Tuesday, 13 January 2026

உடல் பராமரிப்பு வணிகத்தின் உளவியல் களம் - பா.கண்மணியின் ‘வீனஸ்’

 



0

‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது என்பதால் ‘இடபம்’ புதிய முக்கியமான நாவல்களின் வரிசையில் இடம் பிடித்தது. அதுவே அவரது இந்த இரண்டாவது நாவலின் மீது கூடுதலான எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘இடபம்’ நாவலைப் போலவே ‘வீனஸ்’ நாவலின் களமும் புதியது, வசீகரமானது. களம் இதுதான் என்று தெரிந்தவுடனே அதற்குள் இருக்கும் சாத்தியங்களும் சவால்களும் நமக்குள் இன்னும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

நவீன வாழ்வின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன அம்சம் ‘ஜிம்’களும் ‘பியூட்டி பார்லர்’களும். பெருநகரங்களில் என்று மட்டுமல்லாமல் இன்று சின்னஞ்சிறு ஊர்களிலும்கூட அழகு நிலையங்களும், உடற்பயிற்சிக் கூடங்களும் பெரும் எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளன. உடலினைப் பேணுதல் என்பதைப் பற்றிய அக்கறை அனைத்து வயதினரிடத்தும் ‘டிரெண்டா’க உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், ஓடுவதும் துறை சார்ந்த ஒன்றாக மட்டுமே இருந்தது. மைதானங்களே அதற்கான முக்கியமான களமும் இடமும். உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளும், தளவாடங்களும் மைதானத்திலேயே நிறுவப்பட்டிருந்தன. இன்று நிலைமை அவ்வாறில்லை. தெருவுக்குத் தெரு உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. காலையும் மாலையும் வேர்க்க விறுவிறுக்க பயிற்சிகள் தொடர்கின்றன.

பெண்களுக்கான அழகு நிலையங்கள் முன்பே இருந்தன என்றாலும் அதிகமும் அவை மணப்பெண் அலங்காரம், முக அலங்காரம் போன்ற ஒருசில அம்சங்களையே கொண்டிருந்தன. இன்று அழகு நிலையங்களின் பட்டியலில் உள்ள சேவைகளைப் படிக்கும்போது வியப்பாக உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்குமான பராமரிப்பு சேவைகளை இந்த அழகு நிலையங்கள் வழங்குகின்றன. தோற்றத்தைப் பேணுதலிலும் ஆகச்சிறந்த முறையில் தன்னை வெளிப்படுத்துவதிலும் பெரும் அக்கறை காட்டப்படுகிறது. இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது. இன்னும் ஊன்றி கவனித்தால் இளம் பெண்களைக் காட்டிலும் நடுத்தர வயதுப் பெண்கள் இதற்கு கூடுதல் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள் என்பதை உணரலாம். மணமாகி குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின் உடலைப் பராமரிப்பதும் கவனிப்பதும் தேவையற்றது என்ற மனப்பான்மையிலிருந்து வெளியேறியிருப்பதையும் கவனிக்கலாம்.

இந்த விழிப்புணர்வுக்கு என்ன காரணம்? இன்றைய உணவுப் பழக்கங்களும், அன்றாடத்தின் கால வரையறைகளுமே. நமது வழக்கமான உணவுப் பழக்கத்துக்கு மாறாக புதிய வகை உணவுகள் இன்றைய சந்தையில் அதிக அளவில் புழங்குகின்றன. கணினித் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நாடுகளின் வேலை நேரங்களுக்கு ஏற்ப இங்கே கண்விழித்து பணியாற்ற வேண்டிய சூழல். பள்ளிக் காலங்கள் முதலே தூக்கச் சுழற்சியில் மாற்றங்கள். சரியான, ஆழ்ந்த தூக்கம் என்பதற்கான வரையறையும் மாறிவிட்டது. உணவும், தூக்கமும் தரும் இயல்பான ஆரோக்கியம் இன்றைய சூழலில் தவிர்க்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது. எனவே, இழக்க நேரும் ஆரோக்கியத்தை மீட்க வழியாகவே உடற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

நடுத்தர வயதுப் பெண்களின் மனநிலையிலும் தம் உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சமூகச் சூழலில் இதுவொரு பெரும் மாற்றம். உடல் பராமரிப்புக்கு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயங்குவதில்லை. தன்னைச் சுற்றிலும் உள்ள அண்டை வீட்டுப் பெண்கள், உடன் பணியாற்றும் பெண்கள், உறவினர்கள் என்று பிற பெண்களுக்கு நடுவில் தன்னையும் ஆரோக்கியமாக, அழகாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய விழிப்புணர்வும் மனநிலை மாற்றமும் தொழில் முதலீடாக மாறி அழகு, ஆரோக்கியம், உடல் பராமரிப்பு ஆகியவை பெரும் சந்தையாக உருவாகியிருப்பதைத்தான் இன்று பார்க்கிறோம். உடற்பயிற்சி கூடங்களும், அழகு நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும் சூழலையும் அங்குள்ள எண்ணற்ற கருவிகளையும் தளவாடங்களையும் அவற்றுள் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்களையும் நுட்பமாக கவனித்தால் இவற்றின் சந்தை மதிப்பை கணக்கிட முடியும். பயிற்சிக்கு தகுந்த உடைகள், காலணிகள், பருகும் பானங்கள், பரிந்துரைக்கும் உணவு வகைகள் என்று அனைத்துமே வியாபாரத்தின் கண்ணிகள்தான். நகம், புருவம், கேசம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பராமரிப்பு முறைகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சாதனங்கள், பூச்சுகள். உடலை இளைக்கச் செய்யலாம், எடை கூட்டவும் முடியும்.

இந்தச் சந்தை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அழகுக் கலை என்பது இன்று ஒரு தகுதி, படிப்பு. தகுந்த உணவு முறையைப் பரிந்துரைக்கவென நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். உடற் பயிற்சியை சொல்லித் தரவும், முறைப்படுத்தவுமான பயிற்சியாளர்களும் உள்ளனர். உடற்பயிற்சிக் கூடங்களை, அழகு நிலையங்களை அமைக்க வங்கிகள் கடன் தருகின்றன. கருவிகளும் சாதனங்களும் அழகூட்டும் பொருட்களும் தவணை முறை கடனுக்கு வழங்கப்படுகின்றன.

உடல் பராமரிப்பு, ஆரோக்கியம் சார்ந்த இந்தப் பெரும் சந்தையே ‘வீனஸ்’ நாவலின் களம். இந்தச் சந்தையின் பல்வேறு கண்ணிகளே இதன் கதாபாத்திரங்கள். இவர்களின் பார்வையில் இந்தச் சந்தையின் அடிப்படை உளவியலை, அதன் நுட்பங்களை அலசிப் பார்க்கிறது ‘வீனஸ்’. வியாபாரமும் சந்தையும் தரும் மன அழுத்தங்களையும் சவால்களை சமாளித்து அழகு நிலையத்தை வெற்றிகரமாக நடத்தும் ரஞ்சனிக்கு தன் மகள் தன்னிடமிருந்து விலகி நிற்பதை ஒரு தாயாக எப்படி கையாள்வது என்பது தீராத புதிராக, விடையற்ற பெரும் கேள்வியாக நிற்கிறது. ‘மாடல்’ அழகியாக உலகை வெல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் தன் எல்லா இச்சைகளையும் கட்டுப்படுத்தி உடலைப் பேணும் நிஷாவுக்கு தன் வனப்பில் மயங்கியுள்ள தன் பணக்கார காதலனையும் அவன் கட்டுப்பாடுகளையும் சமாளிப்பது பெரும் சவாலாக உருவெடுக்கிறது. செல்வந்தரான கணவரின் வியாபாரத் தந்திரங்களுக்கு மட்டும் அழகை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும் சந்தியாவின் உளவியல் மோதல்கள் வேறு வகையானவை. அவளது திறன்களோ சாமர்த்தியங்களோ கணவனுக்கு சிறிதும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. உடல் இச்சையைத் தீர்க்கும் ஒரு கருவி என்பதைத் தவிர வேறு மதிப்பில்லை. உடலைப் பரிசோதனைக் கூடமாக்கி ரசாயங்களைக் கொட்டிப் பாழாக்கும் வணிக வலைகளிலிருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பை ஏற்கும் திலோத்தமாவின் நோக்கங்கள் வேறு. பாதையும் வேறு. உடற்பயிற்சி நிலையத்தில் தன் உடல் உறுதியால், பராமரிப்பால் பெண்களின் கவனத்தைக் கவரும் அவ்வளவாக படிப்பறிவற்ற, ஆங்கிலம் பேச வராத பிருத்வி வந்ததை வரவில் வைப்பவன். உள்ளமட்டும் உடலைப் பேணி அதன் மூலம் வருவதைக் கொண்டு எதிர்காலத்தை அமைக்கத் திட்டமிடுபவன். ‘வீனஸ்’ முதலாளி ரஞ்சனியின் மீது ஆசை கொண்டிருக்கும் உளவியல் மருத்துவர் இன்னொரு கதாபாத்திரம். தன் பொருளாதாரத் தேவைக்கு தன்னை அவள் பயன்படுத்துகிறாள் என்று தெரிந்தும், தன் ஆசைக்கு அவள் இணங்குவாளா என்று நப்பாசையுடன் காத்திருக்கும் அவரை வெகு இயல்பாகவும் நுட்பமாகவும் கையாள்கிறாள் ரஞ்சனி.

யோசித்துப் பார்க்கும்போது இந்தக் களமும் இதன் சாத்தியங்களும் உருவாக்கும் உலகம் மிகப் பெரியது, ஆழமானது, நுட்பமானது. இக் கதாபாத்திரங்களின் உளவியல் மோதல்களும் தடுமாற்றங்களும் சரிவுகளும் இணைந்தும் விலகியும் சிதறியும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிக வலுவானவை. ஆனால், இத்தகைய ஒரு செறிவான களத்தில் இந்த நாவல் சென்றிருக்க வேண்டிய ஆழத்தையும் தொலைவையும் எட்டாமல் நின்றிருப்பது சோர்வைத் தருகிறது. சவாலான களம், வலுவான கதாபாத்திரங்கள் அமைந்திருந்தும் அவற்றின் முழு வீச்சையும் எட்டிப் பிடிக்க முயலாமல் போனது துரதிர்ஷ்டமே. தமிழ் இலக்கியத்தில் விவாதிக்கப்படாத, சமகாலத்தில் இன்றைய சமூகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை எடுத்துக்கொண்ட வகையில் இந்த நாவல் மிக முக்கியமானது.

 

( ‘வீனஸ்’, பா.கண்மணி, எதிர் வெளியீடு, டிசம்பர் 2025 )

 

 

 

 

 

Monday, 12 January 2026

போர்நிலத்தின் அன்றாடங்கள் – நாஞ்சில் ஹமீதின் ‘ஈராக் போர்முனை அனுபவங்கள்‘


 0

‘பொருள்வயின் பிரிதல்’ என்பது அகத்திணை மரபில் இருப்பது. மண்ணையும் மக்களையும் பிரிந்து சென்று பொருளீட்டுதல் என்பது தலைவனுக்குரிய  குணமாக, இயல்பாக வரையறுக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தில் தொடங்கிய இந்தப் பிரிவு இன்று வரை தொடர்ந்து வந்தபடியே உள்ளது. இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் பூர்வ கதையைத் தேடிப் பார்த்தால் அவர்களது மூதாதையர்கள் முன்னொரு காலத்தில் திரவியம் தேடி, குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். இன்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் யாரேனும் ஒரு இளைஞன் தன் வீட்டைவிட்டு வெளியேறியபடிதான் இருக்கிறான்.

மணவாளக்குறிச்சியிலிருந்து பம்பாய்க்கு வேலை தேடிச் சென்ற சாகுல் அமீது உற்சாகமான இளைஞன். புதிய இடங்களுக்கு செல்வதும் புதிய மனிதர்களைக் காண்பதும் அவருக்குப் பிடிக்கும். எந்த வேலையாயினும் அதில் முழு ஈடுபாட்டுடன் உழைப்பது அவர் இயல்பு. உலகின் எந்த மூலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இத்தகையே குணம் கொண்டோர்களால் பொருந்திவிட முடியும். அந்த இடத்துடனும் மனிதர்களுடனும் ஒன்றிவிடவும் இயலும். இளமைக்கேயுரிய துணிச்சலும் எதையும் சந்திக்கலாம் என்கிற மனத்திடமும் புதிய சவால்களை ஏற்கச் செய்யும். அப்படித்தான் போர் முனையின் அபாயங்களை அறிந்தும் ஈராக்குக்கு பயணப்படுகிறார் சாகுல் அமீது.

குவைத்-ஈராக் எல்லையில், பாலைவனத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தொடங்கி, சதாம் உசேனின் பிறந்த ஊரும் அவரது அரண்மனைகள் அமைந்திருந்த திக்ரித் வரையிலுமான பதினெட்டு மாத வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல். அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான போர் மிகுந்த உக்கிரத்துடன் தொடர்கிறது. அமெரிக்க வீரர்களுக்கு சமையல்காரராக பணிபுரியும் இந்த நாட்களில் கண்ணெதிரில் குண்டுகள் விழுகின்றன. நெருங்கிய நண்பர் கால்களை இழக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த மூத்தவர் மனநிலை பிறழ்ந்து இல்லாத நீரில் நீராடியபடி நிற்கிறர். சொந்த ஊரில் தாய் மரணமடைந்து அவரது இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்ட செய்தியை தாமதமாக அறிய நேர்ந்த இன்னொருவர் அழுது தேம்புகிறார். முகாம்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. சமையலுக்கான பொருட்கள் வந்து சேராத நிலையில் பசியுடன் இருக்க நேர்கிறது. சில சமயங்களில் தற்காலிகமாக வேறிடங்களுக்கு இடம் பெயரவும் நேர்கிறது. இத்தகைய அபாயகரமான சூழலிலும் தங்களது அன்றாட நாட்களை உற்சாகமானவையாக உருமாற்றிக் கொள்கிறார்கள். இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து நட்பைப் பேணுகிறார்கள். ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். வேளை வருகையில் பிரிகிறார்கள்.

முப்பத்தி நான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் சித்தரித்திருப்பது ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தைத்தான். ஆனால், பதினெட்டு மாதங்களில் எத்தனை முறை ஒரு உயிர் செத்துப் பிழைக்கிறது என்பதை உணரும்போது பதற்றம் தொற்றிக் கொள்கிறது. குடும்பத்துக்காக, பொருளீட்டுவதற்காக உலகின் ஏதோ ஒரு மூலையில் போர் முனையில் தம் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் நிலையை எண்ணி கவலை கொள்ள நேர்கிறது. யானைகள் மோதிக் கொள்ளும்போது புற்கள் நசுங்குவதுபோல, அதிகாரப் போட்டிக்கு நடுவே இப்படிப்பட்ட அப்பாவிகள் உயிரை இழக்கவும், உடல் உறுப்புகளை இழக்கவும் நேர்கிறது.

பதற்றம் மிகுந்த நாட்களைச் சொல்லும் இந்த அனுபவக் குறிப்புகள் ஒரு நாவலுக்கு நிகரான நிறைவையும் செறிவையும் அளிக்கின்றன. இக் குறிப்புகளின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. உள்ளதை உள்ளபடி சொல்வது. எனவேதான் இதனுடன் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இட்டிருக்கும் தலைப்புகள், ‘வேலைக்கு வேட்டை’, ‘அயல் மண்ணில் காலும், அன்னமிடும் கைகளும்’, போர்க்களமும் அடுகளமும்’ என்பன போன்று, கவனிக்கும்படியாக உள்ளன. உத்தரவாதமற்ற அன்றாடத்தின் அபாயங்களுக்கு நடுவேயும் மனிதர்களை கவனித்து அறிந்து புரிந்துகொண்டு அவர்களுடனான உறவைப் பேணும் தன்மை வியக்க வைக்கிறது. நாடும் மொழியும் இனமும் வேறானாலும் அவர்களிடமுள்ள மேன்மைகளைக் காணும் சந்தர்ப்பங்களும் வாய்க்கின்றன. சிற்சில இடங்களில், தருணங்களில் மனிதர்களுக்கேயுரிய கீழ்மைகளும் தலையெடுக்கின்றன. எதன் மீதும் யார் மீதும் எந்தவிதமான புகாரோ விமர்சனமோ இல்லாமல் மனிதர்களின் இயல்பு இத்தகையது என்ற சமநோக்குடன் அனைவரையும் அணுகும் விதமும் முக்கியமானது.

சமையல்காரராக பணி புரிந்த காரணத்தால் அமெரிக்கர்களின் உணவு வகைகளும் செய்முறைகளும் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது உணவு முறையை  சமாளிக்கும் விதத்தையும், கொண்டாட்டத்தின்போது பிரமாண்டமான விருந்துகள் பரிமாறப்படுவதையும் நுட்பத்துடன் விவரிக்க முடிந்திருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு மிக்க பாலைவனத்தில் குளிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். அரிசித் தட்டுப்பாடு ஏற்படும்போது கோழிக் கறியைக் கொடுத்து பண்டமாற்று செய்கிறார்கள். இடர்பாடுகளுக்கு நடுவிலும் ரமலான் நோம்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் வாழ்வின் பாடங்களாக உருப்பெறுகின்றன.

தற்செயலாக நிகழும் தீ விபத்தொன்றில் கூடாரங்கள் எரிந்து போகின்றன. பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் சாம்பலாகின்றன. பிழைக்கப்போன இடத்தில் முக்கியமான இந்த ஆவணங்கள் தீக்கிரையாவதை நேரில் பார்க்கும் ஒருவனின் மனநிலை எத்தகைய எல்லைக்குச் சென்றிருக்கும்? அழுது தேம்பி வாழ்வில் இனி எதுவும் மிச்சமில்லை என்று சோர்ந்திருக்கும்போது அவனுக்குள் அந்த எண்ணம் தலையெடுக்கிறது. ஒருவேளை, சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் தப்பி நான் உயிர் இழந்திருந்தால் அந்தக் காகிதங்களுக்கு என்ன பொருள் என்ற எண்ணம் எழுகிறது. உயிரல்லவா முக்கியம். பிற எதுவானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்தானே? அந்தவகையில் இறைவன் கருணை காட்டியிருக்கிறான் என்ற நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படுகிறது. அடுத்த கட்டத்துக்கு நகர முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னைத் தொகுத்துக்கொண்டு இழப்புகளைக் குறித்து மனம் தளராமல் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றிய தெளிவை எட்டுதலே முக்கியம் என்பதை வெகு இயல்பாக எளிமையாக இந்த அத்தியாயம் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அனுபவங்களின் வாயிலாக தான் அறிந்த ஒன்றை சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதியிருக்கிறார் அமீது.

ஒரு பண்பாடு என்பதில் இருக்கும் கட்டுப்பாட்டையும், சுதந்திரத்தையும்  ஒழுக்கத்தோடு இணைக்கத் தேவையில்லை.   சுய ஒழுக்கமும், தன் எண்ணத்துக்கு நேர்மையுமாக இருப்பவர்கள் எந்தப் பண்பாட்டிலும் இருக்கிறார்கள்.’,

உணவின் அவசியம் என்பதை உணர பட்டினி தேவைப்படுகிறது. ஆனால் உணவு கிடைக்கும் என்ற உத்திரவாதத்துடன் பட்டினி கிடப்பதும், இனி உணவு கிடைக்குமா என்ற உறுதி இல்லாத பட்டினியும் ஒன்றல்ல. உணவா, உயிரா என்ற நிலை எந்த மனஉறுதியையும் தகர்த்து விடக் கூடியது’,

நிச்சயமற்ற வாழ்வைக் கொடுத்த இறைவன்தான் வாழும்வரை நிம்மதியாக வாழ அனைத்தையும் கொடுத்துள்ளான். நாம்தான் போர், கோபம், ஆத்திரம், வஞ்சம் என அந்த நிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறோம்

போன்ற சில வரிகளை உதாரணமாகச் சுட்டலாம்.

அதிகாரத்தின் பெயரில் ஈராக்கை ஆண்ட, ஆடம்பரமான அரண்மனையில் சொகுசு வாழ்கை அனுபவித்த சதாம் உசேன் தன் இறுதி நாட்களில், காற்றும் வெளிச்சமும் புகாத நிலவறையில் அடையாளம் தெரியாத வகையில் உருமாறிய நிலையில் அமெரிக்க இராணுவத்திடம் பிடிபடுவதைப் பற்றி எழுதும்போது ‘எது வீரம்?’ என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கங்கே சில இடங்களில் மென்மையான நகைச்சுவை இழையோடுகிறது, சொந்த ஊரின் நினைவுகள் புரளுகின்றன, பிரிந்துபோன நண்பர்களைப் பற்றிய ஏக்கம் எழுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்து அனுபவங்களை மேலும் ரசமானதாக மாற்றுகின்றன.

இந்த நூலின் இறுதி சில பக்கங்கள் விறுவிறுப்பானவை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அனுமதி பெற்று ஊருக்குத் திரும்ப தயாராகிறார். ஆனால், போர்ப் பதற்றம் காரணமாக பாக்தாத் வரை செல்வதற்கான சாலைப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை. அதிகாரிகளின் முயற்சிக்குப் பிறகும் எதுவும் கூடி வருவதில்லை. இறுதியில், ஒரு இராணுவ அதிகாரியின் ரோந்து வாகனத்தில் அனுமதி பெற்று அனுப்பி வைக்கின்றனர். பாக்தாத் விடுதியிலும் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கிறது. குறித்த காலம் கடந்து போகிறது. ஊருக்குப் போக முடியுமா, முடியாதா என்ற நிலையில் விமானத்தில் இடம் கிடைக்கிறது. விமானத்தில் ஏறும் வரையிலும்கூட எதுவும் நிச்சயமற்ற நிலையில் பயணம் தொடங்குகிறது. ஊர் வந்து சேருகிறார். குறிப்பிட்ட நாளில் அல்லாமல் சில நாட்கள் கழித்து திருமணம் நடந்தேறுகிறது.

இதன் பிற்சேர்க்கையில், முகாமில் ஒன்றாகித் தங்கி பணிபுரிந்தவர்களின் இப்போதைய நிலையைப் பற்றியும் அவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

இவ்வகையான போர்க்கள அனுபவக் குறிப்பு என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. நேரடியான போரில் ஈடுபடாதபோதும் உயிராபத்து என்பது அனைவருக்கும் ஒன்றுதான். துப்பாக்கி ஏந்தியோர் மட்டும் அல்லாமல் உதவிக்காக பிற துணைப் பிரிவுகளில் செயலாற்றும் யாரும் இறக்க நேரலாம். போரின் கண்களில் அனைத்துயிரும் ஒன்றுதான். அது பாகுபாடு பார்ப்பதில்லை. பொருளீட்டும் ஆசையுடன் இவ்வகையான ஆபத்துகளைச் சந்திக்கத் துணியும் எண்ணற்ற இளைஞர்களைக் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்கிறது இந்த நூல்.

இதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் இன்னும் நுட்பமாக விரித்து எழுதும் வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் சுருக்கமும் செறிவுமாய் சில வரிகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்களை, எண்ணங்களை அசைபோடும்போது அவை அபாரமான ஆழங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதே இதன் தனித்தன்மையாக அமைந்துள்ளது. போர்நிலக் காட்சிகள் நமக்குள் விதைக்கும் பதற்றத்துக்கு அப்பால், வெவ்வேறு நிலம், மொழி, இனங்களைச் சேர்ந்த மனிதர்கள் புழங்கும் முகாம்களின் அன்றாட வாழ்வின் பல்வேறு நிறங்களையும் நெருக்கமாகக் காட்டியிருப்பது மிக முக்கியமானது.

சாகுல் அமீது என்ற கப்பல்காரனின் அனுபவக் குறிப்புகளாக அமைந்திருந்தபோதும் சமகாலத்தில் உலகின் ஏதோவொரு நிலத்தில், போர்முனையில் இவ்வகையான நெருக்கடிகளை இன்றும் சந்தித்து வரும் முகம் தெரியாத பல இளைஞர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது.

0

(நாஞ்சில் ஹமீது எழுதிய ‘ஈராக் போர்முனை அனுபவங்கள்’ நூலுக்கான முன்னுரை.)     

 

Friday, 2 January 2026

பாவண்ணன் - இரு நிலங்கள், ஒரே மொழி

ஒரு எழுத்தாளன் தன் மொழிக்குச் செய்யவேண்டிய மூன்று காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி வருபவர் பாவண்ணன். முதலாவது காரியம் சிறுகதை, நாவல்கள், கவிதைகள் என்று தொடர்ந்து பங்களிப்புகளைச் செய்திருப்பது. 35 ஆண்டு காலத்தில் அவர் எழுதாத நாளே இல்லை என்று சொல்லலாம். இதுவரையிலும் 20 சிறுகதைத் தொகுதிகள், ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘, ‘சிதறல்கள்’, ‘பாய்மரக் கப்பல்’ என மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், 18 கட்டுரைத் தொகுப்புகள் என 50க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி உள்ளன.

எழுத்தாளன் செய்யவேண்டிய இரண்டாவது காரியம் தான் அறிந்த, வாசித்த பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்குத் தருவது. பணியின்பொருட்டு கர்நாடகத்தில் வசிக்கத் தொடங்கிய நாளிலேயே கன்னடத்தைக் கற்றுக் கொண்ட பாவண்ணன், கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த எழுத்துக்கள் 19 நூல்களாக வெளியாகியுள்ளன.

மூன்றாவதாக எழுத்தாளன் ஒரு வாசகனாக தான் ரசித்தவற்றை தன் வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவது முக்கியமான பணியாகும். தமிழில் எழுதும் புதிய கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து அவர் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியங்கள்’ எனும் புத்தகமும், சிறுகதையாளர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ‘எனக்குப் பிடித்த கதைகள்’ தொகுப்பும் புதிய வாசகர்களுக்கு முக்கியமானவை ஆகும். அவரது கட்டுரைத் தொகுப்புகள் பலவும் வாழ்வின் பல்வேறு தருணங்களின் நாம் உணர நேரும் அபூர்வ கணங்களைச் சுட்டி நிற்பவை.

ஒரு எழுத்தாளனாக தான் செய்யவேண்டிய காரியங்களை ஓசையில்லாமல், தற்பெருமை இல்லாமல், அடக்கமாக, புன்னகையுடன் செய்திருப்பது என்பதே அபூர்வமான ஒன்றுதான். பாவண்ணன் அத்தகையதொரு சாதனையாளர். தமிழுக்கும் அவருக்குமான உணர்வுப்பூர்வமான உறவைப் போலவே அவருக்கும் அவரது வாசகர்களுக்குமான உறவு மிகவும் நெகிழ்ச்சியானது, சொற்களுக்கு அப்பாற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு நவீன கன்னட எழுத்துக்களைப் பற்றி உரையாற்றுவதற்காக பாவண்ணன் கோவை வந்திருந்தார். நிகழ்ச்சி முடிவுறும் தறுவாயில் உரிமை முழக்கங்களுடன் அரங்கிற்கு வந்த அரசியல் குழுவினர் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் துறையினர் நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கண்டித்ததுடன் உடனடியாக அரங்கிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இது ஒரு இலக்கிய நிகழ்ச்சி என்று சொன்ன விளக்கம் யார் காதிலும் விழவில்லை. நிகழ்ச்சி உடனடியாக முடிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்துக்கும் நமக்குமான அரசியல் உறவு சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சூழலில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான இலக்கிய உறவுக்கான முக்கியமான தவிர்க்கமுடியாத பாலமாக விளங்குகிறார் பாவண்ணன்.

சொல்லப்போனால் பிறப்பால் புதுச்சேரிக்கும், மொழியால் தமிழகத்துக்கும், இருப்பால் கர்நாடகத்தும் என பாவண்ணன் மூன்று மாநிலங்களுக்குச் சொந்தக்காரர். மொழிபெயர்ப்பின் வழியாக கன்னட இலக்கியத்தை தமிழுக்குக் கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர். இலக்கியவாதி ஒருவர் தனது சொந்த படைப்பிலக்கியத்துக்கு தரும் அதேயளவு முக்கியத்துவத்தை மொழிபெயர்ப்புக்கும் அளிப்பதென்பது எளிய காரியமன்று. ஆனால் பாவண்ணன் தனது 35 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் தனது சொந்தப் படைப்புகளுக்கு இணையாக 20 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார் என்பது அபூர்வமான ஒன்று.

பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்ற கிரீஷ் கர்நாட்டின் நவீன நாடகங்களையும், லங்கேஷ், வைதேகி, விவேக் ஷன்பாக் போன்றவர்களின் சிறுகதைகளையும், பைரப்பாவின் ‘பருவம்’, ‘வினைவிதைத்தவன் வினை அறுப்பான்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’, … ‘ஓம் நமோ’, ராகவேந்திர பாட்டீலின் ’தேர்’ உள்ளிட்ட நாவல்களையும் அக்கமாதேவி, பசவண்ணர் என கன்னடத்தின் ஆதி கவிகள் தொடங்கி இன்றைய நவீன கவிஞர்கள் வரையிலும் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு நமக்கு பாவண்ணனின் மொழியாக்கத்தின் வாயிலாகவே சாத்தியமானது.

கன்னடத்தின் முன்னணி எழுத்தாளரான கிரீஷ் கர்நாட் தனது நாடகங்களை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரும்போது, பாவண்ணன் மொழிபெயர்ப்பதாய் இருந்தால் மட்டுமே அனுமதி தரமுடியும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அவரது மொழிபெயர்ப்பின் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.

தமிழில் தலித் எழுத்துக்களுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியவை பாவண்ணனின் மொழிபெயர்ப்புகளே. 1996ம் ஆண்டு வெளியான ‘புதைந்த காற்று’ என்கிற தலித் எழுத்துக்களின் தொகை நூலும், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரியும்’ என்கிற தலித் தன்வரலாறும் 1998ல் வெளியான அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’ எனும் தன்வரலாற்று நூலும் தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளையும் பாதிப்புகளையும் உருவாக்கின. இந்த நூல்களின் வருகைக்குப் பின்பே தமிழில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல்கள் தொடங்கின.

எல்லா எழுத்தாளர்களையும்போலவே பாவண்ணனும் கவிதையிலிருந்தே தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் மரபிலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் கபிலர் தொடங்கி ஆவுடையக்காள் உள்ளிட்ட பல கவிஞர்களைக் குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல கன்னடத்தின் முக்கியமான பக்தி கவிஞரான அக்கமாதேவியின் கவிதைகளை தமிழின் ஆண்டாள் பாசுரங்களோடு ஒப்பிட்டு எழுதிய ‘பாட்டும் பரவசமும்’ என்கிற கட்டுரை மிக முக்கியமான ஒன்றாகும்.  பிற இலக்கிய வகைமைகளைப் போலவே கவிதைகளையும் அவர் தொடர்ந்து எழுதுகிறார். இதுவரையிலும் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர் பாவண்ணன். வியப்பும் உற்சாகமும் கும்மாளமும் மிக்க குழந்தைகளின் உலகைச் சுற்றி அவர் எழுதிய பாடல்கள் மூன்று தொகுதிகளாய் வெளியாகியுள்ளன.

பருவம்’ நாவலுக்காக சாகித்திய அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ‘பயணம்’ சிறுகதைக்காக கதா விருது உள்ளிட்ட பல விருதுகளும் பாவண்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாவண்ணன் அளவுக்கு ஓயாமல் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. தமிழுடனும் வாசகர்களுடனுமான அவரது செயல்பாடுகளும் உரையாடல்களும் உள்ளபடியே அவருக்கு மேலும் கவனத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கவேண்டும். தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத தன்மையும், ‘எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே எழுதுகிறேன்’ என்ற தெளிவும், எழுத்தைக் கொண்டு பயனடைய நினைக்காத மனமுமே பாவண்ணனின் தனி அடையாளங்கள். குழுச் செயல்பாடுகளுக்கும் இலக்கிய அரசியல் விளையாட்டுகளுக்கும் பேர்போன தமிழ்ச் சூழலில் பாவண்ணனின் அசலான பங்களிப்புகளுக்கு உரிய மதிப்பில்லாமல் போவதில் வியப்பொன்றுமில்லை.

0

( விளக்கு விருது அளிக்கப்பட்டதையொட்டி தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரை )

 

Thursday, 1 January 2026

எம். கிருஷ்ணனின் ‘யானைத் துப்பாக்கி’

 



 

வேட்டை துப்பாக்கியைப் போட்டுவிட்டு கையில் கேமராவை எடுக்கவைத்து .சீ.எட்வர்ட்ஸ் என்னுடைய குருநாதர். அதே போல எம். கிருஷ்ணனும் என்னுடைய இன்னொரு குருநாதர். அவரிடமிருந்து கானுயிர் புகைப்படக்கலை குறித்தும் கானுயிர்களின், குறிப்பாக யானைகளின் போக்குகள் குறித்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எம். கிருஷ்ணன் இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். களத்தில் இறங்கி கடும்பணியாற்றிய அசுர உழைப்பாளி. யானைகளைப் பற்றிய விஷயத்தில் அவர் ஒரு நிபுணர். யானைகள் என்ன நினைக்கின்றன என்றே அவரால் சொல்ல முடியும். ஒரு முறை நாகர்ஹொலேவுக்கு அவருடன் சென்றிருந்தோம். எனது நண்பர் கோட்பொடே, அவருடைய மகன் அஜய் கோட்பொடே ஆகியோரும் உண்டு. யானையில் நாங்கள் சவாரி செய்துகொண்டிருக்கிறோம். நாகர்ஹொலே காட்டுக்குள் ''ஹட்லு'' என்று சொல்லப்படும் வயல்போன்ற பகுதிகள் ஆங்காங்கே இருக்கும். முன்பு அங்கே கிராமங்கள் இருந்திருக்கவேண்டும். அங்கிருந்தவர்கள் பயிர் செய்த விளைநிலங்கள் அவை. நாங்கள் குந்தூர் வழியாக போனபோது அந்த வயல்வெளியில் ஒரு கொம்பன் யானை மேய்வதைக் கண்டோம். அதைக் கண்டதும் நாங்கள் அதை நோக்கி போனோம். அந்த கொம்பன் யானை மிக கச்சிதமான உடல்வாகும் கம்பீரமும் கொண்ட ஒரு கொமரியா. பருத்த தந்தங்கள். கிருஷ்ணனின் பாஷையில் சொல்வதனால் ''Perfect Royal'' யானை. பக்கத்தில்போய் பார்க்கும்போது அந்த யானை மஸ்த் நிலையில் இருந்ததை கண்டோம். அதாவது மஸ்த் சுரப்பியிலிருந்து எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் வடிந்துகொண்டிருக்கும். (பொதுவாக இப்படிப்பட்ட நிலையை நாம் மதம்பிடித்திருப்பதாய் சொல்வோம். ஆனால் டி என் ஏ பெருமாள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை). அப்படிப்பட்ட நிலையில் அந்த யானையின் போக்கை நாம் அனுமானிக்கமுடியாது. என்ன செய்யும் என்று தீர்மானிக்க முடியாது என்று சொல்லுவார்கள்.

நாங்கள் பெண்யானையில் சவாரி செய்துகொண்டிருந்தோம். நாங்கள் சற்று அருகே போனதும் அந்த கொம்பன் யானை எங்களை நோக்கி வரத் தொடங்கியது. வரும்போது தன் துதிக்கையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிக்கொண்டே வருகிறது. வயதான தாத்தாக்கள் நடக்கும்போது கைத்தடியை ஆட்டிக்கொண்டே வருவார்களே அதுபோல. எப்போதுமே கொம்பன் யானைகள் நடந்து வரும்போது தலையை சற்றே மேலே தூக்கிக்கொண்டு கம்பீரமாக நடந்துவரும். அப்படி நடந்துவருகிறது. அது வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த மாவுத்தன் ''சார் பக்கத்துல வருது சார்.. போயர்லாம் சார்'' என்று எச்சரிக்கிறார். எம் கிருஷ்ணனோ ''வரட்டும் வரட்டும் பொறு'' என்று அப்படியே நிற்கிறார். பத்தடி தொலைவு வரைக்கும் அந்த கொம்பன் யானை நெருங்கி வந்துவிட்டது. இவர் என்னடா செய்யப் போகிறார் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே நின்றோம். ஒரு கட்டத்தில் எம் கிருஷ்ணன் உரத்த குரலில் ''ஹால்ட்'' என்று சத்தம் போட்டார். அவ்வளவுதான். யானை நின்றுவிட்டது. எதுவும் புரியாமல் இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது.

கிருஷ்ணன் மாவுத்தனிடம் பெண் யானையைத் திருப்புமாறு சொல்கிறார். அந்த மாவுத்தன் தன் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு யானையைத் திருப்பினார். ''அந்த கொம்பனும் நாம போகிற பக்கமே வரும். நீ யானைய வெரட்டாம இதே தூரம் இருக்கறா மாதிரி யானைய ஓட்டிட்டுப் போகணும்'' என்று அவரிடம் சொல்கிறார். அவர் சொன்னபடியே அதே தூரத்தில் கொம்பன் யானை பின்னாடியே வந்தது. காட்டுக்குள் போவதற்கு சற்று மேடான பகுதியை ஏறிச் செல்லவேண்டியிருந்தது. '' அந்த மேட்டுல ஏறும்போது யானை நல்லா போஸ் கொடுக்கும். படம் எடுக்கணும்'' என்று எங்களிடம் சொன்னார். நாங்கள் சவாரி செய்கிற யானையோ அசையும கப்பல் மாதிரி ஆடி ஆடிப்போகிறது. பின்னால் அந்த யானையும் அதே வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணனோ யானையின் ஒவ்வொரு அசைவையும் கணித்தவர்போல நேரடி வர்ணனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்வதையெல்லாம் செய்வது போலவே அந்த யானை வந்து கொண்டிருக்கிறது. சொன்னமாதிரியே  மேட்டை நெருங்கியதும் கொம்பன் யானை நின்றது. ஒரு காலை தூக்கியது. துதிக்கையை வளைத்துப் போட்டது. என்ன அற்புதமான போஸ் அது. ஆனால் கிருஷ்ணன் உட்பட யாராலும் அதை படமெடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் சவாரி செய்கிற யானை இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டு நிற்க எங்களுக்கு தேவையான சமநிலை வாயக்கவில்லை. யாரும் படம் எடுக்காதபோதும் அந்த அற்புதமான காட்சியை நாங்கள் பார்த்தோம்.

பிறகு அது காட்டுக்குள் போய்விட்டது. அது போன பிறகு எம் கிருஷ்ணன் சொன்னார். ''நான் ஹால்ட்னு சொன்னதும் யானை அப்படியே நின்னுடுச்சு. இதே இன்னொருத்தர் ''முருகா''ன்னு கத்தியிருந்தாலும் யானை நின்னுருக்கும். அப்ப முருகன்தான் வந்து காப்பாத்துனாருன்னு சொல்லிக்குவாங்க. விஷயம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட தொலைவில் அப்படியொரு வலுவான தீர்க்கமான ஓசையைக் கேட்டதும் யானை நின்றுவிட்டது. குறிப்பிட்ட தொலைவில் அந்த யானையை திடுக்கிட வைக்குமளவிலான ஓசை. அவ்வளவுதான்.'' என்று விளக்கமளித்தார். இந்த சம்பவத்தைக் குறித்து நான் Bombay Natural Societyயின் இதழில் எழுதியிருக்கிறேன்.

மறுநாள் இதேபோல இன்னொரு சம்பவம். எம்.கிருஷ்ணனும் அஜய் கோட்பொடேவும் ஒரு யானையில். நானும் சுப்பாவும் இன்னொரு யானையில் சவாரி செய்கிறோம். கோட்பொடே தனியாக ஒரு யானையில். அப்போது அவர் கர்நாடகாவின் நிதியமைச்சர். ஆகவே அவருக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் ஒரு காட்டிலாக்கா அதிகாரி கே எம் சின்னப்பா என்பவர். அவர் இப்போது நாகர்ஹொலேவின் மண்டல அதிகாரி. அந்த தேசியப் பூங்காவை திறம்பட நிர்வகித்துவரும் திறமையான வன அதிகாரி. ஒரு மேட்டுப் பகுதியில் ஏறிப் பார்க்கும்போது மறுபக்கம் ஒரு யானைக்கூட்டம். எல்லாமே பெண் யானைகள். கொம்பன் யானை அந்தக் கூட்டத்தில் இல்லை. கோட்பொடேவின் யானை முன்னால் போகிறது. கிருஷ்ணனின் யானை பின்னால். யானைக்கூட்டத்தை நோக்கி கோட்பொடே போவதைக் கண்டு கிருஷ்ணன் சத்தம் போடுகிறார். ''அசையாதீர்கள்''. ஆனாலும் கோட்பொடே அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மாவுத்தனிடம் ''பக்கத்துல போ.. பக்கத்துல போ'' என்று முடுக்குகிறார். கிருஷ்ணன் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். ''அசையாமல் இருங்கள்''. கோட்பொடேவின் யானை மேலும் மேலும் நெருங்குவதைக் கண்ட அந்த யானைக் கூட்டத்திலிருந்து திடீரென்று மூன்று பெண் யானைகள் பிளிறியபடி ஆவேசத்துடன் வருகின்றன. ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டோம். கையில் வைத்திருந்த துப்பாக்கியை கோட்பொடே லோட் செய்திருக்கவில்லை. யானைகள் வரும் வேகத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டாலும் அவசரமாக துப்பாக்கியை லோட் செய்து தரையில் சுட்டார். 'திம்' என்ற சத்தத்துடன் தரை அதிர்ந்தது. அந்த சத்தத்தைக் கேட்டதும் யானைகள் அப்படியே நின்றுவிட்டன. குழப்பம். என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியும் இப்படியுமாக தலையைத் திருப்பி பார்க்கின்றன. கொஞ்ச நேரம் கழித்து யானைகளை அப்படியே பின்னோக்கி நடத்தி பாதுகாப்பான தூரத்துக்கு வந்துவிட்டோம். எம் கிருஷ்ணன் கோட்பொடேவிடம் சத்தம் போட்டார். ''நானே சொல்றேன்ல. அசையாம இருங்கன்னு. கேக்காம போயி என்னாச்சு பாத்தீங்களா?''. கோட்பொடே ஒன்றும் பேசவில்லை. அவர் வேர்த்து விறுவிறுத்து முகம் வெளுத்துப் போயிருந்தார்.

யானைகளைப் பற்றிய துல்லியமான அறிவு எம் கிருஷ்ணனுக்கு இருந்தது. கொம்பன் யானையைப் பார்க்கும் எவரும் அதை நெருங்கத் துணியமாட்டார்கள். ஆனால் இவர் அந்த யானைக்கருகில் நடந்து சென்றே படம் எடுத்துவிடுவார். பொதுவாக அவர் மேற்கொண்டவை எல்லாம் வழக்கத்துக்கு மாறான முயற்சிகள்தான். காட்டுக்குள்ள சிகரெட் பிடிக்கக்கூடாது என்றால் இவர் பர்கிளி சிகரெட் ஒன்றை பற்றவைத்து அதன் புகை எந்தப் பக்கமாய் போகிறது என்று பார்த்து காட்டுக்குள் காற்றின் திசையை தெரிந்துகொள்வார்.

கோட்பொடேவிடம் நான் சென்று சேர்வதற்கு முன்பே எனக்கு எம் கிருஷ்ணனைத் தெரியும். ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்துக்கு வந்திருந்தார். நிறைய பறவைகள் படமெல்லாம் எடுத்தார். அந்த படங்களை அச்சிடுவதற்கு நான் உதவினேன். பகலில் எடுக்கும் படங்களை எல்லாம் இரவில் விடுதியில் வைத்து அச்சிடுவோம். அப்போது அவர் குவிமையம் முன்பே தீர்மானிக்கப்பட்ட(prefocused) கேமராவைத் தான் உபயோகித்தார். 100 அடி தொலைவுக்கு குவிமையம் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்த பறவைகள் வரும்போது அதனுடைய வேகத்தையும் தொலைவையும் கணித்து படமெடுப்பார். பிலிம் ஈரமாக இருக்கும்போதே அவற்றை பரிசோதிப்பார். கையில் ஒரு பூதகண்ணாடி வைத்திருப்பார். படம் சரியாக வந்திருக்கிறதா என்று கூர்ந்து பார்ப்பார். சரியென்று தோன்றினால் தொடர்ந்து அச்சிடச் சொல்வார். இல்லையென்றால் அந்த ஈரத்துடனேயே டர்ரென்று கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார். 'இதையெல்லாம் வெச்சுக்கறதுக்கு எங்கிட்ட எடம் இல்லை.' என்பார். சரியாக வந்திருக்கும் படத்திற்கு பின்னாலேயே எங்கே எப்போது எடுத்தது என்று குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்வார்.

அப்போது ரங்கன்திட்டுவில் படகோட்டி சிக்குதிம்மான். அவர் எங்களை படகிலேற்றி குறிப்பிட்ட ஒரு பகுதியில் இறக்கிவிட்டுவிடுவார். அதற்கு பிறகு நடந்து சென்றுதான் படமெடுக்கவேண்டும். ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் ஒன்பது தீவுகளைக் கொண்டது. ஒரு திட்டு மட்டும் மிகப் பெரியதாக இருக்கும். மற்றவை அளவில் சிறியவை. அது மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமானதாக இருந்தது. மீன்பிடிக்கும் ஒரு ஏரியாக இருந்த அதை பறவைகள் சரணாலயமாக தேசியமயமாக்கியது டாக்டர் சலீம் அலி சாஹிப்பின் பரிந்துரையின்பேரில்தான். மைசூர் பகுதியில் உள்ள பறவைகள் குறித்து விபரங்களை சேகரிக்க டாக்டர் சலீம் அலி வந்திருந்தபோது ரங்கன்திட்டுவையும் அதிலுள்ள பறவைகளையும் பார்த்துவிட்டு அந்த இடத்தை தேசிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டார். மைசூர் மகாராஜாவும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அவர்களுடைய முயற்சியின் பலனைத்தான் நாம் இப்போது அற்புதமான சரணாலயமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். டாக்டர் சலீம் அலி போன்ற ஒரு நிபுணரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் அரசு இருந்தது. அதனால் அவையெல்லாம் சாத்தியப்பட்டது.

எம் கிருஷ்ணனுடன் நான் பல முறை பயணித்திருக்கிறேன். முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹொலே என்று பல காடுகளில் நாங்கள் சுற்றி அலைந்திருக்கிறோம். மாலையில் விடுதிக்கு திரும்பிய பிறகு அதிகாலை இரண்டு மணிவரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். நாங்கள் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்போம். தன் நினைவிலிருந்து அனுபவத்திலிருந்து நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பார். புகைப்படக் கலை குறித்து அவருக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன. அவர் எப்போது எங்கே சென்றாலும் தன்னுடன் பாட்டில்களில் புகைப்படங்களை டெவலப் செய்யத் தேவையான ரசாயனக் கலவையை எடுத்து செல்வார். பெரிய பெரிய பழுப்பு நிற பாட்டில்கள். அவருடைய பயணப் பொருட்களின் ஒரு பகுதி அவை.  எளிதில் உடையக்கூடியவை. ரயிலில் பயணம் செய்வார். பஸ்ஸில் பயணம் செய்யவேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் அவற்றை சுமந்துகொண்டுதான் வருவார். கோட்பொடேவுடன் என்றால் அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுவிடும்.

எம் கிருஷ்ணன் ஆங்கிலத்தில் நிறைய எழுதுவார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் இதுபோன்ற பயணங்களுக்கு செலவழிப்பார். முதுமலையில் மசினகுடி தாண்டியதும் ஜெய்தேவ் அவென்யூ என்றொரு இடம் உண்டு. அதற்கு எதிரில் ஒரு காடு. அங்கே ஒரு புள்ளிமான் கூட்டம். நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள். எல்லாமே ஆண்மான்கள். அவ்வாறு அமைவதை stag party என்று சொல்லுவார்கள். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கில் புள்ளிமான்கள்.  பெண்மான் ஒன்றுகூட கிடையாது. இப்போது அந்த புள்ளிமான்களையெல்லாம் பார்க்கமுடியவில்லை. அதேபோல மோயார் யானைக்கூட்டங்களுக்கு பெயர் போனது. அந்தப் பகுதி புதர்காடுகளால் ஆனவை. அவ்வளவு அடர்த்தியான காடு இல்லை என்றாலும் நிறைய யானைகள் கண்ணில் படும். முதுமலைக்கு வெகு அருகில் இருந்ததினால் யானைகள் அந்தப் பாதையில் அடிக்கடி போய்வரும்.

எம் கிருஷ்ணன் தானே யானையை மாவுத்தன் மாதிரி செலுத்துவார். ஹட்டிகளுக்குப் போவார். யானையின் மீதிருந்தே படங்கள் எடுப்பார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்ததுதான் அவருடைய மிகப் பிரபலமான படம். ஒரு கலைமான் மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும். அவர் தனக்குத் தேவையான கேமராவை தானே வடிவமைத்துக்கொண்டார். சத்தமெழுப்பாத ஷட்டருடன் நல்ல லென்ஸூடன் கூடிய ஒரு கேமரா வேண்டும் என்பதற்காக தனக்கேற்ற வடிவத்தில் அதை உருவாக்கிக்கொண்டார். கேமராவைப் பொறுத்தவரை லென்ஸ்தான் முக்கியமானது. பொதுவாக எல்லோரும் கவனிக்கத்தவறும் இன்னொரு அம்சம் கேமராவின் அசைவு. கேமராவை இயக்கும்போது இந்த துல்லியமான அசைவு மிகக்குறைவானதாக இருக்கவேண்டும். படங்களை பெரிதுப்படுத்தும்போது இந்த கேமரா அசைவின் பாதிப்பை நன்றாக உணரமுடியும். மிகக்குறைந்த கைநடுக்கத்தை மட்டுமே அனுமதிக்கும் வகையிலாக தன் கேமராவை அவர் உருவாக்கிக் கொண்டார்.

எம் கிருஷ்ணனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவருடைய இதயம் சாதாரண மனித இதயத்தைவிட சற்று அளவில் பெரியதாக, விரிந்ததாக இருந்தது. ஆனாலும் அவர் அதை பொருட்படுத்தாமல்தான் காடுகளில் அலைந்து நடந்து சென்று யானைகளின் படங்களை எடுத்தார். சிகரெட் புகைப்பதையும் அதற்காக விட்டுவிடவில்லை. மிக சாதாரணமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர். எளிமையான மனிதர். அவருக்கு மூன்று விஷயங்களை மிகவும் பிடிக்கும். வறுத்த கடலை, டீ, பர்கிளி சிகரெட். காலையிலும் மாலையிலும் டீ. சிகரெட் தொடர்ந்து புகைத்துக் கொண்டேதானிருப்பார். இவைதான் பிடித்தமானவையும் அவருக்கு அவசியமானவையும். அவர் எம். தாவரவியல். பொதுவாக பி. எம். என்றால் ஆர்ட்ஸ்தான். ஆனால் அவர் தாவரவியலில் எம்.. அவருடைய பேராசிரியர் ஃபைஷன் என்கிற ஆங்கிலேயர். அவரிடமிருந்துதான் அவர் கானுயிர்களில் ஆர்வம்கொண்டார். பேராசிரியரின் மனைவி ஒரு நல்ல ஓவியர். அவர் எம் கிருஷ்ணனுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தார். அவருடைய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பறவைகள், தாவரங்களின் ஓவியங்கள் அவரே வரைந்தவை. அவருடைய கையெழுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற்போல பிரமாதமாக இருக்கும்.

நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் கி வா ஜவின் 'கலைமகள்' இதழில் எம்.கிருஷ்ணன் வனவிலங்குகளைக் குறித்து எழுதிய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அதன் பிறகு தமிழில் எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதி நான் பார்த்ததாக நினைவில்லை. இங்கு அவரைப் பற்றி தெரிந்திருந்ததைவிட வடக்கே அவர் பிரபலமாக இருந்தார். பம்பாய், கல்கத்தா, டெல்லி என்று எல்லா இடங்களிலும் அவருடைய வாசகர்கள் இருந்தார்கள். ஒருவிதமான வழிபாட்டு மனோபாவத்துடனான வாசகவட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமையானால் அவருடைய கட்டுரை வந்திருக்கிறதா என்று ஆர்வத்துடன் தேடிப் படிப்பார்கள். 'இயற்கை குறிப்புகள்' (Nature Notes) என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவந்தார். அந்தக் கட்டுரைகள் மிகப் பிரபலமானவை. வடக்கில் அவரை மிகவும் பாராட்டிக் கொண்டாடினார்கள். இங்கே என்ன காரணத்தினாலோ அவருக்கு உரிய பாராட்டுகளும் கவனமும் கிடைக்காமல் போனது. நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பெருமைகளை நாம் எப்போதுமே உணரத் தவறிவிடுகிறோம். அது நமது குறைதான்.

ஒரு முறை சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். சாந்தினி. ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கர்நாடகாவில் கபினியில் இயற்கையியலாளராக பணிபுரிந்து வந்தார். நான் கபினிக்கு சென்றிருந்தபோது அந்தப் பெண் என்னை வந்து சந்தித்தார். என்னைப் பற்றி படித்திருப்பதாகச் சொன்னார். சென்னையைச் சேர்ந்தவர் என்று சொன்னதும் நான் எம் கிருஷ்ணனைப் பற்றி தெரியுமா என்று விசாரித்தேன். அவர்கள் இல்லையென்று சொன்னார்கள். நான் கிருஷ்ணனின் சென்னை முகவரியைக் கொடுத்து அடுத்த முறை சென்னைக்கு செல்லும்போது அவசியம் சென்று சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். அதே போல மறுமுறை சென்னைபோனபோது கிருஷ்ணனை சென்று சந்தித்தார்கள். எம் கிரூஷ்ணன் யாரிடத்திலும் அவ்வளவு எளிதாக பழகிவிடமாட்டார். முதலில் சற்று அணுகுவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதே போல இந்த பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் ''.. இயற்கையியலாளராக பணிபுரிய உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது?'' என்று கேட்டாராம். நாங்கள் எங்கள் கை காசையெல்லாம் செலவு செய்து காடு மேடெல்லாம் சுற்றி திரிந்த காலத்தை நினைத்து அப்படிக் கேட்டிருக்கிறார் போலும். பிறகு பேசிக் கொண்டிருந்தபோது சகஜமாகிவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்ட குறிப்புகளையெல்லாம் மறுநாள் தருவதாகச் சொல்லியிருக்கிறார். மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் போனபோது கேட்டிருந்த விபரங்களையெல்லாம் அழகாக தட்டச்சு செய்து வைத்திருந்து கொடுத்திருக்கிறார். பிறகு அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள். சாந்தினி கிருஷ்ணனின் குடும்ப நண்பராகிவிட்டார்.

அவரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணனின் பல படங்களின் நெகட்டிவ்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டு இருக்கின்றன. மீண்டும் கிடைக்காத அற்புதங்கள் அவை. ஏதாவது ஒரு சந்தர்ப்த்தில் அவை காணாமல் போய்விட்டால் பிறகு பெரிய நஷ்டம். எனவே அவற்றையெல்லாம் எடுத்து அச்சிட்டு ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தேன். படங்களை அச்சிடுவதில் என்னால் உதவமுடியும் என்று சொன்னேன். பிறகு சென்னை சென்று அவர் வைத்திருந்த நெகட்டிவ்களையெல்லாம் எடுத்துத் தொகுத்தோம். அவர் எல்லா நெகட்டிவ்களையும் பத்திரமாக, விபரங்களையெல்லாம் சுத்தமாக எழுதி வைத்திருந்தார். அவருடைய வீட்டிலிருந்த இருட்டறையிலேயே அச்சிட்டுக் கொடுத்தேன். ஒவ்வொரு முறையும் நான் சென்னை செல்லவேண்டியிருந்தது. அதனால் அவர்களுக்கே சொல்லித் தந்தேன். முறையாக எல்லாவற்றையும் செய்தார்கள். எம் கிருஷ்ணனின் மகன் முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். மிக உயர்ந்த பதவி. இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பளித்தார். எல்லா படங்களையும் அச்சிட்டு அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து தொகுத்தோம். தேவையில்லாதவற்றை கிருஷ்ணனின் குடும்பத்தாரிடமே ஒப்படைத்துவிட்டோம்.. பிறகு புத்தகத்திற்கான நிதி ஏற்பாடுகள். சென்னையில் ரோஜா முத்தையா அறக்கட்டளை இன்னும் சிலபேரிடம் உதவி கிடைத்தது. அதற்கு பிறகு ஓரியண்ட லாங்க்மேனுடன் ஒன்றரை வருஷம் கடிதப்போக்குவரத்து நடந்தது. ஒருவழியாக புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார்கள். பெங்களுரில் எனது நண்பர் ஒருவர் புத்தகத்தை அழகாக வடிவமைத்துக்கொடுத்தார். ஹைதராபாத்தில் பிரகதி என்றொரு அச்சகத்தில்தான் புத்தகம் அச்சானது. ஒவ்வொரு படமும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அச்சாக்கத்தை மேற்பார்வை செய்வதற்காக நான் அங்கே சென்று தங்கியிருந்து எல்லாவற்றையும் ஒழுங்கு செய்தேன். அந்த புத்தகம்தான் ''Eye in the Jungle'' என்ற புத்தகம். நல்ல வரவேற்பைப் பெற்றது. புகைப்படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில். வண்ணத்தில் அச்சாக்கம் செய்வதைவிட கருப்பு வெள்ளையில் அச்சாக்கம் செய்வது நுட்பமானதும் சிக்கலானதுமாகும். நாம் நேரடியாக இறங்கி பிறருடைய ஒத்துழைப்புடன் செய்தால் சிறப்பாக செய்ய முடியும். எம் கிருஷ்ணன் என்னுடைய குருநாதர்களில் ஒருவர். அவருக்காக நம்மால் முடிந்த ஒரு காரியம் என்ற மனதிருப்தியுடன் செய்தேன்.

சென்னைக்கு எப்போது சென்றாலும் ஒரு புனித யாத்திரை ஸ்தலத்துக்கு போவது மாதிரி அவருடைய வீட்டுக்கு போய் அவருடன் உரையாடிவிட்டு வருவேன். அவருடைய இறுதி காலத்தில் அவருக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. Global500 என்றொரு விருது. உலக அளவில் 500 சிறந்த வனவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய பங்களிப்புக்காக அளிக்கப்பட்ட விருது. எம் கிருஷ்ணனுக்கு அந்த விருது தரப்பட்டதைப் பற்றி தமிழகத்தில் எந்த சலனமுமே இருக்கவில்லை. யாருமே கண்டுகொள்ளவில்லை. 1995ஆம் ஆண்டு நான் இந்திய புகைப்படக்கலைஞர் சம்மேளனத்தின் இயற்கை பிரிவின் தலைவராக இருந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியும் போட்டியும் நடத்தினேன். வழக்கமாக இதற்கான பரிசுகள் என்றால் கடைகளில் தயார்நிலையில் இருக்கும் ஒன்றை வாங்கி பெயரைப் பொறித்துக் கொடுத்துவிடுவார்கள்.

நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கிய சமயத்திலெல்லாம் பரிசாக மரக்கட்டையில் பெயரைப் பொறித்துத் தருவதுதான் வழக்கம். அதை வீட்டுக்குக் கொண்டுவந்தால் எனது மனைவி சொல்லுவார்கள் ''இந்தக் கட்டைய வெச்சு ஒரு கப் டீகூட போடமுடியாது. இதுக்கு போயி இவ்வளவு மெனக்கெடனுமா?''. அது ஒரு கோணம். அவர்கள் பார்வையில் அதனுடைய மதிப்பு அப்படி.

எனவே பரிசு என்று கொடுத்தால் அது பாதுகாக்கக் கூடியதாகவும் பிறர் பார்த்து என்னவென்று கேட்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. பெங்களுரில் வாஜராஜ் என்றொரு சிற்பியைத் தெரியும். அவருடைய மாணவி திருமதி மூர்த்தி. ஒரு யானையின் புகைப்படத்தைக் கொடுத்து வெண்கல வார்ப்பில் இதுபோன்று யானைகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். 14 உருப்படிகள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய். அதற்காக தனியாக நன்கொடைகள் வசூல்செய்தேன். இது ஒரு புதிய முயற்சி என்று நண்பர்களும் உதவினார்கள். வெண்கல வார்ப்பில் செய்தபோது சில தொழில்நுட்ப பிரச்சினைகளால் அதே உருவத்தை இழைக் கண்ணாடியைக் கொண்டு செய்து தருவதாக அந்த அம்மையார் சொன்னார்கள். இரண்டு அல்லது மூன்று உருப்படிகள் வெண்கலத்தில் செய்ததும் இருந்தன. பெங்களுரில் அந்தக் கண்காட்சி முடிவடைந்த பிறகு அதே போன்ற ஒரு கண்காட்சியை சென்னையிலும் நடத்தலாம் என்று சென்னை புகைப்பட சம்மேளனம் ஏற்பாடு செய்தது. அப்போது அதன் தலைவராக இருந்தவர் எனது நெருங்கிய நண்பர் திரு வி கே ராஜாமணி. காரியங்களை ஒழுங்குடன் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். சென்னை லலித்கலா அகாதமி அரங்கில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கண்காட்சியை துவக்கி வைக்க எம் கிருஷ்ணனை அழைக்கலாம் என்று அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவர் ஒத்துக்கொள்ளமாட்டார் என்று ஏற்கனவே தெரியும் என்றாலும் கேட்டுவிடலாம் என்று போனேன். அப்படி போகும்போது வெண்கல யானை சிற்பத்தை ஒரு மரக்கட்டையில் பொருத்தி Global500 விருது பெற்றமைக்காக இந்திய புகைப்பட சம்மேளனத்தின் இயற்கை பிரிவின் பாராட்டுக்களை குறிப்பிட்டு கையில் எடுத்துக்கொண்டு போனேன். ''அதெல்லாம் வேண்டாம் பெருமாள். என்னால வர முடியாது'' என்று விழாவுக்கு வர மறுத்துவிட்டார். யானை சிற்பத்தைக் கொடுத்தேன். அவருக்கு மிகப்பிடித்தமான வனவிலங்கு. யானைகளின் பழக்கவழக்கங்கள், போக்குகளில் அவருக்கு இணையான அறிஞர் இந்தியாவில் இல்லை. பொருத்தமான பரிசாகப்பட்டது. சந்தோஷத்துடன் அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணன் தன்னுடைய பேத்தி மீனாட்சியை அழைத்து உற்சாகமாக ''பாரும்மா, பெருமாள் கொண்டுவந்திருக்கார்'' என்று காட்டினார். ஒரு மாபெரும் கலைஞன் உலக அளவில் அங்கீகாரம் பெற்றமைக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு. அது அவருக்கு மிக மகிழ்ச்சியைத் தந்திருந்தது.

அதற்கு பிறகு ஒரு வருடத்தில் அவர் காலமாகவிட்டார்.

அவருடைய புகைப்படங்களைத் தொகுத்து புத்தகமாக்க உருவாக்கிய சமயத்தில் அவர் உருவாக்கிய அந்த கேமராவின் படத்தையும் புத்தகத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று அவருடைய குடும்பத்தினரிடம் கேட்டோம். அந்த கேமராவுக்கு அவர் வைத்திருந்த பெயர் Elephant Gun. ஆனால் அந்த கேமரா கிடைக்கவில்லை. யாரோ எதற்காகவோ கேட்டார்கள் என்று கொடுத்திருக்கிறார்கள். அது திரும்ப வரவே இல்லை. வாழ்நாளில் பெரும்பாலான நாட்களில் அவர் அந்த கேமராவுடன்தான் அலைந்திருக்கிறார். அவர் எடுத்த பல புகைப்படங்களும் அந்த கேமராவில் எடுக்கப்பட்டவை. ஆனால் அதை நம்மால் பாதுகாத்து வைக்கமுடியவில்லை.

சென்னையில் அவருடைய வீட்டை இடித்துக் கட்டிய சமயத்தில் நான் போயிருந்தேன். அவருடைய அறையில் இருந்த உபகரணங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவற்றை வைத்திருக்க இடமில்லை இனி தேவையுமில்லை என்று சொல்லி என்னை எடுத்துக் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டார்கள். எனக்கும் அவற்றையெல்லாம் கொண்டுபோய் பாதுகாக்க இடமில்லை. மேலும் அங்கிருந்த எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் பின்னாளில் ஏதாவது பேச்சு வரும்போது மிக சுலபமாக சொல்லிவிடுவார்கள் ''கிருஷ்ணன்து எல்லாத்தையும் பெருமாள் எடுத்துட்டுப் போயிட்டாரு'' என்று. அப்படி ஒரு பெயரை சம்பாதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் எனக்கு எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இருந்தும் சாந்தியும், கிருஷ்ணனின் குடும்பத்தினரும் மிகவும் வற்புறுத்தியதால் கிருஷ்ணனின் நினைவாக அவருடைய ரேஞ்சபைண்டரை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன். இன்னும் பத்திரமாக என்னிடம் அது இருக்கிறது.

Eye in the Jungle வெளியானபோதுதான் எம் கிருஷ்ணனை அதுவரையிலும் ஒரு எழுத்தாளராக மட்டும் அறிந்திருந்தவர்கள் அவர் ஒரு நல்ல புகைப்படக்கலைஞர்  என்பதையும்  தெரிந்துகொண்டார்கள்.

(டி.என்ஏ பெருமாள் அவர்களைப் பற்றி எழுதி, வெளிவருவிருக்கும் ‘கானகத்தில் ஒரு கலைஞன்’ நூலின் ஒரு பகுதி.)

 

உடல் பராமரிப்பு வணிகத்தின் உளவியல் களம் - பா.கண்மணியின் ‘வீனஸ்’

  0 ‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் ...