Thursday 11 June 2020

மனைமாட்சி - லாவண்யா சுந்தரராஜன்

கடந்த வாரம் எம்.கோபாலகிருஷ்ணன் Gopalakrishnan Murugesan எழுதிய மனைமாட்சி நாவல் வாசிக்கக் கிடைத்தது. அது மிக சிறந்தொரு வாசிப்பனுவத்தை கொடுத்தது. அந்த வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரையை எழுதி முடித்திருக்கும் தருணம் பின்வரும் விஷயங்களை முன்னோட்டமாக பதியும் ஆவல் எழுந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.

நாவலில் இருந்து....

சாந்தி ஒரிடத்தில் அணைக்கட்டில் அடைந்திருக்கும் நீரை பார்த்து "இத்தனை தண்ணியும் இந்த செவுரு தான் தடுத்து நிறுத்துதா? அந்தளவுக்கு அது ஸ்டராங்கா? என்று உதடுகளை ஈரபடுத்திக் கொண்டே சொன்னவள், அசைவற்ற நீர்பரப்பை கூர்ந்து கவனித்தாள். எனக்கெனவோ இந்த தண்ணி தான் சரி இருப்பமேன்னு சும்மா இருக்குன்னு தோணுது" என்கிறாள். அவளுடைய பாத்திர வார்ப்பையே இந்த வரிகள் குறிக்கின்றன. அவள் அணை உடையாத வெள்ளம் போன்றவள். எந்த நேரத்திலும் அணையை உடைத்து அனைத்தையும் அழிக்கவல்லவள்.

"தெப்பகுளத்தில் நடு மண்டபத்தில் ஒரு கருப்பு ஆடு அது அங்கே எப்படி போய் சேர்ந்தது." இதுவே மதுமிதாவின் பாத்திரம். அவளும் அப்படித் தான் நடு மண்டபத்துக்கு(மண வாழ்க்கைக்கு) அறியாமல் வந்து விட்ட ஆடு. பயமற்றவள் போல காட்டிக் கொண்டு தனக்கு தானே மருளும் குணம் கொண்டவள். மற்றும் "படகுகள் கிழித்து போகும் நீர்பரப்பின் வலியை அறிந்தாள். அவரவர் வலைக்கு சிக்கிய மீன்களை கொண்டு நீரையும் அதன் அழத்தையும் அளக்கிறார்கள். வலைக்கு எட்டாத, படகு கிழிக்காத நீரை யார் அளப்பது?" இதுவும் மதுமிதாவின் இன்னொரு பரிமாணம் அவள் மனதில் ஆழத்தில் படிந்திருக்கும் தயக்கங்களையும் தர்க்கங்களையும் அவளே அறிய முடியாத ஆழத்தில் கொண்டிருப்பவள். புறத்திலிருந்து அவளை பார்ப்பவர்கள் அவரவர் வலையில் அகபட்ட மீன்களை கொண்டு அவளை பற்றிய பார்வையை கொண்டிருக்கின்றனர் அவள் அவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவள்.

மகாதேவனின் வீடு அவன் தனிமையின் குறியீடாக அழுக்கும், முடை வாடையும், இருளும் நிறைந்து இருப்பது போலவும் பின்னர் அவனுக்கு தகுந்த துணை வரும் இடங்களில் அதே வீடு அழகாகவும், பிரகாசமாகும் ஆவதே மனைமாட்சி என்பதன் அர்த்தத்தை பிரகாசமாக காட்டும் பதிவு.

வினோதினியை காதலிக்கும் லோகுவின் காதல் ஊதா பலூனாக ஒரு அத்தியாத்தில் வந்து போகிறது. வினோதினியின் திருமணத்திற்கு முன்னர் ஒரு பொங்கல் விழாவில் பலூன் ஊதும் போட்டியில் லோகு ஜெயிக்க காரணமான உதா பலூன், அவள் திருமணத்துக்கு பின்னர் லோகு அவளை விட்டு விலகி நடக்கும் போது ஊதா நிற பலூன்கள் வெடித்து சிதறியது(வினோதியின் நினைவோடையாக வரும் பகுதி) என்று எழுதி இருப்பது நுட்பமான குறியீடு.

மூன்றாம் பகுதியில் வரும் வாணிக்கு சிவசமுத்திரம் அருவியை பார்க்கும் போது திருமணத்திற்கு முன்னர் ரசித்த அதிரப்பள்ளி அருவி நினைவுக்கு வருகிறது. இரண்டு அருவியையும் ஒப்பிடுகிறாள். சிவசமுத்திரம் அவள் கணவன், அதிரப்பள்ளி அவள் காதலன் சசி. இரண்டிலும் கொட்டுவது நீர் தானே. சிவசமுத்திரம் பெரியதாய் வசீகரமாய் இருப்பதற்காக அதிரப்பள்ளியை விட முடியுமா என்பது அவள் நம்மை கேட்காமல் கேட்கும் கேள்வி.

மூன்றாம் பகுதியில் கோவையில் சாரதா டீச்சர் வீட்டுக்கு முன் வீட்டு நாய் குரைப்பு மற்றுமொரு குறியீடு. ஒரு காதல் தோல்வியின் அடையாளமாக அந்த குரைப்பொலி மாறிப் போகிறது. அதை கேட்கும் தருணமெல்லாம் சாரதாவும், அவள் கணவனும் மிகவும் ஆத்திரபடுக்கின்றார்கள்.

நாவலில் ஒரு இடத்தில் "பேராசையும் எரிச்சலும் கசப்பும் கண்ணீரும் ஏமாற்றமும் துரோகமும் வஞ்சகமும் அசட்டுத்தனமும் தன்னலமும் கொண்ட பெண்கள் கூட்டத்துக்கு நடுவே தான் வாழ்க்கை என்பது ஓடிக் கொண்டிருக்கிறது" என்கிறார் நாவலாசிரியர். இப்படிப்பட்ட வரியை பதிவு செய்ய எல்லா நியாயமும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வலம் வருகின்றன. ஆனால் இந்த வரிகளுக்கு முற்றும் முரண்படும் விதமாக நாவல் முழுவதும் பெண்ணின் பெருமையை பற்றியே பேசியிருக்கிறார்.

கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.

லாவண்யா சுந்தரராஜன் 06 செப்டம்பர் 2018

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...