வேட்டை துப்பாக்கியைப் போட்டுவிட்டு கையில் கேமராவை எடுக்கவைத்து ஓ.சீ.எட்வர்ட்ஸ் என்னுடைய குருநாதர். அதே போல எம். கிருஷ்ணனும் என்னுடைய இன்னொரு குருநாதர். அவரிடமிருந்து கானுயிர் புகைப்படக்கலை குறித்தும் கானுயிர்களின், குறிப்பாக யானைகளின் போக்குகள் குறித்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எம். கிருஷ்ணன் இயற்கை
வளங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். களத்தில் இறங்கி கடும்பணியாற்றிய அசுர உழைப்பாளி. யானைகளைப் பற்றிய விஷயத்தில் அவர் ஒரு நிபுணர். யானைகள் என்ன நினைக்கின்றன என்றே அவரால் சொல்ல முடியும். ஒரு முறை நாகர்ஹொலேவுக்கு அவருடன் சென்றிருந்தோம். எனது நண்பர் கோட்பொடே, அவருடைய மகன் அஜய் கோட்பொடே ஆகியோரும் உண்டு. யானையில் நாங்கள் சவாரி செய்துகொண்டிருக்கிறோம். நாகர்ஹொலே காட்டுக்குள் ''ஹட்லு'' என்று சொல்லப்படும் வயல்போன்ற பகுதிகள் ஆங்காங்கே இருக்கும். முன்பு அங்கே கிராமங்கள் இருந்திருக்கவேண்டும். அங்கிருந்தவர்கள் பயிர் செய்த விளைநிலங்கள் அவை. நாங்கள் குந்தூர் வழியாக போனபோது அந்த வயல்வெளியில் ஒரு கொம்பன் யானை மேய்வதைக் கண்டோம். அதைக் கண்டதும் நாங்கள் அதை நோக்கி போனோம். அந்த கொம்பன் யானை மிக கச்சிதமான உடல்வாகும் கம்பீரமும் கொண்ட ஒரு கொமரியா. பருத்த தந்தங்கள். கிருஷ்ணனின் பாஷையில் சொல்வதனால் ''Perfect Royal'' யானை. பக்கத்தில்போய் பார்க்கும்போது அந்த யானை மஸ்த் நிலையில் இருந்ததை
கண்டோம். அதாவது மஸ்த்
சுரப்பியிலிருந்து எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் வடிந்துகொண்டிருக்கும். (பொதுவாக
இப்படிப்பட்ட நிலையை நாம் மதம்பிடித்திருப்பதாய் சொல்வோம். ஆனால்
டி என் ஏ பெருமாள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை). அப்படிப்பட்ட நிலையில் அந்த யானையின் போக்கை நாம் அனுமானிக்கமுடியாது. என்ன செய்யும் என்று தீர்மானிக்க முடியாது என்று சொல்லுவார்கள்.
நாங்கள் பெண்யானையில் சவாரி செய்துகொண்டிருந்தோம். நாங்கள் சற்று அருகே போனதும் அந்த கொம்பன் யானை எங்களை நோக்கி வரத் தொடங்கியது. வரும்போது தன் துதிக்கையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிக்கொண்டே வருகிறது. வயதான தாத்தாக்கள் நடக்கும்போது கைத்தடியை ஆட்டிக்கொண்டே வருவார்களே அதுபோல. எப்போதுமே கொம்பன் யானைகள் நடந்து வரும்போது தலையை சற்றே மேலே தூக்கிக்கொண்டு கம்பீரமாக நடந்துவரும். அப்படி நடந்துவருகிறது. அது வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த மாவுத்தன் ''சார் பக்கத்துல வருது சார்.. போயர்லாம் சார்'' என்று எச்சரிக்கிறார். எம் கிருஷ்ணனோ ''வரட்டும் வரட்டும் பொறு'' என்று அப்படியே நிற்கிறார். பத்தடி தொலைவு வரைக்கும் அந்த கொம்பன் யானை நெருங்கி வந்துவிட்டது. இவர் என்னடா செய்யப் போகிறார் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம். ஒரு கட்டத்தில் எம் கிருஷ்ணன் உரத்த குரலில் ''ஹால்ட்'' என்று சத்தம் போட்டார். அவ்வளவுதான். யானை நின்றுவிட்டது. எதுவும் புரியாமல் இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது.
கிருஷ்ணன் மாவுத்தனிடம் பெண் யானையைத் திருப்புமாறு சொல்கிறார். அந்த மாவுத்தன் தன் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு யானையைத் திருப்பினார். ''அந்த கொம்பனும் நாம போகிற பக்கமே வரும். நீ யானைய வெரட்டாம இதே தூரம் இருக்கறா மாதிரி யானைய ஓட்டிட்டுப் போகணும்'' என்று அவரிடம் சொல்கிறார். அவர் சொன்னபடியே அதே தூரத்தில் கொம்பன் யானை பின்னாடியே வந்தது. காட்டுக்குள் போவதற்கு சற்று மேடான பகுதியை ஏறிச் செல்லவேண்டியிருந்தது. '' அந்த மேட்டுல ஏறும்போது யானை நல்லா போஸ் கொடுக்கும். படம் எடுக்கணும்'' என்று எங்களிடம் சொன்னார். நாங்கள் சவாரி செய்கிற யானையோ அசையும கப்பல் மாதிரி ஆடி ஆடிப்போகிறது. பின்னால் அந்த யானையும் அதே வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணனோ யானையின் ஒவ்வொரு அசைவையும் கணித்தவர்போல நேரடி
வர்ணனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்வதையெல்லாம் செய்வது போலவே அந்த யானை வந்து கொண்டிருக்கிறது. சொன்னமாதிரியே மேட்டை நெருங்கியதும் கொம்பன் யானை நின்றது. ஒரு காலை தூக்கியது. துதிக்கையை வளைத்துப் போட்டது. என்ன அற்புதமான போஸ் அது. ஆனால் கிருஷ்ணன் உட்பட யாராலும் அதை படமெடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் சவாரி செய்கிற யானை இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டு நிற்க எங்களுக்கு தேவையான சமநிலை வாயக்கவில்லை. யாரும் படம் எடுக்காதபோதும் அந்த அற்புதமான காட்சியை நாங்கள் பார்த்தோம்.
பிறகு அது காட்டுக்குள் போய்விட்டது. அது போன பிறகு எம் கிருஷ்ணன் சொன்னார். ''நான் ஹால்ட்னு சொன்னதும் யானை அப்படியே நின்னுடுச்சு. இதே இன்னொருத்தர் ''முருகா''ன்னு கத்தியிருந்தாலும் யானை நின்னுருக்கும். அப்ப முருகன்தான் வந்து காப்பாத்துனாருன்னு சொல்லிக்குவாங்க. விஷயம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட தொலைவில் அப்படியொரு வலுவான தீர்க்கமான ஓசையைக் கேட்டதும் யானை நின்றுவிட்டது. குறிப்பிட்ட தொலைவில் அந்த யானையை திடுக்கிட வைக்குமளவிலான ஓசை. அவ்வளவுதான்.'' என்று விளக்கமளித்தார். இந்த சம்பவத்தைக் குறித்து நான் Bombay
Natural Societyயின் இதழில் எழுதியிருக்கிறேன்.
மறுநாள் இதேபோல இன்னொரு சம்பவம். எம்.கிருஷ்ணனும் அஜய் கோட்பொடேவும் ஒரு யானையில். நானும் சுப்பாவும் இன்னொரு யானையில் சவாரி செய்கிறோம். கோட்பொடே தனியாக ஒரு யானையில். அப்போது அவர் கர்நாடகாவின் நிதியமைச்சர். ஆகவே அவருக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் ஒரு
காட்டிலாக்கா அதிகாரி கே எம் சின்னப்பா என்பவர். அவர் இப்போது நாகர்ஹொலேவின் மண்டல அதிகாரி. அந்த தேசியப் பூங்காவை திறம்பட நிர்வகித்துவரும் திறமையான வன அதிகாரி. ஒரு மேட்டுப் பகுதியில் ஏறிப் பார்க்கும்போது மறுபக்கம் ஒரு யானைக்கூட்டம். எல்லாமே பெண் யானைகள். கொம்பன் யானை அந்தக் கூட்டத்தில் இல்லை. கோட்பொடேவின் யானை முன்னால் போகிறது. கிருஷ்ணனின் யானை பின்னால். யானைக்கூட்டத்தை நோக்கி கோட்பொடே போவதைக் கண்டு கிருஷ்ணன் சத்தம் போடுகிறார். ''அசையாதீர்கள்''. ஆனாலும் கோட்பொடே அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மாவுத்தனிடம் ''பக்கத்துல போ.. பக்கத்துல போ'' என்று முடுக்குகிறார். கிருஷ்ணன் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். ''அசையாமல் இருங்கள்''. கோட்பொடேவின் யானை மேலும் மேலும் நெருங்குவதைக் கண்ட அந்த யானைக் கூட்டத்திலிருந்து திடீரென்று மூன்று பெண் யானைகள் பிளிறியபடி ஆவேசத்துடன் வருகின்றன. ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டோம். கையில் வைத்திருந்த துப்பாக்கியை கோட்பொடே லோட் செய்திருக்கவில்லை. யானைகள் வரும் வேகத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டாலும் அவசரமாக துப்பாக்கியை லோட் செய்து தரையில் சுட்டார். 'திம்' என்ற சத்தத்துடன் தரை அதிர்ந்தது. அந்த சத்தத்தைக் கேட்டதும் யானைகள் அப்படியே நின்றுவிட்டன. குழப்பம். என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியும் இப்படியுமாக தலையைத் திருப்பி பார்க்கின்றன. கொஞ்ச நேரம் கழித்து யானைகளை அப்படியே பின்னோக்கி நடத்தி பாதுகாப்பான தூரத்துக்கு வந்துவிட்டோம். எம் கிருஷ்ணன் கோட்பொடேவிடம் சத்தம் போட்டார். ''நானே சொல்றேன்ல. அசையாம இருங்கன்னு. கேக்காம போயி என்னாச்சு பாத்தீங்களா?''. கோட்பொடே ஒன்றும் பேசவில்லை. அவர் வேர்த்து விறுவிறுத்து முகம் வெளுத்துப் போயிருந்தார்.
யானைகளைப் பற்றிய துல்லியமான அறிவு எம் கிருஷ்ணனுக்கு இருந்தது. கொம்பன் யானையைப் பார்க்கும் எவரும் அதை நெருங்கத் துணியமாட்டார்கள். ஆனால் இவர் அந்த யானைக்கருகில் நடந்து சென்றே படம் எடுத்துவிடுவார். பொதுவாக அவர் மேற்கொண்டவை எல்லாம்
வழக்கத்துக்கு மாறான முயற்சிகள்தான். காட்டுக்குள்ள சிகரெட் பிடிக்கக்கூடாது என்றால் இவர் பர்கிளி சிகரெட் ஒன்றை பற்றவைத்து அதன் புகை எந்தப் பக்கமாய் போகிறது என்று பார்த்து காட்டுக்குள் காற்றின் திசையை தெரிந்துகொள்வார்.
கோட்பொடேவிடம் நான் சென்று சேர்வதற்கு முன்பே எனக்கு எம் கிருஷ்ணனைத் தெரியும். ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்துக்கு வந்திருந்தார். நிறைய பறவைகள் படமெல்லாம் எடுத்தார். அந்த படங்களை
அச்சிடுவதற்கு நான் உதவினேன். பகலில் எடுக்கும் படங்களை எல்லாம் இரவில் விடுதியில் வைத்து
அச்சிடுவோம். அப்போது அவர் குவிமையம் முன்பே தீர்மானிக்கப்பட்ட(prefocused) கேமராவைத் தான் உபயோகித்தார். 100 அடி தொலைவுக்கு
குவிமையம் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்த பறவைகள் வரும்போது அதனுடைய வேகத்தையும் தொலைவையும் கணித்து படமெடுப்பார். பிலிம் ஈரமாக இருக்கும்போதே அவற்றை பரிசோதிப்பார். கையில் ஒரு பூதகண்ணாடி வைத்திருப்பார். படம் சரியாக வந்திருக்கிறதா என்று கூர்ந்து பார்ப்பார். சரியென்று
தோன்றினால் தொடர்ந்து அச்சிடச் சொல்வார். இல்லையென்றால் அந்த ஈரத்துடனேயே டர்ரென்று கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார். 'இதையெல்லாம் வெச்சுக்கறதுக்கு எங்கிட்ட எடம் இல்லை.' என்பார். சரியாக வந்திருக்கும் படத்திற்கு பின்னாலேயே எங்கே எப்போது எடுத்தது என்று குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்வார்.
அப்போது ரங்கன்திட்டுவில் படகோட்டி சிக்குதிம்மான். அவர் எங்களை படகிலேற்றி குறிப்பிட்ட ஒரு பகுதியில் இறக்கிவிட்டுவிடுவார். அதற்கு பிறகு நடந்து சென்றுதான் படமெடுக்கவேண்டும். ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் ஒன்பது தீவுகளைக் கொண்டது. ஒரு திட்டு மட்டும் மிகப் பெரியதாக இருக்கும். மற்றவை அளவில் சிறியவை. அது மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமானதாக இருந்தது. மீன்பிடிக்கும் ஒரு ஏரியாக இருந்த அதை பறவைகள் சரணாலயமாக தேசியமயமாக்கியது டாக்டர் சலீம் அலி சாஹிப்பின் பரிந்துரையின்பேரில்தான். மைசூர் பகுதியில் உள்ள பறவைகள் குறித்து விபரங்களை சேகரிக்க டாக்டர் சலீம் அலி வந்திருந்தபோது ரங்கன்திட்டுவையும் அதிலுள்ள பறவைகளையும் பார்த்துவிட்டு அந்த இடத்தை தேசிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டார். மைசூர் மகாராஜாவும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அவர்களுடைய முயற்சியின் பலனைத்தான் நாம் இப்போது அற்புதமான சரணாலயமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். டாக்டர் சலீம் அலி போன்ற ஒரு நிபுணரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் அரசு இருந்தது. அதனால் அவையெல்லாம் சாத்தியப்பட்டது.
எம் கிருஷ்ணனுடன் நான் பல முறை பயணித்திருக்கிறேன். முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹொலே என்று பல காடுகளில் நாங்கள் சுற்றி அலைந்திருக்கிறோம். மாலையில் விடுதிக்கு திரும்பிய பிறகு அதிகாலை இரண்டு மணிவரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். நாங்கள் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்போம். தன் நினைவிலிருந்து அனுபவத்திலிருந்து நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பார். புகைப்படக் கலை குறித்து அவருக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன. அவர் எப்போது எங்கே சென்றாலும் தன்னுடன் பாட்டில்களில் புகைப்படங்களை டெவலப் செய்யத் தேவையான ரசாயனக் கலவையை எடுத்து செல்வார். பெரிய பெரிய பழுப்பு நிற பாட்டில்கள். அவருடைய பயணப் பொருட்களின் ஒரு பகுதி அவை. எளிதில் உடையக்கூடியவை. ரயிலில் பயணம் செய்வார். பஸ்ஸில் பயணம் செய்யவேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் அவற்றை சுமந்துகொண்டுதான் வருவார். கோட்பொடேவுடன் என்றால் அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுவிடும்.
எம் கிருஷ்ணன் ஆங்கிலத்தில் நிறைய எழுதுவார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் இதுபோன்ற பயணங்களுக்கு செலவழிப்பார். முதுமலையில் மசினகுடி தாண்டியதும் ஜெய்தேவ் அவென்யூ என்றொரு இடம் உண்டு. அதற்கு எதிரில் ஒரு காடு. அங்கே ஒரு புள்ளிமான் கூட்டம். நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள். எல்லாமே
ஆண்மான்கள். அவ்வாறு அமைவதை stag party என்று சொல்லுவார்கள். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கில் புள்ளிமான்கள்.
பெண்மான் ஒன்றுகூட கிடையாது. இப்போது அந்த புள்ளிமான்களையெல்லாம் பார்க்கமுடியவில்லை. அதேபோல மோயார் யானைக்கூட்டங்களுக்கு பெயர் போனது. அந்தப் பகுதி
புதர்காடுகளால் ஆனவை. அவ்வளவு அடர்த்தியான காடு இல்லை என்றாலும் நிறைய யானைகள் கண்ணில் படும். முதுமலைக்கு வெகு அருகில் இருந்ததினால் யானைகள் அந்தப் பாதையில் அடிக்கடி போய்வரும்.
எம் கிருஷ்ணன் தானே யானையை மாவுத்தன் மாதிரி செலுத்துவார். ஹட்டிகளுக்குப் போவார். யானையின் மீதிருந்தே படங்கள் எடுப்பார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்ததுதான் அவருடைய மிகப் பிரபலமான படம். ஒரு கலைமான் மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும். அவர் தனக்குத் தேவையான கேமராவை தானே வடிவமைத்துக்கொண்டார். சத்தமெழுப்பாத ஷட்டருடன் நல்ல லென்ஸூடன் கூடிய ஒரு கேமரா வேண்டும் என்பதற்காக தனக்கேற்ற வடிவத்தில் அதை உருவாக்கிக்கொண்டார். கேமராவைப் பொறுத்தவரை லென்ஸ்தான் முக்கியமானது. பொதுவாக எல்லோரும் கவனிக்கத்தவறும் இன்னொரு அம்சம் கேமராவின்
அசைவு. கேமராவை இயக்கும்போது இந்த துல்லியமான அசைவு மிகக்குறைவானதாக இருக்கவேண்டும். படங்களை பெரிதுப்படுத்தும்போது இந்த கேமரா
அசைவின் பாதிப்பை நன்றாக உணரமுடியும். மிகக்குறைந்த கைநடுக்கத்தை மட்டுமே அனுமதிக்கும் வகையிலாக தன் கேமராவை அவர் உருவாக்கிக் கொண்டார்.
எம் கிருஷ்ணனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவருடைய இதயம் சாதாரண மனித இதயத்தைவிட சற்று அளவில் பெரியதாக, விரிந்ததாக இருந்தது. ஆனாலும் அவர் அதை பொருட்படுத்தாமல்தான் காடுகளில் அலைந்து நடந்து சென்று யானைகளின் படங்களை எடுத்தார். சிகரெட் புகைப்பதையும் அதற்காக விட்டுவிடவில்லை. மிக சாதாரணமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர். எளிமையான மனிதர். அவருக்கு மூன்று விஷயங்களை மிகவும் பிடிக்கும். வறுத்த கடலை, டீ, பர்கிளி சிகரெட். காலையிலும் மாலையிலும் டீ. சிகரெட் தொடர்ந்து புகைத்துக் கொண்டேதானிருப்பார். இவைதான் பிடித்தமானவையும் அவருக்கு அவசியமானவையும். அவர் எம்.ஏ தாவரவியல். பொதுவாக பி.ஏ எம்.ஏ என்றால் ஆர்ட்ஸ்தான். ஆனால் அவர் தாவரவியலில் எம்.ஏ. அவருடைய பேராசிரியர்
ஃபைஷன் என்கிற ஆங்கிலேயர். அவரிடமிருந்துதான் அவர் கானுயிர்களில் ஆர்வம்கொண்டார். பேராசிரியரின் மனைவி ஒரு நல்ல ஓவியர். அவர் எம் கிருஷ்ணனுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தார். அவருடைய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பறவைகள், தாவரங்களின் ஓவியங்கள் அவரே வரைந்தவை. அவருடைய கையெழுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற்போல பிரமாதமாக இருக்கும்.
நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் கி வா ஜவின் 'கலைமகள்' இதழில் எம்.கிருஷ்ணன் வனவிலங்குகளைக் குறித்து எழுதிய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அதன் பிறகு தமிழில் எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதி நான் பார்த்ததாக நினைவில்லை. இங்கு அவரைப் பற்றி தெரிந்திருந்ததைவிட வடக்கே அவர் பிரபலமாக இருந்தார். பம்பாய், கல்கத்தா, டெல்லி என்று எல்லா இடங்களிலும் அவருடைய வாசகர்கள் இருந்தார்கள். ஒருவிதமான
வழிபாட்டு மனோபாவத்துடனான வாசகவட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமையானால் அவருடைய கட்டுரை வந்திருக்கிறதா என்று ஆர்வத்துடன் தேடிப் படிப்பார்கள். 'இயற்கை குறிப்புகள்' (Nature Notes) என்ற
தலைப்பில் தொடர்ந்து எழுதிவந்தார். அந்தக் கட்டுரைகள் மிகப் பிரபலமானவை. வடக்கில் அவரை மிகவும் பாராட்டிக் கொண்டாடினார்கள். இங்கே என்ன காரணத்தினாலோ அவருக்கு உரிய பாராட்டுகளும் கவனமும் கிடைக்காமல் போனது. நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பெருமைகளை நாம் எப்போதுமே உணரத் தவறிவிடுகிறோம். அது நமது குறைதான்.
ஒரு முறை சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். சாந்தினி. ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கர்நாடகாவில் கபினியில் இயற்கையியலாளராக பணிபுரிந்து வந்தார். நான் கபினிக்கு சென்றிருந்தபோது அந்தப் பெண் என்னை வந்து சந்தித்தார். என்னைப் பற்றி படித்திருப்பதாகச் சொன்னார். சென்னையைச் சேர்ந்தவர் என்று சொன்னதும் நான் எம் கிருஷ்ணனைப் பற்றி தெரியுமா என்று விசாரித்தேன். அவர்கள் இல்லையென்று சொன்னார்கள். நான் கிருஷ்ணனின் சென்னை முகவரியைக் கொடுத்து அடுத்த முறை சென்னைக்கு செல்லும்போது அவசியம் சென்று சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். அதே போல மறுமுறை சென்னைபோனபோது கிருஷ்ணனை சென்று சந்தித்தார்கள். எம் கிரூஷ்ணன் யாரிடத்திலும் அவ்வளவு எளிதாக பழகிவிடமாட்டார். முதலில் சற்று அணுகுவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதே போல இந்த பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் ''ஓ.. இயற்கையியலாளராக பணிபுரிய உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது?'' என்று கேட்டாராம். நாங்கள் எங்கள் கை காசையெல்லாம் செலவு செய்து காடு மேடெல்லாம் சுற்றி திரிந்த காலத்தை நினைத்து அப்படிக் கேட்டிருக்கிறார் போலும். பிறகு பேசிக் கொண்டிருந்தபோது சகஜமாகிவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்ட குறிப்புகளையெல்லாம் மறுநாள் தருவதாகச் சொல்லியிருக்கிறார். மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் போனபோது கேட்டிருந்த விபரங்களையெல்லாம் அழகாக தட்டச்சு செய்து வைத்திருந்து கொடுத்திருக்கிறார். பிறகு அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள். சாந்தினி கிருஷ்ணனின் குடும்ப நண்பராகிவிட்டார்.
அவரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணனின் பல படங்களின் நெகட்டிவ்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டு இருக்கின்றன. மீண்டும் கிடைக்காத அற்புதங்கள் அவை. ஏதாவது ஒரு சந்தர்ப்த்தில் அவை காணாமல் போய்விட்டால் பிறகு பெரிய நஷ்டம். எனவே அவற்றையெல்லாம் எடுத்து
அச்சிட்டு ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தேன். படங்களை
அச்சிடுவதில் என்னால் உதவமுடியும் என்று சொன்னேன். பிறகு சென்னை சென்று அவர் வைத்திருந்த நெகட்டிவ்களையெல்லாம் எடுத்துத் தொகுத்தோம். அவர் எல்லா நெகட்டிவ்களையும் பத்திரமாக, விபரங்களையெல்லாம் சுத்தமாக எழுதி வைத்திருந்தார். அவருடைய வீட்டிலிருந்த
இருட்டறையிலேயே அச்சிட்டுக் கொடுத்தேன். ஒவ்வொரு முறையும் நான் சென்னை செல்லவேண்டியிருந்தது. அதனால் அவர்களுக்கே சொல்லித் தந்தேன். முறையாக எல்லாவற்றையும் செய்தார்கள். எம் கிருஷ்ணனின் மகன்
முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். மிக உயர்ந்த பதவி. இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பளித்தார். எல்லா படங்களையும்
அச்சிட்டு அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து தொகுத்தோம். தேவையில்லாதவற்றை கிருஷ்ணனின் குடும்பத்தாரிடமே ஒப்படைத்துவிட்டோம்.. பிறகு புத்தகத்திற்கான நிதி ஏற்பாடுகள். சென்னையில் ரோஜா முத்தையா அறக்கட்டளை இன்னும் சிலபேரிடம் உதவி கிடைத்தது. அதற்கு பிறகு ஓரியண்ட லாங்க்மேனுடன் ஒன்றரை வருஷம் கடிதப்போக்குவரத்து நடந்தது. ஒருவழியாக புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார்கள். பெங்களுரில் எனது நண்பர் ஒருவர் புத்தகத்தை அழகாக வடிவமைத்துக்கொடுத்தார். ஹைதராபாத்தில் பிரகதி என்றொரு அச்சகத்தில்தான் புத்தகம் அச்சானது. ஒவ்வொரு படமும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அச்சாக்கத்தை மேற்பார்வை செய்வதற்காக நான் அங்கே சென்று தங்கியிருந்து எல்லாவற்றையும் ஒழுங்கு செய்தேன். அந்த புத்தகம்தான் ''Eye in the
Jungle'' என்ற புத்தகம். நல்ல வரவேற்பைப் பெற்றது. புகைப்படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில். வண்ணத்தில் அச்சாக்கம் செய்வதைவிட கருப்பு வெள்ளையில் அச்சாக்கம் செய்வது நுட்பமானதும் சிக்கலானதுமாகும். நாம் நேரடியாக இறங்கி பிறருடைய ஒத்துழைப்புடன் செய்தால் சிறப்பாக செய்ய முடியும். எம் கிருஷ்ணன் என்னுடைய குருநாதர்களில் ஒருவர். அவருக்காக நம்மால் முடிந்த ஒரு காரியம் என்ற மனதிருப்தியுடன் செய்தேன்.
சென்னைக்கு எப்போது சென்றாலும் ஒரு புனித யாத்திரை ஸ்தலத்துக்கு போவது மாதிரி அவருடைய வீட்டுக்கு போய் அவருடன் உரையாடிவிட்டு வருவேன். அவருடைய இறுதி காலத்தில் அவருக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. Global500 என்றொரு விருது. உலக அளவில் 500 சிறந்த வனவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய பங்களிப்புக்காக அளிக்கப்பட்ட விருது. எம் கிருஷ்ணனுக்கு அந்த விருது தரப்பட்டதைப் பற்றி தமிழகத்தில் எந்த சலனமுமே இருக்கவில்லை. யாருமே கண்டுகொள்ளவில்லை. 1995ஆம் ஆண்டு நான் இந்திய புகைப்படக்கலைஞர் சம்மேளனத்தின் இயற்கை பிரிவின் தலைவராக இருந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியும் போட்டியும் நடத்தினேன். வழக்கமாக இதற்கான பரிசுகள் என்றால் கடைகளில் தயார்நிலையில் இருக்கும் ஒன்றை வாங்கி பெயரைப் பொறித்துக் கொடுத்துவிடுவார்கள்.
நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கிய சமயத்திலெல்லாம் பரிசாக மரக்கட்டையில் பெயரைப் பொறித்துத் தருவதுதான் வழக்கம். அதை வீட்டுக்குக் கொண்டுவந்தால் எனது மனைவி சொல்லுவார்கள் ''இந்தக் கட்டைய வெச்சு ஒரு கப் டீகூட போடமுடியாது. இதுக்கு போயி இவ்வளவு மெனக்கெடனுமா?''. அது ஒரு கோணம். அவர்கள் பார்வையில் அதனுடைய மதிப்பு அப்படி.
எனவே பரிசு என்று கொடுத்தால் அது பாதுகாக்கக் கூடியதாகவும் பிறர் பார்த்து என்னவென்று கேட்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. பெங்களுரில் வாஜராஜ் என்றொரு சிற்பியைத் தெரியும். அவருடைய மாணவி திருமதி மூர்த்தி. ஒரு யானையின் புகைப்படத்தைக் கொடுத்து வெண்கல வார்ப்பில் இதுபோன்று யானைகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். 14 உருப்படிகள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய். அதற்காக தனியாக நன்கொடைகள் வசூல்செய்தேன். இது ஒரு புதிய முயற்சி என்று நண்பர்களும் உதவினார்கள். வெண்கல வார்ப்பில் செய்தபோது சில தொழில்நுட்ப பிரச்சினைகளால் அதே உருவத்தை
இழைக் கண்ணாடியைக் கொண்டு செய்து தருவதாக அந்த அம்மையார் சொன்னார்கள். இரண்டு அல்லது மூன்று உருப்படிகள் வெண்கலத்தில் செய்ததும் இருந்தன. பெங்களுரில் அந்தக் கண்காட்சி முடிவடைந்த பிறகு அதே போன்ற ஒரு கண்காட்சியை சென்னையிலும் நடத்தலாம் என்று சென்னை புகைப்பட சம்மேளனம் ஏற்பாடு செய்தது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் எனது நெருங்கிய நண்பர் திரு வி கே ராஜாமணி. காரியங்களை ஒழுங்குடன் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். சென்னை லலித்கலா அகாதமி அரங்கில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கண்காட்சியை துவக்கி வைக்க எம் கிருஷ்ணனை அழைக்கலாம் என்று அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவர் ஒத்துக்கொள்ளமாட்டார் என்று ஏற்கனவே தெரியும் என்றாலும் கேட்டுவிடலாம் என்று போனேன். அப்படி போகும்போது வெண்கல யானை சிற்பத்தை ஒரு மரக்கட்டையில் பொருத்தி Global500 விருது பெற்றமைக்காக இந்திய புகைப்பட சம்மேளனத்தின் இயற்கை பிரிவின் பாராட்டுக்களை குறிப்பிட்டு கையில் எடுத்துக்கொண்டு போனேன். ''அதெல்லாம் வேண்டாம் பெருமாள். என்னால வர முடியாது'' என்று விழாவுக்கு வர மறுத்துவிட்டார். யானை சிற்பத்தைக் கொடுத்தேன். அவருக்கு மிகப்பிடித்தமான வனவிலங்கு. யானைகளின் பழக்கவழக்கங்கள், போக்குகளில் அவருக்கு இணையான அறிஞர் இந்தியாவில் இல்லை. பொருத்தமான பரிசாகப்பட்டது. சந்தோஷத்துடன் அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணன் தன்னுடைய பேத்தி மீனாட்சியை அழைத்து உற்சாகமாக ''பாரும்மா, பெருமாள் கொண்டுவந்திருக்கார்'' என்று காட்டினார். ஒரு மாபெரும் கலைஞன் உலக அளவில் அங்கீகாரம் பெற்றமைக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு. அது அவருக்கு மிக மகிழ்ச்சியைத் தந்திருந்தது.
அதற்கு பிறகு ஒரு வருடத்தில் அவர் காலமாகவிட்டார்.
அவருடைய புகைப்படங்களைத் தொகுத்து புத்தகமாக்க உருவாக்கிய சமயத்தில் அவர் உருவாக்கிய அந்த கேமராவின் படத்தையும் புத்தகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று அவருடைய குடும்பத்தினரிடம் கேட்டோம். அந்த கேமராவுக்கு அவர் வைத்திருந்த பெயர் Elephant
Gun. ஆனால் அந்த கேமரா கிடைக்கவில்லை. யாரோ எதற்காகவோ கேட்டார்கள் என்று கொடுத்திருக்கிறார்கள். அது திரும்ப வரவே இல்லை. வாழ்நாளில் பெரும்பாலான நாட்களில் அவர் அந்த கேமராவுடன்தான் அலைந்திருக்கிறார். அவர் எடுத்த பல புகைப்படங்களும் அந்த கேமராவில் எடுக்கப்பட்டவை. ஆனால் அதை நம்மால் பாதுகாத்து வைக்கமுடியவில்லை.
சென்னையில் அவருடைய வீட்டை இடித்துக் கட்டிய சமயத்தில் நான் போயிருந்தேன். அவருடைய அறையில் இருந்த உபகரணங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவற்றை வைத்திருக்க இடமில்லை இனி தேவையுமில்லை என்று சொல்லி என்னை எடுத்துக் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டார்கள். எனக்கும் அவற்றையெல்லாம் கொண்டுபோய் பாதுகாக்க இடமில்லை. மேலும் அங்கிருந்த எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் பின்னாளில் ஏதாவது பேச்சு வரும்போது மிக சுலபமாக சொல்லிவிடுவார்கள் ''கிருஷ்ணன்து எல்லாத்தையும் பெருமாள் எடுத்துட்டுப் போயிட்டாரு'' என்று. அப்படி ஒரு பெயரை சம்பாதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் எனக்கு எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இருந்தும் சாந்தியும், கிருஷ்ணனின் குடும்பத்தினரும் மிகவும் வற்புறுத்தியதால் கிருஷ்ணனின் நினைவாக அவருடைய ரேஞ்சபைண்டரை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன். இன்னும் பத்திரமாக என்னிடம் அது இருக்கிறது.
Eye in the
Jungle வெளியானபோதுதான் எம் கிருஷ்ணனை அதுவரையிலும் ஒரு எழுத்தாளராக மட்டும் அறிந்திருந்தவர்கள் அவர் ஒரு நல்ல புகைப்படக்கலைஞர்
என்பதையும் தெரிந்துகொண்டார்கள்.
(டி.என்ஏ பெருமாள் அவர்களைப் பற்றி எழுதி, வெளிவருவிருக்கும் ‘கானகத்தில் ஒரு கலைஞன்’ நூலின் ஒரு பகுதி.)

No comments:
Post a Comment