Monday, 1 December 2025

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்



 



0

திக்கற்றோர்க்கு

----------------------

யாராவது யாருடனாவது

இருக்கத்தான் வேண்டும்

அப்படித்தான்

எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது

 

அவன் இவளோடும்

அவள் இவனோடும்

அவன் இவனோடும்

அவள் இவளோடும்

அவர்கள் இவர்களோடும்

அவர்கள் அவர்களோடும்

 

தோள் தேடுவதும்

மடி சாய்வதும்

உயிரின் அனிச்சை

ஆகவே

தழுவலின் நகக்கீறல் சகித்து

யாராவது யாரோடாவது

இருக்கத்தான் வேண்டும்

 

பூமியில் ஒருவரது பாத்தியதை

அழிக்கமுடியாதது

என்றாலும் நேர்கிறது

யாரோ ஒருவர்க்கு

யாருமே இல்லாமல் போய்விடுவதும்

 

நாம்

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

0

குணா கந்தசாமியின் இந்தக் கவிதை உமா மகேஸ்வரியின் நாவல் தலைப்பை நினைவுபடுத்துகிறது ‘யாரும் யாருடனும் இல்லை’. உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ஆதியிலும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் காணும்வரையிலும் தனித்தனியாகத்தான் இருந்திருப்பார்கள். பின் ஆதியிச்சையின் விளைவாக உயிர்கள் பெருகி ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை உண்டாகியிருக்கும். உயிர்காத்தல், உணவு, உறைவிடம், உடைமை காத்தல் என்று சுயநலம் சார்ந்த தேவைகளுக்காய் உருவான இந்த ஏற்பாடு குடும்பம், குழு, கூட்டம் என அமைப்புகள் உருவாக வழிவகுத்தது.

மற்றபடி விதிவிலக்கின்றி அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அனுபவிக்க வேண்டிய ஒன்று தனிமை. அனுபவிப்பது என்றாலே சுகம், துக்கம், வாதை, வலி, இம்சை என்று எல்லாமும் இருக்கும். தனிமையை கொண்டாடுவோரும் உண்டு. தாளமுடியாதது என்று அஞ்சுவோரும் உண்டு.

தனிமையை மிக எளிமையாக புரிந்துகொண்டிருக்கிறோம். யாரும் இல்லாமல் தனியாக இருப்பதுதான் தனிமை. மனிதர்கள் யாரும் உடனில்லாமல் இருந்துவிட்டால் தனிமை வாய்த்துவிடுமா?

என்றால், தனித்திருக்கும்போது தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி எழும். பயணம் செய்யும் அதே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கையில் முன்பின் தெரியாதவர்கள் பலரும் இருக்கும்போதும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம். அதை தனிமை என்று வகைப்படுத்த முடியுமா? தனித்திருப்பது வேறு, தனிமை வேறு. 

‘இளையராஜாவின் இசையும் சுவையான காபியும் என் தனிமையை அழகு செய்கின்றன’ என்று எழுதுவதைப் படித்திருக்கிறோம் அல்லவா?

தனிமை எத்தகையது? ஓசையற்றதா, நிறமற்றதா, ஒளியற்றதா, எதற்கும் வசப்படாததா, வரையறைகளற்றதா? ஒலியையும் ஒளியையும் நிறத்தையும் மணத்தையும் நீக்கிவிட்ட வெளிதான் தனிமையா? நீரும் நிலமும் காற்றும் நெருப்பும் கலந்து ஒன்றாகிப்போன அந்தரவெளியா அது?

தனிமையை, தூய தனிமையை நேரடியாக சமாளிப்பதும் அனுபவிப்பதும் அத்தனை எளிதல்ல. பொதுவாக தனிமையில் இசை கேட்க விரும்புவார்கள். வாசிக்க முனைவார்கள். எழுதவும் சிந்திக்கவும் தனிமை தேவை.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுண்டு. நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர், நால்வரின் மனைவியர், பிள்ளைகள் எண்மர் என்று பதினாறு பேர். கூடவே உறவினர்கள், குடும்ப நண்பர்களில் எவரேனும் சிலர் சேர்ந்து கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டபோது ‘மனைமாட்சி’ நாவலின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். வேலையை ஒத்திப்போட முடியாத நெருக்கடி. எனவே, போகவேண்டாம் என்று தீர்மானித்தேன். மனைவியும் பிள்ளைகளும் புறப்பட்டுப் போனார்கள். திரும்பி வர நான்கு நாட்களாகும். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் தொந்தரவு இருக்காது, நாவல் வேலைகளை முடித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், வீட்டில் தனியாக இருந்த அந்த நாட்களில் எழுத மனம் குவியவேயில்லை. அந்த நேரங்களில் என்னைப் பெரிதும் தொந்தரவு செய்தது வீட்டின் ஓசையின்மை. குடும்பத்தினர் வீட்டுக்குள் நடமாடும் ஓசையும் சேர்ந்ததுதான் வீடு. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை, மிக்ஸி அரைக்கும் சத்தம், குழந்தைகளின் சிரிப்பு, சண்டை, சிணுங்கல் எதுவுமில்லாமல் வீடு வெறும் கட்டடமாக மாறிப் போகிறது. அந்த சத்தமின்மை பெரும் தொந்தரவாயிற்று. கவனத்துடன் வேலையில் ஈடுபட இயலவில்லை. வீட்டின் சத்தங்களின் நடுவே உள்ள ‘தனிமை’யே எனக்கு உகந்தது என்று அறிந்துகொண்டேன்.      

குணா கந்தசாமி இந்தக் கவிதையில் தனிமையை வேறொன்றாக வரையறுக்கிறார். உறவுகளற்றுப் போகும் நிலையை அவர் தனிமை என்கிறார். அவை உவப்பான உறவுகளாய் இல்லாமல் இருக்கலாம். கூடிக் களித்து மகிழ்ந்திருந்தபோதும் சில வேளைகளில் போட்டியோ பொறாமையோ சிறு சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டிருக்கலாம். கணவன் மனைவி, நட்பும் சுற்றமும், அண்டை அயலார் என எல்லா உறவிலும் இணக்கமும் பிணக்கும் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒட்டி உறவாடிய ஒன்று இல்லாதபோது வாய்த்துவிடுவது தனிமை என்கிறார். அவ்வாறான ஓர் தனிமை தவிர்க்க முடியாதது. என்றேனும் ஓர் நாள் எல்லோரும் சந்திக்கத்தான் வேண்டும். அதைப் பழகத்தான் வேண்டும்.

இப்படி ஓர் வரையறைக்குப் பிறகு ஒரு வரியை எழுதி முடிக்கிறார் குணா கந்தசாமி.

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

 

இந்த இறுதி வரியின் ஒவ்வொரு சொல்லும் தனிமையின் வீரியத்தை தீவிரத்தை சுட்டுகின்றன. கைவிடப்பட்ட ஒரு கோவில் என்று நில்லாமல் ‘காட்டுக் கோவில்’ என்று துல்லியப்படுத்தும்போது அழுத்தம் கூடுகிறது. அங்கிருப்பது ஒரு தெய்வம் என்று நிறுத்தவில்லை. அதுவொரு ‘சிறுதெய்வம்’ என்று உருப்பெருக்கியால் இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறார். கைவிடப்பட்ட காட்டுக்கோவிலில் வழிபாடும் இல்லை, ‘வீற்றிருக்கு’ம் சிறுதெய்வத்துக்கு படையலும் இல்லை. கோவிலும் சிறுதெய்வமும் தனிமை பழகிக் காத்திருக்கத்தான் வேண்டும்.

எனக்கென்னவோ தனிமை காற்சங்கிலியிட்டு கற்தூணில் கட்டப்பட்ட களிறென்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரவர் தனிமைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

0

நன்றி - குணா கந்தசாமி

கவிதையும் ஞானமும் 5 - வழிப்பறிச் சம்பவம்



 




உண்பதும் உடுப்பதும் துயில்வதும் எழுவதுமான அன்றாடத்தின் சலிப்புகளுக்கு நடுவே சில விசயங்கள் மட்டும் அலுப்பூட்டாதவை. கவிதைகளிலும் ஒருசில பாடுபொருட்கள் மட்டும் ஒவ்வொரு கவிதையிலும் மெருகிழக்காமல் புதிய அனுபவங்களைத் தர வல்லவை. சூரியோதயத்தைக் குறித்து ஓரிரு வரிகளேனும் எழுதாத கவிஞர்களே இல்லை.  ‘நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி, சூரியனைக் காணோம்’ என்று பசுவய்யாவும், ‘மலை விளிம்பில் சூரியனுக்குப் புராதன மனிதனின் புன்னகை’ என்று சுகுமாரனும், ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்று பிரமிளும் உதயத்தைக் கண்டிருக்கிறார்கள்.

வெகு நீளமான கிழக்கு கடற்கரையின் வெவ்வேறு கரைகளில் ஒவ்வொரு நாளும் உதயசூரியனைக் காணவேண்டி எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். வானும் வெளியும் நீரும் ஒன்றுகலந்த கருநீல எல்லையை கிழித்து சாம்பல் வெளிச்சம் கசிவதில் தொடங்குகிறது அந்நாளின் அபூர்வத் தருணம். அடிவானம் முழுதும் மஞ்சள் பூசும். கொஞ்சம் குங்குமச் சிவப்பும் கூடும். மேகத் திட்டுக்களில் தீப்பிடிக்கும். பொன்மகுடத்தின் உச்சி ஒளிர எழுகதிர் தலைகாட்டும். செக்கச் சிவந்ததொரு ஒளிப்புள்ளி காணுந்தோறும் வளர்ந்து வட்டத்தட்டின் விளிம்பாக திரண்டெழும். கடலும் வானும் பித்துற்று பரவச நிறங்களை இறைக்கும். சுடரும் வளைகோடு இருபுறமும் இறங்கிச் சேர்ந்திடும். செவ்வட்டம் முழுமையுற்று சுழலும். ஏந்திய கடலின் கையிலிருந்து வானின் விரிகரங்களுக்கு தாவிய நொடியில் அந்தக் காட்சி முடிவுறும். சூரியோதயம் பார்த்தாயிற்று. உலகு மொத்தமும் அன்றாடத்துக்குத் திரும்பும். மீண்டும் மறுநாள் அதே கரைகளில் வேறு பலரும் அதே காட்சியைக் காணக் காத்திருப்பார்கள்.

காலைப் பொழுதின் அழகையும் மனத்துக்கு தரும் நிறைவையும் வாய்க்காதபோது அது ஏற்படுத்தும் ஏமாற்றத்தையும் கவிதையில் எழுதுவது வழக்கமானதுதான். நம்பிக்கை, மீட்சி, ஏமாற்றம் என்று பல்வேறு உணர்வுகளையும் சுட்டும் படிமமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதுவே கண்ணையும் மனத்தையும் கொள்ளைகொள்ளும் இக்காட்சியை ஒரு வழிப்பறிச் சம்பவமாக எழுதிக் காட்டும்போது கவிதையின் சாத்தியங்களைக் குறித்த ‘அட!’ என்ற வியப்பு கூடிவிடுகிறது. 

வழிபறிக்கு வந்தவனின் முகம் தெரியாதபடி இருட்டாக இருக்கும். அல்லது முகத்தை மூடியிருப்பான். அவன் கையிலிருக்கும் அந்தக் கத்திக்கு அத்தனை வலிமை. உயிர்ப் பயம். ஒரு சிறு கீறலும் எட்டிப் பார்க்கும் துளி ரத்தமும் போதும் நம் ஆயுளுக்கும் நடுக்கம் கொடுக்க. அது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவற்றை நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்துவிடுமோம். ‘காசு போச்சுன்னா பரவால்ல, சம்பாதிச்சுக்கலாம். உசிரு போனா வருமா?’ என்ற எளிய சமாதானமே வழிப்பறிக்காரர்களின் தேவ வாக்கு. 

வழிப்பறியின்போது அந்த நேரத்தில் நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்க நேரும். பையிலிருக்கும் பணம், சங்கிலி, மோதிரம், வளையல், தோடு, கடிகாரம் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த இழப்பை அத்தனை சீக்கிரம் நம்மால் மறந்துவிட முடியாது. 

ஆனால், இந்தக் கவிதையில் ஜெ.ரோஸலின் சித்தரிப்பது போன்ற ஒரு வழிப்பறி நிகழுமானால் நாம் எல்லோருமே நம்மிடம் உள்ளதனைத்தையும் சிறிதும் பயமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொடுத்துவிடுவோம். கேள்விப்படுவோர் அனைவரும் தமக்கும் இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். விரைவில் அது கைகூடவேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டுவார்கள். அன்றாடம் அப்படியொரு வழிப்பறி நிகழவேண்டும் என கடற்கரையெங்கும் அதிகாலையில் ஆட்கூட்டம் கூடிவிடும்.

கவிஞர் ஜெ.ரோஸலின் முகநூலில் கவிதைகளை எழுதுபவர். இது அவருடைய உண்மையான பெயரா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால், தொடர்ந்து அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். பெயரோ முகமோ தெரியாமலிருப்பதால் நல்ல கவிதைகளை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா?

 

ஜெ.ரோஸலின், தான் வழிப்பறிக்கு ஆளான அந்தப் பாதையை நம் எல்லோருக்கும் காட்டட்டும். அந்த வழிப்பறிக்காரன் கேட்பது போல அனைத்தையும் வெளியே எடுத்துக் கொடுத்துவிடுவோம். அப்படியொரு அற்புதத்தை சாத்தியப்படுத்தியதற்காக அனைவரும் அவருக்கு காலத்துக்கும் நன்றியுடையவராக இருப்போம்.

ஆனால், பாவம் அந்த வழிப்பறிக்காரன். அத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான் அவன்?

0

ஒரு வழிப்பறி சம்பவம்

 

தூரத்து மலையும் பக்கத்திலிருந்த வயல்வெளியும்

என் இரு கரங்களையும் மடக்கிப்பிடித்துக்கொண்டன.

பின்னர் ஒரு தங்கக் கத்தி வந்தது.

கைப்பிடிக்கு அந்தப்பக்கம் யாருமில்லை

ஆனால் நீலம்.

"உன் வருத்தத்தையெல்லாம் வெளியே எடு.

என்ன பார்க்கிறாய்

சீக்கிரம்..."

0

நன்றி - ஜெ.ரோஸலின்

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்

  0 திக்கற்றோர்க்கு ---------------------- யாராவது யாருடனாவது இருக்கத்தான் வேண்டும் அப்படித்தான் எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது...