Friday 20 April 2018

கவிதையின் ஐந்து படிநிலைகள்


.
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் - குணா கந்தசாமியின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து.

0
கவிதைகளின் வரவு எப்போதும் பெருகியிருக்கும் சூழலில், ஒரு நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதென்பது பள்ளி மணியொலித்ததும் வாசலை நோக்கி விரையும் சீருடைக் குழந்தைகளுக்கு நடுவே நம் பிள்ளையைக் கண்டுபிடிக்கத் திணறுவது போன்றதே. ‘எங்க தேடறீங்க?’ என்று நம்மைத் தொட்டுத் திருப்பும் பிள்ளையைப் போல நல்ல கவிதையும் நம்மைத் தொட்டுத் திருப்பும்.
0
ஒரு கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது அதை நான் ஐந்து படிநிலைகளில் அணுகுகிறேன். இந்த படிநிலைகளும் இதன் வரையறைகளும் எனது வசதிக்காக நானாக உருவாக்கிக் கொண்டவை. கவிதைத் தொகுப்புகளை நான் அப்படித்தான் வாசிக்கிறேன்.
0
புதிய ஒரு தொகுப்பை வாசிக்கும் தொடக்க நிலையில் அதனை நான் சற்று தள்ளியே வைத்திருப்பேன். ‘இருக்கட்டும், பார்க்கலாம்’ என்பது போன்ற ஒரு மனநிலை. தொடர்ந்து கண்ணில் படும்போதேல்லாம் அது கவனத்தைத் திருப்ப முயற்சிக்கும். எப்போதேனும் எடுத்துப் புரட்டுவேன். ஒன்றிரண்டு கவிதைகளை வாசிக்க முற்படுவேன். ஏற்கெனவே தமிழ்க் கவிதைகளில் அதிகமும் கையாளப்பட்டுள்ள விஷயங்களை பாடுபொருட்களாகக் கொண்ட கவிதைகள் கண்ணில்பட்டவுடன் சலிப்பும் எரிச்சலுமே ஏற்படும். காதலின் துயரம், மரணம், வாழ்வின் இருப்பு, துரதிர்ஷ்டங்கள் போன்ற ஒடுக்கு விழுந்த களங்கள் எல்லாத் தொகுப்புகளிலுமே தவறாமல் இடம் பெறுபவை. ஏற்கெனவே வாசித்துப் பழகிய சொற்களில் அதே தளர்வான துயரமான மனநிலையை உணரும்போது அத்தொகுப்பின் மீதான அக்கறையும் கவனமும் சிதறிவிடும்.
குணாவின் இத்தொகுப்பிலும் அவ்வாறான களங்கள் உண்டு. காதலைப் பற்றிய கவிதைகளாக சரணம், நித்ய அருகு ஆகியவையும், மரணத்தைப் பாடுபவைகளாக பூக்கும் மலரின் கணிதம், மரணத்தின் பச்சைய வாசனையும், வாழ்வின் இருப்பைப் பற்றினவையாக நனவே மீப்பெரும் கனவு, மஞ்சள் பருந்து, நிழல் உலகம் போன்றவையும் உள்ளன.
ஆனால் இவை வாசிப்பில் சலிப்பைத் தராதவை. முன்சொன்ன உணர்வு நிலையிலிருந்து வேறான ஒன்றைத் தரும் சொல்முறையைக் கொண்டிருந்தவை.
புள்ளினங்கள் அற்ற குளத்தின் கரைமரங்கள்
உதிர்க்கும் கண்ணீர்ச் சருகுகளாய்
நினைவுகள் சரசரக்கின்றன’
என்பது தருவது காதலின் துயரத்தைத்தான், ஆனால் இந்தச் சித்தரிப்பில் உருக்கொள்ளும் துயரத்தின் வீரியம் முற்றிலும் வேறானது.

புதிய காட்சிகளையும் அனுபவங்களையும் இத்தொகுப்பில் காணமுடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் கவிதைகளை வாசிக்கும்போது தொகுப்பின் மீதான மனவிலக்கம் மெல்ல விலகுகிறது. மேசையில் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து அது இடம் பிடித்துக் கொள்கிறது.
0
புதிய அத்தொகுப்பை தொடர்ந்து வாசிக்கும்போது, கவிதைக்கேயுரிய பழகிவந்த வடிவிலிருந்தும் சொற்கோவைகளிலிருந்தும் மொழியும்விதத்திலிருந்தும் வேறுபட்டுத் துலங்கும் கவிதைகள் கண்ணில்படும்போது, ‘நான் வேறுமாதிரியானவன்’ என்ற நம்பிக்கையைத் தரும். இதுவே இரண்டாவது படிநிலை.
அள்ளி அணைக்க யாரேனும்
இருக்கும் இடத்தின் பெயரெல்லாம்
வீடென்று ஆகுக.’
என் தந்தையின்
முன்னைக் காதலிகள்
உதிர்த்த முதுநரைக் கூந்தலில்
கருமை மிகுந்த காலங்களைத்
தேடிக்கொண்டு
வெண்ணிற இரவில் திரிகிறேன்.’
போன்ற வரிகள் இத் தொகுப்பை இன்னும் கவனத்துடன் வாசிக்கவேண்டும் என்ற அக்கறையை ஏற்படுத்தும்.
0
மூன்றாவதாக, இதுவரையிலும் எழுதப்படாத ஒன்றை முயற்சிப்பதும் அது கவிதையாக உருவாகி நிற்பதும் புதியத் தொகுப்பின் முன்னுள்ள பெரும் சவால்.
வரையும் காட்சிகளும் அதன் வண்ணங்களும் அவைச் சுட்டும் மனவெளிகளும் வாசகனுக்குக் காட்டும் உலகம் அவன் முன்பு அறியாத ஒன்றாக இருப்பதோடு அது வியப்பளிக்கும் ஒன்றாகவும் திரண்டிருப்பது முக்கியம்.
தொட்டாச்சிணுங்கியை அன்பு செய்தல் என்ற கவிதை அவ்வாறான ஒன்று.
தழுவும் காற்றைப் போல்
சுரக்கும்
தயைக்கு’
என்ற வரிகள் சிந்தனையைப் பிடித்து நிறுத்திவிடுகின்றன.
கதவுக்குப் பின்னால் ஒளிந்து
தயங்கிப் பார்க்கும்
கூச்சக் குழந்தையைப்போல
அடர்வரிசையில் முகங்காட்டுகிறது
மீசையின் முதல் நரை
என்ற வரிகளை வாசித்தபோது ‘அட’ என்று நிமிரச் செய்தன.
குணா கந்தசாமியின் இத்தொகுப்பில் வாசகனுக்கு புதிய காட்சிகளையும் புதிய அனுபவங்களையும் தரிசிக்கத் தரும் கவிதைகள் கணிசமாக உள்ளன.
பச்சோந்தி, கைத்துப்பாக்கி, வெள்ளிவில், ஆந்தை, வெள்ளியில் முளைத்தல், வெண்ணிற இரவில் ஆகியன அவ்வாறானவை.
இத்தகைய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இப்போது நமது பிரியத்துக்குரிய தொகுப்பாக நெருங்கிவிடுவதே மூன்றாவது படிநிலை.
0
நான்காவது நிலையில் அத்தொகுப்பு எதிர்கொள்ளும் சோதனை இன்னும் தீவிரமானது. சிக்கலானது. கவிதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கும் வாசக அனுபவத்திற்கு முன்பாக இத்தொகுப்பு தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டியதாகிறது. இதுவரையிலும் அனுபவமாகாத புதிய கோணத்தையும், வாசிப்பு லகரியையும், வாய்பிளக்கச் செய்யும் வியப்பையும் தரும் கவிதைளை தொகுப்பு கொண்டிருக்கும் என்றால் இந்த நிலையை எதிர்கொள்ள முடியும்.
குட்டிப் பொன்னுலகம் கவிதையின் இறுதி வரிகள்
பிறகு நாங்கள்
ஜோடி போட்டுக்கொண்டு
அங்கிருந்து பார்க்கிறோம்
அடடே
வெளியேதான்
உலகம் எவ்வளவு சிறியது?”
அலை நரை கவிதை
குழந்தைகள்
முச்சந்தியைக் கடக்கும்போது மட்டும்
பிரபஞ்சம் தேயும் ஒலி
மெலிதாகவே கேட்கிறது.
காலமும் நாய்க்குட்டியும்
இயலாமையின் துயரக் கோபத்தில்
நான் காலத்தை ஏசுகையில்
சிரமத்தோடு தலையுயர்திப் பார்த்துவிட்டு
நாய்க்குட்டி கவிழ்ந்துகொள்கிறது
நானென்ன செய்வேனென முனகிக்கொண்டே
விரல்களில் துவங்கும் வானவில், தஸ்தாவஸ்கியின் நண்பர்கள், கூகிள் எர்த் போன்ற கவிதைகள் வியப்பையும், நல்ல கவிதைகள் மட்டுமே அளிக்கும் போதையையும் தருவதாக அமைந்துள்ளன.
0
நெடுங்காலத்தின் முன்னால் மொழியின் பல்வேறு சவால்களுக்கு நடுவிலும் தொடர்ந்து பீறிட்டு வரும் புதிய முளைகளுடன் போட்டியிட்டும் தனது இடத்தை உறுதியுடன் தக்கவைத்துக் கொள்ளும் தகுதியை உடைய கவிதைகளின் நீண்டவரிசை ஒன்று உண்டு.
தமிழின் பெரும் கவிதைப் பரப்பின் சாதனைக் கவிதைகளின் வரிசையில் இடம்பெறும் தகுதியுடைய கவிதைகளை இந்தப் புதியத் தொகுப்பு கொண்டுள்ளதா? என்பதே இறுதியான ஐந்தாவது படிநிலை
ஒட்டுமொத்தக் கவிதைத் திரட்டுக்கு இத்தொகுப்பு ஏதேனும் பங்களிப்பைச் செய்யும் தகுதியைக் கொண்டிருக்கிறதா?
குணா கந்தசாமியின் இத்தொகுப்பு 92 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில கவிதைகள் பாரம்பரியம் மிக்க தமிழ்க் கவிதையின் பெருமைக்குரிய வரிசையில் சேர்க்கும் தகுதியைக் கொண்டுள்ளன என்பதே இத்தொகுப்பின் சிறப்பு.
நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழகிய மலராக
இருக்கிறது.
அத்தனை மனிதர்கள் சூழ்ந்திருக்க
முன்னால் நடக்கும் பெண்ணின்
இடுப்பில் தொற்றிக் கொள்கிறது.
ஏக்கத்தின் பூரண தினமொன்றில்
நாம் வசிக்கும்
ஊருக்குள் இறங்கும் பசித்த புலி
ஏக்கத்தின் பூரண மலரைக் கண்ணுற்று
திரும்பி கானகத்திற்கே
பறக்கிறது மெல்ல.
..
சட்டைப் பைக்குள் கையை விட
சிக்கும் ரூபாய் நாணயத்தைக்
குழம்பிப் பார்க்கிறது ஒரு கணம்.
பின்தலையை ஆட்டியவாறே
நாணயத்திலிருந்த
பூவைப் பறித்துக் கொண்டு
மூன்று சிங்கங்களைத்
தெருவுக்குள் விரட்டிவிட்டு
நான்காவது சிங்கத்தின் மீதேறி
ஊழின் பிள்ளை
ஜாம் ஜாமென்று போகிறது.
, மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர், துயரம், ஏக்கப்புலி, பூனை மீசை நாய் வால், ஊழின் பிள்ளை, தொட்டாச்சிணுங்கி ஆகிய கவிதைகள் அடர்த்தியான சொல்முறையினாலும் புதிய அனுபவங்களைச் சாத்தியப்படுத்துவதாலும் கவிதை வாசிப்பின் மகிழ்ச்சியை பெருக்குவதாலும் அந்த மகத்தான வரிசையில் சேரும் தகுதியைப் பெறுகின்றன.
0
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் என்ற குணா கந்தசாமியின் இத்தொகுப்பு பெருமைமிக்க ராஜமார்த்தாண்டன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமானதே.
0




No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...