Thursday, 19 March 2026

புத்தனைத் தேடும் சித்தார்த்தன் - காந்த்ரூக் - சதீஷ் சப்பரிகே

 


0

பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலமே ஒரு மனிதனின் வாழ்க்கை. இந்த இரு எல்லைக்கும் உட்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அறுதியிட்டு வரையறுக்கும் கருவிகளோ குறைந்தபட்ச அளவீடுகளோ இதுவரை உருவாகவில்லை. கல்வி, வேலை, தொழில், வியாபாரம், பொருளாதார நிலை, குடும்பம், உறவுகள், சமூக அந்தஸ்து, ஜாதி, பதவி, அதிகாரம், அரசியல் என்று தனிப்பட்ட முறையிலும் பொதுவான நிலையிலும் ஒரு மனிதனை வகைப்படுத்த எண்ணற்ற அளவுகோல்கள் இருந்தபோதும் இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் வாழ்க்கையை அனைவரும் ஒப்புக்கொள்ளும்படி அளந்து, தகுதிப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. மேலும் இவை அனைத்துமே புறப் பார்வையிலிருந்து உருவாகியிருக்கும் அளவுகோல்களே. இவற்றுக்கு இணையாகவோ அல்லது மேலானதாகவோ குறிப்பிட்ட மனிதனின் அகத்துள் தனக்கேயான அளவுகோல்களும் தீர்மானங்களும் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கொண்டு தன்னைத் தானே அவன் எவ்வாறு மதிப்பிடுகிறான் என்பதும் முக்கியம். ஆனால், பலசமயங்களில் தன் அக மதிப்பீடுகளை ஒருவன் வெளிப்படையாக எவரிடமும் எதன்பொருட்டும் முற்றிலுமாக திறந்து காட்டுவதில்லை.

தனிப்பட்ட வாழ்விலும் வியாபாரத்திலும் தோல்வியைச் சந்திக்க நேரும் இளைஞன் சித்தார்த்தன் ஹொசமனே அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு, தன்னைத் தானே அறிந்துகொள்ளும் பொருட்டு இமயத்தில் கால்பதிக்கிறான். நவீன கணினித்துறையில் உலகையே வியக்க வைத்த ஒரு இளைஞன், யாருமே அடையாளம் காணாத ஒரு பிரதேசத்தில் தன்னிச்சையாக மலையேறுகிறான். கிட்டத்தட்ட ஒரு மாத காலப் பயணத்தில் அதுவரையிலான தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான். இதுவரை என்ன நடந்தது, எதை சாதித்தேன், எதை இழந்தேன், இனி என்ன செய்யப் போகிறேன் என்று அசைபோட்டபடியே அந்தப் பயணத்தில் தற்காலிகமாக வாய்க்கும் நபர்களுக்கு நடுவே இமயத்தின் சவாலான மலையேற்றப் பாதையில் ஏறி இறங்குகிறான். 420 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் சுருக்கம் இதுதான்.

இது சித்தார்த்தனின் கதையாக மட்டும் நின்றிருந்தால் ஏற்கெனவே எழுதப்பட்ட இதுபோன்ற நாவல்களில் ஒன்றாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், ‘காந்த்ருக்’ சித்தார்த்தனின் பயணத்தினூடே தன்னல நோக்குடனான ஒருவனின் வாழ்க்கையும் பொதுநல நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையும் எத்தகைய சவால்களை சந்திக்க நேர்கின்றன என்பதையும் இணைத்து விவாதித்துள்ளது. சமகால உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் அவற்றின் விளைவுகளைக் குறித்தும் தீவிரமாக அலசுகிறது. இந்த விவாதத்தின் மூலமாக தனிமனித வாழ்வுக்கும் உலகப் பொது வாழ்வுக்குமான கண்ணுக்குத் தெரியாத தொடர்பை, சமன்பாட்டைக் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளும் எழுகின்றன. தனிமனிதன் தன் லட்சியத்தை எட்டுவதும் எட்டாமலிருப்பதற்குமான தொலைவையும் சாத்தியத்தையும் நிர்ணயிப்பது உலகின் ஆற்றல்வாய்ந்த அதிகார வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் விளையாட்டுகளே என்பதையும் அழுத்தமாக விவரிக்கப்படுகிறது. அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி, நல்லுறவு, சர்வதேச ஒப்பந்தம் போன்ற சொல்லாடல்களின் பின்னணியில் ஆயுத வியாபாரம், செயற்கையாக உருவாக்கப்படும் போர் நெருக்கடிகள், மதத்தின் பேரிலான பிரிவினைகள், போதைப் பொருட்களின் சர்வதேச வலைப்பின்னல், மனிதவளங்களைக் கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்கள் என்று அனைத்து சாத்தியங்களின் ஆழங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உள்நாட்டுப்போர், இருநாடுகளுக்கு இடையிலான போர், இன ஒழிப்பு, இனத் தூய்மைவாதம், எண்ணெய் வளம், மனிதவளம் இவற்றின் பேரால் உலகெங்கும் உருவாக்கப்படும் அகதிகளைச் சுற்றி உலகெங்கும் உருவாகியிருக்கும் பெரும் அரசியலையும் அதன் பெயரிலான வியாபாரத்தையும் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும் இந்த நாவல் தெளிவாகப் பேசுகிறது. சிரியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறும் வன்முறைகளை சுட்டிக் காட்டுகிறது. இவற்றின் பெயரால் எந்தநேரமும் எங்கும் பொங்கியோடும் இரத்த வெள்ளத்தை சாட்சியாகக் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது.  

வெற்றிகரமான ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும் இளம் தொழிலதிபர் சித்தார்த் ஹொசமனே தன் தந்தையை இழந்து, தன் திறமையால் உருவாக்கிய நிறுவனத்தையும் இழந்து அதனால் ஏற்படும் மன வெறுமையின் காரணமாக தனிமையைத் தேடி இமயமலைக்கு வருகிறான். அவனது உள்ளத்துக்குள் ஆயிரம் கேள்விகள். அதுவரையிலான தனக்கு வாய்த்த உறவுகள், நண்பர்கள், வியாபாரத் தொடர்புகள், பெண்கள், உல்லாசங்கள் என அனைத்தைக் குறித்தும் யோசித்தபடி தன்னையே தான் திரும்பிப் பார்த்தபடி தனித்து அலைகிறான். அமெரிக்காவின் பெரும் போதைப் பொருள் மாஃபியாவின் பேத்தி ஷோஃபியா, தனது வேர்களைத் துறந்து அதன் ரத்தக் கறையை அகற்றும் பொருட்டு, அகதிகள் நலவாழ்வுக்காகப் போராட விரும்பி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக பதவியேற்கிறாள். பல்வேறு நாடுகளில் சந்திக்கும் வன்முறையையும் இரத்த வெள்ளத்தையும் பலிகளையும் கண்டு மனம் வெறுத்து பதவியைத் துறந்து இமயமலையில் ஒதுங்கி நிற்கிறாள். அவளுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். உலகெங்கும் அகதிகளாய் தவித்து நிற்கும் குழந்தைகளின் நிலைமைக்கு யார் காரணம், அதற்கான நிவாரணம் என்ன என்ற ஆழமான கேள்வி அவளையும் அனைத்திலிருந்தும் விலகியிருக்கச் செய்கிறது. சித்தார்த்தும் ஷோஃபியாவும் மலையேற்றப் பாதையில் சந்திக்கும்போது அவர்களுக்குள் உள்ள கேள்விகளும் இணைந்துகொள்கின்றன. மோதுகின்றன. தனிமனிதனின் தோல்வியும், உலகப் பொதுமைக்கான லட்சியத்தின் தோல்வியும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. ஒன்றையொன்று பூர்த்தி செய்ய விழைகின்றன.

இவ்வாறான இருபெரும் துருவங்களுக்கு இடையில் மலையேற்றப் பாதையில் உள்ள சிறிதும் பெரிதுமான ஊர்களில் மலையேறுபவர்கள் பசியாறி, இளைப்பாறுவதற்காக உருவாகியுள்ள சிறிய விடுதிகளின் பொறுப்பாளர்களின் வாழ்க்கையும் இணைந்து கொள்கின்றன. எங்கெங்கோ உள்ள மனிதர்களின் சிறிதும் பெரிதுமான லட்சியங்கள் அனைத்தும் இமயத்தின் மடியில் சிகரத்தில் ஒன்றுமில்லாமல் ஆகி, வாழ்வின் அடுத்த கணம் என்ன என்கிற சின்னஞ்சிறு புள்ளியில் குவிந்து விடுகின்றன.

இயற்கையை விதிகளை மீறும் மனித முயற்சிகளே வளர்ச்சி என கருதப்படுகிறது. அதை நோக்கியே அறிவியல் துறைகள் தொடர்ந்து முன்னகர்கின்றன. ஆனால், இந்த முயற்சிகளின் பலனாக மேம்படும் வாழ்வின் பொருள் என்ன என்பதைப் பற்றிய தெளிவை எந்த அறிவுத்துறையாலும் இதுவரை எட்ட முடியவில்லை. இயற்கையைச் சுரண்டுவதோடு அடுத்தவர்களை, அவர்களின் வளங்களைச் சுரண்டி அனைத்தின் மீதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அதிகாரமும் ஆற்றல்களும் பயன்படுத்தப் படுகின்றன. அதன் விளைவுதான் உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு போர்கள், எல்லைப் பிரச்சனைகள், இன ஒழிப்புச் சண்டைகள், வன்முறைகள், ரத்த வெள்ளங்கள், அணு ஆயுதக் குவிப்புகள். தொடர்ந்து மனிதன் தன் கீழ்மையின் எல்லைகளை விரித்துக் கொண்டே போவதைத்தான் அதிகாரத்தின் மூலமாக நிறுவியபடியே இருக்கிறான். ஆனால், உண்மையில் மனிதன் மேலும் மேலும் எவ்வாறு தன்னை மனிதனாக மேம்படுத்திக் கொள்கிறான் என்பதுதான் வாழ்க்கை என்பதையே இயற்கை தொடர்ந்து வலியுறுத்துகிறது. பேரிடர்களின் வழியாக அவனுக்கு வலியுறுத்தப் பார்க்கிறது. பனி மூடிய சிகரங்களைத் தொட்டிறங்கும் மனிதர்களும், அந்த மலைப் பகுதியில் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களும் இதைப் புரிந்துகொள்கிறார்கள், தற்காலிகமாகவேனும். இந்தப் புரிதல் அனைவருக்குமானதாக மாறுமா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்பியிருக்கிறது.

சதீஷ் சப்பரிகே தொழில்முறை பத்திரிகையாளர். அத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். சிறுகதைகள், பத்திகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என தொடர்ந்து எழுதி வருபவர். அவரது முதல் நாவலான ‘காந்த்ருக்’ கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் உலக நாவல் என்று குறிப்பிடும்படியான சர்வதேசக் களத்தையும் பின்னணிகளையும் கதை மையத்தையும் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபரின் வாழ்க்கைச் சுழல், இமயமலை அன்னபூர்ணா மலைப்பாதையின் மலையேற்ற அனுபவம், சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் அதிகாரியாக போர்ச் சூழலில் அகதிகளின் நிலையை மேம்படுத்த முனையும் அமெரிக்கப் பெண் அதிகாரியின் வாழ்க்கை என்ற மூன்று புள்ளிகளின் வழியாக விரிவான அனுபவத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மலையேற்ற நாட்களினூடாகவே இவ்விருவரின் கடந்த கால வாழ்க்கை நடப்புகளை நகர்த்தி காட்டியிருக்கும் புனைவுத்தி நாவலின் வாசிப்புத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. இமயமலையைக் களமாகக் கொண்ட நாவல் என்பதால் மலைகளைக் குறித்த வர்ணனைகளை, புறக்காட்சிகளைக் கொண்டு நிரப்பாமல் அங்குள்ள சிறிய ஊர்களில் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் பசியாறவுமான சிறிய விடுதிகளை நடத்தும் மனிதர்களைக் குறித்து எழுதுவதில் கூடுதல் அக்கறை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.நல்லதம்பியின் மொழியாக்க வேகம் வியக்கச் செய்கிறது. அடுத்தடுத்து நூல்கள் வெளியானபடியே உள்ளன. ‘காந்த்ருக்’ நாவலில் சதீஷ் சப்பரிகே கையாண்டிருக்கும் புனைவு மொழியின் தன்மையைப் புரிந்துகொண்டு தமிழிலும் அதேத் தன்மையுடன் மொழிபெயர்த்திருப்பதை உணர முடிகிறது.

இமயமலையில் உள்ள ஒரு சிறு நகரத்தின் பெயரே நாவலின் தலைப்பாக அமைந்திருக்கிறது. மனவெறுமையும் குழப்பங்களுமாக மலையேறத் தொடங்கும் சித்தார்த்தன், மலையேற்றத்தின்போது ஷோபியா வழியாக வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதல்களை அடைகிறான். காந்த்ருக்குக்கு வந்து சேரும்போது குழப்பங்கள் தீர்ந்து நம்பிக்கையுடன் மீளும் அவனுக்கு முன்னால் நான்கு புதிய சாத்தியங்கள், பாதைகள் தயாராக உள்ளன. காந்த்ருக் அவனது அடுத்த அடியை தீர்மானிக்கும் இடமாக அமைகிறது. காந்த்ருக்கில் தன்னை உணர்ந்த புத்தனாக சித்தார்த்தன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் நாவலின் முடிவு.

0

காந்த்ருக் – நாவல்

சதீஷ் சப்பரிகே

கன்னடத்திலிருந்து தமிழில் கே.நல்லதம்பி

காலச்சுவடு

டிசம்பர் 2025 422 பக்கங்கள் விலை ரூ.550

No comments:

Post a Comment

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...