Wednesday, 13 September 2023

முதல் சிறுகதை அனுபவம்

 ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’



‘குதிரை வீரன் பயணம்’ ஆசிரியர் – யூமா வாசுகி, முகவரி, டிமாண்டி வீதி, திருப்பூர்.

கணையாழியில் வெளியாகியிருந்த சிறு விளம்பரம் கவனத்தை ஈர்த்தது. திருப்பூரிலிருந்து சிற்றிதழ் என்பது ஆர்வத்தை உண்டாக்கியது. ஈஸ்வரன் கோயில் அருகில் இருந்த அந்த முகவரியைத் தேடிச் சென்றேன். மூன்று தளங்களைக் கொண்ட கட்டடம். பெயர் பலகைகள் எதுவுமில்லாததால், இந்த இடம்தானா என்று சந்தேகத்துடன் நின்றிருந்தபோது ஒரு பதின்வயது சிறுவன் விறுவிறுவென இறங்கி வந்தான். ‘என்ன வேணும்ண்ணே?’ சிரித்தபடியே கேட்டான். கையில் சிறிய வயர்கூடை. ‘இங்க யூமா வாசுகின்னு இருக்காங்களா?’ என்று சொல்லி முடிக்கும் முன் மேலே கைகாட்டியபடியே நகர்ந்தான் ‘ஒசக்க இருக்காங்க.’ அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால் கையை மேலே காட்டியதை வைத்துக்கொண்டு மேலே ஏறினேன். மொட்டை மாடியை அடைந்தேன். பளீரென்று வெளிச்சம் இறைந்த மேசையின் மீது இளைஞர் ஒருவர் குனிந்து வரைந்துகொண்டிருந்தார். இன்னொரு மேசையில் வெள்ளைத் தாளில் வரைந்த எழுத்துகளும், லச்சினைகளும். எல்லாமே பனியன்களில் அச்சிடக்கூடிய படங்கள், எழுத்துகள். கருப்பு மையில் கச்சிதமாக வரையப்பட்டிருந்த தாள்கள். வரைந்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கும்வரை காத்திருந்தேன்.

“வாங்க. என்ன வேணுங்க?” வசீகரமான சிரிப்பு. காட்ராய் துணியிலான நீலச் சட்டை அவருக்கு வெகு பொருத்தமாயிருந்தது.

“யூமா வாசுகி?” தயக்கத்துடன் கேட்டேன். கழுத்தில் புரண்ட தலைமுடியும் சிரிக்கும் கண்களும் பாடகர் ஹரிஹரனை நினைவுபடுத்தின.

“அதோ, அங்க இருக்கார் பாருங்க” மங்கிய வெளிச்சம் கொண்ட மொட்டை மாடியின் வடமேற்கு மூலையைக் காட்டினார். நாற்காலியில் அமர்ந்திருந்தவர் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மெல்ல நெருங்கினேன். சட்டென்று கால்களை கீழிறக்கிக்கொண்டு முகம் பார்த்தார்.

“நீங்கதான் யூமா வாசுகியா?”

“ஆமா. நீங்க?” தயங்கும் குரல்.

“கணையாழியில விளம்பரம் பார்த்தேன்” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

திருப்பூரில் இலக்கிய ஆர்வமிக்க ஒருவரை சந்திப்பதில் என்னைப் போன்றே அவருக்கும் மகிழ்ச்சி. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடல். விடைபெற்றுச் செல்லும்போது ‘குதிரை வீரன் பயணம்’ முதல் இதழை அளித்தார்.  அடிக்கடி சந்திப்புகள் தொடர்ந்தன. யூமா வாசுகி எனும் சிற்றிதழ் ஆசிரியரை, கவிஞரை, ஓவியரை, எழுத்தாளரை அறிந்துகொண்ட நாட்கள். என்னுடைய சில கவிதைகளைக் கொடுத்தேன். வாசித்தார். ‘உங்களால நல்லா கதை எழுத முடியும்னு தோணுது” என்று அவர் சொன்னது அப்போது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.  

இரண்டு வாரத்துக்குப் பிறகு, ‘குதிரை வீரன் பயணம்’ இரண்டாவது இதழ் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் ஒரு சிறுகதை எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘எழுதித்தான் பார்க்கலாமே’ என்ற எண்ணம் எழுந்தது.

சில நாட்களுக்கு முன்பு நண்பரின் வீட்டில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் முதியவர் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி அறிந்துகொண்ட செய்திகளையும் அவரைக் கவனித்ததில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் வைத்துக்கொண்டு கதையை எழுத ஆரம்பித்தேன்.  ‘வெயில் தாளமாட்டாமல் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டான் அம்மாசி’ என்று முதல் வரியை எழுதியதுமே கதை இயல்பாக விரியத் தொடங்கியது.  உற்சாகத்துடன் எழுதி முடித்தேன்.

யூமாவுக்கு கதை பிடித்திருந்தது. சூழலும் உரையாடல்களும் கச்சிதமாக அமைந்திருப்பதாய் சொன்னவர் கதைக்கு ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ என்று தலைப்பிட்டார்.

பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வழக்கம் இருந்தது. எவர்சில்வர் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு அதற்கான தேவை இல்லாமல் போயிற்று. ஈயம் பூசும் அம்மாசியைச் சுற்றிய உலகமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருந்தபோதும் அவர் அப்படியேதான் இருந்தார், ‘விவரமில்லாத’வராக. திருப்பூரில் பனியன் தொழில் வளர்ந்து பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகி பொருளாதார சுதந்திரம் உருவானபோது தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாசி போன்ற ‘குடும்பத் தலைவர்’களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலை ஏற்பட்டது. பெண்கள் தங்களது எதிர்கால வாழ்வுக்கான பொருளாதாரத் தேவைகளை தாங்களே திட்டமிட்டுச் சேர்க்க முடிந்தது. திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் ஏற்படுத்தித் தந்த இந்த வாய்ப்பு குடும்ப அமைப்புகளிலும் சமூகச் சூழலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அந்த மாற்றங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு தன்னைப் பொருத்திக்கொள்ளும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’.

 அறிவியலும் தொழில்நுட்பமும் வாழ்வை நவீனமயமாக்கும்போது முதலில் பாதிக்கப்படுபவர்களும் பிறகு வேலையற்றுப் போகிறவர்கள் கைவினைஞர்களே. ஆனால், புதிய சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு வாழ்வின் போக்கில் அவர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை கச்சிதமான சூழலில் இயல்பான உரையாடல்களுடன் விவரிக்கும் இந்த முதல் கதையை இப்போது வாசிக்கும்போதுகூட நிறைவாகவே உள்ளது.

( தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை )

என்.ஜெயராம் எனும் அறியப்படாத மேதை

இயற்கையின் இசையும் நிழலின் ஒளியும்

(காலச்சுவடு, ஜூலை 2023 இதழில் வெளியான கட்டுரை)



கானுயிர் படங்கள் என்றதும் அனைவரும் யோசிப்பது யானை, சிங்கம், புலி, காண்டாமிருகம், காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பேருயிர்களின் படங்களே. உலகின் மிகப் புகழ்பெற்ற கானுயிர் படக் கலைஞர்கள் வெவ்வேறு கோணங்களில் பல பேருயிர்களை ஒளிப்படங்களாக தந்துள்ளனர். எம்.கிருஷ்ணனின் யானைகளும், டி.என்.ஏ.பெருமாளின் ஆந்தைகளும் உலக அளவில் கவனம் பெற்ற படங்கள். இந்த பேருயிர்களுக்கு இணையாக வண்டுகள், பூச்சிகள், தவளைகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட எண்ணற்ற சிறு உயிர்களையும் கவனிப்பதும், படமெடுப்பதும், காட்சிப்படுத்துவதும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒளிப்படமேதைகளில் ஒருவர் என்.ஜெயராம்.    

கேமரா தொழில்நுட்பங்கள் பெருமளவு வளர்ந்திருக்காத, படச் சுருள்களைக்கொண்டு படமெடுத்த காலத்தில் சிறு உயிர்களை படமெடுப்பது அத்தனை சுலபமல்ல. சரியான கோணமும், ஒளி அளவும் அமையவேண்டும். அவ்வுயிர்களை தொந்தரவு செய்யாமல் நெருங்கி துல்லியமாகப் படம் பிடிக்கும் ஆற்றல் மிக்க லென்சுகளோ பிற உபகரணங்களோ இல்லாத நிலை. குறிக்கோளை அடைய போதுமான கருவிகளோ வாய்ப்புகளோ இல்லாதபோது சாதாரணமானவர்கள் அவற்றுக்காகக் காத்திருக்கிறார்கள். சாதனையாளர்களோ அவற்றை தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். தன்னிடமிருந்த கேமராவையே நுண்ணுயிர்களைப் படம்பிடிக்கத் தகுந்தபடி கட்டமைத்துக்கொண்டார் ஜெயராம். அவ்வாறான அர்ப்பணிப்பும் தளரா முயற்சியுமே உலகுக்கு அவரை அடையாளம் காட்டியது. இளம் வயதிலேயே சர்வதேச அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெறச் செய்தது.

ஜெயராமின் தந்தை இம்பீரியல் வங்கி(இப்போதைய ஸ்டேட் வங்கி)யில் அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட வட மாநிலங்களில் பணியாற்றியவர். எனவே, சிறு வயதிலேயே அடர்ந்த காடுகளுக்குள் பயணம் செல்லும் வாய்ப்பு இருந்தது. அதுவே காடுகளையும் கானுயிர்களையும் நோக்கி அவரை ஈர்த்தது. அவருடைய தந்தையார் பதினான்கு வயதில் ஒரு அக்ஃபா கேமராவை பரிசளித்தபோது தொடங்கிய அவருடைய ஒளிப்படப் பயணம் அறுபது ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த அறுபது ஆண்டுகளிலும் காடுகளையும் கானுயிர்களையும் தவிர அவர் வேறெதையும் திரும்பிப் பார்க்கவில்லை, திருமண வாழ்க்கை உட்பட.

தொடக்கத்தில் திருவிழாக்களையும் மனிதர்களையும் படம் பிடித்த ஜெயராமின் படங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடியும். பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், தும்பிகள் உள்ளிட்ட சிறு உயிர்கள் முதலாம் பிரிவில் அடங்கும். யாரும் கவனிக்காத, கண்டுகொள்ளாத சிறு உயிர்களை ஜெயராம் உற்று நோக்கினார். இலைகளிலும் மரக் கட்டைகளிலும் பாறைகளின் மீதும் ஊர்ந்தும் ஒட்டிக்கொண்டுமிருந்த அந்த உயிர்களை கவனித்தார். சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மைகளை ஆராய்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட தன் குஞ்சுகளை முதுகில் சுமந்து செல்லும் தேள், சருகைப் பற்றியபடி இணைசேரும் தும்பிகள், தலையிலும் முதுகிலும் மகரந்த மஞ்சளை அப்பிக்கொண்டு சிறு பூக்களின் மேல் அமர்ந்திருக்கும் கருவண்டு, சிறு வெண் மலரில் எறும்பு போன்ற கண்களுடன் பளிங்கு மேனிகொண்ட சிலந்தி, முத்தாரம் போல மரப்பட்டை மீது முட்டைகளிட்டிருக்கும் பொன்வண்டு உள்ளிட்ட அவரது அபாரமான படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. இதுபோல் இன்னொன்று இல்லை என்று சொல்லுமளவுக்கு சிறப்பம்சம் மிகுந்தவை. சிலந்தியின் தலையிலும் கால்களிலும் உள்ள பொடி ரோமங்களைக்கூட அந்தப் படத்தில் பார்க்க முடியும். தும்பியின் மூங்கில் போன்ற பளபளக்கும் உடலையும் அதன் கண்ணாடி இறகுகளையும் துல்லியமாகக் காட்டும். இலைகளிலும் பூக்களிலும் சருகுகளிலும் மரப்பட்டைகளிலும் வாழும் இந்த உயிர்களை சாதாரணமாகக் காண்பதே கடினம். ஆனால், அதைக் காண்பதோடு மிகச் சரியான கோணத்தில், தேவையான ஒளியுடன் படமெடுப்பது பெரும் சவால். ஜெயராமின் இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ‘இது எப்படி சாத்தியம்?’ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

அவரது படங்களின் இரண்டாம் பிரிவில் வண்ணத்துப் பூச்சிகளையும் தவளைகளையும் சேர்க்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் பருவமழையைத் தொடர்ந்து தவளைகள் இனப்பெருக்கம் செய்யும் சமயத்தில் ஜெயராம் எடுத்த படங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. அவரளவுக்கு தவளைகளை துல்லியமாகவும் அழகாகவும் இன்னொருவர் படமெடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தாவரத்தின் சிறிய தண்டின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு எட்டிப் பார்க்கும் தவளை இவருக்காகவே அப்படியொரு கோணத்தில் அமர்ந்திருந்ததோ என்று யோசிக்க செய்யும். பச்சைப் பசேலென பாசி படர்ந்த பாறையின் மீது தன் உடல்நிறத்தையும் பச்சையாக மாற்றிக்கொண்ட ஒரு தவளை, உப்பு மூட்டை தூக்குவதுபோல இணையை முதுகில் ஏற்றியிருக்கும் ஒரு தவளை, உலர்ந்த இலைகளின் மீது நிறம் மாறிய பழுப்புத் தவளை, செடியின் நுனியிலிருந்து தாவத் தயாராக உடலை வளைத்து நிற்கும் தவளை, பச்சைப் பாம்பின் வாயில் கவ்வுண்ட சிறு தவளை என எண்ணற்ற தவளைகளின் படங்கள் ஜெயராமின் முத்திரைகொண்டவை. ஓரிடத்தில் நிற்காமல் நீரிலும் நிலத்திலுமாய் தாவித் திரியும் இயல்புகொண்ட தவளைகளை இத்தனை துல்லியமாக படமெடுக்க பொறுமையும் வேண்டும், அவற்றைக் குறித்த ஆழமான அறிவும் வேண்டும். ஜெயராமிடம் இவை இரண்டும் இருப்பதால்தான் தவளைகளுடம்கூட அவரைக் கண்டு வியந்து நின்றுவிடுகின்றன.

பட்டாம்பூச்சிகளை படமெடுப்பதும்கூட அதேயளவு சவாலான காரியம். அன்றாடம் கண்ணில்படும் பட்டாம்பூச்சிகளிலிருந்து அபூர்வமான வகைகள் வரை அவர் படமெடுத்திருக்கிறார். இறகுகளின் வண்ணங்களையும் வடிவத்தையும் உணர்கொம்பின் வளைவுகளையும்கூட அவரது படங்களில் தெள்ளத் தெளிவாகப் பார்க்கமுடியும். அபூர்வமான சிறு பறவைகளையும் படமெடுத்திருக்கிறார். திராட்சைப் பழ அளவுகொண்ட ஒரு காட்டுப் பழத்தை வாயைத் திறந்து கவ்வப் பார்க்கும் குருவியின் படம் ஒரு எடுத்துக்காட்டு.

அவரது மூன்றாவது வகைப் படங்கள் நிலக்காட்சிகள். தொடர்ந்து பல ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு வகையான நிலங்களை மலைகளை சமவெளிகளை காடுகளை கவனித்து வந்திருக்கிறார். வளர்ச்சியின் பெயரால் மெல்ல மெல்ல இவை யாவும் அழிவுக்கு உள்ளாகின்றன என்று உணர்ந்தவுடன் அவற்றை படமெடுக்கத் தொடங்குகிறார். அவருக்கு மிகப் பிடித்தமான நீலகிரி மலைகளையும் சிகரங்களையும் மஞ்சுப் பொதிகள் மிதக்கும் சரிவுகளையும் பள்ளத்தாக்குகளையும் படமெடுக்கிறார். சல்லாத்துணி போன்ற பனிமூட்டம்

அந்தியின் பொன்னொளியிலும் விடியலின் சாம்பல் வெளிச்சத்திலும் வெவ்வேறு தோற்றங்காட்டும் அவரது நிலக்காட்சிகள் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களுக்கு இணையானவை. மலம்புழா அணை நீரின்றி வற்றிய பருவத்தில் தேக்கத்தின் நடுவே பசும் புல்வெளி. கால்நடைகள் மேயும் அந்திப்பொழுது. கதிரொளி பொன்திட்டுகள் போல் அங்கங்கே இறைந்திருக்கும் காட்சியை அவர் எடுத்திருக்கும் விதம் இன்னொருவர் யோசிக்கக்கூட முடியாத ஒன்று. உதகையின் புகழ்பெற்ற முக்குருத்தி புல்வெளிகளும் மடிப்புகளும் சிகரங்களும் அவரது படங்களில் மேலும் எழில் கொண்டிருக்கும் விநோதம் புரிபடாத ஒன்று. பொன்னொளியில் மிளிரும் பாறைகளும் குன்றுகளுமாய் ஹம்பியில் அவர் எடுத்திருக்கும் படங்கள் நினைவில் உறைந்திருப்பவை.   

திறன்மிக்க நல்ல காமிராவோ கைபேசியோ கையிலிருந்தால் யாரும் படமெடுக்க முடியும். ஜெயராம் இந்தக் கூற்றை மறுக்கவில்லை. ஆனால், ஓவியத்தைப்போல ஒரு காட்சியை காமிராவின் வழியாக படைத்துக் காட்டும்போதுதான் அது கலையாக மாறுகிறது என்கிறார். ஒரு விலங்கையோ மரத்தையோ பறவையையோ பார்த்தவுடன் அதை அப்படியே படமெடுப்பதில் எந்த பயனும் இல்லை. படத்துக்கான சரியான கோணத்தை யோசிக்கவேண்டும். போதிய வெளிச்சமும் தேவைப்படும் நிழலும்கூட அமையவேண்டும். எந்தத் தருணத்தில் விசையை சொடுக்கவேண்டும் என்ற அனுபவம் முக்கியம். இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு படத்தை சாதாரணப் படத்திலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன.

ஜெயராம் தன்னை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தால் உலகிலுள்ள எண்ணற்ற கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவராகவே நின்றிருப்பார். அப்படியொரு எல்லையில் தன்னை நிறுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவரது இயல்பும் அவ்வாறானதில்லை. படமெடுக்கும் ஒவ்வொரு உயிரைக் குறித்தும் அவர் கசடறக் கற்றுக் கொண்டார். விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்து உரையாடி அறிவை சேர்த்துக்கொண்டார். தீவிரமான வாசகர் என்பதால் ஆழமாக வாசித்தார். உயிர்களின் இயல்பு, அவற்றின் வசிப்பிடம், குணநலன்கள் என எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். இதற்காக அவர் தாவரவியல், பூச்சியியல், உயிரியல், விலங்கியல், இயற்கை அறிவியல், வகைப்பாட்டியல் (taxonomy) உ.ள்ளிட்ட அறிவியல் துறைகளை ஆழக் கற்றுத் தெளிவுகொண்டார். தேடித் தேடிச் சேர்த்த இத்தனை அறிவுடன் இயற்கையாகவே அவருக்குள் அமைந்திருக்கும் ஒளி, நிறம், நிழல் குறித்த நுண்ணுணர்வும் சேர்ந்து அவரது படங்களை ஒப்பற்றதாக்கின.

அவரது ஒரு படம் என்பது அந்த குறிப்பிட்ட உயிரைக் கண்ணில் காட்டும் பணியை மட்டும் செய்வதில்லை. அந்த உயிரின் வாழ்நிலை, இயல்பு, இயற்கையுடனான அதன் உறவு ஆகிய ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டும் அறிவியல் ஏடாகவும் விளங்குகிறது. துறைசார் விஞ்ஞானிகளுக்கு அரிதான தகவல்களை தரும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. இந்த வகையில் ஜெயராமின் ஒளிப்படங்கள் சூழல் பாதுகாப்புக்கும் துணைபுரிகின்றன.

ஜெயராம் ஒரு தீவிர வாசகர். அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் அரிதானவை. விலைமதிப்பற்றவை. ஒளிப்படக் கலை தொடர்பான உலகப் புகழ்பெற்ற மேதைகளின் நூல்கள் அவரிடம் இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், ரெம்பிரான்ட், வான்கா போன்ற மேதைகளின் ஓவியங்கள் அடங்கிய புத்தகங்கள் அவரிடம் உண்டு. ஒரு ஓவியன் நிறத்தையும் ஒளியையும் எவ்விதம் தனது ஓவியத்தில் பயன்படுத்துகிறான் என்பதை ஒளிப்படக் கலைஞன் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதை எப்போதும் அவர் வலியுறுத்துவார். தோரே அவருக்குப் பிடித்த எழுத்தாளர். ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதுண்டு. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் இசையிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் தனது ‘மேக்’ கனிணியில் சேர்த்து வைத்திருக்கும் இசைத் தொகுப்புகள் மிக அபூர்வமானவை. தொடக்கத்தில் மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஜெயராம் பிறகு இந்திய செவ்வியல் இசையை ரசிக்கலானார். இசை கேட்பதற்கென வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளை வைத்திருந்தார். குறிப்பிட்ட இசையை குறிப்பிட்ட பெருக்கியின் வழியாக மட்டுமே கேட்கவேண்டும் என்று குறிப்பிடுவதுண்டு.

தத்துவம், இலக்கியம், ஓவியம், இசை மூன்றும் கலந்த அபூர்வமான ரசனைதான் அவரது ஒளிப்படங்களில் அமைதியுடனும் ஆழத்துடனும் உறைந்துள்ள ரகசியச் சிறப்பு. வேறெவரும் அதை நகல்செய்துவிட முடியாது.

1975ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலுமான காலத்தில் அவரது ஒளிப்படங்கள் நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் ஜெயராம், சரியாக படம் வாய்க்கும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே காமிராவை சொடுக்குவார். கோணமும் ஒளியும் வசமாக அமையாதென்று தெரிந்தால் யானையோ புலியோ குறுக்கே நடந்தால்கூட கண்டுகொள்ளமாட்டார். அதே நேரத்தில் ஒரு பட்டாம்பூச்சி பூவில் அமரும் தருணத்துக்காக மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பார். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்பு அவர் தன் படங்களை ஒளிவில்லைகளாக்கி (slides) காட்சிப்படுத்துவதுண்டு. கேரளாவில் அவரது ஒளிவில்லைக் காட்சிகள் மிகப் பிரபலமானவை.

படங்களை எடுப்பதில் மட்டுமல்லாமல் அதை அச்சிடுவதிலும் சட்டமிடுவதிலும்கூட மிகக் கவனமெடுத்துக்கொள்வார். கேரளாவிலிருந்து தருவிக்கப்பட்ட மரங்களைக்கொண்டு அவரது படச் சட்டங்களை செய்துகொடுக்கவென தச்சர் ஒருவர் உண்டு. அதேபோல படங்களை அச்சிடுவதற்கான தாளையும் துணிச்சுருளையும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்வார். இவ்வாறு ஒவ்வொரு படத்துக்கும் அவர் தனது உழைப்பைத் தவிர செய்யும் செலவுகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படமாட்டார். செய்யும் காரியம் திருத்தமாகவும் சிறப்பாகவும் மட்டுமே இருக்கவேண்டுமென்பதில் அவர் காட்டும் உறுதி நம்பமுடியாதது. தரக்குறைவை எதிலும் அனுமதிப்பதில்லை அவர்.

சூழல் பாதுகாப்புக்கும் சிறு உயிர்களை உலகுக்கு அடையாளம் காட்டிய மேதமைக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் அவர் கண்டுபிடித்த இரு உயிர்களுக்கு ஜெயராமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எறும்பைப் போன்றிருக்கும் ஒரு சிலந்திக்கு ‘மைர்மாக்ளே ஜெயராமணி’ என்றும், அரிய தவளை இனமொன்றுக்கு ‘ராவோர்செரஸ்டஸ் ஜெயராமணி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.   

இயல்பில் அவர் தன்னைப் பற்றி அதிகமும் வெளிப்படுத்திக் கொள்ளாதவர். இத்தனை பெரிய சாதனைகளை செய்திருக்கிறோம் என்ற மிதப்போ எண்ணமோ அவரிடமிருந்து ஒருபோதும் வெளிப்பட்டதில்லை. அவரைத் தேடி வரும் நண்பர்களிடம் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்ற பேரார்வம் உண்டு. எடுத்த படங்களைக் கொண்டு வந்து நண்பர்களிடம் ஆவலுடன் காட்டுவார். அதன் சிறப்பியல்புகளை விளக்குவார். அவர் கோவையில் வாழ்ந்தபோதும்கூட தமிழகத்தைவிட கேரளாவில் அதிகமும் அறியப்பட்டவர். ஒரு சிற்றூரில் நடந்த அவரது படக்காட்சியை கண்டுகளிக்க கேரள முதல்வர் வருகை புரிந்தார். கேரளாவிலும் கர்நாடகாவிலும் உதகையிலும் அவருக்கு நண்பர்கள் ஏராளம். அவர் வருகிறார் என்றால் அவருடன் பயணம் செய்யவும் அவருக்கு உதவி புரியவும் நண்பர்கள் போட்டிபோடுவார்கள்.

இளமையில் மிக வசீகரமான தோற்றம் கொண்டவர் ஜெயராம். பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் இப்போது பார்க்கும்போது ‘அழகன்ய்யா’ என்று சொல்லத் தோன்றுகிறது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நேரம் பார்க்காமல் உரையாடுபவர்.  

கானுயிர் புகைப்பட மேதை டி.என்.ஏ பெருமாள் மீது மிகவும் மதிப்புகொண்டவர் ஜெயராம். அவர்கள் இருவருக்குமான உறவு மிக அபாரமானது. அவரைப் பற்றி புத்தகத்துக்காக பதினைந்து நாட்களுக்கும் மேலாக உரையாடியது ஜெயராமின் அழகிய இல்லத்தில்தான். அந்தப் புத்தகத்தின் எழுத்து வடிவத்தை வாசித்து திருத்தங்களை செய்து தந்தார் ஜெயராம்.

அண்மையில் வெளியான என்னுடைய நாவல் ‘வேங்கை வனம்’ உருவாகக் காரணமானவர் ஜெயராம். சிறிய குறுநாவலாக எழுதியதைப் பார்த்துவிட்டு அதன் விரிவான சாத்தியங்களைக் குறித்து உரையாடி அதற்கான தரவுகளையும் நூல்களையும் தந்துதவினார்.

அவரைக் குறித்த ஒரு நூலை எழுதுவதற்கான எண்ணம் இருந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், செயல்படுத்துவதற்கு முன்பே காலம் முந்திக்கொண்டது. நோய்பட்ட நிலையிலும் ‘சரியாகி வந்தவுடன் தொடங்கிவிடலாம்’ என்று ஆனந்திடம் உறுதியளித்திருந்தார். செல்ல வேண்டிய பயணங்கள், எடுக்க வேண்டிய படங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று திட்டங்களுடன்தான் அவர் சிகிச்சைக்குச் சென்றார். நெடுங்காலம் தன்னையே ஆராதித்திருந்த அன்பரை தன்னுடனே இணைத்துக்கொள்ளும் இயற்கையின் திட்டத்தை அவர் அறிந்திருக்கவில்லை, வேறு யாருமேகூட.

Wednesday, 2 August 2023

நிலத்தை எழுதும் கதைசொல்லி - என்.ஸ்ரீராம் கதைகள்





(ஏப்ரல் 2023, சென்னையில் ‘நற்றுணை’ அமைப்பு நடத்திய என்.ஸ்ரீராம் கதைகள் குறித்த கலந்துரையாடல் அமர்வில் வாசிக்கப்பட்ட தலைமையுரை)

அண்மை காலங்களில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் அல்லது அவர்களது எழுத்துகளைப் பற்றி பேசும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக. இது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்துள்ள முக்கியமான ஒரு மாற்றம் என்றே எண்ணுகிறேன்.

ஒரு எழுத்தாளனை இதுபோன்று ஏன் கொண்டாட வேண்டும்? அவன் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படி என்ன அவசியம் நேர்ந்துவிட்டது?

இன்றைய சூழல்தான் அப்படியொரு அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.

நம் வாசிப்புப் பழக்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலகட்டம். புத்தகங்கள் வாசிக்கும் நேரத்தில் கணிசமான பகுதியை இன்று சமூக வளைதளங்கள் எடுத்துக்கொள்கின்றன.

சமூக வலைதளங்களை விட்டு விலக முடியவில்லை. கையிலேயே இருக்கும் உலகம். நொடிக்கு நொடி மாறும் அவசர உலகம். இந்த நொடியில் அனைவரையும் கவனத்தில் ஈர்த்த ஒன்று மறுநொடியில் காணாமல் போய்விடுகிறது. எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் இன்னொரு முக்கியமான விஷயம் வந்த நொடியில் எரிநட்சத்திரம்போல காணாமல் போய்விடுகிறது.

சுஜாதா குறிப்பிட்டதுபோல எல்லாமே ‘ஒரு நிமிட புகழ்’ தான்.

யோசித்துப் பாருங்கள். கடந்த ஒரு வார காலத்தில் சமூக ஊடகங்களில் எத்தனை விஷயங்கள் கடந்து போயிருக்கின்றன? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி. முதல்நாள் பற்றியெரிந்த ஒரு பிரச்சனை அன்று மாலையே காணாமல் போய் வேறான்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சமூக ஊடகங்கள் நம் முன்னால் ஏராளமானவற்றை கொட்டு வந்து கொட்டுகின்றன – செய்திகள், வம்புகள், கிசுகிசுக்கள், புறணி, தகவல்கள், ஊகங்கள் என்று எண்ணற்ற குப்பைகள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை கடந்து செல்லவே நேரிடுகிறது.

வாசிப்புக்கே நெருக்கடி தரக்கூடிய சூழல். எதையும் ஆழமாக வாசிக்க விடாமல் ஒரு வரிச் செய்திகளாக தெரிந்துகொண்டால் போதும் எனும் மனநிலை இன்றைய தலைமுறைகளுக்கு இருக்கிறது.

என்னுடைய நெருக்கமான நண்பர்களில் பலரது வாசிப்புப் பழக்கம் பாதிக்கப்பட்டிருப்பதை நேரடியாகக் காண்கிறேன். 500 பக்க நாவலை ஒரு வாரத்துக்குள் வாசிக்கும் நண்பர்கள் இன்று இரண்டு மாத காலம் ஆகியும் படிக்காமல் வைத்திருக்கிறார்கள். பதிலாக, ‘இவ்ளோ பெரிசா எழுதினா யாரும் படிக்கமாட்டாங்க. சின்னதா 150 அல்லது 200 பக்கத்துலதான் எழுதணும்’ என்று ஆலோசனை வேறு.

சுருக்கமாக சிறியதாக பத்து வரியில எழுத வேண்டும். இதுதான் இன்றைய விதி.

தீவிர இலக்கிய வாசிப்பு என்பதே 500 பேர்களைக்கொண்ட ஒரு சிறிய வட்டம்தான். ரொம்ப காலமாக சொல்லப்படக்கூடிய ஒரு வரையறை. அந்த 500 பேர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அந்த எண்ணிக்கை கூடியதுபோலவே தெரியவில்லை. பதிலுக்கு இன்று ஒரு பதிப்பு என்பது 32 பிரதிகள்தான் என்கிற தொழில்நுட்படி வசதி வேறு.

இந்த 500 பேருடைய வாசிப்புக்கான நேரத்தில் கணிசமான நேரத்தை சமூக வலைதளங்கள் எடுத்துகொள்கின்றன. மீதி நேரத்தில்தான் வாசிக்கவேண்டும். குறிப்பாக இலக்கியம் வாசிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தீவிர இலக்கியம் வாசிக்கவேண்டிய நிலை.

0

ஓரளவுக்கு இன்றைய நவீன இலக்கியச் சூழலும்கூட இப்படியொரு நெருக்கடியை நமக்குத் தருகிறது என்றே சொல்லலாம். அன்றாடம் எண்ணற்ற கதைகள் எழுதப்படுகின்றன. எண்ணற்ற கதைகள் வெளியாகின்றன. அந்தக் கதைகளைப் படியுங்கள் என்ற வேண்டுகோள்கள், அறிவிப்புகள் நமக்கு வருகின்றன. புதிய புதிய எழுத்தாளர்கள், புதிய கதைகள். பல சமயங்களில் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதே சிரமமாக இருக்கிறது.

இன்று வெளியாகிற இணைய இதழ்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.

சொல்வனம், தமிழினி, கனலி, வாசக சாலை, அகழ், வனம், நீலி, அரூ, ஆவநாழி என்று பெரிய வரிசை உள்ளது. இவை தவிர அச்சிதழ்கள் – காலச்சுவடு, உயிர்மை, புரவி, அந்திமழை, தீராநதி உள்ளிட்டவை.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் வண்ணதாசன் (இந்த ஆண்டும் பதிமூன்று கதைகளுடன் புதுத் தொகுப்பு ‘அகிலம்’ வந்துள்ளது) நாஞ்சில்நாடன் (கணக்கே இல்லை. கட்டுரையும் கதையுமாக எழுதிக் கொண்டே இருக்கிறார்) பாவண்ணன் (சத்தமில்லாமல் கதைகளும் தொகுப்புகளும் வந்துகொண்டேதான் உள்ளது) ஆகியோரது எழுத்துகள் இந்த இதழ்களில் வருகின்றன.

ஒருசில நாட்கள் வீட்டில் அடைபட்டிருக்க வேண்டிய நிலைமை வந்தபோது பத்து வருஷத்துக்கு எழுதவேண்டிய ஒட்டுமொத்த கதைகளையும் எழுதிப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் ஜெயமோகன்.

இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரது கதைகளும் இவற்றில்தான் வெளியாகின்றன. நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களது கதைகளும் இங்குதான் வெளிவருகின்றன.

ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஐந்து கதைகள் என்று கணக்கு வைத்தாலும்கூட மாதம் ஒன்றுக்கு ஐம்பது கதைகள் வெளியாகின்ற. வருடத்துக்கு ஐநூறு கதைகள். ஒரு நாளைக்கு ஒரு கதை படித்தாலும்கூட எல்லாவற்றையும் படித்து முடிப்பது சாத்தியமில்லை.

இத்தனை கதைகளுக்கு நடுவில்தான் அபாரமான கதைகளும் எழுதப்படுகின்றன, சாதாரணக் கதைகளும் எழுதப்படுகின்றன. சாதாரணக் கதைகளைப் படித்து வெறுத்துப்போய் அதற்கடுத்து இருக்கும் நல்ல கதைகளைத் தவறவிடும் சாத்தியங்களும் உள்ளன. எண்ணற்ற எழுத்தாளர்கள், ஏராளமான உற்பத்தி – கடுமையான சூழல் இல்லையா?

சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எத்தனை புதிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின என்று நினைவிருக்கிறதா? ஒரு பட்டியலிட்டுப் பாருங்கள். முப்பத்துக்கும் அதிகமாக இருக்கும். முதல் கேள்வி, எல்லாவற்றையும் வாங்க முடியுமா? அடுத்த கேள்வி, வாங்கினாலும் அவற்றுள் எத்தனைத் தொகுப்புகளை படித்து முடிக்க முடியும்?

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம், இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் வருடத்துக்கு ஒரு தொகுப்பு வெளியிடுகிறார்கள். சுஷில்குமார் பாரதி, வைரவன் லா ரெ., கா.சிவா என்று பலரும் உற்சாகத்துடன் எழுதி வருகிறார்கள். கமலதேவி எழுத வந்து ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. 100க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார். ஐந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இத்தனை ஊக்கத்துடன் கதைகளை எழுதவும் புத்தகங்களை வெளியிடவும் சில பதிப்பாளர்களும் காரணமாக இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யாவரும் கரிகாலன். இந்த எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பிக்கும்போதே அவர் தொகுப்புக்கான லே-அவுட்டை தயார் செய்துவிடுகிறார்போல. தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களது தொகுப்புகளை வெளியிடுகிறார். வாசக சாலை பதிப்பகமும் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது.

உண்மையில் மகிழ்ச்சியான ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு புதிய தொகுப்பு என்பது எழுத்தாளனுக்கு சந்தோஷத்தைத் தருவது. இன்னும் எழுதுவதற்கான முனைப்பைத் தருவது.

இதுவரைக்கும் நான் சொன்னது நேரடியான தமிழ்ச் சிறுகதைகளை மட்டும்தான். மொழிபெயர்ப்புகளை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

இதுவரையிலும் சொன்ன சூழல் வாசகனுக்கு மட்டுமானதில்லை. ஒரு எழுத்தாளனுக்கும்தான். சொல்லப்போனால் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால் வாசகனுக்கு நேர்வதைவிட கடினமானது.

ஏற்கெனவே சொன்ன கணக்கில் பத்து கதையாவது நம்முடைய கணக்கில், பெயரில் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது பெயரை நினைவில் வைத்திருப்பார்கள். தமிழினி வசந்தகுமார் சொல்லுவார் ‘சீன்’ல இருந்துட்டே இருக்கணும். இல்லேன்னா சீக்கிரமா மறந்துருவாங்க.’ இன்றைய நிலையில்  எழுத்தாளனுக்கு கடுமையான சவால்.

அவனுக்கு முன்னால் எழுத வந்த மூத்த எழுத்தாளர்களில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், கலாப்ரியா, விட்டல்ராவ் போன்று சிலர் இன்னும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவனுடனே எழுத வந்த சக எழுத்தாளர்களில் பலரும் கூடவே தொகுப்புகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெருங்கூட்டம், படு வேகமாக மாதம் ஒரு கதை, வருடம் ஒரு தொகுப்பு என்ற கணக்கில் அசராமல் ஓடி வருகிறார்கள். ஓட முடியவில்லை, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று நிற்க முடியாது. அவ்வளவுதான். எல்லாரும் ரொம்ப தூரம் முன்னால் போயிருப்பார்கள். அதன் பிறகு அந்த மைதானத்தில் அவன் மட்டும் தனியாக ஓடிக்கொண்டிருப்பான். அதனால், நிற்காமலும் சீரான வேகத்திலும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது ரொம்ப முக்கியமானது.

ஒரு புனைகதை எழுத்தாளனாக இருப்பது அவ்வளவு சுலபமில்லை. மிகவும் கடினம். புனைகதை எழுதவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், சற்று யோசித்துப் பாத்துவிட்டு இந்த மைதானத்தில் இறங்குவது நல்லது.

ஏதாவது ஒரு இதழில் உங்களுடைய கதை வெளிவந்திருக்கும். நான்கு பேர் படித்துவிட்டு நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்லியிருப்பார்கள். அன்று அந்த சந்தோஷத்துடனே தூங்கப் போவீர்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இருக்காது. எல்லாருமே வேறொரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நல்ல கதையைப் பற்றி தொடர்ந்து பேசுவது என்பதெல்லாம் எழுத்தாளனே ரொம்ப மெனக்கெட்டு செய்தால் மட்டுந்தான் நடக்கும். கதையைப் பற்றி வரும் கருத்துகளை கூச்சப்படாமல் தொடர்ந்து மற்றவர்களுக்கு பகிரவேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக அந்தக் கதை காணாமல் போய்விடும்.

இப்பிடி ஒரு சவால் மிகுந்த சூழ்நிலையில ஒரு எழுத்தாளனைப் பற்றியும்

அவனுடைய கதைகளைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரும்பத் திரும்ப எழுத்தாளனின் பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வாசகனுடைய நினைவிலும் இலக்கியச் சூழலின் ஞாபகத்திலும் எழுத்தாளனின் பெயரை உரக்கச் சொல்லி மறக்கவிடாமல் செய்ய வேண்டிய தேவை இன்றைக்கு உள்ளது.

0

அந்த வகையில் இன்று நாம் இந்த இரண்டு மணி நேரமும் என்.ஸ்ரீராமுடைய பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம். இப்பிடியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ‘நற்றுணை’ அமைப்புக்கு நன்றி, பாராட்டுக்கள்.



0

என்.ஸ்ரீராமை ஏன் நாம் இப்போது பேசவேண்டும்? தமிழ்ச் சிறுகதையின் படிநிலையில் அவரை எங்கே வைக்கமுடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல, அவர் எழுதக்கூடிய பிரதேசம் சார்ந்த சில அடிப்படைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

என்.ஸ்ரீராம் தாராபுரத்துக்கு அருகில் உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கொங்குப் பகுதியைச் சேர்ந்தது. தமிழக வரலாற்றில் கொங்குப் பிரதேசம் தனியாகக் குறிப்பிடப்படுவதில்லை. சேர நாட்டின் ஒரு பகுதியாகவே மிகச் சிறிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. பேரூர், கரூர் போன்ற சில ஊர்களைப் பற்றிய குறிப்புகளே உள்ளன. அதிகமும் வேளாண்மை சார்ந்த பெரும் நிலப்பரப்பு. சுதந்திரத்துக்கு பிறகு ஏற்பட்ட பெரும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக கோவை, திருப்பூர், சேலம், கரூர் போன்ற நகரங்கள் கொங்குப் பிரதேசத்துக்கான கவனத்தை ஏற்படுத்தின.

இலக்கியத்திலும் இதே நிலைதான். சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் அதிகமான புலவர்கள் கொங்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கொங்கு வேளிர் எழுதிய ‘பெருங்கதை’யும், எம்பெருமான் எழுதிய ‘தக்கை ராமாயண’மும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். நன்னூல் தந்த பவணந்தி முனிவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவற்றைத் தவிர அண்ணன்மார் சுவாமிகள் கதை போன்ற நாட்டார் இலக்கியங்கள் உள்ளன.

நவீன இலக்கியத்தைப் பற்றி யோசிக்கும்போது உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் ஆர்.சண்முகசுந்தரம். அவருடைய புகழ்பெற்ற நாவல் ‘நாகம்மாள்’ இந்தியாவின் முதல் வட்டார வழக்கு நாவல் என்று க.நா.சு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.சண்முகசுந்தரம் ‘மணிக்கொடி’யில் சிறுகதை எழுதியிருக்கிறார். ‘பாறையருகில்’ என்ற அவரது முதல் கதை மணிக்கொடியில்தான் பிரசுரமாகியிருக்கிறது. இருபதுக்கும் அதிகமான கதைகளை எழுதியுள்ளார். ‘நந்தா விளக்கு’ என்ற தொகுப்பு 1944ல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவருடைய சாதனை சிறுகதைகளில் இல்லை, நாவல்களில்தான். 1942இல் வெளியான ‘நாகம்மாள்’ நாவலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் கு.பா.ரா. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் முதன்முதலாக நாவல் எழுதியவர் ஆர்.சண்முகசுந்தரம்.  அவருக்கு நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? அவருடைய மொழியாக்கங்கள்தான் காரணமாக இருக்கவேண்டும். வங்காளத்திலிருந்து பல நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யை தமிழுக்குத் தந்திருக்கிறார்.  சரத் சந்திரரின் எல்லா நாவல்களையுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  கோவையிலிருந்து ‘வசந்தம்’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அவர் 1977ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார். தனது கடைசி காலத்தில் அவர் எதையும் எழுதவில்லை. காலமாகி ஐம்பது வருடங்கள்தான் ஆகியுள்ளன. ஆனால், அவர் எழுதிய பல நாவல்களும், மொழிபெயர்ப்புகளும் நமக்குக் கிடைக்கவில்லை. எதையும் பத்திரப்படுத்துகிற, ஆவணப்படுத்துகிற பழக்கம் நம்மிடம் இல்லை. எனவே, மறந்துபோவதும் நமக்கு சுலபமாக உள்ளது. இன்று என்.ஸ்ரீராமைப் பற்றி பேசுவதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து நான் ஆர்.சண்முகசுந்தரத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

அவருக்குப் பிறகு கொங்குப் பிரதேசத்தின் ஒரு பெரிய இலக்கியத் திருப்பம் ‘வானம்பாடி’. 1970களில் தமிழ்க் கவிதையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இதழ், இயக்கம்.

அடுத்த முக்கியமாக குறிப்பிடவேண்டிய எழுத்தாளர் க.ரத்னம். 1962இல் அவருடைய ‘கல்லும் மண்ணும்’ வெளியானது. அந்த காலத்தில் நாவல்கள் இருந்த போக்குக்கு மாறாக சுருக்கமாக 120 பக்கங்களில் ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல். வளர்ச்சியின் பெயரில் நிலமும் வளமும் பாழடிக்கப்படும் போக்கை, சூழல் சீர்கேட்டை முதன்முதலாக சுட்டிய புனைவு. க.ரத்னம் இன்று கோயமுத்தூரில் வசிக்கிறார். கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பறவையியலாளர். அவருடைய சாதனைகள் இரண்டு.  எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்‘ எனும் 3500 பக்கம் கொண்ட நூலை ஏழு தொகுதிகளாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தது, ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்னும் புத்தகம். தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தில் சூலூர் குளக்கரையில் பார்த்த பறவைகளைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து எழுதிய புத்தகம். அழகான வண்ண ஓவியங்கள் கொண்ட பறவைகள் கையேடு. இன்று பறவை ஆர்வலர்கள் அதிகமும் புரட்டிப் பார்க்கும் ஒன்று. முதலில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. இப்போது மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவற்றைத் தவிர, ஜேம்ஸ் ஜாய்ஸோட ‘டப்ளினர்’ஸை மொழிபெயர்த்திருக்கிறார். செகாவின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

இப்படி ஒரு ஆளுமை நம்மிடையே இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. தமிழகத்தில் எத்தனையோ விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவருடைய பெயர் எங்குமே பரிசீலிக்கப்படுவதில்லை.

ஆர்.சண்முகசுந்தரம், க.ரத்னம் இவர்களுக்குப் பிறகு பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட 30 வருஷம் கழித்து 1980களில்தான் புதிய எழுத்தாளர்கள் இந்தப் பகுதியிலிருந்து எழுத வந்தார்கள். சி.ஆர்.ரவீந்தரன், சூரியகாந்தன், சுப்ரபாரதிமணியன், பெருமாள்முருகன், தேவிபாரதி, எம்.கோபாலகிருஷ்ணன், வா.மு.கோமு என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.

இதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் என்.ஸ்ரீராம்.

என்.ஸ்ரீராமை ஆர்.சண்முகசுந்தரத்தின் தொடர்ச்சி என்றே சொல்லலாம். முதல் காரணம் அவரும் கீரனூரைச் சேர்ந்தவர்தான். இரண்டாவது காரணம் இருவரும் எழுதிய களமும் வாழ்க்கையும்.

0

என்.ஸ்ரீராமின் கதைகளின் மூன்று அம்சங்களைக் குறிப்பிடவேண்டும்.

ஒன்று, அவருடைய கதைகள் அதிவேகமான சிதைவுகளுக்கு நடுவிலிருந்து கொங்கு வாழ்க்கையின் பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்து வைத்திருக்கிறது என்பது.

ஆர்.சண்முகசுந்தரம் கண்ட கிராமங்கள் ஸ்ரீராமின் காலத்தில் இல்லை. ஸ்ரீராமின் காலத்திலிருந்த அடையாளங்கள் இன்று இல்லை. இன்று எஞ்சியிருக்கும் சில அடையாளங்களும்கூட இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் இருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீராமின் கதைகளில் உள்ள கிராமங்களை, தெருக்களை, சந்துகளை, இட்டேரிகளை இப்போதுகூட பார்க்க வாய்ப்பில்லை. கொறங்காடுகள், கோம்பை வீடுகள், பாம்பேரிகள் என்று அவர் குறிப்பிடும் நிலங்களையும் அதன் அடையாளங்களையும் வெகுவேகமாக இழந்து வருகின்றன இன்றைய கொங்கு கிராமங்கள்.

அவருடைய கதைகளிலுள்ள பல்வேறு மனிதர்களை - பூனைபிடிப்பவர்கள், முனிவிரட்டிகள், அம்மி கொத்துபவர்கள், சாமியாடிகள், கிணறு வெட்டுபவர்கள், பேயோட்டுபவர்கள் – இன்று காண்பது அரிது. இவர்கள் அனைவருமே அந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள்.

துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் கொங்கு கிராமத்துக்கென உள்ள பழக்கவழக்கங்களை பண்பாட்டுக்கூறுகளை இனியொரு தலைமுறை என்.ஸ்ரீராமின் கதைகளின் வழியாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

பருவகாலங்கள், பொழுதுகள், மரங்கள், பறவைகள், செடிகள் என நிலக்காட்சிகளை இக்கதைகள் மிக இயல்பாக விவரிக்கின்றன. ஒரு நிலத்தையும் அதன் உயிர்களையும் புனைவின் ஒரு பகுதியாக ஆக்குவதென்பது திட்டமிட்டோ வலுக்கட்டாயமாகவோ செய்வதல்ல. இயல்பாக நிகழவேண்டும். என்.ஸ்ரீராமின் கதைகளில் உள்ள நிலமும் தாவரங்களும் பறவைகளும் விலங்குகளும் வெறும் தகவல்களாக அமைவதில்லை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களுக்கும் சூழலுக்கும் பொருந்தி அமைபவை. கதை மையத்துக்கு மேலும் வலு சேர்ப்பவை.

என்.ஸ்ரீராம் தன் கதைகளில் காட்டியிருக்கும் சூழல் உலகை திரும்பவும் நம் வாழ்வில் நாம் சந்திக்கவே முடியாது. நுட்பமான தகவல்களுடன் விவரணைகளுடன் கிராமங்களை காட்டுகிறார். ஓவியங்களைப் போலவோ நிழற்படங்களைப் போலவோ அல்ல. அந்தப் படங்களுக்கு அல்லது ஓவியங்களுக்கு நிறங்கள் உண்டு, வாசனை உண்டு, சத்தங்களைக் கூட தெளிவாக கேட்க முடியும். முக்கியமாக ஸ்ரீராம் பல இடங்களில் கிராமத்துக்கான வாசனைகளைப் பற்றி எழுதியிருக்கிறார் – ‘நாணல் பூவெடுக்கும் பருவமாதலால் சுனை வாசனை கண்டிருந்தது’, ‘வெள்ளாட்டுக் கிடாவின் மொச்சை வாசனை’, ‘காற்று வைக்கோல் வாசம் படர்ந்துவீசியது’, ‘இரவில் எருக்கு மணத்துடன் காற்று வீசியது’, ‘கொறங்காட்டில் தட்டைக் கொடிப் பூக்களின் வாசனை’. இந்த மனிதர்களை, பழக்கவழக்கங்களை, வாசனைகளை இழந்த கிராமங்கள்தான்  இன்று எஞ்சியுள்ளன. ஆனால் இவற்றை என் ஸ்ரீராமின் கதைகளின் வழியாக உயிர்ப்புடன் நம்மால் அனுபவிக்க முடியும்.

அழிவுற்ற ஒரு பிரதேசத்தின் அடையாளங்களை, பழக்கவழக்கங்களை இக்கதைகள், பண்பாட்டு ஆவணங்களாக பாதுகாத்து வைத்துள்ளன.

0

இரண்டாவதாக, இன்று பெரும்பாலான கொங்கு கிராமங்களில் காணாமல்போய்விட்ட ‘கொங்கு’த் தமிழை ஸ்ரீராமின் கதைகளில் கேட்க முடிகிறது என்பது.

இவன் ‘ஒந்தி’ வழிவிட்டான், வயல் வழி ’மூயவே’ இல்லை, தொறப்புக்குச்சி, ‘பாப்புராணி’ கிணற்று மேட்டில் ஓடியது, ‘மளார்’னு வேலையைப் பாரு, ‘ஓரியாட்மா’ இருக்கு போன்ற கொங்கு பிரயோகங்கள் சுவையானவை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்கூட திருமணங்களில்,கோயில் விசேஷங்களில் வயதில் மூத்தவர்களின் உரையாடல்களில் வெகு இயல்பாக  இடம்பெற்ற இந்தப் பேச்சுத் தமிழ் இப்போது அருகி வருகிறது. இன்றைய தலைமுறையினர் இந்த வழக்கை அதிகமும் பயன்படுத்துவதில்லை. ஒரு பண்பாட்டின் முக்கிய அடையாளமான இந்த உரையாடல் மொழி ஸ்ரீராமின் கதைகளின் முத்திரை அம்சமாக அமைந்திருக்கிறது.

0

மூன்றாவதாக, கொங்கு பிரதேசத்தின் விவசாய வாழ்வின் சவால்களை இக்கதைகள் விரிவாகப் பேசியுள்ளன.

அமராவதி – மழைக் காலத்தில் மட்டுமே நீரோடும். சண்முக நதியில நான் தண்ணீரைப் பார்த்தது இல்லை. வேறு நீர் ஆதாரங்கள் இல்லாத சூழல். வானம் பார்த்த பூமி. கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கவேண்டிய நிலை. நிலத்தடி நீர் கீழே போகப் போக ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்ட வேண்டிய கட்டாயம். அதிலும் தோல்வி. அதனால் ஏற்படும் கடன். மாடு கன்றுகளை விற்று சமாளிக்க வேண்டிய அவலம். இதனால் நிறைவேறாது போகும் திருமணங்கள். அறுபடும் உறவுகள். தற்கொலைகள் என்று அழிந்து வரும் விவசாயத்தையும் விளைநிலங்கள் விரைவாக மனைகளாகும் அவலத்தையும் இக்கதைகள் சுட்டி நிற்கின்றன.

0

என்.ஸ்ரீராமின் தனிச் சிறப்பு என்று எதைச் சொல்ல முடியும்?

ஏற்கெனவே சொன்னதுபோல அவர் ஒரு ‘கதைசொல்லி’. கதை சொல்வது என்பது நமது மரபான வடிவம். தொன்றுதொட்டு வருகிற ஒன்று. அவரால் தொடர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது. மிகுந்த விவரணைகளுடன் கேட்பதற்கு சலிப்பேற்படாதவண்ணம் சுவையாகச் சொல்கிறார். ஒரு கிராமத்து நிகழ்வை நம் கண் முன்னே அதன் எல்லா நுட்பங்களுடனும் நிகழ்த்திக் காட்டுகிறார்.

எந்தக் கதையிலும் அவர் சூழலைச் சொல்லாமல் விடுவதில்லை. அந்த சமயத்தில் பொழுது எப்படியிருந்தது, காற்று எப்படி வீசியது, வானத்தில் முகில்கள் எப்படியிருந்தன, எந்த மரத்தில் எந்தப் பறவை எது மாதிரி ஓசை எழுப்பியது, செடிகளும் பூக்களும் உயிர்களும் எப்படியிருந்தன என்று எதையுமே விடாமல் சொல்லிவிட்டுத்தான் அவர் கதைக்கு வருவார்.  ‘இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை எழுத்தும் இல்லை’ என்பதே நம் சங்க இலக்கிய மரபு. என்.ஸ்ரீராம் அந்த மரபில் வந்தவர். இயற்கையைக் குறித்த அக்கறையும் கவனமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால், இலக்கியத்தில் அது நடக்கலாகாது. எழுத்திலிருந்து இலக்கியத்திலிருந்து சூழலையும் இயற்கையையும் விலக்கும்போது அது பண்பாட்டிலிருந்தும் அழிக்கப்படுகிறது என்றே பொருள். நகரெங்கும் குளங்களை குப்பைகளை இட்டு நிரப்பிக் காணாமல் செய்வதுபோல ஒட்டுமொத்தச் சூழலும் அழிக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கும் பண்பாட்டுக்கும் எழுத்தும் இலக்கியமும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அது.

டி.என்.ஏ பெருமாள் என்றொரு கானுயிர் புகைப்பட கலைஞர். கருப்பு வெள்ளைப் புகைப்படத்தின் மேதை. மேதைகளையும் மேதமைகளையும் புறந்தள்ளிவிட்டு மலினங்களை கொண்டாடும் நம்மில் பலருக்கும் அவரது மகிமை தெரியாதது ஒன்றும் அதிசயமில்லை. கானுயிர் புகைப்படக் கலையைப் பற்றிய அவரது கோட்பாடுகளில் ஒன்று, ஒரு கானுயிருக்கான உருவாக்கும்போயேது மூன்றில் ஒரு பகுதியேனும் அதன் சூழலைக் கொண்டிருக்கவேண்டும் என்பது.  வாழ்நிலையின் பின்னணியில்லாது எடுக்கப்படும் படங்கள் பொருளற்றவை.  பின்னணி முழுக்க மழுங்கடிக்கப்பட்டு உருவம் மட்டுமே துலங்கி நிற்கும் படங்கள் வழியாக சொல்வதற்கு எதுவுமில்லை.

 

இலக்கியமும் அப்படித்தான். கதை நிகழும் கதைமாந்தர்கள் உலவும் சூழலைச் சொல்லாமல் எழுதுவது என்பது உயிரற்ற நிறமற்ற சித்திரங்களை உருவாக்குவதுதான்.

 

இந்தச் சூழல் சித்தரிப்பு என்பது தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் காட்டுவதாக எந்தக் கதையிலும் அமைந்ததில்லை. சூழலின் அனைத்து அம்சங்களுமே குறிப்பிட்ட அந்தக் கதையின் கதாபாத்திரத்தின் மன நிலையை, குறிப்பிட்ட கதை முடிச்சின் அழுத்தத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படியொரு மரபான கதை சொல்லி எழுதுகிற கதை இன்றைய நவீன உரைநடைக்கு, புனைகதைக்கு பொருந்தி வருமா என்ற சந்தேகமும் கேள்வியும் எழும். என்.ஸ்ரீராமின் கதைகள் பலவற்றில் நவீன புனைகதைக்கான வடிவ நேர்த்தி அமைந்திருக்காது. கச்சிதக் குறைவுகள் உண்டு. திருத்தமான சொல் முறை, நறுக்கான உரையாடல்கள் இடம் பெற்றிருக்காது.  இந்த வகையான இலக்கணங்களுக்கு ஸ்ரீராம் தன் கதைகளில் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஏனெனில் அதற்கான தேவைகள் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஆனால், நவீன புனைகதைகளுக்கான அகநுட்பங்களை என்.ஸ்ரீராம் தன் கதைகளில் தவறவிடுவதில்லை என்பதுதான் முக்கியமானது. மரபான விதத்தில் சொல்லப்பட்ட கதையாக இருந்தபோதிலும் அக்கதைகளில் அவர் நவீன சிறுகதைக்கான உட்கூறுகளை மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அவருடைய பல கதைகளும் அந்தக் கதைகளின் முடிவிலிருந்து புதிதாக ஒரு கதையை யோசிக்கச் செய்கின்றவை. உதாரணமாக, ‘சிதைகோழி’, ‘பெயரைத் தொலைத்தவன்’.

அவர் கதைகளில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதுபோலத்தான் தெரிகிறது. பல கதைகளில் அவர் சொல்லாமல் விடும் இடங்கள் அந்தக் கதைகளை வேறு கோணத்தில் யோசிக்கச் செய்கின்றன. நவீன புனைகதைக்கான முக்கியமான கூறு இது. உதாரணம் ‘மீட்பு’.

இந்த மரபான கதைசொல்லல் முறையைக் கொண்டே அவர் எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். யார் எந்த விமர்சனக் கண்ணாடியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அவரது கதைகளை ஆராயலாம். பேய்க் கதை, முற்போக்குக் கதை, அரசியல் கதை, பெண்ணியக் கதை, சூழல் விழிப்புணர்வுக் கதை இதுபோல இன்னும் என்னவெல்லாம் கண்ணாடிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு இவருடைய கதைகளை சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு கண்ணாடிக்கும் பொருந்துவதுபோல அவர் ஒரு கதையையாவது எழுதி வைத்திருக்கிறார்.  

பேய்க் கதை வேண்டும் என்றால், நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். சாதிய ஒடுக்குமுறையை விமர்சிக்கும் முற்போக்குக் கதைகளையும் எழுதியுள்ளார். பெண்ணிய கதைகளைத் தேடினால் அந்த வகைமைக்குள் அடங்கும் கதைகளும் உண்டு. சூழல் விழிப்புணர்வு சார்ந்த கதைகள் என்று கேட்டால் அவருடைய எல்லாக் கதைகளுமே சூழல் விழிப்புணர்வு கதைகள்தான். அரசியல் கதைகள் எழுதியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழலாம். முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆனால், இந்தக் கதைகள் எவையுமே அந்தந்த கொள்கைகள் சார்ந்து அல்லது வகைமை சார்ந்த வெளிப்படையான உரத்த குரல் இன்றியேதான் எழுதப்பட்டிருக்கும். இதுமாதிரியான கண்ணாடிகளுக்குப் பொருந்திப்போகும் அதே சமயத்தில் அவை அனைத்துமே என்.ஸ்ரீராமின் கதைகளாக மட்டுமே தனித்து நிற்கும். அதுவே அவற்றின் சிறப்பு.

இறுதியாக, என்.ஸ்ரீராம் இத்தனை காலமும் எழுதி அடைந்த ஒரு இடத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அதுவே ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய இலக்காக இருக்கும். இன்றைக்கு ஏதாவது ஒரு இதழில் ஸ்ரீராமோட கதையை அவருடைய பெயர் இல்லாமல் வெளியிட்டால்கூட படிக்கிறவர்களுக்கு அது அவர் எழுதியதுதான் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது. ஓரிரண்டு வரிகளில், பத்திகளிலேயே கண்டுபிடித்துவிடமுடியும். அந்தக் கதையில் அவ்வளவு அழுத்தமாக அவருடைய ‘கையெழுத்தை’ முத்திரையை பார்த்துவிட முடியும். அப்பிடியொரு இடத்துக்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரை கொண்டாடுவதில் எல்லா நியாயங்களும் உள்ளது. அதனால்தான் இங்கு நாம் அவரைப் பற்றியும் அவருடைய கதைகளைப் பற்றியும் பேசுகிறோம்.

இதுமாதிரி பேசுவதின் வழியாக என்.ஸ்ரீராம் என்கிற பெயரை நாஙட தமிழ்ச் சூழலுக்கும் இன்றைய வாசகர்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம், முக்கியத்துவப்படுத்துகிறோம் என்பது அவசியமானது, பெருமைக்குரியதும்கூட.

Tuesday, 1 August 2023

‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ அமலன் ஸ்டான்லி

 


பேரியற்கையின் முன் மனிதனும் ஓர் உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான். என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவுமிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும் மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால், உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதை சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத் துளைக்கிறான். காலம் இடம் சார்ந்திருக்கும் எல்லா எல்லைகளையும் கடந்து சாதனைகளைப் புரியத் தொடர்ந்து முயல்கிறான். இயற்கையை மீற எத்தனிக்கும்போது அதனை சிதைக்கவும் சீரழிக்கவும் தயங்குவதில்லை. இயற்கை முன்னிறுத்தும் எல்லைகளை அவன் தகர்த்தபடியே முன்னகர்கிறான். ஒன்றை அடைந்தவுடன் அதை அனுபவிக்க எண்ணாமல் அடுத்த இன்னொரு படிக்கு முயல்வதே அவனுடைய இயல்பாகிறது. இத்தனையும் எதன் பொருட்டு? எது அவனைத் தொடர்ந்து மேலும் மேலும் என இயக்குகிறது? ஏன் எதிலும் அவன் நிறைவுறுவதில்லை?

எல்லா உயிர்களுக்குள்ளும் அடிப்படையாக அமைந்திருக்கும் ‘உயிரிச்சை‘யே அவனையும் இயக்குகிறது. ஆனால், அது மனிதனுக்குள் ஒரு அணையா நெருப்பாக உக்கிரமாக எரிந்துகொண்டே உள்ளது. அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டே நாகரிகத்தின் வளர்ச்சிப்போக்கில் பல்வேறு விதிகளும் அமைப்புகளும் மனிதனால் உருவாக்கப்பட்டன. ஆனால், சுயநலத்தின்பொருட்டு அவனே அந்த நெறிகளையும் அறங்களையும் சமூக விதிகளையும் மீறிச் செல்வதற்கு யோசிப்பதேயில்லை.. உலகின் எல்லா தீமைகளுக்கும் காரணமாக அதுவே அமைகிறது.

இதை அப்படியே கண்மூடித்தனமாக மேற்கொள்கிறானா என்றால் அப்படியுமில்லை. உலகீய விழைவுகளுக்கான அடிப்படை எது? அதிலிருந்து எங்ஙனம் விடுபடுவது என்பதைப் பற்றிய தொடர்ச்சியான சிந்தனையின் பலனாகவே பல்வேறு யோக நெறிகளும் தியான முறைகளும் கண்டறியப்பட்டன. இச்சைகளால் அலைகழிக்கப்படும் மனத்தையும் உடலையும் கட்டுக்குள் கொண்டுவர இந்நெறிகள் பயன்படுகின்றன.

எளிய வாழ்க்கைப் பின்னணியைக்கொண்ட ஒரு சாதாரண சிறுவன், வாழ்வின் எல்லா நடப்பியல் அனுபவங்களையும், சிறிதும் பெரிதுமான கசப்பும் களிப்புமான அன்றாடங்களையும் கடந்து கல்வியின் வழியாகவும் தொடர்ச்சியான தேடலின் வழியாகவும் எதிலும் நிறைவுகொள்ளாத மனித மனத்தை உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பகுத்தறிய முயலும் பயணத்தைச் சொல்வதே இந்த நாவல்.

1970களில் தொடங்கும் இந்நாவல் வடசென்னையை பின்புலமாகக்கொண்டுள்ளது. கீழ் மத்தியதர மக்களுடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களை, அடையாளங்களை, தனிக்கூறுகளை அடுக்கிக் காட்டியபடியே விரிகிறது. தொகுப்பு வீடுகளிலும், தெருவிலும், பக்கத்து வீடுகளிலும் அன்றாடம் காணும் வாழ்க்கைச் சித்திரங்கள். பள்ளிகள், ஆசிரியர்கள், விளையாட்டுத் தோழர்கள், விந்தையான மனிதர்கள், வேடிக்கையான கதைகள். நோய்மை, மரணம், வரை மீறும் ஆண் பெண் உறவுகள், அவற்றின் விளைவுகள், துயரம், கண்ணீர் என எல்லாவற்றையும் காட்டுகிறது. வாலிபப் பருவத்தின் காதல் கனவுகள், சாகசங்கள், மனக்கோலங்கள், அபத்தங்களையும் விவரிக்கிறது. உயிரூட்டமிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு மனித உறவுகளின் தீர்க்கவியலா ஆழங்களைத் தொட்டுச் செல்கிறது.

ஒரு தனி மனிதனின் ஐம்பதாண்டு கால வாழ்வைச் சொல்வதன் ஊடாக இந்த நாவல் சென்னையின் புறச் சூழலிலும் சமூக அமைப்பிலும் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை, மாற்றங்களை, சிதைவுகளையும் நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது. எளிமையான ஒரு நகரம் பெருநகரமாகும்போது எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளது. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், பொருளாதாரம் ஆகியவற்றின் வழியாக நகரம் வளர்ந்து நவீனமயமாகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வும் அன்றாடங்களும் அந்த மாற்றங்களுக்கு கஏற்ப உருமாறுவதையும் நுட்பமாக புலப்படுத்துகிறது.

பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வளர்ந்து மண் வளத்தையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகள் அசுரவேகத்தில் குவிவதும், அதற்கு எதிர்நிலையில் சூழல் காப்பு குறித்த விழிப்புணர்வைத் தர முனையும் தன்னார்வக் குழுக்கள் தொடங்கப்பட்டு தொண்டாற்றுவதும் இணைச் சரடுகளாக நாவலில் அமைந்துள்ளன. அதேபோல, இன்னொரு சரடாக அமைந்திருப்பது  நோய்களின் மூலத்தை கண்டறியும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து வியாபாரநோக்கை எட்டுவதும் அதன் எதிர்நிலையில் மனிதனின் உள்மன அறிதலைத் தரும் நோக்குடன் வெவ்வேறு தியான, யோக மார்க்கங்கள் பரவலாக உருவாவதும் அமைந்துள்ளது. இவ்வுலகின் ஆற்றல்கள் அனைத்தையும் சமநிலையுடன் பேணும் இயற்கையின் நடவடிக்கைகளோ இவை என யோசிக்க முடிகிறது. 


எண்ணற்ற கதாபாத்திரங்கள், ஏராளமான சம்பவங்கள் நாவலில் இடம்பெற்றிருந்தபோதும் வாழ்வின் திரண்ட சாரத்திலிருந்து அவை எழுதப் பட்டிருப்பதால் உயிரூட்டத்துடன் அமைந்துள்ளன.  ‘இந்த வாழ்வின் பொருள் என்ன?’ என்ற நாவலின் மைய கேள்விக்கு இத்தனை கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வெவ்வேறு கோணங்களில் அடிப்படைகளில் வலுசேர்க்கின்றன.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மரணம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. மூப்படைந்தோரின் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் அகால மரணங்கள், நோயுற்ற மரணங்கள், எதிர்பாரா மரணங்கள் என்று எண்ணற்ற சாவுகள். வாழ்வின் அபத்தத்தை, நிலையாமையை, மெய்நிலையை உணர்த்தவே முனைகிறது மரணம். ஆனால், மனிதன் அதைக் கடந்து மேற்செல்லவே முயல்கிறான். அறிவைக்கொண்டு அதன் எல்லைகளை மீறவே விழைகிறான். உடலை இல்லாமல் ஆக்கும் மரணத்தை இயல்பாக அணுகும் முதிர்ச்சியை அடையவே மனத்தை அவன் பழக்க முற்படுகிறான். மரணத்தை மீறுவதன் வழியாக வாழ்வின் இருப்பை பொருள்கொண்டதாக மாற்ற ஆசைப்படுகிறான். இந்த மோதல் நாவலின் இன்னொரு வலுவான சரடாக அமைந்திருக்கிறது.    

கல்வியின் வழியாக ஒருவன் அடைய முடிகிற வாழ்வு. அதன் போதாமை. எதிலும் நிறைவு கொள்ளாமல் நீளும் ஆழ்மனத் தேடல். முறியும் உறவுகள். மனிதர்களின் மீது நீங்காத நம்பிக்கை, பிற உயிர்களின் மீது உள்ளார்ந்து ஏற்படும் பரிவும் கருணையும் என பல்வேறு ஆழங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவல் இயல்பான, சரளமான வாசிப்புத் தன்மையை எங்குமே தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் விசாரங்கள், யோக தியான அனுபவங்கள், சூழல் சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதும்போது பொதுவாக  அமையநேரும் செய்தி எழுத்துத் தன்மை எங்குமே இடம்பெறவில்லை என்பது முக்கியமானது. கடந்த நாற்பதாண்டுகாலமாக இலக்கிய ஆக்கங்களின் மொழியிலும் நடையிலும் சிறுபத்திரிகைகள் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான தன்மையிலிருந்து விலகி நிற்பதே இந்த நாவலின் சிறப்பு. நாவலின் மொழியும் நடையும் மரபான தமிழில் அமைந்தவை. அதேசமயத்தில் நெருக்கமான வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. நாவலின் பிற்பகுதியில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களில் இவ்வாறான மொழியின் உச்சங்களை அனுபவிக்க முடியும்.

திருப்பதி குடைத் திருவிழா, ஆங்கிலோ இந்திய வாழ்க்கை, எதிர்பாராது அமைந்த மாட்டு வண்டி பயணம், பெருமழையின்போதான அபாயகரமான பேருந்து பயணம், பத்துநாள் மௌனம் அனுசரிக்கும் விபாஸனா தியானப் பயிற்சி, சிறுவர்களுடனான ஆனைமலைப் பயணம், ஜே கேயின் வசந்த விஹாரின் சூழல், கொடைக்கானல் அஞ்சுவீடுக் காட்டுப் பகுதியில் நேரும் அனுபவங்கள், காகங்களையும் மீன்களையும் உற்று நோக்குகையில் அடைய நேர்கிற மன எழுச்சிகள் போன்ற அபாரமான தருணங்கள் நாவலுக்கு செறிவூட்டியுள்ளன. பாடம் சொல்லித்தரும் தேவி அக்காவின் மீதான முதல் காதல், ஆராய்ச்சி மையத்தில் புவனாவுடனான காதலும் திருமணமும் பிறகு முறிவும், ஷெரீனுடனான அடுத்த காதலும் திருமணமும் என்று ஜெர்ரியின் வாழ்வினூடாக பெண் உறவுகள் நிலையின்மையுடன் இருந்தபோதும், எதிர்பாரா மரணங்களையும் ஏமாற்றங்களையும் சரிவுகளையும் சந்திக்க நேர்ந்தபோதும் அவன் சமநிலை குலைவதில்லை. தன்னியல்பில் அவன் பிறருக்கு உதவும் குணம்கொண்டவனாக, இசை, எழுத்து என கலைகளின் மீது ஆர்வம்மிக்கவனாக, உயிர்களின் மீது பரிவுள்ளவனாக, இயற்கையை அதன் விந்தைகளை ரசிப்பவனாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான அனுபவங்கள் அவனை நிதானப்படுத்துகின்றன. மேலும் பக்குவப்படுத்துகின்றன. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு அகம் சார்ந்த அறிதலும் உயிர்களின் மீதான பரிவுமே முக்கியம் என்ற நிலையை எட்டச் செய்கின்றன.

தொடக்கத்திலிருந்து சொல்லப்பட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அதன் சிக்கல்கள், துன்பங்கள், துரோகங்கள், தீர்வு காணமுடியாத புதிர்களைக் கொண்ட ஆண் பெண் உறவுகள், சரிவுகள், ஏமாற்றங்கள், சூழல் சீர்கேடு, நோய்மை, மரணங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் சிறிதும் பெரிதுமான பல்வேறு கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும், தீர்வுகாண முயலும் ஒற்றைக் கதாபாத்திரமாக ஜெர்ரி திரண்டு நிற்பதை உணரும்போது நாவல் ஆழ்ந்த அமைதியுடன் நிறைவடைகிறது.

மனத்தை அறியவும் அதனைக் கட்டுப்படுத்தவுமான பல்வேறு யோக, தியான மார்க்கங்கள் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாக பௌத்த தியான முறை, அதன் பயிற்சிகளைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தமிழ் மெய்யியல் இவ்வகையான அனைத்து தேடல்களுக்கான சூத்திரங்களையும் உள்ளடக்கியது என்பதைத் தொடர்ந்து உதாரணங்களின் வழியாக சுட்டிக் காட்டுகிறது.

இந்த மனித வாழ்வை புரிந்துகொள்வதும், பிற அனைத்து உயிர்களையும் பெருங்கருணையுடன் அணுகுவதுமான மேலான நிலையை அடைவதே மானுட இருப்பின் பொருளாக இருக்க முடியும் என்பதை ஒரு உயிரியலாளனாகவும் ஆழ்மன தியானத்தில் உறைபவனாகவும் விலகி நின்று கண்டடைவதே இந்த நாவலின் சிறப்பு. செறிவான, மரபான தமிழ் நடையும் மொழியும் இந் நோக்கத்திற்கு வலுசேர்த்துள்ளன. அகத்தையும் புறத்தையும் நுட்பமாக அணுகி ஆராய்ந்து ஒன்றின் மீது மற்றது செலுத்தும் தாக்கங்களையும் உற்றறிந்து உயிரின் சாரத்தை வரையறுக்க முயலும் முதன்மையான தன்வரலாற்று நூல் இதுவேயாகும்.

( தமிழினி, ஜுலை 2023 )

 

Saturday, 3 December 2022

என்றென்றும் வாசகர் – ‘விஜயா’ வேலாயுதம்

 



( காலச்சுவடு நவம்பர் 2022 இதழில் வெளியான கட்டுரை )

0

கோவை, ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தைத் தேடிச் சென்றது 1984 ஆம் ஆண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் நான். கணையாழி, தீபம் போன்ற இதழ்களையும் சில புத்தகங்களையும் வாங்கியபோது வேலாயுதம் என்னைப் பற்றி விசாரித்தார். புதிய சில புத்தகங்களை எடுத்துக் காட்டி அவற்றைக் குறித்து உற்சாகத்துடன் உரையாடினார். விற்பனையாளரைப்போல அல்லாமல் புத்தகங்களைப் பற்றியும் எழுத்தைக் குறித்தும் ஆர்வத்துடன் பேசியது மிகுந்த வியப்பைத் தந்தது.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் பின்னும் அவரிடம் அந்த உற்சாகம் குறையவில்லை. இன்றும் ஒரு புதிய நூல் வெளியாகும்போது, உடனடியாக அதை வாசிப்பதிலும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. ‘நான் பதிப்பாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. விற்பனையாளன் என்று சொல்வதில்தான் மகிழ்ச்சி. அதைக்காட்டிலும் வாசகன் என்பதில்தான் பெருமை’ என்று குறிப்பிடுகிறார். அதுதான் அவரது உற்சாகத்துக்கு அடிப்படையான காரணம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தொழில்களுக்கேயுரிய ஏற்றத் தாழ்வுகளால், லாப நஷ்டங்களால் ஒரு வியாபாரிக்கு ஆர்வம் குறைவது இயல்பானது. போட்டிகள் நிறைந்த உலகில் அந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கு வியாபார நோக்கத்தையும் லாபத்தையும் கடந்து ஒரு உந்துசக்தி அவசியம். வேலாயுதம் தன் உந்து சக்தியாக நம்பிக்கை வைத்திருப்பது வாசகர்களிடத்தில், புத்தகங்களிடத்தில்.

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உலகநாதபுரத்தில் பிறந்த வேலாயுதம் எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஆறு மைல் தொலைவிலுள்ள பள்ளிக்குச் நடந்து செல்லும் வழியில்தான் அவரைப் பற்றிக்கொண்டது ‘வாசிப்பு பூதம்’. அம்புலிமாமா, டமாரம், மத்தாப்பு, டிங்டாங் போன்று சிறுவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படித்தார். படிக்க வசதியில்லாத சூழலில் 1955ஆம் ஆண்டு மணப்பாறையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோதும் அவர் வாசிப்பை விடவில்லை. கைச்செலவுக்காகக் கிடைக்கும் ஓர் அணாவை சேர்த்து வைத்து இரு மாதத்திற்கு ஒரு முறை வரும் லிப்கோ புத்தக வாகனத்தில் முதல் ஆளாய் ஏறி நின்று புத்தகங்களை வாங்குவார். ‘கல்கண்டு’ இதழில் தமிழ்வாணனின் சங்கர்லாலைப் படிக்க அவர் தவறியதில்லை. சில ஆண்டுகள் கழித்து 1957ஆம் ஆண்டு கோவைக்கு இடம்பெயர்ந்தார். சுக்ரவார்பேட்டையில் இருந்த ‘செலக்ட் எம்போரியம்’ எனும் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தார். அருகில் இருந்த நூலகத்தில் புத்தகங்களை எடுத்து வாசிக்கலானார். அங்கிருந்த நூலகர் சரஸ்வதி, அவரது வாசிப்பு ஆர்வத்தைக் கண்டு புதிய எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினார். மு.வ, நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் எழுத்துகள் அவரை ஆட்கொண்டன. தான் வேலைபார்த்த பல்பொருள் அங்காடியிலேயே ஒரு சிறிய அலமாரியில் நூல்களை வைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். நா.பார்த்தசாரதி தீபம் இதழை 1965ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் கோவை முகவராக 1966ஆம் ஆண்டே இணைத்துக் கொண்டார் வேலாயுதம்.  

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கோவை போன்ற ஒரு பெருநகரத்தில் சிறிய அளவில் பல்பொருள் அங்காடி நடத்தியவர்களின் கனவு ரெங்கே கவுடர் வீதியில் உள்ளதுபோல மொத்த சாமான்கள் விற்கும் கடையாக அதை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாகவே இருந்திருக்கும். இன்று மாபெரும் பல்பொருள் அங்காடியாகக்கூட வெவ்வேறு இடங்களில் கிளைகளுடன் அமைந்திருக்கக்கூடும். ஆனால், ‘சிதம்பரம் பல்பொருள் அங்காடி’யின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மட்டுமே விற்பதற்கான ஒரு கடையை அமைக்கவேண்டும் என்ற அந்த புத்தக ஆர்வலரின் கனவு அன்றைய சூழலில் மட்டுமல்ல இன்றைக்கும்கூட விநோதமாகவும் பித்துக்குளித்தனமாகவுமே பார்க்கப்படும். ஆனால், வேலாயுதம் எனும் வாசகர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்கு எதிர்காலம் இருக்கிறதா என்று கவலைப்படவில்லை. நம்பிக்கையுடனும் கொஞ்சம் பிடிவாதத்துடனும் அந்தக் கனவைப் பற்றிக்கொண்டு 1977ஆம் ஆண்டு புத்தகக் கடையைத் தொடங்கினார். பாரதியார் நடத்திய இதழான ‘விஜயா’ என்ற பெயரைக் கொண்டு ‘விஜயா பதிப்பகம்’ என்று பெயரிட்டார். தன் மூத்த மகளுக்கும் அதே பெயரை வைத்தார்.

நகரத்தார்கள் புத்தகம் சார்ந்த துறைக்கு வருவதொன்றும் புதிய விஷயமல்ல. தமிழகத்தின் முன்னோடி பதிப்பகங்கள் பலவும் நகரத்தாரின் முயற்சிகளே. வேலாயுதம் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டு விற்பனை இலக்கை மட்டும் கணக்கிட்டபடி உட்கார்ந்திருக்கவில்லை. அப்படி அவர் இருந்திருந்தால் இன்றும் அதே நிலையில் வளராமல் தேங்கிக் கிடக்கும் பல நூறு புத்தகக் கடைகளில், பதிப்பகங்களில் ஒன்றாக நின்றிருக்கும்.

விற்பனைக்கான பொருள் புத்தகம் என்று முடிவு செய்தாகிவிட்டது. வாங்குபவர்கள் யார்? மளிகைக் கடையைப் போலவோ துணிக்கடையைப் போலவே அன்றாடத் தேவைக்கான பொருட்களை வைத்திருப்பதல்லவே புத்தகக் கடை. அல்லது பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், கைடுகள், நோட்டுப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் கடையுமல்ல. அன்றாடம் இவற்றை வந்து வாங்கமாட்டார்கள். அதற்காக கடையைத் திறந்து வைத்துக்கொண்டு வரட்டும் என்று காத்திருக்க முடியுமா? எனவே, வேலாயுதம் ‘வாங்குபவர்’களை உருவாக்கத் தீர்மானித்தார். தன்னிடம் உள்ள பொருட்களான புத்தகங்களை ‘வாங்கும்’ வாசகர்களை உருவாக்குவதுதான் தொழில் நிலைத்திருக்க வழிவகுக்கும் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.

ஒரு வாசகராக தான் அறிந்ததை அனுபவித்ததை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் பேசினார். எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது எழுத்துகளைக் குறித்தும் எடுத்துச் சொன்னார். 1976ல் தொடங்கி இன்று வரைக்கும் அவர் நூல்களைக் குறித்துப் பேசாத நாளே இல்லை என்கிற அளவுக்கு புத்தகங்களின் மேலும் எழுத்தின் மீதும் அத்தனை ஆர்வம். நல்ல புத்தகங்களைத் தேடி வாசகர்கள் வர வேலாயுதம் அவர்களின் வாசிப்பும் பரிந்துரையும் முக்கிய காரணமாக அமைந்தது.

வாசகர்களை உருவாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர்களுக்கான மரியாதையை கௌரவத்தை அவரே முன்னின்று வழங்கினார். இன்றுவரையிலும் அவருக்கு வாசிப்பின் மீதும், வாசகர்களின் மீதுமான நம்பிக்கை சற்றும் குறையவேயில்லை. வாசிப்பையும் புத்தகங்களையும் வாசகர்களையும் கொண்டாட வேண்டும் என்பதற்காக ‘வாசகர் திருவிழா’வை திட்டமிட்டார்.

இதற்கான விதை, பல்பொருள் அங்காடியில் வேலைபார்த்த சமயத்தில் சென்னையில் உள்ள ‘இந்தியா புக் ஹவுஸ்’க்கு செல்ல நேர்ந்தபோது விழுந்திருக்கிறது. கோவையில் வாசகர் ஒருவர் கேட்டார் என்பதற்காக ஆர்தர் ஹெய்லியின் ‘ஏர்போர்ட்’ நாவலை வாங்குவதற்காக சென்றபோது அந்தக் கடையின் அமைப்பும் அங்கு புத்தகங்களை அடுக்கியிருந்த விதத்தையும் பார்த்தபோது கோவையிலும் இதுபோல செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் 1979ம் ஆண்டு கோவை விக்டோரியா ஹாலில் நடந்த ‘வாசகர் திருவிழா’. தமிழ்நாட்டின் முதல் வாசகர் திருவிழா அதுதான். ஏராளமான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. வாசகர்களை வரவழைப்பதற்காக புகழ்பெற்ற எழுத்தாளர்களைக் கலந்துகொள்ளச் செய்தார். புதிய அந்த முயற்சி வாசகர்களையும் புத்தக ஆர்வலர்களையும் பெரிதாகக் கவர்ந்தது.

நல்ல எழுத்துகளைத் தரும் எழுத்தாளர்களைக் கொண்டாடவேண்டும் என்பதில் தணியாத உற்சாகம் கொண்டவர் வேலாயுதம். தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர்களை கோவைக்கு வரவழைத்தார்.  வாசகர்களுடன் உரையாடச் செய்தார். எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவுப் பாலமாக அமைந்தது இந்த வாசகர் திருவிழா. கோவைக்கு வருகை தராத தமிழின் பிரபலமான எழுத்தாளர்களே இல்லை என்கிற அளவுக்கு அனைவரையும் அவர் வரவழைத்தார். இன்னும் சொல்லப்போனால் விஜயா வேலாயுதத்தைத் தேடி எழுத்தாளர்களே வர விரும்பினார்கள். ஆரம்ப காலத்தில், அவரது மளிகைக் கடைக்கு கவிஞர் கண்ணதாசனே தேடி வந்ததுபோல இன்றும் கோவைக்கு வரும் எழுத்தாளர்கள் விஜயா பதிப்பகத்துக்கு வராமல் ஊர் திரும்புவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ‘சாகித்ய அகாதமி’ விருது பெறும் தமிழ் எழுத்தாளருக்கு பாராட்டு விழாவை, நகரமே திரும்பிப் பார்க்கும்படியாக பெரும் கொண்டாட்டமாக நடத்துகிறார்.

நல்ல, தரமான வாசகர்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கான தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனத்துடன் செயலாற்றுகிறார். நல்ல எழுத்தாளர்களின் பெயரை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயரில் விருதுகள் வழங்குகிறார்.

1999ம் ஆண்டு சி.ஆர்.ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு ‘பாஷா பரிஷத்’ விருது வழங்கப்பட்டது. அந்த விழாவுக்காக சி.ஆர்.ரவீந்திரனுடன் கல்கத்தா சென்றிருந்தார் வேலாயுதம். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் சிறந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பரிசையும் ஒரு புரவலர் வழங்குவதையும் அந்தப் புரவலர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாததையும் கவனித்த வேலாயுதம் தமிழகத்திலும் இதுபோல ஏன் முயலக்கூடாது என்று யோசித்தார். அதன் விளைவுதான் ‘விஜயா வாசகர்’ வட்டத்தின் விருதுகள்.

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் மூத்த எழுத்தாளருக்கு ‘ஜெயகாந்தன் விருது’ (ஒரு லட்ச ரூபாய்), இளம் படைப்பாளிகளுக்கு ‘புதுமைப்பித்தன் விருது’ (இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்), ‘கவிஞர் மீரா விருது’ (இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்), சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கான கே.எஸ்.சுப்ரமணியன் விருது (ரூபாய் ஒரு லட்சம்) ஆகிய விருதுகள் புரவலர்களின் உதவியுடன் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில் அதிகபட்ச தொகையுடன் கூடிய கி.ரா விருது (ஐந்து லட்சம்) கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.

சுக்ரவார்பேட்டில் அரசு நூலகத்தில் வாசிப்பை ஊக்கப்படுத்திய சரஸ்வதியைப் போன்ற நூலகர்களை அங்கீகரிக்கவேண்டும் என்ற நோக்குடன் அரசு நூலகர்களில் தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘சக்தி வை கோவிந்தன் விருது’ வழங்கப்படுகிறது. புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான சமூகப் பணியை மேற்கொள்ளும் புத்தக விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு ‘வானதி திருநாவுக்கரசு’ விருது வழங்கப்படுகிறது.

நூலகர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் விருதுகொடுப்பதோ அல்லது ஒரு மேடையில் வைத்து கௌரவப்படுத்துவதோ யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று. தொடர்ந்து இந்தச் சமூகத்தில் புத்தகம், நூலகம், வாசிப்பு என்பதன் இன்றியமையாமையை அவர் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார். அந்தப் பணியை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை தட்டிக்கொடுப்பதன் வழியாக இன்னும் சிலரை அந்தப் பாதையில் ஓடச்செய்யும், உற்சாகப்படுத்தும் வேலையை கவனமாக அவர் செய்தபடியே இருக்கிறார். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் அங்காடிகளின் போட்டிகளையும் சமாளித்து புத்தக விற்பனையை ஒரு தொழிலாக மேற்கொண்டிருக்கும் விற்பனையாளர்களை ஊக்குவிக்கவேண்டும், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளைத் தரவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

நல்ல எழுத்தை வாசித்தவுடனே குறிப்பிட்ட அந்த எழுத்தாளரை தொலைபேசியில் அழைத்து மனம் நெகிழ மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுவது அவருடைய பண்பு. பலசமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு குரல் தடுமாறும். சொல்ல வந்ததை சொல்லி முடிக்க முடியாமல் அடுத்தடுத்து உணர்ச்சிகள் அலைமோதும். அந்த பரவசத்திலும் மகிழ்ச்சியிலும் வேலாயுதம் எனும் வாசகரின் எல்லையற்ற ஆனந்தத்தை உணரமுடியும்.

எல்லோரையும்போல பிறந்தநாளிலும், பண்டிகை நாட்களிலும் அவர் புத்தாடை அணிவதில்லை. நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 12, சக்தி வை கோவிந்தனின் பிறந்த நாளான ஜூன் 26, உ.வே.சாவின் பிறந்த நாளான பிப்ரவரி 19, உலக புத்தக தினமான ஏப்ரல் 23 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே அவர் புத்தாடைகள் அணிகிறார்.

தமிழ் பதிப்புத் துறை முன்னோடியான ‘சக்தி’ வை.கோவிந்தன் அவர்களின் குடும்பம் வறுமையில், ஆதரவற்ற நிலையில் வாடுவதைக் கண்டு 2006ஆம் ஆண்டு பலரது ஒத்துழைப்போடு நிதி திரட்ட ஏற்பாடு செய்தார். மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக அவர் வெவ்வேறு எழுத்தாளர்களுக்கும், மையிட்ட ‘நிப்’ பேனாவைக் கொண்டு அவருடைய அழகிய கையெழுத்துடனான கடிதங்களைத் தொகுக்க முடிந்தால் நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான சித்திரமாக அது அமையும். வேலாயுதம் என்ற வாசகர் ஒரு படைப்பை எப்படி அணுகினார் என்பதற்கான சான்றுகள் அந்தக் கடிதங்கள். இன்றும் அவர் எழுதுவது அதே ‘நிப்’ பேனாதான். இந்த வயதிலும் அவருடைய கையெழுத்து அதே அழகுடனும் ஒழுங்குடனுமே நிலைத்திருக்கிறது.

கோவையில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கென ஒரு அரங்கை நிறுவ வேண்டும் என்பது அவரது விருப்பம். ‘விஜயா பதிப்பக’த்தின் மாடியில் ‘ரோஜா முத்தையா அரங்கம்’ என்ற பெயரில் அப்படியொரு அரங்கை அவர் அமைத்திருக்கிறார். கம்பனில் தொடங்கி உ.வே.சா, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த ஆளுமைகளின் படங்கள் அந்த அரங்கில் அணிவகுக்கின்றன.

சுந்தர ராமசாமி அமெரிக்காவில் காலமான செய்தி வருகிறது. இந்தியாவுக்கு அவரைக் கொண்டு வரும் நாள் உறுதியானவுடனே நாகர்கோவிலுக்கு செல்வது பற்றி முடிவாகிறது. நாஞ்சில்நாடன், வேலாயுதம் இருவருடன் நானும் இரவுப் பேருந்தில் பயணம். உள்ளே ஏறி அமர்கிறோம். அவரது இருக்கைக்குப் பக்கத்து இருக்கை எனக்கு. பேருந்து புறப்பட்டவுடன் சட்டை பையிலிருந்து சிறிய சணல் கயிறு துண்டொன்றை எடுத்தார். செருப்புகளைக் கழற்றியவர் அவற்றைக் கயிற்றில் கோர்த்து முன்னிருக்கையின் கால்பகுதியில் கட்டி வைத்தார். “செருப்பு முன்னாடி நகந்து போயிடும். விடிகாத்தால எறங்கும்போது எங்க இருக்குன்னு தேடணும். தூங்கறவங்களை எழுப்பித் தொந்தரவு செய்யறமாதிரி ஆயிடும். அதான் இப்பிடி கட்டி வெச்சிட்டா யாருக்கும் சிரமம் இருக்காதில்ல.”

விடிகாலைப் பொழுதுகளில் இறங்கும் நேரத்தில் செருப்பை காணாமல் தேடி நானும் பலமுறை அவஸ்தைபட்டிருக்கிறேன். ஆனால் ஒருநாளும் இந்த யோசனை எனக்குத் தோன்றியதில்லை.

கச்சிதமான திட்டமிடல், ஒரு பொருளின் மேல் உள்ள அக்கறை, மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கரிசனம் என பல பெரிய விஷயங்களை அந்தச் சின்ன சணல் கயிறு துண்டு எனக்கு அந்த நேரத்தில் புலப்படுத்தியது.

எங்கேனும் பயணம் செய்யும்போது வழியில் பனைமரத்தைக் கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்குவார் வேலாயுதம். ‘பனைமரம் மட்டும் ஓலை தராமல் இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் ஆண்டு செல்வம் நமக்குக் கிடைத்திருக்காது. பனை ஓலை இல்லையென்றால் நம் இலக்கியங்கள் இல்லை. இலக்கியம் இல்லை என்றால் நான் புத்தகத் தொழிலையும் செய்திருக்க முடியாது” என்று சொல்லியபடி பனைமரத்தை வணங்குவார்.  

விஜயா பதிப்பகத்துக்கென ஒரு வாசகம் உண்டு ‘அறிவுலகவாதிகளின் அட்சயப் பாத்திரம்’. அது அறிவுலவாதிகளுக்கான அட்சயப் பாத்திரம் மட்டுமல்ல, ஆர்வமுள்ள வாசகர்களுக்கான அபாரமான நூலகம். வாசிக்கத் தொடங்கியவர்கள் தேர்ந்த வாசகர்களாகவும், அவர்களில் பலர் எழுத்தாளர்களாகவும், இன்னும் பலநூறு பேர் சிறந்த பண்பாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

வாசிப்பின் மேலும் வாசகர்களின் மீதும் தளராத நம்பிக்கை வைத்திருக்கும் ‘விஜயா’ வேலாயுதம் போன்றவர்களின் பணியும் அதன் விளைவுகளுமே புத்தகங்களையும் பதிப்புத் துறையையும் தொடர்ந்து காப்பாற்றித் தரும். அதுவே நல்ல மனங்களையும் பண்பையும் உறுதி செய்து சீர்மிகுந்த சமுதாயத்துக்கான அடிப்படையாக அமையும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் அவர் மேற்கொண்ட இந்தப் பணி, கோவையில் தரமான அறிவுச் சூழலை உருவாக்க உதவியுள்ளது. நல்ல எழுத்தையும் நல்ல புத்தகங்களையும் வாசித்து வரவேற்கும் நல்ல வாசகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பதிப்புத் துறையில் ‘சக்தி’ வை கோவிந்தனும் நூலகங்களை உருவாக்குவதில் எஸ் ஆர் ரங்கநாதனும் ஆற்றிய பணிகளுக்கு இணையான பெரும்பணி தரமான வாசகர்களை உருவாக்கித் தந்திருக்கும் வேலாயுதம் அவர்களுடைய பணி. கோவை ஒரு வணிக நகரமாக எந்தளவுக்கு போற்றப்படுகிறதோ அதே அளவுக்கு நல்ல வாசகர்களைக் கொண்டிருக்கும் நகரம் என்ற காரணத்துக்காகவும் பாராட்டப்படுகிறது. அந்தப் பெருமையை அடையச் செய்திருப்பதுதான் ‘விஜயா’ வேலாயுதத்தின் சாதனை.

0

கதைவெளியில் புதிய நறுமணம் ‘அத்தர்’ - நல்லதம்பியின் சிறுகதைகள்

 


( சிறுகதை - காலாண்டிதழில் ( ஆகஸ்ட் 2022 ) வெளியான கட்டுரை )

அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி வாசிக்கும்போது அது தருகிற அனுபவம் தனித்தன்மைமிக்கதாக இருக்கும்.

கே.நல்லதம்பியை அறிமுகமில்லாதவர் என்று சொல்ல முடியாது. விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவல் அவரை ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்துக்கும் முக்கியமான பல நூல்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுகப்படுத்தியுள்ளது ‘அத்தர்’ தொகுப்பு.

‘அத்தர்’ மிகச் சிறிய தொகுப்பு. ஆறு கதைகளை மட்டுமே கொண்டது. கிரௌன் அளவில் 120 பக்கங்கள் மட்டுமே. இதைப் படித்து முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை எழுதியவரின் பெயரைப் பார்த்து உறுதி செய்துகொண்டேன். ஏனெனில் இந்தத் தொகுப்பு அப்படியொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. கதைகளின் வடிவங்கள் வேறானபோதும் கதை சொல்லும் மொழி ஒன்றே. நேரடியான, எளிமையான ஆனால் செறிவான மொழியிலேயே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன.

புனைவெழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்திருக்கும் நூல்களில் புனைவின் நுட்பங்களும் மொழி நேர்த்தியும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கும். தொழில்முறை மொழிபெயர்ப்பில் உணர நேர்கிற போதாமைகள் அவற்றில் இருக்காது. உலகப் புகழ்பெற்ற புனைவெழுத்தாளர்கள் பலரும் முக்கியமான ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளராக நாமறிந்த கே.நல்லதம்பியை ஒரு சிறுகதை ஆசிரியராக இத்தொகுப்பு நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இக்கதைகளின் வடிவங்களும் மொழி அமைப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதை மொழியாக்கத்தின் பலனாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம், மொழி குறித்து அவருக்கு இருக்கும் இந்தத் தெளிவே அவருடைய மொழிபெயர்ப்பிலும் காணமுடிகிறது என்றும் சொல்லலாம்.

ஆறு கதைகளில் ‘தமன்நெகாரா’, ‘பிங்க் அண்ட் புளூ’, ‘அத்தர்’ மூன்று கதைகளுக்குள் உள்ள ஒரு பொதுச் சரடு ஆண்-பெண் உறவு. சரியாகச் சொன்னால் மீறல்களுடனான உறவு. இக்கதைகளில் ஆண் பெண் உறவின் மீறல்களை கையாண்டிருக்கும் விதம் தனித்தன்மைமிக்கது. தன்னியல்பில் நிகழும் அத்தகைய உறவை சரியென்றோ தவறென்றோ தீர்ப்பு சொல்லாமல் வாழ்வின் தற்செயல் கணங்களில் ஒன்றாகக் காட்டியிருக்கும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. மரபின் சுமையால் இன்னும் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் மீறி உயிரின் இயல்பான உந்துதல் அதை நோக்கிச் செலுத்தும்போது அது வாழ்வின் ஒரு பகுதியாகிவிடுகிறது. அதன் பின் அதன் லாப நஷ்டங்களை, உணர்வு நிலைகளை அவரவர் நிலையில் அனுபவிக்கவும் நேர்கிறது.

‘தமன்நெகாரா’ என்ற தீவில் தற்செயலாகச் சந்திக்கும் மத்திய வயது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் இணக்கத்தைத் தொடர்ந்து ஒரே அறையில் தங்குகிறார்கள். பொதுவான ரசனை சார்ந்து நிறைய பேசுகிறார்கள். கூடிக் களிக்கிறார்கள். ஆனால் சொந்த விபரங்களைப் பரிமாறிக் கொள்ளாமலே பிரிந்து போகிறார்கள். இருவருக்கும் இணையர்கள் உண்டு. குடும்பமும் உண்டு. அவரவர் வாழ்வில் அடைய முடியாத ஏதோவொரு நிறைவை இந்தத் தற்செயல் உறவில் கண்டடைகிறார்கள். இது சரியா, தவறா என்ற விவாதத்தையோ இதற்குப் பின் இவர்கள் இருவரும் எப்படிப்பட்ட உணர்வுடன் இருப்பார்கள் என்ற கேள்வியையோ இந்தக் கதை எழுப்பவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் வாழ்வில் அடைய முடியாத சில வெற்றிடங்கள் இருக்கக்கூடும். எதிர்பார்ப்புகளும் நிச்சயம் இருக்கும். ஆனால், அவற்றை அடையக்கூடிய வாய்ப்புகளும் அப்படி அமையும்போது நேரடியாக ஏற்றுக்கொள்கிற மனநிலையை அடைவது எளிதில்லை. அப்படியொரு சாத்தியத்தைத்தான் இந்தக் கதை முன்னிறுத்துகிறது.

இதற்கு மாறாக, திருமணத்துக்குப் பின் பல காலம் கழித்து முன்னாள் காதலியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைச் சொல்வது ‘பிங்க் அண்ட் ப்ளு’. கதையில் எந்த புதுமையும் இல்லை. ஆனால், கதையைச் சொன்ன விதம் வழக்கத்துக்கு மாறானது. கதாபாத்திரங்கள், சந்திக்கும் இடங்கள் வழியாக வெவ்வேறு கோணங்களில் சின்னச் சின்ன பத்திகளில் கதை விரிகிறது. கதையின் முடிவு, கதைக்கான முடிவாக மட்டும் அமையாமல், இதுவரையிலும் மறுக்கப்படுகிற அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற ஒன்றுக்கான சமூகத்தின் பதிலாகவும் அமைந்திருப்பதில் இந்தக் கதை இன்னொரு சிறப்பு.

அழகான ஒரு காதல் நாவலுக்கான கருவைக் கொண்டது ‘அத்தர்’. வழக்கமான பாணியில் அல்லாமல் முற்றிலும் புதிய விதத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. கடைத் தெருவில் கிடக்கும் கடிதம், அதிலிருந்து விரியும் பழைய காதல் கதை, அதைப் படித்துவிட்டு வீடு தேடி வந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சொல்லும் ஒருத்தி என மிக நுட்பமாக அமைந்துள்ளது.

மூன்று கதைகளுமே திருமணம் தாண்டிய உறவைப் பேசுகின்றன. உடல் தேவைகளையும் கடந்து வேறு போதாமைகளுடனும்தான் குடும்ப அமைப்பு இருக்கக்கூடும். அதன் எல்லைகளை அனுசரித்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் மன அழுத்தத்துக்கும் விரிசலுக்கும் காரணமாகிறது. இந்த யதார்த்தத்தின் பின்னணியுடனே இக்கதைகள் அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இத்தொகுப்பை ‘சொல்லாத காதல்களுக்கு’ சமர்ப்பணம் செய்திருப்பது பொருத்தமானதுதான்.

கதை ஒழுங்கு மிக்க பிற கதைகளுடன் ஒப்பிடும்போது ஆல்பர் காமுவின் ‘அவுட் சைடர்’ தளர்வான அமைப்பைக் கொண்டுள்ளது. பசி பொறுக்காமல் கடையில் புத்தகத்தைத் திருடி மாட்டிக் கொள்வதும் அதன் பிறகான அவமான உணர்வுமே கதையின் மையம். கதை இந்த மையத்திலிருந்து விலகி முன்னும் பின்னுமாக அலைவதால் அடர்த்தி குறைந்து பலவீமடைந்துள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இல்லாத தனிமை ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் பல்வேறு உணர்வு நிலைகளைச் சொல்லும் ‘வீட்டின் தனிமையில்’ எல்லோருக்குமான அனுபவத்தைக் கொண்டது. நோய்த்தொற்று காலத்தில் யாருமில்லாது வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் மனம் கொள்ளும் கோலங்களை பலரும் அனுபவித்திருக்கக்கூடும். மனைவியைக் குறித்தும் வீட்டு வேலைகளைக் குறித்தும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கும். நிதானத்துடன் தன்னை உற்றுப் பார்க்கும் தருணங்களை இக்கதை செறிவுடன் காட்டியுள்ளது.

முழுக்க வெளிப்படையாக இருப்பதென்பது சாத்தியமில்லை. ஒவ்வொருவரைக் குறித்தும் வெளியில் சொல்ல முடியாத விமர்சனங்கள், கருத்துகள் இருக்கவே செய்யும். அவற்றை அறிய நேர்ந்தால் நிம்மதியாக இருக்க முடியாத சூழலைச் சித்தரிக்கிறது ‘கண்ணாடி’. மீயதார்த்த கதைக்கான ஒரு முயற்சி.

 

மைசூரில் பிறந்த நல்லதம்பி தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். பணிக் காலத்தில் ஹைதராபாத்தில் இருந்தவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளும் தெரியும்.

ஒரே சமயத்தில் தமிழிலும், கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் இக்கதைகளை எழுதியிருக்கிறார் கே.நல்லதம்பி. அதற்கான அடையாளங்களை சில இடங்களில் காண முடிகிறது. ‘அப்போது டிரைவர் மற்றும் உதவியாளன் வாய்விட்டு உரக்கச் சிரிப்பார்கள்’, ‘ஆனால் அவை மற்ற வாசனைகளைப் பற்றி மனிதர்கள் போல எந்த ஆர்வத்தையும் காட்டுவதில்லை’, ‘இந்த கடைசி நான்கை முன் சொன்னதுபோல கையால் எழுதப்பட்டிருந்தது’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். குறிப்பிட்ட பிரதேசத்துக்கானது என்று சொல்லும்படியாக எந்த அம்சங்களும் இல்லாமல் கதையை தெரிவு செய்திருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.   

கதையை கச்சிதமாகத் தொடங்கி, எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிச் சென்று நேர்த்தியமாக முடிக்கிறார் நல்லதம்பி. கதைகளுக்கு நடுவில் கவிதை போன்ற சில வரிகள் அமைந்துள்ளன. ‘நான் எப்போதும் இதுபோல தொலைந்து போனதில்லை, கண்டுகொண்டதும் இல்லை’, ‘நிர்வாணமாக இருக்கும்போது நம்மிடம் எல்லாமே இருப்பதுபோலவும், எதுவுமே இல்லாதது போலவும் ஒரு உணர்வு’ போன்ற வரிகளைச் சுட்டலாம். கதையின் சூழலை சின்னச் சின்ன தகவல்களுடன் துல்லியமாக உருவாக்க முடிகிறது.

குறைவான எண்ணிக்கையைக் கொண்ட தொகுப்பு என்றாலும் வடிவிலும் சொல் முறையிலும் நேர்த்தியான வாசிப்பை உறுதிப்படுத்துகிறது. இடம்பெற்றுள்ள கதைகள் புதிய அனுபவங்களைத் தருவதால் ‘அத்தர்’ பொருட்படுத்தத்தக்க ஒரு வரவாகும்.

(‘அத்தர்’ – சிறுகதைகள், எதிர் வெளியீடு )

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

  அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சா...