நடந்துகொண்டிருப்பது
மூன்றாம் உலகப் போர்தானா என்ற விவாதங்களுக்கும் ‘எனர்ஜி லாக் டவுன்’ அறிவிக்கப்படுமோ
என்ற ஊகங்களுக்கும் இன்றைக்கு தோசை கிடைக்குமா என்ற அடிப்படைக் கேள்விகளுக்கும் இடம்
தந்து நீண்டுகொண்டிருக்கிறது வளைகுடா போர். எறிகணைகளும் ஏவுகணைகளும் பறக்கும் தட்டுகளும்
வெடித்துச் சிதற வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.
எண்ணெய் வளம், அதிகாரப் போட்டி, ஆயுத பலம் என்று இதற்கான காரணங்களை பிரித்து ஆராய முடியும்.
ஆனால், அடிப்படையில் இவற்றுக்கு பலியாகும், பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள்,
பெண்களின் துயரங்களுக்கு யார், எது பொறுப்பேற்கும்? ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியாகின்றன.
எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அடுப்பெரிக்க எரிவாயு கிடைக்குமா, வாகனங்களுக்கு எரி
எண்ணெய் போதுமா, உணவகங்களில் கேட்டது கிடைக்குமா என்ற அளவில் நம் கவலை நமக்கு. வீட்டுக்
கடனை அடைக்கவும் தேவைக்கு பொருள் ஈட்டவும் என திரைகடல் தாண்டி திரவியம் தேடச் சென்றோர்
வீட்டில் உயிர்பிழைத்து வந்தால் போதும் என்ற பிரார்த்தனைகள்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையில்
வேர்விட்டு ஆழமாக ஊடுருவியிருப்பது ஆதிக்க வன்முறை. ஆயுத பலத்தைக் கொண்டு அடிபணியச்
செய்யும் அதிகாரத் திமிர். கச்சா எண்ணெயை சுமந்து மிதக்கும் கப்பல்கள் கடந்து செல்லும்
நீரிணையை மூடிவிட்டால் உலகின் பல நாடுகளிலும் தட்டுப்பாடு தலையெடுக்கும். பதற்றம் விளையும்.
அடுத்து என்ன வழி என்று யோசிக்கும். உலக நாடுகளின் நலம் பேணும் அமைப்புகள் கையறு நிலையில்
தலைகுனிந்திருக்க நீண்டுகொண்டிருக்கிறது போர்க் காலம்.
கத்தி எடுத்தவன் கத்தியால்
சாவான் என்பது வழக்கு. உதாரணங்களும் பல. பலிகொள்ளும் கத்தியை ஆயுதமாகக் கொண்டால் அது
ரத்தம் பார்த்து ஓயாது என்பதை அறிந்துதான் அகிம்சையை கையிலெடுத்தார் காந்தி. பேசித்
தீர்க்க முடியாது என்று உலகில் எந்தவொன்றும் இல்லை என்பதை பலமுறை மெய்ப்பித்துக் காட்டினார்.
உலக அமைதிக்கு அகிம்சையே வழி, ஆயுதங்கள் இல்லை என்று அறிவுறுத்தினார். மண்டேலா உள்ளிட்ட
தலைவர்கள் பலரும் அகிம்சையை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அணு ஆயுதங்களை சக்திக்கேற்ப
திரட்டி வைத்துக்கொண்டு நாடுகள் பலவும் தயார் நிலையில் இருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆதி மனிதன் கல்லை ஆயுதமாகக்
கொண்டான். மிருகங்களிடமிருந்து பாதுகாக்கவும் வேட்டையாடிப் புசிக்கவும் அவனுக்கு அது
தேவையாக இருந்தது. இரும்பைக் கண்ட பிறகு கூரிய கத்திகளும் வேல்களும் ஈட்டிகளும் உருவாயின.
அனைத்துமே வேட்டைக் கருவிகள்தான். வயிற்றுப் பசிக்கான வேட்டை நாடு பிடிக்கும் அதிகார
வேட்கைக்கானதாய் மாறியபோது வேட்டைக் கருவிகள் அனைத்தும் படைக் கருவிகள் ஆயின. பகுத்தறிந்து
அணுவைப் பிளந்து அதை அழிக்கும் சக்தியாக்கியதன் விளைவை இன்னும் உலகம் மறந்திருக்காதுதான்.
ஆனாலும், கையிலெடுத்த ஆயுதத்தை கீழே போடும் துணிச்சல் இல்லை எவருக்கும். அவரவர் கை
மறைவில் ஆயுதங்களைத் தாங்கி படங்களில் சிரித்துக் கொண்டே அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள்.
ஒருவேளை, உலக நாடுகளில்
சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதங்கள் அனைத்தையும் ஆக்கத்தின் ஆற்றலாக மாற்ற
முடியுமானால் எவையெல்லாம் சாத்தியம் என்பதை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள். ஏதேனும் ஒரு
அற்புதம் நடந்து ஆயுத வியாபாரிகள் மனந்திருந்தி அமைதித் தூதுவர்களாகலாம். அதிகாரமல்ல,
அன்பே நிரந்தரம் என்பதையும் உணர்ந்து திருந்தலாம். மானுடம் செழித்து இப்புவி இன்னும்
காலங்கள் தாண்டி நிலைத்திருக்கலாம்.
கவிஞனும் கவிதையும் இப்படியொரு
கனவைக் காண முடியும். கவிஞனின் சொல் பலிக்கும் என்பது நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கையை,
கனவைச் சொல்கிறது சபரிநாதனின் கவிதை.
அண்மைகாலத்தில் நமது
திரை நாயகர்கள் பலரும் ‘பொருளி’ன்றி உலா வருவதில்லை. ஆயுதந்தாங்கி சமூகத்தின் அறம்
பேணுகிறார்கள். எளியோரின் அவலங்களைத் துடைக்க ஆயுதங்களேந்தி அவதாரமெடுக்கிறார்கள்.
திரையில் காட்சியாகும் ‘பொருட்’கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கையில் வந்து சேர்கின்றன.
மின்சார ரயில் நிலையங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் அவற்றின் கூர் திறனை சோதித்துப் பார்க்கிறார்கள்.
அறிவே ஆயுதம் என்பதை மறுக்க பிம்பங்கள் போதும் போலும். உயிருக்கு மதிப்பில்லாத கொடுங்காலத்தில்
எந்தவொரு அற்ப காரணத்துக்காகவும் உயிரை எடுக்க தயங்குவதில்லை. திருட்டு, பிறழ் உறவுகள்,
சொத்துத் தகராறு, குலத் தூய்மையை பாதுகாப்பது என்று எல்லா காரணங்களுக்காகவும் உயிர்கள்
பலியிடப்படுகின்றன. வன்முறையை கையிலெடுக்க சற்றும் யோசிக்காத நாட்கள் இவை. திரைப்படங்களும்
சமூக ஊடகங்களும் வன்முறை வரம்பை அபாய அளவுக்கும் மேலெடுத்துச் சென்றிருக்கும் நிலையில்
அவற்றின் உடனடி தாக்கங்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை முறைப்படுத்துவதற்கென்று
அமைக்கப்பட்டுள்ள தணிக்கைக் குழு தன் அதிகார வரம்புகளையும் விதிமுறைகளையும் மறுபரிசீலனை
செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.
உலகில் அநீதி தலைதூக்கும்போது
தர்மத்தை நிலைநிறுத்த அவதரிப்பதாகப் படித்திருக்கிறோம். அவ்வாறான நம்பிக்கையை கவிதையும்
எழுத்துமே விதைக்கின்றன. இப்போதும் அவ்வாறான ஆழமான நம்பிக்கையை கவிதையின் மூலம்தான்
தரமுடியும்.
கத்திகளை பழம் வெட்ட
மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு காலத்தில், கடுந்தேனீருக்காக மழை ஓய்ந்த மாலைப் பொழுதுகளில்
நடந்து செல்லும் காவி உடுத்திய சாதுவாக வன்முறையை நிச்சயமாகப் பார்க்க முடியும்.
விழிப்படைந்த கத்தி
0
நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்தபோது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி, யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை.
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக் கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்.
சட்டென உற்ற விழிப்பு, திடுமென நுரைத்த கருணை,
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றைப் பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம்பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.
( ஆவநாழி ஏப்ரல் 26 இதழில் வெளியானது )

No comments:
Post a Comment