Thursday, 17 September 2026

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

 



அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு வயது 94. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், மக்கள் வாழ்வில், அரசியலில், இலக்கியத்தில், கல்விப் புலத்தில் நடந்த மாற்றங்களுக்கான நேரடி சாட்சி.

க.ரத்னம் கோவையில் கீரணத்தம் கிராமத்தில் பிறந்தவர். அந்த கிராமத்துக்கு அருகில் ஒன்று குன்று உண்டு. இரத்தினகிரி என்ற அந்த குன்றுதான் இவருக்கு ரத்னம் என்று பெயரிடக் காரணமானது. புகழ்பெற்ற ‘கல்லும் மண்ணும்’ நாவல் இந்தக் குன்றின் பின்னணியில்தான் எழுதப்பட்டது.

கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அதிக நாட்கள் அவர் கிராமத்திலோ வீட்டிலோ வசிக்கவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே வீட்டை விட்டு வெளியே தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை. படித்து பட்டம் பெற்று பணியிலிருந்த காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வேலை பார்த்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோதிலிருந்தே வாழ்க்கை இழுத்துச் செல்லும் வழியில் சென்றிருக்கிறார். இடம் கிடைத்த பள்ளியிலும் கல்லூரியிலுமாக கிடைத்த பட்டப் பிரிவிலேயே சேர்ந்து படித்திருக்கிறார். இதுதான் வேண்டும் என்று திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.

அவருடைய தந்தை அவரை ஒரு பொறியாளராக்கவே விரும்பினார். தந்தையார் ஒரு ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரைப் படித்து ஆசிரியப் பயிற்சி பெற்று பணியிலிருந்தவர். ஆனால், அவர் விவசாயத்தை கவனிக்கவில்லை என்பதற்காக அப்பச்சி அவருடைய சான்றிதழைக் கிழித்துப் போட்டு ஏர்பிடிக்க வைத்தார். அந்த கோபத்தினாலோ என்னவோ தன் மகனை அவர் படிக்கவைக்க வேண்டுமென முடிவெடுத்தார். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியை குரும்பப்பாளையத்திலும்,.  ஆறு முதல் எட்டு வரை இடிகரை நடுநிலைப் பள்ளியிலும் ஒன்பது முதல் பனினொன்று வரை கோவை மைக்கேல்ஸ் பள்ளியிலும் படித்து முடித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட். இலக்கணம் வரலாறு உள்ளிட்ட நான்காவது பிரிவில் படித்தார்.  

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸை முடித்த கையோடு சில மாதங்களிலேயே 1955ஆம் ஆண்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அதன் பிறகு இராமநாதபுரம், கும்பகோணம், முசிறி, தஞ்சாவூர் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 



கும்பகோணத்தில் வசித்த காலம், அவரது வாழ்வில் பல முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய காலம். அப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்குகிறார். பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார். 1961 ஆம் ஆண்டு ‘தாத்தா எங்கே போகிறார்’ என்ற முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகிறது. தொடர்ந்து கதைகள் தீபம், குமுதம், குங்குமம், அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியாகின்றன.

1962ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ்ப் புத்தாண்டு மலரில் முத்திரை கதையாக ‘விளையாட்டு மைதானம்’ வெளிவருகிறது.  விகடனில் ஜெயகாந்தனின் கதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவந்த காலம் அது.

தொடர்ந்து கதைகள் வெளியாகும்போது அதைத் தொகுப்பாக்கிப் பார்க்கலாம் என்று ஆசை வருவது இயல்புதான். சென்னையில் முல்லை முத்தையாவின் தமிழகம் பதிப்பகம், பதிப்புத் தொகையாக ரூ.500ஐ பெற்றுக்கொண்டு அவரது முதல் வசன கவிதைத் தொகுப்பு ‘பேதை நெஞ்சம்’ வெளியிட்டது.  ஆனந்தவிகடனில் வெளியான 80 உருவகக் கதைகளைக் கொண்ட 80 பக்க நூலினையும் முல்லை முத்தையாவே வெளியிட்டார்.

‘நினைவின் நிழல்’ என்ற கடித வடிவிலான நாவலையும் பிறகு ‘கல்லும் மண்ணும்’ நாவலையும் வள்ளுவர் பண்ணை பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீடு தொடர்பாக வள்ளுவர் பண்ணை பழனியப்பன் அவர்களை அணுகியபோதுதான் அய்யாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இவர் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு பதிப்பாளர் பழனியப்பன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் அலமாரியிலிருந்து ஒரு நூலை எடுத்துத் தருகிறார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் அது. புலவர் கோவிந்தன் மொழிபெயர்த்தது. இந்த நூலை வெளியிட்டதில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் ஒரு சின்ன பிரச்சனை. முதல் இரண்டு அத்தியாயங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக முன்பே மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. அதை அப்படியே இந்த நூலில் பயன்படுத்தியிருப்பதுதான் விவகாரம். எனவே இதற்கு தீர்வாக முதல் இரண்டு அத்தியாங்களை வேறொருவரைக் கொண்டு புதிதாக மொழிபெயர்த்து சேர்க்கவேண்டும். ‘இந்த இரண்டு அத்தியாயங்களை நீங்கள் மொழிபெயர்த்துக் கொடுங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்பை நான் வெளியிடுகிறேன்’ என்கிறார் பழனியப்பன். வேறு வழியில்லாமல் ரத்னம் அய்யா ஒப்புக்கொள்கிறார்.

ஒரு எழுத்தாளனை மொழிபெயர்ப்பாளனாக மாற்றியது விதி.

ஒப்புக்கொண்டபடி, 12 கதைகளைக் கொண்ட தொகுப்பை ‘நினைவுப் புற்று’ என்ற பெயரில் வள்ளுவர் பண்ணை வெளியிட்டது. அதற்கு நூலக ஆணையும் கிடைக்கிறது. இந்த வகையில் பதிப்பாளர் அய்யாவுக்கு தரவேண்டிய தொகை ரூ.2400. ஆனால், பதிப்பாளர் புதிதாக வீடு கட்டி பண கஷ்டத்தில் இருந்தபடியால் அந்தக் காசை கொடுக்கவில்லை. புத்தக வெளியீட்டில் மறுபடியும் நஷ்டம்.

ஆனால், விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது.

வள்ளுவர் பண்ணை பழனியப்பன் தனது புதிய வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைப்பு விடுக்கிறார். பணத்தை அவர் கொடுக்கவில்லை என்பதை பொருட்டாக எண்ணாமல் விழாவுக்கு சென்னை செல்கிறார் ரத்னம் அய்யா. விழா முடிந்தவுடன் சென்னை மாநிலக் கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றும் நண்பர் சேதுவைக் காணச் செல்கிறார். கல்லூரிக்கு சென்ற நேரம் நண்பருக்கு பாடவேளை என்பதால் நூலகத்தில் காத்திருக்கும்படி சொல்கிறார். அலமாரியிலிருந்து நூல்களைப் பார்க்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு புத்தகம் அவரது கவனத்தைக் கவர்கிறது. எடுத்துப் பார்க்கிறார். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்குகிறார். நண்பர் சேது வகுப்பு முடிந்து வந்தவுடன் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுச் செல்லும்போது அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்துவிட்டு திருப்பித் தருவதாகச் சொல்கிறார். நண்பரும் சம்மதிக்கிறார். புத்தகத்துடன் விடுதி அறைக்குத் திரும்பியவர், இரவு பகலாக அந்த நூலைப் படித்து முடிக்கிறார்.

அந்தப் புத்தகம் பர்டன் ரோஜர் என்கிற அமெரிக்க அறிஞர் எழுதிய ‘ஹவ் டு வாட்ச் பேர்ட்ஸ்’. பறவை பார்ப்பவர்களுக்கான நூல். அய்யாவை பறவைகளின் உலகத்துக்கு உடனடியாக இழுத்துச் செல்கிறது அந்தப் புத்தகம். பறவை பார்ப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்களை அந்த நூல் பரிந்துரைக்கிறது. முதலாவது, ஒரு பைனாகுலர் வேண்டும். இரண்டாவது, பறவைகள் கையேடு. அன்று மதியமே பிராட்வேக்கு சென்று காமிராக்கள், பைனாகுலர்கள் விற்கும் கடையில் ஒரு பழைய பைனாகுலரை 120 ரூபாய் விலைக்கு வாங்குகிறார். குதிரைப் பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பைனாகுலர். அங்கிருந்து மவுண்ட் ரோடில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை. பறவைகள் கையேடுகளைத் தேடுகிறார். சாலிம் அலியின் ‘Handbook of Indian Birds’ என்ற நூலைப் பார்க்கிறார். உடனே வாங்கிக் கொள்கிறார். மாலையில் நண்பர் சேதுவைச் சந்தித்து இரவல் வாங்கிய புத்தகத்தை ஒப்படைக்கிறார். பைனாகுலரையும் சாலிம் அலியின் புதிய புத்தகத்தையும் பார்த்த நண்பர் சேது வியந்துபோய் சொல்கிறார் ‘ஒரே நாளில் இப்படி பைத்தியமாகிறவர்களை நான் பார்த்ததில்லை.’

கும்பகோணத்துக்கு திரும்பியவரிடம் பைனாகுலர் இருப்பதைக் கண்ட மனைவி கேட்கிறார் ‘ரேசுக்கு போனீங்களா?’. அந்தக் காலத்தில் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர்கள்தான் பைனாகுலர் வைத்திருப்பார்கள். ‘பறவைகள் பார்க்கப் போகிறேன். அதற்காக வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னவரை வியப்புடன் பார்த்துவிட்டு ‘மனுசனுக்குக் கிறுக்குப் புடிச்சிருச்சு’ என்று முணுமுணுக்கிறார்.

நண்பர் சேது சொன்ன பைத்தியக்காரத்தனமும், மனைவி குறிப்பிட்ட கிறுக்குத்தனமும் சேர்ந்துதான் தமிழகத்துக்கு அரிய ஒரு பறவையியல் நூலைத் தந்திருக்கிறது.

மறுநாள் விடிகாலையிலேயே கீழ் அணைக்கரைச் சாலையில் பைனாகுலருடன் பறவைப் பார்த்தலைத் தொடங்கினார். முதல் நாளிலேயே மஞ்சள் சிட்டு, கொண்டைக் குருவி என புதிய இரண்டு பறவைகளைப் பார்க்கிறார். கல்லூரிக்கு சென்று ஒரு குறிப்பேட்டில் தேதியிட்டு தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தார். பறவை பார்ப்பவர்கள் அனைவரிடமும் அப்படியொரு பட்டியல் இருக்கும். அதற்கு ‘வாழ்நாள் பட்டியல்’ Life List என்று பெயர். அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து பேணி வந்தார். கும்பகோணம், கொள்ளிடம், அணைக்கரை ஆகிய இடங்களிலும் ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய கடற்கரைகள், ராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த கண்மாய்கள், காஞ்சிரங்குளம் என்று பல்வேறு பகுதிகளில் சுற்றிப் பார்த்து தொடர்ந்து பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சேகரித்தார்.

இதன் பிறகு 1970களில் இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் பணியிலிருந்தபோது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் படங்களுடன்கூடிய பறவைகள் கையேடு ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காரியத்தை ஒப்புக்கொண்டு பதில் அனுப்பிய கையோடு மதுரைக்குச் சென்றார். பழைய கேமரா ஒன்றை மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். ஒரு தோளில் பைனாகுலரும் இன்னொரு தோளில் கேமராவுமாய் இரண்டு வருடங்கள் அலைந்தார். எடுத்த படங்களை அச்சிட்டுப் பார்த்தபோது அவருக்கு ஒன்று புரிந்தது, பைனாகுலர், கேமரா இரண்டையும் வைத்துக்கொண்டு பறவைகளைப் பார்ப்பதால் எதுவும் உருப்படியாக நடக்காது என்பது. எனவே, காமிராவை வாங்கிய அதே மூவாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 450 பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை படங்களோடு அனுப்பி வைத்தார். ‘தென்னிந்தியப் பறவைகள்’ என்ற பெயரில் 500 பக்க நூலை 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பாட நூல் கழகம் வெளியிட்டது. பறவையியலில், பறவைகள் பார்ப்போர்களுக்கென தமிழில் வெளியான முதல் நூல் இதுதான். அப்படியொரு நூல் அதுவரை தமிழில் எழுதப்படவில்லை. அதுவரையிலும் தமிழகத்தில் உள்ள பறவைகளைப் பற்றி இரண்டே புத்தகங்கள்தான், அதுவும் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தன. 


 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவை திருச்சி சாலையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களை சந்திக்கிறார் ரத்னம் அய்யா. ‘இப்போது அச்சில் இல்லாத உங்களுடைய பறவைகள் நூலை வண்ணப் படங்களுடன் பதிப்பிக்க விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். நல்லவொரு ஓவியரைக் கொண்டு பறவைகளின் படங்களை வரைந்து, வண்ணத்தில், உயர்தர தாளில் அச்சிடலாம் என்று யோசனை சொல்கிறார். உடனடியா சரவணகுமார் என்ற ஓவியரை அணுகி படம் வரைய ஏற்பாடு செய்கிறார். இதற்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை முன்பணமாக அளிக்கிறார் மெய்யப்பன்.

330 பறவைகளின் படங்கள் விபரங்களுடன் கெட்டி அட்டையுடன் அச்சிடப்பட்டது. ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் வெளியான அந்த நூலுக்கு தியோடர் பாஸ்கரன் முன்னுரை வழங்கியிருந்தார். இதன் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டு வெளியானது.

பறவை ஆர்வலர்கள், பறவைகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு கொள்ள உதவும் வகையில் அவற்றின் வடிவம், வண்ணம், வாழுமிடம், குரல், உணவு ஆகிய அனைத்து விபரங்களையும் பறவையியல் அறிவியலின் நெறியை ஒட்டி விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பும் உண்டு.

‘ஒரு புத்தகம் வாழ்க்கையையே மாற்றும்’ என்று சொல்வார்கள். க.ரத்னம் அவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது உண்மைதான். பர்டன் ரோஜரின் பறவை பார்த்தல் பற்றிய புத்தகம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பலனாக தமிழில் அருமையான ஒரு பறவையியல் நூல் கிடைத்தது. இப்போதும் இந்த விலைமதிப்பில்லாத நூல் மணிவாசகர் பதிப்பகத்தில் கிடைக்கிறது. உங்கள் எல்லோரின் வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.

 

வள்ளுவர் பண்ணைக்காக கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களை மொழிபெயர்க்க நேர்ந்ததே அவரை மொழிபெயர்ப்பை நோக்கித் திருப்பியது என்று சொன்னேன். ஆனால், தமிழ் இலக்கிய, மானுடவியல் வரலாற்றில் க.ரத்னம் அவர்களுக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்திருக்கும் இன்னொரு முக்கியமான நூல் உண்டு. அந்த நூலை அவர் மொழிபெயர்க்க காரணமாக அமைந்ததும் தற்செயலானதுதான். க.ரத்னம் அவர்களின் வார்த்தையில் சொல்லப்போனால் விபத்துதான்.

1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களுக்கு நல்கை தரப்படுவதை அறிந்து தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்வதாக தனது திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. காரணத்தை அறியும்பொருட்டு துணைவேந்தர் வ.அய்.சுப்ரமணியத்தை சந்திக்கிறார். தனது விண்ணப்பத்தைப் பற்றி கேட்டவுடன், துணைவேந்தர் ‘அந்த ஆய்வை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான காரியம் உள்ளது. நீங்கள் எட்கர் தர்ஸ்டனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்கிறார். அவரைப் பற்றியும் அவருடைய முக்கியமான நூலைப் பற்றியும் தெரியும் என்றவுடன், அவர் எழுதிய ஏழு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும், உடனே வேலையைத் தொடங்குங்கள் என்கிறார் துணைவேந்தர். நூலகத்திலிருந்து முதல் தொகுதியை எடுத்து இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றும் சொல்கிறார். உடனடியாக வேலையைத் தொடங்குகிறார் ரத்னம் அய்யா. இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தவுடன் அதைப் படித்துப் பார்த்து திருப்தியடைந்த துணைவேந்தர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மொழிபெயர்த்தவற்றை எடுத்துக் கொண்டு வந்து சந்தியுங்கள் என்கிறார். ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிவிட்டதே’ என்று எண்ணியவாறே வீட்டுக்கு வந்தவர் மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு மொழிபெயர்ப்பில் ஆழ்ந்து விடுகிறார்.

எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலேய அதிகாரி. 1885 முதல் 1908 வரை மெட்ராஸ் கவர்மென்ட் மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அப்போதிருந்த ஆங்கில அரசு அனைத்து மாகாணங்களும் தங்களது மாகாணத்தில் இனவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதற்கான பொறுப்பு அதிகாரியாக தர்ஸ்டன் நியமிக்கப்படுகிறார். இதற்காக அவர் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறார். பலரோடு கடிதங்கள் எழுதி தனது ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறார். வழக்காறுகள், நாட்டார் கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், அரசு ஆவணங்கள், மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைகள், பயணக் குறிப்புகள், நாளேடுகள் ஆகிய அனைத்திலிருந்தும் இனவியல் மற்றும் சாதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தொகுக்கிறார்.

இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடங்கி, தென் தமிழகத்தைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விபரங்கள், 2000க்கும் அதிகமான பக்கங்களுடன் ‘Castes and Tribes of South India’ என்ற பெயரில் ஏழு தொகுதிகளாக தொகுக்கப்பட்டு 1909ஆம் ஆண்டு வெளியாயின.

இந்த ஏழு தொகுதிகளின் சில பகுதிகளை மட்டும் சுருக்கித் தமிழில் வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையாபிள்ளை. ஆங்கிலேய அதிகாரி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை இப்போது தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன?

பழங்குடிகள், மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்தன. நடைமுறைப்படுத்தின. அவ்வாறான பணிகளுக்கு குறிப்பிட்ட மக்களைக் குறித்த முழு விபரங்களையும் வரலாற்றியல் சமூகவியல் இனவியல் நோக்கில் அறிந்துகொள்வது முக்கியம் என்பதைக் கருத்தில்கொண்டே உதகமண்டலத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மலையின மக்கள் ஆய்வு மையத்தை துணைவேந்தர் தொடங்கிவைத்தார். அதன் ஒரு பகுதியாகவே இந்த மொழியாக்கப் பணியும் அமைந்திருந்தது.

துணைவேந்தர் சொன்னபடி சுறுசுறுப்பாக முழுமூச்சுடன் மொழியாக்க வேலையில் ஈடுபடுகிறார்.

முதல் மூன்று தொகுதிகள் அச்சாகின்றன. துணைவேந்தரின் ஆறு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறுகிறார். நான்காவது தொகுதி அச்சில் இருக்க, ஐந்து ஆறாவது தொகுதிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ஏழு இன்னும் பாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்கிறார். அவரிடம் சென்று அச்சான தொகுதிகளைத் தந்து விபரங்களைத் தெரிவிக்கிறார். அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

முதல் மூன்று தொகுதிகள் 1986, 1987ஆம் ஆண்டுகளில் வெளியாயின. நான்காம் தொகுதி வெளியானது 1993ஆம் ஆண்டு. அதாவது ஆறு ஆண்டுகள் கழித்து. அத்துடன் சரி. மீதியிருந்த மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தும் அதை வெளியிடுவதில் அக்கறை காட்டப்படவில்லை. இதற்கிடையில் 1999ஆம் ஆண்டு அய்யா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

புதிய துணைவேந்தராக சுந்தரமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, இந்த நூலின் முக்கியத்துவத்தையும் ரத்னம் அவர்கள் மொழிபெயர்ப்புக்கு செலுத்திய உழைப்பையும் உணர்ந்து 2003ஆம் ஆண்டு ஐந்து, ஆறாம் தொகுதிகளை வெளியிட ஏற்பாடு செய்தார். கடைசி ஏழாவது தொகுதி சி.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஒரு மனிதர் 5 ஆண்டுகாலம் உழைத்து 4000க்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்த நூல்களை அச்சில் முழுமையாகக் காண 18 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமலிருந்த இந்த நூல் தொகுதிகள் இப்போது கிடைக்கின்றனவா என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஏழு தொகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்த பிறகு, ஒப்பந்தப்படி தனக்கான ஊதியத்தை வழங்கக் கோரி விண்ணப்பிக்கிறார் அய்யா. ஆங்கிலச் சொல் ஒன்றுக்கு பத்து பைசா என்பதுதான் ஊதியம். அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.21000. இதில் காகிதம், மை, தட்டச்சுக் கூலி ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஐந்தாண்டு உழைப்புக்கு அவருக்குக் கிடைத்த கூலி, வயலில் களை பிடுங்கும் தொழிலாளியின் ஒரு நாள் கூலியை விடக் குறைவு என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், தான் ஒப்புக்கொண்ட காரியத்தை பொறுப்புடன் நிறைவேற்றிக் கொடுத்த மனநிறைவு அவருக்கு உண்டு. அதிகாரிகள் அவரை அலட்சியப்படுத்தினாலும் அவர் தன் காரியத்தில் பின்வாங்கவில்லை. அச்சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய காரியத்தை மேற்கொண்டு மொழிபெயர்த்து முடித்து ஒப்படைத்துவிட்டார். அந்தப் பொறுப்பும் அவரது உழைப்பும்தான் தமிழில் மானுடவியலுக்கு அபாரமான ஒரு நூல் தொகுதியை சாத்தியப்படுத்தியுள்ளன. க.ரத்னம் அவர்களின் சாதனை நூலாக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் கொண்டாடப்படும்.

முழுமையான இலக்கியவாதியாக நிறைய கதைகளை எழுதவேண்டும் என்று நினைத்தார். ஆனால், மொழியாக்கப் பணி அவரது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டது என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற இந்த பெருநூல் தொகுதி அவருடைய சாதனைகளில் தலையாயது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இதுமட்டுமல்லாமல் எண்பது வயதுக்குப் பிறகு உலக இலக்கிய மேதைகளின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுகதை மேதை என்று கொண்டாடப்படும் ஆன்டன் செகாவின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ‘மனபிராந்தி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளின் நகரத்தார்’ என்ற தொகுப்பு மிகவும் சிக்கலானது. வரலாற்று பெருமை மிக்கது. அந்த சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்திருக்கிறார்.


அவரிடம் உள்ள புத்தக சேகரிப்பு இன்னொரு கிடைத்தற்கரிய புதையல். கும்பகோணத்தில் வசித்த காலத்திலிருந்தே அரிய பழைய பதிப்புகளைத் தேடிச் சேகரிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1940இல் வெளியான புதுமைப்பித்தன் கதைகள் முதல் பதிப்பு அவரிடம் உள்ளது. அதிலிருந்த அகல்யை கதை அவரை பெரிதும் ஈர்த்தது. அகல்யையை வைத்து அதுவரையில் எழுதப்பட்டவற்றைத் தேடித் தொகுத்தார். காவியத்தில், மேடையில், கதையில், கவிதையில் என்று பிரித்து விமர்சன நோக்கில் அவற்றின் நிறைகுறைகளைக் கட்டுரையாக்கினார். ‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்ற தலைப்பில் புத்தகமானது. 1998. வால்மீகி, வியாசர், கம்பன், கு.பா.ரா, ஏ.ஆர்.ராஜகோபால், மாடர்ன் தியேட்டர்ஸ் குழு, வ.ரா, பிரபஞ்சன், துவிஜேந்திரலால் ராய், புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், சிட்டி, டி.கே.சீனிவாசன், ச.து.சு.யோகியார், ந.பிச்சமூர்த்தி, ஞானி, சிற்பி, மஹாகவி, வாலி, தாகூர், முருகுசுந்தரம் ஆகியோரது படைப்புகள் அதில் உள்ளன.

சிறுகதை முன்னோடிகள் – புகழ்பெற்றிராத தொடர்ந்து கதைகள் எழுதாத ஆனால் சில நல்ல கதைகள் எழுதியவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்டது. நாரண துரைக்கண்ணன், சங்கர ராம், கி.சந்திரசேகரன், புரசு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் நீலகண்டன் 1949இல் ‘இசைவாணி’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

புதுமைப்பித்தன் மீது மிகப் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரது பழைய பதிப்புகளை சேகரித்து வைத்துள்ளார். ‘ஸ்டாலினுக்கும் தெரியும்’ என்ற தலைப்பிலான கட்டுரை நூலை 1991இல் பதிப்பித்திருக்கிறார்.

அவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியலிலிருந்து 1961ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 65 ஆண்டு காலத்தில் இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடியும். சிறுகதை, நாவல், கவிதை, மொழியாக்கம், விமர்சனம், கட்டுரை என்று எல்லா வகையான நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் மாமேதை தஸ்தாவெஸ்கியின் The Possessed என்ற 500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அவரிடம் பேசும்போது தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி உற்சாகத்துடன் கூறுவதைக் கேட்க முடியும்.

ஒரு மனிதன் வாழ்நாளில் செய்த சில காரியங்களின் வழியாகவே மதிக்கப்படுகிறான், நினைக்கப்படுகிறான். அந்த வாழ்க்கையும் பொருள்மிக்கதாகிறது. அந்த வகையில் க.ரத்னம் அவர்கள் 65 ஆண்டு காலம் தமிழ் மொழிக்கும் புனைவுக்கும் மொழியாக்கத்துக்கும் மானுடவியலுக்கும் பறவையியலுக்கும் தன்னுடைய எழுத்தின் மூலமாக அளித்திருக்கும் பங்களிப்பு என்பது அளப்பரியது. போற்றத்தக்கது. மதிக்கத்தக்கது. தன் பங்களிப்புகளின் வழியாக தமிழ் இலக்கியத்திலும், வரலாற்றிலும் தன்னுடைய பெயரை அவர் காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செதுக்கி வைத்துவிட்டார். இன்று அவருக்கு இங்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்பது மிகப் பொருத்தமானது, பெருமைமிக்கது. இதன் மூலம் இதுவரை அவரைப் பற்றி அறியாதவர்களும், இன்றைய தலைமுறையும் அவரையும் அவரது சாதனைகளையும் தெரிந்துகொள்வார்கள் என்றால் அதுவே இன்னும் மிகப் பெரிய விருதாக அமையும்.  

(கோவை கொடீசியா புத்தகத் திருவிழா 2026 இல், க.ரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஆற்றிய உரை )

 

 

 

 

 

                                                                    

 

 

சிறுகதை வரலாற்றில் காலச்சுவடு

 


0

தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு குறித்து எழுத்து பற்றியும் பெரும் கனவுகளைக் கொண்டிருந்தவர் சுந்தர ராமசாமி. தன் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டிருந்தார். தனது கனவுகளையும் எண்ணங்களையும் செயல்படுத்தும் முகமாக காலச்சுவடு இதழைத் தொடங்கினார். ஜனவரி 1988ஆம் ஆண்டு வெளியான முதல் இதழில் ‘கனவுகளும் காரியங்களும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கத்தின் முதல் வரி இது. ‘காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ் ஆகும்.

சுந்தர ராமசாமியில் தொடங்கப்பட்ட ’காலச்சுவடு’ காலாண்டிதழாக எட்டு இதழ்கள் வெளியாயின. 1992ஆம் ஆண்டில் அதிக பக்கங்களைக் கொண்ட சிறப்பிதழுடன் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.

தமிழ்ச் சிந்தனையிலும் இலக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இதழ் இவ்வாறு நிறுத்தப்பட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதழ் நிறுத்தப்பட்ட பின்புதான் அது இல்லாமல் போன வெற்றிடத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பும் முனைப்புடனும் தமிழில் இன்னுமொரு இலக்கியச் சிற்றிதழாக அல்லாமல் அனைத்து சிந்தனைத் தரப்பினருக்குமான முழுமையான ஒரு இதழாக உருவாக்கும் திட்டத்துடனும் காலச்சுவடு மீண்டும் வெளியானது. இந்த முறை இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன். அவரது முயற்சியால் அக்டோபர் 1994இல் இரு மாத இதழாக மீண்டும் வெளியாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் கண்ணனுடன் மனுஷ்யபுத்திரனும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றனர். பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் ஆதவன், தேவிபாரதி, அரவிந்தன், நஞ்சுண்டன், பெருமாள் முருகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இதன் பொறுப்பாசிரியராக கவிஞர் சுகுமாரன் செயலாற்றுகிறார். 2004ஆம் ஆண்டு முதல் மாத இதழாக வெளியாகத் தொடங்கி இப்போது முப்பது ஆண்டுகளை முழுமை செய்திருக்கிறது. ஆகஸ்டு 2026இல் 320வது இதழ் வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பத்திரிகை வரலாற்றில் இதுவொரு மைல்கல். மூன்று தலைமுறைகளைக் கடந்து அச்சுத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன ஊடகங்களின் பரிணாமம், வாசிப்பில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள் என அனைத்துவிதமான சவால்களையும் தாண்டி தனது தனித்தன்மையில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் காலச்சுவடு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது ஒரு பெரும் சாதனை. தமிழின் பெருமை. இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் இலக்கிய அரங்கில் காலச்சுவடு என்பது தமிழின் அடையாளமாக அறியப்படுவதற்கு பின்னால் இத்தனை நீண்டகால உழைப்பும் உறுதியான செயல்திறனுமே உள்ளன.

ஒரு மொழியில் முப்பது ஆண்டுகளாக வெளியாகும் ஒரு இதழ் அந்த மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். காலச்சுவடு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகையதொரு பெரும் பங்களிப்பைத் தந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளாக வெளிவந்திருக்கும் காலச்சுவட்டின் முந்நூறு இதழ்களையும் பார்க்கும் ஒருவரால் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

முப்பது ஆண்டுகளில், முந்நூறுக்கும் மேற்பட்ட இதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரை கதைக்களம், மொழி, வடிவம், உரையாடல்கள் போன்ற ஆதாரமான இலக்கணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கவனிக்க முடியும். தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கின் படிநிலைகளையும் அதற்கு பங்களித்திருக்கும் வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளர்களையும் அறிந்துகொள்ள முடியும்.

காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ள இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா அல்லது வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கதைகள் இவ்விதழில் வெளிவந்தனவா என்ற கேள்வி முக்கியமானது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்து கொள்வது. இதழ்களில் வெளியாகும் கதைகள் வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் வரலாற்றில் நிகழும் மாற்றங்கள் இதழ்களில் வெளிவரும் கதைகளையும் போதுமான அளவில் பாதிக்கும்.

1994ஆம் ஆண்டில் காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கிய காலம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு குழப்பமான சமயம். எத்தகைய பாதையில் அது முன்னகர வேண்டும் என்ற தெளிவில்லாத காலம். மாய யதார்த்தம், பின் நவீனத்துவம், புதுவகை எழுத்து முறை போன்ற இலக்கியம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகள் புனைவெழுத்தாளர்களிடையே பெரும் சவாலை முன்னிறுத்தியிருந்தன. யதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது என்று உரக்கச் சொல்லப்பட்டது. நேரடியான மொழியில் இயல்பாகக் கதை சொன்னால் அதை யாரும் சீண்ட மாட்டார்களோ என்ற வலுத்த சந்தேகம் எழுந்திருந்தது. எனவே, கதை சொல்லும் முறையில் புதிய பரிசோதனைகளைச் செய்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் எழுந்தது. புதிய வடிவிலும் புதிய மொழியிலும் கதைகள் எழுதப்பட்டன. அதுவரையிலும் யதார்த்தவாதக் கதைகளின் மூலம் தங்களுக்கென ஒரு புனைவுலகை உருவாக்கி வைத்திருந்த எழுத்தாளர்களுமேகூட இத்தகைய சூழலுக்கேற்ப புதிய பாணியில் கதைகளை எழுத வேண்டிய நிலை உருவானது.

சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வின் பாடுகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் கதைக் களங்கள் காலாவதியாகிவிட்டன என்ற எண்ணம், புதியக் கதைக் களங்களை நோக்கித் திரும்பச் செய்தது. இது கதை சொல்லும் உத்தியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

மீண்டும் இதழ் தொடங்கப்பட்ட காலத்தில் வெளியான கதைகளைக் கவனித்தால், தமிழ்ச் சிறுகதையில், குறிப்பிட்ட அந்தக் காலத்தில், பொதுவாக ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். தேவிபாரதி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், சி.மோகன், ரமேஷ் பிரேம், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்டோரின் கதைகள் வழக்கமான கதைப் பாணியில் அல்லாமல் புதிய வடிவிலும் மொழியிலும் அமைந்திருந்தன.

சொல்ல வரும் கதையை கச்சிதமான அளவில் நறுக்காக எழுதவேண்டிய கட்டாயமின்மையின் காரணமாக எழுதப்பட்ட நெடுங்கதைகளுக்கு காலச்சுவடு இடமளித்தது. குமாரசெல்வாவின் ‘குறுவெட்டி’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, பா.வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

வடிவிலும் உள்ளடக்கத்திலும் மொழியிலும் வழக்கமான, பழகிப்போன பாணியில் அல்லாமல் எஸ்.ராமகிருஷ்ணன், தேவி பாரதி, லக்ஷ்மி மணிவண்ணன், யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றோர் எழுதிய கதைகள் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாயின.

தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலந்தொட்டு தனக்கென ஒரு கதைப்பாணியை உருவாக்கியிருந்த சுந்தர ராமசாமியின் பிற்காலத்துக் கதைகளில், இச்சூழலின் தாக்கம் இருந்ததை கவனிக்க முடிகிறது.

காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கும் கதைகளின் பட்டியலைக் கொண்டு தமிழ்ச் சிறுகதையின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை அறிந்துகொள்ள முடியும். தமிழின் மூத்தத் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்களிலிருந்து இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரையிலும் காலச்சுவடு இதழுக்கு பங்களித்திருக்கிறார்கள். சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், அம்பை, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், வாஸந்தி உள்ளிட்ட மூத்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளும் இதழ்களில் வெளியாயியுள்ளன. அதேபோல அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சி.மோகன், சுப்ரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், தேவி பாரதி, பெருமாள் முருகன், இமையம், கௌதம சித்தார்த்தன், அரவிந்தன், உள்ளிட்டோரின் கதைகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளில் இடம்பெறும் அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி, சல்மா, என்.ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,  மனோஜ்குமார் ஆகியோரின் கதைகள் வெளிவந்துள்ளன.

தமிழ் நாவல்களின் எழுச்சி 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. பெரிதும் தனிநபர் வாழ்க்கை அனுபவம், சமூக நோக்கு சார்ந்தே அமைந்திருந்த தமிழ் நாவல்களில் புதிய களங்களுடன் புதிய வாழ்க்கையுடன் புதிய நாவல்கள் பிறந்தன. களம் காலம் வடிவம் மொழி என அனைத்திலும் புதிய முயற்சிகளுடன் நாவல்கள் எழுதப்பட்டன. அளவில் பெரிய நாவல்கள் பதிப்புத் தயக்கமின்றி வெளியாயின. இக் காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டபோதும் சிறுகதைத் தொகுப்புகள் வெளியானபோதும், சிறுகதைகளின் மீதான கவனமும் அக்கறையும் சற்றே மட்டுப்பட்டிருந்தன. ஆனால், இதனை ஈடுசெய்யும்விதமாக நவீன தொழில்நுட்பமும் கணினி அறிவியலும் சாத்தியமாக்கித் தந்த இணையவழி ஊடகங்கள், குறிப்பாக இணைய இதழ்கள், தமிழ்ச் சிறுகதைக்கு பெரும் ஒரு வாயிலைத் திறந்து கொடுத்தன. வெளிநாடுகளிலிருந்த எழுத்தாளர்களின் கதைகளை இணைய இதழ்களின் வழியாக உடனடியாக வாசிக்க முடிந்தது.  அத்துடன், கணினித் துறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பணியிலிருந்த இளைஞர்கள் சிறுகதைகளை எழுதலானார்கள். மலேசியா, சிங்கப்பூர், ஈழம் போன்று நமக்கு நன்கு அறிமுகமான அயலக நிலங்கள் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கதைகள் எழுதப்பட்டு வெளியாயின. இதன் மூலம் புதிய இளைஞர்கள் பலர் சிறுகதையாசிரியார்களாக அறிமுகமாயினர். துறைசார் எழுத்துகள் என்ற புதிய வகைமைக்கு இவர்கள் பங்களித்தனர்.

இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் அறிமுகமான தூயன், கார்த்திக் பாலசுப்ரமணியன், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், விஜய ராவணன், பாலகுமார் விஜயராமன், அனோஜன் பாலகிருஷ்ணன், சந்திரா, ஜா.தீபா, எஸ்.ஜே.வயலட், பா.திருச்செந்தாழை, சித்துராஜ் பொன்னுராஜ் ஆகியோர் காலச்சுவடில் எழுதிய கதைகளின் வழியாக தமிழ்ச் சிறுகதையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும். தமிழில் அதுவரை எழுதப்படாமலிருந்த களங்களைக் கொண்டு சிறுகதைகள் இவர்களால் எழுதப்பட்டன. தன்பாலின உறவு குறித்த கதையான சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய ‘கடல்’, தன்பாலின ஈர்ப்பு, அன்னையின் மீதான் பிள்ளையின் ஈர்ப்பு ஆகியவற்றின் ஆழத்தை உணர்த்திய பொன்முகலியின் ‘அலர்’, கணினித்துறையில் பணியாற்றும் பெண்கள் சார்ந்த மாறுபட்ட பார்வையைக் கொண்ட கதையாக அமைந்திருந்த லாவண்யாவின் ‘பறத்தல்’. பெண்களின் உள்ளாடை சார்ந்த உளவியல் அடுக்குகளைப் பற்றி பேசிய சுஜா செல்லப்பனின் ‘அகலாது அணையாது’ ஆகிய கதைகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

தமிழ்ச் சிறுகதைக்கு பங்களித்திருக்கும் பெண் எழுத்தாளர்களின் ஒரு பெரும் நிரையை காலச்சுவடு கதைகளின் வரிசையில் பார்க்க முடிகிறது. அம்பை, வாஸந்தி, சல்மா, உமா மகேஸ்வரி, சந்திரா, லாவண்யா சுந்தர ராஜன், பொன்முகலி, அனார், ஐ.கிருத்திகா, அமுதா ஆர்த்தி, சுமதி ரூபன், லதா, சந்திரா ரவீந்திரன், ஜா.தீபா, சசிகலா பாபு, கலைச்செல்வி, பாத்திமா மஜீதா, பெருந்தேவி, எஸ்.ஜே.வயலட், சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ், ஹேமி கிருஷ், மாஜிதா, சவிதா, ச.மோகனப்ரியா என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்த காலகட்டத்தில் இளம் எழுத்தாளர்கள் சிலரை காலச்சுவடு அறிமுகப்படுத்தியுள்ளது. கே.என்.செந்தில், விஷால் ராஜா, பத்திநாதன், கல்யாணராமன், ஜா.தீபா, சந்திரா, லாவண்யா சுந்தரராஜன், ஜான் சுந்தர் ஆகியோரின் முதல் சிறுகதைகள் காலச்சுவடு இதழில்தான் வெளியாகின. இவர்களில் சிலரது முதல் சிறுகதைத் தொகுப்பையும் (கே.என்.செந்தில் – இரவுக்காட்சி, லாவண்யா சுந்தரராஜன் – புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை, பத்திநாதன் – நாளையும் நாளையே , கல்யாணராமன் – விபரீத ராஜயோகம், ஜான் சுந்தர் – பறப்பன திரிவன சிரிப்பன) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடக்கம் முதலே காலச்சுவடு இதழ்களில் ஈழ எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பொ.கருணாகர மூர்த்தி, ஆசி கந்தராஜா, அனோஜன் பாலகிருஷ்ணன், தி.மயூரன், அனார், சந்திரா ரவீந்திரன் ஆகியோரது கதைகளும் இடம்பெற்றுள்ளன.

அயலக எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணன், சித்துராஜ் பொன்ராஜ், லதா, சித்ரா, நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரது கதைகளும் உள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் சிறுகதையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து காலச்சுவடு அவற்றுக்கேற்ப கதைகளை வெளியிட்டுள்ளது. நவீன கதை வடிவமான குறுங்கதைகளை கவனப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பகுதி ஒன்றை வெளியிட்டது. சுரேஷ்குமார் இந்திரஜித், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், பெருந்தேவி, போகன் சங்கர், கே.என்.செந்தில் ஆகியோர் பங்களித்திருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில், வெளியான சமயத்தில் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்து, விவாதத்துக்கும் உட்பட்ட கதைகள் பல வெளியாகியுள்ளன. சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள், விளை’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, ஜே.பி.சாணக்யாவின் ‘ஆண்களின் படித்துறை’ ஆகிய சில கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இவற்றைத் தவிர தேவிபாரதியின் ‘அ.ராமசாமியின் விலகல் தத்துவம்’, ஜே.பி.சாணக்யாவின் ‘பெருமைக்குரிய கடிகாரம்’, குலசேகரனின் ‘வெளியில் மாட்டிய சாவி’, பெருந்தேவியின் ‘மயானக் கொள்ளை’, யுவன் சந்திரசேகரனின் ‘ ’, விஜய ராவணனின் ‘ஆரெயில் நெடுங்கொடி’ உள்ளிட்ட கதைகள் கவனம் பெற்றன.

தமிழ்ச் சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் இன்றைய தலைமுறையினரின் வசதிக்கேற்ப, தமிழ்ச் சிறுகதை மரபை அறிந்துகொண்டு தொடரும் பொருட்டு காலச்சுவடு இதழும், பதிப்பகமும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

காலச்சுவடு இதழில் வெளியான கதைகளை தொகுப்பாக்கும் முயற்சி ஒரு முறை சாத்தியமாகியுள்ளது. 1994 முதல் 2000 வரையிலான 5 நெடுங்கதைகளையும் 18 சிறுகதைகளையும் கொண்ட தொகுப்பு ‘காலச்சுவடு கதைகள்’ என்ற பெயரில் மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு வெளியானது. அதன் பிறகு அவ்வாறான ஒரு தொகுப்பு வெளியாகவில்லை.  

முன்னோடிகளின் தொகுக்கப்படாத கதைகள் என்ற சிறப்புப் பகுதியில் கு.பா.ரா, மௌனி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ப.சிங்காரம் ஆகியோரது கதைகள் இடம் பெற்றிருந்தன.

காலச்சுவடு சார்பாக ஒரு சிறுகதைப் பட்டறை அய்யம்பாளையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

கதா நிறுவனமும் காலச்சுவடு அமைப்பும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஜே.பி.சாணக்யாவின் ’ஆண்களின் படித்துறை’ முதல் பரிசையும், சல்மாவின் ‘இழப்பு’ கதை இரண்டாம் பரிசையும், ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்குத் தெரியாதவர்கள்’ மூன்றாம் பரிசையும் வென்றன. இக் கதைகள் காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன.

காலச்சுவடு நவம்பர்-டிசம்பர் 2003இல் வெளியான 50வது இதழ் ‘இளம் படைப்பாளர்கள்’ சிறப்பிதழாக அமைந்தது. அழகிய பெரியவனின் ‘கண்காணிக்கும் மரணம்’, உமா மகேஸ்வரியின் ‘வடு’, அய்யப்பனின் ‘சுடலை’, என்.ஸ்ரீராமின் ‘கிணற்றில் குதித்தவர்கள்’ ஆகிய நான்கு கதைகள் இடம் பெற்றிருந்தன.

ஒரு இலக்கிய இதழ் வரலாற்று நோக்கில் சில காரியங்களை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து காலச்சுவடு பதிப்பகம் சிறுகதைத் தளத்தில் செய்து வரும் சில பணிகளையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ச் சிறுகதை வரலாறு நூற்றாண்டைக் கடந்தது என்றாலும், அதற்குப் பங்களித்திருக்கும் எழுத்தாளர்கள் பலரது கதைகளும் முழுமையாகத் தொகுக்கப்படாமலே இருந்தன. அத்தகையதொரு குறையை நிவர்த்திக்கும் முகமாக காலச்சுவடு பதிப்பகம் தமிழின் சாதனை எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொத்தத் தொகுப்பாகவும், கிளாசிக் வரிசை தொகுப்பாகவும் வெளியிடும் பெரும் பணியினை மேற்கொண்டது. 

தமிழின் சாதனை எழுத்தாளர்களின் மொத்தத் தொகுப்புகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் முயற்சி காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கியவுடனே ஆரம்பிக்கப்பட்டது. ஜி.நாகராஜனின் தொகுப்பு வெளியானது. சுந்தர ராமசாமி அதன் பிறகு கு.ப.ரா, மௌனி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, அம்பை, பெருமாள் முருகன் ஆகியோரது மொத்தத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களின் எல்லாக் கதைகளையும் பெருந்தொகுப்பாக வெளியிடுவது ஆவண நோக்கில் மட்டுமல்லாமல், சிறுகதை வரலாற்றில் ஒரு எழுத்தாளர் எல்லாக் கதைகளையும் விடுபடுதல்கள் இல்லாமல் இடம்பெறச் செய்யும் முக்கியமான பணியுமாகும். அத்துடன் வாசக நோக்கிலும் இத்தொகுப்புகள் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளரின் எல்லாக் கதைகளையும் பெருந்தொகுப்பாக வாசிக்கும்போது அவரது கதைகளைப் பற்றிய தெளிவான ஒரு சித்திரத்தை வாசகன் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவண்ணன், ஆர்.சூடாமணி, சி.எண்.அண்ணாதுரை ஆகியோரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்ட தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

கிளாசிக் வரிசை சிறுகதைகளில் ந.முத்துசாமி, வண்ணநிலவன், அ.முத்துலிங்கம், ஆதவன், கி.ராஜநாராயணன், சுரேஷ்குமார் இந்திரஜித், ஜெயகாந்தன், அம்பை, ஆ.மாதவன், சி.சு.செல்லப்பா, பிரபஞ்சன், ஜி.நாகராஜன், கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோரின் தொகுப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

கிளாசிக் வரிசைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்புகளும் வாசகர்களின் வசதிக்கேற்ப திட்டமிடப்பட்டவை. குறிப்பிட்ட எழுத்தாளரைப் பற்றி அறிந்துகொள்ள அவர் எழுதிய சிறந்த சிறுகதைகளை மட்டும் வாசிக்க எண்ணும் ஒரு வாசகரை நோக்கியே இத்தகைய தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரிசை நூல்களின் வழியே ஒரு ஆரம்ப நிலை வாசகர் தமிழ்ச் சிறுகதையின் நீண்ட வரலாற்றில் தடம் பதித்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் குறித்தும் ஒட்டுமொத்த வரலாற்றில் அவருடைய இடம் குறித்தும் ஒரு தெளிவான பார்வையை எட்ட முடியும்.

 

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

 

முதல் இதழில் சுந்தர ராமசாமி, தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ‘தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் ஆகியவற்றின் கலாச்சாரத் தளங்களைச் சார்ந்த மேலான சிந்தனைகளையும், படைப்புக்களையும் தமிழாக்கித் தருவதில் இது கவனம் எடுத்துக்கொள்ளும். காலச்சுவடு தமிழ்மொழியில் உருவாகும் ஒரு எளிய முயற்சி என்றாலும், உலகக் கலாச்சாரச் செல்வங்களின் வாரிசாகத் தன்னைக் கணித்துக்கொள்ளுவதிலும் இக்கணிப்பு தூண்டும் கனவு களில் மூழ்குவதிலும் பெருமிதம் கொள்ளும் இதழ் ஆகும்.காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கியபோது, மேற்சொன்ன கூற்றுக்கு ஏற்ப, மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முதல் இதழிலேயே சதன் ஹசன் மண்டோவின் ‘மீளல்’ கதை இடம் பெற்றிருந்தது. இதுவரை வெளியாகியுள்ள 320 இதழ்களையும் பார்க்கும்போது, நேரடியாக எழுதப்படும் கதைகளுக்கு சமமான அளவில் மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு தொடர்ந்து இடமளிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். யாசுநேரி கவபட்டா, இடாலோ கால்வினோ, பெர்னாண்டோ ஸோரண்டினோ, மார்க்வெஸ், காஃப்கா, ஐசக் அசிமோவ், ஜான் ஸ்டீன்பெக், கான்ரட் எய்கின், ரேமண்ட் கார்வர், முராகாமி, கென் லியு, எட்கர் கெரெத் உள்ளிட்ட அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல பால் சக்கரியா, உண்ணி.ஆர், மதுபால், என்.எஸ்.மாதவன் ( மலையாளம் ) யு.ஆர்.அனந்தமூர்த்தி, சுமங்களா, ஜெயந்த் காய்கினி (கன்னடம் ), சொஹரப் ஹூசேன் ( வங்கம் ), குர்தேவ் சிங் (பஞ்சாபி) போன்ற இந்தியக் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்.எஸ்.மாதவனின் ‘ஹிக்விட்டா’, ஸொரான்டினோவின் ‘அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான்’, டினோ புசாட்டியின் ‘விழுந்துகொண்டிருக்கும் பெண்’, மார்க்கெஸ்ஸின் ‘வெளிச்சம் போல வெள்ளம்’, லெனினை வாங்குதல், யாசுநேரி கவபட்டாவின் ‘மச்சம்’ ஆகியன அதிகமும் பேசப்பட்ட சில கதைகளாக நினைவில் உள்ளன.

மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளையும் காலச்சுவடு பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

 

0

முப்பதாண்டு காலத்தில் காலச்சுவடு இதழில் வெளியான கதைகளைக் கவனிக்கும்போது, தமிழ்ச் சிறுகதைச் சூழலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வப்போது புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றி புதிய களங்களையும் வடிவங்களையும் கதைமொழிகளையும் அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் தமிழின் மூத்த தலைமுறை சிறுகதை ஆசிரியர்களும் தங்களது தொடர்ச்சியான, இடைவிடாத எழுத்துகளின் மூலம் சிறுகதை மரபின் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள்.

இன்று இருபத்தி ஐந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, சிறுகதைகள் குறித்து 90களில் ஏற்பட்ட குழப்பமும் கலக்கமும் தணிந்து சிறுகதைகள் சார்ந்த ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. கோட்பாடுகள் வரும் போகும், அவற்றைக் கொண்டு கதைகளின் மொழியையோ வடிவையோ மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கதைக்கும் வாசகனுக்கும் இடையில் எந்தவிதமான திரைகளும் நிலைப்பதில்லை, இருக்கவும் முடியாது என்பதும் தெளிவாகியுள்ளது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல இல்லாது, பழையவற்றின் வேர்களில் புதியன அரும்பி மலர்வதையே இத்தனை ஆண்டு காலக் கதைகளிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த வகையில் காலச்சுவடு எல்லாத் தரப்பினருக்குமான இதழாக தன்னை வரையறுத்துக் கொண்டிருப்பதன் காரணமாகவே, தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும் வகைமைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

முப்பதாண்டு காலமாக தொடர்ந்து வெளிவரும் ஒரு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றவேண்டிய கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டிருப்பதன் சாட்சிகளாகவே காலச்சுவடு கதைகள் அமைந்துள்ளன என்பதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்லமுடியும்.

0

(கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில், 28.08.2026 அன்று நடைபெற்ற ‘காலச்சுவடு 30ஆம் ஆண்டு, 300 இதழ்கள் – சிறப்புக் கருத்தரங்’கில் ஆற்றிய உரை )

 

Wednesday, 12 August 2026

ஆவநாழி - பலிபீடத்தில் இன்னுமொரு தலை

 


தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் இதழ்கள் வரையிலுமான நீண்ட பயணமும் தூரமும் பல்வேறு சவால்களையும் இடர்களையும் துயர்களையும் கடந்து வந்திருப்பது. கேளிக்கையும் விளம்பரமும் வியாபாரமும் மட்டுமே இலக்காகக் கொண்ட பெரும் வணிக இதழ்களுக்கு நடுவே தீவிர இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்தச் சிறுபத்திரிகைகள் பிறந்து, காலூன்றி வளர்வதென்பது அத்தனை சுலபமான காரியமல்ல. இலட்சிய நோக்கு கொண்ட பலர் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தனர். நிச்சயமாக திரும்பி வரப்போவதில்லை என்பது தெரிந்தும் தங்கள் கைபணம் மொத்தத்தையும் இதற்கென செலவு செய்தனர். இதழ்கள் சில ஒன்றிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உற்சாகத்துடன் வெளியாயின. இன்னும் சில ஒன்றிரண்டு இதழ்களுடன் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டன. வேறு சில இதழ்கள் அச்சகத்திலேயே முடங்கிப் போயின. இத்தகைய பலிகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகும் இந்த ஓட்டம் நிற்கவில்லை. அடுத்தடுத்து பலியிட யாரேனும் ஒருவர் தம் தலையைக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தனர். இப்போதும் சிலர் இருக்கின்றனர்.

வணிக எழுத்துக்கான மாற்றாக, போட்டியாக தீவிர இலக்கியத்துக்கான இதழ்களைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எழக் காரணமாக அமைந்தது உண்மையில் ஒரு பிரபலமான வணிக வார இதழ்தான். 1933ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தது. நடுவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. அந்தப் போட்டியில் பி.எஸ்.ராமையா எழுதிய ‘மலரும் மணமும்’ இரண்டாம் பரிசு பெற, றாலி எழுதியி ‘ஊமைச்சியின் காதல்’ முதல் பரிசு பெற்றது. போட்டிக்குப் பிறகு றாலி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவில் இணைய, பி.எஸ்.ராமையா, நின்றுபோயிருந்த மணிக்கொடி இதழை மாதம் இருமுறை சிறுகதை இதழாகக் கொண்டு வர முடிவு செய்தார். விகடனுக்கும் கல்கிக்கும் எதிராக பி.எஸ்.ராமையா எடுத்த இந்த முடிவுதான் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. ஒருவகையில் தமிழில் சிறுபத்திரிகைகளுக்கான தொடக்கமாகவும் அமைந்தது. இதன் பிறகு 1959இல் சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ பத்திரிகை தமிழ்ப் புதுக் கவிதைக்கான தோற்றமாக விளங்கியது. அதன் பிறகு 1965ஆம் ஆண்டில் நா.பார்த்தசாரதியால் ஆரம்பிக்கப்பட்ட ‘தீபம்’ இதழ் 1987ஆம் ஆண்டு வரை வெளிவந்தது.  அதே ஆண்டு ( 1965 ) தில்லியில் கஸ்தூரி ரங்கன் தொடங்கிய ‘கணையாழி’ இலக்கியத்துக்கு மட்டுமேயான இதழாக அல்லாது அரசியல், உலக நடப்புகள், பொருளாதாரம் உள்ளிட்ட பிறதுறை சார்ந்த இதழாகவும் அமைந்திருந்தது. ஆனால், பின்னாளில் இலக்கியத்துக்கான தீவிர இதழாகவே ‘கணையாழி’ அமைந்திருந்தது.

அற்ப ஆயுளையே கொண்டது என்றாலும் சில சிறுபத்திரிகைகள் சூழலில் நிகழ்த்திய மாற்றங்கள், சலனங்களின் காரணமாகவே என்றென்றும் நினைக்கப்படுபவையாக இருக்கின்றன. இரண்டே இதழ்கள் மட்டுமே வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழ் தமிழ் இலக்கியத்தில் நிகழ்த்திய பெரும் மாற்றங்களை அறிவோம். ‘இனி’, ‘இங்கே இன்று’ ஆகிய இதழ்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இலக்கியம், சமூகம், அரசியல், சூழலியல் உள்ளிட்ட துறைசார்ந்த ஆழமான கட்டுரைகளையும் அழுத்தமான புனைகதைகளையும் கொண்டிருந்த கோவை ஞானியின் ‘நிகழ்’, மேற்கத்திய இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு சார்ந்த பெரும் உலகை தமிழுக்குக் கொண்டு வந்த பிரம்மராஜனின் ‘மீட்சி’, புனைவுகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள், நேர்காணல்கள் என்று அனைத்து வகைமை சார்ந்தும் பங்களிப்புகளைக் கொண்டிருந்த மனோன்மணியின் ‘புது எழுத்து’, தமிழில் புதுவகை எழுத்து என்கிற கருத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த கௌதம சித்தார்த்தனின் ‘உன்னதம்’ உள்ளிட்ட இதழ்கள் சிறுபத்திரிகைகளுக்கேயுரிய சவால்களை சந்தித்தபோதும் நீண்ட காலம் தொடர்ந்து வெளியாயின. சிறுபத்திரிகையாகத் தொடங்கப்பட்டு மாத இதழாக மாற்றமடைந்து இன்றும் இலக்கிய இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’ ஆகிய இதழ்கள் தமிழ் தீவிர இலக்கியச் சூழலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளன. இந்த இதழ்களுக்கு முன்மாதிரியாக இருந்த கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’, பாவைச் சந்திரனின் ‘புதிய பார்வை’ ஆகிய இதழ்களையும் இந்த நேரத்தில் நினைவில்கொள்வது முக்கியம். வெகுஜன இதழை இலக்கியத் தரத்துடன் கொண்டு வரமுடியும் என்பதை இந்த இதழ்கள் நிரூபித்துக் காட்டின. இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் கொண்டு வந்த இலக்கிய மலர்களும், காலச்சுவடு சிறப்பு மலரும் முக்கியமான முன்மாதிரிகள்.

இன்று தமிழில் முக்கியமான கவிஞர்களாகவும் புனைவாசிரியர்களாகவும் அறியப்படுகிற எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் வழியாக அறிமுகமானவர்களே. தீவிர இலக்கியத்துக்கான இலக்கணங்களையும் குணாம்சங்களையும் சிறுபத்திரிகைகளே வகுத்துத் தந்தன. இதில் எழுதுவதால் நிச்சயமாக பணம் கிடைக்காது. புகழும் கிடைக்காது என்ற தெளிவுடனே எழுத முனைந்தனர். பெரும் வாசகப் பரப்பைக் கொண்ட குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் போன்ற வணிக இதழ்களுக்கு நடுவே தமக்கான வாசகர்களைக் கண்டடைய முடியும் என்ற உறுதியிருந்தது. எக் காலத்திலும் இந்த எண்ணிக்கை அதிகபட்சம் முன்னூறு பேர்களைத் தாண்டாது என்றபோதும் சிந்தனைத் தளத்திலும் கருத்தியல் உலகிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே அவர்களை இத்தகைய ஒரு பலிபீடத்தில் தலையை வைக்கும் துணிவைத் தந்தது.

பொது மக்களின் சிந்தனையை முடமாக்கி எப்போதும் கேளிக்கையிலும் மலிவான கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்கும்படியான வணிக இதழ்களின் போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து சிறுபத்திரிகைகள் குரல்கொடுத்தன. கேளிக்கை நோக்கில் பக்கங்களை நிரப்புவதற்கு சினிமாவை முதன்மை அம்சமாக கையிலெடுத்துக்கொண்ட அவற்றின் உத்தியை விமர்சித்தன. இலக்கியத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வணிகப் போக்கு கவிதை, கதை, நாவல், நாடகம் என்ற பெயரில் தொடர்ந்து உற்பத்தி செய்து கொடுத்தவற்றையும் அவற்றை எழுதிக் குவித்த எழுத்தாளர்களையும் தயவுதாட்சண்யமின்றி கிழித்தெறிந்தன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் உள்ளிட்டோரை காக்காய் பிடித்து சாகித்திய அகாதமி உள்ளிட்ட விருதுகளையும் பதவிகளையும் அடைந்த வணிக எழுத்தாளர்களையும் அவர்களை கௌரவித்த அமைப்புகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின. அகிலனுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம்.

எந்தவிதமான பொருளாதார பலமோ பின்புலமோ இல்லாமல் தொடங்கப்பட்டவையே சிறுபத்திரிகைகள். ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஒரு சிறு குழு தங்களிடமிருக்கும் கைக் காசைப் போட்டு உற்சாகத்துடன் தொடங்குவார்கள். அச்சுக்குப் போய் வேலை முடிந்து அச்சகத்துக்கு காசு தர முடியாமல் அப்படியே முடங்கிப் போன சிற்றிதழ்களின் எண்ணிக்கை பல. இன்னும் சில இதழ்கள் அறிவிப்புடனே நின்றுபோயுள்ளன. டிரெடில் முறையில் அச்சடிக்கும் அந்தக் காலத்தில் ஆயிரம் பிரதிகள் என்பது குறைந்தபட்ச எண்ணிக்கை. அதிகபட்சம் முந்நூறு பேருக்கு அனுப்பலாம். சந்தா என்பது பெரும் கனவுதான். ஐம்பது சந்தாதாரர்கள் என்பதே பெரும் சாதனைதான். மணியார்டரில் தொகையை அனுப்பிவிட்டு இதழ்கள் வராதபோது தொடர்ந்து கடிதம் எழுதும் தீவிர வாசகர்களும் இருந்தனர். சிறு பத்திரிகைகளின் சவால்களையும் சிரமங்களையும் அறிந்த சில அபூர்வ மனிதர்கள் புதிய சிறுபத்திரிகைகளுக்கு தொடர்ந்து சந்தா கட்டுவதை தங்கள் கடமையாகவே செய்து வந்தனர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாய் பத்தும் நூறுமாய் வெளியான மாத, காலாண்டு இதழ்களே சக்கரத்தின் சின்னஞ்சிறு பற்களாகி தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்க உதவின.

உதகை பூ.வ.மணிகண்ணன் போன்று தீவிர இலக்கியத்துக்காக, சிறுபத்திரிகைக்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. புது எழுத்து மனோன்மணி, விருட்சம் அழகியசிங்கர் போன்று வருமானத்தின், சேமிப்பின் பெரும்பகுதியை இதற்கெனவே செலவழித்தவர்களும் உண்டு.     

தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ‘கனவு’ இதழை நடத்தி வருகிறார் சுப்ரபாரதிமணியன். அழகியசிங்கர் ‘விருட்சம்’ இதழையும் பல காலமாக வெளியிட்டு வருகிறார். ‘சங்கு’ என்ற ஒரு சிறு இதழை வளவ.துரையன் நடத்தி வருகிறார். நிச்சயமாக இவர்களில் யாருக்கும் இந்த இதழ்களால் ஒரு பைசா பயனிருக்காது. தங்கள் சேமிப்பிலிருந்துதான் செலவு செய்கிறார்கள்.

இளமைப் பருவத்தில் சினிமாவில் சாதிக்கும் கனவைக் கொண்டிருந்தார் சுதேசமித்திரன். அதற்காக சென்னையிலும் சில காலம் வாழ்ந்தார். அப்போது அறிமுகமாகிய சிறுபத்திரிகைகளின் வழியாக இலக்கியமும் வாசிப்பும் தொடர்ந்தது. சிற்றிதழைத் தொடங்கவேண்டும் என்ற ஆர்வமும். கோவைக்கு வந்த பின் அந்த ஆர்வம் பெரிதானது. கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீபதி பத்மநாபாவுடன் சேர்ந்து ‘ஆரண்யம்’ இதழைத் தொடங்கினார். பேருக்குத்தான் சிறுபத்திரிகையே தவிர அதன் கனவுகள் மிகப் பெரியவை. அத்தகைய கனவுக்கு ஏற்பவே இதழும் அமைந்திருந்தது. சிறுபத்திரிகை என்றால் சிறியதாக இருக்கவேண்டும், சின்னஞ்சிறிய எழுத்தில் குறைந்த பக்க எண்ணிக்கையுடன் இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தது. வண்ண அட்டையுடன் பெரிய அளவில் எண்பத்து நான்கு பக்கங்களுடன் ஆரண்யம் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ‘ஆரண்யம் என்கிற சிறுபத்திரிகை இதன்மூலம் ஆரம்பிக்கப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சொன்னால் பெரும்பத்திரிகை ஆரம்பிக்கிற அளவுக்கு இதை ஆரம்பிப்பவர்களிடம் பணம் இல்லை என்பதுதான்’. தனி இதழின் விலை ரூ.25.

சிறுபத்திரிகைக்கான பொதுவான அம்சங்களான கவிதைகள், சிறுகதைகள், மொழியாக்கங்கள் அனைத்தும் ஆரண்யத்திலும் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஆரண்யம் சில விஷயங்களைத் தொடங்கி வைத்தது. முக்கியமானது, மலையாளத் திரைக்கதைகளை தமிழில் தந்தது. பத்மராஜனின் ‘ஓரிடத்தில் ஒரு பயில்வான்’, சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஷேக்ஸ்பியரின் காதல்’ ஆகிய திரைக்கதைகள் வெளியாகின. இரா.முருகனின் ‘இடைப்பக்கம்’, நாஞ்சில்நாடனின் கட்டுரைத் தொடரும் இடம் பெற்றிருந்தன. வித்தியாசமான முயற்சியாக சுதேசமித்திரனின் ‘கைலாசபுரம்’ நாவல் இடம்பெற்றது. இந்த நாவலின் விசேஷ அம்சம் இது ஒரே ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட நாவல் என்பதுதான். பின்னாளில் ‘சிதம்பர நினைவுகள்’ மூலமாக தமிழில் மிகவும் புகழ்பெற்ற பாலசந்திரன் சுள்ளிக்காடின் ‘சிவாஜி கணேசன்’ கட்டுரை வெளிவந்தது.

இரண்டாம் இதழில் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருந்த யுவன் சந்திரசேகரின் ‘இருபத்து மூன்று காதல் கதைகள்’ பெரிய அளவில் கவனத்துக்கு உள்ளானது. அப்படியொரு பகுதியை அதுவரையிலுமான சிறுபத்திரிகைகளில் இடம் பெறவில்லை. இந்த இதழில் தமிழ் சிறுபத்திரிகைகளில் அதுவரையிலும் இடம் பெற்றிராத கமல்ஹாசன் என்றொரு கவிஞரின் கவிதையும் இடம் பெற்றிருந்தது.

மூன்றாவது இதழின் தலையங்கம் மிக முக்கியமானது. இதில் இடம் பெற்றிருந்த இந்த வரிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மையாகியுள்ளன ‘ஒரு சிறு பத்திரிகை சகலராலும் கவனிக்கப்பெறும்போதுதான் பெரும் பத்திரிகையாளர்கள் சமகால இலக்கியவாதிகளின் விலாசங்களை விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.’

2000ஆம் ஆண்டு தொலைநோக்குடன் எழுதப்பட்ட இந்த வரிகள், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யானது. இரண்டாயிரத்துக்குப் பிறகு வணிக இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் சிறுபத்திரிகை சார்ந்த வாசகர்களும் எழுத்தாளர்களும் இடம்பெறத் தொடங்கிய பின் வணிக இதழ்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தீவிர இலக்கியத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களின் தொடர்கள் வணிக இதழ்களில் வெளியாயின. நாஞ்சில் நாடனின் ‘கற்றதும் பெற்றதும்’, ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதன் பிறகு தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை கேட்டுப் பெற்று வெளியிட வேண்டிய நிலையை எட்டின வணிகப் பத்திரிகைகள். வணிக எழுத்து, தீவிர எழுத்து என்ற பெரும் பிரிவினைக்கு இடையிலிருந்த கோடு மங்கி மறைந்து போனது. இன்றைய நிலையில், விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்த வரை வணிக இதழ்களுக்கும் தீவிர இலக்கிய சிறுபத்திரிகைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அளவுக்கு வாசக எண்ணிக்கை சுருங்கியுள்ளது. நவீன சமூக ஊடகங்களின் தாக்கம் பத்திரிகைகளை மட்டுமல்லாது சினிமா, தொலைக்காட்சி தொடர்களையும் அசைத்துப் பார்த்துள்ளது.

பெரிய பத்திரிகைகளுக்கு இணையான தோற்றம், அளவு, உள்ளடக்கங்களுடன் சிறுபத்திரிகையை நடத்த முடியும் என்பதை ‘ஆரண்யம்’ மூலமாக மெய்ப்பித்துக் காட்டினார் சுதேசமித்திரன். சிறுபத்திரிகைகளுக்கேயுரிய விதிப்படி நான்கு இதழ்களுடன் ஆரண்யம் நின்றுபோனது. ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காதல்லவா. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் தன் தலையை தண்டவாளத்தில் கொடுக்க மீண்டும் முனைந்தார் சுதேசமித்திரன். இந்த முறை வண்ணங்களில்லாமல் எளிமையாய் சிறிய அளவில் ஆனால் வித்தியாசமான உள்ளடக்கங்களோடு இன்னொரு இதழைக் கொண்டு வரத் தீர்மானித்தார். இதழின் பெயர் ‘சாம்பல்’. பெயருக்கேற்ப கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களின் கலவையாக மட்டுமேயிருந்த போதிலும் தோற்றத்திலும் அமைப்பிலும் எழிலுடன் அமைந்திருந்தது.

புகைப்பட ஆல்பங்களை நடுப்பக்க கதைப்படங்களாக தனித்தன்மையுடன் வடிவமைத்திருந்தார் சுதேசமித்திரன். நிமாய் கோஷ் எடுத்த சத்யஜித் ரேயின் படங்களுடன் கூடிய ‘ரேயின் நிலைக்கண்ணாடி’, சோமபந்து வித்யாபதி கொழும்புவில் உருவாக்கிய சுவரோவியங்களைக் கொண்ட ‘நிர்வாணத்தைத் தழுவும் வரை’, புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் படங்களுடனான ‘சு.ரா-சில பதிவுகள்’ ஆகிய கட்டுரைகளுடம் படங்களும் புதுமையுடன் அமைந்திருந்தன. அதன் பிறகு வேறு சில தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் இவ்வாறான ஆல்பங்கள் வெளியாகியிருந்தபோதிலும் இதற்கான தொடக்கத்தைக் கொடுத்தது ‘சாம்பல்’.

இதழின் உள்ளடக்கத்தை இரண்டு பக்கங்களில் வெகு அழகான பின்னணியுடன் அமைத்திருந்ததையும் குறிப்பிடவேண்டும். அப்போது ஆங்கில இந்து மாதந்தோறும் வெளியிட்ட  ‘folio’ என்ற இணைப்பிதழின் வடிவமைப்பை ஒட்டியிருந்த இந்தப் பக்கமே இப்போது வெளியாகும் ‘ஆவநாழி’ உள்ளடக்கத்திலும் அமைந்திருக்கிறது.

‘தரு’ வெளியீடுகளாக அமைந்த ‘ஆரண்யம்’, ‘சாம்பல்’ என்ற அச்சிதழ்களுக்குப் பிறகு உண்மையிலேயே சுதேசமித்திரன் வனவாசத்துக்குச் சென்றுவிட்டார் என்பதுபோல சில காலம் சிறுபத்திரிகை உலகில் காணாமல் போனார். 2020ஆம் ஆண்டில் மீண்டும் வந்தார். இம்முறை அச்சிதழ் அல்லாது பிடிஎஃப் வடிவிலான டிஜிட்டல் இதழ் என்று சொன்னார். ‘ஆவநாழி’ உதயமானது. இப்போது ஆறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

இன்றையச் சூழலைக் கருத்தில்கொண்டு, இளைய தலைமுறையினரின் ஊடகத்துக்கு ஏற்ப ஒரு இதழை வடிவமைக்க எண்ணியபோதும் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதைக் குறிப்பிடவேண்டும். பிடிஎஃப் வடிவிலான இந்த மென்னிதழை அப்படியே வண்ணத்தில் அச்சிட்டால் அழகிய ஒரு அச்சிதழைக் கையில் வைத்துக் கொள்ளமுடியும். ஆறு ஆண்டு காலத்தில் முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளது ‘ஆவநாழி’. நிர்மால்யா மொழியாக்கம் செய்த மலையாள ‘பழங்குடிக் கவிதைகள்’, அரவிந்த் வடசேரி மொழிபெயர்த்திருக்கும் மலையாளச் சிறுகதைகள், அனுராதா கிருஷ்ணமூர்த்தி இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் சிறுகதைகள், ஓவியர்களுடனான ஜீவாவின் நேர்காணல்கள், ஜீவாவின் சினிமாக் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஆயுள் சந்தாதாரர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆயுள் ஆலோசகர், ஆயுள் பங்களிப்பாளர் என்ற வகையில் நாஞ்சில்நாடனையும் ஜீவாவையும், சுதேசமித்திரன் கொண்டிருப்பது பெருமைக்குரியது. அவருடைய எல்லாக் காரியங்களிலும் இவர்களின் ஆசியும் ஒத்துழைப்பும் பெரும் துணையாக விளங்குகின்றன.

தீவிர இலக்கிய உலகம் என்பதே மிகச் சிறியது. ஆனால் அளப்பரிய பொறுப்பையும் தீவிர உழைப்பையும் கோரும் ஒன்று. தொடர்ந்து இந்தச் சிறிய உலகில் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஏதேனுமொன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் என்று ஏதேனுமொன்றில் தலைகாட்டிக் கொண்டே இருந்தால் மட்டுமே எழுத்தாளராக இருக்க முடியும். சுதேசமித்திரனுக்கு இன்னொரு வழியும் உள்ளது. கதைகள், நாவல்களை மட்டுமல்லாமல் இதழாசிரியராகவும் இருப்பது அவருக்கு கூடுதலான ஒரு சாத்தியத்தை அளிக்கிறது. ஆனால், மொழியாக்கத்தைப்போலவே இதழாசிரியராக இருப்பதும் நன்றியறிதல் இல்லாத வேலை. உழைப்புக்கும் நேரத்துக்குமான மதிப்பும் இல்லை, ஊதியமும் இல்லை. இருந்தபோதும் சுதேசமித்திரன் தொடர்ந்து தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பதன் சாட்சிகள்தான் ஆரண்யமும் சாம்பலும் ஆவநாழியும். ஊற்றி வளர்க்கும் தண்ணீரோ உரமோ இல்லாதபோதும், ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சி முதிர்ந்து நிற்கிறது தரு வெளியீடு. அது மேலும் சில இலைகளையும் கிளைகளையும் மலர்களையும் கனிகளையும் கொடுக்கும். சுவைப்போரும் முறிப்போரும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாலே போதும், தரு மேலும் தளைக்கும்.

0        

( கோவையிலிருந்து சுதேசமித்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஆவநாழி’ மென்னிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா (13.06.2026)வுக்காக எழுதப்பட்ட உரை )

 

இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி - இந்தியில் சிறுபத்திரிகைகள்

 

இந்தியாவின் எந்தவொரு மொழியிலும், தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ள அந்த மொழியில் வெளியான சிற்றிதழ்களே உதவும். இந்தி இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவில் ‘சிற்றிதழ் இயக்கம்’ முதன்முதலில் வங்காளத்தில் தொடங்கியது. கலை, இலக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வங்காளம் எப்போதும் முன்னணியில் இருப்பது. பல்வேறு துறைகளிலும் மறுமலர்ச்சியின் தொடக்கம் பெங்காலில் அமைந்தது. சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கமும் வங்காளத்திலேயே நிகழ்ந்தது. 1923ஆம் ஆண்டு வெளியான ‘கல்லோல்’ என்னும் இதழ் இந்தியாவில் வெளியான முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது. வங்கத்தில் சிறுபத்திரிகை இயக்கத்தின் முன்னோடிகளாக மோஹித்லால் மஜும்தார் (1888-1952), காஜி நஸ்ருல் அஸ்லாம் (1899-1976), அசிந்திய குமார் சென்குப்தா (1882-1922) ஆகிய மூவர் கருதப்படுகின்றனர். ‘கல்லோல்’ மூலமாக உருவான சிறுபத்திரிகை மரபு வங்க இலக்கியத்தை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் வங்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன.

1955 முதல் 1975  வரையிலும் மராத்தி மொழியிலும் சிறுபத்திரிகை இயக்கம் வலுவான செல்வாக்குடன் விளங்கியது. நவீனத்துவமும், தலித் மறுமலர்ச்சியும் அதன் முக்கிய குறிக்கோள்களாக விளங்கின. 1960களின் தொடக்கத்தில் திலீப் சித்ரே, அருண் கொலாத்கர், ரமேஷ் சமர்த் ஆகிய மூவரும் சேர்ந்து ‘சப்த’ (சொல் ) என்ற சிறுபத்திரிகையை கொண்டு வந்தனர். இது முழுக்க படியெடுக்கப்பட்ட (  cyclostyled ) இதழாக வெளியானது. மராத்தி இலக்கியத்தை வளப்படுத்திய இன்னொரு சிறுபத்திரிகை ‘வாச்சா’.

இந்தி நவீனக் கவிதையின் தொடக்கமாகக் கருதப்படும் பாரதேந்துவின் காலத்தில் ( 1850 முதல் 1900 வரை )  இந்திக் கவிதைகளில் நவீனத்தன்மையைக் கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரதேந்து ஆசிரியராக இருந்தஅரிச்சந்திரா’, ‘கவி பச்சன் சுதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின்பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின்இந்தி பிரதீப்’, பத்ரி நாராயண் சவுத்ரியின்ஆனந்த கடம்பினிஆகியனவற்றைக் குறிப்பிடலாம். அதன் பிறகு, திவ்வேதி யுகம் என்று அழைக்கப்படும் 1900 முதல் 1918 வரை சமயத்தில் ‘சரஸ்வதி’ இதழ் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரகதிவாத் எனப்படும் முற்போக்குவாதம் ( 1936 முதல் 1943 வரை ) தலையெடுத்த சமயத்திலும் ‘ஜாகரன்’, ‘நயே சபேரா’, ‘நயே சேத்னாபோன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன. 1943 – 50 ஆண்டு வரையிலான பிரயோக்வாத் போக்கினையும் பிரதீக், கல்பனா, ஆலோச்சனா, நயீ கவிதா  ஆகிய பத்திரிகைகளே முன்னெடுத்தன. அதன் பிறகு நயி கவிதா எனப்படும் புதுக்கவிதை காலத்தில் ( 1950 முதல் 1960 வரை ) ‘நயி பதே’, (ராம்ஸ்வரூப் சதுர்வேதி அண்ட் லக்ஷ்மிகாந்த் வர்மா) ‘நயீ கவிதா’,( ஜகதீஷ் குப்தா .. ராம்ஸ் ) ‘நிகாஸ்’ (தரம்வீர் பாரதி லக்ஷ்மிகாந்த் வர்மா )ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின. நவீனக் கவிதையில் தோன்றிய பல்வேறு பிரிவுகளில் ஒன்றான எதிர்க்கவிதை ( 1960க்கு பிறகு ) யை முன்வைத்து ‘அபிவ்யத்தி’, ‘அகவிதா’ ஆகிய இரண்டு இதழ்கள் வெளியாயின. அதன் இன்னொரு தரப்பாக உருவான, மறுக்கப்பட்ட கவிதை வகைமையை 1969இல் கவிஞர் ராம் சுக்ல தன் ‘உத்கர்ஷ்’ எனும் இதழ் வழியாக உருவாக்கினார்.

பாரதேந்து அரிசந்திராவின் காலம்தொட்டு இந்திய விடுதலை வரைக்குமான காலத்தில் வெளியான பெரும்பாலான பத்திரிகைகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் கொள்கை அடிப்படையுடனே வெளியாயின. தேச பக்தி, விடுதலை, சமூக மேம்பாடு போன்ற அடிப்படைகளோடு தரமான இலக்கியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இவற்றின் நோக்கமாக இருந்தது. இவற்றில் பல பத்திரிகைகளும் பெரும் வணிக நிறுவனங்களின் பொருளாதார பலத்தை நம்பி இருந்தபோதிலும் அவற்றின் நோக்கம் சமூக சீர்திருத்தம், இந்திய விடுதலை போன்ற பொதுநல நோக்குடனே இருந்தன. எந்த பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட உழைப்பை நம்பியே சில பத்திரிகைகளும் வெளியாயின. அவை தோற்றத்தில் பெரும் பத்திரிகைகளைப் போல கண்ணைக் கவர்பவையாகவும் திருத்தமாகவும் இல்லாதபோதும் கனமான உள்ளடக்கத்துடன் இருந்தன. 

இந்திய விடுதலைக்குப் பிறகு வணிக நோக்கிலும் ஆளும் அரசை ஆதரிக்கும் நோக்கிலும் வெளியான வணிகப் பத்திரிகைகள் கேளிக்கை நோக்கிலான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருந்தன. மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கவில்லை. இத்தகையப் போக்கிற்கு மாற்றாக புதிய சிந்தனைகளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும் இடமளிக்கும் பத்திரிகையின் தேவையை உணர்ந்து எழுத்தாளர்கள் சிலர் சிறுபத்திரிகைகளைத் தொடங்கினர். சிந்தனைத் தளத்திலும் இலக்கிய வெளியிலும் பெரும் இயக்கமாக நிலைகொண்ட சிறுபத்திரிகைகள், இந்தி நவீன இலக்கியத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களுக்கு களங்களாக அமைந்தன. நவீன கவிதை, நவீனச் சிறுகதைகளின் வளர்ச்சிப் போக்கு, இடதுசாரி சிந்தனைகளுடனான எழுத்துகள், தலித், பெண்ணிய நோக்கிலான எழுத்துகள் போன்றவற்றை உறுதியுடன் முன்னெடுத்தவை சிறுபத்திரிகைகளே. குறைவான வாசக எண்ணிக்கை, பொருளாதார ஆதரவின்மை போன்ற சவால்கள் இருந்தபோதும் இவற்றை நடத்தியவர்களின் தீவிரமும் இலக்கியத்தின்  மீதான சமரசமற்ற அக்கறையும், பொதுத் தளத்தின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கின.

இந்தியின் முதல் சிறுபத்திரிகை எது என்பதைக் குறித்து இருவேறு கருத்துகள் உண்டு. 1957ஆம் ஆண்டு பனாரசில் இருந்து, விஷ்ணுசந்திரா வெளியிட்ட ‘கவி’ என்னும் இதழே முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது. இன்னொரு பக்கம், மார்கண்டேயாவை ஆசிரியராகக் கொண்டு 1968ஆம் ஆண்டு  வெளியான ‘கதா’ இதழே முதலாவது என்றும் கூறுப்படுகிறது. இவற்றைத் தொடர்ந்து, இந்தி இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஆற்றலுடனும் சிறுபத்திரிகைகள் பல்வேறு எழுத்தாளர்களின் முயற்சியில் வெளியாயின. 1972இல் சப்யசாச்சி, விர்ஜேந்திர கௌஷிக் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான ‘உத்ரார்த்’, 1975இல் ஞான்ரஞ்சன் வெளியிட்ட ‘பஹல்’, மார்க்கண்டேய வெளியிட்ட ‘கதா’, 1974 முதல் 1977 வரை உத்பிராந்த் ஆசிரியராக வெளியிட்ட ‘யுவா’, சந்திரபூஷண் திவாரியின் ‘வாம்’, கவுசல் கிஷோரின் ‘பரிபத்ர’, ரமேஷ் உபாத்யாயவின் ‘கதன்’, பைரவ் பிரசாத் குப்தாவின் ‘சமாரம்ப’, சைலேஷ் மத்யானியின் ‘விகல்ப்’ ஆகிய இதழ்களை உதாரணங்களாகச் சுட்டலாம்.  

இந்திக் கவிஞர்கள், புனைவெழுத்தாளர்கள் பலரும் சிறுபத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள். ‘பாரத் பவன்’ அமைப்பை உருவாக்கிய கவிஞர் அசோக் வாஜ்பாயி ‘சம்வேத்’, ‘பூர்வகிரகம்’, ‘பெஹசான்’, ‘சமாசா’, ‘பகுவசன்’ என ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அக்ஞேயா (1911-1987) இளவயது முதலே பத்திரிகைத் துறையில் ஆர்வம் காட்டியவர். சைனிக், பிரதீக், நயா பிரதீக் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். ‘நயி கவிதா’ என்ற இந்தி நவீனக் கவிதை மரபு தோன்றுவதற்கு இவர் ஆசிரியராக இருந்த ‘சப்தக்’ என்ற இதழ் முக்கியமான காரணம். மங்களேஷ் தப்ரால் (1948 – 2020 ) மத்தியபிரதேசத்திலிருந்து, பாரத் பவன் அமைப்பின் சார்பாக வெளியான ‘பூர்வகிரகம்’, ‘ஜன்சத்தா’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘ரவிவாரி’ ஆகிய இதழ்களின் மூலம் பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். ஜெய்ஷங்கர் பிரசாத், சுமித்ராநந்தன் பந்த், சூர்யகாந்த் திரிபாடி நிராலா, ராம்விலாஸ் சர்மா, யஷ்பால் போன்ற முக்கியமான எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து ஏதேனும் ஒரு சிறுபத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்தியின் புகழ்பெற்ற நாவலாசிரியர் பிரேம்சந்த் பத்திரிகைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் பல பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியுள்ளார். 1930ஆம் ஆண்டு ‘ஹன்ஸ்’ என்ற இலக்கிய அரசியல் இதழைத் தொடங்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்வதே இதன் நோக்கம். ‘ஜாக்ரன்’ என்ற இன்னொரு இதழுக்கும் ஆசிரியராக விளங்கினார்.

இந்தியின் புகழ்பெற்ற நாவல், நாடக ஆசிரியரான தரம்வீர் பாரதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தர்மயுக்’ பெரும் வாசக வரவேற்பைப் பெற்ற ஒரு இதழ். பெனட் அண்ட் கொலமன் (டைம்ஸ் ஆஃப் இண்டியா) நிறுவனத்தின் உரிமையாளர்களான சாகு ஜெயின், ரமா ஜெயின் ஆகிய இருவரும் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இந்த இதழைத் தொடங்கினர். இவர்களே பின்னர் ‘ஞானபீட’ விருதையும் நிறுவினர். வேறு சில இதழ்களையும் இந்த நிறுவனம் வெளியிட்டது. ‘சாரிகா’ அதில் முக்கியமானது. கமலேஷ்வர் ஆசிரியராக இருந்த இந்த இதழில் கவிதைகள், கதைகள் இடம்பெற்றன. அக்ஞேயாவை ஆசிரியராகக் கொண்டு ‘தினமன்’ என்ற அரசியல், பொருளாதார இதழ் வெளியானது. ‘தர்மயுக்’ போலவே, ‘சாரிகா’, ‘தினமன்’ ஆகிய இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தியில் 200க்கும் அதிகமான சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றில் சில குறிப்பிட்ட காலக் கெடுவில் வெளிவருபவையாகவும் இன்னும் சில அவ்வப்போதும் வெளியாகின்றன. ராஜஸ்தானிலிருந்து வெளியாகும் ‘அராவலி உத்கோஷ்’ என்ற இதழ் பழங்குடியினரின் எழுத்துகளுக்கானது. ஜார்கண்டிலிருந்தும் இதுபோன்ற ஒரு இதழ் வெளியாகிறது. பீகாரிலிருந்து அனந்த குமார் சிங்கை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஜனபத்’, உத்தரபிரதேசம் பதாயூனிலிருந்து அமீர்சந்த் வைஸ்யாகை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கிருதியோர்’, கோரக்பூரிலிருந்து வெளியாகும் ‘யாத்ரா’ (ஆசிரியர்-கணேஷ் பாண்டே), தில்லியிலிருந்து வெளிவரும் ‘துனியா இன் தினோ(ன்)’ (ஆசிரியர்-சுதீர் சக்சேனா), இலகாபாத்திலிருந்து ‘அனஹத்’ ( ஆசிரியர் – சந்தோஷ் சதுர்வேதி ), கொல்கொத்தாவிலிருந்து ‘லஹக்’ ( ஆசிரியர் – நிர்பய் தேவயாஷ் ), லக்னோவிலிருந்து ‘லோகோதய’ ( ஆசிரியர் – பாவனா மிஷ்ரா ) போன்ற இதழ்களும் குறிப்பிடத்தக்கவை.  

இந்தியாவின் முக்கிய இலக்கிய அமைப்புகளும் இந்தியில் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. பாரதிய பாஷா பரிஷத்தின் ‘வாகார்த்’, ஞானபீட அமைப்பின் ‘ஞானோதய’, சாகித்திய அகாதமியின் ‘ஆஜ்கல்’, தேசியப் புத்தக நிறுவனத்தின் ‘புஸ்தக் சன்ஸ்க்ருதி’ ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

2001ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்திய சிறுபத்திரிகை மாநாட்டில், டிசம்பர் 09ஆம் தேதியை சிறுபத்திரிகை நாளாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நவீன இந்தி இலக்கியத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய சில குறிப்பிடத்தக்க இதழ்களைப் பற்றி பார்க்கலாம்.

 






சரஸ்வதி

இந்தியின் முதல் பத்திரிகையாகக் கருதப்படும் இந்த இதழ் 1900ஆம் பிப்ரவரி 4ஆம் நாள், வசந்த பஞ்சமி அன்று ஆண்டு அலகாபாத்திலிருந்து வெளியானது. இதன் நிறுவனர் அலகாபாத் இண்டியன் பிரஸ்ஸின் உரிமையாளர் சிந்தாமணி கோஷ் (1854-1928). ஆசிரியர் குழுவில் ஐவர் இருந்தனர். இந்தியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாவீர் பிரசாத் திவேதி (1864-1938) 1903ஆம் ஆண்டு முதல் 1921 வரை இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். இந்த இதழ் நவீன இந்திக் கவிதையிலும் உரைநடையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திக் கவிதையிலிருந்த உருதுவின் வலுவான தாக்கத்தை குறைத்து, கடிபோலி (வட இந்தியாவில் அதிகமும் புழங்கியிருந்த பேச்சுவழக்கு ) மிகுந்த இந்தியைப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தது. அதேபோல, பெர்சிய மொழியின் பாதிப்பைக் கொண்டிருந்த இந்தி உரைநடையை சமஸ்கிருத சாயல்கொண்ட உரைநடையாக மாற்றுவதிலும் முனைப்பு காட்டியது. ‘கிரவுன்’ அளவில் நான்கு அணா விலையில் இது வெளியானபோது, விலை அதிகம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. தரமான பொருளுக்கு சற்று விலை கூடுதலாகத்தான் இருக்கும் என்று கூறி விலையை குறைக்க மறுத்துவிட்டார் சிந்தாமணி கோஷ். அரசியல், பொருளாதார அழுத்தங்களுக்காக இதழின் உள்ளடக்கத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை. 1920வரை இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய இதழ், அதன் பிறகு சமூக பொருளாதார அம்சங்களையும் சேர்க்க நேர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில் இந்தி இலக்கியத்தில் இந்த இதழ் செலுத்திய செல்வாக்கு கணிசமானது. பிரேம்சந்த், மைதிலி சரண் குப்தா, சூர்ய காந்த் திரிபாடி நிராலா உள்ளிட்ட இந்தியின் முன்னோடி எழுத்தாளர்களின் எழுத்துகள் இந்த இதழில் வெளியாயின. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் (‘அகாயிகா’ என்றே அப்போது அழைக்கப்பட்டன ), தொடர்கதைகள், பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. உயரிய தரத்திலான புகைப்படங்களும், ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களும் வெளிவந்தன.  

எண்பதாண்டு காலப் பயணத்துக்குப் பிறகு, பொருளாதாரக் காரணங்களால் 1980ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த இதழ், மீண்டும் 2020ஆம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியில் ‘சரஸ்வதி’ ஒரு முக்கியமான மைல் கல்லாக விளங்குகிறது.

2

ஹன்ஸ்

‘நாவல் பேரரசர்’ என்று அழைக்கப்படுகிற பிரேம்சந்தால் 1930ஆம் ஆண்டு வாரணாசியில் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்றும் வெளியாகிறது. இதன் தொடக்க கால ஆசிரியர் குழுவில் காந்தியும், கே.எம்.முன்ஷியும் இடம் பெற்றிருந்தனர். விடுதலைக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்புவதுமே இதன் நோக்கம். அதே சமயத்தில், நல்ல இலக்கியத்தையும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தது. அக்ஞேயாவின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. 1936ஆம் ஆண்டில் பிரேம்சந்தின் மரணத்துக்குப் பின் அவருடைய மனைவியும் இன்னும் சில நண்பர்களும் இதழை நடத்தினாலும், பொருளாதார இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில் 1956ஆம் ஆண்டு இதழ் நிறுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு ராஜேந்திர யாதவ் இந்த இதழைப் பொறுப்பேற்றுக் கொண்டு நடத்தலானார். இப்போது இதன் ஆசிரியராக சஞ்சய் சஹால் உள்ளார்.

சமூக விடுதலை, இலக்கிய மேம்பாடு உள்ளிட்ட பெரும் குறிக்கோள்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், காலப்போக்கில் தனது நோக்கத்திலிருந்து விலகியபோது அதன் போக்கும் உள்ளடக்கமும் மாற்றத்துக்கு உள்ளானது. வணிக சம்பிரதாயங்களுக்கு இடம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரேம்சந்த் இந்த இதழைத் தொடங்கிய காலத்தில், சிறுபத்திரிகை என்ற வகைமை உருவாகியிருக்கவில்லை என்றாலும் அதன் வடிவமும், உள்ளடக்கமும் அத்தகைய வகைமைக்கு உரியதாகவே இருந்தது. 1985ஆம் ஆண்டு ராஜேந்திர யாதவ் ஆசிரியராகப் பொறுப்பேற்று மீண்டும் வெளியானது. 2013ஆம் ஆண்டு அவர் காலமாகும் வரை, இந்த இதழ் இந்தி இலக்கியத்திலும் சிந்தனைத் தளத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையின் பயங்கர முகங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி பொதுவெளியில் மக்களை விவாதிக்கச் செய்யும் கடினமான பணியை இந்த இதழ் மிகத் திறமையாகக் கையாண்டது. பெண்ணியம், தலித்தியம் போன்ற புதிய கருத்தாக்கங்களை உரத்த குரலில் ‘ஹன்ஸ்’ முன்னெடுத்தது. இதன் மூலம் இந்தி இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், 2000க்குப் பிறகு இந்த இதழின் போக்கு முற்றிலும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்றும் தீவிர சிந்தனை  சார்ந்த ஒரு இதழாகக் கருதப்பட்டபோதும், ‘ஹன்ஸ்’ இதழை ஒரு சிறுபத்திரிகையாகக் கருத முடியாது.

இன்றும் தரமான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்களுடன் மாத இதழாக அச்சிலும், இணையத்திலும் வெளியாகிறது. சந்தா செலுத்தியே வாசிக்க முடியும். இதன் சிறப்பிதழ்களின் பிடிஎஃப் வடிவிலும் வாசிக்கும் வசதி உள்ளது.

3

சாரிகா

இந்தி பத்திரிகை வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த இன்னுமொரு இதழ். இந்தியின் புகழ்பெற்ற சிறுகதையாளர் கமலேஷ்வர் இதன் ஆசிரியராக இருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா இதனை வெளியிடுகிறது. இந்தியின் ‘நயி கஹானி’ இயக்கத்துக்கு இந்த இதழின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஜிதேந்திர பாட்டியா, அபிமன்யு அனந்த், மாலதி ஜோஷி என புதிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியது. பீஷ்ம சஹானி, ஸ்ரீலால் சுக்ல உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள்.

1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது பல சிக்கல்களுக்கும் தணிக்கைக்கும் உட்பட்டது இந்த இதழ். கமலேஷ்வருக்குப் பிறகு எழுத்தாளர் கன்கையா லால் நந்தன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

1981, டிசம்பர் இதழ் தஸ்தாவெஸ்கி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. குற்றமும் தண்டனையும் நாவலின் ஒரு பகுதி, அசடன், வெண்ணிற இரவுகள், அல்யோஷா, ஒரு வினோத மனிதனின் கனவு உள்ளிட்ட புனைவுகளும், நானும் என் பதிப்பாளர்களும் என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. தஸ்தாவெஸ்கியின் ஆக்கங்களைப் பற்றிய கட்டுரைகள் பலவும் வெளியாகியுள்ளன. சாமர்செட் மாமின் கட்டுரையும், தஸ்தவெஸ்கியின் கதைகளை அடிப்படையாக வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய கட்டுரையும் இதில் உண்டு.  

1982 அக்டோபர் இதழ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது. ருட்யார்ட் கிளிபிங், தாகூர், அனடோல் பிரான்ஸ், பியர்ல் எஸ் பக், நட் ஹாம்ஸன், சின்க்ளியர் லூயிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, சோல்செனிட்ஸின், ஜான் ஸ்டீன்பெக், ஐசக் பாஸவிச் சிங்கர், செல்மா லெகர்காவ் உள்ளிட்டோரின் படைப்புகளும், அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருந்தன. சிங்கர், டி.எஸ்.எலியட் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெற்றிருந்தன.

1986 அக்டோபர் இதழில் பிரேம்சந்த், சீன எழுத்தாளர் லூ சூன் ஆகியோரைப் பற்றிய சிறப்பிதழாக அமைந்துள்ளது. இருவரது புனைவுகளும், அவர்களது புனைவுலகைக் குறித்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

4

பிரதிலிபி

இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படைப்புகளை ஒருங்கே தரும் இந்த இருமொழி இதழ் ஏப்ரல் 2008இல் தொடங்கப்பட்டது. 13 இதழ்கள் வெளிவந்துள்ளன. உலகெங்கிலுமுள்ள 30க்கும் மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் கிரிராஜ் கிராது, ராகுல் சோனி, ஷிவ் குமார் காந்தி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இந்த இதழின் சுதந்திர சிறப்பிதழில், தமிழின் நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி. இந்த இதழின் தமிழ் மொழிக்கான ஒருங்கிணைப்பாளர் மீனா கந்தசாமி.

இதே இதழில் ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம் நாவலை வைத்து ஹிமான்சு பாண்ட்யாவும் அமிதேஷ் குமாரும் இணைந்து எழுதிய கட்டுரை உள்ளது. 1960களில் இந்தியாவின் ‘கிராம ராஜ்யம்’ குறித்த கற்பனையை சுக்கு நூறாக உடைத்து, கிராமங்களில் நிலவும் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கிண்டல் கேலியுடன் பகடியாக தோலுரித்துக் காட்டியது இந்த நாவல். 1947இல் அடைந்த சுதந்திரத்தைக் குறித்தும் அதன் உண்மையான மதிப்பைக் குறித்தும் இலக்கியப் பரப்பில் வெளியான முதல் விமர்சனம் இந்த நாவல். இந்திய விடுதலை இந்திய கிராமங்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் உண்மையில் என்ன கொண்டு வந்து சேர்த்தது என்பதைப் பற்றிய உண்மையான சித்திரத்தை அளிக்கும் இந்த நாவலுக்கு ஏன் உரிய மதிப்பும் கவனத்தையும் இந்திய இலக்கிய உலகம் தர மறுத்தது என்பதைக் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது.

ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இதழின் மையக் கருத்தாக அமைந்திருந்தது ‘வரலாறும் இலக்கியமும்’. இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் இடையேயுள்ள உறவு, எப்போது ஒரு வரலாற்றுப் பிரதி இலக்கியமாகவும், ஒரு இலக்கியப் பிரதி வரலாற்றின் பகுதியாகவும் மாறுகிறது என்பதை விவாதத்துக்கு உட்படுத்தி புரிந்துகொள்ளும் வகையில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.  

மொழியாக்கங்களைக் குறித்த இரண்டாவது இதழில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஆழமான சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மூன்றாவது இதழில் ‘பயங்கரவாதத்துக்கு முன்னும், மொழியாக்கங்களுக்கு முன்பும்’ என்ற பொருளிலும், ஐந்தாம் இதழ் இந்தி இலக்கிய உலகைக் குறித்தும் அமைந்துள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்களுடன், நேர்த்தியான வடிவமைப்பில் உருவாகியிருக்கும் இந்த இதழ் 2012ஆம் ஆண்டு வரையுமே வெளிவந்துள்ளது. அதன் பிறகு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. இணையத்தில் வாசிக்கவும், அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுமான வசதி உண்டு.

5

கிருத்யா

2005ஆம் ஆண்டு முதல் மாதமொருமுறை வெளியாகும் இருமொழி கவிதை இதழ் ‘கிருத்யா’, கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரதி சக்சேனாவை ஆசிரியராகக் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து வெளிவருகிறது. அழகிய வடிவமைப்பு, நவீன ஓவியங்கள், தரமான உள்ளடக்கத்தோடு அமைந்திருக்கும் இதுவொரு இணைய இதழ். பி.டி.டெத்தன், சஞ்சு பால் ஆகியோரின் அழகிய ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த இதழ்.

‘சமகாலக் கவிதை’ பகுதியில் இன்று இந்தியில் எழுதிவரும் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டிருக்கும்‘ஆசிரியருக்குப் பிடித்தவை’ என்ற பகுதி முக்கியமானது.  உலகப் புகழ்பெற்ற கவிஞர்களான எமிலி டிக்கின்ஸன், அப்துல்லா ஈஸா (பாலஸ்தீனம்), ஃபெதி சஸ்ஸி (அரபு), யூ சியான் (சீனா), எரிக் லின்டர், அய்யப்ப பணிக்கர் உள்ளிட்டோரின் கவிதைகளின் மொழியாக்கங்களை இங்கு வாசிக்க முடிகிறது. ‘நமது பெருங்கவிகள்’ என்ற பகுதியில் இந்தியாவிலும், உலக அளவிலுமான செவ்வியல் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு இதழில் ஏ.வி.சுப்ரமணியம் ‘சிருங்கார பத்யாவளி’ என்ற தலைப்பில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்த இருநூறு  தமிழ்ச் சங்கப் பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்தொகைக் கவிதைகள் தரப்பட்டுள்ளன. காளிதாஸரின் ரிது சம்ஹாரம், ஜெய் ஷங்கர் பிரசாத்தின் காமாயனி, வித்யாபதியின் சிருங்காரக் கவிதைகள் ஆகியனவும் வெவ்வேறு இதழ்களில் உள்ளன. மீரா, பைரன், வில்யம் பட்ல் யேட்ஸ், இத்தாலியக் கவிஞர் செஸாரே பவேஸ், நார்விஜியன் கவிஞர் யேன் அஸ்கார் ஹன்சேன் ஆகியோரின் கவிதைகளும் உண்டு.

6

வகார்த

கொல்கத்தாவில் உள்ள ‘பாரதிய பாஷா பரிசத்’ அமைப்பு வெளியிடும் இலக்கிய இதழ் ‘வகார்த’. 1995ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இந்த இதழில் நவீன கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், நாடகங்கள், நேர்காணல்கள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மாத இதழான இது அச்சிலும், இணையத்திலும் கிடைக்கிறது.

‘தேசத்திலும், தேசத்துக்கு வெளியிலும்’ என்ற பகுதியில் ஒரு இந்தியக் கவிஞர், ஒரு சர்வதேச கவிஞர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தரப்பட்டுள்ளன. சுப்ரமணிய பாரதி-ஹெர்மன் ஹெஸ்ஸே, மகாதேவி வர்மா-பாப்வோ நெரூதா, சூர்யகாந்த் திரிபாதி நிராலா-ஜலாலுதீன் ரூமி, கேதார்நாத் சிங்-செஸ்லாவ் மிலோஸ் என்று அமைந்திருக்கும் இந்தப் பகுதி கவனத்தைக் கவர்ந்தது.

‘உலக இலக்கியம்’ என்ற பகுதியில் சர்வதேசக் கதைகள் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ் காஃப்காவின் ‘பட்டினிக் கலைஞன்’, யூகி வாங் தியாகோவின் ‘கருப்புப் பறவை’ உள்ளிட்ட கதைகளும் ஜப்பானிய, அமெரிக்க கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு இதழிலும், குறிப்பிட்ட தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்கும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ‘செயற்கை நுண்ணறிவும் இலக்கியமும்’, ‘ஆதிவாசிகளிடையே ராம காதை’, ‘ஆட்சியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்குமான உறவு ஏன் அறுபட்டது?’, ‘இந்திய ஞான மரபும் நவீன இந்திக் கவிதைகளும்’, ‘பத்திரிகையிலிருந்து ஊடகத்துக்கான பயணம்’, ‘சித்த, நாத சம்பிரதாய இலக்கியம்’ ஆகியன இப் பகுதியில் விவாதிக்கப்பட்டிருக்கும் சில தலைப்புகள்.

7

பஹல்

இந்தியின் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஞான்ரஞ்சனை (1936) ஆசிரியராகக் கொண்டு 1973ஆம் ஆண்டு முதல் ஜபல்பூரிலிருந்து வெளியாகும் இதழ். வெளியானது முதல் இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் முதன்மை இலக்கிய இதழ்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த இதழ் இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் சிறுபத்திரிகைகளுக்கான சூழல் அவ்வளவு ஆதரவில்லாத சமயத்தில் ‘பஹல்’ வெளியானது. ஹரிசங்கர் பர்சாயி போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஆதரவு இருந்தபோதிலும், நெருக்கடி நிலையின்போது உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த இதழை முளையிலேயே கிள்ளியெறிய முயன்றார். நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த காரணத்தால், தரம்வீர் பாரதியின் ‘தர்மயுக்’, ராஜேந்திர அவஸ்தியின் ‘காதம்பினி’ ஆகிய இதழ்களும் ‘பஹல்’ மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன. எண்ணற்ற சிறுபத்திரிகைகள் நின்றுபோன அந்த சூழ்நிலையில் ‘பஹல்’ முனைப்புடன் தொடர்ந்து வெளிவந்தது.

‘பஹல்’ எண்ணற்ற முக்கியமான சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் அவதார் சிங் பாஸ், பிரெஞ்சு கவிஞர் ஆர்தர் ராம்போ, செவ்விந்தியக் கவிதைகள், பாசிஸ எதிர்ப்பு இலக்கியம், மார்க்ஸிய அழகியல், வால்டர் பெஞ்சமின், எட்வர்ட் சயீத், சமகாலக் கவிதைகள், பாகிஸ்தானில் உருது எழுத்து, சிறுகதைச் சிறப்பிதழ், சமகால சீன இலக்கியம், பங்களாதேஷ்-ஆப்பிரிக்க இலக்கிய சிறப்பிதழ் ஆகிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத் தகுந்தவை.

சிறுகதைகள், கவிதைகள், நெடுங்கவிதைகள், புத்தக அறிமுகங்கள், கட்டுரைகள், கார்டூன்கள், மொழியாக்கங்கள் என கனமான உள்ளடக்கங்களுடன் 47 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த ‘பஹல்’, ஏப்ரல் 2021இல் தனது 125வது இதழுடன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.

கடைசி இதழில், நிறுவனர் ஞான்ரஞ்சனின் கட்டுரையில் ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார் ‘பஹல் இதழ் உடலுக்கு ஒப்பானது. அதன் ஆயுள் எல்லைக்கு உட்பட்டது. அந்த உடலுக்கான முடிவு இப்போது வந்துவிட்டது. அந்த முடிவை ஏற்றுக்கொள்வோம். பத்திரிகையின் ஆசிரியர் என்பவர் துறவியாகவும், சமையல்காரராகவும், தண்ணீர் சுமப்பவராகவும், கழுதையாகவும்கூட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இப்படி எல்லாவற்றையும் செய்யவேண்டியிருப்பதால் நல்ல உடல்நிலையில் இருப்பதும் முக்கியம். எங்களின் இந்த முடிவு சுடுகாட்டில் அல்லாமல் வரலாற்றில் பதிவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அமரர்களும் இல்லை, இப்போது இறக்கவும் இல்லை.’

8

லஹர்

19ஆம் நூற்றாண்டின் இந்தி இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான, முக்கியமான மாத இதழாக விளங்கியது. இதன் முதல் இதழ் ஜூலை 1957 இல் புகழ்பெற்ற கவிஞர் பிரகாஷ் ஜெயினை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து அஜ்மேர் (ராஜஸ்தான்) நகரிலிருந்து வெளியான ‘லஹர்’ பொருளாதார சிக்கல்களின் காரணமாக 1974ஆம் ஆண்டு நின்றுபோனது. பிரகாஷ் ஜெயின் இந்த இதழை மீண்டும் கொண்டு வருவதில் மிகுந்த தீவிரம் காட்டியதை அடுத்து 1980 இல் இது மீண்டும் வெளிவரலானது. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1986 இல் மீண்டும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக நின்றுபோனது.

25 ஆண்டுகள் தொடர்ந்து எந்த சிக்கலுமின்றி வெளிவந்த ஒரே இலக்கிய மாத இதழாக இதுவே. இன்றும் இந்தியில் எழுதப்படும எந்தவொரு முக்கியமான ஆய்வு கட்டுரையும், ‘லஹர்’ இதழைக் குறிப்பிடாமல் முழுமை பெறாது. இந்தி மொழியின் தீவிரமான, அபாரமான எழுத்தாளர்களும், படைப்புகளும் ‘லஹர்’ இதழில் வெளியாகியுள்ளன. இதன் சிரியரான பிரகாஷ் ஜெயினுக்கு இந்த இதழ் வாழ்வாதாரமாக இருந்தபோதிலும், 25 ஆண்டுகளில் தரமற்ற படைப்புகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதழின் தரத்திலும் நோக்கத்திலும் பிரகாஷ் ஜெயின் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. இதில் பல சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன; அவற்றில் 1957 ஆம் ஆண்டின் கவிதை சிறப்பிதழ், 1958 ஆம் ஆண்டின் கதை சிறப்பிதழ் மற்றும் உலகக் கவிதை சிறப்பிதழ் மிகவும் பிரபலமானவை. இதே வரிசையில் நாகார்ஜுன், முக்திபோத், ராஜ்கமல் சௌதரி அவர்களைப் பற்றிய ‘லஹர்’ சிறப்பிதழ்களும் மிகவும் முக்கியமானவை.

0

பிற மொழிகளைப் போலவே வணிக இதழ்களின் போக்குக்கு எதிராகவும், அவற்றால் கட்டமைக்கப்பட்ட கேளிக்கை மனநிலையை உடைத்து தீவிர சிந்தனையை ஏற்படுத்துவதற்காகவே இந்தியிலும் சிற்றிதழ் இயக்கமும் முனைந்தது. இதன் காரணமாக புதிய சிந்தனைகளும், எழுத்து முறைகளும், எழுத்தாளர்களும் தோன்றினர். இலக்கியத்தில் ஒரு புத்தெழுச்சி உண்டானது. வெவ்வேறு காலகட்டங்களில் கவிதையிலும் சிறுகதையிலும் புதிய போக்குகள் உருவாகி வலுப்பெற இவை காரணமாய் அமைந்தன. ஆனால், காலப்போக்கில் இந்த சிறுபத்திரிகைகளின் போக்கும் நோக்கமும் மாற்றங்களுக்கு உட்பட்டன. தொடக்கத்திலிருந்த தீவிரத்தன்மை மட்டுப்பட்டு வேறு திசைகளுக்கு அவை நகர்ந்தன. புதிய எழுத்தாளர்கள் உருவாயினர் என்றாலும் அவர்களில் பெரும்பான்மையினர் இலக்கிய வளத்தில் காட்டிய தீவிரத்தைக் காட்டிலும் தனிப்பட்ட புகழுக்காக எடுத்த முயற்சிகளே அதிகம். இன்று நவீன தொழில்நுட்ப அச்சு வசதிகளின் காரணமாக, பிறமொழியில் உள்ளதுபோலவே, இந்தியிலும் இலக்கிய நோக்கை மட்டுமே கொண்ட மின்னிதழ்கள் வெளியாகின்றன. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து இத்தகைய இதழ்கள் வெளிவருகின்றன.

வட இந்தியா முழுக்க வாசகர்களை கொண்டிருப்பதன் காரணமாக இந்தியில் வெளியாகும் சிறுபத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, அவற்றின் முழுமையான பட்டியலைத் தருவது சவாலான ஒன்று. ‘கவிதா கோஷ்’ (இந்தி கவிதைகளுக்காகவே உள்ள மிகப் பெரும் இணையதளம்), ‘பூர்வபஷ்’ போன்ற இணைய தளங்கள், இந்தியில் வெளியாகும் இலக்கிய இதழ்களின் பட்டியலையும் தகவல்களையும் தருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இதழ்களைத் தவிர தத்பவ், அகார், பக்ஷதர், கதா, பரிகதா, சம்வேத், கதாக்ரம், அக்ஷர், உத்பாவனா, ஏக் அவ்ர் அந்தரீப், சௌபால், லம்ஹி, அலாவ், ஷாகி, பாட், கவிதா விகாஸ், சீதல் வாணி, ஜன்பத், சிந்தன் திசா ஆகிய சில இதழ்களையும் குறிப்பிடலாம்.

0

 

( இந்திய மொழிகளில் சிறுபத்திரிகைகள் குறித்து, ஆகஸ்டு 2026இல் காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை. )

 

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

  அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சா...