Monday 26 March 2018

நகுலன் வீட்டுப் புத்தகங்களை கரையான்கள் வாசிக்கின்றன


Image result for நகுலன்

(கடந்த 2003 டிசம்பர் 6 அன்று திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் பெரும்பாலும் தமிழ்த்துறை மாணவர்களை மட்டுமே பார்வையாளர்களாகக்கொண்டு நிகழ்ந்த நகுலன் கருத்தரங்கிற்கு நகுலனை கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கூட்டத்தில் இருந்தார். நிகழ்வுகளை உள்வாங்கிக்கொள்கிறாரா இல்லையா என்பதை அறிய இயலாத அளவிற்கு கனிவான புன்னகை மட்டுமே அவரது முகபாவமாக இருந்தது. வழக்கமான அவரது மூன்றடுக்கு நினைவுகளின் எந்த அடுக்கில் அவர் அங்கே உலவிக்கொண்டிருந்தார் என்பது பார்வையாளர்களால் கண்டுகொள்ள இயலாததாகவே இருந்தது. அவருக்கான ப.சிங்காரம் நினைவுப் பரிசை வாங்கிக்கொள்ள அந்தச் சிறு மேடையில் அவர் விருப்பப்படி ஏற்றுவிக்கப்பட்டார். கருத்தரங்கின் முடிவில் அழைத்துச் செல்லப்படுகையில் அந்நிகழ்வை அவர் உணர்ந்திருக்கவேயில்லை என்பதில் யாருக்கும் உள்ளூர ஐயமிருக்கவில்லை.அதன் தொடர் நிகழ்வாக அன்று மாலை நாஞ்சில்நாடன், கி.அ.சச்சிதானந்தன், எம்.எஸ், ஜெயமோகன், வேதசகாயகுமார், ஞான.ராஜசேகரன், நெய்தல் கிருஷ்ணன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நகுலனை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.)

0
“இதுதான் அவரோட பர்ணசாலை” என்று நாஞ்சில்நாடன் காட்டிய இடத்தில் பசிய இலைப்பரப்பு மூடிய ஒரு சரிவுதான் தென்பட்டது. ஒழுங்கற்ற மண்பாதையில் தலைமுட்டும் கிளைகளை விலக்கிக்கொண்டு இறங்கினால் அந்த வீடு கண்ணில்படுகிறது. நிறைய மரங்கள், செடிகொடிகளுடன் ரம்மியமான தோட்டம். “பரவாயில்லே. தோட்டம் சுத்தமா இருக்கு” நாஞ்சில்நாடன் படிகளில் ஏறுகிறார். வருபவர்களைக் கூர்ந்து பார்த்தபடி நகுலன் நின்றிருந்தார். இரட்டைத் தூண்கள் தாங்கிய முற்றத்தின் கீழ் அவரது நெடிய உருவம் மேலும் குறுகித் தெரிகிறது.
“நீங்க யாரு?” நாஞ்சில்நாடனைக் கேட்கிறார். மறுபடி அவர் தன்னை சொல்லிக் கொண்டதும் “ஆமா… வர்றேன்னு சொன்னீங்கல்ல…” என்று சிரித்துவிட்டு மற்றவர்களையும் பார்க்கிறார். கி.அ.சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தும்போது “யாரு. கேரளக் கவியா?” என்று கேட்டார். அதே கண்ணாடி. எப்போதும் சிரிப்புடனான முகம். வீட்டின் சுவர்களும் கூரையும் இருள் உலாவும் அறைகளும் பெரும் காலத்தின் மங்கிய புகைச் சுவடுகளைத் தாங்கியிருக்க, தன் கட்டிலில் அவர் மடங்கி உட்கார்ந்திருக்கிறார். எல்லோரையும் கூர்ந்துப் பார்க்கிறார். சிரிக்கிறார். நெய்தல் கிருஷ்ணனிடம் “தப்பா நெனச்சுக்கப்படாது. ஒண்ணு கேக்கலாமா?” என்று கேட்டவர் “உங்க உடம்பு ஏன் இப்படி இருக்கு?” என்கிறார். “சின்ன வயசுலேர்ந்தா?” என்று மறுபடி கேட்டுவிட்டு பிறகு தலைகவிழ்த்து மௌனமாக உட்கார்ந்துகொண்டார். திடீரென்று எதுவோ நினைவில் வந்ததுபோல நாஞ்சிலிநாடனைப் பார்த்து “அப்ப நான் சொன்னேனில்லையோ, அது…” என்று கட்டைவிரலை குடிப்பதுபோல் காட்டிவிட்டுச் சிரித்தார். குழந்தைகளின் சிரிப்பில் கனிகிற உற்சாகத்துடன் அவர் கேட்டதும், “வருது. நண்பர்கள் வாங்கிட்டு வராங்க.” என்றதும் மறுப்பதுபோல கைகளை ஆட்டிக்கொண்டே “சும்மா கேட்டேன்” என்று தலையாட்டிக்கொண்டார்.

இப்போதெல்லாம் மது அருந்துவதை அனுமதிப்பதில்லை என்று பொருத்தே சொல்கிறார். ”இரவில் சில நாட்களில் பயங்கரமாய் அவஸ்தைப்படும்போது கண்ணில் பார்க்கவே முடியவில்லை. எதுவும் அவசரமென்றால் அந்த ராத்திரியில் யாரையாவது போய் அழைத்துவருவது பெரும் சிரமமாய் போய்விடுகிறது. நண்பர்கள் வந்தால் வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறோம்” என்று அவர் சொல்லுவதை கவனிக்கிறமாதிரி இருந்தவர் நாஞ்சில்நாடனிடம் குடும்ப விஷயங்களை வெகு அக்கறையாகக் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதய நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டது பற்றி சொல்லிய பின் “ஏன் இப்படி வந்துச்சு?” என்று கேட்டார். “நான் குடிக்கிறேன்ல” நாஞ்சில் உரத்து பதில் சொன்னார். “நீங்க குடிக்கிறேளா?” சத்தமாய் சிரித்தார். உடனடியாய் நினைவுக்கு வந்ததுபோல “நா கேட்டது வருதோல்லியோ?” என்றார். அதே சிரிப்பும் கனிவுமிருந்தது.
ஜெயமோகனையே உற்றுப் பார்த்திருந்துவிட்டு “உங்கள நான் எங்கயோ பார்த்தா மாதிரியிருக்கு” என்று ஞாகங்களைத் துழாவுபர்போல தலை கவிழ்ந்துகொண்டார்.

அவரது படுக்கையில் போர்ஹேவின் Labyrinth பிரதியொன்று கிடக்கிறது. “அப்பப்ப கொஞ்சம் படிக்கிறேன்” என்றார். நெய்தல் கிருஷ்ணனின் உடல்வாகையே உற்றிருந்தவராய் மீண்டும் காரணம் கேட்டார். “சின்ன வயசுலேர்ந்து இப்படியா?” என்று வியப்புடன் சிரித்தார்.
“இன்னிக்கு இந்த மீட்டிங்கில ஒருத்தர்கூட யோசிக்கறா மாதிரியே பேசல…”என்றார் நாஞ்சில்நாடனிடம். “காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட அப்படித்தான் பேசியாகணும்” நாஞ்சில் நாடன் பதில் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத தொனியில் “இருந்தாலும் ஏதாவது விஷயம் இருக்கணும்” என்றார். ஒவ்வொரு முறை பேசிய பின்னும் தலையைக் கவிழ்த்துக் கொண்டு மௌனமாகிவிடுகிறார். ஞாபகங்களை கோர்வையாக்கி அடுக்கிக்கொள்வதற்கான அவகாசம்போலும். “இந்தப் பரிசு குடுத்தாங்களே, யாரு?”. “இதோ, இவர்தான். சச்சிதானங்தம். இவர்கிட்ட கேளுங்க” என்று சொன்னதும் “நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?” என்று அக்கறையுடன் கி.அ.சச்சிதானந்தனிடம் கேட்டார். “அதை வெளியில சொல்றதில்லை” என்று சச்சிதானந்தன் பதில் சொல்ல நகுலன் சிரித்தார்.
சுவர்களில் அங்கங்கே மாட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் புராதன அடையாளங்களுடன் இருந்தன. எந்தப் புகைப்படமும் சமீப ஐம்பதாண்டுகளில் எடுக்கப்பட்டவைகளாய் தெரியவில்லை. பல படங்களில் உருவங்களை காலம் அரித்துத் தின்றிருந்தது. கனத்த சட்டத்துடன் இருந்த பெரிய படமொன்று சற்று உயரத்தில் மாட்டப்பட்டிருந்தது. “அது யாரோட படம்?” சச்சிதானந்தன் கேட்டதும் சுவரை அண்ணாந்து பார்த்தார். சிறிது நேரம் கழித்து “பாட்டியோடது. பென்சில் டிராயிங்.” என்றார். உண்மையில் அது பென்சில் டிராயிங்தான். புகைப்படத்தின் சாயல்களுடன் இருந்தது. சுவருக்குப் பக்கத்தில் இருந்த திரையிட்ட அலமாரியொன்றின் மேலும் வரிசையாய் புகைப்படங்கள். உட்கார்ந்தவாறிருக்கும் ஒரு பெண்ணில் படம். கருப்பு வெள்ளையிலே வசீகரமாயிருந்தது.

சச்சிதானந்தனையே கூர்ந்து பார்த்தவர் “எதுக்கு இந்தப் பரிசெல்லாம் தறீங்க?” என்று மறுபடி கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாதவராய் தயங்கிய சச்சி “நீங்க ஏன் எழுதறீங்க?” என்று கேட்டார். அந்தக் கேள்வியை வாங்கிக்கொண்டவராய் தலை கவிழ்த்துக் கொண்டார்.
ஜெயமோகனை தான் எங்கேயோ பார்த்திருப்பதாகத் தோன்றுகிறது என்று மீண்டும் சொன்னவர் தனது சகோதரி மகன் தன்னை குடிப்பது குறித்து கேள்வி கேட்டதை ஆற்றாமையுடன் சொன்னார். “இன்னும் குடிக்கறேனா? அதிகாரம் வந்துடுச்சுன்னு அப்படிக் கேக்கறானா?” அவர் யார் என்று கேட்கும்போது அவரால் பெயரை நினைவிலிருந்து சொல்லமுடியாமல் போனது. உறவினர்கள் குறித்து நிதானமாய் யோசித்து தகவல்களைச் சொன்னார். “யாராச்சும் கேட்டா நா இவளத்தான் சொல்லச் சொல்வேன்” பொருத்தேவைக் காட்டினார்.

“நீங்க ஏன் குண்டா இருக்கேள்?” கிருஷ்ணனிடம் சிரித்துக்கொண்டே தன் கேள்வியைப் புதுப்பித்துக்கொண்டார். ஹெமிங்க்வேயின் கடலும் கிழவனும் நாவலை எம்.எஸ் மொழிபெயர்த்திருப்பது பற்றிச் சொன்னதும் ஹெமிங்க்வேயைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தவராய் “அவரோட இன்னொரு நாவல் ரொம்ப நல்ல நாவல்” என்றார். FOR WHOM THE BELL TOLLS என்று நினைவுபடுத்தியதும் “ஆமா. அதுதான். அந்தப் பேரே பாருங்களேன். For whom the Bell tolls… நல்லா இருக்கில்லே” என்று தலைப்பை நிதானமாகச் சொல்லிப் பார்த்தார்.

மூன்று அடுக்குகளில் தாவித் தாவிப் பயணித்தபடி இருந்த அவரது இருப்பின் முன்னால் தாளமாட்டதவைகள்போல புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன. கரையான்கள் அரித்துவிட்ட பக்கங்களுடன் சாய்ந்து நிற்கும் மர அலமாரிகளிலும் பெஞ்சுகளின் மீதும் குவிந்துள்ள புத்தகங்களை கையால் தொடுவதற்கே பயமாயிருந்தது. சங்க இலக்கியங்கள் முதல் மேற்கத்திய நவீன இலக்கியங்கள் வரையிலான புத்தகங்கள் அனைத்தும் ஒழுங்கு குலைந்து கிடந்தன. புத்தகங்கள் நிறைய குறைந்துவிட்டதென் சொன்ன நாஞ்சில்நாடன் இப்போதும்கூட அவர் புத்தகத்தை யாருக்கும் சுலபத்தில் தந்துவிடாத தன்மையுடனே இருக்கிறார் என்று சொன்னார்.
“மணியைத் தெரியுமா, உங்களுக்கு?” நாஞ்சிலிடம் கேட்டார். “உங்க தம்பிதானே. பெங்களூர்ல இருக்கறதா சொன்னீங்களே.” அவர்தான் என்பதுபோல தலையசைத்தவர் வழக்கமான இடைவெளிக்குப் பிறகு “அவரிட்ட பேசமுடியுமா நீங்க?” என்று கேட்டார். “போன் நம்பர் குடுங்க. நான் பேசறேன்” நாஞ்சில் உத்தரவாதமாய் சொல்லிவிட்டு “ஏன், நீங்க எழுதறதில்லையா?” என்று கேட்க, முடிவதில்லை என்று இயலாமையுடன் கைவிரித்தார். எழுத்துக்களைத் தொலைத்துவிட்ட அநத் நரைபழுத்த கைகளின் நடுக்கத்தை பொருட்படுத்தாமலிருக்க இயலவில்லை. “எதும் சமாச்சாரம் சொல்லணுமா அவரிட்ட?” நாஞ்சிலின் கேள்விக்கு வெகுநேரம் எடுத்துக்கொண்டார். மௌனமும் தடுமாற்றமுமாய் தலை கவிழ்த்தவர் மெதுவாகச் சொன்னார் “பாத்தாத் தேவலை.” கட்டாயம் மணியிடம் பேசுவதாக நாஞ்சில் தொலைபேசி எண்ணைக் கேட்க, மெதுவாக எழுந்தார். தரையில் பாதங்கள் உராய மெல்ல நடந்தவர் வலதுபுற அறைக்குள் போனார். மஞ்சள் விளக்கொளியில் புத்தகங்கள் கிடக்க குறுக்கும் நெடுக்குமாய் இருமுறை நடந்தார். அறைக்குள் எட்டிப் பார்த்த நண்பரைப் பார்த்துச் சிரித்துவிட்டு “இங்கதான் இருக்கும்” என்று புத்தக அடுக்குகளில் துழாவினார். சிறிது நேரத்திற்குப் பிறகு ரப்பர்பேண்ட் போட்டு இறுக்கப்பட்ட டயரியொன்றை எடுத்து விரித்தார். காகிதங்களும் கடிதங்களுமாய்ப் புடைத்திருந்த டயரியை நிதானமாகத் தேடியவர் அந்த எண்ணைக் கண்டுபிடித்து நாஞ்சிலிடம் சொன்னார்.

கரையான் அரித்த புத்தகங்களுக்கு நடுவில் மங்கிய விளக்கொளியில் நின்றிருந்த அந்த உருவமும் அவரது சிரிப்பும் காலத்தின் அவசரத்தை கேலி செய்வது போலிருந்தது.

விடைபெற்றுக்கொண்டு படியிறங்குகையில் தோட்டத்தின் இருளினூடே இலைகளின் சலசலப்பு. லேசான குளிர். எதையும் அறியாத உறைதன்மையுடன் வீற்றிருந்த நகுலனின் தளர்ந்த உருவம் எங்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது, அவரது எழுத்துக்களைப்போல!
(சாம்பல் – ஜனவரி 2004 இதழில் வெளியான கட்டுரை )

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...