Thursday, 17 September 2026

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

 



அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு வயது 94. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், மக்கள் வாழ்வில், அரசியலில், இலக்கியத்தில், கல்விப் புலத்தில் நடந்த மாற்றங்களுக்கான நேரடி சாட்சி.

க.ரத்னம் கோவையில் கீரணத்தம் கிராமத்தில் பிறந்தவர். அந்த கிராமத்துக்கு அருகில் ஒன்று குன்று உண்டு. இரத்தினகிரி என்ற அந்த குன்றுதான் இவருக்கு ரத்னம் என்று பெயரிடக் காரணமானது. புகழ்பெற்ற ‘கல்லும் மண்ணும்’ நாவல் இந்தக் குன்றின் பின்னணியில்தான் எழுதப்பட்டது.

கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அதிக நாட்கள் அவர் கிராமத்திலோ வீட்டிலோ வசிக்கவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே வீட்டை விட்டு வெளியே தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை. படித்து பட்டம் பெற்று பணியிலிருந்த காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வேலை பார்த்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோதிலிருந்தே வாழ்க்கை இழுத்துச் செல்லும் வழியில் சென்றிருக்கிறார். இடம் கிடைத்த பள்ளியிலும் கல்லூரியிலுமாக கிடைத்த பட்டப் பிரிவிலேயே சேர்ந்து படித்திருக்கிறார். இதுதான் வேண்டும் என்று திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.

அவருடைய தந்தை அவரை ஒரு பொறியாளராக்கவே விரும்பினார். தந்தையார் ஒரு ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரைப் படித்து ஆசிரியப் பயிற்சி பெற்று பணியிலிருந்தவர். ஆனால், அவர் விவசாயத்தை கவனிக்கவில்லை என்பதற்காக அப்பச்சி அவருடைய சான்றிதழைக் கிழித்துப் போட்டு ஏர்பிடிக்க வைத்தார். அந்த கோபத்தினாலோ என்னவோ தன் மகனை அவர் படிக்கவைக்க வேண்டுமென முடிவெடுத்தார். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியை குரும்பப்பாளையத்திலும்,.  ஆறு முதல் எட்டு வரை இடிகரை நடுநிலைப் பள்ளியிலும் ஒன்பது முதல் பனினொன்று வரை கோவை மைக்கேல்ஸ் பள்ளியிலும் படித்து முடித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட். இலக்கணம் வரலாறு உள்ளிட்ட நான்காவது பிரிவில் படித்தார்.  

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸை முடித்த கையோடு சில மாதங்களிலேயே 1955ஆம் ஆண்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அதன் பிறகு இராமநாதபுரம், கும்பகோணம், முசிறி, தஞ்சாவூர் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 



கும்பகோணத்தில் வசித்த காலம், அவரது வாழ்வில் பல முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய காலம். அப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்குகிறார். பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார். 1961 ஆம் ஆண்டு ‘தாத்தா எங்கே போகிறார்’ என்ற முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகிறது. தொடர்ந்து கதைகள் தீபம், குமுதம், குங்குமம், அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியாகின்றன.

1962ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ்ப் புத்தாண்டு மலரில் முத்திரை கதையாக ‘விளையாட்டு மைதானம்’ வெளிவருகிறது.  விகடனில் ஜெயகாந்தனின் கதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவந்த காலம் அது.

தொடர்ந்து கதைகள் வெளியாகும்போது அதைத் தொகுப்பாக்கிப் பார்க்கலாம் என்று ஆசை வருவது இயல்புதான். சென்னையில் முல்லை முத்தையாவின் தமிழகம் பதிப்பகம், பதிப்புத் தொகையாக ரூ.500ஐ பெற்றுக்கொண்டு அவரது முதல் வசன கவிதைத் தொகுப்பு ‘பேதை நெஞ்சம்’ வெளியிட்டது.  ஆனந்தவிகடனில் வெளியான 80 உருவகக் கதைகளைக் கொண்ட 80 பக்க நூலினையும் முல்லை முத்தையாவே வெளியிட்டார்.

‘நினைவின் நிழல்’ என்ற கடித வடிவிலான நாவலையும் பிறகு ‘கல்லும் மண்ணும்’ நாவலையும் வள்ளுவர் பண்ணை பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீடு தொடர்பாக வள்ளுவர் பண்ணை பழனியப்பன் அவர்களை அணுகியபோதுதான் அய்யாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இவர் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு பதிப்பாளர் பழனியப்பன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் அலமாரியிலிருந்து ஒரு நூலை எடுத்துத் தருகிறார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் அது. புலவர் கோவிந்தன் மொழிபெயர்த்தது. இந்த நூலை வெளியிட்டதில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் ஒரு சின்ன பிரச்சனை. முதல் இரண்டு அத்தியாயங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக முன்பே மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. அதை அப்படியே இந்த நூலில் பயன்படுத்தியிருப்பதுதான் விவகாரம். எனவே இதற்கு தீர்வாக முதல் இரண்டு அத்தியாங்களை வேறொருவரைக் கொண்டு புதிதாக மொழிபெயர்த்து சேர்க்கவேண்டும். ‘இந்த இரண்டு அத்தியாயங்களை நீங்கள் மொழிபெயர்த்துக் கொடுங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்பை நான் வெளியிடுகிறேன்’ என்கிறார் பழனியப்பன். வேறு வழியில்லாமல் ரத்னம் அய்யா ஒப்புக்கொள்கிறார்.

ஒரு எழுத்தாளனை மொழிபெயர்ப்பாளனாக மாற்றியது விதி.

ஒப்புக்கொண்டபடி, 12 கதைகளைக் கொண்ட தொகுப்பை ‘நினைவுப் புற்று’ என்ற பெயரில் வள்ளுவர் பண்ணை வெளியிட்டது. அதற்கு நூலக ஆணையும் கிடைக்கிறது. இந்த வகையில் பதிப்பாளர் அய்யாவுக்கு தரவேண்டிய தொகை ரூ.2400. ஆனால், பதிப்பாளர் புதிதாக வீடு கட்டி பண கஷ்டத்தில் இருந்தபடியால் அந்தக் காசை கொடுக்கவில்லை. புத்தக வெளியீட்டில் மறுபடியும் நஷ்டம்.

ஆனால், விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது.

வள்ளுவர் பண்ணை பழனியப்பன் தனது புதிய வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைப்பு விடுக்கிறார். பணத்தை அவர் கொடுக்கவில்லை என்பதை பொருட்டாக எண்ணாமல் விழாவுக்கு சென்னை செல்கிறார் ரத்னம் அய்யா. விழா முடிந்தவுடன் சென்னை மாநிலக் கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றும் நண்பர் சேதுவைக் காணச் செல்கிறார். கல்லூரிக்கு சென்ற நேரம் நண்பருக்கு பாடவேளை என்பதால் நூலகத்தில் காத்திருக்கும்படி சொல்கிறார். அலமாரியிலிருந்து நூல்களைப் பார்க்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு புத்தகம் அவரது கவனத்தைக் கவர்கிறது. எடுத்துப் பார்க்கிறார். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்குகிறார். நண்பர் சேது வகுப்பு முடிந்து வந்தவுடன் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுச் செல்லும்போது அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்துவிட்டு திருப்பித் தருவதாகச் சொல்கிறார். நண்பரும் சம்மதிக்கிறார். புத்தகத்துடன் விடுதி அறைக்குத் திரும்பியவர், இரவு பகலாக அந்த நூலைப் படித்து முடிக்கிறார்.

அந்தப் புத்தகம் பர்டன் ரோஜர் என்கிற அமெரிக்க அறிஞர் எழுதிய ‘ஹவ் டு வாட்ச் பேர்ட்ஸ்’. பறவை பார்ப்பவர்களுக்கான நூல். அய்யாவை பறவைகளின் உலகத்துக்கு உடனடியாக இழுத்துச் செல்கிறது அந்தப் புத்தகம். பறவை பார்ப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்களை அந்த நூல் பரிந்துரைக்கிறது. முதலாவது, ஒரு பைனாகுலர் வேண்டும். இரண்டாவது, பறவைகள் கையேடு. அன்று மதியமே பிராட்வேக்கு சென்று காமிராக்கள், பைனாகுலர்கள் விற்கும் கடையில் ஒரு பழைய பைனாகுலரை 120 ரூபாய் விலைக்கு வாங்குகிறார். குதிரைப் பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பைனாகுலர். அங்கிருந்து மவுண்ட் ரோடில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை. பறவைகள் கையேடுகளைத் தேடுகிறார். சாலிம் அலியின் ‘Handbook of Indian Birds’ என்ற நூலைப் பார்க்கிறார். உடனே வாங்கிக் கொள்கிறார். மாலையில் நண்பர் சேதுவைச் சந்தித்து இரவல் வாங்கிய புத்தகத்தை ஒப்படைக்கிறார். பைனாகுலரையும் சாலிம் அலியின் புதிய புத்தகத்தையும் பார்த்த நண்பர் சேது வியந்துபோய் சொல்கிறார் ‘ஒரே நாளில் இப்படி பைத்தியமாகிறவர்களை நான் பார்த்ததில்லை.’

கும்பகோணத்துக்கு திரும்பியவரிடம் பைனாகுலர் இருப்பதைக் கண்ட மனைவி கேட்கிறார் ‘ரேசுக்கு போனீங்களா?’. அந்தக் காலத்தில் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர்கள்தான் பைனாகுலர் வைத்திருப்பார்கள். ‘பறவைகள் பார்க்கப் போகிறேன். அதற்காக வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னவரை வியப்புடன் பார்த்துவிட்டு ‘மனுசனுக்குக் கிறுக்குப் புடிச்சிருச்சு’ என்று முணுமுணுக்கிறார்.

நண்பர் சேது சொன்ன பைத்தியக்காரத்தனமும், மனைவி குறிப்பிட்ட கிறுக்குத்தனமும் சேர்ந்துதான் தமிழகத்துக்கு அரிய ஒரு பறவையியல் நூலைத் தந்திருக்கிறது.

மறுநாள் விடிகாலையிலேயே கீழ் அணைக்கரைச் சாலையில் பைனாகுலருடன் பறவைப் பார்த்தலைத் தொடங்கினார். முதல் நாளிலேயே மஞ்சள் சிட்டு, கொண்டைக் குருவி என புதிய இரண்டு பறவைகளைப் பார்க்கிறார். கல்லூரிக்கு சென்று ஒரு குறிப்பேட்டில் தேதியிட்டு தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தார். பறவை பார்ப்பவர்கள் அனைவரிடமும் அப்படியொரு பட்டியல் இருக்கும். அதற்கு ‘வாழ்நாள் பட்டியல்’ Life List என்று பெயர். அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து பேணி வந்தார். கும்பகோணம், கொள்ளிடம், அணைக்கரை ஆகிய இடங்களிலும் ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய கடற்கரைகள், ராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த கண்மாய்கள், காஞ்சிரங்குளம் என்று பல்வேறு பகுதிகளில் சுற்றிப் பார்த்து தொடர்ந்து பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சேகரித்தார்.

இதன் பிறகு 1970களில் இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் பணியிலிருந்தபோது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் படங்களுடன்கூடிய பறவைகள் கையேடு ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காரியத்தை ஒப்புக்கொண்டு பதில் அனுப்பிய கையோடு மதுரைக்குச் சென்றார். பழைய கேமரா ஒன்றை மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். ஒரு தோளில் பைனாகுலரும் இன்னொரு தோளில் கேமராவுமாய் இரண்டு வருடங்கள் அலைந்தார். எடுத்த படங்களை அச்சிட்டுப் பார்த்தபோது அவருக்கு ஒன்று புரிந்தது, பைனாகுலர், கேமரா இரண்டையும் வைத்துக்கொண்டு பறவைகளைப் பார்ப்பதால் எதுவும் உருப்படியாக நடக்காது என்பது. எனவே, காமிராவை வாங்கிய அதே மூவாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 450 பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை படங்களோடு அனுப்பி வைத்தார். ‘தென்னிந்தியப் பறவைகள்’ என்ற பெயரில் 500 பக்க நூலை 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பாட நூல் கழகம் வெளியிட்டது. பறவையியலில், பறவைகள் பார்ப்போர்களுக்கென தமிழில் வெளியான முதல் நூல் இதுதான். அப்படியொரு நூல் அதுவரை தமிழில் எழுதப்படவில்லை. அதுவரையிலும் தமிழகத்தில் உள்ள பறவைகளைப் பற்றி இரண்டே புத்தகங்கள்தான், அதுவும் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தன. 


 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவை திருச்சி சாலையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களை சந்திக்கிறார் ரத்னம் அய்யா. ‘இப்போது அச்சில் இல்லாத உங்களுடைய பறவைகள் நூலை வண்ணப் படங்களுடன் பதிப்பிக்க விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். நல்லவொரு ஓவியரைக் கொண்டு பறவைகளின் படங்களை வரைந்து, வண்ணத்தில், உயர்தர தாளில் அச்சிடலாம் என்று யோசனை சொல்கிறார். உடனடியா சரவணகுமார் என்ற ஓவியரை அணுகி படம் வரைய ஏற்பாடு செய்கிறார். இதற்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை முன்பணமாக அளிக்கிறார் மெய்யப்பன்.

330 பறவைகளின் படங்கள் விபரங்களுடன் கெட்டி அட்டையுடன் அச்சிடப்பட்டது. ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் வெளியான அந்த நூலுக்கு தியோடர் பாஸ்கரன் முன்னுரை வழங்கியிருந்தார். இதன் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டு வெளியானது.

பறவை ஆர்வலர்கள், பறவைகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு கொள்ள உதவும் வகையில் அவற்றின் வடிவம், வண்ணம், வாழுமிடம், குரல், உணவு ஆகிய அனைத்து விபரங்களையும் பறவையியல் அறிவியலின் நெறியை ஒட்டி விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பும் உண்டு.

‘ஒரு புத்தகம் வாழ்க்கையையே மாற்றும்’ என்று சொல்வார்கள். க.ரத்னம் அவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது உண்மைதான். பர்டன் ரோஜரின் பறவை பார்த்தல் பற்றிய புத்தகம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பலனாக தமிழில் அருமையான ஒரு பறவையியல் நூல் கிடைத்தது. இப்போதும் இந்த விலைமதிப்பில்லாத நூல் மணிவாசகர் பதிப்பகத்தில் கிடைக்கிறது. உங்கள் எல்லோரின் வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.

 

வள்ளுவர் பண்ணைக்காக கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களை மொழிபெயர்க்க நேர்ந்ததே அவரை மொழிபெயர்ப்பை நோக்கித் திருப்பியது என்று சொன்னேன். ஆனால், தமிழ் இலக்கிய, மானுடவியல் வரலாற்றில் க.ரத்னம் அவர்களுக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்திருக்கும் இன்னொரு முக்கியமான நூல் உண்டு. அந்த நூலை அவர் மொழிபெயர்க்க காரணமாக அமைந்ததும் தற்செயலானதுதான். க.ரத்னம் அவர்களின் வார்த்தையில் சொல்லப்போனால் விபத்துதான்.

1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களுக்கு நல்கை தரப்படுவதை அறிந்து தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்வதாக தனது திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. காரணத்தை அறியும்பொருட்டு துணைவேந்தர் வ.அய்.சுப்ரமணியத்தை சந்திக்கிறார். தனது விண்ணப்பத்தைப் பற்றி கேட்டவுடன், துணைவேந்தர் ‘அந்த ஆய்வை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான காரியம் உள்ளது. நீங்கள் எட்கர் தர்ஸ்டனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்கிறார். அவரைப் பற்றியும் அவருடைய முக்கியமான நூலைப் பற்றியும் தெரியும் என்றவுடன், அவர் எழுதிய ஏழு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும், உடனே வேலையைத் தொடங்குங்கள் என்கிறார் துணைவேந்தர். நூலகத்திலிருந்து முதல் தொகுதியை எடுத்து இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றும் சொல்கிறார். உடனடியாக வேலையைத் தொடங்குகிறார் ரத்னம் அய்யா. இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தவுடன் அதைப் படித்துப் பார்த்து திருப்தியடைந்த துணைவேந்தர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மொழிபெயர்த்தவற்றை எடுத்துக் கொண்டு வந்து சந்தியுங்கள் என்கிறார். ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிவிட்டதே’ என்று எண்ணியவாறே வீட்டுக்கு வந்தவர் மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு மொழிபெயர்ப்பில் ஆழ்ந்து விடுகிறார்.

எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலேய அதிகாரி. 1885 முதல் 1908 வரை மெட்ராஸ் கவர்மென்ட் மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அப்போதிருந்த ஆங்கில அரசு அனைத்து மாகாணங்களும் தங்களது மாகாணத்தில் இனவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதற்கான பொறுப்பு அதிகாரியாக தர்ஸ்டன் நியமிக்கப்படுகிறார். இதற்காக அவர் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறார். பலரோடு கடிதங்கள் எழுதி தனது ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறார். வழக்காறுகள், நாட்டார் கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், அரசு ஆவணங்கள், மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைகள், பயணக் குறிப்புகள், நாளேடுகள் ஆகிய அனைத்திலிருந்தும் இனவியல் மற்றும் சாதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தொகுக்கிறார்.

இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடங்கி, தென் தமிழகத்தைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விபரங்கள், 2000க்கும் அதிகமான பக்கங்களுடன் ‘Castes and Tribes of South India’ என்ற பெயரில் ஏழு தொகுதிகளாக தொகுக்கப்பட்டு 1909ஆம் ஆண்டு வெளியாயின.

இந்த ஏழு தொகுதிகளின் சில பகுதிகளை மட்டும் சுருக்கித் தமிழில் வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையாபிள்ளை. ஆங்கிலேய அதிகாரி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை இப்போது தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன?

பழங்குடிகள், மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்தன. நடைமுறைப்படுத்தின. அவ்வாறான பணிகளுக்கு குறிப்பிட்ட மக்களைக் குறித்த முழு விபரங்களையும் வரலாற்றியல் சமூகவியல் இனவியல் நோக்கில் அறிந்துகொள்வது முக்கியம் என்பதைக் கருத்தில்கொண்டே உதகமண்டலத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மலையின மக்கள் ஆய்வு மையத்தை துணைவேந்தர் தொடங்கிவைத்தார். அதன் ஒரு பகுதியாகவே இந்த மொழியாக்கப் பணியும் அமைந்திருந்தது.

துணைவேந்தர் சொன்னபடி சுறுசுறுப்பாக முழுமூச்சுடன் மொழியாக்க வேலையில் ஈடுபடுகிறார்.

முதல் மூன்று தொகுதிகள் அச்சாகின்றன. துணைவேந்தரின் ஆறு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறுகிறார். நான்காவது தொகுதி அச்சில் இருக்க, ஐந்து ஆறாவது தொகுதிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ஏழு இன்னும் பாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்கிறார். அவரிடம் சென்று அச்சான தொகுதிகளைத் தந்து விபரங்களைத் தெரிவிக்கிறார். அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

முதல் மூன்று தொகுதிகள் 1986, 1987ஆம் ஆண்டுகளில் வெளியாயின. நான்காம் தொகுதி வெளியானது 1993ஆம் ஆண்டு. அதாவது ஆறு ஆண்டுகள் கழித்து. அத்துடன் சரி. மீதியிருந்த மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தும் அதை வெளியிடுவதில் அக்கறை காட்டப்படவில்லை. இதற்கிடையில் 1999ஆம் ஆண்டு அய்யா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

புதிய துணைவேந்தராக சுந்தரமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, இந்த நூலின் முக்கியத்துவத்தையும் ரத்னம் அவர்கள் மொழிபெயர்ப்புக்கு செலுத்திய உழைப்பையும் உணர்ந்து 2003ஆம் ஆண்டு ஐந்து, ஆறாம் தொகுதிகளை வெளியிட ஏற்பாடு செய்தார். கடைசி ஏழாவது தொகுதி சி.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஒரு மனிதர் 5 ஆண்டுகாலம் உழைத்து 4000க்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்த நூல்களை அச்சில் முழுமையாகக் காண 18 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமலிருந்த இந்த நூல் தொகுதிகள் இப்போது கிடைக்கின்றனவா என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஏழு தொகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்த பிறகு, ஒப்பந்தப்படி தனக்கான ஊதியத்தை வழங்கக் கோரி விண்ணப்பிக்கிறார் அய்யா. ஆங்கிலச் சொல் ஒன்றுக்கு பத்து பைசா என்பதுதான் ஊதியம். அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.21000. இதில் காகிதம், மை, தட்டச்சுக் கூலி ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஐந்தாண்டு உழைப்புக்கு அவருக்குக் கிடைத்த கூலி, வயலில் களை பிடுங்கும் தொழிலாளியின் ஒரு நாள் கூலியை விடக் குறைவு என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், தான் ஒப்புக்கொண்ட காரியத்தை பொறுப்புடன் நிறைவேற்றிக் கொடுத்த மனநிறைவு அவருக்கு உண்டு. அதிகாரிகள் அவரை அலட்சியப்படுத்தினாலும் அவர் தன் காரியத்தில் பின்வாங்கவில்லை. அச்சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய காரியத்தை மேற்கொண்டு மொழிபெயர்த்து முடித்து ஒப்படைத்துவிட்டார். அந்தப் பொறுப்பும் அவரது உழைப்பும்தான் தமிழில் மானுடவியலுக்கு அபாரமான ஒரு நூல் தொகுதியை சாத்தியப்படுத்தியுள்ளன. க.ரத்னம் அவர்களின் சாதனை நூலாக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் கொண்டாடப்படும்.

முழுமையான இலக்கியவாதியாக நிறைய கதைகளை எழுதவேண்டும் என்று நினைத்தார். ஆனால், மொழியாக்கப் பணி அவரது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டது என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற இந்த பெருநூல் தொகுதி அவருடைய சாதனைகளில் தலையாயது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இதுமட்டுமல்லாமல் எண்பது வயதுக்குப் பிறகு உலக இலக்கிய மேதைகளின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுகதை மேதை என்று கொண்டாடப்படும் ஆன்டன் செகாவின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ‘மனபிராந்தி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளின் நகரத்தார்’ என்ற தொகுப்பு மிகவும் சிக்கலானது. வரலாற்று பெருமை மிக்கது. அந்த சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்திருக்கிறார்.


அவரிடம் உள்ள புத்தக சேகரிப்பு இன்னொரு கிடைத்தற்கரிய புதையல். கும்பகோணத்தில் வசித்த காலத்திலிருந்தே அரிய பழைய பதிப்புகளைத் தேடிச் சேகரிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1940இல் வெளியான புதுமைப்பித்தன் கதைகள் முதல் பதிப்பு அவரிடம் உள்ளது. அதிலிருந்த அகல்யை கதை அவரை பெரிதும் ஈர்த்தது. அகல்யையை வைத்து அதுவரையில் எழுதப்பட்டவற்றைத் தேடித் தொகுத்தார். காவியத்தில், மேடையில், கதையில், கவிதையில் என்று பிரித்து விமர்சன நோக்கில் அவற்றின் நிறைகுறைகளைக் கட்டுரையாக்கினார். ‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்ற தலைப்பில் புத்தகமானது. 1998. வால்மீகி, வியாசர், கம்பன், கு.பா.ரா, ஏ.ஆர்.ராஜகோபால், மாடர்ன் தியேட்டர்ஸ் குழு, வ.ரா, பிரபஞ்சன், துவிஜேந்திரலால் ராய், புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், சிட்டி, டி.கே.சீனிவாசன், ச.து.சு.யோகியார், ந.பிச்சமூர்த்தி, ஞானி, சிற்பி, மஹாகவி, வாலி, தாகூர், முருகுசுந்தரம் ஆகியோரது படைப்புகள் அதில் உள்ளன.

சிறுகதை முன்னோடிகள் – புகழ்பெற்றிராத தொடர்ந்து கதைகள் எழுதாத ஆனால் சில நல்ல கதைகள் எழுதியவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்டது. நாரண துரைக்கண்ணன், சங்கர ராம், கி.சந்திரசேகரன், புரசு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் நீலகண்டன் 1949இல் ‘இசைவாணி’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

புதுமைப்பித்தன் மீது மிகப் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரது பழைய பதிப்புகளை சேகரித்து வைத்துள்ளார். ‘ஸ்டாலினுக்கும் தெரியும்’ என்ற தலைப்பிலான கட்டுரை நூலை 1991இல் பதிப்பித்திருக்கிறார்.

அவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியலிலிருந்து 1961ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 65 ஆண்டு காலத்தில் இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடியும். சிறுகதை, நாவல், கவிதை, மொழியாக்கம், விமர்சனம், கட்டுரை என்று எல்லா வகையான நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் மாமேதை தஸ்தாவெஸ்கியின் The Possessed என்ற 500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அவரிடம் பேசும்போது தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி உற்சாகத்துடன் கூறுவதைக் கேட்க முடியும்.

ஒரு மனிதன் வாழ்நாளில் செய்த சில காரியங்களின் வழியாகவே மதிக்கப்படுகிறான், நினைக்கப்படுகிறான். அந்த வாழ்க்கையும் பொருள்மிக்கதாகிறது. அந்த வகையில் க.ரத்னம் அவர்கள் 65 ஆண்டு காலம் தமிழ் மொழிக்கும் புனைவுக்கும் மொழியாக்கத்துக்கும் மானுடவியலுக்கும் பறவையியலுக்கும் தன்னுடைய எழுத்தின் மூலமாக அளித்திருக்கும் பங்களிப்பு என்பது அளப்பரியது. போற்றத்தக்கது. மதிக்கத்தக்கது. தன் பங்களிப்புகளின் வழியாக தமிழ் இலக்கியத்திலும், வரலாற்றிலும் தன்னுடைய பெயரை அவர் காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செதுக்கி வைத்துவிட்டார். இன்று அவருக்கு இங்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்பது மிகப் பொருத்தமானது, பெருமைமிக்கது. இதன் மூலம் இதுவரை அவரைப் பற்றி அறியாதவர்களும், இன்றைய தலைமுறையும் அவரையும் அவரது சாதனைகளையும் தெரிந்துகொள்வார்கள் என்றால் அதுவே இன்னும் மிகப் பெரிய விருதாக அமையும்.  

(கோவை கொடீசியா புத்தகத் திருவிழா 2026 இல், க.ரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஆற்றிய உரை )

 

 

 

 

 

                                                                    

 

 

சிறுகதை வரலாற்றில் காலச்சுவடு

 


0

தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு குறித்து எழுத்து பற்றியும் பெரும் கனவுகளைக் கொண்டிருந்தவர் சுந்தர ராமசாமி. தன் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டிருந்தார். தனது கனவுகளையும் எண்ணங்களையும் செயல்படுத்தும் முகமாக காலச்சுவடு இதழைத் தொடங்கினார். ஜனவரி 1988ஆம் ஆண்டு வெளியான முதல் இதழில் ‘கனவுகளும் காரியங்களும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கத்தின் முதல் வரி இது. ‘காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ் ஆகும்.

சுந்தர ராமசாமியில் தொடங்கப்பட்ட ’காலச்சுவடு’ காலாண்டிதழாக எட்டு இதழ்கள் வெளியாயின. 1992ஆம் ஆண்டில் அதிக பக்கங்களைக் கொண்ட சிறப்பிதழுடன் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.

தமிழ்ச் சிந்தனையிலும் இலக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இதழ் இவ்வாறு நிறுத்தப்பட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதழ் நிறுத்தப்பட்ட பின்புதான் அது இல்லாமல் போன வெற்றிடத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பும் முனைப்புடனும் தமிழில் இன்னுமொரு இலக்கியச் சிற்றிதழாக அல்லாமல் அனைத்து சிந்தனைத் தரப்பினருக்குமான முழுமையான ஒரு இதழாக உருவாக்கும் திட்டத்துடனும் காலச்சுவடு மீண்டும் வெளியானது. இந்த முறை இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன். அவரது முயற்சியால் அக்டோபர் 1994இல் இரு மாத இதழாக மீண்டும் வெளியாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் கண்ணனுடன் மனுஷ்யபுத்திரனும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றனர். பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் ஆதவன், தேவிபாரதி, அரவிந்தன், நஞ்சுண்டன், பெருமாள் முருகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இதன் பொறுப்பாசிரியராக கவிஞர் சுகுமாரன் செயலாற்றுகிறார். 2004ஆம் ஆண்டு முதல் மாத இதழாக வெளியாகத் தொடங்கி இப்போது முப்பது ஆண்டுகளை முழுமை செய்திருக்கிறது. ஆகஸ்டு 2026இல் 320வது இதழ் வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பத்திரிகை வரலாற்றில் இதுவொரு மைல்கல். மூன்று தலைமுறைகளைக் கடந்து அச்சுத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன ஊடகங்களின் பரிணாமம், வாசிப்பில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள் என அனைத்துவிதமான சவால்களையும் தாண்டி தனது தனித்தன்மையில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் காலச்சுவடு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது ஒரு பெரும் சாதனை. தமிழின் பெருமை. இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் இலக்கிய அரங்கில் காலச்சுவடு என்பது தமிழின் அடையாளமாக அறியப்படுவதற்கு பின்னால் இத்தனை நீண்டகால உழைப்பும் உறுதியான செயல்திறனுமே உள்ளன.

ஒரு மொழியில் முப்பது ஆண்டுகளாக வெளியாகும் ஒரு இதழ் அந்த மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். காலச்சுவடு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகையதொரு பெரும் பங்களிப்பைத் தந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளாக வெளிவந்திருக்கும் காலச்சுவட்டின் முந்நூறு இதழ்களையும் பார்க்கும் ஒருவரால் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

முப்பது ஆண்டுகளில், முந்நூறுக்கும் மேற்பட்ட இதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரை கதைக்களம், மொழி, வடிவம், உரையாடல்கள் போன்ற ஆதாரமான இலக்கணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கவனிக்க முடியும். தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கின் படிநிலைகளையும் அதற்கு பங்களித்திருக்கும் வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளர்களையும் அறிந்துகொள்ள முடியும்.

காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ள இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா அல்லது வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கதைகள் இவ்விதழில் வெளிவந்தனவா என்ற கேள்வி முக்கியமானது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்து கொள்வது. இதழ்களில் வெளியாகும் கதைகள் வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் வரலாற்றில் நிகழும் மாற்றங்கள் இதழ்களில் வெளிவரும் கதைகளையும் போதுமான அளவில் பாதிக்கும்.

1994ஆம் ஆண்டில் காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கிய காலம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு குழப்பமான சமயம். எத்தகைய பாதையில் அது முன்னகர வேண்டும் என்ற தெளிவில்லாத காலம். மாய யதார்த்தம், பின் நவீனத்துவம், புதுவகை எழுத்து முறை போன்ற இலக்கியம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகள் புனைவெழுத்தாளர்களிடையே பெரும் சவாலை முன்னிறுத்தியிருந்தன. யதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது என்று உரக்கச் சொல்லப்பட்டது. நேரடியான மொழியில் இயல்பாகக் கதை சொன்னால் அதை யாரும் சீண்ட மாட்டார்களோ என்ற வலுத்த சந்தேகம் எழுந்திருந்தது. எனவே, கதை சொல்லும் முறையில் புதிய பரிசோதனைகளைச் செய்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் எழுந்தது. புதிய வடிவிலும் புதிய மொழியிலும் கதைகள் எழுதப்பட்டன. அதுவரையிலும் யதார்த்தவாதக் கதைகளின் மூலம் தங்களுக்கென ஒரு புனைவுலகை உருவாக்கி வைத்திருந்த எழுத்தாளர்களுமேகூட இத்தகைய சூழலுக்கேற்ப புதிய பாணியில் கதைகளை எழுத வேண்டிய நிலை உருவானது.

சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வின் பாடுகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் கதைக் களங்கள் காலாவதியாகிவிட்டன என்ற எண்ணம், புதியக் கதைக் களங்களை நோக்கித் திரும்பச் செய்தது. இது கதை சொல்லும் உத்தியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

மீண்டும் இதழ் தொடங்கப்பட்ட காலத்தில் வெளியான கதைகளைக் கவனித்தால், தமிழ்ச் சிறுகதையில், குறிப்பிட்ட அந்தக் காலத்தில், பொதுவாக ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். தேவிபாரதி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், சி.மோகன், ரமேஷ் பிரேம், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்டோரின் கதைகள் வழக்கமான கதைப் பாணியில் அல்லாமல் புதிய வடிவிலும் மொழியிலும் அமைந்திருந்தன.

சொல்ல வரும் கதையை கச்சிதமான அளவில் நறுக்காக எழுதவேண்டிய கட்டாயமின்மையின் காரணமாக எழுதப்பட்ட நெடுங்கதைகளுக்கு காலச்சுவடு இடமளித்தது. குமாரசெல்வாவின் ‘குறுவெட்டி’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, பா.வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’ ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

வடிவிலும் உள்ளடக்கத்திலும் மொழியிலும் வழக்கமான, பழகிப்போன பாணியில் அல்லாமல் எஸ்.ராமகிருஷ்ணன், தேவி பாரதி, லக்ஷ்மி மணிவண்ணன், யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றோர் எழுதிய கதைகள் காலச்சுவடில் தொடர்ந்து வெளியாயின.

தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலந்தொட்டு தனக்கென ஒரு கதைப்பாணியை உருவாக்கியிருந்த சுந்தர ராமசாமியின் பிற்காலத்துக் கதைகளில், இச்சூழலின் தாக்கம் இருந்ததை கவனிக்க முடிகிறது.

காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கும் கதைகளின் பட்டியலைக் கொண்டு தமிழ்ச் சிறுகதையின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை அறிந்துகொள்ள முடியும். தமிழின் மூத்தத் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்களிலிருந்து இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரையிலும் காலச்சுவடு இதழுக்கு பங்களித்திருக்கிறார்கள். சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், அம்பை, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், வாஸந்தி உள்ளிட்ட மூத்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளும் இதழ்களில் வெளியாயியுள்ளன. அதேபோல அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சி.மோகன், சுப்ரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், தேவி பாரதி, பெருமாள் முருகன், இமையம், கௌதம சித்தார்த்தன், அரவிந்தன், உள்ளிட்டோரின் கதைகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளில் இடம்பெறும் அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி, சல்மா, என்.ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,  மனோஜ்குமார் ஆகியோரின் கதைகள் வெளிவந்துள்ளன.

தமிழ் நாவல்களின் எழுச்சி 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. பெரிதும் தனிநபர் வாழ்க்கை அனுபவம், சமூக நோக்கு சார்ந்தே அமைந்திருந்த தமிழ் நாவல்களில் புதிய களங்களுடன் புதிய வாழ்க்கையுடன் புதிய நாவல்கள் பிறந்தன. களம் காலம் வடிவம் மொழி என அனைத்திலும் புதிய முயற்சிகளுடன் நாவல்கள் எழுதப்பட்டன. அளவில் பெரிய நாவல்கள் பதிப்புத் தயக்கமின்றி வெளியாயின. இக் காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டபோதும் சிறுகதைத் தொகுப்புகள் வெளியானபோதும், சிறுகதைகளின் மீதான கவனமும் அக்கறையும் சற்றே மட்டுப்பட்டிருந்தன. ஆனால், இதனை ஈடுசெய்யும்விதமாக நவீன தொழில்நுட்பமும் கணினி அறிவியலும் சாத்தியமாக்கித் தந்த இணையவழி ஊடகங்கள், குறிப்பாக இணைய இதழ்கள், தமிழ்ச் சிறுகதைக்கு பெரும் ஒரு வாயிலைத் திறந்து கொடுத்தன. வெளிநாடுகளிலிருந்த எழுத்தாளர்களின் கதைகளை இணைய இதழ்களின் வழியாக உடனடியாக வாசிக்க முடிந்தது.  அத்துடன், கணினித் துறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பணியிலிருந்த இளைஞர்கள் சிறுகதைகளை எழுதலானார்கள். மலேசியா, சிங்கப்பூர், ஈழம் போன்று நமக்கு நன்கு அறிமுகமான அயலக நிலங்கள் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கதைகள் எழுதப்பட்டு வெளியாயின. இதன் மூலம் புதிய இளைஞர்கள் பலர் சிறுகதையாசிரியார்களாக அறிமுகமாயினர். துறைசார் எழுத்துகள் என்ற புதிய வகைமைக்கு இவர்கள் பங்களித்தனர்.

இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் அறிமுகமான தூயன், கார்த்திக் பாலசுப்ரமணியன், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், விஜய ராவணன், பாலகுமார் விஜயராமன், அனோஜன் பாலகிருஷ்ணன், சந்திரா, ஜா.தீபா, எஸ்.ஜே.வயலட், பா.திருச்செந்தாழை, சித்துராஜ் பொன்னுராஜ் ஆகியோர் காலச்சுவடில் எழுதிய கதைகளின் வழியாக தமிழ்ச் சிறுகதையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்துகொள்ள முடியும். தமிழில் அதுவரை எழுதப்படாமலிருந்த களங்களைக் கொண்டு சிறுகதைகள் இவர்களால் எழுதப்பட்டன. தன்பாலின உறவு குறித்த கதையான சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய ‘கடல்’, தன்பாலின ஈர்ப்பு, அன்னையின் மீதான் பிள்ளையின் ஈர்ப்பு ஆகியவற்றின் ஆழத்தை உணர்த்திய பொன்முகலியின் ‘அலர்’, கணினித்துறையில் பணியாற்றும் பெண்கள் சார்ந்த மாறுபட்ட பார்வையைக் கொண்ட கதையாக அமைந்திருந்த லாவண்யாவின் ‘பறத்தல்’. பெண்களின் உள்ளாடை சார்ந்த உளவியல் அடுக்குகளைப் பற்றி பேசிய சுஜா செல்லப்பனின் ‘அகலாது அணையாது’ ஆகிய கதைகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

தமிழ்ச் சிறுகதைக்கு பங்களித்திருக்கும் பெண் எழுத்தாளர்களின் ஒரு பெரும் நிரையை காலச்சுவடு கதைகளின் வரிசையில் பார்க்க முடிகிறது. அம்பை, வாஸந்தி, சல்மா, உமா மகேஸ்வரி, சந்திரா, லாவண்யா சுந்தர ராஜன், பொன்முகலி, அனார், ஐ.கிருத்திகா, அமுதா ஆர்த்தி, சுமதி ரூபன், லதா, சந்திரா ரவீந்திரன், ஜா.தீபா, சசிகலா பாபு, கலைச்செல்வி, பாத்திமா மஜீதா, பெருந்தேவி, எஸ்.ஜே.வயலட், சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ், ஹேமி கிருஷ், மாஜிதா, சவிதா, ச.மோகனப்ரியா என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்த காலகட்டத்தில் இளம் எழுத்தாளர்கள் சிலரை காலச்சுவடு அறிமுகப்படுத்தியுள்ளது. கே.என்.செந்தில், விஷால் ராஜா, பத்திநாதன், கல்யாணராமன், ஜா.தீபா, சந்திரா, லாவண்யா சுந்தரராஜன், ஜான் சுந்தர் ஆகியோரின் முதல் சிறுகதைகள் காலச்சுவடு இதழில்தான் வெளியாகின. இவர்களில் சிலரது முதல் சிறுகதைத் தொகுப்பையும் (கே.என்.செந்தில் – இரவுக்காட்சி, லாவண்யா சுந்தரராஜன் – புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை, பத்திநாதன் – நாளையும் நாளையே , கல்யாணராமன் – விபரீத ராஜயோகம், ஜான் சுந்தர் – பறப்பன திரிவன சிரிப்பன) காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடக்கம் முதலே காலச்சுவடு இதழ்களில் ஈழ எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பொ.கருணாகர மூர்த்தி, ஆசி கந்தராஜா, அனோஜன் பாலகிருஷ்ணன், தி.மயூரன், அனார், சந்திரா ரவீந்திரன் ஆகியோரது கதைகளும் இடம்பெற்றுள்ளன.

அயலக எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணன், சித்துராஜ் பொன்ராஜ், லதா, சித்ரா, நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரது கதைகளும் உள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் சிறுகதையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து காலச்சுவடு அவற்றுக்கேற்ப கதைகளை வெளியிட்டுள்ளது. நவீன கதை வடிவமான குறுங்கதைகளை கவனப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பகுதி ஒன்றை வெளியிட்டது. சுரேஷ்குமார் இந்திரஜித், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், பெருந்தேவி, போகன் சங்கர், கே.என்.செந்தில் ஆகியோர் பங்களித்திருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில், வெளியான சமயத்தில் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்து, விவாதத்துக்கும் உட்பட்ட கதைகள் பல வெளியாகியுள்ளன. சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள், விளை’, ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, ஜே.பி.சாணக்யாவின் ‘ஆண்களின் படித்துறை’ ஆகிய சில கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இவற்றைத் தவிர தேவிபாரதியின் ‘அ.ராமசாமியின் விலகல் தத்துவம்’, ஜே.பி.சாணக்யாவின் ‘பெருமைக்குரிய கடிகாரம்’, குலசேகரனின் ‘வெளியில் மாட்டிய சாவி’, பெருந்தேவியின் ‘மயானக் கொள்ளை’, யுவன் சந்திரசேகரனின் ‘ ’, விஜய ராவணனின் ‘ஆரெயில் நெடுங்கொடி’ உள்ளிட்ட கதைகள் கவனம் பெற்றன.

தமிழ்ச் சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் இன்றைய தலைமுறையினரின் வசதிக்கேற்ப, தமிழ்ச் சிறுகதை மரபை அறிந்துகொண்டு தொடரும் பொருட்டு காலச்சுவடு இதழும், பதிப்பகமும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

காலச்சுவடு இதழில் வெளியான கதைகளை தொகுப்பாக்கும் முயற்சி ஒரு முறை சாத்தியமாகியுள்ளது. 1994 முதல் 2000 வரையிலான 5 நெடுங்கதைகளையும் 18 சிறுகதைகளையும் கொண்ட தொகுப்பு ‘காலச்சுவடு கதைகள்’ என்ற பெயரில் மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு வெளியானது. அதன் பிறகு அவ்வாறான ஒரு தொகுப்பு வெளியாகவில்லை.  

முன்னோடிகளின் தொகுக்கப்படாத கதைகள் என்ற சிறப்புப் பகுதியில் கு.பா.ரா, மௌனி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ப.சிங்காரம் ஆகியோரது கதைகள் இடம் பெற்றிருந்தன.

காலச்சுவடு சார்பாக ஒரு சிறுகதைப் பட்டறை அய்யம்பாளையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

கதா நிறுவனமும் காலச்சுவடு அமைப்பும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஜே.பி.சாணக்யாவின் ’ஆண்களின் படித்துறை’ முதல் பரிசையும், சல்மாவின் ‘இழப்பு’ கதை இரண்டாம் பரிசையும், ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்குத் தெரியாதவர்கள்’ மூன்றாம் பரிசையும் வென்றன. இக் கதைகள் காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளன.

காலச்சுவடு நவம்பர்-டிசம்பர் 2003இல் வெளியான 50வது இதழ் ‘இளம் படைப்பாளர்கள்’ சிறப்பிதழாக அமைந்தது. அழகிய பெரியவனின் ‘கண்காணிக்கும் மரணம்’, உமா மகேஸ்வரியின் ‘வடு’, அய்யப்பனின் ‘சுடலை’, என்.ஸ்ரீராமின் ‘கிணற்றில் குதித்தவர்கள்’ ஆகிய நான்கு கதைகள் இடம் பெற்றிருந்தன.

ஒரு இலக்கிய இதழ் வரலாற்று நோக்கில் சில காரியங்களை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து காலச்சுவடு பதிப்பகம் சிறுகதைத் தளத்தில் செய்து வரும் சில பணிகளையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்ச் சிறுகதை வரலாறு நூற்றாண்டைக் கடந்தது என்றாலும், அதற்குப் பங்களித்திருக்கும் எழுத்தாளர்கள் பலரது கதைகளும் முழுமையாகத் தொகுக்கப்படாமலே இருந்தன. அத்தகையதொரு குறையை நிவர்த்திக்கும் முகமாக காலச்சுவடு பதிப்பகம் தமிழின் சாதனை எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொத்தத் தொகுப்பாகவும், கிளாசிக் வரிசை தொகுப்பாகவும் வெளியிடும் பெரும் பணியினை மேற்கொண்டது. 

தமிழின் சாதனை எழுத்தாளர்களின் மொத்தத் தொகுப்புகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் முயற்சி காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கியவுடனே ஆரம்பிக்கப்பட்டது. ஜி.நாகராஜனின் தொகுப்பு வெளியானது. சுந்தர ராமசாமி அதன் பிறகு கு.ப.ரா, மௌனி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, அம்பை, பெருமாள் முருகன் ஆகியோரது மொத்தத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களின் எல்லாக் கதைகளையும் பெருந்தொகுப்பாக வெளியிடுவது ஆவண நோக்கில் மட்டுமல்லாமல், சிறுகதை வரலாற்றில் ஒரு எழுத்தாளர் எல்லாக் கதைகளையும் விடுபடுதல்கள் இல்லாமல் இடம்பெறச் செய்யும் முக்கியமான பணியுமாகும். அத்துடன் வாசக நோக்கிலும் இத்தொகுப்புகள் முக்கியமானவை. ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளரின் எல்லாக் கதைகளையும் பெருந்தொகுப்பாக வாசிக்கும்போது அவரது கதைகளைப் பற்றிய தெளிவான ஒரு சித்திரத்தை வாசகன் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவண்ணன், ஆர்.சூடாமணி, சி.எண்.அண்ணாதுரை ஆகியோரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்ட தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

கிளாசிக் வரிசை சிறுகதைகளில் ந.முத்துசாமி, வண்ணநிலவன், அ.முத்துலிங்கம், ஆதவன், கி.ராஜநாராயணன், சுரேஷ்குமார் இந்திரஜித், ஜெயகாந்தன், அம்பை, ஆ.மாதவன், சி.சு.செல்லப்பா, பிரபஞ்சன், ஜி.நாகராஜன், கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோரின் தொகுப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

கிளாசிக் வரிசைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்புகளும் வாசகர்களின் வசதிக்கேற்ப திட்டமிடப்பட்டவை. குறிப்பிட்ட எழுத்தாளரைப் பற்றி அறிந்துகொள்ள அவர் எழுதிய சிறந்த சிறுகதைகளை மட்டும் வாசிக்க எண்ணும் ஒரு வாசகரை நோக்கியே இத்தகைய தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரிசை நூல்களின் வழியே ஒரு ஆரம்ப நிலை வாசகர் தமிழ்ச் சிறுகதையின் நீண்ட வரலாற்றில் தடம் பதித்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் குறித்தும் ஒட்டுமொத்த வரலாற்றில் அவருடைய இடம் குறித்தும் ஒரு தெளிவான பார்வையை எட்ட முடியும்.

 

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

 

முதல் இதழில் சுந்தர ராமசாமி, தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ‘தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் ஆகியவற்றின் கலாச்சாரத் தளங்களைச் சார்ந்த மேலான சிந்தனைகளையும், படைப்புக்களையும் தமிழாக்கித் தருவதில் இது கவனம் எடுத்துக்கொள்ளும். காலச்சுவடு தமிழ்மொழியில் உருவாகும் ஒரு எளிய முயற்சி என்றாலும், உலகக் கலாச்சாரச் செல்வங்களின் வாரிசாகத் தன்னைக் கணித்துக்கொள்ளுவதிலும் இக்கணிப்பு தூண்டும் கனவு களில் மூழ்குவதிலும் பெருமிதம் கொள்ளும் இதழ் ஆகும்.காலச்சுவடு மீண்டும் வெளிவரத் தொடங்கியபோது, மேற்சொன்ன கூற்றுக்கு ஏற்ப, மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முதல் இதழிலேயே சதன் ஹசன் மண்டோவின் ‘மீளல்’ கதை இடம் பெற்றிருந்தது. இதுவரை வெளியாகியுள்ள 320 இதழ்களையும் பார்க்கும்போது, நேரடியாக எழுதப்படும் கதைகளுக்கு சமமான அளவில் மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு தொடர்ந்து இடமளிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். யாசுநேரி கவபட்டா, இடாலோ கால்வினோ, பெர்னாண்டோ ஸோரண்டினோ, மார்க்வெஸ், காஃப்கா, ஐசக் அசிமோவ், ஜான் ஸ்டீன்பெக், கான்ரட் எய்கின், ரேமண்ட் கார்வர், முராகாமி, கென் லியு, எட்கர் கெரெத் உள்ளிட்ட அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல பால் சக்கரியா, உண்ணி.ஆர், மதுபால், என்.எஸ்.மாதவன் ( மலையாளம் ) யு.ஆர்.அனந்தமூர்த்தி, சுமங்களா, ஜெயந்த் காய்கினி (கன்னடம் ), சொஹரப் ஹூசேன் ( வங்கம் ), குர்தேவ் சிங் (பஞ்சாபி) போன்ற இந்தியக் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்.எஸ்.மாதவனின் ‘ஹிக்விட்டா’, ஸொரான்டினோவின் ‘அவன் என்னை குடையால் அடித்துக் கொண்டிருக்கிறான்’, டினோ புசாட்டியின் ‘விழுந்துகொண்டிருக்கும் பெண்’, மார்க்கெஸ்ஸின் ‘வெளிச்சம் போல வெள்ளம்’, லெனினை வாங்குதல், யாசுநேரி கவபட்டாவின் ‘மச்சம்’ ஆகியன அதிகமும் பேசப்பட்ட சில கதைகளாக நினைவில் உள்ளன.

மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளையும் காலச்சுவடு பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

 

0

முப்பதாண்டு காலத்தில் காலச்சுவடு இதழில் வெளியான கதைகளைக் கவனிக்கும்போது, தமிழ்ச் சிறுகதைச் சூழலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வப்போது புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றி புதிய களங்களையும் வடிவங்களையும் கதைமொழிகளையும் அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் தமிழின் மூத்த தலைமுறை சிறுகதை ஆசிரியர்களும் தங்களது தொடர்ச்சியான, இடைவிடாத எழுத்துகளின் மூலம் சிறுகதை மரபின் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள்.

இன்று இருபத்தி ஐந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, சிறுகதைகள் குறித்து 90களில் ஏற்பட்ட குழப்பமும் கலக்கமும் தணிந்து சிறுகதைகள் சார்ந்த ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. கோட்பாடுகள் வரும் போகும், அவற்றைக் கொண்டு கதைகளின் மொழியையோ வடிவையோ மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கதைக்கும் வாசகனுக்கும் இடையில் எந்தவிதமான திரைகளும் நிலைப்பதில்லை, இருக்கவும் முடியாது என்பதும் தெளிவாகியுள்ளது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல இல்லாது, பழையவற்றின் வேர்களில் புதியன அரும்பி மலர்வதையே இத்தனை ஆண்டு காலக் கதைகளிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த வகையில் காலச்சுவடு எல்லாத் தரப்பினருக்குமான இதழாக தன்னை வரையறுத்துக் கொண்டிருப்பதன் காரணமாகவே, தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும் வகைமைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

முப்பதாண்டு காலமாக தொடர்ந்து வெளிவரும் ஒரு இதழ் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றவேண்டிய கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டிருப்பதன் சாட்சிகளாகவே காலச்சுவடு கதைகள் அமைந்துள்ளன என்பதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்லமுடியும்.

0

(கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லூரியில், 28.08.2026 அன்று நடைபெற்ற ‘காலச்சுவடு 30ஆம் ஆண்டு, 300 இதழ்கள் – சிறப்புக் கருத்தரங்’கில் ஆற்றிய உரை )

 

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

  அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சா...