இந்தியாவின் எந்தவொரு மொழியிலும், தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ள
அந்த மொழியில் வெளியான சிற்றிதழ்களே உதவும். இந்தி இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தியாவில் ‘சிற்றிதழ் இயக்கம்’ முதன்முதலில் வங்காளத்தில் தொடங்கியது. கலை,
இலக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வங்காளம் எப்போதும் முன்னணியில்
இருப்பது. பல்வேறு
துறைகளிலும் மறுமலர்ச்சியின் தொடக்கம் பெங்காலில் அமைந்தது. சிற்றிதழ்
இயக்கத்தின் தொடக்கமும் வங்காளத்திலேயே நிகழ்ந்தது. 1923ஆம்
ஆண்டு வெளியான ‘கல்லோல்’ என்னும் இதழ் இந்தியாவில் வெளியான முதல் சிறுபத்திரிகை என்று
கருதப்படுகிறது. வங்கத்தில் சிறுபத்திரிகை இயக்கத்தின் முன்னோடிகளாக மோஹித்லால் மஜும்தார்
(1888-1952), காஜி நஸ்ருல் அஸ்லாம் (1899-1976), அசிந்திய குமார் சென்குப்தா
(1882-1922) ஆகிய மூவர் கருதப்படுகின்றனர். ‘கல்லோல்’ மூலமாக உருவான சிறுபத்திரிகை
மரபு வங்க இலக்கியத்தை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மொழிகளிலும் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது. இன்றும் வங்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன.
1955 முதல் 1975 வரையிலும் மராத்தி மொழியிலும்
சிறுபத்திரிகை இயக்கம் வலுவான செல்வாக்குடன் விளங்கியது. நவீனத்துவமும், தலித் மறுமலர்ச்சியும்
அதன் முக்கிய குறிக்கோள்களாக விளங்கின. 1960களின் தொடக்கத்தில் திலீப் சித்ரே, அருண்
கொலாத்கர், ரமேஷ் சமர்த் ஆகிய மூவரும் சேர்ந்து ‘சப்த’ (சொல் ) என்ற சிறுபத்திரிகையை
கொண்டு வந்தனர். இது முழுக்க படியெடுக்கப்பட்ட (
cyclostyled ) இதழாக வெளியானது. மராத்தி இலக்கியத்தை வளப்படுத்திய இன்னொரு சிறுபத்திரிகை
‘வாச்சா’.
இந்தி நவீனக் கவிதையின்
தொடக்கமாகக் கருதப்படும் பாரதேந்துவின்
காலத்தில் ( 1850 முதல் 1900 வரை
) இந்திக் கவிதைகளில் நவீனத்தன்மையைக் கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும்
முக்கியப் பங்காற்றியுள்ளன. பாரதேந்து ஆசிரியராக இருந்த ‘அரிச்சந்திரா’,
‘கவி பச்சன் சுதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின் ‘பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின் ‘இந்தி பிரதீப்’, பத்ரி
நாராயண் சவுத்ரியின் ‘ஆனந்த கடம்பினி’ ஆகியனவற்றைக்
குறிப்பிடலாம். அதன் பிறகு, திவ்வேதி யுகம் என்று அழைக்கப்படும் 1900 முதல் 1918 வரை சமயத்தில் ‘சரஸ்வதி’
இதழ் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரகதிவாத்
எனப்படும் முற்போக்குவாதம் ( 1936 முதல் 1943 வரை
) தலையெடுத்த சமயத்திலும் ‘ஜாகரன்’,
‘நயே சபேரா’, ‘நயே சேத்னா’ போன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன. 1943 – 50 ஆண்டு வரையிலான பிரயோக்வாத் போக்கினையும்
பிரதீக், கல்பனா, ஆலோச்சனா, நயீ கவிதா ஆகிய
பத்திரிகைகளே முன்னெடுத்தன. அதன் பிறகு நயி கவிதா
எனப்படும் புதுக்கவிதை காலத்தில் ( 1950 முதல் 1960 வரை
) ‘நயி பதே’, (ராம்ஸ்வரூப் சதுர்வேதி அண்ட் லக்ஷ்மிகாந்த்
வர்மா) ‘நயீ கவிதா’,( ஜகதீஷ் குப்தா .. ராம்ஸ் ) ‘நிகாஸ்’ (தரம்வீர் பாரதி லக்ஷ்மிகாந்த் வர்மா )ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின. நவீனக் கவிதையில் தோன்றிய பல்வேறு பிரிவுகளில்
ஒன்றான எதிர்க்கவிதை ( 1960க்கு பிறகு ) யை முன்வைத்து ‘அபிவ்யத்தி’, ‘அகவிதா’ ஆகிய
இரண்டு இதழ்கள் வெளியாயின. அதன் இன்னொரு தரப்பாக உருவான, மறுக்கப்பட்ட கவிதை வகைமையை
1969இல் கவிஞர் ராம் சுக்ல தன் ‘உத்கர்ஷ்’ எனும் இதழ் வழியாக உருவாக்கினார்.
பாரதேந்து அரிசந்திராவின் காலம்தொட்டு இந்திய விடுதலை வரைக்குமான காலத்தில் வெளியான
பெரும்பாலான பத்திரிகைகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் கொள்கை அடிப்படையுடனே வெளியாயின.
தேச பக்தி, விடுதலை, சமூக மேம்பாடு போன்ற அடிப்படைகளோடு தரமான இலக்கியத்தை மக்களுக்கு
அறிமுகப்படுத்துவதும் இவற்றின் நோக்கமாக இருந்தது. இவற்றில் பல பத்திரிகைகளும் பெரும்
வணிக நிறுவனங்களின் பொருளாதார பலத்தை நம்பி இருந்தபோதிலும் அவற்றின் நோக்கம் சமூக சீர்திருத்தம்,
இந்திய விடுதலை போன்ற பொதுநல நோக்குடனே இருந்தன. எந்த பொருளாதார ஆதாரமும் இல்லாமல்
தங்கள் தனிப்பட்ட உழைப்பை நம்பியே சில பத்திரிகைகளும் வெளியாயின. அவை தோற்றத்தில் பெரும்
பத்திரிகைகளைப் போல கண்ணைக் கவர்பவையாகவும் திருத்தமாகவும் இல்லாதபோதும் கனமான உள்ளடக்கத்துடன்
இருந்தன.
இந்திய விடுதலைக்குப்
பிறகு வணிக நோக்கிலும் ஆளும் அரசை ஆதரிக்கும் நோக்கிலும் வெளியான வணிகப் பத்திரிகைகள்
கேளிக்கை நோக்கிலான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருந்தன. மாற்றுச் சிந்தனைகளுக்கு
இடமளிக்கவில்லை. இத்தகையப் போக்கிற்கு மாற்றாக புதிய சிந்தனைகளுக்கும் புதிய இலக்கிய
வடிவங்களுக்கும் இடமளிக்கும் பத்திரிகையின் தேவையை உணர்ந்து எழுத்தாளர்கள் சிலர் சிறுபத்திரிகைகளைத்
தொடங்கினர். சிந்தனைத் தளத்திலும் இலக்கிய வெளியிலும் பெரும் இயக்கமாக நிலைகொண்ட சிறுபத்திரிகைகள்,
இந்தி நவீன இலக்கியத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களுக்கு களங்களாக அமைந்தன. நவீன கவிதை,
நவீனச் சிறுகதைகளின் வளர்ச்சிப் போக்கு, இடதுசாரி சிந்தனைகளுடனான எழுத்துகள், தலித்,
பெண்ணிய நோக்கிலான எழுத்துகள் போன்றவற்றை உறுதியுடன் முன்னெடுத்தவை சிறுபத்திரிகைகளே.
குறைவான வாசக எண்ணிக்கை, பொருளாதார ஆதரவின்மை போன்ற சவால்கள் இருந்தபோதும் இவற்றை நடத்தியவர்களின்
தீவிரமும் இலக்கியத்தின் மீதான சமரசமற்ற அக்கறையும்,
பொதுத் தளத்தின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கின.
இந்தியின் முதல் சிறுபத்திரிகை
எது என்பதைக் குறித்து இருவேறு கருத்துகள் உண்டு. 1957ஆம் ஆண்டு பனாரசில் இருந்து,
விஷ்ணுசந்திரா வெளியிட்ட ‘கவி’ என்னும் இதழே முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது.
இன்னொரு பக்கம், மார்கண்டேயாவை ஆசிரியராகக் கொண்டு 1968ஆம் ஆண்டு வெளியான ‘கதா’ இதழே முதலாவது என்றும் கூறுப்படுகிறது.
இவற்றைத் தொடர்ந்து, இந்தி இலக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஆற்றலுடனும்
சிறுபத்திரிகைகள் பல்வேறு எழுத்தாளர்களின் முயற்சியில் வெளியாயின. 1972இல் சப்யசாச்சி,
விர்ஜேந்திர கௌஷிக் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான ‘உத்ரார்த்’, 1975இல் ஞான்ரஞ்சன்
வெளியிட்ட ‘பஹல்’, மார்க்கண்டேய வெளியிட்ட ‘கதா’, 1974 முதல் 1977 வரை உத்பிராந்த்
ஆசிரியராக வெளியிட்ட ‘யுவா’, சந்திரபூஷண் திவாரியின் ‘வாம்’, கவுசல் கிஷோரின் ‘பரிபத்ர’,
ரமேஷ் உபாத்யாயவின் ‘கதன்’, பைரவ் பிரசாத் குப்தாவின் ‘சமாரம்ப’, சைலேஷ் மத்யானியின்
‘விகல்ப்’ ஆகிய இதழ்களை உதாரணங்களாகச் சுட்டலாம்.
இந்திக் கவிஞர்கள், புனைவெழுத்தாளர்கள்
பலரும் சிறுபத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள். ‘பாரத் பவன்’ அமைப்பை உருவாக்கிய
கவிஞர் அசோக் வாஜ்பாயி ‘சம்வேத்’, ‘பூர்வகிரகம்’, ‘பெஹசான்’, ‘சமாசா’, ‘பகுவசன்’ என
ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அக்ஞேயா
(1911-1987) இளவயது முதலே பத்திரிகைத் துறையில் ஆர்வம் காட்டியவர். சைனிக், பிரதீக்,
நயா பிரதீக் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். ‘நயி கவிதா’ என்ற இந்தி நவீனக்
கவிதை மரபு தோன்றுவதற்கு இவர் ஆசிரியராக இருந்த ‘சப்தக்’ என்ற இதழ் முக்கியமான காரணம்.
மங்களேஷ் தப்ரால் (1948 – 2020 ) மத்தியபிரதேசத்திலிருந்து, பாரத் பவன் அமைப்பின் சார்பாக
வெளியான ‘பூர்வகிரகம்’, ‘ஜன்சத்தா’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘ரவிவாரி’ ஆகிய இதழ்களின்
மூலம் பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். ஜெய்ஷங்கர் பிரசாத், சுமித்ராநந்தன்
பந்த், சூர்யகாந்த் திரிபாடி நிராலா, ராம்விலாஸ் சர்மா, யஷ்பால் போன்ற முக்கியமான எழுத்தாளர்கள்
தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து ஏதேனும் ஒரு சிறுபத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்தியின் புகழ்பெற்ற
நாவலாசிரியர் பிரேம்சந்த் பத்திரிகைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன்
வாழ்நாளில் பல பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியுள்ளார். 1930ஆம் ஆண்டு ‘ஹன்ஸ்’ என்ற
இலக்கிய அரசியல் இதழைத் தொடங்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்வதே
இதன் நோக்கம். ‘ஜாக்ரன்’ என்ற இன்னொரு இதழுக்கும் ஆசிரியராக விளங்கினார்.
இந்தியின் புகழ்பெற்ற
நாவல், நாடக ஆசிரியரான தரம்வீர் பாரதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தர்மயுக்’ பெரும்
வாசக வரவேற்பைப் பெற்ற ஒரு இதழ். பெனட் அண்ட் கொலமன் (டைம்ஸ் ஆஃப் இண்டியா) நிறுவனத்தின்
உரிமையாளர்களான சாகு ஜெயின், ரமா ஜெயின் ஆகிய இருவரும் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக
இந்த இதழைத் தொடங்கினர். இவர்களே பின்னர் ‘ஞானபீட’ விருதையும் நிறுவினர். வேறு சில
இதழ்களையும் இந்த நிறுவனம் வெளியிட்டது. ‘சாரிகா’ அதில் முக்கியமானது. கமலேஷ்வர் ஆசிரியராக
இருந்த இந்த இதழில் கவிதைகள், கதைகள் இடம்பெற்றன. அக்ஞேயாவை ஆசிரியராகக் கொண்டு ‘தினமன்’
என்ற அரசியல், பொருளாதார இதழ் வெளியானது. ‘தர்மயுக்’ போலவே, ‘சாரிகா’, ‘தினமன்’ ஆகிய
இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தியில் 200க்கும்
அதிகமான சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றில் சில குறிப்பிட்ட காலக் கெடுவில் வெளிவருபவையாகவும்
இன்னும் சில அவ்வப்போதும் வெளியாகின்றன. ராஜஸ்தானிலிருந்து வெளியாகும் ‘அராவலி உத்கோஷ்’
என்ற இதழ் பழங்குடியினரின் எழுத்துகளுக்கானது. ஜார்கண்டிலிருந்தும் இதுபோன்ற ஒரு இதழ்
வெளியாகிறது. பீகாரிலிருந்து அனந்த குமார் சிங்கை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஜனபத்’, உத்தரபிரதேசம்
பதாயூனிலிருந்து அமீர்சந்த் வைஸ்யாகை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கிருதியோர்’, கோரக்பூரிலிருந்து
வெளியாகும் ‘யாத்ரா’ (ஆசிரியர்-கணேஷ் பாண்டே), தில்லியிலிருந்து வெளிவரும் ‘துனியா
இன் தினோ(ன்)’ (ஆசிரியர்-சுதீர் சக்சேனா), இலகாபாத்திலிருந்து ‘அனஹத்’ ( ஆசிரியர்
– சந்தோஷ் சதுர்வேதி ), கொல்கொத்தாவிலிருந்து ‘லஹக்’ ( ஆசிரியர் – நிர்பய் தேவயாஷ்
), லக்னோவிலிருந்து ‘லோகோதய’ ( ஆசிரியர் – பாவனா மிஷ்ரா ) போன்ற இதழ்களும் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் முக்கிய
இலக்கிய அமைப்புகளும் இந்தியில் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. பாரதிய பாஷா பரிஷத்தின்
‘வாகார்த்’, ஞானபீட அமைப்பின் ‘ஞானோதய’, சாகித்திய அகாதமியின் ‘ஆஜ்கல்’, தேசியப் புத்தக
நிறுவனத்தின் ‘புஸ்தக் சன்ஸ்க்ருதி’ ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியாகின்றன.
2001ஆம் ஆண்டு ஜெய்பூரில்
நடந்த இந்திய சிறுபத்திரிகை மாநாட்டில், டிசம்பர் 09ஆம் தேதியை சிறுபத்திரிகை நாளாகக்
கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நவீன இந்தி இலக்கியத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்திய சில குறிப்பிடத்தக்க இதழ்களைப் பற்றி பார்க்கலாம்.
சரஸ்வதி
இந்தியின் முதல் பத்திரிகையாகக்
கருதப்படும் இந்த இதழ் 1900ஆம் பிப்ரவரி 4ஆம் நாள், வசந்த பஞ்சமி அன்று ஆண்டு அலகாபாத்திலிருந்து
வெளியானது. இதன் நிறுவனர் அலகாபாத் இண்டியன் பிரஸ்ஸின் உரிமையாளர் சிந்தாமணி கோஷ்
(1854-1928). ஆசிரியர் குழுவில் ஐவர் இருந்தனர். இந்தியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாவீர்
பிரசாத் திவேதி (1864-1938) 1903ஆம் ஆண்டு முதல் 1921 வரை இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று
நடத்தினார். இந்த இதழ் நவீன இந்திக் கவிதையிலும் உரைநடையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திக் கவிதையிலிருந்த உருதுவின் வலுவான தாக்கத்தை குறைத்து, கடிபோலி (வட இந்தியாவில்
அதிகமும் புழங்கியிருந்த பேச்சுவழக்கு ) மிகுந்த இந்தியைப் புழக்கத்துக்குக் கொண்டு
வந்தது. அதேபோல, பெர்சிய மொழியின் பாதிப்பைக் கொண்டிருந்த இந்தி உரைநடையை சமஸ்கிருத
சாயல்கொண்ட உரைநடையாக மாற்றுவதிலும் முனைப்பு காட்டியது. ‘கிரவுன்’ அளவில் நான்கு அணா
விலையில் இது வெளியானபோது, விலை அதிகம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. தரமான பொருளுக்கு
சற்று விலை கூடுதலாகத்தான் இருக்கும் என்று கூறி விலையை குறைக்க மறுத்துவிட்டார் சிந்தாமணி
கோஷ். அரசியல், பொருளாதார அழுத்தங்களுக்காக இதழின் உள்ளடக்கத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை.
1920வரை இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய இதழ், அதன் பிறகு சமூக பொருளாதார
அம்சங்களையும் சேர்க்க நேர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளில்
இந்தி இலக்கியத்தில் இந்த இதழ் செலுத்திய செல்வாக்கு கணிசமானது. பிரேம்சந்த், மைதிலி
சரண் குப்தா, சூர்ய காந்த் திரிபாடி நிராலா உள்ளிட்ட இந்தியின் முன்னோடி எழுத்தாளர்களின்
எழுத்துகள் இந்த இதழில் வெளியாயின. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் (‘அகாயிகா’ என்றே
அப்போது அழைக்கப்பட்டன ), தொடர்கதைகள், பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் ஆகிய
அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. உயரிய தரத்திலான புகைப்படங்களும், ராஜா ரவிவர்மா வரைந்த
ஓவியங்களும் வெளிவந்தன.
எண்பதாண்டு காலப் பயணத்துக்குப்
பிறகு, பொருளாதாரக் காரணங்களால் 1980ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த இதழ், மீண்டும்
2020ஆம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியில் ‘சரஸ்வதி’
ஒரு முக்கியமான மைல் கல்லாக விளங்குகிறது.
2
ஹன்ஸ்
‘நாவல் பேரரசர்’ என்று
அழைக்கப்படுகிற பிரேம்சந்தால் 1930ஆம் ஆண்டு வாரணாசியில் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்றும்
வெளியாகிறது. இதன் தொடக்க கால ஆசிரியர் குழுவில் காந்தியும், கே.எம்.முன்ஷியும் இடம்
பெற்றிருந்தனர். விடுதலைக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதும்
சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்புவதுமே இதன் நோக்கம். அதே சமயத்தில், நல்ல இலக்கியத்தையும்
மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தது. அக்ஞேயாவின் சிறுகதைத் தொகுப்பை
வெளியிட்டது. 1936ஆம் ஆண்டில் பிரேம்சந்தின் மரணத்துக்குப் பின் அவருடைய மனைவியும்
இன்னும் சில நண்பர்களும் இதழை நடத்தினாலும், பொருளாதார இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில்
1956ஆம் ஆண்டு இதழ் நிறுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு ராஜேந்திர யாதவ் இந்த இதழைப் பொறுப்பேற்றுக்
கொண்டு நடத்தலானார். இப்போது இதன் ஆசிரியராக சஞ்சய் சஹால் உள்ளார்.
சமூக விடுதலை, இலக்கிய
மேம்பாடு உள்ளிட்ட பெரும் குறிக்கோள்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், காலப்போக்கில்
தனது நோக்கத்திலிருந்து விலகியபோது அதன் போக்கும் உள்ளடக்கமும் மாற்றத்துக்கு உள்ளானது.
வணிக சம்பிரதாயங்களுக்கு இடம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரேம்சந்த் இந்த இதழைத்
தொடங்கிய காலத்தில், சிறுபத்திரிகை என்ற வகைமை உருவாகியிருக்கவில்லை என்றாலும் அதன்
வடிவமும், உள்ளடக்கமும் அத்தகைய வகைமைக்கு உரியதாகவே இருந்தது. 1985ஆம் ஆண்டு ராஜேந்திர
யாதவ் ஆசிரியராகப் பொறுப்பேற்று மீண்டும் வெளியானது. 2013ஆம் ஆண்டு அவர் காலமாகும்
வரை, இந்த இதழ் இந்தி இலக்கியத்திலும் சிந்தனைத் தளத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திய சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையின் பயங்கர முகங்களை அடையாளம் கண்டு அவற்றைப்
பற்றி பொதுவெளியில் மக்களை விவாதிக்கச் செய்யும் கடினமான பணியை இந்த இதழ் மிகத் திறமையாகக்
கையாண்டது. பெண்ணியம், தலித்தியம் போன்ற புதிய கருத்தாக்கங்களை உரத்த குரலில் ‘ஹன்ஸ்’
முன்னெடுத்தது. இதன் மூலம் இந்தி இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால், 2000க்குப் பிறகு இந்த இதழின் போக்கு முற்றிலும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்றும் தீவிர சிந்தனை சார்ந்த ஒரு இதழாகக்
கருதப்பட்டபோதும், ‘ஹன்ஸ்’ இதழை ஒரு சிறுபத்திரிகையாகக் கருத முடியாது.
இன்றும் தரமான சிறுகதைகள்,
கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்களுடன் மாத இதழாக அச்சிலும், இணையத்திலும் வெளியாகிறது.
சந்தா செலுத்தியே வாசிக்க முடியும். இதன் சிறப்பிதழ்களின் பிடிஎஃப் வடிவிலும் வாசிக்கும்
வசதி உள்ளது.
3
சாரிகா
இந்தி பத்திரிகை வரலாற்றில்
நூற்றாண்டைக் கடந்த இன்னுமொரு இதழ். இந்தியின் புகழ்பெற்ற சிறுகதையாளர் கமலேஷ்வர் இதன்
ஆசிரியராக இருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா இதனை வெளியிடுகிறது. இந்தியின் ‘நயி கஹானி’
இயக்கத்துக்கு இந்த இதழின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஜிதேந்திர பாட்டியா, அபிமன்யு
அனந்த், மாலதி ஜோஷி என புதிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியது. பீஷ்ம
சஹானி, ஸ்ரீலால் சுக்ல உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள்.
1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின்
போது பல சிக்கல்களுக்கும் தணிக்கைக்கும் உட்பட்டது இந்த இதழ். கமலேஷ்வருக்குப் பிறகு
எழுத்தாளர் கன்கையா லால் நந்தன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
1981, டிசம்பர் இதழ்
தஸ்தாவெஸ்கி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. குற்றமும் தண்டனையும் நாவலின் ஒரு பகுதி,
அசடன், வெண்ணிற இரவுகள், அல்யோஷா, ஒரு வினோத மனிதனின் கனவு உள்ளிட்ட புனைவுகளும், நானும்
என் பதிப்பாளர்களும் என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. தஸ்தாவெஸ்கியின் ஆக்கங்களைப்
பற்றிய கட்டுரைகள் பலவும் வெளியாகியுள்ளன. சாமர்செட் மாமின் கட்டுரையும், தஸ்தவெஸ்கியின்
கதைகளை அடிப்படையாக வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய கட்டுரையும் இதில் உண்டு.
1982 அக்டோபர் இதழ்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது.
ருட்யார்ட் கிளிபிங், தாகூர், அனடோல் பிரான்ஸ், பியர்ல் எஸ் பக், நட் ஹாம்ஸன், சின்க்ளியர்
லூயிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, சோல்செனிட்ஸின், ஜான் ஸ்டீன்பெக், ஐசக் பாஸவிச் சிங்கர், செல்மா
லெகர்காவ் உள்ளிட்டோரின் படைப்புகளும், அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருந்தன.
சிங்கர், டி.எஸ்.எலியட் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெற்றிருந்தன.
1986 அக்டோபர் இதழில்
பிரேம்சந்த், சீன எழுத்தாளர் லூ சூன் ஆகியோரைப் பற்றிய சிறப்பிதழாக அமைந்துள்ளது. இருவரது
புனைவுகளும், அவர்களது புனைவுலகைக் குறித்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
4
பிரதிலிபி
இந்தி ஆங்கிலம் ஆகிய
இரண்டு மொழிகளிலும் படைப்புகளை ஒருங்கே தரும் இந்த இருமொழி இதழ் ஏப்ரல் 2008இல் தொடங்கப்பட்டது.
13 இதழ்கள் வெளிவந்துள்ளன. உலகெங்கிலுமுள்ள 30க்கும் மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த
400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில்
கிரிராஜ் கிராது, ராகுல் சோனி, ஷிவ் குமார் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த இதழின் சுதந்திர சிறப்பிதழில்,
தமிழின் நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குட்டி ரேவதி, மாலதி மைத்ரி,
சல்மா, சுகிர்தராணி. இந்த இதழின் தமிழ் மொழிக்கான ஒருங்கிணைப்பாளர் மீனா கந்தசாமி.
இதே இதழில் ஸ்ரீலால்
சுக்லவின் தர்பாரி ராகம் நாவலை வைத்து ஹிமான்சு பாண்ட்யாவும் அமிதேஷ் குமாரும் இணைந்து
எழுதிய கட்டுரை உள்ளது. 1960களில் இந்தியாவின் ‘கிராம ராஜ்யம்’ குறித்த கற்பனையை சுக்கு
நூறாக உடைத்து, கிராமங்களில் நிலவும் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கிண்டல் கேலியுடன்
பகடியாக தோலுரித்துக் காட்டியது இந்த நாவல். 1947இல் அடைந்த சுதந்திரத்தைக் குறித்தும்
அதன் உண்மையான மதிப்பைக் குறித்தும் இலக்கியப் பரப்பில் வெளியான முதல் விமர்சனம் இந்த
நாவல். இந்திய விடுதலை இந்திய கிராமங்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் உண்மையில் என்ன
கொண்டு வந்து சேர்த்தது என்பதைப் பற்றிய உண்மையான சித்திரத்தை அளிக்கும் இந்த நாவலுக்கு
ஏன் உரிய மதிப்பும் கவனத்தையும் இந்திய இலக்கிய உலகம் தர மறுத்தது என்பதைக் குறித்து
இந்தக் கட்டுரை பேசுகிறது.
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இதழின் மையக் கருத்தாக
அமைந்திருந்தது ‘வரலாறும் இலக்கியமும்’. இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் இடையேயுள்ள
உறவு, எப்போது ஒரு வரலாற்றுப் பிரதி இலக்கியமாகவும், ஒரு இலக்கியப் பிரதி வரலாற்றின்
பகுதியாகவும் மாறுகிறது என்பதை விவாதத்துக்கு உட்படுத்தி புரிந்துகொள்ளும் வகையில்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
மொழியாக்கங்களைக் குறித்த
இரண்டாவது இதழில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஆழமான சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மூன்றாவது
இதழில் ‘பயங்கரவாதத்துக்கு முன்னும், மொழியாக்கங்களுக்கு முன்பும்’ என்ற பொருளிலும்,
ஐந்தாம் இதழ் இந்தி இலக்கிய உலகைக் குறித்தும் அமைந்துள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்களுடன்,
நேர்த்தியான வடிவமைப்பில் உருவாகியிருக்கும் இந்த இதழ் 2012ஆம் ஆண்டு வரையுமே வெளிவந்துள்ளது.
அதன் பிறகு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. இணையத்தில் வாசிக்கவும், அச்சுப் பிரதியைப்
பெற்றுக்கொள்ளவுமான வசதி உண்டு.
5
கிருத்யா
2005ஆம் ஆண்டு முதல்
மாதமொருமுறை வெளியாகும் இருமொழி கவிதை இதழ் ‘கிருத்யா’, கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான
ரதி சக்சேனாவை ஆசிரியராகக் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து வெளிவருகிறது. அழகிய வடிவமைப்பு,
நவீன ஓவியங்கள், தரமான உள்ளடக்கத்தோடு அமைந்திருக்கும் இதுவொரு இணைய இதழ். பி.டி.டெத்தன்,
சஞ்சு பால் ஆகியோரின் அழகிய ஓவியங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த
இதழ்.
‘சமகாலக் கவிதை’ பகுதியில்
இன்று இந்தியில் எழுதிவரும் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. குறிப்பிடத்தக்க
முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டிருக்கும்‘ஆசிரியருக்குப் பிடித்தவை’
என்ற பகுதி முக்கியமானது. உலகப் புகழ்பெற்ற
கவிஞர்களான எமிலி டிக்கின்ஸன், அப்துல்லா ஈஸா (பாலஸ்தீனம்), ஃபெதி சஸ்ஸி (அரபு), யூ
சியான் (சீனா), எரிக் லின்டர், அய்யப்ப பணிக்கர் உள்ளிட்டோரின் கவிதைகளின் மொழியாக்கங்களை
இங்கு வாசிக்க முடிகிறது. ‘நமது பெருங்கவிகள்’ என்ற பகுதியில் இந்தியாவிலும், உலக அளவிலுமான
செவ்வியல் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. ஒரு இதழில் ஏ.வி.சுப்ரமணியம் ‘சிருங்கார பத்யாவளி’ என்ற தலைப்பில்
சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்த இருநூறு தமிழ்ச்
சங்கப் பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்தொகைக் கவிதைகள் தரப்பட்டுள்ளன.
காளிதாஸரின் ரிது சம்ஹாரம், ஜெய் ஷங்கர் பிரசாத்தின் காமாயனி, வித்யாபதியின் சிருங்காரக்
கவிதைகள் ஆகியனவும் வெவ்வேறு இதழ்களில் உள்ளன. மீரா, பைரன், வில்யம் பட்ல் யேட்ஸ்,
இத்தாலியக் கவிஞர் செஸாரே பவேஸ், நார்விஜியன் கவிஞர் யேன் அஸ்கார் ஹன்சேன் ஆகியோரின்
கவிதைகளும் உண்டு.
6
வகார்த
கொல்கத்தாவில் உள்ள
‘பாரதிய பாஷா பரிசத்’ அமைப்பு வெளியிடும் இலக்கிய இதழ் ‘வகார்த’. 1995ஆம் ஆண்டிலிருந்து
வெளிவரும் இந்த இதழில் நவீன கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள்,
கட்டுரைகள், நாடகங்கள், நேர்காணல்கள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மாத இதழான
இது அச்சிலும், இணையத்திலும் கிடைக்கிறது.
‘தேசத்திலும், தேசத்துக்கு
வெளியிலும்’ என்ற பகுதியில் ஒரு இந்தியக் கவிஞர், ஒரு சர்வதேச கவிஞர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட
கவிதைகள் தரப்பட்டுள்ளன. சுப்ரமணிய பாரதி-ஹெர்மன் ஹெஸ்ஸே, மகாதேவி வர்மா-பாப்வோ நெரூதா,
சூர்யகாந்த் திரிபாதி நிராலா-ஜலாலுதீன் ரூமி, கேதார்நாத் சிங்-செஸ்லாவ் மிலோஸ் என்று
அமைந்திருக்கும் இந்தப் பகுதி கவனத்தைக் கவர்ந்தது.
‘உலக இலக்கியம்’ என்ற
பகுதியில் சர்வதேசக் கதைகள் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ் காஃப்காவின் ‘பட்டினிக் கலைஞன்’,
யூகி வாங் தியாகோவின் ‘கருப்புப் பறவை’ உள்ளிட்ட கதைகளும் ஜப்பானிய, அமெரிக்க கவிதைகளும்
இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு இதழிலும், குறிப்பிட்ட
தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்கும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ‘செயற்கை நுண்ணறிவும்
இலக்கியமும்’, ‘ஆதிவாசிகளிடையே ராம காதை’, ‘ஆட்சியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்குமான
உறவு ஏன் அறுபட்டது?’, ‘இந்திய ஞான மரபும் நவீன இந்திக் கவிதைகளும்’, ‘பத்திரிகையிலிருந்து
ஊடகத்துக்கான பயணம்’, ‘சித்த, நாத சம்பிரதாய இலக்கியம்’ ஆகியன இப் பகுதியில் விவாதிக்கப்பட்டிருக்கும்
சில தலைப்புகள்.
7
பஹல்
இந்தியின் புகழ்பெற்ற
சிறுகதை எழுத்தாளர் ஞான்ரஞ்சனை (1936) ஆசிரியராகக் கொண்டு 1973ஆம் ஆண்டு முதல் ஜபல்பூரிலிருந்து
வெளியாகும் இதழ். வெளியானது முதல் இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் முதன்மை இலக்கிய
இதழ்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த
இதழ் இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் சிறுபத்திரிகைகளுக்கான
சூழல் அவ்வளவு ஆதரவில்லாத சமயத்தில் ‘பஹல்’ வெளியானது. ஹரிசங்கர் பர்சாயி போன்ற மூத்த
எழுத்தாளர்களின் ஆதரவு இருந்தபோதிலும், நெருக்கடி நிலையின்போது உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவர் இந்த இதழை முளையிலேயே கிள்ளியெறிய முயன்றார். நெருக்கடி நிலைக்கு
எதிரான கருத்தைக் கொண்டிருந்த காரணத்தால், தரம்வீர் பாரதியின் ‘தர்மயுக்’, ராஜேந்திர
அவஸ்தியின் ‘காதம்பினி’ ஆகிய இதழ்களும் ‘பஹல்’ மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன.
எண்ணற்ற சிறுபத்திரிகைகள் நின்றுபோன அந்த சூழ்நிலையில் ‘பஹல்’ முனைப்புடன் தொடர்ந்து
வெளிவந்தது.
‘பஹல்’ எண்ணற்ற முக்கியமான
சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்த
புரட்சிக் கவிஞர் அவதார் சிங் பாஸ், பிரெஞ்சு கவிஞர் ஆர்தர் ராம்போ, செவ்விந்தியக்
கவிதைகள், பாசிஸ எதிர்ப்பு இலக்கியம், மார்க்ஸிய அழகியல், வால்டர் பெஞ்சமின், எட்வர்ட்
சயீத், சமகாலக் கவிதைகள், பாகிஸ்தானில் உருது எழுத்து, சிறுகதைச் சிறப்பிதழ், சமகால
சீன இலக்கியம், பங்களாதேஷ்-ஆப்பிரிக்க இலக்கிய சிறப்பிதழ் ஆகிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத்
தகுந்தவை.
சிறுகதைகள், கவிதைகள்,
நெடுங்கவிதைகள், புத்தக அறிமுகங்கள், கட்டுரைகள், கார்டூன்கள், மொழியாக்கங்கள் என கனமான
உள்ளடக்கங்களுடன் 47 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த ‘பஹல்’, ஏப்ரல் 2021இல் தனது
125வது இதழுடன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.
கடைசி இதழில், நிறுவனர்
ஞான்ரஞ்சனின் கட்டுரையில் ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார் ‘பஹல் இதழ் உடலுக்கு ஒப்பானது.
அதன் ஆயுள் எல்லைக்கு உட்பட்டது. அந்த உடலுக்கான முடிவு இப்போது வந்துவிட்டது. அந்த
முடிவை ஏற்றுக்கொள்வோம். பத்திரிகையின் ஆசிரியர் என்பவர் துறவியாகவும், சமையல்காரராகவும்,
தண்ணீர் சுமப்பவராகவும், கழுதையாகவும்கூட எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இப்படி
எல்லாவற்றையும் செய்யவேண்டியிருப்பதால் நல்ல உடல்நிலையில் இருப்பதும் முக்கியம். எங்களின்
இந்த முடிவு சுடுகாட்டில் அல்லாமல் வரலாற்றில் பதிவாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் அமரர்களும் இல்லை, இப்போது இறக்கவும் இல்லை.’
8
லஹர்
19ஆம் நூற்றாண்டின்
இந்தி இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான, முக்கியமான மாத இதழாக விளங்கியது. இதன் முதல் இதழ் ஜூலை 1957
இல்
புகழ்பெற்ற கவிஞர் பிரகாஷ் ஜெயினை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து அஜ்மேர் (ராஜஸ்தான்) நகரிலிருந்து வெளியான
‘லஹர்’ பொருளாதார சிக்கல்களின் காரணமாக 1974ஆம் ஆண்டு நின்றுபோனது. பிரகாஷ் ஜெயின் இந்த இதழை மீண்டும் கொண்டு வருவதில் மிகுந்த தீவிரம் காட்டியதை அடுத்து 1980 இல் இது மீண்டும்
வெளிவரலானது. சுமார் ஆறு
ஆண்டுகளுக்குப் பிறகு 1986 இல் மீண்டும்
பொருளாதார சிக்கல்களின் காரணமாக நின்றுபோனது.
25 ஆண்டுகள்
தொடர்ந்து எந்த சிக்கலுமின்றி வெளிவந்த ஒரே இலக்கிய
மாத இதழாக இதுவே. இன்றும் இந்தியில் எழுதப்படும
எந்தவொரு முக்கியமான ஆய்வு கட்டுரையும், ‘லஹர்’ இதழைக் குறிப்பிடாமல் முழுமை பெறாது. இந்தி மொழியின் தீவிரமான, அபாரமான எழுத்தாளர்களும்,
படைப்புகளும் ‘லஹர்’ இதழில் வெளியாகியுள்ளன.
இதன் ஆசிரியரான பிரகாஷ் ஜெயினுக்கு இந்த இதழ் வாழ்வாதாரமாக இருந்தபோதிலும், 25 ஆண்டுகளில் தரமற்ற படைப்புகள் ஒருபோதும்
வெளியிடப்படவில்லை. இதழின் தரத்திலும் நோக்கத்திலும் பிரகாஷ் ஜெயின் சமரசம்
செய்துகொள்ளவேயில்லை. இதில் பல சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன; அவற்றில் 1957 ஆம் ஆண்டின் கவிதை சிறப்பிதழ், 1958 ஆம் ஆண்டின் கதை
சிறப்பிதழ் மற்றும் உலகக் கவிதை சிறப்பிதழ் மிகவும் பிரபலமானவை. இதே வரிசையில்
நாகார்ஜுன், முக்திபோத்,
ராஜ்கமல் சௌதரி அவர்களைப் பற்றிய ‘லஹர்’ சிறப்பிதழ்களும் மிகவும் முக்கியமானவை.
0
பிற மொழிகளைப் போலவே
வணிக இதழ்களின் போக்குக்கு எதிராகவும், அவற்றால் கட்டமைக்கப்பட்ட கேளிக்கை மனநிலையை
உடைத்து தீவிர சிந்தனையை ஏற்படுத்துவதற்காகவே இந்தியிலும் சிற்றிதழ் இயக்கமும் முனைந்தது.
இதன் காரணமாக புதிய சிந்தனைகளும், எழுத்து முறைகளும், எழுத்தாளர்களும் தோன்றினர். இலக்கியத்தில்
ஒரு புத்தெழுச்சி உண்டானது. வெவ்வேறு காலகட்டங்களில் கவிதையிலும் சிறுகதையிலும் புதிய
போக்குகள் உருவாகி வலுப்பெற இவை காரணமாய் அமைந்தன. ஆனால், காலப்போக்கில் இந்த சிறுபத்திரிகைகளின்
போக்கும் நோக்கமும் மாற்றங்களுக்கு உட்பட்டன. தொடக்கத்திலிருந்த தீவிரத்தன்மை மட்டுப்பட்டு
வேறு திசைகளுக்கு அவை நகர்ந்தன. புதிய எழுத்தாளர்கள் உருவாயினர் என்றாலும் அவர்களில்
பெரும்பான்மையினர் இலக்கிய வளத்தில் காட்டிய தீவிரத்தைக் காட்டிலும் தனிப்பட்ட புகழுக்காக
எடுத்த முயற்சிகளே அதிகம். இன்று நவீன தொழில்நுட்ப அச்சு வசதிகளின் காரணமாக, பிறமொழியில்
உள்ளதுபோலவே, இந்தியிலும் இலக்கிய நோக்கை மட்டுமே கொண்ட மின்னிதழ்கள் வெளியாகின்றன.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து இத்தகைய இதழ்கள் வெளிவருகின்றன.
வட இந்தியா முழுக்க வாசகர்களை
கொண்டிருப்பதன் காரணமாக இந்தியில் வெளியாகும் சிறுபத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகம்.
எனவே, அவற்றின் முழுமையான பட்டியலைத் தருவது சவாலான ஒன்று. ‘கவிதா கோஷ்’ (இந்தி கவிதைகளுக்காகவே
உள்ள மிகப் பெரும் இணையதளம்), ‘பூர்வபஷ்’ போன்ற இணைய தளங்கள், இந்தியில் வெளியாகும்
இலக்கிய இதழ்களின் பட்டியலையும் தகவல்களையும் தருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள
இதழ்களைத் தவிர தத்பவ், அகார், பக்ஷதர், கதா, பரிகதா, சம்வேத், கதாக்ரம், அக்ஷர், உத்பாவனா,
ஏக் அவ்ர் அந்தரீப், சௌபால், லம்ஹி, அலாவ், ஷாகி, பாட், கவிதா விகாஸ், சீதல் வாணி,
ஜன்பத், சிந்தன் திசா ஆகிய சில இதழ்களையும் குறிப்பிடலாம்.
0
( இந்திய மொழிகளில் சிறுபத்திரிகைகள்
குறித்து, ஆகஸ்டு 2026இல் காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை. )



