பேரியற்கையின் முன் மனிதனும் ஓர்
உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான்.
என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவுமிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும்
மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால்,
உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து
அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக்
கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதை சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத்
துளைக்கிறான். காலம் இடம் சார்ந்திருக்கும் எல்லா எல்லைகளையும் கடந்து சாதனைகளைப் புரியத்
தொடர்ந்து முயல்கிறான். இயற்கையை மீற எத்தனிக்கும்போது அதனை சிதைக்கவும் சீரழிக்கவும்
தயங்குவதில்லை. இயற்கை முன்னிறுத்தும் எல்லைகளை அவன் தகர்த்தபடியே முன்னகர்கிறான்.
ஒன்றை அடைந்தவுடன் அதை அனுபவிக்க எண்ணாமல் அடுத்த இன்னொரு படிக்கு முயல்வதே அவனுடைய
இயல்பாகிறது. இத்தனையும் எதன் பொருட்டு? எது அவனைத் தொடர்ந்து மேலும் மேலும் என இயக்குகிறது?
ஏன் எதிலும் அவன் நிறைவுறுவதில்லை?
எல்லா உயிர்களுக்குள்ளும் அடிப்படையாக
அமைந்திருக்கும் ‘உயிரிச்சை‘யே அவனையும் இயக்குகிறது. ஆனால், அது மனிதனுக்குள் ஒரு
அணையா நெருப்பாக உக்கிரமாக எரிந்துகொண்டே உள்ளது. அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும்
பொருட்டே நாகரிகத்தின் வளர்ச்சிப்போக்கில் பல்வேறு விதிகளும் அமைப்புகளும் மனிதனால்
உருவாக்கப்பட்டன. ஆனால், சுயநலத்தின்பொருட்டு அவனே அந்த நெறிகளையும் அறங்களையும் சமூக
விதிகளையும் மீறிச் செல்வதற்கு யோசிப்பதேயில்லை.. உலகின் எல்லா தீமைகளுக்கும் காரணமாக
அதுவே அமைகிறது.
இதை அப்படியே கண்மூடித்தனமாக மேற்கொள்கிறானா
என்றால் அப்படியுமில்லை. உலகீய விழைவுகளுக்கான அடிப்படை எது? அதிலிருந்து எங்ஙனம் விடுபடுவது
என்பதைப் பற்றிய தொடர்ச்சியான சிந்தனையின் பலனாகவே பல்வேறு யோக நெறிகளும் தியான முறைகளும்
கண்டறியப்பட்டன. இச்சைகளால் அலைகழிக்கப்படும் மனத்தையும் உடலையும் கட்டுக்குள் கொண்டுவர
இந்நெறிகள் பயன்படுகின்றன.
எளிய வாழ்க்கைப் பின்னணியைக்கொண்ட
ஒரு சாதாரண சிறுவன், வாழ்வின் எல்லா நடப்பியல் அனுபவங்களையும், சிறிதும் பெரிதுமான
கசப்பும் களிப்புமான அன்றாடங்களையும் கடந்து கல்வியின் வழியாகவும் தொடர்ச்சியான தேடலின்
வழியாகவும் எதிலும் நிறைவுகொள்ளாத மனித மனத்தை உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்
பகுத்தறிய முயலும் பயணத்தைச் சொல்வதே இந்த நாவல்.
1970களில் தொடங்கும் இந்நாவல் வடசென்னையை
பின்புலமாகக்கொண்டுள்ளது. கீழ் மத்தியதர மக்களுடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களை, அடையாளங்களை,
தனிக்கூறுகளை அடுக்கிக் காட்டியபடியே விரிகிறது. தொகுப்பு வீடுகளிலும், தெருவிலும்,
பக்கத்து வீடுகளிலும் அன்றாடம் காணும் வாழ்க்கைச் சித்திரங்கள். பள்ளிகள், ஆசிரியர்கள்,
விளையாட்டுத் தோழர்கள், விந்தையான மனிதர்கள், வேடிக்கையான கதைகள். நோய்மை, மரணம், வரை
மீறும் ஆண் பெண் உறவுகள், அவற்றின் விளைவுகள், துயரம், கண்ணீர் என எல்லாவற்றையும் காட்டுகிறது.
வாலிபப் பருவத்தின் காதல் கனவுகள், சாகசங்கள், மனக்கோலங்கள், அபத்தங்களையும் விவரிக்கிறது.
உயிரூட்டமிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு மனித உறவுகளின் தீர்க்கவியலா ஆழங்களைத் தொட்டுச்
செல்கிறது.
ஒரு தனி மனிதனின் ஐம்பதாண்டு கால
வாழ்வைச் சொல்வதன் ஊடாக இந்த நாவல் சென்னையின் புறச் சூழலிலும் சமூக அமைப்பிலும் ஏற்பட்டிருக்கும்
வளர்ச்சிகளை, மாற்றங்களை, சிதைவுகளையும் நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது.
எளிமையான ஒரு நகரம் பெருநகரமாகும்போது எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கின்றன என்பதையும்
உணர்த்தியுள்ளது. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், பொருளாதாரம் ஆகியவற்றின்
வழியாக நகரம் வளர்ந்து நவீனமயமாகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வும் அன்றாடங்களும்
அந்த மாற்றங்களுக்கு கஏற்ப உருமாறுவதையும் நுட்பமாக புலப்படுத்துகிறது.
பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வளர்ந்து மண் வளத்தையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகள் அசுரவேகத்தில் குவிவதும், அதற்கு எதிர்நிலையில் சூழல் காப்பு குறித்த விழிப்புணர்வைத் தர முனையும் தன்னார்வக் குழுக்கள் தொடங்கப்பட்டு தொண்டாற்றுவதும் இணைச் சரடுகளாக நாவலில் அமைந்துள்ளன. அதேபோல, இன்னொரு சரடாக அமைந்திருப்பது நோய்களின் மூலத்தை கண்டறியும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து வியாபாரநோக்கை எட்டுவதும் அதன் எதிர்நிலையில் மனிதனின் உள்மன அறிதலைத் தரும் நோக்குடன் வெவ்வேறு தியான, யோக மார்க்கங்கள் பரவலாக உருவாவதும் அமைந்துள்ளது. இவ்வுலகின் ஆற்றல்கள் அனைத்தையும் சமநிலையுடன் பேணும் இயற்கையின் நடவடிக்கைகளோ இவை என யோசிக்க முடிகிறது.
எண்ணற்ற கதாபாத்திரங்கள், ஏராளமான
சம்பவங்கள் நாவலில் இடம்பெற்றிருந்தபோதும் வாழ்வின் திரண்ட சாரத்திலிருந்து அவை எழுதப்
பட்டிருப்பதால் உயிரூட்டத்துடன் அமைந்துள்ளன. ‘இந்த வாழ்வின் பொருள் என்ன?’ என்ற நாவலின் மைய கேள்விக்கு
இத்தனை கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வெவ்வேறு கோணங்களில் அடிப்படைகளில் வலுசேர்க்கின்றன.
நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும்
மரணம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. மூப்படைந்தோரின் மரணங்கள், விபத்தினால் ஏற்படும்
அகால மரணங்கள், நோயுற்ற மரணங்கள், எதிர்பாரா மரணங்கள் என்று எண்ணற்ற சாவுகள். வாழ்வின்
அபத்தத்தை, நிலையாமையை, மெய்நிலையை உணர்த்தவே முனைகிறது மரணம். ஆனால், மனிதன் அதைக்
கடந்து மேற்செல்லவே முயல்கிறான். அறிவைக்கொண்டு அதன் எல்லைகளை மீறவே விழைகிறான். உடலை
இல்லாமல் ஆக்கும் மரணத்தை இயல்பாக அணுகும் முதிர்ச்சியை அடையவே மனத்தை அவன் பழக்க முற்படுகிறான்.
மரணத்தை மீறுவதன் வழியாக வாழ்வின் இருப்பை பொருள்கொண்டதாக மாற்ற ஆசைப்படுகிறான். இந்த
மோதல் நாவலின் இன்னொரு வலுவான சரடாக அமைந்திருக்கிறது.
கல்வியின் வழியாக ஒருவன் அடைய முடிகிற
வாழ்வு. அதன் போதாமை. எதிலும் நிறைவு கொள்ளாமல் நீளும் ஆழ்மனத் தேடல். முறியும் உறவுகள்.
மனிதர்களின் மீது நீங்காத நம்பிக்கை, பிற உயிர்களின் மீது உள்ளார்ந்து ஏற்படும் பரிவும்
கருணையும் என பல்வேறு ஆழங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவல் இயல்பான, சரளமான வாசிப்புத்
தன்மையை எங்குமே தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் விசாரங்கள், யோக
தியான அனுபவங்கள், சூழல் சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதும்போது
பொதுவாக அமையநேரும் செய்தி எழுத்துத் தன்மை
எங்குமே இடம்பெறவில்லை என்பது முக்கியமானது. கடந்த நாற்பதாண்டுகாலமாக இலக்கிய ஆக்கங்களின்
மொழியிலும் நடையிலும் சிறுபத்திரிகைகள் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான
தன்மையிலிருந்து விலகி நிற்பதே இந்த நாவலின் சிறப்பு. நாவலின் மொழியும் நடையும் மரபான
தமிழில் அமைந்தவை. அதேசமயத்தில் நெருக்கமான வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. நாவலின் பிற்பகுதியில்
எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களில் இவ்வாறான மொழியின் உச்சங்களை அனுபவிக்க முடியும்.
திருப்பதி குடைத் திருவிழா, ஆங்கிலோ
இந்திய வாழ்க்கை, எதிர்பாராது அமைந்த மாட்டு வண்டி பயணம், பெருமழையின்போதான அபாயகரமான
பேருந்து பயணம், பத்துநாள் மௌனம் அனுசரிக்கும் விபாஸனா தியானப் பயிற்சி, சிறுவர்களுடனான
ஆனைமலைப் பயணம், ஜே கேயின் வசந்த விஹாரின் சூழல், கொடைக்கானல் அஞ்சுவீடுக் காட்டுப்
பகுதியில் நேரும் அனுபவங்கள், காகங்களையும் மீன்களையும் உற்று நோக்குகையில் அடைய நேர்கிற
மன எழுச்சிகள் போன்ற அபாரமான தருணங்கள் நாவலுக்கு செறிவூட்டியுள்ளன. பாடம் சொல்லித்தரும்
தேவி அக்காவின் மீதான முதல் காதல், ஆராய்ச்சி மையத்தில் புவனாவுடனான காதலும் திருமணமும்
பிறகு முறிவும், ஷெரீனுடனான அடுத்த காதலும் திருமணமும் என்று ஜெர்ரியின் வாழ்வினூடாக
பெண் உறவுகள் நிலையின்மையுடன் இருந்தபோதும், எதிர்பாரா மரணங்களையும் ஏமாற்றங்களையும்
சரிவுகளையும் சந்திக்க நேர்ந்தபோதும் அவன் சமநிலை குலைவதில்லை. தன்னியல்பில் அவன் பிறருக்கு
உதவும் குணம்கொண்டவனாக, இசை, எழுத்து என கலைகளின் மீது ஆர்வம்மிக்கவனாக, உயிர்களின்
மீது பரிவுள்ளவனாக, இயற்கையை அதன் விந்தைகளை ரசிப்பவனாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான
அனுபவங்கள் அவனை நிதானப்படுத்துகின்றன. மேலும் பக்குவப்படுத்துகின்றன. வாழ்வை அதன்
போக்கில் ஏற்றுக்கொண்டு அகம் சார்ந்த அறிதலும் உயிர்களின் மீதான பரிவுமே முக்கியம்
என்ற நிலையை எட்டச் செய்கின்றன.
தொடக்கத்திலிருந்து சொல்லப்பட்ட
எண்ணற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அதன் சிக்கல்கள், துன்பங்கள், துரோகங்கள், தீர்வு
காணமுடியாத புதிர்களைக் கொண்ட ஆண் பெண் உறவுகள், சரிவுகள், ஏமாற்றங்கள், சூழல் சீர்கேடு,
நோய்மை, மரணங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் சிறிதும் பெரிதுமான பல்வேறு கேள்விகளுக்கும்
விசாரணைகளுக்கும், தீர்வுகாண முயலும் ஒற்றைக் கதாபாத்திரமாக ஜெர்ரி திரண்டு நிற்பதை
உணரும்போது நாவல் ஆழ்ந்த அமைதியுடன் நிறைவடைகிறது.
மனத்தை அறியவும் அதனைக் கட்டுப்படுத்தவுமான
பல்வேறு யோக, தியான மார்க்கங்கள் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாக பௌத்த தியான
முறை, அதன் பயிற்சிகளைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தமிழ் மெய்யியல்
இவ்வகையான அனைத்து தேடல்களுக்கான சூத்திரங்களையும் உள்ளடக்கியது என்பதைத் தொடர்ந்து
உதாரணங்களின் வழியாக சுட்டிக் காட்டுகிறது.
இந்த மனித வாழ்வை புரிந்துகொள்வதும்,
பிற அனைத்து உயிர்களையும் பெருங்கருணையுடன் அணுகுவதுமான மேலான நிலையை அடைவதே மானுட
இருப்பின் பொருளாக இருக்க முடியும் என்பதை ஒரு உயிரியலாளனாகவும் ஆழ்மன தியானத்தில்
உறைபவனாகவும் விலகி நின்று கண்டடைவதே இந்த நாவலின் சிறப்பு. செறிவான, மரபான தமிழ் நடையும்
மொழியும் இந் நோக்கத்திற்கு வலுசேர்த்துள்ளன. அகத்தையும் புறத்தையும் நுட்பமாக அணுகி
ஆராய்ந்து ஒன்றின் மீது மற்றது செலுத்தும் தாக்கங்களையும் உற்றறிந்து உயிரின் சாரத்தை
வரையறுக்க முயலும் முதன்மையான தன்வரலாற்று நூல் இதுவேயாகும்.
( தமிழினி, ஜுலை 2023 )
No comments:
Post a Comment