தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் இதழ்கள் வரையிலுமான நீண்ட பயணமும் தூரமும் பல்வேறு சவால்களையும் இடர்களையும் துயர்களையும் கடந்து வந்திருப்பது. கேளிக்கையும் விளம்பரமும் வியாபாரமும் மட்டுமே இலக்காகக் கொண்ட பெரும் வணிக இதழ்களுக்கு நடுவே தீவிர இலக்கியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்தச் சிறுபத்திரிகைகள் பிறந்து, காலூன்றி வளர்வதென்பது அத்தனை சுலபமான காரியமல்ல. இலட்சிய நோக்கு கொண்ட பலர் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தனர். நிச்சயமாக திரும்பி வரப்போவதில்லை என்பது தெரிந்தும் தங்கள் கைபணம் மொத்தத்தையும் இதற்கென செலவு செய்தனர். இதழ்கள் சில ஒன்றிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உற்சாகத்துடன் வெளியாயின. இன்னும் சில ஒன்றிரண்டு இதழ்களுடன் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டன. வேறு சில இதழ்கள் அச்சகத்திலேயே முடங்கிப் போயின. இத்தகைய பலிகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகும் இந்த ஓட்டம் நிற்கவில்லை. அடுத்தடுத்து பலியிட யாரேனும் ஒருவர் தம் தலையைக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தனர். இப்போதும் சிலர் இருக்கின்றனர்.
வணிக எழுத்துக்கான மாற்றாக, போட்டியாக தீவிர இலக்கியத்துக்கான இதழ்களைத்
தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எழக் காரணமாக அமைந்தது உண்மையில் ஒரு பிரபலமான வணிக வார
இதழ்தான். 1933ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தது. நடுவர் கல்கி
கிருஷ்ணமூர்த்தி. அந்தப் போட்டியில் பி.எஸ்.ராமையா எழுதிய ‘மலரும் மணமும்’ இரண்டாம்
பரிசு பெற, றாலி எழுதியி ‘ஊமைச்சியின் காதல்’ முதல் பரிசு பெற்றது. போட்டிக்குப் பிறகு
றாலி ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவில் இணைய, பி.எஸ்.ராமையா, நின்றுபோயிருந்த மணிக்கொடி
இதழை மாதம் இருமுறை சிறுகதை இதழாகக் கொண்டு வர முடிவு செய்தார். விகடனுக்கும் கல்கிக்கும்
எதிராக பி.எஸ்.ராமையா எடுத்த இந்த முடிவுதான் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான
திருப்பமாக அமைந்தது. ஒருவகையில் தமிழில் சிறுபத்திரிகைகளுக்கான தொடக்கமாகவும் அமைந்தது.
இதன் பிறகு 1959இல் சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ பத்திரிகை தமிழ்ப் புதுக் கவிதைக்கான
தோற்றமாக விளங்கியது. அதன் பிறகு 1965ஆம் ஆண்டில் நா.பார்த்தசாரதியால் ஆரம்பிக்கப்பட்ட
‘தீபம்’ இதழ் 1987ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. அதே ஆண்டு ( 1965 ) தில்லியில் கஸ்தூரி ரங்கன் தொடங்கிய
‘கணையாழி’ இலக்கியத்துக்கு மட்டுமேயான இதழாக அல்லாது அரசியல், உலக நடப்புகள், பொருளாதாரம்
உள்ளிட்ட பிறதுறை சார்ந்த இதழாகவும் அமைந்திருந்தது. ஆனால், பின்னாளில் இலக்கியத்துக்கான
தீவிர இதழாகவே ‘கணையாழி’ அமைந்திருந்தது.
அற்ப ஆயுளையே கொண்டது என்றாலும் சில சிறுபத்திரிகைகள் சூழலில் நிகழ்த்திய
மாற்றங்கள், சலனங்களின் காரணமாகவே என்றென்றும் நினைக்கப்படுபவையாக இருக்கின்றன. இரண்டே
இதழ்கள் மட்டுமே வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழ் தமிழ் இலக்கியத்தில் நிகழ்த்திய
பெரும் மாற்றங்களை அறிவோம். ‘இனி’, ‘இங்கே இன்று’ ஆகிய இதழ்களையும் இந்தப் பட்டியலில்
சேர்த்துக் கொள்ளலாம். இலக்கியம், சமூகம், அரசியல், சூழலியல் உள்ளிட்ட துறைசார்ந்த
ஆழமான கட்டுரைகளையும் அழுத்தமான புனைகதைகளையும் கொண்டிருந்த கோவை ஞானியின் ‘நிகழ்’,
மேற்கத்திய இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு சார்ந்த பெரும் உலகை தமிழுக்குக் கொண்டு வந்த
பிரம்மராஜனின் ‘மீட்சி’, புனைவுகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள், நேர்காணல்கள் என்று
அனைத்து வகைமை சார்ந்தும் பங்களிப்புகளைக் கொண்டிருந்த மனோன்மணியின் ‘புது எழுத்து’,
தமிழில் புதுவகை எழுத்து என்கிற கருத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த கௌதம சித்தார்த்தனின்
‘உன்னதம்’ உள்ளிட்ட இதழ்கள் சிறுபத்திரிகைகளுக்கேயுரிய சவால்களை சந்தித்தபோதும் நீண்ட
காலம் தொடர்ந்து வெளியாயின. சிறுபத்திரிகையாகத் தொடங்கப்பட்டு மாத இதழாக மாற்றமடைந்து
இன்றும் இலக்கிய இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’
ஆகிய இதழ்கள் தமிழ் தீவிர இலக்கியச் சூழலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளன. இந்த
இதழ்களுக்கு முன்மாதிரியாக இருந்த கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’, பாவைச் சந்திரனின்
‘புதிய பார்வை’ ஆகிய இதழ்களையும் இந்த நேரத்தில் நினைவில்கொள்வது முக்கியம். வெகுஜன
இதழை இலக்கியத் தரத்துடன் கொண்டு வரமுடியும் என்பதை இந்த இதழ்கள் நிரூபித்துக் காட்டின.
இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் கொண்டு வந்த இலக்கிய மலர்களும், காலச்சுவடு சிறப்பு
மலரும் முக்கியமான முன்மாதிரிகள்.
இன்று தமிழில் முக்கியமான கவிஞர்களாகவும் புனைவாசிரியர்களாகவும் அறியப்படுகிற
எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் வழியாக அறிமுகமானவர்களே. தீவிர இலக்கியத்துக்கான
இலக்கணங்களையும் குணாம்சங்களையும் சிறுபத்திரிகைகளே வகுத்துத் தந்தன. இதில் எழுதுவதால்
நிச்சயமாக பணம் கிடைக்காது. புகழும் கிடைக்காது என்ற தெளிவுடனே எழுத முனைந்தனர். பெரும்
வாசகப் பரப்பைக் கொண்ட குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் போன்ற வணிக இதழ்களுக்கு
நடுவே தமக்கான வாசகர்களைக் கண்டடைய முடியும் என்ற உறுதியிருந்தது. எக் காலத்திலும்
இந்த எண்ணிக்கை அதிகபட்சம் முன்னூறு பேர்களைத் தாண்டாது என்றபோதும் சிந்தனைத் தளத்திலும்
கருத்தியல் உலகிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே அவர்களை
இத்தகைய ஒரு பலிபீடத்தில் தலையை வைக்கும் துணிவைத் தந்தது.
பொது மக்களின் சிந்தனையை முடமாக்கி எப்போதும் கேளிக்கையிலும் மலிவான
கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்கும்படியான வணிக இதழ்களின் போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து
சிறுபத்திரிகைகள் குரல்கொடுத்தன. கேளிக்கை நோக்கில் பக்கங்களை நிரப்புவதற்கு சினிமாவை
முதன்மை அம்சமாக கையிலெடுத்துக்கொண்ட அவற்றின் உத்தியை விமர்சித்தன. இலக்கியத்தின்
அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வணிகப் போக்கு கவிதை, கதை, நாவல், நாடகம் என்ற பெயரில்
தொடர்ந்து உற்பத்தி செய்து கொடுத்தவற்றையும் அவற்றை எழுதிக் குவித்த எழுத்தாளர்களையும்
தயவுதாட்சண்யமின்றி கிழித்தெறிந்தன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள்
உள்ளிட்டோரை காக்காய் பிடித்து சாகித்திய அகாதமி உள்ளிட்ட விருதுகளையும் பதவிகளையும்
அடைந்த வணிக எழுத்தாளர்களையும் அவர்களை கௌரவித்த அமைப்புகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின.
அகிலனுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை உதாரணமாகச்
சொல்லலாம்.
எந்தவிதமான பொருளாதார பலமோ பின்புலமோ இல்லாமல் தொடங்கப்பட்டவையே சிறுபத்திரிகைகள்.
ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஒரு சிறு குழு தங்களிடமிருக்கும் கைக் காசைப் போட்டு உற்சாகத்துடன்
தொடங்குவார்கள். அச்சுக்குப் போய் வேலை முடிந்து அச்சகத்துக்கு காசு தர முடியாமல் அப்படியே
முடங்கிப் போன சிற்றிதழ்களின் எண்ணிக்கை பல. இன்னும் சில இதழ்கள் அறிவிப்புடனே நின்றுபோயுள்ளன.
டிரெடில் முறையில் அச்சடிக்கும் அந்தக் காலத்தில் ஆயிரம் பிரதிகள் என்பது குறைந்தபட்ச
எண்ணிக்கை. அதிகபட்சம் முந்நூறு பேருக்கு அனுப்பலாம். சந்தா என்பது பெரும் கனவுதான்.
ஐம்பது சந்தாதாரர்கள் என்பதே பெரும் சாதனைதான். மணியார்டரில் தொகையை அனுப்பிவிட்டு
இதழ்கள் வராதபோது தொடர்ந்து கடிதம் எழுதும் தீவிர வாசகர்களும் இருந்தனர். சிறு பத்திரிகைகளின்
சவால்களையும் சிரமங்களையும் அறிந்த சில அபூர்வ மனிதர்கள் புதிய சிறுபத்திரிகைகளுக்கு
தொடர்ந்து சந்தா கட்டுவதை தங்கள் கடமையாகவே செய்து வந்தனர். இவ்வாறு ஒன்றும் இரண்டுமாய்
பத்தும் நூறுமாய் வெளியான மாத, காலாண்டு இதழ்களே சக்கரத்தின் சின்னஞ்சிறு பற்களாகி
தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்க உதவின.
உதகை பூ.வ.மணிகண்ணன் போன்று தீவிர இலக்கியத்துக்காக, சிறுபத்திரிகைக்காக
தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. புது எழுத்து மனோன்மணி, விருட்சம் அழகியசிங்கர்
போன்று வருமானத்தின், சேமிப்பின் பெரும்பகுதியை இதற்கெனவே செலவழித்தவர்களும் உண்டு.
தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ‘கனவு’ இதழை நடத்தி வருகிறார் சுப்ரபாரதிமணியன்.
அழகியசிங்கர் ‘விருட்சம்’ இதழையும் பல காலமாக வெளியிட்டு வருகிறார். ‘சங்கு’ என்ற ஒரு
சிறு இதழை வளவ.துரையன் நடத்தி வருகிறார். நிச்சயமாக இவர்களில் யாருக்கும் இந்த இதழ்களால்
ஒரு பைசா பயனிருக்காது. தங்கள் சேமிப்பிலிருந்துதான் செலவு செய்கிறார்கள்.
இளமைப் பருவத்தில் சினிமாவில் சாதிக்கும் கனவைக் கொண்டிருந்தார் சுதேசமித்திரன்.
அதற்காக சென்னையிலும் சில காலம் வாழ்ந்தார். அப்போது அறிமுகமாகிய சிறுபத்திரிகைகளின்
வழியாக இலக்கியமும் வாசிப்பும் தொடர்ந்தது. சிற்றிதழைத் தொடங்கவேண்டும் என்ற ஆர்வமும்.
கோவைக்கு வந்த பின் அந்த ஆர்வம் பெரிதானது. கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீபதி பத்மநாபாவுடன்
சேர்ந்து ‘ஆரண்யம்’ இதழைத் தொடங்கினார். பேருக்குத்தான் சிறுபத்திரிகையே தவிர அதன்
கனவுகள் மிகப் பெரியவை. அத்தகைய கனவுக்கு ஏற்பவே இதழும் அமைந்திருந்தது. சிறுபத்திரிகை
என்றால் சிறியதாக இருக்கவேண்டும், சின்னஞ்சிறிய எழுத்தில் குறைந்த பக்க எண்ணிக்கையுடன்
இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தது. வண்ண அட்டையுடன் பெரிய அளவில் எண்பத்து நான்கு
பக்கங்களுடன் ஆரண்யம் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ‘ஆரண்யம் என்கிற சிறுபத்திரிகை
இதன்மூலம் ஆரம்பிக்கப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சொன்னால் பெரும்பத்திரிகை ஆரம்பிக்கிற
அளவுக்கு இதை ஆரம்பிப்பவர்களிடம் பணம் இல்லை என்பதுதான்’. தனி இதழின் விலை ரூ.25.
சிறுபத்திரிகைக்கான பொதுவான அம்சங்களான கவிதைகள், சிறுகதைகள், மொழியாக்கங்கள்
அனைத்தும் ஆரண்யத்திலும் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஆரண்யம் சில விஷயங்களைத் தொடங்கி
வைத்தது. முக்கியமானது, மலையாளத் திரைக்கதைகளை தமிழில் தந்தது. பத்மராஜனின் ‘ஓரிடத்தில்
ஒரு பயில்வான்’, சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஷேக்ஸ்பியரின் காதல்’ ஆகிய திரைக்கதைகள்
வெளியாகின. இரா.முருகனின் ‘இடைப்பக்கம்’, நாஞ்சில்நாடனின் கட்டுரைத் தொடரும் இடம் பெற்றிருந்தன.
வித்தியாசமான முயற்சியாக சுதேசமித்திரனின் ‘கைலாசபுரம்’ நாவல் இடம்பெற்றது. இந்த நாவலின்
விசேஷ அம்சம் இது ஒரே ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட நாவல் என்பதுதான். பின்னாளில் ‘சிதம்பர
நினைவுகள்’ மூலமாக தமிழில் மிகவும் புகழ்பெற்ற பாலசந்திரன் சுள்ளிக்காடின் ‘சிவாஜி
கணேசன்’ கட்டுரை வெளிவந்தது.
இரண்டாம் இதழில் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருந்த யுவன் சந்திரசேகரின்
‘இருபத்து மூன்று காதல் கதைகள்’ பெரிய அளவில் கவனத்துக்கு உள்ளானது. அப்படியொரு பகுதியை
அதுவரையிலுமான சிறுபத்திரிகைகளில் இடம் பெறவில்லை. இந்த இதழில் தமிழ் சிறுபத்திரிகைகளில்
அதுவரையிலும் இடம் பெற்றிராத கமல்ஹாசன் என்றொரு கவிஞரின் கவிதையும் இடம் பெற்றிருந்தது.
மூன்றாவது இதழின் தலையங்கம் மிக முக்கியமானது. இதில் இடம் பெற்றிருந்த
இந்த வரிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மையாகியுள்ளன ‘ஒரு சிறு பத்திரிகை சகலராலும்
கவனிக்கப்பெறும்போதுதான் பெரும் பத்திரிகையாளர்கள் சமகால இலக்கியவாதிகளின் விலாசங்களை
விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.’
2000ஆம் ஆண்டு தொலைநோக்குடன் எழுதப்பட்ட இந்த வரிகள், பத்து ஆண்டுகளுக்குப்
பிறகு மெய்யானது. இரண்டாயிரத்துக்குப் பிறகு வணிக இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் சிறுபத்திரிகை
சார்ந்த வாசகர்களும் எழுத்தாளர்களும் இடம்பெறத் தொடங்கிய பின் வணிக இதழ்களிலும் மாற்றங்கள்
நிகழ்ந்தன. தீவிர இலக்கியத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களின் தொடர்கள் வணிக
இதழ்களில் வெளியாயின. நாஞ்சில் நாடனின் ‘கற்றதும் பெற்றதும்’, ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’,
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதன் பிறகு தீவிர
இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை கேட்டுப் பெற்று வெளியிட வேண்டிய நிலையை
எட்டின வணிகப் பத்திரிகைகள். வணிக எழுத்து, தீவிர எழுத்து என்ற பெரும் பிரிவினைக்கு
இடையிலிருந்த கோடு மங்கி மறைந்து போனது. இன்றைய நிலையில், விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்த
வரை வணிக இதழ்களுக்கும் தீவிர இலக்கிய சிறுபத்திரிகைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம்
இல்லை என்ற அளவுக்கு வாசக எண்ணிக்கை சுருங்கியுள்ளது. நவீன சமூக ஊடகங்களின் தாக்கம்
பத்திரிகைகளை மட்டுமல்லாது சினிமா, தொலைக்காட்சி தொடர்களையும் அசைத்துப் பார்த்துள்ளது.
பெரிய பத்திரிகைகளுக்கு இணையான தோற்றம், அளவு, உள்ளடக்கங்களுடன் சிறுபத்திரிகையை
நடத்த முடியும் என்பதை ‘ஆரண்யம்’ மூலமாக மெய்ப்பித்துக் காட்டினார் சுதேசமித்திரன்.
சிறுபத்திரிகைகளுக்கேயுரிய விதிப்படி நான்கு இதழ்களுடன் ஆரண்யம் நின்றுபோனது. ஆடிய
கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காதல்லவா. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம்
ஆண்டில் தன் தலையை தண்டவாளத்தில் கொடுக்க மீண்டும் முனைந்தார் சுதேசமித்திரன். இந்த
முறை வண்ணங்களில்லாமல் எளிமையாய் சிறிய அளவில் ஆனால் வித்தியாசமான உள்ளடக்கங்களோடு
இன்னொரு இதழைக் கொண்டு வரத் தீர்மானித்தார். இதழின் பெயர் ‘சாம்பல்’. பெயருக்கேற்ப
கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களின் கலவையாக மட்டுமேயிருந்த போதிலும் தோற்றத்திலும்
அமைப்பிலும் எழிலுடன் அமைந்திருந்தது.
புகைப்பட ஆல்பங்களை நடுப்பக்க கதைப்படங்களாக தனித்தன்மையுடன் வடிவமைத்திருந்தார்
சுதேசமித்திரன். நிமாய் கோஷ் எடுத்த சத்யஜித் ரேயின் படங்களுடன் கூடிய ‘ரேயின் நிலைக்கண்ணாடி’,
சோமபந்து வித்யாபதி கொழும்புவில் உருவாக்கிய சுவரோவியங்களைக் கொண்ட ‘நிர்வாணத்தைத்
தழுவும் வரை’, புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் படங்களுடனான ‘சு.ரா-சில பதிவுகள்’
ஆகிய கட்டுரைகளுடம் படங்களும் புதுமையுடன் அமைந்திருந்தன. அதன் பிறகு வேறு சில தமிழ்ச்
சிறுபத்திரிகைகளில் இவ்வாறான ஆல்பங்கள் வெளியாகியிருந்தபோதிலும் இதற்கான தொடக்கத்தைக்
கொடுத்தது ‘சாம்பல்’.
இதழின் உள்ளடக்கத்தை இரண்டு பக்கங்களில் வெகு அழகான பின்னணியுடன் அமைத்திருந்ததையும்
குறிப்பிடவேண்டும். அப்போது ஆங்கில இந்து மாதந்தோறும் வெளியிட்ட ‘folio’ என்ற இணைப்பிதழின் வடிவமைப்பை ஒட்டியிருந்த
இந்தப் பக்கமே இப்போது வெளியாகும் ‘ஆவநாழி’ உள்ளடக்கத்திலும் அமைந்திருக்கிறது.
‘தரு’ வெளியீடுகளாக அமைந்த ‘ஆரண்யம்’, ‘சாம்பல்’ என்ற அச்சிதழ்களுக்குப்
பிறகு உண்மையிலேயே சுதேசமித்திரன் வனவாசத்துக்குச் சென்றுவிட்டார் என்பதுபோல சில காலம்
சிறுபத்திரிகை உலகில் காணாமல் போனார். 2020ஆம் ஆண்டில் மீண்டும் வந்தார். இம்முறை அச்சிதழ்
அல்லாது பிடிஎஃப் வடிவிலான டிஜிட்டல் இதழ் என்று சொன்னார். ‘ஆவநாழி’ உதயமானது. இப்போது
ஆறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.
இன்றையச் சூழலைக் கருத்தில்கொண்டு, இளைய தலைமுறையினரின் ஊடகத்துக்கு
ஏற்ப ஒரு இதழை வடிவமைக்க எண்ணியபோதும் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல்
இருப்பதைக் குறிப்பிடவேண்டும். பிடிஎஃப் வடிவிலான இந்த மென்னிதழை அப்படியே வண்ணத்தில்
அச்சிட்டால் அழகிய ஒரு அச்சிதழைக் கையில் வைத்துக் கொள்ளமுடியும். ஆறு ஆண்டு காலத்தில்
முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளது ‘ஆவநாழி’. நிர்மால்யா மொழியாக்கம் செய்த மலையாள
‘பழங்குடிக் கவிதைகள்’, அரவிந்த் வடசேரி மொழிபெயர்த்திருக்கும் மலையாளச் சிறுகதைகள்,
அனுராதா கிருஷ்ணமூர்த்தி இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் சிறுகதைகள், ஓவியர்களுடனான
ஜீவாவின் நேர்காணல்கள், ஜீவாவின் சினிமாக் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகிய சிலவற்றைக்
குறிப்பிடலாம்.
ஆயுள் சந்தாதாரர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆயுள் ஆலோசகர், ஆயுள்
பங்களிப்பாளர் என்ற வகையில் நாஞ்சில்நாடனையும் ஜீவாவையும், சுதேசமித்திரன் கொண்டிருப்பது
பெருமைக்குரியது. அவருடைய எல்லாக் காரியங்களிலும் இவர்களின் ஆசியும் ஒத்துழைப்பும்
பெரும் துணையாக விளங்குகின்றன.
தீவிர இலக்கிய உலகம் என்பதே மிகச் சிறியது. ஆனால் அளப்பரிய பொறுப்பையும்
தீவிர உழைப்பையும் கோரும் ஒன்று. தொடர்ந்து இந்தச் சிறிய உலகில் இருப்பைத் தக்கவைத்துக்
கொள்ள ஏதேனுமொன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் என்று
ஏதேனுமொன்றில் தலைகாட்டிக் கொண்டே இருந்தால் மட்டுமே எழுத்தாளராக இருக்க முடியும்.
சுதேசமித்திரனுக்கு இன்னொரு வழியும் உள்ளது. கதைகள், நாவல்களை மட்டுமல்லாமல் இதழாசிரியராகவும்
இருப்பது அவருக்கு கூடுதலான ஒரு சாத்தியத்தை அளிக்கிறது. ஆனால், மொழியாக்கத்தைப்போலவே
இதழாசிரியராக இருப்பதும் நன்றியறிதல் இல்லாத வேலை. உழைப்புக்கும் நேரத்துக்குமான மதிப்பும்
இல்லை, ஊதியமும் இல்லை. இருந்தபோதும் சுதேசமித்திரன் தொடர்ந்து தன்னை இதில் ஈடுபடுத்திக்
கொண்டேயிருப்பதன் சாட்சிகள்தான் ஆரண்யமும் சாம்பலும் ஆவநாழியும். ஊற்றி வளர்க்கும்
தண்ணீரோ உரமோ இல்லாதபோதும், ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சி முதிர்ந்து நிற்கிறது தரு
வெளியீடு. அது மேலும் சில இலைகளையும் கிளைகளையும் மலர்களையும் கனிகளையும் கொடுக்கும்.
சுவைப்போரும் முறிப்போரும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாலே போதும், தரு மேலும் தளைக்கும்.
0
( கோவையிலிருந்து சுதேசமித்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஆவநாழி’
மென்னிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா (13.06.2026)வுக்காக எழுதப்பட்ட உரை )







