Tuesday, 4 November 2025

மாற்றங்களும் மாறாததும் - ப.சிவகாமியின் முதல் இரு நாவல்கள்

 


ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும் ஒப்பிடவுமான விரிவான சாத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது அடைந்துள்ள தொலைவையும் ஆழத்தையும் வகுத்துக் காட்டும் வலுவான தொடக்கப் புள்ளிகள் இடம் பெற்றிருப்பது அவசியம்.

சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ (டிசம்பர் 1989), ‘ஆனந்தாயி (நவம்பர் 1992)’ ஆகிய இரண்டு நாவல்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானவை. இரண்டுமே அறுபது ஆண்டுகளுக்கும் முந்தைய காலகட்டத்தின் வாழ்க்கையை சித்தரிப்பவை. இந்த இரண்டு நாவல்களை இன்று புதிதாக வாசிக்கும் ஒருவருக்கு எப்படி புரிந்துகொள்வது, எதைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்விகள் எழும். 

இந்த இரண்டு நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் நிலமும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை மிகத் தெளிவாக பார்க்கவும் உணரவும் முடியும். நாவலின் காலத்துக்குள்ளாகவே அந்த மாற்றங்கள் சுட்டப்பட்டுள்ளன. அதிலுள்ள வேகத்தைவிடவும் பல மடங்கு வேகத்தில் மாற்றங்கள் நடந்துள்ளன. சாலைகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், கட்டடங்கள், வாகனங்கள், உணவு, உடை என்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மிக நவீனமாகவும் வேகமாகவும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பொதுவாகவே சுலபமாகவும் விரைவாகவும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தேடுவது மனித இயல்பு. நிலைத்த வருமானத்துக்கு உத்தரவாதமில்லாத, அதே சமயம் கடினமான உழைப்பைக் கோரும் தொழில்களைச் செய்பவர்கள் தமது அடுத்த தலைமுறையினரை அத்தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. தாம் பட்ட சிரமங்களை தம் பிள்ளைகள் படக்கூடாது என்னும் கரிசனம். விவசாயம், கைத்தறி நெசவு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை கவனித்தால் புரியும். இத்தகைய மாற்றத்துக்கு முக்கியமான கருவியாக விளங்குவது கல்வி. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்துள்ள பெரும் பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு கல்வியே முதன்மையான காரணம். கல்வியால் சாத்தியமான பொருளாதார மேம்பாடு வாழ்க்கைத் தரத்தில் கணிசமான மேம்பாடுகளை உறுதிப்படுத்தின. குறிப்பாக கணினி, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிலத்திலும் புற வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நிகழ்ந்துள்ள இத்தகைய மாற்றங்களின் இன்னொரு பக்கத்தில் இதுகாறும் பேணப்பட்டு வரும் மதிப்பீடுகள், வரையறைகள், அணுகுமுறைகளிலும் கணிசமான மாற்றங்கள் அதிவிரைவாக ஏற்பட்டு வந்துள்ளன. முக்கியமாக பெண்களின் புரிதல்களும் அவ்வாறான புரிதல்களின் வழியாக எழும் கேள்விகளும் அழுத்தமான மாற்றங்களை வலியுறுத்துகின்றன. கல்வியும் பொருளாதார விடுதலையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ள நம்பிக்கையும் எவரையும் சார்ந்து நிற்கத் தேவையில்லாத துணிச்சலும் அவர்களை சுயமான முடிவுகளை எடுக்கச் செய்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உறவு ஆகியனவற்றில் நேர்ந்துள்ள மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

இந்த இரு நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கிராமப்புற வாழ்க்கையை இன்றைய அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முப்பத்தி மூன்று வருடங்களில் எத்தனை தொலைவைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குடிநீர், கல்வி, மருத்துவம், சாலைகள், தகவல் தொடர்பு என அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமே இந்த நாவல்களின் களம். படிப்பறிவில்லாத விவசாயத்தைச் சார்ந்திருக்கும் எளிய மக்களின் பாடுகளை சித்தரிக்கும்போக்கில் அந்தக் காலகட்டத்தின் மனப்போக்குகளையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இடையே எழும் மோதல்களையும் நாவல் நுட்பமாக அணுகியுள்ளது.

இந்த நாவல்களில் உள்ள குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் ஆண்களின் அதிகாரத்தின் பேரில் உருவாக்கப்பட்டவை. பெண்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றாலும் அந்த அமைப்பில் அவர்களது பங்கு என்பது உழைப்பு மட்டுமே. அமைப்பின் அன்றாடங்களும் நடைமுறைகளும் ஆண்களால் தீர்மானிக்கப்படுபவை. மனைவி, மகள், அம்மா, தமக்கை, தங்கை, உறவினர், அண்டைவீட்டார் என்று பல்வேறு பாத்திரங்களை ஏற்றிருந்தாலும் அனைவருமே கடைபிடிப்பது ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் நடைமுறைகளையே.  

வெள்ளையம்மாளுக்கும் ஆனந்தாயிக்கும் உள்ள இடைவெளி என்பது சம்பிரதாயமான மாமியார் மருமகளுக்கு இடையில் ஏற்படும் ஒன்று. மாமியாருக்கான குணாம்சங்களை மருமகளான ஆனந்தாயி, விமர்சனங்கள் இருப்பினும், ஏற்றுக் கொள்கிறாள். அனுசரணையுடன் கூடிய புரிதல் அது. மருமகளை குறைசொல்லிக் கொண்டே இருப்பினும் அவளது பாடுகளையும் துயரங்களையும் அறிந்த வெள்ளையம்மாள் ஒரு பெண் என்ற நிலையிலிருந்து ஆனந்தாயிக்காக வருந்துகிறாள். இருவருமே தங்களுக்கு வாய்த்ததை விதியே என்று ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களது வலிகளை பொருட்படுத்தாமல் குடும்பத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள்.

‘பழையன கழிதலும்’ கனகவல்லியும் நாகமணியும் பிழைப்பதற்கு வேறு வழியின்றி, தலைவிதியே என்று காத்தமுத்துவின் மனைவியர் என்ற அடையாளத்துடன் ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்பவர்கள். மூன்றாவதாக தங்கம் பங்குக்கு வரும்போதும் ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதில்லை. செல்வாக்கு மிக்க காத்தமுத்துவை பொறுத்துப் போவதால் உத்தரவாதமாகக் கிட்டும் வசதி வாய்ப்புகளுக்கு முன்னால் பிற எதுவும் முக்கியமாகத் தெரிவதில்லை.

இந்த இரண்டு தலைமுறை பெண்களும் ஆணாதிக்கத்தை அதன் மூர்க்கத்தையும் வன்முறையையும் எதிர்க்கவோ கேள்விகேட்கவோ முடியாத சூழ்நிலை. வறுமையும் கல்வியறிவின்மையும் அவர்களை முடக்கிப் போடுகிறது. எதிர்த்து சண்டைபோட்டு கேள்வி கேட்பதைவிட, பிள்ளைகளுக்காக வீட்டிலும் காட்டிலும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே முக்கியமான கடமையாகிறது.

ஆனால், மூன்றாவது தலைமுறையான தனத்துக்கும் கௌரிக்கும் இவற்றை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். அப்பாக்களின் பெண்ணாசையை, அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்கிற மூர்க்கத்தை அறிந்தவர்கள். அதேயளவுக்கு அடியும் உதையும் வசைகளும் ஏற்றுக்கொண்டு குடும்பத்துக்காக பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்துப்போகும் அம்மாக்களையும் தெரிந்தவர்கள். தலைவிதி என்று ஏற்றுக்கொள்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்பாவையும் அம்மாவையும் எதிர்க்கத் துணிகிறார்கள். கொடுமைகளை அநியாயங்களை சகித்துக் கொள்ளாமல் கேள்வி கேட்கிறார்கள். கல்வி அவர்களுக்கு தந்த தெளிவு, நம்பிக்கை. வெள்ளையம்மாவும் ஆனந்தாயியும் சந்திக்க நேரும் குடும்ப நெருக்கடிகளை தனமுமே பின்னர் அனுபவிக்க நேர்கிறது என்றாலும் அவளால் துணிந்து பிறந்தகத்துக்கு பிள்ளையுடன் வரும் துணிச்சல் இருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். ஆனந்தாயி எடுக்கத் தயங்கிய ஒரு முடிவை தனத்தால் எடுக்க முடிகிறது. கேள்வி கேட்க முடிகிறது.

இதே தெளிவையும் நம்பிக்கையை ‘பழைய கழிதலும்’ நாவலின் கௌரியிடமும் சேகரனிடமும் பார்க்க முடியும். கணவனாகவும் தகப்பனாகவும் ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதாரணமாய் தங்களது தந்தையை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.    

கல்வியின் மூலமாக அறிதலையும் புரிதலையும் எட்டும் மூன்றாவது தலைமுறையே ஆணாதிக்கத்தின் கொடுமைகளையும் அதிகாரத்தையும் எதிர்த்து நிற்கிறது. அவ்வாறான எதிர்ப்பின் பலன்களை உடனடியாக அவர்கள் அனுபவிக்க முடியவில்லை என்றாலும் இந்த மூன்றாம் தலைமுறை இட்ட விதைதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உரிமைகளைப் பெறவும் வலியுறுத்தவுமான துணிவையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.  

பெரியண்ணனின் பெண்பித்து நாவலில் முக்கியமான ஒரு பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆனந்தாயியை மணமுடிக்கும் முன்பிருந்தே அவனுக்கு நிறைய பெண்களுக்கு தொடர்பு உண்டு. ஐந்தாவது பிரசவத்தின்போது பனிக்குடம் உடைந்து அவள் துடித்துக் கொண்டிருக்கும்போதே மச்சுக்கு வேறொருத்தியை அழைத்து வருமளவுக்கு துணிச்சல். மிகவும் ஆசைப்பட்டு சேர்த்துக்கொண்ட லட்சுமியை எதன்பொருட்டும் இழக்கத் துணியாதது அவன் மோகம். தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்து வேறுவழியின்றி அவள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கான அடக்குமுறை நிறைந்த காமம். இதே அளவுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு கதாபாத்திரம் கங்காணியின் மூன்றாவது மகன் மாணிக்கம். ‘பழையன கழிதலும்’ காத்தமுத்து அபயம் தேடிவந்த தங்கத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டபோதும் ஒப்பீட்டளவில்  பெரியண்ணன் அளவுக்கு அவன் பெண்பித்து கொண்டவனல்ல.

பெண்களின் மீதான ஆண்களின் தீரா காமத்தை மிக அழுத்தமாக சித்தரித்திருக்கும் இந்த நாவல்களில் பெண்களின் வரைமீறல்கள் போகிறபோக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கங்காணியின் கொழுந்தி வேணி கதாபாத்திரம் ஒரு உதாரணம். லட்சுமி, வேணி ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தவிர இத்தகைய வரைமீறல்கள் கிராமத்தில் அவ்வப்போது நடப்பதை ‘குச்சி’ வைக்கும் வஹிதாவின் உதவியை நாடும் பெண்களின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ‘ஏதோ பண்டிகை தேர்னு வந்தா மொறமைக்காரிவளோட சிரிச்சி செளையாடுவாங்க. கண்டுங்காணாம காடோ கரையோன்னு பூடும்’ என்ற வெள்ளையம்மாள் கிழவியின் புலம்பலும் இத்தகைய வரைமீறல்கள் மிகச் சாதாரணமானவை, எளிதில் கடந்துபோகக் கூடியவை என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது. காமத்தை ஆண்கள் மிகத் தீவிர நோக்கில் அணுகும்போது பெண்கள் அதையே அவ்வளவு முக்கியத்துவம் தராத ஒன்றாய், வேண்டும்போது விலக்கத்தக்கதாய் கொள்கிறார்கள் என்ற நுட்பம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

இன்றைய சூழலில் பெருமளவு விவாதிக்கப்படும் ஒன்றான சிறுமிகளின் மீதான ஆண்களின் பாலியல் அத்துமீறல்கள், எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளன என்பதையும் நாவலின் ஒரு அத்தியாயத்தில் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ள ஒற்றை வரி உறுதிப்படுத்துகிறது. வீட்டு வேலைக்காரன் சின்னசாமி தனத்தின் முழங்காலிலிருந்த சிறிய கட்டிக்கு அரளிப்பால் வைக்கிறான். அப்போது ‘ஒரு கை அரளிப்பாலைக் கட்டியைச் சுற்றிச் சொட்டு சொட்டாக வைக்க, இன்னொரு கை அவளது தொடையருகே சென்றது’.

சாதி அரசியலை புனைவில் வெளிப்படையாக அல்லாமல் நுட்பமாகவும் கையாள முடியும் என்பதை இந்த இரண்டு நாவல்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம். அத்துடன் சாதிய முரண்களிலிருந்து விடுபட கலப்புமணம் ஒரு முக்கியமான வழிமுறையாக இருக்க முடியும் என்பதையும் ‘பழையன கழிதலும்’ சுட்டிக் காட்டியிருக்கிறது.

‘பழையன கழிதலும்’ நாவலில் சாதி சார்ந்த மோதல்களும் சண்டைகளும் வெளிப்படையாக இருக்குமளவு ‘ஆனந்தாயி’ நாவலில் இடம் பெறவில்லை. முதல் நாவலில் சாதியினருக்கிடையேயான மோதல்களை அரசியலை அதை ஆதாயமாக்கும் நபர்களை மையம் கொண்டிருந்தது. கல்வியும் விழிப்புணர்வும் புதியன புகும்போது இவற்றை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள். அதுவரையிலான ஆதிக்க சக்திகளின் ஓங்கிய கைகளை எதிர்த்து நிற்கும் திறன் எழுகிறது. ஆனந்தாயி அவ்வாறன்றி ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, ஒரு சிற்றூரின் வாழ்க்கையை சித்தரிக்கும் போக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூக நடப்புகளையும் மனிதர்களின் போக்குகளையும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளன. முதல் நாவலில் உள்ளதைப் போல சமூக அவலங்களை சாதி சார்ந்த விமர்சனங்களை இது வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவ்வாறான கருத்துகளை கதாபாத்திரங்களின் வழியாக அன்றாட சம்பவங்களின் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது.

வெளிப்படையான நேரடியான அரசியல் சித்தரிப்புகளின் காரணமாக ‘பழையன கழிதலும்’ முழுமையான புனைவாக உருவாகவில்லை. ஒருவகையில் அது அனுபவங்களையும் கருத்துகளையும் இணைத்து புனைவாக்கும் முயற்சி. ஆனால் இதற்கு மாறாக ‘ஆனந்தாயி’ முழுமையான ஒரு புனைவாக அமைந்திருக்கிறது. முதல் நாவலில் உரக்கச் சொல்லப்பட்டவை இரண்டாவது நாவலில் நுட்பமாக உணர்த்தப்பட்டுள்ளன.

அன்றைய கிராமங்களில் சாதி ஒரு சமூகக் கூறு. மேலடுக்கில் உள்ளவர்கள் சாதியினால் கிடைக்கும் அதிகாரத்தை தம் உரிமையாக எடுத்துக்கொள்வதும் கீழடுக்கில் உள்ளோர் அடங்கிப்போவதும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தது. இந்த இரண்டு நாவல்களும் கிராமங்களில் நிலவிய சாதியப் பிரச்சனையை கையாண்டுள்ளன. ஆனால், இடைநிலை சாதியினருக்கும் கீழடுக்கில் உள்ள சாதியினருக்குமான மோதல்களையே இந்த நாவல்கள் மையப்படுத்தியுள்ளன. மேல் சாதியினரின் சாதிய அதிகாரம், அடக்குமுறை குறித்து பேசவில்லை. நாவல்கள் கையாண்டிருக்கும் களத்தின் எல்லைக்குள் அதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்பது காரணமாக இருக்கலாம். காலவோட்டத்தில் ஏற்பட்டுள்ள பல ஆரோக்கியமான மாற்றங்களை கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது சமூக அமைப்பில் சாதி குறித்த புரிதலிலும் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படும். ஆனால் அதற்கு மாறாக சாதியின் தீவிரமும் தீமைகளும் இன்று மேலும் ஆழமாகவும் வலுவாகவும் ஊடுருவியுள்ளன. சமூக வாழ்வின் பல்வேறு நிலைகளிலும், குறிப்பாக பள்ளி கல்லூரிகளிலும் அதன் தாக்கம் மேலோங்கியிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொருளாதாரத்திலும் வாழ்வின் புற அம்சங்களிலும் ஆரோக்கியமான, வளர்ச்சிக்கான மாற்றங்களை ஏற்படுத்த உதவிய முக்கியமான கருவியாக விளங்கியது கல்வி. இடைநிலை, கீழ்நிலை சாதியினரின் வளர்ச்சியில் அதன் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட வலுவான கருவியான கல்வி, சாதியின் பெயரால் உள்முகமாக ஒன்றுதிரள்வதில் உள்ள பாதகங்களையும் அதனால் விளையும் தீங்குகளையும் புரிந்துகொள்ள உதவாத அளவுக்கு பலவீனமானதா? அரசியல் ஆதாயங்களுக்காகவே சாதிகளும் அவற்றுக்கிடையிலான பேதங்களும் பேணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வகைசெய்ய முடியாத அளவுக்கு ஆற்றலற்றதா? கல்வியறிவை மீறிய ஒரு சக்தியாக சாதியை ஓங்கியிருக்கச் செய்யும் அரசியலுக்கு எது மாற்றாக இருக்க முடியும்? சமூகத்தின் புறவயமான வளர்ச்சிக்கு எதிர் திசையில் இவ்வாறான சாதி ஆற்றல் செயல்படுவதை எப்படித் தடுப்பது? இந்த கேள்விகளுக்கான விடைகளை சிவகாமி ஒரு நாவலாசிரியராக மட்டுமல்லாமல் அரசியலின் மூலமாகவே கண்டறிய முயன்று களச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளவர். கட்சி அரசியலின் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயல்பவர். அந்த வகையில் சிவகாமி ஒரு எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து அரசியல்வாதி, சமூகப் போராளி என்ற நிலைக்கு தன்னை நகர்த்திக் கொண்டவர்.   

ஒரு நாவலின் முதல் வரி மிக முக்கியமானது, நாவலின் போக்கை தீர்மானிப்பது என்பது இலக்கிய கோட்பாட்டில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருவது. ‘ஆனந்தாயி’, ‘பழையன கழிதலும்’ நாவல்களின் முதல் வரிகள் மட்டுமல்ல முதல் அத்தியாயங்களுமே நாவல்களின் ஒட்டுமொத்த போக்கையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

மனைவி ஐந்தாவது பிரசவத்துக்குத் துடித்துக் கொண்டிருக்கும்போது கணவன் இன்னொரு பெண்ணுடன், தன் தாயாரும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும், அதே வீட்டில் கூடிக்களிக்கிறான் என்பதாக அமைந்திருக்கும் ‘ஆனந்தாயி’யின் முதல் அத்தியாயம் நாவலின் மையக் கதாபாத்திரங்கள் அனைத்தின் குணாம்சங்களையும் அவற்றுக்கிடையிலான சமரசங்கள், மோதல்கள், பிணக்குகள் என எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. ‘பழையன கழிதலும்’ நாவலின் முதல் அத்தியாயமுமே ஒட்டு மொத்த நாவலின் மையத்தை செறிவாக உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. இந்த இரு நாவல்களிலும் இடம் பெற்றுள்ள பெரிதும் சிறிதுமான எல்லாப் பாத்திரங்களுமே அழுத்தமாகவும் துல்லியமாகவும் நாவலின் அடர்த்திக்குப் பங்களித்துள்ளன. ஒரு மனிதனின் கதை, ஒரு குடும்பத்தின் கதை என்ற அளவில் தோற்றமளித்தபோதும் இதுவொரு காலகட்டத்தின், சமூக நிலையின் கதை என்ற விரிவையும் கொண்டிருக்கிறது. மனிதன் தான் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலையை எட்ட தொடர்ந்து போராடிவரும் பொதுப் போக்கையும் அதே நேரத்தில் தனக்குள் உள்ள அடிப்படை குணாம்சங்களைப் புரிந்து கொள்ளவோ அவற்றை மேம்படுத்துவதைப் பற்றிய உணர்வு இல்லாதவர்களாக இருக்கும் நிலையையும் அருகருகே நிறுத்தி இவ்விரண்டுக்கும் உள்ள முரண்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

மாற்றங்களினூடாக அதிவேகமாக புறவயமான வளர்ச்சிகளை எட்டிக் கொண்டிருந்தபோதும் மனிதனின் அடிப்படையான குணாம்சங்கள் மாற்றமே இல்லாமல் இன்னும் இறுக்கமாக மூர்க்கமாகத் தொடர்வதன் ரகசியத்தைப் பற்றிய அச்சுறுத்தும் கேள்விகளை இந்த இரு நாவல்களுமே வலுவாக எழுப்புகின்றன.  முப்பதாண்டுகளுக்குப் பின்னும் இந்த நாவல்கள் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு வேறு காரணங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

0

(‘நீலி’ இணைய இதழ் - நவம்பர் 2025இல் வெளியான கட்டுரை )

Wednesday, 1 October 2025

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

 


அற்புத விளக்கு

பெரு விஷ்ணுகுமார்

0

நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி
சுவரில் கைவைத்துத் தடவியபடி
அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம்
அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது
அந்த நேரத்தில்போய்
சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை
இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்
போனால் போகட்டுமென
தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்
அதுதான்
தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு

0

பள்ளி நாட்களில் ஏதேனும் ஒரு தேர்வுத் தாளில், பாஸ் மார்க்கான முப்பத்தி ஐந்துக்கு அரை மதிப்பெண்ணோ ஒரு மதிப்பெண்ணோ குறையும்போது தாளைத் தூக்கிக்கொண்டு ஆசிரியருக்கு முன்னால் கெஞ்சி நின்ற அனுபவம் பெரும்பாலோருக்கு வாய்த்திருக்கும். சிவப்பு மையால் உழுதத் தாளை வாங்கி புரட்டும்போது இஷ்ட தெய்வங்களை வேண்டி நின்றிருப்போம். அந்த குறை மதிப்பெண்ணை நிவர்த்தி செய்ய தோதான ஏதேனும் ஒரு சொல்லை, பதிலைக் கண்டுபிடித்து ‘டிக்’ அடித்து இட்டிருக்கும் மதிப்பெண்ணை ஒட்டி அரை மதிப்பெண்ணை அல்லது ஒரு மதிப்பெண்ணை சேர்த்த பின் முதல் பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பெண்ணை அடித்துத் திருத்தி முப்பத்தி ஐந்தாக்கும் அத்தருணத்தில் அந்த ஆசிரியருக்கு மனதார ‘நல்லாசிரியர்’ விருதளித்திருப்போம். கெஞ்சி நிற்கும் மாணவனுக்கு இந்த அரை மதிப்பெண்ணை சேர்த்து ‘பாஸ்’ பண்ண வைக்கும் பெரிய மனசு எல்லோருக்கும், எப்போதும் வாய்த்துவிடுவதில்லை.   எப்போதேனும் எவரிடத்திலேனும் வாய்க்கும் இந்த பெரிய மனுசுதான், பரிவுதான், தாட்சண்யம்தான் இவ்வுலகை இன்னும் சராசரிகளுக்கும் நடுத்தரங்களுக்கும் விபரம் போதாதவர்களுக்கும் பிழைக்கத் தெரியாதவர்களுக்குமான சின்னஞ்சிறிய இடத்தை காப்பாற்றி வருகிறது.

ஒருவழிப்பாதை என்று தெரிந்தும் விசுக்கென நொடிப்பொழுதில் தீர்மானித்து எதிரில் வரும் சரியானவற்றை திடுக்கிடச் செய்து கடந்து போகிற ஒரு இளம் புல்லட்டை நொடிப்பொழுதி நிறுத்தி பின் அதே கணத்தில் அனுமதித்து நகர்வார் போக்குவரத்து காவலர். அப்போது அவர் முகத்தில் தோன்றி மறையும் சிறு புன்னகை. அதுவரையிலான இறுக்கமான அவரது கடமை முகத்துக்கு, அடடா எங்கிருந்தோ வந்து சேரும்  அபாரமான அழகு.

முறையான ஆராய்ச்சிகளால் சோதனைக்கூடங்களில் பலகட்டங்களுக்குப் பிறகு எட்டப்பட்ட கண்டுபிடிப்புகளும் உண்டு. பூனைகள் தாவி மேசையைக் குலைத்து பொருட்களைக் கலைத்து ஏற்படும் சிறுவிபத்துகளில் விளைந்த நன்மைகள்தான் எத்தனை! திட்டமிட்டு அடைந்த குறிக்கோளுக்கும் தற்செயலால் அடைந்த ஒன்றுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு சுவாரஸ்யம். அந்தரத்தில் விளைந்த கனியைக் கண்டு ஏற்படும் குதூகலம். இன்னொரு முறை முயன்றாலும் நிகழாத அற்புதம். 

சரியானவற்றை வேறுபடுத்தி சரியாகக் காட்ட தவறுகள் தேவைப்படுகின்றன, வெண்மையை துலக்கித் தர உதவும் சிறு கரும்புள்ளிபோல. துக்கிரிக் கண்களிலிருந்து அழகையும் தூய்மையையும் காப்பாற்றும் திருஷ்டி பொட்டுகள் அவை.

வலுத்ததே வாழும் என்பது விதியானாலும் ‘இருந்துட்டு போகட்டும் விடு’ என்று கரிசனம் காட்டும் தாட்சண்யத்தால்தான் உய்கிறது இவ்வுலகம்.

‘தயவு தாட்சண்யமெல்லாம் பாத்தா பொழைக்க முடியாது’ என்று சொல்வார்கள். அப்படி பார்ப்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் புறம்பேசக்கூடும். என்ன செய்ய முடியும்? சிலர் மட்டும் வாழ்ந்திருக்கும்போது இன்ன பிற அனைத்தும் பிழைத்துக்கிடக்கத்தானே வாய்த்திருக்கிறது.

தாட்சண்யம் என்பது பித்துக்குளித்தனத்தின் ஒரு கீற்றுதான். பித்துக்குளித்தனங்களால்தானே கலையும் கவிதையும் வனப்புறுகின்றன. அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடை தவறான ‘ஸ்விட்சு’க்கு ஒளிரும் பித்துக்குளித்தனத்தினால்தான் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து யாரும் பிழைக்க முடிகிறது. அப்படி ஒளிரும்போது எடிசன் புன்னகைக்கிறார் என்றால் அவரும் ஒரு தவறான ஸ்விட்சை அழுத்தியபோதுதான் அந்த அற்புத விளக்கைக் கண்டறிந்திருக்கக் கூடும்.

பித்துக்குளித்தனங்களால் நிறையட்டும் இவ்வுலகு. தவறான ஸ்விட்சுக்கு எங்கும் ஒளிரட்டும் தாட்சண்யத்தின் ஒளிக்கூடை.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது

கவிதையும் ஞானமும் - 3 * யானை ரயில் கடல் - ஆனந்த் குமார்

 



3

யானை ரயில் கடல்

ஆனந்த் குமார்

 0

அப்பா திடீரென

ஒரு யானை வாங்கி வந்தார்

நான் அதை

வாசலில் கட்டி வைத்தேன்

நடைக்கு அழைத்துச் சென்று

நண்பர்களிடம் காட்டினேன்

ஆனாலும் என் தீராத ஆசையால்

மீண்டும் அழுதேன்

 

அவர் ஒரு ரயிலை

கொண்டு வந்தார்

அதில் ஊரெங்கும் சுற்றினேன்

முன்னும் பின்னும் அதை செலுத்தினேன்

மீண்டும்

போதாது போதாது என

சிணுங்கத் தொடங்கவும்

 

இந்தக் கடலை எனக்குத் தந்தார்

அதன் கரைகள் எங்கும்

வீடுகள் கட்டினேன்

அலைகள் எண்ணி எண்ணித் தீர்ந்து

நான் அடம்பிடிக்கத் தொடங்குகையில்

அப்பா காணாமல் போயிருந்தார்

 

தினம் தினம் மாலை

இங்கு வருகிறேன்

அன்றைய சூரியனை

இந்தக் கடலுக்குள் இட்டு

காத்திருக்கிறேன்

இந்த உண்டியல் நிரம்பும்போது

அதைக் கொடுத்து

ஒரு யானை வாங்குவேன்.

0

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதை என் குழந்தைப் பருவத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. என்னுடைய அப்பா எனக்காக பொம்மைகள் எதுவும் வாங்கித் தந்தாரா? இத்தனை விதமான பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் சந்தைக்கு வராத காலம் என்றாலும் அவர் எனக்கென பொம்மைகள் எதுவும் வாங்கி வந்ததில்லை. கைத்தறிச் சேலைகளை வியாபாரியிடம் கொடுத்து கூலிப் பணத்தைப் பெற்றுத் திரும்பும் நாட்களின் இரவு நேரங்களில் காத்திருந்து நான் தூங்கிப் போயிருப்பேன். மறுநாள் காலையில் எழும்போது தலையணைக்கு அருகில் கோன் வடிவத்தில் க்ரீம் நிரப்பிய குழல் கேக்குடன் ஒரு பொட்டலம் இருக்கும். திருப்பூர் மேட்டுப்பாளையம் வீனஸ் பேக்கரியின் புகழ்பெற்ற கேக். சில நாட்களில் தேங்காய் பன். இதைத் தவிர விளையாட்டு பொம்மைகள் எதையும் அவர் வாங்கித் தந்ததுமில்லை. வேண்டுமென்று நான் கேட்டதுமில்லை.

இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பண்டரி பஜனை கோஷ்டியினர் பதினைந்து நாள், இருபது நாள் தென்னிந்திய கோயில்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். பஜனை கோஷ்டியில் மிருதங்கம் வாசிப்பவர் என்பதால் அப்பாவும் அவருடன் அம்மாவும் யாத்திரைக்குச் செல்வது, பொருளாதார தடங்கல்களையும் மீறி எப்படியோ நடந்துவிடும். பஜனை கோஷ்டி ஊருக்குத் திரும்பி வரும் நாளை எல்லோருமே எதிர்பார்த்திருப்பார்கள். நானும். அப்போதுகூட பொம்மைகள் எதுவும் வாங்கி வந்தது இல்லை. அதிசயமாய் ஒரு முறை சோலாப்பூரிலிருந்து இரண்டு போர்வைகள் வாங்கி வந்தனர்.  அதேபோல மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போகவென ஒரு அழகிய பையை வாங்கி வந்தார். அடர் பழுப்பு வண்ணத்தில் தங்க நிற வளையங்கள் இட்ட ரெக்சின் பை அது. இரண்டு பக்கங்களிலும் கிளிப்புகளைக் கொண்டு மூடும்படியானது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் அக்கம்பக்கத்தினரும் அதிசயமாய் பார்த்து வியந்த ஒன்று. காதறுந்த மஞ்சப் பையோ காக்கிப் பையோதான் அனைவரும் கொண்டு வரும் புத்தகப் பைகளாக இருந்தபோது நவீனமான அப்படியொரு பையை அனைவரும் அப்படி வியந்து வாய் பிளந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான்காம் வகுப்பு வரை அந்தப் பையைத்தான் பயன்படுத்தினேன். ஆனால், ஐந்தாம் வகுப்புக்கு போன சமயத்தில் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு நானும் ஒரு காக்கிப் பையில் புத்தகங்களை எடுத்துச் சென்றேன். பொன்னிற வளையங்கள் மங்கி விளிம்பில் அட்டை தெரிய விரிசலடைந்த அந்த ரெக்சின் பை வெகுநாட்கள் வரை அட்டாரியில் கிடந்தது. அம்மா எப்போது அதைத் தூக்கி எறிந்தார் என்று நினைவில்லை.

குழந்தைகளின் உலகை கவிதைக்குள் கொண்டு வருவது பெரும் சவால். எல்லோருமே பொன்னான அந்த நாட்களைக் கடந்து வந்திருப்போம் என்றாலும் கவிதையாக மாற்றுவது சாத்தியமில்லை. தூயதும் களங்கமற்றதும் இயல்பானதுமான அப்பருவத்தின் ஒவ்வொரு கணமும் விசை குறையாத ஆற்றலையும் தெவிட்டா குதூகலத்தையும் ஒருங்கே கொண்டவை. அவ்வுலகின் கணங்களை மொழியில் வடிப்பதில் சிக்கல்கள் உண்டு. குழந்தைகளின் உலகில் பயின்றுவரும் மொழிக்கு இலக்கணங்கள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென ஒரு தனி மொழியைக் கண்டடைகிறது. தனக்கான மொழியை அது புற உலகின் மொழியிலிருந்தே உருவாக்குகிறது என்றாலும் அப்படி தனித்து உருவாக்கிய பின்பு மூலத்திலிருந்து அவற்றை முற்றிலும் விலக்கி விடுகின்றன. சிறப்பான இத்தன்மையை கண்டறிந்து கவிதைக்குள் கொண்டு வர முடிந்தால் அவன் கவிஞன்.

கேட்டதை வாங்கித் தரும் அப்பாக்களிடம் குழந்தைகள் எப்போதும் பெரிதினும் பெரிது கேட்பதே வழக்கம். ஒரு பொருள் கடை அலமாரியில் இருக்கும்போது அதன் மீதுள்ள மயக்கமும் ஆசையும் கைக்கு வந்தவுடன் காணாமல் போகும் மாயத்தை பகுத்தறிவது கடினம். கிட்டிய பொருளை கையில் இடுக்கியவுடனே அந்த மயக்கத்தையும் ஆசையையும் வேறொரு பொம்மையின் மீது மடைமாற்றுவதற்கு முன்பே கடையிலிருந்து அகலத் தெரிந்த அப்பாக்கள் இவ்வுலகில் உண்டா என்ன? 

வெளியூர் போய்விட்டு திரும்பும்போது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி வரும் பழக்கத்தை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், அந்தப் பழக்கத்தைத் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கத் தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்துவது கடினம்.

அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவை இந்த பொம்மைகள்தான் நிர்ணயிக்கின்றனவா? வாங்கி வராமல் போனால் பாசமில்லாமல் போகுமா? குழந்தைகள் நிச்சயம் அழும். அடம்பிடிக்கும். ஆனால், அதற்காக அப்பாவை வெறுத்துவிடாது. ஒருநாள், சில நிமிடங்கள் அந்த ஏமாற்றம். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தை மறந்துவிடும். ஆனால், அப்பா அதை மறக்கமாட்டார். அடுத்த முறை இந்தத் தவறை செய்யக்கூடாது என்று முடிவெடுப்பார்.

‘யானையின் சாவு’ என்றாரு கதை. சார்வாகன் எழுதியது. யானை பொம்மை வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு அதை வாங்கித் தருகிறார் அப்பா. அதனுடன் விளையாடி மகிழும் குழந்தை எல்லா நேரத்திலுமே யானையுடனே இருப்பதைக் கண்டு எரிச்சல் அடையும் அப்பா ஒரு நாள் ‘அதுக்கு உயிரில்ல குட்டி’ என்று சொல்லவும் குழந்தை மனம் கோணுகிறது. அப்பாவிடம் பேச மறுக்கிறது. பிறகு, சமாதானப்படுத்தவென அப்பாவும் யானையுடன் விளையாடத் தொடங்குகிறார். இப்போது அப்பாவும் குழந்தையும் யானையுடன் புதிய விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அலுவலக வேலையாய் சில நாட்கள் வெளியூர் போய்விட்டுத் திரும்புகையில் யானையுடன் விளையாட புதிய திட்டங்களுடன்  வீடு திரும்புகிறார் அப்பா. வீட்டில் குழந்தையின் கையில் யானை இல்லை. அப்பா திகைக்கிறார். ஆனால், வேலைகளுக்கு நடுவே அதை விசாரிக்க மறந்துவிடுகிறார். இரண்டு நாள் கழித்து ஓய்வான ஒரு மாலைப் பொழுதில் யானை எங்கே என்று கேட்க, குழந்தை ‘தெரியல’ என்று சிரத்தையில்லாமல் பதில் சொல்கிறது. ‘அது பாவமில்ல, பசிக்குமில்ல’ என்று அப்பா தவிக்கும்போது குழந்தை எரிச்சலுடன் சொல்கிறது ‘அப்பா, அது பொம்ம. அதுக்கு உயிரில்ல, தெரியாதா?’. அப்பா செய்வதறியாது நிற்கிறார். 

பிள்ளைகளுக்கு அப்பாக்கள் வாங்கி வரும் பொம்மைகள் ஒவ்வொன்றாய் சேர்ந்தபடியே உள்ளன. சிறிதும் பெரிதுமாய் வெவ்வேறு வண்ணங்களில் அவை குவிந்தவண்ணமே உள்ளன.  குழந்தைகள் பிறந்த நாள் முதல் அவை வீட்டுக்குள் இடம் பிடிக்கின்றன. வளருந்தோறும் குழந்தைகளின் விருப்பத்துக்கேற்ப பொம்மைகள் மாறுகின்றன. சிலருக்கு விதவிதமான கலர்கலரான கார்களின் மீது பிரியம். இன்னும் சில குழந்தைகளுக்கு சூப்பர் மேனும் ஸ்பைடர் மேனும். வேறு சிலருக்கு அழகாக உடுத்திய பார்பி பொம்மைகள். புல்டோசரையும் டிராக்டர்களையும் கேட்டு வாங்கும் குழந்தைகளும் உண்டு. பொம்மைகள் இல்லாத வீடுகளை எங்கேனும் உள்ளனவா? வாய்ப்பில்லை.

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதையைப் படித்தபோது ஒரு கேள்வி முளைத்தது. குழந்தைகள் வளர்ந்த பிறகு இந்த பொம்மைகள் என்னவாகின்றன? வளர்ந்த பிறகு குழந்தைகள் பொம்மைகளை பொருட்படுத்துவதில்லை. பரணில், அட்டைப் பெட்டிகளில், பால்கனி மூலைகளில் அவை கைவிடப்பட்டவைகளாய் கிடக்கின்றன. பொம்மைகளோடு சேர்ந்து காணாமல் போவது குழந்தைப் பருவமும்தான். அவர்கள் இப்போது குழந்தைகள் இல்லை. வளர்ந்தவர்கள். அப்பாக்களிடமிருந்து பொம்மைகளை அவர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. எது வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களே தேடிப் பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். இனி பொம்மைகள் அவர்களுக்குத் தேவையில்லை.

பொம்மைகள் தேவைப்படாதபோது, அவற்றை வாங்கி வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு காணாமல் போகும்போது, குழந்தைகள் பெரியவர்களாகி நிற்கும்போது அப்பாக்களுக்கும் குழதைகளுக்குமான உறவு நிறைகிறது. அந்த நிறைவில் ஒரு விலகலும் உண்டு. மிகவும் சிக்கலான காலகட்டம். இந்த இடைவெளியை விலகலை சரியாகப் புரிந்துகொள்ளும்போது அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவில் நெருக்கம் அமைகிறதோ இல்லையோ பிரிவு ஏற்படாது.

பிள்ளைகள் வளர்ந்து அப்பாக்கள் ஆவார்கள். ஒருநாள் அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான பொம்மைகளை ஆசையுடன் வாங்கியபடி வீடு திரும்புவார்கள். 

செல்லம் கூடிப்போகும்போது யானையும் ரயிலும் கடலும்கூட பொம்மைகளாக்கித்தான் போகும். அவற்றை வாங்கித் தர அப்பாக்களும் இருப்பார்கள். அப்பா வாங்கி வந்த யானையை ரயிலை கடலை வைத்து விளையாடும் பிள்ளைகளும் இருப்பார்கள். ஆனந்தைப் போன்ற கவிஞர்கள் அன்றாடச் சூரியனை கடலில் சேமித்து அந்தச் சேமிப்பைக் கொண்டு ஒரு நாள் யானையையும் வாங்குவார்கள்.

அப்பாக்களும் பிள்ளைகளும் பொம்மைகளுமான உலகில் இதுவொரு தீராத விளையாட்டு.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது.

Friday, 5 September 2025

வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடல் மஞ்சுநாத்தின் ‘அப்பன் திருவடி’


 

வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுதுவதுமாய் தொண்டு செய்தவர். தாகூரின் தனிச் செயலராக இருந்த அனில் குமார் சந்தாவை காதலித்து மணந்தார். ராணி சந்தா எழுதிய புகழ் பெற்ற நூல் ‘பூர்ண கும்பம்’. பானு பந்த் என்பவரின் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.

ஹரித்வாரில் நடக்கும் கும்ப மேளாவுடன் சேர்த்து இமயத்தையும் அதன் பல்வேறு இடங்களையும் பயண அனுபவத்துடன் விவரிக்கிறது இந்த நூல். இமயத்தைக் குறித்து வாசித்த முதல் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

இமய மலை யாத்திரைக்குச் செல்பவர்களின் வழியாக ‘சார் தாம் யாத்ரா’, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்று பெயர்களைக் கேட்டதுண்டே தவிர ஒரு முறையேனும் போய் வரவேண்டும் என்ற எண்ணம் ஏனோ வந்திருக்கவில்லை என்பதை இன்று யோசித்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது.

கேதார்நாத், கடல் மட்டத்திலிருந்து 11800 அடி உயரத்தில் பனி மூடிய சிகரங்கள் சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய ஊர்.  மந்தாகினி நதி ஊற்றெடுக்கும் சோராபாடீ ஏரிக்கு சற்று கீழே அமைந்திருப்பதால், பனிப்பாறை உருகும்போதும் உடையும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எப்போதும் உண்டு. கடுமையான பனிப்பொழிவு, கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு என இயற்கை பேரிடர்கள் பலவற்றையும் வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. கேதார்நாத்தை அடைவதற்கான சாலை 16 கிலோ மீட்டர் தொலைவில் கீழே உள்ள கௌரிகுண்டம் என்ற இடத்துடன் முடிந்துவிடுகிறது. அங்கிருந்து கேதார்நாத்துக்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. முதலாவது, மட்டக் குதிரைகளில் ஏறிச் செல்வது. கோயில் திறக்கப்படும் ஆறு மாதங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட குதிரைக்காரர்கள் ஏராளம். இரண்டாவதாக, ஆட்கள் சுமந்து செல்லும்‘டோலி‘யில் கைகால்களை குறுக்கி அமர்ந்து போவது. மூன்றாவது வழி சற்று செலவு பிடித்த ஒன்று. ஹெலிகாப்டர் பயணம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கே கோயில் திறந்திருக்கும். கடும் பனிப் பொழிவு, தாங்க முடியாத குளிர், பனியால் மூடிக் கிடக்கும் பாதைகள் போன்ற காரணங்களால் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் கோயில் அடைக்கப்பட்டிருக்கும். கோயில் நடை சாத்தப்படும் இறுதி நாளில், பூசையை முடித்து உற்சவ மூர்த்தியை பல்லக்கில் ஏற்றி குப்தகாசிக்கு அருகில் உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு வந்து விடுவார்கள். மீண்டும் நடை திறக்கப்படும் நாளில் எடுத்துச் செல்வார்கள்.

கேதார்நாத்தில் உள்ள சிவாலயம் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாது. எட்டாம் நூற்றாண்டில் இது ஆதி சங்கரரால் சீரமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 600க்கும் சற்றே கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊருக்கு அனுமதிக்கப்படும் ஆறு மாத காலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஐயாயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 16 லட்சம்.     

2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து பெய்த கனமழை, கடும் பனிப்பொழிவு, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகிய அனைத்தும் சேர்ந்து மறக்க முடியாத பெரும் சேதாரங்களை விளைவித்தன. மந்தாகினியின் கரையில் கட்டப்பட்டிருந்த எண்ணற்ற கட்டடங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர் சேதங்கள். அரசாங்கம் கொடுத்த எண்ணிக்கைக்கும் உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கைக்கும் பாரதூரமான வித்தியாசம். இதில் குதிரைகள் உள்ளிட்ட பிற உயிர்கள் அடங்கா.

கௌரிகுண்டத்திலிருந்து கேதாருக்குச் செல்லும் 14 கிலோமீட்டர் பாதையின் மத்தியில் அமைந்திருந்தது ராம்பாரா எனும் கிராமம். மட்டக் குதிரையிலும், டோலியிலும் செல்லும் யாத்திரிகள் சிரம பரிகாரம் செய்து கொள்வதற்கான இடம். 2013ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மந்தாகினியின் பெருவெள்ளம் ராம்பாரா கிராமம் மொத்தத்தையும் சுருட்டிக்கொண்டு போனது. 150க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான கடைகள், ஐந்து விடுதிகள், வீடுகள் என்று எதுவுமே மிஞ்சவில்லை. கிராமம் இருந்த மொத்த இடத்திலும் பத்து அடிகள் ஆழம் வரையிலான சேறும் சகதியுமே எஞ்சியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த உள்ளூர்வாசிகள், பயணிகளில் ஒரு சிலரைத் தவிர பிற அனைவருமே பலியாகினர், காணாமல் போயினர்.      

எண்ணற்ற உயிர்களையும் ஏராளமான உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் சுருட்டிப் பறித்துப் போன இந்த பெருவெள்ளத்துக்கு அடிப்படை காரணம் மனிதனின் பேராசையே என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. அனுமதியளிக்கப்பட்ட அளவுக்கு மீறிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள், கண்டுகொள்ளாத அரசு அதிகாரம் என மனிதர்களின் சுயநலப் போக்கு மீள முடியாத பெரும் துயருக்கு காரணமாக அமைந்தது.

ஜூன் மாதம் 2013ஆம் வருடம் இந்தியாவின் வடக்கில் இமய மலையின் சரிவில் நடந்த இந்தப் பேரழிவு, தென்முனையில் வசிக்கும் நமக்கு பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. ஒரு வாரம், பத்து நாள் வரை அந்த செய்திகளை நாம் தொடர்ந்திருந்தோம். பிறகு அதன் மீதான கவனம் விலகி வேறொன்றில் ஆழ்ந்து விட்டோம். ஆனால், இத் துயர நிகழ்வில் தங்கள் உற்றாரை, உறவினரை, நண்பர்களை பறிகொடுத்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இந்தப் பேரழிவு ஆறா வடுவாகவே எஞ்சியிருக்கும். கங்கையை தலையில் சுமக்கும் ஈசனை பனிமலைச் சிகரங்கள் சூழ்ந்த கேதாரத்தில் சென்று தரிசிக்கும் ஆசையுடன் பல காலம் திட்டமிட்டு, பொருள் சேர்த்து சென்றவர்களில் பலர் வெள்ளத்தில் பலியாயினர். இன்னும் சிலர் காணாமல் போயினர். வேறெதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் தன்னுடன் வந்தவர்களில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அவலத்தை பலர் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு கொடும் நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவர் அதைப் பற்றி சொன்னால் மட்டுமே அந்த இரண்டு நாட்களில் கேதாரத்தில் நடந்தவற்றை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ வெளிவந்ததாக தெரியவில்லை. ஆவணப் படங்கள் எதுவும் வெளியாகியிருக்க வாய்ப்புண்டு.

மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த அந்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஒரு இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்தையும் நம்பிக்கை இழப்பையும் அதே சமயத்தில் உயிர்வாழும் இச்சையுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளது என்ற வகையில் தமிழுக்கு இந்த நாவல் புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பகுதியும் உரையாடலாக அமைந்திருக்கும் இந்த நாவலை மூவரின் கோணங்களாகப் பகுத்துக் கொள்ள முடியும். முதலாவது கோணம் குதிரைக்காரன் மாதவ்வின் பார்வையிலிருந்து எழுவது. மரணத்தை எளிதில் ஒப்புக்கொள்ள மறுத்து இயன்ற வரை எதிர்த்துப் போராடி மீள்வது. அமர்தேவ் எனும் தனது குதிரையில் பயணிகளை ஏற்றிச் செல்வதை ஒரு வேலையாக மட்டுமல்லாமல் தனக்குக் கிடைத்த பேறாகவும் கருதும் மாதவ் தொடர்ந்து பேரிடரிலிருந்து தப்பிக்கும் முனைப்புடன் அதற்கான வழிகளை ஆராய்ந்தவண்ணம் இருக்கிறான். பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக யோகி மகராஜ் குகையிலேயே பதுங்கியிருப்பது மரணத்தை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று வாதிடுகிறான். கால்வைக்கும் திசை ஒவ்வொன்றிலும் அபாயங்களன்றி தப்பும் வழிகள் சொற்பமே என்று தெரிந்தும் அவன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதில்லை. எந்தச் சூழலிலும் மன உறுதியை விட்டுத்தராமல் தொடர்ந்து போராட வேண்டும் என்ற துணிவே அவனைக் காப்பாற்றுகிறது. இரண்டாவது கோணம், யோகி பத்ரபாகு மகராஜ் அவர்களின் கோணம். தான் அடைக்கலமாயிருக்கும் குகைக்கு வெளியே அவ்வளவு பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கும்போதும், மரணம் கணந்தோறும் நெருங்குகிறது என்றபோதும் இயல்பு குலையாமல் அமைதியாக நடப்பவற்றை உற்று கவனிப்பதுடன், குகையில் தஞ்சமடைந்தவர்களை முடிந்த மட்டிலும் பாதுகாப்பாக வைக்க முயல்வதே தன் பணி என்ற நிறைவுடன் இருப்பது. யோகி மகராஜ் இமயத்தின் பனிச்சுவர்களை, அவற்றின் பின் உறைந்துள்ள ஏரிகளை, உயரச் சிகரங்களை, அபாயகரமான சரிவுகளை என அனைத்தையும் தன் கால்களால் அளந்தவர். இந்தப் பேரிடரின் பலம் என்ன, அது என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைக் கணித்திருப்பவர். கேதாரத்தின் கற்றளி மட்டுமே பாதுகாப்பானது, வேறு முயற்சிகள் மரணத்தை மடியிலேந்துவதற்கு ஒப்பானது என்பது அவர் எண்ணம். வாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளியை, வித்தியாசத்தை அறிந்தவர் என்பதால் தற்கணத்தை மட்டுமே பொருட்படுத்துகிறார். ஒவ்வொரு கணமும் குழந்தை சாதாரியின் உடல்நிலையிலேயே கவனத்தில் கொண்டிருக்கிறார். குகையில் தன்னுடன் இருப்பவர்களை முடிந்த மட்டும் பராமரிக்கிறார்.  அனைத்தும் மனிதனின் சுயநலம் விளைவித்திருப்பது, அதன் பலன்களை அனுபவிக்காமல் தப்ப முடியாது என்ற எண்ணம் கொண்ட அவருக்கு குகையிலோ வெளியிலோ எங்கிருந்தாலும் மரணம் ஒன்றுதான். மூன்றாவது கோணம், இராணுவ அதிகாரி சுருளிச்சாமியின் பார்வை. இந்த பேரிடரில் கடமையின் பொருட்டு அதிகாரியைக் காப்பாற்றப் போனதால் தன் மனைவியை மகளை இழந்தவர். கடைசி வரையிலும் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளும்பொருட்டு ஆத்திரத்தையும் வெறுப்பையும் மீறி மாதவ்விடம் அவர் காட்டும் பொறுமை இராணுவ அதிகாரியின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. விடுப்பில் ஒரு சாதாரண பயணியாக, குடும்பத்துடன் கேதார்நாத்தை தரிசிக்க வந்தவர் சந்திக்க நேர்ந்த இழப்பும் அதன் காரண காரியங்களும் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. பேரிடரில் உயிரிழந்த எண்ணற்ற பயணிகளின் நிலையும் அதுவே. ஆறுமாத காலத்தில் எத்தனையோ லட்சம் பேர் வந்துபோகும் நிலையில் குறிப்பிட்ட அந்த இரண்டு நாளில் ஏன் அப்படியொரு விபத்து நடக்கவேண்டும், ஏன் அத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? அந்த நாட்களையும், குறிப்பிட்ட அந்த உயிர்களையும் தேர்வு செய்தது யார் அல்லது எது? எதுவுமே நடக்காதது போல மறு ஆண்டே மீண்டும் தொடங்கிய யாத்திரையில் மீண்டும் பக்தர்கள் வந்து போகிறார்கள். குதிரைகள் ஆட்களை ஏற்றிச் செல்கின்றன. டோலிகளில் சுமந்து செல்கிறார்கள். கடைகளும் விடுதிகளும் உணவகங்களும் முளைக்கின்றன. பனி மூடிய சிகரங்களுடன் இமயம் கம்பீரமாய் காட்சி தருகிறது. மந்தாகினி தாவிப் புரண்டோடுகிறது. மாதவ் தன் அமர்தேவை தேடிக்கொண்டே இருப்பதுபோல சுருளிச்சாமியும் மகள் சாதாரியைத் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்.

மரணத்தைக் கண்டு அஞ்சுவோர் அநேகம். அதைப் பொருட்படுத்தாது வரும்போது வரட்டும் என்று மதிக்காதோர் சிலர். மரணத்துடன் போராடி அதை ஒத்திப்போடும் துணிவுடையோர் இன்னும் சிலர். இவர்களில் யாரையும் விட்டுவைப்பதில்லை மரணம். ஒருவித சமன்பாட்டை உணர்த்தும்பொருட்டு அனைவரையுமே ஒரே நேரத்தில் அள்ளிக்கொண்டு போகிறது. இயற்கையை தான் வென்றுவிட்டதாக மனிதன் எண்ணுந்தோறும் இல்லை என்று அவனுக்கு உணர்த்த ஏதேனும் ஒரு பேரிடரில் தன் ஆற்றலை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் சாந்தமாகிவிடுகிறது இயற்கை. இந்த இரண்டுவித ஆட்டங்களையும் நாவலில் காணமுடிகிறது.   

சுருளிச்சாமிக்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகத் தொடங்கி, அதனுள்ளேயே யோகி பத்ரபாகு மகராஜ்க்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகவும் நீண்டு உருமாறுகிறது. பிறகு, நாவலின் போக்கில் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாகவும் விவாதமாகவும் மாறிவிடுவதை உணரலாம்.      

மஞ்சுநாத் இமயமலையில் தொடர்ந்து பயணம் செய்பவர். அதன் ஆழ அகலங்களை நன்கறிந்தவர். சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் அல்லாத பல பிரதேசங்களில் தனியாக பயணம் செய்த அனுபவம் உண்டு. அங்குள்ள சாதுக்கள், குதிரைக்காரர்கள், பாண்டாக்கள், கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் என்று பலதரப்பட்ட மக்களுடன் பழகியவர். கங்கையும், மந்தாகினியும், அல்காநந்தாவும் எந்தெந்த பருவத்தில் எப்படி உருமாறுவர் என்ற சூட்சுமங்கள் அறிந்தவர். இமயச் சிகரங்களில் குளிரிலும் மழையிலும் பனியிலும் அலைந்திருப்பவர். நாவலுக்காக இத்தகைய ஒரு களத்தை எடுத்துக்கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், அந்த இரண்டு நாட்களில் நடந்தவற்றை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் இவ்வாறான ஒரு அடிப்படை விவாதமாகவும் அமைத்திருக்கிறார். இமயத்தின் அழகை வர்ணிக்கும் அதே நேரத்தில் அதன் அபாயத் தோற்றங்களையும் காட்டியிருக்கிறார். பல இடங்களில் பயன்படுத்தியிருக்கும் உவமைகள் குதிரைகளோடும், மந்தாகினியோடும் தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன.

கேதார்நாத்தில் நடந்த பேரிடரைப் பற்றிய நாவல் என்று எளிமையாகச் சொன்னால் இது வாசிக்க பரபரப்பான நாவலாக இருக்கும் என்ற எண்ணம் உடனடியாக எழும். உண்மைதான். ஆனால், அத்தகைய பரபரப்புத்தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாக்கி ஆழம் சேர்த்திருக்கிறார். அதுவே இந்த நாவலுக்கு கூடுதலான பரிமாணத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

( ‘அப்பன் திருவடி’ நாவலுக்கான முன்னுரை. எதிர் வெளியீடு. ) 


 

Monday, 18 August 2025

நகரும் படிக்கட்டுகள் - திவ்யா ஈசனின் கவிதை


ஒரு கவிதை என்ன செய்யும் - 2


0

நவீன உலகத்தைத் தாண்டுதல்

திவ்யா ஈசன்

அவன் கைகள் சோர்ந்து

நான் பார்த்ததேயில்லை

வெட்டி வெட்டி

மண்வெட்டிதான் மழுங்கிப் போகும்

அதை கூர்த்தட்டதான் ஓய்வான்

இரண்டு ஆள் வேலை செய்வான்

 

ஓங்கி உயர்ந்த பனைகளில்

நெஞ்சுபடாமல் ஏறி

நுங்கு வெட்டித் தருபவன்

ரத்த வாடைப் பழகாத தெருநாய்யை

காட்டுக்கு கூட்டிச் சென்று

வேட்டைநாயாய் மாற்றுபவன்

 

பெரும் வரைக்கட்டில்

தனியாளாய் வள்ளியில் இறங்கி

தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்

 

ஓடும் நதியில் எறிதூண்டி இட்டு

பெருமணாலி மீன்பிடிப்பதில்

நல்ல கைத் தேர்ந்தவன்

 

மலைப்பெருவை நடக்கையில்

மிருகத்தின் நாற்றமறிந்து

வரும்முன் விலகத் தெரிந்தவன்

 

திருவிழா நாட்களில்

வீர விளையாட்டின் பரிசுகளை

ஒன்றுவிடாமல் வாங்கி குவிப்பவன்

 

களரி சிலம்பம்

வாள் வீச்சை எல்லாம்

காலில் மண்டியிட வைப்பவன்

 

கணியன்பூங்குன்றனுக்கு

பாடம் கற்பிக்கும் அளவுக்கு

அறிவுச் செருக்கு உடையவன்

 

முதலைகள் வாழும் காயலில்

அக்கரைக்கு நீந்தும் அளவுக்கு

உயிர்பயம் அற்றவன்

 

பெண்களை விரும்பும் ஊரில்

பெண்களே விரும்பும்

பேரழகன் அவன்

 

நான் கண்டு கண்டு

எப்போதும் வியக்கும் ஒருவன்

 

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்

 

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம் ‘தெர்சு உசாலா’. ரஷ்ய துருவப் பிரதேசத்தில் நில அளவைக்காக பயணம் மேற்கொள்ளும் கேப்டன் அர்சனேவுக்கு உதவியாளராக செல்கிறார் நாடோடி வேட்டையரான தெர்சு உசாலா. பயணத்தின்போது சந்திக்க நேரும் பல இன்னல்களிலிருந்து தன் அனுபவ ஞானத்தின் உதவியால் காப்பாற்றி உதவுகிறார் உசாலா. பயணத்தின் முடிவில் உசாலாவை தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடும்படி அழைக்கிறார் கேப்டன். வனவாசியான உசாலா அதை மறுத்துவிடுகிறார். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். இம்முறையும் அவரை பெரும் விபத்தொன்றிலிருந்து காப்பாற்றுகிறார் உசாலா. ஒரு துப்பாக்கியைப் பரிசாக கேட்டுப் பெறுகிறார். வனத்துக்குள் ஒரு சிறுத்தை அவரை கண்காணித்து தொடர்வதை கவனிக்கிறார். அது தன் வழியில் போகச் செய்வதற்கான வழிமுறைகளை முயல்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையில் துப்பாக்கியால் அதை சுட நேர்கிறது. குறி தவறிவிட சிறுத்தை காயத்துடன் தப்பிச் செல்கிறது. அபாயத்தை உணர்ந்த உசாலா கேப்டனுடன் நகரத்துக்கு வர ஒப்புக்கொள்கிறார். ஆனால், பெட்டிகள் போல் சுவர்களால் தடுக்கப்பட்ட வீடுகள் நிறைந்த நகர வாழ்க்கை அவருக்கு ஒத்து வருவதில்லை. திணறுகிறார். வனத்துக்கே திரும்ப நினைக்கிறார். இம்முறை உயர்ரக துப்பாக்கியை அவருக்கு பரிசாக அளிக்கிறார் கேப்டன். பார்வைத் திறன் குறைந்திருக்கும் உசாலா வெகுநாள் வனத்தில் பாதுகாப்பாக இருப்பது கடினம் என்று உணர்ந்திருக்கும் கேப்டனுக்கு அவரது மரணச் செய்தி வந்து சேர்கிறது. சிறுத்தையால் கொல்லப் பட்டிருக்கலாம் அல்லது அவரிடம் இருந்த துப்பாக்கிக்காகவும் கொலையுண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் உசாலா தான் விரும்பியபடி வனத்துக்குள்ளேயே உயிர் துறக்கிறார்.

எந்த அடிப்படை வசதிகளுமில்லாமல் வனத்துக்குள் வாழ்பவர்களை பார்க்கும்போது வியப்படைவதுண்டு. இவர்களால் எப்படி இந்த வனத்துக்குள் வாழ முடிகிறது என்று யோசிப்போம். வனத்தின் ஊடுபாதைகளை அவர்களின் பாதங்கள் அறியும். ஓசைகளின் மூலமும் வாசனைகளின் வழியாகவும் காட்டின் சலனங்களை அறிந்தவர்கள் அவர்கள்.

நகரம் அவர்களுக்கு நெருக்கடியின் கூடாரம். மாசடைந்த நிலமும் நீரும் காற்றும் கொண்ட நஞ்சுப் பிரதேசம். காலையில் எழுந்தது முதல் எல்லாவற்றுக்கும் பதற்றமும் அவசரமுமான நகர வாழ்க்கை அவர்களுக்கு ஒத்துவராதது.

அண்மையில் ஆந்திராவிலுள்ள அரக்கு வேலிக்கு செல்ல வாய்த்தது. கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரம். விசாகப்பட்டினத்திலிருந்து சாலை வழியாகவும் ரயில் மூலமாகவும் செல்ல முடியும். மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஓடைகளும் அருவிகளுமான இந்தப் பாதையில் பயணம் செய்வது நல்ல அனுபவம். ஆனால், பசுமையான மலைகளினூடே பயணம் செய்கையில் அங்கங்கே ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிந்தது. ராஜமுந்திரியிலிருந்து நேரடியாக விஜயநகரத்தை அடைவதற்கான பசுமை இருப்புப் பாதையை மலைகளினூடாக இடுகிறார்கள். இங்குள்ள பாக்ஸைட் கனிமத்துக்காகவே இந்தப் பாதை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. அரக்குப் பள்ளத்தாக்கில் ஏராளமான பழங்குடி வசிப்பிடங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காபி புகழ்பெற்றது. அரக்கு ஒரு சிற்றூர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவதால் சிற்றூரின் அடையாளங்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பயணிகள் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகள் எங்கும் தொடர்கின்றன. வார இறுதி நாட்களில் வந்து குவியும் வாகனங்களின் எண்ணிக்கை மலைக்கச் செய்கிறது. எல்லாவிடங்களிலும் சாலையோரங்களில் காணப்படும் மூங்கில் பிரியாணிக் கடைகள் திணற வைக்கின்றன. இங்கு பழங்குடி காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பழங்குடிகளின் தனித்தன்மைகளை, அடையாளங்களை, வனம் சார்ந்த வாழ்க்கையை நவீன முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  

காட்சிக் குகையின் ஒரு பகுதியில் மரத்திலிருந்து ஈட்டியுடன் தாவும் இளைஞனின் உருவத்தைக் கண்டதும் அண்மையில் வாசித்திருந்த திவ்யா ஈசனின் கவிதை வரி உடனடியாக நினைவுக்கு வந்தது. ‘பெரும் வரைக்கட்டில் தனியாளாய் வள்ளியில் இறங்கி தேன் அருக்கும் உரம் மிகுந்தவன்.’ கண்காட்சிக் கூடத்தை சுற்றிவரும்போது அந்த வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவனுக்கே சொந்தமான காட்டில் அவனை ஒரு குகையில் சித்தரிப்பாக மாற்றியிருக்கும் அபத்தம் தொந்தரவு செய்தது.

 

படியேறவும் நடக்கவும் முடியாத நவீன வாழ்க்கை எல்லோரையும் நகரும் படிக்கட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏற்றி வேகமாய் நகர்த்துகிறது. உலகம் மொத்தமுமே நகரும் அதிவேகப் பாதையில் நகர்ந்து கண்மறைந்து போகிறது. மலையிலும் மரத்திலும் தாவித் திரிந்தவனுக்கு நகரும் படிக்கட்டில் கால் வைக்க பயம். நகரும் அந்தப் படிக்கட்டுகளில் எதில் எப்போது கால் வைக்கவேண்டும் என்ற தடுமாற்றம் முதன்முறையாக அதைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று. ஏற்கெனவே அதில் ஏறிச் சென்றவர் நம் கையைப் பிடித்துக்கொண்டாலும்கூட சந்தேகத்துடன்தான் கால்வைக்க நேரும். அந்த முதன்முறை பதற்றத்தை கடந்துவிட்டால் அதன் பின் படியேற கால்கள் வளையாது. எல்லா இடங்களிலும் நகரும் படிக்கட்டுகளையே தேடத் தோன்றும்.

நான் மேல்தளம் போனப் பிறகும்

அகலமான ஓடையைத் தாண்ட

எத்தனிப்பவனைப் போல்

என் மாமன்

எக்ஸ்லேட்டர் முன்பு நின்று

நிதானமாக

இந்த நவீன உலகத்தைத் தாண்டுவதை

மேலிருந்து மறுமுறைப் பார்த்தேன்.

 

இந்த இடத்தில் கவிதையின் காட்சிக் கோணம் மாறியிருப்பதை கவனிக்கலாம். தான் கண்டு கண்டு வியந்த ஒருவனை இப்போது அவள் மேலிருந்த காண்கிறாள். அப்போதும் அவன் நகரும் படிக்கட்டில் கால் வைத்து ஏறுவதில்லை. அகலமான ஓடையைத் தாண்ட எத்தனிப்பவனைப் போலவே இந்த நவீன உலகத்தையும் அவன் தாண்டுகிறான்.

நகரவாசிகள் நவீனத்தின் படிகளில் மேலேறிப் போய் வெகு காலத்துக்குப் பிறகு மலையும் காடுமே வாழ்வென்று இருந்தவர்கள் அச்சத்துடன் தயங்கி முதல் படியில் கால்வைக்கிறார்கள். இந்த இடைவெளி நகரத்துக்கும் மலை கிராமங்களுக்கும் உள்ள இடைவெளி மட்டுமல்ல. பழமைக்கும் நவீனத்துக்குமான இடைவெளி. இயற்கைக்கும் இயற்கை அல்லாததுக்குமான இடைவெளி.   

கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து என்று அடிப்படை வசதிகள் மலைக் கிராமங்களை எட்டுவதும் கல்வியின் மூலமாக அவர்கள் உயரங்களைத் தொடுவதும் பொருளாதார சமூக வளர்ச்சியின் முக்கியமான படிநிலை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், வணிக நோக்கில் மலை வளங்கள் சுரண்டப்படுவதும் அதற்கு விலையாக தரநேரும் சீரழிவுகளின் அபாயங்களைக் குறித்து கவலைகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

மரபும் பாரம்பரியமும் தனித்திறன்களும் இனி காட்சிக்கூடங்களின் செயற்கை சித்தரிப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கும் என்றால், மலைக்கும் அடிவாரத்துக்கும் இடையே நகரும் அந்த அதிவேகப் படிக்கட்டுகள் யாருக்கானவை?    

அதே நேரத்தில் இந்தப் பாய்ச்சல் இன்னொரு பெரிய மாற்றத்தை சாத்தியப்படுத்தியிருப்பதை கவிதையின் இறுதிக் கண்ணி கச்சிதமாக சுட்டியுள்ளது.

அவன் கையை

நான் பிடித்து நடப்பதை

மாற்றி

என் கையை

அவன் பிடித்து நடப்பது

இதுதான் முதல்முறை

வாழ்க சென்னையும் அதன் சுற்றமும்


பற்றியிருக்கும் கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அந்தப் பெண்ணுக்கு அளித்திருக்கும் உவகையினால் குதூகலத்தினால்தான் அந்த இறுதி வரி சாத்தியமாகியிருக்க வேண்டும். வளங்களைச் சுரண்டியிருப்பினும் வாழ்வை மாற்றியிருப்பினும் இயற்கை இல்லாது போனபோதும் கையை மாற்றிப் பற்றவைத்தமைக்காக எழுகிற வாழ்த்தும் அதில் தொனிக்கிற நம்பிக்கையும் இந்தக் கவிதையின் அழகை மேலும் அழுத்தமாக்கியுள்ளது.

0

( ஆவநாழி 50ஆம் இதழ், ஆகஸ்டு 25 )

மாற்றங்களும் மாறாததும் - ப.சிவகாமியின் முதல் இரு நாவல்கள்

  ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணா...