிப்புகளுடன் அடக்குமுறைகளுடன் சேர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அந்நிய நிலம், அந்நியமான கலாச்சாரம் போன்ற சில கூடுதல் காரணிகளையும் கடந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 

புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழத் தலைப்பட்ட பெண்களின் வாழ்வியல் நிலைகளை, அனுபவங்களை வரலாற்றினூடாக கால வரிசையில் அணுகுவதாக அமைந்துள்ளன இந்தக் கதைகள். விடுதலை பெறும் கனவுடன் 1943ல் சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏயில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முயலும் வேணியிலிருந்து தொடங்கி (தேக்காவில் ஒரு பாலம்) குழந்தைப் பேறுக்குப் பிறகான நாட்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கும் நீலமலர் (இளவெய்யில்) வரையிலுமாக இக்கதைகள் தரும் பெண்களின் வரிசையைக் கொண்ட வரைபடம் இதுவரையிலுமான மனிதகுல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெருமிதங்களையும் கசப்புடன் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. உலகியல் சார்ந்த புறவயமான பெருமளவிலான மாற்றங்களை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை சாதனங்களும் கருவிகளும் மனிதனின், குறிப்பாக ஆணின், மன ஆழத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் பெண்களுக்கான இடத்தை அங்கீகரிப்பதில் அவனுக்குள்ள அக இயல்பில் சிறிய அளவிலான சலனத்தையும் ஏற்படுத்த இயலாதவையாக அமைந்திருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

வரலாற்றிலும் சமூகத்திலும் இயல்பாக, நியாயமாக அமைய வேண்டிய பெண்களுக்கான இடத்தை அவர்கள் அடைய முடியாமல் செய்யும் தடைகள் எவை என்ற கேள்விகளை இக்கதைகளின் வழியாக எழுப்பிக்கொள்ள முடியும். காலங்காலமாக தொடர்ந்து பெண்களுக்கென்று வகுக்கப்பட்டு வரையறைக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறும் முயற்சிகளும் போராட்டங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதையும் இக்கதைகள் அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

‘தேசத்தின் விடுதலை’ என்ற ஒற்றை இலக்கின் கீழ் இனம், மொழி, பால், சாதி, பொருளாதாரம், இருப்பிடம் போன்ற பிற எல்லா மனமாச்சரியங்களும் வேறுபாடுகளும் பொருளற்றுப் போகும் என்பதே நம்பிக்கை. அப்படித்தான் வரலாறு கற்பித்துள்ளது. இந்த கற்பிதத்தை உடைத்து நொறுக்கும் உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளன. சுபாஷ் சந்திர போசுடன் ஐ.என்.ஏவில் சேர்ந்து போராடும்போது சொந்த மண்ணுக்குத் திரும்பலாம், விடுதலை பெறலாம் என்ற கனவுடன் களத்துக்கு வரும் பெண்களை, படையணியில் உள்ள சக பெண்களே புறக்கணிப்பதற்கான காரணமாக அமைந்திருந்தது சாதி என்னும் உண்மை வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. சாதி வேறுபாடுகளுக்கு முன்பு தேச விடுதலை, மானுட விடுதலை போன்ற லட்சியங்கள் பொருட்டல்ல என்ற மனப்பான்மையை ‘தேக்காவில் ஒரு பாலம்’ போன்ற கதைகளிலிருந்துதான் அடையாளம் காண முடிகிறது. சாதி மனப்பான்மைக்கு ஆட்படுவதில் ஆண், பெண் பேதமில்லை என்கிற கசப்பான யதார்த்தத்தையும் கண்டுகொள்ள முடிகிறது.

‘காவடி எடுக்க உரிமையில்லை’, ‘படகிலேறி கடலில் மீன் பிடிக்கக்கூடாது’, ‘போர் முனையில் சண்டை போட அனுமதியில்லை’ போன்று வாழ்வின் எல்லா திசைகளிலும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து புதிது புதிதான தடைகளை விதிக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கே பெண்களின் முதன்மையான சவால்களாக அமைந்திருப்பதை எல்லாக் கதைகளும் உணர்த்துகின்றன. கடுமையான உடல் உழைப்பைத் தந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்புணர்வுடனும் இருந்தபோதிலும் ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை மாறவில்லை. அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக உடனிருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், திருமண ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் நடப்பதில்லை, அழைக்கும்போது பேசுவதில்லை போன்ற காரணங்களுக்காக தொடர்பிலிருந்து விலகிச் செல்லும் மணமகனின் உளநிலையும் புறக்கணிப்பும் அந்தப் பெண்ணின் மீது அவன் செலுத்தும் உளவியல் வன்முறைதான்.

தடைகளையும் சவால்களையும் கடந்து செல்ல முனையும்போது ஏற்கவேண்டிய வலிகளையும் இக்கதைகள் உணர்த்துகின்றன. நோய்மை வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இரு கைகளையும் இழந்தவள் கணவனால் புறக்கணிக்கப்படுகிறாள். மகளையும் விட்டுத்தர நேர்கிறது. புற்றுநோய் வாதைகளைத் தாங்கிக் கொள்வதுடன் அன்றாடத் தேவைகளுக்குக்கூட இன்னொருவரின் உதவியை நாடவும் அதை சகித்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. சருமத்தைத் துளைத்து வடுக்களை ஏற்படுத்தும் இன்சுலின் ஊசிகளைக் குத்திக் கொள்ள நேர்கிறது. இத்தகைய உடல் வலிகளுடன் புறக்கணிப்பின் அகவதையையும் சகித்துக்கொள்ள நேர்கிறது.

இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நம்பிக்கைகளை பற்றிக்கொள்ள நேர்கிறது. தைப்பூச விழாவின் போது ஈடுபாட்டுடன் காவடிகளைத் தயார் செய்கிறார்கள், தேசத்துக்காக போரிட தயாராகிறார்கள், தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், மீன்களைக் கொண்டு விதவிதமாக சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. அலுக்காமல் வரிசைகளில் நின்று சாதிக்க எண்ணுவதும்கூட அவ்வாறான ஒரு நம்பிக்கைதான். கைபேசி விளையாட்டுகளில் மூழ்குவதும் தற்படங்களை ஏற்றி நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற விழைவதும்கூட தங்களது நெருக்கடியிலிருந்து விலகி சற்றே நிதானித்துக்கொள்ளும் உத்திதான். பக்தி, பாசம், சமையல், தையல்வேலை, இசை, ஒப்பனை, விளையாட்டு என்று தங்களுக்கான வழிகளில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகத்தான் கிடைக்காத இடத்தின், அங்கீகாரத்தின் வெறுமையை நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

இந்தக் கதைகளின் ஊடாக சில அபாரமான நுண் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்டியிருக்கிறார் லதா. ‘நிர்வாணம்’ கதையில் திரண்டு அழகுறும் அம்மா-மகள் உறவை உதாரணமாகச் சொல்லலாம். அம்மா, மகள் என்ற உறவு நிலைக்கப்பால் இருவரும் இருவேறு பெண்கள். அவரவர் அந்தரங்கங்கள் வேறு. இன்னொருவரின் உதவியுடனே தன் அன்றாடங்களைக் கழிக்க நேரும் அம்மாவின் உளநிலையைப் புரிந்துகொள்ளும்போது மகளுக்கும் அவளுக்குமான நெருக்கம் கூடுகிறது. உடல் சார்ந்த கூச்சங்கள் மறைகின்றன. சிறுமியாக இருந்த காலத்தை இருவரும் எட்டும்போது உடலின் நிர்வாணம் பொருட்டாகத் தெரிவதில்லை. உடுத்தாத உடலை ‘கோகுல் சாண்டல்’ பவுடரின் வாசனையுடன் பின்னிருந்து கட்டிக்கொள்ளும் புள்ளியைத் தொடும்போது கதை முழுமையடைகிறது. சொற்களில் எளிதில் சிக்காத இந்த உணர்வுகளை இயல்பான சித்தரிப்பின் வழியாக கச்சிதமாக திரளச் செய்யும் பெரும் சவாலை லதா மிக அபாரமாக கையாண்டிருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள சொற்களால் உருவாகியிருக்கும் கதையினுள் நுட்பமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கும் புனைவுத்திக்கு இன்னொரு உதாரணம் ‘காவடி’. கதையின் நாயகியான ஆத்தா, தாத்தாவுக்கு மூன்றாவது மனைவி. நான்கு குழந்தைகள். தாத்தாவின் சொற்ப வருமானம் போதாத நிலையில் பிள்ளைகளின் பசிபோக்க கடுமையாக உழைத்தவள். உடலெங்கும் கன்றி காய்க்கும் அளவுக்கு தாத்தாவிடம் அடி வாங்கியவள். தைப்பூசத்தின்போது அரிகண்ட காவடி எடுக்கும் தாத்தாவுக்கு உற்சாகத்துடன் உதவுபவள். காவடி ஊர்வலங்களில் சலிக்காமல் நடந்தவளுக்கு காலில் பட்ட சிறுகாயம், நீரிழவின் காரணமாக குணமாகாமல் புரையோடி தசைகளைத் தின்றுவிட்டது. சிகிச்சைக்காகக் காத்திருக்கிறாள். நினைவிழந்தும் மீண்டும் படுக்கையில் கிடப்பவளின் எண்ணம் முழுக்க காவடி எடுத்துச் செல்லும் தைப் பூச விழாவினையே சுற்றி வருகிறது. பேத்தியிடம் தொடர்ந்து காவடிக் கதைகளை சொல்வதாக அமைந்துள்ள கதையின் உள்ளே வாழ்நாள் முழுக்க உடலிலும் மனத்திலும் அலகுகளைக் குத்தி எண்ணற்ற காவடிகளை சுமந்த அவளது நெஞ்சுரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘ஊசி குத்தி குத்தி காயந்துக் கறுத்திருந்த அவரின் இடுப்புப் பகுதி அரிகண்டம் போடுபவர்களின் இடுப்பாகி இருந்தது’ எனும் கடைசி வாக்கியம் அதுவரையிலும் சொல்லப்பட்ட தாத்தாவின் கதையை மாற்றி ஆத்தாவின் கதையாக்கி விடுகிறது.

ஒரே கதையின் இரண்டு பகுதிகள்போல் அமைந்திருக்கும் ‘அலிசா’வும் ‘வலி’யும் இரு முகங்களைக் கொண்ட ஒரே பெண்ணின் கதையைத்தான் சொல்கின்றன. சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள உபின் தீவில் வளரும் அலிசா மீன் பிடிக்கும் நுட்பங்களைத் தாத்தாவிடம் கற்றுக்கொள்வது கதை. இதற்குள் வெவ்வேறு தரவுகளும் உணர்வுகளும் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. வாழ்வின் பல்வேறு முன்பறியாத சூழல்களுக்கும் அனுபவங்களுக்கும் அலிசா தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் விதமாகவே கதையின் சம்பவங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ‘வலி’ கதையை இதன் தொடர்ச்சியாக அணுக முடியும். விதவிதமாக மீன் சமைப்பதில் தேர்ச்சி பெற்றவள், கைகளை இழந்து தொட்டி மீன்களைக் கொண்டு தன்னை திருப்திபடுத்திக்கொள்ளும் அவலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். கைவிடப்படுவதின் துயரத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிவிடுவதில்லை. அலிசா துணிச்சலுடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறாள். கைகளை இழந்தவளோ மகளின் வருகைக்காக மீன் தொட்டியுடன் தயாராகிறாள்.

லதாவின் இக்கதைகள் வலுவான புதிய பெண் கதாபாத்திரங்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லா பெண்களுக்குமான வலியையும் தடைகளையும் சந்திப்பவர்கள்தான் என்றாலும் அவற்றை கடந்துசெல்லும் விதங்களே அவர்களைத் தனித்துவப்படுத்துகின்றன. இவர்களது உலகில் ஆண்கள் முக்கியமற்றவர்கள் என்றாலும் இவர்களுக்கான இடத்தையும் உரிமைகளையும் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் கவனிக்க முடிகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளம் சொல்லும் அளவுக்கு கனபரிமாணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

லதாவின் கதைமொழி எளிமையானது. சிடுக்குகள் இல்லாதது. தனித்துவமானது. இயல்பாக உரையாடுவதுபோல கதைத் தொடங்குகிறது. தெளிவுடன் நகர்கிறது. சொல்ல வேண்டியவற்றை மட்டும் சிக்கனமாகச் சொல்கிறது. கதையின் உள்ளடுக்குகளைப் குறித்த சுட்டிகளை மட்டும் அங்கங்கே மிகக் குறைந்த சொற்களில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது. பெரும்பாலான கதைகள் உரையாடல்களால் அமைந்தவையே. அகமோதல்களையும் உணர்வுகளின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் அடங்கிய தொனியில் அழுத்தமாகக் காட்டிவிடுகின்றன.

சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டு கதை சொல்லும் உத்திக்கு மாறாக மன உணர்வுகளைத் தொட்டுக் காட்டுவதன் மூலமாக மட்டுமே முழுமையான அனுபவ உலகத்தை உருவாக்க முனைந்திருக்கும் விதத்தில் தனித்துவம் பெறுகின்றன லதாவின் கதைகள். உரையாடல்களின் வழியாக சிக்கனமான சொற்களின் மூலமாக ஆங்காங்கே கசியும் வெளிச்சத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத பகுதியை அனுமானிக்கவேண்டிய சவால்களைக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான இடம் மறுக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கும் கதைகள் என்றபோதும் எந்த இடத்திலும் அரசியல் குரல் வலுத்தோ ஓங்கியோ ஒலிக்கவில்லை என்பதும் இந்தக் கதைகளுக்கான இயல்புகளில் ஒன்று.

அயல்நிலத்துக்கான துலக்கமான அடையாளங்களுடன், தனித்துவமிக்க குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக உலகளாவிய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என்கிற வகையில் இவை அடர்த்தியானவை, அழுத்தமானவை. 

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

  சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி ப...