Tuesday, 16 December 2025

பழனிச்சாமிகளின் கதை - சு வெங்குட்டுவனின் ‘வெறுங்கால் நடை’ சிறுகதைத் தொகுப்பு


 மணல் வீடு இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ‘ரிஷப் பந்தின் ஆட்டம்’ என்ற கதையின் தலைப்பு உடனடியாக கவனத்தைக் கவர்ந்தது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். முன்பின் அறிமுகமில்லாத பெயர். ஆனால், ரிஷப் பந்த் எனக்குப் பிடித்த இளம் கிரிக்கெட் வீரர். எனவே அந்தக் கதையை வாசிக்கத் தொடங்கினேன். ரிஷப் பந்தின் முக்கியமான ஒரு ஆட்டத்தை, மிக முக்கியமான தருணத்தில் அவரை கைவிட்டுப் போன அதிர்ஷ்டத்தையும், சரியான ஒரு தருணத்தில் அதிர்ஷ்டத்தை கைபிடிக்க மறுத்த ஒருவனின் வாழ்வையும் இணைத்து மிகக் கச்சிதமாக எழுதப்பட்டிருந்த கதை. அந்தக் கதையின் இன்னொரு சிறப்பம்சம் கொங்கு கிராமத்தின் வாழ்வியல் கூறுகளை மிக இயல்பாகவும் நுட்பமாகவும் சொல்லியிருந்தது. குறிப்பாக திருப்பூர் எனும் பெரும் தொழில் நகரத்தை ஒட்டியும் அடுத்துமுள்ள சிற்றூர்கள், கிராமங்களில் உள்ள வாழ்வின் பல்வேறு அம்சங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருந்தன.

கொங்கு வட்டார வாழ்வியல் என்று சொல்லும்போதே க.சீ.சிவகுமார், என்.ஸ்ரீராம் ஆகியோரின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரும். காங்கயம், வெள்ளகோயில் வட்டாரத்தை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள். கொங்கு வட்டார மொழியை புனைவு இலக்கியத்துக்குள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கச் செய்பவர்கள். சு.வெங்குட்டுவனை அவர்களது தொடர்ச்சியாக குறிப்பிட முடியும்.

மணல்வீடு வெளியிட்டுள்ள அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெறுங்கால் நடை’. தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. இந்த பதிமூன்று கதைகளும் குறிப்பிட்ட கொங்குப் பகுதியில் தொழில்களிலும் மக்களின் வாழ்க்கைப் போக்கிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.

கதைக்களன் திருப்பூரையொட்டி தென்கிழக்கில் அமைந்துள்ள மேட்டாங்காட்டு பகுதிகள். மானாவாரி விவசாய நிலங்கள். அதிகமும் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருப்பவை. வெங்கச்சாங்கற்களும் வெள்ளை வேலா மரங்களுமாய் காய்ந்திருக்கும் பூமி. திருப்பூர் பெரும் தொழில் நகரமாக மாறுவதற்கு முந்திய காலத்தில் கிராமங்களும் அங்கிருந்த மனிதர்களும் பூமியை நம்பியிருந்தனர். வலுவான கிணற்றுப் பாசனத்தால் தென்னந்தோப்புகளும் விவசாயமும் சாத்தியமாயின. பருவமழையை நம்பியிருக்க முடியாத நிலையில் கிணறுகள் தோண்டப்படும். இருபதடி கிணற்றில் ஊறும் தண்ணீர் வெள்ளாமைக்குப் போதாதென்று கிணற்றை இன்னும் இருபதடி ஆழப்படுத்த விவசாய வங்கியில் கடன். அந்தக் கடனைத் திட்டமிட்டு அடைப்பதற்குள் ஏராளமான இடைஞ்சல்கள். எதிர்பார்த்த விலைக்கு விளைபொருளை விற்க முடியாது. ஒரு போகத்தில் அமைந்ததுபோல அடுத்தடுத்த போகத்தில் பயிர் விளையாது. கடனும் வட்டியும் பெருகியபடியே இருக்க ஆழ்குழாய் கிணறு தோண்ட அடுத்த கடன். முன்னூறு அடியில் தொடங்கி எண்ணூறு அடி வரை நிலத்தைத் துளைத்து குழாய்கள் இறங்கும். பூமியெங்கும் சாம்பல் மேடுகள் குவியும். நீர் கொடுத்த குழாய்களும் பொய்த்துப் போகும். வங்கிக் கடனை அடைக்க பொன்னும் பொருளும் போய் கடைசியில் பூமியை விற்க நேரிடும்.

பூமியை நம்பியிருந்தவன் அடுத்த வேளைப் பிழைப்புக்கு மாற்று வழியைத் தேடித்தான் ஆகவேண்டும். திருப்பூர் பனியன் தயாரிப்புக் கூடங்கள் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து உழைக்கும் கரங்களை உற்சாகத்துடன் வேண்டின. நிலத்தில் உழைத்தவர்களும் விவசாயத்தை கைவிட்ட நில உடமையாளர்களும் திருப்பூரை நோக்கிச் சென்றனர். குறிப்பிட்ட வேலை நேரம், சனிக்கிழமையானால் சம்பளம், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அனைவருக்குமான சமாதானங்களை உறுதி செய்த தொழில். இடுப்பு வேட்டியுடன் வேர்வை சிந்தி நிலத்தில் உழைத்தவனுக்கு போட்ட உடுப்பு மடிப்பு கலையாமல் நிழலில் வேலை செய்யும் சுகமும் கிடைத்த கூலியும் பெரிய ஆசுவாசமாக அமைந்தது. சீட்டு பிடித்தார்கள், டிவிஎஸ் 50யில் சீறியபடி போனார்கள், கன்னங்கள் மினுமினுக்க சிகரெட்டும் வார இறுதியில் மதுவுமாய் வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்னும் சிறிது ‘வேக்கானத்து’டன் இருந்தவர்கள் சிறிய அளவில் உபதொழில்களில் இறங்கி வளம் பெருக்கினார்கள்.

பனியன் தொழிலுக்கு மாற்றாக, உள்ளூரிலேயே பிழைப்பதற்கான வழியாக அமைந்தது பவர்லூம் கூடங்கள். யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டாத சொந்தத் தொழில்.  இரவும் பகலுமாய் தறியோட்டினால் சம்பாதித்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை. இரண்டு நாலாகி நாலு எட்டாகி கூடங்கள் பெருத்து கூலிக்கு ஆட்களை வைக்கும்போது கூலி உயர்வு, போராட்டம், கொடி பிடித்தல் என்று பிரச்சனைகளும் வரத்தானே செய்யும். காதை அடைக்கும் தறிச் சத்தத்தில் பாடுபட்டவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாய் பெண்கள் அருகிருக்கும் பனியன் தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பது இயல்பாகவே பிடித்திருந்தது. தறிக்கூடங்களை நீங்கி பனியன் கூடங்களுக்கு தடம் மாறினார்கள்.

பனியன் கூடங்களுக்கோ தறிக் கூடங்களுக்கோ சென்று உழைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் வேறு சில எளிய தொழில்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஜோசியம், ஜாதகம் பார்ப்பது, வாஸ்து ஆலோசனைகள், நியூமராலஜி, நேமாலஜி என்று பல தினுசுகளைக் கொண்டது அவ்வாறான ஒரு தொழில். சரிவும் தோல்வியும் வரும்போது துவண்டு போகும் மனிதர்களுக்கு யாரேனும் ஒருவர் ஆறுதல் சொல்லவும் மீட்சிக்கான பாதையைக் காட்டவும் தேவைப்படுகிறார்கள். பலிக்கிறதோ இல்லையோ அந்த நேரத்துக்கு அவ்வாறான வார்த்தைகள் தேவைப்படுகிறது. அந்தத் தெம்பில்தான் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

உழைக்கும் பூமியிலிருந்து வெளியேறும் பழனிச்சாமிகள் வெங்குட்டுவனின் கதைகளில் கட்டிங் மாஸ்டர்களாக, பேட்லாக் டெய்ல்ர்களாக, பவர்லூம் தறிக்காரர்களாக, லைனில் பணம் வசூலிக்கும் பைனான்சியர்களாக, ஜோசியர்களாக வெவ்வேறு தோற்றங்களுடன் உலவுகிறார்கள். அந்தந்த நேரத்துக்கு அமையும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்தப் பழனிச்சாமிகள் சந்திக்க நேரும் ஆகப்பெரிய சிக்கல் உரிய நேரத்தில் வாழ்க்கைத் துணைநலம் வாய்க்காததுதான். ஏக்கரா கணக்கில் பூமி, உக்காந்து தின்னாலே ஏழு தலைமுறைக்கு தாட்டும் அளவுக்கு சொத்துபத்து, சுத்துபட்டு கிராமங்களில் செல்வாக்கு என்றெல்லாம் இருந்தும் இளைஞர்கள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. பழனிச்சாமிகளுக்கு பெண் கிடைக்காமல் போனதற்கு காரணம், எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரையிலும் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் ஆணா பெண்ணா என்றறியும் ஸ்கேன் முறை புழக்கத்தில் வந்து பெண் குழந்தைகளை சிசுவிலேயே அதிக அளவில் அழித்ததுதான் என்கிறார் வெங்குட்டுவன். உரிய வயதில் பெண் கிடைக்காமல், புரோக்கர்களையும் திருமண தகவல் மையங்களையும் ஜோசியம், பரிகாரங்கள், பூசைகளையும் நம்பிக்கையுடன் அணுகி, விதவை விவாகரத்து ஆனவர் என்று யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று எல்லா சமரசங்களுக்கும் தயாராக, பரிதாபமான நிலையில் இருக்கும் பழனிச்சாமிகள் இரண்டாம் ஜாமத்தில் சித்தர் குகையில் பொட்டுத்துணியில்லாமல் விரதமிருக்கவும், எருமைக் கடாக்களை வளர்த்து மேய்க்கவும்கூட தயாராக இருக்கிறார்கள்.

பெண் கிடைக்காத பழனிச்சாமிகளின் கதை இப்படியிருக்க, கட்டிக்கொள்ள வாய்த்த அதிர்ஷ்டசாலி பழனிச்சாமிகளுக்கோ அதை ஆண்டு அனுபவிக்க முடியாதது அடுத்த சிக்கல். கட்டிக் கொண்டவனை நிராகரிக்க பெண்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவற்றில் சில விநோதமானவையும்கூட. பெரிய மச்சானைப் போல புல்லட் ஓட்டத் தெரியவில்லை என்பது ஒரு காரணம். இன்னும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தன்னை நிராகரிக்கிறான் என்பது இன்னொரு காரணம்.

கிட்டியவர்களும் கிட்டாதவர்களும் மனச் சரிவை நேர் செய்வதற்குத்தானே ஊரெங்கும் திறக்கப்பட்டுள்ளன டாஸ்மாக்குகள். நிலத்தை இழந்தவனும் கல்யாணம் அமையாதவனும் அமைந்து வாழ முடியாதவனும் போதையில் ஆழ்ந்து துயரை மறக்கிறார்கள் என்றால் உழைத்துக் களைத்தவனும் அன்றாடத்தின் ஒரு பகுதியாக குடித்துப் பழகியவனும்கூட அதே போதையைத்தான் கொண்டாடுகிறார்கள். டாஸ்மாக்குகள் இன்று பண்பாட்டின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக, அன்றாட வாழ்வின் முக்கிய காரணியாக அமைந்திருக்கும் சித்திரத்தை இக்கதைகள் நெடுக காணமுடிகிறது.   

வெங்குட்டுவன் காட்டும் கதை மாந்தர்கள் யதார்த்தமானவர்கள். பாசாங்கற்றவர்கள். அவர்களின் தோற்றத்தை அவர் பெரிதாக விவரிக்காதபோதும்கூட கதைகளில் அவர்களது நடமாட்டத்தை நம்மால் உயிர்ப்புடன் உணரமுடிகிறது. சூழலையும் சம்பவத்தையும் சொல்லும்போதே ஆரெக்ஸ் பழனிச்சாமி, மிஸ்டிக் சுப்ரமணி, ரங்கமணி, சாமிநாதன், சிந்தாமணி, முத்துக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் கச்சிதமான உருவத்துடன் உடல்மொழியுடன் திரண்டு வருகின்றன.  

கொங்கு பிரதேசத்தின் நிலவளத்தையும் சூழலையும் வெகுசில சொற்களில் உருவாக்கிக் காட்டும் லாவகத்தையும் இக் கதைகளில் காணமுடிகிறது. ‘இப்போது வெயில் கொஞ்சம் இளகியிருந்தது. செம்மறிகள் மரத்தடிவிட்டு விலகி மேயத் துவங்கியிருந்தன. கரிக்குருவியொன்று பெட்டையாட்டின் மூத்திர வாடையைக் காற்றுவெளியில் மோப்பம்பிடித்து நின்றுகொண்டிருந்த செம்மறிக்கிடாயின் பிடரி மேலமரந்து அதன் காது உண்ணியைக் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. மாடுகளின் காலடிகளில் இப்போது கொக்குகள் தென்பட்டன.’ ‘துத்திச் செடிகளின் மஞ்சள் பூக்கள் கருப்பணசாமி சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின.’, ‘தென்புறம் கிழமேலாக நீண்டு கிடந்த கிளுவை வேலிக்கு அப்பாலிருந்த கொறங்காட்டு மரங்களுக்குள்ளிருந்து செம்போத்துகளும் கொன்னவாய்க் குருவிகளும் உற்சாகக் குரலெழுப்பியபடியிருந்தன. காரைப் புதர்களடர்ந்த பள்ளத்துக்குள்ளிருந்து மயில்கள் அகவுவதும் கேட்டது. வேலி வேப்பனிலிருந்து இறங்கிய அணிற்பிள்ளை சட்டெனத் திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி ஏறி மறுபுறமிருந்த கிளுவை வேலிக்குள் புகுந்து மறைந்தது.’

இக்கதைகளை மேலும் நெருக்கமாக உணர்த்தும் கொங்கு பிரதேச மொழி வெங்குட்டுவனின் இன்னொரு சிறப்பு. உரையாடல்களிலும் சித்தரிப்பிலும் வெகு இயல்பாக பொருந்தி கதைகளுக்கு சுவையையும் அழுத்தத்தையும் சேர்க்கின்றன. முக்கியமாக சித்தரிப்பின் வழியாக அல்லாமல் உரையாடல் வழியாக கதைகளை நகர்த்தும்போது இவ்வகையான மொழித்திறன் பலமாக கைகொடுக்கிறது.

தொகுப்பிலுள்ள இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் கதைகளுக்கு வெங்குட்டுவன் இட்டிருக்கும் தலைப்புகள். ‘கடன் மீண்டார் நெஞ்சம்’, ‘ஈஷோபதேசம்’, ‘ஆரெக்ஸ்’, ‘சிறு கையளாவிய வாழ்வு’, ‘எருமை நாயகம்’, ‘ஆபரேசன் சிந்தாமணி’ என சூட்டப்பட்டிருக்கும் தலைப்புகளில் உணரமுடிகிற மெல்லிய நகையுணர்வை சித்தரிப்புகளிலும் உரையாடல்களிலும்கூட காணமுடிகிறது.  இழப்புகளைத் தொடர்ந்து துயரங்களைச் சுமந்து அன்றாடங்களைக் கடத்தும் எளியோர்களின் கதைகள் என்றாலும் துக்கத்தின் பாரத்தை உணராமல் புன்னகைத்தபடியே வாசித்துக் கடக்கச் செய்யும்படி இந்த நகையுணர்வை கையாண்டிருப்பதில் வெங்குட்டுவனின் புனைவுத் திறன் மேலோங்கியுள்ளது.

0

வெறுங்கால் நடை – மணல்வீடு வெளியீடு – பிப்ரவரி 2022

 

 

   

Monday, 1 December 2025

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்



 



0

திக்கற்றோர்க்கு

----------------------

யாராவது யாருடனாவது

இருக்கத்தான் வேண்டும்

அப்படித்தான்

எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது

 

அவன் இவளோடும்

அவள் இவனோடும்

அவன் இவனோடும்

அவள் இவளோடும்

அவர்கள் இவர்களோடும்

அவர்கள் அவர்களோடும்

 

தோள் தேடுவதும்

மடி சாய்வதும்

உயிரின் அனிச்சை

ஆகவே

தழுவலின் நகக்கீறல் சகித்து

யாராவது யாரோடாவது

இருக்கத்தான் வேண்டும்

 

பூமியில் ஒருவரது பாத்தியதை

அழிக்கமுடியாதது

என்றாலும் நேர்கிறது

யாரோ ஒருவர்க்கு

யாருமே இல்லாமல் போய்விடுவதும்

 

நாம்

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

0

குணா கந்தசாமியின் இந்தக் கவிதை உமா மகேஸ்வரியின் நாவல் தலைப்பை நினைவுபடுத்துகிறது ‘யாரும் யாருடனும் இல்லை’. உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ஆதியிலும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் காணும்வரையிலும் தனித்தனியாகத்தான் இருந்திருப்பார்கள். பின் ஆதியிச்சையின் விளைவாக உயிர்கள் பெருகி ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை உண்டாகியிருக்கும். உயிர்காத்தல், உணவு, உறைவிடம், உடைமை காத்தல் என்று சுயநலம் சார்ந்த தேவைகளுக்காய் உருவான இந்த ஏற்பாடு குடும்பம், குழு, கூட்டம் என அமைப்புகள் உருவாக வழிவகுத்தது.

மற்றபடி விதிவிலக்கின்றி அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அனுபவிக்க வேண்டிய ஒன்று தனிமை. அனுபவிப்பது என்றாலே சுகம், துக்கம், வாதை, வலி, இம்சை என்று எல்லாமும் இருக்கும். தனிமையை கொண்டாடுவோரும் உண்டு. தாளமுடியாதது என்று அஞ்சுவோரும் உண்டு.

தனிமையை மிக எளிமையாக புரிந்துகொண்டிருக்கிறோம். யாரும் இல்லாமல் தனியாக இருப்பதுதான் தனிமை. மனிதர்கள் யாரும் உடனில்லாமல் இருந்துவிட்டால் தனிமை வாய்த்துவிடுமா?

என்றால், தனித்திருக்கும்போது தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி எழும். பயணம் செய்யும் அதே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கையில் முன்பின் தெரியாதவர்கள் பலரும் இருக்கும்போதும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம். அதை தனிமை என்று வகைப்படுத்த முடியுமா? தனித்திருப்பது வேறு, தனிமை வேறு. 

‘இளையராஜாவின் இசையும் சுவையான காபியும் என் தனிமையை அழகு செய்கின்றன’ என்று எழுதுவதைப் படித்திருக்கிறோம் அல்லவா?

தனிமை எத்தகையது? ஓசையற்றதா, நிறமற்றதா, ஒளியற்றதா, எதற்கும் வசப்படாததா, வரையறைகளற்றதா? ஒலியையும் ஒளியையும் நிறத்தையும் மணத்தையும் நீக்கிவிட்ட வெளிதான் தனிமையா? நீரும் நிலமும் காற்றும் நெருப்பும் கலந்து ஒன்றாகிப்போன அந்தரவெளியா அது?

தனிமையை, தூய தனிமையை நேரடியாக சமாளிப்பதும் அனுபவிப்பதும் அத்தனை எளிதல்ல. பொதுவாக தனிமையில் இசை கேட்க விரும்புவார்கள். வாசிக்க முனைவார்கள். எழுதவும் சிந்திக்கவும் தனிமை தேவை.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுண்டு. நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர், நால்வரின் மனைவியர், பிள்ளைகள் எண்மர் என்று பதினாறு பேர். கூடவே உறவினர்கள், குடும்ப நண்பர்களில் எவரேனும் சிலர் சேர்ந்து கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டபோது ‘மனைமாட்சி’ நாவலின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். வேலையை ஒத்திப்போட முடியாத நெருக்கடி. எனவே, போகவேண்டாம் என்று தீர்மானித்தேன். மனைவியும் பிள்ளைகளும் புறப்பட்டுப் போனார்கள். திரும்பி வர நான்கு நாட்களாகும். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் தொந்தரவு இருக்காது, நாவல் வேலைகளை முடித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், வீட்டில் தனியாக இருந்த அந்த நாட்களில் எழுத மனம் குவியவேயில்லை. அந்த நேரங்களில் என்னைப் பெரிதும் தொந்தரவு செய்தது வீட்டின் ஓசையின்மை. குடும்பத்தினர் வீட்டுக்குள் நடமாடும் ஓசையும் சேர்ந்ததுதான் வீடு. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை, மிக்ஸி அரைக்கும் சத்தம், குழந்தைகளின் சிரிப்பு, சண்டை, சிணுங்கல் எதுவுமில்லாமல் வீடு வெறும் கட்டடமாக மாறிப் போகிறது. அந்த சத்தமின்மை பெரும் தொந்தரவாயிற்று. கவனத்துடன் வேலையில் ஈடுபட இயலவில்லை. வீட்டின் சத்தங்களின் நடுவே உள்ள ‘தனிமை’யே எனக்கு உகந்தது என்று அறிந்துகொண்டேன்.      

குணா கந்தசாமி இந்தக் கவிதையில் தனிமையை வேறொன்றாக வரையறுக்கிறார். உறவுகளற்றுப் போகும் நிலையை அவர் தனிமை என்கிறார். அவை உவப்பான உறவுகளாய் இல்லாமல் இருக்கலாம். கூடிக் களித்து மகிழ்ந்திருந்தபோதும் சில வேளைகளில் போட்டியோ பொறாமையோ சிறு சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டிருக்கலாம். கணவன் மனைவி, நட்பும் சுற்றமும், அண்டை அயலார் என எல்லா உறவிலும் இணக்கமும் பிணக்கும் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒட்டி உறவாடிய ஒன்று இல்லாதபோது வாய்த்துவிடுவது தனிமை என்கிறார். அவ்வாறான ஓர் தனிமை தவிர்க்க முடியாதது. என்றேனும் ஓர் நாள் எல்லோரும் சந்திக்கத்தான் வேண்டும். அதைப் பழகத்தான் வேண்டும்.

இப்படி ஓர் வரையறைக்குப் பிறகு ஒரு வரியை எழுதி முடிக்கிறார் குணா கந்தசாமி.

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

 

இந்த இறுதி வரியின் ஒவ்வொரு சொல்லும் தனிமையின் வீரியத்தை தீவிரத்தை சுட்டுகின்றன. கைவிடப்பட்ட ஒரு கோவில் என்று நில்லாமல் ‘காட்டுக் கோவில்’ என்று துல்லியப்படுத்தும்போது அழுத்தம் கூடுகிறது. அங்கிருப்பது ஒரு தெய்வம் என்று நிறுத்தவில்லை. அதுவொரு ‘சிறுதெய்வம்’ என்று உருப்பெருக்கியால் இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறார். கைவிடப்பட்ட காட்டுக்கோவிலில் வழிபாடும் இல்லை, ‘வீற்றிருக்கு’ம் சிறுதெய்வத்துக்கு படையலும் இல்லை. கோவிலும் சிறுதெய்வமும் தனிமை பழகிக் காத்திருக்கத்தான் வேண்டும்.

எனக்கென்னவோ தனிமை காற்சங்கிலியிட்டு கற்தூணில் கட்டப்பட்ட களிறென்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரவர் தனிமைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

0

நன்றி - குணா கந்தசாமி

கவிதையும் ஞானமும் 5 - வழிப்பறிச் சம்பவம்



 




உண்பதும் உடுப்பதும் துயில்வதும் எழுவதுமான அன்றாடத்தின் சலிப்புகளுக்கு நடுவே சில விசயங்கள் மட்டும் அலுப்பூட்டாதவை. கவிதைகளிலும் ஒருசில பாடுபொருட்கள் மட்டும் ஒவ்வொரு கவிதையிலும் மெருகிழக்காமல் புதிய அனுபவங்களைத் தர வல்லவை. சூரியோதயத்தைக் குறித்து ஓரிரு வரிகளேனும் எழுதாத கவிஞர்களே இல்லை.  ‘நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி, சூரியனைக் காணோம்’ என்று பசுவய்யாவும், ‘மலை விளிம்பில் சூரியனுக்குப் புராதன மனிதனின் புன்னகை’ என்று சுகுமாரனும், ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்று பிரமிளும் உதயத்தைக் கண்டிருக்கிறார்கள்.

வெகு நீளமான கிழக்கு கடற்கரையின் வெவ்வேறு கரைகளில் ஒவ்வொரு நாளும் உதயசூரியனைக் காணவேண்டி எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். வானும் வெளியும் நீரும் ஒன்றுகலந்த கருநீல எல்லையை கிழித்து சாம்பல் வெளிச்சம் கசிவதில் தொடங்குகிறது அந்நாளின் அபூர்வத் தருணம். அடிவானம் முழுதும் மஞ்சள் பூசும். கொஞ்சம் குங்குமச் சிவப்பும் கூடும். மேகத் திட்டுக்களில் தீப்பிடிக்கும். பொன்மகுடத்தின் உச்சி ஒளிர எழுகதிர் தலைகாட்டும். செக்கச் சிவந்ததொரு ஒளிப்புள்ளி காணுந்தோறும் வளர்ந்து வட்டத்தட்டின் விளிம்பாக திரண்டெழும். கடலும் வானும் பித்துற்று பரவச நிறங்களை இறைக்கும். சுடரும் வளைகோடு இருபுறமும் இறங்கிச் சேர்ந்திடும். செவ்வட்டம் முழுமையுற்று சுழலும். ஏந்திய கடலின் கையிலிருந்து வானின் விரிகரங்களுக்கு தாவிய நொடியில் அந்தக் காட்சி முடிவுறும். சூரியோதயம் பார்த்தாயிற்று. உலகு மொத்தமும் அன்றாடத்துக்குத் திரும்பும். மீண்டும் மறுநாள் அதே கரைகளில் வேறு பலரும் அதே காட்சியைக் காணக் காத்திருப்பார்கள்.

காலைப் பொழுதின் அழகையும் மனத்துக்கு தரும் நிறைவையும் வாய்க்காதபோது அது ஏற்படுத்தும் ஏமாற்றத்தையும் கவிதையில் எழுதுவது வழக்கமானதுதான். நம்பிக்கை, மீட்சி, ஏமாற்றம் என்று பல்வேறு உணர்வுகளையும் சுட்டும் படிமமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதுவே கண்ணையும் மனத்தையும் கொள்ளைகொள்ளும் இக்காட்சியை ஒரு வழிப்பறிச் சம்பவமாக எழுதிக் காட்டும்போது கவிதையின் சாத்தியங்களைக் குறித்த ‘அட!’ என்ற வியப்பு கூடிவிடுகிறது. 

வழிபறிக்கு வந்தவனின் முகம் தெரியாதபடி இருட்டாக இருக்கும். அல்லது முகத்தை மூடியிருப்பான். அவன் கையிலிருக்கும் அந்தக் கத்திக்கு அத்தனை வலிமை. உயிர்ப் பயம். ஒரு சிறு கீறலும் எட்டிப் பார்க்கும் துளி ரத்தமும் போதும் நம் ஆயுளுக்கும் நடுக்கம் கொடுக்க. அது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவற்றை நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்துவிடுமோம். ‘காசு போச்சுன்னா பரவால்ல, சம்பாதிச்சுக்கலாம். உசிரு போனா வருமா?’ என்ற எளிய சமாதானமே வழிப்பறிக்காரர்களின் தேவ வாக்கு. 

வழிப்பறியின்போது அந்த நேரத்தில் நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்க நேரும். பையிலிருக்கும் பணம், சங்கிலி, மோதிரம், வளையல், தோடு, கடிகாரம் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த இழப்பை அத்தனை சீக்கிரம் நம்மால் மறந்துவிட முடியாது. 

ஆனால், இந்தக் கவிதையில் ஜெ.ரோஸலின் சித்தரிப்பது போன்ற ஒரு வழிப்பறி நிகழுமானால் நாம் எல்லோருமே நம்மிடம் உள்ளதனைத்தையும் சிறிதும் பயமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொடுத்துவிடுவோம். கேள்விப்படுவோர் அனைவரும் தமக்கும் இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். விரைவில் அது கைகூடவேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டுவார்கள். அன்றாடம் அப்படியொரு வழிப்பறி நிகழவேண்டும் என கடற்கரையெங்கும் அதிகாலையில் ஆட்கூட்டம் கூடிவிடும்.

கவிஞர் ஜெ.ரோஸலின் முகநூலில் கவிதைகளை எழுதுபவர். இது அவருடைய உண்மையான பெயரா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால், தொடர்ந்து அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். பெயரோ முகமோ தெரியாமலிருப்பதால் நல்ல கவிதைகளை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா?

 

ஜெ.ரோஸலின், தான் வழிப்பறிக்கு ஆளான அந்தப் பாதையை நம் எல்லோருக்கும் காட்டட்டும். அந்த வழிப்பறிக்காரன் கேட்பது போல அனைத்தையும் வெளியே எடுத்துக் கொடுத்துவிடுவோம். அப்படியொரு அற்புதத்தை சாத்தியப்படுத்தியதற்காக அனைவரும் அவருக்கு காலத்துக்கும் நன்றியுடையவராக இருப்போம்.

ஆனால், பாவம் அந்த வழிப்பறிக்காரன். அத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான் அவன்?

0

ஒரு வழிப்பறி சம்பவம்

 

தூரத்து மலையும் பக்கத்திலிருந்த வயல்வெளியும்

என் இரு கரங்களையும் மடக்கிப்பிடித்துக்கொண்டன.

பின்னர் ஒரு தங்கக் கத்தி வந்தது.

கைப்பிடிக்கு அந்தப்பக்கம் யாருமில்லை

ஆனால் நீலம்.

"உன் வருத்தத்தையெல்லாம் வெளியே எடு.

என்ன பார்க்கிறாய்

சீக்கிரம்..."

0

நன்றி - ஜெ.ரோஸலின்

உடல் பராமரிப்பு வணிகத்தின் உளவியல் களம் - பா.கண்மணியின் ‘வீனஸ்’

  0 ‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் ...