Wednesday, 21 January 2026

கடலோரக் கதைகள் - ரம்யா அருண்ராயனின் ‘கழிஓதம்’


கதைகளும் இலக்கியமும் திரும்பத் திரும்ப எழுதிக் காட்டுவது மனிதர்களைத்தான். ஒரு மனிதனின் வாழ்வு இன்னொரு மனிதனின் வாழ்வைப் போல் அமைந்துவிடுவதில்லை. அன்றாடத்தின் ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையின் புதிர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு சிடுக்குகளுடன் மேலும் மேலும் புரியாத ஒன்றாகவே நீண்டுகொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு நுனியைக் கண்டு அதிலிருந்து மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் முயலுந்தோறும் முடிச்சுகள் இறுகுவதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒரு சமூக விலங்கான மனிதன், விரும்பினாலும் இல்லாவிட்டாலும் சக மனிதனைச் சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம். பாசம், பந்தம், நட்பு, உறவு என வெவ்வேறு பெயர்களில் அடுத்தவர்களுடன் சேர்ந்து அனுசரித்து வாழவே விதிக்கப்பட்டிருக்கிறது. அனுசரணை என்பது எந்த நோக்கில் பார்த்தாலும் சுரண்டல்தான். அன்பின் பெயராலும் அடக்குமுறையினாலும் கட்டாயத்தினாலும் செய்யப்படுபவை அனைத்துமே சுயநலத்தின் பொருட்டு நிகழும் சுரண்டல்தான். இத்தனை கனத்த, கூரான சொல்லைக் கொண்டு அழைப்பதில் எல்லோருக்கும் ஒப்புதல் இருக்காது என்பதால் கூர்மழுங்கிய வேறு பாசாங்குச் சொற்களை பயன்படுத்திக்கொள்கிறோம்.

சமூகம் அனுமதித்த சுரண்டல்களை இயல்பான நடவடிக்கைகள். சக மனிதனுடன் அன்றாடத்தை முடிந்தவரை சுமுகமாய் கழிக்க இவை அவசியம். குடும்பம், உறவுகள், நட்பு, அண்டைவீட்டார், ஊரார் என்று அனைத்துக்கும் இது பொருந்தும். அவ்வாறு அனுமதிக்கப்படாத வகையிலான செயல்பாடுகள் குற்றங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களும் மனிதனால் மனிதர்களின் மீது இழைக்கப்படுபவைதான். எனவே, குற்றங்களும்கூட சமூக வாழ்வின் தவிர்க்கமுடியாத பகுதிதான். அவற்றையும் சுரண்டல்கள் என்றே வகைப்படுத்தமுடியும். எல்லாக் குற்றங்களும் தண்டனைச் சட்ட வரையறைக்குள் வருவதில்லை. அதேபோல, உரிய நியாயங்களையும் எல்லா நேரங்களிலும் வழங்கவும் சட்டங்களால் முடிவதில்லை. குற்றங்கள், தண்டனைகள், நியாயங்களுக்கான சமநிலையைப் பேணுவதற்கு சட்டத்துக்கு வெளியிலான தீர்வுகளே அவசியமாகின்றன.  

ரம்யா அருண்ராயனின் கதைகள் சுரண்டல்களைப் பற்றி பேசுபவை. எனவே, இவை சுரண்டுபவர்களைப் பற்றிய, சுரண்டப்படுபவர்களைப் பற்றிய கதைகள். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் இந்த சுரண்டல் இழைக்கும் அல்லது குற்றத்தைப் புரியும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளன இக்கதைகள்.

இந்தக் கதைகளில் கையாளப்பட்டிருக்கும் குற்றங்களும் சுரண்டல்களும் நேரடியானவை அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உணரக்கூடியவை. சமூகத்தின் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிக்காதவை எனினும் அதன் அடிப்படையை கேள்வி கேட்பவை.     

கட்டியவளைத் தட்டிக் கொண்டு போனவனிடமிருந்து கிடாய்களை களவாடும்போது அவள் மட்டுமே அறிந்த, பிறர் எவருமறியாத ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறான். ஒரு குற்றத்தின் வழியாக தனக்கான நியாயத்தை உறுதிசெய்வதோடு அவளுக்குரிய தண்டனையையையும் அவனால் வழங்க முடிகிறது. ( கிடாநோட்டம் )

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் தூய்மைப் பணியாளரால், குப்பையை கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் பாட்டியின் நடவடிக்கைகளை சாதாரண பெண்ணாக விலகி நின்று பார்க்க முடிவதில்லை. அவள் துப்புரவு வேலையில் ஈடுபடும்போது பிற பெண்கள் எப்படியெல்லாம் நாசுக்காக நடந்துகொள்வார்கள் என்பதை யோசித்து அவர்களைப் போலவே நடந்துகொள்ள முயல்கிறாள். ஆனால் அவளுக்கு கைவரவில்லை. வெறும் கையால் குப்பைகளை அள்ளிப் போடும் பாட்டிக்கு கையுறையை வாங்கித் தருகிறாள். பாட்டியோ ‘செல்ஃபி’ எடுத்துக் கொள் என்று படத்துக்கு போஸ் தரத் தயாராகிறார். பணிநேரத்தில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் இன்னொரு இளம்பெண்ணின் வேலையையும் சேர்த்தே செய்துகொண்டிருக்கிறார் பாட்டி. இந்த இரு பெண்களின் மனநிலையின் பின்னணியில் உள்ள காரணிகள் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகின்றன. ( விடுப்பு )

‘பெண் வேடமிட்ட ஆண்’ என்று தன்னை சக வகுப்புத் தோழர்கள் கிண்டலடிப்பதைக் கேட்டு வேதனைப்பட்டிருப்பவளிடம் வழக்கம்போல ஒரு கடிதத்தைக் கொடுத்து தபாலில் சேர்க்கச் சொல்கிறாள் தோழி. தனக்குப் பிடித்தவனிடம் தன் காதலைச் சொல்லும் கடிதம். எப்போதும்போல அதைப் பிரித்துப் படிக்கிறாள். உடல் வனப்பில் குறைந்த தன்னை கிண்டலடித்து நோகடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் தன் காதல் கடிதத்தை சேர்க்கச் சொல்லும் தோழியின் சுயநலமும் கடிதத்திலிருக்கும் சொற்களும் ஆத்திரத்தை ஏற்படுத்த, கடிதத்தைக் கிழித்து எரிக்கிறாள். இதன் விளைவாக தோழி தற்கொலை செய்துகொள்கிறாள். இந்தக் குற்றவுணர்வு அவளை வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது. ( ஆறாவெயில் ) குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இந்த இருவரின் நடவடிக்கைகளும் மிக இயல்பானவை. சாதாரணமானவையும்கூட. காதலின் பித்து தோழிக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றிக் கவலைப்பட இடம் தராமல், கடிதத்தைச் சேர்க்க வேண்டும் என்பதில் மட்டுந்தான் கவனமாயிருக்கிறது. அதே நேரத்தில், உடல்வாகின் காரணத்தால் தன்னை ஒரு பெண்ணாகவே பொருட்படுத்தாத அவமானத்தைச் சந்திப்பவளுக்கு தோழியின் காதல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் வெவ்வேறு பெண்களிடம் உருவாகும் இருவேறு மனநிலை. இதில் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஆனால், இதனால் ஏற்படும் விளைவு ஆறாத குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

சக உயிர்களின் மீது பரிவுடன் இருக்கும் ஒருவனது காராம்பசுவை அடித்துக் கொல்லும் புலியை அதே பசுவின் ஊனில் விஷம் கலந்து சாகடிக்கச் செய்கிறான். காராம்பசுவின் மேலிருக்கும் பரிவும் கருணையும் புலியின் மீது ஏன் சுரக்கவில்லை? ( குருதிக்கோடு ) உயிர்களிலும் பேதம் பார்க்கும் மனித இயல்பும்கூட சுரண்டலின் அடிப்படையில் உருவானதுதான். தனக்கு பயன்தரும் ஒன்றை கருணையோடு அணுகும் மனிதன், உபயோகமில்லாது இடைஞ்சல் தருகிற இன்னொரு உயிரின் மீது அதே பரிவைக் காட்டுவதில்லை.

பெண் குரல் வாய்த்துவிட்ட இளைஞன் தன்னை பாலியல் நோக்கோடு அணுகுபவனை தாக்கி கொலைக் குற்றத்துக்கு ஆளாகி சிறை தண்டனைக்குள்ளாகிறான். தனக்கு வாய்த்திருக்கும் பெண் குரல் மேலும் அவமானங்களை சிக்கல்களை உருவாக்கும் என்றெண்ணி அப்பிராணி ஊமையாகவே நடிக்கிறான். அந்த நடிப்பு அவனுக்கு பலாபலன்களையும் தருகிறது. நன்னடத்தையின் காரணமாக தண்டனை காலத்துக்கும் முன்பாகவே விடுதலையாகிறான். கடலோரத்தில் சிறுதெய்வம் ஒன்றின் ஊர்வலத்தில் துடியேற்றும் இசைகேட்டு தன்னிலை மறந்து பெண்குரலில் ஆவேசத்துடன் கத்தியபடி ஆடுகிறான். கேட்போருக்கு இப்போது அது ‘ஆத்தாவின் குரலா’க ஒலிக்கிறது. ( அப்பிராணி ) அவனை குற்றவாளியாக்கியதும் அதே குரல்தான். இப்போது அருள்வாக்களிக்கும் ‘ஆத்தா’வாக பார்க்கச் செய்வதும் அதே குரல்தான்.

மண உறவின் சிறு இடறலும்கூட இணைகளில் யாரேனும் ஒருவர் அடுத்தவரிடத்தில் காணும் குற்றத்தின் ஊற்றைக் கொண்டிருக்கும். துச்சமான ஒன்றாக இருந்தபோதும் அந்த ஊற்றின் காரணமாக உருவாகும் இடைவெளியை ஒருபோதும் நிரப்ப முடியாது பிரிந்துவிட நேரும். ( ஆல்பம் ) ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத உணர்வு கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகளை உருவாக்கும். அந்த பாதிப்பின் மூலமாக ஏற்படும் இடைவெளிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகும்போது இன்னும் சிக்கல்கள் இறுக்கமாகும். ( பின்னல் ) தனித்த இரு உயிர்கள் ஒன்றாக வாழ நேர்கையில் எத்தனை தூரம் விட்டுக்கொடுப்பதும் அனுசரிப்பதும் சாத்தியம் என்பதைப் பொறுத்தே அந்த உறவு அமைவதும் நீடிப்பதும். விட்டுக்கொடுப்பதும் அனுசரிப்பதும் சுரண்டலின் மென்மையான வழிமுறைகள்தான்.

‘செபமாலையும் குருசும் மாதிரி ஒண்ணா திரிஞ்ச பயலுக’ளில் ஒருவனை விபத்தில் பறிகொடுத்தவன் சங்கெடுக்க கடலுள் இறங்குபவனுக்கு, மந்திரவாதியைக் கொண்டு கலசத்தில் அடைத்த குற்றத்தை சரிசெய்யும் பொருட்டு அவன் ஆவியை விடுவிக்கும்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிகிறது ( நீர்க்குரல் ). இறந்தவனின் நினைவுகள் ஒருவனின் அன்றாட வாழ்க்கையைத் திசைமாற்றுகிறது என்பது அடுத்தவர் பார்வை.

உடல் இயல்பில் மாறுதலைக் கொண்ட ஆசிரியைக்கும் மன இயல்பில் வித்தியாசத்தைக் கொண்ட சிறுமிக்கும் இடையில், தேர்வுக் கூடத்தில் ஏற்படும் தற்காலிக சந்திப்பும் அதன்பொருட்டு நிகழும் உரையாடலும் இவர்களைக் குறித்த அன்றாட உலகின் பார்வைகளையும் அவற்றில் உள்ள குற்றச் சாயல்களையும் மிதமாக வெளிப்படுத்தியுள்ளன. ( இலக்கணப் பிழைகள் ). பிழைகள் அவர்களுடையதல்ல. அதற்கான தண்டணைகளை மட்டும் அனுபவிக்கிறார்கள்.


ரம்யா அருண் ராயனின் கதைகள் நேரடியானவை. வலிந்து எதையும் அவர் உருவாக்கத் தேவையில்லாமல் களங்களும் கதாபாத்திரங்களும் இயல்பாக பொருந்தி அமைந்துள்ளன. துலக்கமான நில அடையாளங்களின்றி எழுதியுள்ள கதைகளைக் காட்டிலும் கடலோரத்தைக் களமாகக் கொண்ட கதைகளே ( கழி ஓதம், கிடா நோட்டம், நீர்க்குரல், ஆறாவெயில், அப்பிராணி ) அவரை கவனிக்கச் செய்கின்றன. நிலமும் மொழியும் கதையில் கரைந்து உருவாகும் நம்பகத்தன்மையே அதற்கு காரணம்.

எண்ணிக்கையில் பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் அங்கங்கே அவருடைய சொல் நேர்த்திக்கான தடயங்களைப் பார்க்க முடிகிறது. ‘காற்று கண்ணுக்குத் தெரியாத உடுக்குகளை அடித்தடித்துக் கடலைத் துடியேற்றிக் கொண்டிருக்கும்’ ( கழி ஓதம் ), ‘ஆயிரம் கத்திகளைக் கொண்டு கடல் ஏதோ சாகச விளையாட்டை நிகழ்த்துவதுபோல் கடலில் துள்ளலும் நீச்சலுமாக முரால் மீன் கூட்டம்’ (நீர்க்குரல்), ‘பால் பொங்குவதற்குச் சற்று முன் நடுங்கிக் கொண்டிருக்கும் பாலேடு போலொரு மென்சுருக்கம் ஆரம்பித்திருக்கிறது’ ( விடுப்பு ), ‘முதல் நாலு இழுப்புக்கு உலோகத்தில் பால் விழும் ஒலியும், அடுத்த நாலு இழுப்புக்கு பால்மேல் பால் விழும் ஒலியும், மற்ற இழுப்புக்கெல்லாம் நுரைமேல் பால் விழும் ஒலியும் என இது ஒருவகை எனக்குப் பிடித்த ஜலதரங்கம்’ ( குருதிக்கோடு ).

‘கிடா நோட்டம்’, ‘நீர்க்குரல்’ போன்ற வலுவான கதைகளுக்கு நடுவே ‘ஆல்பம்’, ‘வவ்வாக்குட்டி’ போன்ற கதைகள் தொகுப்பைக் குறித்த ஒட்டுமொத்த அனுபவத்தை மட்டுப்படுத்துகின்றன. மண உறவு, குழந்தையின்மை போன்ற உளப் போக்குகளை மையப்படுத்தும் கதைகள் ( பின்னல், ஆல்பம் ) முன்பே எழுதப்பட்டிருக்கும் அதே வகைக் கதைகளிலிருந்து ஏதேனும் ஒரு அம்சத்தில் வேறுபட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாதபோது அவை எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும்.

கடலோர வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்திருக்கும் நாவல்கள் தமிழில் உண்டு. அந்த அளவுக்கு பரதவர் வாழ்வின் ஆழ அகலங்களைக் காட்டியிருக்கும் சிறுகதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த முதல் தொகுப்பில் உள்ள சில கதைகள், ரம்யா அருண் ராயனால் அவ்வாறான கதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

0

கழி ஓதம், ரம்யா அருண் ராயன், டிசம்பர் 2024 எழுத்து பிரசுரம் விலை 170

( பிப்ரவரி 2026 நீலி இதழில் வெளியானது )


  

No comments:

Post a Comment

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...