Saturday 17 August 2024

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2024


 

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு பாவண்ணன் தொலைபேசியில் அழைத்தார். பெங்களூரைச் சேர்ந்த புக் பிரம்மா அமைப்பு இலக்கிய விழா ஒன்றை மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பணியைத் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு சில வாரங்கள் வரை எந்தத் தகவலும் இல்லை என்பதால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. 

ஆனால், சில நாட்களிலேயே புக் பிரம்மா அமைப்பிலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து பயண விபரங்களைக் கேட்டறிந்தனர். மூன்று நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட்டது. 

இந்திய அளவில் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று. இது தவிர, கேரளாவிலும் கர்நாடகாவிலும் இத்தகைய திருவிழாக்கள் நடக்கின்றன. இத்தகைய  பன்மொழி நிகழ்வுகளின் அவசியம் என்ன? தமிழைத் தவிர பிற மொழிகளில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு இது. நாம் வாசித்து வியந்த பிற மொழி எழுத்தாளர்கள் சிலரை நேரில் சந்திக்க முடியும். உரையாட முடியும். அந்தந்த மொழிகளின் சமகால நடப்புகள், பிரசுர வாய்ப்புகள், நூல் விற்பனை, மொழியாக்கம்,

விமர்சனப் போக்குகள், தமிழ் இலக்கியம் குறித்து பிற மொழியினர் எந்த அளவுக்கு அறிந்துள்ளனர் என்பது போன்ற பலவற்றையும் தெரிந்துகொள்ளவும் இதுவொரு வாய்ப்பு. பிற மொழிகளில் எழுதும் இன்னும் சில பெயர்கள் அறிமுகமாகின்றன. சில களங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதுவொரு பரிமாற்றக் களம். மொழிகளுக்கிடையிலான தொடர்புக்கான பாலம். எல்லாவற்றையும்விட, மற்ற மொழிகளை அவை பேசப்படும்போது கேட்பது முக்கியமான அனுபவம். ஒரு மொழியின் சொற்கள் உச்சரிக்கப்படும் விதமும், ஏற்ற இறக்கங்களும் அவற்றின் வழியாக வெளிப்படும் ஒலிகளும் அந்த மொழியை மேலும் நெருக்கமாக உணர உதவுகின்றன.  


இந்த விழாவை ஏற்பாடு செய்யும் புக் பிரம்மா அமைப்பு, கன்னட இலக்கியம், புத்தகங்கள், நிகழ்ச்சிகள் சார்ந்தவற்றை ஒருங்கிணைக்கும் உலகளாவிய மின் ஊடக நிறுவனம். புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் போன்றவற்றை தங்களது வலைத்தளம் வழியாக கொண்டுசெல்கிறார்கள். கன்னட சிறுகதைகளையும் கவிதைகளையும் இந்த வலைத்தளத்தின் வழியாகக் கேட்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக கன்னட இலக்கியத்துக்கு மட்டும் நடத்தி வந்த இத்தகைய விழாவை இப்போது தென்னிந்தியா மொழிகளுக்கான விழாவாக மாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களுக்கு விருது வழங்கப்படுகின்றன. இந்த வருடம் முதல் இந்திய மொழிகளில் இலக்கியத்துக்கு முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கும் ஒருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஒன்றை நிறுவியுள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான விருது ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.       
  

பெங்களூர் சென்று சேரும் வரை பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. மூன்று நாட்கள் பெங்களூரில் நண்பர்களுடன் இருக்க ஒரு வாய்ப்பு என்பதே முதன்மையாக இருந்தது. கோவையிலிருந்து கவிஞர் சுகுமாரனும் ஈரோட்டிலிருந்து மோகனரங்கனும் சேர்ந்துகொண்டனர். பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வாகனங்கள் காத்திருந்தன. வளாகத்தை அடைந்தவுடன் வரவேற்கவும் அறைகளுக்கு அழைத்துச் செல்லவும் தன்னார்வலர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் மரங்களடர்ந்த வளாகத்தில் அழகிய விசாலமான அரங்கத்தில் விழா. அருகிலிருந்த விடுதியில் தங்குவதற்கான அறைகள். இரண்டுக்கும் நடுவில் உணவுக்கூடம். அதையடுத்து தேநீர் அருந்தியபடி உரையாட மர பெஞ்சுகளுடனான திறந்தவெளி அரங்கம். அருகில் புத்தக அரங்குகள்.

மறுநாள் காலையில் தேநீர் அருந்தும்போதே கவிஞர் சச்சிதானந்தனைச் சந்திக்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழின் சிறப்புப் பக்கத்தில் வெளியான அவருடைய ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்தடுத்து தென்னக மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பதிப்பாளர்களும் வந்து சேர்ந்தனர். அறிமுகங்கள், கைகுலுக்கல்கள், தற்படங்கள். வளாகமெங்கும் கலந்தொலித்தன தமிழும் மலையாளமும் தெலுங்கும் கன்னடமும் ஆங்கிலமும்.

தென்னகத்தின் ஆன்மா’ ( Soul of South ) என்பது விழாவின் முகப்பு வாக்கியம்.


BBLF#2024 ன் இயக்குநரும் கன்னட எழுத்தாளருமான சதீஷ் சப்பரிகே வரவேற்றார். ‘தெகன நுடி கௌடி’ என்ற தலைப்பில் நடந்த தொடக்க விழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் ஹெச்.எச்.சிவபிரகாஷ், வோல்கா, ஜெயமோகன், விவேக் ஷான்பாக் ஆகியோர் உரையாற்றினர். ‘தென்னக மொழிகள் - இருப்பின் கேள்வி’ என்ற தலைப்பிலான இரண்டாம் நாள் தொடக்க விழாவில் பால் சகாரியா, பெருமாள் முருகன், நாகபூஷனம், வடரேவு சின்னபத்ருடு, பிரதிபா நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

மண்டபா, மதனா, அங்கலா, அக்ஷரா ஆகிய அரங்குகளில், நாவல், சிறுகதை, கவிதை, மொழியாக்கம், நூல் பதிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடந்தன. நான்கு மொழிகளிலிருந்தும் மூத்த, இளம் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் கலந்துரையாடல்களில் பங்கு பெற்றனர். ஐம்பது நிமிட அளவிலான கலந்துரையாடல்கள். மூன்று அல்லது நான்கு பேர் பங்கேற்றனர். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை ஆகியவற்றின் சமகாலப் போக்குகள், செவ்வியல் இலக்கியத்தின் சமகாலப் பொருத்தங்கள் என தலைப்புகள் அனைத்தும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மொழியிலும் சமகாலத்தில் நிகழும் போக்குகள் குறித்து அறிவதற்கான வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட மொழி சார்ந்த எழுத்தாளர்கள் தங்களது மொழியிலேயே உரையாடியதால் பிறமொழியைச் சேர்ந்தவர்களால் அவர்களது கருத்துகளை, ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், முழுக்க அறிய முடியவில்லை. மலையாளம், கன்னடம் குறித்து நமக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால், நமக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாத தெலுங்கு இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் நம்பிகையளிக்கும் விதத்தில் இருப்பதை உணரமுடிந்தது. 


முதல் நாள் அரங்கில், தமிழ்க் கவிதைகளில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சுகுமாரன், இசை, பொன்முகலி, சாம்ராஜ் ஆகியோர் கலந்துரையாடினர். ‘தமிழ் வாசகர் குரல் - ஜன்னல்கள் வழியாகத் தெரியும் உலகம்’ என்ற தலைப்பில் சரவணன் மாணிக்கவாசகம், க.மோகனரங்கன், தங்கமணி, நாகராஜன் ஆகியோர் உரையாடினர். ‘பெருமாள் முருகனுடன் ஒரு உரையாடல்’ நிகழ்ச்சியில் பாவண்ணனும் எம்.கோபாலகிருஷ்ணனும் பங்கெடுத்தனர். இரண்டாம் நாளன்று தலித் இலக்கியம் சவால்களும் சாதனைகளும் என்பதைக் குறித்து கமலாலயன், சுகிர்த ராணி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரும், ‘சிறுகதைகள் - புதிய தருணங்கள், புதிய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன், ஜா.தீபா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாடினர். மூன்றாவது நாளில், ‘தமிழ் நாவல்-விரிவடையும் புதிய எழுத்துக் களம்’ என்பதைப் பற்றி சு.வேணுகோபால், கலைச்செல்வி, கடலூர் சீனு ஆகியோர் பேசினர். சுரேஷ் பிரதீப், கயல், காளி பிரசாத், ரம்யா ஆகியோர் ‘மொழிபெயர்ப்பு-புதிய உலகம், புதிய சிந்தனைகள்’ என்பதைக் குறித்து விவாதித்தனர். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அரங்குகளில் ஒழுங்குசெய்யப்பட்டதால் ஏதேனும் ஒன்றையே தெரிவு செய்யவேண்டிய சிக்கல். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  

அரங்குகளில் பங்கேற்றவர்களைத் தவிர பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

கன்னட மொழி சார்ந்த உரையாடல்கள், கவிதை வாசிப்பு அனைத்தும் ஒரு அரங்கில் தனியாகவும் நடந்தன. அருமையான ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மானசி சுதிர், மேக்னா ஆகியோரின் கவிதை நடனங்கள் இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடந்த, நண்பர் செங்கதிர் மொழிபெயர்த்த கபீர் கவிதைகள் வெளியீட்டு விழாவின்போது நடந்த இசை நிகழ்ச்சியில் வேதாந்த் பரத்வாஜுடன் இணைந்து கபீர் பாடல்களை பாடிய பிந்து மாலினியின் கச்சேரி இந்த விழாவில் இடம்பெற்றிருந்தது. தம்புராவை மட்டும் இசைத்தபடி பாடிய அவரது குரலுக்கு அத்தனை வசீகரம். அமீர் குஸ்ரு, கபீர், அக்கமாதேவி, பத்மா சுப்ரமணியம் ஆகியோரின் பாடல்களுடன் பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே’ பாடலையும் பாடினார். பாரதியின் ‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?’ என்ற வரிகளை அவர் பாடிய விதத்தை இப்போதும் மறக்க முடியவில்லை. ஞாயிறு காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்டிட் வெங்கடேஷ் குமாரின் கச்சேரிக்கு அரங்கு நிறைந்திருந்தது. ஒருபுறம் தபலா, இன்னொரு பக்கம் ஆர்மோனியம், பக்கவாட்டில் தம்புராவுடன் ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞன் மேடையில் பாடுவதை நேரில் பார்ப்பதென்பது இணையற்ற அனுபவம். மேடையில் அவர் பாடவில்லை. அந்த ராகங்களை நிகழ்த்திக் காட்டினார். ‘அக்கா கேளவா நானொந்து கனச கண்டேன்’ என்ற அக்கமாதேவியின் வசனத்தை பாடியபோது அரங்கமே குதூகலம் கொண்டிருந்தது. மேடையில் மிக லகுவாக இருந்தார். தபலாவுக்கான ஒலிவாங்கியின் அளவு  ஏறக்குறையவே இருந்ததை சரிசெய்தபடியே பாடினார். இடையிடையே அரங்கில் இருந்தோரிடமும் இயல்பாக உரையாடினார். ஒரு இலக்கிய விழாவில் இத்தகைய சில இசை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், நடனங்கள், நாடகங்கள் இடம் பெறும்போதுதான் அது முழுமை அடைகிறது. 

ஞாயிறு மதியமே ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்ததால் பல நல்ல நிகழ்ச்சிகளைக் காண முடியாததில் வருத்தம். மாலையில் நடந்த யக்ஷகானத்தைத் தவறவிட்டது இப்போதும் வருத்தம் தருகிறது. அடுத்த முறை நிகழ்ச்சியில் முழுமையாக பங்கெடுக்காமல் முன்கூட்டியே புறப்பட்டுச் செல்லும் இந்தத் தவறைச் செய்யக்கூடாது.

 விழா தொடங்கிய முதல் நாளிலேயே முகநூலெங்கும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தேர்வு குறித்த விமர்சனங்களைக் காண முடிந்தது. எந்தவொரு விருது அறிவிக்கப்படும்போதும் எந்தவொரு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளிவரும்போதும் இத்தகைய விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. இது இயல்பான ஒன்றுதான். ஒரு நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். யார் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் இப்படித்தான் செய்ய முடியும். எந்தவொரு பங்கேற்பாளர் பட்டியலும் இவ்வாறான விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் பாவண்ணன் இந்த சிரமமான பொறுப்பை எடுத்துக்கொண்டிருந்தார். இது அவரது தெரிவு, அவரது முடிவு. சிலரைச் சேர்த்திருக்கலாம், சிலரைத் தவிர்த்திருக்கலாம் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணக்கூடும். நமக்கு அப்படியொரு பொறுப்பு வரும்போது முடிந்தவரை இந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தேர்வு செய்ய முயலலாம்.

 

கவிஞர் சச்சிதானந்தம் அவர்களின் வயது 78. மூன்று நாட்களும் உற்சாகம் குறையாது அரங்குகளில் பங்கேற்றதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. மலையாளத்தின், பிற இந்திய மொழிகளின் சமகாலப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்கிறார், எழுதுகிறார். காலையிலிருந்து மாலை நிகழ்ச்சிகள் முடியும் வரை, அடுத்தடுத்த அரங்குகளில் பங்கேற்கவிருக்கும் எழுத்தாளர்களை தொடர்புகொண்டு அவர்களை தயார்படுத்தும் பரபரப்புடனே இருந்தார் பாவண்ணன். நிகழ்ச்சியின் இயக்குநரான சதீஷ் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ‘இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதற்கு காரணம் நீங்களெல்லாம் இங்கு வந்திருப்பதுதான். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு வருடமும் வந்திருந்து மூன்று நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து இதைச் சிறப்படைய செய்யவேண்டும். அதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது’ என்றார். சதீஷ் கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதுபவர். இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாட்களும் சற்றும் குறையாத உற்சாகத்துடன் வளாகத்துள் அவரைக் காணமுடிந்தது. நிகழ்ச்சி முழுக்க கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. நேரலையில் ஒலிபரப்பப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவியர் பலர் தன்னார்வலர்களாக பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்த விழாவின் வெற்றியில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது.

 

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடக்கும் என்று சொன்னார்கள். அப்படித் தொடருமாயின் ‘புக் பிரம்மா இலக்கியத் திருவிழா’ தென்னகத்தின், இந்தியாவின் முக்கியமான இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


No comments:

Post a Comment

வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி - லதாவின் சீனலட்சுமி தொகுப்பைக் குறித்து

கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில ...