Saturday, 5 July 2025

அ. முத்துலிங்கம் கதைகள் - உயிர்களின் மீதான வற்றாத கருணை

x




( அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய இந்தக் கட்டுரை நவம்பர் 2007, திண்ணை இதழில் வெளியானது. இதுவரை வலைப்பூவிலோ, வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளிலோ இடம் பெறாமல் தவறிவிட்ட ஒன்று. தற்செயலாக நேற்று இதைக் கண்டுபிடிக்க வாய்த்தது. )

 

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பும் கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக் கொள்ளமுடியும். போருக்குப் பின்னான காலகட்டத்தில் சு.வில்வரத்தினம், யேசுராசா, சோலைக்கிளி, சேரன், செல்வி, சிவரமணி, அகிலன் முதலான கவிஞர்களிடமிருந்து வெளியான தீவிரமான கவிதைகள் தமிழ் கவிதையுலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. எஸ்.பொ, செ.யோகநாதன் போன்றவர்களின் படைப்புகளும் சமீப காலங்களில் ஷோபா சக்தியின் நாவல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரையில் இது பூர்த்தி செய்யப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையிலிருந்தும் அயலிலிருந்தும் வெளியான சில சிறுபத்திரிக்கைகள் வெளியானபோதும் கூட சிறுகதைகளுக்கு அவை ஆற்றிய பங்களிப்புகள் குறைவானவையே. இதற்கான காரணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முடியும்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற ஒரு வகைப்பாட்டை சுட்டுமளவு இலங்கையிலிருந்து வெளியேறி வெவ்வேறு உலக நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சொந்த மண் குறித்த ஏக்கமும், தவிப்பும், போரின் உக்கிரமும், அது சிதைத்தழித்த வாழ்வு குறித்த கண்ணீருமாக இந்த வகை இலக்கியம் வெளிப்பட்டபடி உள்ளது.

இந்த பிண்ணனியிலிருந்து அ. முத்துலிங்கத்தின் மொத்தத் தொகுப்பை அணுகும்போது இரண்டு விஷயங்களை நினைவில் கொள்வது முக்கியம் என்று தோன்றுகிறது.

01 அ.முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் புலம் பெயர்ந்தோர் என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது.

02   அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெகு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.

1959 முதல் 2003 வரை அ.முத்துலிங்கம் எழுதி 5 தொகுப்புகளாக வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான கதைகளுடன் தொகுக்கப்படாத சில கதைகளும் சேர்த்து மொத்தமாய் 75 கதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கான பொது வரையறைக்குள் இத் தொகுப்பை அடக்கிவிட முடியாதவண்ணம் இதன் கதை எல்லைகளும் தளங்களும் விகாசம் கொண்டுள்ளன. உலகமெங்கும் பயணம் செய்யும் ஒரு யாத்ரீகனின் கண்களின் வழி தரிசனமாகும் காட்சிகளின் விநோதங்களையும் ஆழங்களையும் இத்தொகுப்பு வாசிப்பின் வழியாக சாத்தியப்படுத்துகிறது. தமிழ் சிறுகதை இதுவரையிலும் காட்சிப்படுத்திய வாழ்க்கையின் பரிணாமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. நமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், பண்பாடும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை இத்தொகுப்பு முன்வைக்கிறது. கணவன் இறந்த பின்பு அவனது தம்பிக்கே வாழ்க்கைப்படவேண்டும், அவன் 5 வயது பாலகனாக இருந்தாலும் அவனுக்காகக் காத்திருக்கவேண்டும் என்பதையும் ( யதேச்சை ), ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டி வீட்டில் உள்ள முதியவர் ஒருவர் தானாக மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ( பீனிக்ஸ் பறவை ) வாசகனுக்குத் தரும் அதிர்ச்சிகள் சாமானியமானதல்ல. பனிக்கால அக்டோபரின்போது அரசாங்கம் ஒரு மணி நேரத்தை பின்னகர்த்தி விடும் என்கிற வழக்கமோ வலதுகால் செருப்புக்கு ஒரு பெயர் இடதுகால் செருப்புக்கு ஒரு பெயர் என்பதோ நமக்குத் தரும் அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டவை.

அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார். 

ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பகுத்துணர்வதில் எப்போதும் ஒருவருக்கு துணையாக, உரைகல்லாக விளங்குவது அவரவர் அடிமனதில் கால்கொண்டுள்ள சுய பண்பாட்டுக் கூறுகளே. கதைகளாக, பாடல்களாக, புராணங்களாக, இலக்கிய வடிவங்களாக உருக்கொண்டிருக்கும் இக் கூறுகளே முத்துலிங்கத்துக்கு அவர் சந்திக்க நேர்ந்த பல்வேறு நிறங்களையும், வெளிகளையும் உள்வாங்கிக்கொள்ள உதவியுள்ளன. கம்பரும், ஒளவையாரும், திருக்குறிப்பு நாயனாரும், புறநானூறும், புராணக் கதைகளும் அவருக்கு தன் தரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் துணை நின்றுள்ளன. கதைப்போக்கில் வெகு இணக்கமாக இவற்றைப் பொருத்தி வாசகனிடத்திலும் அவ்வாறான ஒரு அனுபவத்தை உறுதி செய்திருக்கிறார். முத்துலிங்கத்திடம் நாம் காணும் இந்த அம்சம் தமிழ் சிறுகதையாளர்களிடத்தில் அவ்வளவாக காணமுடியாதது. இதுவே முத்துலிங்கத்தின் முதற்சிறப்பாகும். 



அடுத்தது ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது போல முத்துலிங்கத்திடம் நாம் காணும் புன்னகை. கதை வடிவம், மொழி, சித்தரிப்பு நேர்த்தி என்று ஒரு சிறுகதையாளரின் அத்தனை பலங்களையும் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளை மேலும் சிறப்புமிக்கதாக்கும் தனித்தன்மைமிக்க அம்சம் அவர் கதைகளில் காண முடிகிற அங்கதமே. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, அவை எந்த தளத்தில் அமைந்தவையானாலும், சின்னச் சின்ன வரிகளில் இந்த அங்கதத் தன்மை கொப்புளித்து நிற்கிறது. 'உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலேயே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை. ' (செல்லரம்மான்). 'வரையாது கொடுக்கும் வள்ளல் போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது' (பருத்திப் பூ).  கதைகளின் வாசிப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் இந்த அம்சத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் கையாண்டிருக்கும் எழுத்தாளர்கள் தமிழில் மிகக் குறைவே. 

முத்துலிங்கத்தின் ஒட்டு மொத்த கதை உலகமும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளை சுற்றி அமைந்திருப்பதை உணர முடிகிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன.

போர் எனும் தீங்கொடுமையால் சிதைத்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஒரு கோப்பைக் கஞ்சிக்காக தனது சகோதரனுடனும் பசியுடனும் நாளை விடியும் என்கிற நம்பிக்கையுடனும் அலையும் சிறுவனிடத்திலும் ( நாளை ), யாருமறியாத ஆப்பிரிக்கக் காட்டில் முன்பின் தெரியாத ஒருவர் தரும் விருந்திலும் வைனிலும் பலநாள் பசி மறக்கும் விருந்தாளியிடத்திலும் ( விருந்தாளி ), அடைக்கலம் தந்தவரின் வீட்டில் தினம் தினம் நல்ல உணவு வாய்த்திருந்தபோதும், உணவுப் பண்டத்தை தன் பெட்டிக்குள் பதுக்கிவைத்துக்கொள்ளும் பாகிஸ்தானிய சிறுமியிடமும் (கிரகணம்) பசியின் கரங்களில் வதைபடும் வெவ்வேறு மனிதர்களை நாம் தரிசிக்கமுடிகிறது. 

அகதியாய் நாடு தாண்டி வந்து துப்புரவுத் தொழிலாளியாய் நிலவறையில் வாழ்ந்தபடி தனது துயர வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைஞன் தனது இருப்பைப் பற்றிய உத்தரவாதமின்மையில் தத்தளித்திருப்பவனின் தேடலுக்கும் ( கறுப்பு அணில் ) கிழவியின் வறிய நிலைக்கு மனமிரங்கி வாய்க்காலை திசை மாற்றி வெட்டி, அதன் பொருட்டு வேலை இழக்க நேரும் பொறியாளரின் தியாகத்திற்கும் (பருத்திப் பூ) தாய்மையடைய வாய்ப்பில்லாதது உறுதியானதும் கறுப்புப் பெண்ணின் குழந்தையை ஸ்வீகரித்துக்கொண்டு தோளில் சுமக்கும் நங்கையின் தாய்மைக்கும் ( முழு விலக்கு ) பிண்ணனியில் மனிதனின் இருப்பு குறித்த கேள்வியொன்று வலுவாக முளைத்து நிற்பதை நாம் உணர முடிகிறது. 

மனித இருப்பை பசி எந்த அளவு ஆட்கொண்டுள்ளதோ அதைவிட பன்மடங்கு ஆட்கொண்டிருப்பது காதல் என்பதை பலவகைப்பட்ட நிற பேதங்களுடன் இத் தொகுப்பில் உள்ள பல கதைகளும் அடிக்கோடிட்டுள்ளன. கணவன் பிரிந்திருக்க, உள்ளுர் காதலனுடன் களவொழுக்கம் புரிவதைப் பற்றிய கதையான 'சங்கல்ப நிராகரணமும்', பதினெட்டு மைல் தினம் நடந்து தண்ணீர் சுமக்கும் கொடுமையிலிருந்து விடுபடவேண்டி கொண்ட காதலையும் துறந்திடத் துணியும் பெண்ணைப் பற்றிச் சொல்லும் கதையான 'ஒட்டகமும்', மனைவியின் மீதான தாபம் தணியாத கணவன் அவள் மார்பில் பச்சை குத்திக் கொண்டுள்ளதைக் கண்டு பின்வாங்கும் மனச் சரிவைச் சொல்லும் 'ஐந்தாவது கதிரையும்' காதலின் பல்வேறு நிறங்களை துல்லியப்படுத்தி நிற்கின்றன. 

பசிக்கான போராட்டத்தையும், காதலுக்கான தியாகம் உட்பட அனைத்தையும் பொருளற்றதாக்கி கவியும் மரணத்தின் முகங்கள் புன்னகையுடனும், புதிருடனும் வெவ்வேறு கதைகளில் வெளிப்படுகின்றன. பலர் கூடி வேடிக்கை பார்த்து நிற்கும் பொது மைதானத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தன் தலையைத் துளைக்கப் போகும் தோட்டாக்களை எதிர்பார்த்து மண்டியிட்டிருக்கும் குற்றவாளியின் முன் கண்ணாமூச்சியாடும் சாவின் நிழல் நம்மை நடுங்கச் செய்கிறது (யதேச்சை) என்றால்,  வறுமையின் பிடியிலிருந்த சிறுமியின் மேதாவித்தனம் மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் அவளை வசப்படுத்திக் கொள்ளும் மரணம் நம்மை உறைய வைக்கிறது ( கிரகணம் ). அதே சமயம் வாழ்நாள் முழுக்க பெரும்பாடுபட்டு சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மொனார்க் வகைப் பட்டாம்பூச்சியைக் காண விசா கிடைத்து, அதைப் போய் பார்த்துவிட்ட பின்பு அவரை சாந்தத்துடன் தழுவிக்கொள்ளும் மரணம் குறித்து நமக்கு புகார் ஒன்றுமில்லை. 

முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே. 

மண்ணின் மீதும் மண்ணுயிர்களின் மீதும் மனிதர்கள் கட்டவிழ்த்து விடுகிற வன்முறை சார்ந்த கவலைகள் முத்துலிங்கத்தின் கதைகளில் துலக்கமாக இடம்பெற்றுள்ளன. கானுயிர்களின் மீது ஆராய்ச்சி என்ற பெயரில் தொடுக்கப்படும் கொடுமைகளையும் ( ஞானம் ), தந்தத்தின் மீதான அளப்பரிய மோகத்தின் பொருட்டு யானைகளை கொலைசெய்யத் துணியும் மனிதர்களின் சுயநலத்தையும் ( குதம்பேயின் தந்தம் ), உடும்புகள், நாய்கள், பூனைகள், பாம்புகள், பறவைகள் என்று எண்ணற்ற உயிர்களின் மீது மனித சமூகம் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கும் பாதகங்களையும், சற்றும் பிரச்சாரத் தொனியின்றி நம் உள்ளுணர்வின் ஆழத்தில் பெரும் வலியாக உணரும் வண்ணம் முத்துலிங்கம் சித்தரித்துள்ளார். இக் கருணையின் ஈரமே சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் உலகின் பல்வேறு பிரதேஷங்களில் வாழும் விதவிதமான உயிரினங்களைக் குறித்தும், பறவையினங்கள் குறித்தும் ஆர்வத்துடன் சொல்லத் து¡ண்டியுள்ளது எனலாம். ஆப்பிரிக்காவில் கிழங்குகளை உண்டு கொழுக்கும் கட்டிங் கிராஸ் என்ற பெருச்சாளிகள், பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ஆடுகள், சேகர் பால்கன், டோ டோ போன்ற பறவைகள், மொனார்க் வகை பட்டாம்பூச்சி, நாய்களை சீண்டும் றக்கூன், குரங்குகள், ஆந்தை என்று ஒவ்வொரு பிராணியைப் பற்றியும், பறவைகள் பற்றியும் அவர் விஸ்தாரமாக நமக்குச் சொல்வது வெறும் தகவல்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. 

உலகமயமாக்கல் மெல்ல மெல்ல மனித இனத்தின் பல்வேறுபட்ட கலாச்சார, இனக்குழு அடையாளங்களை தேய்த்தழித்து ஒற்றைத்தன்மைக்கு இட்டுச் செல்வதைக் குறித்த பல்வேறு விதமான மனவோட்டங்களை இத் தொகுப்பு சாத்தியப்படுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், கணினிமயமாக்கலினாலும் மனிதர்கள் எதிர்கொள்ள நேரும் அபத்தங்களை, மனித உறவில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களையும் வலுவாக முன்வைக்கும் கதைகள் ( கம்ப்யூட்டர், பூமாதேவி, .23 சதம் ) உலகமயமாக்கலின் இறுதி நோக்கமான ஒற்றைத் தன்மையைக் குறித்த பல்வேறு மனவோட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. 

சிறுபருவத்தில் நாம் கண்ட காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நுகர்ந்த வாசனைகள் போன்றவை வாழ்வின் பிற்பகுதியில் நம் அடிமனதிலிருந்து மேலும் மேலும் துலங்கி எழுந்தபடியே உள்ளன. முத்துலிங்கத்தின் கதைகளில் அவ்வாறான சம்பவங்களும், வாசனைகளும் தனிச் சிறப்புடன் வெளியாகியுள்ளன (ஒரு சிறுவனின் கதை, உடும்பு, அக்கா, செல்லாரம்மாள், சிலம்பு செல்லப்பா ). ஆசிரியர்கள், அக்காக்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருக்க முடிகிறது. தனது சொந்த மண்ணிலிருந்து வெகு காலமாய் பிரிந்து எங்குமே கால்பாவாமல் அலைந்தபடியிருக்கும் ஒருவனின் மனம் தன்னியல்புடன் மனதின் அடியாழத்தில் உரங்கொண்டிருக்கும் இந்த நினைவுகளுக்குள் இளைப்பாறுவதன் சுகத்தையும் நிம்மதியையும் இக் கதைகளின் வழியாக உணர முடிகிறது.  அதே போல, முத்துலிங்கத்துக்கு சமையலைக் குறித்தும் ருசியைக் குறித்தும் விஸ்தாரமாக எழுதுவதில் அபாரமான ரசனை இருக்கிறது.  நாஞ்சில்நாடனுக்குப் பிறகு சமையல் வாசனை கொண்ட எழுத்தை முத்துலிங்கத்திடமே காண முடிகிறது. உணவு குறித்த இந்த ரசனையும் விஸ்தாரமும்கூட இழந்து வரும் ஒன்றைக் குறித்த மீட்டுருவாக்கத்தின் ஏக்கம் என்றே குறிப்பிடலாம். 

முத்துலிங்கத்தின் கதைகள் அனைத்துமே நேரடியான சித்தரிப்பு உத்தியைக் கொண்டவை. நவீன இலக்கியத்தின் உத்தி சார்ந்த மயக்கங்களுக்கு அவர் இடம்தராமல் நாற்பதாண்டு காலமாக தனக்கே உரிய யதார்த்தமும், அங்கதமும் இழைந்தோடும் எளிமையான சித்தரிப்பு பாணியை தொடர்ந்து கைகொண்டுள்ளார். விதிவிலக்காக அமைந்த கல்லறை, குந்தியின் தந்திரம், செங்கல், ஸ்டராபரி ஜாம் போன்ற கதைகள் முத்துலிங்கத்தின் கதையுலகிற்கு பொருந்தாமல் துருத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம் உத்தி ரீதியிலான சிறு பரிசோதனையுடன் அமைந்த 'வடக்கு வீதி' அந்தக் கதையின் உட்சரடு காரணமாக மிக வெற்றிகரமான கதையாக அமைந்துள்ளதையும் கவனிக்கலாம். 

முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளிலும், கதையின் புலன் தளத்துக்கு அப்பால் அழுத்தமான உட்சரடுகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளதை மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது கதைப்பாணி வாசகனை சரளமாக உள்ளிழுத்துக் கொள்ளுவது. ஆழ்ந்த வாசிப்பையும் அதிக கவனத்தையும் கோராதது. இதனால் கதைகளின் உட்சரடுகள் மேலும் துலக்கமற்றதாக்கிவிடுவதால் பல சமயங்களில் கதையின் உள் அடுக்குகளை நாம் உணரத் தவறிவிடலாம். இதுவே அவரது கதைகளை மேலும் சிறப்புமிக்கதாகவும், மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியதாகவும் ஆக்கித் தருகிறது. 

'ஐவேசு' என்றொரு சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை. பனி மலைகள் சூழந்த ஒரு பள்ளத்தாக்கின் ஏதோவொரு நுனியில் மனித சஞ்சாரமற்ற இடத்தில் தன் மனைவி, ஒரு சிறுமி, ஒரு சிறுவன் இவர்களுடன் ஒரு குடிசையில் வசிக்கிறான் ஒரு கிழவன். வழி தப்பி வரும் பிரயாணிகளுக்கு தன்னிடத்தில் உள்ள ஆடுகளிடமிருந்து பால் கறந்து, பழைய பெட்டியொன்றில் பாதுகாத்து வைத்திருக்கும் உடைந்த விளிம்புகள் கொண்ட பீங்கான் கோப்பையில் தருகிறான், எதையும் எதிர்பார்க்காமல். அந்தக் கிழவனின் முகத்தில் காணும் கருணையின் ஒளியே, பசியின் பொருட்டும் காதலின் பொருட்டும் இருப்பிற்கான போராட்டத்தின் பொருட்டும் மனித இனம் மேற்கொள்ளும் சகலவிதமான தந்திரங்களில் இருந்தும், செய்யத் துணியும் துரோகங்களில் இருந்தும் விமோசனம் அளிக்கிறது என்று தோன்றுகிறது. 

தமிழினியின் நேர்த்தியான பதிப்பில் வெளியாகியிருக்கும் இத் தொகுப்பிற்கு க.மோகனரங்கன் எழுதியுள்ள முன்னுரை அ. முத்துலிங்கத்தின் சிறுகதை உலகை வெகு துல்லியமாக பகுத்துத் தந்திருக்கிறது.

 0

அ. முத்துலிங்கம் கதைகள், டிசம்பர் 2003

776 பக்கங்கள், விலை ரூ. 350

தமிழினி, சென்னை

Monday, 19 May 2025

இராமாயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி - ஆத்துக்குரி மொல்லா


 

 

‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.’

0

தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள் இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது. இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும் குறைந்த விலையிலும் அதிகம் விற்கப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பதிப்பகத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆத்துக்குரி மொல்லா எனும் தெலுங்கு கவிஞர் எழுதியது இது. வால்மீகியின் இராம காவியத்தை அடியொற்றி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் அவரே. நேரடியான எளிய மொழியில், மிகக் குறைவான சமஸ்கிருத வரிகளைக் கொண்டு எழுதப்பட்டது என்பதால் வெகு மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. அருகாமை கிராமங்களைச் சேர்ந்த பலரும் அவர் பாடும் இராம கதையைக் கேட்க வந்து குவிந்தனர். அதைத் தொடர்ந்து அவரது இராம காதை, ‘மொல்ல இராமாயணம்’ என்று அறியப்படலாயிற்று. அவர் வாழ்ந்த காலத்தில் வாய்மொழியாக சொல்லப்பட்டு பின்னர் அச்சு வசதிகள் ஏற்பட்டபோது நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபவரம் கிராமத்தில் 1440ஆம் ஆண்டு பிறந்தவர் மொல்லா. குயவரான கேசன செட்டியின் மகள். லிங்காயத் பிரிவைச் சேர்ந்த அவர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபடுபவர். தனது கடவுளுக்குப் பிரியமான மல்லிகை மலரைக் குறிக்கும் வகையில் தனது மகளுக்கு மொல்லா என்று பெயரிட்டார். இயல்பிலேயே பக்தி மிகுந்த மொல்லா தனது தந்தையுடைய குருவின் அறிவுறுத்தலின்படி இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை.

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனரை வழிபட்டிருந்த மொல்லா ஒரு முறை கடவுளை எண்ணி தியானத்தில் மூழ்கியிருந்த வேளையில் அவருக்கு பிரமாண்டமான ஒரு தரிசனம் கிட்டியது. சிவனுடையது அல்ல அந்த தரிசனம், இராமனுடையது. ராம கதையை பாடும்படி அவருக்கு ஆணை வந்தது. சிறிதும் தயக்கமில்லாமல் அவர் உடனடியாக காரியத்தில் இறங்கி விரைவிலேயே மிக அழகான, செறிவான காவியத்தை இயற்றினார். 880 பாடல்களைக் கொண்ட அவரது இராமாயணம் தெலுங்கு இலக்கிய உலகில் புகழையும் மதிப்பையும் பெற்ற ஒன்று.   

கவி மரபில் அல்லாத ஒருவர் எழுதிய நூல் எப்படி இவ்வளவு பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தது என்பது வியப்புக்குரியது. ஆனால், காரணங்கள் இல்லாமல் இல்லை.

முதலாவது காரணம், மக்களுக்கு எளிதில் புரியும்படியான மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. காவிய லட்சணங்கள் அனைத்தும் பொருந்தும்படியாக எழுதப்பட்டிருந்த அதே நேரத்தில் அது நேரடியான பேச்சுவழக்குகளுடன் மண் மணத்துடன் சாதாரண மனிதரும் கேட்டு ரசிக்கும்படியாக இயற்றப்பட்டிருந்தது. ஒரு காவியம் எழுதப்படுவது பண்டிதர்கள் படித்து அனுபவிப்பதற்காக மட்டும் அல்ல, அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தெளிவு மொல்லாவுக்கு இருந்துள்ளது.

‘நாவிலிட்டதும்

தேன்

இனிப்பதுபோல

கவிதையும்

உடனடியாக சுவை தர வேண்டும்

 

புரியாத சொல்லும் பொருளும்

ஊமையனும் செவிடனும்

உரையாடுதலுக்கு ஒப்பானதன்றோ’

 

என்றே கவிதையைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.

 

இரண்டாவது காரணம் அவர் தன்னை பெரிய பண்டிதராக, கல்வியறிவு மிக்கவராகக் காட்டிக்கொள்ளாமல் மிக எளிய, சாதாரண பெண்ணாக மட்டுமே முன்வைத்திருப்பது. ‘கல்வியறிவற்ற தன்னை எழுதச் செய்தது ஸ்ரீகண்ட மல்லேஸ்வரரின் கருணையன்றி வேறொன்றுமில்லை’ என்றே சொல்கிறார். ஆனால், அவருடைய பாடல்களை வாசிக்கும் எவரும் அவரது புலமையை குறைத்து மதிப்பிட முடியாது. மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம், உரையாடல் நயம், பிற காவியங்களிலிருந்தும் பிரபந்தங்களிலிருந்தும் உரிய பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கும் திறன் ஆகியவற்றிலிருந்து அவரது கவித்திறனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். வட்டாரப் பேச்சு வழக்கு, இலக்கண வகைமைகள், கவித்துவ நுட்பங்கள், படிமங்கள், உள்ளுறை உவமைகள், காவிய மரபின் அடிப்படைகள் போன்றவற்றைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும்போதே இத்தகைய நுட்பங்களில் அவரது ஆழமான புரிதலையும் திறனையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இவையெல்லாம் தனக்குத் தெரியாது, எல்லாமே மல்லிகார்ஜுனரின் கருணை என்று கூறுவதன் மூலம் வாசிப்பவருக்கு நெருக்கமாகத் தன்னை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார் மொல்லா. மக்கள் அவரது பாடல்களை எளிதில் நெருங்க அதுவும் ஒரு காரணம்.

உதாரணமாக, அயோத்தியைக் குறித்து வர்ணிக்கும்போது அது எப்படி இருந்தது, எப்படி இருக்கவில்லை என்று புனைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

சாகேதபுரத்து நாகங்கள் வெறும் பாம்புகள் அல்ல,

மதங்கொண்ட யானைகள்

இங்குள்ள குதிரைகள் வெறும் வானரக் கூட்டமல்ல,

படைவென்று திரும்பிய பரிகள்

இங்குள்ள தேர்கள் வெறும் எளிய நீருற்றுகள் அல்ல,

அழகிய ரதங்கள்

சாகேதபுரத்திலுள்ள கணிகையர் வெறும் காட்டு மலர்கள் அல்ல,

ஆடவும் பாடவும் தெரிந்த அற்புத நங்கையர்

இங்குள்ள அறிஞர்கள், முரட்டுத்தனமும் கொடூரமும் மிக்க இராட்சதர்கள் அல்ல, கருணையுள்ளம் கொண்ட புத்திஜீவிகள்

தெலுங்கு மொழியின் மண் மணத்தை மொல்லாவின் மொழியில் நுகரமுடியும். ‘இதுவென்ன வில்லா, மாமலையா?’ என்று சொல்லும் அதே நேரத்தில் ‘சந்துபொந்துகளிலெல்லாம் ஓடி மறைந்தனர்’ என்று சாதாரணமாகவும் எழுத முடிந்திருக்கிறது.

மூன்றாவது காரணம், காப்பியங்களுக்கான சில மரபுகளை அவர் துணிந்து மீறியிருக்கிறார் என்பது. பொதுவாக, அவர் வாழ்ந்த காலத்தில் காவியங்களை அரசர்களுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், மொல்லா தனது இராமாயணத்தை அவ்வாறில்லாமல் தனது விருப்ப தெய்வமான மல்லிகார்ஜுனருக்கே சமர்ப்பித்திருந்தார்.

அடுத்த முக்கியமான காரணம், வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியபோதும் அதை அப்படியே எழுதவில்லை. தேவையான இடங்களை சுருக்கியும், சில பகுதிகளை தனது விருப்பத்துக்கேற்ப விரித்தும் எழுதியுள்ளார். சில முக்கியமான பகுதிகளை அவர் தனது படைப்பில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.  ‘பத்யம்’ எனப்படும் பாடல்களை மட்டுமல்லாமல் அங்கங்கே உரைநடையையும் பயன்படுத்தியதோடு தனது கருத்துகளை வலுவாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் கதைகள் சிலவற்றையும்கூட இணைத்துள்ளார். இது இராமாயணத்துக்கு புதிய ஒரு சுவையைத் தந்திருக்கிறது.

மொத்தமாக 880 சுலோகங்களைக் கொண்டு இராமாயணத்தை அவர் கட்டமைத்திருக்கும் விதம் குறித்து விமர்சகர்கள் பலரும் எழுதியுள்ளனர். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகிய முதல் நான்கு காண்டங்களை அவர் 245 பாடல்களை மட்டுமே கொண்டு புனைந்துள்ளார். சுந்தர காண்டத்தை மிகவும் விரிவாக 249 பாடல்களைக் கொண்டு பாடியிருக்கும் அவர், யுத்த காண்டதுக்கு எடுத்துக் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை 351. யுத்தத்துக்குப் பிறகு இராமன், சீதையைப் புறக்கணித்து ஒதுக்கும் உத்தரகாண்டத்தை மொத்தமாகவே அவர் எழுதவேயில்லை. வால்மீகியின் இராமாயணத்திலிருந்தும் தெலுங்கின் பிற இராமாயணங்களிலிருந்தும் இவ்வாறான துலக்கமான வேறுபாடுகள் இருந்தபோதும்கூட ஒரு செவ்வியல் காப்பியமாக இது கருதப்படுகிறது. 

காவிய இலக்கணங்களுக்கேற்ப முறையாக இயற்றப்பட்ட இதில் அறிமுகம், சமர்ப்பணம் உள்ளிட்ட பாடல்களும் இருந்தன. கவிதையும் உரைநடையும் கலந்து விரியும் உயர்ந்த கடவுளாக கருதிய ராமனின் மீதான பக்தியும் செறிந்திருந்தது. காப்பியத்தின் முதல் பாடலே ‘மகா குணசாலி தயாவான்’ இராமனின் மீதே பாடப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற கடவுளர்களைக் குறித்த பாடல்களும் தொடர்ந்தன. இறுதியாக, சரஸ்வதியைப் போற்றும் பாடலும் இடம் பெற்றது. சமஸ்கிருத கவிஞர்களான வால்மீகி, வியாசர், காளிதாஸன், பவபூதி, பாணபட்டர், சிவபத்ரா, தெலுங்கு கவிஞரான திக்கண்ணா ஆகியோரையும் வாழ்த்திப் பாடியிருந்தார்.

கல்வியறிவு இல்லாத தனக்கு காவிய லட்சணங்களைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்லியிருந்தபோதும் மொல்லா ஒரு மகாகவி என்பதை அவர் தன் காவியத்தை கட்டமைத்த விதத்திலிருந்தும் அதில் பிரயோகித்திருந்த உவமை அணிகளிலிருந்தும் பாடல்களுக்கான இசை நயத்தையும் அதே சமயத்தில் சொற்சேர்க்கைகளையும் பயன்படுத்திய நேர்த்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ள முடியும்.



அவரது கவித்திறனுக்கு ஒரு பாடலை உதாரணமாகக் காட்டலாம். இலங்கையில் சீதை சிறைபட்டிருக்கிறாள். அவளை மீட்க வந்த அனுமன் உண்மையிலேயே இராமதூதனா இல்லை கபட வேடத்தில் வந்திருக்கும் இராவண அரக்கனா என்ற சந்தேகம் சீதைக்கு. எனவே, தன் கணவன் எப்படியிருப்பான், அவன் தம்பி எப்படியிருப்பான் என்று வர்ணிக்கச் சொல்கிறாள். அனுமன் இராமனை வர்ணிப்பதாக உள்ள இந்தப் பாடல் ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஒவ்வொரு வீட்டிலும் வெகு சாதாரணமாக ஒலிப்பது. பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றிருப்பது.

மேக வண்ணம் அவன் நிறம்

தாமரைப் போன்று வெளுத்தவை அவன் கண்கள்

சங்கு போன்றது அவன் கழுத்து

அவனது கணுக்கால்கள் எழில் மிக்கன

அவனது தோள்களோ நேரானவை, நீண்டவை

அவன் குரல் முரசின் ஒலி

அவன் பாதங்களில் தாமரை வரிகள் உண்டு

அழகிய மார்பை உடையவன்

வஞ்சனை அறியாத அவன் உண்மையே மொழிபவன்

அம்மையே, நற்குணங்களைக் கொண்டவன் இராமன்

இந்த எல்லா குணங்களையும் கொண்டிருக்கும் தம்பி இலக்குவனின்

நிறமோ பொன்னையுடைத்து.

இந்தப் பாடலில் இராமனின் குணங்களை வரிசையாகப் பட்டியலிட்ட கவிஞர், ஒற்றை வரியில் இலக்குவனின் குணத்தை வகுத்துக் காட்டிவிடுகிறார்.

பெண்கள் எழுதிய பிற காப்பியங்களில், கவிதைகளில் பக்தி, கருணை ஆகிய இரண்டு ரசங்களே அதிகமும் பயன்படுத்தப்பட்ட நிலையில் மொல்லா தனது இராமாயத்தில் சிருங்காரம், வீரம், ரௌத்திரம், அச்சம், அற்புதம், அருவருப்பு ஆகிய பிற ரசங்களையும் பயன்படுத்தி கவிதைகளை புனைந்துள்ளார். வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் குறித்து பேச நேரும்போதெல்லாம் மொல்லா இளமையின் தீவிரத்தையும் காமத்தின் ஆற்றலையுமே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். சிருங்கார ரசத்தை ஆளவேண்டிய அவசியமே இல்லாத இடங்களிலும் அதை வலுக்கட்டாயமாக கையாண்டிருக்கிறார். அயோத்தி நகரத்தின் வளத்தையும் அழகையும் வர்ணிக்கும்போதுகூட அங்கிருந்த சேணமிடப்பட்ட குதிரைகளில் தொடங்கி தந்திரமான கணிகைகள் வரை எவ்வளவு மோகப் பெருக்குடன் திகழ்ந்தன என்றே விவரிக்கிறார்.

வால்மீகியின் காப்பியத்தில் ‘யுத்தகாண்ட‘மே மிக நீண்ட ஒன்று. மொல்லாவும் தனது காவியத்தில் அதே யுத்த காண்டத்தை நீளமானதாக புனைந்துள்ளார். யுத்தக் காட்சிகளை விவரிப்பதில் மொல்லாவுக்கு பெருவிருப்பம் இருந்துள்ளது. சண்டைகள், ஆயுதங்கள், படை வரிசைகள், அமைச்சர்கள், கோரமான காட்சிகள், சிதைந்த உடல்கள் என அனைத்தையும் வர்ணித்துள்ளார். காமத்தை விவரிப்பதில் கொண்டிருந்த அதே விருப்பம் யுத்தத்தை வர்ணிப்பதிலும் இருந்துள்ளது.

இராமாயணத்தின் நாயகி சீதாவின் மீது மொல்லாவுக்கு பெரிய அளவு கவனம் இல்லை. அவள் அழகி என்பதை மட்டுமே வர்ணிக்கிறார்.

அவை பங்கயங்களா

மன்மதன் எய்தும் அம்புகளா

            சொல்வது கடினம் – அவள் கண்கள்.

பறவைகளின் இனிய இசையா

அல்லது தேவ கன்னியரின் பாடல்களா

            சொல்வது கடினம் – அவளது குரல்

நிலவா

அல்லது முகம் பார்க்கும் ஆடியா

            சொல்வது கடினம் – அவளது முகம்

பொற் குவளைகளா

அல்லது சக்ரவாகப் பட்சிகளா

            சொல்வது கடினம் – அவளது முலைகள்

நீலமணிச் சரங்களா

அல்லது தேனீக்களின் கூட்டமா

            சொல்வது கடினம் – அவளது கேசம்

மணல் மேடுகளா

அல்லது மன்மதனின் மண மேடையா

            சொல்வது கடினம் – அவளது தொடைகள்

அவளது எழில் கண்டு நிற்குந்தோறும்

காண்போர் கொள்வது பேதமை.

சீதாவின் பிறப்பைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. புகழ்பெற்ற அவளது சுயம்வரத்தைக்கூட ஒரு சிறிய முக்கியமில்லாத நிகழ்ச்சி என்பதுபோல் கடந்து போயிருக்கிறார். ஆனால், காட்டில் அவள் பட்ட துன்பங்களை சித்தரித்திருக்கிறார்.

காட்டின் வழியாக துயருடன் செல்லும் சீதையைக் கண்ட பழங்குடிப் பெண் சொல்லும் வரிகள் இவை

சீதையின் பாதங்களைப் பாருங்கள், பாவம்

முட்கள் நிறைந்த வனத்தில் நடந்து பழக்கமில்லை அவளுக்கு.

அழகிய அவரது கைகள் மென்மையின் ஒளியை இழந்துவிட்டன

கரடுமுரடான இந்தப் பாதையில் நடந்து அவை செம்மணிகள் போல்

நிறம் மங்கிப்போயின.

காய்ந்துலர்ந்த கொடியொன்று வீசும் காற்றில் அலைவதுபோல

சீதையின் மெல்லிய உடல் வெயிலில் நடுங்கி வதங்குகிறது

ஒளிமங்கும் தேய்பிறையென

சீதையின் முகம் வழக்கமான தன் பொலிவை மெல்ல இழக்கிறது.

இராம இலட்சுமணரின் நடைக்கு ஈடுகொடுத்து

நடக்க முயன்று மூச்சு வாங்கிட அவள் மார்புகள் ஏறி இறங்குகின்றன

இரக்கமற்று சுட்டெரிக்கும் வெயிலிடமிருந்து தப்ப எண்ணி

சிறு நிழல் தேடி அலையும் அவள் கண்களைப் பாருங்கள். 

அதேபோல, வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஆனால் துளசி இராமாயணத்தில் இடம்பெற்றிருந்த ‘இலட்சுமண ரேகை’ பகுதி மொல்லாவின் இராமாயணத்திலும் இடம் பெறவில்லை.

 

கும்மாரா மொல்லா என்று அழைக்கப்படுவதில் கும்மாரா என்பது அவர் குயவர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற பொதுவான புரிதலை, குறிப்பிடுதலை மறுக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள். மொல்லா தனது எழுத்தில் எங்கும் தன் சாதியைக் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். ‘கும்மாரா’ என் முன்னொட்டை பிற்காலத்தில் இராமாயணம் அச்சுக்கு வந்தபோது பதிப்பகத்தினர் சேர்த்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

மொல்லா வாழ்ந்த காலத்தை அறிய அவர் தன் நூலின் முகவுரையே ஆதாரமாக உள்ளது. தனது நூலின் முகவுரையில் அவர் நன்றியறிவித்திருக்கும் கவிஞர்களின் பட்டியலைக் கொண்டும் யாருடைய பெயர்களையெல்லாம் அவர் குறிப்பிடவில்லை என்பதை வைத்தும் அவர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று கணிக்க முடிகிறது.

 

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், மொல்லாவின் கவித்திறனைக் குறித்துக் கேள்விப்பட்டு தனது அவைக்கு அழைத்ததாகவும் அரசவைக்குச் சென்று மொல்லா கவிதைப் பாடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மொல்லாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாப் பக்கங்களிலும் இது இடம் பெற்றுள்ளது. மொல்லாவின் கவிதைகளைப் பாடக் கேட்டு, அரசரும் அவரது அமைச்சர்கள், புலவர்கள் அனைவரும் அவரது திறனைக் கண்டு வியந்து ‘இவரது பாடல்களை உலகையே மேலே தூக்கும் யானைகளுக்கு சமமானவை’ என்று புகழ்ந்து பாராட்டியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அதே சமயம், ஒருசில புலவர்கள் அவரது கவிதைத் திறனை சோதிக்கும்விதமாக, உடனடியாக அதே அவையில் ஒரு பாடலைப் புனைந்து காட்டுமாறு கேட்டபோது, பாகவத புராணத்தில் இடம் பெறும் கஜேந்திர மோட்சத்தைக் குறித்து அபாரமான கவிதை ஒன்றை புனைந்து பாடியதாகவும், அதனைக் கண்டு வியந்து அவருக்கு ‘கவிரத்னா’ என்று பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

 

இன்னொரு தரப்பினர் அவர் விஜயநகரப் பேரரசைச் சந்திக்கவேயில்லை என்று இவை அனைத்தையும் மறுக்கிறார்கள். மொல்லா சூத்ரகுலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் முக்கியமாக அவர் பெண் என்பதாலும் அவர் இயற்றிய காவியத்தை அரசவையில் பாட அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எழுதப்படும் கவிதைகள் பண்டிதர்களும் புலவர்களும் மெச்சுவதற்கு அல்ல, எளிய சாதாரண மக்கள் கேட்டு ரசிப்பதற்கே என்பது மொல்லாவின் நோக்கம். ஆனால், அவர் தன் காவியத்தை இலக்கண சுத்தத்துடன் பாடியிருக்கும் நேர்த்தியைப் பார்க்கும்போது மரபை மீறியதையும் எளிமையான மொழியமைப்பையும் காரணம்காட்டி அரசவைப் பண்டிதர்கள் இதை நிராகரிக்க முடியாது என்று சவால் விட்டிருப்பதுபோலவும் யோசிக்க முடிகிறது. கூடவே, பெண் என்பதால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற எழுதப்படாத விதியையும் துணிந்து மீறியிருப்பதையும் காண முடிகிறது.

அவரது பிற்கால வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. தனது குடும்பத்தை விட்டுச் சென்று ஸ்ரீசைலத்தில் தங்கிவிட்டதாகத் தெரிகிறது. மல்லிகார்ஜுனர் கோயில் அருகில் வசித்த அவர் ஒரு துறவிபோல வாழ்ந்திருக்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். தனது 90 வயதில் 1530ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.

அவரது இராமயணம் தெலுங்கில் பரவலாகக் கிடைக்கிறது. ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் இதன் மொழியாக்கம் கிடைக்கவில்லை. ஒருசில பாடல்களை சில வலைத்தளங்களில் காண முடிந்தது. (அவற்றின் மொழியாக்கமே இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.) 

ஹைதராபாத் உசேன் சாகர் ஏரிக்கரையில் டாங்க் பண்ட் சாலையில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவாக தபால் தலையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தூரி வெங்கடேஸ்வரராவ் ‘கும்மார மொல்லா’ என்ற நாவலை 1969ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். அது இப்போது பதிப்பில் இல்லை. இந்த நாவலை சங்கர சத்யநாராயணா என்பவர் ஒரு கதைப் பாடலாக மாற்றி எழுதியுள்ளார். அந்தக் கதைப் பாடல் இன்றும் ஆந்திராவின் பல இடங்களிலும் பாடப்படுகிறது. இவரது வாழ்வு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு நடிகர் பத்மநாபன். ‘கதாநாயகி மொல்லா’ என்ற அந்தப் படத்தில் மொல்லாவாக நடித்திருப்பவர் வாணிஸ்ரீ.

0

( மே 2025 ‘நீலி’ மின்னிதழில் வெளியான கட்டுரை ) 

 

 

    

விநோத் குமார் சுக்லவின் கவிதைகள்



2024ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது இந்தியின் புகழ்பெற்ற கவிஞர் விநோத் குமார் சுக்லவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சில கவிதைகள்.

1

 

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

0

தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்கவேண்டும்

அவசரத்துக்குக்கூட திரும்ப முடியாத் தொலைவிலிருந்து

உன் வீட்டை நீ காணவேண்டும்

எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத

தொலைவுக்குப் போய்விடவேண்டும்

ஏழுகடல்தாண்டிச் செல்லவேண்டும்

 

போகும்போதே திரும்பித் திரும்பிப் பார்க்கவேண்டும்

இன்னொரு தேசத்திலிருந்து உன்னுடைய தேசத்தை

ஆகாயத்திலிருந்து உன்னுடைய பூமியை

 

வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்ற நினைப்பு

அப்போது பூமியில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதாகிவிடும்

வீட்டில் உண்ண உணவும் பருக நீரும் இருக்குமோ என்ற கவலை

பூமியில் உணவும் நீரும் உண்டோ என்ற கவலை ஆகும்

 

பூமியில் பசித்திருக்கும் யாரோ ஒருவர்

வீட்டில் பசித்திருப்பவராகிவிடுவார்

 

மேலும் பூமிக்குத் திரும்புவதென்பது

வீட்டுக்குத் திரும்புவது போலாகிவிடும்.

 

வீட்டுக்கணக்குப் புத்தகமென்பது மிகவும் குழப்பமானது

சிறிது தூரம் நடந்துவிட்டு

வீடு திரும்புகிறேன்

பூமிக்குத் திரும்புவதுபோல.

 

2

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

0

நம்பிக்கையிழந்தவனாய் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்

அந்த மனிதனை எனக்குத் தெரியாது

நம்பிக்கையிழப்பை நான் அறிவேன்

எனவே நான் அந்த மனிதனிடம் சென்றேன்

நான் கை நீட்டினேன்

என் கையைப் பற்றி அவன் எழுந்து நின்றான்

என்னை அவனுக்குத் தெரியாது

நான் கைநீட்டியதை அவன் அறிவான்

நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடந்தோம்

ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் நாங்கள்

சேர்ந்து நடக்கத் தெரிந்திருந்தது எங்களுக்கு.

 

0

3

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

0

புதிய கம்பளிக்கோட்டு அணிந்த அந்த மனிதன்

ஒரு யோசனையைப்போல மறைந்துபோய்விட்டான்

ரப்பர் செருப்புகளைப் போட்டிருந்த நான் தடுமாறி நின்றுவிட்டேன்

நேரம் காலை ஆறு மணி. குளிர்பருவ ஆடைகள் களைப்பட்டிருக்கும் பொழுது.

நடுநடுங்கச் செய்யும் கடுங்குளிர்

காலை ஆறு மணி என்பது காலை ஆறு மணியைப் போலவேயிருந்தது.

மரத்தடியில் ஒரு மனிதன் நின்றிருந்தான்.

மூடுபனியினூடே அவன் உருக்கரைந்த

தன் உருவத்தினுள்ளே நிற்பதுபோல இருந்தது.

உருக்கரைந்த மரமோ அச்சுஅசலாக மரம் போலவே தெரிகிறது.

அதன் வலப்புறம் உருக்கலைந்த மட்டரகக் குதிரையொன்று

மட்டரகக் குதிரையொன்றைப்போலவே தென்படுகிறது.

பசியுடனிருந்த குதிரைக்கு

பசும்புல்வெளிபோல் தோற்றமளிக்கிறது மூடுபனி.

வேறு வீடுகளும் மரங்களும் சாலைகளும் இருந்தன

ஆனால் குதிரை எதுவும் இல்லை.

தனித்து நின்றது ஒரு குதிரை. அந்தக் குதிரை நானில்லை.

ஆனால், நான் மூச்சிரைக்கும்போது

மூடுபனியிலிருந்து என் மூச்சுக் காற்றைப் பிரித்தறிய முடியவில்லை.

மரத்தடியில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் நிற்கும் அந்த மனிதன்தான்

குதிரைக்காரன் என்றால்

அவனைப்பொறுத்தவரை

குதிரையைப்போலவே லாடங்கள் அடிக்கப்பட்டிருக்கும் காலணிகளுடன்

ஓடிக்கொண்டிருக்கும் குதிரையல்லவா நான்.

 

4

வாழ்க்கைப் பழக்கம்

0

வாழ்க்கையை வாழும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டேன் நான்

வாழ்க்கையை வாழும் இந்தப் பழக்கத்தில்

மழை பெய்யும் என்றால்

வாழும் பழக்கத்திலும்

மழை பெய்யும்

குடையை எடுக்க மறப்பேன் என்றால்

வாழும் பழக்கத்திலும்

குடையை எடுக்க மறந்துதான் போகும்

முழுக்க நனைந்து போவேன்

எப்போதெல்லாம் இடியிடிக்கிறதோ

அப்போதெல்லாம் இடியிடிக்கிறது.

 

வாழும் இந்தப் பழக்கம் என்பது

எழுவதும் உட்கார்வதும் வேலைசெய்வதும்

கொஞ்சூண்டு எதிர்காலத்திலிருந்து

பெரும்பங்கு கடந்த காலத்தை சேமித்துக்கொள்வது

இருந்தும் எதிர்காலம் இன்னும் பெரிதாகவே இருக்கிறது.

 

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தில்

நான் வேண்டுகிறேன்

என்னை நல்ல மனிதனாக இருக்கவிடு

எல்லோரையும் நலமுடன் இருக்கவிடு

 

அப்போதுதான் எப்படி எங்கிருந்து என்று தெரியவில்லை

வாழும் பழக்கத்தில்

அண்டைவீட்டின் துக்க அணை உடைந்துவிட்டாற்போல

துக்கத்தின் பெருவெள்ளம் பொங்கிப் பெருகியது

வெள்ளத்தில் மூழ்கிடாத மகிழ்ச்சியின் ஒரு சிறு துரும்பு

மிதந்து செல்கிறது

துயரம் நிறைந்த முகத்தில்

ஒரு சிறு புன்னகையைப்போல.

 

அது என்னையும் மூழ்கடிக்கவில்லை

என் அண்டைவீட்டுக்காரனையும்.

மின்னல் வெட்டிய பொழுதில்

மின்னல் வெட்டியது.

 

கும்மிருட்டில் மின்னலின் ஒளிக்கீற்றின் துணைகொண்டு

மெல்ல அடியெடுத்து வைத்தேன்

வாழும் பழக்கத்தில்

நான் செத்துப்போகும்போது

யாரேனும் ஒருவர் சொல்லக்கூடும்

நான் செத்துப்போகவில்லை என்று

அப்போதும் நான் செத்துக் கொண்டுதானிருப்பேன்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

வாழும் பழக்கதிலும்

மழை பெய்துகொண்டுதான் இருக்கும்

செத்துப்போன பின்பும்

வாழ்க்கையை வாழும் பழக்கத்தில்

நான் என் குடையை மறந்துபோவேன்.   

 

0

 


அ. முத்துலிங்கம் கதைகள் - உயிர்களின் மீதான வற்றாத கருணை

x ( அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய இந்தக் கட்டுரை நவம்பர் 2007, திண்ணை இதழில் வெளியானது. இதுவரை வலைப்பூவிலோ, வெளிவந்த கட்டுரைத் தொக...