Thursday, 19 March 2026

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

 

 



0

‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார். இந்த நாவல் இன்னொரு வகையிலும் முக்கியமானது. இன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் தீவிரமாகவும் பரவலாகவும் மொழியாக்கம் செய்துவரும் கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த முதல் நாவல் ‘காச்சர் கோச்சர்’.

0

‘ஊரு பங்கா’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியானது இந்த நாவல். ‘காச்சர் கோச்சர்’ நாவலைப் போலவே பெங்களூரையும், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் களமாகக் கொண்டிருக்கிறது.

ஐந்து படலங்களைக் கொண்ட இந்த நாவல் வாழ்க்கையைக் குறித்த இரண்டு தலைமுறைகளின் அணுகுமுறையை நுட்பமாக விவாதித்திருக்கிறது.

இலட்சியவாதமே வாழ்வென கொண்டிருந்த ஒரு தலைமுறையே மதிப்பீடுகளை உருவாகிக் கொடுத்திருக்கிறது. சுமுகமான சமூக வாழ்வுக்கான அடிப்படைகளை வகுத்துத் தந்திருக்கிறது. அதற்காக கடுமையான தடைகளையும் சிக்கல்களையும் கடந்து வந்திருக்கிறார்கள் இலட்சியவாதிகள். வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறார்கள். ஆனால், லட்சியத்தை எட்டிய பிறகான சூழலில் அவர்கள் பலசமயங்களில் தேவைப்படுவதில்லை. பொருந்திப்போக முடியாதவர்களாய், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாய் ஒதுக்கப்படுகிறார்கள். தங்களது இடம் என்ன என்று தெரியாமல் போகும்போது அவர்கள் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறார்கள். வரலாற்றில் அவர்களது இடம் முக்கியமானது. ஆனால், நடைமுறை சமூகத்துக்கு அவர்கள் தேவைப்படாதவர்கள். இலட்சியவாதத்தின் கோட்பாடுகளும் யதார்த்தத்தின் அனுசரித்தலுக்குமான பலப்பரீட்சையில் எப்போதும் கைதணிந்து ஓய்வது இலட்சியவாதமே என்பது வரலாற்றுத் துயரம். இத் துயரத்தின் அடித்தளத்தில் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் இன்றைய நவீன நடைமுறை வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது இந்த நாவல்.

குடும்ப அமைப்பு பெரும் மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கும் காலம் இது. இன்றைய புதிய தலைமுறையினர், ஜென் ஸீயினர், திருமண உறவு சார்ந்து முக்கியமான சில அடிப்படை கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெங்களூர் போன்ற பெருநகர வாழ்வின் பின்னணியில் இந்தக் கேள்விகள் மேலும் தீவிரம் கொள்கின்றன. ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான உறவு இந்தப்  பின்னணியில் எப்படி பரிணாமம் கொள்கிறது, வளர்கிறது, முடிகிறது என்பது இந்த நாவலின் இன்னொரு முக்கியமான சரடு. 

 கிராமத்துப் பின்னணியைக் கொண்ட நடுத்தர வயது ஆணின் சிக்கல் ஒழுக்க மரபுகளாலான கயிறு அவன் கையை எப்போதும் பிணைத்திருப்பதுதான். ‘தெங்கனகேரி மகிமை’ என்று நாவலில் சுட்டப்பட்டிருக்கும் அந்தக் கயிறு, ஒரு இளம்பெண்ணின் வருகையால்,நட்பால், இருப்பால், உறவால் அறுபடுகிறது. மனைவி, பிள்ளை, கௌரவமான வேலை என்று சமூக அந்தஸ்துடன் வாழும் அவனுக்கு இளம்பெண்ணின் நெருக்கமும், இளமையும் தேவைப்படுகிறது. தயக்கங்களும் தடுமாற்றங்களும் இருந்தபோதும் அதற்காக அந்தக் கயிறைத் துண்டிக்காமல் இருக்க அவனால் முடிவதில்லை. ஒழுக்கம் சார்ந்த குழப்பத்துக்கும், ஒருவகை அச்சத்துக்கும், இளம் பெண்ணின் மீதான இச்சைக்குமிடையிலான அவனது ஊசலாட்டத்தில் பெண்ணுடலே வெல்கிறது. அவ்வளவாக பரிச்சயமில்லாமல் அறிமுகமான முதல் சந்திப்பிலேயே தன்னை பியர் குடிக்க அழைக்கும் பெண், அவனுள் ஊறிக்கிடக்கும் தெங்கனேரி மகிமையின் மீது முதல் கல்லை எறிகிறாள். பழக்கம் நெருக்கமாகி நட்பாகும்போது, அவளை வசீகரிக்கவென கிராமத்துக் கதைகளைச் சொல்கிறான். கிமானி வக்கீல், சுங்காபுரர், சந்து போன்ற லட்சியவாதிகள், புரட்சியாளர்கள் பற்றிய கதைகள் அவளைக் கவர்வதற்கான தூண்டில்களாக அமைகின்றன. ஒரு நாள் பிடித்தமான கதையைச் சொன்னதற்கு பரிசாக கன்னத்தில் முத்தம் தருகிறாள். தெங்கனேரி மகிமையின் மீது விழும் வலுவான இரண்டாவது கல் இது. கதைக்கு முத்தத்தைப் பரிசாகத் தந்தவள், அவன் எழுதும் கவிதைகளுக்கு தன்னையே பரிசாகத் தருகிறாள். தயக்கங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் நடுவே துணிந்து இப்படியொரு சாகசத்தை மேற்கொண்ட நடுத்தர வயது மனிதருக்கு இதைத்தாண்டி அந்த உறவில் அடுத்த அடியை எடுத்து வைக்க பயம். வெளியே தெரிந்துவிடக்கூடாது என்கிற பதற்றம். ஆனால், இளம்பெண்ணுக்கு இது பிரச்சினையே இல்லை. இப்படி அவன் அஞ்சி நடுங்குவது அவளைச் சீண்டுகிறது. வெறுக்கச் செய்கிறது. அவனை உதறிச் செல்கிறாள். அதுவே நடுத்தர வயது குடும்பஸ்தனுக்கு பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.

மரபுக்கும் நவீனத்துக்குமான மோதல்களை பல்வேறு கதாபாத்திரங்களையும், தருணங்களையும் கொண்டு விவாதிக்கும் இந்த நாவல் ஒரு தரப்பில் லட்சியவாதம் யதார்த்த வாழ்வுடன் சமரசம் செய்து கொள்வதை பகடியாகவும் இன்னொரு பக்கம் பரிவுடனும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது. கைது செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், நெருக்கடி நிலைக்கு எதிராக திறந்த மைதானத்தில் அரசுக்கு எதிராக உரத்த விமர்சனங்களை எழுப்பும் கிமானி வக்கீலை, ‘பைத்தியங்களுக்கெல்லாம் சிறையில் இடமில்லை’ என்ற காரணத்துக்காக கைது செய்யாமல் விட்டுவிடுகிறது காவல்துறை. ஆனால், அதே சமயம் சுங்காபுரத்தார் கைது செய்யப்பட்டாரா, என்றால் அதன் பிறகு என்ன ஆனார் என்பதைப் பற்றி எந்த விடையுமில்லை.

நாவலில் இணைச்சரடுகள் சிலவும் உள்ளன. அவை இந்த விவாதத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமான சில கேள்விகளையும் எழுப்புகின்றன. கதையின் நாயகனாக வார்க்கப்பட்டுள்ள மன்மோகன் ஒரு நிறுவனத்தின் தணிக்கை அதிகாரி. தன்னுடைய இரகசியமான உறவையும் தொழில்முறை அணுகுமுறையையும் அவன் இணைத்துப் பார்ப்பதை உதாரணமாகச் சுட்டலாம். நாவலின் இறுதிப் பகுதியில் மீண்டும் சந்துவைச் சந்தித்து மது விடுதியில் நிகழும் உரையாடல் இன்னொரு உதாரணம்.

காமத்தின் இச்சைக்கு போதுமென்ற மனம் கிடையாது, மேலும் மேலும் என்று வாய்ப்புகளைத் தேடியபடியே இருக்கும். முற்றிலுமாகத் துண்டித்துவிட்ட உறவை அல்ப ஆசை, நடுத்தர வயது மன்மோகனை வீட்டின் சுற்றுச் சுவர் தாண்டி மரத்தில் ஏறி வாசலில் நிற்கச் செய்கிறது. அங்கிருந்து அவனால் வந்த வழியில் மட்டுமே திரும்ப முடியும். அது சாத்தியமா? என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது. சுவர் ஏறி அங்கிருந்து மரத்தில் தாவி உள்ளே குதித்தவனுக்கு வெளியே வரவும் தெரிய வேண்டுமல்லவா?

விவேக் ஷான்பாக் தன் புனைவுகளை வலுவான கதாபாத்திரங்களின் மூலமாகவே அடர்த்திப் பெறச் செய்வார். இந்த நாவலிலும் அபாரமான சில கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கிமானி வக்கீல், மன்மோகன், ஷமி, சுங்காபுரர் போன்ற முதன்மை கதாபாத்திரங்களுக்கு நடுவே சிறிதும் பெரிதுமான அழுத்தமான கதாபாத்திரங்களும் தனித்தன்மையுடன் இடம் பெற்றுள்ளன. கிமானி வக்கீலின் அம்மா நீலாவதியும் சதானந்த ஆசிரியரின் மனைவி ரமாவையும் உதாரணமாக கவனிக்கலாம். 

நேரடியான, சீரான கதையாக அல்லாமல் கதைக்குள் கதை, கதையை மீறிய கதை போன்ற உத்திகளால் புனையப்பட்டிருந்தபோதும் இந்த நாவல் தான் எழுப்பும் கேள்வியை தெளிவாகவும் உரக்கவும் முன்வைத்திருக்கிறது. அதற்கான பதிலை யோசிக்க வேண்டிய இன்றைய தலைமுறை, சென்ற தலைமுறையினர் உருவாக்கி வைத்திருக்கிற மதிப்பீடுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற பரிந்துரையையும் இந்த நாவல் செய்திருக்கிறது.

0

கே.நல்லதம்பியின் மொழியாக்கம் சீரான மொழிநடையுடன் இலகுவாக அமைந்திருப்பது நாவலை அணுக பெரிதும் உதவியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் கன்னட இலக்கிய உலகிலும் பொது வெளியிலும் எந்தவிதமான வரவேற்பை, விமர்சனத்தைப் பெற்றது என்பது குறித்தும் ஒரு சிறிய முன்னுரையை எழுதியிருந்தால் நாவலை மேலும் புரிந்துகொள்ள துணைநிற்கும்.

0

நிழல்கள் மாறும் நொடி – விவேக் ஷான்பாக் – தமிழில் கே.நல்லதம்பி

ஸீரோ டிகிரி பதிப்பகம். அக்டோபர் 2025

புத்தனைத் தேடும் சித்தார்த்தன் - காந்த்ரூக் - சதீஷ் சப்பரிகே

 


0

பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலமே ஒரு மனிதனின் வாழ்க்கை. இந்த இரு எல்லைக்கும் உட்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அறுதியிட்டு வரையறுக்கும் கருவிகளோ குறைந்தபட்ச அளவீடுகளோ இதுவரை உருவாகவில்லை. கல்வி, வேலை, தொழில், வியாபாரம், பொருளாதார நிலை, குடும்பம், உறவுகள், சமூக அந்தஸ்து, ஜாதி, பதவி, அதிகாரம், அரசியல் என்று தனிப்பட்ட முறையிலும் பொதுவான நிலையிலும் ஒரு மனிதனை வகைப்படுத்த எண்ணற்ற அளவுகோல்கள் இருந்தபோதும் இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் வாழ்க்கையை அனைவரும் ஒப்புக்கொள்ளும்படி அளந்து, தகுதிப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. மேலும் இவை அனைத்துமே புறப் பார்வையிலிருந்து உருவாகியிருக்கும் அளவுகோல்களே. இவற்றுக்கு இணையாகவோ அல்லது மேலானதாகவோ குறிப்பிட்ட மனிதனின் அகத்துள் தனக்கேயான அளவுகோல்களும் தீர்மானங்களும் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கொண்டு தன்னைத் தானே அவன் எவ்வாறு மதிப்பிடுகிறான் என்பதும் முக்கியம். ஆனால், பலசமயங்களில் தன் அக மதிப்பீடுகளை ஒருவன் வெளிப்படையாக எவரிடமும் எதன்பொருட்டும் முற்றிலுமாக திறந்து காட்டுவதில்லை.

தனிப்பட்ட வாழ்விலும் வியாபாரத்திலும் தோல்வியைச் சந்திக்க நேரும் இளைஞன் சித்தார்த்தன் ஹொசமனே அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு, தன்னைத் தானே அறிந்துகொள்ளும் பொருட்டு இமயத்தில் கால்பதிக்கிறான். நவீன கணினித்துறையில் உலகையே வியக்க வைத்த ஒரு இளைஞன், யாருமே அடையாளம் காணாத ஒரு பிரதேசத்தில் தன்னிச்சையாக மலையேறுகிறான். கிட்டத்தட்ட ஒரு மாத காலப் பயணத்தில் அதுவரையிலான தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான். இதுவரை என்ன நடந்தது, எதை சாதித்தேன், எதை இழந்தேன், இனி என்ன செய்யப் போகிறேன் என்று அசைபோட்டபடியே அந்தப் பயணத்தில் தற்காலிகமாக வாய்க்கும் நபர்களுக்கு நடுவே இமயத்தின் சவாலான மலையேற்றப் பாதையில் ஏறி இறங்குகிறான். 420 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் சுருக்கம் இதுதான்.

இது சித்தார்த்தனின் கதையாக மட்டும் நின்றிருந்தால் ஏற்கெனவே எழுதப்பட்ட இதுபோன்ற நாவல்களில் ஒன்றாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், ‘காந்த்ருக்’ சித்தார்த்தனின் பயணத்தினூடே தன்னல நோக்குடனான ஒருவனின் வாழ்க்கையும் பொதுநல நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையும் எத்தகைய சவால்களை சந்திக்க நேர்கின்றன என்பதையும் இணைத்து விவாதித்துள்ளது. சமகால உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் அவற்றின் விளைவுகளைக் குறித்தும் தீவிரமாக அலசுகிறது. இந்த விவாதத்தின் மூலமாக தனிமனித வாழ்வுக்கும் உலகப் பொது வாழ்வுக்குமான கண்ணுக்குத் தெரியாத தொடர்பை, சமன்பாட்டைக் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளும் எழுகின்றன. தனிமனிதன் தன் லட்சியத்தை எட்டுவதும் எட்டாமலிருப்பதற்குமான தொலைவையும் சாத்தியத்தையும் நிர்ணயிப்பது உலகின் ஆற்றல்வாய்ந்த அதிகார வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் விளையாட்டுகளே என்பதையும் அழுத்தமாக விவரிக்கப்படுகிறது. அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி, நல்லுறவு, சர்வதேச ஒப்பந்தம் போன்ற சொல்லாடல்களின் பின்னணியில் ஆயுத வியாபாரம், செயற்கையாக உருவாக்கப்படும் போர் நெருக்கடிகள், மதத்தின் பேரிலான பிரிவினைகள், போதைப் பொருட்களின் சர்வதேச வலைப்பின்னல், மனிதவளங்களைக் கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்கள் என்று அனைத்து சாத்தியங்களின் ஆழங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உள்நாட்டுப்போர், இருநாடுகளுக்கு இடையிலான போர், இன ஒழிப்பு, இனத் தூய்மைவாதம், எண்ணெய் வளம், மனிதவளம் இவற்றின் பேரால் உலகெங்கும் உருவாக்கப்படும் அகதிகளைச் சுற்றி உலகெங்கும் உருவாகியிருக்கும் பெரும் அரசியலையும் அதன் பெயரிலான வியாபாரத்தையும் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும் இந்த நாவல் தெளிவாகப் பேசுகிறது. சிரியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறும் வன்முறைகளை சுட்டிக் காட்டுகிறது. இவற்றின் பெயரால் எந்தநேரமும் எங்கும் பொங்கியோடும் இரத்த வெள்ளத்தை சாட்சியாகக் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது.  

வெற்றிகரமான ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும் இளம் தொழிலதிபர் சித்தார்த் ஹொசமனே தன் தந்தையை இழந்து, தன் திறமையால் உருவாக்கிய நிறுவனத்தையும் இழந்து அதனால் ஏற்படும் மன வெறுமையின் காரணமாக தனிமையைத் தேடி இமயமலைக்கு வருகிறான். அவனது உள்ளத்துக்குள் ஆயிரம் கேள்விகள். அதுவரையிலான தனக்கு வாய்த்த உறவுகள், நண்பர்கள், வியாபாரத் தொடர்புகள், பெண்கள், உல்லாசங்கள் என அனைத்தைக் குறித்தும் யோசித்தபடி தன்னையே தான் திரும்பிப் பார்த்தபடி தனித்து அலைகிறான். அமெரிக்காவின் பெரும் போதைப் பொருள் மாஃபியாவின் பேத்தி ஷோஃபியா, தனது வேர்களைத் துறந்து அதன் ரத்தக் கறையை அகற்றும் பொருட்டு, அகதிகள் நலவாழ்வுக்காகப் போராட விரும்பி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக பதவியேற்கிறாள். பல்வேறு நாடுகளில் சந்திக்கும் வன்முறையையும் இரத்த வெள்ளத்தையும் பலிகளையும் கண்டு மனம் வெறுத்து பதவியைத் துறந்து இமயமலையில் ஒதுங்கி நிற்கிறாள். அவளுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். உலகெங்கும் அகதிகளாய் தவித்து நிற்கும் குழந்தைகளின் நிலைமைக்கு யார் காரணம், அதற்கான நிவாரணம் என்ன என்ற ஆழமான கேள்வி அவளையும் அனைத்திலிருந்தும் விலகியிருக்கச் செய்கிறது. சித்தார்த்தும் ஷோஃபியாவும் மலையேற்றப் பாதையில் சந்திக்கும்போது அவர்களுக்குள் உள்ள கேள்விகளும் இணைந்துகொள்கின்றன. மோதுகின்றன. தனிமனிதனின் தோல்வியும், உலகப் பொதுமைக்கான லட்சியத்தின் தோல்வியும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்ய விழைகின்றன.

இவ்வாறான இருபெரும் துருவங்களுக்கு இடையில் மலையேற்றப் பாதையில் உள்ள சிறிதும் பெரிதுமான ஊர்களில் மலையேறுபவர்கள் பசியாறி, இளைப்பாறுவதற்காக உருவாகியுள்ள சிறிய விடுதிகளின் பொறுப்பாளர்களின் வாழ்க்கையும் இணைந்து கொள்கின்றன. எங்கெங்கோ உள்ள மனிதர்களின் சிறிதும் பெரிதுமான லட்சியங்கள் அனைத்தும் இமயத்தின் மடியில் சிகரத்தில் ஒன்றுமில்லாமல் ஆகி, வாழ்வின் அடுத்த கணம் என்ன என்கிற சின்னஞ்சிறு புள்ளியில் குவிந்து விடுகின்றன.

இயற்கையை விதிகளை மீறும் மனித முயற்சிகளே வளர்ச்சி என கருதப்படுகிறது. அதை நோக்கியே அறிவியல் துறைகள் தொடர்ந்து முன்னகர்கின்றன. ஆனால், இந்த முயற்சிகளின் பலனாக மேம்படும் வாழ்வின் பொருள் என்ன என்பதைப் பற்றிய தெளிவை எந்த அறிவுத்துறையாலும் இதுவரை எட்ட முடியவில்லை. இயற்கையைச் சுரண்டுவதோடு அடுத்தவர்களை, அவர்களின் வளங்களைச் சுரண்டி அனைத்தின் மீதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அதிகாரமும் ஆற்றல்களும் பயன்படுத்தப் படுகின்றன. அதன் விளைவுதான் உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு போர்கள், எல்லைப் பிரச்சனைகள், இன ஒழிப்புச் சண்டைகள், வன்முறைகள், ரத்த வெள்ளங்கள், அணு ஆயுதக் குவிப்புகள். தொடர்ந்து மனிதன் தன் கீழ்மையின் எல்லைகளை விரித்துக் கொண்டே போவதைத்தான் அதிகாரத்தின் மூலமாக நிறுவியபடியே இருக்கிறான். ஆனால், உண்மையில் மனிதன் மேலும் மேலும் எவ்வாறு தன்னை மனிதனாக மேம்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் வாழ்க்கை என்பதையே இயற்கை தொடர்ந்து வலியுறுத்துகிறது. பேரிடர்களின் வழியாக அவனுக்கு வலியுறுத்தப் பார்க்கிறது. பனி மூடிய சிகரங்களைத் தொட்டிறங்கும் மனிதர்களும், அந்த மலைப் பகுதியில் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களும் இதைப் புரிந்துகொள்கிறார்கள், தற்காலிகமாகவேனும். இந்தப் புரிதல் அனைவருக்குமானதாக மாறுமா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்பியிருக்கிறது.

சதீஷ் சப்பரிகே தொழில்முறை பத்திரிகையாளர். அத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என தொடர்ந்து எழுதி வருபவர். அவரது முதல் நாவலான ‘காந்த்ருக்’ கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் உலக நாவல் என்று குறிப்பிடும்படியான சர்வதேசக் களத்தையும் பின்னணிகளையும் கதை மையத்தையும் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரின் வாழ்க்கைச் சுழல், இமயமலை அன்னபூர்ணா மலைப்பாதையின் மலையேற்ற அனுபவம், சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக போர்ச் சூழலில் அகதிகளின் நிலையை மேம்படுத்த முனையும் அமெரிக்கப் பெண் அதிகாரியின் வாழ்க்கை என்ற மூன்று புள்ளிகளின் வழியாக விரிவான அனுபவத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மலையேற்ற நாட்களினூடாகவே இவ்விருவரின் கடந்த கால வாழ்க்கை நடப்புகளை நகர்த்தி காட்டியிருக்கும் புனைவுத்தி நாவலின் வாசிப்புத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. இமயமலையைக் களமாகக் கொண்ட நாவல் என்பதால் மலைகளைக் குறித்த வர்ணனைகளை, புறக்காட்சிகளைக் கொண்டு நிரப்பாமல் அங்குள்ள சிறிய ஊர்களில் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் பசியாறவுமான சிறிய விடுதிகளை நடத்தும் மனிதர்களைக் குறித்து எழுதுவதில் கூடுதல் அக்கறை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.நல்லதம்பியின் மொழியாக்க வேகம் வியக்கச் செய்கிறது. அடுத்தடுத்து நூல்கள் வெளியானபடியே உள்ளன. ‘காந்த்ருக்’ நாவலில் சதீஷ் சப்பரிகே கையாண்டிருக்கும் புனைவு மொழியின் தன்மையைப் புரிந்துகொண்டு தமிழிலும் அதேத் தன்மையுடன் மொழிபெயர்த்திருப்பதை உணர முடிகிறது.

இமயமலையில் உள்ள ஒரு சிறு நகரத்தின் பெயரே நாவலின் தலைப்பாக அமைந்திருக்கிறது. மனவெறுமையும் குழப்பங்களுமாக மலையேறத் தொடங்கும் சித்தார்த்தன், மலையேற்றத்தின்போது ஷோபியா வழியாக வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதல்களை அடைகிறான். காந்த்ருக்குக்கு வந்து சேரும்போது குழப்பங்கள் தீர்ந்து நம்பிக்கையுடன் மீளும் அவனுக்கு முன்னால் நான்கு புதிய சாத்தியங்கள், பாதைகள் தயாராக உள்ளன. காந்த்ருக் அவனது அடுத்த அடியை தீர்மானிக்கும் இடமாக அமைகிறது. காந்த்ருக்கில் தன்னை உணர்ந்த புத்தனாக சித்தார்த்தன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் நாவலின் முடிவு.

0

காந்த்ருக் – நாவல்

சதீஷ் சப்பரிகே

கன்னடத்திலிருந்து தமிழில் கே.நல்லதம்பி

காலச்சுவடு

டிசம்பர் 2025 422 பக்கங்கள் விலை ரூ.550

Friday, 13 March 2026

பழமையிலிருந்து புதுமையை நோக்கிய பயணம் - நிச்சலனம் - துருக்கி நாவல்

 



துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர் ஓரான் பாமுக்குக்கு 2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து உலகெங்கும் அவர் மீதும் அவரது நாவல்களின் மேலும் வெளிச்சம் விழுந்தது. தமிழில் முதன்முறையாக அவரது புகழ்பெற்ற நாவல் ‘என் பெயர் சிவப்பு’, ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவலுக்கு எழுதிய குறிப்பில், ‘பாமுக்கின் மற்ற நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது ஓர் ஆரம்பமாக இருக்க வேண்டும்’ என்று குப்புசாமி குறிப்பிட்டிருந்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் அதைச் செய்தும் காட்டினார். இஸ்தான்னபுல், பனி, வெண்ணிறக் கோட்டை ஆகிய நாவல்களை அவர் மொழிபெயர்த்தார். அகிலன் எத்திராஜின் மொழியாக்கத்தில் ‘கருப்புப் புத்தகம்’ வெளியானது.

தமிழில் வெளியான இந்த மொழிபெயர்ப்புகளின் வழியாக, துருக்கி இலக்கியத்தின் மீதான கூடுதலான கவனம் விழுந்தது. ஓரான் பாமுக்கிலிருந்து தொடங்கிய இப் பயணம் தன்பினார், அய்ஃபர் டுன்ஷ் ஆகியோரிடம் தொடர்கிறது.

துருக்கி ஒரு சிறிய நாடு. அதன் பூகோள அமைப்பே மிகச் சிக்கலானது. மேற்கு ஆசிய நாடாகவும் அதே சமயம் தென் கிழக்கு ஐரோப்பிய நாடாகவும் இரட்டை அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. தனது எல்லைகளை எட்டு நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதுடன் மூன்று கடல்கள் இதன் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. மத்திய தரைக் கடலை கருங்கடலுடன் இணைக்கும் துருக்கிய நீர் இணைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒருபுறம் இஸ்லாமிய நாடுகளும் மறுபக்கம் கிறித்துவ நாடுகளும் சூழ்ந்துள்ளன. பூகோள அமைப்பிலான இந்த சிறப்பம்சங்களே துருக்கியின் கலை, அரசியல், கலாச்சார அம்சங்களுக்கு தனித்தன்மையையும் சவாலையும் ஒருங்கே அளிப்பதாக அமைந்துள்ளன.

தொன்மையும் பாரம்பரியமும் மிக்க துருக்கியின் கவிதை, இலக்கியம், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் ஆழமான மரபைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நாட்டார் கலைகள் சார்ந்த வலுவையும் கொண்டுள்ளது. உலக அளவில் துருக்கியின் கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஓரான் பாமுக்கின் வருகைக்குப் பின்னரே அதன் நாவல் இலக்கியம் பரவலாக அறிமுகமாயிற்று. ஆனால், பாமுக்குக்கு முன்பே தன்பினார் உள்ளிட்ட நாவலாசிரியர்கள் வலுவான படைப்புகளை எழுதியுள்ளார்கள். துருக்கிய உணவு வகைகளும் தேநீரும் ‘ராக்கி’ எனப்படும் மதுவும் கொண்டாடப்படுபவை. உலக சினிமா அரங்கிலும் மிக முக்கியமான இயக்குநராக அறியப்படும் நூரி பீகி சிலான் துருக்கிய இயக்குநரே.

நூற்றாண்டுகால சரித்திரத்திரத்தில் துருக்கி வெவ்வேறு பேரரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. உலகின் பழமையான நாகரிகத்தின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் நிலமாக விளங்குகிறது. பழமையும் பாரம்பரியமும்கொண்ட ஒட்டாமன் பேரரசை 1923ஆம் ஆண்டு முஸ்தபா கெமால் அட்டார்டக் (1881-1938) கலைத்துவிட்டு நவீன துருக்கியை கட்டமைத்தார். ஒட்டாமன் இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்து துருக்கியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு அதனை  ஒரு ‘நவீன’ நாடாக உருவாக்க முனைந்தார். உணவு, உடை, கல்வி முறை என்று அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கடைபிடிக்கப்பட்ட மரபு சார்ந்த அடையாளங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. உடைகள், ஆபரணங்கள், பாத்திரங்கள், மேசை நாற்காலிகள், ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்ட பழம்பொருட்கள் அனைத்துமே கழித்துத் தள்ளப்பட்டு சந்தையில் குவிந்தன. பல நூற்றாண்டுகளாக துருக்கிய மொழிக்கு பயன்படுத்தப்பட்ட அராபிய எழுத்துருவும் எண்முறையும் விலக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக லத்தீன் எழுத்துருவும் எண்முறையும் பயன்படுத்தப்பட்டன. துருக்கியர்கள் வழக்கமாக அணியும் தலைப்பாகைக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக தொப்பிகளை போடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. துருக்கி மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வாக்களிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவும் உரிமை வழங்கப்பட்டது. அரசு பொறுப்பேற்று நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மதம் தொடர்பான கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. எல்லா வகையிலும் மேற்கத்திய நாகரீக முறைப்படி, நவீனமயமாக்கிக் கொள்ளும் மோகமும் அவசரமும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரபுடனும் பழமையுடனுமான உறவுகள் அனைத்தும் முற்றிலுமாக மறுக்கப்பட்டு உதறப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன.

நவீன துருக்கியைக் குறித்த பெருங்கனவும் எதிர்ப்பார்ப்பும் அனைவரிடமும் இருந்த அதே சமயத்தில் நிச்சயமின்மையும் பயமும் குழப்பமும் இருந்தன. அரசியலிலும் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசாக நிறுவிக் கொண்டிருக்கவில்லை. உலகப் போர் தொடங்கியிருந்தது. எத்தரப்பைச் சார்ந்து நின்று எந்தவிதமான பங்களிப்பைத் தரப்போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவோ முடிவோ எட்டப் படவில்லை. போருக்குப் பிறகு நாடு என்ன நிலையில் இருக்கும் என்பதைப் பற்றிய அச்சமும் இருந்தது.

நாடு மொத்தமும் பெரும் குழப்பத்திலும் தத்தளிப்பிலும் உழன்றிருந்தது. நூற்றாண்டு காலமாக அனைத்திலும் வேர்கொண்டிருக்கும் மரபையும் அதன் அடையாளங்களையும் முற்றிலுமாக உதறவும் முடியாமல், நவீன மேற்கத்திய கலாச்சார அம்சங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் சமூகம் மொத்தமும் ஊசலாட்டத்தின் நடுவே அலைபாய்ந்திருந்தது.

இந்த காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நிச்சலனம்’ நாவல்.

அகமத் ஹம்தி தன்பினார்  (1901-1962) துருக்கி நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவர். கவிஞர், நாவலாசிரியர், விமர்சகரும்கூட. பண்டைய ஒட்டாமன் பேரரசு கோலோச்சியிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர். இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் ஒட்டாமன், துருக்கி இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது வாழ்நாளில் பிரபலமான கவிஞராகவும் சிந்தனையாளராகவும் கட்டுரையாளராகவும் அறியப்பட்ட அளவுக்கு புனைகதை ஆசிரியராக பெயர் பெற்றிருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் துருக்கிய இலக்கியம் மிக அரிதாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தன என்பதால் ஆங்கிலத்தில் வாசிக்கும் அயல்நாட்டினருக்கு அதைப் பற்றிய அறிமுகம் இருக்கவில்லை. தன்பினார் காலமாகி பத்தாண்டுகளுக்குப் பிறகே நாவலாசிரியராக அவர் அறியப்பட்டார். தமிழில் ப.சிங்காரத்துக்கு நேர்ந்தது போன்றே, தன்பினாரின் காலத்துக்குப் பிறகே அவருடைய நாவல்களும் புகழ்பெற்றன. பழைய ஒட்டாமன் மரபின் இலக்கிய வளமையைத் தேடிச் செல்லும் முயற்சியின்போதுதான் தன்பினாரின் புனைகதைகள் கண்டடையப்பட்டன. பழமையான ஒட்டாமன் கலாச்சாரத்தையும் நவீன துருக்கியின் வளர்சிதை மாற்றங்களையும் நன்கறிந்தவர் தன்பினார். துருக்கியின் பரிணாம வளர்ச்சியை உருமாற்றத்தை கண்டறிந்த சிந்தனையாளர் என்பதை அவருடைய புனைவுகளும் உறுதிப்படுத்தின. அதன் பிறகே அவைக் கொண்டாடப்பட்டன. துருக்கியின் இன்றைய இலக்கிய முகமாக அறியப்படும் ஓரான் பாமுக், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற துருக்கி நாவலாசிரியர் தன்பினார் என்றும் தன்னை மிகவும் பாதித்த எழுத்தாளர் என்றும் குறிப்பிடுவதிலிருந்து சமகால துருக்கிய இலக்கியத்தில் தன்பினாரின் செல்வாக்கைப் புரிந்துகொள்ள முடியும்.

‘Huzur’ என்ற பெயரில் துருக்கியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1948ஆம் ஆண்டு தினசரி செய்தித் தாள் ஒன்றில் தொடராக வெளியானது. ஆங்கிலத்தில் ‘A mind at peace’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இந்த நாவலின் காலம் 1938லிருந்து 1939வரையிலான ஆண்டுகள். இரண்டாம் உலகப் போருக்கான ஆயத்தங்கள் தீவிரம் கொண்டிருந்த நாட்கள். துருக்கி தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக முன்னிறுத்தி பதினைந்து ஆண்டுகளே ஆகியிருந்தன. நாவலின் கதை நாயகனான மும்தாஜ், நாட்டின் விடுதலைப் போரில் உயிரிழந்த தன் பெற்றோரை நினைவு கூறுவதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. நான்கு முதன்மை கதாபாத்திரங்களின் கோணத்தில் நாவல் சித்தரிக்கப்படுகிறது. நாவலின் நாயகனான மும்தாஜ், போர் காரணமாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் ஒரு ஊரிலிருந்து அமைதியான வேறொரு ஊருக்கு இடம் பெயர்கிறான். செல்லும் வழியில் வெறிச்சோடி பாழ்நிலமாகக் கிடக்கும் அனடோலியாவின் நிலைமையிலிருந்து போரின் கொடுமைகளைப் புரிந்துகொள்கிறான். இஸ்தான்புல்லுக்கு செல்லும் வழியில், இரவு தங்குமிடமொன்றில் ஒரு இளம்பெண் அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். கணப்பொழுதின் புரியாத அந்த இன்பம், பெற்றோர்களை இழந்த துக்கத்தைப் போலவும் தேசத்தின் பெருந்துயரைப் போலவும்  வாழ்நாள் முழுக்க அவனை அலைகழிக்கிறது. இஸ்தான்புல்லில் அவனுடைய உறவினரான இஷான், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும், அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறார். ஆனாலும், கடந்த காலத்தின் துயர நினைவுகள் அவனை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.

மும்தாஜ் இழந்த தன் காதலியின் நினைவுகளில் தத்தளிக்கிறான். நாவலின் பெரும்பகுதி மும்தாஜ் தன் காதலியான நூரனைக் குறித்து ஏங்கி வருந்துவதாகவே அமைந்துள்ளது. இவர்களின் காதல் கதை நீண்டவொரு பின்கதையாகவே சொல்லப்படுகிறது. துருக்கிய படகுகளிலும் போதையில் நண்பர்களுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபடும் இரவுகளிலுமாக அவர்களது காதல் வளர்வதை தன்பினார் சித்தரிக்கிறார். குழப்பத்தில் தடுமாறும் இஸ்தான்புல் அவர்களுக்கு உல்லாச நகரமாகவே காட்சியளிக்கிறது. மும்தாஜ், நூரன் இருவருக்குமே காதலின் வலியைத்தவிர வேறு எதுவுமே பொருட்டில்லை என்பதுபோன்ற மிதப்பில் சுற்றித் திரிகிறார்கள். ஆனால், விதி வலியது. இருவரும் சிதைந்த தம் ஊர்களைத் தேடிப் போக நேரிடுகிறது. தன்பினார் இந்த சந்தர்ப்பத்தை துருக்கியின் கடந்த காலத்தை வாசகர்களுக்கு சொல்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார். காலப்போக்கில் சிதைவுகளும் அழிவுகளுமேகூட மறக்கப்பட்டுவிடும் என்பதை அறிவார் அவர்.

கணவர் பஹீர் தனக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழும் நூரன் மும்தாஜின் மீது காதல் கொள்கிறாள். ஆனால், அவளுடைய மகள் பாத்திமா இந்த உறவை வெறுக்கிறாள். இதனால், புதிய காதலுக்கும் தாய்மைக்கும் நடுவில் முடிவெடுக்க இயலாமல் தவிக்கிறாள். சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்த நிலையில், மீண்டும் மணமுடிக்க சட்டத்தின் படி குறிப்பிட்ட காலம் முடியவேண்டி காத்திருக்கிறாள்.

காதலிக்கும் காலத்தில் இருவரும் நகரத்தின் அறிவுஜீவிகளுடன் நேரம் செலவழிக்கிறார்கள். இசை கேட்கிறார்கள். கவிதை, இலக்கியம் குறித்து உரையாடுகிறார்கள். நூரன் நம்பிக்கையுடன் தங்களுக்கென புதிய வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தயாராகிறாள். ஆனால், மும்தாஜை இனந்தெரியா இழப்பின் அச்சம் துரத்துகிறது. இவர்களுக்கிடையில், நூரனின் மீது முன்பே பித்துற்றிருந்த சுவாத் வரும்போது குழப்பமும் சிக்கலும் அதிகரிக்கிறது. சொந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் துயரங்களையும் சந்தித்து தடுமாற்றத்தில் இருக்கும் சுவாத், எப்படியேனும் நூரனை அடையவேண்டும் என முயல்கிறான். ஆனால், அது நடக்காது என்ற பரிதவிப்பில் புதிதாக அவள் தயார் செய்திருக்கும் வீட்டுக்குள் நுழைந்து தற்கொலை செய்துகொள்கிறான். சுவாத்தின் இந்த முடிவு நூரனுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இனி இந்த வீட்டில் நூரனுடன் வாழ்வது இயலாது என்று தீர்மானித்து அவனுடனான தன் உறவை முறித்துக் கொள்கிறாள்.

முன்னும் பின்னுமாக ஊசலாடும் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல், ஒரு காதல் கதையினூடாக மரபுக்கும் நவீனத்துக்கும் நடுவில் தன்னை நிலைநிறுத்தத் தடுமாறும் தேசத்தின் கதையை விவரிக்கிறது. போரை சந்திக்கவிருக்கும் ஒரு நாட்டின், சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலை, தனியொருவனின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் குழப்பங்களையும் அழுத்தமாக பேசுகிறது. அதே நேரத்தில் ஆண்-பெண் உறவில் தவிர்க்க முடியாத உளவியல் முரண்களையும் மிக நுட்பமாக கையாண்டுள்ளது. விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணுக்குள், இன்னொருவனுடன் வாழத் தீர்மனிக்கும்போது ஏற்படும் அச்சம், சந்தேகம், தயக்கம், அவற்றின் காரணமாக கிளைக்கும் உரசல்கள் என அனைத்துமே மிக நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன. மனத்துக்குள் இறுகும் புரியின் அழுத்தம், காதலின் எத்தனை உன்மத்தமான தருணமென்ற போதிலும், சொற்களில் வெடித்து ஒட்டுமொத்த மனநிலையையே புரட்டிப் போடும் தன்மையை வெகு அநாயசமாக பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. மன ஆழத்தில் நித்தமும் நிகழும் உளவியல் மோதல்கள், உறவின் கதியை சட்சட்டென்று திசைமாற்றிக் கொண்டேயிருக்கும் யதார்த்தத்தையும் காண முடிகிறது.

கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் கையறு நிலையை சரடாகக் கொண்டிருக்கும் இந்த நாவல், மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டு அவசரகதியில் நவீனமயமாகத் துடிக்கும் அறிவுஜீவிகளின் தவிப்பையும் போதாமைகளையும் விமர்சிக்கிறது.

தன்பினார் ஒட்டாமன் பேரரசின் காலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அந்த மரபின் கலாச்சார அம்சங்கள் அனைத்திலும் ஆழமான ஈடுபாடு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய ஒரு வாய்ப்பு நவீன துருக்கியின் தலைமுறைகளுக்கு மறுக்கப்படுவதின் மீதான கடுமையான விமர்சனமும் நிச்சயமாக இருந்திருக்கும். அட்டார்டக் தன் கலாச்சார மாற்ற நடவடிக்கைகளின் மூலம் முன்பிருந்த அனைத்தையும் சுவடில்லாமல் அழித்துவிட்டு, மேற்கத்திய அம்சங்களை மட்டுமே நாட்டில் நிலைபெறச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இந்தப் போக்கின் மீதான விமர்சனங்களையே தன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான விவாதங்களின் வழியாக வெளிப்படுத்தினார். தலைப்பாகைகளை உதறச் செய்து தொப்பிகளை மாட்டலாம்,  இஸ்லாமிய காலக்கணக்குகளை மறுத்துவிட்டு ஐரோப்பிய நாட்காட்டிகளை எடுக்கலாம், அராபிய எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி லத்தீன் எண்,எழுத்துகளை அறிமுகப்படுத்தலாம். இவற்றின் மூலமாக மட்டும் மக்களிடத்தில் ‘நவீன’ துருக்கியை கட்டமைத்துவிட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை தன்பினாருக்குள் இருந்ததையே நாவல் முழுக்க காண முடிகிறது.

1949ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2009ஆம் ஆண்டில்தான் வெளியானது. இதற்கு காரணம், துருக்கிய மொழி மிகவும் கடினமான ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில வாக்கியங்களுக்கு மாறாக துருக்கிய வாசகங்கள் கடைசியிலிருந்து தொடங்கி நகர்பவை. பதினெட்டு எழுத்துக்களைக் கொண்ட சொற்களும்கூட துருக்கி மொழியில் உண்டு. அவற்றின் மரபுத் தொடர்கள் மொழிபெயர்க்கவே முடியாதவை. ஆகச் சிறந்த மொழியாக்கங்களில்கூட மிக முக்கியமான ஒரு கூறு விடுபட்டுவிடக்கூடிய சாத்தியம் உண்டு. இன்றைய நவீன துருக்கிய தலைமுறைகளில் பலருக்குமேகூட, பழைய துருக்கி மொழியிலிருந்த பல சொற்களுக்கு பொருள் தெரியாது. எனவே, ஆங்கில மொழியாக்கத்திலிருந்து தன்பினாரின் நாவலை தரப்படுத்துவது என்பது மிகக் கடினமான ஒன்று என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்த நாவலின் தமிழ் மொழியாக்கத்தில் அத்தகைய சிக்கல்கள் எவற்றையும் உணர முடியவில்லை. இந்த அளவுக்கு இயல்பான, மொழியமைதி கூடிய இன்னொரு மொழிபெயர்ப்பை தமிழில் காண்பது அரிது. துருக்கி போன்ற முற்றிலும் வேறொரு கலாச்சாரப் பின்னணியும், வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது சவாலானது. மூல நூலின் கதை அமைப்பு, சொல்முறை, மொழிநுட்பம் ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு தமிழ் வாசகன் இயல்பாகவும் சரளமாகவும் உணர்வோடும் வாசிக்கச் செய்யுமளவுக்கு செம்மையான ஒரு காரியத்தை செய்திருக்கிறார் தி.அ.சீனிவாசன்.

0

நிச்சலனம் - நாவல்

அகமத் தன்பினார் ( துருக்கி )

தமிழில் - தி.அ.சீனிவாசன்

காலச்சுவடு பதிப்பகம், 2014 வெளியீடு. 424 பக்கங்கள்

Monday, 2 March 2026

இந்திய ஆட்சியாளர்களின் அரசவை ராகம் - தர்பாரி ராகம்

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியர்கள் அனைவரின் கனவும் நாடு இனி சுபிட்சமடையும், தொழில் வளர்ச்சி அடைந்து வளம் பெருகும், சமத்துவம், சகோதரத்துவத்துடன் நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது, அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு கிட்டும் என்பதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் இந்தியா அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று அதன் குடிமக்கள் அனைவரும் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைக்காகப் போராடிய தலைவர்களும் அவ்வாறே வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், சுதந்திரம் அடைந்து வெகு சில நாட்களிலேயே அப்படி எதுவும் பெரிதாய் மாறிவிடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். இங்குமங்குமாய் எண்ணற்ற பிரச்சனைகள். நாடு இரண்டாகப் பிளவுபட்டது. சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக அமைந்தது. பணஇருப்பும் இல்லை. ஒருவழியாக அனைத்தையும் சரிசெய்து, திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அமைப்புகள் உருவானபோது அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடைமுறையில் எதுவும் திட்டமிட்டதுபோல தொடரவில்லை. எங்கும் எதிலும் ஊழல்கள் மலிந்தன. புதிய வகையிலான நிலப்பிரபுத்துவம் உருவானது. புதிய முதலாளிகளும் ஜமீன்தார்களும் நிலச்சுவான்தார்களும் முளைத்தனர். சாதிய அடுக்குகள் இன்னும் தீவிரமாக பேணப்பட்டன. எங்கும் எதிலும் அலட்சியம். பொதுத்தொண்டு என்பது மெல்ல மெல்ல மறைந்துபோய் தனிநபர் செல்வாக்கு, சுயநலப்போக்குகளே அதிகரித்தன. ஆட்சியாளர்கள்தான் புதியவர்களே ஒழிய, மக்களின் நிலையில் மாற்றம் எதுவும் நேரவில்லை.

ஸ்ரீலால் சுக்ல 1925ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் உள்ள அத்ரலி எனும் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நாட்டில் நடைபெற்று வந்த சுதந்திரத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை, போராட்டங்களை நேரடியாகப் பார்த்து வளர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அங்கமான ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது அவருக்கு வயது 16. நாடு விடுதலையானபோது அவருக்கு வயது 21. எனவே, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களைப் போலவே அவருக்கும் எதிர்காலத்தைக் குறித்த பெரும் கனவுகள் இருந்தன. அவர் கண்டு, கேட்டு வளர்ந்த தலைவர்கள் பலரும் அவ்வாறான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், நடைமுறையில் அத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டபோது பெரும் மனச்சோர்வை, நிராசையை அடைந்தார். நாடு விடுதலையடைந்த அதே ஆண்டு, 1947ஆம் வருடத்திலேயே இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் பணிக்காலத்தில் ஆக்ரா, முசாபர்நகர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பதவியில் இருந்த காலத்தில் இந்திய அதிகார வர்க்கம் செயல்படும் விதத்தை நேரில் பார்த்தறிந்தார்.

தனது மனக்குமுறல்களை, ஏமாற்றங்களை வெளிப்படுத்த எழுத்தை நாடினார். இந்தியாவின் உண்மைநிலையை களமாகக் கொண்டு, நொறுக்கப்பட்ட உத்தரவாதங்களை, உடைந்த கனவுகளைக் குறித்து 1950ஆம் ஆண்டு முதல் எழுதலானார். 1957இல் தனது முதல் நாவலான ‘சூனி கடி கா சூரஜ்’ வெளியிட்டார். கனவுக்கும் நடைமுறைக்குமான முரண்களை, ஏமாற்றங்களைச் சந்தித்தவர்களை கதாபாத்திரங்களாக உலவவிட்டார். அவரது எழுத்துகள் எதிர்மறையாகவும் அவநம்பிக்கையை விதைக்கும்படியாகவும் உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்தன. ‘அவநம்பிக்கைமிகுந்தவை என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், அதுதான் உண்மை’ என்று பதிலளித்தார்.

தர்பாரி ராகம் நாவல் 1968ஆம் ஆண்டு வெளியானது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவில் அற மதிப்பீடுகளும் விழுமியங்களும் பொருளற்று மதிப்பிழக்கும் துயரத்தை அங்கதச் சுவையுடன் சித்தரிக்கிறது இந்த நாவல். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக விரோதிகளுக்கிடையிலான நெருக்கமான ஊழல் பின்னலுக்கு முன்னால் அறிவுஜீவிகளும் சாமானியர்களும் எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்களாய் குறுகிப் போவதன் அவலச் சித்திரம் இது. இந்தியாவின் எளிய கிராமமொன்றின் அன்றாட நடப்புகளின் வழியாக சமூக பொருளாதார அரசியல் நிலையை கேலியும் கிண்டலுமாக விவரிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின், அவுத் பகுதியில் அமைந்திருக்கும் சிவபால்கஞ்ச் என்ற கற்பனை கிராமத்துக்கு முதுகலை வரலாற்றுப் பட்டதாரியான ரங்கநாத், மோசமான தன் உடல்நிலையை சீராக்கிக் கொள்ளும்பொருட்டு, வைத்தியரான தன் மாமாவிடம் வருகிறான். வைத்தியர்தான் அந்த ஊரை ஆட்டி வைப்பவர். கிராமத்தின் கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சூதுவாது தெரியாத கொள்கைவாதியான ரங்கநாத் கிராமத்தில் நடைமுறையில் உள்ள அரசியலையும் அதிகாரத்தையும் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க நேர்கிறது. பொதுமக்களின் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கிராமிய அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சுயநலத்துக்காக சீரழிக்கப்படுகின்றன. தேர்தல் என்பது ஆள் பலமும் பண பலமும் உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடைபெறுகின்றன. கல்வியைத் தவிர போதைப் பழக்கம், அடிதடி, மோசமான நடத்தைகள் என இதர அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும் இடமாக மாறுகிறது பள்ளிக்கூடம். சூதாட்டத்தைவிட மோசமாக நடந்தகொள்ளும் நீதித்துறை. இவை அனைத்தையும் காணும்போது அவனுக்கு மக்களாட்சியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து நொறுங்குகின்றன.

அறுபதுகளில் கிராமப் பொருளாதார முன்னேற்றத்துக்கான மூன்று முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டவை, கிராமப் பஞ்சாயத்துகள், கூட்டுறவுச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் ஆகியன. இவற்றுக்கான நிதி ஆதாரங்களை, கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழலின் மூலம் பொதுமக்களை சென்றையவிடாது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையே இந்த நாவல் விவரிக்கிறது.

தர்பாரி ராகம், சிறிதும் இரக்கமில்லாமல் உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் ஒரு நாவல். இது வெளிவந்தபோது வாசகர்களை உலுக்கியது. தொந்தரவுக்கு உள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஊழல் அமைப்பை தோலுரித்துக் காட்டியது. வெளியான சமயத்தில் இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்கப்பட்வில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இது இந்தியில் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இதன் கதைமொழி, சாதாரணமான இந்தி உரைநடை மொழியில் எழுதப்பட்டதல்ல. இவ்வாறான ஒரு கதைமொழியை இந்த நாவலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி எந்த நாவலிலும் பார்க்க முடியவில்லை என்று இந்தி விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு வரியிலும் கிராமங்களில் மக்களிடையே புழங்கும் சொலவடைகளை, மரபுத் தொடர்களை, பழமொழிகளைக் காண முடியும். லால் சுக்லவின் அங்கதத் தொனிக்கு இவை அனைத்தும் வலு சேர்த்துள்ளன.

இதன் அங்கத மொழி சில இடங்களில் நகைக்கச் செய்கின்றன. சில இடங்களில் சிந்திக்கச் செய்கின்றன. இன்னும் சில இடங்களில் உள்ளூற வருந்தவும் செய்கின்றன. கேலியும் கிண்டலுமாக வசைபாடும் இந்தக் குரல் அனைத்தையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளை, அதிகார வர்க்கத்தை, கல்விச் சூழலை, ஆட்சியாளர்களின் செயல் திறனை, கிராமிய மக்களின் அறியாமையை என அனைத்தையுமே இது கடும் வசைச் சொற்களால் விமர்சிக்கின்றன. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை, மூன்று முக்கிய விதங்களில் இந்த நாவல் வரையறுத்துள்ளது.

தர்பாரி ராகம், தான்சேனால் உருவாக்கப்பட்ட ஒன்று. கம்பீரமான தியான அனுபவத்தைத் தரவல்லது என்று இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுவது. ஆனால், ‘தர்பாரி ராகம்’ என்ற இந்த நாவலின் தலைப்புக்கும் இசைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நாவலின் மையக் கதாபாத்திரமான வைத்தியரின் பாட்டுக்கேற்ப ஒட்டுமொத்த கிராமமும் அதன் மனிதர்களும் பின்பாட்டு பாடுவதன் கேலிக் குறியீடாகவே இத்தலைப்பு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அரசவையின் ராகம் என்ற தன்மையிலும் இதைக் கொள்ளலாம். என்னதான் ஜனநாயக நாடாக இருந்தபோதும் இந்தியாவிலும் அதன் மாநிலங்கள் பெரும்பாலானவற்றிலும் நடப்பது மன்னராட்சிதான். தலையில் கிரீடங்கள் இல்லை, பொன்னாலான சிம்மாசனங்கள் இல்லை, கவரி வீசும் அழகிகள் இல்லை என்பதுதான் வித்தியாசம். மற்றபடி எங்கும் ஒலித்திருப்பது தர்பாரி ராகங்களே.

இந்திய கிராமத்தின் அசலான மண் மணத்தை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடியும். அதே சமயம் இதிலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலையும் அதிகார ஆட்டத்தையும் கூர்மையாக விமர்சிப்பதாக அமைந்துள்ளன.

இந்திய அரசமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக விமர்சிக்கும் விதமாக இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நொண்டி’ என்றே நாவல் முழுக்க அறியப்படும் அவன், தனது நிலத்துக்குரிய அரசாங்கப் பத்திரத்தின் நகலைப் பெற வேண்டி விண்ணப்பிக்கிறான். நகலைத் தரவேண்டி அத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தர், மூன்று ரூபாய் லஞ்சம் கேட்கிறார். நொண்டி தர மறுக்கிறான். என்னுடைய நிலத்துக்கான பத்திரத்தின் நகலை நான் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறேன், ஒரு இந்தியக் குடிமகனாக. அரசின் சார்பாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் துறையும், அதிகாரிகளும், எழுத்தர்களும். எதற்கு லஞ்சம் தரவேண்டும? என்பது அவன் வாதம். நியாயமான வாதம்தான். ஆனால், எழுத்தர் அவனது விண்ணப்பத்தில் பிழைகள் உள்ளன, தேதி சரியில்லை, கையெழுத்து சரியில்லை, என்று பல காரணங்கள், பிழைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சரியான விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு வா என்று திருப்பித் தந்துவிடுகிறார். ஒரு முறையல்ல, பல முறை. புதிது புதிதாக பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பித் தரப்படுகின்றன. நொண்டியும் சலிக்காமல் புதிய விண்ணப்பங்களை எழுத்தர்களை வைத்து எழுதித் தருகிறான். ஏழு வருடங்கள் இது நடக்கிறது. இதற்கு நடுவே அவன் தன் கிராமத்தையும் நிலத்தையும் குடும்பத்தையும் இழக்க நேர்கிறது. ஆனாலும் அவன் தன் தர்ம யுத்தத்தை கைவிடுவிதில்லை. நம்பிக்கையுடன் புதிய விண்ணப்பங்களை எழுதி அனுப்புகிறான். கடைசியில் ஒரு வழியாக அவனுக்கு நகல் தயாராகிறது. ஆனால், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் உடனே வந்து அதைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. உடல்நிலை சரியாகி வரும்போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து நகலைப் பெற்றுக் கொள்ளாததால் அது கிழித்துப் போடப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மறுத்து, நேர்மையுடன் நடப்போரின் கதி என்னாகிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நொண்டியின் போக்கையே அனைவரும் விமர்சிக்கிறார்கள். ‘பேசாம மூணு ரூபா குடுத்துட்டு போக வேண்டிதுதானே’ என்பதே அனைவரின் அறிவுரையாகவும் உள்ளது.

நம்மில் பலரும் அப்படித்தானே?

70ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் பல அம்சங்கள் இன்றும் மிகப் பொருத்தமானவைகளாக இருப்பதை இந்த நாவலின் பெருமை என்று எடுத்துக்கொள்வதா இல்லை இந்த நாட்டின் அவலம் என்று வருத்தப்படுவதா தெரியவில்லை.இந்த நாவலில் உள்ள சிவ்பால்கஞ்ச் என்னும் சிறு கிராமம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றுதான். இந்தியாதான் சிவ்பால்கஞ்ச். சிவ்பால்கஞ்ச்தான் இந்தியா. நீதி நெறிமுறைகளை அனுசரிக்க முடியாத கதாபாத்திரங்கள், நாகரீகமற்ற, ஊழல் என்பது நமது அமைப்பின் ஓர் அங்கம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலை, கொள்கைகள் அணிகலன்கள், இங்கு பிழைத்திருப்பது என்பது நேர்மையைக் காட்டிலும் உள்ள நிலைக்கு அனுசரித்திருப்பதே.

நாவலின் 19வது அத்தியாயத்தில், ஸ்ரீலால் சுக்ல தேர்தலில் வெற்றிப் பெற, ராம்நகர் வழி, நேவாதா வழி, மகிபால்பூர் வழி என்று மூன்று வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எதிர்க் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பவர்களை பொய்க்குற்றம் சாட்டி வாக்களிக்க விடாமல் செய்வதே முதல் வழி. சாதி, மத நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளைப் பிரிப்பது நேவாதா வழி என்னும் இரண்டாவது வழி. தவறான கால நேரத்தை வகுத்து விஞ்ஞான ரீதியாக தேர்லை முன்னரே முடிவுக்குக் கொண்டு வந்து வேண்டிய வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்வது மூன்றாவது வழி. இந்திய நாட்டில் அடுத்து வரும் தேர்தல்களில் இத்தகைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பதை மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் எழுதியிருக்கிறார்.     

லால் சுக்ல 10 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், 9 அங்கதக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதியிருந்தபோதும், ‘தர்பாரி ராகம்’ அவருக்கான அடையாளமாக, மறுபெயராக மாறிவிட்டது. உண்மையில், அவரது பிற நாவல்களும் சிறுகதைகளும் அதேயளவுக்கு ஆழமும் அழுத்தமும் கொண்டவை.

அதிகாரத்தைப் பற்றி, யார் அதை கையில் வைத்திருக்கிறார்கள், எப்படி அதை பயன்படுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவற்றைக் கொண்டு வருகிறது, பிறருக்கு அதனால் என்னவாகிறது என்பதை எழுதியவர் சுக்லா. சுக்லாவின் கதைகளில் கற்பனையோ சாகசங்களோ இருக்காது. மேன்மையான குடிமக்களையோ அழகான கிராமங்களையோ காணமுடியாது. சுதந்திரம் புதிய எந்த மதிப்பீடுகளையும் கொண்டு சேர்க்கவில்லை. பதிலாக, புதிய சொற்களையே உருவாக்கியுள்ளது என்பதையே அவை விமர்சிக்கின்றன. நிலபிரப்புத்துவ அமைப்பு, சாதி அடுக்குகள், அதிகார அமைப்பின் செயலின்மை என யாவும் அப்படியேதான் இருந்தன, அரசு வன்முறை நீடித்ததைப்போலவே. இப்போது அவை வேறு பெயர்களில் உலவின, வேறு முழக்கங்களை ஒலித்தன, அவ்வளவுதான். இந்தியின் முதன்மை நாவலாசிரியர்களான பிரேம்சந்தும் மைதிலி சரண் குப்தாவும் காட்டாத ஓர் கிராமத்தை அச்சு அசலாகக் காட்டியிருப்பவர் லால்சுக்ல. இந்த நாவலில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று சொல்லவேண்டும். கயாதீனின் மகள் பேகா பிற கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியே மட்டுமே காட்டப்படுகிறாள். நேரில் அவள் காட்சிப்படுவதேயில்லை.

1969ஆம் ஆண்டு ‘தர்பாரி ராகம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதும், அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2011ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டன.

லால் சுக்லாவின் அங்கதம், கேலி, கிண்டலுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி விடுதலை பெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற மறந்து துரோகம் புரிந்தவர்களின் மீதான தார்மீக சினமும் சீற்றமுமே அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆகத் துயரமான வாழ்வை வாழ்ந்து கடக்க ஒரே வழி சிரித்துக்கொண்டே அதைக் கடப்பதுதான்.

பிற இந்திய மொழிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் தமிழுக்கு வந்துள்ளன. வங்க, கன்னட, மலையாள நாவல்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தியிலிருந்து ஒருசில நாவல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர் சரஸ்வதி ராம்நாத். இந்த நாவலில் அவரது மொழிபெயர்ப்பு மேதமை வியக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் உள்ளன. நாவலில் ஒலிக்கும் அங்கதத்தை துல்லியமாகவும் சிறிதும் வலுவிழக்காமலும் மொழிபெயர்த்திருப்பது பெரும் சாதனை. சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

‘தற்காலக் கல்வி இருக்கிறதே அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானாலும் அதை எட்டி உதைக்கலாம்’. ( பக் 9 )

‘நானும் சரித்திர பாடத்தில் எம்.ஏ.பாஸ் செய்திருக்கிறேன். 61 சதவீதம் மார்க் வாங்கியிருக்கிறேன். காலத்தின் கோலம். இப்போது இங்கே பிரின்ஸ்பாலாக இருக்கிறேன்.’

‘மோசமான டிவிஷன் வாங்கி இருந்தால் தாங்கள் இங்கேயா இருப்பீர்கள்?’

‘அது சரிதான். அப்படியிருந்தால் ஏதாவதொரு யுனிவர்ஸிடியில் லெக்சரராக இருந்திருப்பேன். மூன்றாம் டிவிஷனில் பாஸ் செய்த என் நண்பர்கள் எத்தனையோ பேர் யுனிவர்ஸிடியிலே இருக்கிறார்கள்.’ ( பக் 199 )

‘குற்றவாளிகளின் வீட்டில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாட்டுத் துப்பாக்கி என்று அழைக்கப்படும் இரும்புத்துண்டு கட்டாயம் தேடி எடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தார். அதைப் பார்த்ததுமே பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு இந்தியர்கள் தோற்றுப்போனது ஏன் என்ற வரலாற்று உண்மை தானாகவே தெளிவாகிவிடும்.’ ( பக் 187 )

கல்வித் துறை சம்பந்தமான பொருள்களை சப்ளை செய்யும் ஒரு கம்பெனியின் காலண்டர் அவர் முகத்துக்கு நேரே சுவரில் தொங்கியது. வெற்றுடம்பில் சருகு போன்ற மெல்லிய சேலையைச் சுற்றிக் கொண்டிருந்த யாரோ ஒரு திரை நடிகை மெய்ம்மறந்த நிலையில் லட்டுமாதிரி ஆடவன் ஒருவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். அந்த ஆடவனின் முகத்திலே ரோமக்காடு. ஒரு கரத்தை உயர்த்திக் கண்களை மறைத்துக்கொண்டிருந்தான். லட்டைத் தின்று தின்று அஜீர்ணம் வந்துவிட்டது போன்ற பாவம். இவர்கள்தான் மேனகையும் விஸ்வாமித்திரரும்.’ ( பக் 93 )

‘யாரேனும் கேட்டால் கேட்கட்டும், கேளாவிட்டால் போகட்டும் என்று பிரசார இலாக்கா பற்றற்றுப் பணிபுரிவதுபோல், பிரின்ஸ்பாலும் பேசிக்கொண்டே இருந்தார்.’ ( பக் 207 )

‘வெற்றிலைப் பாக்குக் கடையில் பாட்டிரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்கள் என்ற சாக்கடையிலிருந்து, ‘ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை, என் இலட்சியம், நீ எங்கே, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு, வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவளே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை’ ஆகிய சொற்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நாடுகளில் புத்தெழுச்சியின் செய்தியைப் பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.’ ( பக் 277 )

 

இந்திய நாவல்கள் என்று பேசும்போது எப்போதும் நினைவில் எழும் நாவல்கள், ஒரு குடும்பம் சிதைகிறது அல்லது ஆரோக்கிய நிகேதனம். இந்த இரு நாவல்களும் தமிழ் நாவல்களாகவே மாறிப் போனவை.

இந்த இரு நாவல்களுக்கு சற்றும் குறையாத தகுதியைக் கொண்டது தர்பாரி ராகம். கதை, கதாபாத்திரம், வாழ்க்கை நோக்கு என்று நாவலின் அடிப்படைகளைப் பொறுத்தவரை தர்பாரி ராகம் சற்று பலவீனமான ஒன்றுதான். ஆனால், லால் சுக்லவின் கதைமொழி இந்த நாவலை தனித்தன்மை மிக்கதாக நிறுவுகிறது. பிற இந்திய நாவல்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பிரித்துக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாவலின் மையம் இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பொருத்தமாக இருப்பதும் முக்கியமானது. அரசியல் அதிகார அமைப்புகளும் ஊழல்வாதிகளும் இந்தியாவின் வளங்களைச் சுரண்டும் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை.

அந்த வகையில் இன்றும் தன் பொருத்தத்தை இழக்காமல் இருப்பதாலும், தனித்தன்மை மிக்க தன் அங்கதச் சுவையாலும் இந்தியாவின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் ‘தர்பாரி ராகம்’ நிச்சயமாக இடம் பெற்றுவிடுகிறது.

லால் சுக்லவைப் பற்றியும் அவரது அங்கதம், அதன் பின்னணியில் உள்ள அறச்சீற்றம் ஆகியவற்றைக் குறித்தும் யோசிக்கும் வேளையில் உடனடியாக நாஞ்சில்நாடனை நினைவுக்கு வந்தார். ‘தர்பாரி ராகம்’ போன்ற அங்கதம் மிகுந்த முழு நாவலை எழுத நாஞ்சில்நாடனே தகுதியானவர் என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அரசியல், அரசியல்வாதிகளின் எல்லையற்ற ஆட்டங்கள், அதிகார வர்க்கத்தின் கூசவைக்கும் நடைமுறைகள், திரைப்படங்களின் தரம், திரைப்படங்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத ஈடுபாடு, எல்லாவற்றையும் கண்டும்காணாமல் பொறுத்துப்போகும் எளிய மக்களின் கையறுநிலை ஆகியவற்றின் மீது தொடர்ந்து காட்டமான, கூரிய விமர்சனங்களை தன் கட்டுரைகள், கதைகளின் வழியாக தயக்கமோ, அச்சமோ, தயவுதாட்சண்யமோ இன்றி நேர்மையாக வெளிப்படுத்துபவர் நாஞ்சில்நாடன். எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், தனக்கு சரியெனப் பட்டதை நேரடியாக எழுத்தில் காட்டும்போது அதை அங்கதமும் கேலியும் கிண்டலுமாக தனக்கேயுரிய மொழியில் எழுதுவார். படிப்பவர்கள் அவற்றை சிரித்துவிட்டு கடக்க முடியாதபடியான கூரிய விமர்சனங்களும் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் எழுப்பப் பட்டிருக்கும்.

0

நாவல் - தர்பாரி ராகம்

மூலமொழி - இந்தி

நாவலாசிரியர் - ஸ்ரீலால் சுக்ல

மொழியாக்கம் – சரஸ்வதி ராம்நாத்

வெளியீடு – நேஷனல் புக் டிரஸ்ட்

முதல் பதிப்பு – 1977, இரண்டாம் பதிப்பு 1990

பக்கங்கள் -402 – விலை ரூ. 28.00

Saturday, 28 February 2026

வண்ணச் சீறடிகள் - மனையறம் நாவல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்


‘மனையறம்’ நாவல் குறித்து எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் ‘அகழ்’ மின்னிதழில் ‘வண்ணச் சீறடிகள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். 

கட்டுரைக்கான இணைப்பு இங்கே.


நன்றி - செந்தில் ஜெகன்நாதன்

 https://akazhonline.com/?p=11482

வாழ்க்கைச் சரிதங்கள் – முழுமையை நோக்கிய வெளிச்சம்



 

சுயசரிதை அல்லது தன்வரலாறு என்பது குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையை, வரலாற்றைச் சொல்வது மட்டுமன்று. குறிப்பிட்ட அந்த மனிதர் வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உள்ளடக்கியதுதான். அவருடைய வாழ்க்கையின் வழியாக அந்தக் காலத்தில் நிலவிய சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை, சிக்கல்களை, சவால்களை, ஏற்ற இறக்கங்களை என அனைத்தையுமே அறிந்துகொள்ள துணைசெய்யும். ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட முறையான வரலாற்றின் ஊடே இத்தகைய சுயசரிதைகள் புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் பாய்ச்சும். நம் முன் வைக்கப்பட்ட வரலாற்றை இன்னொரு கோணத்திலிருந்து அணுகவும், அதிலுள்ள இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளவும் முடியும்.

தமிழில் எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகள் எண்ணிக்கையில் குறைவு. அவ்வாறு எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகளிலும் பெருமளவு வாசிக்கப்பட்டவை மிகவும் குறைவு. உ.வே.சா வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, தி,சௌ.ராஜனின் ‘நினைவலைகள்’ ஆகிய சில நூல்களே தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள், நிர்வாகத் திறன் மிகுந்த ஆளுமைகள் ஆகியோரின் பங்களிப்பை அறிந்துகொள்ளும் வகையிலான முக்கியமான சுயசரிதைகள் அதிக அளவில் எழுதப்படவில்லை. அல்லது எழுதப்பட்ட அத்தகைய சில தன்வரலாறுகளும் போதிய கவனம் பெறவில்லை.

கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் தாமோதரசாமி நாயுடு மிக முக்கியமான ஒரு பிரமுகர், ஆளுமை. உணவகங்களின் சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட நவீன சமையல் சாதனங்களை வடிவமைத்தவர் என்பதால் தமிழக அளவில் உணவக உரிமையாளர்களால் பெரிதும் போற்றப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மரபின் மைந்தன் முத்தையா அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நூலின் தலைப்பு ‘சுவைபட வாழ்தல்’. அதேபோல, கோவையின் புகழ்பெற்ற மருத்துவமனையான ‘கங்கா மருத்துவமனை’யின் குடும்பத்தின் வரலாற்றையும், அதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்.கனகவல்லியின் பார்வையில், முத்தையாவே எழுதினார். பெயர் ‘ஒரு அன்னையின் கனவு’. இந்த இரண்டுமே குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறுகள்.

அந்த வகையில், ‘முன்சுவடுகள்’ என்ற கட்டுரை நூலில் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனைவு நூலுக்குரிய சுவாரஸ்யத்துடன் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். இந்தக் கட்டுரைகள் அனைத்துமே எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டவை. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.வி.க, பெ.தூரன், கிருஷ்ணன், டி.கே.சண்முகம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.எஸ்.கரையாளர் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளுடன் கேரளத்தைச் சேர்ந்த வெட்டம் மாணி, சி.வி.ராமன் பிள்ளை, வயலார் ராமவர்மா, என்.என்.பிள்ளை ஆகியோரைக் குறித்த கட்டுரைகளும் உள்ளன.

‘பெண்ணின் பெருமை’யை எழுதிய திரு.வி.கல்யாணசுந்தரம் தன் மனைவி கமலாம்பிகையுடனான இல்லற வாழ்வைக் குறித்தும் அவரது மறைவுக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளாமல் அவரது நினைவுடனே தமிழ்த் தொண்டு புரிந்ததைக் குறித்தும் விவரிக்கிறது ‘ஓர் அமரகாதல்’. இதேபோல, ‘மார்த்தாண்ட வர்மா’, ‘தர்ம ராஜா’, ‘ராம ராஜா பகதூர்’ போன்ற நாவல்களை எழுதிய மலையாள நாவலாசிரியர் சி.வி.ராமன் பிள்ளையைக் குறித்து பி.கே.பரமேஸ்வரன் நாயர் எழுதிய நூலில் உள்ள அழகான காதல் கதையை ‘சதுரங்க ஆட்டத்தில்’ என்ற கட்டுரையில் சித்தரித்திருக்கிறார். ஜானகி என்னும் நாயர் தறவாட்டு பெண்ணின் மீது கொண்ட காதல் அவருக்குள் எரிந்துகொண்டிருந்தபோது தனது முதல் நாவலான ‘மார்த்தாண்ட வர்மா’வை எழுதிய சி.வி.ராமன் பிள்ளை, அவளை மணக்க முடியாமல் போன நிலையில் இருபதாண்டு காலம் எதையும் எழுதவே இல்லை. காலவோட்டத்தில் ஒரு நெருக்கடியான சூழலில் அவளை மீண்டும் அடைந்தபின் பெரும் ஆவேசத்துடன் எழுதத் தொடங்கி பிற நாவல்களை எழுதியிருக்கிறார்.

மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மாயின் மனைவி பாரதி தம்புராட்டி தன் கணவரைப் பற்றி எழுதிய சிறு நூல் ‘இந்திர தனுஸின் தீர்த்து’. வாழ்நாள் முழுக்க ராமவர்மா, அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் அதன் விளைவுகளையும் இந்த நூலில் எழுதியிருக்கிறார். மனைவியுடன் பேசக்கூட அம்மாவின் அனுமதியைப் பெறும் நிலையிலிருந்த ராமவர்மா, திரையுலகில் உச்சத்தில் இருந்த காலத்தில், சென்னையில் தங்கியிருந்த ராமவர்மா கடிதங்களையும்கூட அம்மாவுக்குத் தான் எழுத முடிந்திருக்கிறது. தினமும் அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் அவர் ஒருமுறைகூட மனைவியிடன் பேசியதில்லை. தனிமையில் கிடந்த ராமவர்மா குடிக்கு அடிமையானார். பெண்பித்தராக அலைந்தார். மனைவி பாரதி சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடத்தினார். இத்தனைக்குப் பிறகும் தன் வாழ்க்கையை நாசமாக்கிய வயலாரின் அம்மாவின் மீது அவருக்கு எந்த வெறுப்புமில்லை என்றே எழுதுகிறார். கணவரின் வாழ்வும், தனது துயர நிலையும் ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச் செல்கிறார் பாரதி.

மலையாள வணிக நாடக மேடையின் பிதாமகர்களில் ஒருவரான என்.என்.பிள்ளை, ‘நாடக தர்ப்பணம்’ என்கிற முக்கியமான பல நூல்களின் ஆசிரியரும்கூட. அவரது சுயசரிதை ‘ஞான்’ (நான்) மிக முக்கியமான வாழ்க்கை வரலாறாகக் கருதப்படுகிறது. சிறுவயதிலேயே மலேயாவுக்கு செல்ல நேரும் என்.என்.பிள்ளை தோட்டங்களில் வேலை பார்த்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இராணுவத்தின் இணைந்தது, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துடன் பணியாற்றியது, சயான் மரண ரயில் பாதையில் பலரும் மரணமடைந்தது, சுபாஷ் சந்திர போஸின் ஆளுமை குறித்த சித்திரம், ஜப்பானின் போர் தந்திரங்கள் என்று பல நுட்பமான தகவல்களை தன் சுயசரிதையில் விவரித்திருக்கிறார். இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இந்தியாவுக்குத் திரும்புகிறார். மலேயாவில் இந்திய தேசிய இராணுவத்துக்காக நாடகங்களை நடத்திய அனுபவத்தைக்கொண்டு ‘விஸ்வ கேரள காலசமிதி’ நாடக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தலானார். சில காலத்திலேயே கேரளத்தின் முதன்மை நாடக ஆசிரியராக புகழடைந்தார். ‘சுயசரிதைகளை உண்மையாகவே எழுதினால், அந்த நூலைத் தொட்டால் நம் கை சுடும் என்பார்கள். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று இது’ என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

என்.கே.கிருஷ்ணனின் ‘நம்பிக்கை ஒளி – ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாற்று நினைவுகள்’ என்ற நூல் கிருஷ்ணனைப் பற்றி மட்டுமல்லாது, அவரது மனைவி பார்வதி கிருஷ்ணன், டாக்டர் சுப்பராயன் ஆகியோரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களைத் தருகிறது. ( சென்ற சில மாதங்களாக, பார்வதி கிருஷ்ணன் குறித்து நூல் எதுவும் எழுதப்பட்டிருக்கிறதா என்று நண்பர்களை விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. )  

டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்த கட்டுரை ‘ஓர் அக்கினிப் பிரவேசம்’. பிறப்பு அவர் மீது ஒட்டவைத்த இழிவை இசையைக் கொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அழித்து விடுதலை அடைந்ததை இக் கட்டுரை விவரிக்கிறது. எம்.எஸ்ஸின் வாழ்க்கையை இந்த நூல் மூன்று தளங்களில் அணுகியுள்ளது. அவரது இளமைக்காலம் ஒன்று. அடுத்தது திரைப்படம், மேடைப்பாடல்களின் மூலம் புகழ்பெற்று குடும்ப வாழ்க்கையில் அமைந்தது. மூன்றாவது, கணவர் சதாசிவம் அவரை ஒரு கலாச்சாரச் சின்னமாக மாற்றிய காலகட்டம். இந்த நூலின் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கும், ஜி.என்.பிக்கு எம்.எஸ் எழுதிய கடிதங்கள், அவரது கலையுள்ளத்தின் உணர்ச்சிகரத்தை நெருங்கி அறிய உதவுவதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

எம்.ஓ.மத்தாய் நேருவைப் பற்றிய பிரபலமான நூலான ‘நேரு யுக நினைவுகள்’ பற்றிய கட்டுரை மிக விரிவானது. நேருவின் ஆளுமையை எல்லாக் கோணங்களிலிருந்து அணுகிய இந்த நூல், தேசிய தலைவர் என்கிற ஆளுமையின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. இந்த நூலில் பெண்களுடனான நேருவின் உறவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். அந்தப் பெண்களில் ஒருவரான சிரத்தா மாதாவைக் குறித்து ஒரு அத்தியாயத்தை மத்தாய் எழுதியுள்ளார். ‘அவள்’ என்ற பெயரில் உள்ள அந்த அத்தியாயம் இந்தியப் பதிப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு என் புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்தும்போது, இனிமேல் வாசிக்கத் தேவையில்லை என்று நினைக்கும் புத்தகங்கள் சிலவற்றை தேவையான நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தனியாக எடுத்து வைத்தேன். அவற்றில் ஒன்று மத்தாயின் இந்த புத்தகமும். இந்தக் கட்டுரையை வாசித்தவுடனே பெட்டியிலிருந்து அந்த நூலை அவசரமாக எடுத்துப் புரட்டினேன். 1979ஆம் ஆண்டு ‘பெல்’ புக்ஸ் வெளியிட்டிருந்த இந்த புத்தகத்தின் விலை ஒன்பது ரூபாய் ஐம்பது பைசா. நூலின் உள்ளடக்கப் பக்கத்தில், அத்தியாயம் 29 ‘அவள்’ என்று குறிப்பிடப்பட்டு, பக்கம் எண் 153 என்றிருந்தவுடன் ஆவலுடன் பக்கங்களைப் புரட்டினேன். 152ஆம் பக்கத்துக்குப் பிறகு 157ஆம் பக்கம்தான் இருந்தது. கட்டுரையிருந்த பக்கங்கள் மொத்தமும் வெட்டி நீக்கப்பட்டிருந்தன.

‘விலக்கப்பட்டவர்கள்’ என்ற கடைசி கட்டுரை, ‘தாத்ரிக் குட்டியின் ஸ்மார்த்த விசாரணை’யைக் குறித்த ஒன்று. கேரளத்தில் நம்பூதிரிகளிடையே நிலவிய ஒரு சாதிச் சடங்கு எவ்வாறு உருவானது, அதன் பின்னணி என்ன, சுசீந்திரம் கோயிலில் நடந்த‘கைமுக்கு’ உள்ளிட்டவற்றை விரிவாக அலசுகிறது. தாத்ரிக்குட்டியின் கதையைக் கொண்டு வெளியான திரைப்படங்களைக் குறித்தும் கூறுகிறது. இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி மிக முக்கியமானது. இவ்வாறான ஒரு ஸ்மார்த்த விசாரணையில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சாதிபிரஷ்டம் செய்யப்பட்டு நாடுகடத்தப்படுகிறார் மேலங்கத்து கோபால மேனன். இலங்கைக்குச் சென்ற அவர் தோட்டத் தொழிலாளியாக காலத்தைக் கடத்தினார். சத்யவதி என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நோயுற்று கோபால மேனன் இறந்த பிறகு அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தாள். பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். இருவரும் நாடக நடிகர்களாகவும் பிறகு திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தனர். பிறகு நடந்த அனைத்தையும் நாடறியும், நாமறிவோம். தாத்திரிக்குட்டியின் வாரிசுகளில் ஒருவரான ஒரு பெண்ணும் திரை நட்சத்திரமாக மிளர்ந்தார் என்றும், அது யார் என்றும் கட்டுரை உறுதிப்படுத்தப்படாத தகவலாகக் குறிப்பிடுகிறது.

வாழ்க்கை சரிதங்களின் வழியாக பொதுவெளியில் அறிந்த வாழ்வின் உள்ளடுக்குகளில் உள்ள பிற அம்சங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறான அறிதல் வரலாற்றில் ஏற்கெனவே கட்டப்பட்ட பிம்பங்களின் மீது புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச உதவுகிறது. ரகசியங்கள் இல்லாத மனிதன் எவருமில்லை. ஆனால், அந்த ரகசியங்களே அந்த மனிதனின் பிம்பத்தை முழுமையுறச் செய்கின்றன. வாழ்க்கைச் சரிதங்கள் முழுமையாக அல்லாவிடினும், வெளிப்படுத்தப்படாத அத்தகைய ரகசியங்களைத் ஓரளவேனும் தொட்டுக் காட்டும்போது அவை சில தெளிவுகளை அடைய உதவுகின்றன.

0

முன்சுவடுகள் – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

நவம்பர் 2023 விலை ரூ.240./

  

Monday, 23 February 2026

மொழிபெயர்ப்புக் கலையும் ஆர்.சிவகுமார் எனும் கலைஞரும்

 


ஆர்.சிவகுமார் சாரை எப்போது நான் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், இலக்கியத் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நான் அறிந்த ஒரு பெயர். தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்கு வந்திருந்த நாட்களில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்திருக்க வேண்டும்.

1999ஆம் ஆண்டு ஒரிசா சாகித்திய அகாதமி அனைத்திந்திய கவிஞர்கள் கூடுகை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புவனேஸ்வருக்கு அருகில் உள்ள சிலிகா என்ற மாபெரும் ஏரிக் கரையில் நிகழ்ச்சி. இந்த நிகழ்வுக்காக தமிழகத்திலிருந்து ரவி சுப்ரமணியன், சிபிச் செல்வன் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இந்தக் கவிதையரங்கில் வாசிப்பதற்காக கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு கடிதத்தில் என்னுடைய தேவையைச் சொல்லி இரண்டு கவிதைகளை ஆர்.சிவகுமார் சாருக்கு மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டேன். ஒரு வாரத்திலேயே கவிதைகளை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். ஒரு நாள் மாலையில், சிலிகா ஏரியின் மீது மிதந்திருந்த படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில், அவர் மொழிபெயர்த்த கவிதையைத்தான் வாசித்தேன். பிற மொழிகளிலிருந்து வந்திருந்த சிலர் அந்தக் கவிதையைக் கவனித்து பாராட்டினார்கள். மொழிபெயர்த்த கவிதையின் பிரதியைக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ‘கடைசியாய் ஒரு கைகுலுக்கல்’ என்ற கவிதை அது. ‘A Handsake, at last’ என்பது சிவகுமார் சாரின் மொழிபெயர்ப்பு.

இந்தக் கவிதையுடன், ‘தீராத சித்திரம்’ என்ற இன்னொரு கவிதையையும் மொழிபெயர்த்திருந்தார்.

பின்னாளில் சந்தர்ப்பவசமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட நேர்ந்தபோது, சிவகுமார் சார் என்னுடைய கவிதையை மொழிபெயர்த்திருந்த பாங்குதான் உடனடியாக நினைவுக்கு வந்தது. மொழியாக்கம் என்பது ஒரு மொழியில் இருப்பதை இன்னொரு மொழியில் அப்படியே எழுதுவது அல்ல என்பதை சிவகுமார் சாரின் மொழியாக்கங்களின் வழியாகவே நான் புரிந்துகொண்டேன். மொழிபெயர்ப்பு குறித்து நேரடியாக அவரிடம் உரையாடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், அவருடைய மொழிபெயர்ப்புகளின் மூலம் கற்றுக்கொண்டவை ஏராளம். இதுவரை நான் மொழிபெயர்த்திருக்கும் சில நூல்களின் பின்னணியில் அவருடைய மொழியாக்கங்களிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களே உள்ளன. அந்த வகையில் அவர் என் ஆசான், குரு.

1980களில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்க்கு வழங்கப்பட்டதை அடுத்து அவருடைய கதைகளும் லத்தீன் அமெரிக்கக் கதைகளும் தமிழில் புழங்கலாயின. அந்த வகையில் மார்க்வெஸ்ஸின் கதையை தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தவர் சிவகுமார். அக்டோபர் 1983 மீட்சி இதழில் ‘செவ்வாய்க் கிழமை மதியத் தூக்கம்’ கதையை மொழிபெயர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் ‘லத்தீன் அமெரிக்கக் கதைகள்’ தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், தனது இலக்கியப் பயணத்தை 25வயதில் தொடங்கியது ஒரு சிறுகதையாளராக. 1976ஆம் ஆண்டு அஃக் இதழில் அந்தச் சிறுகதை வெளியானது. ஆனால், ஏனோ அதை அவர் தொடரவில்லை.

உதகையில் பணியாற்றியபோது, பிரம்மராஜனுடன் இணைந்து ‘மீட்சி’ இதழில் தொடர்ந்து பங்களித்துள்ளார். நவம்பர் 1983 இதழில் பாரிஸ் ரிவ்யூவில் வெளியான வில்லியம் ஃபாக்னரின் பேட்டியின் மொழியாக்கம் வெளியாகியுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் இதழில் வண்ணதாசன் சிறுகதைகள்-ஒரு வாசக அனுபவம் என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். செப் 85 இதழில் ‘புதுக்கவிதையும் புதுப் பிரக்ஞையும்’ என்ற தலைப்பில் இலக்கு நடத்திய கருத்தரங்கு குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.  

சாகித்திய அகாதமியின் காலாண்டு இதழான இந்தியன் லிட்டரேச்சர், ஏப்ரல் 2000இல், இவரது மொழிபெயர்ப்பில் பதினேழு சங்கக் கவிதைகள் வெளியாகியுள்ளன. நகுலனின் சில கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

2008ஆம் ஆண்டில் அவர் இன்னொரு முக்கியமான பணியையும் செய்திருக்கிறார். திராவிடப் பல்கலைக் கழகத்துக்காக சுந்தர ராமசாமியின் ரீடர் ஒன்றைத் தொகுத்தளித்திருக்கிறார்.

அண்மையில் இவரது முதல் நாவல் 2021ஆம் ஆண்டு, ‘தருநிழல்’ வெளியானது. 2024ஆம் ஆண்டு இரண்டாவது நாவல் ‘கற்றதினால்’ வெளிவந்துள்ளது.

முக்கியமான சில கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார்.  ஆவநாழி இதழில் ‘பொயட்ரி’ இதழைக் குறித்தும், ‘லிட்டில் ரிவ்யூ’ இதழைக் குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. வண்ணதாசன், மௌனி, ஆ.இரா,வெங்கடாசலபதி ஆகியேரைக் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். சில முக்கியமான நேர்காணல்களையும், கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

தமிழின் சிற்றிதழ் மரபின் வழியாகவே தீவிர இலக்கியம் தொடர்ந்து உருவாகி வளர்ந்து வலுப்பெற்றது. தமிழ் புனைவு சார்ந்த எழுத்து நடையை, முறையை செழுமைப்படுத்தியதை நேரடியாக உணரவும் காணவும் முடிகிறது. ‘மணிக்கொடி’ முதல் ‘காலச்சுவடு’ வரையிலான அச்சிதழ்களும், இன்றைய மின்னிதழ்களும் உருவாக்கிய தீவிர இலக்கியத்தின் எழுத்தாளர்கள் வரிசை மிகப் பெரியதும் பெருமைப்படத்தக்கதுமாகும். தமிழின் சிறுகதை வளத்துக்கும் கவிதைச் செறிவுக்கும் நாவல்களின் வலுவுக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது சிற்றிதழ் வழியாக உருவான தீவிர இலக்கிய மரபேயாகும்.

ஆனால், அதே சமயம் அதே சிற்றிதழ் மரபின் மற்றொரு முக்கியமான கொடை மொழிபெயர்ப்பு. புனைகதைகள், கவிதைகள் சார்ந்த அக்கறையையும் கவனத்தையும் ஏற்படுத்திய அதே சமயத்தில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான தீவிரமான ஒரு பாதையும் உருவாக்கப்பட்டது என்பதை பலசமயம் நாம் யோசிப்பதில்லை. எதை மொழிபெயர்க்கவேண்டும், ஏன் மொழிபெயர்க்கவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவும் ஆழமான பார்வையும் கொண்டவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையை உருவாக்கினார்கள். இதழ்களோ புத்தகங்களோ கிடைக்க சிரமமான அந்தக் காலத்தில் தொடர்ந்து தேடித் தேடி தமிழுக்கு அளப்பரிய அரிய செல்வங்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். மொழியாக்கத்துக்கான அடிப்படைகளை அவர்களே ஏற்படுத்தினார்கள்.

ஆர்.சிவகுமார் சிற்றிதழ் மரபைச் சார்ந்தவர். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகளில் பெரும்பாலானவை மீட்சி, கல்குதிரை, உன்னதம், புது எழுத்து, மந்திரச் சிமிழ், உயிர்மை, காலச்சுவடு, நீட்சி, ‘க’, தொனி உள்ளிட்ட சிற்றிதழ்களிலேயே வெளியாயின. அவருடைய எம்.ஃபில் ஆய்வு அமெரிக்காவில் வெளியான சிறுபத்திரிகைகள் குறித்தது. முனைவர் பட்டம் படிகள், நிறப்பிரிகை ஆகிய இதழ்களை மையமாகக் கொண்டது.

தமிழில் சிற்றிதழ்களின் வழியாக மொழிபெயர்ப்புக்கென அத்தகைய ஒற்றையடிப் பாதையை உருவாக்கியதில் பிரம்மராஜனின் ‘மீட்சி’ இதழுக்கும் சிவகுமாருக்கும் முக்கியமான பங்கு உண்டு. சிறுகச் சிறுக கதைகளை வாசித்துத் தேர்ந்தெடுத்து மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் துல்லியத்துடனும் மொழிபெயர்த்து ஒரு வலுவான அடித்தளத்தை, எந்தவித சலசலப்போ அலப்பறையோ ஆரவாரமோ இல்லாமல் அவர் உருவாக்கி எழுப்பியிருக்கிறார்.  அவரது முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதை 1983இல் வெளிவந்த ‘செவ்வாய்க் கிழமை பிற்பகல் தூக்கம்’ என்று கணக்கில்கொண்டால், இப்போது 42 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 42 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்த்திருக்கும் கதைகளின் எண்ணிக்கை 32. நாவல்கள் 7, இலக்கியக் கோட்பாடு, மார்க்ஸின் ஆவி என இரண்டு புனைவல்லாத நூல்கள், மாயா ஆஞ்சலோவின் ஒரு கவிதைத் தொகுப்பு. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போதே நமக்குப் புரியும், ஒவ்வொரு ஆக்கத்துக்கும் எத்தனை காலத்தையும் உழைப்பையும் அவர் செலுத்தியிருக்கிறார் என்பது.

அவரது மொழியாக்கத்தில் வந்திருக்கும் படைப்புகளில் அவர் கையாண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் கூரிய கவனமும் தெரிவும் இருந்துள்ளன. குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு தமிழ்ச் சொல்லை இடும்போது தமிழ் சொற்களஞ்சியத்திலிருந்து ஆகப் பொருத்தமான ஒரு சொல்லையே அவர் தேர்ந்தெடுப்பார். அதற்காக அவர் மிகவும் மெனக்கெடுவதுண்டு. எனவேதான் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அவ்வளவு நேரத்தை அவர் செலவிட நேர்ந்திருக்கிறது. தன் இலக்கியப் பங்களிப்பு, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், தரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும் என்பதே அவரது எண்ணம். எத்தனை கதைகளை, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறோம் என்பதைக் காட்டிலும் எதையெல்லாம் புதிதாக தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஆரம்ப காலங்களில் சிற்றிதழ்களின் வழியாக க.நா.சு, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிரமன் போன்றோரும் பின்னர் சிவகுமாரும் அவரது காலத்தில் பங்களிப்பாற்றிய பிரம்மராஜன், சி.மோகன், சா.தேவதாஸ், அமரந்தா, திலகவதி, சாருநிவேதிதா, சுகுமாரன், ஜி குப்புசாமி போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் உருவாக்கிய அடித்தளத்தின் மீதுதான் தமிழின் இன்றைய மொழிபெயர்ப்புத் துறை ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உலக இலக்கியங்கள், குறிப்பாக நாவல்கள் தமிழில் பெரும் எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. நேரடியாக தமிழில் எழுதப்படும் புனைவுகளுக்கு இணையான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. கணிசமான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்பாளர்களும், அதிக அளவில் பெண்களும், உருவாகியுள்ளனர். மிகவும் வரவேற்கத்தக்க இந்தப் போக்கில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சற்றே கவலைப்படவேண்டிய சில புள்ளிகளும் உள்ளன என்பதையும் குறிப்பிடவேண்டும். மொழிபெயர்ப்பிலும் அந்த நூலை வெளியிடுவதிலும் காட்டுகிற வேகத்தை நூலின் மொழிசார்ந்த தரத்திலும் துல்லியத்திலும் காட்டினால் அது தமிழுக்கும் மொழியாக்கத்தை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்களுக்கும் நன்மை பயக்கும்.

முன்னோடிகளின் சாயல் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் இருக்கும். புதுமைப்பித்தனின் சாயலில்லாமல் தமிழில் எழுதும் எழுத்தாளர்களைக் காண்பது கடினம். அசோகமித்திரனும் தி.ஜானகிராமனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் தமிழ் உரைநடையில்  அத்தகைய செல்வாக்கை செலுத்தியுள்ளார்கள். அதேபோல, மொழிபெயர்ப்பாளனிடமும் முன்னோடி மொழிபெயர்ப்பாளனின் சாயலும் பாணியும் இருக்கும். அத்தகைய ஒரு வலுவான சாயலை, பாதிப்பை தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்படுத்தியிருப்பவர் சிவகுமார். தனிப்பட்ட வகையில் மட்டுமல்லாமல் பொதுவாக தமிழ் மொழிபெயர்ப்பிலும் சிவகுமாரின் ஆழமான பாதிப்பு உண்டு. புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் ஜானகிராமனும் சுராவும் தமிழ் உரைநடையில் செலுத்தியிருக்கும் செல்வாக்குபோல இன்றைய மொழிபெயர்ப்பாளர்களிடம் சிவகுமாரின் செல்வாக்கும் மிகவும் கணிசமானது, ஆழமானது, தவிர்க்கமுடியாதது.

உலக இலக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் என்பதும், துல்லியமும் சரளமும் மிக்க தனது மொழிபெயர்ப்புகளின் வழியாக தனக்கு அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களின் பணிகளில் ஆழமான செல்வாக்கு செலுத்தியிருப்பவர் என்பதும் சிவகுமாரின் இரு முக்கியமான, ஆழமான பங்களிப்புகள்.

 

செங்கதிர் மொழிபெயர்த்த எட்வர் கீரத்தின் ‘அவன் பறந்துபோய்விட்டான்’ செம்மைப்படுத்தும்பொருட்டு சிவகுமாரிடம் உதவியும் ஆலோசனையும் கேட்டோம். எட்வர் கீரத்தின் ஆங்கில மொழியாக்கத்தையும் செங்கதிர் மொழியாக்கம் செய்த பிரதியையும் பொறுமையாக வாசித்து, ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு தனது ஆலோசனைகளைத் தந்தார். அவர் திருத்தி, குறிப்புகள் எழுதிய அந்தப் பிரதியை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம். ஒரு மொழியாக்கத்தை செம்மைப்படுத்துவதற்கான கையேடாக அதை நாம் பயன்படுத்த முடியும். திருத்தி, குறிப்புகளை எழுதி அனுப்பிய பிறகு அதுகுறித்து தொலைபேசியில் உரையாடினோம். அப்போது மறுமுனையிலிருந்து ஒவ்வொரு திருத்தத்துக்கும் அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாதவை. ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லை அவர் முன்மொழியும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். மறுப்பு சொல்லமாட்டோம். ஆனால், அவர் அப்படியொரு தொனியில் அதை சொல்லவில்லை. ‘இதுக்கு பதிலா இப்பிடி இந்த சொல்லைப் போட்டு பாருங்களேன்’ என்றோ, ‘அந்த எடத்துல இந்த வார்த்தையப் போட்டா இன்னும் நெருக்கமா வரும்னு தோணுது’ என்றோ, ‘நீங்க போட்டிருக்கற சொல் சரியாத்தான் இருக்கு. ஆனா கதையில அந்த எடத்தை இன்னும் சரியா சொல்லணும்னா இந்த சொல்லைப் போடலாமே’ என்றோதான் மிக மென்மையாகவும் பொறுமையாகவும் குறிப்பிடுவார். அதாவது மொழிபெயர்த்தவர் எந்த விதத்திலும் தான் தவறுசெய்துவிட்டோம் என்று மனம் வருந்தக்கூடாதே என்ற கரிசனம் அந்தக் குரலில் தொனிக்கும். முக்கியமாக, ஆலோசனை கேட்கிறார்கள், நாம் நம்முடைய மேதாவித்தனத்தைக் காட்டுவோம் என்று குற்றம் சுட்டும் நக்கீரத்தனம் அவரிடம் துளியும் இருக்காது.

சில உதாரணங்களைச் சொல்லலாம். ‘old man’ என்ற சொல்லை வழக்கமாக நாம் ‘வயதான மனிதர்’ என்று நேரடியாக மொழிபெயர்ப்போம். ஆனால், ஆர்.சிவகுமார் அதற்கு பதிலாக இட்டிருந்த சொல் ‘முதியவர்’. ‘difficulty’ என்று வரும்போது நாங்கள் ‘கஷ்டம்’ என்று எழுதியிருந்ததை அவர் ‘சிரமம்’ என்று மாற்றியிருந்தார். ஒரு கதையின் இறுதியில் ஒரு வாக்கியம், ‘he is just a fish’ என்று இருந்தது. எங்களுடைய மொழிபெயர்ப்பு, அது மீன் மட்டும் தான். ஆனால், ஆர்.சிவகுமார் அதை இன்னும் மேம்படுத்தி, ‘அவர் வெறும் ஒரு மீன்தான்’ என்று மாற்றியபோது, கதையில் அந்த வாக்கியம் மேலும் தெளிவடைந்திருந்தது.

அண்மையில் இப்போது இங்கே வழங்கப்பட்டிருக்கும் இந்த சிறு வெளியீட்டை சரிபார்க்கும்பொருட்டு அவருக்கு அனுப்பிவைத்தோம். ஒருசில சொற்களை மாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். உதாரணத்துக்கு, ஒரு இடத்தில் ‘ஆகிய’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக அவர் ‘போன்ற’ என்ற சொல்லை இடும்படி கூறினார். அந்த வாக்கியத்தை சாதாரணமாக வாசிக்கும்போது இரண்டுக்கும் பெரிய அளவில் பொருள்வேற்றுமை இருப்பதை கவனிக்கமாட்டோம். ஆனால், நுட்பமான வேறுபாடு உண்டு.

மொழிபெயர்க்கும்போது சலிப்பில்லாமல் சோம்பல்படாமல் அகராதிகளை பயன்படுத்த வலியுறுத்துவார். குறிப்பிட்ட ஒரு அகராதி என்று இல்லாமல், சிறந்த அகராதிகளை அருகில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பார். ‘கேம்ப்ரிட்ஜ்’ அகராதி சிறப்பானது என்பது அவருடைய அனுபவம்.

எந்தவொரு கதையை அல்லது நாவலை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்தக் கதாசிரியர், அவருடைய கதைகளின் ஒட்டுமொத்த பின்னணி, கதைமொழி, எழுதப்பட்டிருக்கும் சூழல் போன்றவற்றை வாசித்துத் தெரிந்துகொள்வது முக்கியம் என்பதை அவர் தொடர்ந்து கூறியுள்ளார். அதன் வழியாகத்தான் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் idioms & phrases களை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்பாளர்களின் மிகப் பெரும் சவால் கதைகளில் உள்ள இத்தகைய மரபுத்தொடர்களை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றை தமிழில் பொருத்தமாக இடுவதுதான்.

 

2002ஆம் ஆண்டு ‘பிறமொழிக் கதைகள்’ வெளியானது. அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மீட்சி புக்ஸின் வெளியீடாக 1986ல் வெளியான ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில் ‘நம் காதலியை மூன்றாவது ஆள் மூலம் காதலிப்பது எப்படிப்பட்ட இழப்போ அப்படிப்பட்டதுதான் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பதும்’ என்று தாகூர் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். நினைவிலிருந்து மேற்கோள் காட்டியதால் ஒரு வார்த்தையைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். அதாவது, ‘மூன்றாவது ஆள் மூலம்’ என்பதற்குப் பதிலாக ‘வக்கீல் வைத்து’ என்று இருந்திருக்கவேண்டும். தாகூரின் வார்த்தை attorney. இழப்பை எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்’.

16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு நூலின் முன்னுரையில் தான் தவறாகக் குறிப்பிட்ட ஒன்றை நினைவில் வைத்து இப்போது எழுதுகிறார். யார் இதைக் கவனிக்கப் போகிறார்கள் என்று யோசிக்காமல், தவறாகக் குறிப்பிட்ட ஒன்றை எத்தனை வருடம் ஆனாலும் சரிசெய்யவேண்டும் என்ற தன்னுணர்வும் பொறுப்பும்தான் அவரை இப்போது இதைத் திருத்தச் செய்திருக்கிறது. அதுதான் சிவகுமாரின் குணம், தன்மை, மேன்மை. இந்த தனித்தன்மைமிக்க குணந்தான் அவரை ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் தலையாய ஒருவராக நம்மைக் கொண்டாடச் செய்கிறது. இந்த தன்னுணர்வை, பொறுப்பை அவரது மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிலும் பார்க்க முடியும்.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு கவிஞர் ஆனந்தகுமார் கவிதைக்கென ஒரு அச்சிதழைத் தொடங்கவிருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பைக் கண்டதும், சில வருடங்களுக்கு முன்பு ஆவநாழி மென்னிதழில் சிவகுமார் எழுதியிருந்த கட்டுரையொன்று நினைவுக்கு வந்தது. 1912ஆம் ஆண்டு சிகாகோவில் ஹேரியட் மன்றோ என்னும் கவிஞரால் தொடங்கப்பட்ட இந்த கவிதை இதழ் இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது. 114 ஆண்டுகளாக ஒரு கவிதை இதழ் வெளிவந்துகொண்டிருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது இல்லையா? சிவகுமாரின் அந்தக் கட்டுரை, பொயட்ரி இதழைக் குறித்த விரிவான அறிமுகத்தை அளிக்கும் ஒன்று. தமிழில் வெளியான முக்கியமான நல்ல கட்டுரைகளில் ஒன்று.

அடுத்த இதழில், ‘லிட்டில் ரெவ்யூ’ எனும் அமெரிக்க சிற்றிதழைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸஸ்’ நாவல் இந்த இதழில் தொடராக வெளியானதும், சர்ச்சைக்குரியதாக மாறி தடைசெய்யப்பட்டதையும் குறித்து கட்டுரை விவரிக்கிறது. அந்தக் கட்டுரைக்கு நடுவே சில வரிகளை சிவகுமார் எழுதியுள்ளார்.

‘உலகத்துக்கே பண்பாடு போதித்தவன் தமிழன் என்று வெற்றுப் பீற்றலுக்கு நம்மிடம் குறைவில்லை. நவீனத் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகனான புதுமைப்பித்தனின் பெயரை திருநெல்வேலியின் ஒரு சிறு தெருவுக்குச் சூட்டிவிட்டு அல்வா சாப்பிட்டு நம்மில் சிலர் மகிழ்ந்தோம். பலகோடித் தமிழர்களுக்கு அவர் யாரென்றே தெரியாது. ஆனால், ‘தமிள் வால்க’ என்று விதைப் பைகள் மேலேறி சிக்கிக் கொள்ளும் அளவுக்குக் கத்துவோம். ஓர் எழுத்தாளரை, ஒரு நாவலை அவர் புழங்கிய மொழிக்கூட்டம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதை அறிந்துகொண்டு உணர்ச்சி இருந்தால் நாணுவோம்.’

இந்த வரிகளைப் படித்தபோது சிவகுமாருக்கு தமிழ் மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதுமுள்ள பற்றும் அக்கறையும், அவற்றின் மீது தொடர்ந்து காட்டப்படும் உதாசீனத்தின் காரணமாக எழும் அறச் சீற்றமும் அவரின் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இன்னும் பல படிகள் மேலே உயர்த்துகின்றன.

 

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. அவர் லண்டனில் உள்ள  Fulham கால்பந்தாட்டக் கழகத்தின் தீவிர ரசிகர். அந்தக் கழகம் சார்ந்த எல்லா விஷயங்களையும் உற்று கவனிப்பவர். அவர்கள் விளையாடும் போட்டிகள், அதன் வீரர்கள், அணியின் மேலாளர், உடற்பயிற்சியாளர், அவர்கள் அணியும் உடை, களத்தில் மேற்கொள்ளும் உத்திகள், போட்டிகளில் செய்யும் நுட்பமான தவறுகள் என்று அத்தனை நுட்பங்களையும் அலசி ஆராய்ந்து அந்த அணிக்கான வலைதளத்தில் அவ்வப்போது தன் கருத்துகளை எழுதுவது அவரது வழக்கம். தொடர்ந்து எழுதி வரும் இவரது குறிப்புகளை கால்பந்தாட்டக் கழகத்தின் ஊடகப் பிரிவு கவனித்து வந்திருக்கிறது. தங்களது கால்பந்தாட்டக் கழகத்தின் மீது இத்தனை தீவிர அபிமானம் வைத்திருக்கும் இளைஞரை, ரசிகரை கௌரவிக்க முடிவு செய்தது. இளைஞருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தங்களது அணியின் பயிற்சிகளையும், ஒரு போட்டியையும் காண்பதற்கான வாய்ப்பை அந்த இளைஞருக்கு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. போக்குவரத்து, தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளையும் அந்தக் கழகமே ஏற்றுக்கொள்ளும்.  Fully sponsored trip. இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி. இளைஞர் தன்னுடன் தான் விரும்பும் இன்னொருவரையும் அழைத்துவரலாம் என்பது.

இளைஞன் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான், தன் தந்தையை.

இருவரும் லண்டன் சென்றனர். தன் விருப்பத்துக்குரிய கழகத்தின் போட்டிகளை, பயிற்சியை நேரில் கண்டுகளித்தான் இளைஞன். அதன் பிறகு விம்பிள்டன் மைதானம், லார்ட்ஸ் மைதானம், லண்டன் அருங்காட்சியகம் என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். மார்க்ஸின் கல்லறைக்கும் அப்பாவை அழைத்துச் சென்றார்.

லண்டன் புல்காம் கால்பந்தாட்டக் கழகத்தால் கௌரவிக்கப்பட்ட அந்த இளைஞனின் பெயர் சித்தரஞ்சன். அவருடைய அப்பாவின் பெயர் ஆர்.சிவகுமார்.

ஆர்.சிவகுமார் நேர்காணல்களில் தன் தந்தையைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அவர்தான் தன் ஆதர்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘தருநிழல்’ எனும் அவரது முதல் நாவலின் கதை நாயகனே அவருடைய தந்தையார்தான். தன் தந்தைக்கு எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க அவர் விரும்பினாரோ அதுபோலவே தனது பிள்ளைக்கும் ஒரு நல்ல தந்தையாக அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான தெளிவான சாட்சியம்தான் மேலே குறிப்பிட்டிருக்கும் சம்பவம்.

ஆர்.சிவகுமார் என்னும் ஆசிரியரை நாம் அறிவோம். அவரது நாவலின் மூலமாக அவரது தந்தையை அறிந்தோம். அவரது மகனின் இந்தச் செயல் வழியாக ஆர்.சிவகுமாரும் போற்றுதலுக்குரிய ஒரு தந்தையாகவே இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

 

ஆர்.சிவகுமார் ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல. அவர் தன் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் வழியாக வலுவான அடிப்படைகளை உருவாக்கித் தந்திருக்கிறார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் மீது ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இயலின் முதன்மை கலைஞர்களில் ஆர்.சிவகுமாரும் ஒருவர்.

தமிழில் மொழிபெயர்ப்புகள் பெருமளவில் வெளியாகும் இச்சூழல், ஆர்.சிவகுமார் போன்ற மொழிபெயர்ப்புக் கலைஞர்களின் நீண்ட கால, கடும் உழைப்பின் பலனால் விளைந்தது. இந்தியாவின் பிற மொழிகளிலிருந்தும், உலக மொழிகளிலிருந்தும் படைப்புகளை தமிழில் தருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் சமயத்தில், ஆர்.சிவகுமார் போன்ற முன்னோடிகள் உருவாக்கித் தந்திருக்கும் அடிப்படைகளை மனத்தில் கொள்வதும், ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத வாசகனுக்காகவே மொழிபெயர்க்கிறோம் என்பதை கவனத்தில் வைத்து, சரியான நேர்த்தியான மொழிபெயர்ப்பை தர முயல்வதுமே அத்தகைய முதன்மை மொழிபெயர்ப்புக் கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

0

(  22.02.2026 அன்று சென்னையில், ஆர்.சிவகுமார் அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடும் விதமாக அகரமுதல்வனின் ‘ஆகுதி’ அமைப்பு நடத்திய ‘மொழிபெயர்ப்பின் நிறம்’ கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை )

 

  

  

 

 

 

 

 

 

 

                                                           

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...