Friday, 5 September 2025

வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடல் மஞ்சுநாத்தின் ‘அப்பன் திருவடி’


 

வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுதுவதுமாய் தொண்டு செய்தவர். தாகூரின் தனிச் செயலராக இருந்த அனில் குமார் சந்தாவை காதலித்து மணந்தார். ராணி சந்தா எழுதிய புகழ் பெற்ற நூல் ‘பூர்ண கும்பம்’. பானு பந்த் என்பவரின் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.

ஹரித்வாரில் நடக்கும் கும்ப மேளாவுடன் சேர்த்து இமயத்தையும் அதன் பல்வேறு இடங்களையும் பயண அனுபவத்துடன் விவரிக்கிறது இந்த நூல். இமயத்தைக் குறித்து வாசித்த முதல் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

இமய மலை யாத்திரைக்குச் செல்பவர்களின் வழியாக ‘சார் தாம் யாத்ரா’, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்று பெயர்களைக் கேட்டதுண்டே தவிர ஒரு முறையேனும் போய் வரவேண்டும் என்ற எண்ணம் ஏனோ வந்திருக்கவில்லை என்பதை இன்று யோசித்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது.

கேதார்நாத், கடல் மட்டத்திலிருந்து 11800 அடி உயரத்தில் பனி மூடிய சிகரங்கள் சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய ஊர்.  மந்தாகினி நதி ஊற்றெடுக்கும் சோராபாடீ ஏரிக்கு சற்று கீழே அமைந்திருப்பதால், பனிப்பாறை உருகும்போதும் உடையும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எப்போதும் உண்டு. கடுமையான பனிப்பொழிவு, கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு என இயற்கை பேரிடர்கள் பலவற்றையும் வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. கேதார்நாத்தை அடைவதற்கான சாலை 16 கிலோ மீட்டர் தொலைவில் கீழே உள்ள கௌரிகுண்டம் என்ற இடத்துடன் முடிந்துவிடுகிறது. அங்கிருந்து கேதார்நாத்துக்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. முதலாவது, மட்டக் குதிரைகளில் ஏறிச் செல்வது. கோயில் திறக்கப்படும் ஆறு மாதங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட குதிரைக்காரர்கள் ஏராளம். இரண்டாவதாக, ஆட்கள் சுமந்து செல்லும்‘டோலி‘யில் கைகால்களை குறுக்கி அமர்ந்து போவது. மூன்றாவது வழி சற்று செலவு பிடித்த ஒன்று. ஹெலிகாப்டர் பயணம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கே கோயில் திறந்திருக்கும். கடும் பனிப் பொழிவு, தாங்க முடியாத குளிர், பனியால் மூடிக் கிடக்கும் பாதைகள் போன்ற காரணங்களால் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் கோயில் அடைக்கப்பட்டிருக்கும். கோயில் நடை சாத்தப்படும் இறுதி நாளில், பூசையை முடித்து உற்சவ மூர்த்தியை பல்லக்கில் ஏற்றி குப்தகாசிக்கு அருகில் உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு வந்து விடுவார்கள். மீண்டும் நடை திறக்கப்படும் நாளில் எடுத்துச் செல்வார்கள்.

கேதார்நாத்தில் உள்ள சிவாலயம் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாது. எட்டாம் நூற்றாண்டில் இது ஆதி சங்கரரால் சீரமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 600க்கும் சற்றே கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊருக்கு அனுமதிக்கப்படும் ஆறு மாத காலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஐயாயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 16 லட்சம்.     

2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து பெய்த கனமழை, கடும் பனிப்பொழிவு, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகிய அனைத்தும் சேர்ந்து மறக்க முடியாத பெரும் சேதாரங்களை விளைவித்தன. மந்தாகினியின் கரையில் கட்டப்பட்டிருந்த எண்ணற்ற கட்டடங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர் சேதங்கள். அரசாங்கம் கொடுத்த எண்ணிக்கைக்கும் உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கைக்கும் பாரதூரமான வித்தியாசம். இதில் குதிரைகள் உள்ளிட்ட பிற உயிர்கள் அடங்கா.

கௌரிகுண்டத்திலிருந்து கேதாருக்குச் செல்லும் 14 கிலோமீட்டர் பாதையின் மத்தியில் அமைந்திருந்தது ராம்பாரா எனும் கிராமம். மட்டக் குதிரையிலும், டோலியிலும் செல்லும் யாத்திரிகள் சிரம பரிகாரம் செய்து கொள்வதற்கான இடம். 2013ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மந்தாகினியின் பெருவெள்ளம் ராம்பாரா கிராமம் மொத்தத்தையும் சுருட்டிக்கொண்டு போனது. 150க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான கடைகள், ஐந்து விடுதிகள், வீடுகள் என்று எதுவுமே மிஞ்சவில்லை. கிராமம் இருந்த மொத்த இடத்திலும் பத்து அடிகள் ஆழம் வரையிலான சேறும் சகதியுமே எஞ்சியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த உள்ளூர்வாசிகள், பயணிகளில் ஒரு சிலரைத் தவிர பிற அனைவருமே பலியாகினர், காணாமல் போயினர்.      

எண்ணற்ற உயிர்களையும் ஏராளமான உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் சுருட்டிப் பறித்துப் போன இந்த பெருவெள்ளத்துக்கு அடிப்படை காரணம் மனிதனின் பேராசையே என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. அனுமதியளிக்கப்பட்ட அளவுக்கு மீறிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள், கண்டுகொள்ளாத அரசு அதிகாரம் என மனிதர்களின் சுயநலப் போக்கு மீள முடியாத பெரும் துயருக்கு காரணமாக அமைந்தது.

ஜூன் மாதம் 2013ஆம் வருடம் இந்தியாவின் வடக்கில் இமய மலையின் சரிவில் நடந்த இந்தப் பேரழிவு, தென்முனையில் வசிக்கும் நமக்கு பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. ஒரு வாரம், பத்து நாள் வரை அந்த செய்திகளை நாம் தொடர்ந்திருந்தோம். பிறகு அதன் மீதான கவனம் விலகி வேறொன்றில் ஆழ்ந்து விட்டோம். ஆனால், இத் துயர நிகழ்வில் தங்கள் உற்றாரை, உறவினரை, நண்பர்களை பறிகொடுத்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இந்தப் பேரழிவு ஆறா வடுவாகவே எஞ்சியிருக்கும். கங்கையை தலையில் சுமக்கும் ஈசனை பனிமலைச் சிகரங்கள் சூழ்ந்த கேதாரத்தில் சென்று தரிசிக்கும் ஆசையுடன் பல காலம் திட்டமிட்டு, பொருள் சேர்த்து சென்றவர்களில் பலர் வெள்ளத்தில் பலியாயினர். இன்னும் சிலர் காணாமல் போயினர். வேறெதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் தன்னுடன் வந்தவர்களில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அவலத்தை பலர் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு கொடும் நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவர் அதைப் பற்றி சொன்னால் மட்டுமே அந்த இரண்டு நாட்களில் கேதாரத்தில் நடந்தவற்றை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ வெளிவந்ததாக தெரியவில்லை. ஆவணப் படங்கள் எதுவும் வெளியாகியிருக்க வாய்ப்புண்டு.

மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த அந்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஒரு இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்தையும் நம்பிக்கை இழப்பையும் அதே சமயத்தில் உயிர்வாழும் இச்சையுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளது என்ற வகையில் தமிழுக்கு இந்த நாவல் புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பகுதியும் உரையாடலாக அமைந்திருக்கும் இந்த நாவலை மூவரின் கோணங்களாகப் பகுத்துக் கொள்ள முடியும். முதலாவது கோணம் குதிரைக்காரன் மாதவ்வின் பார்வையிலிருந்து எழுவது. மரணத்தை எளிதில் ஒப்புக்கொள்ள மறுத்து இயன்ற வரை எதிர்த்துப் போராடி மீள்வது. அமர்தேவ் எனும் தனது குதிரையில் பயணிகளை ஏற்றிச் செல்வதை ஒரு வேலையாக மட்டுமல்லாமல் தனக்குக் கிடைத்த பேறாகவும் கருதும் மாதவ் தொடர்ந்து பேரிடரிலிருந்து தப்பிக்கும் முனைப்புடன் அதற்கான வழிகளை ஆராய்ந்தவண்ணம் இருக்கிறான். பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக யோகி மகராஜ் குகையிலேயே பதுங்கியிருப்பது மரணத்தை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று வாதிடுகிறான். கால்வைக்கும் திசை ஒவ்வொன்றிலும் அபாயங்களன்றி தப்பும் வழிகள் சொற்பமே என்று தெரிந்தும் அவன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதில்லை. எந்தச் சூழலிலும் மன உறுதியை விட்டுத்தராமல் தொடர்ந்து போராட வேண்டும் என்ற துணிவே அவனைக் காப்பாற்றுகிறது. இரண்டாவது கோணம், யோகி பத்ரபாகு மகராஜ் அவர்களின் கோணம். தான் அடைக்கலமாயிருக்கும் குகைக்கு வெளியே அவ்வளவு பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கும்போதும், மரணம் கணந்தோறும் நெருங்குகிறது என்றபோதும் இயல்பு குலையாமல் அமைதியாக நடப்பவற்றை உற்று கவனிப்பதுடன், குகையில் தஞ்சமடைந்தவர்களை முடிந்த மட்டிலும் பாதுகாப்பாக வைக்க முயல்வதே தன் பணி என்ற நிறைவுடன் இருப்பது. யோகி மகராஜ் இமயத்தின் பனிச்சுவர்களை, அவற்றின் பின் உறைந்துள்ள ஏரிகளை, உயரச் சிகரங்களை, அபாயகரமான சரிவுகளை என அனைத்தையும் தன் கால்களால் அளந்தவர். இந்தப் பேரிடரின் பலம் என்ன, அது என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைக் கணித்திருப்பவர். கேதாரத்தின் கற்றளி மட்டுமே பாதுகாப்பானது, வேறு முயற்சிகள் மரணத்தை மடியிலேந்துவதற்கு ஒப்பானது என்பது அவர் எண்ணம். வாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளியை, வித்தியாசத்தை அறிந்தவர் என்பதால் தற்கணத்தை மட்டுமே பொருட்படுத்துகிறார். ஒவ்வொரு கணமும் குழந்தை சாதாரியின் உடல்நிலையிலேயே கவனத்தில் கொண்டிருக்கிறார். குகையில் தன்னுடன் இருப்பவர்களை முடிந்த மட்டும் பராமரிக்கிறார்.  அனைத்தும் மனிதனின் சுயநலம் விளைவித்திருப்பது, அதன் பலன்களை அனுபவிக்காமல் தப்ப முடியாது என்ற எண்ணம் கொண்ட அவருக்கு குகையிலோ வெளியிலோ எங்கிருந்தாலும் மரணம் ஒன்றுதான். மூன்றாவது கோணம், இராணுவ அதிகாரி சுருளிச்சாமியின் பார்வை. இந்த பேரிடரில் கடமையின் பொருட்டு அதிகாரியைக் காப்பாற்றப் போனதால் தன் மனைவியை மகளை இழந்தவர். கடைசி வரையிலும் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளும்பொருட்டு ஆத்திரத்தையும் வெறுப்பையும் மீறி மாதவ்விடம் அவர் காட்டும் பொறுமை இராணுவ அதிகாரியின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. விடுப்பில் ஒரு சாதாரண பயணியாக, குடும்பத்துடன் கேதார்நாத்தை தரிசிக்க வந்தவர் சந்திக்க நேர்ந்த இழப்பும் அதன் காரண காரியங்களும் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. பேரிடரில் உயிரிழந்த எண்ணற்ற பயணிகளின் நிலையும் அதுவே. ஆறுமாத காலத்தில் எத்தனையோ லட்சம் பேர் வந்துபோகும் நிலையில் குறிப்பிட்ட அந்த இரண்டு நாளில் ஏன் அப்படியொரு விபத்து நடக்கவேண்டும், ஏன் அத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? அந்த நாட்களையும், குறிப்பிட்ட அந்த உயிர்களையும் தேர்வு செய்தது யார் அல்லது எது? எதுவுமே நடக்காதது போல மறு ஆண்டே மீண்டும் தொடங்கிய யாத்திரையில் மீண்டும் பக்தர்கள் வந்து போகிறார்கள். குதிரைகள் ஆட்களை ஏற்றிச் செல்கின்றன. டோலிகளில் சுமந்து செல்கிறார்கள். கடைகளும் விடுதிகளும் உணவகங்களும் முளைக்கின்றன. பனி மூடிய சிகரங்களுடன் இமயம் கம்பீரமாய் காட்சி தருகிறது. மந்தாகினி தாவிப் புரண்டோடுகிறது. மாதவ் தன் அமர்தேவை தேடிக்கொண்டே இருப்பதுபோல சுருளிச்சாமியும் மகள் சாதாரியைத் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்.

மரணத்தைக் கண்டு அஞ்சுவோர் அநேகம். அதைப் பொருட்படுத்தாது வரும்போது வரட்டும் என்று மதிக்காதோர் சிலர். மரணத்துடன் போராடி அதை ஒத்திப்போடும் துணிவுடையோர் இன்னும் சிலர். இவர்களில் யாரையும் விட்டுவைப்பதில்லை மரணம். ஒருவித சமன்பாட்டை உணர்த்தும்பொருட்டு அனைவரையுமே ஒரே நேரத்தில் அள்ளிக்கொண்டு போகிறது. இயற்கையை தான் வென்றுவிட்டதாக மனிதன் எண்ணுந்தோறும் இல்லை என்று அவனுக்கு உணர்த்த ஏதேனும் ஒரு பேரிடரில் தன் ஆற்றலை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் சாந்தமாகிவிடுகிறது இயற்கை. இந்த இரண்டுவித ஆட்டங்களையும் நாவலில் காணமுடிகிறது.   

சுருளிச்சாமிக்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகத் தொடங்கி, அதனுள்ளேயே யோகி பத்ரபாகு மகராஜ்க்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகவும் நீண்டு உருமாறுகிறது. பிறகு, நாவலின் போக்கில் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாகவும் விவாதமாகவும் மாறிவிடுவதை உணரலாம்.      

மஞ்சுநாத் இமயமலையில் தொடர்ந்து பயணம் செய்பவர். அதன் ஆழ அகலங்களை நன்கறிந்தவர். சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் அல்லாத பல பிரதேசங்களில் தனியாக பயணம் செய்த அனுபவம் உண்டு. அங்குள்ள சாதுக்கள், குதிரைக்காரர்கள், பாண்டாக்கள், கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் என்று பலதரப்பட்ட மக்களுடன் பழகியவர். கங்கையும், மந்தாகினியும், அல்காநந்தாவும் எந்தெந்த பருவத்தில் எப்படி உருமாறுவர் என்ற சூட்சுமங்கள் அறிந்தவர். இமயச் சிகரங்களில் குளிரிலும் மழையிலும் பனியிலும் அலைந்திருப்பவர். நாவலுக்காக இத்தகைய ஒரு களத்தை எடுத்துக்கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், அந்த இரண்டு நாட்களில் நடந்தவற்றை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் இவ்வாறான ஒரு அடிப்படை விவாதமாகவும் அமைத்திருக்கிறார். இமயத்தின் அழகை வர்ணிக்கும் அதே நேரத்தில் அதன் அபாயத் தோற்றங்களையும் காட்டியிருக்கிறார். பல இடங்களில் பயன்படுத்தியிருக்கும் உவமைகள் குதிரைகளோடும், மந்தாகினியோடும் தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன.

கேதார்நாத்தில் நடந்த பேரிடரைப் பற்றிய நாவல் என்று எளிமையாகச் சொன்னால் இது வாசிக்க பரபரப்பான நாவலாக இருக்கும் என்ற எண்ணம் உடனடியாக எழும். உண்மைதான். ஆனால், அத்தகைய பரபரப்புத்தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாக்கி ஆழம் சேர்த்திருக்கிறார். அதுவே இந்த நாவலுக்கு கூடுதலான பரிமாணத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

( ‘அப்பன் திருவடி’ நாவலுக்கான முன்னுரை. எதிர் வெளியீடு. ) 


 

Monday, 18 August 2025

நகரும் படிக்கட்டுகள் - திவ்யா ஈசனின் கவிதை


ஒரு கவிதை என்ன செய்யும் - 2


0

நவீன உலகத்தைத் தாண்டுதல்

திவ்யா ஈசன்

அவன் கைகள் சோர்ந்து

நான் பார்த்ததேயில்லை

வெட்டி வெட்டி

மண்வெட்டிதான் மழுங்கிப் போகும்

அதை கூர்த்தட்டதான் ஓய்வான்

இரண்டு ஆள் வேலை செய்வான்

 

ஓங்கி உயர்ந்த பனைகளில்

நெஞ்சுபடாமல் ஏறி

நுங்கு வெட்டித் தருபவன்

ரத்த வாடைப் பழகாத தெருநாய்யை

காட்டுக்கு கூட்டிச் சென்று

வேட்டைநாயாய் மாற்றுபவன்

 

பெரும் வரைக்கட்டில்

தனியாளாய் வள்ளியில் இறங்கி

தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்

 

ஓடும் நதியில் எறிதூண்டி இட்டு

பெருமணாலி மீன்பிடிப்பதில்

நல்ல கைத் தேர்ந்தவன்

 

மலைப்பெருவை நடக்கையில்

மிருகத்தின் நாற்றமறிந்து

வரும்முன் விலகத் தெரிந்தவன்

 

திருவிழா நாட்களில்

வீர விளையாட்டின் பரிசுகளை

ஒன்றுவிடாமல் வாங்கி குவிப்பவன்

 

களரி சிலம்பம்

வாள் வீச்சை எல்லாம்

காலில் மண்டியிட வைப்பவன்

 

கணியன்பூங்குன்றனுக்கு

பாடம் கற்பிக்கும் அளவுக்கு

அறிவுச் செருக்கு உடையவன்

 

முதலைகள் வாழும் காயலில்

அக்கரைக்கு நீந்தும் அளவுக்கு

உயிர்பயம் அற்றவன்

 

பெண்களை விரும்பும் ஊரில்

பெண்களே விரும்பும்

பேரழகன் அவன்

 

நான் கண்டு கண்டு

எப்போதும் வியக்கும் ஒருவன்

 

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்

 

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம் ‘தெர்சு உசாலா’. ரஷ்ய துருவப் பிரதேசத்தில் நில அளவைக்காக பயணம் மேற்கொள்ளும் கேப்டன் அர்சனேவுக்கு உதவியாளராக செல்கிறார் நாடோடி வேட்டையரான தெர்சு உசாலா. பயணத்தின்போது சந்திக்க நேரும் பல இன்னல்களிலிருந்து தன் அனுபவ ஞானத்தின் உதவியால் காப்பாற்றி உதவுகிறார் உசாலா. பயணத்தின் முடிவில் உசாலாவை தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடும்படி அழைக்கிறார் கேப்டன். வனவாசியான உசாலா அதை மறுத்துவிடுகிறார். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். இம்முறையும் அவரை பெரும் விபத்தொன்றிலிருந்து காப்பாற்றுகிறார் உசாலா. ஒரு துப்பாக்கியைப் பரிசாக கேட்டுப் பெறுகிறார். வனத்துக்குள் ஒரு சிறுத்தை அவரை கண்காணித்து தொடர்வதை கவனிக்கிறார். அது தன் வழியில் போகச் செய்வதற்கான வழிமுறைகளை முயல்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையில் துப்பாக்கியால் அதை சுட நேர்கிறது. குறி தவறிவிட சிறுத்தை காயத்துடன் தப்பிச் செல்கிறது. அபாயத்தை உணர்ந்த உசாலா கேப்டனுடன் நகரத்துக்கு வர ஒப்புக்கொள்கிறார். ஆனால், பெட்டிகள் போல் சுவர்களால் தடுக்கப்பட்ட வீடுகள் நிறைந்த நகர வாழ்க்கை அவருக்கு ஒத்து வருவதில்லை. திணறுகிறார். வனத்துக்கே திரும்ப நினைக்கிறார். இம்முறை உயர்ரக துப்பாக்கியை அவருக்கு பரிசாக அளிக்கிறார் கேப்டன். பார்வைத் திறன் குறைந்திருக்கும் உசாலா வெகுநாள் வனத்தில் பாதுகாப்பாக இருப்பது கடினம் என்று உணர்ந்திருக்கும் கேப்டனுக்கு அவரது மரணச் செய்தி வந்து சேர்கிறது. சிறுத்தையால் கொல்லப் பட்டிருக்கலாம் அல்லது அவரிடம் இருந்த துப்பாக்கிக்காகவும் கொலையுண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் உசாலா தான் விரும்பியபடி வனத்துக்குள்ளேயே உயிர் துறக்கிறார்.

எந்த அடிப்படை வசதிகளுமில்லாமல் வனத்துக்குள் வாழ்பவர்களை பார்க்கும்போது வியப்படைவதுண்டு. இவர்களால் எப்படி இந்த வனத்துக்குள் வாழ முடிகிறது என்று யோசிப்போம். வனத்தின் ஊடுபாதைகளை அவர்களின் பாதங்கள் அறியும். ஓசைகளின் மூலமும் வாசனைகளின் வழியாகவும் காட்டின் சலனங்களை அறிந்தவர்கள் அவர்கள்.

நகரம் அவர்களுக்கு நெருக்கடியின் கூடாரம். மாசடைந்த நிலமும் நீரும் காற்றும் கொண்ட நஞ்சுப் பிரதேசம். காலையில் எழுந்தது முதல் எல்லாவற்றுக்கும் பதற்றமும் அவசரமுமான நகர வாழ்க்கை அவர்களுக்கு ஒத்துவராதது.

அண்மையில் ஆந்திராவிலுள்ள அரக்கு வேலிக்கு செல்ல வாய்த்தது. கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரம். விசாகப்பட்டினத்திலிருந்து சாலை வழியாகவும் ரயில் மூலமாகவும் செல்ல முடியும். மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஓடைகளும் அருவிகளுமான இந்தப் பாதையில் பயணம் செய்வது நல்ல அனுபவம். ஆனால், பசுமையான மலைகளினூடே பயணம் செய்கையில் அங்கங்கே ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிந்தது. ராஜமுந்திரியிலிருந்து நேரடியாக விஜயநகரத்தை அடைவதற்கான பசுமை இருப்புப் பாதையை மலைகளினூடாக இடுகிறார்கள். இங்குள்ள பாக்ஸைட் கனிமத்துக்காகவே இந்தப் பாதை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. அரக்குப் பள்ளத்தாக்கில் ஏராளமான பழங்குடி வசிப்பிடங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காபி புகழ்பெற்றது. அரக்கு ஒரு சிற்றூர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவதால் சிற்றூரின் அடையாளங்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பயணிகள் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகள் எங்கும் தொடர்கின்றன. வார இறுதி நாட்களில் வந்து குவியும் வாகனங்களின் எண்ணிக்கை மலைக்கச் செய்கிறது. எல்லாவிடங்களிலும் சாலையோரங்களில் காணப்படும் மூங்கில் பிரியாணிக் கடைகள் திணற வைக்கின்றன. இங்கு பழங்குடி காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பழங்குடிகளின் தனித்தன்மைகளை, அடையாளங்களை, வனம் சார்ந்த வாழ்க்கையை நவீன முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  

காட்சிக் குகையின் ஒரு பகுதியில் மரத்திலிருந்து ஈட்டியுடன் தாவும் இளைஞனின் உருவத்தைக் கண்டதும் அண்மையில் வாசித்திருந்த திவ்யா ஈசனின் கவிதை வரி உடனடியாக நினைவுக்கு வந்தது. ‘பெரும் வரைக்கட்டில் தனியாளாய் வள்ளியில் இறங்கி தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்.’ கண்காட்சிக் கூடத்தை சுற்றிவரும்போது அந்த வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவனுக்கே சொந்தமான காட்டில் அவனை ஒரு குகையில் சித்தரிப்பாக மாற்றியிருக்கும் அபத்தம் தொந்தரவு செய்தது.

 

படியேறவும் நடக்கவும் முடியாத நவீன வாழ்க்கை எல்லோரையும் நகரும் படிக்கட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏற்றி வேகமாய் நகர்த்துகிறது. உலகம் மொத்தமுமே நகரும் அதிவேகப் பாதையில் நகர்ந்து கண்மறைந்து போகிறது. மலையிலும் மரத்திலும் தாவித் திரிந்தவனுக்கு நகரும் படிக்கட்டில் கால் வைக்க பயம். நகரும் அந்தப் படிக்கட்டுகளில் எதில் எப்போது கால் வைக்கவேண்டும் என்ற தடுமாற்றம் முதன்முறையாக அதைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று. ஏற்கெனவே அதில் ஏறிச் சென்றவர் நம் கையைப் பிடித்துக்கொண்டாலும்கூட சந்தேகத்துடன்தான் கால்வைக்க நேரும். அந்த முதன்முறை பதற்றத்தை கடந்துவிட்டால் அதன் பின் படியேற கால்கள் வளையாது. எல்லா இடங்களிலும் நகரும் படிக்கட்டுகளையே தேடத் தோன்றும்.

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

இந்த இடத்தில் கவிதையின் காட்சிக் கோணம் மாறியிருப்பதை கவனிக்கலாம். தான் கண்டு கண்டு வியந்த ஒருவனை இப்போது அவள் மேலிருந்த காண்கிறாள். அப்போதும் அவன் நகரும் படிக்கட்டில் கால் வைத்து ஏறுவதில்லை. அகலமான ஓடையைத் தாண்ட எத்தனிப்பவனைப் போலவே இந்த நவீன உலகத்தையும் அவன் தாண்டுகிறான்.

நகரவாசிகள் நவீனத்தின் படிகளில் மேலேறிப் போய் வெகு காலத்துக்குப் பிறகு மலையும் காடுமே வாழ்வென்று இருந்தவர்கள் அச்சத்துடன் தயங்கி முதல் படியில் கால்வைக்கிறார்கள். இந்த இடைவெளி நகரத்துக்கும் மலை கிராமங்களுக்கும் உள்ள இடைவெளி மட்டுமல்ல. பழமைக்கும் நவீனத்துக்குமான இடைவெளி. இயற்கைக்கும் இயற்கை அல்லாததுக்குமான இடைவெளி.   

கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து என்று அடிப்படை வசதிகள் மலைக் கிராமங்களை எட்டுவதும் கல்வியின் மூலமாக அவர்கள் உயரங்களைத் தொடுவதும் பொருளாதார சமூக வளர்ச்சியின் முக்கியமான படிநிலை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், வணிக நோக்கில் மலை வளங்கள் சுரண்டப்படுவதும் அதற்கு விலையாக தரநேரும் சீரழிவுகளின் அபாயங்களைக் குறித்து கவலைகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

மரபும் பாரம்பரியமும் தனித்திறன்களும் இனி காட்சிக்கூடங்களின் செயற்கை சித்தரிப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கும் என்றால், மலைக்கும் அடிவாரத்துக்கும் இடையே நகரும் அந்த அதிவேகப் படிக்கட்டுகள் யாருக்கானவை?    

அதே நேரத்தில் இந்தப் பாய்ச்சல் இன்னொரு பெரிய மாற்றத்தை சாத்தியப்படுத்தியிருப்பதை கவிதையின் இறுதிக் கண்ணி கச்சிதமாக சுட்டியுள்ளது.

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்


பற்றியிருக்கும் கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அந்தப் பெண்ணுக்கு அளித்திருக்கும் உவகையினால் குதூகலத்தினால்தான் அந்த இறுதி வரி சாத்தியமாகியிருக்க வேண்டும். வளங்களைச் சுரண்டியிருப்பினும் வாழ்வை மாற்றியிருப்பினும் இயற்கை இல்லாது போனபோதும் கையை மாற்றிப் பற்றவைத்தமைக்காக எழுகிற வாழ்த்தும் அதில் தொனிக்கிற நம்பிக்கையும் இந்தக் கவிதையின் அழகை மேலும் அழுத்தமாக்கியுள்ளது.

0

( ஆவநாழி 50ஆம் இதழ், ஆகஸ்டு 25 )

நிபந்தனைக் காதல் - பொன்முகலியின் கவிதை


 ஒரு கவிதை என்ன செய்யும் - 1

0

நிபந்தனைக் காதல் - பொன்முகலியின் கவிதை


கவிதை என்றால் காதலின்றி இருக்க முடியாது. காதலிலிருந்து கவிதையையும் கவிதையிலிருந்து காதலையும் பிரிக்கவும் முடியாது. சங்கம் முதல் இன்று வரை எழுதப்பட்டபோதும் இந்த கருப்பொருள் மட்டும் சிறிதும் கருக்கிழக்காது பொலிவதன் ரகசியம் காதலுக்குத் தெரியும் அல்லது கவிதைக்குத் தெரியும்.

சுனைவாய்ச் சிறுநீரை பிணைமான் இனிதுண்ண வேண்டுதலில் தொடங்கி ஓங்குவரையடுக்கத்துப் பாய்ந்துயிர் செருகும் மந்தியும் தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால் ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் வரை நீளும் சிறுகோட்டுப் பெரும்பழத்தின் சுவையையும் வாதையையும் இன்றுவரை சொல்லித் தீரவில்லை. இன்னும் விதவிதமாய் சொல்லிப் பார்க்கிறார்கள்.

கண்ணில்லாத காதலுக்கு இலக்கணமும் கிடையாது. இன்னதெல்லாம் அமையப்பெற்றால் கைகூடும் காதல் என்று யாரும் உறுதியளிக்கவும் வாய்ப்பில்லை. எப்போது எங்கு யாருக்கு எங்ஙணம் நிகழும் என்று ஆருடம் சொல்வதும் கடினம். பலரும் கவனித்திருக்கக்கூடும், காதலில் எல்லோரும் விழத்தான் செய்கிறார்கள். எனவே, அது எதிர்பாராமல் நடக்கும் விபத்துதான். விரும்பி ஏற்கும் விபத்து.

காதலிக்காக காதை அறுத்து தாம்பளத்தில் வைத்து நீட்டினான் ஓவியப் பித்தன் வான்கா. அமராவதியின் கடைக்கண் பார்வையில் எண்ணிக்கையை தவறவிட்டு தலையைக் கொடுத்தான் அம்பிகாபதி. பிரிவென்பது இனிய துயரம் என்பது காதலின் பொருட்டு உயிர் துறந்த ரோமியோ ஜூலியட்டின் வாக்கு. விரான்ஸ்கியின் மீதான காதல் அன்னா கரீனினாவுக்கு துயரத்தைத் தவிர வேறெதையும் அளிக்கவில்லை என்றாலும் அவளால் அதிலிருந்து மீள இயலவில்லை. இன்றைய தலைமுறையினரிடம் இந்தக் கதையையெல்லாம் சொன்னால் பூமர்களின் காதல் என்று கடந்து செல்லக்கூடும்.  

காவியக் காதலையும் விளக்கங்களுக்கு அப்பாலான அதன் விளைவான பித்துக்குளித்தனங்களையும் ஓரமாக வைத்துவிட்டு ‘பீ பிராக்டிகல்’ ( be practical ) என்று உபதேசிக்கிறது நவீன காதல். இன்றைய காதலின் வரையறைகள் வேறு. அர்த்தமும் வேறு. யான் நோக்கின் நிலம் நோக்கும் கதையெல்லாம் இப்போது செல்லுபடியாகாது. காதலின் மெல்லினக் குணாம்சங்களான கடைக்கண் வீச்சு, ஊடல், தேடல், நுனிவிரல்கொண்டு நடுங்கி மெய்தீண்டல் என்பதெல்லாம் அர்த்தமிழந்துபோயின. நீதான் என் உசுரு என்று யாரும் இன்று சொன்னால் அவன் கதி என்னவாகும் என்பது இன்றைய தலைமுறையினரை அறிந்தவர்களுக்குத் தெரியும். இதற்கு நடுவில் பாய் பெஸ்டிகள் வேறு தலைமுடியை சிலுப்பிக்கொண்டு நாங்கல்லாம் வேற மாதிரி என்று திரிகிறார்கள்.

இந்த தலைமுறை காதலிக்கவே செய்யாதா? அதெப்படி காதலிக்காமல் இருக்க முடியும். உடலில் இன்னும் ஈஸ்ட்ரோஜென் சுரந்துகொண்டுதானே இருக்கிறது. காதலை வெளிப்படுத்தும் விதங்களில், அதைப் பற்றிய பார்வையில்தான் மாற்றங்கள். ஒருதரப்பில் எனக்கில்லையென்றால் வேறு யாருக்குமில்லை என்று அமிலக்குப்பியை கையில் வைத்தபடி திரிந்தவர்களின் கதையும் உண்டு. காதலனுக்காக கணவனையும் பிள்ளைகளையும் கொலை செய்தவர்களும் உண்டு. இதுபோன்று தீவிரக் காதல்கள் எல்லாக் காலங்களிலும் உண்டுதான். சந்திப்பதற்கும் பேசுவதற்குமான தடைகளை மெய்நிகர் வழிகள் இல்லாமல் ஆக்கிய பிறகு சந்திப்பதும் பேசுவதுமே சமயங்களில் ‘பிரேக் அப்’புக்கு வழி வகுத்துவிடுகிறது.

எக்காலத்திலும் காதலில் சவாலாக விளங்குவது பெண்களிடம் சம்மதம் பெறுவதுதான். காதலனின் சம்மதம் பெற வேண்டி விடலைக் கல்லை தூக்கிச் சுமந்த மங்கையரின் கதையை யாரும் கேட்டதுண்டா? காதலுக்காக வாடிவாசல் விட்டு சீறிப் பாயும் காளைகளின் திமில் பற்றித் தாவியோடிய மறத்தமிழர்கள் பாவம்தான். ஒருதலைராகம் பாடி உயிர் துறந்த பின்னரே பல சமயம் காதலைச் சொல்லத் தெரிந்திருக்கிறது காதலிகளுக்கு.

காதலுக்காக பொன்முகலியின் கவிதைப் பெண் விதிக்கும் நிபந்தனைகள் மிகச் சுலபமானவை. தொடக்கத்திலேயே பெரும் நம்பிக்கையைத் தருகிறார் அவர். ‘என்னைக் காதலிப்பது மிகச் சுலபம்’ என்று சொல்லும்போதே எத்தனை ஆசுவாசமாயிருக்கிறது. இந்தக் காலத்தில் ஒருத்தி இப்படியும் சொல்ல முடியுமா? இதில் எதுவும் வில்லங்கம் இருக்குமோ என்று சந்தேகம் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அடிபட்ட இதயத்துக்கு எதைக் கண்டாலும் பயம்.

எடுத்தவுடன் சாப்பிட்டியா? என்று கேட்பவர்களை, “பத்திரமாக இரு” என்பவர்களை, வாகனம் வரை வந்து வழியனுப்புவர்களை நான் காதலித்துவிடுவேன் என்று சொல்லும்போது, இது என்ன பெரிய விஷயமா? என்றுதான் நினைக்கத் தோன்றும். எளிமையான எதிர்பார்ப்புகள்தான். குற்றம் சொல்வதற்கு சிறிதும் இடமில்லை. யாரும் மிகச் சாதாரணமாக நிறைவேற்றக்கூடிய அன்றாட காரியங்கள்தான். நண்பர்களிடம், உறவுகளிடம்கூட இவ்வாறு நடந்துகொள்ள முடியும்தானே. என்ன அதிசயம் உள்ளதென்று இவற்றை காதலுக்கான தகுதிகளாக சொல்லவேண்டும்? இந்தப் பெண் தீவிரமானவர்தானா? காதலின் ஆழமும் அர்த்தமும் தெரிந்தவர்தானா? புரிந்துகொள்ள தடுமாறும் கணத்தில் அடுத்த வரியைச் சொல்கிறார்.

 

என் உடலுக்குள் துள்ளும்

சின்னஞ் சிறுமியின் தலையில்

புன்னகையோடு முத்தமிடுகிறவர்களை

 

காதலிப்பேன் என்கிறார் இப்போது. சிக்கல் தொடங்கிவிட்டது. இவரும் விடலைக் கல்லைச் சுமக்கச் சொல்லும் வீரப் பரம்பரையில் வந்தவர்தான்போல. ஒரே வரிதான். திரும்பத் திரும்ப படிக்கவேண்டியிருக்கிறது. ‘உடலுக்குள் துள்ளும் சிறுமி’யைச் சொல்கிறார். இல்லை, ‘சின்னஞ்சிறுமி’யைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  பருவந்தோறும் தக்க மாற்றங்களை ஏற்கிறது உடல். எலும்பும் தசையும் சேர்ந்து திரண்டு உருக்கொண்டு வளர்கிறது. வளருந்தோறும் உடல் கவனத்தை ஈர்க்கிறது. சுய கண்காணிப்புக்கும் உள்ளாகிறது. புறத்தில் நிகழும் இந்த மாற்றங்கள் அகத்தையும் தக்கபடி வனைகிறது. பார்வைகளை சந்தேகம் கொள்கிறது. தொடுகைகளை கண்காணிக்கிறது. நோக்கங்கள் பற்றி எச்சரிக்கை கொள்கிறது. அதுவரை மாசற்ற கேண்மை சூழ் அழகுடன் விளங்கிய உலகம் கருப்பு வெள்ளையாய் பகுக்கப்பட்டுவிடுகிறது. ஐம்புலன்களால் அறிபடும் உலகை புறாக் கூண்டுகளுக்குள் தொகுக்கத் தொடங்கிவிடுகிறோம்.  நமக்குள் இருந்த குழந்தையும் சிறுமியும் இந்த விளையாட்டு புரியாமல் அவரவர் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கிறார்கள், தற்காலிகமாய். ஒடுங்கிக் கிடக்கும் அவர்கள் ஏதேனும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் குதூகலத்துடன் வெளிப்படுவார்கள். புறஉலகின் கணக்குகளால், தந்திரங்களால் கறைபடாத தூய அந்த நிறைவைத் தொட்டு மீளும் கணம் மீண்டும் பிறந்ததுபோல் கிளர்ச்சி கொள்கிறார்கள். துள்ளும் சிறுமியின் தலையில் புன்னகையுடன் முத்தமிடத் தெரிந்தவர்கள் தந்தையருக்கு நிகரானவர்கள். தயாவான்கள். உண்மையில் காதலிக்கத் தகுந்தவர்கள்தான்.

 

அவ்வாறான மேன்மை கொண்டவனா என்று ஆழ்ந்து நான் யோசிக்கும்போது மிக எளிமையாய் அடுத்த சில தேவைகளைச் சொல்கிறாள் கவிதைப் பெண்.

 

பிறகு

நான் விளையாட ஒரு கடற்கரையை

பசியாற சில மீன் துண்டுகளை

கூந்தலுக்குள் மறைய ஒரு சூரியனை மட்டுமே

அவர்கள் அளித்தால் போதும்.

விளையாட ஒரு கடற்கரையையும் பசியாற சில மீன் துண்டுகளையும் எல்லா நேரத்திலும் எல்லோராலும் அளித்துவிட முடியாது. ஆனால், நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்றே தோன்றும். இந்த இடத்தில்தான் வில்லங்கம் எழுகிறது. ‘கூந்தலுக்குள் மறைய ஒரு சூரியன் மட்டும்’ கொடுக்கவேண்டும் என்றால் அது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதல்லவா? மனிதகுல வரலாற்றில் காதலுக்காக இப்படியொரு காணிக்கை இதுவரை கேட்கப்படவுமில்லை, கொடுக்கப்படவுமில்லை. அதிலும் வேண்டுகோளின் அல்லது நிபந்தனையின் இறுதியில் இட்டிருக்கும் சொல்லான ‘மட்டுமே’ என்பதில் தொனிக்கும் அப்பாவித்தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. ‘சூரியனை மட்டுமே’ அளித்தால், காதலித்து விடலாம், ஒன்றும் சிரமமில்லை.

நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அவசரமாய் விலகிப் போக நினைப்பவர்கள் சற்றே நிதானமடைந்து யோசிக்கலாம். இப்படியெல்லாம் காதலிக்க வேண்டிய அவசியமில்லை என்று மனம் சோர்ந்துவிடக் கூடாது. காதலெனும் மாபெரும் அனுபவத்தை அடையும் பாதையில் சோதனைபோல இவ்வாறான அபத்தங்களைச் சந்திக்கத்தான் வேண்டும்.

உடலில் துள்ளும் சிறுமியை அடையாளங்கண்டு தலையில் முத்தமிடத் தெரிந்தவனுக்கு, அவள் கூந்தலில் மறையும் ஒரு சூரியனைக் கண்டுபிடிப்பது முடியாதா என்ன? விளையாடுவதற்கு கடற்கரையை அளிக்க முடிந்தால், அதில் உதித்து மறையும் சூரியனைத் தரமுடியாமல் போகுமா? கவிதைப் பெண் அப்படியொன்றும் அநியாயமாய் கேட்டுவிடவில்லை. அதே கடல், அதே கரை, அதில் துள்ளும் மீன்கள், அங்கேதான் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள். சூரியனும் அங்குதான் உதித்து மறைகிறான். இதையெல்லாவற்றையும் நிச்சயம் தரமுடியும். அவள் உடலுக்குள் துள்ளும் சின்னஞ்சிறுமியை அடையாளம் காண முடியுமென்றால், அந்த அளவுக்கு நீ தகுதி வாய்ந்தவனென்றால் நிச்சயமாய் தர முடியும்.

0

 

என்னைக் காதலிப்பது

மிகச் சுலபம்.

எடுத்தவுடன் “சாப்பிட்டியா?”

என்பவர்களை

“பத்திரமாக இரு” என்பவர்களை

வாகனம் வரை வந்து வழியனுப்புவர்களை

என் உடலுக்குள் துள்ளும்

சின்னஞ் சிறுமியின் தலையில்

புன்னகையோடு முத்தமிடுகிறவர்களை

நான் உடனே உடனே காதலித்து விடுவேன்.

பிறகு

நான் விளையாட ஒரு கடற்கரையை

பசியாற சில மீன் துண்டுகளை

கூந்தலுக்குள் மறைய ஒரு சூரியனை மட்டுமே

அவர்கள் அளித்தால் போதும்.

 

பொன்முகலி

 0

( ஆவநாழி, ஆகஸ்டு 2025 இதழில் வெளியானது )

Sunday, 17 August 2025

சிந்திக்கத் தூண்டும் மனநல அறிக்கை - அய்ஃபர் டுன்ஸின் நாவல்

 


துருக்கிய நாவலாசிரியர் அய்ஃபர் டுன்ஷின் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’ தமிழில் சுகுமாரன், ஷாலினி பிரியதர்ஷினி ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அய்ஃபர் டுன்ஷ் தமிழுக்குப் புதியவரல்ல. அவரது நெடுங்கதை அல்லது குறுநாவல் ‘அஸீஸ் பே சம்பவம்’ சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியாகியுள்ளது. தவிர, காலச்சுவடு இதழில் அவரது சிறுகதையொன்றும் இடம்பெற்றது.

துருக்கியைச் சேர்ந்த நாவல்களும் நமக்குப் புதிதல்ல. அண்மைக் காலத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த நாவல்கள் தமிழ் மொழியாக்கத்தில் தொடர்ந்து நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. ஓரான் பாமுக்கின் நாவல்களை ஜி.குப்புசாமி மொழிபெயர்த்து வருகிறார். ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ‘இஸ்தான்புல்’, ‘வெண்ணிறக் கோட்டை’ ஆகிய நாவல்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. ‘கருப்புப் புத்தகம்’ நாவலை அகிலன் எத்திராஜ் மொழியாக்கம் செய்துள்ளார்.

துருக்கியின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான அகமத் தன்பினாரின் முக்கியமான நாவல் ‘நிச்சலனம்’ தி.அ.ஸ்ரீநிவாசனின் அபாரமான மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. அவரது இன்னொரு நாவலான ‘நேர நெறிமுறை நிலைய’த்தை அகிலன் எத்திராஜ் மொழிபெயர்த்திருந்தார்.

துருக்கி நெடிய வரலாற்றையும் தொன்மையான கலாச்சாரத்தையும் கொண்டது. பாரம்பரியமிக்க இந்த நாட்டின் பூகோள அமைப்பும் சுவாரஸ்யமானது. சற்று சிக்கலானதும்கூட. துருக்கியின் இசை மரபு வளமானது. தமிழ்க் கவிதையைப் போலவே துருக்கியின் கவிதையும் நாட்டார் கதைப் பாடல், பொம்மலாட்டம், மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக் கவிதை என பல்வேறு வகைமைகளையும் போக்குகளையும் கடந்து வந்த ஒன்று. நஸீம் ஹிக்மத்தின் அரசியல் கவிதைகள் உலகளவில் புகழ்ப் பெற்றவை.

துருக்கிய சினிமாவை உலக அரங்கில் முக்கியத்துவம் பெறச் செய்த இயக்குநர் நூரி பில்கே சிலான். அவரது ‘த்ரீ மங்கீஸ்’, ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் அனடோலியா’, ‘விண்டர் ஸ்லீப்’ ஆகிய படங்கள் உலகளவில் கவனிக்கப்பட்டவை.

துருக்கிய தேநீரும் உணவு வகைகளும் ‘ராக்கி’ எனும் மதுவகையும் அந்நாட்டின் பெருமைகளாக விளங்குகின்றன.

1964ஆம் ஆண்டு பிறந்தவர் அய்ஃபர் டுன்ஸ். துருக்கியின் கருங்கடல் பகுதியைச் சேர்ந்தவர் அவருடைய அம்மா. அப்பா பல்கேரியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர். எனவே, குழந்தைப் பருவம் முதலே இரு வேறு கலாச்சாரங்களின் கலவையான அனுபவங்கள் வாய்த்தன. பல்வேறு கலாச்சார அம்சங்களின் வண்ணங்களையும், சர்ச்சைகளையும், குரல்களையும் கொண்டிருந்த புராதனமான ஒடாமன் பேரரசைப் போன்றே அமைந்திருந்தது அவருடைய குடும்பம். இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்ற அய்ஃபர் டுன்ஸ் பத்திரிகையாளராகவும் துருக்கியின் முன்னணி பதிப்பகம் ஒன்றின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்ட அவருக்கு நாவல்கள் சிறுகதைகளை எழுதுவது மட்டுமே அல்ல குறிக்கோள். புனைவின் வழியாக சமூகப் போக்குகளையும் கால மாற்றங்களையும் எளியோரின் வலிகளையும் மனிதர்களின் பாசாங்குகளையும் அம்பலப்படுத்தவே விரும்புகிறார். ‘வாழ்க்கை எப்போதுமே கலையைத் தோற்கடித்தபடி இருக்கிறது’ என்பது அவரது நம்பிக்கை. ஆனால், அவ்வாறான வாழ்க்கையை மீறிச் செல்லும் எழுத்துகளை எழுதவே தொடர்ந்து அவர் முயல்கிறார்.

’அஸீஸ் பே சம்பவம்’ போலவோ அல்லது அவரது இன்னொரு நாவலான ‘பச்சை தேவதையின் கதை’ போன்றோ எளிமையானதல்ல ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை.’ களம், மொழி, சித்தரிப்பு என அனைத்திலும் முற்றிலும் மாறுபட்டது.



துருக்கியின் வடக்குப் பகுதியில், கருங்கடல் கரையில் உள்ள சிறிய நகரத்தில் அமைந்த மனநல விடுதிதான் இதன் களம். கடற்கரையில் அமைந்திருந்தபோதும் இந்த விடுதியின் ஜன்னல்கள் எவையுமே கடலை நோக்கி அமைந்தவை அல்ல. இந்த மனநல விடுதியில் சிகிச்சை பெறுவோர், மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலிகள், உடன் தங்கியிருக்கும் மனிதர்கள் ஆகியோரே இந்த நாவலின் கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதை. ஆனால், ஒன்றுக்கொன்று பின்னிப் பின்னித் தொடர்ந்து கதைகள் வளர்ந்தவண்ணமே உள்ளன. இந்தக் கதைகள் சொல்லப்படும்போதே அவை துருக்கியின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் பயணம் செய்கின்றன. சிற்றூர்களில் உள்ள பெட்டிக்கடைக்காரர்களிலிருந்து அரசாங்கப் பணியாளர்கள், அதிகாரிகள், கலைஞர்கள் என்று பல்வேறு மனிதர்களின் கதைகளைச் சொல்கிறன்றன. கூடவே இதன் சம்பவங்கள் வெவ்வேறு காலங்களிலும் நிகழ்கின்றன. அவற்றுள் சில துருக்கியின் வரலாற்று நிகழ்வுகள், சமூக அரசியல் சம்பவங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவை.  ஒவ்வொரு சம்பவத்துக்குப் பிறகும் மறுபடி மனநல விடுதிக்கு வந்து சேர்கிறது. அந்த வகையில், இந்த நாவலின் களமும் பயணமும் அய்ஃபர் டுன்ஷ் கண்ட துருக்கியின் மனித மனங்களினூடான பயணம் என்று கருதலாம். பல்வேறு பகுதிகளின் வழியே வெவ்வேறு காலத்தில் நடக்கும் இந்த சம்பவங்களுக்கேற்ப இதன் சித்தரிப்பிலும் மொழியிலும் தகுந்த மாற்றங்களைக் காணமுடிகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும் காதில் விழும் குரல்களைக் கேட்டபடி, அன்றாடங்களை கவனித்தபடி நடந்தே சுற்றிப் பார்க்கும் பழக்கம் கொண்டவர் அய்ஃபர் டுன்ஸ் என்பதால் சொற்களின் வழியே கதாபாத்திரங்களின் அறியாத பக்கங்களை எழுதிக் காட்ட முடிந்திருக்கிறது.

இந்தக் கதைகளை வாசித்து முடிக்கும்போது யார் மனநலம் குன்றியவர்கள், யாருக்கு சிகிச்சை தேவை, தேவையில்லை என்ற குழப்பம் எழுகிறது. சரியான மனநலம் என்பது எது என்ற கேள்வியும். இவ்வுலகில் எல்லோருமே ஏதோவொரு விதத்தில், அளவில் மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான் என்ற எண்ணமும் உறுதிப்படுகிறது.

நோய்மைகள் பொதுவாகவே துயரமானவை – பல்வலியோ, தலைவலியோ. அவற்றுக்கான சிகிச்சைகள் தெளிவானவை. இதைச் செய்தால் இது தீரும் என்ற திட்டவட்டமான தீர்வுகளைக் கொண்டவை. ஆனால், மனநோய் அவ்வாறானதல்ல. அதைத் துல்லியமாகக் கண்டறிவதும் அதற்கு சிகிச்சையளிப்பதும் எளிதானதல்ல. ‘நோயாளி’ தன்னை மிகச் சரியானவராக இயல்பானவராகவே கருதுவார். தன்னைச் சுற்றியுள்ள உலகமே சரியில்லாதது என்று யோசிப்பார். சுமுகமான இயல்பான உலகுக்கும் அவருக்குமான இடைவெளி புரிந்துகொள்ள முடியாதது. உத்தேசமாகப் புரிந்துகொண்டு ஊகத்தில் சிகிச்சை தரலாம். எனவே, நோய்களில் ஆகத் துயரமானது மனநோய். நோயாளியின் உறவினர்களுக்கு, உடனிருப்போர்க்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவது. அவ்வாறான ஒரு சிக்கலான நிலையைப் பற்றிய முழு நாவல் என்று பார்க்கும்போது சிறிய தயக்கம் எழும். இதை வாசிப்பதை சற்று தள்ளிவைக்கலாம் என்று தோன்றும். ஆனால், உண்மையில் இந்த நாவல் அத்தகைய துயரத்தின் சாயல்கள் சிறிதுமின்றி மனப் பிறழ்வு நிலையின் கொண்டாட்டமான தருணங்களையே அதிகமும் சித்தரிக்க முயன்றுள்ளது. நரம்புக் கோளாறு, OCD, மனச் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உலகத்தையும் நடவடிக்கைகளையும் நகைச்சுவை தொனிக்க சித்தரித்துள்ளன. அந்த மனநோய் விடுதியை ஒரு திருவிழாவினைப் போல சித்தரித்திருப்பதால் இந்த நாவலை ‘கார்னிவலெஸ்க்’ நாவல் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனநல விடுதியை மையமாகக் கொண்ட நாவலென்றபோதும் இதுவொரு அரசியல் நாவலும்கூட. இதில் காட்டப்பட்டுள்ள மனநல விடுதி என்பது ஒட்டுமொத்த துருக்கிதான் என்ற அரசியல் பார்வைக்கும் இடம் உள்ளது.

இந்த நாவலை வாசிக்கும்போது, மனப் பிறழ்வை களமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட புனைவுகள் சில நினைவுக்கு வந்தன. கோபி கிருஷ்ணனின் ‘டேபிள் டென்னிஸ்’, ‘உணர்வுகள் உறங்குவதில்லை’ எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’, நகுலனின் ‘நினைவுப் பாதை’ ஆகியவற்றை குறிப்பிடலாம்.  

கதைக்களம், கதாபாத்திரங்கள், மொழி என யாவுமே சவாலானதாய் அமைந்துள்ள இந்த நாவலை தமிழில் வெகு இயல்பாக வாசிக்கும்படியாக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ‘அஸீஸ் பே சம்பவம்’ நாவலை அழகுற மொழியாக்கம் செய்த சுகுமாரன், அந்த நாவலுக்கு நேர்மாறான ஒரு போக்கைக் கொண்ட, சிக்கலான இந்த நாவலிலும் தன் அர்ப்பணிப்பையும் மொழித்திறனையும் முழுமையாக செலுத்தியிருப்பதன் பலனை வாசகர்கள் உணர முடிகிறது. இவ்வாறான ஒரு புனைவை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதே சிரமம். ஆனால், தன் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் மொழிபெயர்த்து முடித்திருக்கும் சுகுமாரனின் மனோதிடத்தை பாராட்டவேண்டும். தகுந்த நேரத்தில் அவரது பணியின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு செவ்வனே பங்களித்திருக்கிறார் ஷாலினி பிரியதர்ஷினி.

அளவில் பெரிய நாவலென்றாலும் கதை அமைப்பு, விதவிதமான விநோதமான கதாபாத்திரங்கள், மொழியாக்கத்தின் நேர்த்தி ஆகியவற்றின் காரணமாக ஊன்றி வாசிக்க முடியும், இந்த வரலாற்று அறிக்கையை. மனப்பிறழ்வுக்கு உள்ளானவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்வது சிரமம். புறத்தில் சிக்கலானதாகவும் தொல்லைகளை விளைவிப்பதாகவும் இருந்தபோதும் அவர்கள் ஒவ்வொருவரின் அந்தரங்க உலகம் நேரடியாகவும் தூயதாகவும் இருக்கும் என்றுதான் இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது எண்ணத் தோன்றியது.  

( காலச்சுவடு பதிப்பகம், ஜூலை 2025, 512 பக்கங்கள், விலை ரூ.650/- )  

Wednesday, 13 August 2025

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025

 



புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. தென்னிந்திய மொழிகளுக்கான இலக்கியச் சங்கமமான இவ்விழாவில் இந்த ஆண்டு ஐந்தாவது மொழியாக மராத்தியும் சேர்க்கப்பட்டிருந்தது. முதலாம் ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் சில கூடுதல் அம்சங்களுடன் மெருகேயிருந்தது.

எட்டு வெவ்வேறு அரங்குகளில், ஐம்பது நிமிடங்கள் கால அளவுகொண்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணமே இருந்தன. சிறிதும் பிசிறில்லாத எதிலும் எங்கும் குழப்பமில்லாத கச்சிதமான ஒருங்கிணைப்பு. தென்னக மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், கலைத்துறை ஆளுமைகள், பதிப்பாளர்கள் என 400க்கும் அதிகமான உரையாளர்கள் பங்கேற்றிருந்தனர். அனைவருக்குமான தங்குமிடமும் உணவும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட பெங்களூர் கோரமங்களா, புனித ஜான் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புத்தக வெளியீடுக்கென்று அமைக்கப்பட்டிருந்த ‘அனாவரானா’ அரங்கில் அரைமணி நேரத்துக்கொரு புத்தகம் வெளியிடப்பட்டது. மரத்தடியில் எழுத்தாளரைச் சுற்றி அமர்ந்து உரையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘முகாமுகம்’ அரங்கில் அரை மணி நேரத்துக்கொரு எழுத்தாளரை வாசகர்கள் சந்திக்க முடிந்தது. விவேக் ஷான்பாக், ஜயந்த் காய்கினி, ரூபா பை, வோல்கா, ஜெயமோகன், அடூர் கோபாலகிருஷ்ணன், டி எம் கிருஷ்ணா, பால் சக்காரியா, சல்மா, மிருணாளினி, இமையம், மனு பிள்ளை, பானு முஷ்தாக், என்.எஸ்.மாதவன், கே.ஆர்.மீரா, நேமிசந்த்ரா, பெருமாள் முருகன், வசுதேந்த்ரா என பலரையும் வாசகர்கள் சந்தித்து உரையாடினார்கள். புத்தகங்களில் கையெழுத்துப் பெற்றனர். மனு பிள்ளையிடம் கையெழுத்து வாங்க இளைஞர்கள் பலர் வரிசையில் நின்றிருந்தனர்.

நாவல், சிறுகதை, மொழியாக்கம், சங்க இலக்கியம், தமிழ் இணைய இதழ்கள், தமிழகச் சிற்பங்கள், நாட்டார் கலைகள், தமிழ்ச் சமூகவியல், திரைப்படங்கள் என அமைந்திருந்த தமிழ் அரங்குகளில் பங்கேற்றவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் சுருக்கமாகவும் செறிவாகவும் உரையாற்றினர். அநேகமாக எல்லா அரங்குகளுமே நிறைந்திருந்தன.



சீரிய உரையாடல்களுக்கு நடுவில் சத்தமும் மகிழ்ச்சியுமாக அமைந்திருந்தது சிறார் இலக்கியத்துக்கான ‘சின்னர லோகா’ அரங்கு. கதைகள், ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுகள் என பல்வேறு அம்சங்களுடன் களைகட்டியிருந்தது.

இந்த விழாவின் இன்னொரு சிறப்பம்சம் புத்தகக் காட்சி. கடந்த ஆண்டு ஆங்கிலம், கன்னடம் புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்த அரங்கில் இம்முறை காலச்சுவடு, டீசி புக்ஸ், என்.பி.டி ஆகிய பதிப்பகங்களும் இடம் பெற்றிருந்தன. விழாவில் பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வெவ்வேறு பதிப்பகங்களிலிருந்து கேட்டுப் பெற்று அரங்கில் இடம்பெறச் செய்திருந்த ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் முயற்சி குறிப்பிடத்தக்கது.

புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் பிரவீன் காட்கிந்தி, மேடை நாடகப் பாடல்களுக்காக இந்திய அளவில் புகழ்பெற்ற ஜெயஸ்ரீ குழுவினர், ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் கணபதி பட் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று. சனிக்கிழமை மாலை, வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, இருக்கை ஏதும் மிச்சமின்றி நிறைந்திருந்த அரங்கில் டி.எம்.கிருஷ்ணா தந்த இசை அனுபவம் இந்த விழாவின் உச்சம். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்திருந்தது துரியோதனவதத்தை சித்தரிக்கும் ‘கதகளி’ ஆட்டம்.


இந்த இலக்கிய விழாவையொட்டி கன்னட எழுத்தாளர்களுக்காக நடத்தப்பட்ட நாவல் போட்டியிலும் சிறுகதைப் போட்டியிலும் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2025ஆம் ஆண்டுக்கான புக் புரம்மா இலக்கிய விருது, கே.ஆர்.மீராவுக்கு வழங்கப்பட்டது.

‘தென்னகத்தின் ஆன்மா’ என்ற உபதலைப்பைக் கொண்டிருக்கும் இந்த இலக்கிய விழா இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அனைவரும் பங்கேற்க விரும்பும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக அமைந்துள்ளது. முறையான திட்டமிடல், கச்சிதமான ஒருங்கிணைப்பு, நேர்த்தியான செயலாக்கம் என இந்த விழாவை மூன்று நாட்களும் வெற்றிகரமாக நடத்திய பெருமை விழாவின் இயக்குநர் சதீஷ் சப்பரிகேவையும் அவரது குழுவினரையும் சேரும். தொடக்க விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று விழாவை வெற்றிகரமாக நடத்தக் கேட்டுக் கொண்டு இரண்டே நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார் சதீஷ் சப்பரிகே. விழாவின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பாவண்ணன் அழைப்பாளர்களின் வருகையை உறுதிப்படுத்துவதும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு உரையாளர்கள் அரங்கில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாக பரபரப்பாகவே இருந்தார். கிடைக்கும் நேரத்தில் உரைகளை குறிப்பெடுத்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை.

கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான அனைத்தையும் உலகளாவிய ஒரே மின்தளத்தில் ஒருங்கிணைக்கும் புக் பிரம்மா அமைப்பின் நிறுவன இயக்குநர் சதீஷ் சப்பரிகே. கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவரது ‘விர்ஜின் மொஜிட்டோ’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘கன்த்ருக்’ எனும் நாவலும் வெளியாகியுள்ளன. திறன்வாய்ந்த ஊடகவியலாளரான இவருக்கு அச்சிதழ், தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு.

புக் பிரம்மா இலக்கிய விழாவின் மூன்று நாள் நிகழ்ச்சிகளும் https://bookbrahmalitfest.com/ என்ற தளத்தில் காணொளிகளாக பதிவேற்றப்பட்டுள்ளன.

இதமான குளிரும் அவ்வப்போது மழையும் ஈரமுமான மரங்கள் அடர்ந்த வளாகம். நினைத்த நேரத்தில் தேநீர் பருகலாம். கடைகளுக்கு நடுவே இடப்பட்ட மர பெஞ்சுகளில் அமர்ந்து அரட்டையடிக்கலாம். சூடாக விவாதிக்கலாம். நண்பர்களுடன் காலாற நடந்து இலக்கியம் பேசலாம். இசையையும் நாடகத்தையும் ரசிக்கலாம். புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கலாம். புகைப்படம் எடுக்கலாம். பிறமொழி அரங்குகளில் நுழைந்து அவர்களது உலகில் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். வாசித்து வியந்த எழுத்தாளர்களிடம் உரையாடலாம், கேள்வி கேட்கலாம். நெடுநாள்களுக்குப் பிறகு சந்திக்க வாய்த்த நண்பர்கள், எழுத்தாளர்களுடன் அறையில் அமர்ந்து நள்ளிரவு வரை பேசலாம்.  உற்சாகமும் களிப்புமான மூன்று நாள்கள் முடிந்து ஊருக்குப் புறப்படும்போது தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் தமிழும் ஆங்கிலமுமாய் கலந்தொலித்த அந்த வளாகம் மழை ஈரத்துடன் அமைதியில் உறைந்திருந்தது.  

வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடல் மஞ்சுநாத்தின் ‘அப்பன் திருவடி’

  வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுது...