இந்தி மொழி வட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களிடையே புழங்கி வந்த பேச்சுமொழிகள் கலந்து உருவான ஒன்று. பிரஜ், புந்தேல், அவத், கன்னௌஜ், கடிபோலி, மார்வாரி, அங்கிகா, வஜ்ஜிகா, மைதிலி, மககி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு பேச்சுவழக்குகள் ஒன்றிணைந்த கூட்டுமொழி என்று சொல்லலாம். இன்று புழக்கத்திலுள்ள இந்தி மொழியின் அடிப்படை அமைப்பு கடிபோலியிலிருந்து பெறப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவில் பேசப்படும் ஒரு பொது மொழியாக இந்தி உருவானது. எழுத்து வடிவத்துக்கு தேவநகரி எழுத்துருக்களை பயன்படுத்திக் கொண்டது.
இந்திக்
கவிதைகளைப் பொறுத்தவரை மேற்சொன்ன வெவ்வேறு பேச்சுமொழிகளில் எழுதப்பட்டவற்றையும் இன்று
‘இந்திக் கவிதை’ என்றே குறிப்பிடுகிறோம். வித்யாபதி தன் காவியத்தை மைதிலி மொழியில்
எழுதினார். கபீர் பாடல்களில் அதிகமும் போஜ்புரியில் எழுதப்பட்டவை. ஜெய்ஸியும் துளசிதாஸரும்
தம் பாடல்களை அவத் மொழியில் எழுதினர். பிருஜ்பாஷாவைக் கொண்டு கவி புனைந்தவர்கள் சூர்தாஸூம்
பிகாரியும். மீரா ராஜஸ்தானி மொழியில் கவிதைகளை இயற்றினார். இவர்களில் எவருமே கடிபோலியில்
எழுதாவிட்டாலும்கூட இவர்களுடைய கவிதைகளை ‘இந்திக் கவிதைகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு ஆயிரம் ஆண்டு காலமாக வெவ்வேறு வளர்ச்சிப் போக்குகளின் ஊடாக உருவாகி வந்தது
இந்திக் கவிதை. இந்த வளர்ச்சிக் காலகட்டங்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்க முடியும்.
1.
ஆதி காலம்
2.
பக்தி காலம்
3.
ரீதி காலம்
4.
நவீன
காலம்
ஆதி காலம் அல்லது வீரக்காதைகளின் காலம் ( 11ஆம் நூற்றாண்டு
முதல் 14ஆம் நூற்றாண்டு வரை)
கன்னௌஜ்,
தில்லி, அஜ்மீர் பகுதிகளிலிருந்து மத்திய இந்தியா வரைக்குமான பகுதிகளில் உருவானவை ஆதி
கால இலக்கியங்கள். பராக்கிரம் மிகுந்த வீரர்களைப் போற்றிய வீரகாதைகளின் காலம் என்றும்
குறிப்பிடப்படுகிறது. ஆளும் ரஜபுதன அரசர்களின் பெருமைகளையும் போர் வீரர்களின் பராக்கிரமங்களைப்
புகழ்ந்தும் பாடப்படும் காவியங்கள் இடம்பெற்றன. போரைக் குறித்த உயிரோட்டமுள்ள வர்ணனைகள்,
மன்னர்களின் வீரத்தைப் போற்றும் கதைகள், வீரமும் சிருங்காரமும் கொண்ட சித்தரிப்புகள்
ஆகியன இக் காவியங்களின் குணாம்சங்கள். பிரபந்த காவிய வடிவிலும் போர்க் கதை வடிவிலும்
காவியங்கள் இயற்றப்பட்டன.
ஆதி
காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த
‘அபபிரம்ச’ மொழி தொகுதியிலிருந்து நவீன இந்தி உருவாகி வளர்ந்த காலத்தில் எழுதப்பட்டவை
இவை. முதலாவது பக்தியும் சிருங்காரமும் ஒன்றிணைந்த மக்கள் மொழியில் எழுதப்பட்ட ‘சித்த’
இலக்கியம். பௌத்த மதத்தின் வஜ்ராயனப் பிரிவைச் சேர்ந்த துறவிகளால் இயற்றப்பட்டவை இவை.
இரண்டாவதாக, ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோரக்நாத்
உள்ளிட்ட கவிஞர்களால் ‘தோஹா’ ( இரண்டடிகள் கொண்ட கவிதை வகை ), ‘சௌபாய்’ ஆகிய வடிவங்களில்
எழுதப்பட்ட ஆன்மீகமும் பக்தியும் சேர்ந்த கவிதைகளான ‘நாத’ இலக்கியம். மூன்றாவது, ஜெயின்
கவிஞர்களான ஸ்வயம்பு, சோம் தத்த சூரி, சாரங்க் தர், நல்லா சிங் ஆகியோர் ஒழுக்கக் கோட்பாடுகளையும்
இயற்கையையும் போற்றிப் பாடிய ‘ஜெயின்’ இலக்கியம்.
இந்த
சமயத்தில் பாடப்பட்ட முக்கியமான காவியங்கள் என சந்தபர்தாயி எழுதிய ‘பிரிதிவிராஜ் ரசோ’,
தள்பத்விஜய் எழுதிய ‘குமான் ரசோ’, நர்பதி நல்காவின் ‘விசால்தேவ் ரசோ’, ஜக்னிக்கின்
‘பரிமள் ரசோ’ ஆகியனக் குறிப்பிடப்படுகின்றன.
பக்தி காலம்
( 14 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை )
பதினான்காம்
நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலுமான காலம் ‘பக்தி காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
நாட்டின் அரசியல் சமூக நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலம். இந்தியாவில் இஸ்லாமிய
ஆட்சி நிலைகொண்டிருந்தது. மக்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்க பக்தி இலக்கியம் உருவாகி
தழைத்தோங்கியது. இது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. கவிஞர்கள் தத்தம் கடவுளை அணுகும்
போக்கினை அடிப்படையாகக் கொண்டு ‘சகுண’ பக்தி, ‘நிர்குண’ பக்தி என்று பிரிக்கப்பட்டது.
கடவுள் உருவமற்றவர் என்பதே நிர்குண பக்தியின் அடிப்படை. சகுண பக்தியோ மனித வடிவில்
அவதாரங்களை எடுப்பவர் கடவுள் எனும் நம்பிக்கையில் அமைந்தது.
உருவமற்ற
கடவுளை அணுகும் வழிமுறைகளின் அடிப்படையில் நிர்குண பக்தியில் இரண்டு பிரிவுகள் உண்டு.
கடவுள் ஒருவரே, ஞானத்தின் வழியாக அன்பின் மூலமாக அவரை அடையலாம் என்ற வழிமுறையைக் கொண்டது
முதலாவது பிரிவான ‘ஞான மார்க்கம்’. இப் பிரிவின் முதன்மை கவிஞர் கபீர். ‘பீஜக்’ இவரது
முக்கியமான படைப்பு. இரண்டடி கவிதைகளின், பாடல்களின்
வழியாக ஞான மார்க்கத்தை வலியுறுத்திய இந்தப் பிரிவைச் சார்ந்த பிற கவிஞர்கள் குருநானக்,
ரவிதாஸ், தர்ம தாஸ், மாலுக் தாஸ், தாது தயாள், சுந்தர் தாஸ் ஆகியோர்.
நிர்குண
பக்தியின் இன்னொரு பிரிவு அன்பே கடவுளை அடையும் வழி என்று பாடிய சூஃபி கவிஞர்களைக்
கொண்டது. அரசவம்சத்தினரின் காதல் கதைகளை பாரசீகத்தின் புகழ்பெற்ற கவிதைப்பாணியில் அழகான
முறையில் கவிதைகளாக்கினர். காதலின் உன்மத்தம், விரக தாபம், பிரிவின் வேதனை ஆகியவற்றை
சரித்திரத்துடனும் இயற்கையுடனும் இணைத்துப் பாடியமையே இக் கவிதைகளின் தனித்தன்மை.
‘பத்மாவத்’ காவியத்தை இயற்றிய மாலிக் முகமது ஜயஸி, மன்ஜன், குதுபன், உஸ்மான் ஆகிய கவிஞர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள்.
சகுண
பக்திக் கவிஞர்கள் உருவ வழிபாட்டை ஆதரிப்பவர்கள். மக்களை கருணையுடன் காப்பாற்றும் கடவுள்களாக
ராமனையும் கிருஷ்ணனையும் ஆராதித்தவர்கள். இந்தப் பிரிவின் முக்கியமான கவிஞரான துளசிதாஸ்
தனது காவியங்களான ராமசரிதமானஸ், கீதாவளி, கவிதாவளி, வினயபத்ரிகா ஆகியவற்றில் ராமனையே
உதாரண புருஷனாகக் காட்டுகிறார். கிருஷ்ணனைப் போற்றிப் பாடும் கவிஞர்களில் முதன்மையானவர்
சூர்தாஸ். அவரது சூர்சாகர், சூர் சூராவளி ஆகிய இரண்டும் பக்தி காலகட்டத்தின் முக்கியமான
ஆக்கங்கள். இந்த வகையில் பரமானந்தரும் மீரா பாயும் முக்கியமான கவிஞர்கள். சகுண பக்தி
காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் இருவர் மாலிக் முகமது ஜெய்ஸியும் அப்துல்
ரகுமான் கன்கனாவும்.
ரீதி காலம் ( 17ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு
வரை )
பதினேழாம்
நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமான காலகட்டம் ‘ரீதி காலம்’ எனப்படுகிறது.
முகலாயர்களின் ஆட்சி நிலைபெற்றிருந்தது. அவர்களது கேளிக்கை மனநிலை இலக்கியத்திலும்
பிரதிபலித்தது. ராமனின் மீதும் கிருஷ்ணனின் மேலும் காட்டிய பக்தியுணர்வு குறைந்து சிருங்கார
உணர்வுகள் மேலோங்கின. கவிஞர்களின் கவனமும் கவிதையின் கோட்பாடுகளின்பால் குவிந்தது.
‘ரீதி’ என்பது கோட்பாடு. கவிதைகளின் உருவம், உள்ளடக்கம் சார்ந்த கோட்பாடுகள் முழுமையான
அளவில் உருவாக்கப்பட்ட காலம் என்பதால் இது ‘கோட்பாடு’களின் காலம் எனப்பட்டது. ரசம்,
அலங்காரம், நாயக நாயகி பேதம் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட பாடல்கள் இந்தக் காலகட்டத்தில்
இயற்றிப் பாடப்பட்டன. பக்தி காலக் கவிதைகளில் மேலோங்கியிருந்த கவிதையின் உணர்ச்சித்
தளம் என்பது மட்டுப்பட்டது. இக்காலகட்டத்தில் எழுதிய கவிஞர்களில் கோட்பாடுகளை அடியொற்றி
எழுதியவர்களை ‘ரீதி பத்த’ (கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்ட) என்றும், அவற்றிலிருந்து
விலகிப் போனவர்களை ‘ரீதி முக்த’ ( கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ) என்றும் அழைக்கப்பட்டனர்.
கவிதைகளில்
அணியலங்காரத்தை மிகுதியும் கையாண்ட ஆச்சார்ய கேசவ்தாஸிலிருந்து இக்காலகட்டம் தொடங்கியது.
ரசங்களைக் கொண்டு கவிதை புனைந்ததில் முதன்மையானர் ஆச்சார்ய சிந்தாமணி ஆவார். மேலும்
யஷ்வந்த் சிங், குலபதி மிஸ்ர, தேவ், பிகாரி தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்திக் கவிதையின் நவீன காலம் ( 19ஆம் நூற்றாண்டு
முதல் )
ஹிந்தி
இலக்கியத்தின் நவீன காலம் 1857ல் தொடங்கியது.
மேற்கத்திய சிந்தனைகளாலும் கருத்துகளாலும் இந்திய சமூக வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக்
கொண்டு வந்த நவீனத்தன்மை (modernity) இந்திய இலக்கியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்தி இலக்கியத்தில் நவீனத்தன்மையின் தாக்கங்கள் பாரதேந்து அரிச்சந்திராவின் காலகட்டத்தில்
தொடங்கிற்று. நவீன இந்திக் கவிதையின் வளர்ச்சியை இலக்கிய விமர்சகர்களும் ஆய்வாளர்களும்
பல்வேறு காலகட்டங்களாக வகுத்துள்ளனர். இதில் அவர்களிடையே முரண்களும் உண்டு என்றாலும்
பொதுவாக இவ்வாறு வரையறுக்கிறார்கள்.
1.
பாரதேந்துவின்
காலம் ( 1850 முதல் 1900 வரை )
2.
திவேதியின்
காலம் (1901 முதல் 1918 வரை )
3.
சாயாவாத்
எனப்படும் கற்பனாவாத காலம் ( Romanticism )( 1919 முதல் 1936 வரை )
4.
பிரகதிவாத்
எனப்படும் முற்போக்குவாதம் (Progressivism ( 1936 முதல் 1943 வரை )
5.
பிரயோக்வாத்
எனப்படும் நவீனத்துவம் ( Modernism ) ( 1943 முதல் 1950 வரை )
6.
நயி கவிதா
எனப்படும் புதுக்கவிதை காலம் ( 1950 முதல் 1960 வரை )
7.
சமகாலக் கவிதைகள்
( 1960 முதல் )
பாரதேந்துவின் காலம் ( 1850 முதல் 1900 வரை )
நவீன
இந்தி இலக்கியத்துக்கானத் தொடக்கத்தைத் தந்தவர் பாரதேந்து அரிச்சந்திரா. இந்தி இலக்கியத்தில்
நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி வலுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்தக்
காரியத்தில் இவருடன் இன்னும் சில ஆளுமைகள் துணைநின்றனர். ‘பாரதேந்து முகாம்’ என்று
அழைக்கப்பட்ட அவர்களில் பிரதாப் நாராயண் மிஸ்ரா, பத்ரிநாராயண் சௌத்ரி ‘பிரேம்தான்’, தாகுர், ஜக்மோகன் சிங், அம்பிகா தத்தா
வியாஸ், அயோத்யா பிரசாத் கத்ரி, ராதாசரண் கோஸ்வாமி, பாலமுகுந்த குப்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான பிரச்சினைகளைக் கொண்டு கவிதைகளை எழுதினார்கள்.
கவிதைகளில் எளிய மக்களின் குரல்கள் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். வறுமை, பஞ்சம்,
வரிச்சுமை, விடுதலை, சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துதல், சகோதரத்துவம், பெண் கல்வி,
விதவை மறுமணம் போன்றவையே கவிதையின் பாடுபொருட்களாக அமைந்தன. அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில்
சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் லட்சியவாதக் கவிஞர்களாகவும் பங்காற்றினர்.
ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், கோவிந்த ராணடே, பரமஹம்சர் போன்ற சமூக
சீர்த்திருத்தவாதிகளின் வலுவான பாதிப்பு இவர்களிடம் இருந்தது. இலக்கியத்தின் மூலமும்
கவிதையின் மூலமும் இந்திய நாட்டில் சமூக சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதே இவர்களின்
லட்சியமாக இருந்தது. கவிதைகளில் பகடியையும் நையாண்டியையும் கொண்டு சமூக விழிப்புணர்வையும்
நூற்றாண்டுகளாய் கெட்டித்தட்டிப்போன மக்களின் மனத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்த முனைந்தனர்.
இந்திக்
கவிதைகளில் நவீனத்தன்மையைக் கொண்டு வந்ததில் சில சஞ்சிகைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
பாரதேந்து ஆசிரியராக இருந்த ‘அரிச்சந்திரா’, ‘கவி பச்சன் சுதா’, பிரதாப் நாராயண் மிஸ்ராவின்
‘பிரமன்’, பாலகிருஷ்ண பட்டாவின் ‘இந்தி பிரதீப்’, பத்ரி நாராயண் சவுத்ரியின் ‘ஆனந்த
கடம்பினி’ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.
இந்தக்
காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் முந்தைய காலக் கவிதைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும்
விடுபடவில்லை; நவீனக் கவிதைக்காண குணங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளவுமில்லை. நவீனக்
கவிதைக்கான தொடக்கம் மட்டுமே. கவிதையில் புதிய உத்திகளும் சிந்தனைகளும் உள்ளே வருவதற்கான
கதவுகள் திறந்துவிடப்பட்டது.
இலக்கண
அடிப்படையிலோ மொழியியல் நோக்கிலோ இக் கவிதைகள் திருத்தமானவை அல்ல. ஆனால், அவை மக்களின்
வாழ்வைச் சொல்லின. கவிஞர்களின் தேர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தன. பார்வை விசாலமடைந்திருந்தது.
திவ்வேதி காலம் (1900 முதல் 1918 வரை )
நவீன
இந்திக் கவிதையின் இரண்டாம் காலகட்டம். இந்தக் காலத்தின் முன்னோடியாக விளங்கியவர் மகாவீர்
பிரசாத் திவேதி. 1903ஆம் ஆண்டு முதல் வெளியான ‘சரஸ்வதி’ இதழின் ஆசிரியர். இந்தி மொழியின்
முக்கியமான பேச்சுவழக்கான ‘கடிபோலி’யை விதிகளுக்குட்பட்டு கவிதையிலும் உரைநடையிலும்
திருத்தமாகவும் சரியாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ‘மர்யாதா’,
‘இந்து’ ஆகிய சில பத்திரிகைகளும் இக்காலகட்டத்தில் இந்திக் கவிதையின் மேன்மைக்குப்
பங்களித்தன. மகாவீர் பிரசாத் திவேதி, ஸ்ரீதர் பதக், மைதிலி சரண் குப்தா, சியாராம்சரண்
குப்தா, லக்ஷ்மிதர் வாஜ்பேயி, கோபால் சரண் சின்கா, ‘ஹரிஅவுத்’ ஆகியோர் இக்காலத்தின்
முக்கியமான கவிஞர்கள்.
மனிதர்களைக்
குறித்த புதிய பார்வையை இக்காலகட்டத்துக் கவிதைகள் அளித்தன. அதுவரையிலும் சமூகத்தால்
கண்டுகொள்ளப்படாத சில பெண் கதாபாத்திரங்கள் கவிதைகளில் புதிய பரிணாமத்துடன் சித்தரிக்கப்பட்டனர்.
‘பிரியாபிரபாஸ்’, ‘யசோதரா’, ‘சாகேத்’ ஆகியன சில உதாரணங்கள்.
புதிய
வடிவங்களில் கவிதைகள் எழுதப்பட்டன. ‘சாகேத்’, ‘பிரியபிரபாஸ்’ போன்ற காவியங்கள், ‘ஜயத்ரதன்
வதம்’, ‘கிஷான்’, ‘மிலன்’ போன்ற குறுங்காவியங்கள், ‘சகுந்தலா ஜன்ம’, ‘கேஷோ கி கதா’,
‘விகட் பட்’ போன்ற உரைநடைக் கவிதைகள் என வெவ்வேறு வடிவங்களில் கவிதைகள் வெளியாயின.
ராமன், ஊர்மிளை, யசோதரை போன்ற காவிய நாயகர்கள் உணர்ச்சிகளும், குணங்களும் கொண்ட எளிய
மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.
தேசபக்தி,
அறம், லட்சியம், மனிதாபிமானம், பகடி, எள்ளல், வரலாற்று உணர்வு ஆகியவற்றை இக்கால கவிதைகளின்
பாடுபொருட்களாக இருந்தன. கவிதைமொழியும் சொல்முறையும் முக்கியத்துவம் பெற்றன.
சாயாவாத் – கற்பனாவாதம் ( 1919 முதல் 1936 வரை )
நவீன
இந்திக் கவிதையின் வரலாற்றின் முக்கியமான காலகட்டம் இது. இரண்டு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட
காலத்தைச் சேர்ந்தது. எனவே நவீன இந்திக் கவிதையில் இதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம்
உண்டு. ‘சாயாவாத்’ எனும் இந்தக் கற்பனாவாத காலகட்டத்தை வகுப்பதில் பல விமர்சனங்களும்
கருத்து வேறுபாடுகளும் உண்டென்றாலும் இலக்கிய உலகுக்கு இந்தக் காலம் கொண்டு சேர்த்த
வளங்களை, மேன்மைகளை அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். இக் காலத்தை மேற்கு உலகில்
ஏற்பட்ட கற்பனாவாதத்தின் மறு எழுச்சி காலத்துடன் ஒப்பிடலாம். அதன் பல்வேறு கூறுகளை
இக்காலத்தின் கவிதைகளில் காணமுடியும். அழகைக் குறித்த நுட்பமான பார்வை, சுதந்திர உணர்வு,
விசாலமான கற்பனை, உள்முகமான சிந்தனைப்போக்கு, தனித்தன்மை, லட்சியநோக்கு ஆகியன முக்கியமான
அம்சங்கள். தனிமனித சுதந்திரத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர் இக்காலகட்டத்துக்
கவிஞர்கள்.
ஜெய்சங்கர்
பிரசாத், மகாதேவி வர்மா, சுமித்ரா நந்தன் பந்த், சூர்யகாந்த் திரிபாதி ‘நிராலா’ ஆகியோர்
சாயாவாதத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், மாகன்லால் சதுர்வேதி,
ராம் நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான், சோகன்லால் திவேதி, அரிவம்சராய் பச்சன்
ஆகியோர் இக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள்.
கற்பனாவாத
காலத்தின் சாதனை என ஜெய்சங்கர் பிரசாத் இயற்றிய ‘காமாயனி’ காவியம் குறிப்பிடப்படுகிறது.
இந்தி இலக்கியத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்’ என்று சொல்லப்படுகிற சுமித்ரானந்தன் பந்த் முக்கியமான
பல கவிதைகளை இக்கால கட்டத்தில் எழுதியுள்ளார்.
கற்பனாவாத
காலத்தில் இரண்டு கவிதைப் போக்குகள் இருந்தன. தேசியவாதக் கவிதைகள் என்பது முதலாவது.
சமத்துவம், நீதி, சுதந்திரத்துக்காக போராடும் எண்ணத்தை மக்களின் மனத்தில் விதைப்பதே
இதன் நோக்கம். மாகன்லால் சதுர்வேதி, ராம்நரேஷ் திரிபாதி, சுபத்ரா குமாரி சௌகான் ஆகியோர்
இவ்வகைக் கவிதைகளை எழுதினர். இரண்டாவது போக்கு உமர் கயாமின் ‘சூனியவாத’த்தின் பாதிப்பைக்
கொண்டது. நேரடி யதார்த்தத்தை சந்திக்க மறுப்பது. போதையைக் கொண்டாடும் போக்கை இக் கவிதைகளில்
அதிகமும் காணமுடியும். அரிவம்ச ராய் பச்சன், நரேந்திர சர்மா, ராமேஷ்வர் சுக்லா, பகதிசரண்
வர்மா ஆகியோர் இந்தப் போக்கின் முக்கியமான கவிஞர்கள். சொல் அழகும் உணர்ச்சிக் கொந்தளிப்பும்
இவ் வகை கவிதைகளுக்கு கூடுதல் சிறப்பை அளித்தன.
உத்தி,
வடிவம், நயம், சொல்முறை என வெவ்வேறு கவித்துவ ஆற்றல்களைக் கொண்டு எழுதப்பட்ட சாயாவாதக்
கவிதைகள் இந்திக் கவிதைகளுக்கு புதியவொரு தோற்றத்தைத் தந்தன. தனித்தன்மைகொண்ட படிமங்களையும்
குறியீடுகளையும் மிக நுட்பமாகப் பயன்படுத்தினர்.
பிரகதிவாத் எனப்படும் முற்போக்குவாதம் ( 1936 முதல்
1943 வரை )
சாயாவாதக்
கவிதைகளுக்கான எதிர்வினையாக உருவானவை பிரகதிவாதக் கவிதைகள். எல்லையற்ற கற்பனையும்,
யதார்த்தத்திலிருந்து விலகும் போக்கும் கொண்ட சாயாவாதக் கவிதைகளை மறுத்த ஒரு சாரார்
அவற்றுக்கு மாற்றாக புதிய வகைக் கவிதைகளை எழுதினார்கள்.
மார்க்ஸிய
சித்தாந்தத்தின் அடிப்படையைக் கொண்டது பிரகதிவாதம். தவிர, தேசிய அளவிலும் பன்னாட்டு
அளவிலும் நிகழ்ந்த பல சம்பவங்களும், பாசிச எதிர்ப்பு நிலை, இந்தியாவில் நிலவிய ஆங்கில
ஆட்சி போன்றவையும் இக் கவிதைகளில் பாதிப்பை ஏற்படுத்தின.
1935ஆம்
ஆண்டு பாரிஸில் எம்.ஃபாஸ்டரின் தலைமையில் ‘முன்னேற்ற எழுத்தாளர்கள் சங்கம்’ நிறுவப்பட்டதை
அடுத்து இந்தியாவில் முல்க் ராஜ் ஆனந்தும் சஜித் ஜகீரும் இந்தியாவில் அந்த அமைப்பை
நிறுவ முனைந்தனர். முதல் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரேம் சந்த்.
‘ஜாகரன்’,
‘நயே சபேரா’, ‘நயே சேத்னா’ போன்ற இதழ்கள் இந்தப் போக்குக்கு பெரும் உதவியாக இருந்தன.
உருவம், உள்ளடக்கம் இரண்டிலும் புதிய தோற்றம் கொண்ட கவிதைகளை இவை அறிமுகப்படுத்தின.
வர்க்கப் போராட்டம், மார்க்ஸிய சித்தாந்தம், யதார்த்தம், புரட்சிகர லட்சியம், சமூக
அடக்குமுறைகளை எதிர்த்தல், உலகளாவிய மனிதகுலத்துக்கான குரல் போன்றவையே இந்தக் கவிதைகளின்
அடிப்படைகளாக இருந்தன.
சுமித்ராநந்தன்
பந்த், நிராலா, நரேந்திர சர்மா, கேதார்நாத் அகர்வால், நாகார்ஜூன் ஆகியோர் இந்தக் காலகட்டத்தின்
முக்கியமான கவிஞர்கள்.
ஊழல்,
சுரண்டலுக்கு எதிரான குரல்களை இந்தக் கவிதைகளில் கேட்க முடிந்தது. சமூகத்தின் அடித்தட்டு
மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாய் இருந்தனர் இக் கவிஞர்கள். இவை பொதுமக்களின் உண்மையான
குரலாக ஒலித்தன. கற்பனையான உலகின்மேல் இவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. சமத்துவம்,
சகோதரத்துவம், சுதந்திரம் கொண்ட உலகை நிர்மாணிக்க முயன்றனர்.
பிரயோக்வாத் எனப்படும் நவீனத்துவம் ( 1943 முதல்
1950 வரை )
இந்திக்
கவிதை வரலாற்றில் இன்னொரு முக்கியமான காலகட்டம். 1943ஆம் ஆண்டு ஏழு கவிஞர்களின் கவிதைகளைக்
கொண்ட ‘தார் சப்தக்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகி இந்திக் கவிதையுலகில் புதியதொரு
திருப்புமுனையை ஏற்படுத்தியது. கஜானன் மாதவ் முக்திபோத், நேமிசந்த் ஜெயின், பாரத் பூஷன்
அகர்வால், பிரபாகர் மாஸ்வே, கிரிஜாகுமார் மாதுர், ராம்பிலாஸ் சர்மா, அக்ஞேய ஆகிய ஏழு
கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட இதனைத் தொகுத்தவர் கவிஞர் அக்ஞேய. பிற காலகட்டங்களைப்
போலவே ‘பிரதிக்’, ‘கல்பனா’, ‘ஆலோசனா’, ‘நயி கவிதா’ ஆகிய இதழ்கள் இக்காலகட்டத்தில் முக்கிய
பங்களித்தன. பிரகதிவாதத்துக்கு மாற்றாக உருவான பிரயோக்வாதம் சமூகத்துக்கு பதிலாக தனிமனிதனுக்கு
முன்னுரிமை தந்தது. ‘பரிசோதனை’ (பிரயோக்) ஒரு கொள்கையாக அன்றி கவிதையின் ஒரு புதிய
அணுகுமுறையாக அமைந்தது.
இந்த
அணுகுமுறையைப் பின்பற்றிய கவிஞர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். மேற்கத்திய இலக்கியத்தை
கற்றறிந்தவர்கள். இந்தி கவிதையில் புதியப் போக்கை உருவாக்க முனைந்தனர். பாதலேர், மார்லோ,
எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச்.லாரன்ஸ், பிராய்டு, மார்க்ஸ், டார்வின் ஆகிய மேற்கத்திய
அறிஞர்களின் எழுத்துகளால் உத்வேகம் பெற்றவர்கள். அதேசமயம் அவர்கள் அனைவரும் இந்தியச்
சூழலுக்கேற்ப தத்தம் தனித்திறன்களை கவிதைகளில் வெளிக்காட்டினர். தனிமனித சுதந்திரத்தில்
உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த இக்கவிஞர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்துவமான
ஒரு அடையாளம் உள்ளதென கருதினர். பிற சாமானியர்களைப் போலவும் அல்லாமல் செல்வந்தர்களைப்
போலவும் இல்லாமல் தம் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாத மத்தியதர மக்களின் துயர வாழ்வை
இவர்களின் கவிதைகள் பிரதிபலித்தன.
இக்
கவிஞர்கள் கவிதைகளை புதுமையான வகையில் எழுதினர். கவிதையின் வடிவங்களிலும் நுட்பங்களிலும்
பெரிதும் கவனம் செலுத்தினர்.
நயி கவிதா எனப்படும் புதுக்கவிதை காலம் ( 1950 முதல்
1960 வரை )
தேச
விடுதலைக்குப் பிறகு உருவானது ‘நயி கவிதா’ எனும் புதுக்கவிதையின் காலம். பிரயோகவாதத்தைப்
போலவே இக் கவிதைப் போக்கும் 1951இல் வெளியான ‘தூஷ்ரா சப்தக்’ எனப்படும் கவிதைத் தொகுதியின்
வழியாகவே வெளிச்சத்துக்கு வந்தது. பபானி பிரசாத் மிஸ்ரா, சகுந்தா மாதுர், ஹரிநாராயண்
வியாஸ், சம்ஷேர் பகதூர் சிங், நரேஷ் மேத்தா, ரகுவீர் சகாய், தரம்வீர் பாரதி ஆகிய ஏழு
கவிஞர்களின் கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. தொகுப்பாசிரியர் அக்ஞேய.
‘நயி
பதே’, ‘நயீ கவிதா’, ‘நிகாஸ்’ ஆகிய மூன்று இதழ்கள் இதன் வளர்ச்சிக்கு உதவின.
1950ஆம்
ஆண்டு அக்ஞேய ‘தீஸ்ரா சப்தக்’ என்ற பெயரில் மூன்றாவது தொகுப்பைக் கொண்டு வந்தார். இதிலும்
பிரயாக் நாராயண் திரிபாதி, கீர்த்தி சௌத்ரி, மதன் பச்சாயன், கேதார் நாத் சிங், குன்வர்
நாராயண், பிஜய் தேவ் நாராயண் சகி, சரபேஸ்வர் தயாள் சக்சேனா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள்
இடம்பெற்றன.
‘நயி
கவிதா’ வில் மேற்கத்திய சிந்தனையும் தத்துவமும் பெரும் பாதிப்பைச் செலுத்தின என்பது
உண்மையே. குறிப்பாக இயல்புவாதம்(naturalism), மீயதார்த்தவாதம் (surrealism), அபத்தவாதம்
(absurdism) ஆகிய மேற்கத்திய இலக்கியப் போக்குகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தின. தற்கணத்தில்
இருத்தல், மனிதத்துவம், தனிமையுணர்வு, மரணபயம், மாறும் மதிப்பீடுகள் ஆகியனவே கவிதையின்
பாடுபொருட்களாக இருந்தன. உணர்வுகளின் தனித்தன்மைகளுக்கு அதிக முக்கியத்துவனம் அளித்தனர்
இக்கவிஞர்கள். குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள், மிகைக் கற்பனை போன்ற கூறுகளை கவிதையில்
பயன்படுத்துவதைப் பற்றிய கூர்மையான சிந்தனை இவர்களிடம் இருந்தது.
சமகாலக் கவிதைகள் ( 1960 முதல் )
1960க்குப்
பிறகு ஒரு புதிய எதிர்மறையான போக்கு நவீன இந்திக் கவிதையை உலுக்கியது. கடுங்கோபமும்
உணர்ச்சிக் கொந்தளிப்பும் மோதல்களும் முற்போக்குச் சிந்தனையையும் கொண்டிருந்தன இந்தக்
காலகட்டத்தின் கவிதைகள். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களின்
தாக்கம் இந்தக் காலகட்டத்தின் கவிதைகளில் ஏற்பட்டது.
1960களில்
உலகின் பல்வேறு இடங்களில் நடந்த வேலை நிறுத்தங்கள், மாணவர் போராட்டங்களும், இந்திய-சீன
போர், நேருவின் மரணம், இந்தியா-பாகிஸ்தான் போர், பங்களாதேஷின் உருவாக்கம், 1975ல் இந்தியாவில்
அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி போன்ற நிகழ்வுகளும் கணிசமானத் தாக்கங்களை ஏற்படுத்தின.
புதுக்
கவிதைக்கு மாற்றாக ‘அகவிதா’ ( எதிர்க்கவிதை ) உருவானது. சீரழிந்த வாழ்வின் இருண்ட பகுதிகளை,
அவநம்பிக்கையைக் குறித்து எழுதப்பட்டது. முன்னர்
இருந்த முற்போக்குக் கொள்கைகளை மேலும் முதிர்ச்சியுடன் அணுகும் போக்கு, கவிதைகளிலும்
எதிரொலித்தது. இருத்தலியல் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. சில கவிஞர்களிடத்தே அன்னியமாதல்
கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. பெண்ணியக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. எதிர்க்கவிதை
முகாமைச் சேர்ந்த கவிஞர்கள், வாழ்வில் பொருளெதுவும் இல்லை, சலிப்பும் வெறுப்பும் விரக்தியுமே
அதன் பலன் என்றனர். ஆனால், இக்கவிதைப் போக்கை பெரும்பாலான கவிஞர்கள் புறக்கணித்தனர்.
எதிர்க்கவிதையின் வரவால் முக்கியத்துவம் இழந்த பல கவிஞர்கள், புதிய வீச்சுடன் எழுந்த
ஜனநாயகப் போக்கினால் மீண்டு எழுந்தனர். எதிர்க்கவிதையின் வெறுப்பு மனப்பான்மையை ஒருபோதும்
ஒப்புக்கொள்ளாத முற்போக்குக் கவிஞர்களான நாகார்ஜூன், கேதார்நாத் அகர்வால், சம்ஷேர்
பகதூர் சிங், திரிலோசன் ஆகியோரும் விடுதலைக்குப் பிறகு எழுதத் தொடங்கிய ரகுவீர் சஹாய்,
சர்வேஷ்வர் சக்சேனா, கேதார்நாத் சிங் ஆகியோரும்
இப்போது முக்கியத்துவம் பெற்றனர். வினோத் குமார் சுக்ல, விஷ்ணு கரே, அருண் கமல், மங்களேஷ்
தப்ரால், ராஜேஷ் ஜோஷி போன்று புதிய தலைமுறை கவிஞர்கள் உருவாகி புதிய கவிதை மொழியையும்
வெளிப்பாடுகளையும் கண்டடைந்தனர். இந்தக் காலகட்டத்தை அசோக் வாஜ்பாயி ‘கவிதையின் மீட்சி’
என்று குறிப்பிட்டார்.
கடந்த
இரு தசாப்தங்களாக பல்வேறு வளர்ச்சிப்போக்குகளைக் கடந்து வந்திருக்கும் இந்திக் கவிதை,
இன்றைய காலகட்டத்தில் புதிய சவால்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. உலகமயமாக்கலும்
தேசிய அளவில் உருவாகியிருக்கும் அரசியல், சமூகப் போக்குகளும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மனிதர்கள், பழங்குடிகளைக் குறித்து இந்திக் கவிதையின்
அக்கறை மேலும் வலுவடைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக எழுதத்
தொடங்கியுள்ள கவிஞர்கள் பலர் இந்திக் கவிதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள்.
புதிய பிரச்சினைகளையும், மாந்தர்களையும், சூழலையும் கவிதையில் பேசுகிறார்கள். ஹோமியோபதி
உருண்டைகளும், முகநூலும்கூட கவிதையின் பாடுபொருளாகியுள்ளது. குறியீடுகளையும் படிமங்களையும்
பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட நேரடியான அனுபவங்களின் விவரணைகள் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன.
பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் கவிதையில் சாதாரணமாக இடம்பெறுகின்றன.
0
2
திருப்பூர்
ஆண்டகை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இந்தி வகுப்புகள்
நடத்தப்பட்டன. ஆனால், மிக விரைவிலேயே அப்போது எழுந்த எதிர்ப்பினால் வகுப்புகள் நிறுத்தப்பட்டன.
அப்போது தரப்பட்ட அரிச்சுவடி வெகுநாட்கள் என்னிடம் இருந்தது. மேல்நிலைப் பள்ளிக் கல்வி
முடிந்து கல்லூரிக்கு செல்லத் தொடங்கியபோது, நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் இந்தி
வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினேன். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இந்திப் பிரச்சார சபாவின்
வழியாகக் கற்று ‘பிரவீன்’ தேர்வை முடித்தேன். உடனடியாக மைசூர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல்
வழிக் கல்வியில் முதுகலை இந்தி இலக்கியத்தில் சேர்ந்தேன். மைசூர் பல்கலைக் கழகத்தின் ‘மானச கங்கோத்ரி’ வளாகத்தில்
சில நாட்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொண்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. பணியில்
இருந்தபடியே, இரண்டு ஆண்டுகள் இந்தி இலக்கியத்துக்கான தேர்வுகளை எழுதினேன். தேர்வுகளின்போது
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார் சபா வளாகத்தில் தங்கிக்கொள்ள முடிந்தது.
தேர்வுகள் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
பெற்றமைக்கான சான்றிதழ் அஞ்சலில் வந்து சேர்ந்தது.
அவ்வளவுதான்.
அதன் பிறகு இந்தியைத் தொடர்ந்து வாசிக்கவோ பயிலவோ வாய்ப்பு இல்லை. அலுவலக வேலைகளுக்காக
பம்பாய் சென்ற நாட்களில் அது கொஞ்சம் உதவியாக இருந்தது.
இந்தி
இலக்கியம் பயின்ற காலத்தில் அதன் அடிப்படையான சில ஆக்கங்களைப் படித்திருந்தேன். ஜெய்ஷங்கர்
பிரசாத், பிரேம் சந்த், நிர்மல் வர்மா, மகாதேவி வர்மா போன்றவர்களின் எழுத்துகளை வாசித்திருந்தேன்.
சமகால இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவேண்டும் என்ற எண்ணம் அப்போது எழவேயில்லை.
2020ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம். பெருந்தொற்று ஊரடங்கின் முதல் காலகட்டம். வலுக்கட்டாயமாக வீட்டுக்குள்
அடைபட்டு இருக்க நேர்ந்தது வாழ்வில் அதுவே முதல் முறை. தற்செயலாக ஒரு நாள் இணையத்தில்
எதையோ தேடிக்கொண்டிருந்தபோது இந்திக் கவிதைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. இந்திக்
கவிதை உலகில் இப்போது என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் என்கிற ஆர்வம் எழுந்தது.
மலையாளம்,
கன்னடம், தெலுங்கு மொழிகளிலிருந்து தமிழுக்கு கணிசமான அளவில் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்திக் கவிதைகளைப் பற்றி அவ்விதமாகச் சொல்லமுடியாது. குறைந்தபட்ச அறிமுகத்தைத்
தருமளவுகூட கவிதைகள் எவையும் அங்கிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை
என்பது வியப்பளித்தது. ‘அக்ஞேய’வின் கவிதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1983ஆம்
ஆண்டு போபாலில் ‘பாரத் பவன்’ எனும் கலாச்சார அமைப்பை நிறுவிய அசோக் வாஜ்பாயியின் பெயர்
தமிழில் ஓரளவுக்கு அறிமுகமானது. ‘பாரத் பவனி’ல் நடந்த அகில இந்திய அரங்குக்கு தமிழிலிருந்து
பிரம்மராஜன், மீரா, திலீப்குமார் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழில் சுந்தர
ராமசாமி, மலையாளத்தில் சச்சிதானந்தன் அளவுக்கு இந்தியில் முக்கியமான கவிஞர் வாஜ்பாயி.
ஆனாலும் அவருடைய கவிதைகள் எவையும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.
எனவே
இந்திக் கவிதைகளை இயன்ற அளவுக்கு தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று முடிவு செய்து நண்பர்
செங்கதிரைத் தொடர்பு கொண்டு இந்தியின் முக்கியமான கவிஞர்களின் பட்டியலைக் கேட்டேன்.
அவர் சில பெயர்களை பரிந்துரைத்தார். அவற்றை இணையத்தில் தேடத் தொடங்கினேன். இந்திக்
கவிதைகளுக்கென முக்கியமான சில இணைய தளங்கள், விரிவான அளவில், நூற்றுக்கணக்கான கவிஞர்களின்
ஆயிரக்கணக்கான கவிதைகளைக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
ஏராளமான
கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது முதலில் அவை என்னை ஈர்க்கவில்லை. நவீன தமிழ்க் கவிதையின்
உணர்வுப் புலத்தை சற்றே நெருங்கும் ஒரு கவிதையைக் கண்டடைவதே பெரும் சிரமமாயிருந்தது.
மனம் சோராமல் தொடர்ந்து படித்தபோது அந்தக் கவிதை உலகின் சில அபாரமான கவிஞர்களை கண்டடைந்தேன்.
குன்வர் நாராயண், கேதார் நாத் சிங், அசோக் வாஜ்பாயி போன்ற மூத்த கவிஞர்கள், அடுத்த
தலைமுறையைச் சேர்ந்த மங்களேஷ் தப்ரால், கிரிராஜ் கிராது போன்ற பிற கவிஞர்களையும் கண்டடைந்து
மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
அதே
நேரத்தில் சமகால இந்திக் கவிதை உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில்
எனக்கு சிரமம் இருந்தது. சாகித்திய அகாதமியின் இந்தியன் லிட்டரேச்சர் இதழ் நவீன இந்திக்
கவிதைக்கான சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருப்பதாக கவிஞர் சுகுமாரன் சொன்னார். அத்துடன்
அதன் ஆசிரியரான ஏ.ஜே.தாமசுடன் தொடர்பு கொள்ளவும் உதவினார். என்னுடைய நோக்கத்தைச் சொன்னதுமே
அந்த இதழை எனக்கு அனுப்பி உதவினார். அதிலிருந்து இன்று எழுதும் சில கவிஞர்களை கண்டடைந்தேன்.
இந்தி
மொழியின் முக்கியமான கவிஞர்கள் அனைவரும் தில்லியில் வசிப்பவர்கள். அல்லது தில்லியுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். எனவே, உலகளாவிய மொழிகளின் கவிதைப் போக்குகளை உடனுக்குடன்
அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் அவர்களுக்கு எளிதாக அமைகின்றன. எனவே, இந்திக் கவிதையில்
உருவம் உள்ளடக்கம் மொழி அனைத்திலும் மேற்குலகின் தாக்கம் உடனுக்குடன் நிகழ்கிறது.
ஆயினும்
நவீன கவிதை பெருமளவில் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலிலும் அதன் மரபான கவிதை வடிவங்களும்
தொடர்ந்து நீடிப்பது ஆச்சரியமான ஒன்று. இன்றும் ஷாயரிகள் பாடப்படுகின்றன. கபீரின் துளசிதாஸரின்
கவிதைகள் குழுவாக பக்தியுடன் பாடப்படுகின்றன. இதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்துகிறார்கள்.
ஓசை நயத்துடன் மேடையில் வாசிக்கும்படியாக எழுதப்படுகின்றன. கவிதையரங்குகள் என்பது இன்றும்
அங்கு பிரபலமான ஒரு வடிவம். இந்தியின் நவீன கவிஞர்களும்கூட இப்படிப்பட்ட அரங்குகளில்
பங்கெடுக்கிறார்கள். இந்தியில் உருதுக் கவிதையின் வலுவான தாக்கம் உண்டு.
தோஹே,
ஷாயரி எனும் பாடல் வடிவம் ஆகியவை பிரபலமாக உள்ளன.
கேதார்நாத்
சிங், குன்வர் நாராயண், அசோக் வாஜ்பாயி போன்ற மூத்த கவிஞர்கள் அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக எழுதி வருபவர்கள். கால மாற்றத்துக்கேற்ப தங்கள் கவிதை வடிவங்களையும் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களின் வடிவில் மொழியில் தங்கள் கவிதைகளை அவர்கள் எழுதுகிறார்கள்.
மலையாளக்
கவிஞர் சச்சிதானந்தனின் சாயலைக் கொண்டது குன்வர் நாராயணனின் கவிதைகள். மார்க்ஸியத்தின்
தாக்கத்தை துலக்கமாக உணர முடியும். அதே நேரத்தில் மொழியிலும் வடிவிலும் புதிய உத்திகளைக்
கையாளத் தயங்கவில்லை அவர்.
மங்களேஷ்
டப்ரால் குறிப்பிடத்தக்க ஒரு கவிஞர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் மறைந்தார். இவரது
பல கவிதைகள் கலாப்ரியாவை நினைவுபடுத்துபவை. அப்பாவின் மருந்துப்புட்டி, குழந்தைகளுக்கு
ஒரு கடிதம் போன்ற அவரது உரைநடைக் கவிதைகள் மிகப் புகழ்பெற்றவை. தனது கவிதைகளில் புதிய
உத்திகளையும் புதிய பாடுபொருட்களையும் கையாண்டார்.
முற்றிலும்
புதிய தொனியில் புதிய வடிவில் கவிதைகளை எழுதுபவர் கிரிராஜ் கிராது. 1975ல் பிறந்தவர்.
இவரது பல கவிதைகளும் பிரபலமானவை. பிரதிலிபி எனும் இதழின் ஆசிரியர். ஆச்சரியமான விஷயம்
இதுவரை இவரது கவிதைத் தொகுப்பை வெளியிடவில்லை என்பதுதான். கவிதையில் கையாளப்படும் வழக்கமான
கருப்பொருட்களை விடுத்து வாழ்வின் அபத்த கணங்களை எளிய அன்றாட மொழியில் நேரடியாகச் சொல்வதே
இவரது சிறப்பு.
மங்களேஷ்
டப்ரால், கிரிராஜ் கிராது ஆகியோரது உரைநடைக் கவிதைகள் வலுவானவை. ஆழமான புதிய அணுகுமுறையைக்
கொண்டவை.
ஆங்கிலப்
பேராசிரியரான அருண் கமல் இந்தி கவிதை யுலகில் முக்கியமானவர். சமகால இந்திக் கவிதைகளைத்
தொகுத்தளிப்பவர். இந்தியின் முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுத்தக் கவிதைகளைக் கொண்ட
தனித் தொகுப்புகளை பதிப்பித்திருப்பது இவரது முக்கிய பணி.
ககன்
கில், நிர்மலா கர்க் போன்ற பெண் கவிஞர்களின் குரலிலிருந்து வேறுபட்டிருப்பவை மோனிகா
குமார், தேஜி குரோவர், அனாமிகா ஆகியோருடைய கவிதைகள்.
பெண்களின்
இருப்பைக் குறித்த அரசியல் கவிதைகளை அனாமிகா எழுதியபோதும் உடல் அரசியலை அழுத்தமாகவும்
தீவிரமாகவும் முன்வைக்கும் கவிதைகள் சுபம் ஸ்ரீயினுடையவை. பல்கலைக் கழகங்களின், அதிகாரங்களின்
அரசியலை விமர்சிக்கும் இவரது கவிதைகள் இந்திக் கவிதையுலகில் பெரும் கவனிப்பைப் பெற்றிருப்பவை.
பிரபாத்,
நிர்மலா புதுல் போன்றோரின் புதிய குரல்கள் ஹிந்திக் கவிதைகளுக்கு புதிய பரிமாணங்களைச்
சேர்த்துள்ளன.
இத்தொகுப்பில்
இருபத்தி நான்கு கவிஞர்களின் தேர்ந்தெடுத்த 179 கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
கடலின் ஒரு சில துளிகளே இவை. தேடிப் படித்தவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை.
ஏறக்குறைய எண்பது ஆண்டு கால நீட்சியைக் கொண்ட இந்தி நவீனக் கவிதையில் எழுதியிருக்கும்
எல்லாக் கவிஞர்களையும் கவிதைகளையும் தேடி வாசிப்பதென்பது பெரும் சவால். எனவே முக்கியமான
சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து வாசித்தேன். இத்தொகுப்பில் இடம்பெறாத சிறந்த கவிஞர்கள்
வேறு பலரும் இருக்கிறார்கள். இன்னும் பல நல்ல கவிதைகளும் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு.
எனவே, இத்தொகுப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. ஒரு சாளரத்தை திறந்து காட்டியிருக்கிறேன்.
கவிதைகளை
மொழிபெயர்க்கத் தொடங்கிய நாட்களில் அவற்றில் சிலவற்றை முகநூலில் பகிர்ந்தேன். நண்பர்கள்
பலரும் தொடர்ந்து வாசித்து தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். இக்கவிதைகளைத் தொகுப்பாகக்
கொண்டு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். நண்பர் நிர்மால்யா பெரிதும் ஆர்வம்
காட்டினார். இப்போது அது சாத்தியமாகியுள்ளது.
‘ஆவநாழி’
மென்னிதழில் பல கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாயின. அசோக் வாஜ்பாயி, மங்களேஷ் டப்ரால்,
சுபம் ஸ்ரீயின் கவிதைகளை ‘காலச்சுவடு’ இதழ் வெளியிட்டது. ‘ஓலைச்சுவடி’, ‘கனலி’ ஆகிய
இதழ்களிலும் சில கவிதைகள் இடம்பெற்றன.
நவீன
இந்திக் கவிஞர்களைப் பற்றி அறிமுகம் தந்த செங்கதிர், கவிதைகளை உடனுக்குடன் வாசித்து
தேவையான திருத்தங்களைச் சொன்ன க.மோகனரங்கன் இருவரும் இல்லாது இத் தொகுப்பு வெளிவந்திருக்காது.
இந்திக் கவிஞர்களுடன் தொடர்பிலிருக்கும் சுகுமாரன், தொடர்ந்து கவிதைகளை வாசித்துவிட்டு
கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ‘இந்தியன் லிட்டரேச்சர்’ இதழாசிரியர் ஏ.ஜே.தாமஸை தொடர்புகொள்ள
உதவினார். சமகால இந்திக் கவிதைகள் வெளிவந்திருந்த இரண்டு இதழ்களையும் கொடுத்து உற்சாகப்படுத்தினார்
ஏ.ஜே.தாமஸ். இக் கவிதைகளைத் தொகுப்பாக்கலாம் என்று முனைகையில் நல்ல வடிவமைப்புடன் இந்
நூலை வெளியிட ஆர்வம் காட்டியவர் மணிகண்டன்.
இவர்கள்
அனைவருக்கும் என் நன்றி.
No comments:
Post a Comment